பாரத நாட்டின் பதினெண் பாடைகள்
-----------------------------
பாரத நாட்டின் 18 பாஷைகள்:
---------------------------
திருத்தக்கதேவர் சிந்தாமணிக் காப்பியத்தில் தொடங்கிவைக்கும் மரபு. பின்னர் சோழர் காலத்தில் கம்பர், திருமந்திரம் போன்ற நூல்களிலும் காண்கிறோம்.
கன்னித்தமிழ் (கட்டுரைகள்), கி. வா. ஜகந்நாதன்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0412.html“இராசமாபுரத்தின் வீதிகளில் பல நாட்டு மக்களும் வந்து குழுமுகிறார்கள். பதினெட்டுப் பாஷையைப் பேசுகிறவர்களும் கூடித் தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள். அந்தப் பேச்சின் ஒலிக்குத் திருத்தக்க தேவர் ஓர் உவமை கூறுகிறார். ஆல மரத்தில் பட்சிக் கூட்டங்கள் சேர்ந்து பல பல விதமான ஓசையை எழுப்புமே, அப்படி இருந்ததாம்:
இட்டஎள் நிலப்படா வகையின் ஈண்டிய
முட்டிலா மூவறு பாடை மாக்களால்
புட்பயில் பழுமரப் பொலிவிற் றாகிய
மட்டிலா வளநகர் வண்ணம் இன்னதே.
[எள்போட்டால் எள் நிலத்தில் விழாதபடி கூடியிருந்த குறைவில்லாத பதினெட்டுப் பாஷைகளைப் பேசும் மக்களால், பல வகைப் பறவைகள் பழகுகிற ஆலமரத்தைப் போன்ற சிறப்பைப் பெற்றதும் எல்லையற்ற வளத்தை உடையதுமாகிய நகரத்தின் இயல்பு இத்தகையது.]
இந்த உவமையைக் கம்பர் எடுத்துக் கொண்டார். ஆனால், இதைத் திருப்பி உபமானத்தை உபமேயமாக்கினார். அதாவது, பதினெட்டுப் பாஷைக்காரர் பேச்சுக்குப் பறவைகளின் ஒலியைத் தேவர் உவமை குறினார்; கம்பர் பறவைகளின் ஒலிக்குப் பதினெட்டுப் பாஷைக்காரர் பேச்சை உவமை கூறினார். பம்பைப் பொய்கையில் இன்னவென்று காண முடியாத பல ஒலிகளைச் சோர்வில்லாமல் ஒலிக்கின்றன பல புட்கள். ஆரியம் முதலிய பதினெண் மொழிபேசும் சாமானிய மக்கள் ஓரிடத்தில் கூடினால் எப்படிச் சளசளவென்று பேசுவார்களோ அப்படி இருந்தது அந்த இரைச்சல்.
ஆரியம் முதலிய பதினெண் பாடையிற்
பூரியர் ஒருவழிப் புகுந்த போன்றவ,
ஓர்கில கிளவிகள் ஒன்றொ டொப்பில
சோர்வில் விளம்புபுள் துவன்று கின்றது.
[பூரியர் - பாமர மக்கள். துவன்றுகின்றது - நெருங்கியுள்ளது.]
நாலு பேர் கூடும் இடத்தில் தங்கள் தங்கள் பேச்சைச் சளசளவென்று பேசிக் கொள்பவர்கள் பாமர
மக்களாகத்தான் இருக்கக்கூடும். ஆதலின், 'அறிவற்றவர்' என்னும் பொருள்பட, 'மாக்கள்' என்று தேவர் கூறினார். கம்பர் அதைப் பின்னும் விளக்குபவர் போல, 'பூரியர்' என்றே கூறிவிட்டார். அதோடு இரண்டு ஒலிகளுக்கும் பொதுவான லட்சணங்களையும் விரித்திருக்கிறார். கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாதவை, ஒன்று போல ஒன்று அமையாதவை. சோர்வில்லாமல் சதா கேட்பவை-பாமரர் பேச்சுக்கள். அதுவும் பதினெட்டுப் பாஷைகள் பேசும் பெருங்கூட்டத்துப் பேச்சுக்கள் இப்படித்தானே இருக்கும்? பறவைகளின் ஒலியும் இப்படித்தான் இருக்கும் என்பதையும் நாம் அறிவோம். “
செப்புமொழி பதினெட்டு உடையாள் என்ற பாரதியின் வாசகத்தில் உள்ள 18 பாடைகளில் முதன்மையானது சமஸ்கிருதம் என்று தொடங்கும் பட்டியல் இது. இன்னொரு பட்டியலை, திராவிடம் (அதாவது, தமிழ்) உட்பட உலக மொழிகளை ஒவ்வொன்றாகக் கூறும் பட்டியலைச் ஜைந முனிவர் திவாகரர் தமது சேந்தன் திவாகரச் செய்யுளில் கூறுகிறார். அதில் ஆரியம் இல்லை. ஏன் எனப் பார்ப்போம்.
நா. கணேசன்