சைதை துரைசாமி

1,560 views
Skip to first unread message

ஸ் பெ

unread,
Nov 27, 2014, 2:38:46 AM11/27/14
to panbudan
Shankar
· 

சென்னையின் மேயர் சைதை துரைசாமியின் முழு நேரத் தொழில் கட்டப்பஞ்சாயத்து, மற்றும் நில அபகரிப்பு. பகுதி நேரம்தான் மேயர் வேலை.

இதை அரசியலில் உள்ள பல்வேறு நபர்கள் அறிந்திருந்தாலும், ஆதாரபூர்வமாக சைதை துரைசாமி இது வரை சிக்கியதில்லை.

முதன் முறையாக ஆதாரபூர்வமாக சிக்கியுள்ளார்.

வாசகர்களுக்காக அந்த உரையாடல்

https://soundcloud.com/savukku/saidai-duraisamy-caught


--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

கிருஷ்ணசாமி பொன்னுசுந்தரம்

unread,
Nov 27, 2014, 2:46:06 AM11/27/14
to panb...@googlegroups.com

பல் அரசு உயரதிகாரிகளை உருவாக்கும் கோச்சிங் செண்டர் வைத்திருக்கும் சைதை துரைசாமிக்கு இப்படி ஒரு முகமா... அடக்கொடுமையே...

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

ஸ் பெ

unread,
Nov 27, 2014, 2:49:21 AM11/27/14
to panbudan

அலிபாபாவும் ஆயிரம் திருடர்களும்.

DECEMBER 27, 2012 BY SAVUKKU LEAVE A COMMENT

Fb-Button

அலிபாபாவும் நாற்பது திருடர்களும் கேள்விப்பட்டிருப்பீர்கள்.  அது என்ன ஆயிரம் திருடர்கள்… ? நாற்பது திருடர்கள் இருந்தாலே நாடு தாங்காது… ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட திருடர்கள் இருந்தால்…  என்ன ஆகும்… ?

ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருடர்களை உருவாக்கி வைத்து, அதன் தலைவராக இருந்து வருபவர் வேறு யாருமல்ல… மகாத்மா காந்தியை விட புனிதர் என்றும், மகாபாரதக் கர்ணனை விட கொடை வள்ளல் என்றும் தனக்கென்று ஒரு பிம்பத்தைக் கட்டியமைத்து, ஊரையே ஏமாற்றி வரும் சைதை துரைசாமிதான் அந்த அலிபாபா.

06THSAIDAI_S_DURAIS_522108a

யார் இந்த சைதை துரைசாமி ?  கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சைதை துரைசாமி ஒரு சாதாரண நபராகத்தான் வாழ்கையைத் தொடங்குகிறார்.  சென்னை வந்த துரைசாமி, சைதாப்பேட்டை பகுதியில் ஒரு சிறு ரவுடியாக ஃபார்ம் ஆகிறார்.  இவரது ரவுடித்தனம் வீடுகளைக் காலி செய்வதில்தான் தொடங்குகிறது.  சைதாப்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வீட்டை காலி செய்வதில் நிபுணர் என்ற பெயரை எடுக்கிறார். ஆரம்பகாலத்தில் காவல்துறையினரை எப்படி கைக்குள் வைத்திருப்பது என்ற விபரங்கள் சரி வரத் தெரியாததால், அவர்களுக்கு மாமூல் கொடுக்காமல் இருக்கிறார்.  யாரடா அது.. நமக்கு மாமூல் கொடுக்காமல் ரவுடித்தனம் செய்வது என்று வெகுண்டெழுந்த காவல்துறையினர்,  சைதை துரைசாமியை பிக்பாக்கெட் அடித்ததாக கைது செய்துள்ளதாக ஒரு தகவல், அதிமுக வட்டாரங்களிலேயே உலா வருகிறது.   இதந்குப் பிறகுதான் காவல்துறையினருக்கு மாமூல் கொடுத்து தன் வசமாக்கினார் சைதை.

சென்னையில் துரைசாமி ஒரு ரவுடியாக ஃபார்ம் ஆவதற்கு முன், அவருக்கு பணம் கொடுத்து உதவி செய்தவர், ஈரோட்டைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆறுமுகம் என்பவர்.  சோழி ஒயின்ஸ், சோழி காம்ப்ளெக்ஸ் போன்ற சொத்துக்களுக்குச் சொந்தமானவர் இந்த ஆறுமுகம்.   அதிமுகவில் சேர்ந்த துரைசாமி, தனக்கு பெரிய செல்வாக்கு இருப்பது போல காண்பித்துக் கொண்டு, இந்த ஆறுமுகத்திடம் தொடர்ந்து வசூல் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

வீடு காலி செய்யும் தொழிலில் போதுமான வருமானம் இல்லாததால் காலியாக உள்ள பழைய இடங்களை அபகரித்து, அதை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபடத் தொடங்குகிறார்.  நில அபகரிப்பிலும் வீடு காலி செய்வதிலும் தலைச்சிறந்த ரவுடி என்று பெயரெடுத்த துரைசாமிக்கு எம்.ஜி.ஆரின் அறிமுகம் கிடைக்கிறது.  எம்.ஜி.ஆரின் அறிமுகம் கிடைத்ததும், அவரிடம் நல்ல பெயர் வாங்கி,  எம்.எல்.ஏ ஆகிறார் சைதை துரைசாமி. இதன் பிறகு, 1987ல் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு, அதிமுக ஜெயலலிதா மற்றும் ஜானகி தலைமையில் இரண்டாகப் பிரிகிறது. அப்போது ஜெயலலிதாவின் அணிக்கு எதிராக, ஜானகி அணிக்கு ஆதரவு தருகிறார் துரைசாமி.  ஜானகி தலைமையில் செயல்பட்ட அதிமுக அணியின் அலுவலகமே சைதை துரைசாமியின் இல்லத்திலிருந்துதான் செயல்பட்டது.

1989ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், அதிமுக இரண்டாகப் பிரிந்து அதன் சின்னம் இரட்டை இலைக்கு போட்டி போட்டதால், சின்னம் முடக்கப்பட்டு, இரண்டு அணிகளும், இரட்டைப் புறா, மற்றும் சேவல் சின்னத்தில் போட்டியிட்டன.  அந்தத் தேர்தலில் ஜானகி அணி 2 இடங்களும், ஜெயலலிதா அணி 27 இடங்களிலும் வெற்றி பெற்றன. திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.  இதையடுத்து, ஜெயலலிதா மற்றும் ஜானகி தலைமயிலான அணிகள் இணைந்தன.  இந்த இணைப்பை சைதை துரைசாமி சற்றும் விரும்பவில்லை.  இதனால் அரசியலை விட்டே ஒதுங்கி இருந்தார்.

1991ல் ராஜீவ் கொலையினால் ஏற்பட்ட அனுதாப அலையில், அதிமுக பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது.  அந்த வெற்றியை தக்கவைத்துக் கொள்ளத் தெரியாத ஜெயலலிதா தனது அகம்பாவத்தினால், பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை சந்தித்தார்.

இதையடுத்து 1996ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், அதிமுக படுதோல்வி அடைந்தது. இந்தத் தேர்தலுக்கு ஜெயலலிதாவே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்று அதிமுகவின் மூத்த தலைவர்கள் குரல் எழுப்பினர்.   எதிர்ப்புக் குரல் என்பது ஜெயலலிதாவுக்கு எட்டிக்காய் என்பதால், உடனடியாக அதற்கு முந்தைய ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த அரங்கநாயகம், எஸ்.டி.சோமசுந்தரம், கண்ணப்பன், முத்துசாமி போன்றவர்களை நீக்கினார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் ஊழல்களைச் சுட்டிக்காட்டி பதவிக்கு வந்த திமுக அரசு, ஜெயலலிதாவின் மீது சராமாரியாக ஊழல் வழக்குகளை பதிவு செய்ய பூர்வாங்க வேலைகளைத் தொடங்கியிருந்தது.  ஜெயலலிதா பலவீனமாக இருந்த இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, உள்ளே நுழைந்தார் சைதை துரைசாமி.  அது வரை அரசியலில் இருந்து ஓய்வு பெற்று ஒதுங்கி இருந்தவர், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களோடு சேர்ந்து போட்டி அதிமுகவை தொடங்கினார்.

 

img-Z18062514_Page_1img-Z18062514_Page_2

scan_1

scan_2

scan_9

scan_8

 

போட்டி அதிமுகவை தொடங்கி நாங்கள்தான் உண்மையான அதிமுக என்று அறிவித்து, ஜெயலலிதாவை அதிமுகவிலிருந்து நீக்குவதாக அறிவித்தனர்.  அதிமுகவின் வங்கிக் கணக்கை முடக்க நடவடிக்கை எடுத்தனர்.  அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தை முடக்கவும் டெல்லிக்கு சென்று தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தனர்.  இந்த நடவடிக்கைகளை முன்னின்று நடத்தியவர் சைதை துரைசாமி.

சைதை துரைசாமி நடத்திய அதிமுகவை மக்கள் ஏற்கவில்லை.  ஜெயலலிதாவே உண்மையான அதிமுக என்பது, 1998ல் நடந்த தேர்தலில் நிரூபணம் ஆனது.  இதையடுத்து மீண்டும் அரசியலில் இருந்து ஒதுங்கினார் துரைசாமி.

ஒதுங்கியே இருந்த துரைசாமிக்கு மீண்டும் 2006ல் அரசியல் ஆசை வந்தது.   எப்படியாவது சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கடும் முயற்சியை எடுக்கிறார். ஆனால், சைதை துரைசாமியின் கடந்த கால நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு, அவருக்கு அந்த வாய்ப்பை வழங்க ஜெயலலிதா மறுக்கிறார்.  2006ல், தனக்கு அதிமுகவில் சீட் கிடைக்கவில்லை என்பதால், பாட்டாளி மக்கள் கட்சியிடம் சென்று தனக்கு அந்த சீட்டை ஒதுக்குமாறு பேசியவர் சைதை துரைசாமி.

2006 தேர்தலில் தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றதும், வேறு நல்ல திருட்டுத் தொழிலாக தேர்ந்தெடுக்கலாம் என்று சைதை துரைசாமி தேர்ந்தெடுத்த தொழில்தான் ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சி மையம் என்று தொடங்கப்பட்ட மனிதநேய அறக்கட்டளை.  இந்த அறக்கட்டளைக்கு மூளையாக இருந்து செயல்பட்டவர்கள், முன்னாள் உள்துறைச் செயலாளர் பூர்ணலிங்கம் ஐஏஎஸ், அபுல் ஹஸன் ஐஏஎஸ் மற்றும் அலெக்சாண்டர் ஐபிஎஸ்.   எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் எம்.எல்.ஏவாக இருந்தபோதே இந்த அதிகாரிகளோடு சைதை துரைசாமிக்கு  தொடர்பு உண்டு.  பின்னாளில் சைதை துரைசாமி கிழக்கு கடற்கரைச் சாலையில் 200 ஏக்கர் நிலத்தை அபகரித்து கபளீகரம் செய்ததில் பின்னணியாக இருந்து செயல்பட்டவர்கள், இந்த அதிகாரிகள்.  அலெக்சாண்டர், தான் ஓய்வு பெறும்வரை, சர்வ வல்லமை படைத்த அதிகாரியாக விளங்கினார்.  அப்படிப்பட்ட அதிகாரி, சைதை துரைசாமிக்கு பின்புலமாக இருக்கையில், நில அபகரிப்பு செய்வதை யார் தடுக்க முடியும் ?

இந்த மூன்று அதிகாரிகளும் ஓய்வு பெற்றதும், வேலையில்லாத ஆண்டிகள் போல உட்கார்ந்து யோசித்ததில் உருவான திட்டம்தான் மனிதநேய அறக்கட்டளை.  இந்த அறக்கட்டளைக்கு ஆலோசனைக் குழும உறுப்பினர்களாக இந்த மூன்று அதிகாரிகளும், முன்னாள் பல்கலைக்கழக துணை வேந்தர் வா.செ.குழந்தைசாமியும் நியமிக்கப்படுகின்றனர்.

இந்த மனிதநேய அறக்கட்டளையில் முக்கியப் பொறுப்பில் சட்ட ஆலோசகராக தான் மரணமடையும் வரையில் செயல்பட்டவர் முன்னாள் நீதிபதி எஸ்.சம்பந்தம்.  இந்த சம்பந்தம், 1996ல், திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்து, ஜெயலலிதாவையும், சசிகலாவையும் கதற வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பந்தத்தின் இந்த செய்கைக்கு கைமாறாக, கருணாநிதி 2000ம் ஆண்டில், மனித உரிமை ஆணையத்தின் தலைவராக சம்பந்தத்தை நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  அந்த சம்பந்தத்தை தனது மனித நேய அறக்கட்டளைக்கு சட்ட ஆலோசகராக நியமித்தார் சைதை துரைசாமி.

மனிதநேய அறக்கட்டளையைத் தொடங்கி, ஏழை மாணவர்களுக்கு இலவசமாக போட்டித் தேர்வுகளில் பயிற்சி அளித்து, அதன் மூலம்  இழந்த தனது செல்வாக்கை தூக்கி நிறுத்த வேண்டும் என்று முயற்சி செய்தார் துரைசாமி.  இந்த அறக்கட்டளையின் ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக அதிகாரிகள் இருக்க சம்மதித்ததன் பின்னணியைக் கேட்டால் ரொம்ப அற்பமானது.   பதவியில் இருந்து ஓய்வு பெற்ற இந்த அதிகாரிகளுக்கு வாகனமும், ஓட்டுனரும் யார் கொடுப்பார்கள்.   பதவியில் இருக்கும்போது, அரசு வாகனம் கிடைக்கும்… பார்ப்பவரெல்லாம் சல்யூட் அடிப்பார்கள்.  ஆனால் ஓய்வு பெற்ற பிறகு, இந்த வசதிகள் கிடைக்காதல்லவா ?  உயர் அதிகாரிகள் ஓசி வாகனமும், ஓட்டுனரும் இல்லையென்றால் செத்துவிட மாட்டார்களா… ?  அதற்காகத்தான் இந்த அதிகாரிகள், சைதை செலவில் வாகனத்தை வாங்கிக்கொண்டு, துரைசாமி நடத்திய பயிற்சி மையத்தில், ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். எவ்வளவு அற்ப மனிதர்களாக இருக்கிறார்கள் பாருங்கள்… ?

Untitled-1

2006ம் ஆண்டில், இலவசம் என்று தொடங்கப்பட்ட இந்த பயிற்சி மையம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.  இலவசம் என்றாலே, அந்த இடத்தில் ஒழுங்காக பயிற்சி அளிக்கமாட்டார்கள் என்று பரவலாக மாணவர்கள் மத்தியில் செய்தி பரவியதே அதற்குக் காரணம். டிசம்பர் 2006ல் தொடங்கப்பட்ட இந்த மையத்தில் முதன் முறையாக ஐஏஎஸ் தேர்வுப் பயிற்சிக்காக சேர்ந்தவர்கள் வெறும் 50 பேர் மட்டுமே.

இந்த மையத்தை எப்படியாவது பிரபலமாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், முக்கிய பிரமுகர்களை அழைத்து மாணவர்களிடம் ஊக்கம் கொடுக்கும் வகையில் பேச வைத்து,  அதை பத்திரிக்கையில் செய்தியாக வரவைத்துப் பார்த்தார். ஆனால் எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இவ்வாறு சைதை துரைசாமி சிரமப்பட்டுக் கொண்டிருந்த வேளையில்தான் வாராது வந்த மாமணியாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக காசி விஸ்வநாதன் நியமிக்கப்பட்டார். காசி விஸ்வநாதன் ஒரு கரைவேட்டி கட்டாத திமுக பிரமுகர்.  2007ல் ஓய்வு பெறும்போத காசி விஸ்வநாதன் முதலமைச்சரின் செயலாளர் பதவியில் இருந்தார். ஓய்வு பெற்ற ஒரு சில நாட்களிலேயே டிஎன்பிஎஸ்சியின் தலைவராக கருணாநிதியால் நியமிக்கப்பட்டார்.

kasi

காசி விஸ்வநாதன் ஐஏஎஸ்

இந்தக் காசி விஸ்வநாதன் டின்பிஎஸ்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட பிறகுதான், துரைசாமியின் கவனம், டிஎன்பிஎஸ்சியின் பக்கம் திரும்பத் தொடங்குகிறது. அதன் பிறகு, துரைசாமிக்கு தொடர்ந்து சுக்கிர திசைதான்.  நடப்பதோ திமுக ஆட்சி.  ஆனால், அதிமுக பிரமுகரான சைதை துரைசாமி நடத்தும் பயிற்சி மையத்தில் படித்தவர்கள், டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் எளிதாக தேர்ச்சியடைவார்கள்.

அது வரை பயிற்சி மட்டும் அளித்துக் கொண்டிருந்த மனிதநேய மையம், காசி விஸ்வநாதன் டிஎன்பிஎஸ்சி தலைவராக பதவியேற்ற பிறகு, தாறுமாறாக விளையாடத் தொடங்கியது.  அந்த காலகட்டத்தில் மனித நேய மையத்தில் பயிற்சி எடுத்த மாணவர்கள், ஒவ்வொரு தேர்வாணைய உறுப்பினருக்கும், நேர்முகத்தேர்வில் முழு மதிப்பெண் போடுவதற்கு ஒன்று முதல் இரண்டு லட்சம் வரை தர வேண்டும் என்று நேரடியாகவே பேசி அவரே பணத்தை வாங்கினார் என்கிறார்கள்.

இப்படி பணம் கொடுத்த மாணவர்களில் பெரும்பாலானோர், போட்டித் தேர்வுகளில் தேர்ச்சியடைந்த விபரம் போட்டித் தேர்வு எழுதுவோரிடையே பரவத் தொடங்குகிறது.  இச்செய்தி பரவத் தொடங்கியதும், மனிதநேய அறக்கட்டளையில் சேர்ந்து படித்தால், நிச்சயம் அரசுப் பதவி என்ற நிலை உருவாகிறது.   மனிதநேய அறக்கட்டளைக்கு முன்பாகவே, பல ஆண்டுகளாக பயிற்சி நிலையங்களை நடத்தி வரும் பல நிறுவனங்கள், டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களின் தொடர்பு இல்லாததால், வேறு வழியின்றி, முதல் நிலைத் தேர்வு, மெயின் தேர்வு முடிந்ததும், நேர்முகத் தேர்வுக்கு, துரைசாமியின் பயிற்சி மையத்திற்கு அனுப்பத் தொடங்கினர்.

ஒரு கட்டத்தில் பணம் கொடுத்து, தேர்வாணைய உறுப்பினர்களை சரி செய்யக் கூட அவசியம் இல்லாமல் போய் விட்டது.   நேர்முகத் தேர்வின் போது, எங்கே படித்தீர்கள் என்று தேர்வாணைய உறுப்பினர் கேட்டால், சைதாப்பேட்டையில் என்று சொன்னாலே, அவருக்கு முழு மதிப்பெண்கள் வழங்கப்படும் நிலை உருவானது.  துரைசாமியின் இந்த மையம், தேர்வாணைய உறுப்பினர்களுக்கும் மிகுந்த வசதியாகப் போய் விட்டது.    50 லட்சம், ஒரு கோடி என்று, ராசாத்தி அம்மாள், அழகிரி என்று கட்டணம் செலுத்தி உறுப்பினர்களானவர்கள், என்னிடம் வாருங்கள், இவ்விடத்தில் சகாய விலையில், செய்கூலி, சேதாரம் இல்லாமல், நியாயமான முறையில், அரசு வேலை வழங்கப்படும் என்றா விளம்பரம் கொடுக்க முடியும் ?   மனித நேய அறக்கட்டளை போன்ற ஒரு மையத்தோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டால், மொத்தமாக தொகை கைக்கு வந்து விடும் அல்லவா ?

sellamuthu

காசி விஸ்வநாதனுக்குப் பிறகு டிஎன்பிஎஸ்சி தலைவரான செல்லமுத்து

இப்படி நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்த மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனர் துரைசாமிக்கு, மாணவர்களின் தொல்லை அதிகமாகத் தொடங்கியது.  எப்படிப்பட்ட தொல்லையென்றால், துரைசாமியை நேரில் பார்த்து, ஒரு முறை பேசி விட்டால், உறுதியாக பணம் கொடுத்து வேலை வாங்கி விடலாம் என்ற செய்தி பரவி விட்டதால், வரும் அத்தனை மாணவர்களும், சேர்மேனை சந்திக்க வேண்டும் என்று பிடிவாதமாக நிற்கத் தொடங்கினர்.  இது 2010 காலகட்டம்.  இந்தக் கட்டத்தில் நாம் நேரடியாக இதைச் செய்ய முடியாது என்பதை துரைசாமி உணர்கிறார். இது தவிரவும், தேர்தல் நெருங்குவதால், தேர்தலில் இம்முறை சீட் வாங்க ஜெயலலிதாவை அணுகுவதற்கும் முயற்சிகள் எடுத்து வருகிறார் துரைசாமி.

இந்த இடத்தில்தான் இருவர் உள்ளே நுழைகிறார்கள்.  இதே போல போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் நடத்தும், ரேடியன் ஐஏஎஸ் மற்றும், அப்போல்லோ பயிற்சி மையத்தைச் சேர்ந்த ராஜபூபதி மற்றும் ஷ்யாம் ஆகியோருக்கு துரைசாமியோடு தொடர்பு ஏற்படுகிறது.

இந்த பயிற்சி மையங்கள் நடத்துவதில் பெரிய சிரமம் என்னவென்றால், ஏகப்பட்ட மையங்கள் இருப்பதால், மாணவர்களை வளைத்து, தங்களுடைய பயிற்சி மையத்தில் சேர வைப்பது மிக மிக சிரமம்.  சின்ன பயிற்சி மையங்களில் மாணவர்கள் சேர மாட்டார்கள்.   மனிதநேய அறக்கட்டளையின் பயிற்சி மையத்தில் மாணவர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்ததால், இந்த இரண்டு பயிற்சி மையங்களின் நிறுவனர்களுக்கு துரைசாமியோடு தொழில் கூட்டு அமைப்பது எளிதாகவும், வசதியாகவும் இருந்தது.  இந்த தொழில் கூட்டு ஒப்பந்தத்தின் படி, மனிதநேய அறக்கட்டளை மையத்தின் பயிற்சி வகுப்புகளுக்கு, ஆசிரியர்கள், இதர உதவிகளை அப்போல்லோ மற்றும் ரேடியன் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் செய்வார்கள்.  பதிலுக்கு, மனிதநேய அறக்கட்டளையின் ஒரு பகுதி மாணவர்களை இவர்களின் மையத்துக்கு அனுப்ப வேண்டும்.  இந்த ஒப்பந்தம் அனைவருக்கும் வசதியாகப் போய் விட்டது.

மனிதநேய அறக்கட்டளைக்கும் டிஎன்பிஎஸ்சிக்கும் இருந்த நெருக்கம் வெளியானது, 2010ல் நடந்த மெயின் தேர்வுகளின்போது.  பல ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி மெயின் தேர்வுகளுக்கென்று, ஒரு வடிவம் இருந்தது.  2009ம் ஆண்டில், பல தேர்வர்கள், டிஎன்பிஎஸ்சிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் பல வழக்குகளைத் தொடுத்திருந்தனர்.  எங்கள் மீதா வழக்கு தொடுக்கிறீர்கள்… பாருங்கள் என்ன செய்கிறோம் என்று, அந்த ஆண்டு தேர்வில், கேள்வித்தாள் வடிவத்தை தலைகீழாக மாற்றுகிறார்கள்.

அது வரை, மெயின் தேர்வில், 5 கேள்விகள் 15 மதிப்பெண்களுக்கு, 5 கேள்விகள் 20 மதிப்பெண்களுக்கு என்று விரிவான விடை எழுத வேண்டிய வகையில் இருக்கும். ஆனால், அந்த ஆண்டு 40 கேள்விகள 1 மதிப்பெண்.  3 மதிப்பெண்களுக்கு சில கேள்விகள், 5 மதிப்பெண்களுக்கு சில கேள்விகள் மொத்தம் 104 கேள்விகள். தலைகீழ் மாற்றம்.   பல ஆண்டுகளாக தேர்வுக்காக பயிற்சி எடுத்து, தயாரித்து வந்தவர்களுக்கு அந்த மாற்றம் ஏற்படுத்திய அதிர்ச்சியை வார்த்தையில் வடிக்க இயலாது.   ஒரு பயிற்சி மையம் நடத்தி வரும் ஒருவர் சொன்னது… அவரிடம் 35 வயதான ஒருவர் இந்தத் தேர்வுக்காக சிறப்பாக தயாரிப்பு வேலை செய்திருந்தார்.   அவருக்கு அதுவே இறுதி வாய்ப்பு.  ஏற்கனவே க்ரூப் 4ல் பணிபுரிந்து வந்த அவர், அந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு, க்ரூப் 1 தேர்வுக்காக தயாரித்து வந்தார்.   அந்த தேர்வு அவருக்கு ஏற்படுத்திய அதிர்ச்சியை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது என்றார் அந்த நண்பர். அவரை என்ன சொல்லி ஆறுதல் படுத்தவது என்றே எனக்குத் தெரியவில்லை என்றார்.   விரிவான பதில் எழுத வேண்டிய கேள்விகளை எதிர்ப்பார்த்து, நன்கு பயிற்சி எடுத்து தேர்வெழுத சென்றவருக்கு, தலைகீழ் மாற்றங்கள் ஏற்படுத்தும் அதிர்ச்சியில் இருந்து மீளவே அரை மணி நேரத்திற்கும் மேல் ஆகி விடும்.  அந்த அதிர்ச்சியில் தெரிந்த விடைகள்  கூட மறந்து விடும்.

ஆனால் அந்த புதிய கேள்வி முறையின்படி, மனித நேய அறக்கட்டளையில் மட்டும் மூன்று மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன என்பதுதான் அதிர்ச்சிகரமான உண்மை.  தமிழகத்தில் யாருக்குமே தெரியாத அந்த மாற்றம், மனித நேய பயிற்சி மையத்தின் மாணவர்களுக்கு மட்டும் தெரிந்தது, மிகப்பெரிய ஆச்சர்யத்தை உண்டு பண்ணியது.  இது மனிதநேய பயிற்சி மையத்தில் சேர்ந்தால், அரசு வேலை உறுதி என்று நிலவி வந்த கருத்தை உறுதிப்படுத்தியது.  அந்தத் தேர்வில் மனிதநேய அறக்கட்டளையில் படித்த மாணவர்கள் 68 பேர் தேர்ச்சி பெற்றனர்.  மொத்தம் உள்ள 128 பணியிடங்களில் ஒரே பயிற்சி மையத்திலிருந்து 68 பேர் தேர்ச்சியடைந்தது இயற்கைக்கு மாறான நிகழ்வு.

அதன் பிறகு, மனிதநேய அறக்கட்டளையின் பயிற்சி மையங்கள், தமிழகமெங்கும் விரிவடைந்தன.   தொடக்க காலத்தில் வெறும் 50 பேர் சேர்ந்த பயிற்சி மையத்தில் ஒரு தேர்வுக்கு 15 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பிக்கத் தொடங்கினர்.  தமிழகமெங்கும் 10 கிளைகள் உருவாக்கப்பட்டன.  சின்ன பயிற்சி மையங்கள் வைத்து நடதியவர்கள், மனித நேய அறக்கட்டளையில் முழு நேர ஊழியர்களாகவும், இடைத் தரகர்களாகவும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

போட்டித் தேர்வில் மோசடியை அரங்கேற்றிய பின்னர், அடுத்த கட்டத்திற்கு நுழைந்தார் துரைசாமி.  அடுத்த கட்டம் என்னவென்றால், போட்டித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நல்ல பதவியை வாங்கித் தருவது.   உதாரணத்திற்கு, நீங்கள் க்ரூப் 2 தேர்வில் வெற்றி பெறுகிறீர்கள்.   உங்களுக்கு தலைமைச் செயலகத்தில் உதவிப் பிரிவு அலுவலர் (Assistant Section Officer) பணி கிடைக்கிறதென்றால், அதை பெரும்பாலானோர் விரும்பமாட்டார்கள்.  ஏனென்றால் வருமானம் இல்லாத பதவி அது.  அதற்குப் பதிலாக, அதே க்ரூப் 2 தேர்வில் உள்ள நகராட்சி ஆணையர் (Municipal Commissioner) பதவி கிடைத்தால் செல்வச் செழிப்போடு வாழலாம் என்பதால் இது போன்ற பதவிகளுக்கு போட்டி அதிகம்.   வெற்றி பெற்றவர்களை அழைத்து, பதவிகள் ஒதுக்கப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே, உங்களுக்கு இன்ன பதவி ஒதுக்கப்பட்டள்ளது என்று அறிவிப்பார்கள்.   சம்பந்தப்பட்டவர்கள் எனக்கு இந்தப் பதவி வேண்டும் என்று கூறினால், அதற்கு ஒரு தொகை வசூல் செய்யப்பட்டு உரிய பதவி பெற்றுத் தரப்படும்.

இதிலும் ஒரு கூடுதல் திருட்டுத் தனம் செய்யப்பட்டது.  உதாரணத்திற்கு உங்களுக்கு க்ரூப் 1 தேர்வில், மாவட்ட பதிவாளர் (District Registrar) பணி கிடைத்திருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்களேன்.  உங்களை அழைத்து, உங்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் (District Employment Officer) ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறுவார்கள்.  சார்… எப்படியாவது எனக்கு வேறு பதவி பெற்றுத் தாருங்கள் என்று கூறியதும் அவரிடம் 10 முதல் 12 லட்ச ரூபாய் வசூல் செய்யப்பட்டு அவர் கேட்ட பதவியை பெற்றுத் தந்ததாக கூறுவார்கள்.

கடந்த க்ரூப் 1 தேர்வில் ஒரு கால்நடை மருத்துவர் இதே போல மாவட்ட பதிவாளராக தேர்ச்சியடைந்தார்.  அவர் எஸ்.சி பிரிவைச் சேர்ந்தவர்.   அவரிடம் உங்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறியதும், அவர் 12 லட்ச ரூபாயை துரைசாமியிடம் கொடுக்கிறார்.    அவருக்கு தன் செல்வாக்கை பயன்படுத்தி மாவட்டப் பதிவாளர் வேலை பெற்றுத் தந்ததாக கூறினார் துரைசாமி.  ஆனால் உண்மையில், அந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் பதவி, எம்.பி.சி பிரிவுக்கானது.  இந்த கால்நடை மருத்துவர் கேட்டாலும், அந்தப் பதவியை ஒதுக்க இயலாது.  இதுதான் துரைசாமியின் தந்திரம்.

தற்போது என்ன நிலைமை என்றால், போட்டித் தேர்வுகள் என்றால், அதற்கு பயிற்சி அளிக்கும் ஒரே மையம் மனிதநேய அறக்கட்டளை மட்டுமே என்ற நிலை உருவாகி விட்டது.  தற்போது துரைசாமி இந்த பயிற்சி மையத்தின் நிர்வாகத்தில் பெரிய அளவில் தலையிடுவது இல்லை.   அப்போல்லோ பயிற்சி நிறுவனத்தின் ஷ்யாம் மட்டுமே முழுமையாக இதை நிர்வகிக்கிறார்.  ஷ்யாம், தற்போது இந்த தொழிலை விரிவு படுத்தியிருக்கிறார்.

உதாரணத்துக்கு நீங்கள் ஒரு பயிற்சி மையம் நடத்துகிறீர்கள் என்றால், உங்கள் மையத்தில் படித்து ஒருவர் க்ரூப் 1 தேர்வில் பெற்றி பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.  அவர், மனிதநேயம் பயிற்சி மையத்தில் படித்தேன் என்று விளம்பரப்படுத்த ஒப்புக் கொண்டால், ஒரு தேர்வருக்கு 10 ஆயிரம் ரூபாய் ஷ்யாம் உங்களுக்கு கொடுப்பார்.  க்ருப் 2 தேர்வுக்கு இது 5 ஆயிரம்.  விஏஓ தேர்வுக்கு 3 ஆயிரம் என்ற வகையில் தற்போது வசூல் செய்யப்படுகிறது.

civil

துரைசாமியின் பயிற்சி மையத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நீதிபதிகள்

கூடுதலாக ஷ்யாம், மற்ற பயிற்சி மையங்களை தொடர்பு கொண்டு, வகுப்புக்கு மாணவர்களை அனுப்புகிறேன்.   ஒரு மாணவருக்கு 500 ரூபாய் கொடுங்கள்.  குறைந்தபட்சம் 400 முதல் 500 மாணவர்களை அனுப்புகிறேன் என்று பேரம் பேசி வருகிறார்.  இது போக, தனியார் தங்கும் விடுதிகள் வைத்திருப்பவர்களிடமும் பேரம் பேசி, படிக்கும் மாணவர்களை அந்த விடுதியில் தங்க வைப்பதற்கு தலைக்கு இவ்வளவு என்று பேரம் மனித நேய அறக்கட்டளையால் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஊழல், முறைகேடு, மோசடி போன்ற விவகாரங்களையெல்லாம் விலக்கி விட்டுப் பார்த்தால், ஏதோ துரைசாமி ஒரு நல்ல பணியை செய்து வருகிறாரே என்று தோன்றும்.  அவரைக் குறை சொல்லாதீர்கள்…. குறைந்தது 200 பேருக்காவது, தங்கும் இட வசதியோடு படிக்க வைக்கிறாரே என்று துரைசாமி தரப்பினர் வாதிடக் கூடும்.

ரமணா திரைப்படம் பார்த்திருப்பீர்கள்.  அதில் விஜயகாந்த் ஏசிஎஃப் ஆன்டி கரப்ஷன் போர்ஸ் என்ற ஒரு படையை உருவாக்கி, அதன் மூலம் ஊழலை ஒழிப்பதாக வரும்.  சைதை துரைசாமியும் ஒரு டிசிஎஃப் வைத்திருக்கிறார்.   இது துரைசாமி கரப்ஷன் போர்ஸ் (Duraisamy corruption force) துரைசாமி ஊழல் படை.   துரைசாமியின் பயிற்சி மையத்தில் படித்தவர்களில் பெரும்பாலானோரை, தனது அடிமைகளாகவே மாற்றி வைத்திருக்கிறார் துரைசாமி.   அரசியல் அறிவோடு, விஷயங்களை அலசி ஆராய்ந்து பார்க்கும் சிலரைத் தவிர, பெரும்பாலானோர், துரைசாமியை கடவுளாகவே வழிபடுகின்றனர்.

ஏற்கனவே சொன்ன கால்நடை மருத்துவருக்கு மாவட்டப் பதிவாளர் பதவி வாங்கித் தருவதற்காக துரைசாமி பெற்ற தொகை 12 லட்சம்.  மாவட்டப் பதிவாளர் பதவி கிடைத்ததும், 2 லட்சத்தை துரைசாமி அந்த கால்நடை மருத்துவரை அழைத்துத் திருப்பிக் கொடுத்தார்.  என்ன சார்… என்று கேட்டதற்கு, டிஎன்பிஎஸ்சியில் ஒரு உறுப்பினர் பணம் வாங்கவில்லை என்று கூறி விட்டார்.  அந்த கால்நடை மருத்துவர்…..  உடனே துரைசாமி காலில் விழுந்தார்.  சார்… உங்களைப் போல ஒரு நேர்மையான மனிதரை பார்க்கவே இயலாது.  உங்களால்தான் தமிழகத்தில் குறிப்பாக சைதாப்பேட்டையில் மழை பெய்கிறது என்ற ரேஞ்சுக்கு பெரிய ஐஸாக வைத்து விட்டு வந்தார்.   கால்நடை மருத்துவம் படித்த இந்த முட்டாளுக்கு,  மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் பணியிடம் எம்.பி.சிக்கு ஒதுக்கப்பட்டது, இவர் பெற்ற மதிப்பெண்ணுக்கு இயல்பாகவே மாவட்டப் பதிவாளர் பதவி கிடைத்திருக்கும் என்பது உறைக்கவேயில்லை.  இவரைப் போன்ற அடிமைகளை தமிழகமெங்கும் உள்ள பல்வேறு அரசுத் துறைகளில் உருவாக்கி வைத்திருக்கிறார் துரைசாமி.  இவர்கள் துரைசாமியின் அடிமைகள்.  துரைசாமி கேட்டால், இவர்கள், அரசு ரகசியத்தை கண்ணை மூடிக் கொண்டு எடுத்து துரைசாமியிடம் கொடுத்து விடுவார்கள்.

முதன் முதலில் ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சி மையமாகவே மனித நேய அறக்கட்டளை தொடங்கப்பட்டது என்பது நினைவிருக்கும்.  இந்தத் தேர்வில் தேர்ச்சியடைபவர்களையும் வளைத்துப் போடவதற்கு துரைசாமி பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளார்.   மனிதநேய அறக்கட்டளையில் படிக்காமல், வெளி பயிற்சி மையங்களில் படித்து, ஐஏஎஸ் தேர்ச்சியடைந்த இரண்டு அதிகாரிகளை துரைசாமி அழைத்தார்.  எங்கள் மாணவர்களுக்கு உங்கள் தேர்வு அனுபவங்களை சொல்லுங்கள் என்று கூறினார்.  இவர்களும், மாணவர்களுக்கு உதவலாமே என்று செல்கிறார்கள்.  அவர்களிடம், நீங்கள்தான் இந்த நாட்டையே தூக்கி நிறுத்தப்போகிறீர்கள், நீங்கள் ஜனநாயகத்தின் தூண் என்று ஏகப்பட்ட பில்டப் கொடுத்திருக்கிறார். இவர்களைப் போல துரைசாமியை சந்திக்கச் செல்லும் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற மற்ற தேர்வர்களுக்கு உங்களுக்கு டெல்லி செல்வதற்கு விமான டிக்கெட் எடுத்துத் தருகிறேன், ஒரு த்ரீ பீஸ் சூட் எடுத்துத் தருகிறேன் என்று தனது லஞ்ச லாவணியை பாடுவது துரைசாமியின் வழக்கம் என்று கூறுகிறார்கள். துரைசாமியை சந்தித்த இரண்டு அதிகாரிகளும் புத்திசாலி அதிகாரிகள்.  சம்பந்தம் இல்லாமல் இவன் எதற்கு நம்மை இந்தத் தாங்கு தாங்குகிறான் என்று சந்தேகப்பட்டு அளவோடு பேசி விடை பெறுகிறார்கள்,  ஆனால் அந்த இரண்டு அதிகாரிகளுக்கும் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. சைதையின் வீச்சு சைதாப்பேட்டையோடு முடிந்து விட்டது என்று நினைத்திருந்தார்கள்.   ஆனால் உண்மை அதுவல்ல… …. 

இரண்டு அதிகாரிகளும் பயிற்சிக்காக மசூரி பயிற்சி மையத்தில் உள்ளார்கள்.  அப்போது அந்த மையத்தில், இந்தியா டே என்ற நிகழ்ச்சி நடக்கிறது. ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்தவர்களும், தங்கள் மாநிலத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கலை நிகழ்ச்சியோ, அல்லது வேறு ஏதாவதோ செய்ய வேண்டும் என்று அறிவிப்பு.  இதையடுத்து ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்தவர்களும், தங்கள் மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், ரங்கோலி கோலம், நடனம், கலை நிகழ்ச்சிகள் என்று செய்து கொண்டிருக்கிறார்கள்.  இந்த இரண்டு அதிகாரிகளும், கலை நிகழ்ச்சிக்கான இறுதிக்கட்ட பயிற்சியில் இருக்கையில் திடீரென்று அவர்களுக்கு அழைப்பு. முதல் தளத்திற்கு சென்று பார்த்தால், காஞ்சி காமாட்சியம்மன் கோயிலை அப்படியே சினிமா செட்டாகப் போட்டிருக்கிறார்கள்.  தமிழகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட கரகாட்ட கோஷ்டியினர் நடனமாடிக் கொண்டிருக்கின்றனர்.  தமிழகத்தில் இருந்து தேர்வான அதிகாரிகள் ஒவ்வொருவரும் தலா 1000 ரூபாய் போட்டு, 29 ஆயிரம் வசூல் ஆகியிருந்தது. இந்தத் தொகையில் எப்படி இவ்வளவு ஆடம்பரமாக செய்ய முடியும் என்று கேட்டால், மற்ற அதிகாரிகள், அய்யாதான் கொடுத்தார் என்று கை காட்டுகிறார்கள். அவர்கள் கை காட்டிய இடத்தில் பார்த்தால், சைதை துரைசாமி தனது நயவஞ்சக புன்னகையை வீசிக் கொண்டிருக்கிறார்.   இரண்டு அதிகாரிகளும் கடும் எரிச்சலடைந்து பணத்தை பெற்ற மற்ற அதிகாரிகளிடம் விசாரித்தால், துரைசாமியிடம் 50 ஆயிரம் பெற்ற விபரத்தை சொல்லியிருக்கிறார்கள்.  கடும் எரிச்சலடைந்த இரண்டு அதிகாரிகளும், கடுமையாக சத்தம் போட்டு, பணத்தை திருப்பிக் கொடுக்கச் சொல்லியிருக்கிறார்கள்.   சரி என்று சொன்ன மற்ற அதிகாரிகள், பணத்தை திருப்பிக் கொடுத்தார்களா, இல்லை  ஐயா கோபித்துக் கொள்வார் என்று திருப்பிக் கொடுக்காமல் இவர்களே கபளீகரம் செய்து விட்டார்களா என்பது குறித்த விபரங்கள் இல்லை. ஆனால் நிச்சயம் திருப்பிக் கொடுத்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. 

2007 முதல் ஒவ்வொரு ஆண்டும், துரைசாமி மசூரி சென்று கரகாட்டம் ஆடி வருவதாக உயர் அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

பயிற்சிக்காக, மசூரிக்கு செல்லும் அத்தனை அதிகாரிகளுக்கும், மத்திய அரசு முழுமையான தொகையை அளிக்கும்.  ஆனால், துரைசாமி இவர்களுக்கான விமான டிக்கெட்டை எடுத்துக் கொடுத்து, இவர்களை போலிப் பயணப்பட்டியல் தயாரிக்க சொல்லிக் கொடுத்து, பணியில் சேரும் நாள் முதலாகவே ஊழல் அதிகாரிகளாக இவர்களை மாற்றுகிறார்.  துரைசாமியின் பயிற்சி மையத்தில் படிக்காத அதிகாரிகளாக இருந்தாலும், தேர்வில் வெற்றி பெற்றதும், அவர்களை அழைத்து, மேலே சொன்ன இரண்டு அதிகாரிகளுக்கு விமான டிக்கெட் எடுத்துத் தருகிறேன் என்று சொன்னது போல, மற்றவர்களுக்கு எடுத்துக் கொடுத்து, துரைசாமி கரப்ஷன் போர்ஸில் சேர்த்து விடுவார் துரைசாமி.  அந்த இரண்டு அதிகாரிகளைப் போல, சுயமரியாதையோடு இந்த லஞ்சத்தை மறுக்கும் அதிகாரிகள் வெகு குறைவு.  துரைசாமியிடம் கை நீட்டி, அதன் மூலம், துரைசாமி கரப்ஷன் போர்ஸில் உறுப்பினராகும் அதிகாரிகள், இன்று இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல், இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளாக (Indian Foreign Service) பணியாற்றி வருகிறார்கள்.  தமிழகமெங்கும் துரைசாமி கரப்ஷன் போர்ஸ் உறுப்பினர்கள், 5 ஆயிரத்திற்கும் மேல் உள்ளார்கள்.

U.P.S.C_Selected_List_2010-11_Page_1

U.P.S.C_Selected_List_2010-11_Page_2

U.P.S.C_Selected_List_2010-11_Page_3

இந்த துரைசாமி கரப்ஷன் போர்ஸ், சைதை துரைசாமியை இந்தியாவிலேயே சக்தி வாய்ந்த நபராக மாற்றியிருக்கிறது. காவல்துறையிலும், பத்திரிக்கை துறையிலும் இருப்பவர்களுக்கு தெரியும். தகவல் என்பது எவ்வளவு முக்கியம் என்பது.  அரசுத் துறைகளில் நடக்கும் விவகாரங்களைப் பற்றிய தகவல்கள் தெரிந்தால், ஒரு நல்ல பத்திரிக்கையாளர், அற்புதமான செய்திகளை வெளியிட முடியும். பல்வேறு ஊழல்களை வெளிக்கொணர முடியும். ஆனால், ஒரு திருட்டு அரசியல்வாதிக்கு இந்தத் தகவல்கள் தெரிந்தால், அவர் தன்னையும், தன் குடும்பத்தையும் மேம்படுத்திக் கொள்வதற்கே அதைப் பயன்படுத்துவார்.  அப்படிப்பட்டவர்தான் இந்த துரைசாமி.

சென்னை மாநகராட்சியின் மேயரானதும் துரைசாமியின் வசூல் களை கட்டுகிறது.   சென்னை மாநகரப் பொறுத்தவரை, அதிமுகவில் தனது எதிரிகள் அத்தனை பேரையும் ஒழித்து விட்டார் துரைசாமி.  இன்று துரைசாமியைப் பகைத்துக் கொண்டால், சென்னை அதிமுகவில் இருக்க முடியாது என்கிற நிலைமையை உருவாக்கி விட்டார். இவரைக் கண்டு பலரும் அஞ்சுகிறார்கள்.

எந்த ஊடகத்திலும், துரைசாமிக்கு எதிராக ஒரு வரிச் செய்தியைக் கூட கொண்டு வர முடியாது.  அத்தனை ஊடகங்களையும் வளைத்துப் போட்டிருக்கிறார் துரைசாமி.   இது திமுக ஊடகங்களுக்கும் பொருந்தும். சர்வ வல்லமை படைத்த சக்ரவர்த்தியாக உருவாகியிருக்கிறார் துரைசாமி.  தனது இந்த வலிமையை, சென்னை நகரில் உள்ள கட்டிட உரிமையாளர்கள், பள்ளி உரிமையாளர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் ஆகியவர்களிடம் வசூலிக்கப் பயன்படுத்தி வருகிறார்.

தற்பொது சென்னை நகரில் உள்ள தனியார் பள்ளிகள் அனைத்துக்கும் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் இடிக்கப்படப் போவதாக மாநகராட்சியின் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.   இந்தத் தனியார் பள்ளியின் உரிமையாளர்கள் துரைசாமியைப் பார்த்து கட்ட வேண்டியதை கட்ட வேண்டும் என்று இவரது தொண்டர் அடிப்பொடி கடும்பாடி மூலமாக செய்தி அனுப்பப் பட்டுள்ளது.  பள்ளிகளிடமிருந்து மட்டும் இது வரை 120 கோடி வசூலாகியிருப்பதாக கூறப்படுகிறது.  கேஎப்சி, மெக் டொனால்ட்ஸ் போன்ற பன்னாட்டு உணவு விடுதிகளும், பெரிய ஹோட்டல்களும், திடீர் சோதனை நடத்தப்படும் என்ற அடிப்படையில் மிரட்டல் மற்றும் வசூலுக்கு உள்ளாகியிருக்கின்றன. விதிகளை மீறிக் கட்டியுள்ள கட்டிடங்களுக்கும், குறிப்பாக அண்ணா நகர் சாந்தி காலனியில் பல கோடி ரூபாய் வசூல், நடைபெற்று வருகிறது.

சென்னை வேளச்சேரியில் 18 ஆயிரம் சதுர அடி பரப்பில் புரட்சித் தலைவி அம்மா திருமண மண்டபம் என்ற ஒன்றைத் தொடங்கி, அதில் ஏழைகளுக்கு இலவச திருமணம் என்று அறிவித்து, அதை ஜெயலலிதாவை வைத்து திறக்க வைத்தார் துரைசாமி.  அந்த திருமண மண்டபத்துக்கான அனுமதி பெறுகையில், குடிசைத் தொழில் பயிற்சி மையம் நடத்துவதற்கு என்றும், கீழ் தளத்தில் வணிக வளாகம் அமைக்க வேண்டும் என்றும் 5 ஆயிரம் சதுர அடியில் கட்டிடம் கட்டப் போவதாகவும் அனுமதி பெற்றார் துரைசாமி.  ஆனால் 18 ஆயிரம் சதுர அடியில், விதிமுறைகளை மீறி மண்டபம் கட்டி, அதை ஜெயலலிதாவை வைத்தே திறக்கச் செய்தார் துரைசாமி.  இது துரைசாமியின் சாமர்த்தியத்துக்கு மற்றொரு உதாரணம்.

துரைசாமிக்கு தொந்தரவு தருபவர்களோ, அல்லது அவரை பகைத்துக் கொள்பவர்களோ, ஓரங்கட்டப்படுவார்கள் அல்லது ஒழித்துக் கட்டப்படுவார்கள்.  சைதை துரைசாமியின் நயவஞ்சக திட்டத்துக்கு இடையூறாக இருந்தவர், உதயச்சந்திரன் ஐஏஎஸ்.  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைத்தில் நடந்த ஊழல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததும், அதில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்ததற்கும் உதயச்சந்திரன் வகித்த பங்கு சிறப்பானது.   லஞ்ச ஒழிப்புத் துறை, டிஎன்பிஎஸ்சியின் அத்தனை உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்த பிறகும் கூட, துரைசாமியின் ஏஜென்டுகளாகவே தொடர்ந்து செயல்பட்டு வந்தனர்.  க்ரூப் 1 தேர்வுகளில், நேர்முகத் தேர்வுகளின் போது, சைதாப்பேட்டையில் படித்தேன் என்றால், அந்த தேர்வருக்கு முழு மதிப்பெண்கள் வழங்குவது என்ற வழக்கம் தொடர்ந்து நடைபெற்று வந்தது.  நேர்முகத் தேர்வை முழுமையாக வீடியோ பதிவு செய்யும் நடைமுறையை கொண்டு வந்தார் உதயச்சந்திரன். இதன் காரணமாக, ஒரு உறுப்பினர், ஒரு தேர்வருக்கு முழுமையான மதிப்பெண்கள் வழங்கினால், அந்த வீடியோ பதிவோடு ஒப்பிட்டு, அந்த உறுப்பினரின் மதிப்பெண்களை கேள்விக்குள்ளாக்க முடிந்தது. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பதவிகளை வழங்குவதில் கலந்தாய்வு முறையைக் கொண்டு வந்தார் உதயச்சந்திரன்.  இவரின் இந்த முயற்சிகளுக்கு தேர்வாணைய தலைவர் நட்ராஜ் முழு ஒத்துழைப்பு நல்கினார்.

Udhayachandran_IAS

இவையெல்லாம் துரைசாமியின் கண்களையும், காதுகளையும் உறுத்த, ஜெயலலிதாவிடம் சொல்லி, உதயச்சந்திரனை, அவரது பணி மூப்புக்கு பொறுந்தாத, அதை விடக் கீழான தேயிலை தொடர்பான பணியில் நியமித்தார் ஜெயலலிதா.  நட்ராஜ் எவ்வளவோ முயன்றும், அவரால் இந்த மாறுதல் உத்தரவை ரத்து செய்ய முடியவில்லை.  துரைசாமியின் செல்வாக்கு அத்தகையது.   தற்போது துரைசாமியின் வசூல் வேட்டைக்கு ஒத்துழைக்காத, கார்த்திகேயன் என்ற ஐஏஎஸ் அதிகாரியையும், சென்னை மாநகராட்சியிலிருந்து தூக்கியடித்த பெருமை துரைசாமியையே சேரும்.

எல்லோருக்கும் எழக் கூடிய ஒரு கேள்வி….  ஜெயலலிதா ஏன் துரைசாமியைப் போன்ற ஒரு கபட வேடதாரியை, அதுவும், ஜெயலலிதாவை அதிமுகவை விட்டு நீக்கிய ஒரு நபருக்கு இத்தனை ஆதரவு அளிக்கிறார் என்பதுதான்….

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு உதவிகள் செய்து, அவர்களை எப்படி வளைக்கிறாரோ, அதே போலத்தான் ஜெயலலிதாவையும் வளைத்துள்ளார் துரைசாமி.    ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாருக்கு, தீபக், தீபா என்று இரண்டு பிள்ளைகள் உண்டு. கடந்த 15 ஆண்டுகளாக இவர்களுக்கு பணம் கொடுத்து இவர்களைப் பார்த்துக் கொள்வது சைதை துரைசாமிதான்.   இந்த அடிப்படையில்தான், துரைசாமி, தன்னை கட்சியை விட்டு நீக்கியவர் என்பதையும் மறந்து, 2011 தேர்தலில் துரைசாமிக்கு அதிமுக சார்பில் போட்டியிட இடம் கொடுத்தார் ஜெயலலிதா.

கடந்த ஆண்டு, சசிகலா உள்ளிட்ட மன்னார்குடி மாபியாவை ஜெயலலிதா போயஸ் தோட்டத்திலிருந்து விரட்டியடித்த பிறகு, ஜெயலலிதாவை தனிமை மிகவும் வாட்டியது.  அந்த நேரத்தில், அவரது அண்ணன் பிள்ளைகளைப் பற்றி அவரிடம் கூறி, ஜெயலலிதாவின் அபிமானத்தைப் பெற்றார் துரைசாமி.   வெளிப்படையாக தன் அண்ணன் பிள்ளைகளோடு உறவாட, ஜெயலலிதாவின் ஈகோவும் தடுத்தது, மன்னார்குடி மாபியாவும் தடுத்தது.   அதே நேரத்தில் பாசமும் விடவில்லை.  ஜெயலலிதாவும் மனிதர்தானே….  அந்த நேரத்தில் கச்சிதமாக காய் நகர்த்திய துரைசாமி, ஜெயலலிதாவுக்கு தவிர்க்க முடியாத ஒரு நபராகி விட்டார்.   இதுவே ஜெயலலிதா துரைசாமியின் அட்டகாசங்களை தொடர்ந்து அனுமதித்துக் கொண்டிருப்பதன் மர்மம்.

ஆனால், துரைசாமி ஒரு கடைந்தெடுத்த நயவஞ்சகமான அரசியல்வாதி என்பதை உணர மறுக்கிறார்.  துரைசாமியிடம் உள்ள, துரைசாமி கரப்ஷன் போர்ஸ் மூலமாக, துரைசாமி எதை நினைத்தாலும் சாதிக்க முடியும் என்பதை உணர மறுக்கிறார்.  இப்படி ஒரு நயவஞ்சகமான நபரிடம், இத்தனை அதிகாரங்கள் குவிவது, எப்போதுமே நல்லதல்ல.  அது நாளை ஜெயலலிதாவுக்கே ஆபத்தாக முடியும்.  இதை ஜெயலலிதா உடனடியாக உணர்ந்து, துரைசாமியின் வாலை ஒட்ட நறுக்கினால் மட்டுமே, அவருக்கும் விடிவு.  தமிழகத்துக்கும் விடிவு.  அப்படி ஜெயலலிதா செய்யத் தவறினாரேயானால், அதற்கான கடுமையான விலையை ஜெயலலிதா கொடுக்க வேண்டியிருக்கும்.


ஸ் பெ

unread,
Nov 27, 2014, 2:50:19 AM11/27/14
to panbudan

ஐ யம் வெரி ஹேப்பி.. ஸ்டார்ட் ம்யூசிக்..

JANUARY 5, 2013 BY SAVUKKU LEAVE A COMMENT

Fb-Button

06THSAIDAI_S_DURAIS_522108a

 

கவுண்டமணி.  தமிழ்த் திரையுலகில், நகைச்சுவையில் ஒரு மைல் கல் என்றால் அது மிகையல்ல.  அவ்வப்பொழுது,  மழைக்காலம், வெயில்காலம் போல, தமிழ்த்திரையுலகில் காமெடி நடிகர்கள் தோன்றி மறைவார்கள். ஆனால், காலத்தைக் கடந்து இன்றளவும் நகைச்சுவையாக அன்றாடம் நடைபெறும் உரையாடல்களில் இடம் பெறும் வகையில் ட்ரென்ட் செட்டர்களாக இருப்பவர்கள் கவுண்டமணி மற்றும் வடிவேலு மட்டுமே.

அப்படிப்பட்ட கவுண்டமணியின் புகழ்பெற்ற நகைச்சுவைக் காட்சிதான் சூரியன் திரைப்படத்தில் இடம்பெற்ற, ஸ்டார்ட் ம்யூசிக் என்ற நகைச்சுவைக் காட்சி.  இந்தக் காட்சியைப் பற்றி திடீரென்று எதற்காக இப்போது சவுக்கில் எழுத வேண்டும் என்று கேட்டால் காரணம் இருக்கிறது.

சைதை துரைசாமியைப் பற்றி அலிபாபாவும், ஆயிரம் திருடர்களும் என்று எழுதப்பட்ட கட்டுரைக்காக, மனிதநேய அறக்கட்டளையின் இயக்குநரான கார்த்திகேயன் என்பவர் வழக்கறிஞர் அறிவிக்கை (Lawyer Notice) அனுப்பியிருக்கிறார்.

அதில் மனிதநேய அறக்கட்டளை, உலகத்திலேயே ஒரு மிகச்சிறந்த அப்பாடக்கர் அறக்கட்டளை என்றும், அந்த அப்பாடக்கர் அறக்கட்டளையின் மீது சவுக்கு அவதூறு ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறியுள்ளார். அந்த அறிவிக்கையில், தெரிவித்துள்ள மறுப்பினை அப்படியே வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.  ஒரு ஊடகத்தில் ஒரு கட்டுரை வந்தால், அதில் சம்பந்தப்பட்டவர் மறுப்பு தெரிவித்தால் அதை அப்படியே வெளியிடுவது ஊடக தர்மம்.

ஆனால், அந்த அறிவிக்கையின் இறுதியில் அந்த மறுப்பை அப்படியே வெளிடாவிட்டால் சட்டரீதியாக வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்துள்ளார். (இப்படியெல்லாம் ஒரு பச்சப்புள்ளையப் போயி மெரட்டுனா அது பயந்து போயிடாது…. ?)

வெளியிடாவிட்டால் வழக்கு தொடரப்படும் என்ற மிரட்டலுக்கு என்ன பதில் தெரியுமா ?

வெளியிட முடியாது.

வெளியிட முடியாது என்றவுடன் வழக்கு தொடுக்கப் போகிறார்களே…. இதற்கு என்ன பதில் ?

இதற்குத்தான் கவுண்டமணியின் இந்த வீடியோ காட்சி.

ஐ யம் வெரி ஹேப்பி…. ஸ்டார்ட் ம்யூசிக்…

     

சைதை துரைசாமி என்கிற அலிபாபா அவர்களே…..  சவுக்கு யாரென்று விசாரித்தீர்களா… விசாரித்துமா இந்த மிரட்டல் ?   சவுக்கு தளத்தின் வரலாறு உங்களுக்குத் தெரியுமா ?   தெரியாவிட்டால், தமிழகத்தின் சக்ரவர்த்தியாக இருந்த ஜாபர் சேட் ஐபிஎஸ் என்ற அதிகாரியிடம் கேட்டுப்பாருங்கள்.  சவுக்கு தளத்தால் அவர் பட்ட பாட்டை கதை கதையாகச் சொல்லுவார்.

வழக்கு தொடுக்கும் உங்கள் முடிவை சவுக்கு முழு மனதோடு வரவேற்கிறது.  உங்கள் வழக்கை சட்டரீதியாக நீதிமன்றத்தில் சந்திக்க சவுக்கு தயாராக இருக்கிறது.

கார்த்திகேயன் உங்கள் சார்பாக அனுப்பிய அறிக்கையில், அலிபாபா 1980 முதலே சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அவர் செய்த, செய்து வரும் சமூக சேவைகளின் பட்டியலாக அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பது…

எண்பதுகளில் பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்துள்ளார்.

வேளச்சேரியில் இலவச திருமண மண்டபம் கட்டிக் கொடுத்துள்ளார்.

இறந்தவர்களின் உடல்களை வைக்க இலவச குளிர்பதனப் பெட்டி

நூற்றுக்கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் கட்டுகிறார்

இலவச ஹாஸ்டல்கள் நடத்துகிறார்

முதியோர் ஓய்வூதியம் வழங்குகிறார்

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்குகிறார்.  இவையெல்லாம், மனிதநேய அறக்கட்டளையின் வழியாக செய்யப்படும் உதவிகள் என்று சொல்லப்பட்டுள்ளது அந்த அறிக்கையில்.

சரி… மனிதநேய அறக்கட்டளைக்கு, அலிபாபாவைப் போன்ற ஏராளமான புரவலர்கள் நிதி உதவி செய்வார்கள், அதை வைத்து, தொழில் நடத்துகிறார்…. மன்னிக்கவும்…. சேவை செய்கிறார் என்று பார்த்தால் அந்த அறிவிக்கையில் உள்ள அடுத்த வரி… அதிர்ச்சி அடைய வைக்கிறது.

It is also for you to understanding that it is managed with the personal funds of Thiru.Saidai Sa.Duraisamy. The byelaws of the trust say that “NO DONATIONS SHOULD BE ACCEPTED EITHER IN CASH OR IN KIND”.

உங்கள் புரிதலுக்காக (சவுக்கின் மரமண்டையில் உறைக்கும் வகையில்) சொல்லிக்கொள்வது என்னவென்றால் மனிதநேய அறக்கட்டளையின் விதிகளில் தெளிவாகச் சொல்லப்பட்டிருப்பது பணமாகவோ, பொருளாகவோ எந்த வகையிலும் மனிதநேய அறக்கட்டளை நன்கொடைகளைப் பெறாது.  அந்த அறக்கட்டளை முழுமையும், சைதை துரைசாமியின் சொந்த நிதியினால் நடத்தப்படுகிறது.

இன்று உலகிலேயே மிகப் பெரிய புரவலாக அறியப்படுபவர் வாரென் பஃபெட் எனப்படுபவர். அமெரிக்கக் குடிமகனான இவர் 2008ல் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையால் உலகிலேயே பெரிய பணக்காரராக அறிவிக்கப்பட்டார். 2008ம் ஆண்டில் இவரது சொத்து மதிப்பு மட்டும் 62 பில்லியன் டாலர்கள்.

Warren_Buffett_KU_Visit

வாரன் பஃப்பெட்

ஜுன் 2006ல் தனது சொத்துக்களை சமூக சேவை அமைப்புக்களுக்கு எழுதி வைக்கப்  போவதாக அறிவித்தார்.  பில்கேட்ஸ் நடத்தும் சமூக சேவை அமைப்புக்கு 30.7 பில்லியன் டாலர்களை எழுதி வைத்தார்.

இவர் பெயரிலேயே பஃப்பெட் பவுன்டேஷன் என்ற அமைப்பைத் தொடங்கி அதற்கு தன் மனைவி பெயரிலிருந்த 2.6 பில்லியன் மதிப்பிலான எஸ்டேட்டை எழுதி வைத்தார்.   அணு ஆயுத எதிர்ப்புக்காக 50 மில்லியன் டாலர்களை வழங்கினார்.

ஒவ்வொரு ஆண்டும், தன்னோடு விருந்துண்ணும் வாய்ப்பை ஏலம் விட்டு, அதன் மூலம் வரும் வருமானத்தையும் சமூக சேவை அமைப்புக்களுக்கு வழங்கினார்.  தான் சமூக சேவைக்காக பணம் வழங்குவது அல்லாமல், உலகின் மற்றொரு பெரிய பணக்காரரான பில் கேட்ஸையும், ஃபேஸ் புக் நிறுவனர் மார்க் ஸுக்கர் பெர்கையும் தங்கள் மொத்த சொத்தில் 50 சதவிகிதத்தை சமூக சேவைக்காக எழுதி வைக்கும் ஒரு ஒப்பந்தத்தில் 2 டிசம்பர் 2010 அன்று கையெழுத்திட வைத்து, இவரும் கையெழுத்திட்டார்.

இன்று உலகின் மிகப்பெரிய புரவலராக வாரன் பஃப்பெட் அறியப்படுகிறார்.

வாரன் பஃபெட்டின் வாழ்கை ஒரு திறந்த புத்தகம்.  வாரன் பஃப்பெட் பற்றி 20க்கும் மேற்பட்ட நூல்கள் வந்துள்ளன.  1930ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள நெப்ராஸ்கா மாகாணத்தில் வாரன் பஃப்பெட் பிறந்தது முதல், காலையில் என்ன சிற்றுண்டி உண்ணுகிறார் என்பது வரை, அத்தனையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், அலிபாபா அனுப்பியுள்ள வழக்கறிஞர் அறிவிக்கையைப் பார்க்கும் போது, அலிபாபா அவரை விட மிகப்பெரிய புரவலராக இருப்பார் என்று எண்ணத் தோன்றுகிறது. சரி.. அப்படியே ஏற்றுக் கொள்வோம்.  வாரன் பஃபெட்டின் வாழ்க்கை அவருக்கு எப்படிப் பணம் வந்தது, எப்படி செலவு செய்தார், எப்படி தானம் செய்து கொண்டிருக்கிறார் என்பன போன்ற அத்தனையும் வெளிப்படையாக உள்ளது.

ஆனால் சைதை துரைசாமியைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. சைதை துரைசாமியோடு ஆரம்ப காலங்களில் பழகியவர்களைக் கேட்டால், இவர் கரூரிலிருந்து சென்னைக்கு வருகையில் ஒரு சாதாரண நபராக… சென்னை மொழியில் சொன்னால் காயிதம் பொறுக்கியாக  வந்தார் என்று கூறுகிறார்கள்.

இன்று சைதை துரைசாமியின் சொத்து மதிப்பு, 41 கோடி ரூபாய்.  சென்னை, பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள பெருங்குடியில் 2 லட்சத்து 15 ஆயிரத்து 400 சதுர அடியில் வணிக வளாகம் வைத்துள்ளார்.  இந்த இடத்தை 2004ம் ஆண்டு வாங்கியபோது அதன் மதிப்பு 41 லட்சத்து 52 ஆயிரம் என்று குறிப்பிட்டுள்ளார்.  2004லேயே, பழைய மகாபலிபுரம் சாலையில் 2 லட்சம் சதுர அடி குறைந்தது 2 கோடி இருக்கும்.  ஆனால் இவர் 41 லட்சத்துக்கு வாங்கியதாக கூறுகிறார்.  சரி அப்படியே இவர் இதை உழைத்து வாங்கினார் என்று வைத்துக் கொள்வோம்.

S.DURAISAMY_Page_13

2005ல் 17 லட்ச ரூபாய்க்கு ஒரு ஹ்யுண்டாய் கார் வாங்கியுள்ளார்.  இவர் மனைவி 2006ல் 8 லட்ச ரூபாய்க்கு ஒரு ஸ்கார்ப்பியோவும், 2008ல் 20 லட்ச ரூபாய்க்கு ஒரு போர்ட் என்டவர் காரும் வாங்கியுள்ளனர். இது போக இரண்டு அம்பாசிடர் கார்கள் உள்ளன.

சின்னதாராபுரத்தில் 1969ம் ஆண்டு வெறும் பத்தாம் வகுப்பு படித்த ஒருவர், இப்படி வாரன் பஃபெட்டுக்கு இணையான புரவலராகியிருக்கிறார் என்றால் அது மகிழ்ச்சிக்குரிய விஷயமே.

மார்ச் 2011 அன்று உள்ளபடி இவருக்கு வெளிப்படையாக உள்ள கடன் 44.83 கோடி.   ஆண்டு வருமானமாக இவர் வருமான வரித்துறையிடம் காட்டும் தொகை வருடத்துக்கு 1.2 கோடி.

S.DURAISAMY_Page_11

இந்த 1.2 கோடி, இவர் மாதந்தோறும் செலுத்த வேண்டிய தவணைத் தொகைகளைக் கழித்த பிறகு என்று வைத்துக் கொள்வோம். இவருக்கு மாதந்தோறும் வரும் வருமானம் 10 லட்சம்.

இந்த 10 லட்சத்தில், இவருக்கு மாதாந்திர செலவுக்கு ஐந்து வாகனங்களுக்கு பெட்ரோல், வாகன ஓட்டுநருக்கான ஊதியம், இவரின் வாழ்க்கை ஸ்டைலுக்கு ஏற்றவாறு ஏற்படும் செலவுகள், தொலைபேசிக் கட்டணம், வேலைக்காரர்களுக்கு மாத ஊதியம், இதர செலவுகள் ஆகியவற்றுக்கு குறைந்தது 4 லட்ச ரூபாய் தேவைப்படும். மீதம் உள்ள தொகை 6 லட்சம்.

இப்போது சைதை துரைசாமி, தனது சொந்த செலவில் மனிதநேய அறக்கட்டளையின் மூலமாக செய்து வரும் நலத்திட்டங்கள் என, அவரது மையத்தின் இயக்குநர் வழக்கறிஞர் அறிவிக்கையில் தெரிவித்துள்ளதை மீண்டும் ஒரு முறை பார்ப்போம்.

ஏற்கவே அலிபாபா கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது போல, வேளச்சேரி திருமண மண்டபம் மொத்தம் 18 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது.

இறந்தவர்களின் உடல்களை வைக்க இலவச குளிர்பதனப் பெட்டி

நூற்றுக்கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் கட்டுகிறார்

இலவச ஹாஸ்டல்கள் நடத்துகிறார்

முதியோர் ஓய்வூதியம் வழங்குகிறார்

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்குகிறார்.

இவை சைதை துரைசாமி அனுப்பிய அறிவிக்கையில் உள்ளவை.  அவர்கள் சொல்லாமல் விட்டதை சவுக்கு சொல்கிறது கேட்டுக் கொள்ளுங்கள்.

மனிதநேய அறக்கட்டளை, கிராமப்புற மாணவ, மாணவிருக்காக இலவச ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். மற்றும் குரூப்-1 தேர்வு ஆகியவற்றுக்கான இலவசப் பயிற்சிகளை அளித்துவருகிறது. இந்த பயிற்சி பெறும் மாணவ, மாணவியருக்கு இலவச விடுதி, உணவு மற்றும் பாடநூல்கள்கள் உள்பட பல்வேறு வசதிகளை இலவசமாக செய்து தருகிறது.

தமிழகம் முழுவதும் எல்.கே.ஜி.யில் இருந்து பட்டப்படிப்பு, மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் போன்ற உயர்கல்வி படிக்கும் ஏழை மாணவர்கள் 1,100 பேருக்கு மனிதநேய அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு தேறிய மாணவ, மாணவிகள் 50 பேரை தேர்ந்தெடுத்து, அவர்கள் மேல்நிலை கல்வி, கல்லூரி படிப்பு மற்றும் ஐ.ஏ.எஸ். போன்ற உயர்கல்விகள் படிப்பது வரையிலான முழுச் செலவையும் மனிதநேய அறக்கட்டளையே ஏற்கிறது.

மாநகராட்சிப் பள்ளியில் பயிலும் 50 மாணவ, மாணவியருக்கு கடந்த 26 வருடங்களாக இலவச நோட்டு, புத்தகங்களை மனிதநேய அறக்கட்டளை வழங்கி வருகிறது.

மதுவிலக்கு கொள்கையை வலியுறுத்தும் வகையில், குடிப்பழக்கத்தை கைவிடும் நபர்களுக்கு 1 சவரன் தங்க மோதிரம் பரிசளிக்கப்பட்டு வருகிறது.

ஏழை, எளிய மக்களின் அவசரத் தேவைக்கு உதவும் வகையில், இறந்தவர்களின் உடலை பாதுகாப்பதற்காக குளிர்சாதன சவப்பெட்டிகள், மற்றும் இலவச அமரர் ஊர்தி போன்ற சேவைகளும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

750க்கும் அதிகமான ஊனமுற்றோருக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

ஏழை, எளிய மக்களுக்கு ஈமச்சடங்குகள் செய்வதற்கான உதவித்தொகை

நலிந்த நடைபாதை வியாபாரிகளுக்கு உதவித்தொகை

அரவாணியர் வசதிக்காக தகவல் தொடர்புக்கான அலுவலகம்

இந்த சேவைகளும் முழுமையான பட்டியல் அல்ல.  இவரின் சேவைகள் கணக்கிலடங்கா.

சவுக்கு வாசர்களுக்கு ஓரளவு, கணக்கு, புள்ளி விபரம், விலைவாசி நிலவரம் தெரியும் என்று நினைக்கிறேன்.  இவை எல்லாவற்றையும் செய்ய, மாதம் 6 லட்ச ரூபாய் வீதம், ஆண்டுக்கு 72 லட்ச ரூபாய் போதுமா ? ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது போல, தற்போது மனித நேய அறக்கட்டளையின் பயிற்சி மையங்கள் தமிழகத்தில் 10 இடங்களில் செயல்பட்டு வருகின்றன என்பதையும் கணக்கில் கொள்ளுங்கள்.

இவை அத்தனையும் ஒரு வருடத்துக்கு 72 லட்ச ரூபாயில் செய்ய முடியுமா ?   எப்படி முடியும் என்று சந்தேகம் வருகிறதா இல்லையா…

இதத்தானேய்யா கேட்டான் அந்த சவுக்குப்பய… இதுக்குப் போயி அவனுக்கு நோட்டீஸ் அனுப்புனா… என்ன கொடும சைதை இது… ?

3 பில்லியன் டாலர்களை சாதாரணமாக, தானமாக கொடுத்திருக்கும் வாரன் பஃபெட் கூட இந்த அளவுக்கு அலட்டிக் கொள்ளவில்லை…. ஆனால் இந்த சைதை துரைசாமி கொடுக்கும் பில்டப் இருக்கிறதே….

புரட்சித் தலைவி அம்மாவின் கனிவான பார்வைக்கு இந்த வீடியோ சமர்ப்பிக்கப்படுகிறது.. …

 

    

 

 

பார்த்து விட்டீர்களா…  இது மட்டுமில்லை… பத்திரிக்கையாளர்களிடம் பணம் கொடுத்து சைதை துரைசாமி தன்னைப் பற்றி ஊடகங்களில் வரவழைத்துள்ள செய்திகளைப் பாருங்கள்….

 390eefb8982e_Anbu_Palam_15.07.10_1

c20c4869f5f9_crime_today_1

0e9bac762d42_crime_today_2

d3fdf8f42470_crime_today_3

 

 

பார்த்து விட்டீர்களா…. இது குறித்து சவுக்கு எதுவும் சொல்லப்போவதில்லை… கவுண்டமணியின் இந்த வீடியோவைப் பாருங்கள்..

  https://savukku.net/4172/

 

ஸ் பெ

unread,
Nov 27, 2014, 2:51:43 AM11/27/14
to panbudan

முகமூடி.. …

JANUARY 27, 2013 BY SAVUKKU LEAVE A COMMENT

Fb-Button

1994ம் ஆண்டு வெளியான திரைப்படம் தி மாஸ்க்.  பிரபலமாக காமிக்ஸ் கதையாக வெளிவந்து கொண்டிருந்த தி மாஸ்க் என்ற கேரக்டரை, திரைப்படமாக எடுத்தார் சக் ரஸ்ஸல் என்ற இயக்குநர்.  ஹாலிவுட் நட்சத்திரம் ஜிம் கேர்ரி இந்தப் படத்தில் மாஸ்க் கேரக்டரை ஏற்று நடித்திருப்பார்.

la_mascara_1994_1

படத்தின் கதை என்னவென்றால், ஒரு வங்கியில் க்ளெர்க்காக இருக்கும் ஜிம் கேர்ரிக்கு, அவர் வங்கிக்கு வாடிக்கையாளராக வரும் கேமரூன் டயஸை காதலிக்க வேண்டும் என்று ஆசை.  அதற்கு பணம் வேண்டும்.  சாதாரண க்ளெர்க்காக இருக்கும் தன்னை கேமரூன் டயஸ் காதலிப்பாரா என்று ஏக்கத்தோடு ஜிம் கேர்ரி இருக்கும் வேளையில் அவருக்கு ஒரு முகமூடி கிடைக்கும்.  அந்த முகமூடியை முகத்தில் வைத்ததும், அவருக்கு நினைத்ததையெல்லாம் செய்யும் சக்தி கிடைக்கும்.  அந்த சக்தியை வைத்து, அவர் வில்லனை பந்தாடுவார், தன் காதலியைக் கைபிடிப்பார்.  வில்லனின் வங்கிக் கொள்ளையைத் தடுப்பார். அந்த முகமூடியை கைப்பற்ற வில்லன் எடுக்கும் அத்தனை முயற்சிகளையும் முறியடிப்பார்.  ஜிம் கேர்ரி மிகவும் அற்புதமாக நடித்திருந்த இந்தப்படம் 1994ம் ஆண்டு வெளியானது. கம்ப்யூட்டர் க்ராபிக்ஸ் அவ்வளவாக வளர்ச்சியடையாத அந்த நாளில், மிகச் சிறப்பாக கம்ப்யூட்டர் க்ராபிக்ஸ்களால் இப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது.

கடந்த புதன் அன்று (23.01.2013) லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் ஒன்று கொடுக்கப்பட்டது.  அந்தப் புகாரில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டித் தேர்வுகளில் ஏராளமான ஊழல் நடைபெற்றுள்ளதாக வந்தத் தகவலை அடுத்து, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

சைதை துரைசாமி என்பவர், மனிதநேயம் ஐஏஎஸ் அகாடமி என்ற ஒரு பயிற்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்தப் பயிற்சி நிறுவனத்தை நடத்தி வரும் முன்னாள் எம்.எல்.ஏவான சைதை துரைசாமி தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் மற்றும் அப்போது தலைவராக இருந்த காசி விஸ்வநாதன் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து, தனது மனிதநேயம் ஐஏஎஸ் அகாடமிக்காக முறைகேடுகளில் ஈடுபட்டார்.

16.12.2007 அன்று க்ரூப் 1 பதவிக்கான பூர்வாங்கத் தேர்வு நடைபெற்றது.  இந்தப் பூர்வாங்கத் தேர்வையடுத்து, 16 மற்றும் 17.08.2008 ஆகிய நாட்களில் மெயின் தேர்வு நடைபெற்றது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மெயின் தேர்வின் கேள்வித்தாள் வடிவத்தை (pattern) பல ஆண்டுகளாக ஒரே மாதிரியாக வைத்திருந்தது.   அது என்ன வடிவம் என்றால், 12 முதல் 15 கேள்விகள் விரிவான பதில் எழுதும் வகையில் கேட்கப்படும்.  அந்தக் கேள்விகளுக்கு 5 முதல் 15 மதிப்பெண்கள் வரை வழங்கப்படும்.  இந்தக் கேள்வித்தாள் வடிவத்தை 2008 மெயின் தேர்வில், தேர்வாணையம், எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீரென்று மாற்றியது.

16 மற்றும் 17.08.2008 ஆகிய நாட்களில் தேர்வெழுதிய மாணவர்கள், முதல் கேள்வித்தாளில் 99 கேள்விகளும், இரண்டாவது கேள்வித்தாளில் 104 கேள்விகளும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  இந்தக் கேள்விக்கான மதிப்பெண்கள் 1 மதிப்பெண் முதல் 15 மதிப்பெண் வரை பிரிக்கப்பட்டிருந்தன.  திடீரென்று ஏற்பட்ட இந்தக் கேள்வித்தாள் மாற்றம் காரணமாக, அதிர்ச்சியடைந்த மாணவர்கள் பலர் தேர்ச்சியடையவில்லை.

ஆனால் சைதை துரைசாமி என்பவர் நடத்தும் மனிதநேயம் ஐஏஎஸ் அகாடமி நடத்தும் பயிற்சி மையத்தில் படித்த மாணவர்கள், இந்த வினாத்தாள் வடிவ மாற்றத்தால் எந்த அதிர்சியும் அடையாமல் சிறப்பாக தேர்வெழுதியுள்ளனர். இவர்கள் அதிர்ச்சியடையாமல் சிறப்பாக தேர்வெழுதியதற்கான காரணம், மாற்றப்பட்ட புதிய வினாத்தாள் வடிவமைப்பில், மனிதநேயம் பயிற்சி மையத்தில் மட்டும் 5 முறை மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அந்த ஆண்டு நடந்த க்ரூப் 1 தேர்வில், மொத்தம் உள்ள 128 இடங்களில், மனிதநேய பயிற்சி மையத்தின் மாணவர்கள் 68 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.    இந்த பயிற்சி மையத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் தேர்ச்சியடைந்துள்ளது, ஒரு பெரிய ஊழலுக்கான தன்மையைக் கொண்டுள்ளது.

விசாரணையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் முன்னளாள் தலைவர் காசி விஸ்வனாதன் சைதை துரைசாமி நடத்தும் பயிற்சி மையத்துக்கு மட்டும், கேள்வித்தாள் மாற்றப்பட்ட விபரத்தை முன்னதாகவே தெரிவித்ததால், அந்தப் பயிற்சி மையத்தின் மாணவர்களுக்கு மாதிரித் தேர்வு நடத்த முடிந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

ஆகையால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நடந்துள்ள முறைகேடுகளை விசாரித்து வரும் லஞ்ச ஒழிப்புத் துறை, சைதை துரைசாமியின் பயிற்சி மையத்தின் முறைகேடுகளையும், காசி விஸ்வநாதனுக்கு அதில் உள்ள பங்கு குறித்தும் விசாரிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

Complaint_on_Saidai_Duraisamy_Page_1

Complaint_on_Saidai_Duraisamy_Page_2

இந்தப் புகார், லஞ்ச ஒழிப்புத் துறையின் காவல் கண்காணிப்பாளரிடம் நேரடியாக வழங்கப்பட்டது.  ஏற்கனவே தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்துள்ளதால், புதிதாக வழக்கு பதிவு செய்ய, அரசின் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை.  ஆகையால் லஞ்ச ஒழிப்புத் துறையில் உள்ள அதிகாரிகள், இந்தப் புகார் குறித்தும் விசாரணை நடத்துவார்கள் என்று நம்புவோம்.   இந்த வழக்கு தொடர்பாக, தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளின்போதே, மனிதநேயம் அறக்கட்டளையின் பங்கு குறித்து சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன.  ஆனால் அந்த ஆதாரங்களின் மீது நடவடிக்கை எடுப்பதா, வேண்டாமா என்று லஞ்ச ஒழிப்புத் துறை முடிவெடுக்காமல் இருந்தது என்று தகவல்கள் கூறுகின்றன. தற்போது இந்தப் புகாருக்குப் பிறகாவது நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புவோம்.  அப்படி எடுக்கவில்லையென்றால், இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்பது, லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்கு தெரியும்.

இந்தப் புகார் குறித்து பத்திரிக்கைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  ஆனால் அவர்கள் இது குறித்து எந்தச் செய்தியையும் வெளியிடமாட்டார்கள் என்ற விபரம் சவுக்கு வாசகர்கள் அறிந்ததே.

பத்திரிக்கைகளுக்கு இந்த விபரம் தெரியப்படுத்தப்பட்டதுமே, சைதை துரைசாமிக்கும் இந்த விபரம் தெரிந்தது.  தெரிந்ததும் அவருக்கு வந்ததே கோபம்….  கொலைவெறியாகி விட்டார்….. “இந்தப் பொறம்போக்குப் பய சும்மாவே இருக்கமாட்டான் போலருக்கே… இவனை ஒரு வழி பண்ணாத்தான் அடங்குவான்…. நான் யாருன்னு இவனுக்கு காட்றேன்….  ஒவ்வொரு வருஷமும் 60 கோடி ரூபாய்க்கு மேல என் சொந்தப்பணத்தை செலவு பண்ணி இவ்வளவு உதவிகள் பண்ணிக்கிட்டு இருக்கேன்…. எவ்வளவு திமிரு இருந்தா என் மேலயே கம்ப்ளெயின்ட் கொடுப்பான்” என்று ஏகவசனத்தில் 15 நிமிடங்களுக்கு திட்டியுள்ளார்.

திட்டியதோடு நிற்காமல், தப்பித்தவறி ஏதாவது ஒரு ஊடகம் செய்தி வெளியிட்டு விடப்போகிறார்கள் என்பதால் ஊடக முதலாளிகளிடம் பேசியிருக்கிறார்.

தி மாஸ்க் படத்தில் ஜிம் கேர்ரிக்கு கிடைத்த முகமூடி போன்றதுதான் சைதை துரைசாமியின் புரவலர் வேடம்.  ஜிம் கேர்ரிக்கு முகமூடி போட்டதும் கிடைக்கும் அசாத்திய சக்தியைப் போல, முகமூடி போட்டதும் சைதை துரைசாமி கல்வித்தந்தை, மாநகரத் தந்தை, அதிகாரிகளின் தந்தை, கொடை வள்ளல் கர்ணனின் தந்தை போன்ற பல்வேறு அவதாரங்களை எடுக்கிறார்.  முகமூடியைக் கழற்றினால் என்ன ஆகும் என்பதுதான், புகார் குறித்து தகவல் தெரிந்ததும் சைதை நடந்து கொண்ட முறை.   முகமூடியை கழற்றியதும் சைதை துரைசாமியின் அசல் முகம் வெளி வந்து விடுகிறது.  அசல் முகம் என்பது என்ன ?   அசல் முகம் என்பது, கரூரிலிருந்து சென்னைக்கு காகிதம் பொறுக்கியாக வந்திறங்கி, புறம்போக்கு நிலங்களை வளைத்து, ஆக்ரமித்து, முன்னாள் அதிமுக பிரமுகர் ஜேப்பியாரின் அடியாளாக இருந்ததுதான இவரது அசல் முகம்.  புறம்போக்கு நிலங்களை வளைத்த பழக்கத்தில்தான், புகார் கொடுத்தவரை புறம்போக்கு என்று திட்டியிருக்கிறார்.

அந்த வகையில், சைதை துரைசாமியின் முகமூடியை கழற்றிய பெருமை நம்மையே சாரும்.   சவுக்கு தளம், சைதை துரைசாமியை குறி வைத்து தொடங்கப்பட்டதல்ல.  சமூகத்தில் நடக்கும் அவலங்களையும் ஊழல்களையும் அம்பலப்படுத்துகையில், சைதை துரைசாமியைப் பற்றிய விபரங்களும் தெரிய வந்ததால், நீண்ட விசாரணைக்குப் பிறகு, துரைசாமி குறித்த ஊழல்கள் குறித்தும் எழுதப்பட்டது.

06THSAIDAI_S_DURAIS_522108a

அந்தக் கட்டுரை துரைசாமி தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே… அதை விடுத்து, நோட்டீஸ் அனுப்புவது, மிரட்டுவது, புறம்போக்கு என்று திட்டுவது என்று சைதை இறங்குவாரேயானால், அதைச் சந்திக்க இந்தத் தளம் தயாராகவே இருக்கிறது.   சிகப்பு விளக்கு வைத்த காரில், மாநகரத்தந்தையாக வலம் மனிதரின் முகமூடிக்குப் பின்னால் இப்படி ஒரு காகிதம் பொறுக்கி இருக்கிறார் என்பதை நாம்தான் அம்பலப்படுத்தியுள்ளோம் என்பதில் நாம் பெருமை கொள்ளலாம்.

https://savukku.net/4234/

சைதை துரைசாமியைப் பற்றி விசாரித்தால், அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியாக தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன.   பத்து தொடர் கட்டுரைகள் எழுதும் அளவுக்கு தகவல்கள் வந்துள்ளன.  அந்தத் தகவல்களை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.   விசாரித்து உண்மையறிந்தவுடன், துரைசாமி தனது முகமூடியை நிரந்தரமாக கழற்றும் அளவுக்கு கட்டுரைகள் வெளியிடப்படும்.  தயாராக இருங்கள் சைதை துரைசாமி.

ஸ் பெ

unread,
Nov 27, 2014, 2:52:39 AM11/27/14
to panbudan

டுபாக்கூர் துரைசாமி.

JULY 8, 2013 BY SAVUKKU LEAVE A COMMENT

Fb-Button

சைதை துரைசாமி நடத்தும் மனிதநேய அறக்கட்டளையின் தகிடுதத்தங்கள் குறித்து, சவுக்கு தளத்தில் தொடர்ந்து எழுதப்பட்டு வந்துள்ளது. ஏகலைவன் வார இதழிலும் இது குறித்து கட்டுரைகள் வெளியிடப்பட்டிருந்தன.  தற்போது தமிழ்நாடு அரசு குடிமைப் பயிற்சி நிலையம், ஏகவலைவன் வார இதழுக்கு, தங்களிடம் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தொடர்பான ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளது.

july_12_poster_1

தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருந்த துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தின் முதல்வர் (பொறுப்பு) திருமதி. பி.பிரேம் கலாராணி ஏகலைவன் நிர்வாகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதன்படி தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலில் உள்ள முல்லை முகிலன், கே.பாலகிருஷ்ணன், டி.கங்காதரன், எம்.பரணிகுமார், ஆர்.கேசவன், எஸ்.ராமமூர்த்தி ஆகியோர் தங்களின் பயிற்சி மையத்தில் படித்த மாணவர்கள் என்றும், மேற்கண்ட மாணவர்கள் தனியார் நிறுவனங்களான மனிதநேயம் இலவச பயிற்சி மையம் மற்றும் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி ஆகியவற்றில் படித்ததாக கூறுவது தவறானது என்றும், அதற்கான ஆதாரங்களையும் வழங்கியுள்ளார்.

Untitled

ஐஏஎஸ் பயிற்சி மையங்கள் இன்று புற்றீசல் போல பல்கிப் பெருகி வருகின்றன. இந்த நிறுவனங்கள், படோடாபமாக, விளம்பரங்கள் செய்கின்றன.  பிரபலங்களை வைத்து விளம்பரங்கள் கொடுப்பதும், கட்டணச் சலுகை என்று சொல்வதும், முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்று சொல்லி அறிவிப்பு செய்வதும் வழக்கமே.  தேர்வு முடிவுகள் வெளிவருகையில், இந்த பயிற்சி மையங்கள் தங்களிடம் படித்த மாணவர்கள், ஐஏஎஸ் அல்லது ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றால் அதை விளம்பரப்படுத்திக் கொள்வதும் நியாயமானதே.

ஆனால் அவ்வாறு விளம்பரப்படுத்திக் கொள்கையில், உண்மையிலேயே அந்தந்த பயிற்சி நிலையங்களில் பயின்று வெற்றி பெற்றவர்களின் பெயர்களை மட்டுமே விளம்பரப்படுத்திக்கொள்ள வேண்டும்.  அதுவே நியாயமானது.  ஆனால் பல நிறுவனங்கள், ஒரே ஒரு நாள் தங்கள் நிறுவனத்தில் போட்டித் தேர்வுகள் எழுதியவர்களைக் கூட, தங்கள் நிறுவனத்தில் பயின்று வெற்றி பெற்றார்கள் என்று விளம்பரப்படுத்துவதற்கும், 45 சதவிகித வட்டி தருகிறேன் என்று நிதி நிறுவனங்கள் விளம்பரப்படுத்துவதற்கும் எந்த வேறுபாடும் கிடையாது.

சிவில் சர்வீஸ் போன்ற போட்டித் தேர்வுகள் எழுதுபவர்கள், ஏதாவது ஒரு பயிற்சி நிலையத்தில் முழு நேரம் பயில்வார்கள்.  அவ்வாறு பயில்கையில் எந்த பயிற்சி நிலையத்தில் போட்டித் தேர்வுகள் நடத்தினாலும், அந்தத் தேர்வுகளில் கலந்து கொள்வார்கள். இவ்வாறு அவர்கள் தேர்வுகளில் கலந்து கொள்வது, அவர்களின் பயிற்சியின் அளவை சோதித்துப் பார்ப்பதற்காக.  இப்படி ஒரு நாள் தேர்வு எழுதினார்கள் என்பதாலேயே அவர்கள் தேர்வெழுதிய பயிற்சி நிலையத்தில் படித்தார்கள் என்று கூற முடியுமா ?  ஆனால் இப்படிப்பட்ட மோசடியைத்தான் பல நிறுவனங்கள் அரங்கேற்றி வருகின்றன.

ஒரு சாதாரண பயிற்சி நிறுவனம் இது போல செய்தால் அது மோசடிதான் என்றாலும், ஏதோ ஆர்வக்கோளாறில் செய்து விட்டார்கள் என்று மன்னித்து விடலாம்.  ஆனால் சைதை துரைசாமியின் பயிற்சி நிறுவனம் இதை செய்தால் ? அது மிகப்பெரிய மோசடி என்பது மட்டுமல்ல…. ஆபத்தானதும் கூட.  ஏனென்றால், சைதை துரைசாமி தன்னை மிகப்பெரிய புரவலராகவும், கல்வியாளராகவும் காட்டிக் கொள்பவர். இவருக்கு இருக்கும் ஊடக பலம் வேறு எந்த பயிற்சி நிறுவனத்துக்கும் கிடையாது.

சைதை துரைசாமியும், தினத்தந்தி அதிபரின் மகனும் தொழில் பங்குதாரர்கள் என்பதால்,  சைதை காலையில் சிறுநீர் கழித்தால் கூட, அதை நாலு கால செய்தியாக தினத்தந்தி வெளியிடும்.  அப்படி தினத்தந்தி வெளியிட்ட ஒரு செய்திதான், “ஐஏஎஸ் ஐபிஎஸ் தேர்வு முடிவுகள். சைதை துரைசாமியின் மனிதநேயம் மையத்தில் படித்த 45 மாணவர் தேர்வு”.  இந்த மோசடி குறித்து ஏற்கனவே ஏகலைவன் இதழில் வந்த கட்டுரை சவுக்கில் டுபாக்கூர் ஐஏஎஸ் அகாடமிகள் என்ற கட்டுரையில் எடுத்துரைக்கப்பட்டிருந்தது.  இதையொட்டி, அரசு பயிற்சி நிறுவனம் வெளியிட்ட ஆதாரங்கள்தான், சைதை துரைசாமியின் முகமூடியை கிழித்தெரிந்திருக்கிறது.

IAS3 

சைதை துரைசாமி தனது பயிற்சி மையத்தில் படித்து சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் என்று அறிவித்த பட்டியலில் உள்ளவர்களில் சிலர், அரசு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றார்கள் என்பதற்கான ஆதாரங்கள் இதோ….

tnias

 jv1

jv2

jv3

jv6

சைதை துரைசாமியின் மோசடி அப்பட்டமாக வெளிப்பட்டு விட்டது. இப்போது இதற்கு என்ன சொல்லப்போகிறார் துரைசாமி ?

அன்பார்ந்த துரைசாமி அவர்களே… உங்கள் முகமூடி முழுமையாக கிழிந்து விட்டது.  இனி இந்த புரவலர் வேடத்தையெல்லாம் களைந்து விட்டு, உங்கள் பழைய தொழிலான ரியல் எஸ்டேட் ப்ரோக்கர் தொழிலையே செய்யத் தொடங்குங்கள்.  உங்கள் தொழில் பங்குதாரரான வி.என்.கண்ணன் மற்றும் உங்கள் கைத்தடியான கடும்பாடி இவர்களோடு ஒரு அலுவலகம் போட்டு ரியல் எஸ்டேட்டில் இறங்கினால், நன்றாக கல்லா கட்டலாம். நீதிமன்றத்தில் வழக்கில் உள்ள சொத்துக்களாக பார்த்து அபகரித்து ஆட்டையை போடும் வேலையையே செய்யத் தொடங்குங்கள். அதுதான் உங்களுக்கு பொருத்தமாக இருக்கிறது.  இந்த புரவலர் வேலையெல்லாம் செட் ஆகல பாஸ். 

https://tamilwhip.com/4793/

ஸ் பெ

unread,
Nov 27, 2014, 2:53:22 AM11/27/14
to panbudan

சைதை துரைசாமி முகத்திரையைக் கிழிக்கும் தொடருக்குத் தடை…

JUNE 10, 2013 BY SAVUKKU LEAVE A COMMENT

Fb-Button

சைதை துரைசாமி… பெரிய மனிதர் போலவும், புரவலர் போலவும் காண்பித்துக் கொண்டு, அயோக்கியத்தனங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கும், சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி பற்றி, சவுக்கில் விரிவான கட்டுரைகள் வந்துள்ளன.

saidai_poster

தற்போது ஏகலைவன் என்ற அரசியல் வார இதழ், சைதை துரைசாமியின் முகத்திரையை கிழித்து, அவரின் அசல் முகம் என்ன என்பதை அம்பலப்படுத்தும் வகையில் “மனிதநேயத்தின் மர்ம பக்கங்கள்” தொடரை தொடங்கியது.   இத்தொடர் குறித்து பரவலாக விளம்பரங்களும் செய்யப்பட்டன.

இந்நிலையில், சைதை துரைசாமியின் அசல் முகம் வெளிப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில், சென்னை சிவில் நீதிமன்றத்தில், இத்தொடர் வெளியிடுவதற்கு தடை பெற்றுள்ளார் சைதை துரைசாமி. சவுக்கில் சைதை துரைசாமி பற்றிய கட்டுரைகள் வெளிவந்தபோதே, அக்கட்டுரையை நீக்க வேண்டும் என்று, சைதை துரைசாமி தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது, ஏகலைவன் இதழில் வரும் தொடரையும் நிறுத்துவதற்கு மேற்கொண்ட முயற்சிகளில் வெற்றி பெறாத சைதை, அந்தத் தொடருக்கு தடையாணை பெற்றுள்ளார்.   தன்னைப் பற்றி வரும் ஜால்ரா கட்டுரைகளை, தனது மனித நேயம் இணைய தளத்தில் போட்டு பெருமை பட்டுக் கொள்ளும் சைதை துரைசாமி, தன்னை அம்பலப்படுத்தும் தொடர் என்றதும், அலறுகிறார்…. அரற்றுகிறார்… அஞ்சி ஓடி நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டுகிறார்….

இது குறித்து ஏகலைவன் வார இதழின் பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது,

“சைதை தரப்பினர் “மனித நேயத்தின் மர்ம பக்கங்கள்” தொடருக்கு தடை பெற்றிருப்பது உண்மைதான். ஆனால், நீதிமன்றத்திலிருந்து எங்களுக்கு எந்த உத்தரவும் இதுவரை வரவில்லை. தடையை உடைப்பது குறித்து சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை பெற்று வருகிறோம்.

“விரைவில் நீதிமன்றத்தில் அதிசயங்கள் நடக்கும்

அதிமுக தலைமையின் உறக்கம் கலையும்

சிட்டுக்குருவிகள் சிறகுகளை விரிக்கும்

வெட்டுகிளிகள் விமானங்களை தகர்க்கும்-“

என்று கூறி முடித்துக் கொண்டார்.

வாசகர்களுக்காக இதோ அந்தத் தொடரின் முதல் பகுதி…

மனித நேயத்தின் மர்ம பக்கங்கள்

மனித நேய அறக்கட்டளை

அதிகார வர்க்கத்தினரால் அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தை. பல நூறு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும், ஐ.பி.எஸ். அதிகாரிகளையும் உருவாக்கியுள்ளதாக பெருமை பேசும் நிறுவனம். இதன் நிறுவனர் தற்போதைய சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி. ஜெ.வுக்கு அடுத்த படியாக “லீடர் இமேஜ்” உள்ளவராக ர.ர.க்களை ஊடகங்களின் உதவியுடன் நம்ப வைக்க போராடிக் கொண்டிருக்கும் இரண்டாம் கட்டத் தலைவர்.

இவருக்கு பல முகங்கள்…..

கிராமத்திலிருந்து ஐ.ஏ.எஸ்.கனவோடு சென்னை புறப்படும் மாணவனுக்கு இவர் ஒரு கடவுள். விபரமறிந்த “பசை” பார்ட்டிகளுக்கு இவர் ஒரு “பவர் புரோக்கர்”. தனக்கு ஜால்ரா அடிக்கும் கூட்டத்துக்கு இவர் ஆபத்பாந்தவன். தன்னை எதிர்க்க துடிப்பவர்களுக்கு ஊடகங்களையும், சில காவல்துறை அதிகாரிகளையும் பயன்படுத்தி பதவியை பறிக்கும் எமன்.

இப்படி பன்முகம் கொண்டவராய் மக்களிடத்தில் பரிச்சயம் பெற்றிருக்கும் இவரின் கடந்த காலத்தை திரும்பி பார்த்தால் ஒரு உண்மை தெளிவாக புரியும்.

எத்தகைய மனிதனுக்கும் காக்கிகள் வட்டாரத்திலும், பத்திரிகை உலகிலும் நெருக்கமான நட்பு இருந்தால் எந்த பதவியையும் எளிதாக அடைய முடியும் என்பதற்கு இவர் சிறந்த உதாரணம். ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு என்ற நியூட்டனின் தத்துவப்படி, இவரின் ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்.

எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் ஆர்.எம்.வீ.யுடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக சைதை தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு ஜானகி அணியை வழிநடத்தியதில் முக்கிய பங்கு வகித்தவர்.

ஜானகி அணியின் அலுவலகம் இவரின் வீட்டில்தான் இயங்கியது. 1989 தேர்தலில் ஜெ.வின் கை ஓங்க, ஜா. அணி, ஜெ. அணியில் இரண்டற கலக்க 1991&ல் மறுபடியும் புது தெம்போடு அதிமுக ஆட்சியை பிடிக்க, இதனை வெறுத்த துரைசாமி அரசியலை விட்டு ஒதுங்கியிருந்தார். பின்னர், 1994&ம் ஆண்டு நடந்த மைலாப்பூர் இடைத்தேர்தலின் போது, கட்சியில் இணைந்து ஒரே நேரத்தில் இரு துருவங்களாக இருந்த எஸ்.டி.எஸ் ஆதரவாளராகவும், கண்ணப்பன் ஆதரவாளராகவும் காட்டிக் கொண்டவர்.

1991&94 வரை அரசியல் துறவியாய் இருந்தவர் இரண்டே ஆண்டுகளில் பலம் பெற்று 1996&ல் அ.தி.மு.க. ஆட்சியை இழந்த பிறகு, பல முன்னாள் அமைச்சர்களை ஒன்று திரட்டி ஜெ.வுக்கு எதிராக போட்டி அ.தி.மு.க.வை துவக்கியவர்.

ஜெ.வை முடக்க வேண்டும் என்பதை மட்டுமே லட்சியமாக கொண்ட சைதையின் தீவிர முயற்சியால் தான் சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டது என்பது எத்தனை பேருக்கு தெரியும் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

1996&ல் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், ஜெ.மீது எப்படிப்பட்ட நடவடிக்கையை துவக்குவது என தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த வேளையில், முன்னாள் அமைச்சர் மாதவன், நீதியரசர் சம்பந்தம் ஆகியோர் சகிதம் முரசொலி மாறனை சந்தித்த துரைசாமி, தனிகோர்ட் தொடங்கினால் வழக்கை விரைவாக விசாரித்து தண்டனை வழங்கலாம் என சட்ட நுணுக்கங்களை எடுத்து கொடுக்கிறார். அவரின் ஆலோசனைப்படி தொடங்கப்பட்ட தனி கோர்ட்தான் இன்றைக்கு ஜெ.வுக்கு பெரும் தலைவலியாய் இருக்கும் சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்து வருகிறது.

ஜெ. எதிர்ப்பு பின்னடைவை சந்திக்கவே போட்டி அதிமுகவிலிருந்து விலகி மறுபடியும் அரசியல் துறவியாகிறார் சைதை.

தன்னுடைய புத்திசாலித்தனத்தால், அற்புதமான ஒரு கூட்டணியை உருவாக்கி 2001ல் மறுபடியும் ஆட்சியை பிடித்து இந்தியாவை திரும்பி பார்க்க வைக்கிறார் ஜெயலலிதா.

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு மறுபடியும் தீவிர கட்சி பணி ஆற்ற ஆசைப்படுகிறார் சைதை. இதற்காக தினமலர் பத்திரிக்கையின் அதிபரை சந்தித்து உதவி கோருகிறார். சைதை கட்சியில் இணைந்தால் தென் சென்னையில் கட்சி அசுர பலம் பெறும் என்ற பொருளில் தினமலரில் செய்தி வெளியாகிறது.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். கட்சியில் இணைய சைதை கட்சி தலைமையை அல்லவா அணுகி இருக்க வேண்டும். ஏன் ஒரு பத்திரிகை அதிபரை அணுகினார்–? அதற்கான பதில் ஜெ.வின் “வீக்னஸ்”.

தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் உள்ள பெரிய வித்தியாசம் என்னவென்றால் தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்கள், அதிகாரிகளை பற்றி முரண்பாடான செய்திகள் வந்தால் சம்பந்தப்பட்டவர்களை நேரில் அழைத்து விசாரித்து தவறை திருத்துவது கலைஞரின் பாணி. இதற்கு எதிர்மறையாக, சம்பந்தப்பட்ட செய்தியை உளவுத்துறையிடம் கொடுத்து அதன் உண்மைத் தன்மையை கண்டறிந்து, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது ஜெ.வின் பாணி. ஜெ.வின் நடவடிக்கை முழுக்க முழுக்க உளவுத்துறை ரிப்போர்டை மையமாக வைத்தே இருக்கும் என்பதால் தினமலர் பத்திரிகையில் செய்தியை வரவழைத்தார் சைதை.

செய்தி, உளவுத்துறைக்கு செல்ல, அங்கு தன்னுடைய ஆதரவு அதிகாரிகளை வைத்து, சாதகமான ரிப் போர்ட் தர செய்கிறார் சைதை. (அந்த நேரத்தில் சைதைக்கு மிகவும் நெருக்கமான அலெக்ஸாண்டர் டிஜிபியாக இருக்கிறார். பின்னாளில் இவர் மனித நேய அறக்கட்டளையில் பணியாற்றியது ஊருக்கே தெரியும்). ரிப்போர்ட்டின் அடிப்படையில் சைதையை கட்சியில் இணைத்து மாவட்ட செயலாளர் பதவியும் தருகிறார் ஜெ.

தன்னை எதிர்ப்பதை மட்டுமே லட்சியமாக கொண்டு வாழும் ஒருவரை கட்சியில் இணைத்து, ஆளுங்கட்சியின் மாவட்ட செயலாளர் ஆக்குகிறார் என்றால் உளவுத்துறையின் அறிக்கையை ஜெ. எந்த அளவுக்கு நம்புவார் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். ஜெ.வின் இந்த வீக்னசை தன்னுடைய பலமாக மாற்றி கொண்டு ஊடகங்களின் துணையுடன் இன்றைக்கு ஜெ.வுக்கு பிறகு சைதைதான் என்ற நிலையை அதிகாரிகள் மட்டத்திலும், மக்களின் மனதிலும் ஏற்படுத்த முயல்வதாக கூறப்படுகிறது.

இதற்கு சில பத்திரிகை அதிபர்களும், சில காவல்துறை அதிகாரிகளும், சில வயோதிக வாலிபர்களும் துணை நிற்கிறார்கள் என்பதுதான் உண்மை.

2002ல் சைதையில் நடந்த இடைத் தேர்தலில் போட்டியிட சீட் எதிர்பார்க்கும் சைதை, ராதாரவிக்கு சீட் கிடைத்தவுடன் மறுபடியும் ஓதுங்க ஆரம்பிக்கிறார். 2001-2006 ஆட்சியில் பவர்புல்லான மனிதராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், சைதையின் ஆரம்ப கால சிஷ்யர் என்பதால் சைதையின் மீது கரிசனம் காட்ட ஆரம்பிக்கிறார்.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நினைவு கூற வேண்டும். 1989 சட்டமன்றத் தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்ட ஜெ.வை எதிர்த்து ஜானகி அணி சார்பில் களம் இறங்கிய வெண்ணிற ஆடை நிர்மலாவின் தலைமை தேர்தல் குழு பொறுப்பாளராக பொறுப்பு வகித்தவர் ஓ.பி.எஸ்.

அந்த பழைய பாசத்தால் தான் தன்னுடைய மருமகனும் வழக்கறிஞருமான காசிராஜனை சேர்த்து கொண்டு ரியல் எஸ்டேட் தொழில் செய்யும்படி கேட்டுக் கொள்கிறார் ஓ.பி.எஸ். இவர்களோடு உதவி கலெக்டர் மகன் கார்த்திகேயனும் சேர்ந்து கொள்கிறார்.

காசிராஜனும், கார்த்திகேயனும் மெத்த படித்த மேதா விகள் என்பதால், இவர்களின் மூளையில் உதித்தது தான் “மனித நேயம்”.

மனித நேய அறக்கட்டளை உருவான வரலாறு சுவாரஸ்யமானது. நீங்கள் நம்புவது போல ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சியளித்து அவர்களை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆக்குவது அவர்களின் இலட்சியமும் அல்ல, குறிக்கோளும் அல்ல.

தமிழகத்தின் தலையெழுத்தை திருத்தி எழுதும் திறன் கொண்ட ஒரு தினசரி பத்திரிகையின் அதிபர். மத்தியில் கோலோச்சும் ஒரு பெண் அமைச்சர் ஆகியோரை பங்கு தாரராக சேர்த்து கொண்டு காஞ்சிபுரம் மாவட்டம், பெருங்குடியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சாலையில் 2 ஹெக்டேர் பரப்பளவில் ஆர்.எம்.இசட் மில்லினியா என்ற கட்டிடத்தை கட்டி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளார் சைதை. (இதன் கதை தனிக்கதை. அதைப்பற்றிய விபரங்கள் தனி தொடராக பின்னர் வெளிவரும்) இதில் மாத வாடகையாக அவர் பெறும் தொகை ரூ.85 லட்சம். வாடகை மூலம் வருவாய் வந்தால் அதற்கு வரி கட்ட வேண்டுமல்லவா? அந்த வரியிலிருந்து தப்பித்து, வரிவிலக்கு பெறுவதற்காக துவக்கப்பட்டது தான் மனித நேய அறக்கட்டளை. அதற்கான நிதி ஆர்.எம்.இசட் மில்லினியத்தின் வருவாயிலிருந்துதான் வருகிறது.

(தொடரும்)

நன்றி

ஏகலைவன் அரசியல் வார இதழ்.
https://savukku.net/4696/

ஸ் பெ

unread,
Nov 27, 2014, 2:54:10 AM11/27/14
to panbudan

அப்பனுக்கு தப்பாமல் பிறந்த பிள்ளை.

FEBRUARY 22, 2013 BY SAVUKKU LEAVE A COMMENT

Fb-Button

vetri-duraiஒரு காகிதம் பொறுக்கி கல்வித்தந்தை ஆன கதையை ஏற்கனவே சவுக்கு வாசகர்கள், அலிபாபாவும் ஆயிரம் திருடர்களும், ஐ யம் வெரி ஹேப்பி ஸ்டார்ட் ம்யூசிக், மற்றும் முகமூடி ஆகிய கட்டுரைகளில் படித்திருப்பீர்கள்.  சரி.. சைதை துரைசாமிதான் இப்படி என்றால், அவர் மகன் சைதை துரைசாமியை விஞ்சி விடுவார் போலிருக்கிறது.

வெற்றி நாளிட்ட டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழில், ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

22_02_2013_005_029

சென்னையில் நடைபெற இருந்த நாய் கண்காட்சி இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. அந்தக் கண்காட்சி ரத்து செய்யப்பட்டதற்கு, ஒரு முக்கியப் பிரமுகரின் மகன் வளர்த்த நாய்க்கு முதல் பரிசு கொடுக்காததுதான் காரணம் என்று கூறப்பட்டிருந்தது.  இதன் முழு விபரங்கள் என்னவென்று விசாரித்தால், சைதை துரைசாமிக்கு அவரைப் போல அல்ல… அவரையே விஞ்சி விடும் வகையில் ஒரு மகன் பிறந்திருக்கிறான் என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களோடு சவுக்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறது.

வெற்றி துரைசாமி.  பெயரிலேயே வெற்றி இருப்பதாலோ என்னவோ இவர் வெற்றியைத் தவிர வேறு எதையுமே விரும்புவதில்லை.  தாம்பரத்தை அடுத்த படைப்பையில், ஆனந்த விகடனின் முன்னாள் ஆசிரியர் பாலசுப்ரமணியத்துக்கு சொந்தமான ஒரு பண்ணை வீடு இருக்கிறது.  பாலசுப்ரமணியம் ஒரு பறவைப் பிரியர். விதவிதமான பறவைகளை வளர்த்து வருவார்.  எம்.எல்.ஏ சைதை துரைசாமியின் மகன் என்ற அறிமுகத்தில் ஒரு நாள் பறவைகளை பார்க்க வேண்டும் என்று சிறுவனாக இருந்த வெற்றி துரைசாமி கேட்கவும், அவரும் அனுமதித்துள்ளார்.   உள்ளே சென்று பறவைகளைப் பார்வையிட அனுமதித்தால், மெக்காவ் எனப்படும் பஞ்சவர்ணக்கிளி ஒன்றை திருடியுள்ளார் வெற்றி.  இந்தத் தகவல் அறிந்ததும், வெற்றியைப் பிடித்து நையப்புடைத்துள்ளனர்.  பெரிய மனிதர் வீட்டுப் பையன் (இவங்க அப்பன் இவனை விட பெரிய சில்லரை என்பது பாலசுப்ரமணியத்துக்குத் தெரியவில்லை) என்பதால் விட்டு விட்டார்கள்.  இந்தப் பறவைகளின் ஒரு ஜோடியின் விலை என்ன தெரியுமா ?  இன்றைய சந்தை மதிப்பு 3 லட்சம்.

Scarlet_Macaw_Ara_macao_-Panama-8a

அப்படிப்பட்ட பண்பாளரும் சிறந்த மனிதருமானவர்தான் வெற்றி துரைசாமி.   இவர் சட்டம் படித்தவர்.  சட்டம் படித்து விட்டு, வழக்கறிஞராக தொழில் செய்யாமல், BPO போல LPO (Legal Process Outsourcing) என்ற நிறுவனம் நடத்தி வந்தார்.   அப்போது இவரோடு நெருக்கமானவர் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கண்ணதாசன்.  இந்த கண்ணதாசன் பின்னாளில் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.  சைதை துரைசாமியின் மகனோடு நல்ல நீதிபதிகள் சகவாசம் வைத்துக் கொள்வார்களா என்ன ?

குதிரை வளர்ப்பது, தபால் தலைகள் சேகரிப்பது, நாணயங்கள் சேகரிப்பது போல, நாய்கள் வளர்ப்பது பல பெரிய மனிதர்களின் ஹாபி.  இது ஒரு தனி உலகம்.  அழகான, விலை உயர்ந்த நாய்களை வளர்ப்பது, நாய்க் கண்காட்சிகளில் அந்த நாய்களை கலந்து கொள்ள வைப்பது என்று அந்த தனி உலகத்தில் ஜீவிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். இப்படி நாய் வளர்ப்பதற்கென்று கென்னல் க்ளப் ஆப் இந்தியா என்று ஒரு தனி சங்கமே உள்ளது.  இந்த சங்கத்தின் தலைமையகம் சென்னையில் இயங்குகிறது.   இந்த கிளப்பில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்கள் நாய்கள் பிறந்தது முதல் அத்தனையையும் பதிவு செய்ய வேண்டும்.  இந்த சங்கம் சான்றிதழ் அளித்தால்தான் நாய் எப்படிப்பட்ட தரம் வாய்ந்தது என்று உரிய விலைக்கு வாங்குவார்கள்.  அப்படிப்பட்ட ஒரு க்ளப்தான் கென்னல் க்ளப் ஆப் இந்தியா.

Untitled-3

நீண்ட நாட்களாக வட இந்தியாவில் செயல்பட்டு வந்த இந்த க்ளப்பின் தலைமையகத்தை சென்னைக்கு மாற்றினர்.  சென்னைக்கு மாற்றி இந்த க்ளப் சிறப்பாக செயல்பட்டு வந்தது.  ரேஸில் ஓடும் குதிரைகள் எப்படி கோடிக்கணக்கில் விலை போகின்றனவோ, அது போல அரிதான வகையைச் சேர்ந்த நாய்கள் 2 லட்சம் முதல் 30 லட்ச ரூபாய் வரை விலை போகும்.

வழக்கமாக நாய்க் கண்காட்சிகளில் கலந்து கொள்ளும் நாய்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.  அப்படி பரிசுகள் வழங்கையில் அரிதான வகையைச் சேர்ந்த நாய்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்குவர்.

714x470-chennai-dog-shows_818

இந்தச் சூழலில் 2005ம் ஆண்டு வாக்கில், இந்த நாய் உலகத்தில் இறங்குகிறார் வெற்றி துரைசாமி.   இந்த க்ளப்பில் முக்கிய பொறுப்பில் இருப்பவர், சுதர்சன் என்பவர்.  நாய்க்கண்காட்சிகளில் நீதிபதியாக இருப்பதில் இவர் நிபுணர்.  ஏறக்குறைய 100 நாடுகளுக்கும் மேல் நாய்க்கண்காட்சிகளில் நீதிபதியாக இருந்துள்ளார்.  இவரோடு வெற்றி துரைசாமி நெருக்கமாகிறார்.  சரி… ஆளுங்கட்சிப் பிரமுகரின் மகனாயிற்றே என்று சுதர்சனும் இவரோடு நெருக்கமாகப் பழகுகிறார்.

இந்த நாய்களின் உலகத்தின் ஜாம்பாவன்கள் நிறையபேர் உண்டு.  நாய் வளர்ப்பதற்கென்று லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து, போட்டிகளில் அந்த நாய்களை பரிசு பெற வைத்து, அதில் பெருமையடைபவர்கள் பலர் உள்ளனர்.  இப்படிப்பட்ட ஒருவர்தான் நாகராஜ் ஷெட்டி என்பவர்.   இவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்.  இவருக்கு பேச்சு, மூச்சு, சிந்தனை எல்லாமே நாய்கள்தான்.  பெங்களுரில் உள்ள இவரது வீட்டில், நாய்களுக்கென்று தனித்தனி ஏ.சி அறைகள், அந்த நாய்களைப் பராமரிக்க ஒவ்வொரு நாய்க்கென்றும் தனித்தனி பராமரிப்பாளர்கள், அந்த பராமரிப்பாளர்களுக்கு தங்கும் விடுதி என்று இவர் ஒரு நாய் பக்தர்.  இந்த நாகராஜ் நாய்க் கண்காட்சிகளில் வெற்றி பெறுவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்.

சென்னை கென்னல் க்ளப் என்ற நாய் வளர்ப்போர் சங்கத்துக்கென்று பெரிய அளவில் நிதி ஆதாரங்கள் கிடையாது. ஒரு கண்காட்சி நடத்துவதென்றால் குறைந்தது 3 முதல் 5 லட்சம் வரை ஆகும்.  டிக்கெட்டுகள், விளம்பரங்கள் என்று வசூல் செய்தது போக துண்டு விழும் தொகையை இந்த நாகராஜ் ஷெட்டி ஒரே செக்கில் வழங்குவார்.  இப்படி இவர் வழங்குவதால், போட்டிகளில் முதலிடம் வழங்குவதில் இவருக்கு முன்னுரிமை கொடுப்பது வழக்கம்.  முதலிடம் பெறுகிறார் என்பதற்காக, இவரது நாய்கள் தகுதியற்றவை என்று பொருள் அல்ல.  20 முதல் 25 லட்சம் வரை செலவு செய்து, வெளிநாட்டிலிருந்து மிக மிக சிறப்பான அரிய வகை நாய்களை இறக்குமதி செய்து கண்காட்சிக்கு கொண்டு வருவார்.  இவர் கொண்டு வரும் நாய்கள், இந்தியாவில் எங்குமே இருக்காத வகையில் சிறப்பாக இருக்கும்.

இப்படி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நாய்களின் சங்கமும், நாய்க் கண்காட்சியும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோதுதான், வெற்றி துரைசாமி போட்டிகளில் கலந்து கொள்ளத் தொடங்குகிறார்.  இவர் தன் பங்குக்கு க்ளப்புக்காக பணத்தை செலவு செய்வதோடு, தனது அரசியல் செல்வாக்கையும் பயன்படுத்தி, தனது நாய்தான் முதல் பரிசு வாங்க வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறார்.  அரசியல் பிரமுகரின் மகனாயிற்றே என்று, இவரது நாய்க்கு முதல் பரிசை தொடர்ந்து வழங்குகிறார்கள். நாய் வளர்ப்பில் தனக்கு தொடர்ந்து வெற்றி கிடைத்ததைக் கண்டு மகிழ்ச்சியடைந்த வெற்றி துரைசாமி கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற இடங்களில் உள்ள நாய் வளர்ப்புச் சங்கங்கள் நடத்தும் போட்டியிலும் கலந்து கொண்டு முதல் பரிசை பெறுகிறார்.  தமிழ்நாடு சங்கத்துக்கே நிதி நெருக்கடி என்றால் மற்ற தென்மாநில சங்கங்களை கேட்கவா வேண்டும் ?  அந்த மாநிலங்களில் உள்ள சங்கங்களுக்கு நிதி உதவி கொடுத்து, முதல் பரிசை பெறுகிறார்.  தென் மாநிலங்களில் முதல் பரிசைப் பெறும் வெற்றி துரைசாமி, வட இந்தியாவுக்கு ஏன் செல்லவில்லை என்றால், வட இந்தியாவில் இது போல திருட்டுத்தனம் செய்தால், கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள் என்பதால்தான்.

Untitled-1

2006, 2007 மற்றும் 2008 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து கண்காட்சிகளிலும் வெற்றி துரைசாமியின் லசாப்சோ வகை நாய் முதல் பரிசைப் பெறுகிறது.  இப்படி வெற்றியின் நாய்களுக்கு முதல் பரிசு வழங்கப்படுவதால், வழக்கமாக சிறப்பான நாய்களைக் கொண்டு வந்து பரிசு பெறும், நாகராஜ் ஷெட்டி எரிச்சலடைகிறார்.  ஒரு கட்டத்தில், சென்னையில் உள்ள கண்காட்சிகளில் பங்கெடுப்பதையே தவிர்க்கிறார்.  சென்னைக்கு வருவதில்லையே தவிர, நாகராஜ் ஷெட்டியின் நாய்கள், தென்அமேரிக்க நாடுகளிலும், அமெரிக்காவிலும் பல பரிசுகளை வெல்கின்றன.

இதற்கிடையே மற்றொரு பூதாகரமான ஊழல் புகார் வெற்றி துரைசாமி மீது விழுகிறது.  அது என்னவென்றால், நாய்களை சொந்தமாக வளர்க்காமல், தாய்லாந்திலிருந்து வாடகைக்கு எடுத்து வந்து கண்காட்சியில் கலந்து கொள்ள வைத்து, கண்காட்சி முடிந்ததும் திருப்பி அனுப்பி விடுகிறார் என்ற விபரம், நாய் வளர்க்கும் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு தெரிய வருகிறது. இவர்கள் வெற்றியின் வெற்றி ரகசியத்தை கேள்விக்குள்ளாக்குகிறார்கள்.  லசாப்சோ வகை நாயை பராமரிப்பது மிக மிக கடினம்.   அந்த நாயின் முடிகளை பத்து பத்து முடிகளாக பிரித்து, அதன் மீது மெல்லிய காகிதத்தை வைத்து, ரப்பர் பேன்ட் போட்டு, ஒரு நாள் கழித்து அவற்றை பிரிக்க வேண்டும்.  ஏராளமான செலவு பிடிக்கும் நாய் இது.  இந்த சிரமத்துக்காக, வெற்றி துரைசாமி, தாய்லாந்திலிருந்து நாய்களை வாடகைக்கு எடுத்த போட்டியில் கலந்து கொள்கிறார் என்ற விபரம் தெரிய வந்ததும், இனி வெற்றிக்கு முதல் பரிசு கொடுக்கக் கூடாது என்று க்ளப் உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவிக்கின்றனர்.

Vetri_with_Sudharson_son

நாய்க்கண்காட்சியில் நாய்…..மற்றும் வெற்றி துரைசாமி

இதன் நடுவே நாய் வளர்ப்புச் சங்கத்தின் சார்பில், மாதந்தோறும் கென்னல் கெஸட் என்ற பத்திரிக்கை வருகிறது.  இந்தப் பத்திரிக்கையில் அரிய வகை நாய்கள், போட்டிகளில் வென்றது போன்ற செய்திகள் வெளிவரும்.  போட்டிகளில் வென்ற நாய்களின் உரிமையாளர்கள், தங்கள் நாய்களைப் பற்றி விளம்பரங்களும் கொடுப்பார்கள்.  இப்படி போட்டிகளில் வென்ற நாய்களைப் பற்றி விளம்பரங்கள் கொடுக்கையில், சம்பந்தப்பட்ட சங்க நிர்வாகிகள், அதற்கு சான்றிதழ் அளிக்க வேண்டும்.  அப்படி சான்றளித்தால்தான், விளம்பரங்களே ஏற்றுக் கொள்ளப்படும். வெற்றி துரைசாமி, போட்டியிலேயே வெல்லாத நாய்களைப் பற்றியெல்லாம் விளம்பரங்கள் கொடுக்க முயற்சித்தார்.  சங்க நிர்வாகி சுதர்சன், ஏற்கனவே நமது பெயர் ரிப்பேராகி இருக்கிறது.  இனியும் பெயரைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்று இப்படி பொய்யான விளம்பரங்கள் கொடுக்க முடியாது என்று மறுக்கிறார்.2009ம் ஆண்டு நடந்த கண்காட்சியில் மீண்டும் நாகராஜ் ரெட்டி கலந்து கொள்கிறார்.  அவரது நாய் அந்த ஆண்டு சிறந்த நாயகாக தேர்ந்தெடுக்கப்படுகிறது.  அவ்வளவுதான்… வந்ததே கோபம் வெற்றிக்கு… உன்னை என்ன செய்கிறேன் பார் என்று கருவுகிறார்.

Untitled-2

சைதை துரைசாமிக்கு எப்படி அற்ப புத்தியோ, அதை விட அற்ப புத்தி படைத்தவராக இருக்கிறார் வெற்றி துரைசாமி. தனது பொய் விளம்பரத்தை ஏற்க மறுத்ததால், அற்பத்தனமாக நடந்துகொள்கிறார்.  மெட்றாஸ் கேனைன் க்ளப்  என்பதன் பெயரைப் பதிவு பதிவாளர் அலுவலகத்தில் புதுப்பிப்பதில் தாமதம ஏற்படுகிறது.  இந்தத் தாமதத்தைப் பயன்படுத்தி, மெட்றாஸ் கேனைன் க்ளப் என்று தன்னுடைய பினாமி பெயரில் ஒரு சங்கத்தைப் பதிவு செய்து கொள்கிறார் வெற்றி துரைசாமி.  இந்த விபரமே தெரியாமல், அடுத்த நாய்க் கண்காட்சியை டெல்லியில் நடத்திக் கொண்டிருக்கையில், டெல்லிக்குச் சென்று நீதிமன்றத்தில் கண்காட்சி மெட்றாஸ் கேனைன் க்ளப் பெயரில் வேறு ஒருவர் கண்காட்சி நடத்துகிறார் என்று தடை உத்தரவு பெற்று, கண்காட்சி தொடங்கிய பத்தாவது நிமிடம் தடை உத்தரவை வழங்க ஏற்பாடு செய்கிறார் வெற்றி துரைசாமி.  கண்காட்சி தொடங்கிய பிறகு எப்படி நிறுத்துவது ? ஏறக்குறைய 600 நாய்கள் கண்காட்சியில் பங்கேற்றிருந்தன.  வெளிநாட்டிலிருந்தெல்லாம் பல நாய்கள் வந்திருந்தன.  அந்த வெளிநாட்டு நாய் வளர்ப்பவர்களிடம், சென்னையில் சைதை துரைசாமி பெற்ற தறுதலை ஒன்று இப்படி ஒரு தடை உத்தரவை பெற்று வந்திருக்கிறது என்று சொல்லவா முடியும் ?  போடா வெண்ணை என்று சொல்லிவிட்டு, நிகழ்ச்சியை நடத்தினார்கள்.  அதன்பிறகு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கிறார் வெற்றி.

Colour_page_advt_in_IKG

வெற்றி துரைசாமியின் நாய் மற்றும் பயிற்சியாளர்

Thanks_advt

உண்மையான மெட்றாஸ் கேனைன் க்ளப் நிர்வாகத்தினர், சென்னை உயர்நீதிமன்றத்தில், கீழ் நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கை தடை செய்யக் கோரியும், போலியாக பதிவு செய்த பதிவை ரத்து செய்யக் கோரியும் தொடுத்த வழக்கை விசாரித்த நீதியரசர் கே.வெங்கட்ராமன், சமீபத்தில்தான் போலி சங்கத்தின் பதிவை ரத்து செய்ய உத்தரவிட்டார்.

நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி கண்காட்சி சிறப்பாக நடைபெற்றதால், கடும் ஆத்திரமடைகிறார் வெற்றி துரைசாமி.  சங்கத்தின் நிர்வாகி சுதர்சனை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று முனைகிறார்.   சுதர்சனின் வீட்டில், புதுக்கோட்டையிலிருந்து வந்த பெண் ஒருவர் வேலையாளாக பணியாற்றி வருகிறார்.  அந்தப் பெண்ணை அவர் வீட்டிலேயே பணியாற்றிய மற்றொரு வேலைக்காரப் பையன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி விட்டான் என்றும், அந்த பையன் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதற்கு, சுதர்சன் உடந்தையாக இருந்தார் என்றும் அண்ணா நகர் காவல்நிலையத்தில் புகார்.  அந்த பாதிக்கப்பட்ட பெண் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர். காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதும், விசாரித்து விட்டு, இதில் ஏதோ சந்தேகம் இருக்கிறது என்று எப்ஐஆர் பதிவு செய்யாமல் விட்டு விடுகிறார்கள்.  உடனே, 200 பேரை ஏதோ ஒரு டுபாக்கூர் தலித் சங்கத்திலிருந்து அண்ணா நகர் காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து, அந்த வேலைக்காரப் பையனை மட்டும் பொய்ப்புகார் என்று தெரிந்தே, கைது செய்கிறது காவல்துறை.  சுதர்சனை விசாரித்து விட்டு, தினந்தோறும் காவல்நிலையத்துக்கு வந்து செல்லவேண்டும் என்று அலைக்கழிக்கிறார்கள்.  புதுக்கோட்டையிலிருந்து சென்னைக்கு வந்த அந்தப் பெண்ணின் வீட்டார், தங்களை புகார் கொடுக்கச் சொல்லி கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டதாக உண்மையை வெளிப்படையாகச் சொல்லி விட்டனர்.

Vetri_with_Foreign_Judge

2010ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் கண்காட்சி நடந்து வருகிறது.  அப்போது வெயில் கடுமையாக இருந்ததால், ஒரு நாய் இறந்து போகிறது.  இதை எப்படியாவது பெரிய செய்தியாக்கி, கண்காட்சிக்கும் சங்க நிர்வாகிகளுக்கும் கெட்டபெயர் வாங்கித் தரவேண்டும் என்று நினைத்த வெற்றி துரைசாமி, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் நிருபராக இருந்த குஹாம்பிகா என்பவரை அழைத்து, பிரத்யேக செய்தி… சென்னை நாய்க் கண்காட்சியில் கலந்து கொண்ட நான்கு நாய்கள் இறந்து விட்டன என்று கூறுகிறார்.  சைதை துரைசாமியைப் போலவே, அவர் மகனும் ஒரு பொய்யர் என்பதை குஹாம்பிகா உணர்ந்திருக்க வேண்டும்.  உணரத் தவறி, அந்தச் செய்தியை அப்படியே அலுவலகத்துக்குத் தந்தார்.  அப்போது எடிட்டராக இருந்த ஆதித்ய சின்ஹா, அச்செய்தியை முதல்பக்கத்தில் வெளியிட்டார்.  செய்தி வெளியான அன்றே, மெட்றாஸ் கேனைன் கிளப்பிலிருந்து மறுப்பு அளித்தார்கள்.  இறந்தது ஒரே ஒரு நாய்தான்… அதுவும் நோய் வாய்ப்பட்டிருந்தது என்று கூறியதும், குஹாம்பிகா ஒரு வாரத்துக்கு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

2012ம் ஆண்டு வழக்கம் போல நாய்க்கண்காட்சி சென்னை சேத்துப்பட்டு ஸ்பர்டாங்க் சாலையில் உள்ள சென்னைப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற இருந்தது. நிகழ்ச்சிக்காக அழைப்பிதழ்கள் அடிக்கப்பட்டு, விநியோகிக்கப்பட்டன.  இந்த நேரத்தில் சென்னை மாநகரத் தந்தையும், ஒரு ரூபாய் இட்லி வியாபாரியுமான சைதை துரைசாமியின் அலுவலகத்திலிருந்து சென்னை பல்கலைக்கழக நிர்வாகிக்கு சென்னை மாநகராட்சி விழா ஒன்று அந்த மைதானத்தில், நடைபெற உள்ளதால், நாய்க் கண்காட்சியை ரத்து செய்யுமாறு உத்தரவிடப்படுகிறது.  இட்லி வியாபாரியும், மாநகரத்தந்தையுமான சைதை துரைசாமியின் உத்தரவை மறுக்க முடியுமா ? கண்காட்சிக்கு முதல் நாள், இடம் வழங்க முடியாது என்று ரத்து செய்கின்றனர்.  அந்த ஆண்டு கண்காட்சி நடக்காமலேயே போய் விட்டது.

398797_380911698633765_192935899_n

ujமூன்று மாதங்களுக்கு முன், ஐந்து வழக்கறிஞர்கள் காலை 8 மணிக்கு சுதர்சன் வீட்டுக்கு சென்றுள்ளனர்.  அவரிடம் சென்று, நாங்கள் உங்களுக்கு வக்கீல் நோட்டீஸ் கொடுத்தோமே… ஏன் வாங்கவில்லை என்று கேட்டுள்ளனர்.   யாருக்கு கொடுத்தீர்கள் என்றதும், சங்கத்துக்குத்தான் கொடுத்தோம் என்றதும், சங்க அலுவலகத்துக்கு வந்து பேசுங்கள்.  வீட்டில் சங்க விவகாரங்களை பேச இயலாது என்று கூறியுள்ளார்.  அவர்கள் அமைதியாக சென்று விட்டனர். மறுநாள் அண்ணா நகர் காவல்நிலையத்திலிருந்து சுதர்சனுக்கு அழைப்பு.  என்ன என்று தெரிந்த காவல்துறை அதிகாரி மூலமாக விசாரித்தால், ஐந்து வழக்கறிஞர்களை ஜாதிப்பெயரைச் சொல்லி நேற்று திட்டியதாக புகார் வந்துள்ளது.  விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.  தெரிந்த காவல்துறை அதிகாரியிடம் பேசியதும்… அந்த வக்கீல்களிடம், அவருக்கு நீங்கள் இந்த ஜாதிதான் என்று எப்படித் தெரியும் என்று வக்கீல்களைக் கேட்டதும், ஆளுக்கு ஒரு பதிலைச் சொல்லியுள்ளார்கள்.  போலீஸ் பிறகு அவர்களை விரட்டி விட்டது.

சரி.. சென்ற ஆண்டுதான் இப்படி ஆகி விட்டது. இந்த ஆண்டு சென்னை பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தை நம்ப முடியாது. அதனால் வேறு இடத்தைப் பார்க்கலாம் என்று இவர்கள் தேர்ந்தெடுத்த இடம், சென்னை ஐசிஎஃப் விளையாட்டு மைதானம்.  அந்த விளையாட்டு மைதானத்தை பேசி முடிவு செய்து, அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன.  கண்காட்சி 24 பிப்ரவரி அன்று ஐசிஎப் மைதானத்தில் நடந்திருக்க வேண்டும்.  ஆனால், ஒரு வாரத்திற்கு முன்பாக ஐசிஎப் அதிமுக தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்தவர் என்று கூறிக்கொண்டு மனோஜ் என்ற பாடி பில்டர் சங்க நிர்வாகிகளை அணுகுகிறார்.  நிகழ்ச்சி நடக்க வேண்டுமென்றால் எங்களுக்கு 10 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என்கிறார்.  ஏற்கனவே, பணம் இல்லாத காரணத்தால் பணம் கொடுப்பவருக்கு முதல் பரிசை வழங்கும் சங்கம் 10 லட்ச ரூபாய்க்கு எங்கே போகும்…  எங்களால் தர இயலாது என்றதும், அந்த மனோஜ், நீங்கள் தராவிட்டால் எங்களுக்கு தரத்தயாராக இருக்கிறார்கள். கொடுக்கவில்லையென்றால், கடும் சிக்கலைச் சந்திக்க நேரிடும் என்று கூறியுள்ளனர்.  சங்க நிர்வாகிகளோ, எங்களைப் புரட்டிப் போட்டாலும் 10 லட்ச ரூபாய் கிடையாது என்று கூறியுள்ளனர்.

சரி போங்கள் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறிய மனோஜ், நேற்று நீதிமன்றத்தில் பெற்றதாக ஒரு தடை உத்தரவை பெற்று நிகழ்ச்சி நடத்துவதை ரத்து செய்துள்ளார்.

400 நாய்கள் பங்கெடுக்க வேண்டிய இந்த ஆண்டு கண்காட்சி, வெற்றி துரைசாமியின் தலையீட்டால் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது.  நூற்றுக் கணக்கான நாய் வளர்ப்பாளர்களும், கண்காட்சியைக் காண இருந்த குழந்தைகளும், சைதை துரைசாமி பெற்ற தறுதலையால் கண்காட்சியை காண இயலாமல் ஏமாற்றமடைந்துள்ளனர்.

சரி வெற்றி துரைசாமி இந்த விஷயத்தில்தான் இப்படி நடந்து கொள்கிறாரா என்று பார்த்தால் எல்லா விஷயத்திலும் இப்படித்தான். கடந்த ஆண்டு, ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் வளர்ப்புப் பிராணிகள் கண்காட்சி நடந்துள்ளது.  இதை நடத்துபவர் யார் என்பதே வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை. கண்காட்சி வெற்றிகரமாக நடந்து, 40 லட்ச ரூபாய் வசூல் ஆகியுள்ளது. இதில் வட இந்தியாவிலிருந்து உயர்வகைப் பறவைகளை எடுத்து வந்து விற்றவர்களை 5 முதல் 10 லட்ச ரூபாய் வரை ஏமாற்றியுள்ளார் வெற்றி துரைசாமி.  பணத்தைக் கொடுங்கள் என்று கேட்ட வியாபாரிகளிடம், தமிழ்நாட்டிலேயே கால் வைக்க விடமாட்டேன் என்று மிரட்டியுள்ளார் வெற்றி துரைசாமி.

Pet_Show_Festival_Pet_Fest_2012_YMCA_Royapettah_Chennai_Jan_2012

சென்னை தாம்பரத்தை அடுத்து, வெற்றி துரைசாமிக்கு சொந்தமான பண்ணை வீடு ஒன்று இருக்கிறது.  இந்தப் பண்ணை வீட்டில், ஏராளமான பஞ்சவர்ணக் கிளிகளை வளர்த்து வருகிறார் வெற்றி துரைசாமி. இன்று ஆசியாவிலேயே அதிக அளவில் பஞ்சவர்ணக் கிளிகள் வைத்திருப்பவர் என்று பெயரெடுத்திருக்கிறார். (இதுல என்னென்ன தில்லுமுல்லோ, எங்க திருடுனதோ) இந்த பண்ணை வீட்டுக்கு, அஜீத் சென்னையில் ஓய்வில் இருக்கும்போதெல்லாம் தன் குழந்தையோடு செல்லுவது வழக்கம்.  அஜீத் போன்ற வெளிப்படையான நபர்கள், இப்படி ஒரு திருட்டுப்பயலோடு எப்படி நட்பாக இருக்கிறார்கள் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

ajith_at_vetri_duraisamy_wedding_engagement_stills_5145

தல மற்றும் தறுதல

ஒரு நண்பரிடம் பேசுகையில் வெற்றி துரைசாமி சொன்னது. “எங்க அப்பா பண்ண இன்வெஸ்ட்மென்ட்லயே பெஸ்ட் இன்வெஸ்ட்மென்ட் மனிதநேயம் அறக்கட்டளைதான்.  ஒரு வருஷத்துக்கு நம்ப இன்ஸ்ட்யூட்ல படிச்ச 50 பேர் சர்வீஸ்க்கு போறாங்க.  ஒரு வருஷத்துக்கு 50 பேர்னா பத்து வருஷத்துல 500 பேர். இதுல 250 பேரை விட்டுட்டாக் கூட 250 பேர் அப்பாவுக்கு விசுவாசமா இருப்பாங்க.  என்ன காரியம் வேணாலும் சாதிச்சுக்கலாம்” இதைச் சொன்ன நண்பரிடம் இது ஏற்கனவே சவுக்கில் அலிபாபாவும் ஆயிரம் திருடர்களும், என்ற கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது என்று கூறியபோது, நண்பர் ஆச்சர்யப்படடார்.

சைதை துரைசாமி ஒரு பெரிய தீயசக்தி என்று பார்த்தால் அவர் வாரிசு அவரை விட பெரிய தீயசக்தியாக உருவெடுத்திருக்கிறார்.  இந்த தீயசக்திகளையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டிய ஜெயலலிதா, வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாரே என்பதுதான் வேதனை.

Mr._Saidai_Sa._Duraisami_sSon_Reception_Photo_5

எத்தனையோ உண்மையான அதிமுக தொண்டர்களின் திருமணத்துக்கெல்லாம் செல்லாத ஜெயலலிதா, இந்தத் தறுதலையின் திருமணத்திற்கு சென்று வாழ்த்தியுள்ளார்

 

அடுத்த முறை நாய்க் கண்காட்சியில் பரிசு கிடைக்கவில்லையென்றால் வெற்றி துரைசாமி வருத்தப்படக் கூடாது.  கழுத்தில் ஒரு பேட்ஜை அணிந்து கொண்டு இவரே நாய்களோடு நாயாக அமரலாம்.  அதற்கு இப்போதிலிருந்தே குரைத்துப் பழகுவது நல்லது.

Reply all
Reply to author
Forward
0 new messages