அருகன் நற்புகழ் செப்புவோம் - சமண சமயக் கடவுள் துதி
(வண்ண விருத்தம் :
தனன தத்தன தனன தத்தன
… தனன தத்தன தத்தனா)
பாடல் 1:
விரியும் முக்குடை நிழலில் முத்தென
… மிளிரும் ஒப்பறு நற்றவன்
முரண்வி ளைக்குமும் மதில்செ றுத்தவன்
… முனைவன் நித்திய வெற்றியன்
மருள கற்றிய மதிந லத்தினன்
… மறுவில் சத்தியம் மிக்கவன்
அருள்வ ளர்த்திடும் அறிவன் அற்புதன்
… அருகன் நற்புகழ் செப்புவோம்.
பதம் பிரித்து:
விரியும் முக்குடை நிழலில் முத்தென
… மிளிரும் ஒப்பு அறு நல் தவன்
முரண் விளைக்கும் மும் மதில் செறுத்தவன்
… முனைவன் நித்திய வெற்றியன்
மருள் அகற்றிய மதி நலத்தினன்
… மறு இல் சத்தியம் மிக்கவன்
அருள் வளர்த்திடும் அறிவன் அற்புதன்
… அருகன் நற்புகழ் செப்புவோம்.
பாடல் 2:
தரும சக்கரம் உடைய தத்துவன்
… நெறித ழைத்திடு சற்குணன்
கரும முற்றிலும் உதிர விட்டொரு
… கதித விர்த்திடும் முத்தியன்
பரவு பொற்பத சரண ளிப்பவன்
… மருவு பற்றவை அற்றவன்
அருள்வ ளர்த்திடும் அறிவன் அற்புதன்
… அருகன் நற்புகழ் செப்புவோம்.
பதம் பிரித்து:
தரும சக்கரம் உடைய தத்துவன்
… நெறி தழைத்திடு சற்குணன்
கருமம் முற்றிலும் உதிர விட்டு ஒரு
… கதி தவிர்த்திடும் முத்தியன்
பரவு பொற்பத சரண் அளிப்பவன்
… மருவு பற்று அவை அற்றவன்
அருள் வளர்த்திடும் அறிவன் அற்புதன்
… அருகன் நற்புகழ் செப்புவோம்.
இந்தப் பாடலை இசையுடன் கேட்க:
இந்தப் பாடலைப் படித்த பேரா. Dr. கனக. அஜிததாஸ் என்னும் சமண சமயப் பேரறிஞரின் வாழ்த்துரை பின்வருமாறு:
<<
🙏🙏🙏 பேரன்புடையீர் வணக்கம்.
மெய்மறந்தேன்
ஆழ்ந்தேன் தங்களது இசை அணிந்த பாடலில்
முக்குடை ஜூன் இதழ் அச்சில்
அடுத்த இதழை இது அலங்கரிக்கும்
மென்மையான அழுத்தமாக அருமையான கருத்துகளை வெளிப்படுத்தும் துதிப்பாடல் அற்புதம்!
நெஞ்சம் நிறைந்த நன்றி பல
>>
- இமயவரம்பன்