புளியமர திண்ணை |
Posted: 14 Aug 2014 07:07 PM PDT வழக்கம் போலவே கோவிந்தராஜன் கடைமுன் ஓரமாக ஒதுங்கி நின்று கெஞ்சலாக முதலாளியின் பார்வைக்காக காத்திருந்தான். ஆயிரம் முறைக்கு குறையாத சலவைக்கு போன அடையாளம் தாங்கி நின்ற துளைகள் கோர்த்த ரின் சோப்பு முண்டா பனியன், அவன் ரின் சோப்புக்கு காசு வாங்காத விளம்பர தூதுவன் என்பதை சொன்னது.
"இன்னைக்கு ஐநூறு சீட்டுக்கு கொறைஞ்சுது நாளைக்கு நீ கடைப்பக்கம் வராத"ன்னு மிரட்டி முன்னால் நின்றிருந்த காசிக்கு ஒரு சீட்டு கட்டை கொடுத்தார் கோவிந்தராஜன். அவன் தனக்கே பரிசு விழுந்தது போல் மகிழ்சியில் கடவுள் தன் இருகரங்களால் அள்ளிக்கொடுத்த ஒரு கரத்தினால் அதை வாங்கிக்கொண்டு அவசரமாக எங்கோ சென்றான். அடுத்தது தலையை படிய வாரி நெற்றி முழுதும் திருநீரு பட்டை அணிந்து வெள்ளை அரைக்கை சட்டையும் காவி வேட்டியும் அணிந்து நின்ற சாமிக்கண்ணுவிடம் சிறிதும் பெரிதுமாக சில கட்டு சீட்டுக்களை எதுவுமே பேசாமல் கொடுத்தார் கோவிந்தராஜன். அதை தன் கை இடுக்கில் வைத்திருந்த மஞ்சள் நிற கைப்பைக்குள் சீட்டுகள் வகை தொகை வாரியாக அடுக்கி வைத்துக்கொண்டே நகர்ந்தார் ஏதோ பாடலை மெல்ல பாடிக்கொண்டே. அது எங்கேயோ கேட்ட பக்தி பாடல் போல இருந்தது. கடைசியாக அவர்கண்ணில் பட்டான் "கோடி". அவனை தனது ஓரக்கண்ணால் மேலிருந்து கீழாக பார்த்து "நேத்து வாங்குன சீட்டுக்கட்டு பணமெங்கே?" என கேட்டார் கோவிந்தராஜன். தன் இடுப்பைச்சுற்றி கட்டியிருந்த பச்சை நிற பெரிய கச்சையின் பட்டனை திறந்து எதையோ எடுத்தான். நன்றாக பாலித்தீன் பைக்குள் மடக்கி வைத்திருந்த ஒரு ரூபாய் தாள்களும் ஐந்து ரூபாய் தாள்களும் சேர்ந்த பணச்சுருளை எடுத்து கொடுத்தான் கோவிந்தராஜனிடம். "ராத்திரி போகும்போதே கணக்கு செட்ல் பண்ணிட்டி போகவேண்டியது தானெ?" என்றார் கோவிந்த ராஜன். "சீட்டு கொஞ்சம் மிஞ்சி போயிட்டுதுங்க. அத ரெண்டாவதாட்டம் சினிமாவுல முடிச்சுட்டு வர நேரமாகிருச்சுங்க" என்றான் குரலை தாழ்த்தி மரியாதையுடம். "கமிசனுக்கு காசு வாங்கிக்கிறயா, இல்ல சீட்டா வாங்கிக்கிறயா?" என்றார் கோவிந்தராஜன். "சீட்டா குடுத்துருங்க சாமி.. இன்னைக்கி வித்து காச வாங்கிகிறேன்" என்றான் கோடி. கோடி.. அவன் முதலில் லாட்டரி சீட்டு விற்க ஆரம்பித்த போது அவன் பெயர் சின்னக்குமார். ஏதோ காரணத்தால் அவன் கோடி ரூபாய் சீட்டுகளைத்தான் விற்க முடிவெடுத்து வேறு சீட்டுகளை விற்பதை நிறுத்தி விட்டான். தான் விற்ற சீட்டில் கோடி ரூபாய் விழுந்தால் தனக்கு அதிகம் கமிசன் கிடைக்கும் என்றோ அல்லது விற்க்காது தன்னிடம் தங்கிய சீட்டில் பரிசு விழுந்தால் தான் கோடீஸ்வரன் ஆகிவிடலாம் என்ற எண்ணமோ கூட காரணமாய் இருக்கலாம். இன்றுவரை அவன் பெயரில் தான் கோடியை வென்றிருக்கிறான். சீட்டுக்கட்டுகளை வாங்கிக் கொண்டு ஓரமாக வைத்திருந்த அதிர்ஸ்ட லட்சுமி நாளிதலை எடுத்துக்கொண்டு அவனும் அன்றைய நாளைத் தொடங்கினான். தனக்கென்று சில ரெகுலர் கஸ்டமர்கள் வைத்திருக்கிறான். ஒன்றிரண்டு பேருக்கு அவன் விற்ற சீட்டில் 1000 ரூபாய் 5000 ரூபாய் என பரிசுகள் விழுந்திருக்கின்றன. சிலருக்கு ஆறுதல் பரிசாக 500 ரூபாய் வரை விழுந்திருக்கிறது. அதனால் அவனிடம் சீட்டு வாங்குவது தங்களுக்கு அதிர்ஸ்டம் என நம்புபவர்களை நம்பித்தான் அவன் வாழ்க்கை ஓடுகிறது. இந்த முறை சீட்டுக்களின் எண் வரிசையை தான் தேர்ந்தெடுத்து வாங்கியிருப்பதாகவும் நிச்சயம் இந்த முறை பரிசு விழும் என அடித்து சொல்லிக்கொண்டிருந்தான் தன் வாடிக்கையாளரிடம். ஒவ்வொரு முறையும் அவன் இப்படித்தான் சொல்லுகிறான் என்பதை நையாண்டி செய்து விட்டு தனக்கு இரண்டு சீட்டுகளை எண்கள் சரி பார்த்து வாங்கிக் கொண்டார் அவர். அடுத்த வாரம் தீபாவளி ஸ்பெசல் குலுக்கள் இரண்டு கோடிக்கான சீட்டுகள் வரப்போகிறதாகவும் அடுத்தவாரம் வந்து பார்ப்பதாகவும் சொல்லிவிட்டு அடுத்த வாடிக்கையாளரை தேடிச்சென்றான். "மருத மலை மா முனியே" என முருகன் பாட்டை பாகவதர்போல பாடிக்கொண்டே தன்னுடைய வாடிக்கையாளரிடம் தன் சீட்டுக்களை விற்றுக் கொண்டிருந்தார் சாமிகண்ணு. அவருடைய தோற்றம் வாடிக்கையாளர்களை அவர் கையில் சீட்டு வாங்கிக் கொண்டால் அதிர்ஸ்டம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சீட்டுக்களை வாங்கச் செய்தது. காசி, கோவிலுக்கு முன் உட்கார்ந்து கொண்டு மகா லட்சுமி 50 லட்சம் நாளை குளுக்கல், மகா லட்சுமி 50 லட்சம் என் வரும் பக்தர்களை பார்த்து சொல்லிக்கொண்டிருந்தான். உறுப்புகள் இருந்தும் பிச்சை கேட்கும் மனிதர்கள் நடுவில் ஒரு கையை இழந்தும் பிச்சை எடுக்காமல் லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த காசின் நம்பிக்கையய் பார்த்தும் அவன் மீது பரிதாபம் கொண்டும் சீட்டுக்களை வாங்கிச் சென்றனர் பக்த கோடிகள். |
Posted: 14 Aug 2014 07:06 PM PDT சுதந்திரம்...கொடியேற்றி ஆரஞ்சு மிட்டாயுடன் முடிந்துவிடும் ஒரு சடங்கான நிகழ்வகிப்போன பிறகு, ஆளும் அரசாங்கம் தான் சுதந்திரத்தை பெற்றுதந்தது போல எங்கெல்லாம் சுதந்திரம் பற்றி விமர்சனம் எழுகிறதோ அங்கெல்லாம் தண்டைகாரர்களாகி கம்பு சுத்துவது தேசப்பற்றாகாது. காந்தி , நேரு மட்டுமல்ல, எங்கள் தாத்தனும் முப்பாட்டனும் சுதந்திர நாட்டிற்காக தியாகங்கள் செய்திருக்கிறார்கள். அதற்க்காக இந்த சுதந்திரத்தை நீங்கள் எப்படி கொண்டாட வேண்டும் என்று நான் சொல்ல முடியாது.. அதே போல் என்னிடம் நீங்கள் எதையும் எதிர்பார்க்க முடியாது..எங்கள் விமர்சனம், விசனம் எல்லாம், ஒரு தகப்பனை போல் நடந்து ஈழ மக்களை கப்பற்றியிருக்க வேண்டிய தேசம், கண்ணை மூடிக்கொண்டும் கருணையே இல்லாமல் எம் உறவுகளை அழிக்க அத்தனை உதவிகளை செய்து கொண்டு ஒரு கொலை காரனாய் எங்கள் முன் நின்று கொண்டு, நீ கேட்கும் மரியாதையை இந்த அரசுக்காக என்னால் செய்ய முடியாது. இந்த சுதந்திரம், இந்த அரசு பெற்றுக்கொடுததல்ல.. அது என் பாட்டன் வழி சொத்து. எனக்கான உரிமை வேறு எவர் கொடுத்ததும் வந்ததில்லை. போரில் இறந்த சிங்கள சிப்பாய்களின் உடலுக்கும் அவர்களின் மரணத்திற்கும் மரியாதையை தந்தவர், தலைவர். அவர்களின் சுதந்திரத்தையும் மதித்தவர், மதிக்க கற்றுகொடுதவர். எதிரியின் சுதந்திரத்திற்கே மரியாதை கொடுத்த இனம், இன்னொருவர் சுதந்திரத்தை எப்போதும் அவமதிக்காது. நாட்டிற்காக தமது உயிரை தியாகம் செய்த ஈகிகளுக்கும் இன்னும் எல்லையில் காவல் நிற்க்கும் எமது காவல் தெய்வங்களுக்கும் இந்த சுதந்திர தினத்தில், எமது வணக்கம். மற்றபடி எம் இனத்தை கொலை செய்து கொண்டாடிய அனைவர்க்கும்.... போ.. போ..பிழைத்து போ...உங்களுக்கு உயிர் பிச்சை போட்டு உங்களுக்கு சுதந்திரம் கொடுத்தாகிவிட்டது..கொண்டாடுங்கள்... |
You are subscribed to email updates from புளியமர திண்ணை
To stop receiving these emails, you may unsubscribe now. |
Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |