திருவெழுந்தூர் பதிப்பு (சென்னைநெட்வொர்க் செய்துள்ள மின்பதிப்பு) மும்மை நிறை குணத்தவன் என்ற பாடத்துடன் உள்ளது. 'இப்படிச் செய்வது வழக்கமில்லை என்ற ஒன்றுதான் (ஒருகுறை மட்டும்தான்) பரதனுக்குப் பட்டம் சூட்டுவதில் உள்ளது. மற்றபடி, பரதன் உன்னைக் காட்டிலும் மூன்று பங்கு நிறை குணத்தவன்தான். அவனுக்குப் பட்டம் கட்டுவதில் தவறில்லை' என்று இந்தப் பாடத்துக்குப் பொருள் கொள்ளலாம்.
அது என்ன மூன்று பங்கு கணக்கு என்று கேட்டால் எனக்கு இப்படித் தோன்றுகிறது. முழுப் பாட்டையும் பாருங்கள்.
'முறைமை அன்று என்பது ஒன்று உண்டு; மும்மையின்
நிறை குணத்தவன்; நின்னினும் நல்லனால்;
குறைவு இலன்' எனக் கூறினாள் - நால்வர்க்கும்
மறு இல் அன்பினில், வேற்றுமை மாற்றினாள்.
ராம, லக்ஷ்மண, பரத சத்ருக்ன நால்வரையும் அன்பினால் ஒன்றேபோல் பாவிப்பவள். ஆகவே, பரதன் ஒருவனிடத்திலே உள்ள நிறைகுணங்களின் எடை எவ்வளவு இருக்குமென்றால், ராம, லக்ஷ்மண, சத்ருக்னர்கள் மூவருக்கும் உள்ள நிறைகுணங்களை ஒன்று திரட்டினால் எவ்வளவோ அவ்வளவு அவன் ஒருவனிடத்திலேயே உள்ளது எனப் பொருள்கொள்ள ஏது உண்டு.
இது எனக்குத் தோன்றும் பொருள். வைமுகோ, தன்னுடைய குறிப்புரையில் இந்த மும்மை என்ற பாடபேதத்தை விளக்கியிருக்கிறார். "'தெரிமாண்டமிழ் மும்மை' என்ற இடத்துப் போல, மூவுலகத்தினும் என்க." என்பது அவருடய விளக்கம். அவரே இன்னொரு விளக்கத்தையும் சொல்கிறார். "சத்துவம் ரஜசு தமசு என்ற மூன்று குணங்களுக்குள் நிறைந்த குணமாகிய சத்துவ குணத்தை உடையவன் எனினும் ஆம்."
இது முறைமையானது அன்று என்ற ஒரு குறை மட்டுமே உள்ள முடிவு. அல்லது (இதை விட்டுவிட்டால்) பரதன் நிறைகுணத்தவன், உன்னைக் காட்டிலும் நல்லவன்.
இந்தப் பாடம் நன்றாக இருக்கிறது. நின்னினும் நல்லனால் என்ற குறிப்பே போதுமானதாக இருக்கும்போது, மும்மை நிறைகுணம் எது என்று பார்க்கவேண்டிய அவசியம் அடிபட்டுப் போய்விடுகிறது. எளிய, ஆனால் முழுமையான பாடம்.
வ சுப மாணிக்கம் அவர்களுடைய 'கம்பன்' படித்திருப்பீர்கள். இதைத்தான் சொல்லிச் சொல்லி மாய்ந்து போகிறார் அவர். பாடபேதம் இல்லாமல் ஒரேஒரு பாடல், கம்பன் எழுதியது, எழுதியவாறே இருக்கிறதா என்று தேடித் தேடி, ஒன்றும் சிக்கவில்லை என்று சொல்கிறார்.
படியெடுக்கும்போது இப்படிப்பட்ட பிழைகள் நேர்வது இயற்கை. சிலசமயங்களில் (பார்த்து எழுதும்) சுவடி பொத்துக் கொண்டோ, அல்லது அரிக்கப்பட்டிருந்தோ போய், சொல் விளங்காமல் இருந்தால், படியெடுப்பவர் சந்த ஓட்டத்துக்கு ஏற்ப இட்டு நிரப்புவதும் உண்டு. வேண்டுமென்றே செருகுவது என்பது பொதுவாக இருக்காது. ஆனால், படியெடுத்துக் கொண்டே வரும்போது, the immensity of Kamban's power would overpower anybody's mind and tempt/inspire to write something similar. இந்த உந்துதலைத் தவிர்க்க முடியாது என்பதை (கல்லூரி நாட்களில்) புத்தகம் வாங்கும் வசதி இல்லாமல், நூலகத்திலிருந்து புத்தகத்தை எடுத்துக் கொண்டு வந்து, யுத்த காண்டம் பெரும் பகுதியையும் எனக்காக ஒரு படி எடுத்து வைத்துக் கொண்டவன் என்ற விதத்தில் நன்கறிவேன். நானே சில பாடல்களை ஆங்காங்கு இயற்றி வைத்ததும் உண்டு. 20-21 வயதில் ஏற்பட்ட உந்துதல் அது.
என்ன சொல்ல வந்தேன என்றால், சரியான பாடம் இதுதான் என்பது பல இடங்களில் முடிவெடுக்க முடியாததாகத்தான் இருக்கிறது. 'இது சிறப்பாக இருக்கிறது' என்று வேண்டுமானால் சொல்லலாம். ஒவ்வொரு சிறப்புக்கும் ஒவ்வொரு விதமான தர்க்கரீதியான காரணமும் இருந்து தொலைக்கும். :-)))
ஆனால், வால்மீகி ராமாயணத்தைக் கையில் எடுத்தீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். தொலைந்தது. 31ஆம் பாடலின் இரண்டு-மூன்றாம் அடிகள் என்று ஒருபதிப்பில் குறிக்கப்பட்டிருந்தால், அந்த இரட்டை அடிகள், 32ஆம் பாடலாக இன்னொரு பதிப்பில் இருக்கும். எண்கள் மாறி மாறிக் கிடக்கும். பொருள் தொடர்ச்சியை மட்டும்தான் பார்க்க முடியுமே தவிர, எந்த ஸ்லோகம், என்ன எண் என்று நான் ஒன்று சொன்னால், வேறொரு பதிப்பில் அது வேறொன்றாக இருக்கும். Southern recenssion எனப்படும் தென்னிந்தியப் பிரதியே பேரளவில் மூலத்துக்கு அருகில் இருப்பதாகக் கருதப்படுகிறது. இப்போது ஸ்டான்டர்ட் ரிசென்ஷன் வந்துவிட்டது. ஆகவே ஓரளவுக்கு இந்தச் சிக்கல் சரிசெய்யப்பட்டுள்ளது. இருந்த போதிலும், இன்ன காண்டம், இன்ன சர்க்கம், இன்ன ஸ்லோகம் என்று குறித்தால், அந்த ஸ்லோகத்தை எல்லோரும் அதே இடத்தில் இனங்காண்பார்களா என்பது ஐயமே.
அதையெல்லாம் பார்க்கும்போது, கம்பராமாயணத்தில் உள்ள பாடபேதங்கள் நூற்றில் ஒரு பங்காக இருக்கும்.
--
அன்புடன்,
ஹரிகி.