திருச்சந்த பதிகம்
(எழுசீர்ச் சந்த விருத்தம்:
தான தான தான தான தான தான தானனா)
(வேறோர் இழையில் இலந்தையார் தந்த குறிப்பின்படி, பாடல்கள் பத்தையும் ஒரே எதுகையில் அமைக்க முயன்றிருக்கிறேன்)
ஓது ஞான நூல்கள் கோடி ஓர்ந்த றிந்து தேடினும்
தீதி லாத நின்ன ருட்டி றந்தெ ளிந்து தேர்வரோ
காத லால்க னிந்து நின்று கண்க சிந்து நாடிடும்
போத லால்பு லப்ப டாத்து ழாய்பு னைந்த தாளனே. (1)
பதம் பிரித்து:
ஓது ஞான நூல்கள் கோடி ஓர்ந்து அறிந்து தேடினும்
தீது இலாத நின் அருள் திறம் தெளிந்து தேர்வரோ
காதலால் கனிந்து நின்று கண் கசிந்து நாடிடும்
போது அ(ல்)லால் புலப்படாத் துழாய் புனைந்த தாளனே. (1)
————————————————
யாது நன்றி யாது தீதெ னத்தி கைத்தி ருந்துநான்
பாதை யொன்ற றிந்தி டாது பாழி ருட்டில் ஓடினேன்
போதி லங்கு பொற்றி ருப்பொ லிந்த மர்ந்த மார்வினாய்
பாத மென்ற தோணி தந்த ருள்ப வங்க டக்கவே. (2)
பதம் பிரித்து:
யாது நன்று யாது தீது எனத் திகைத்து இருந்து நான்
பாதை ஒன்று அறிந்திடாது பாழ் இருட்டில் ஓடினேன்
போது இலங்கு பொன் திரு பொலிந்து அமர்ந்த மார்வினாய்
பாதம் என்ற தோணி தந்து அருள் - பவம் கடக்கவே. (2)
(நன்றி யாது = குற்றியலிகரப் புணர்ச்சி; போது = (தாமரை) மலர்; திரு = இலக்குமி; )
————————————————
சூதர் வாழ்வு தேய்ந்தொ ழிந்து தூயர் மாட்சி ஓங்கியோர்
கேத மோய வேத மன்ன கீதை சொன்ன கேசவா
பூத மாய்ப்பு லன்க டந்த போத மாய்ப்பி றங்குபொற்
சோதி யாய்நி றைந்து நெஞ்சி ருட்டு டைக்க வேண்டுமே. (3)
பதம் பிரித்து:
சூதர் வாழ்வு தேய்ந்து ஒழிந்து தூயர் மாட்சி ஓங்கி ஓர்
கேதம் ஓய வேதம் அன்ன கீதை சொன்ன கேசவா
பூதமாய்ப் புலன் கடந்த போதமாய்ப் பிறங்கு பொற்
சோதியாய் நிறைந்து நெஞ்சு இருள் துடைக்க வேண்டுமே. (3)
(கேதம் = துன்பம்; போதம் = அறிவு/விழிப்புநிலை; பிறங்கு = ஒளிவீசும்)
————————————————
(தொடரும்)
- இமயவரம்பன்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/0C6F9DAE-CE45-4A73-B760-F1EEA6833EAF%40gmail.com.
On Jan 17, 2026, at 11:07, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
--
--