மல்லிகை
உதிர்ந்து கிடக்கும்
செடியின் கீழ்
மல்லிகை ஏன் உதிர்ந்து கிடக்கிறது?
வீட்டில் கணவன் மனைவிக்குள் சண்டையா என்ன?
தெருவில் இரண்டு பெண்களுக்குள் சண்டையா?
ஒரு பெண்ணே ஏதோ ஒரு கோபத்தினால் தலையில் கிடந்தப் பூவை இப்படி உதிர்த்திருக்கிறாளா?
இல்லை அது முதல் இரவாகக் கூட இருந்திருக்கலமே என்று நினைக்கிறீர்களா?
சரி ஏன் அப்படி உதிர்ந்து இருக்கிறது? என்று மூன்றாம் அடியைப் பார்க்கிறோம்.
செடியின் கீழ் – அட செடியின் கீழ்தான் உதிர்ந்து கிடந்திருக்கிறது.
சரி… செடியின் கீழ் ஏன் மல்லிகை உதிர்ந்து கிடந்திருக்கிறது?
நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள்…
இந்த ஹைக்கூவில் முதல் அடியில்,
மல்லிகை – யை மல்லிகைப் பூக்கள் என்று எழுதலாம் என்றிருந்தேன்… ஹைக்கூவை மேலும் சுருக்க நினைத்து அவ்வாறு எழுதாமல்,
மல்லிகை
உதிர்ந்து கிடக்கும்
செடியின் கீழ்
என்று எழுதி முடித்தேன்.

* Blog : www.rameshpoet.blogspot.com
என் காதல்
கை நழுவிப்போனது
மாராப்பை விட்டு
விலகிய சேலையாய்
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
முன்னர் ஒரு முறை துளிப்பாக்களின் இலக்கண அமைப்பினைப் பற்றியொரு குறிப்பினை எழுத்தி இருந்தேன். அதன் பின்னர், பாவலர் திரு கரிசலார் அவர்களுடன், ஒருமுறை துளிப்பாக்கள், இயைதுளிப்பாக்கள், நகைதுளிப்பாக்கள், அவற்றின் அமைப்புகள், படிம உத்திகள் இவற்றை சில எடுத்துக் காட்டுகளுடன் மடலாடல்கள் செய்திருந்தேன்.
இவற்றை பல புத்தகங்களில் இருந்தும், இணையத்தில் சென்னை பல்கலை கழக பாடங்களில் இருந்தும் நான் அறிந்தேன். ஆனால் நான் அதிகம் இவ்வகைப் பாக்களை ஏனோ இயற்ற முற்படவில்லை! இதில் வரும் விவரங்கள் எல்லாமே நான் படித்து அறிந்தவையே! சென்னை பல்கலைக் கழக பாடத்திட்டத்திற்கு என் உளமார்ந்த நன்றி. துளிப்பாக்கள் வகையிலான கவிதை இயற்ற வேண்டும் என்று முனையும் அன்பர்களுக்கு இந்த கட்டுரை உதவும் என்று நம்புகிறேன்.
ஜப்பானிய இலக்கியத்தில் உருவான ஹைக்கூ, 5-7-5 என்ற அசையமைப்பு கொண்டு, ஜென்(Zen) குருமார் தத்துவத்தை பரப்புதற்கும், இயற்கையைப் போற்றுவதற்கும் பயன்பட்டது. இதுவல்லாது வேறு கருக்களைக் கொள்வது துளிப்பா ஆகாது என்பனர் பலர். தமிழிலக்கியத்தில் இவ்வடிவம் படிமம், குறியீடு, தொன்மம், முரண், அங்கதம், விடுகதை, பழமொழி, வினாவிடை, உவமை, உருவகம் எனப் பல்வேறு உத்திகளில் அமைக்கப்படுவதோடு, சமூக விமர்சனத்திற்கும் சமுதாயக் கேடுகளைச் சாடுதற்கும் தமிழ்த் துளிப்பா அன்பர்கள் கைக் கொள்கின்றனர் எனலாம்.
ஹைக்கூ என்கிற துளிப்பா-1
படிமம்:
துளிப்பாவில் பெரிதும் கையாளப் பெறுவது படிம உத்தியேயாகும். சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனும் ஐம்புல உணர்வுகளையும் அனுபவித்தவாறே வெளியிடுகின்ற உணர்ச்சி வெளிப்பாடே படிமம் எனப்படும். வருணனைத் திறன் மிக்கது இது.
(எ-கா):
1. கட்புலப் படிமம்
சாரல் அடிக்கிறது
ஜன்னலைச் சாத்தும்போது மரக்கிளையில்
நனைந்தபடி குருவி (பரிமள முத்து)
2. விளையாட்டுப் படிமம்
பம்பரம் சுற்ற
நல்ல கயிறு
எறும்பின் பாதை (மித்ரா)
3. அச்சு வடிவக் காட்சிப் படிமம்
அதிக சுமையா?
மெ. .ல் . . .ல நகரும்
நத்தை (மு.முருகேஷ்)
குறியீடு:
செறிவான கவிதை வடிவத்திற்குக் குறியீடுகள் பெரிதும் உதவுகின்றன. ‘ஒப்புறவாலும் ஒட்டுறவாலும் மற்றொன்றைக் குறிப்பாக உணர்த்தும் பொருள் (object), குறியீடு எனப்படுகிறது. ஒரு குறியீடு மற்றொன்றிற்குப் பதிலாக நிற்கலாம்; சுட்டிக் காட்டுவதோடு மட்டுமேகூட அமைந்து விடலாம். இயற்கை, சமயம், வாழ்க்கை என்பனவற்றைச் சுட்டுவனவாகவே அமைவதே பெரும்பான்மை எனலாம்.
(எ-கா):
1. இயற்கைக் குறியீடு
அந்தக் காட்டில்
எந்த மூங்கில்
புல்லாங்குழல் (அமுதபாரதி)
2. சமயக் குறியீடு
இதயத்தில் இறுக்கம்
இதழ்களில் மௌனம் இங்கே
சிலுவையில் நான் (பரிமள முத்து)
3.வாழ்க்கைக் குறியீடு
உழுதுவந்த களைப்பில்
படுக்கும் மாடுகள்
காயம் தேடும் காக்கை (அறிவுமதி)
(தொடரும்)
----- Original Message -----From: Subbaier RamasamiSent: Tuesday, February 07, 2012 8:00 PM
முந்திய கட்டுரையில் நான் சென்னைப் பல்கலைக் கழகப் பாடங்களில் நான் அறிந்த, ஹைக்கூ எனப்படும் துளிப்பாக்களின், படிமம், குறியீடு இவற்றையும், அவற்றின் உள்ளீடான கட்புலம், விளையாட்டு, அச்சுக் காட்சி முதலான படிமங்களையும், இயற்கை, சமயம், வாழ்கை முதலான குறியீடுகளைப் பற்றிச் சொன்னேன்.
அதன் தொடர்ச்சியாக, துளிப்பாக்களில் காணும், தொன்மம், முரண், அங்கதம், விடுகதை, பழமொழி, வினாவிடை, உவமை, உருவகம் முதலானவற்றையும் அவற்றின் உள்ளீடானவற்றைப் பற்றியும் இந்தக் கட்டுரையில் சொல்ல முயல்கிறேன்.
தொன்மம்:
புராண, இதிகாச நிகழ்வுகளை ஒட்டியோ, திரித்தோ, மறுத்தோ இக்கால நிலைக்கேற்ப குறியீடு ஆக்குதல் தொன்மப் படிமம் ஆகும்.
(எ-கா):
கல்லாகவே இருந்துவிடுகிறேன்
மிதித்து விடாதே
சுற்றிலும் இந்திரன்கள் (ராஜ.முருகுபாண்டியன்)
என்பது கௌதமரின் சாபத்தால் கல்லான அகலிகை இராமனின் கால்பட்டுச் சாபவிமோசனம் அடைந்து பெண்ணான நிகழ்வை அடியொற்றியது. பெண்ணாக இருப்பதினும் கல்லாக இருப்பதே பாதுகாப்பானது என்றால் இச்சமூகம் எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறது என்பது இதன்வழிப் புலப்படுகின்றது.
(எ-கா):
ஆராய்ச்சிமணி அடித்த மாடுகள்
அரண்மனைத் தட்டில்
பிரியாணி (அவைநாயகன்)
என்னும் கவிதை, மனுநீதிச் சோழனிடம் முறையிட்ட கன்றை இழந்த பசுவின் கதறலையும், அக்கதறல் கேட்டுத் தன் மகனையே கொன்று முறைசெய்த மன்னனின் நீதிமுறையையும் கொண்டு அமைக்கப் பட்டது. நீதிமன்றங்கள், தக்க தீர்ப்பு வழங்காமல் குற்றவாளிக்கு ஆதரவாக இருப்பதையும், முறையிட வந்தவர்களையே தண்டிப்பதுமாகிய நிலையில் இருக்கும் நாட்டு நடப்பினைப் புலப்படுத்துகின்றது.
முரண்:
மாறுபடத் தொடுப்பது முரண் எனப்படும். இது சொல் முரண், பொருள் முரண், சொற்பொருள் முரண் என வகைப்படுத்தப்படும்.
1. சொல் முரண்
தாழ்வு இல்லை
உயர்வே குறிக்கோள்
விலைவாசி (ல.டில்லிபாபு)
என்பதில் தாழ்வு x உயர்வு எனச் சொல் முரண் அமைந்தது.
2. பொருள் முரண்
அன்புடைமை அதிகாரத்தை
ஆசிரியர் கற்பிக்கிறார்
கையில் பிரம்புடன் (கழனியூரன்)
என்னும் கவிதையில் அன்புடைமைக்கு முரணாகத் தண்டனை எனும் பொருண்மை இணைத்துக் கூறப்படுகிறது.
3. சொற்பொருள் முரண்
மௌன ஊர்வலம்
முடிந்தது
கலவரத்தில் (பா.உதயகண்ணன்)
என்னும் கவிதையில், மௌனமும் கலவரமும் சொல்லாலும் பொருளாலும் முரண்படுகின்றன.
அங்கதம்:
சமூகக் கேடுகளை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் நயம்பட எடுத்துரைத்துத் திருத்த முயல்வது அங்கதம் எனப்படும்.
(எ-கா):
எங்கள் மக்கள்
எப்போதும் நலமே தெருவுக்கு
நான்கு டாக்டர்கள் (பரிமள முத்து)
என்பதில் நலத்திற்குக் காரணம் நோய் வாராமை அன்று, நோய் நிலையாமையே எனக் கூறுவதாக அமைகின்றது.
(எ-கா):
நான்கு கால்களும்
பல கைகளுமாய்
அரசாங்க மேசைகள் (தங்கம் மூர்த்தி)
என்னும் கவிதை, கையூட்டு அரசு அலுவலகங்களில் அங்கிங்கெனாதபடி பரவி நிலை பெற்றிருப்பதைப் புலப்படுத்துகின்றது.
இனி அடுத்த கட்டுரையில், விடுகதை, பழமொழி, வினாவிடை, உவமை, உருவகம் இவற்றைப் பற்றிப் பார்க்கலாம்.
(தொடரும்)
பழமொழி:
பழமொழிகளை நயமுறக் கையாண்டு கருத்தை விளக்குதலும் உண்டு.
(எ-கா):
கந்தலானாலும் கசக்கிக்கட்டு
கசக்கினான்
கிழிந்து போனது (மலர்வண்ணன்)
என்னும் கவிதையில் தூய்மைக்குச் சொல்லப்பட்ட பழமொழியை, வறுமையைச் சித்திரிக்க எடுத்துக் கொண்டுள்ளார் கவிஞர்.
(எ-கா):
ஐந்தில் வளைப்பதற்கோ
பிஞ்சு முதுகில்
புத்தக மூட்டைகள் (பாட்டாளி)
என்பதில், ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமோ?’ எனப் பணிவுக்குக் கூறப்பட்ட பழமொழி இன்றைய கல்வி முறையை விமரிசிக்கக் கையாளப்பட்டுள்ளது.
வினாவிடை:
கவிதை முழுவதும் வினாவாக அமைந்து, தலைப்பு அதற்குரிய விடையாக அமைவதுண்டு. மூன்றாம் அடியே விடையாவதும் உண்டு.
(எ-கா):
வெட்ட வெட்ட
வளரும் நீ என்ன
விரல் நகமா? (பரிமள முத்து)
என்னும் கவிதைக்குரிய பதிலாகிய கவலை இதற்கான தலைப்பாக அமைகிறது.
(எ-கா):
தாகம் தணிக்குமோ
கடல்நீர்
வெட்டிப்பேச்சு (செந்தமிழினியன்)
என்பதில், மூன்றாமடி தணிக்காது எனப்பதில் தருவதோடு, வெட்டிப் பேச்சும் அத்தகையதே என்பதை இணைத்துணர்த்துகின்றது.
உவமை:
புதுப்புது உவமைகளைக் கையாளும் உத்தியையும் துளிப்பாவில் காண்கிறோம்.
(எ-கா):
கவிதைகள் எழுத
நல்ல தாள்
பனிப்புகை (மித்ரா)
என்பதில் பனிப்புகை வெண்தாளாக நிற உவமை ஆக்கப்பட்டுள்ளது.
(எ-கா):
நெருப்புதான் பெண்
அம்மாவிற்கு அடிவயிற்றில்
மாமியாருக்கு அடுப்படியில் (அறிவுமதி)
என்னும் கவிதையில், மணமாகும்வரை கவனித்து வளர்க்க வேண்டியிருப்பதால் தாய்க்கு அடி வயிற்றில் கட்டிய நெருப்பாகவும், சமையல் அறையிலேயே இருத்தப்படுவதாலும்,வரதட்சணைக் கொடுமை காரணமாகச் சமையலறை அடுப்பு வெடித்து அழிய நேர்வதாலும் மாமியாருக்கு அடுப்படி
நெருப்பாகவும் அமைகிறாள் பெண்.
உருவகம்:
பொருளும் உவமையும் வெவ்வேறு அல்ல என்பது உருவகம்.
(எ-கா):
இடியின் திட்டு
மின்னலின் பிரம்படி
அழுதது வானக்குழந்தை (பல்லவன்)
என்பதில் இடி திட்டாகவும், மின்னல் பிரம்படியாகவும், மழை அழுகையாகவும், மேகம் தண்டிக்கப்படும் குழந்தையாகவும் உருவகப்படுத்தப் பட்டுள்ளன.
(எ-கா):
பள்ளிக்குப் போகாத சிறுமி
செல்லமாய்க் குட்டும்
ஆலங்கட்டி மழை (அறிவுமதி)
என்னும் கவிதையில் ஆலங்கட்டி மழை ஆசிரிய நிலையில் கருதப்பட்டுக் குட்டுவதாக உருவகப் படுத்தப்பட்டுள்ளது.
இனி அடுத்த கட்டுரையில் சென்றியூ எனப்படும் நகைதுளிப்பா பற்றிக் கூறுகிறேன்.
(தொடரும்)
----- Original Message -----From: Raja.TyagarajanSent: Wednesday, February 08, 2012 1:45 AMSubject: Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 9
இதுவரை ஹைக்கூ என்கிற துளிப்பாக்களைப் பற்றிச் சொன்னேன். இப்போது நகைத்துளிப்பா (சென்றியூ) பற்றி கூறுகிறேன். இவையும் நான் சென்னைப் பல்கலைக் கழக பாடங்கள், பல நூல்களில் இருந்து அறிந்தேன்.
நகைதுளிப்பா (சென்றியூ): துளிப்பாவை அடுத்துச் சிறந்திருப்பது நகைதுளிப்பாவாகும். ஜப்பானின் சென்றியூ என்னும் கவிதை வகையே தமிழில் இவ்வாறு அழைக்கப்படுகிறது. ஹைக்கூவின் அங்கத வடிவம் சென்றியூ. ஹைக்கூ இயற்கை உலகில் பார்வை செலுத்துகிறது எனில், மக்கள், பொருள், சம்பவங்கள் ஆகியவற்றின் மீதான பார்வையைக் குறிப்பது சென்றியூ எனலாம். 5+7+5=17 என்னும் அசைகள் அமைப்போடு ஒழுங்கு வகைப்பட்டு ஒவ்வொரு கவிதையும் இருக்கும். சென்ரியு கவிதைகள் நடுத்தர மக்களின் அனுபவம், உணர்வு போன்றவற்றைப் பற்றி, அவர்களின் வாழ்க்கை அலுப்பை அகற்றும் சாதனமாக அமைந்து சுய அறிவுக்கு ஏற்றதாக அமைகின்றன. இவை மறைபொருள் தன்மை உடையனவாய் இருப்பதால் ஒரே சமயத்தில் ஒன்றிரண்டு என்று கொஞ்சம்
கொஞ்சமாகப் படிப்பதே பயனளிப்பதாக அமையும்.
மூன்றடி, தலைப்பு இல்லாமை என்பன ஹைக்கூ, சென்றியூ என்னும் இரண்டிற்குமான
ஒற்றுமைப் பண்புகள். படிம அழகு, தத்துவச் சார்பு, இயற்கைத் தரிசனம் போன்ற கூறுகள்
ஹைக்கூவில் சிறப்பிடம் பெறுகின்றன. அன்றாட வாழ்வைப் படம் பிடித்தல்
;ஆழமற்றிருத்தல்; வேடிக்கை, விடுகதை, நகைச்சுவை போன்ற தன்மைகளுடன் பொன்மொழி
போன்றிருத்தல் ஆகியவை சென்றியூவின் தனிச் சிறப்பாகும். நகை துளிப்பாவைத் தமிழுக்கு
அறிமுகம் செய்துள்ள ஈரோடு தமிழன்பனின் ‘ஒரு வண்டி சென்றியூ’ என்னும் நூலிலிருந்து
சில கவிதைகளை அரசியல், உறவுகள், கடவுள், குழந்தையுள்ளம் என்னும்
தலைப்புகளிலான எடுத்துக் காட்டுகளை அவரது நூலில் காணலாம். சில எடுத்துக்
காட்டுகள் கீழே:
கவிஞர் ஈரோடு தமிழன்பனின் “ஒரு வண்டி சென்றியூ” என்ற நூலிலிருந்து சென்றியூ எனப்படும் நகைதுளிப்பாக்களுக்கான எடுத்துக் காட்டுகள் கீழே:- (நன்றி: சென்னை பல்கலைக் கழக பாடங்கள்)
அரசியல்:
அரசியல்வாதி ஆவதற்கென்று தனித்தகுதி தேவையில்லை. எப்படிப்பட்டவர்களும் அதில் சென்று
முன்னேறி விடலாம் என்பதை,
அது வராவிட்டால் இது
இது வராவிட்டால் அது
எதுவும் வராவிட்டால் அரசியல் (ப.66)
என்னும் கவிதையில் நையாண்டி செய்கிறார் கவிஞர்.
கட்சிகள்தோறும் காணப்படும் கூட்டங்கள், தானே திரண்டனவல்ல ; திரட்டப்பட்டனவேயாகும். இதனை,
ஆயிரம் பேரோடு
வேட்பு மனுத்தாக்கல்
ஐம்பது வாக்குகள் (ப.30)
என்னும் கவிதையில் பட்டவர்த்தனமாக்கியுள்ளார்.
‘மன்னன் எப்படி, மக்கள் அப்படி’ என்பார்கள். பொறுப்பான பதவியில் உள்ள அமைச்சர் பெரு மக்களே, தாங்கள் கூடும் பொதுச்சபையில் சட்ட திட்டங்களைக் கடைப்பிடிப்பதில்லை என்றால், இவர்களால் ஆளப்படும் நாடு என்னாவது?
சட்டம் ஒழுங்கைக்
காப்பாற்ற முடியவில்லை
சட்டசபையில் (ப.31)
என்பது அதைச் சுட்டும் கவிதை.
பதவியிலிருக்கும்வரை அதிகார தோரணையில் தன் விருப்பப்படி நடப்பவராகவும் மக்களைப் பற்றிக்
கவலைப்படாதவராயும் இருப்பவர், வீட்டுக்கு அனுப்பப்பட்டதும் நாட்டைப் பற்றிச் சிந்திக்கிறார்.
பதவி இழந்த அமைச்சர்
அறிக்கை
இனி நாட்டுக்கு உழைப்பேன் (ப-63)
என்னும் கவிதை அது பற்றியதாகும்.
அரசியல்வாதிகளாகிய கட்சித் தலைவர்கள் சுய நலவாதிகள் ;தொண்டர்கள் அப்பாவிகள் என்பதை,
கட்சி தொண்டர்களுக்கு
காசு குடும்பத்துக்கு
தலைவர் மரணமுறி (ப.92)
என்னும் கவிதை புலப்படுத்துகின்றது.
உறவுகள்:
இன்றைய வாழ்வில் உறவுகள், பணத்தையே குறியாகக் கொண்டுள்ளன. மனைவியின் எண்ணமும் அதுவாக இருப்பதே வியப்பு ; கசப்பான உண்மை.
வழியனுப்ப வந்த மனைவி
கண்ணீரோடு சொன்னாள்
பணம்அனுப்ப மறந்திடாதீங்க (ப.97)
என்பது அது சார்பான கவிதை.
அண்ணன் தம்பி உறவும்கூடப் பொருளாதாரத்தை மையமிட்ட நிலையில் ஐயப்பாட்டிற்கு உரியதே என்பதை,
அயர்ந்த தூக்கத்தில் அண்ணன்
தம்பிவைத்தான் தலைமாட்டில்
ஊதுவத்தி (ப.58)
என்னும் கவிதை உணர்த்தும். ‘ஐந்து வயதில் அண்ணன் தம்பி, பத்து வயதில் பங்காளி’ என்னும் பழமொழிக் கருத்துடையது இது.
கடவுள்:
வழிபாட்டிடம், வணிக இடமாகி விட்டது. நல்ல உள்ளம் படைத்தவர்களும் பொருளாசைக்கு அடிமைப்பட்டுப் பண்பு குன்றி விடுகின்றனர் என்பதை,
குருக்களாகி விட்ட கடவுள்
மறுபடியும் கடவுளாகவில்லை
தட்டுநிறைய காணிக்கை (ப.27)
எனக் கடவுள்மேலிட்டுக் குறிப்பிடுகின்றார்.
குழந்தையுள்ளம்:
வெளியுலகிற்குச் சென்று விளையாட விரும்பும் குழந்தையை வீட்டில் அடைத்துப் பழைய கதைகளைத் திணித்தல் கூடாது. அனுபவமே தலைசிறந்த கல்வி. கதைகள் கட்டுச் சோறு போன்றன.
கதை வேண்டாம்
கதவைத் திறந்துவிடு
குழந்தை அடம் (ப.77)
என்னும் கவிதை இக்கருத்தை உணர்த்துகின்றது. சொல்புத்தி விடுத்துச் சுயபுத்தியுடன் வாழும் குழந்தையே சாதிக்கவல்லதாகும்.
இனி அடுத்த கட்டுரையில் லிமரைக்கூ என்னும் இயைதுளிப்பாக்கள் பற்றிக் கூறுகிறேன்.
(தொடரும்)
----- Original Message -----From: Raja.TyagarajanSent: Wednesday, February 08, 2012 1:49 AMSubject: Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 9அன்புடையீர்
இதுவரை ஹைக்கூ (துளிப்பா), சென்றியூ (நகைதுளிப்பா) இவற்றைப் பற்றி நான் பல நூல்களில் இருந்தும், சென்னை பல்கலைக் கழக பாடங்களில் இருந்தும் அறிந்தவற்றை முந்திய கட்டுரைகளில் பகிர்ந்தேன். இந்தக் கட்டுரையில், லிமரைக்கூ என்கிற இயைதுளிப்பாக்கள் அல்லது இயைபுத் துளிப்பாக்கள் பற்றி கூறுகிறேன். (நன்றி சென்னை பல்கலைக் கழகப் பாடங்கள்)
இயைபுத் துளைப்பாக்கள் என்னும் லிமரைக்கூ என்பது வேறொன்றும் இல்லை. நம்முடைய மரபுக்கடையில், தொடை இலக்கணத்தில் வரும் இயைபுத் தொடை போன்றதே. (எ-கா), நந்தவனத்தில் ஒராண்டி, நாலாறுமாதமாய் குயவனை வேண்டி, கொண்டுவந்தாதொரு தோண்டி, அதை கூத்தாடி கூத்தாடி போட்டுடைத் தாண்டி. இந்தபாடலில் வரும் ஆண்டி/ வேண்டி/ தோண்டி/ தாண்டி என்ற சொற்களில் பயில்வது இயைபு.
இயைபுத் துளிப்பா (லிமரைக்கூ): அங்கதத்தோடு மூன்றடிக் கவிதையில் முதலடியின் ஈற்றுச் சீரும் மூன்றாமடியின் ஈற்றுச் சீரும் இயைபுத் தொடை அமையப் பாடப்படுவது இயைபுத் துளிப்பா. இதன்
இரண்டாமடி ஏனைய இரண்டடியையும் விட நீண்டிருத்தல் சிறப்பு.
(எ-கா): ஈரோடு தமிழன்பனின் ”சென்னிமலை கிளியோபாத்ராக்கள்” என்னும் நூல் இத்தன்மைத்தாகும். அந்நூற் கவிதைகளில் சிலவற்றை முரண்பாடு, சுயநலம், பொய், தன்பலம் அறியாமை என்னும் தலைப்புகளில் இப்போது காண்போம்.
முரண்பாடு:
சொல்லொன்று, செயலொன்றாய் மனிதன் வாழ்கின்றான். ‘ஊருக்குத்தான் உபதேசம்’ என்பது அவன் கொள்கையாக இருக்கின்றது.
(எ-கா):
பாடுவது அருட்பாப் பதிகம்
அன்றாடம் உணவில்
ஆடு கோழி
மீன் நண்டு வகையே அதிகம் (ப.28)
என்னும் கவிதை அதனைப் புலப்படுத்துகின்றது.சொல்லை வைத்து அன்பைப் புரிந்து கொள்ள முடியாத காலமிது. நண்பனைப் போல் பழகும் உட்பகையாளர் பலர் நாட்டில் உள்ளனர். இதனை,
வார்த்தைகள் பாசவெள்ளம்
நண்பர்க்கு நண்பர்
தோண்டுவதோ வெட்டிப்
புதைக்க ஆழப் பள்ளம் (ப.41)
இக்கவிதை நன்குணர்த்தும்.
சுயநலம்:
தம் இன்பத்திற்காகப் பிறர்க்குத் துன்பம் தருதல் தகுதியுடையதாகாது.
புகை பிடித்தால் இறப்பாய்
மது குடித்தால்
இறப்பாய் இரண்டும்
விற்றால் வாழ்வில் சிறப்பாய்
(ப.18)
என்னும் கவிதை. சமுதாயத்திற்குத் தீங்கு தருவதை தடைசெய்யாமல், தீங்கு என்று அறிவுறுத்துவதோடு நின்று, அத்தீங்குப் பொருள்களை உற்பத்தி செய்தும் வணிகம் செய்தும் வாழ்வோரைச் சிறப்புறச் செய்வதாய் அரசு விளங்குவதைச் சுட்டிக் காட்டுகின்றது.
பொய்:
மனிதர்கள் பலர், இல்லறத்தின் வேராம் மனைவியை விட்டுவிட்டுத் தகாத நெறி ஒழுகுதலையும் அதற்காகப் பொய் பேசுதலையும் இயல்பாகக் கொண்டு வாழ்கின்றனர். அவர்களை,
மணக்கும் மதுரைமல்லி
வாங்கிப் போனான்
காதலிக்கு
மனைவி பேரைச் சொல்லி (ப.56)
என்னும் கவிதை அடையாளம் காட்டுகிறது.
தன்பலம் அறியாமை: ‘இக்கரைக்கு அக்கரை பச்சை’ என்பார்கள். உலகில் தன் வாழ்வெல்லாம் துன்பம் என்றும், பிறர்வாழ்வெல்லாம் இன்பம் என்றும் கருதி மயங்குவோர் பலர். தரமாகக் கவிதை எழுதி இருந்தும், எதுகைமோனை வரம்போடு எழுதுவது தான் கவிதை என்று பிறர் கருதுவதை விரும்பியவன், யாப்புக் கற்க முயன்றதாக,
கவிதை எல்லாம் விற்றான்
கைக்கு வந்த காசைக்
கொண்டு
தேமா புளிமா கற்றான் (ப.91)
என்னும் கவிதையில் எடுத்துரைக்கின்றார் தமிழன்பன்.
துளிப்பாக்கள் பற்றி நான் அறிந்தவற்றை இந்தக் கட்டுரைகளில் இயன்றவரை எடுத்துரைத்து இருக்கிறேன். 90 விழுக்காடு அனைத்துமே சென்னை பல்கலைக் கழக பாடங்களில் நான் படித்தது. மேலும் சிலவற்றை ஈரோடு தமிழன்பன் நூல்களில் இருந்தும் அறிந்தேன். அனைவர்க்கும் என்னுடைய உளமார்ந்த நன்றி, இந்தக் குறிப்புகளை எழுத உதவியமைக்கு.
(முற்றும்)
----- Original Message -----From: Raja.TyagarajanSent: Wednesday, February 08, 2012 1:53 AMSubject: Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 9அன்புடையீர்இராஜ.தியாகராஜனின் வணக்கம்.