Wait, *
Animated Picture
03-08-2022
திருச்சி .பிரசன்னாவின் இன்றைய குறுந்தகவல்
*இன்றைய குட்டிக்கதை*
வஞ்சகத்தால் வெல்ல நினைப்பவர்களை வஞ்சகத்தாலேயே வெல்ல நினைப்பது ஒன்றும் தவறல்லவே...
*பகிர்வு - தகவல் உலா✍️*
ஒரு சிறிய கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் இருந்தான். அவ்வூரில் பண பலத்திலும், அடியாள் பலத்திலும் உயர்ந்திருந்த ஒருவனிடம் இந்த விவசாயி கடன் பட்டிருந்தான். வட்டியும் முதலுமாய் கடன் ஏராளாமாய் ஏறிக்கொண்டே இருந்தது.
விவசாயின் அழகான மகள் மீது அந்தப் பணக்காரனுக்கு ஒரு கண். கடனைத் திருப்பிக் கேட்கும் சாக்கில், அவன் விவசாயியிடம்,
"இன்னும் ஒரு வார காலத்தில் வட்டியுடன் முழு கடனையும் திருப்பித் தரவேண்டும். இல்லாவிட்டால் உன் மகளைத் திருமணம் செய்து கொடுத்துவிடு; கடனை முழுவதுமாகத் தள்ளுபடி செய்து விடுகிறேன்" என்கிறான்.
விவசாயியால் பணத்தைத் தர முடியவில்லை; மகளை அவனுக்குத் தரவும் மனமில்லை. என்ன செய்வது என்று தவித்தான். அவனுடைய பெண்ணுக்கு அந்த எண்ணமே எரிச்சலும் கசப்புமாக இருந்தது. பணக்காரனை எப்படிச் சமாளிப்பது என்ற சிந்தனையிலேயே இருந்தாள்.
ஒரு வாரம் கழிந்து, பஞ்சாயத்தைக் கூட்டிவிட்டான் பணக்காரன். கூடியிருந்த கிராம மக்கள் முன்னிலையில், கீழே கருப்பும் வெளுப்புமாகப் பரவிக் கிடந்த சிறுசிறு கூழாங்கற்களைக் காட்டினான்.
"பாருங்கள்! வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களில் கூழாங்கற்கள் கிடக்கின்றன. ஒரு வெள்ளை மற்றும் ஒரு கருப்பு கூழாங்கல் என இரண்டை எடுத்து இந்தப் பையில் நான் போடுகிறேன். அந்தப் பெண்ணே பையிலிருந்து ஒரு கல்லை எடுக்கட்டும். அவள் கருப்புக் கல்லை எடுத்தால் என்னை மணந்து கொள்ள வேண்டும்; மாறாக வெள்ளைக் கல்லை எடுத்தால் மணம் முடிக்கத் தேவையில்லை; எனக்குப் பணமும் தேவையில்லை..." என்றான்.
பஞ்சாயத்தும் மேற்படி உடன்பாட்டை ஒப்புக்கொண்டது. அவன் இரு கற்களை எடுத்துப் பை ஒன்றில் போட்டான். பையை நன்கு குலுக்கிவிட்டு,அந்தப் பெண்ணிடம் பையை நீட்டி, "நீயே ஒன்றை எடு..." என்றான்.
வஞ்சக எண்ணம் உடைய அவன் கற்களைப் பையில் போட்டபோது, யாரும் கவனிக்க முடியாத ஒன்றினை அந்தப் பெண் கவனித்து விட்டாள். அவன் இரண்டு கருப்புக் கற்களைத்தான் பையில் போட்டிருக்கிறான்.
அவள் எந்த ஒன்றை எடுத்தாலும் அது கருப்பாகத்தான் இருக்கும். அவனைத் திருமணம் செய்வது தவிர வேறு வழியே இல்லை.
அந்தப் பெண் தான் செய்ய வேண்டியதை சில நொடிகளில் முடிவு செய்துவிட்டாள்.
அவனிடமிருந்து வாங்கிய பையில் இருந்து ஒரு கல்லை, கையை மூடியவண்ணம், எடுத்தவள் கை நழுவி விழுந்ததைப்போல் அந்தக் கல்லை வேண்டுமென்றே தவறவிட்டாள். எடுத்த கருப்புக் கல் கீழே வீழ்ந்து, தரையில் கிடந்த பிற கற்களுடன் கலந்துவிட்டது.
அந்தப் பெண் சொன்னாள், "ஐயோ! மன்னிக்க வேண்டும், கை தவறிக் கல் கீழே விழுந்துவிட்டது. எந்த நிறக் கல்லை எடுத்தேன் என்று கண்டு பிடிக்கமுடியவில்லை. அதனால் என்ன பரவாயில்லை. இப்போது பையில் இருக்கும் கல்லைப் பார்க்கலாம். அதைப் பார்த்தாலே நான் எடுத்த கல் என்ன நிறம் என்பது உறுதியாகி விடும்..." என்று சொல்லியவாறு, பைக்குகள் கை விட்டாள்.
பைக்குள் இருந்த கருப்புக் கல்லை எடுத்து எல்லோரும் பார்க்கும்படி காட்டினாள்.
"பாருங்கள், உள்ளே கருப்புக் கல் தான் இருக்கிறது. எனவே நான் எடுத்தது வெள்ளைக் கல்தான் என்பது உறுதியாகிவிட்டது.ஆகவே அவர் சொன்னபடி, திருமணமும் இல்லை பணமும் இல்லை" என்று சொல்லிவிட்டு தன் தந்தையையுடன் நடக்க ஆரம்பித்தாள்.
திருடனுக்குத் தேள் கொட்டியது போல, விழித்தபடி நின்றிருந்தான் அந்தப் பணக்காரன்!
திருச்சி நா.பிரசன்னா
=