தென்நைமிசனுக்கோர் காப்பு
அடியார்க்கடியான்
புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்
கோதையின் காதலுக்கு நாயகனே ஏழையாம்
சீதைக்குக் தென்னிலங்கை செற்றவனே - பாதையாய்
வேதவழி நற்சரணை ஈந்ததென் நைமிசனே
காதலுடன் காப்பிட்டேன் கண்டு 1
ஏதேனும் சொல்லியெனைத் தள்ள இயலாதுன்
பாதார விந்தம் திருமகள் - ஆதரவே
தோதாக உன்பக்கம் என்னை இருத்தவே
காதலுடன் காப்பிட்டேன் கண்டு 2
பாதையி லிட்டாலும் பாழிலிட்ட போதிலும்
வேதனை இல்லை யெனக்கதிலே - சோதியம்
பாதம் பிடித்தேன்தென் நைமிசனே பார்கவனே
காதலுடன் காப்பிட்டேன் கண்டு 3
ஆதாரம் நீயென் றறியாத காலமும்
தீதின்றிக் காத்த நரசிங்கா – ஓதிடப்
போதுடை நற்பதம் பாந்தமிடும் பேரன்பா
காதலுடன் காப்பிட்டேன் கண்டு 4
பாதிநரன் பாதிசிங்கம் ஆதித்தென் நைமிசத்தாய்
தீதிலாமல் காக்கநின்ற நின்மலா - வேதியரும்
ஆதரவு நாடிவரக் கண்டதினால் உன்னடிமை
காதலுடன் காப்பிட்டேன் கண்டு 5
சேதி தெரிந்ததும் ஓடிவரும் நாயகியர்
பாதம் பிடித்துடன் பாடுவர் - நாதனுனை
வேத முறைப்படி தாம்கொள்வர் முன்னம்நான்
காதலுடன் காப்பிட்டேன் கண்டு 6
ஆதாரம் ஆன்மா உடலுக்கே ஆழ்ந்தறிய
ஆதாரம் நீயாம் அனைத்திற்கும் - ஓதியுணர்
மேதா விலாசம் கொண்டிலேன் மேன்மையனே
காதலுடன் காப்பிட்டேன் கண்டு 7
சோதியா சுந்தரா சீர்ச்சுடர் சக்கரத்தா
மீதிலா யெங்குமுறை தென்நைமிசா - ஆதரவில்
பேதியா தெந்தன் பெரும்பாரம் தீர்ப்பவா
காதலுடன் காப்பிட்டேன் கண்டு 8
வீதிக் கொருதெய்வம் நாட்டி மனிதனை
வேத வழிவாழ வைத்தபின் - ஆதிநீ
போதம் எனவித்தென் நைமிசம் பாற்றினாய்
காதலுடன் காப்பிட்டேன் கண்டு 9
ஏதமென் பாலில்லை என்பருண்டோ பார்கவா
நீதியில் நன்றிட்டாய் நானிலத்தை - வாதமும்
ஓதிடவே ஓடும் உனசீர்மை ஓர்ந்தபின்
காதலுடன் காப்பிட்டேன் கண்டு 10
தீதிலாக் காதலுடன் நல்லடியார்க் கேயடியான்
பாதமிட்ட காப்புதனைப் பாடிடக் - கோதிலானின்
ஆதியிடம் ஆண்டருகில் நின்றே அடிமைசெய்வர்
காதலுடன் காப்பிடுவாய் கண்டு 11