11.66. முடுகு வெண்பா
(நிலைமண்டில ஆசிரியப்பா)
1. முடுகு, முடுகியல், முடுகு வண்ணம், முடுகியல் வண்ணம்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
[முடுகு பற்றிக் கோபாலையரின் ’தமிழிப் பேரகராதி’ நூல்தரும் திரட்டு:
முடுகெனும் பதமது விரைவெனும் பொருள்படும்
முடுகியல் செயுள்தனில் விரைவொலி மிகுவரும்
அருகமை யிருகுறில் முடுகொலி தருமெனில்
ஒருநெடி லெழுத்திலை யெனுமடி முடுகுமே. ... 1
முடுகியல் செயுளடி பிறவடி களையும்
கொடுவரும் தான்தனித் திலையென வறிக
அகவற் றளைவரும் அராகம் முடுகியல்
தகவுறும் குறிலிணைத் தொடர்வினில் எழுமே. ... 2
அளவடி நெடிலடி அறுசீர் எழுசீர்
உளவடி யிவற்றில் முடுகியல் இயலும்
ஒற்றுகள் நிறுத்தும் இருகுறில் முடுகும்
குற்றொலிக் குறுக்க நெடில்களும் முடுகுமே. ... 3
***
முடுகு வண்ணம், முடுகியல் வண்ணம்
முடுகியல் தொடுத்த அடியொடு பிறவடி
அடுத்துவே றுபடத் தொடர்வரும் ஓட்டம்
முடுகியல் வண்ணம் எனும்பெயர் பெறுமே.
திகிரியின் உருட்டலில் நிகழும் முடுகியல்
உருட்டுவ ணமெனத் தொல்காப் பியம்சொலும். ... 4
தாதுறு முறிசெறி தடமல ரிடையிடை
உருகெழு முருகிய முருமென வதிர்தொறு
மருகெழு சிறகொடு மணவரு மணிமயில்
எனவரு மடிகளில் முடுகியல் நிகழ்வே. ... 5
இருகுறில் நிரைநடு காய்ச்சீர் களிலும்
கருவிளச் சீரிலும் முடுகியல் நிகழும்
புளிமா புளிமா எனும்தொடர்ச் சந்தம்
பெரிதமை சீர்கள்கொளும் முடுகுவெண் பாவாம். ... 6
(வேறு: பரணித் தாழிசை)
இருவள வொத்த வடிகள் பயில
. வியலும் யாப்பெனும் கலிங்கப்
பரணியின் போரொலி முடுகியல் செவியில்
. பரவும் வகையிது காணீர்! ... 7
எடுமெடு மெடுமென வெடுத்ததோர்
. இகலொலி கடலொலி யிகக்கவே
விடுவிடு விடுபரி கரிக்குழாம்
. விடும்விடு மெனுமொலி மிகைக்கவே.
***
2. முடுகு வெண்பா என்பது
கருவிளச் சீர்கள் முடுகொலி கொண்டும்
வரும்தொடர் என்றவை வெண்பா விலிலை
இருகுறில் மையமாம் காய்ச்சீர் புளிமா
வரும்தொடர் வெண்பா முடுகு. ... 1
முடுகொலிச் சீர்களில் மாத்திரை வேறாய்த்
தொடரும் ஒலிகள் முடுகியல் ஆகா
எனவே முடுகுவெண் பாவினில் வண்ணம்
ஒலிக்க வெழுமே முடுகு. ... 2
புளிமா முழுதும் குறிலென வந்தால்
புளிமா பெறுவது மாத்திரை மூன்று
புளிமா வொருநெடில் மாத்திரை நான்கு
புளிமா இருநெடில் ஐந்து. ... 3
புரவி எனும்சொலின் மாத்திரை மூன்று
அரிவை எனிலது மாத்திரை நான்கு
உராய்வே எனிலது ஐந்து. ... 4
புதிது புதிது இயலு முலகு
அதுவு மிதுவு மழகு. ... 5
புளிமா முழுதும் குறிலென வாகப்
புனைவுறு மேற்பாக் குறளின் முடுகு
தனன தனன எனுமொலிச் சந்தம்
எனவே வருவது வாம். ... 6
இதன்வழி தானே முடுகுவெண் பாவில்
இதந்தரும் வண்ணம் இயலும் வகைகளில்
மாறுதல் இல்லாத சந்தம் ஒலிக்கவே
தேறுதல் கொள்ளும் திறம். ... 7
வண்ணம் ஒலிக்கும் முடுகுவெண் பாவினை
எண்ணம் ஒலிக்க எழுத முயல்பவர்
சந்தமும் வண்ணமும் கூறும் இலக்கணம்
சிந்தையில் கொள்ளல் சிறப்பு. ... 8
*****
11.67. அடிப்படைச் சந்த விலக்கணம்
(வெண்பா)
1. சந்தம் என்பது
(வெண்பா)
சந்த விலக்கண வேராம் லகு-குரு
வந்தன யாப்பில் வடமொழி தந்தே
லகுவெனில் மாத்திரை யொன்றென வாகும்
குருவினில் ஆகுமி ரண்டு. ... 1
தனிக்குறில் மட்டும் லகுவகை யாகும்
தனிக்குறில் ஒற்றும் தனிநெடில், ஒற்றுடன்
என்றிவை யாவும் குரு. ... 2
குறிலொரு மாத்திரை என்றே ஒலிக்கக்
குறில்பினே ஒற்றிரு மாத்திரை யோசை
நெடிலிரு மாத்திரை என்றே ஒலிக்க
நெடில்பினே ஒற்றும் இருமாத் திரையாம்.
குறிலடி யீற்றில், சமமாய் ஒலிக்கும்
அரையடி யீற்றில், இருமாத் திரையாம்.
குறிலிணை யென்றால் இருலகு வாமே
குறிலிணை யொற்றெனில் முன்னால் லகுவும்
அதன்பின் குருவும் என. ... 3
ப-வெனில் லகுவென் றொருமாத் திரைபெறும்
பா-வாம் குருவென் றிருமாத் திரைபெறும்
பல்-மாத் திரையாம் இரண்டு குருவென
பால்-மாத் திரையாம் இரண்டு குருவாம்
பல-மாத் திரையாம் தனித்தனி ஒன்றாம்
பவொரு குறிலாம், லவொரு குறிலாம்
பலம்-எனும் சொல்லில் ப-குறில் லகுவென
லம்-குறில் ஒற்று குரு. ... 4
சந்தங்கள் மாத்திரை எல்லை மொழிவதாய்
வந்ததொல் வெண்பா விது. ... 5
குற்றெழுத்துச் செவ்வி லகுவாகும் நெட்டெழுத்தும்
குற்றொற்றும் நெட்டொற்றும் கோணமாய்த் - தெற்றக்
குருவென்ப தாகும் குறிலும் குருவாம்
ஒருகால் அடியிறுதி யுற்று. ... 6
***
2. அடிப்படைச் சந்தங்கள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
தத்த தாத்த தந்த தாந்த
தன-தான தன்ன தய்ய என்றே
அடிப்படைச் சந்தம் எட்டென வாமே. ... 1
பட்டு பாக்கு பந்து பாங்கு
பரி-பாவி கும்மி பல்லி என்பன
அடிப்படைச் சந்தச் சொற்களென் றறிக. ... 2
அடிப்படைச் சந்தம் இறுதியை நீட்டும்
சார்புச் சந்தம் எட்டென வருமே.
தத்தா தாத்தா தந்தா தாந்தா
தனா-தானா தன்னா தய்யா என்றே
சார்புச் சந்தம் எட்டென வாமே. ... 3
அக்கா காற்றா அந்தோ காங்கோ
நிலா-மானா அண்ணா அய்யா என்பன
சார்புச் சந்தச் சொற்களென் றறிக. ... 4
மேலுள சந்தம் பதினா றாவதில்
தன-வும் தனா-வும் நிரையசை யாகும்
மற்றவை யெல்லாம் நேரசை யாமே. ... 5
சீர்களின் இடைவரும் இடையின வொற்றும்
சிறுபான் மையாக னணம வொற்றும்
மாத்திரை பெறாதே தொலிப்பதும் அறிக.
முக்தி பித்தா மட்டம் உய்த்து
பொய்ப்பல் கர்த்தர் சொற்கள் யாவும்
மாத்திரை மூன்றாய் ஒலிபெற வருமே. ... 6
***
3. அரைச் சந்தங்கள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அடிப்படை களுடன் இணைவதா மென்றே
அரைச்சந் தங்கள் கீழுள் ளவையாம்
தகரமெய்(த்) நகரமெய்(ந்) னகரம்(ன) தகரம்(த)
னாகாரம்(னா) தாகாரம்(தா) எனுமா றெழுத்தும்
னத்-தத் னாத்-தாத் னந்-தந் னாந்-தாந்
என்னும் எட்டாம் எழுத்துத் தொடர்களும்
அரைச்சந் தமென அழைக்கப் படுமே. ... 1
அரைச்சந் தங்கள் அடிப்படை யுடனே
ஒன்றோ பலவோ கூடி இசைக்கும்
தத்-எனும் அரையாம் தத்த வுடன்சேர
தத்தத்த என்னும் ஒலியில் இசைக்கும்
இதுபோல் மிகப்பல சந்தம் செய்யலாம். ... 2
[அரைச் சந்தங்கள்: த்,ந்,,ன,த,னா,தா,
னத்,தத்,னாத்,தாத்,னந்,தந்,னாந்,தாந்.
இவை ஒன்றுடனோ, பலவற்றுடனோ கூடிச் சந்தம் இசைக்கும்.
சான்றாக, தத் என்ற அரைச்சந்தம், தத்த என்பதுடன் கூடித்
’தத்தத்த ’என்று இசைக்கிறது.
இவ்வாறு கோடிக்கணக்கான சந்தங்களை உருவாக்கலாம்.
--பாவலர் மா.வரதராசன்]
சந்தம் வண்ணம் இலக்கணம் விவரமாக அறிய:
பசுபதியாரின் ’கவிதை இயற்றிக் கலக்கு’
நூலில் இயல்கள் 37-45, 49-51 படித்தறிக.
***
4. சந்தமும் வண்ணமும்
சந்தம் வண்ணம் குறியொன் றெனினும்
சந்தம் என்பது மாத்திரை பொறுத்தே
வண்ணம் என்பது மாறாச் சந்தமே. ... 1
தத்த சந்தம் சந்தப் பாடலில்
குரு-லகு தொடராய் மும்மாத் திரையாம்
கட்டு கந்து கன்னி கள்ளி
சந்தப் பாடலில் தத்த வாமே. ... 2
வண்ணப் பாவெனில் மேலுள சொற்களில்
கட்டு பதத்தில் தத்த சந்தம்
கந்து பதத்தில் தந்த சந்தம்
கன்னி என்பது தன்ன சந்தம்
கள்ளி என்பது தய்ய சந்தமாம். ... 3
தத்த சந்தம் வண்ணப் பாடலில்
குறில்வல் லொற்று வல்லின உயிர்மெய்க்
குறிலெனும் வரையறை கொள்ளுவ தாமே
மக்கி மச்சு பட்டு பத்து
தப்பி வற்றி யாவும் தத்த. ... 4
தந்த சந்தம் வரையறை யென்றே
குறில்மெல் லொற்று வல்லினக் குறிலாம்
அங்கு அஞ்சி அண்டு அந்தி
அம்பு அன்று யாவும் தந்த. ... 5
தன்ன சந்தம் வரையறை யென்றே
குறில்மெல் லொற்று மெல்லிடைக் குறிலாம்
அங்ஙன் அஞ்ஞன் அண்ணன் சந்நி(யாசி)
அம்மி மென்வி யாவும் தன்ன. ... 6
தய்ய சந்தம் வரையறை யென்றே
குறிலிடை யொற்று இடைவல் குறிலாம்
நெய்தல் கர்மம் அல்லி செவ்வி
(நி)கழ்தல் வள்ளல் யாவும் தய்ய. ... 7
தன-எனும் சந்தம் வரையறை யென்றே
இருகுறில் இணைந்துடன் மெல்லிடை யொற்றாம்
குரு-லகு சுவர் வனம் படம்
அறம் நிழல் யாவும் தன-வாம். ... 8
நெடிலில் தொடங்கும் பிறசந் தங்கள்
இதுபோல் வரையறை உள்ளி யுணர்க
விவரம் இன்னும் வேண்டுவ தானால்
மேலுள நூலில், தளத்தில் காண்க. ... 9
*****
11.68.முடுகு வெண்பா இலக்கணம்
(வெண்பா)
அடிப்படை யோடே அரைச்சந் தமென
வடித்தொரு சந்தமாய் வண்ணம் - நடைகொளும்
வெண்பா விலக்கணம், மோனை எதுகையும்
கொண்டெழுவெண் பாமுடு கு. ... 1
ஆளும்சந் தத்தின் அரைச்சந் தமெனவே
நாள்மலர் காசு பிறப்பென் றமையும்
முழுமுடுகு வெண்பாவின் ஈற்றுச்சீர் கொள்ளும்
வழுவிலாச் சந்த வகை. ... 2
தத்தனத்த சந்தத்தின் ஈற்றுச்சீர் தத்துவாம்
தந்தந்த சந்தத்தில் ஈற்றுச்சீர் தந்து
தனத்தத் எனும்சந்தம் ஈற்றில் தனத்துவாம்
தானெனில் ஈற்றுச்சீர் தானு. ... 3
முன்முடுகு வெண்பாவில் முன்பா திமுடுகு
பின்முடுகு வெண்பாவில் பின்பாதி - என்றுவரும்
முற்றும் முடுகொலி யேற்று வருவது
முற்று முடுகுவெண் பா. ... 4
***
முடுகுவெண்பா இலக்கணம் பற்றிச் சில கருத்துகள்
இலந்தை இராமசாமி
முடுகு என்பது வண்ணப் பாடல்களில் வரும்போது பெரும்பாலும்
.. இருகுறிலில் தொடங்கும் சீர்களாக வரும்.
.. அது வேகம் கொடுக்கும்.
.. அப்படித்தான் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை.
முடுகு வெண்பாக்களுக்கு இந்த இலக்கணம் பொருந்தாது.
.. முடுகு வெண்பாக்களில் பெரும்பாலான சீர்கள்
.. காய்ச்சீர்களாக வரும். அப்படி வரும்போடு
.. முதல் சீர் இருகுறில் தொடங்கி காய்ச்சீரானால்
.. அடுத்தசீர் நேரசையில்தான் தொடங்கவேண்டியிருக்கும்.
.. எனவே வெண்பாவைப் பொறுத்தமட்டில்,
.. அது முன்முடுகானாலும் பின்முடுகானாலும்,
.. முழுமுடுகானாலும் விரைவு வேண்டும்.
.. சந்தக்குழிப்புக்கு ஒத்துவரவேண்டும். இறுதிச்சீரில் ஓட்டம் இயல்பாக உடைபடாமல்
.. சென்று முடியவேண்டும்
முடுகுடைய பாடல் குடுகுடென ஓடி
முடிவடையக் கூறல் முறை.
முடுகுடைய பாடல் குடுகுடென ஓடி
முடிவடைத லேநல் முறை
இரண்டாவது குறள் வெண்பாவில் வேநல் என்பது
.. இலக்கணப்படியும் சந்த அமைப்புப் படியும் சரியே
.. என்றாலும் பாடல் என்பது இயல்பாக நடப்பது போல
.. வேநல் நடக்கவில்லை. அதில் ஒரு வே க்கும் நல்லுக்கும்
.. இடையே ஒரு நெருடல் வந்துவிடுகிரது.
முடுகுடைய பாடல் குடுகுடென ஓடி
முடிவடையக் கூறல் முடிபு.
.. முடிபு சற்று ஒதுங்கிவிடுகிறது
.. எனவே முதற் குறள் ஒழுங்கான முடுகு.
*****
11.69. முடுகு வெண்பா இலக்கியச் சான்றுகள்
(பசுபதியாரின் க.இ.க. நூல் மற்றும் இணையத்தில் இருந்து)
1. முன்முடுகு வெண்பா
பாம்பன் சுவாமிகள்
ஞானவயில் வேலிறைவ நாகமயி லேறிறைவ
வானவர்பி ரானிறைவ மாலிறைவ - கோனிறைவ
என்றுதுத் திப்பா ரிருமையு மேல்வாழ்க்கை
ஒன்றுவ ருள்ளே யுணர்.
**
கடிகைமுத்துப் புலவர்
கன்னிமுக நன்னிலவு கன்னலித ழின்னிலவு
பன்னுநகை வன்னமுலை பன்னிருகை - மன்னவநின்
மின்னயிலை யன்னவிழி மின்னலிடை பின்னுசடை
அன்னநடை யின்னவறி வாய்.
***
2. பின்முடுகு வெண்பா
அபிராமி பட்டர்
பற்றிப் பணிந்து பரவ வரந்தருவாய்
கற்றைச் சடையா கடவூரா - வெற்றிநெடுங்
கொண்டலொக்குங் கண்டசத்தங் கொண்டெதிர்த்தங் கஙருக்கும்
சண்டனைக்கண் டன்றுதைக்கும் தாள்.
(தளை தட்டும், விளாங்காய்ச்சீர் கொண்ட சில பின்முடுகு வெண்பாக்களுக்கு
பசுபதியார் நூலில் கண்க.)
காளமேகம்
விரவு சிறுகுயிலே, வெண்மதியே மாரன்
வரவு தனித்திருக்க மாட்டாள்-இரவதனில்
கண்டங்கத் தரிக்கொத்துக் காயங்கம் தரிக்கப்பின்
கண்டங்கத் தரிக்கொத்துக் காய்.
[பின்முடுகு வெண்பாவில் தனிச்சீருக்குப் பின் தளைபார்க்க வேண்டியதில்லை
என்றோர் கருத்துளது.]
பட்டினத்தார்
வரைதெரியா இன்பக் கடலில்மூழ் காதே
வரைகடந்த வாழ்வைநத் தாதே - உரையிறந்த
ஓசைவிந்து வேமனமே உற்றசபை யாலறிந்து
நேசமுள்ள பாக்கியத்தில் நில்.
பாரதிதாசன்
சீர்மணக்கும் தென்மயில வெற்பில் திருமுருகன்
பேர்மணக்கும் பாட்டில் பிழையகல - ஓர்மணக்கு
எத்தனப்ப னற்களிற்றி ணைப்பதத்தி னைத்துதிப்ப
னெத்தனப்ப டிக்குவெற்றி யெற்கு.
பாம்பன் சுவாமிகள்
நினைத்தார் வினைத்தா நெரிக்குமரு ளைத்தா
வெனைத்தா வுனைத்தா வெனத்தா - வனத்தார்கள்
சேர்புவளர் மாதரசி சேர்தலைவ வாசிறலை
யேர்புமயி லேறிறைவ னே.
வேம்பத்தூர் பெருமாளையர்: நெல்லை வருக்கக் கோவை
தேரோரும் வீதியெலாஞ் செங்கயலும் சங்கினமும்
நீரோடுலாவி வரும் நெல்லையே! - காரோடும்
கந்தரத்த ரந்தரத்தர் கந்தரத்த ரந்தரத்தர்
கந்தரத்த ரந்தரத்தர் காப்பு!
[காரோடும் = கருமையான
கந்தரத்தர் = கழுத்து உடையவர்
அந்தரத்தர் = ஆகாயத்தில் உள்ளவர்
கந்து அரத்தர் = முடியில் நீர் அணிந்தவர்
அம் தரத்தர் = உயர்வான தரத்தையுடையவர்
கந்தர் அத்தர் = முருகனுக்கு தந்தை
அந்தரத்தர் = ஆகாயத்தை மேனியாகக் கொண்டவர்]
*****
11.70. முடுகு வெண்பா இன்று
(வெண்பா)
(சந்தவசந்தம் கூகிள் குழுமம், பைந்தமிழ்ச் சோலை முகநூல்
குழுமப் பதிவுகளிலிருந்து)
மா.வரதராசன் (முன்முடுகு)
வெற்றுப்ப யற்சொற்ற இற்றுச்சொ லுட்பட்டு
முற்றுப்பெ றற்கெற்று மொத்தத்தி - லிற்றைக்கு
நாட்டை இழந்து நலங்கெட்ட எந்தமிழர்
மீட்சி யடைவர் மிளிர்ந்து.
***
மா.வரதராசன் (பின்முடுகு)
காணும் பொருள்மறக்கக் காணாப் பொருளினிக்கப்
பூணும் மொழிதுறக்கப் புத்தியிலே - காணும்
முற்றிவிடு பித்துநிலை முப்பொழுது முற்றலக
நெற்றிவிழி பற்றுகவென் நெஞ்சு!
***
அ. ராஜகோபாலன் (பின்முடுகு)
வேண்டித் தமிழ்கேட்டாய் வெண்பாவிற் பின்முடுகாய்
நீண்ட நெடுநாள்கள் நீவாழ்க - ஈண்டு
மலையு மலையு மதியு மொளியு
முலகி னிலவு மளவு.
***
(முற்றுமுடுகு வெண்பா)
தனன தனன: குருநாதன் ரமணி
இமய கிரியி லுதிந தியது
நமது வளமு மெமது மதமு
மெனுவி தமெழு முடுகொ லியினில்
தனன தனன வணம்.
***
தத்தனத்த: இலந்தை ராமசாமி
அத்தனத்தன் தத்தனத்தன் நர்த்தனத்தை எத்தனிக்க
மத்தளத்தை மொத்தெனத்தன் சத்தனைத்தும் - ஒத்திசைக்க
எத்திறத்தும் இத்தரத்தை ஒத்திருக்க மத்தொருத்தன்
இத்தலத்தும் எத்தலத்தும் இல்.
***
தந்ததன: குருநாதன் ரமணி
இங்குமுள வங்குமுள வெங்குமுள வங்கணனி
னங்கமதி லெங்குமுள வங்கதம டங்கிவர
மங்கையிட மிங்குசிவ மங்கலமி லங்குமவ
ளிங்குமன வங்குவினி லெங்கு?
***
தந்தனந்த: மா.வரதராசன்
கொண்டுவந்த தென்னவென்று குன்றமர்ந்த வன்றெளிந்து
மண்டலம்பி றந்துநைந்து மங்குமுன்பு - நண்பிணைந்த
தங்கரங்கொ டும்புரிந்து தங்குமென்ற பண்புணர்ந்து
பொங்குமன்பு முண்ணிறைந்து பொன்று!
***
தந்தனா: சியாமளா ராஜசேகர்
இந்தநா ளன்றுபோ லின்பமே தந்ததோ
பந்தபா சங்களே பஞ்சமோ? - சொந்தமோ
நஞ்சுபோ லெண்ணுதே நன்றியே யின்றியே
வஞ்சமோ நெஞ்சிலே வம்பு.!
***
தனத்தத்: வெங்கடேசன் சீனிவாச கோபாலன்
சினத்தைத் தடுத்துத் தெவிட்டத் தெவிட்டத்
தனித்துக் களித்துத் தரத்திற் - கனத்துப்
பிடிப்பைத் துடைத்துப் பிறப்பைத் தொலைக்கப்
படிப்பைக் கொடுத்துப் பழக்கு!
***
தானன: சுதர்சனா
மீனெனவொ ராமையென மேதினியி லேபெரிய
ஏனமொடு வீறுடைய ஏறரியு - மானபல
வானவுரு தானுடைய வானவுரு வானபெரு
மானுடைய மாயவனெ னாறு
*****
தனதனன தான: இலந்தை ராமசாமி
கடகடென நீரும் கடகடெனப் பாயும்
கடகடென நீயும் கட.
(கடந்துசெல்என்று சொல்லும் வண்ணம் நீரும் கடகட என்று வேகமாகப் பாயும் . நீயும்
வேகமாகச் சென்று கட)
*****