ஊசல்01. குமரனுக்குப் பொன்னூஞ்சல்!
(ஊசற்பாட்டு: கலித்தாழிசை)
(குருநாதன் ரமணி: 18/11/2021)
குமரனுக்குக் கற்பக மரக்கிளையில் பொன்னூஞ்சல் கட்டிச் சீராட்டி, அவன் எதிர்காலம் சொல்லி வாழ்த்தி, அன்னை உமையாள் பாடுவதாக அமைந்த பாடல்.
கற்பகம ரக்கிளையில் கந்தனுக்குப் பொன்னூஞ்சல்
பொற்பதத் தன்னையுமை போட்டவன் — அற்புதங்கள்
ஊசலிற் பாடி உளம்நெகிழச் செய்சொற்கள்
(ஊசற்பாட்டு: கலித்தாழிசை)
உற்பவமே பொய்கையெனக் கொண்டாய் சரவணனே
கற்பகத் தருவினிலே கட்டியபொன் னூசலிலே
அற்புதக் கிளையில் அமர்ந்துன் மயில்நோக்கப்
பொற்பதம்காண் உள்ளம் பொலிவுறவே ஆடுக
. புதல்வனே பக்தருளம் புக்கூசல் ஆடுகவே! ... 1
தந்தையார் ஓர்தினம் தந்தகனி யுன்தமையன்
முந்தியே கொள்வான் முனிந்தே பழனிமலை
வந்துநீ ஆண்டி வடிவில் நிலைகொள்வாய்
விந்தைமகன் உன்னை வியக்கின்றேன் ஆடுக
. வேலனொரு கோல்கொள்வாய் ஊசலுந்தி ஆடுகவே! ... 2
தந்தைக்கே மந்திரம் சாற்றிப் பொருளுரைத்து
தந்தியுன் ஊர்தி தகப்பன் சாமியாய்
வந்துநீ ஸ்வாமி மலைவீடு கொள்வாயே
கந்தா சலக்கோவே கைநீட்டி ஆடுக
. கடைக்கண் பார்த்தருள்வாய் ஊசலுந்தி ஆடுகவே! ... 3
கிழவிக்குச் சுட்டபழம் கிட்டியதா என்றுநீ
பழமுதிர்ச் சோலையில் பார்த்தவளைக் கேட்பாய்
கழன்றுனைப் போற்றிக் கதைகதையாய்ப் பாடுவாள்
நிழல்போலப் பற்றுவோர் நீமங் கொள-ஆடு
. நெடுமாலின் பெண்கொள்வாய் ஊசலமர்ந் தாடுகவே! ... 4
சத்திவே லுடன்சூர சம்ஹாரம் செந்தூரில்
கத்தும் கடல்நடுவே செய்தவனைக் காத்தருள்வாய்
இத்தலத்தில் பஞ்சலிங்க ஈசரைப் பூசிப்பாய்
வித்தகனே வேலவனே வீடாறு கொள்வாயே
. விண்பார்த்தே மண்பார்த்தே செல்லூசல் ஆடுகவே! ... 5
திருப்பரங் குன்றினிலே தேவானை கேளாவாய்
பரம்பொருளே குன்றாம் படைவீ டமர்ந்தாள்வாய்
பிரவணச் சொல்லுருவாய்ப் பின்நாள் மலர்வாய்
ஒருகைவேல் பற்றிக்கால் உந்தியே ஆடுக
. உலகமெலாம் ஓங்குமுன்சீர் ஊசலமர்ந் தாடுகவே! ... 6
வேலன் விருத்தனாக வள்ளிமணம் செய்துநீ
கோலமிரு தேவியரைக் கொண்டே திருத்தணி
ஆலயத்தில் நின்றருள்வாய் ஆறுமுகன் பேரகழாய்
சீலம் தழைத்தெழச் செய்பவனாய் ஆடுக
. சேந்தனே செவ்வேளே ஊசலுந்தி ஆடுகவே! ... 7
அத்தனுக்கு ஆலமரம் அன்னைக்கு வேப்பமரம்
அத்தித் தமையன் அரசமரம் கீழமர்வான்
கத்தும் சேவற் கொடியோன் கடம்பமரம்
மத்தம் மதிகொண்டார் மைந்தனே ஆடுக
. மயிலோனே வேலவனே ஊசலாட ஆடுகவே! ... 8
அருணகிரி திருப்புகழின் கருணைமொழி ஆவாயே
குருபரனாம் குமரனனென முருகனருள் சேர்ப்பாயே
சரவணத்தில் அவதரித்த சண்முகனே பாவகியே
உருவழகில் உனைவிஞ்சும் தெய்வமிலை ஆடுக
. உனதுகரம் பனிரெண்டாம் ஊசலாட ஆடுகவே! ... 9
காவடிகள் ஆறாறாம் கந்தனருள் நேராறாம்
சேவடியைப் போற்றவருள் செய்துதிகள் ஏராளம்
சாவடிகள் சத்திரங்கள் சண்முகவுன் ஊர்தனிலே
காவடியாய் உன்னடியைக் காண்பாரே ஆடுக
. காலடியார் சண்மதனே ஊசலாட ஆடுகவே! ... 10