கற்றல் இழப்புக்கு எதிராக போராடுவோம்.! - தேனி சுந்தர் (இந்து தமிழ் நாளிதழ் கட்டுரை)

2 views
Skip to first unread message

Theni Sundar

unread,
Apr 29, 2022, 3:58:34 AM4/29/22
to tnsf, tnsfeducation, pondicherry-science-forum, kupk

இந்த கொரானா பெருந்தொற்று காலத்தில் கல்வி தொடர்பாக பெரிதும் பேசப்பட்ட வார்த்தைகள் இவை : கற்றல் இழப்பு. கற்றல் இடைவெளி..! இந்த இரண்டாண்டுகளில் கற்றல் இழப்பு குறித்து பெரிய அளவில் விவாதிக்கப்பட்டதற்கு காரணம் அனைத்துத் தரப்பினரின் குழந்தைகளும் பாதிக்கப்பட்டது தான். அதிகாரம், செல்வாக்கு உடையவர்களின் குழந்தைகளும் இதில் பாதிக்கப் பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டில் முதல்வரின் தனிப் பிரிவிற்கு ஆசிரியர் கூட்டணியின் தீனன் உள்ளிட்ட சில நண்பர்கள் மனு கொடுத்திருந்தனர். மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் செயல்படும் பள்ளிகளில் 50க்கும் மேற்பட்டவை கடந்த பத்தாண்டுகளாக ஓராசிரியர் பள்ளிகளாக இயங்கி வருகின்றன. அந்த ஆசிரியர் பணியிடங்கள் உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை..!

அதற்கு சம்பந்தப்பட்ட நிர்வாகம் கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலம் இது : மொத்தமுள்ள 76 இடங்களில் 12 இடங்கள் சமீபத்தில் நிரப்பப் பட்டுள்ளன. மீதமுள்ள இடங்கள் விரைவில் நிரப்பப்படும். ஆக, கல்வி உரிமைச் சட்டம் மிக தீவிரமாக அமல் படுத்தப்பட்ட இந்த பத்தாண்டு காலமும் தொடர்ந்து நிலவி வந்த அவலம் இன்னும் முடியவில்லை. 50க்கும் மேற்பட்ட இந்த பள்ளிக் குழந்தைகளுக்கு எந்த அளவிற்கு கற்றல் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்..

ஓராசிரியர் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, மத விடுப்பு, ஈட்டிய விடுப்பு எடுக்கும் போதெல்லாம் மாற்றுப் பணிக்கு இரண்டு முதல் நான்கைந்து ஆசிரியர்கள் பணி புரியும் பள்ளியில் இருந்து ஆசிரியர்கள் அனுப்பி வைக்கப் படுவர்.

அப்படி செல்லும் போதெல்லாம் ஒன்று முதல் ஐந்து வகுப்புகள் வரையிலும் ஒன்றாக வைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டி வரும். அந்த நாட்களில் எல்லாக் குழந்தைகளையும் அமைதியாக உட்கார வைப்பது. சண்டை, சத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்வதுடன் வாய்ப்பு இருந்தால் "ஒன்று, இரண்டு 100 வரை எழுதுங்க.. 200 வரை எழுதுங்க.. ஏபிசிடி எழுதுங்க.. கஙச எழுதுங்க.." என்பது போன்ற பொதுவான கற்றல் செயல்பாடுகள் தான் கொடுக்க முடியும்..! அப்போது அந்தந்த வகுப்பு குழந்தைகளுக்கு ஏற்படும் கற்றல் இழப்பை நாம் எவ்வாறு கணக்கிட முடியும்??

மேலும் ஆசிரியர்களுக்கு நடைபெறும் பயிற்சிகள், அனைவருக்கும் கல்வி இயக்கம், வட்டார கல்வி அலுவலர், சுகாதாரத் துறை, இன்ன பிற சிறப்புக் கூட்டங்கள் நடக்கும் போதெல்லாம் இதே போல மாற்றுப் பணியில் இன்னொரு பள்ளியில் இருந்து ஆசிரியர்கள் ஓராசிரியர் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப் பட வேண்டும்..

அரசு பள்ளி குழந்தைகளுக்கு விலையில்லா பாடநூல், குறிப்பேடுகள், சீருடைகள், காலணிகள் என பத்திற்கு மேற்பட்ட பொருட்கள் வழங்கப் படுகின்றன. இந்த பொருட்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தான் சென்று கையெழுத்துப் போட்டு பெற்று வர வேண்டும் என்கிற நிலைமை இன்னும் தொடரவே செய்கிறது..

இந்த பொருட்கள் அனைத்தும் ஒரே நாளில் வழங்கப் பட்டு விட்டால் ரொம்ப நல்லது தான். மூன்றாம் வகுப்பு இரண்டு நூல்களில் தொகுதி 1 இருக்கும். தொகுதி 2 இருக்காது. அதுக்கொரு நாள் போகணும்.. சட்டை இருக்கும்.. கால் சட்டை இருக்காது. அதற்கொரு நாள் போக வேண்டும். அப்போதெல்லாம் அந்த ஓராசிரியர் பள்ளி தலைமை ஆசிரியர் போக வேண்டும். அவர் போகும் நாளெல்லாம் இன்னொரு பள்ளி ஆசிரியர் மாற்றுப் பணியில் போக வேண்டும். மூன்று பருவங்கள்.. எத்தனை வகுப்புகள்.. எத்தனை பாடநூல்கள், குறிப்பேடுகள்..?! அத்தனை நாள்களும் அந்த குழந்தைகளுக்கு ஏற்படும் கற்றல் இழப்பை நாம் எவ்வாறு கணக்கிட முடியும்..?!

இது போக அலுவலக படிவங்கள் நிரப்பிக் கொடுப்பதற்கு என்றே போகும் நாட்கள் எத்தனை எத்தனை..?? 

உதாரணத்திற்கு ஆசிரியர்கள் படிவங்களை நிரப்பிக் கொடுக்கவும் அதை சரிபார்க்கவும் திருத்தவும் என பலமுறை தலைமை ஆசிரியர் கூட்டங்கள் நடக்கின்றன. அப்போதெல்லாம் இதே போல மாற்றுப் பணியில் ஆசிரியர்கள் அனுப்புவது வழக்கம். இப்படி ஒரே ஒரு விசயத்திற்கு மட்டுமே ஆயிரக்கணக்கான "ஆசிரியர் வேலை நாட்கள்" பாதிக்கப் படுகின்றன. வசதிகள் நவீனமயம் ஆகும்போது செய்ய வேண்டிய பணிகள் எளிமைப் படுத்தப் பட வேண்டாமா..?! இது வெறும் நிர்வாகப் பிரச்சினை மட்டும் அல்ல.. முதன்மையாகக் குழந்தைகளின் கல்விப் பிரச்சினை ஆகும். இதை அனுமதிக்கலாமா..?!

எந்த ஒரு சூழலிலும் ஒரு பள்ளியை நம்பி வந்த குழந்தை எந்த வித கற்றல் இழப்பிற்கும் ஆளாகாமல் செல்வதை உறுதிப் படுத்த வேண்டும். 

ஆசிரியர்கள் தங்கள் நேரம் முழுவதையும் கற்பித்தல் பணிக்காக செலவிடுவதை அரசு உறுதிப் படுத்த வேண்டும். வழங்கப் படும் அத்தனை பொருட்களும் நேரடியாக பள்ளியில் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி நேரத்தில் ஆசிரியர்கள் பள்ளியில் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். விடுப்பு கால மாற்றுப் பணிக்கு என்றே ரிசர்வ் அல்லது உபரி ஆசிரியர்கள் பயன்படுத்தப் பட வேண்டும். மீதி நேரங்களில் அவர்கள் கற்றல் வள மேம்பாடு பணிகளில் ஈடுபட வேண்டும்.

பல புதிய புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் தமிழக அரசு பள்ளிக் குழந்தைகளின் கற்றல் இழப்பைக் குறைக்கும் விதமான நடவடிக்கைகளில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். அதற்கான வழிவகைகள் குறித்து நிறைய பள்ளிக் கல்வித் துறை சிந்திக்க வேண்டும். வளர்ச்சி சார்ந்த விஷயங்களில் முடிவெக்கும் போது சூழலியல் பாதிப்பு, இழப்பு குறித்து கவனம் செலுத்தப் படுவது போல பள்ளிக் கல்வித் துறையின் ஒவ்வொரு அறிவிப்பிலும் , பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் ஒவ்வொரு சுற்றறிக்கையிலும், பள்ளிகளில் இருந்து 24 மணி நேரமும் ஏராளமான தகவல்கள் கேட்கப்படுகின்றன. அவ்வாறு கேட்கும் ஒவ்வொரு முறையும் அந்த தகவல் சேகரிப்பினால் பள்ளியில் குழந்தைகளுக்கு ஏற்படப் போகும் கற்றல் இழப்பு அதிகாரிகள் சிந்திக்க வேண்டும். 

அரசுப் பள்ளிகளில் குழந்தைகள் காலமெல்லாம் கற்றலை இழந்து கொண்டிருக்கும் நிலை மாற வேண்டும். இதற்கு ஆசிரியர்கள், அதிகாரிகள், பெற்றோர் ஆகிய அனைவரும் இணைந்து கற்றல் இழப்புக்கு எதிராக போராட வேண்டும்.! வரும் கல்வியாண்டு கற்றல் இழப்பு இல்லாத ஆண்டாக அமைய அனைவரும் பாடுபடுவோம்..!
-
தேனி சுந்தர்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

நன்றி : இந்து தமிழ் நாளிதழ்
நாள்:ஏப்ரல்,28
Reply all
Reply to author
Forward
0 new messages