குருநாதன் ரமணி
என்ன மனுஷர் இவர்! கவிமாமணி என்ற பட்டம் தாங்கி, அறுசுவைகளில் மரபுகவிதைகள் சமைத்துப் பரிமாறுகிறார். அந்தப் பல்சுவை விருந்துகளில் காவிய, ஆன்மீகப் படையலும் செய்கிறார். உலகியல் சுவைகளில் பஃபேயும் தருகிறார்!
அறிவியல், இலக்கியம், சுதந்திரப் போராட்ட வரலாறு, வடமொழி-தமிழ் மொழியாக்கம், ஆங்கிலப் பாட்டியல் தமிழாக்கம், ஆங்கிலக் கவிதைகள் ஆகிய பல்வேறு துறைகளிலும் இவர் நளபாகம் ஆக்கிய நூல்கள் மூலம் இவரைப் பன்முக எழுத்தாளராகத் தமிழுலகம் அறிந்துள்ளது.
அறுசுவை விருந்தாக முன்பு விண்ணோக்கிய வேர்கள் என்னும் சிறுகதைத் தொகுப்பு தந்தார். இப்போது கல்யாண சமையல் விருந்தாக இந்த அடுப்படி இராகங்கள்!
கதையின் முக்கிய பாத்திரம் நளபாக நாயகர் சாம்பசிவம். அவரது சிஷ்யர்கள் ஒவ்வொருவரும் கல்யாண சமையலில் பயன்படும் பலவிதமான பாத்திரங்கள்! இவர்களுடன் கலந்துறவாடும் பாத்திரப் புரவலர்கள். கல்யாண சந்தடியில் காணாமற் போன மகனோர் பாத்திரம். அது உலகியல் வாழ்வுப் பட்டறையில் உருவும் தருமமும் மாறி வேறொரு வடிவில் திரும்ப வருகிறது!
கல்யாண சமையல் வேள்வியின் யஜமானர் நளபாக நாயகர் சாம்பசிவம். அதன் ஆகுதியாய் அவர் வாழ்க்கை. அறுசுவைப் பணி அவர் வாழ்க்கை என்றால் நவரசங்களும் ததும்ப உறவாடி வாழ்வது அவர் குணம். எப்படி? கொஞ்சம் பார்ப்போம்.
* ஏலம், முந்திரி, பச்சைக் கற்பூரம் வெல்லம் சேர்ந்த கல்யாணப் பாயசத்தின் இனிமை போல் அவரது நேர்மையும், அன்பும் வாசகர் நினைவில் நிற்கும். அது அவரது பெருமிதம்.
* முந்திரியைத் திருடிய தன் சிஷ்யன் ஒருவனைத் தண்டிப்பதில் அவர் கோபம் தெரிகிறது.
* ஆயின் அது சிஷ்யன் மன்னிப்பு வேண்டக் கருணையாக வடிந்துவிடுகிறது.
* கால மாற்றத்தில் மற்ற பரிசாரர்கள் காஸ் அடுப்புக்கு மாறிவிட, இவர் இன்னமும் பழைய விறகுக் கோட்டை அடுப்பைச் சார்ந்திருக்கும் வெகுளியான மனிதர்.
* தன் மகன் வீட்டை விட்டு வெளியேறிக் காணாமற் போனதில் மனைவியின் அழுகையும் துயரமும் குறைவதற்காக அவர் மனத்துக்குள் மட்டும் அழுபவராகிறார்.
* அரசியல்வாதிகள் அவருக்குக் கசப்பும், இளிவரலும் (இழிவும்), அச்சமும் தருகின்றனர். அவர்கள் தொடர்பில் எதிர்த்து வேறொன்றும் செய்ய முடியாதவராய் அவர் மருளுகிறார்.
* தன் வாழ்வின் மேடு பள்ளங்களில் பயணிக்கும் போது செருக்கோ, வருத்தமோ கொள்ளாமல் அமைதி காக்கிறார்.
* இளவயதுக் காதலின் உவகையை இன்றும் மனத்துள் தேடித் திரிகிறார்.
* பரோபகாரம் இதம் சரீரம் என்ற வசனத்திற் கேற்ப அவர் வெள்ளத் துயரில் வாடும் ஏழைகளுக்குத் தன் கைக்காசைப் போட்டு அன்னதானம் செய்கிறார்.
* இவரது நேர்மையான வாழ்வில் இவர் சொன்ன அறிவுரைகளை ஒரு வெள்ளைக்காரர் (இவர் ஒரு முக்கியப் பாத்திரம்) குறிப்பெடுத்துக்கொண்டு பின்னர் நூலாகப் பதிப்பிக்கிறார்.
* இறுதியில் தன் மகளின் கல்யாணம் ஜாம்-ஜாம் என்று நல்ல மனம் கொண்டோர் உதவியுடன் நடைபெற அந்த வைபவத்தில் தன் மகனுடன் சேர்கிறார். புதிய உறவுகளையும் சம்பாதித்துக் கொள்கிறார்.
இவ்வாறு ஒவ்வொரு பாத்திரமும் அதன் சுவை நினைவுக்கு வருவதாக வாசகர் மனத்தில் நிற்கும் அளவுக்குக் கல்யாண சமையல் விருந்து பரிமாறும் கதாசிரியர் தானும் கதைக்குள் நுழைகிறார்!
இலந்தையார் தம் கதையமைப்பில் காட்டும் திறனையும் கல்யாணத்தில் முக்கியமாக விளங்கும் பட்சண சீர்வரிசையாக வருணித்து விடுகிறேன்.
* கல்யாணத்தில் அதிரசமும் முறுக்கும், திரட்டுப் பாலும் முக்கிய சீர்வரிசை பட்சணங்கள் என்பார்கள். இவரது தமிழ் அதிரசமாகக் கவிதை கலந்து தித்திக்கிறது. திரட்டுப் பாலாகத் திரள்கிறது.
* கதையில் ஆங்காங்கே முறுக்கும் சுற்றுகிறார். குழல் பட்சணங்களும் பிழிகிறார். கதை அத்தியாயங்கள் சீர் முறுக்கு போல் பலவரிசைகளில் பரந்திருக்க, மனோகரப் பருப்புந் தேங்காய்க் கூம்புகளாக கதை நிகழ்வுகள் ஒன்றன்பின் ஒன்றாகக் குவிந்து, சொல்லும் பொருளும் உடையாமல் இணைந்து நிற்கின்றன.
* ஜாரணியில் தேய்க்கும் பூந்தித் துகள்களாகச் சொற்கள் வந்து விழுகின்றன. அவை காரா பூந்தியாகச் சாடுவதுடன், பூந்தி லாடுவாகத் திரண்டு பாரதியாரையும் வள்ளுவரையும் முன்னிறுத்துகின்றன.
* லட்டுவில் எட்டிப் பார்க்கும் முந்திரி, இலவங்கமாக கதாநாயகர் சாம்பசிவத்தின் அறிவுரைகள் அமைகின்றன.
* கட்டுப்பெட்டியாக அவர் மனைவி வீட்டில் முடங்கினாலும், குணத்தில் மைசூர்பாகு. மகள் தன் அழகிலும் குணத்திலும் ஜாங்கிரி.
* பலவிதக் கார வகைகள் கலந்த ஸ்பெஷல் மிக்ஸராக கதாநாயகர் வாழ்க்கை நிகழ்ச்சிகள்.
கதையின் முதல் அத்தியாயத்தில் தன்னை வாசகர் மனத்தில் நிலைநிறுத்திக் கொள்ளும் நளபாக நாயகர் சாம்பசிவத்தின் வாழ்க்கையை வருணிக்கும் இந்த நாவலில் ஆசிரியர் தம் முன்னுரையில் சொல்வதுபோல் சொந்த அனுபவத்தின் அடிப்படையில் கற்பனை கலந்து, மற்ற கதை மாந்தர்களும், கதை நிகழ்வுகளும் கண்முன் காட்சிகளாகச் சேர்த்துக் கதை இழைகளைப் பின்னிக் கவர்ச்சியாகவும், மரபு மாறாமலும் ஓர் பட்டுப் புடவையே நெய்துவிடுகிறார்.
எத்தனை சாம்பசிவங்களைக் கதையில் காட்டுகிறார் ஆசிரியர் இலந்தையார்!
* சமையல் கலை வித்தகர்
* சமையல் அறையில் கண்டிப்பே உருவானவர்
* களவு செய்தவனைத் தண்டித்து மன்னிப்பவர்
* தன் புரவலர்களைப் போற்றுபவராக இருந்தாலும், தன் மதிப்பை, மரபை விட்டுக் கொடுக்காதவர்
* அரசியல்வாதிகளின் கபடச் செயல்களில் சிக்குண்டு அல்லல் படுபவர்
* பரிசாரகர் சங்கத்திலும் வெறுப்பைச் சம்பாதிப்பவர்
* தம் மனைவி, மகளிடம் பாசமே உருவானவர்
* தம் தொழில் பட்டத்தால் மகளை உயர்ந்த இடத்தில் மணமுடிக்க இயலாது இருப்பவர்
* ஏழைகளுக்கு உணவும், கல்வியும் தந்து உதவக் கல்விச் சாலை நிறுவும் கனவுகள் கொண்டவர்
* இளவயதில் காதலித்த மங்கையை இன்றும் மனத்தளவில் நிறுத்தி வாழ்பவர்
பட்டா, கிட்டா, கோபால், ராஜூ, சுப்பா, நாணா, சாமி என்று அவர் சிஷ்யர்கள் பட்டியல் நீள்கிறது. அவர்களில் கோபால் அவர் அன்புக்கும் குடும்பத்துக்கும் பாத்திரமாகிறான். கல்யாணச் சந்தடியில் வந்த வெள்ளைக்காரர் வில்லியம்ஸ், கதைப்போக்கில் அவரது பிரதம சீடராகிறார்.
இராமசேஷய்யர் என்ற புரவலர் இவருடன் முரண்பட்டு, இவரை அவமதித்துப் பின்னர் உதவுகிறார். தம் கணவர் டெபுடி கலெக்டர் என்ற ஹோதாவில் அவர் மகளுக்குத் தங்கை தன் மகனை மணம்செய்ய மறுக்கிறாள். பாரதியின் கண்ணம்மா போல இவருக்கும் இளவயதில் ஒரு கண்ணம்மா வாய்த்தாலும் அந்தஸ்து காரணமாக அவளை மணம்செய்து கொள்ள இயலவில்லை. ஆனாலும் அவர்கள் உறவு மனத்தளவில் தொடர்கிறது.
இப்படிப் பல வகைகளிலும் ஒரு நல்ல, தீர்க்கமான கதையாகச் செல்கிறது இந்த நாவல். இதை ஒரு திரைப்படமாக எடுக்கும் அளவுக்குக் கதை நிகழ்வுகளும், வேறுபட்ட கதை மாந்தர்களும், ஆங்காங்கே வரும் முறுக்குகளும் (twists) அமைந்துள்ளன.
இந்த நாவலுக்கொரு முன்னுரை தரும் வாய்ப்பை எனக்களித்த இலந்தையாருக்கு என் நன்றிகள். தமிழ்ப் புனைகதை உலகில் தனக்கென்றோர் இடம் பிடித்துப் பலர் படித்துப் பாராட்டும் நாவலாக இது விளங்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை.
அன்பன்
குருநாதன் ரமணி
(புனைகதை, கவிதை எழுத்தாளன்)
12 மார்ச் 2021
சென்னை 600064
சபாஷ்..சபாஷ்.
பாவலர் மணி , கவிஞர் ரமணி அவர்கள் என்னுடைய புதினம் அடுப்படி இராகங்கள் புத்தகஹ்ட்துக்குக் கொடுத்துள்ள முன்னுரை
முன்னுரை
குருநாதன் ரமணி
என்ன மனுஷர் இவர்! கவிமாமணி என்ற பட்டம் தாங்கி, அறுசுவைகளில் மரபுகவிதைகள் சமைத்துப் பரிமாறுகிறார். அந்தப் பல்சுவை விருந்துகளில் காவிய, ஆன்மீகப் படையலும் செய்கிறார். உலகியல் சுவைகளில் பஃபேயும் தருகிறார்!
குருநாதன் ரமணி
(புனைகதை, கவிதை எழுத்தாளன்)
12 மார்ச் 2021
சென்னை 600064
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBBSULw2-U685D5MyXk6q3wz_q45bFSb1HrDJjBSKs01Jw%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAB2a4BWEQp8rmZk55%3DpS0aowdyH%3DnWcNCdW2nNr4dMSaVJ_cHw%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAB%3D0VtXg8WjnUOXQ%3Dt8Wn7xNXrRmNHBGB5S4WiEPYU%2BLo6SZVg%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBAsjpRtZ%3DqFHEKCSecsF6JC9Jj0ak9rg3s%3D7uCZOtkBEw%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAB%3D0VtXg8WjnUOXQ%3Dt8Wn7xNXrRmNHBGB5S4WiEPYU%2BLo6SZVg%40mail.gmail.com.
--