அற்புதன் ஆனந்தன் அருளாளன் - காஞ்சிபுரம் ஶ்ரீ அத்திகிரி வரதன் துதி
(பல்லவி)
அற்புதன் ஆனந்தன் அருளாளன் - எங்கள்
… அச்சுதன் கேசவன் அத்தி கிரிவரதன்
(சரணம்)
மாசில் பெருந்தேவி மங்கை மணவாளன்
நேசம் உடையவரை நீங்கா நிலையாளன் .1 . (அற்புதன்)
சோதிச் சுடர்வேள்வித் தோன்றும் எழிலாளன்
தீதில் மறைவாழ்த்தும் சீரார் அரசாளன் 2. (அற்புதன்)
அல்லற் பிறவி அகற்றும் கழலாளன்
தொல்லை வினைகள் துடைக்கும் விழியாளன். 3. (அற்புதன்)
கார்முகில் வண்ணத்தைக் காட்டும் வடிவாளன்
வாரண மாமலைமேல் வாழும் திருவாளன் 4. (அற்புதன்)
(அத்தி கிரி = யானை வடிவ மலை; வாரண மாமலை = அத்திகிரி; பெருந்தேவி = தாயார் திருநாமம்; வரதன் = பெருமாள் திருநாமம்; அருளாளன் = வரதர் பேரருளாளன் என்றும் அழைக்கப்படுகிறார்; உடையவரை = இராமானுசரைப் பற்றியும் மறைமுகமாகக் குறிக்கும்; சோதிச் சுடர் வேள்வி = பிரமனின் யாகத்தில் வரதர் தோன்றி அருள்புரிந்ததாகத் தல வரலாறு; கார்முகில் வண்ணம் = யாககுண்டத்தில் தோன்றியமையால் நிறம் கருத்தவனாகவும் கொள்ளலாம்)
- இமயவரம்பன்
On 6 Jul 2026, at 12:33 PM, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/072E974C-30B2-4F5E-8B0F-155C8831F050%40gmail.com.