"சிரிக்கும் குல இறையே"
(மீ. விசுவநாதன்)
பச்சை மலையழகே - செல்வப்
பக்க பலம்நீயே
உச்சம் உலகினிலே - என்றும்
உந்தன் உயிரன்பே
செக்கச் சிவந்தமுகம் - கொண்டு
சிரிக்கும் குலஇறையே
சொக்கத் தங்கமடி - நீயென்
சொர்க்க பூமியடி
ஆழி அலைநுரையை - கையில்
அள்ளி வருமழகே
நாழி கடந்தாலும் - வந்த
ஞானப் பெருவிருந்தே
சிட்டுக் குருவியென - நீயுன்
சின்ன வாய்திறப்பாய்
எட்டுத் திசையுயிர்கள் - காட்டி
இசையில் கரைத்திடுவாய்
பொம்மை விளையாட - என்னைப்
பொழுதும் அழைப்பாயே
இம்மை விளையாட்டில் - அந்த
இன்பம் வேறேது.
உன்னை நினைக்கையிலே - என்னுள்
ஊனம் இல்லையடி
என்னை உன்மடியே - என்றும்
ஈர்க்கும் தேசமடி
(13.03.2026 10.59am)