அருளொன்றே தரவமர்ந்தான் தென்நைமிசன் இங்கு!
அடியார்க்கடியான்
(புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்)
திருமலையில் அருள்பெருக்கும் தெய்வமிங்கு சேர்ந்து
திருமகளை மடிகொண்டு தென்நைமிச னாக
அருளொன்றே தரவமர்ந்தான் அழகுசிங்க னென்று
பொருளில்லாப் பேர்களையும் பொருள்செய்வான் பேறே! 1
நவபடமே விரித்திங்கு நற்சேடன் ஆர்க்க
தவமுடைத்த அடியருக்காய் தனிச்சிங்கன் நின்றான்
பவக்கடலைத் தாண்டுவிக்கப் பல்விழவைத் தேர்ந்தான்
உவப்புடனே தாளீவான் உள்ளுணர்ந்தால் வாழ்வே! 2
தினம்வளரும் வேள்வியிலே தெரியுமவன் ஆட்சி
இனமினமாய் வரும்பக்தர் இன்முகமே சாட்சி
மனமகிழும் தனம்பெருகும் மறைவளர்க்கும் காட்சி
கனகமத்தென் நைமிசத்தன் காலடியே வாழ்ச்சி 3
கருடமலை மீதிருக்கும் கமலையின்பன் ஒக்க
கருடனவன் தாங்குதளம் மீதிருப்பன் சிங்கன்
கருடனவன் சிறகுவழி காக்குமறை எங்கும்
வருடவரும் தென்நைமிச தேவனடி சேர்வோம் 4
ஏழுமலை ஏறவேண்டும் என்பதன்றிச் சிங்கன்
ஆழ்த்துகின்ற துன்பமதை யறுக்கவந்தன் இங்கு
வாழுவகை விரிக்கபல வாழ்க்கைநெறி காட்டி
ஊழ்வினையை ஓட்டுந்தென் நைமிசமே சார்வு 5
மேலிருந்து வீழருவி திருமலைக்கே ஏற்றம்
காலுடனே குளிந்தோடும் காவிரிதன் ஓட்டம்
ஏலுடைத்த தென்நைமிசத் தேவனுக்கே ஏற்றம்
தாலுடைத்த பயன்பெறவே தக்கணமே போற்று 6
( ஏல் – பொருத்தம்; தால் – நாக்கு)
பறவையெலாம் பாடுவது திருமால்தன் மலையில்
குறையறவே குயில்மயிலும் கூடுவதிங் குண்டாம்
சிறைவிடுக்கத் தென்நைமிசச் சிங்கனவன் வந்தான்
மறைவழியில் குணம்பாடி மகிழ்ந்தவனை மாந்து 7
நின்றவனும் மலைமேலே நிலையென்தாள் என்றான்
இன்றுதென்நை மிசத்தரசு இணைக்கண்ணால் வென்றான்
கன்றெனவே காத்திடுவான் கதியெவர்க்கும் சிம்மன்
என்றென்றும் கொண்டாடி எழிற்பதமே கொள்வோம் 8
தானாக வருமெளிமை இருவருக்கும் உண்டே
கோனாகக் கண்டவரே குளிரருளும் கொள்வர்
வானாடு ஈவனென வைகுந்தம் விட்டேத்
தேனாகத் தென்நைமிசம் வந்தானைப் பாடு 9
மும்மதத்தர் கொண்டாடும் முன்னிரண்டு தேவாய்
அம்புவியில் வந்தோனே ஆளரியாய் இங்கே
நிம்மதியைத் தரநின்றான் தென்நைமி சத்தில்
நம்பியவன் தாள்சேர்வாய் நமக்குநிகர் யாரோ 10
ஆழ்வார்தாம் அடைக்கலமாய்ப் புகுந்தமர்ந்த நாதன்
ஆழ்பவர்க்கே அடைக்கலமாய் வந்தமர்ந்த சிங்கன்
ஆழ்வர்தென் நைமிசத்தில் வளர்வேள்வி தன்னில்
ஆழ்ந்தபின்னே அடைக்கலமாய் அண்டாதார் உண்டோ? 11
இருநிலத்தர் வணங்கிடுநல் ஈசனவன் இங்கும்
இருமறையே வாழ்த்திடவே சிம்மமென வந்தான்
அரிதுணர்த்தும் அடியருக்கே அடியனவன் பாக்கள்
இருளகற்றி இனியவன்தாள் இருத்துவதும் இன்றே! 12
--