அன்புள்ள இலந்தை,
முதல் மடலை எழுதும்போது , எங்கே இவற்றைக் கண்டேன் என்பது மறந்திருந்தது; அதனால் தான் அப்போதே இடவில்லை.
'தனிப்பாடல் திரட்டில்' உள்ள பாடல்கள் இவை; எழுதிய புலவர்கள் பெயர்கள் தெரியாது.
கந்தனென்றும் வேலனென்றும் கானமயில் வீரனென்றும்
செந்தனென்றும் ஏன்புலவீர் செப்புகிறீர்? - முந்தஇளம்
கூனல்பிறை சூடச்சிவ னாருக்குப தேசித்தருள்
ஞானக்குரு வேடப்பய லை.
பொருள்;
முற்காலத்தில் பிறைமதியைச் சூடிய சிவனுக்குப் பிரணவத்தின் பொருளை உபதேசித்த குருவின்
வடிவான சிறுகுழந்தையை, 'கந்தன்''வேலன்' 'காட்டு மயில் வீரன்' 'சிவந்த நிறமுடையவன்' என்றெல்லாம்
,புலவர்களே, ஏன் அழைக்கின்றீர்?
(செந்தன் - சேந்தனின் குறுக்கல் விகாரம்.)
(இதை முழுமுடுகு என்றே சொல்லலாம்.)
உன்னஇனி தாயிருக்கும்; ஓங்குசெல்வ மும்பெருக்கும் ;
நன்னல்அரு ளைக்கொடுக்கும் நாடோறும் -- பன்னும்
சகடம்உருள நெருடுகமல சரணகருணை அரியின்மருகன்
விகடகரியின் இளையமுருகன் வேல்.
பொருள்:
'சகடாசுரன்' என்பவன் உருண்டு சாகுமாறு அழித்த திருவடிகளுடைய திருமாலின்
மருமகனும், 'விகடசக்கர' விநாயகரின் தம்பியுமான முருகனின் வேல் துதிக்கின்றவர்க்கு
இன்ப மயமாக இருக்கும்; மிக்க செல்வத்தை அளிக்கும்; நாள்தோறும் மேலான திருவருளை நல்கும்.
பசுபதி
31-8-08