மீ.வி. அவர்கள் தன்னுடைய ஊர், அங்கு வாழ்ந்த மக்கள், அவர்களுடைய வாழ்க்கை நெறி ஆகியவற்றை மிக சுவையாக
அவ்வப்போது பதிவு செய்து வருகிறார்.
இப்போது நான் படித்த பள்ளியைப் பற்றிய ஒரு காணொளியின் தகவலை இங்கே இடுகிறேன்.
இந்தக் காணொளியை (21 நிமிடங்கள்) மழைக்கால முடிவில் எடுத்திருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.
அந்தக் காலத்தில், அதாவது இருபதாம் நூற்றாண்டில், 1900 முதல் 1950 வரை, நகரத்தார், திருமெய்யம். பிள்ளையார் பட்டி
கானாடுகாத்தான், செட்டிநாடு, காரைக்குடி, தேவகோட்டை, நாட்டரசன்கோட்டை, சிவகங்கை,மானாமதுரை பகுதிகளில்
எப்படி கல்வியை வளர்த்தார்கள், அருமையான பள்ளிக்கூடங்களை ஏற்படுத்தினார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
சிவகங்கை, பரமக்குடி, ராமநாதபுரம் 'ராஜா'க்களும் இப்பணியைச் செய்திருக்கிறார்கள்.
பள்ளிக் கட்டிடம், விளையாட்டு மைதானம் எல்லாம் இன்றும் அதிக மாறுதல் இல்லாமல் இருப்பது ஆச்சரியமாகவும்,
பெருமையாகவும் இருக்கிறது. நான் உட்கார்ந்து படித்த 'பெஞ்சு'கள் இன்றும் இருப்பது வியப்பைத் தருகிறது.
கட்டிடத்தின் அமைப்பு, ஓட்டுக்கூறை, படிகள், மாடி, இன்று வரை மாறாமல் இருப்பது மகிழ்ச்சி தருகிறது.
Nostalgia இது தானோ!
மரங்கள் விழ, விழ, மடிய, மடிய புது மரங்களை நட்டு, வளர்த்து, பராமரித்து வருகிறார்கள். பள்ளியின் முகப்பிலிருந்து
கட்டிட நுழைவாயில் வரை ஒரு நீண்ட பாதை, அதன் இரு சாரிகளிலும் வேப்ப மரங்கள் ஒரே சீராக, பச்சைப் பசேலென்று இருக்கும்.
அதே முறையை இன்றும் கடைப்பிடுத்து வருகிறார்கள் என்று தெரிகிறது. ஊரின் அழகு கெட்டுப் போய் விட்டது, சிதைந்து விட்டது.
ஆனாலும் பள்ளியின் அழகுக்கு அந்த துரதிருஷ்டம் இன்னும் நேரவில்லை!
மானாமதுரை பெரிய நகரம் அல்ல. சிறிய தாலுகா நகரமும் அல்ல, நான் படித்த காலத்தில் ஒரு கிராமப் பஞ்சாயத்தே!
இந்தப் பள்ளியில் தான் நான் படிக்கும்போது பாரதியாரின் தம்பி சி. விசுவநாதன் தலமை ஆசிரியராகப் பணியாற்றினார்.
அவரை அடுத்து என் தாய் மாமன் என். எஸ். ராமச்சந்திரன் தலைமை ஆசிரியரானார்.
கீழே உள்ள வலைதளத்தைச் சொடுக்கி காணொளியைப் பாருங்கள்.