குறுந்தொகை

282 views
Skip to first unread message

வேந்தன் அரசு

unread,
Mar 18, 2009, 10:40:58 PM3/18/09
to சங்கத்தமிழ், seethaalakshmi subramanian
குறுந்தொகை
கடவுள் வாழ்த்து

தாமரை புரையும் காமர் சேவடி,
பவழத்துஅன்ன மேனி, திகழ் ஒளி,
குன்றி ஏய்க்கும் உடுக்கை, குன்றின்
நெஞ்சுபக எறிந்த அம்சுடர் நெடுவேல்,
சேவல்அம் கொடியோன் காப்ப,
ஏம வைகல் எய்தின்றால் உலகே.

-பாரதம் பாடிய பெருந்தேவனார்

*தாமரை மலரை ஒத்த (யாவரும்) விரும்பும் சிவந்த அடிகள்
பவழத்தை ஒத்த (சிவந்த) மேனி, (மேனியில்) திகழும் ஒளி,
குன்றிமணியை பழிக்கும் (செந்நிற) உடை,  ஒரு குன்றின்
நடு இடத்தை பகுக்கும் வண்ணம் எறிந்த  அழகிய ஒளிவீசும் நெடுவேல்,
அழகிய சேவல் கொடியை கொண்டவன் காத்தலால்,
இன்பமுற்ற நாட்களை பெற்றதானது இவ்வுலகமே!

**அரும் சொற்பொருள்:
புரையும், அன்ன, ஏய்க்கும் = உவம உருபுகள்
காமர் - விருப்பம் தரும்
பக = பிளக்க
ஏமம் = இன்பம், காப்பு
வைகல் = நாள்
ஏம வைகல் = இன்பம் தரும் நாள்
குன்றம் = கிரவுஞ்ச மலை
எய்தின்று-= பெற்றது
ஆல் =அசைச்சொல்




வேந்தன் அரசு

unread,
Mar 19, 2009, 1:43:33 PM3/19/09
to சங்கத்தமிழ்
குறுந்தொகை‍‍

1.குறிஞ்சி

பாடியவர்: திப்புத்தோளார்.
செங்களம் படக்கொன்று அவுணர்த்தேய்த்த‌
செங்கோல் அம்பின், செங்கோட்டு யானை,
கழல்தொடி, சேஎய் குன்றம்
குருதிப்பூவின் குலைக்காந்தட்டே.

தோழி கையுறை மறுத்தது.


* போர்க்களம் குருதியால் சிவப்பு ஏற, கொன்று, அரக்கர்கள் குலம் இல்லாமல் செய்த, சிவந்த கோலினால் ஆன அம்பும், சிவந்த கொம்புகளை உடைய யானையும், வளையமாக இட்ட வீரக்கழலும், உடைய சேயோனான முருகனின் இந்த குன்றம், குருதி போன்ற நிறம் கொண்ட காந்தள் மலரின் குலைகளை உடையதே!


விள‌க்க‌ம்: த‌லைவ‌ன் கையுறையாக‌ கொடுத்த மலர்களை ம‌றுத்து இந்த‌குன்ற‌த்திலும் காந்த‌ள் ம‌லர்க‌ள் உண்டு (தேவைப்ப‌ட்டால் நாங்க‌ளே சூடிக்கொள்வோம்) என்கிறாள்.

அரும்சொற்பொருள்:

தேய்த்த = இல்லாமல் செய்த‌
அவுண‌ர்= அர‌க‌க்ர்
செங்கோடு = சிவ‌ந்த‌ ம‌ருப்பு
கழல் தொடி= தொடிகழல் = வீரர்கள் காலில் அணிவது
சேஎய்= செந்நிற‌மான‌ முருக‌ன்
காந்த‌ட்டே = காந்த‌ளை உடைத்தே=காந்த‌ள் எனும் ம‌ல‌ர் உடைய‌து

வேந்தன் அரசு

unread,
Mar 19, 2009, 2:12:30 PM3/19/09
to சங்கத்தமிழ்
குறுந்தொகை
 
2. குறிஞ்சி
 
பாடியவர்: இறையனார்
 
கொங்கு தேர் வாழ்க்கை, அம்சிறை, தும்பி!
காமம் செப்பாது, கண்டது மொழிமோ!
பயிலிய‌து கெழீஇய நட்பின், மயில்இயல்,
செறி எயிற்று, அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே?
 
(தலைவியிடம் தனது அன்பு தோன்ற, தலைவன் அவள் நலம் பாராட்டியது)
 
*பூக்களின் தேனினை தேர்ந்து உண்ணும் வாழ்க்கையை கொண்ட, அழகிய‌ சிறகுகள் உடைய‌ தும்பியே! பிறர் விருப்பம் பார்த்து சொல்லாமல், நீ கண்டதை கண்டவாறு சொல்வாயாக!  என்னுடன் பழகும் உரிமையுடன் நட்பு பூண்ட‌, மயிலின் சாயலும், செறிந்த பற்களையும் உடைய இந்த அரிவையின் கூந்தலை விடவும், மணம் கொண்டது, நீ அறிந்த பூக்களில் உள்ளதா?
 
அரும்சொற்பொருள்:
 
கொங்கு= தேன்
அம் சிறை= அழகிய சிறகு
அரிவை = பெண்
மயில் இயல் = மயிலின் இயல்பான சாயல்
பயிலியது= பயின்றது, மீண்டும் மீண்டும் பழகுவ‌து
கெழீஇய = உரிமை உடைய‌
காமம் = விருப்பம்
மொழிமோ = சொல்வாயாக‌
நறிய = மணம் கொண்ட‌
கண்டது= உள்ளபடி
 

வேந்தன் அரசு

unread,
Mar 19, 2009, 11:14:27 PM3/19/09
to சங்கத்தமிழ்
குறுந்தொகை
 
3. குறிஞ்சி
 
பாடியவர்: தேவகுலத்தார்

நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;
நீரினும் ஆர் அளவின்றே - சாரல்
கருங்கோல் குறிஞ்சிப்பூ கொண்டு
பெரும் தேன் இழைக்கும் நாடனொடு நட்பே!


*நிலத்தை விட (அகலத்தால்) பெரியது; வானை விட உயரம் மிக்கது். (கடல்) நீரினும் நிறைந்து, அளவு இல்லாதது; கரிய கொம்புகளில் பூத்த குறிஞ்சிப்பூக்களை கொண்டு (தேனீக்கள்) பெரிய தேன் இறால் தொகுக்கும் மலை நாட்டவனொடு நாம் கொண்ட நட்பே

( தலைமகன் சிறைப்புறமாக, அவன் மணம் செய்து கொள்வது வேண்டி, தோழி அவன் இயல்புகளை பழித்த போது தலைவி, தலைவன் இய்லபுகளை புகழ்ந்து மொழிந்தது)
 
**அரும்சொற்பொருள்:

கருங்கோல்=கருமை நிற கிளை
உயர்ந்தன்று = உயர்ந்தது
ஆர் = நிறை
அளவின்று  = அளவற்றது
இழைக்கும் = கட்டும், தொகுக்கும்

வேந்தன் அரசு

unread,
Mar 20, 2009, 5:56:33 PM3/20/09
to சங்கத்தமிழ்
குறுந்தொகை
 
4. நெய்தல் 
 
பாடியவர்: காமம் சேர் குளத்தார்
 
நோம், என் நெஞ்சே; நோம், என் நெஞ்சே;
இமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கி,
அமைதற்கு அமைந்த நம் காதலர்
அமைவு இலர் ஆகுதல் நோம் என் நெஞ்சே!
 
(பிரிவிடை "ஆற்றாள்" என கவன்ற தோழிக்கு கிழத்தி உரைத்தது)
 
* என் நெஞ்சம் நோகுமே; என் நெஞ்சம் நோகுமே; .
இமைகளை தீய்ப்பது போலும் வெம்மையான கண்ணீரை தடுத்து
ந‌ம் உயிர் தங்குவதற்காக நம்மை நீங்காது தங்கிய நம் காதலர்
இன்று தங்குதல் இலர் (என்று நீ சொல்லிய) தன்மையால், என் நெஞ்சம் நோகுமே!
 
(தலைவனின் பிரிவுக்கு தலைவி ஆற்றாள் என்று சொல்லிய தோழிக்கு தலைவி சொல்லியது)  
 
அரும் சொற்பொருள்
 
நோம் = வருந்தும்
தாங்கி = தடுத்து
அமைதற்கு= உயிர் தங்கி வாழ்தற்கு

வேந்தன் அரசு

unread,
Mar 20, 2009, 6:21:41 PM3/20/09
to சங்கத்தமிழ்
குறுந்தொகை
 
5. நெய்தல் 
 
பாடியவர்: நரி வெரூஉ தலையார்
 
அதுகொல், தோழி! காம நோயே!
வதிகுருகு உறங்கும் இன் நிழல் புன்னை,
உடைதிரை திவலை அரும்பும் தீம் நீர்,
மெல்லம் புலம்பன் பிரிந்தென,
பல்இதழ், உண்கண் பாடு ஒல்லாவே!

(பிரிவிடை ஆற்றாள் என கவன்ற தோழிக்கு கிழத்தி உரைத்தது)
*இதுவோ தோழி, காம நோய் எனப்படுவது?
(வந்து) தங்கிய குருகுகள் உறங்கும் இனிய நிழலின் புன்னை மரமும்,
அலைகள் உடைவதால் திவலைகளாக அரும்பும் இனிய நீரும் கொண்ட‌ மெல்லிய புலமான நெய்தல் நிலத்து தலைவன் பிரிந்தான் என
 பல இதழ்களையுடைய பூவைபோன்ற மை உண்ட என் கண்கள் துயில் பெறுதல் பொருந்தாம‌ல் ஆயினவே!
 
அரும் சொற்பொருள்:

வதி குருகு = (மருத நிலத்து இருந்து வந்து நெய்தல் நிலத்து வந்து)தங்கிய‌ குருகு பறவை
உடைதிரை= கரையால் உடைபடும் திரை
பாடு = படுதல், உற‌க்க‌ம் பெற‌ல்
மெல்ல‌ம் = மென்மையான‌ நில‌ம்
புல‌ம்ப‌ன் ‍= நெய்த‌ல் நில‌ த‌லைவ‌ன்
ஒல்லாவே= பொருந்தாவே

வேந்தன் அரசு

unread,
Mar 21, 2009, 4:14:41 PM3/21/09
to சங்கத்தமிழ்
குறுந்தொகை
 
6. நெய்தல் 
 
பாடியவர்:பதுமனார்

நள்ளென்றன்றே யாமம்; சொல் அவிந்து
இனிது அடங்கினரே மாக்கள்; முனிவு இன்று
நனந்தலை உலகமும் துஞ்சும்;
ஓர்யான் மன்ற துஞ்சாதேனே!

(வரைவிடை வைத்து பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள் தோழியை நெருங்கி சொல்லியது)

*நள்ளிரவு (நடு இரவு) ஆனது என்று உணர்த்தும் யாமப்பொழுது; பேச்சு ஒழிந்து இனிமையாக உறங்குகின்றனரே மாந்தர்கள் யாவரும்; வெறுப்பு இல்லாமல், அகன்ற இந்த உலகமும் உறங்கும்;
ஒருத்தி நான் மட்டும் துயிலாதவளாக உள்ளேனே!


அரும் சொற்பொருள்:

நள் =  நடு, செறிந்த, நள் எனும் ஒசை
யாமம் = ஓர் அளவுள்ள நேரம்; ஜாமம், இரவு
மாக்கள் = மக்கள் ( இவள் துயரம் அறியாதவர் என்பதால் மாக்கள்)
நனந்தலை = அகன்ற இடம். நனம் = அகலம்
மன்ற = உறுதியாக
துஞ்சும் = துயிலும்
துஞ்சாதேன் = துஞ்சாத நான்


வேந்தன் அரசு

unread,
Mar 21, 2009, 4:44:12 PM3/21/09
to சங்கத்தமிழ்
குறுந்தொகை
 
7. பாலை
 
பாடியவர்: பெரும்பதுமனார்

வில்லோன் காலன கழலே; தொடியோள்
மெல்லடி மேலவும் சிலம்பே; நல்லோர்
யார்கொல்? அளியர்தாமே - ஆரியர்
கயிறு ஆடு பறையின் கால் பொர கலங்கி,
வாகை வெண் நெற்று ஒலிக்கும்
வேய்பயில் அழுவம் முன்னியோரே!

(செலவின்கண் இடைச்சுரத்து கண்டார் சொல்லியது)

*வில்லை ஏந்தியவன் கால்களில் உள்ளன வீரக்கழல்கள்;  வளை அணிந்தவளின் மெல்லிய அடிகளின் மேல் உள்ளன சிலம்புகள்; இந்த நல்லோர் யாரோ? இவர்கள் இரக்கத்திற்கு உரியவரே!  கழைகூத்தினர் கயிறு ஏறி ஆடுகையில் ஒலிக்கும் பறையின் ஒலியைப்போல் காற்று வீசும் போது கலக்கம் உற்று வாகை மரத்தின் வெண்ணிற நெற்றுக்கள ஒலி எழுப்பும், மூங்கில்கள் மண்டிய, இந்த காட்டை கடக்க நினைத்த இவர்களே!



அரும் சொற்பொருள்:

வில்லோன் = வில்லையுடையவன்
தொடியோள் = வளை அணிந்தவள்
நல்லோர் = நன்மை நிரம்பியோர்
கொல் = அசை
ஆரியர் = கழை கூத்தாடிகள்
அழுவம் = காடு, பரப்பு
நெற்று= உலர்ந்த பழம்
முன்னியோர் = கருதி (செயல்) மேற்கொண்டவர்கள்


வேந்தன் அரசு

unread,
Mar 22, 2009, 11:32:24 AM3/22/09
to சங்கத்தமிழ்
குறுந்தொகை
 
8. மருதம்
 
பாடியவர்: ஆலங்குடி வங்கனார்

கழனி மாஅத்து விளைந்து உகு தீம்பழம்
பழன வாளை கதூஉம் ஊரன்
எம்இல் பெருமொழி கூறி, தம்இல்
கையும் காலும் தூக்க, தூக்கும்
ஆடிப்பாவை போல,
மேவன செய்யும் தன் புதல்வன் தாய்க்கே!

(கிழத்தி தன்னை புறனுரைத்தாள் என கேட்ட காதல்பரத்தை அவளுக்கு பாங்காயினார் கேட்ப சொல்லியது)

* வயல் அருகில் நின்ற மாமரத்தின் முதிர்ந்து விழும் இனிய கனிகளை
பொய்கையில் உள்ள வாளை மீன்கள் கவ்வி உண்ணும் ஊரின் தலைவன், எம் வீட்டில் பெருமொழிகளை கூறி சென்றாலும், தன்னுடைய வீட்டில்,  (எதிர் நின்றவர்) கையும் காலும் தூக்க,  தானும் தூக்குகின்ற கண்ணாடியுள் பாவை போல், அவனுடைய மகனை ஈன்ற தாய்க்கு மட்டும் அவள் விரும்பியவற்றை செய்வான்!


அரும் சொற்பொருள்:

கதூஉம் = பற்றும்
ஊரன் = மருத நிலத்து தலைவன்
பெருமொழி = தற்பெருமை
ஆடி = கண்ணாடி
பாவை = ஆடியுள் நிழல்
மேவன = விரும்புவன


வேந்தன் அரசு

unread,
Mar 28, 2009, 5:45:08 PM3/28/09
to சங்கத்தமிழ்
குறுந்தொகை
 
9. நெய்தல்
 
பாடியவர்: கயமனார்
 
யாய் ஆகியளே மாஅயோளே;
மடைமாண் செப்பில் தமிய வைகிய‌
பெய்யாப்பூவின் மெய் சாயினளே;
பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்
இனமீன் இருங்கழி ஓதம் மல்குதொறும்
கயம் மூழ்கு மகளிரின் கண்ணின்மானும்
தண்ணம் துறைவன் கொடுமை
நம்மின் நாணி கரப்பாடும்மே!
 
(தலைமகனுக்கு தோழி வாயில் மறுத்தது)
 
* என் தாய் மாமை நிறம் ஆயினள்.
பெருமை உடைய சாடியில் தனியே வைக்கப்பட்டு
யாரும் சூடாத  பூவை போல இவள் மேனி வாடினாளே;
பசிய இலைகளிடையே உயர்ந்த திரட்சியான தண்டினை உடைய நெய்தல் மலர்கள்,
பல இனங்களாக‌ மீன்களை உடைய‌ பெரிய உப்பங்கழியின் அலைநீர் பெருகும்தோறும்
குளத்தில் மூழுகும் மகளிரின் கண்களைப்போல தோன்றும்,
குளிர்ந்த நீர்த்துறைக்கு உரிய தலைவனின் கொடுமையை
நம்முன் புலப்ப‌டுத்த நாணி மறைந்து நிற்பாளே!
 
அரும் சொற்பொருள்:
 
யாய் ‍‍= எம் தாய்
மாஅயோள் =மாயோள் (மாந்தளிர் நிற‌த்தின‌ள்)
மடைமாண் செப்பு = பொருந்துதல் அமைந்த செப்பு (Vase)
பெய்யாப்பூ = யாரும் சூடாத பூ
சாய் = மெலிந்து
பாச‌டை=ப‌சிய‌ இலைக‌ள்
க‌ணைக்கால் = திர‌ண்ட‌ த‌ண்டு
ஓத‌ம் = வீங்கு கடல் நீர் (Tide)
மானும் =ஒத்து இருக்கும்
கரப்பு =மறைந்து இருத்தல்
 

வேந்தன் அரசு

unread,
Mar 28, 2009, 6:10:59 PM3/28/09
to சங்கத்தமிழ்
குறுந்தொகை
 
10. மருதம்
 
பாடியவர்: ஓரம் போகியார்
 
யாய் ஆகியளே விழவு முதலாட்டி;
பயறுபோல் இணர பைந்தாது படீஇயர்
உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினை
காஞ்சி ஊரன் கொடுமை
கரந்தனள் ஆகலின் நாணிய வருமே!
 
(தலைமகனுக்கு தோழி வாயில் நேர்ந்தது)
 
*என் தாய் ஆயினள் இன்று விழவின் முன்னவள்;
பயற்றங்காய் போல் பூங்கொத்துக்களின் அழகிய தாது தங்கள் மேல் படியுமாறு
உழவர்கள் வளைத்த மணமிக்க பூக்களின் மென்மையான கொம்புகள் உடைய‌
காஞ்சி மரங்கள் கொண்ட‌ ஊரை உடைய தலைவனின் கொடுமையை
மறைத்து விட்டவள் ஆதலான், நீ நாணும்படி நின்னை எதிர்கொள்ள வருகிறாளே!
அரும் சொற்பொருள்:
 
யாய் = எம் தாய் ( இந்தபாடலில் தலைவி)
முதலாட்டி =  தலைமை பெற்ற‌வள்
இணர் = பூங்கொத்து
இணர = பூங்கொத்து உடைய‌
ப‌டீஇய‌ர் = ப‌டுவ‌த‌ற்காக‌
வாங்கிய‌= வ‌ளைத்த
தாது = ம‌க‌ர‌ந்த‌ம்
 
 

வேந்தன் அரசு

unread,
Apr 5, 2009, 5:55:19 PM4/5/09
to சங்கத்தமிழ்
குறுந்தொகை
 
11. பாலை

 
பாடியவர்:  மாமூலனார்

கோடு ஈர் இலங்கு வளை நெகிழ, நாளும்
பாடு இல கலிழும் கண்ணொடு புலம்பி,
ஈங்கு இவண் உறைதலும் உய்குவம்; ஆங்கே
எழு, இனி வாழி, என் நெஞ்சே! -  முனாது
குல்லைக்கண்ணி வடுகர் முனையது
வல்வேல் கட்டி நல்நாட்டு உம்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்,
வழிபடல் சூழ்ந்திசின், அவருடைய நாட்டே!

(தலைமகள் தன் நெஞ்சிற்கு சொல்லுவாளாய் தோழி கேட்ப சொல்லியது)

*அறுத்த சங்கின் (முன்கையில்) விளங்குகின்ற வளையல்கள் நெகிழுமாறு,  ஒவ்வொருநாளும்   உறங்குதல் இல்லாது அழும் கண்களுடன் புலம்பி,
இங்கே இவ்வாறு வாழ்ந்து கிடப்பதில் இருந்து நாம் தப்புவோம். இப்போதே
முற்பட்டு எழுக என் நெஞ்சமே, நீ வாழ்வாயாக!
 குல்லை மலர் கண்ணியை தலையில் சூடிய வடுகரின் பகைப்புலத்தே,
வலிய வேலினை உடைய ”கட்டி” என்பானின் நல்ல நாட்டுக்கு அப்பால்
வேற்று மொழி புழங்கும் நாட்டில், அவர்  இருப்பினும்,
அவனை நாடி அவருடைய நாட்டுக்கும் செல்வதை விரும்புவாய் எனின்! ( முற்பட்டு எழுக என் நெஞ்சமே)


அரும் சொற்பொருள்:

கோடு = சங்கு
ஈர் = அறுத்த
கலிழும் = அழும்
உய்த்தல் = தப்புதல்
இலங்கு = விளங்குகின்ற, ஒளிர்கின்ற
முனாது = முற்பட்டு உள்ள
குல்லை = கஞ்சக்குல்லை செடி
வடுகர் = வேங்கடத்தின் வடக்கே வாழ்பவர்
முனை = பகைப்புலம்
கட்டி =  கங்க நாட்டு தலைவன்
தேஎத்தர் = தேயத்தர் = நாட்டினர்
வழிபடல் = தொடர்ந்து செல்லல்





வேந்தன் அரசு

unread,
Apr 5, 2009, 6:14:15 PM4/5/09
to சங்கத்தமிழ்
குறுந்தொகை
 
12. பாலை
 
பாடியவர்:  ஓதலாந்தையார்

எறும்பி அளையின் குறும்பல் சுனைய
உலைக்கல் அனைய பாறை ஏறி
கொடுவில் எயினர், பகழி மாய்க்கும்
கவலைத்து என்ப, அவர் தேர் சென்ற ஆறே!
அதுமற்று அவலம் கொள்ளாது,
நொதுமல கழறும் இவ்வழங்கல் ஊரே!


* எறும்பு புற்று்களை போல சிறிய பல சுனைகளை உடைய
உலைக்கூடத்தின் பட்டடைக்கல்லின் வெம்மை ஒத்த பாறைகள் மீது ஏறி
கொடிய வில்லினை ஏந்திய வேட்டுவர், தம் அம்பினை கூர்மைக்காக தேய்க்கும்
பலவாக பிரியும் வழிகளை  கொண்டது என்பார்கள், என் தலைவன் சென்ற வழி!
அதனால் என்போல் கவலை கொள்ளாமல்
 புறங்கூறல் பலவும் சொல்லுமே ஆரவாரம் மிக்க இந்த ஊர்!


அரும் சொற்பொருள்:

எறும்பி = எறும்பு
அளை = வளை, புற்று
குறும்பல் = சிறிய பல
சுனைய = சுனையை உடைய
அனைய = ஒத்த
உலைக்கல் = கொல்லன் உலையில் உள்ள கல்
எயினர் = வேட்டுவர்
பகழி = அம்பு
அது மற்று = அதை (மற்று= அசைச்சொல்)
அவலம் = துயரம்
நொதுமலர் = புறங்கூறல், அயலார் பேசும் மொழி
அழுங்கல் = ஆரவாரம்








வேந்தன் அரசு

unread,
May 3, 2009, 2:51:36 PM5/3/09
to சங்கத்தமிழ்
குறுந்தொகை
 
12. குறிஞ்சி
 
பாடியவர்:  கபிலர்

மாசு அற கழீஇய யானை போல
பெரும்பெயல் உழந்த இரும்பிணர் துறுகல்
பைதல் ஒரு தலை சேக்கும் நாடன்
நோய் தந்தனனே - தோழி
பசலை ஆர்ந்த நம் குவளை அம் கண்ணே!

* புழுதி அற்றுபோகும்படி கழுவிய யானையை  போல
பெரிய மழையால் தாக்கப்பட்ட கரிய சொரசொரப்பான உருண்டையான கல்லின்
குளிர்ச்சியான மேற் பக்கத்தில் நம்மொடு தங்கி மகிழ்ந்த  தலைவன்
நம்மை நீங்கி  துயரம் தந்தானே - தோழி
அதனால் பசலை மிகுந்தனவே நமது குவளை போன்ற கண்கள்!


அரும் சொற்பொருள்:

மாசு = புழுதி
பெயல் = மழை
இரும் = கரிய
பிணர் = சுரசுரப்பு, சொரசொரப்பு
துறுகல் - உருண்டு திரண்ட கல்
பைதல் = குளிர்ச்சி
சேக்கும் = தங்கும்
நாடன் = தலைவனை குறிக்கும் ஒரு சொல்

வேந்தன் அரசு

unread,
May 3, 2009, 3:20:02 PM5/3/09
to சங்கத்தமிழ்
குறுந்தொகை
 
14. குறிஞ்சி
 
பாடியவர்:  தொல் கபிலர்

அமிழ்து பொதி செந்நா அஞ்ச வந்த
வார்த்து இலங்கு வை எயிற்று சில்மொழி அரிவையை
பெறுகதில் அம்ம யானே! பெற்றாங்கு
அறிகதில் அம்ம இவ்வூரே! மறுகில்
’நல்லோள் கணவன் இவன்’, என
பல்லோர் கூற யாஅம் நாணுகம் சிறிதே!

(’மடன் மா கூறும் இடனுமாருண்டே’ என்பதனால் தோழி குறை மறுத்துழி தலைமகன் ‘மடலேறுவல்’ என்பது பட சொல்லியது)

*அமிழ்தத்தின் இனிமையை நிரப்பிய செந்நிற நாவும், அஞ்சுதலை தரவல்ல
 வரிசையாக விளங்கும் கூரிய பற்களும் கொண்ட, சில மொழிகள் பேசும் தலைவியை
 மடலேறி பெறுவேன் நானே! அவளை நான் பெற்றதனை
அறியட்டும் இந்த ஊரே! தெருவில்
”அந்த நல்லவளுடைய கணவன்” இவன் என
பலரும் சொல்ல நானும்  சற்றே நாணம் பெறுவேனே!

அரும் சொற்பொருள்: 

பொதி = பொதிந்த
செந்நா = சிவந்த நா
அஞ்சவந்த =  அச்சம் தரும்
வார் = வரிசை
வை = கூர்
இலங்கு = விளங்கும், ஒளி பொருந்திய
எயிறு = பல்
அரிவை = ஒரு பருவத்து பெண்
தில் = விழைவு குறித்த ஒரு  இடைச்சொல் ( பெறுகதில் = பெறுவேன் ஆகுக)
மறுகு = தெரு
யாஅம்= யாம் = நான்
மடல் ஏறுதல் = ஆடவர்கள், பனை ஓலைகளால் செய்யப்பட்ட குதிரை மேல் அமர்ந்து புலம்பும் ஒருவகை வழக்கம்.


வேந்தன் அரசு

unread,
May 3, 2009, 3:50:12 PM5/3/09
to சங்கத்தமிழ்
குறுந்தொகை
 
15. பாலை
 
பாடியவர்:  அவ்வையார்

பறைபட, பணிலம் ஆர்ப்ப, இறை கொள்பு
தொல் மூதாலத்து பொதியில் தோன்றிய
நால் ஊர் கோசர் நல்மொழி போல,
வாய் ஆகின்றே- தோழி! - ஆய் கழல்
சேயிலை வெள்வேல் விடலையொடு
தொகுவளை முன்கை மடந்தை  நட்பே!

(உடன் போயின பின்றை, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றாள். நிற்ப, செவிலித்தாய் நற்றாய்க்கு அறத்தொடு நின்றது)

*பறைகள்  ஒலிக்கவும் சங்குகள் ஊதவும்  கூடி
பழைய முதிய ஆல மரத்தடி பொது மன்றத்தில்  உரைத்த
நான்கு ஊர் குடியினரா கோசர்களின் சூளுரை போல
உண்மையானதே தோழி- ஆய்ந்து செய்யப்பட்ட கழலும்
சிவந்த இலையுடன் வெள்ளிபோன்ற வேலினையும் உடைய தலைவனுடன்
தொகுப்பாக வளையல்களை முன் கையில் அணிந்த மடந்தையின் நட்பே!



அரும் சொற்பொருள்:
பறை பட = பறை அடிக்க
பணிலம் = சங்கு
ஆர்ப்ப = ஒலிக்க
இறை = தங்குதல்
கொள்பு = கொள்ள
மூதாலம் = மூது + ஆலம் = முதிய ஆலமரம்
பொதியில் = பொது மன்றம் , அம்பலம்
கோசர் = ஒரு வீர குடியினர்
நல்மொழி = வஞ்சினம், சூளுரை
வாய்  ஆகின்றே= வாய்மை ஆனதே
கழல் = ஆடவர் காலில் அணியும் அணி
சேயிலை= சே + இலை = வேலின் சிவந்த இலை,
வெள்வேல் = வெள்ளிபோல் ஒளிரும் வேல்
விடலை = பாலை நிலத்து தலைவன்
தொகுவளை = வளையல்களின் தொகுதி
மடந்தை = ஒரு பருவத்து பெண்

( மோகூர் பழையன் என்பானுக்கு மோரியர்களுடனான போரில் உதவுவோம் என்று உறுதி கொடுத்த கோசர்கள்  சொல்லிய சொல்லை நிறைவேற்றினார்களாம்)

வேந்தன் அரசு

unread,
May 3, 2009, 4:10:47 PM5/3/09
to சங்கத்தமிழ்
குறுந்தொகை
 
16. பாலை
 
பாடியவர்:  பாலை பாடிய பெருங்கடுங்கோ

உள்ளார் கொல்லோ தோழி! கள்வர்
பொன்புனை பகழி செப்பம் கொண்மார்
உகிர்நுதி புரட்டும் ஓசை போல
செங்காற்பல்லி தன் துணை பயிரும்
அங்காற் கள்ளி அம் காடு இறந்தோரே!

(பொருள்வயின் பிரிந்த இடத்து  தலைமகள் ஆறறாமைகண்டு, தோழி கூறியது)

*நம்மை  நினைத்து பார்க்க மாட்டாரா தோழி!  ஆறலை கள்வர்கள்
இரும்பால் புனையப்பட்ட அம்புகள் செம்மையாக உள்ளனவா என அறிய
தங்கள் நகங்களால் அதன்  நுனியை நெருடும் போது எழும் ஓசை போல்
சிவந்த கால்களை கொண்ட பல்லி தன் துணையை அழைக்கும்
அழகிய அடிப்பகுதியை உடைய கள்ளி  காட்டினை கடந்து செல்லும் நம் காதலரே?



அரும் சொற்பொருள்:

உள்ளல் = நினைத்தல்
கொல் = அசைச்சொல் (வியப்பு காட்டும்)
பொன் = இரும்பு
செப்பம் = கூர்மை
கொண்மார் = (கூர்மையை) காணும் பொருட்டு
உகிர் = நகம்
நுதி = நுனி
புரட்டும் = நெருடும்
பயிர்தல் = மீண்டும்  மீண்டும் அழைத்தல்
அங்காற் கள்ளி = அம் + கால் + கள்ளி
கால் = அடிப்பகுதி
கள்ளி = கள்ளிச்செடி
இறந்தோர் = கடந்து செல்வோர்


வேந்தன் அரசு

unread,
May 17, 2009, 3:32:54 PM5/17/09
to சங்கத்தமிழ்
குறுந்தொகை
 
17. குறிஞ்சி
 
பாடியவர்:  பேரெயின் முறுவலார்

மா என மடலும் ஊர்ப; பூ என
குவி முகிழ் எருக்கம் கண்ணியும் சூடுப;
மறுகின் ஆர்க்கவும் படுப;
பிறிதும் ஆகுப - காமம் காழ் கொளினே!

( தோழியின் கூட்டம் வேண்டி பின்னின்ற தலைமகன், தோழி குறைமறாமல் கூறியது)

* ஊரும் குதிரை போல்  கருதி (எவரும் ஊராத) புனையப்பட்ட பனை மடலை ஊர்வர். சூடும் பூ என கருதி (எவரும் சூடாத) குவிந்த அரும்புகளான எருக்கம் மாலையை அணிவர். தெருவில் பலராலும் ஆரவாரிக்கப்படுவார்.  பிற செயல்களும் செய்வார். காதல் வயிரம்போல் வலுப்பெற்றால்!


அரும் சொற்பொருள்:

மா  = குதிரை
மடல்  = பனை மடல்
முகிழ்  = அரும்பு
கண்ணி  = மாலை

மறுகு  = தெரு
காழ் = வயிரம், விதை

வேந்தன் அரசு

unread,
May 17, 2009, 3:58:15 PM5/17/09
to சங்கத்தமிழ்
குறுந்தொகை
 
18. குறிஞ்சி
 
பாடியவர்: கபிலர்

வேரல் வேலி வேர்க்கோள் பலவின்
சாரல் நாட! செவ்வியை ஆகுமதி!
யார் அஃது அறிந்திசினோரே- சாரல்
சிறுகோட்டு பெரும்பழம் தூங்கியாங்கு, இவள்
உயிர் தவச்சிறிது, காமமோ பெரிதே!

(இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகனை தோழி எதிர்பட்டு வரைவு கடாயது)

* மூங்கிலை வேலியாகவும், வேர்களில் பழுத்த பலா மரங்களை உடைய
 மலைச்சாரல்நாடனே!   ( தலைவியை மணக்கும்) தகுந்த காலத்தை உடையவன் ஆவாய்.
இந்த நிலைமை அறிந்தவர்தான் யாரோ? - மலைச்சாரலில்
சிறிய கொம்புகளில் பெரிய பழங்கள் தொங்குவது போல இவளுடைய
உயிரோ மிக சிறியது. ஆனால் இவளது காதலோ மிக மிக பெரியது


அரும் சொற்பொருள்:
வேரல் = சிறு மூங்கில்
கோள் = பற்றும்
சாரல் = பக்க மலை
கோடு = கொம்பு
தூங்கு = தொங்கு
செவ்வி = உற்ற நேரம்

வேந்தன் அரசு

unread,
May 17, 2009, 4:24:26 PM5/17/09
to சங்கத்தமிழ்
குறுந்தொகை
 
19. மருதம்
 
பாடியவர்: பரணர்

எவ்வி இழந்த வறுமையர் பாணர்
பூ இல் வறுந்தலை போல புல்லென்று
இனைமதி வாழிய நெஞ்சே! மனைமரத்து
எல்லுறும் மெளவல் நாறும்
பல்லிரும் கூந்தல் யாரளோ நமக்கே!

( உணர்ப்பு வயின் வாரா ஊடற்கண், தலைமகன் சொல்லியது)

வள்ளல் எவ்வியை இழந்ததால் வறுமையாராகி நின்ற பாணரது
பொற்றாமரை பூ இல்லாமல் வறுமையுற்ற தலை போல பொலிவிழந்து
நீயும் வருந்துவாயாக, வாழ்க என் நெஞ்சே! மனையில் மரத்தில் படரும்
இரவு மலரும் முல்லை மணம் கமழும்
பலவாகிய கரிய கூந்தலை உடைய இவள் யார் ஆனாளோ நமக்கே!



அரும் சொற்பொருள்:

எவ்வி = ஒரு வள்ளலின் பெயர்
பூ =  பொன்னால் தாமரை போல செய்யபப்ட்ட பூ. பாணருக்கு வள்ளல்கள் ஈவது
( அவர்கள் தலையில் சூடிக்கொள்வார்கள்)
புல் = பொலிவு அற்று
இனை மதி= வருந்து வாயாக
மனை = இல்லம்
எல் = இரவு , ஒளி
உறும் =  உற்ற
மெளவல்= முல்லை 

வேந்தன் அரசு

unread,
May 17, 2009, 4:36:22 PM5/17/09
to சங்கத்தமிழ்
குறுந்தொகை
 
20. பாலை
 
பாடியவர்: கோப்பெரும்சோழன்

அருளும் அன்பும் நீக்கி, துணை துறந்து
பொருள்வயின் பிரிவோர் உரவோர் ஆயின்
உரவோர் உரவோர் ஆக!
மடவம் ஆக மடந்தை நாமே!

(செலவு உணர்த்திய தோழிக்கு, கிழத்தி உரைத்தது)

* நம் மேல் கொண்ட அருளையும் அன்பையும்  ஒழித்து, நம் துணையையும் துறந்து
பொருளை தேடும் நோக்கொடு நம்மை பிரிவதை ஆற்றவல்லவர் ஆயின்
ஆற்றல் உடையவர்கள் ஆற்றலை உடையவராகவே இருக்கட்டும்
ஆற்றவல்லாமல் அறிவற்றவர்களாகவே  இருப்போம்  மடந்தையரான நாமே!

அரும் சொற்பொருள்;

அருள் = தொடர்பு இல்லாதார் மேல் தோன்றும் பரிவு
அன்பு = தொடர்புடையவர் மேல் தோன்றும் காதல்
உரவோர் = வலியவர்
மடவம் = அறிவில்லாத நாம்







Reply all
Reply to author
Forward
0 new messages