தண்ணீர்
1.
மனிதனுக்கே மண்ணாசை அதிகம்
என்பார் ஞானியர் ;
ஆனால் உனக்கன்றோ
மண்ணாசை அதிகம் ;
உன்னைப் பொறுத்தவரை
நில அபகரிப்புச்
சட்டம் என்பது
செல்லுபடி ஆகாதோ ?
மனிதர்க்குக் கிடைக்காமல்
நீ மரணிப்பாய்
என்பதை ஏற்கலாகாது !!
மண்ணில் நீ
இல்லாது போனாலும் உடனே
கண்ணில் வருகிறாயே
கண்ணீராக.....
2.
கீழ் நோக்கிப் பாய்ந்தாலும்
எப்போதும் “மேல்” ஆனவள் நீ ;
சுவையே இல்லாவிடினும்
நிறைய சுவைக்கப்படுகிறாய் ;
நிறமே இல்லையெனினும்
உலகிற்கு வண்ணம் கொடுக்கிறாய் ;
”பூத”ங்களில் ஒன்றானாலும்
அனைவராலும் நேசிக்கப்படுகிறாய் ;
எதை நினைக்கிறானோ
அதாகவே மாறுபவன் மனிதன் ;
எதை நனைக்கிறோயோ
அதாகவே மாறுபவள் நீ
இன்றைய காலகட்டத்தில்
விண்ணில் இருந்தாலும்
மண்ணில் இருந்தாலும்
கண்ணில் மட்டும்
அகப்படாமல் இருப்பது நீ ;
3.
நீரே !!
கண்கள் கலங்கினால்
நீ வருகிறாய்
ஆனால் நீ கலங்கலாக
வந்தால் நிராகரிக்கப்படுகிறாய் ;
என்னே விந்தை நீ !!!
தண்ணீரே !!
உன்னைக் குடித்தால்
நீ உயிர் கொடுக்கிறாய்
உன்னை அடித்தால்
நீ உயிர் பறிக்கிறாய் ;
ஓரெழுத்தை மாற்றினால்
தலையெழுத்தையே மாற்றுகிறாயே !!
என்னே விந்தை நீ !!!
துன்பம் வந்து
கண்களினின்று வழிகையில்
உப்புக் கரிக்கிறாய் !!
இன்பம் வந்து
கண்களினின்று வழிகையில்
தித்திக்கிறாய் !!!
என்னே விந்தை நீ !!!
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.