மெய்ப்பொருள் அறிஞர் ஜே கிருஷ்ணமூர்த்தி அவர்கள் போதிக்கும் “தேர்வற்ற விழிப்புணர்வு” (Choiceless awareness) என்னும் தத்துவத்தை விளக்க முயலும் வெண்பா:
தேர்வில் விழிப்பின் தெளிவு
(நேரிசை வெண்பா)
யாரோ(டு) எதனோடும் எண்ணில் நினைவோடும்
சார்வற்(று) இருக்கத் தலைப்படுமே - நேர்கொண்ட
பார்வையில் யாதொன்றும் பாகுபா(டு) இல்லாத
தேர்வில் விழிப்பின் தெளிவு.
(யாரோடு = யாரோடும் (உம்மைத் தொகை); சார்வு = பற்று அல்லது மனத்தொடர்பு - to belong; தலைப்படும் = வாய்க்கும்)
கருத்து: சார்வற்ற நிலையில்தான் தேர்வற்ற கவனம் மலரும்.
விளக்கம்:
நேரே நிகழும் காட்சிகளை நாம் கவனிக்க முயலும் போது “நன்று, தீது, நண்பர், பகைவர், இன்பம், துன்பம்” என்று பலவிதமாகப் பிரித்துப் பார்த்து, அந்தக் காட்சியில் நமக்கு உகந்த ஒரு பகுதியை மட்டும் தேர்ந்தெடுத்து அதில் மட்டும் குறுகிய கவனத்தைச் செலுத்துகிறோம். அவ்வாறு நோக்காமல், உலகில் எல்லாவற்றையும் ஒருபடித்தாகப் (ஒரே பார்வையாகப்) பார்க்கின்ற தெளிவு எப்போது வாய்க்கும் என்றால், யாருடனும் எந்தப் பொருளுடனும் எழுகின்ற எண்ணங்களோடும் மனத்தளவில் எந்தவித சார்வும் (சார்வுறுதல் = to belong) இல்லாத நிலையில்தான்.
குறிப்பு:
ஜே கே அவர்கள் போதிக்கும் இந்தத் “தேர்வற்ற விழிப்புணர்வை”, பூமண்டலம் முழுவதையும் ஒரே பார்வையாகப் பார்க்கும் தாயுமானவரின் இந்தப் பாடல் வரிகளும் உணர்த்துவது போல் எனக்குத் தோன்றுகிறது:
“அண்ட பகிரண்டம் அனைத்தும் ஒரு படித்தாக்
கண்டவர் கண்ட திருக்காட்சியை”
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/991205E2-3963-46B3-9499-C994F5E5A7BB%40gmail.com.