நல்லாசிரியர் விருது பெற்றனர் சங்கத்தின் தமிழாசிரியர்கள்
தாய்மொழியை சுவாசிப்போம்...! எம் தமிழை நேசிப்போம்...!! என்ற முழக்கத்துடன் குவைத் வாழ் தமிழ் பிள்ளைகள் முறையாகவும், தெளிவாகவும், எளிமையாகவும் தாய்மொழியாம் தமிழ் மொழியை ஜாதி, மத பேதமின்றி கற்றிட குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் தமிழ் மொழி பயிற்சி வகுப்புகள் சால்மியாவில் உளள அல் ஃபத்ஹ் திருக்குர்ஆன் & மொழிகள் பயிற்சி மையத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கடந்த இரண்டாண்டுகளாக நடைபெற்று வருகின்றன.
இவ்வகுப்புகள் முறைப்படுத்தப்பட்ட பாடத் திட்டத்துடன் 25 வாரங்களுடன கூடிய ஆறு மாதங்கள் படிப்பாக நடைபெறும். வாட்ஸ்அப் குழுமம் வாயிலாக சிறப்பு பயிற்சியும், மேடைப்பேச்சு பயிற்சியும் வழங்கப்படுகின்றன. ஆண்டுத் தேர்வுகள் & போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் & சான்றிதழ்கள் வழங்கப்படுவதுடன் ஒவ்வொருவருக்கும் தனிக் கவனம் செலுத்தப்படுகின்றது.
தாய்மொழிக்கான இச்சேவையைப் பாராட்டி, சங்கத்தின் தமிழாசிரியர்களை கவுரவிக்கும் வகையில் குவைத் தமிழோசை கவிஞர் மன்றம் "நல்லாசிரியர் விருது" பாராட்டுப் பேழையை ஆசிரியர் தின கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக தமிழோசையின் 152வது மாதந்தோறும் மகிழ்வோம் நிகழ்வில் அதன் பொறுப்பாளர்கள் வழங்கினர்.
சங்கத்தின் பொதுச் செயலாளரும், தமிழாசிரியருமான பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ அதனை பெற்றுக் கொண்டார். சங்கத்தின் சேவைக் குழு செயலாளர் நீடுர் கே. முஹம்மது சித்தீக், இலக்கியக் குழு செயலாளர் விட்டுக்கட்டி மஸ்தான் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
--------------------------------------
கருத்து முரண்பாடுகளை களைவோம்! களமிறங்கி செயலாற்ற ஒன்றிணைவோம்!!
சமூகப் பிணிகளை நீக்குவதே நம் சமூகப் பணிகளாக இருக்கட்டும்!!!
குவைத்திலிருந்து...
பறங்கிப்பேட்டை கலீல் பாகவீ