சிவபிரதோஷம்
"தியானக் கரும்பைச் சுவைக்கணும் "
(மீ. விசுவநாதன்)
வேத
ஒலியைக் கேட்டபடி - மனம்
வெளியில் அலையா திருக்கணும்
பாதம் இரண்டைப் பிடித்தபடி - சிவப்
பண்பில் குளிர்தே இருக்கணும்
ஆண்பெண் உறவைச் சொல்லுகிற - சிவ
ஆழக் கருத்தை உணரணும்
வீண்பொய் பேசும் நாவெல்லாம் - சிவ
தியானக் கரும்பைச் சுவைக்கணும்
போரை விரும்பா உயிர்களென - இந்த
உலகம் பேரை எடுக்கணும்
ஊரை ஆளும் அரசனுக்கு - இறை
உணர்வை தந்தும் அருளணும்
கோவில் சென்று வந்தாலும் -உனை
உள்ளுக் குள்ளும் ருசிக்கணும்
ஆவி போகும் போதினிலும் - சிவ
அன்பில் எண்ணம் நிலைக்கணும்
(இன்று-02.12.2021- பிரதோஷ நன்னாள்)
ஓம் நமச்சிவாய.
சிவபிரதோஷம்
"கதியவன் என்பவர் தோழன்"
(மீ. விசுவநாதன்)
தேவரோ அசுரரோ வந்து
வேண்டினால் காத்திடப் போவார் !
பாவமோ புண்யமோ அந்தப்
பலனிலே பற்றினைக் கொள்ளார் !
ஈவதே தன்மனம் என்று
இருப்பதை இன்பமாய்த் தந்து
போவதே சிவமென எண்ணும்
புகழினைக் கொண்டவர் ஈசன் !
துளிவிடம் தொண்டையைத் தொட்டும்
தொண்டரின் துயரினைப் போக்கக்
களிமிகக் கொண்டவன் ஈசன்!
கதியவன் என்பவர் தோழன் !
வெளியிலே தேடவும் வேண்டாம்
விதியினை நோகவும் வேண்டாம்
துளித்துளி அன்பினால் பக்தி
கொள்பவர்க் கவன்குல தெய்வம்.
(இன்று ( 15.03.2022 ) பிரதோஷ நன்னாள்)