காய்கறி வைத்தியம் விருத்தம்
அசைவத்தைத் தின்னாதீர் ஆபத்தோ ஆபத்து
பசியெடுத்தால் காய்கறியைப் பக்குவமாய் உண்டுவர
விசையுடனே வியாதிகளும் விட்டுடனே விலகிடுமே
திசையெங்கும் சென்றுரைப்பீர் சிறப்புடன்நாம் வாழ்ந்திடவே
ஈசனவன் அருளாலே எடுத்துரைப்பேன் கேளுங்கள்
தேசமெங்கும் திருஷ்டிக்குத் தெருக்களிலே உடைக்கின்ற
பூசணிக்காய் வயிற்றிலுள்ள புண்ணெல்லாம் ஆற்றிவிடும்
ஆசனவாய் எரிச்சலையும் அகற்றிவிடும் அருமருந்தே
கத்தரிக்காய் கரையாத கற்களையும் கரைத்துவிடும்
நித்தமுமே உண்டுவர நீர்பிரியும் எளிதாகச்
சத்தியமாய் உரைக்கின்றேன் சத்துமிக நிறைந்ததுதான்
அத்தகைய காயதனை அன்றாடம் உண்ணுங்கள்
எத்தகைய நோயினையும் எளிதாகக் குணமாக்கும்
கொத்தவரை உண்டுவர கோடிநன்மை பெறலாமே
வத்தலென உண்ணாது வாயிலிட்டு மெல்லுங்கள்
பத்திரமாய் நரம்புகளைப் பலப்படுத்திக் காத்திடுமே
புடலங்காய் உண்டுவர புத்துணர்ச்சி பெறலாமே
உடல்காக்கும் வாயுவினை ஒழுங்காக வைத்திடுமே
உடலுக்கு நிம்மதியாய் உறக்கத்தைத் தந்திடுமே
விடவேண்டாம் இதையுண்டு விரைவாக உறங்குங்கள்
பரங்கிக்காய் என்றதனைப் பாரோர்கள் அழைக்கின்ற
அரசாணிக் காயுண்ண அற்புதங்கள் நிகழ்ந்திடுமே
தரமாக உறுப்புகளின் தசைமுழுதும் வலுப்படுத்தும்
வரம்பில்லாச் சத்துள்ள மஞ்சளான காய்தானே
கோவைக்காய் தோல்நோயைக் குணப்படுத்த உகந்ததுவே
கோவைக்காய் தேவையில்லாக் கொழுப்புகளை நீக்கிடுமே
கோவைக்காய் உடலுக்குக் குளிர்ச்சியை அளித்திடுமே
கோவைக்காய் உடலெடையைக் குறைப்பதற்கும் உதவிடுமே
முருங்கைக்காய் சுவாசத்தை முறைப்படுத்தி நலம்தருமே
முருங்கைக்காய் உண்டுவர மூச்சிறைப்பு நீங்கிடுமே
இரும்பைப்போல் பலம்பெறலாம் இதனிலையை உண்டாலே
இருமல்நோய் தீர்க்கின்ற இன்னமுதக் காய்தானே
சேர்க்காதீர் வெங்காயம் சேதாரம் உடலுக்குப்
பீர்க்கங்காய் உண்டுவர பிணியேதும் அண்டாதே
பீர்க்கங்காய் சக்திதந்து பேணிநம்மை காத்திடுமே
பீர்க்கங்காய் உடலுக்குப் பேரழகைத் தந்திடுமே
நீங்காத மூட்டுவலி நீக்கிவிடும் அருமருந்து
தேங்காயை உண்டுவர தேயாது நம்மெலும்பு
தேங்காய்ப்பால் வாய்ப்புண்ணைச் சீராக்க வல்லதுவே
தீங்கில்லாத் தேங்காயைத் தினமுண்டு வாழுங்கள்
எலுமிச்சை சுரப்பிகளை எழுச்சிபெற செய்திடுமே
எலுமிச்சை தோலுடனே எடுத்துண்ண ஏற்றதுவே
வலுவான நோயெதிர்ப்பை வழங்குகின்ற காயிதுவே
பலியாக இக்காயைப் பாழாக்கி எறியாதீர்
அண்டாது வியாதிகளே அன்றாடம் வெண்டைக்காய்
உண்டாலே உயரழுத்தம் ஒழுங்காக மாறிவிடும்
வெண்டைக்காய் கொழகொழப்பு வேண்டும்நம் உடலுக்கு
வெண்டைக்காய் உண்ணுங்கள் வியாதிகளை வெல்லுங்கள்
வாழைக்காய் இதயத்தை வலுப்படுத்தும் காயாகும்
வாழைப்பூ பெரும்பாடு வலிநீக்கும் மாமருந்து
ஏழைக்குக் கிடைக்கின்ற எளிதான காய்தானே
வாழைக்காய் உண்பார்கள் வாழ்வாங்கு வாழ்வாரே
மிளகாயை உண்ணாது மிளகுக்கு மாறுங்கள்
அளவாக உண்ணுங்கள் அவசரமாய் உண்ணாதீர்
வளமாக நலமாக வாழ்ந்திடலாம் வையத்தில்
தளர்வில்லா உடலோடு தழைத்தோங்கும் சந்ததியே
பனிரெண்டு காய்களையும் பக்குவமாய் உண்டுவர
பனிரெண்டு மண்டலமும் பலம்பெறுமே நார்ச்சத்தும்
இனியென்றும் கிடைத்துவிடும் இளமையுடன் வாழ்ந்திடவே
அனைவர்க்கும் சொல்லுங்கள் ஆரோக்யம் பெற்றிடவே
பிற்குறிப்பு :
இந்தப் பாடல், காய்கறி வைத்தியம் அருண் பிரகாஷ் அவர்களின் YouTube சேனலைப் பார்த்து, அதன்படி காய்கறி உணவுமுறையைக் கடைப்பிடித்து உணர்ந்த அனுபவத்தின் பேரில் எழுதப்பட்டது.
இந்த காணொளியைக் கட்டாயம் காணுங்கள்
இக்கட்டுரை மேலேயுள்ள இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது
காய் இருக்க பயமேன். காய்கறிகளை சமைத்தால் உணவாகிறது. காய்கறிகளை அரைத்து சாறாக பருகினால் மருந்தாகிறது. காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் ஞானமாகிறது. மேன்மையான குணங்களை தன்னகத்தே பெற்றுள்ளதால் இறைவனுக்கு நன்றி செலுத்த காய்கறிகள் படைக்கப்படுகிறது. பிறவிக்குறைகளையும் நீக்கும் வல்லமை படைத்ததால் காய்கறிகளை நீத்தோருக்கு படையலாக்கி அவர்களுக்கு ஞாபகமூட்டப்படுகிறது. நார்ச்சத்து அதிகம் கொண்டுள்ளதால் உடலை கழிவில்லா பொக்கிஷமாக்கிறது. ஊட்டச்சத்து அதிகம் உள்ளதால் உடலை பலமாக்குகிறது. அதாவது நோய் வராது வரும் முன் காக்கின்றது. ஆங்காங்கே கிடைக்கும் காய்கறிகள் தானியங்கிகளுக்கு மாற்றாக சத்தான உணவாகின்றது. காய்கறிகளின் கழிவுகளை கொண்டு சிறிய அளவில் மின் உற்பத்தி செய்யப்படுகின்றது. மேலும் உள்ள கழிவுகள் விவசாயத்திற்கு உரமாகின்றது. பிரித்தெடுத்த நார்ப்பொருட்களை கொண்டு பல தொழில் நுட்பத்தின் துணையால் பல்வேறு பொருட்களை தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றது. காய்கறிகளை கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை சீர்திருத்த முடியும். அதற்கு உதாரணம் இராஜஸ்தானில் விளையும் கொத்தவரங்காயை ஏற்றுமதி செய்யப் படுவதால் அம்மாநிலத்தின் தனி நபர் வருமானம் மேம்பட்டுள்ளது. நாட்டின் பண்பாடு, கலாச்சாரத்தை வெளிப்படுத்துவதில் காய்கறிகள் அங்கம் வகிக்கின்றது. இத்தனை சிறப்புகளை பெற்றுள்ள காய்கறிகளை முழுமையாக நாம் பயன்படுத்துகின்றோமா? என்றால் நிச்சயம் இல்லை. தேங்காயை வழிபடும் ஓர் இனம் அதன் மேல் தோஷம் போடுவது அறிவியலா? அல்லது அறியாமையா? என்று சிந்தித்து செயல்படவேண்டிய தருணம் இது. நாட்டுக் காய்கறிகள் வீர்யம் வாய்ந்தது.
உதாரணத்திற்கு
ஜீரண மண்டலத்திற்கு வெண் பூசணிக்காய், சிறுநீரக மண்டலத்திற்கு கத்திரிக்காய், நரம்பு மண்டலத்திற்கு கொத்தவரங்காய், வாயு மண்டலத்திற்கு புடலங்காய், தசை மண்டலத்திற்கு அரசாணிக்காய், தோல் மண்டலத்திற்கு கோவைக்காய், சுவாச மண்டலத்திற்கு முருங்கைக்காய், நிணநீர் மண்டலத்திற்கு பீர்க்கங்காய், எலும்பு மண்டலத்திற்கு தேங்காய், நாளமில்லா சுரப்பி மண்டலத்திற்கு எலுமிச்சை, நாளமுள்ள சுரப்பி மண்டலத்திற்கு வெண்டைக்காய், இரத்த ஓட்ட மண்டலத்திற்கு வாழைக்காய், என உடலின் முக்கியமான மண்டலத்திற்கு இந்த காய்கறிகளின் பங்கு அவசியமாகின்றது.
முக்கியமாக பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு மிக எளிமையான தீர்வுகள் உண்டு என்று அதனை 12 நாட்டு காய்கறிகளுடன் பட்டியலிட்டு காய்கறியும் பெண்மையும் என்ற தலைப்பில் கூறுகிறார். காய்கறியும் பெண்மையும் கர்பப்பையை கர்ப்பக்கிரஹமாக்கிட - தேங்காய் வழியில்லாத மாதவிடாய்க்கு வழிகாட்டிட – கொத்தவரங்காய் மலடை மலடாக்கி பெண்ணை தாயாக்கிட - கத்திரிக்காய் முடிவில்லா போக்கை முடித்து கட்டிட - பீர்க்கங்காய் முன்னதாக வரும் போக்கை வன்மையாக மறுக்கும் -வெண்பூசணிக்காய் தாமதமாகும் போக்கை முறித்துவிடத் துடிக்கும் – முருங்கைக்காய் அதிக இரத்தப் போக்கிற்கு நிவாரணம் - வாழைக்காய் அதிக வெள்ளைப்போக்கிற்கு பரிகாரம் - கோவைக்காய் தடையில்லாமல் தாய்ப்பால் சுரந்திட – புடலங்காய் தடைப்பட்ட மாதவிடாய் உடைத்தெறிந்திட - எலுமிச்சை கட்டியான உதிரப்போக்கை தட்டி கேட்டிட - வெண்டைக்காய் சுகமான பிரசவத்தை நிகழ்த்திக்காட்டிட – அரசாணிக்காய் பெண்மைக்கு வாழ்வு தரும் நாட்டுக்காய்கறிகளை பெண்களே விரும்பாமல், உண்ணாமல் மறுப்பதேன்? நோயைப்பற்றிய பயமில்லாத வாழ்வை நினைத்துப் பார்க்க முடியாத இந்த காலகட்டத்தில் நம்பிக்கையுடன் வாழவைக்கும் இக்காய்கறிகள் இருக்க நமக்கு பயமேன்… உலகிற்கு பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை ஒரு தாயாக இருந்து கற்ப்பித்த பூமி நம் பாரத பூமி. சைவத்தின் அடிப்படையில் உணவு, அறநெறிப்படி பொருள் மற்றும் அன்பு வழியில் உறவு, இம்மூன்றும் அல்லாத கருத்தைப்பற்றி அறியாதவர்கள் பாரதவாசிகள்.
ஆரோக்கியத்திற்கு சைவ உணவை பின்பற்றினர். மனிதனுடைய பற்கள் மற்றும் குடல் அமைப்பானது நார்ச்சத்து இல்லாத மாமிச உணவிற்கு பொருத்தமாகாது. முகலாய மற்றும் மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கத்தால் சைவ உணவை விட அசைவ உணவு தான் பலம் தரும் என்று வைக்கப்பட்டது உண்மையில். •
நார்ச்சத்து நிறைந்த கொத்தவரங்காயில் உள்ள புரதம் மிக சிறந்தது. • நார்ச்சத்து நிறைந்த தேங்காயில் உள்ள கொழுப்பு மிகப் பாதுகாப்பானது. • நார்ச்சத்து நிறைந்த வாழையில் உள்ள மாவுச்சத்து முழுமையானது. • நார்ச்சத்து நிறைந்த முருங்கையில் உள்ள ஊட்டச்சத்து மிக வீர்யம் வாய்ந்தது. • நார்ச்சத்து நிறைந்த எலுமிச்சை தோலில் உள்ள கால்சியம் சக்தி வாய்ந்தது. • நார்ச்சத்து நிறைந்த அரசாணி விதையில் உள்ள மெக்னீசியம் பலம் படைத்தது. • நார்ச்சத்து நிறைந்த கோவைக்காயில் உள்ள வைட்டமின் ஏ எதற்கும் நிகரற்றது. • நார்ச்சத்து நிறைந்த கத்திரிக்காயில் உள்ள காரத்தன்மை சளி அறுப்பது. • நார்ச்சத்து நிறைந்த பீர்க்கங்காயில் உள்ள சதைப்பகுதி மென்திசு வளர்ப்பது. • நார்ச்சத்து நிறைந்த வெண்டையில் உள்ள நீர்ச்சத்துதான் உயிர் காப்பது. • நார்ச்சத்து நிறைந்த வெண்பூசணியில் உள்ள உப்புச்சத்து இரணம் காப்பது. • நார்ச்சத்து நிறைந்த புடலையில் உள்ள வேதிப்பொருள் அகத்தை சீராக்குவது. ---------------------------------------------------------------------------
நார்ச்சத்து எவ்விதத்தில் தவிர்க்க இயலாதது என்பதை சற்று பார்ப்போம். 1. கரையக்கூடிய நார்ச்சத்து இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. 2. கரையாத நார்ச்சத்து இரத்த கொதிப்பை சீராக்குகிறது. 3. நார்ச்சத்து உள்ள உணவானது நரம்பு மற்றும் தசை நார்களை வலிமையாக்குகிறது. 4. நார்ச்சத்து குடலில் வாயுக்களை நீக்கி வயிறு உப்புசத்தை தவிர்க்கிறது. 5. கரையாத நார்ச்சத்து குடலின் வேலை சுமையை குறைக்கின்றது. 6. நார்ச்சத்து உடலில் உள்ள கார அமிலத்தன்மையை சமநிலைப்படுத்துகிறது. இந்த ஆறு பணிகளையும் நார்ச்சத்து இல்லாத அசைவ உணவுகளால் முழுமையாக செயல்படுத்தமுடியாது என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. ---------------------------------------------------------------------------
நார்ச்சத்து இல்லாத அசைவ உணவால் உலக மக்கள் சந்திக்கும் மூன்று பெரும் பிரச்சனைகளை இயற்கை ஆய்வாளர்கள் பட்டியலிட்டு கூறுகின்றார்கள். அவை பின் வருமாறு:- 1. நீர் நிலைகள் அதிகம் வீணாக்கப்படுவது. 2. உணவு உற்பத்தி செலவு பல மடங்கு அதிகமாவது. 3. தீர்க்க முடியாத இருதய மற்றும் தோல் நோய்கள் பரவுவது. இம்மூன்று பிரச்சனைகளுக்கும் சைவ மற்றும் காய்கறி உணவு முறை மட்டுமே தீர்வாகும். காய்கறிகளை எடுக்கும் முறையில் மூன்று தவறுகளை செய்வதால் அதன் பலன் நமக்கு கிடைப்பதில்லை. அவை பின் வருமாறு:- 1. ஒன்று நாம் தேர்ந்தெடுக்கும் காய்கறிகள் வகை அதாவது வெண்பூசணி, கத்திரி, கொத்தவரை, புடலை, அரசாணி, கோவக்காய், முருங்கை, பீர்க்கங்காய், தேங்காய், எலுமிச்சை, வெண்டை மற்றும் வாழை என நம் நாட்டு காய்கறிகளாக இருக்கவேண்டும். கேரட், பீட்ரூட், உருளை ஆகியவை கிழங்கு வகையை சார்ந்தது. அவை நம் நாட்டு கிழங்கோ காய்கறியோ அல்ல. 2. இரண்டாவது, காய்கறிகளை வறுக்கக்கூடாது. பாதியளவு வேக வைக்கலாம் அல்லது அரைத்து சாறாக பருகலாம் அல்லது அப்படியே பச்சையாக சாப்பிடலாம். வறுத்து உண்பதால் முற்றிலும் அதன் ஊட்டச்சத்தை இழப்பது மட்டுமல்லாது. வாய்வு பிடிப்பு, சளி தொல்லை, ஒவ்வாமை, அஜீரணம், அசதி, மூச்சுத் திணறல் ஆகிய எதிர்மறை பலன்களைத் தர காரணமாகிறது. அதனால் சுவைக்கு முக்கியத்துவத்தை தவிர்த்து ஆரோக்கியத்தின் அடிப்படையில் சமைக்க பழக வேண்டும். 3. காயை மிளகுடன் சேர்த்து சமைப்பதால் காய்கறி என்ற சொல் உருவானது. மிளகு எந்த காயையும் செரிக்கவைத்துவிடும். மிளகை விட்டு விட்டு மிளகாயை போட்டு சமைத்தால் செரிப்பதற்கு பதிலாக உடலில் உள்ள பாகங்களை அரித்து தின்று விடும். அதனால் பச்சை மிளகாய், வரமிளகாய் மற்றும் மிளகாய் தூள் ஆகியவற்றை பயன்படுத்தினால் நிச்சயம் நமக்கு நல்லது நடக்காது. இது சத்தியம். பெரும் சக்தி படைத்த காய்கறிகளை தவறான கருத்து மற்றும் தவறான முறையில் சமைப்பதால் அதன் பலன் அறியாது புரியாது உணராது இறுதியில் ஏமாற்றம் மற்றும் பண விரயத்தை மட்டுமே எதிர்கொள்கிறோம். அதனால் தேடுதலை நிறுத்திவிட்டு முறையாக செயல்பட ஆரம்பிப்போம். எந்த பண்பாடு மற்றும் கலாச்சாரம் நம்மை வாழவைத்ததோ அதே கலாச்சாரத்தை அறமாக கருதி நாம் அறந்தாங்கிகளாக மாறவேண்டும். எந்த பூமியின் மேல் நாம் நின்று கொண்டிருக்கிறோமோ அந்த பூமியானது நம்மை அரவணைத்து காப்பதில் தாயாக இருக்கிறாள். இதுவன்றி வேறு எந்த தொழில்நுட்பமும் நம்மை வல்லரசாக்காது. நம் மண்ணை மதிப்போம். நம் மண்ணை காத்திடுவோம். மண் வாசனையில் திளைத்திடுவோம். பாரதத்தாயை வணங்கிடுவோம்.