புதுடெல்லி, மார்ச் 31-
1993-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் புதுடெல்லியில் நிகழ்ந்த
குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் காலிஸ்தான்
விடுதலைப் படை என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்த தேவிந்தர் பால்சிங்
புல்லருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இறுதியில், 2003-ம் ஆண்டு
குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை அனுப்பினார். அதை 8 ஆண்டுகளுக்கு பிறகு
2011-ம் ஆண்டு மே 14-ம் தேதி குடியரசுத் தலைவர் நிராகரித்தார்.
இதனையடுத்து அவரது மனைவி நவ்னீத் கெளர் மனநிலை சரியில்லாத தனது கணவருக்கு
விதிக்கப்பட்ட மரணதண்டனையை ரத்து செய்யவேண்டும் என்று மீண்டும் மனு தாக்கல்
செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இம்மனுவை விசாரித்த
பி.சதாசிவம் தலைமையிலான உச்சநீதிமன்றம் நவ்னீத்தின் கோரிக்கையை ஏற்று
புல்லரின் மரணதண்டனையை ஆயுள்தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது.
புல்லரின் கருணை மனு மீது குடியரசுத் தலைவர் முடிவு எடுக்க தாமதமானதை
சுட்டிக்காட்டி இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேவேந்தர் பால்சிங்
புல்லருக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது. மனநிலை பாதிக்கப்பட்டவரை தூக்கில் போடக்கூடாது என்ற
அடிப்படையிலும் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
http://www.maalaimalar.com/2014/03/31112722/Bhullar-death-sentence-reducti.html