சென்னை:நடப்பாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ள, தமிழகப் பயணிகளை தேர்வு செய்ய, வரும் 18ம் தேதி, சென்னையில் குலுக்கல் நடக்கிறது.ஹஜ் பயணம் செல்ல, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள், தமிழ் மாநில ஹஜ் குழுவால் பெறப்பட்டுஉள்ளன.
இதில், 2015ம் ஆண்டிற்கான, ஹஜ் பயணிகளை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய, மும்பை இந்திய ஹஜ் குழு உத்தரவிட்டுள்ளது.அதன் அடிப்படையில், ஹஜ் பயணிகளை தேர்வு செய்வதற்கான குலுக்கல், வரும் 18ம் தேதி, காலை, 10:30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, புதுக் கல்லுாரியில் உள்ள, ஆனைக்கார் அப்துல் கக்கூர் அரங்கில் நடக்கும்.
இதில், தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் விண்ணப்பித்துள்ள பயணிகள் கலந்து கொண்டு, நிகழ்ச்சி அமைதியாக நடக்க ஒத்துழைக்க வேண்டும் என, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலர் தெரிவித்துள்ளார்.