" யோகி ஶ்ரீ சேஷாத்திரி சுவாமிகள்"
(மீ. விசுவநாதன்)
பித்தன் போலத் திரிகின்றான்
பேசும் பேச்சு மொழியினிலே
சித்தன் போலத் தெரிகின்றான்
சிரித்துக் களிக்கும் போதெல்லாம்
புத்தம் புதுப்பூ வாகின்றான்
புரிந்த பேர்க்கே குருவாவான்!
முத்தன் சேஷாத் திரியென்பான்
முடிய டியில்லா சிவமாவான்.
அண்ணா மலையின் வீதியிலே
அவனின் பாதத் தடமிருக்கும்
மண்ணை யெடுத்து அவன்வீச
வறுமைப் பிணிகள் நடுநடுங்கும்
விண்ணின் மழையாய் விரைந்தோடி
விதியின் எழுத்தைத் திருத்திவிடும்
உண்மை உண்மை கதையில்லை
யோகி சேஷாத் திரிலீலை.
சுத்த அறிவாய் ஒளிவீசும்
சோதிப் பிழம்பு அவன்ஞானம்
நித்தம் வாழ்ந்து அருள்செய்யும்
நிறைந்த பிரும்ம சிவஞானம்
முத்தந் தந்து கலிவிரட்டும்
மோக மில்லாத் தவசீலன்
தத்து வத்துள் அடங்காத
சாந்த சேஷாத் திரிநாதன்.
(07.02.2026). 18.53 pm