படிக்கவே அனுப்பிப் பெற்றோர்ப் பயத்துடன் இருக்கும் ஆசை
அடிக்கவா அறிவை ஊட்டி அனுதினம் வளர்த்தார் ஆசான்?
வெடிக்குதே மனமும் ஏனோ விடியலின் சமயம் செய்தி
படித்ததும் எனக்கும் தானே படிப்பவர் செயலை எண்ணி
அறிவிலார் நிகழ்த்தும் பாவம் அனைத்தையும் படித்துப் பார்த்தால்
அறிவுளோர் அடைவர் சோகம்; அவர்களின் குறைகள் என்ன?
நெறிகளை முறையாய்க் கற்றால் நிலத்தினில் குருதி சிந்தி
வெறியுடன் அலைந்துக் கொல்லும் வெகுளியும் வருமா முந்தி?
தடியுடன் அரிவாள் கொண்டு தலையினை உடனே வெட்டி
முடிவுரை எழுதிச் சென்று முடிவிலே அவர்தம் பெற்றோர்
முடிவிலா இருளில் வாழ முடிந்ததே இவர்கள் கற்றப்
படிப்பினில் இருந்து நாமும் படிப்பினைப் பெறுவோம் இன்றே!
தவறுகள் நடக்கா வண்ணம் தணிந்துதான் தடுத்தார் ஆசான்
கவலைகள் பயமும் இன்றிக் கலைகளாய்க் கொலையும் ஆச்சு
அவலமும் வருதல் நோக்கி அமைதியாய் நடந்தால் என்ன?
எவருமே உதவ மாட்டார் இனிவரும் பலன்தான் என்ன?
எழுத்தினை அறியச் செய்த இணையிலா அறிஞர் ஆசான்
கழுத்திலே அரிவாள் வைக்கக் கடுமனம் வருதல் மோசம்
அழுத்திடும் விழியில் பொங்கும் அழுகையில் எழுதிப் பாட
வழுத்தியே விளிக்கும் ஆசான் வலியினை நினத்துப் பார்க்க!
தியாகமும் நிரம்பச் செய்து தினம்தினம் வறுமை தாங்கி
வியாதிகள் பெருகக் கண்டும் விடியலாய் உனையே ஏங்கி
மயானமும் அழைக்கும் காலம் வரைக்குமே பொருளை ஈட்டி
நியாயமாய் அளித்த பெற்றோர் நினைவினில் வராமல் போச்சே!
படித்துநீ பெறுதல் பட்டம் படித்திட விரும்பும் பாரும்
துடித்திடும் கொலையைக் கற்கத் துணையது எவரோ கூறும்?
குடித்திடும் மதுவா? உள்ளம் குடிபுகும் விழியாள் தானா?
கெடுத்திடும் கொலைவெறி உன்னில் கொணர்ந்திட வளர்த்தாய்த் தானாய்!
“கவியன்பன்” கலாம்