. மாலை -- வேளை
ஈற்றழகு வெண்பாவாய் மயக்கும் மாலை
இருளொளியின் மறுபிறப்பாய் வியக்கும் வேளை
தோற்றமொரு செந்நிறத்துத் திகிரி மாலை
சூழ்கடலில் கதிரிறங்க இருட்டும் வேளை
கோற்றொடியார் நாணமெனச் சிவந்த மாலை
குளிர்குழலின் கருமையினை உவந்த வேளை
ஊற்றெடுக்கும் கவிதைபல பாடும் மாலை
உள்மனத்தின் ஒளியுண்மை தேடும் வேளை
மேற்றிகழும் மதிவிளக்கை ஏந்தும் மாலை
விண்மீன்கள் கருங்கடலில் நீந்தும் வேளை
ஏற்றுசுடர் மனைவிளக்குத் திகழும் மாலை
இன்னிசையால் இறையருளைப் புகழும் வேளை
ஆற்றலெலாம் அமைதியுளே அடங்கும் மாலை
அறிவெல்லாம் உணர்வுள்ளே ஒடுங்கும் வேளை
மாற்றங்கள் வாழ்க்கையென அறியும் மாலை
மனநிறைவே மகிழ்ச்சியெனப் புரியும் வேளை!
-- தில்லைவேந்தன்