<> அரியும் அரனும் அவன் <>

அரியான் அவனை அறியான் பவத்தை
அரியான் அரியான் அறியான் – அறைவேன்
அரியான் அலன்றன் அடியார்க்(கு) அவரைப்
பிரியான் பெரியான் அவன்.
பொருள் விளக்கம்
சிவன்:
எளிதில் எட்டிட இயலாதவன்*; அவனை அறியாதவனது பவம் (பிறப்பு-இறப்பு) என்னும் நோயை அழிக்கமாட்டான்** (அறிந்தோரின் பவத்தை அழிப்பான் என்பது வெளிப்படை..) திருமாலும் அறியாதவன் (இது சோதிப் பிழம்பாய் நின்ற சிவனின் அடியைத் திருமால் காண இயலாததைச் சுட்டும்.) எனினும், அவன் தன் அடியவர்களுக்கு அரியவன் அல்லன், எளியனாவன்; என்றைக்கும் அவர் தமைப் பிரியாது காக்கும் பெரியோன் என்றும் நான் கூறுவேன்.
* அரியானை அந்தணர்தம் சிந்தையானை.. – அப்பர் தேவாரம்
** அரிதல்= அறுத்தல்; அழித்தல்.
திருமால்:
அரி என்ற பெயரைத் தாங்கியவன். அவனை அறியாதவனது பவம் (பிறப்பு-இறப்பு) என்னும் நோயை அழிக்கமாட்டான் (அறிந்தோரின் பவத்தை அழிப்பான் என்பது வெளிப்படை..) அவன் (நர)சிங்க உருக்கொண்டவன் அல்லது வானோரிடைச் சிங்கம் போன்றவன்**. அவனுடைய பெருமையைக் கேட்டு அறிந்த நான்*, அவன் தன் அடியவர்களுக்கு அரியவன் ஆகாத எளியன் என்றும், அவர் தமைப் பிரியாது காக்கும் பெரியோன் என்றும் கூறுவேன்.
* அரி = சிங்கம்; அறி யான் = அறிந்த நான் (வினைத்தொகை)
(இது மடக்கணி அமைந்த சிலேடை வெண்பா.)
... அனந்த் 10-4-2026