பல்லாண்டுகளுக்கு முன்பு பாரதியார் கதையை வில்லுப்பாட்டு நிகழ்ச்சியாக நடத்திவந்தேன். பிறகு எங்கள் குழுவில் பாடி வந்தவர்கள் வெவேறு இடங்களுக்குச் சென்றுவிட்டதாலும் எனக்குப் பாட வராததாலும் அதை நிறுத்திவிட்டேன். என்றாலும் எழுதி வைத்த கவிதை மறைந்து போகக்கூடாதென்பதற்காக அதைத் தொடர்ந்து இங்கே இடுகிறேன். விருப்பமும் பொழுதும் இருப்பவர்கள் படிக்கலாம்.
இலந்தை
மகாகவி பாரதியார் வில்லுப்பாட்டு
எழுதியவர் : கவிமாமணி இலந்தை சு. இராமசாமி
தந்தனத்தோம் என்று சொல்லியே - வில்லினில் பாட ஆமாம்- வில்லைனில் பாட
வந்தருள்வாய் தந்தி முகனே
பாட்டின் மூலம் நாட்டுப்பற்ருப் பயிரை வளர்த்துவிட்ட
பாவலனின் கதை தனையே வில்லினில் பாட- ஆமாம்- வில்லினில் பாட
நீ அருள்வாய் தந்தி முகனே!
ஐயிரண்டு வயதினிலே அழகுக் கவிதை பல
செய்தவனின் கதை தனையே - வில்லினில் பாட- ஆமாம்- வில்லினில் பாட
நீ அருள்வாய் தந்தி முகனே!
சக்தி சக்தி சக்தியென்று சந்ததமும் போற்றிய நம்
சக்திதாசன் கதைதன்னையே- வில்லினில் பாட-ஆமாம் வில்லினில் பாட
மிக்கவருள் தந்தி முகனே!
காவியங்கள் தந்துபெறும் கண்ணன் புகழ் பாடியநம்
பாரதியின் கதைதனையே- வில்லினில் பாட- ஆமாம்- வில்லினில் பாட
தீரமருள் தந்திமுகனே!
சொல்லிலுயிர் ஏற்றியவன் ஜோதித் தமிழ்க்கவிஞன்
செந்தமிழில் முத்தெடுத்து தெய்வக் கவிதை பல
கண்ணன் பாட்டுக் குயில் பாட்டு, பாஞ்சாலி சபதமெனும்
தந்தனத்தோம்...
பி.பா: அண்ணே இந்தக் கூட்டத்தைப் பாருங்கண்ணே, எவ்வளவு பெரியவங்களெல்லாம் வந்திருக்காங்க! இவங்க மத்தியிலே எனக்குப் பாடக் கூச்சமா இருக்கண்ணே!
மு.பா: நூத்துலே ஒரு வார்த்தை தம்பி, இவ்வளவு பெரியவங்க மத்தியிலே நமக்குப் பாட என்ன தகுதியிருக்கு? நமக்கு என்ன தெரியும்?
சொல்லறியோம் சுவையறியோம்
சுவையறியோம்- அந்தச்
சொல்லிலுள்ள பொருளறியோம் -
பொருளறியோம்
நல்லகவித் திறமறியோம்
திறமறியோம்-மிக
நயமுள்ள பேச்சறியோம்
பேச்சறியோம்
கல்வியிலே வல்லவர்கள்
வல்லவர்கள்- நல்ல
கவிஞர்கள் மத்தியிலே
மத்தியிலே-
சொல்லெடுத்துப் பாடவந்தோம்
பாடவந்தோம்- எங்க
துணிச்சலைப் பொறுத்திடுக
பொறுத்திடுக!
பி.பா: அண்ணே இப்படித் துணிச்சலை நமக்குக் கொடுத்த நம்முடைய ஆசானைப் பற்றி நினைக்க வேண்டாமா
மு.பா: மறந்தால்லா தம்பி நெனைக்கிறதுக்கு.
நானொருநாள் மறந்தாலும் மறந்தாலும்- என்
நாவொருநாள் மறப்பதில்லே
நாடெல்லாம் புகழ்ந்தாலும் புகழ்ந்தாலும்-என்
உளம் வணணங்க மறப்பதில்லே
எங்கெங்கே நன் சென்றாலும் சென்றாலும் -என்றன்
இருப்பிடத்தை மறப்பதில்லே
எவரெவரை மறந்தாலும் மறந்தாலும்
எங்கள் ஆசானை மறப்பதில்லை.--- நானொருநாள்
பி.பா
இங்கிருக்கிற பெரியவங்களுக்கு வணக்கம் சொல்ல வேண்டாமா!
மு.பா: சொல்லிடுவோம்
எங்க வணக்கம் எங்க வணக்கம்
இங்குவந்த யாவருக்கும் எங்க வணக்கம்
மு.பா எம்மை அழைத்தவர்க்கு
பி.பா :எங்க வணக்கம்
மு.பா: ஏற்பாடு செய்தவர்க்கு
பி. பா: எங்க வணக்கம்
மு. பா: வந்திருக்கும் மாதருக்கு
பி.பா: எங்க வணக்கம்
மு.பா :வரப்போகும் யாவருக்கும்
பி.பா: எங்க வணக்கம்
எங்க வணக்கம் எங்க வணக்கம்
(பி. குறிப்பு. விழாவுக்கு வந்திருக்கும் பெரியவர்கள் பெயர்களையும் இங்கு சேர்த்துக்கொண்டு பாடுவது வழக்கம்)
எல்லா வகைப் பாடல்களையும் எழுதித் தமிழை வளர்த்துவரும் உங்கள் பணிக்கு எங்கள் நன்றி.
அனந்த்
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
பி.பா: அண்ணே என்ன கதை பாடப்போறீக?
மு.பா: பாரதி கதை பாடப்போறேன்.
பி.பா: அது யாருண்ணே பாரதி. ?
மு.பா: நமக்கெல்லாம் பாரதின்னா மகாகவி பாரதி ஒருத்தர்தான்.
பி.பா: பாரதியார்னு மருவாதியாச் சொல்லுங்கண்ணாச்சி! பாரதின்னதும் நான் கொஞ்சம் கொழம்பிப் போயிட்டேன்.
மு.பா: அந்தக்காலத்திலே நான் சின்னப்பையனா இருந்தபோது பாரதியார் பாட்டைத் தெருவெல்லாம் பாடிக்கிட்டுப் போவோம். சிவப்புத் தொப்பிக்காரங்க தொரத்திக்கிட்டு வருவாங்க!
பி.பா: என்ன பாட்டண்ணே அது?
மு.பா: வந்தே மாதரம் என்போம்- எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம்.
ஜாதி மதங்களைப் பாரோம்- உயர்
ஜன்மமித் தேயத்தில் எய்தினராயின்
வேதிய ராயினும் ஒன்றே - அவர்
வேறு குலத்தின ராயினும் ஒன்றே!
ஒன்று பட்டாலுண்டு வாழ்வு - நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்- இந்த
ஞானம்வந்தால் பின் நமக்கெது வேண்டும்? வந்தே
பி.பா: அண்ணே, அந்தக்காலத்திலே நான் பொறக்கலேயேன்னு வருத்தமா இருக்கு. பொறந்திருந்தா பாரதியார் பாட்டை நிச்சயம் பாடியிருப்பேன்.
மு.பா: பாரதியார் கதையை எல்லோரும் கேட்கணும் தம்பி. கேட்டா தேசபக்தி கொப்புளிக்கும்
பி.பா: கேக்கறதுக்காகத்தானே இவுகள்ளாம் வந்திருக்காக! பாடுங்க! கேக்கறோம்!
மு.பா: விருத்தம்
சொல்லிலே நெருப்பை ஏற்றி, சுதந்திரப் பாதை காட்டி,
கல்லிலே சிலையை ஊட்டிக் கண்ணையும் திறந்த மன்னன்
பல்லுயிர் அனைத்தும் சொந்தப் பான்மையில் கொண்டு வாழ்ந்த
வல்லவர் பார தியார் மாப்புகழ் பாடுவோமே!
பி.பா: மேலே படுங்கண்ணே!
மு.பா:
நாடு எங்கள் நாடு- என்று
நாளும் கவி தந்தவனைப் பாடு- ஜதி போடு
ஏடெடுத்த கவிஞர்களும் ஏந்திழையார் பெரியவரும்
இருந்து கேட்க வேண்டும் இந்தக் கதையை- கேட்டால்
எண்ணத்திடுவார் எழுச்சி என்னும் விதையை----- நாடு
பாட்டின் மூலம் சுதந்திரத்துப் பாதை போட்ட பெருங்கவிஞன்
பாட்டினிலே நமது மனம் ஆழும்- அந்தப்
பரவசத்தில் துன்பமெல்லாம் வீழும் -நாடு
தின்னவரும் புலிதன்னையும் தெய்வமெனப் போற்றியநம்
மன்னவனின் கவிதைதனைப் பாடு- பெறும்
மகிழ்ச்சியினுக் கேதிங்கே ஈடு -நாடு
பி.பா: அண்ணே, பாரதியாரு எந்த ஊரிலே பொறந்தாரு?
மு.பா: திக்கெட்டும் புகழும் திருநெல்வேலி மாவட்டத்திலே எட்டையபுரம் கிராமத்திலே பொறந்தாரு.
திர்நெல்வேலி மாவட்டத்திலே பல பெரியவங்க பிறந்திருக்காங்க! தமிழும் அங்கேதான் பிறந்தது. தென்றல் கூட அங்கேதான் பிறந்ததாம்
பி.பா: அப்படியாண்ணே!
மு.பா: ஆமாம் தம்பி
தென்பொதிகை மலைத் தோன்றி தவழ்ந்துவரும் தென்றல்
செந்தமிழ்த்தேன் நறவத்தைத் தேக்கி வரும் தென்றல்
என்றுமிளம் பொருநைநதி ஏறிவரும் தென்றல்
ஏந்திழையார் சேலையிலே இழையோடும் தென்றல்
மன்னுபுகழ் காந்திமதி நெல்லையப்பன் பாதம்
மாறாது பணிந்தருளை மாந்திவரும் தென்றல்
தென்னை மர உச்சியிலே சேர்ந்துவிசைகூடி
திருநெல்வேலி மாவட்டச் சிறப்பதனைப் பாடும்.
பி.பா: பாரதியாருக்குப் பூர்வீகமே எட்டையாபுரம்தானா?
மு.பா: இல்லே. சீவலப்பேரிதான் அவங்க பூர்வீக ஊரு. முக்கூடல் பள்ளு கேட்டிருக்கியா?
பி.பா: எங்க பாடப்பொஸ்தகதிலே ஒரு பாட்டுப் படிச்சிருக்கேன்.
" ஆற்றுவெள்ளம் நாளைவரத் தோற்றுதே குறி- மலை
ஆழ மின்னல் ஈழ மின்னல் சூழ மின்னுதே
நேற்றுமின்றும் கொம்பு சுற்றிக் காற்றடிக்குதே-சுனை
நீர்ப்படு சொரித்தவளை கூப்பிடுகுதே"
மு.பா நல்ல நெனைவு வெச்சிருக்கியே. சீவலப்பேரிக்கு முக்கூடல்னு ஒரு பேரு.
கயத்தாறு, சித்தாறு தாமிரபரணின்னு மூணு நதிங்க அங்கே கலக்கிறதாலே அதுக்கு முக்கூடல்னு பேரு.
பி.பா: அண்ணே, அங்கே வழக்குகள்ளே சத்தியம் பண்ணிக்குடுக்குற சுடலைமாடன் கோயில் ரொம்பப் பிரசித்தம் இல்லையா?
மு.பா: ஆமாம். அந்த ஊரிலே கடுவாய்ச் சுப்பையர் என்று ஒருவர் இருந்தார். சீவலப்பேரி சத்திரத்து நிர்வாகத்தைப் பார்த்ததாலே சத்திரம் சுப்பைய்யர்னு சொல்லுவாங்க! அவருக்குச் சின்னச்சாமி அய்யர் னு ஒரு பையன். சின்னச்சாமி அய்யர் சின்ன வயசிலேயே தமிழ் நல்லாப் படிச்சாரு. வில்லுப்பாட்டு, கணியான் கூத்து , ஒயிலாட்டாம்னு நாட்டுப்புறக் கலைகளிலே ரொம்ப ஈடுபாடு. கடுவாய் சுப்பையர் சின்னச்சாமி சின்னப் பையனாயிருக்கிறபோதே இறந்து போயிட்டாரு.
பி.பா: அப்புறம்
மு.பா அப்புறம் என்ன? சின்னாச்சாமியோடே அம்ம பாகீரதியம்மா அவரைக்கூட்டிக்கிட்டு எட்டையாபுரத்திலிருந்த தன் சகோதரன் வீட்டுக்கு வந்துட்டாங்க. அங்கே சின்னாச்சமி படிச்சாரு. அப்புறம் அவ்வூரு கிராம முன்சீப்பு இராமசாமி அய்யரு பொண்ணு இலக்ஷ்மியம்மாளை அவருக்குக் கல்யாணம் பண்ணி வச்சாங்க! அவங்களுக்கு ஒரு பையன் பொறந்தான். அந்தப் பையன்தான் நமது பாரதியார். குழந்தை பிறந்துதலே அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம். சின்னச்சாமி அய்யருக்கு அரண்மனையிலே உத்தியோகம்.
குழந்தைக்கு அவங்க அம்மா தாலாட்டுப் பாடினாங்க!
பி.பா: அண்ணே , எனக்கும் எங்க அம்மா தாலாட்டுப் பாடினாங்களாம். எப்படித்தெரியுமாண்ணே!
மு.பா: பாடு கேட்கலாம்
பி.பா. அண்ணே நான் எங்க குடும்பத்திலே எட்டாவது குழந்தே. எங்க அம்மாவுக்குத் தாலாட்டுப் பாடிப்பாடி அலுத்துப் போச்சு. அதனாலெ சலிச்சுக்கிட்டே பாடினாங்களாம்.
"ஆண்டாவா பொறுக்காமல்
அள்ளியிதைத் தந்தாயோ
தூங்கடா சண்டாளா
தொந்தரவு செய்யாதே!
மு.பா: தம்பி. பாரதியாரு முதல் குழந்தையாச்சே. இப்படியா பாடுவாங்க!
பா.ப: எப்படிப் பாடினாங்க!
மு.பா
""ஆராரோ ஆராரோ ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ ஆரிரரோ ஆராரோ
கண்ணே என் கண்மணியே கலிதீர்க்க வந்தவனே
வண்ண மலர்க்கொழுந்தே மன்னவனே தாலேலோ
வானத்து வெண்மதிதான் வட்டமிட வந்ததுவோ
வண்ணவொளித் தாரகைதான் மண்ணிறங்கி வந்ததுவோ
உன்னழகுப் புன்னகையில் உன்மத்தம் ஆகுதடா
என் வயிறு நீ உதிக்க என்னதவம் செய்துவிட்டேன்
உன்னமுதக் குரலிசையில் உயர்கவிதை கேட்குதடா
என்மகனே தாலேலோ இனியவனே தாலேலோ
வல்லவனாய் நல்லவனாய் வாக்கினிலே மன்னவனாய்
செல்வத் திருக்குமரா சிறப்படைய வேண்டுமடா!
பி.பா : குழந்தைக்கு பாரதின்னு தானே பேர்வெச்சாங்க!!
மு.பாஇல்லேப்பா. அது அவருக்குப் பின்னாலே கிடைச்ச பட்டம். அவருக்கு வெச்ச பேரு வேறே. "நான் சொல்றேன் நீ புரிச்சுக்கணும்"
"பி. பா: நீங்க பாட்டுப் படிங்கண்ணே நான் புரிஞ்சுக்கறேன்
மு.பா"
காளி இளஞ்சக்தி கன்றவன் - வேதம்
காட்டிடும் மூலமாய் நின்றவன் - உயர்
கானமாமயில் ஏறியேஉலகேழும் ஏழும் நலம்பெறவலம்
சென்றவன் நமை வென்றவன்
சூரனைக் வீழ்த்தித் தொலைத்தவன் - என்றும்
தூயவர் நெஞ்சில் நிலைத்தவன் - உயர்
நாரணன்திரு மால்மருகனாய் நாடுமன்பர்கள் கேடறச் செயும்
நலத்தவன் செந்தில் தலத்தவன்
சுப்பிர மணியன் தீரன் - தமிழ்
தோயும் இசையின் ரீங்காரன்- என்றும்
ஒப்பிலாவகை ஓங்குமாக்கவி செப்பிடும் திறம் தந்திடும் தமிழ்த்
தீரன் அவன் பேரன்
பி.பா சுப்பிரமணியன் தானே!
மு.பா: சரியாச் சொல்லிப்புட்டே! அவரைச் சுப்பையா என்று அழைத்தார்கள். சுப்பைய்யாவுக்கு ஒரு தங்கச்சிப்பாப்பா பொறந்தது. கொஞ்ச நாளிலேயே இறந்து போய்விட்டது. சுப்பைய்யாவுக்கு அஞ்சு வயசாயிருக்கும் போதே அவனுடைய அம்மா இறந்துட்டாங்க!
பி. பா: அடப்பாவமே!
மு.பா: அந்த அம்மா ரொம்ப நல்லவங்க! சுப்பையா தாயில்லாத பிள்ளையாயிட்டான்.
சின்னச் சாமி அய்யருக்கும் அப்போ இளமைப் பருவம்தானே! அவரு இரண்டாங்கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. அந்த அம்மா பேரு வள்ளியம்மை.
"பி.பா: பொதுவாவே சித்தின்னா கொடுமைப் படுத்துவாங்கன்னு சொல்லுவாங்க!
மு.பா: ஆனா அந்த அம்மா அப்படியில்லே. சுப்பைய்யாவை நல்லாக் கவனிச்சுக்கிட்டாங்க!
சின்னப் பையனாயிருக்கும் போதே சுப்பய்யா கவிதை பாடத்தொடங்கிட்டான். சின்னச்சாமி அய்யர் தன் பையன் நல்லாப் படிச்சுக் கலெக்டராக வேண்டும்னு ஆசைப்பட்டாரு.. அவன் கணக்குப் படிக்கணும், இங்கிலீசுப் படிக்கணும்னு விரும்பினாரு.. ஒரு நாள் பையனைத் தூக்கி மடிமேலே வெச்சுக்கிட்டுத் தன் ஆசையைச் சொன்னாரு
கணக்குப் படிக்கவேண்டும்- சுப்பையா
கலெக்டர் ஆக வேண்டும்
மணமாய் உன்வாழ்வில் - சுப்பைய்யா
மகிழ்ச்சி துள்ள வேண்டும்
ஆங்கிலம் கற்கவேண்டும் - சுப்பய்யா
ஆபீஸராகவேண்டும்
பாங்குடன் நானதனைக்- குழந்தாய்
பார்த்து மகிழ வேண்டும்
கவிதை புனைந்துவிட்டேன் - குழந்தாய்
காரிகை கற்றுவிட்டேன்
புவியில் பலரையுமே போற்றிப்
பொழுதைக் கழித்துவிட்டேன்
எவரையும் சாராமல்- வாழ்வில்
இருக்க வேண்டுமெனில்
கவிதை புனையாதே- கற்பனைக்
கனவு காணாதே!
என்னைப்போல் ஆகாதே - குழந்தாய்
எவர்க்கும் அஞ்சாதே
சொன்னபடி கேட்டால் - குழந்தாய்
துன்பங்கள் இல்லையடா!
பி.பா: எவ்வளவு உருக்கமாச் சொல்லியிருக்காரண்ணே!
தொடரும்
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
மகிழ்ச்சி. சைதாப் பேட்டையில் பாரதி புகைவண்டி ஏறும் காட்சியில் வரும் ‘ரயிலே, ரயிலே.. ’பாட்டு இன்னும் காதிலே ஒலிக்கிறது.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
அன்புடன்,
தங்கமணி.
On Jul 27, 3:53 am, SUBBAIER RAMASAMI <eland...@gmail.com> wrote:
> பி.பா: அண்ணே என்ன கதை பாடப்போறீக?...
> read more »
மிக்க நன்றி.
கார்கில்
On Jul 26, 6:53 pm, SUBBAIER RAMASAMI <eland...@gmail.com> wrote:
> பி.பா: அண்ணே என்ன கதை பாடப்போறீக?...
> read more »
மு.பா: எவ்வளவுதான் முயன்றாலும் சுப்பைய்யாவின் மனத்தைக் கவிதையிலிருந்து திருப்ப முடியலே. சுப்பய்யா புத்திசாலிதான். கணக்கும் இங்கிலீசும் நல்லாவே வரும். ஆனாலும் கவிதையிலே இருந்த ஆர்வம் மத்தவற்றிலே இல்லே
பி.பா: அப்பாகிட்டே அடி வாங்கியிருப்பாரே!
மு.பா: ஆமாம் . சின்னச்சாமி ஐயர் முன்கோபக் காரர். அவருக்கும் தமிழிலே நிறையப் பாண்டித்தியம் இருந்ததாலே அந்தக்காலத்து இலக்கியங்கலை ஓலைச்சுவடிகளாச் சேர்த்துவைத்திருந்தாரு.
பி.பா: ஏன் அப்பல்லாம் புஸ்தகங்க இல்லையா?
மு.பா: அச்சுக்கலை அவ்வளவாக வளராத காலம். பல இலக்கியங்கள் அச்சடிக்கப்படவே இல்லை. அந்தப்புண்ணியத்தே பின்னாளில் உ.வே சுவாமிநாதய்யர் கட்டிக்கொண்டாரு. சுப்பய்யாவுக்கு சோமசுந்தரம்னு ஒரு நண்பன். அவனுக்கும் தமிழில் ஆர்வம் அதிகம். இரண்டு பேரும் சின்னச்சாமி அய்யருக்குத் தெரியாம ஓலைச் சுவடிகளை எடுத்துக்கிட்டுப்போயி கோவில் வாகனங்களுக்குக் கீழே போயிப் படிப்பாங்களாம். எப்படிப் படிச்சாங்க தெரியுமா?
மு.பா சிம்ம வாகனத்தடியில்
பி. பா: திருக்குறளைத் தான் படித்தார்
காமதேனு அடியினிலே கலித்தொகையைத் தான் படித்தார்
நாகவாகனத்தடியில் ராமாயணம் தான் படித்தார்
தோகைமயில் வாகனத்தில் தொல்காப்பியம் தான் படித்தார்
தெக்குப் பக்க மூலையிலே சிலப்பதிகாரம் படித்தார்
மண்டபத்தின் உச்சியிலே மணிமேகலை படித்தார்.
யானை வாகனத்தடியில் யாப்பிலக்கணம் படித்தார்
அன்னவாகனத்தடியில் அகநானூறுதான் படித்தார்
பி.பா2 : நிறையத்தான் படிச்சிருக்காரு.
மு.பா: அந்தக்காலத்துலே ஜமீந்தார்களைச் சந்தோஷப்படுத்த புலவர்களெல்லாம் சிருங்காரப் பாட்டெல்லாம் எழுதுனாங்க.
: இராஜாவை நினைச்சுப் பொம்பளைகளெல்லாம் ஏங்குற மாதிரியும் அவங்க விரக தாபத்தைப்பத்தியும், சரி சரி, இன்னும் எதைப்பத்தியெல்லாமோ எழுதினாங்க.. அதிலே ஒண்ணு கூளப்பன் நாயக்கன் காதல். அதையும் சுப்பய்யா படித்தான்.
பி.பா: இந்தக்காலத்திலே சினிமா கெடுக்கற மாதிரி அந்தக்காலத்திலே இப்படி புத்தகம் எழுதிக் கெடுத்திருக்காங்க!
மு.பா: அப்படிச் சொல்ல முடியாது. புலவர்களுக்கும் வயித்துப்பொழப்பு நடக்கணுமே!. அதைப் படிச்சுச் சொல்வதுதான் அந்தக்காலத்துலே பெரிய பொழுதுபோக்கு.
சுப்பய்யா ஏழு வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கிவிட்டான். பத்து வயதிலே சிருங்காரக்கவிதை கூட எழுதினான். ஒரு சமயம் சின்னச்சாமி அய்யருக்கு ஒரு ஓலைச் சுவடி தேவைப்பட்டது. வீட்டிலே அது இல்லை. சுப்பய்யாதான் எடுத்துக்கிட்டுப்போயிருக்கணும்னு நெனைச்சு கோயிலுக்குப் போனாரு
பி.பா: அப்புறம்
மு.பா: அப்பா வருவதைப்பார்த்த சுப்பய்யா ஓடினான். அவனைத் துரத்திக்கிட்டு சின்னச்சாமி அய்யரு ஓடினார்
"சுற்றிச் சுற்றி, சுற்றிச் சுற்றி ஓடி வருகிறான் கவிதை
சொந்தமாகப் புனைந்ததனைப் பாடி வருகிறான்
கற்றைக் குழல் கழுத்தில்விழப் பையனின் பின்னே - அப்ப
கடுமையான கோபத்தோடு ஓடி வருகிறார்.
ஒன்று, ரெண்டு, மூணு நாலு .. ஒன்பது சுற்று - அப்பா
ஓடிவந்து களைத்தமுகம் பார்த்தனன் உற்று
சின்ன உள்ளம் தேம்பியது, திகைத்து நின்றனன் - அப்பா
சின்னச்சாமி அய்யர் கையில் தானே ஒன்றினன்.
பி.பா: அன்னைக்கு அவரோட அப்பா அடிச்சிருப்பாகளே
மு.பா: அதுதான் இல்லை. பையன் பாட்டுக் கட்டறதிலே அவருக்கும் சந்தோஷம்தான்.
ஆனால் அவன் வாழ்க்கை சிறப்பாக இருக்கணும்னா ஆங்கிலமும் கணக்கும் படிக்கவேண்டும் என்று சொன்னார். அன்னைக்கும் பையனிடம் அதைத்தான் சொன்னார்.
அதற்குப் பையன் என்ன சொன்னான் தெரியுமோ?
பி.பா: சொல்லுங்க
:மு.பா: இங்கிலீசுப் படிக்க மனம் ஒருப்படவில்லை -அப்பா
எண்ணும் கணக்கும் எனக்குச் சற்றும் சரிப்படவில்லை
தங்கத் தமிழ் இருக்கையிலே கணக்கு வேண்டுமா? - அப்பா
தாவி வரும் கற்பனையில் பிணக்கு வேண்டுமா?
பி.பா: அய்யர் ஒண்ணும் சொல்லலியா?
மு.பா: சுப்பய்யா, வாழ்க்கை பளபளப்பாய் இருக்கணும்னா இங்கிலீசுப் படிக்கணுனு சொன்னாரு.
பையன் சொல்றான்
"பளபளப்பாய் இருப்பதனால் கண்ணாடிக் கூடு- ஒளி
பட்டை தீட்டும் வைரத்தின்முன் நிற்குமோ ஈடு?
களிப்புடனே எனதுள்ளத்தில் பொங்கிடும் ஊற்று- அதன்
கதவடைத்தால் அதுவே என் வாழ்க்கையின் கூற்று"
அப்படின்னான்.
பி.பா: அப்புறம்
மு;பா: இவனுக்கு நாம புத்திமதி சொல்றதைவிட ஜமீந்தாரை விட்டுப் புத்திமதி சொல்லவைக்கலாம்னு நெனைச்சு ஜமீந்தாரிடம் கூட்டிக்கிட்டுப் போனாரு. ஜமீந்தார் ஏற்கனவே சுப்பய்யாவின் சிருங்காரக் கவிதையெல்லாம் கேட்டு ரசிச்சிருக்கறாதாலே சின்னச்சாமி அய்யர் சுப்பய்யாவைக் கூட்டிக் கொண்டு போனதும் அய்யருக்குப் புத்திமதி சொல்ல ஆரம்பிசுட்டாரு.
"பிறவிக் கவிஞனய்யா சுப்பய்யா - அவன்
பேசுவதில் ஏதுமில்லே தப்பய்யா
செறிந்து பளபளக்கும் முத்து - இங்கே
தேடாமல் நாம்பெற்ற சொத்து
அருவி தெறித்துவிழும் ஓசை- அவன்
ஆனந்தக் கவிதைமேல் ஆசை
வருங்காலம் அவன் புகழைப் பாடும் - அவன்
வகுத்ததெல்லாம் சத்தியமாய் ஆகும்.
அப்படின்னாரு
பி.பா: சரியாத்தான் சொல்லியிருக்காரு
மு.பா: தம்பி , உனக்கு வெண்பா தெரியுமா?
பி.பா: திருவனந்த புரத்துப்பக்கதிலே அப்படி ஒரு ஊரு இருப்பதாகச் சொல்லுவாக
மு.பா: அது தும்பா தம்பி, அங்கிருந்து ராக்கட்டுல்லாம் விடுவாக. நான் சொல்லுவது வெண்பா
பி.பா: இப்போ ஞாபகம் வந்திடுச்சண்ணே. பனிக்காலத்திலே காலையிலே மூடாக்கம் போட்டிருக்குமே. அதை எங்க ஊரிலே வெம்பா பேய்துன்னு சொல்லுவாக!
மு. பா: நான் கேக்கறது வெண்பா. தமிழ்லே ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பான்னும் நாலுவகைக் கவிதை உண்டு. அதிலே வெண்பா பாடுவது கஷ்டம். புலவர்க்கு வெண்பாப்புலின்னு சொல்லுவாக. சுப்பய்யா சின்ன வயசிலேயே வெண்பால்லாம் எழுதினான். விருதுநகர் சிவஞான யோகின்னு ஒருத்தர் புலவர்களுக்கு ஒரு போட்டி வச்சாரு. அதிலே கலந்துகிட்டு சுப்பய்யா அருமையா வெண்பா எழுதினான். அதைப் பார்த்து சந்தோஷப்பட்டு அவரு சுப்பய்யாவுக்கு
"பாரதி" ன்னு பட்டம் கொடுத்தார்.
பி.பா: பாரதின்னா என்னண்ணே அர்த்தம்.
மு.பா: பாரதின்னா சரஸ்வதின்னு அர்த்தம். சரஸ்வதி அவன் நாக்குலே வெளையாடினா. அதுனால் அந்தப்பட்டத்துக்குப் பெருமை வந்திடுச்சி. எத்தனையோ பேருக்குப் பாரதி பட்டம் கிடைச்சிருக்கு. ஆனால் பாரதின்னா எல்லோரும் நம்ம சுப்பிரமணியா பாரதியைத்தானே நெனைக்குறாங்க! பின்னாளில் அந்தப்பட்டம் அவருக்குப் பொருத்தம்னு சொல்ற மாதிரிப் பாட்டு எழுதினார்
"பாரதி நீ என்றுரைத்தார்- அந்தப்
பட்டம் நிலைத்திட நாளும் உழைத்தார்
வீரத்தைச் சொல்லில் குழைத்தார்- வெறும்
வீணர்தம் வாழ்வை வெறுத்துப் பழித்தார்
பாட்டில் புதுமைகள் செய்தார்- நம்
பண்பென்னும் காவில் பலமலர் கொய்தார்
நாட்டுத் துரோகிய வைதார் - நம்
நாடு விழிப்புற நற்கவி நெய்தார்
பி.பா: அண்ணே நீங்களும் பாட்டுலே பொளந்து கட்டுறீகளே!
மு.பா: தம்பி, நாம யாரைப்பத்திப் பாடுறோம். அவரை நினைச்சாலே கவிதை பொத்துக்கிட்டு வருதில்லே!
பகுதி 4
மு.பா: பாரதியின் தந்தை சின்னச்சாமி அய்யர் கவிஞர் மட்டுமில்லை. கணக்கிலே புலி. எந்திர சாஸ்த்ரம் தெரிந்தவர். அதனாலே தனது அறிவைப்பயன்படுத்தி ஒரு பஞ்சாலை நிற்வவேண்டும் என்று விரும்பினாரு. எட்டய்யபுரம் பக்கத்திலே பித்தாபுரம் என்ற ஊரிலே பஞ்சாலைக்குக் கட்டடம் கட்டினாரு. பலபேரு அதிலே பங்குதாரர்கள் ஆனாங்க!.
பி.பா: லாபகரமா ஓடிச்சா?
மு.பா: அதையேன் கேக்குறே. நல்ல பேரு வந்துது பணம் வல்லே. எட்டாயிரம் ரூபாய்வரை கடன் வாங்கினாரு. பம்பாயிலிருந்து எந்திரம் வருவதிலே தாமதமாச்சு. தமக்குப் போட்டியா வந்துவிடுவாரோன்னு பயந்து ஏற்கனவே தூத்துக்குடியிலே பஞ்சாலை நடத்திவந்த வெள்ளைக்காரங்க சூழ்ச்சி பண்ணி எந்திரத்துக்கு வேண்டிய உபகரணங்கள் கிடைக்க விடாமக் கஷ்டப் படுத்தினாங்க!
பி.பா: அடப்பாவமே!
முபா: சின்னச்சாமி அய்யருக்கு ரெண்டாவது சம்சாரம் மூலமா ஒரு பையனும் ஒரு பொண்ணும் பொறந்தாங்க. பாரதி எட்டய்ய புரத்துப் பள்ளிக்கூடப் படிப்பை முடிச்சாரு. அவரைத் திருநெல்வேலி இந்து உயர்நிலைப்பள்ளியிலே சேர்ப்பதற்கு அய்யர் ஏற்பாடு பண்ணினார்.பணத்துக்கு ரொம்பக் கஷ்டப்பட்டாரு. பாரதிக்கு பள்ளிக்கூடம் போகவே பிடிக்கலே. ஒருநாள் அப்பாவைப் பார்த்துச் சொல்றாரு
பணத்துக்குக் கஷ்டப்பட்டுப் படிக்கவும் வைக்கணுமா
படிச்சது போதும் அப்பா -தமிழைப்
படிக்கிறேன் அதுபோதுமே.
அரண்மனைப் பணிசெய்வேன் ஆதரவாய் நானிருப்பேன்
ஆங்கிலம் வேண்டாமப்பா- எனக்கு
அருந்தமிழ் போதுமப்பா
அப்படின்னாரு
பிபா: அப்பா ஒத்துக்கிட்டாரா?
"வந்தகஷ்டம் நீங்கிவிடும், வற்றாத லாபம் வரும்
மகனே படிக்க வைப்பேன் - கவலை
மனத்திலே வேண்டாமடா!
வெள்ளைக்காரன் தொந்தரவால் வேதனைகள் ஆனதடா
விரைவில் நான் வென்றிடுவேன் - புகழில்
மேன்மேலும் சென்றிடுவேன்
என்று பதில் சொன்னாரு. வெள்ளைக்காரன் தொந்தரவு கொடுக்குறான். வளர விடமாட்டேங்கறான் என்பதை அறிந்த பாரதிக்கு அவர்கள்மேல் கோபம் வந்தது. அடிமை வாழ்வை வெறுக்கத் தொடங்கினாரு.
பி.பா: பஞ்சாலை பின்னாலே சரியாச்சா?
மு.பா நஷ்டத்துமேலே நஷ்டமாச்சுது. பாரதி ஒருநாள் அவருடைய மாமா சாம்பசிவம் அய்யரோடே
பித்தாபுரத்திலே இருந்த பஞ்சாலைக்குப் போனாரு. அப்போ அவருக்குப் பன்னிரண்டு வயசிருக்கும். அவருடைய மாமா பரதியைவிட மூணு வயசு பெரியவரு. அவங்க ஆலைக்குப் போன சமயம் சின்னச்சாமி அய்யர் அங்கே இல்லை. அங்கே அய்யருடைய மேஜை ட்ராயரிலே ஒரு சின்னத் துப்பாக்கி இருந்தது. ஆலை நடத்தத் தடையாயிருந்த வெள்ளையன் மேலே பாரதிக்குக் கோபம் வந்தது. கையிலே துப்பாக்கியைப் பிடிச்சுக்கிட்டுப் பாடினாரு
"சுட்டுப் பொசுக்கிடுவேன் - வெள்ளையனைத்
தூள்தூளாய் ஆக்கிடுவேன்
கொட்டம் அடக்கிடுவேன் - வெள்ளையனைக்
கொன்று குவித்திடுவேன்
கட்டப்பொம்மு துரைபோல - வெள்ளையனைக்
கதிகலங்க வைப்பேன்
எட்டப்பான் தன் வசையை- மாற்றியே
ஏற்றம் பெருக்கிடுவேன்
இதைப் பார்த்தாரு சம்பசிவம். சுப்பையா, அந்தத் துப்பாக்கியை என் கையிலே கொடு என்று வாங்கிக்கொண்டாரு.
கட்டப்பொம்மு என்றாலே- ஜமீந்தார்
கடுமையாக் கோபிப்பார்
இஷ்டம் போல் பேசாதே- பெரிய
இக்கட்டில் மாட்டாதே"
என்றார் சாம்பசிவம்.
பி.பா: ஏண்ணே அப்படிச் சொன்னாரு.
மு.பா; கட்டப்பன் சாக எட்டப்பன் தானே காரணம். திருநெல்வேலி ஜில்லாவிலே எல்லா ஊரிலேயும் கட்டப்பொம்மு கதை தெருக்கூத்து நடக்கும். ஆனால் எட்டய புர ஜமீந்தார் ஆட்சியிலுள்ள இடங்களில் நடக்காது.
பி.பா: அப்படியா
மு.பா: ஆமாம். சாம்பசிவம் என்ன செய்யுறோம்னு தெரியாமா துப்பாக்கியிலே குதிரையைத் தட்டிவிட்டாரு.
பி.பா"அண்ணே அண்ணே கொஞ்சம் நிறுத்துங்கண்ணே. துப்பாக்கியோ சின்னது. அதுக்குள்ளே குதிரையை எப்படிண்ணே புடிச்சு வச்சாங்க
"மு.பா: (சிரித்துக்கொண்டே) குதிரைன்னா நிஜக் குதிரையில்லே. துப்பாக்கியிலே குண்டைத் தட்டிவிடுகிற விசைக்குப் பேரு குதிரை. அதைத்தான் விளையாட்டாத் தட்டிவிட்டாரு.
பி.பா"அய்யய்யோ, என்ன ஆச்சுண்ணே?
மு.பா: குண்டு ஜிவ்வுன்னு பறந்து போயி பாரதியாரோடே காதுப்பக்கம் கொஞ்சந்தள்ளிப்போய் விழுந்தது. கொஞ்சம் அசஞ்சிருந்தாரோ ஆபத்துதான். நாம இன்னைக்குப் பாரதி கதை பாட முடியாது. தமிழ் நாடே ஒரு மகாகவியை இழந்திருக்கும்
பி.பா: நல்லவேளை. கடவுள்தான் காப்பாத்தினாரு.