2025-04-22
சேரமான்பெருமாள் நாயனார் துதி - கழறிற்றறிவார் குருபூஜை - ஆடிச் சுவாதி - 2025
----------------
(ஈரடிமேல் வைப்பு ;
தானான தானான தானா - தான
.. தானான தானான தானான தானா - என்ற சந்தம்)
(அப்பய்ய தீக்ஷிதரின் மார்கபந்து ஸ்தோத்திர அமைப்பில்)
(mārgabandhu stotram - https://sanskritdocuments.org/doc_shiva/maargabandhu.html?lang=iast
A clip on YouTube: https://www.youtube.com/watch?v=1n1BxKU2cJg )
முற்குறிப்பு: இப்பாடலில், ஓர் அடியில் தானா என்ற சந்தம் அமையும் இடங்களில் நிறுத்திப் பாடப்பெறும். ஒவ்வோர் அடியிலும் அந்த இடங்களிடையே இயைபுத்தொடை அமைந்த பாடல்கள்.
* படிப்போர் வசதி கருதிச் சில இடங்களில் சொற்களுக்குத் தக்கபடி சீர்பிரித்துக் காட்டப்பெற்றுள்ளது. சந்தம்-கெடாமையைப் படித்து உணர்க.
* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்.
எவ்வெவ் வுயிர்ப்பேச்சும் ஓர்வார் - ஆடும்
.. எம்மானை எந்நாளு(ம்) நன்றேத்தி வாழ்வார்
பவ்வத்து நஞ்சுண்ணி நண்பர் - கேண்மை
.. பன்னாள் மகிழ்ந்தே உலாப்பாடு பண்பர்
மாவேறி வான்ஏறி னாரே - சேர
.. மான்தாளை வந்தித்த வர்க்குண்டு சீரே.
எவ்வெவ்வுயிர்ப்-பேச்சும் ஓர்வார் - எல்லா ஜீவராசிகள் சொல்வதையும் அறிந்தவர்; (ஓர்தல் - அறிதல்); (* கழறிற்றுஅறிவார் என்ற பெயரின் காரணம்);
ஆடும் எம்மானை எந்நாளு(ம்) நன்றேத்தி வாழ்வார் - கூத்தப்பிரானைத் தினமும் செவ்வனே வழிபாடு செய்து வாழ்ந்தவர்;
பவ்வத்து நஞ்சுண்ணி நண்பர் கேண்மை பன்னாள் மகிழ்ந்தே, உலாப் பாடு பண்பர் - கடல்விஷத்தை உண்டவன் தோழர் (= சுந்தரர்) நட்பைப் பலகாலம் மகிழ்ந்து, (பின்னர்த்) திருக்கயிலாய ஞானவுலாவைப் பாடியவர்; (பவ்வம் - கடல்); (உண்ணி - உண்டவன்); (அப்பர் தேவாரம் - 4.8.1 - "அவனுமொர் ஐயம்-உண்ணி"); (கேண்மை - நட்பு);
மா ஏறி வான் ஏறினாரே - தம் குதிரையின்மேல் ஏறிச் சிவலோகத்தை அடைந்தவர்; (மா - குதிரை); (வான் - இங்கே, சிவலோகம்);
சேரமான்-தாளை வந்தித்தவர்க்கு உண்டு சீரே - அந்தச் சேரமான்பெருமாள் நாயனார் திருவடியை வணங்கியவர்களுக்கு திரு உண்டாகும்; (சீர் - செல்வம்; பெருமை; புகழ்);
V. Subramanian
===
2026-05-11
சேரமான்பெருமாள் நாயனார் துதி - கழறிற்றறிவார் குருபூஜை - ஆடிச் சுவாதி - 2026
-------------
(வண்ணவிருத்தம்;
தனனத் தனனா .. தனதான)
சுடுகட் பெருமான் .. இருதாளைத்
.. தொழுநற் றவமார் .. ஒருநேயர்
வடுவற் றுலகாள் .. அரசானார்
.. மதியச் சடையான் .. அருளாலே
தொடுசொற் றொடையால் .. அடிபேணும்
.. துணைவர்க் கினியார் .. கயிலாயம்
கடுகிப் பரிமேல் .. அடைசேரர்
.. கழறிற் றறிவார் .. கழல்வாழ்க.
பதம் பிரித்து:
சுடு-கட்-பெருமான் இருதாளைத்
.. தொழு-நற்றவம் ஆர் ஒரு நேயர்,
வடுவற்று உலகு ஆள் அரசு ஆனார்,
.. மதியச்-சடையான் அருளாலே,
தொடு-சொற்றொடையால் அடி-பேணும்
.. துணைவர்க்கு இனியார்; கயிலாயம்
கடுகிப் பரிமேல் அடை-சேரர்,
.. கழறிற்றறிவார் கழல் வாழ்க.
சுடு-கட்-பெருமான் இருதாளைத் தொழு-நற்றவம் ஆர் ஒரு நேயர் - எரிக்கும் கண்ணுடைய பெருமானது இருபாதங்களைத் தொழும் நல்ல தவம் நிறைந்த ஒப்பற்ற அன்பர்;
வடுவற்று உலகு ஆள் அரசு ஆனார், மதியச்-சடையான் அருளாலே - சந்திரனை அணிந்த சடையன் அருளால், குற்றமற்று நாட்டை ஆளும் அரசர் ஆனவர்;
(மதியச்-சடையான் அருளாலே) தொடு-சொற்றொடையால் அடி-பேணும் துணைவர்க்கு இனியார் - மதிசூடிய ஈசன் அருளால் தொடுத்த பாமாலைகளால் திருவடியைப் போற்றும் தோழரான சுந்தரருக்கு இனியவர்; ("மதியச்-சடையான் அருளாலே" - இடைநிலைத்தீவகமாக இப்படி இருபக்கமும் இயைத்துப் பொருள்கொள்ள நின்றது);
கயிலாயம் கடுகிப் பரிமேல் அடை-சேரர் - கயிலாயத்தைக் குதிரைமேல் விரைந்து சென்றடைந்த சேரர்;
கழறிற்றறிவார் கழல் வாழ்க - கழறிற்றறிவார் நாயனார் (சேரமான்பெருமாள் நாயனார்) திருவடிகள் வாழ்க;
வி. சுப்பிரமணியன்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCO3SPZhxO7Nuivq1wK1b-9NKHSjNr1baGwxFu40NzY5mw%40mail.gmail.com.