இன்டர்நெட்டில் உள்ள தளங்கள் & குழுக்கள் இவற்றின் நிலையாமையால் முன்பு ஒருவர் முன்பு இட்ட விஷயங்கள் இன்று கிட்டாமல் போகும் வாய்ப்பு உண்டு.
Harikrishnan posted in Santhavasantham (yahoo group) on 2005-07-16
நகர நானூறு வெண்பாக்கள்
நானும் மத்தளராயனும் தொடங்கிய நகர வெண்பாக்களின் தொடர்ச்சி. சில சென்னையில் இருக்கும் போது எழுதியவை. சில பெங்களூர் நகரத்துக்கு வந்த பிறகு எழுதியவை. சில இன்று தொடர்ந்தவை.
எட்டிப்பார் நீள்கிளையில் ஏழெட்டு நாளாக
வட்டமாய்ச் சுள்ளி வனைத்தபடி - விட்டெறிந்த
சாக்குப்பை குப்பை சணல்குச்சி சேர்த்தெடுத்துக்
காக்கை தொடுக்கின்ற கூடு.
தலையை ஒருபக்கம் சாய்த்தபடி பார்த்து
நிலைமாடி நீர்த்தொட்டி நீச்சல் - கலையறிவார்
கண்ணன் நிறச்சிறகர் காக்கையார் செய்வதெல்லாம்
எண்ணம்போல் எச்சம் இடல்.
மெல்லத் தலைநீட்டும்; வீசுகின்ற வால்நிமிர்த்தும்;
இல்லை, வரலாமா என்பதுபோல் - கள்ளமிக
யோசிக்கும் கத்தும் ஓடோடிப் போயொளியும்
வாசற்படி யண்டை அணில்.
சென்னையிலே என்றேனும் சின்னதாய்த் தூற்றலென்றால்
அன்னிக்கு நெஞ்சம் அடித்தாடும் - மன்னிக்
கருக்கும்; அடிக்கின்ற காற்றில் கணத்தில்
வெறிக்கும்பார் நீலமாய் விண்.
எத்தனைநாள் விண்பார்த்தேன் எத்தனைநாள் ஏங்கிநின்றேன்
ஒத்தை மழைத்துளியில் உள்நனைந்தேன் - மொத்திநித்தம்
முங்கி எழுவதைப்போல் மொண்டுவந்து கொட்டுதையா
பெங்களூர் பூராவும் பெய்து.
அங்கே மழைபெய்தால் ஆனந்தம் ஐயாஓ
இங்கே மழைத்தால் எரிகின்றார் - பொங்கித்
தெருவெல்லாம் வெள்ளம் சீறிப் பரவ
உருமாறிப் போனதெங்கள் ஊர்.
நிக்காமல் பெய்தமழை நீண்ட நரகமென்று
டெக்கான் ஹெரல்டில் திமிலோகம் - சக்கைமழை
கொட்டி இடிக்கிறது; கோடிமின்னல் வானெல்லாம்
தட்டி வெடிக்கிறது சார்.
சின்னத் தெருநாய்கள் சீறிக் குதறியதால்
மென்மயிர்த்தோல் ரத்த விளாறாகி - தன்னிருகண்
வானை வெறித்தபடி வண்டியள்ளும் குப்பைக்குள்
பூனையுடல் செல்லும் புகுந்து.
சன்ன மழைத்தூறல்; சாத்திவைத்த சன்னல்கள்
முன்னோட்ட மேக முழக்கங்கள் - இன்னும்
சருகுதிரும் தாழ்கிளையில் தன்னுள்தான் ஆழ்ந்து
குரலுடைந்து கூவும் குயில்.
அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.