புட்டண்ணா
கனகலின் பள்ளியிலிருந்து வெளியே வந்த பாரதிராஜா, 16 வயதினிலே, கிழக்கே
போகும் ரயில், புதிய வார்ப்புகள் என்று ஒரு மாற்றுத் திரைப்படப் போக்கை
உருவாக்கிக் கொண்டிருந்தார். அதே போன்ற சிந்தனையோட்டத்துடன் தங்களது Genere
களில் பாலு மகேந்திராவும் மகேந்திரனும் செயல்பட்டுக் கொண்டிருக்க,
தமிழ்த்திரைப்பட உலகம் ஆரோக்கியமாகவும், நவீனமாகவும்,
மாற்றுத்திரைப்படப்பாதையில் நடைபோட ஆரம்பித்தது. வெகுஜன ரசனையையும்
கலாபூர்வமான ரசனையையும் இணைக்கும் ஒரு பாதையை மிகவும் நுட்பமாகவும்
கவனத்துடனும் உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்.
அந்தக்கட்டத்தில்தான்
பாக்யராஜின் மேடைநாடகத்தன்மை கொண்ட படங்கள் வரத்துவங்கின. உள்ளூர்த்
திருவிழாக்களில் மேடைநாடகம் போடும் அன்றைய கலாச்சாரப்பின்னணியிலிருந்து
வந்த அவரது எண்ண ஓட்டங்கள் முழுக்க முழுக்க மேடைநாடகங்களில் கவனம் பெறும்
அபத்தமான காமெடிகளிலும் வசனங்களிலும் சென்டிமெண்ட்காட்சிகளிலும்
சுற்றிச்சுற்றி வந்தன. சினிமா என்பது காட்சிகளால் பேசப்படும் மொழி என்ற
படிமத்தைச் சிதைத்து வசனங்களால் நிரப்பினார்.
கதை
என்பது ஒரு பெரிய பிரமாதமான விஷயமில்லை, கதை சொல்வதற்குத் தனியாக ஒருவர்
தேவையில்லை, சகலமும் நானே என்கிற கதை திரைக்கதை வசனம் டைரக்ஷன் என்கிற
அடைமொழியை ஆரம்பித்து வைத்து, சினிமாபற்றிய கலைப்பிரக்ஞையோ, உலகசினிமாக்
கோட்பாடுகள் பற்றிய அவதானிப்போ எதுவுமே தேவையில்லாமல் ஒரு சாமான்யனால் கூட
படம் இயக்கமுடியும் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கியதில் பட்டி
தொட்டியெல்லாம் பற்றிக் கொண்டது பெருந்தீ. உள்ளூர் திருவிழா மேடை நாடக
டைரக்ஷன்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாகவும், வெகுஜன ரசிகர்களுக்கு
மாபெரும் இயக்குனர் சிகரமாகவும் மாறினார்.
அதுவரையிலிருந்த
படங்களில் நகைச்சுவைப் பாத்திரங்களில் காமெடி நடிகர்கள் நடித்துக்
கொண்டிருந்த சூழலை மாற்றி ஹீரோவே காமெடி செய்யும் சூழலை உருவாக்கினார்.
காமெடி நடிகர் செய்யும் காமெடி மிக கோமாளித்தனமாகவும், ஹீரோ செய்யும்
காமெடி கலாய்ப்பாகவும் வித்தியாசப் படுத்தி அதை ஜனரஞ்சக வெற்றி
பார்முலாவாக்கினார். சமூகஅவலம், சமூகஅங்கதம் நையாண்டி போன்ற
எல்லாப்பார்வைகளையும் அழித்தொழித்து கேலி கிண்டல் கலாய்ப்பு ஜாலி என்று
ஒட்டு மொத்தமாக காமெடி என்கிற ஒரே பார்வைக்குள் நிலை நிறுத்தினார். இந்த
அழிச்சாட்டியத்தில் தமிழனுக்கு black comedy என்கிற இருண்மையான நகைச்சுவை,
அவலச்சுவை நிரம்பிய அங்கதங்கள் அறிமுகமாகாமலேயே போய்விட்டது.
சமுக
வெளியின் பொதுப்புத்தியில் இயங்கும் மிகக் கேவலமான அறுதப்பழசான சிந்தனைகளை
மீண்டும் பட்டை தீட்டி சீவிச் சிங்கார்த்து வெளியிட்டார்.
ஆணாதிக்கத்திமிரும், பெண்களை போகப்பொருளாகச்சித்தரிக்கும் தன்மையும், சின்ன
வீடாக உருவகப்படுத்தும் பொதுப்புத்தியும் கொண்டவை.
அந்தக்காலகட்டத்திலிருந்த வெகுஜன ஆண்களின் வக்கிரமான சிந்தனைகளுக்கு இவரது
கதைகள் அல்வா.
தங்களது
மனைவியை அழைத்துக் கொண்டுபோய் பாக்யராஜின் படம் காட்டி, சமூக ஒழுக்கம்
என்றால் என்ன? மனைவியின் ஸ்தானம் என்ன? பொறுப்பு என்ன.. என்பது போன்ற மனித
வாழ்வியலின் மகத்தான் கேள்விகளுக்கு விடைகூறியிருக்கும் காட்சிகளைத்
தரிசிக்க வைத்து ‘நல்வழிப்’ படுத்துவார்கள் கணவன்மார்கள். பல பெண்களுடன்
கள்ள உறவு வைத்திருக்கும் தனது கணவனை வழிபாடு செய்யும் பெண், தமிழ்ப்
பண்பாடு போன்ற பிம்பங்கள் அதுவரை உருவாகியிருந்த தமிழின் மாற்று சினிமாப்
பார்வையை அடியோடு உருக்குலைத்தன. முருங்கைக்காய் என்கிற மருத்துவகுணம்
கொண்ட காய்கறியை பாலியல் வீரியத்துக்கான குறியீடாக உருவாக்கிக்
கிளுகிளுப்பேற்றினார்.
இது
போன்ற திரைக்கதையின் அரிய கண்டுபிடிப்புகளைப் பார்த்து வாய்பிளந்து போன
அன்றைய ஊடகங்கள் திரைக்கதையின் தந்தை என்று புகழாரம் சூட்டின. அதே
கட்டத்தில் பாக்யா என்கிற பத்திரிகையை ஆரம்பித்து நடத்தினார். சக
பத்திரிக்கையாளனை விமர்சனம் செய்யக்கூடாது என்ற எழுதப்படாத விதியின்
பிரகாரம் இவரது கோமாளித்தனமான காமெடிகளை வீரதீர சாகசக்கதைகளாக
மாற்றினார்கள். உலகசினிமா பற்றிய கலைப்பிரக்ஞையோ, உலகப்புகழ்மிக்க
ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் நடிப்புக் கோட்பாடுகளோ, கில்லஸ் டெல்யூஸின் சினிமா
கோட்பாடுகளோ தமிழின் வெகுஜனதளத்தில் பேசப்படவேயில்லாமல் போனதும் இதற்கு ஒரு
காரணம். அந்தக்கட்டத்தில் பாபுலர் வெகுஜனசினிமாக்களைப்பற்றிப் பேசுவது
கேவலமான விஷயம் என்பது போன்ற பிம்பங்கள் கட்டமைக்கப்பட்டிருந்தன. விஷயம்
அறிந்த கலைஞானம் மிக்கவர்கள், உலகசினிமா ஆர்வலர்கள், தீவிரமான கலைஞர்கள்,
கலைக் கோட்பாட்டாளர்கள், விமர்சகர்கள் வாயைமூடிக்கொண்டிருந்தனர். அதனால்
இந்தச்சூழல் பாக்யராஜ் காட்டில் பலத்த மழையாக மாறியது. அவர்
தமிழ்சினிமாவின் சித்தப்பா பெரியப்பா என்ற ஏணிகளில் ஏறிக்
கொண்டேயிருந்தார்.
இவரது
பள்ளியிலிருந்து வெளிவந்த பாண்டியராஜன் இந்தக் காமெடியை மேலும்
பெரிதாக்கினார். இந்தக் காமெடியை வைத்து வெள்ளிவிழா டைரக்டரானார்
இன்னொருவர்.
அந்தக்காலகட்டத்தில்
மறுமலர்ச்சி இயக்குனர் என்று புகழப்பட்ட குருநாதர் பாரதிராஜாவின்
‘நிழல்கள்’ படம் வெளிவந்து படுதோல்வியடைந்ததும், பாக்யராஜின் காமெடி
பார்முலா மட்டும்தான் வெற்றிக்கான பார்முலா என்று கோடம்பாக்கமே
கதிகலங்கியது.
அன்றைய
ம.க.இ.க. போன்ற முற்போக்குக் குழுவில் செயல்பட்ட மணிவண்ணனின்
கதையாக்கத்துடன் சர்வதேசப்படங்களுக்கு இணையான விதத்தில் அற்புதமான
கலைத்தன்மை கொண்ட அந்தப்படத்தின் தோல்வி என்பது, பாக்யராஜின்
காமெடித்தன்மைகள் ஆக்கிரமித்திருந்த சூழலே காரணம்.
அதற்குப்பின்னால்
வந்த தலைமுறையினர் மணிரத்னம் கமல்ஹாசன் போன்றோரில் தொடங்கி அமீர், பாலா,
சேரன், ராதாமோகன், வசந்தபாலன், பாலாஜி சக்திவேல் சட்டென்று பெயர் ஞாபகம்
வராத இன்னும் பல்வேறு இளம் இயக்குனர்கள் (இவர்கள் மீது விமர்சனம்
இருந்தாலும் இவர்களது படங்கள் பேசப்படும் மைய இழை என்பது முக்கியமானது)
பலவருடங்களாகப் போராடி மீண்டும் ஒரு தரமான மாற்றுச்சூழலை உருவாக்கிக்
கொண்டிருக்கும் காலகட்டம் இது.
இந்தச்சூழவின்
பின்னணியில்தான் மீண்டும் பாக்யராஜின் கோமாளித்தனமான காமெடிப்படமான ‘இன்று
போய் நாளை வா’ வை ‘லட்டாக’ மறுஉருவாக்கம் செய்திருக்கிறார்கள்.
3
உலகமயமாக்களின்
பின்புலத்தில் இன்றைய சர்வதேசத்தன்மை ஒவ்வொரு துறையையும் அதனுடைய
தீவிரத்தன்மைகளை லகுவாக்கி ஜாலியாக மேலோட்டமான பார்வைகளாக மாற்ற
ஆரம்பித்திருக்கிறது. ஏனெனில் தீவிரத்தன்மையோ, தொலைநோக்குத்தேடலோ,
வாழ்வியல் சிக்கல்களில் எதிர்கொள்ளும் புரட்சிகரச்சிந்தனைகளோ தங்களது
அதிகார ஆளுகைகளுக்கு எதிராக மாறக்கூடியவை என்று கணிக்கிறது. மக்களை ஒரு
ஜாலியான கலகலப்பான மனோநிலையிலேயே வைத்திருக்க வேண்டும். அரசுக்கு எதிராக
யோசிப்பது, ஒடுக்குமுறைகளுக்கு எதிராக விமர்சனம் செய்வது, அதிகாரத்தின்
பல்வேறு கண்ணிகளை இனங்காட்டுவது, சர்வதேச வலைப்பின்னலின் நுண்ணரசியலை
சுட்டிக்காட்டுவது போன்ற தீவிரத்தன்மைகளுக்கெல்லாம் இடம் கொடுத்தால்
தங்களுக்குப் பெரும் ஆபத்தாகிவிடும் என்று அதிகாரவர்க்கம் கருதுகிறது.
காலங்காலமாய் இத்தகைய சிந்தனைகளை மழுங்கடிக்க, பொழுதுபோக்கு நிகழ்வுகள்,
பொதுப்புத்தியில் ஊறித்திளைத்துள்ள மேலோட்டமான காமெடிகள் போன்றவற்றை
முன்னிலைப்படுத்தி வருவதை நாம் உணரலாம். அதுவும் கலை இலக்கியத்துறையில்
தீவிரமாகச் செயல்பட்டுவரும் கருத்துக்களை நீர்த்துப்போகச் செய்வதற்காக
பலதளங்களில், பலவழிகளில், பலநிகழ்வுகளாக முன் வைக்கப்படுகிறது.
முகநூல்,
டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களைத் திறந்துவிட்டு தீவிரத்தன்மை கொண்ட
மதிப்பீடுகளை செயல்பாடுகளை கிண்டலாக மாற்றும் தன்மையை விரிவாக ஆய்வுக்கு
உட்படுத்தப்பட வேண்டிய ஒன்று. (இந்த ஊடகங்களில் சீரியஸான விஷயங்களும்
செயல்பாடுகளும் நடக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவை மிகக் குறைச்சல்.) இந்த
ஊடகங்களின் வாயிலாக எந்த விஷயம் குறித்தும் ஒரு ஜாலியான மனோபாவத்தை
உருவாக்குதல், உலகெங்கும் கேலியாக கலாய்ப்புகளைக் கட்டமைத்தல்,
உலகப்புகழ்பெற்ற இலக்கிய வடிவங்களின் நுல்களையும் படங்களையும்
மலினமானவைகளுடன் பொருத்திக் கலாய்த்தல், புரட்சிகரமான விஷயங்களையும்
கருத்துக்களையும் கிண்டலான கருத்துக்களால் ஓரங்கட்டுதல் போன்ற
கட்டமைப்புகளைத் திட்டமிட்டு உருவாக்கிக் கொண்டிருக்கிறது சர்வதேச அரசியல்.
அது ஏற்படுத்திய பாணியை, நீரோட்டத்தை அப்படியே பின்பற்றி மிகமிகப்
பெரும்பான்மையானோர் அதே ரீதியில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான்
அதிகாரவர்க்கம் எதிர்பார்த்தது.
ஒவ்வொரு
ஆண்டும் சர்வதேசத்திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ளும் திரைப்படங்கள் மிக
அபூர்வமான கலைத்தன்மை கொண்டதாகவும், புத்தம்புதிய புவிசார் வாழ்வியலை
அறிமுகப்படுத்துவது போன்றவைகளாகவும், மிகநுட்பமாக வாழ்வியல் அம்சங்களின்
சிக்கல்களைப்பற்றிப் பேசுவதாகவும் அமைந்திருக்கும். சமீபகாலங்களில்
இந்தப்பார்வையின் வடிவம் மாறிக் கொண்டேயிருக்கிறது.
இந்தவருடம்
சர்வதேசத் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்ட ஈரான் படத்தைப்
பற்றிப்பார்க்கலாம்: Rambod Javan இயக்கிய No Men Allowed படம் முழுக்க
முழுக்க நகைச்சுவை கொண்டது. ஆண் வாசமே அறியாத பெண்கள் மேல்நிலைப் பள்ளி.
நாயகி அதன் இளம் தலைமை ஆசிரியை. அந்தப் பள்ளியில் ஆசிரியராக ஒற்றை ஆண்மகனாக
நாயகன் நுழைகிறார். அவர் உள்ளே நுழைந்ததும் பள்ளியே கலகலப்பாகிறது. தலைமை
ஆசிரியை காதலிக்கும் முயற்சி தனியாக நடக்கிறது. இவை அனைத்தையும்
நகைச்சுவையாகச் சொல்லி இருக்கிறார். ஈரானில் உள்ள பாலின சமத்துவமின்மையை
நையாண்டியாக வெளிப்படுத்தி இருப்பதும் இப்படத்தின் சிறப்பு.
ஈரானில்
அரசு, அதிகாரம், ஒடுக்குறைகள் இதனூடான வாழ்வியல் சிக்கல்களை முன்வைத்து
கடந்த வருடங்களில் உலகம் முழுமைக்கும் பேசப்பட்ட படங்கள் ஈரானை
முதலிடத்தில் வைத்துக் கொண்டாடின. ஆனால் அந்த எதிர்க்குரல் அதிகார
வர்க்கத்திற்குப் பெரிய தலைவலி.
அதேபோல
அர்ஜெண்டினாப் படமான Sebastián Borensztein இயக்கிய Chinese Take-away.
சீனாவைச் சேர்ந்த ஒருவரும் ஸ்பெயினைச் சேர்ந்த மற்றொருவருமாக வேறுவேறு
பின்னணி கொண்ட இரண்டு பேர் சந்திக்க நேர்கிறது. இருவரும் மொழியால்
ஒருவரையொருவர் புரிந்துகொள்ள முடியாத நிலை. அதேசமயத்தில், இருவரும்
ஒருவரையொருவர் சார்ந்து இருக்க வேண்டிய நிலை. இதை வைத்து நகைச்சுவைப்படமாக
உருவாக்கியிருக்கிறார்கள் 2011-ம் ஆண்டில் அர்ஜெண்டினாவில் மிகப் பெரிய
வசூல் வெற்றி பெற்றபடம் இது.
சதா புரட்சிக்கான ஆயத்தங்கள் தோன்றிக் கொண்டேயிருக்கும் லத்தீன் அமெரிக்கநாடுதான் அர்ஜெண்டினா.
அதேபோல
சர்வதேசத்திரைப்படங்களில் முதலிடம் வகிக்கும் கொரியப்படங்களின் போக்கும்
காமெடிக்கு மாற ஆரம்பித்திருக்கிறது. Kim Joo-ho இயக்கத்தில் வெளிவந்துள்ள
The Grand Heist படம் செமத்தியான காமெடிப்படம். 18 ஆம் நூற்றாண்டில்
நடக்கும் கதைத்தளம். அரண்மனையில் இருக்கும் ஒரு பொருளை 11 திருடர்கள்
சேர்ந்து திருட முயற்சிக்கும் அபத்தக்காட்சிகள்.
மேலும்
சீனப்படங்கள் உலகத்திரைப்படங்களில் முக்கியப்பங்கு வகிப்பவை. இந்த வருடம்
62 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட Doze Niu இயக்கிய
படமான Love, காதலும் சதியும் பின்னிப்பிணைந்து ஒரு ரெமாண்டிக் காமெடியாக
மாறியிருக்கிறது.
ஆக மக்களை ஒரு ஜாலியான மூடிலேயே வைத்திருப்பதற்காக ஒரு விரிவான நெட்ஒர்க்கைக் கடட்மைக்கிறது சர்வதேச அரசியல்.
இந்தக் காமெடியைக் கொண்டாடும் தமிழ்த்திரைப்படத்தின் அரசியலை விளக்கமாகப் பார்க்கலாம்:
கதை
பற்றியோ, அல்லது கலை பற்றியோ எவ்விதமான பிரக்ஞையும் விஷயஞானமும்
இல்லாமலும், சர்வதேசத்திரைப்படச்சூழல், அதுகுறித்த தொலைநோக்குக்
கண்ணோட்டம், சிந்தனைகள், வெண்டைக்காய், புடலங்காய் எதுவுமில்லாமலும்,
வெறும் முருங்கைக்காயை மாத்திரமே வைத்துக் கொண்டு யாராவது ஒரு டைரக்ஷனிடம்
உதவியாளராய்ச் சேர்ந்து தொழில் கற்றுக் கொண்டால் போதும். அடுத்த
சிலவருடங்களில் அவர் தமிழின் மாபெரும் இயக்குனத்திலகமாக மாறிவிடுகிறார்.
இப்படி
ஜாலியான ஒரு சூழலை, உலகப்படங்கள், அகிராகுரோசவா, சினிமா கோட்பாடு
என்றெல்லாம் பயமுறுத்தியதால், உலக டிவிடிகளைப் பார்த்துக் கதைகளும்,
காட்சியமைப்புகளும் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அந்த எரிச்சல் தற்போது
காமெடிப்படங்களின் வெற்றியில் குதித்துக் கும்மாளமிடுகின்றது.
ஆமாம்.
தமிழ்படம் எடுப்பதற்குக் கதை கத்தரிக்காயெல்லாம் தேவையில்லை. அதற்காக
மண்டையை உடைத்துக் கொண்டு, உலக இலக்கியம் பேசும் எழுத்தாளர்களை அழைத்து
பவ்வியமாகக் கதை கேட்டு, பிறகு அவர்களை நைசாக ஆதாரமில்லாமல் ஏமாற்றிக்
கழட்டி விட்டுவிட்டு, படம் வெளியான பிறகு அவர்கள் ஏதாவது வழக்குப்
போட்டவிடுவார்களோ எனப் பயந்து... இந்தக்கருமமெல்லாம் தேவையில்லை. ஜாலியான
காமெடி போதும்.
யார்
வேண்டுமானாலும் ஒரு படத்தை எடுத்து நாலுகாசு பார்க்கமுடியும் என்றால்
அதற்கு ஒரே மூலதனம் காமெடிதான். நகைச்சுவைப்படம் எடுப்பதும் கஷ்டமாக
காரியம்தான் என்று நீங்கள் விவாதிக்கலாம். ஆனால் இந்தத்திலகங்கள் எடுக்கும்
படங்கள் நகைச்சுவைப்படங்கள் அல்ல. மொக்கையான காமெடிப்படங்கள்.
எதற்கெடுத்தாலும் கெக்கே பிக்கே என்று சிரிக்க வேண்டியது. ரசிகன்
சிரிக்கவில்லையென்றால், காமெடி வசனத்துடன் குசு விடுவது போல ஒரு
இசைத்துணுக்கைச் சேர்த்துவிட்டால் போதும், விழுந்து விழுந்து சிரிக்கிறான்
தமிழ்ரசிகசிகாமணி. ஈஸியாக ஜெயித்துவிடலாம்.
ஆக, சர்வதேச அரசியல் காமெடியை முன்னிறுத்துவதன் பின்னணி அப்படியென்றால், தமிழ்த்திரைப்பட அரசியலின் பின்னணி இப்படி!
‘லட்டு’
படத்தில் மூன்று பேர் சேர்ந்து ஒரு பெண்ணை டாவடிக்கும் காட்சிகளை
அப்படியேவா திருடுவார்கள்? குறைந்த பட்ச தற்கால விஷுவல் சென்ஸ்
கூடக்கிடையாதா இயக்குனருக்கு?
ஒரு
மனிதனை மிகக் கேவலமாகக் கிண்டல் செய்தது கூட ஒரு புகழாக, ஒரு அதிகாரமாக
மாறும் சூழல் இது. நடிப்பின் அட்சரம் கூட விளங்காத பவர்ஸ்டார் என்பவரின்
சேட்டைகள், கோவை சரளாவின் கேவலமாகன உரையாடல் உச்சரிப்பு,
பவர்ஸ்டாரைக்கலாய்த்து காலிசெய்ய அழைத்துவந்தால் நம்மையே
காலிசெய்துவிடுவார் போலிருக்கிறதே என்ற சிந்தனைகளுடன் தட்டுத்தடுமாறி
நடிக்கும் சந்தானம் என்று படம் மொக்கைக் காமெடியாக இருக்கிறது.
அதுவும்
கமல்ஹாசன் போன்ற ஒரு கலைஞனின் கலைச்செயல்பாடுகளை கலாய்ப்பு என்கிற பெயரில்
மிகக் கேவலமாகக் காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியமைப்புகள் இதுவரையிலான
தமிழ்திரைக்கலையின் மீது ஏற்படுத்தும் அவமானத்தன்மை கொண்டவை.
படத்தில்
இறுதியாக பவரைப் பார்த்து சந்தானம் பேசும் வசனம்: “நான் காமெடியன்னு
தெரிஞ்சி வாழ்ந்துட்டிருக்கேன்.. ஆனா நீ காமெடியன்னு தெரியாமலேயே காமெடியனா
வாழ்ந்திட்டிருக்கே பாரு, அதுதான் பெரிய காமெடி...”
அதேபோல
இதைக் கொண்டாடும் தமிழ்த்திரை உலகினர் தாங்கள் யாரென்று தெரியாமலேயே
கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப்படத்தின் வெற்றி மறுபடியும்
தமிழ்த்திரைப்பட உலகின் மாற்று முயற்சிகளைப் பின்னோக்கித்
தள்ளியிருக்கிறது.