அடிசில் ஆக்குதற்கு அமைந்த நல் கலங்கள்
நெடியாது அளிமின், நீர்’ எனக் கூற-
கண்ணகியின் மாதரியை நோக்கிய கூற்று ஆதலால்,
நும் மகன் = கோவலன். அதாவது தன் கணவன்.
அவன், சிராவக நோன்பி. Householder. இல்வாழ்வான் என்பார் வள்ளுவர்.
கண்ணகி, கோவலனை மாதரி மகன் என்பதனால்,
ஐயை ஆகிய மாதரியின் மகள் நாத்தனார் ஆகிறாள்.
கணவனின் உடன்பிறந்தாள் நாத்தனார், நாத்துணா.
மலைநாட்டில் இன்றும் கணவனுக்கு மூத்தாளை நங்கை என்பர்.
அவள் கோவலனுக்கு வயதில் மூத்தவள் என்பதால் "நாத்தூண்நங்கை"
என்கிறாள் கண்ணகி. வயதில் இளையாளாயின்
"நாத்தூண்கொழுந்தி" என்றிருப்பார். பொறுப்பாக,
சமையலுக்கு வேண்டிய எல்லாக் கலங்களும், அரிசி,
காய்கறி இன்ன பிறவும் விரைந்து அளிக்க வேண்டுகிறாள்.
நாத்து (cf. nAtha) ஊண் (உடைய) நங்கை = நாத்தூண்நங்கை.
இங்கே, கோவலனின் 'உடன்பிறப்பு' ஆகிய ஐயையை
'நாத்தூண்நங்கை' என்கிறாள் கண்ணகி.
நீர் - பன்மை. மாதரியும், ஐயையும் இதைச் செய்க என்கிறாள் கண்ணகி.
நல்கலம் = புதுக்கலம். இறைச்சி போன்றன சமைக்கும்
வீட்டுக் கலம் அன்று என்பது பொருள். இதை நானே
பல வீடுகளில் தேசாந்திரிகள் வந்து தங்கும் போது (பழனி,
ராமேசுவரம் போவார்) அவர்களுக்கான நன்கலம் அளிப்பதனைப்
பார்த்துள்ளேன்.
நா. கணேசன்
நாத்தூண்நங்கை பற்றிய தற்காலச் சிறுகதை ஒன்று.
நாத்தனார் என்ற கதையில் வரும் கந்தசாமியின் அக்கா கங்கம்மா, தம்பி மனைவி வஞ்சியைக் காரணமின்றித் தொல்லைப்படுத்துவதாக ஆசிரியர் விந்தன் படைத்துள்ளார்.
நாத்தனார்
- விந்தன் (சிறுகத)
வஞ்சி எப்பொழுதுமே இப்படித்தான். அவள் வீட்டில் நடக்கும் சண்டை சச்சரவுகளைப் பற்றித் தன் கணவனிடம் ஒன்றுமே சொல்ல மாட்டாள்.
‘அக்கா! நீதான் அந்த மாவைக் கொஞ்சம் அரைச்சுக் கொடுக்கக் கூடாதா?’ என்றான் கந்தசாமி.
‘அரைப்பேண்டா, அரைப்பேன்! ஏன் அவளைக் கூடக் கொஞ்சம் தூக்கி உன் பக்கத்திலே உட்கார வைக்கட்டுமா?’ என்றாள் கங்கம்மா.
கந்தசாமி முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டான். அவன் மனத்தை மாற்றுவதற்காக “வெய்யில்லே அலைஞ்சிட்டு வந்தாயே, கொஞ்சம் தயிரைப் போட்டுக் கூழைக் கரைச்சுக்கிட்டு வரட்டுமா?” என்று கேட்டாள் வஞ்சி.
“எடுத்துக்கிட்டு வா!’ என்றான் கந்தசாமி.
உள்ளே போய்ப் பார்த்தால் தயிரைக் காணோம். அதைக் கபாலி காலி செய்துவிட்டிருந்தான். 'கேட்டால் பூனையின் மேல் பழியைப் போடுவார்கள். கேட்காமல் இருப்பதே நல்லது' என்று தீர்மானித்து, வெறும் கூழைக் கரைத்துக் கொண்டு வந்தாள் வஞ்சி.
“என்னா வஞ்சி! தயிரு இல்லையா?”
‘இருந்தது; இப்போது பார்த்தாக் காணோம். பூனை குடிச்சிட்டாப் போல இருக்குது!" என்று தன் நாத்தனார் சொல்லப் போவதைத் தானே சொல்லி வைத்தாள் வஞ்சி.
அப்பொழுது “இல்லை, மாமா! நான்தான் குடிச்சுட்டேன்!’ என்று சமர்த்தாகச் சொல்லிக் கொண்டே வந்தான் கபாலி.
‘அட, என் கண்ணு! குடிச்சிட்டியா? - போ!’ என்று தன் வயிற்றெரிச்சலை வெகு லாவகமாக வெளியிட்டான் கந்தசாமி.
* * *
‘சேர்ந்து வாழ்வது தான் சிறந்தது' என்கிறோம். ஆனால், வாழ்க்கையில் பார்க்கப்போனால் அதைப் போன்ற தொல்லை வேறு ஒன்றும் கிடையாது என்று தோன்றுகிறது. நமது சுற்றத்தாருடன் நாம் பிரிந்து வாழும்போதோ, அல்லது பிரிந்து செல்லும்போதோ இருக்கிற ஆசையும் அன்பும் சேர்ந்து வாழும்போதோ, அல்லது சேர வரும் போதோ எங்கே இருக்கிறது?
அன்று வஞ்சியைப் பிரசவத்துக்காக அழைத்துச் செல்ல அவளுடைய அம்மா வந்திருந்தாள். அப்பொழுது “நீங்க என்னாத்துக்கு அழைச்சுக்கிட்டுப் போறீங்க? இங்கேயேதான் இருக்கட்டுமே; எல்லாம் நான் பார்த்துக்கிறேன்!” என்றாள் கங்கம்மா. அவள் போய்விட்டால் வீட்டு வேலைக்கும் சண்டைக்கும் ஆள் கிடைக்காதே என்ற கவலை அவளுக்கு!
இது தெரியாத வஞ்சி, “ஆமாம், அம்மா! எனக்குக் கூட அவரை விட்டுவிட்டு வரத்துக்கு என்னமோ மாதிரியாயிருக்குது! இங்கேயேதான் இருக்கிறேனே, எல்லாம் இந்த அம்மா பார்த்துக்கிறாங்க!’ என்றாள்.
‘என்ன இருந்தாலும் நாலுபேர் நாலு சொல்லுவாங்க!’ என்று சொல்லி வஞ்சியைத் தன்னுடன் அழைத்துச் சென்று விட்டாள் அவளுடைய அம்மா.
அவள் வாழ்க!
* * *
வஞ்சி பிரசவித்து மூன்றாவது மாதம் நடந்து கொண்டிருந்தது. கந்தசாமி தன் மனைவியை அழைத்துப்போக வந்தான். அவனுடன் செல்ல வஞ்சிக்கு எவ்வளவோ ஆசை. ஆனால் கங்கம்மாவை நினைத்தபோது, அங்கே சென்று அவளுடைய வம்புக்கு ஆளாவதைக் காட்டிலும் இங்கேயே இன்னும் இரண்டு மாதங்களாவது தொல்லையில்லாமல் இருக்கலாமே என்று அவளுக்குத் தோன்றிற்று. இதைக் குறிப்பாகக் கந்தசாமியின் காதிலும் போட்டு வைத்தாள். அவனுக்கும் அவள் சொல்வது ஒரு விதத்தில் நல்லதென்றே பட்டது.
மறுநாள் கந்தசாமி தான் மட்டும் ஊருக்குச் செல்வதற்காக ஆயத்தம் செய்து கொண்டிருந்த போது அவனுக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் எழுதியிருந்தது இதுதான்;
சிரஞ்சீவி கந்தசாமிக்கு, ஆசீர்வாதம்.
சண்டைக்குப் போனவர் திரும்பி வந்துவிட்டார். நேரே பட்டனத்திற்கு வந்த அவர், அங்கே தனக்கு வேலை பார்த்துக் கொண்டு, இங்கே என்னை அழைத்துப்போக வந்திருக்கிறார். இந்தக் கடிதம் கண்டவுடன் நீங்கள் உடனே வந்து எங்களை அனுப்பி வைக்கவும்.
கங்கம்மா.
இதைப் படித்ததும், ‘வஞ்சி! இப்பவே நீயும் என்னுடன் புறப்பட வேண்டியதுதான்!” என்று துள்ளிக் குதித்தான் கந்தசாமி. அவனுடைய தோள்களை ஆசையுடன் பிடித்துத் தொங்கிக் கொண்டு, ‘ஏன், அந்தக் கடிதாசியிலே அப்படி என்ன எழுதியிருக்கு?” என்று கேட்டாள் வஞ்சி.
விஷயத்தைச் சொன்னான் கந்தசாமி. அதைக் கேட்ட வஞ்சியின் வதனம், காலதேவனைக் கண்ட கமலம் போல் பூத்தது!
இந்தக் காட்சி எந்த நாத்தனாருக்கும் பிடிக்காத காட்சிதான்; ஆனால் ஏன் பிடிக்கவில்லை என்றுதான் தெரியவில்லை!