"இப்படி நீ வாழப்படி"
(மீ. விசுவநாதன்)
கூடு கட்டத் தெரியாத
குயிலின் குரலே கானந்தான்
கூடு கட்டும் காக்கைக்கோ
குரலே கூட்டுக் குடும்பந்தான்
ஓடு கனமே ஆனாலும்
உள்ளே இளநீர் அமுதந்தான்
நாடு முழுதும் கமழ்கிறதே
நல்ல குணத்து மலர்ப்பொழில்கள்.
மேலே வெயிலின் சூடெரித்தும்
மேன்மே நிழலைத் தருகின்ற
ஆல மரத்தி னடிவேரின்
அன்புச் சேவை என்னென்பேன்!
ஞால முழுதும் இதுபோன்ற
நன்மை வெளிச்சம் நிறையுண்டு
நாலு புறமும் நாமறிந்து
நடந்து கொண்டால் சுகமுண்டு.
பொய்யாம் பொம்மை நாயோடு
குழந்தை புரண்டு விளையாடும்
செய்கை பார்த்துப் பெரியோர்கள்
செயலை மறந்து களிப்பார்கள்
கையால் பிடிக்க முடியாத
காற்றை அடக்கும் சித்தர்க்கோ
பொய்யாம் உலகம் பித்தரெனப்
புகழும் இகழும் சமமாகும்
(09.03.2026)