. திருவே அம்மா!
செம்முளரி மலர்மிசையில் செம்மாந்து வீற்றிருக்கும்
சிறப்புடைய திருவே அம்மா
வெம்மைவிதி என்னுடைய வாழ்வினிலே விளையாட
விடுவாயோ சொல்வாய் அம்மா
இம்மையிலும் மறுமையிலும் ஏழேழு பிறவியிலும்
என்றனுக்குத் துணைநீ அம்மா
செம்மணியே செழுங்கொடியே செந்தமிழில் பாடுகிறேன்
செல்வமெலாம் தருவாய் அம்மா!
. வருவாய் அம்மா!
பொன்னெனவே பொலிமுகத்தில் பொங்கிவரும் புன்னகையால்
போகாதோ துன்பம் அம்மா?
அன்னையுன்னால் செல்வங்கள் அணியணியாய் வாராவோ
ஆகட்டும் என்பாய் அம்மா!
இன்னருளின் பேரமுதால் இங்கமர வாழ்வுதர
இன்றைக்கே வருவாய் அம்மா!
என்னனைய மக்களுக்கும் இரங்கிடவே வேண்டுகிறேன்
ஏற்றுவரம் தருவாய் அம்மா!
தூயனெனச் செய்வாய்!
பாங்கறியேன் வாழ்கின்ற பக்குவமும் நானறியேன்
பண்புநலன் அறியேன் அம்மா
ஓங்குகின்ற உயர்திறன்கள் ஒன்றுமிலேன் என்றாலும்
உனைப்புகலாய் அடைந்தேன் அம்மா
தீங்கறியா நல்லோராய்த் திகழ்வோரின் கூட்டத்தில்
சேர்த்துவிடு பிழைப்பேன் அம்மா
தூங்கெழிலிப் பெயலெனவே திருவுன்றன் அருள்மழையால்
தூயனெனச் செய்வாய் அம்மா
(தூங்கெழிலி - வானத்தில் தொங்குகின்ற மழைமேகம்)
( பெயல் - மழை)
-- தில்லைவேந்தன்.
....
--
.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hiHmL3CSTbTpJ2zWh_YFvmLnknNakb%2BVB7xPztE7U1BQg%40mail.gmail.com.
அருமை