அரசர்களின் பள்ளத்தாக்கு என்று அறியப்படும் நைல்நதிக்கரையில் உள்ள பிரமிடுகளில் ஆறு கல்லறைகளில் தமிழ் பிராமி பொறிப்புகள் (graffiti) கண்டறியப்பட்டுள்ளன. இவைகளில் பெரும்பாலான எழுத்து பொறிப்புகள் தமிழ் பிராமி எழுத்துகள் என்கிறார்கள் ஆய்வாளர்கள், சார்லட் ஸ்மிட்டும், இங்கோ ஸ்ட்ராச்சும். அரிய தமிழ் ஆராய்ச்சிக்கு நன்றிக்கடன் பட்டவர்கள் ஆவோம்.
தமிழ்நாட்டில், ஐராவதம் மகாதேவன் தொடங்கிவைத்த தமிழ் பிராமி எழுத்துகளின் வாசிப்பு, அரசாங்கத் தொல்லியல் துறையினர் பலரால் செழுமைப்படுத்தப்பெற்றது. இதன் காரணமாகவே, இன்று ஐரோப்பிய ஆய்வாளர்களும் எகிப்தில் உள்ள தமிழைப் படிக்க இயலுகிறது. தொல்காப்பியத்தின் கால நிர்ணயத்திற்கு, தமிழ் பிராமியின் புள்ளிகள் தோன்றும் காலம் முக்கியமானது என விரிவாக விளக்கியவர் ஐராவதம். அவரது முதற்பணி எங்கள் பொள்ளாச்சி ஸப்கலெக்டர். அவர் தமிழின் முதல் எழுத்துக்கு வைத்த பெயர்: தமிழ் பிராமி. தொல்காப்பியரின் புள்ளிக் கோட்பாடு யூனிகோட் எழுத்தாக்க, அந்தக் கன்சார்சியம் கூட்டத்தில் சென்று விளக்கினேன். வெற்றி கிடைத்தது. பிறகு தமிழ் பிராமிக்கென பிராமி இலிபியில் 2000+ ஆண்டுமுன்னர் சேர்ந்த ஐந்து எழுத்துக்களையும் யூனிகோட் (ISO 10646) சேர்த்தினோம்.
https://nganesan.blogspot.com/2021/06/unicode-only-encoding-for-tamil.htmlஎளிதாகத் தமிழ் பிராமியைக் கணினியில் எழுத முடிகிறது. தமிழி என்ற புதுப்பெயரை உருவாக்கியவர் டாக்டர் இரா. நாகசாமி ஆவார். இப்பெயர் சமூக ஊடகங்களில் பிரபலமாக உள்ளது. தமிழ் பிராமியில் இருந்து பனையேடுகளில் எழுதுவதால் வட்டெழுத்து என வளர்ந்தது. வட்ட வட்டமாக இருக்கும். மதுரை அருகே உள்ள சமணர் குகைகளிலும், பழைய நடுகற்களிலும் வட்டெழுத்து காண்கிறோம். கிரந்த எழுத்து உருவாக்கத்தில் ஆந்திர நாட்டில் இருந்து வந்த பல்லவர்களின் பங்கு பெரியது. முதலில் வடமொழி எழுதப் பல்லவர்கள் பயன்படுத்தினர். அதில் இருந்து, சித்திரகாரப் புலி என அழைக்கப்பட்ட மகேந்திரவர்ம பல்லவன் அழகான தமிழ் எழுத்துக்களை உருவாக்குகிறான். இதுவே இன்றைய தமிழ் எழுத்தின் கால்கோள். பின்னர், சோழப் பேரரசன் ராஜராஜன் தமிழகம் இலங்கை எல்லா இடங்களிலும் மேலே சொன்ன கிரந்த எழுத்துடன் தொடர்புடைய தமிழ் எழுத்தைப் பராவல் ஆக்கினான். வட்டெழுத்து வழக்கொழியலாயிற்று. பண்டை இந்தியாவை ஆராயும் அறிஞர்கள் உலகம் முழுதும் தமிழ் பிராமி என அழைப்பதன் காரணம்:
https://x.com/naa_ganesan/status/1984984252543353046https://x.com/naa_ganesan/status/1939362125769576864உலக தம்மலிபி தினம் - World Dhammalipi Day (James Prinsep birthday).
முதலில், பிராமி இலிபி வாசிப்பு
https://x.com/naa_ganesan/status/1958117745867853935ஐராவதம் மற்றும் பல அறிஞர்கள் உழைப்பு, இன்று எகிப்து நாட்டில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை இனங்காண உதவுவது சிறப்பு அல்லவா?
எகிப்து நாட்டில் தமிழ்ப் பெயர்களின் ஆராய்ச்சி:கணன், சாதன், கோபன், ... எனத் தமிழியில் குறிக்கப்படும் சொற்களைக் கண்ணன், சாத்தன், கோப்பன், ... எனப் படிக்கவேண்டும். அதேபோல, -இ,எ, ஒ போன்ற உயிர் எழுத்துக்கொண்ட உயிர்மெய்கள் ஈ, ஏ, ஓ என்ற நெட்டுயிர் உயிர்மெய்கள் எனக் கொள்ள வேண்டிய இடங்களும் உண்டு. எகிப்திலேயே, கிரன் என்பதைக் கீரன் என்றும், சிகை கொற்றன் என்பதைச் சீகை கொற்றன் என்றும் வாசிக்கவேண்டும். Charlotte Schmid சிகை என்னும் வடமொழிச் சொல் என்று கூறினார். சிகை <ஶிகா (śikhā). ஆனால், சீ- சீந்து, சீகு, போன்றன Palm tree வகைகள். சீ- > சீழ் (கள்ளு). சீழம் > ஈழம். சீழிவன் என்று தமிழ்நாட்டில் தமிழ்பிராமிக் கல்வெட்டு உண்டு. சீந்து > சிந்து (நதி), ஈந்து/ஈங்கு/ஈஞ்சு, ... "Date Palm tree". சீ- சீமாறு. ஈங்கண் நாட்டு ஈங்கண் (எண்கண் கல்வெட்டு). சீகு > ஈகு/ஈங்கு :: ஈங்கு+கண் இடம் = ஈங்கண் > இங்கண் > எண்கண் . முருகத் தலம். அருகே சீகு + இல் > சீகில்/சிக்கில் சிங்காரவேலன். சிக்கிலில் வேல்வாங்கி, செந்தூரில் சம்மாரம் - பழமொழி. சீகம்புல், சீத்தலை, . விரிவாகப் பேசலாம்...
-------------------
On the lighter side:கவியரசர் கண்ணதாசன் 1958-ல் "மாலையிட்ட மங்கை" திரைப்படத்தை எடுத்தார். 1000+ படங்களில் நடித்த குணச்சித்திர நடிகை மனோரமா அறிமுகம் ஆன படம். 'செந்தமிழ்த் தேன்மொழியாள்' போன்ற பிரபலமான பாடல்களைக் கொண்டது. டி. ஆர். மகாலிங்கம் பாடிய பாட்டொன்று பார்ப்போம். இப்படத்தின் முதலில் வரும் தலைப்பாட்டில் (Title song) எகிப்து நாட்டிற்குத் தமிழ் இளம்வீரர் சென்றதாகப் பாடியுள்ளார் கண்ணதாசன்.
"சிங்களத் தீவின் கடற்கரையை - எங்கள்
செந்தமிழ்த் தோழர் அழகு செய்தார்!
எகிப்திய நாட்டின் நதிக்கரையில் - எங்கள்
இளந்தமிழ் வீரர் பவனி வந்தார்!"
முழுப்பாடல் - காணொளியில் கேட்கலாம்.
விந்தியம் குமரியிடை விளங்கும் திருநாடே
வேலேந்தும் மூவேந்தர் ஆண்டிருந்த தென்னாடே
எங்கள் திராவிடப் பொன்னாடே கலை வாழும் தென்னாடே
(எங்கள்…)
இயல் இசை நாடகம் அறம் பொருள் இன்பம்
இலங்கும் செந்தமிழ் நாடே
(எங்கள்…)
சரித்திரம் பாடும் காவேரி இளம் தளிர்க்கொடி போலே ஓடுகிறாள்
சங்கம் வளர்ந்த மதுரையிலே எங்கள் தமிழ்மகள் தமிழ் இசை பாடுகிறாள்
விழிகளைப் போலே குமரியின் மேலே மீன் மகள் துள்ளி ஆடுகிறாள்
விளையாடும் வைகை அழியாத பொய்கை
திசைதோறும் இசை பாடும் தாய்நாடே
(எங்கள்…)
சிங்களத் தீவின் கடற்கரையை எங்கள்
செந்தமிழ்த் தோழர் அழகு செய்தார்
எகிப்திய நாட்டின் நதிக்கரையில்
எங்கள் இளந்தமிழ் வீரர் பவனி வந்தார்
(எங்கள்…)
வில்லவன் சேரன் பாண்டிய நாட்டின் வேல்விழி மகளை மணமுடித்தான்
விளைகின்ற செல்வம் வளர்கின்ற தங்கம்
திசைதோறும் இசை பாடும் தாய்நாடே
(எங்கள்…)
இயல் இசை நாடகம் அறம் பொருள் இன்பம்
இலங்கும் செந்தமிழ் நாடே
(எங்கள்…)