மார்கழி 21 [05/01/2026]
என்னிறைஞ்சல் உன்செவியை என்றடையும் யானறியேன்!
அன்னைநின நெஞ்சிலிருந்(து) அன்பாக எனைக்கண்டு
முன்னைவினை போக்கிடவும் முத்திதனை ஈந்திடவும்
உன்னைஅவள் பக்குவமாய் ஊக்கிடுவாள் என்பொருட்டே! ..(21)
[ஊக்குதல் = தூண்டுதல்]
மார்கழி 22 [06/01/2026]
சயனத்தின் கோலத்தில் சாய்ந்திருப்பாய் அரங்கத்தில்!
அயமுகனாய் அரிமுகனாய் ஆலயத்தில் அமர்ந்திருப்பாய்
உயரமலை வேங்கடத்தின் உச்சியிலே நின்றிருப்பாய்!
கயராசன் துயர்நீக்கக் ககனத்தில் பறந்திடுவாய்! ..(22)
[அயமுகன் = ஹயக்ரீவன்; அரிமுகன் = நரசிம்மன்; கயராசன் = கஜேந்திரன்; ககனம் = வானம்]
மார்கழி 23 [07/01/2026]
கயராச னைப்போலக் காத்திருக்கத் தோதில்லை!
பயணமினி தொடங்கிவிடும் பாதைதனைக் கூற்றறியும்!
தயவுக்கோர் அரசேநீ சரண்என்றார்க்(கு) அரணாமே!
இயமனின்நாண் தொடுமுன்னே இணையடியின் நிழலைத்தா! ..(23)
மார்கழி 24 [08/01/2026]
நீயருளும் தெய்வமென, நேருனக்(கு)ஒன்(று) இல்லையென,த்
தாயனையன் அன்பிலென,த் தந்தைநிகர் பரிவிலென,க்
காய-மன- வாக்(கு)உனையே கருதுகிற மெய்யடியார்
வாயருள யானுணர்ந்தேன் வந்தருள்வாய் திண்ணமென்றே! ..(24)
மார்கழி 25 [9/01/2026]
அனைஅனைய பெருமானே அகமுழுதும் நிறைவாயே!
உனஉனது திருநாமம் ஒப்பற்ற அமுதாகும்!
நினநினைவின் மேலாக நிலமிதனில் சொத்தேது?
கனகனகம் வேண்டாருன் கழலுறவு கண்டாரே! ..(25)
[அனை அனைய = தாயைப்போல; உன = உன்ன, தியானிக்க; நின = உன்னுடைய; கன = செறிந்த, அடர்ந்த, மிகுந்த]
மார்கழி 26 [10/01/2026]
பொருளருளின் இல்லாரைப் புரக்கின்ற நெஞ்(சு)ஈவாய்!
மருளிருளைப் போக்கிடுவாய்! மனத்தினிலும் புத்தியிலும்
தெருளருளி மெய்ஞ்ஞானத் தேசாக ஒளிர்ந்திடுவாய்!
உருளுருளைப் புவிப்பற்றில் உழலாது விடுவிப்பாய்!
[அருளின் = அருள்வாயெனில்; புரக்க = காக்க; மருள் = குழப்பம்; இருள் = அஞ்ஞானம்; தெருள் = தெளிவு; தேசு = பிரகாசம்; உருளுதல் = சழலுதல்; உருளை = உருண்டை]
மார்கழி 27 [11/01/2026]
கல்லைமெல்லிடைப் பெண்ணாக்கிக் கால்மகிமை காட்டியவ!
வில்லவல்லவ சிவதனுசை விரல்திறனால் ஒடித்தவனே!
அல்லிதுல்லிய நீள்கண்ணால் அகிலமீர்க்கும் அழகுடையோய்!
எல்லையில்லது நினதாற்றல் எண்ணுதலே பேரின்பம்! ..(27)
[மெல்லிடைப் பெண்= அகலியை; வில்ல = வில்லாளியே!; துல்லிய = நிகரான]
மார்கழி 28 [12/01/2026]
அரிநாமம் பழகியவாய்க்(கு) அமுதமும்ஓர் ஆலம்தான்!
தெரிவுடையார் அதுவிட்டுத் தேவுலகம் வேண்டாரே!
திரிபறவே அதிலாழ்ந்தார் தேராரே வீடுபெறக்
கரிவரதா அன்னார்க்குக் கலியுகமும் கற்கண்டே! ..(28)
[ஆலம் = விடம்; தெரிவு = ஞானம், விவேகம்; தேவுலகம் = தேவலோகம்; திரிபு = மாற்றம்]
மார்கழி 29 [13/01/2026]
நாரணனே மார்கழியாய் நானுன்னைப் பாவித்தேன்!
மாரணிந்த அன்னையுடன் மன்பதையைக் காக்குமடர்
காரனைய வள்ளலுனைக் கால்பிடித்து வேண்டுவ(து)உன்
பேரதனை என்னுடலம் பிரிந்தபினும் சொலவேண்டும்! ..(29)
[மார் = மார்பு; கார் = மழைமேகம்]
மார்கழி 30 [14/01/2026]
ஆழியுனைத் தாங்கிட,ஓர் ஆழிதனைத் தாங்கியவா!
ஊழிதனில் எஞ்சுகிற ஓருயிரே உன்னடிமண்
பூழிபடத் தவமியற்றிப் பொற்புடையோர் காத்திருக்கக்
காழியுடன் நம்புமிந்தக் கடையனையும் கண்டருளே! ..(30)
[ஆழி = கடல்; ஆழி = சக்கரம்; ஊழி = பிரளய காலம்; பூழி = தூள்; காழி = உறுதி]
ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம் [14/01/2026]
மார்கழியின் முப்பதிலும் மனம்நிறைய உனைஎண்ணிச்
சீரெதுகை மோனையுடன் செய்தகவி மலர்களினால்
தார்தொடுத்துன் மேனியிலே சாத்திடவுன் அன்பர்களின்
பார்வையிலே அர்ப்பணித்தேன் பரந்தாமா ஏற்றருளே! ..(+1)
சுபம்.
நல்வாழ்த்துகள்
கோபால்
[14/01/2026]
सर्वे जना: सुखिनो भवन्तु ।