இந்தியாவில் இஸ்லாம்

786 views
Skip to first unread message

ஸ் பெ

unread,
May 3, 2013, 6:15:46 AM5/3/13
to panbudan

இந்தியாவில் இஸ்லாம்-1 தோப்பில் முஹம்மது மீரான்


தோப்பில் முஹம்மது மீரான் அவர்கள் நாடறிந்த நல்ல சிறந்த எழுத்தாளர், பிரபல நாவலாசிரியர். தோப்பில் மீரான் எழுதிய நாவல்கள்-புதினங்கள், பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கான வாசகர்களால் பாராட்டப்பட்டவைகளாகும்.

‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ ‘கூனன் தோப்பு’ ‘தங்கராசு’ இவைகள் மீரானின் சிறந்த படைப்புகள்.

தோப்பில் மீரான் தனது எழுத்துப்பணிகளை நாவலாசிரியர் என்ற அளவில் நிறுத்திக் கொள்ளவில்லை. அவர் வரலாற்று கட்டுரைகளையும் வடிவமைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அவருடன் நானும் பங்குக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. அந்த நிகழ்ச்சியில் தனது உரையில் கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் முன்பு நடத்தி வந்த ‘உங்கள் தூதுவன்’ மாத இதழில் தான் எழுதிய வரலாற்றுக் கட்டுரைகளை நினைவு கூர்ந்து பேசினார் தோப்பில் மீரான். அந்த உரையை கேட்ட நான் நீங்கள் இந்தியாவில் இஸ்லாம் தோன்றிய வரலாறு தொடரை தமிழகத்தில் வரும் முஸ்லிம் தமிழ் இதழ்களில் அதிகம் விற்பனையாகும் ‘மக்கள் உரிமை’ இதழில் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அதன் பயனாகவே இந்த இதழில் அந்த தொடர் ஆரம்பமாகிறது.

இந்தியாவில் இஸ்லாம் தோன்றிய வரலாறு என்று இப்புதிய வரலாற்றுத் தொடரில் வரலாற்றில் மறைக்கப்பட்ட பல உண்மைச் சம்பவங்களை அறிய வேண்டிய அரிய செய்திகளை கல்வெட்டுகள் போன்ற வரலாற்றுச் சான்றுகளுடன் இக்கட்டுரை தொடரில் வழங்க உள்ளார் தோப்பில் மீரான் அவர்கள்.

- பேராசிரியர்: எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், வெளியீட்டாளர்

இந்தியாவில் இஸ்லாம் மார்க்கம் பரவியதைப் பற்றி வரலாற்று அறிஞர்கள் பலரும் பற்பல கருத்துக்களை வெளியிடுகின்றனர். கி.பி.711-ல் முகமது இபுனுகாசிம், சிந்து வழியாகப் படையெடுத்து வந்த பிறகுதான் இஸ்லாம் இங்கு பரவியது என்றும், நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்திலேயே தென் இந்தியாவில் மேற்கு, கிழக்கு கடற்கரைப்பகுதிகளில் ஏற்கனவே இஸ்லாம் தோன்றிவிட்டது எனவும் பலவாறாகச் சொல்லப்படுகிறது.

இதில் எது உண்மை, எது பொய் என்று வரலாறு ஆசிரியர்கள் எனக் கூறப்படுபவர்கள் யாருமே திட்டவட்டமாகத் தங்கள் முடிவைத் தெரியப்படுத்தியதாகத் தெரியவில்லை. சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு வரலாற்றில் சில குளறுபடிகள் ஊடுருவியதால் உண்மைகளை அதன் நிஜநிலையில் தெரிந்து கொள்ளச் சிரமங்கள் பல ஏற்படுகின்றன.

தென்னகத்தின் மேற்கு, கிழக்கு கடலோரப் பகுதிகளில்தான் முதன்முதலாக இந்தியாவில் இஸ்லாம் தோன்றியது எனக் காட்டுவதற்கான அடிப்படை ஆவணங்கள் எதையுமே அதிகாரப்பூர்வமான நமது வரலாற்று விற்பன்னர்கள் யாரும் மேற்கோள் காட்டவில்லை.

ஆதாரம் எதுவுமின்றி மொட்டையாக வடபகுதியில் தோன்றுவதற்கு முன்மேற்கு கடலோரப் பகுதிகளில் இஸ்லாம் பரவியதாகக் கூறி முடிக்கின்றனர். ஆதாரமற்ற இக்கூற்றை சிலர் மறுக்கின்றனர். முகம்மது இப்னுகாசிம் சிந்து மார்க்கமாக கூரிய வாளேந்தி வந்து இரத்தம் சொட்டச் சொட்ட இஸ்லாத்தைப் பரப்பினார் என்று உறுதிப்படுத்த சில ஆவணங்களை முன்வைக்கின்றனர்.

சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பாக கேரள மாநிலத்தைச் சார்ந்தவர்கள் மலபார் கடற்கரை வாயிலாகத்தான் முதன்முதலாக இஸ்லாம் இந்தியாவில் தோன்றியது என்று கூறுகின்றனர். அதற்குப் பழங்கால அரபி நாணயங்கள் சிலவற்றையும், சில பள்ளிவாசல்களில் பொறிக்கப்பட்டுள்ள ஹிஜ்ரி ஆண்டுக் குறிப்புகளையும் ஆதாரம் காட்டுகின்றனர்.

அந்த ஹிஜ்ரி ஆண்டுகள் உண்மையானவைகளல்ல என்று வேறு சில வரலாற்று ஆசிரியர்கள் மறுக்கின்றனர். இவர்கள் தம் மறுப்பை உண்மைப்படுத்துவதற்காக சில பலகீனமான ஆவணங்களையும் காட்டுகின்றனர்.

இந்தியாவில் இஸ்லாம் தோன்றியதைப் பற்றியும், அது தென்னகத்தின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் தான் முதலில் தோன்றியது என்றும் வாதாடுபவர்களும், எதிர்வாதம் புரிபவர்களும் “இந்திய வரலாற்று ஆசிரியர்கள்” என்ற அந்தஸ்தைப் பெறாதவர்கள். அதனால் இவர்களுடைய கருத்துக்களை வரலாற்றுப் புலிகள் யாரும் ஏற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை. ஆனால் அந்தஸ்து பெற்ற வரலாற்று ஆசிரியர்கள் இதைப்பற்றிய உண்மையைத் தெரிந்து கொள்ளவோ, தெரிந்தவற்றை வெளியே சொல்லவோ தயங்குகின்றனர்.

வெள்ளையர்கள் கோடிட்டுக் காட்டிய, தடம் நோக்கி நடந்த நம் வரலாற்று ஆசிரியர்களானாலும் சரி, மேல்நாட்டு ஆசிரியர்களானாலும் சரி, இந்திய வரலாற்றுப் பக்கங்கள் தென்னகத்திற்கு குறிப்பாக கேரளத்திற்கும், தமிழகத்திற்கும் போதிய இடஒதுக்கீடு செய்யவில்லை. இந்தக் கஞ்சத்தனமான இடஒதுக்கீட்டின் இருக்கமான பகுதியில் இஸ்லாத்தின் வருகையைப் பற்றி ஆராய்ந்து எழுத இடமில்லாமல் போய்விட்டது.

- தோப்பில் முஹம்மது மீரான்

நன்றி: மக்கள் உரிமை | ஆகஸ்ட் 26 – செப் 01, 2005

தொடரும்..

--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

ஸ் பெ

unread,
May 3, 2013, 6:17:49 AM5/3/13
to panbudan

இந்தியாவில் இஸ்லாம்-2,தோப்பில் முஹம்மது மீரான்,வரலாறு,இஸ்லாம்


கவனக்குறைவால் அழிந்துப்போன விலைமதிப்பற்ற ஆவணங்கள்

சங்க காலத்துக்குப் பின்னர் கி.பி. 6, 7, 8 நூற்றாண்டுகள் தமிழகத்தையும், கேரளாவையும் பொறுத்தவரையில் வரலாற்றில் இருண்ட காலமாகும்(?) “சங்க காலத்தைப் பின்தொடருவது வரலாற்று ரீதியாகப் பார்ப்பின் விடியாத இரவு. தொடர்ந்து மூன்று நூற்றாண்டுகளுக்கு அதிகமான காலத்தைப் பற்றி நமக்கு எதுவும் அறிய வாய்ப்பில்லை” என்று திரு. கே.ஏ. நீககண்ட சாஸ்திரி தனது தென்னிந்திய வரலாறு (மலையாள மொழிபெயர்ப்பு) நூலில் பக்கம் 159-ல் குறிப்பிடுகிறார்.

இங்கு இஸ்லாத்தின் தோற்றமும் வளர்ச்சியும் இம்மூன்று இருண்ட நூற்றாண்டுகளுக்குள் அடங்குவதால் இன்றைய வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்குத் தேவையான தடயங்கள் எதுவும் கிடைக்க வாய்ப்பின்றி தவிக்கின்றனர்.

தென்னிந்தியாவிலுள்ள வல்லரசுகளான சாளுக்கியர், பல்லவர், பாண்டியர், இராஷ்ட்டிகூடர் போன்றவர்கள் கேரளா (சேரநாடு) மீது படையெடுத்த குறிப்புகளில் காணப்படும் சில செய்திகள் இந்த இருண்ட காலத்தைப் பற்றி நமக்குச் சில அறிவுகள் புகட்டுகின்றன.

நம்மைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமான இம்மூன்று நூற்றாண்டுகளில் நிகழ்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சிகளை நாம் தெரிந்து கொள்வதற்கான கல்வெட்டுகளோ, இலக்கியங்களோ, செப்பேடுகளோ எதுவும் நம் பார்வைக்குக் கிடைக்காமல் போய்விட்டது துர்பாக்கியம் என்றே கூறவேண்டும்.

நிலைமை இவ்வாறிருக்க, எதை ஆதாரமாகக் கொண்டு “இந்த விடியாத இரவில்” நடந்த சரித்திரச் சிறப்புமிக்க உலகளாவிய உன்னதமான ஒரு மார்க்கம் நம்நாட்டிற்குள் முதன்முதலாக அடியெடுத்து வைத்த சுபமுகூர்த்தத்தைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும்? எதிர்வரும் தலைமுறையினருக்கு எடுத்துக் கூறுவது எவ்வாறு?

இந்தியாவின் வடபகுதி வாயிலாக முகமது இபுனுகாசிமையும், அவரைத் தொடர்ந்து வந்தவர்களையும் இந்தியாவை ஆக்கிரமிக்க வந்தவர்களாகச் சித்தரிப்பதற்குப் பெரும் சிரமம் மேற்கொண்டு பல பிறமொழி நூல்களைத் தேடிக் கண்டுபிடித்து, மொழியாக்கம் செய்து தங்கள் கற்பனைக்கேற்றவாறு இந்திய வரலாற்றைத்திறம்பட சிருஷ்டித்தவர்கள், இந்தியாவின் தென்பகுதியில் இஸ்லாம் தோன்றியது குறித்து சரிவர ஆராயாமலும், கவனம் செலுத்தாமலும் மவுனமாக இருந்து விட்டனர்.

இந்தியாவுக்குள் இஸ்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் உருவத்தில் அத்துமீறி நுழைந்தது என்ற அவர்களுடைய கூற்றைப் பொய்ப்பிக்கும்படி மேற்கு கடற்கரைப் பகுதிகளில் இஸ்லாம் அமைதியாகத் தோன்றிப் பரவிய உண்மையைத் தெரிந்த வெள்ளையர்களும் அவர்களுடைய வழித்தோன்றல்களான இந்திய வரலாற்று ஆசிரியர்களும் ஒளிமயமான இந்த மூன்று நூற்றாண்டுகளையும் வரலாற்றில் இருண்ட காலம் என்று சித்தரித்து உதாசீனம் செய்துவிட்டனர்.

மக்கள் மத்தியில் கருத்து வேற்றுமை எனும் படம் எடுக்கும் பாம்பை ஏவிவிட்டு தம் ஆட்சியை உறுதிப்படுத்த வெள்ளையர்கள் செய்த சதித்திட்டம்தான் இந்த உதாசீனம். இது பிற்காலத்தில் ஆராய்ச்சியாளர்களுக்குப் பல வரலாற்று நிஜங்களை ஆராய்ந்து அறியத்தடயங்கள் இல்லாமல் தடையாகிவிட்டது.

ஆனால் பெருமானார்(ஸல்) அவர்கள் காலத்தில் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் வருகைதந்த அரபி வணிகர்களும் இஸ்லாமிய பிரச்சாரகர்களும் தம் வருகைகளைக் குறிக்கும் சில ஆவணங்களை இங்கு விட்டுச் சென்றனர் என்பது உண்மையேயாகும். அவைகள் கேரளக் கடற்கரைப் பகுதிகளில் அன்று கட்டிய பள்ளிவாசல்களிலும் சில முக்கிய முஸ்லிம் பிரமுகர்களிடம் இருந்து வந்ததாகக் கூறப்படுகின்றன.

முஸ்லிம் மூதாதையர்களின் கவனக் குறைவாலும், அவற்றின் விலைமதிப்பு என்னவென்று அறியாததாலும் பலவும் அழிந்து போய்விட்டன. எஞ்சிய சிலவற்றை போர்ச்சுக்கீசியருடைய படையெடுப்பின் போது முஸ்லிம்களைக் கூட்டுக்கொலை செய்த வேளையிலும் பழங்கால மஸ்ஜித்களை இடித்துத் தரைமட்டமாக்கிய நாசச் செயலிலும் காணாமற் போய்விட்டன.

சில ஆவணங்கள் இன்னும் எஞ்சியுள்ளதாகத் தெரிய வருகிறது. அவைகள் ஆராய்ச்சியாளர்களுக்குப் பயனளிக்காதவாறு சில சுயநலக் கும்பல்களிடம் சிக்கிவிட்டதாக அறியமுடிகிறது.

சமீபகாலம் வரையிலும் தேங்காய் பட்டினம் மாலிக் இபுனுதினார் பள்ளிவாசலில் ஒரு பழங்கால அரபிக் கையெழுத்துச் சுவடி இருந்து வந்தது. இப்பணிக்காக அந்த அரபிக் கையெழுத்துப் பிரதியைப் பார்வையிட விரும்பிச் சென்ற போது எங்கோ தவறிவிட்டதாக அங்கு அப்போது இருந்த பேஷ் இமாம் அவர்கள் பதிலளித்தார்கள். நண்பர் பேராசிரியர் திருமலர் எம்.எம். மீரான் பிள்ளை அவர்களிடம் அக்கையெழுத்துச் சுவடியில் காணப்படும் சில ஆண்டுகளும் இடங்களும் அடங்கிய சிறு குறிப்பு ஒன்று உள்ளது. அதை ஒரு ஆவணமாக மேற்கோள் காட்ட முடியாத நிலை.

இப்படிப்பட்ட வரலாற்று ஆவணங்களை நம்மவர்கள் இழந்துவிட்ட காரணத்தினால் வரலாற்று உண்மைகளை அறிய முற்படுவோருக்கு ஏமாற்றம்தான் எஞ்சுகிறது.

சேரமான் பெருமாள் ஹிஜ்ரி ஆண்டு 10-ல் (ஏ.டி.632) செஹர்முஹல்லாவில் இறைவனடி சேர்ந்ததைக் குறிக்கும் மிகப்பழமையான அரபுக் கையெழுத்துப் பிரதி ஒன்று கேரளாவில் வளர்ப்பட்டணம் காசி இம்பிச்சிக்கோயா என்ற மார்க்க அறிஞரிடம் இருப்பதாக மறைந்த வரலாற்று ஆசிரியர் பேராசிரியர் ஜனாப் பி.ஏ. செய்யது முஹம்மது என்பவர் “முகல் சாம்ராஜ்ஜியத்தின் ஊடே ஒரு பயணம்” என்ற வரலாற்றுக் கட்டுரைத் தொகுப்பு நூலில் (பக்கம் 103) குறிப்பிட்டுள்ளார்.

முக்கியமான இந்த ஆவணம் இன்று யாரிடமுள்ளது என்று யாருக்குத்தான் தெரியும்? நம்பகமான பல வரலாற்று ஆவணங்கள் நம்மவர்களிடமிருந்தும் நமக்கு பயனற்றதாகப் போய்விட்ட ஏக்கத்தோடு பிற வரலாற்று ஆசிரியர்கள் எழுதிவைத்த வரலாற்று வரிகளுக்கிடையில் ஒளிந்து கிடக்கும் உண்மைகளைத்தேடி கண்டுபிடிக்கவேண்டிய சிரமம் மிகுந்த பணிமை இன்றைய வரலாற்று ஆசிரியர்கள் மேற்கொள்கின்றனர்.

1857-க்குப் பின் இன்று வரையிலும் எழுதப்பட்டுள்ள வரலாற்று நூல்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக் கிடக்கின்ற சில வரலாற்றுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு பெருமானார்(ஸல்) அவர்கள் காலத்திலேயே இஸ்லாம் இந்தியாவில் மேற்கு கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் தோன்றிவிட்டது என்ற உண்மையை அடுத்த இதழில் ஆராய்வோம்.

தொடரும்..

மக்கள் உரிமை வாரஇதழ் : செப்டம்பர் 02 – 08, 2005

ஸ் பெ

unread,
May 3, 2013, 6:18:56 AM5/3/13
to panbudan

இந்தியாவில் இஸ்லாம்-3,தோப்பில் முஹம்மது மீரான்


ஆண்டு – தேதிகளில் காணப்படும் குளறுபடிகள்



இன்று நம் கைகளில் இருக்கும் வரலாற்று நூல்களில் காணப்படும் ஆண்டு தேதிகள் உண்மையானவையல்ல. வரலாற்று நூல்களில் கி.பி.10-ம் நூற்றாண்டிற்கு முன்புள்ள அனைத்தும் ஜோதிட முறையில் கணித்து எழுதப்பட்டவை. ஒவ்வொரு அரசர்களும் ஆட்சி பீடத்தில் ஏறும் நாள் முதல் ஆட்சி ஒழியும் நாள்வரையிலான ஆண்டுகள்தான் அன்று கணக்கிடப்பட்டு வந்தன. தொடர்ச்சியான ஒரு ஆண்டு கி.பி.10-வது நூற்றாண்டுக்கு முன்புவரை நடைமுறையில் இல்லாமல் இருந்தது. கீழே தந்துள்ள தகவல்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.

சோழநாட்டு அரசன், முதல் ராஜராஜன் காலத்தில் குமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் என்ற ஊரில் ஒரு பாறை மீது பொறிக்கப்பட்ட கல்வெட்டில் கீழ்வருமாறு பொறிக்கப்பட்டுள்ளது:-

5 “…………” செழியரை தேசுகொள்கோ இராசராச -

6 கேசரின் மர்க்குயாண்டு பதினைஞ்சு இவ்வாண்டு கன்னி நாயிற்று

முப்பதாந் (தேதி) செவ்வாய்கிழமை ……….” என்று காணப்படுகிறது. இங்கு எந்த ஆண்டு பொறிக்கப்பட்டது என்று குறிப்பிடவில்லை. அவர்(அரசர்) ஆட்சிபீடம் ஏறிய பதினைந்தாவது ஆண்டில் எழுதிக் கொடுத்தது என்று மட்டுமே காணப்படுகிறது.

“This date has been Calculated and Verified by Prof.Kielhorn and the result published in the Epigraphia indica, Volume 5th P.48, as Tuesday 29th August 999 A.D.”

அந்த கல்வெட்டில் காணப்படும் வாசகத்தை பேராசிரியர் கீல்ஹான் என்பவர் கணித்து கி.பி.999 ஆகஸ்டு கன்னி மாதம் 29 தேதி செவ்வாய்க்கிழமை என்ற முடிவுக்கு வந்ததாக திரு. டி.ஏ. கோபிநாத ராவ் குறிப்பிடுகிறார்.

ஜோதிட முறையிலும், அல்லாமலும் கணித்து எழுதப்பட்ட ஆண்டுகளே வரலாற்றில் நாம் வாசிக்கும் ஆண்டுகள். இவை உண்மையானவை என்று கூற முடியாது. இருந்தாலும் உண்மை என்று நம்பித்தான் தீரவேண்டும்.

ஜோதிட மூலமும் அல்லாமலும் கணித்து எழுதிய ஆண்டுகளில் எவ்வளவோ தவறுகள் நடந்ததுண்டு. கேரளாவில் ‘திருவல்லம்’ என்ற ஊரில் உள்ள ஒரு கல்வெட்டில் காணப்படும் ஆண்டின் நடுவிலுள்ள எண் தெளிவில்லாமல் இருந்தது. இதை 319வது ஆண்டு என்று பேராசிரியர் சுந்தரம்பிள்ளை குறிப்பிட்டார். 399 என்று கே.வி. சுப்பிரமணிய ஐயர் அதை திருத்தம் செய்தார்.

இதில் எது சரி? எது தவறு? 80 ஆண்டுகளுடை இடைவெளி. பிறகு அக்கல்வெட்டில் உள்ள வாசகம் ஒன்றை எடுத்து சோதிட அடிப்படையில் கணக்கிட்டனர். “விருச்சிகத்தில் வியாழன் நின்றயாண்டு மகர ஞாயிற்று செய்த காரியமிது” என்று சொல்லில் வரும் வியாழனுடைய நிலையை கணக்கிட்டு 399 என்ற முடிவுக்கு வந்தனர். (பேராசிரியர் இளம்குளம் குஞ்சன் பிள்ளை – ‘கேரள வரலாற்றின் இருள் சூழ்ந்த ஏடுகள்’ பக்கம்-139.)

இப்படி பெரும்பான்மையான ஆண்டுகள் எல்லாம் ஜோதிட முறையில் கணித்து எழுதப்பட்ட ஆண்டுகளேயன்றி உண்மையான ஆண்டுகள் அல்ல என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இதுபோன்று சில ஊர் பெயர்களும் சில மன்னர்களுடைய பெயர்களும் திட்டவட்டமாக உறுதி செய்யப்படாதவை.

ஒரே மன்னரை பல பெயர்களில் குறிப்பிடுவதையும் அதே மன்னர் வேறுபட்ட காலங்களில் ஆட்சி புரிந்து வந்ததாகக் குறிப்பிடுவதையும் நாம் பார்க்க முடிகிறது. ஆகையால் ஜோதிட முறையில் கணித்து எழுதப்பட்ட ஆண்டுகளை உண்மை என நம்பி நாம் வரலாறுகளை அணுகுவது சரியாகப்படவில்லை.

கொல்லம் ஆண்டு (A.D.825) துவங்குவதற்கு முன்னும் ஓர் சில நூற்றாண்டுகளுக்குப் பிறகும் தொடர்ச்சியான ஓர் ஆண்டு பண்டைய தமிழ்நாட்டில் நடைமுறையில் இல்லாமலிருந்ததுதான் இந்தக் குழப்ப நிலைகளுக்கு அடிப்படைக் காரணம்.

கிறிஸ்தவ ஆண்டையோ, அதற்குப் பின் வந்த கொல்லம் ஆண்டையோ எந்த அரசரும் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஏதேனும் அரசர் பதவி ஏற்றது முதல் அவர் பதவி விட்டு இறங்கியது வரையிலான வருடங்களை நடைமுறைப்படுத்தினர். இதனால்தான் 10-வது நூற்றாண்டு முன் உள்ள ஆண்டுகளை சரியான முறையில் குறிப்பிட்டு எழுத முடியாமல் போய் விட்டது.

“After doing all this the perumal left the sandy island of Tirunavayi with the people of the veda and descended from a ship at kodungallur harbour and entered the palace of kodungallur with a view to proceed to Mecca (Cheramran embarked for Mecca with the people of veda) it was in the Kali Year(A.D.355)
(Malabar manuel by willian Logan, P.279, A.D.355)

இவ்வாறு ‘கேரள உற்பத்தி’ என்ற பண்டைக்கால கேரள வரலாற்று நூலில் குறிப்பிட்டிருப்பதாக லோகன் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார். கலி ஆண்டை கணக்கிட்டு ‘கேரளா உற்பத்தி’ நூலாசிரியர் ஏ.டி.355-ல் சேரமான் பெருமாள் என்ற சேரநாட்டு அரசர் இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொள்வதற்காக கொடுங்கல்லூர் துறைமுகத்திலிருந்து கப்பலேறி பயணமானார் என்று குறிப்பிட்டுள்ளார்.

கலி ஆண்டிற்கு சமமான கி.பி.ஆண்டை கணக்கிட்டபோது தவறு நடந்ததாகத் தெரிகிறது. கி.பி.579-ல் தானே பெருமானார்(ஸல்) அவர்கள் பிறந்தார்கள். நபி பெருமானார்(ஸல்) அவர்கள் பிறப்பதற்கும் 224 ஆண்டுகளுக்கு முன் சேரமான் பெருமாள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்காக மக்கா பயணமானார் என்று குறிப்பிடும் ஆண்டில் எவ்வளவு தவறுகள் வந்துள்ளது என்று புலனாகிறது அல்லவா.

இதே போன்றுதான் நபிகள் பெருமானார்(ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்திருந்த பள்ளி பாண பெருமாள் என்று சேரமன்னர் முதற்கொண்டு முதல் சேர வம்சத்தின் கடைசி பெருமாளான சேரமான் பெருமாள் நாயனார் வரையிலான நீண்ட இரண்டு நூற்றாண்டுகளில் வருடங்களில் பல குளறுபடிகள் காணப்படுகின்றன.

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் தொடர்ச்சியான ஒரு ஆண்டை பின்பற்றி வராததும், இந்த நூற்றாண்டுகளை இருண்ட காலமென உதாசீனப்டுத்தியதுமேயாகும்.

தொடரும்..

மக்கள் உரிமை வாரஇதழ் : செப்டம்பர் 09 – 15, 2005

ஸ் பெ

unread,
May 3, 2013, 6:19:16 AM5/3/13
to panbudan

இந்தியாவில் இஸ்லாம்-4,தோப்பில் முஹம்மது மீரான்


ஒரு புது மதத்தின் வருகையை ஏற்றுக் கொள்வதற்கு தென் இந்தியாவில் நிலவியிருந்த சாதமான சூழ்நிலை.

எ) ஆதிமக்கள்: இன்றைய கேரளம் உட்பட, மண்டைய தமிழகத்தில் ஆதிகுடிமக்கள் எனப்படுபவர்கள் இன்று நம் அரசால் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள மக்களும் இன்று காடுகளில் தங்கிவரும் மலைவாசிகளுமாவார்கள். ஆதி திராவிடர்கள் என அழைக்கப்படுபவர்கள் இவர்களே ஆவர். மதங்களின் வருகைக்கு முன் இவர்களுக்கிடையில் ஒரு ஆட்சி முறையோ, சமூக சட்ட வரம்புகளோ யாதும் இல்லாமலிருந்தது. கேரளப் பகுதியை பொறுத்த மட்டில் செல்வாக்கு வாய்ந்த நாயர் வகுப்பினருக்குக் கூட எந்தவிதமான மதமும் இல்லாமதிருந்தது.

ஆரியர்கள் எனப்படுபவர்கள் வெளியே இருந்து இப்பகுதிக்கு வரும்முன் இங்குள்ள மக்கள் சடலங்களை புதைத்தே வந்தனர். இப்ராஹீம் நபிக்குப் பின் அராபியர் மத்தியில் நடைமுறையில் இருந்து வந்த “சுன்னத்” முறையை இங்குள்ள ஆண்களும் பின்பற்றி வந்ததாக ‘கேரளா மகா சரித்திரம்’ என்ற நூலின் முதற்பாகத்தில் பய்யம்பள்ளி ‘கோபால குறுபு’ குறிப்பிட்டுள்ளார். (சேரமான் பெருமகன் – கே.கே. அப்துல் கரீம், பக்கம் 77) மதத்தை இங்குள்ள மக்கள் மத்தியில் திணிப்பதற்கு முன் இம்மக்களுக்கு இந்து மதக் கொள்கை என்னவென்றுகூட தெரியாத நிலை.

இப்பகுதியில் வாழ்ந்திருந்த திராவிட மக்கள் நீர் வழங்கும் நதிகளையும், உணவுக் குண்டான பலனளிக்கும் மரங்களில் குடிகொள்ளும் சக்திகளையும் நன்றியுடன் வணங்கி வந்தனர். நோய் நொம்பலங்களை வழங்கும் பேய் பிசாசுகளை ஆடிப்பாடி திருப்திப்படுத்தினர். இப்பவும்கூட சில வகுப்பினர் சில கோவில்களுக்கு முன் கொடைவிழா நாட்களில் ஆட்டம் போடுவதைக் காணலாம். ஆலமரங்களில் தெய்வம் குடிகொண்டிருப்பதாக நம்பி ஆலமரங்களையும் வணங்கி வந்தனர். இன்று கூட பல பகுதிகளில் கோவில் முன்பகுதியில் ஆலமரங்கள் வளர்க்கப்படுவதும், அதை வலம் வந்து பக்தியுடன் வணங்குவதையும் நாம் காண்கிறோம். கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை கணபதி பூஜை இங்கு நடந்ததில்லை என்று ஏ. சீதரமேனான் தமது ‘கேரள வரலாறு’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார் (பக்கம் 85). கி.பி. ஆறாவது நூற்றாண்டு வரை திராவிட வணக்க முறைகளும், பழக்கவழக்கங்களுமே இங்கு இருந்து வந்ததாக சங்க இலக்கியங்களிலிருந்து தெரிய வருகிறது. ஆனால் இவையாவும் எந்த வித மத கோட்பாடுகளின் அடிப்படையில் செய்துவந்த வணக்கமல்ல.

“சங்க காலத்தில் வாழ்ந்திருந்த மக்களில் பெரும்பான்மையோருக்கு கி.பி.500 வரை தனிமதம் எதுவும் இல்லை. ‘கொற்றவை’ என அழைக்கப்படும் பொர் தேவதையை (திராவிட துர்க்கை) விருப்பமுடன் வழிப்பட்டு வந்தனர்” (ஏ. சீதரமேனோன் – கேரள வரலாறு, பக்கம் 82)

கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே சமண மதமும் புத்த மதமும் இப்பகுதியில் பரவிவிட்டன. ஆனால் இங்குள்ள ஆதி குடிமக்களை அம்மதங்களால் கவர முடியவில்லை. அம்மதங்களைப் பின்பற்றி வந்த மக்களையும், அம்மதங்களையும் மிக சகிப்புத்தன்மையுடன் இங்குள்ள மக்கள் பார்வையிட்டனர்.

ஆரியர்கள் வரும் முன் இங்கு வாழ்ந்திருந்த விராவிட மக்கள் தங்களுக்கே உரிய ஓர் ஆட்சி முறையை அமுல்படுத்தி தனி நாட்டை அமைத்து, சுற்றிலும் கோட்டைகளையும் கட்டினர். திருவனந்தபுரத்தில் உள்ள ‘புலயனார்’ கோட்டை மலபார் பகுதியில் ஏறநாட்டில் உள்ள கண்ணன் பாறையும் கும்மிணிப் பாறையும் இம்மக்கள் கோட்டை கட்டி ஆட்சிபுரிந்து வந்த இடங்களில் சில ஆகும்.

ஆரியர்கள் இங்கு செல்வாக்கு பெறுவதற்கு முன் இங்குள்ள மக்களுக்கிடையே ஜாதி முறை இல்லவே இல்லை. இன்று காணப்படும் ஜாதிப்பிரிவுகள் எட்டாவது நூற்றாண்டிற்குப் பிறகுதான் தோன்றின.

தொடரும்..

மக்கள் உரிமை வாரஇதழ் : செப் 16 – 22, 2005

ஸ் பெ

unread,
May 3, 2013, 6:19:37 AM5/3/13
to panbudan

இந்தியாவில் இஸ்லாம்-5,தோப்பில் முஹம்மது மீரான்


வரலாற்றுத் தொடர்:5 – தோப்பில் முஹம்மது மீரான்

இருமதங்களின் அழிவு…!

கி.பி.52-ல் கிருத்தவமும் கி.பி.68-ல் யூத மதமும் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் வந்ததாக வரலாறு கூறுகின்றது. பிரச்சாரம் குன்றி நின்ற சமண புத்த மதங்கள் வெளியிலிருந்து வந்த மதங்களின் வளர்ச்சிக்கொப்ப மதமற்றம் திராவிட மக்களுக்கிடையில் வரைந்து பரவியது. ஆனால் கிருத்தவம், சமணம், புத்தம் இம்மூன்று மதங்களும் பரவியது போல் யூத மதம் இங்கு பரவவில்லை.

கி.பி.எட்டாவது நூற்றாண்டில் ஆரிய மதத்தின் இரு பிரிவுகளான சைவ வைஷ்ணவ மதங்கள் வலுப்பெற்றபோது சமண மதம் வலிமை இழந்து போய்விட்டது. சைவமும் வைணவமும் இணைந்து சமண புத்த மதங்களை ஒழித்துக் கட்டுவதில் தீவிரமாக ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ‘சிதறால்’ என்ற ஊரில் ‘திருச்சாணத்து மலையில்’ இன்று காணப்படும் பகவதிக் கோயில் தென்னாட்டில் சமணர்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த கோயிலாக விளங்கியதாகும். அக்கோயிலில் இருந்த ‘பத்மாவதி’ சிலையை பகவதி சிலையாக மாற்றி இந்துக்கள் வசப்படுத்தி விட்டனர்.

உலகப் புகழ்பெற்ற இந்த திருச்சாணத்து மலையைப் பற்றி நமது முன்னாள் பிரதமர் திரு. பண்டித நேரு, சீனா பயணம் மேற்கொண்டிருந்த போது திரு. சுவன்லாய், நேருவிடம் விசாரித்தார். (மாத்ருபூமி வார இதழ் வாசகர் பகுதி 1989 ஜூலை 2-8) அந்த அளவுக்கு புகழ்வாய்ந்த சமணக் கோயிலாக விளங்கியது சிதறால் கோயில். நேருவின் வேண்டுகோளின்படி இன்று அக்கோயில் தொல்பொருள் பாதுகாப்புத் துறையின் கீழ் இருந்து வருகிறது ‘சிதறால் அம்மா’ என்ற பேரில் இந்துக் கோயிலாக இவை இருந்து வருகிறது. திருவிதாங்கூர் ஆண்டு வந்து ஸ்ரீமூலம் திருநாள் (இவருடைய காலம் 1885-1924) காலத்தில் இக்கோயிலில் ‘சிதறாலம்மா’ என்ற பகவதி பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இதுபோன்று நாகர்கோவிலில் உள்ள ‘நாகர் அம்மன்’ கோயில் ஒரு சமணக் கோயிலாகும். கி.பி.1589-க்குப் பின் இது இந்துக் கோயிலாக மாற்றப்பட்டது. அக்கோயிலின் நிர்வாகப் பொறுப்பில் குணவரே பண்டிதர் என்றும் கமல வாகன பண்டிதர் என்று இரு சமண அறிஞர்கள் இருந்து வந்தனர். இந்துக் கோயிலாக மாற்றப்பட்டதும் துளு நாட்டைச் சார்ந்த போற்றிமார் (பிராமணர்கள்) அங்கு பூஜாரிகளாக பொறுப்பேற்றனர். (கேரள வரலாறு: ஏ.ஸ்ரீதரமேனோன் பக்கம் 87)

வயநாடு காட்டிற்குள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சிங்ஙேரத் தேவரையும் செல்வரத் தேவியையும் பிரதிஷ்டை செய்துள்ள கோயில், இந்துக் கோயில் மாற்றம் செய்த சமணக் கோயிலாக என்று தெரிய வந்துள்ளது (மாத்ருபூமி வார இதழ். டாக்டர் நெடுவட்டம் கோபால கிருஷ்ணன் 1989).

சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகளும் சமணர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

புத்த மதம், சங்க காலத்தில் அதன் முழு வளர்ச்சியை அடைந்திருந்தது. ‘மணிமேகலை’ புத்த மத நூல் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாகோதை என்றும் மகோரயபுரம் என்று அறியப்படும் கொடுங்கல்லூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்த சேர நாட்டு அரசரான பள்ளிபாணப் பெருமாளும் புத்த மதத்தை சார்ந்தவரேயாகும் (இவர் பிறகு இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டார்).

சபரி மலை ஐய்யப்பனும் புத்த மதத்தைச் சார்ந்த ஒரு அரசர் என்று தெரிய வருகிறது. பிற்காலத்தில் இவர் இந்து தேவனாக்கப்பட்டார்.

“சாஸ்தா, அல்லது ஐய்யப்பன் இந்து தேவனாக்கப்பட்ட புத்தன் என்றும், சபரி மலையில் உள்ள சாஸ்தாக் கோயிலுக்கு செல்லும் புனித யாத்திரையில் புத்தமத சடங்குகள்தான் பெருவாரியாக காணப்படுகிறது என்றும் சில அறிஞர்கள் கூறுகின்றனர்” என்று திரு.ஸ்ரீதரமேனோன் குறிப்பிடுகிறார் (பக்கம் 89). ‘சரணம் ஐய்யப்பா’ என்று கூப்பிடுவது புத்த மதக் கொள்கையான ‘சரணத்றணயத்தை’ நினைவு கூறுவதாக அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதை வேறு பல வரலாற்று பண்டிதர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். திருச்சூரிலுள்ள வடக்குந்நாதர் கோயிலும் ‘கொடுங்கல்லூர் பரணிபாடும்’ புகழ்பெற்ற கொடுங்கல்லூர் பகவதிக் கோயிலும் புத்த பள்ளிகளாக இருந்து பிறகு இந்துக் கோயில்களாக மாற்றப்பட்டவைகளில் குறிப்பிடத்தக்க சிலவாகும். தமிழ் நாட்டிலும் பல புத்த பள்ளிகள் இந்துக் கோயில்களாக மாற்றப்பட்டன.

தொடரும்..

மக்கள் உரிமை வாரஇதழ் : செப் 23 – 29, 2005

ஸ் பெ

unread,
May 3, 2013, 6:19:56 AM5/3/13
to panbudan

இந்தியாவில் இஸ்லாம்-6,தோப்பில் முஹம்மது மீரான்


ஆரியர்களுடைய வருகை

புத்த மதமும் சமண மதமும் இங்கு செல்வாக்கைப் பெற்றிருந்த போது மிக சிறுபான்மையினராக இருந்த ஆரியர்களின் தந்திரங்கள் எதுவும் இங்கு பலிக்கவில்லை. பிறகு வடபகுதிகளிலிருந்து ஏராளமான ஆரியர்கள் கூட்டம் கூட்டமாக வரவழைக்கப்பட்டனர். இவர்களுடைய வருகையால் இங்குள்ள ஆரிய சக்தி வலுப்பெற்றது.

முதலில் தங்களை வலிமைப்படுத்திய பின் ஆரியர்கள் அன்றைய ஆட்சியாளர்களை சூசகமாக அணுகி ஆட்சியாளர்களுக்கு ஆரிய வழக்கப்படி பல பட்டங்கள் நல்கி கவுரவித்தனர். இப்பட்டங்களின் பெருமையில் தம்மை பறிகொடுத்த ஆட்சியாளர்கள், ஆரியர் பக்கம் சாயத் தொடங்கினர்.

அதற்கு அடுத்தபடியாக, வணிகத்தில் ஈடுபட்டிருந்த மக்களை அணுகி ‘அரசரின்’ அடுத்தபடியான ‘வணிகர்’ பதவியை வழங்கினர். அப்படி முதல் படியாக ஆட்சியாளர்களையும், வணிகர்களையும் இருகூறுகளாகப் பிரித்தனர். அரசர் என்றும், வணிகர் என்றும், பிறகு இவ்விரு தரப்பினரையும் கொண்டு தங்கள்(ஆரியர்கள்) இவ்விருவரையும் விட உயர்வானவர்கள் என்று சம்மதிக்க செய்தனர். இவ்வாறு, முதல் தரமாக ‘பிராமணர்’, பிராமணருக்குப் பின் ‘அரசர்’, அரசருக்குப்பின் ‘வணிகர்’ – இப்படி ஜாதி முறை அற்ற சமுதாயத்தை முக்கூறு போட்டபின் ஆட்சிப் பொறுப்பில் இல்லாதவர்களையும் வணிகத்தில் ஈடுபடாதவர்களையும் தாழ்ந்த வகுப்பினராக கருதத் தூண்டினர்.

ஜாதி முறையற்ற பண்டைய தமிழகத்தில் ஜாதிப் பிரிவினை செய்வதில் முதல் முறையாக வெற்றி கண்டனர். இது ஆதி சங்கராச்சாரியாருக்கு முன் நடந்த முதல் ஜாதி பிரிவினையாகும். சங்க கால சமுதாயத்தில் மேல் பதவியை அடைந்திருந்த பாணர், வேடர், குறவர் போன்ற உழைக்கும் வர்க்கத்தினர் அடிமட்ட மக்களாக கருதப்படக்கூடிய சூழ்நிலையை உருவாக்கி விட்டனர். இந்த திருப்பு முனையில் இருந்துதான் இந்து மதம் இங்கு போதிக்கப்பட்டதும் வளர்க்கப்பட்டதும்.

நாட்டின் ஆட்சித் தலைவர்களையும், வணிகர்களையும் தம் வசப்படுத்திய பின் ஆரியர்களின் அடுத்த நடவடிக்கை, தாழ்த்தப்பட்டவர்களாக தள்ளி வைத்திருந்த மக்கள் நம்பிவந்த சமண – புத்த மதங்களை எதிர்த்து வேருடன் பிடுங்கி எறியும் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.

“ஆரிய மத பிரச்சாரகர்கள் (மிஷினரி) புத்த சிலைகளையும், புத்த கோயில்களையும் இடித்து தரைமட்டமாக்கும் கொள்கையை கடைப்பிடித்தனர்.” (கேரள வரலாறு: ஏ. ஸ்ரிதரமேனோன் பக்கம் 94)

“ஏழாம் நூற்றாண்டில் யுவான் சுவாங் கேரளத்தைப் பார்க்க வந்திருந்த பொழுது பவுத்தம் வீழ்ச்சி அடைந்திருந்தது. பவுத்தப் பள்ளிகள் அழிந்து கிடந்தன. அவற்றில் இந்துக் கோயில்கள் இடம் பெற்றன.” (தென்னிந்திய வரலாறு: டாக்டர் கே.கே.பிள்ளை, பக்கம் 107-108)

சமண புத்த மதங்களை கடுமையாக எதிர்த்தனர். அவற்றை நம்பி வந்த மக்களை கொலை செய்து குவித்தனர். நாடெங்கும் ரண ஆறு பெருக்கெடுத்தது. சமண பஸ்தி (கோயில்)களையும் புத்த மடாலயங்(கோயில்)களையும் அங்குள்ள புத்தர் சிலைகளையும் உடைத்து அங்கஹீனப்படுத்தி தெருக்களில் வீசினர்.

கேரளாவில் உள்ள கருமாடி, பள்ளிக்கல் முதலிய இடங்களிலும் (நம் தமிழ்நாட்டில் சில பகுதிகளிலிருந்தும் இவ்வாறு) நாசம் செய்யப்பட்ட புத்தர் சிலைகளை புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் தோண்டி எடுத்துள்ளனர். (இப்படி தோண்டி எடுக்கப்பட்ட சிலைகளை பிற்கால வரலாற்றாசிரியர்கள் திப்புசுல்தான் சேதப்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டுகின்றனர்.)

முசிறி என்றும், மாகோதை என்றும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் கொடுங்கல்லூரில் தான் நீசத்தனமான கொலைகள் பெருமளவில் நடந்தன. வரலாற்றில் திடுக்கிடச் செய்யும் இப்படுகொலை நிகழ்ச்சிக்குப் பிறகுதான் அந்த இடம் ‘கொடும் கொலையூர்’ என்ற பெயரில் புகழ்பெற்றது நாளடைவில் அது கொடுங்கல்லூர் என்று மருவியது. (சேரமான் பெருமாள்: கே.கே. அப்துல் கரீம்.) இவ்வூருக்கு ‘அல்லூர்’ என்ற பெயருமுண்டு. இப்படுகொலைக்குப் பிறகு ‘கொடும் கொலை அல்லூர்’ என்றது கொடுங்கல்லூர் என்றும் மருவியிருக்கலாம்.

இப்பொழுது கொடுங்கல்லூரில் உள்ள பகவதி கோயிலில் ஒவ்வொரு வருடமும் ‘பரணி பாட்டு’ (மிகவும் கீழ்த்தரமான கெட்ட வார்த்தைகளால் இயற்றப்பட்ட கவிதை பாடுதல்) என்ற புகழ்பெற்ற கீழ்த்தரமான கெட்ட வார்த்தைகளைக் கொண்டு புனையப்பட்ட பாட்டு பாடுவதும், கோழிகளை பலியிட்டு இரத்தம் ஊற்றுவதும் இப்படுகொலைகளை நினைவுபடுத்தும் சடங்காகும்.

“அவர்கள் (சங்கராச்சாரியாரும் தோழர்களும்) சதுற்வர்ணத்தை அடிப்படையாகக் கொண்ட பிராமண மதத்தை தத்துவ ரீதியாக சேர நாட்டில் பரப்பினர். சமண மதத்தின் வேரை முதலில் பிடுங்கி எறிந்தனர். அதற்கு அவர்கள் கைக்கொண்ட வழி பாராட்டுக்குரியதாக இல்லை. அவ்வழிகளை பிரதிபலிப்பது கேரளத்தில் சில கோவில்களில் (கொடுங்கல்லூர் முதலிய) உற்சவத்தை ஒட்டி நடத்திவரும் சடங்குகளில் காணப்படுவது” (டி.எச்.பி. செந்தாரச்சேரி: ‘கேரள சரித்திர தார’ பக்கம் 136)

கிறித்தவர்களும் யூதர்களும் வந்து முதலில் தங்கியது கொடுங்கல்லூரிலாகும். இதைப் போல் ஆரியர்களும் முதலில் வந்து தங்கியதும் இங்குதான். கொச்சி – வியாபார மையமாக மாறுவதற்கு முன் சேர நாட்டின் தலைநகராகவும், வியாபாரக் கேந்திரமாகவும் கொடுங்கல்லூர் விளங்கிவந்தது. மட்டுமின்றி இது ஒரு துறைமுகமும் கூட. அதனால்தான் அராபியர் உட்பட வெளியிலிருந்து வந்தவர்கள் எல்லாம் கொடுங்கல்லூரை தங்கள் தங்குமிடமாகத் தேர்வு செய்தனர்.

“அவர்கள் (அராபியர்) நகரின் (கொடுங்கல்லூர்) ஒரு பகுதியில் சொந்தமாக ஒரு இடத்தை அமைத்துக் கொண்டார்கள். கி.பி. ஏழாம் நூற்றாண்டிலோ எட்டாம் நூற்றாண்டிலோ இஸ்லாம் மார்க்கத்தை இங்கு பிரச்சாரம் செய்தது இந்த அராபிய வியாபாரிகளாக இருக்கலாம். கிறித்துவ மதத்துடன் ஒப்பிடும்போது இஸ்லாம் மார்க்கத்தின் வளர்ச்சி மிக மந்தமாகவே இருந்தது.”

தொடரும்…

மக்கள் உரிமை | செப் 30 – அக் 06, 2005

ஸ் பெ

unread,
May 3, 2013, 6:20:16 AM5/3/13
to panbudan

இந்தியாவில் இஸ்லாம்-7,தோப்பில் முஹம்மது மீரான்


பழங்குடியினர் ஆன சமண புத்த மதத்தவர்கள்

வியாபார நோக்குடன் இங்கு அராபியர் வந்தனரே தவிர மதம் பரப்பும் நோக்கத்தோடு வரவில்லை என்பது இஸ்லாம் மார்க்கத்தின் மந்தமான வளர்ச்சியில் இருந்து ஊகிக்க முடிகிறது.

சமண புத்த மதத்தை சார்ந்த பாணர், வேடர், குறவர் போன்ற மக்கள் பெரும் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். ஆரியர்களுடைய கொடுமை தாங்க முடியாமல் உயிருக்காக காடுகளில் தஞ்சம் புகுந்தவர்களுடைய பின் தலைமுறையினரே இன்று காடுகளில் வாழ்ந்து வரும் மழைவாழ் பழங்குடியினர். இவர்கள் இப்போதும் சமண மத முக்கிய கடவுள்களான பார்சுவ நாதரையும், பத்மாவதியையும் வணங்கி வருகின்றனர் என்பதற்கு ‘சிங்கேரி அம்மா’ என்று ஊர்மக்கள் அழைத்து வருகின்ற, வயநாடு காட்டில் உள்ள சிங்கேரி பகவதிக் கோயிலில் நடக்கும் விழாவே ஓர் எடுத்துக் காட்டாகும்.

விழாக் காலங்களில் ஆதிவாசிகள் கூட்டம் கூட்டமாக வந்திருந்து ஆராதிப்பது இந்த தாய் தெய்வத்தையாகும். அவர்களில் பாணர்களுக்கு தாய் கடவுள் மீது மிகவும் விருப்பம், தாயின் புகழ் உரைப்பதில் பரசுராமனை மக்கள் மறந்து போகின்றனர்.

இக்கோயிலில் உள்ள பார்சுவநாதரை ‘பரசுராமனாகவும்’ பத்மாவதியை ‘பகவதியாகவும்’ (பரசுராமனும் பகவதியும் ஹிந்து கடவுள்கள்) மாற்றிவிட்டனர் ஹிந்துக்கள். ஆனால் ஆதிவாசிகள் இப்போதும் சமணக் கடவுள்களாகவே பார்சுவநாதரையும் பத்மாவதியையும் கருதி வழிபட்டு வருகின்றனர் (‘மாத்ருபூமி’ மலையாள வார இதழ் 1989 நவம்பர் 5-11 இதழ்) என்று டாக்டர் நெடுவட்டம் கோபாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். இந்த மலைவாழ் மக்களே தென்னக மண்ணின் மைந்தர்கள்.

சமண புத்த மதங்களின் தளர்ச்சி, ஆரிய மதத்தைத் திணிக்கும் பொருட்டு மக்களிடையே கட்டவிழ்த்து விடப்பட்ட அக்கிரம செயல்களால் பீதி அடைந்த மக்களின் ஆதரவற்ற நிலை, யூத மதத்தை யூதர்கள் பரப்பாமல் மவுனம் சாதித்தல், கிறிஸ்தவ மதம் வேகமாகப் பரவிவரும் சந்தர்ப்பம், இந்த சூழ்நிலை ஏக இறையையும் சமாதானத்தையும் சாந்தியையும், சிலை வணக்கமுறை அல்லாத ஓர் வணக்க முறையையும் போதிக்கும் ஒரு புது மதம் வளர சாதகமாக அமைந்தது. ஒடுக்கப்பட்டவர்களாக இருளில் தப்பிய மக்களுக்கு இஸ்லாத்தின் வருகை பேரொளியாக வழிகாட்டியது.

இஸ்லாம் மேற்கு கடற்கரையில் தோன்றியது நபி(ஸல்) அவர்கள் காலத்திலா? பிற்காலத்திலா?

அராபியர், ரோமானியர், கிரேக்கர் முதலியோர் கி.மு. பத்தாம் நூற்றாண்டிற்கு முன்னிருந்தே இந்தியாவுடன் வர்த்தக தொடர்பு வைத்திருந்தனர். பண்டைய தமிழகத்தில் புகழ்பெற்ற துறைமுகங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கியது கொடுங்கல்லூர் ஆகும். இது இந்தியாவிலேயே பழமை வாய்ந்த துறைமுகங்களில் ஒன்று இந்தியாவில் நெடிய காலம் ஆட்சி புரிந்து வந்த வெளிநாட்டவர் முதலில் கப்பலில் இறங்கியது இங்கேயாகும்.

அலெக்சாண்டிரியா (எகிப்து)வுக்கும் முசிரிக்கும் இடையிலான தூரம் 100 நாள் பயண தூரம் என்று ‘ப்ளீனி’(Pliny)என்ற பயணி குறிப்பிட்டுள்ளார். எகிப்தை சார்ந்த ஹிப்பாலஸ் (Hippalus)என்ற மாலுமி கடல் வழியாக முசிரிக்கு சுருக்கமான ஒரு வழியைக் கண்டுபிடித்தார். அத்தோடு பயண தொலைவு 40 நாட்களாக சுருக்கியது. இக்கண்டுபிடிப்பு கி.மு. முதல் நூற்றாண்டு என்றும் கூறி வருகின்றனர். எதுவாக இருப்பினும், அரபு நாடு இந்தியாவுடன் குறிப்பாக மேற்கு கிழக்கு கடற்கரை துறைமுகங்களோடு நெருங்கிய வியாபார தொடர்பு கொண்டிருந்தது. இது எல்லோரும் தெரிந்ததே.

அரேபியாவிலிருந்து பல பொருட்களை இங்கு கொண்டு வந்து விற்கவும். இங்கிருந்து சுக்கு, மிளகு போன்ற பல பொருட்களை வாங்கிச் செல்லவும் செய்தனர். பண்ட மாற்று முறையில் இவ்வியாபாரம் நடந்திருந்ததாக கூறப்படுகிறது. அராபியர்களுடைய கப்பல்கள் வருவதை எதிர்நோக்கியும், அவர்கள் இங்கு வந்து வியாபாரம் செய்வதை விரும்பியும் இங்குள்ள ஆட்சித் தலைவர்கள் பலதரப்பட்ட உதவிகள் செய்து அராபியர்களை துறைமுக நகரங்களில் தங்குமிடமும் அளித்தனர்.

ஆட்சியாளர்களுடைய பேராதரவோடு மேற்கு கடலோர துறைமுகங்களில் தங்கி வந்த அராபியர்களில் சிலர் உள்நாட்டு பெண்களை திருமணம் செய்து இங்கு தங்கியிருக்கும் நாட்களில் அவர்களுடன் வாழ்ந்து வந்தனர். இப்படிப்பட்ட மண வாழ்க்கையில் பிறந்த குழந்தைகளை ‘கலாசிகள்’ என்று அழைத்தனர். பல நூற்றாண்டுகளுக்குப் பின் கலாசிகளின் எண்ணிக்கைப் பெருகியது. இந்த கலாசிகளை இங்குள்ள மக்கள் ‘மகா பிள்ளை’ (பெரிய இடத்து பிள்ளை என்ற பொருளில் இருக்கக்கூடும்) என்று அழைத்தனர். நாளடைவில் மகா பிள்ளை என்ற சொல் மருவி ‘மாப்பிள்ளை’ என்றாகிவிட்டது.

இதுபோன்று கிரேக்கர் ரோமானியர் முதலிய கிறிஸ்தவர்களுக்கு நம்நாட்டுப் பெண்களில் பிறந்த குழந்தைகளையும் ‘மகா பிள்ளை’ என்றே அழைத்தனர். கோட்டயம் சங்ஙளாச்சேரி போன்ற பகுதிகளில் வாழும் கிறிஸ்தவர்கள் ‘மாப்பிள்ளை’ என்றுதான் இப்பவும் அழைக்கப்படுகின்றனர். மலபார் பகுதியில் உள்ள முஸ்லிம்கள் மாப்பிள்ளை என்று அறியப்படுகின்றனர். இருவரையும் அடையாளம் கண்டு கொள்வதற்காக முஸ்லிம்களை, ஜோனை மாப்பிள்ளை என்றும், கிறிஸ்தவர்களை நஜ்ரானி மாப்பிளை என்றும் அழைக்கின்றனர் (Logan).

இந்த அராபிய வர்த்தகர்களுக்கு பிறந்த குழந்தைகளோ அவர்களுடைய தாய் தந்தையரோ யாருமே முஸ்லிம்கள் அல்ல. இந்த கலப்பு சந்ததியினர் பிறந்ததெல்லாம் நபிகள் நாயகம்(ஸல்) காலத்திற்கு முன்னரேயாகும்.

தொடரும்..

மக்கள் உரிமை: அக் 07 – 13, 2005

ஸ் பெ

unread,
May 3, 2013, 6:20:37 AM5/3/13
to panbudan

இந்தியாவில் இஸ்லாம்8,தோப்பில் முஹம்மது மீரான்


இந்தியாவில் அரேபியர்களின் காலனி
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அரபு நாட்டில் இஸ்லாத்தின் ஏக இறைக் கொள்கையை போதிக்க துவக்கிய நேரம் இந்தியா, சீனா, இலங்கை, மலேசியா போன்ற இடங்களில் வியாபாரத் தொடர்புடைய அரேபியர்களில் பலர் புது மார்க்கத்தை ஏற்றுக் கொண்டனர். முஸ்லிம்களாக மாறிய அரேபியர்கள் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் உள்ள (அந்த நாட்டு) தங்கள் மனைவி மக்களிடம் புது மார்க்கத்தை எடுத்துக் கூறினர். அவர்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் இஸ்லாம் பரவிய அதே காலத்திலேயே மாலத்தீவு, இலங்கை, சீனா, மலேசியா போன்ற இடங்களிலும் இஸ்லாம் இதுபோன்று பரவிவிட்டது.
“Before the end of the Seventh century, a colony of Mualim Merchants had established themselves in Ceylone” (History of South India – Dr. V. Krishnamurthi P-19)
இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதிகளான குளச்சல், தேங்காய்ப்பட்டினம், விழிஞ்ஞம் அல்லது பூவார், கொல்லம் முதலிய துறைமுகப்பகுதிகளில் அரேபியர்கள் காலனி அமைத்து விட்டனர். இப்பகுதிகளில் வியாபார நிமித்தம் தங்கி வந்த அரேபியர்களுடைய வித்தியாசமான வணக்க முறையும், நேர்மையும், ஒழுக்கமும், அன்பும், பணிவான செயல்களும் அங்குள்ள மக்களை இஸ்லாத்தின் பக்கம் ஈர்த்தன. இஸ்லாம் இங்கு பரப்பப்படவில்லை. அன்றைய முஸ்லிம்களின் செய்கைகளால் இஸ்லாம் இயல்பாக பரவியது.
“Arab settlements after the introduction of Mohammedanism were made inseveral places on the coast (west coast) whose principal objects was mainly trade for which the Hindu state of the interion apparently gave all facilities” (South India under the Mohammadan Invades-S.Krishnaswamy Iyengar p-69)
இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவிய பின் இங்கு வந்த அரேபியர்கள் வர்த்தக கண்ணோட்டத்தோடு அல்லாமல் இஸ்லாத்தைப் பரப்பும் நோக்கத்தோடு இங்கு வரவில்லை என்பதை பார்த்தோம்.
இங்கு வந்த அராபியர்கள் தம் கலாச்சாரத்தை, மொழியை, பழக்கவழக்கங்களை எதையுமே இங்குள்ள மனைவி பிள்ளைகளிடம் திணிக்க முற்படவே இல்லை. இங்குள்ள பழக்க வழக்கங்களையே முன்போல் கடைப்பிடித்து வந்தனர். தம் தாய் மொழியிலேயே பேசி வந்தனர். உள்நாட்டு முறைப்படியே உடை உடுத்தி வந்தனர்.
இதனால் அரேபியர் கோட்பாடுகளுக்கு எதிரான ஒரு கோட்பாட்டை கடைப்பிடித்து வந்த மக்களிடையே பரவி இருந்த இஸ்லாம் பிறர் கவனத்தை அன்று ஈர்க்கவில்லை.
கி.பி.636-லேயே முஸ்லிம்களின் கப்பல்கள் இந்திய பெரும் கடலில் காணப்பட்டதாக திரு. தாராசந்த் அவருடைய புகழ்பெற்ற நூலான Influence of Islam on Indian Culture…. என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளதாக டாக்டர் வி.ஏ.கபீர் தம்முடைய Kerala Muslim Monuments…. என்ற நூலில் எழுதியுள்ளார்.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுடைய காலம் முதல் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலும் இஸ்லாம் இங்கு பரவலாக வளரவில்லை என்பது ஓர் அளவு உண்மையாகும். சில துறைமுகப் பகுதிகளிலும், அதை ஒட்டிய சில உட்பகுதிகளிலும் மட்டும்தான் பரவியிருந்தது. கிழக்கு கடற்கரைப் பகுதிகளான நாகப்பட்டினம், கீழக்கரை, காயல்பட்டினம், குலசேகரப்பட்டினம் போன்ற இடங்களிலும் மேற்கு கடற்கரைப் பகுதிகளான குளச்சல், தேங்காய்பட்டினம், கொல்லம், கொடுங்கல்லூர், கள்ளிக்கோட்டை முதலிய இடங்களிலும் செல்வாக்கு மிகுந்த சமுதாயமாகவே புகழ்பெற்று விளங்கியது.
“இருண்ட நூற்றாண்டுகள்” என வரலாற்று பக்கங்களில் இடம் ஒதுக்கப்படாத இந்நூற்றாண்டுகளில் இஸ்லாம் ஓசை எழுப்பாமல் மெதுவாக அடி எடுத்து வைத்து பெற்ற வளர்ச்சியும், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட புத்த சமண மதத்தினருடைய மண்வாசனையைக் காட்டும் தோற்றமும் அவ்வப்போது இங்கு வந்த பயணிகளின் பயணக்குறிப்புகளில் இங்கு வாழ்ந்திருந்த முஸ்லிம்களைப் பற்றிய தகவல்கள் இடம்பெறாமல் போய்விட்டது. அன்றைய பயணக் குறிப்புகளை ஆவணமாக ஏற்று வரலாறுஇயற்றுகையில் இருண்ட நூற்றாண்டில் தோன்றி இங்கு மெல்ல மெல்ல வளர்ந்து வந்த இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பற்றிய தகவல்கள் இடம்பெறாமல் போய்விட்டன.
ஒன்பதாம் நூற்றாண்டிலும், அதற்கு முன்பும் இங்கு வருகை தந்துள்ள பயணிகளின் பயணக் குறிப்புகளிலோ, இலக்கியங்களிலோ முஸ்லிம்கள் இங்கு இருந்தனர் என்று தகவல் எதுவும் இல்லையே என்ற காரணத்தை சுட்டிக்காட்டி இஸ்லாம் இங்கு கி.பி. 9-ம் நூற்றாண்டிற்குப் பின் தோன்றியிருக்க வேண்டுமென்று சில வரலாற்று ஆசிரியர்கள் வாதாடுகின்றனர். இவர்களுடைய வாதத்தை உறுதிப்படுத்துவதற்காக இவர்கள் மேற்கோள் காட்டுவது ‘சுலைமான்’ என்ற பாரசீக நாட்டு வர்த்தகருடைய பயணக் குறிப்பேயாகும்.
பயணக் குறிப்புகள்:
சுலைமான் என்ற பாரசீக நாட்டு வர்த்தகர் கி.பி.851ல் இங்கு வந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இவர் தம்முடைய பயணக் குறிப்பான ‘சில்சிலத்து – தவாரிக்’ எனும் நூலில் கீழ் கொடுத்தள்ளபடி குறிப்பிட்டுள்ளார்.
“……I know not that there is any one of either nation (Chinese and Indian) that has embraced Muhammadanism or Speaks Arabic ‘ (Malabar – W.Logan P.295)
“இந்தியா, சீனா, இவ்விரு நாடுகளில் ஏதேனும் ஒன்றில் இஸ்லாத்தைத் தழுவியவரோ அல்லது அரபி பேசுபவரோ இருப்பதாக எனக்குத் தெரியவில்லை” என்று கூறுகிறார் சுலைமான். இவருடைய இந்த கூற்றை வைத்துக் கொண்டுதான் இஸ்லாம் இங்கு 9-வது நூற்றாண்டுக்குப் பிறகு வந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறிக் கொண்டனர்.
அரபி பேசி வந்தவர்களையும், அரபிகளுடைய தோற்றத்தில் இங்குள்ளவர் இருந்ததையும் சுலைமான் பார்த்திருக்கவோ தெரிந்திருக்கவோ வாய்ப்பில்லை அன்று, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட மக்கள், தம் நாட்டு உடையிலும் தம் தாய்மொழியில் பேசியும் வந்தது மட்டுமின்றி, தாம் முன் கொண்டிருந்த புத்தமத நெறியை பின்தொடர்ந்து தலையை மொட்டை அடித்திருந்தனர். இதைப் பார்த்த அந்தப் பயணி அவ்வாறு குறிப்பிட்டிருக்கக்கூடும். ஆனால் சுலைமான் என்பவர் இந்தியாவைப் பார்த்ததில்லை என்று பெரும்பான்மையினரான வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். மேலே குறிப்பிட்ட வாசகம் இதை உறுதிப்படுத்துகிறது. எனக்குத் தெரியாது (I Know not) என்று தான் குறிக்கின்றாரே தவிர, ‘நான் பார்க்கவில்லை’ என்று குறிக்கவில்லை. இந்தியாவுக்கு வந்திருப்பாரேயானால் ‘பார்க்கவில்லை’ என்று குறிப்பிட்டிருப்பார். இந்தியாவைப் பற்றிய பயணக் குறிப்பு எழுதியவர்களில் முதல் முஸ்லிம் பயணி இவராகவே இருக்க வேண்டும். சுலைமான் வெளியிடும் நிலையில் வைத்திருந்த தம்முடைய பயணக் குறிப்பு அவரிடமிருந்து தவறிவிட்டது. 200 ஆண்டுகளுக்குப் பின் அபூஸைய்து அல்ஹஸன் இப்னு அல் எஸீது என்பவர் சுலைமானுடைய கைக்குறிப்பை பரிசோதனை செய்து நூல் வடிவில் எழுதி வெளியிட்டதுதான் இன்று சுலைமானுடைய பயண நூலாக அறியப்படும் – சில்சிலத்து தவாரிக்.
தொடரும்…
மக்கள் உரிமை: அக் 14 – 20, 2005

ஸ் பெ

unread,
May 3, 2013, 6:21:03 AM5/3/13
to panbudan

இந்தியாவில் இஸ்லாம்9,தோப்பில் முஹம்மது மீரான்


கற்பனையான பயண நூல்கள்
சென்ற இதழில் சுலைமான் என்ற பாரசீக நாட்டு வர்த்தகர் எழுதிய சில்சிலத்து தவாரிக் என்ற நூலைக் பற்றி குறிப்பிட்டிருந்தோம்.
சுலைமானுடைய நூலில் அவருடைய சொந்த அனுபவங்கள் மட்டுமின்றி கி.பி. 851-க்கு முன் அரேபியர்கள் இந்தியாவைப் பற்றி தெரிந்துள்ள தகவல்கள் முழுவதும் அதில் காணப்படுகின்றன. அதனாலேயே சில வரலாற்று அறிஞர்கள் சுலைமான் இந்தியாவுக்கு விஜயம் செய்யவில்லை என்று ஊகிக்கின்றனர். (பயணிகளும் வரலாற்று ஆசிரியர்களும் – வேலாயுதன் பணிக்கச்சேரி – பாகம் 1, பக்கம் 78-79)
சுலைமானுடைய நூலை மட்டும் ஆதாரம் காட்டி இந்தியாவிலோ குறிப்பாக தென்னிந்தியாவிலோ இஸ்லாம் கி.பி 851-க்குப் பிறகுதான் வந்திருக்கக் கூடும் என்று நம்புபவர்கள் அந்தப் பயண நூலில் வேறு ஒரு இடத்தில் காணும் செய்தியை அப்படியே விட்டுவிடவோ அல்லது கவனம் செலுத்தாமலோ இருந்துவிட்டனர்.
“He (the king of Jutz) is unfriendly to the Arabs, still he acknowledges that the King of Arabs is the greatest of Kings. Among the princess of India there is no greater friend of Mohammedam faith than he.” (History of India as told by its own Historians! Elliot and Dowsan VoL.1 page 4)
இந்தியாவிலுள்ள பிற அரசர்களை விட ஜர்ஸில் உள்ள அரசர்களுக்கு இஸ்லாத்தின் மீது பகைமை இருந்ததாக கூறியுள்ளாரே? இஸ்லாம் இங்கு பரவி இருந்ததாலும்-வளர்ந்து வருவதாலும் தானே இப்படி பகைமை வைத்திருக்க முடியும். கி.பி.851க்குப் பிறகுதான் இஸ்லாம் மேற்கு, கிழக்கு கடற்கரை பகுதிகளில் தோன்றிவிருக்க வேண்டும், அல்லது தோன்றியது என்று வாதம் தொடுப்பவர்கள் சுலைமானுடைய பயண நூலை மேற்கோள் காட்டுவது எவ்விதம் பொருத்தமாக இருக்க முடியும்? இன்னும் அதையே நாடுவது, மூழ்கி இறக்கப் போகும் ஒருவர் காகிதத் தோணியை எட்டிப் பிடிப்பதற்கு ஒப்பாகும்.
இதைப் போல் சுலைமானுடைய கூற்றில் மேலும் பல முரண்பாடுகள் இருப்பதையும் காண முடிகின்றன. அவருடைய சில்சிலத்து தவாரிக் எனும் பயண நூலில் வேறு ஓர் இடத்தில் கூறப்பட்டிருப்பதை Roland-E-Miller தம்முடைய -Mappila Muslims of Kerala” எனும் நூலில் சுட்டிக் காட்டுகிறார்.
“Most of the princess….. believe that the length of their and their reigns is granted in recompense for their Kindness to the Arabs. In truth there are no princess more heartily affectionate to their Arabs, and their subjects profess the same friendship for us” (page 46)
A.D.943ல் மசூதி (Masudi) எனும் அரபி பயணி ஒருவர் இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்தார். இவர் ஒருவரைத் தவிர 10-வது நூற்றாண்டிற்கு முன் எந்த முஸ்லிம் பயணியும் இந்தியாவுக்கு விஜயம் செய்யவில்லை. இதை மில்லரும் உறுதிப்படுத்துகிறார். ஆனால் மசூதி தென் இந்தியாவுக்கு விஜயம் செய்யவில்லை என்று சில கருத்துக்கள் நிலவுகின்றன. மசூதியுடைய பயண நூலான அல்தன்பிஹ் வல் இஷ்றாப் (Al Tanbih wal-Ishraf)ல் தென் இந்தியாவைப் பற்றியச் செய்திகள் சுலைமானுடைய நூலிலிருந்து எடுத்தாளப்பட்டவை என்று மில்லர் கருத்து தெரிவிக்கின்றார்.
இந்தியாவுக்கு வந்த அல்மசூதி, தென்னிந்தியாவை நேரடியாகப் பார்த்தாரோ இல்லையோ இதை இங்கு சர்ச்சைக்குட்படுத்த வேண்டாம். அல்மசூதி, சுலைமானுடைய பயண நூலிலிருந்தும், வேறு சில அரபி வர்த்தகரிடமிருந்தும் கேட்டுத் தெரிந்து கொண்டதாகவுமிருக்கலாம் அல்லது நேரடியாக பார்த்து அப்பயண நூல் எழுதியதாகவுமிருக்கலாம். தம்முடைய நூலில் அவர் குறிப்பிட்டிருக்கும் சில தகவல்கள் உண்மையின் பக்கம் வெளிச்சம் காட்டுகின்றன.
“islam is flourishing in the country of the Balhara” – என்று “மசூதி” குறிப்பிட்டிருப்பதாக மில்லர் கூறுகிறார் (பக்கம் 46) ‘பல்ஹரா’ என்பது தென்மேற்கு கடற்கரைப் பகுதியை ஆண்டு வந்த அரசர் பெயராகும். இவருடைய தலைநகரம் கொங்கன் என்றும் கூறுகின்றார். இவர் ஒரு சேர அரசர் என்பதில் சந்தேகமில்லை என்று மில்லர் குறிப்பிடுகிறார். “கொங்கனில்” ‘சவுன்’ நகரத்தில் மட்டும் பத்தாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் வாழ்ந்திருந்ததாக” மசூதியின் பயணக் குறிப்பிலிருந்து எடுத்தாளுகின்றார் வேலாயுதன் பணிக்கச்சேரி என்ற வரலாற்று ஆசிரியர். (பயணிகளும் வரலாற்று ஆசிரியர்களும் எனும் நூலில் – பாகம் 3 பக்கம் 42)
நாம் சொல்லவரும் விஷயத்திற்கு சாதகமாகவும், பாதகமாகவும் சாட்சியம் கூறும் இந்த பயணக் குறிப்புகள் எல்லாம் நம்பகமான ஆவணங்களாக ஏற்றுக் கொள்வதற்கு முடியாத முரண்பாடுகள் நிறைந்த கற்பனைக் கதைகளாகும்.
14-வது நூற்றாண்டில் இந்தியா வந்திருந்த இபுனு பதூதாவின் பயண நூலும் இதற்கு விதிவிலக்கு அல்ல. கருங்கக்கூறின்: இந்தப் பயணிகள் (10வது நூற்றாண்டிற்கு முன்பு வந்தவர்கள்? யாருமே நேரடியாக தென்னகம் விஜயம் செய்யவில்லை. அவ்வப்போது இங்கு வந்துபோகும் அரபி வர்த்தகரிடமிருந்து கேட்டு தெரிந்து கொண்ட கேட்டறிவைக் கொண்டு, கற்பனையில் பயணம் செய்து இவர்கள் பயண நூல்கள் இயற்றிவிட்டனர் என்பதை பிற்கால வரலாற்று ஆசிரியர்கள் பலர் இந்நூல்களில் காணப்படும் முரண்பாடுகளை சுட்டிக்காட்டி நிருபணம் செய்துள்ளனர்.
இபுனு பதூதாவும் இதைத்தான் செய்தார். இந்தியா வரும் முன் நடந்த சில வரலாற்று நிகழ்ச்சிகளைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்ட அறிவோடு கற்பனையும் கலந்து அவர் எழுதிய பயண நூலை மத்திய கால இந்திய வரலாற்றுக்கு ஆவணமாக எடுத்துக் கொண்ட நூல்தான் மாபெரும் அறிஞரான முஹம்மது பின் துக்ளக் வரலாற்றில் ஒரு முட்டாள் மன்னராக்கப்பட்டான். (உண்மையின் வெளிச்சத்தில் முஹம்மது பின் துக்ளக் எனும் தலைப்பில் ‘முஸ்லிம் முரசில்’ நான் எழுதிய தொடர் கட்டுரையைப் பார்க்க ஜூலை 89-ஜூன் இதழ்கள்)
ஒரு நாட்டையே பார்க்காமல் அந்த நாட்டைப் பார்த்ததாக கற்பனையில் புணையப்பட்ட பயண நூல்களை மேற்கோள்காட்டி இஸ்லாம் இங்கு 9வது நூற்றாண்டிற்கு முன் நுழையவில்லை என்று திட்டவட்டமாக கூறிவருகின்றனர். மேற்குறிப்பிட்டுள்ள பயண நூல்களில் சொல்லப்பட்ட விஷயங்களின் அடிப்படையில் இஸ்லாம் இங்கு தோன்றியதைப் பற்றி ஆராய்வதை விட மக்கள் அவர்களுடைய கலாச்சாரம், தொழில், தண்டிக்கப்பட்ட முறை, பழக்கத்திலிருந்த நாணயங்கள், செப்பேடுகள் ஆகிய வரலாற்றிற்கு அடிப்படையான ஆவணங்களை முன்வைத்துதான் இவ்வரலாற்று உண்மையை ஆராய வேண்டும்.

ஸ் பெ

unread,
May 3, 2013, 6:21:27 AM5/3/13
to panbudan

இந்தியாவில் இஸ்லாம்10,தோப்பில் முஹம்மது மீரான்


மேதை அல்பிருணியின் இந்திய வருகையும் – சர்ச்சையும்
இஸ்லாம் உலகில் வேருன்றி இரு நூற்றாண்டுகள் கடந்த பின் இந்தியாவிலாகட்டும் உலகின் வேறு எந்தப் பகுதிகளிலாகட்டும், பயணம் செல்லும் அரபு நாட்டைச் சார்ந்த ஒரு முஸ்லிமுக்கு, ஒரு முஸ்லிமுடைய தோற்றம் எவ்வாறு இருக்குமென ஒரு முன்மதிப்பீடு இருக்கும். அதற்கு நேர் மாற்றமாக இருப்பின் முஸ்லிம் அல்லவென்று கருதப்படுவது இயல்புதானே. இன்று கேரளாவையோ, தமிழ்நாட்டையோ சார்ந்த, உருதுமொழி பேசத் தெரியாத முஸ்லிம் ஒருவர், வேட்டி கட்டிக் கொண்டு தொப்பி அணியாமல் வடமாநிலம் ஒன்றுக்கு செவ்வாரேயானால் அங்குள்ளவர்கள் இவரை ஐயப்பாடோடுதான் நோக்குவார்கள் என்ற துக்ககரமான உண்மையை யாரறிவார்.
மாலிக்காபூர், மதுரையை நோக்கி படையுடன் வரும் வழியில் கண்ணனூர் என்ற இடத்தில் தமிழ் முஸ்லிம்களை சந்திக்கிறார். தாங்கள் முஸ்லிம்கள் என்று கூறியபோதும், தோற்றத்தில் தென்பட்ட சந்தேகத்தால் முஸ்லிம்கள் என்று அவரால் நம்ப முடியவில்லை. பிறகு ‘கலிமா’ பலமுறை சொல்ல வேண்டினார். முஸ்லிம்கள் கலிமா பலமுறை சொல்லி கேட்ட பிறகுதான் முஸ்லிம் என்று நம்பிக்கைக் கொண்டார். இருந்தும் அம்முஸ்லிம்களை அரை முஸ்லிம் (Half-Mussalman) என்றே அமீர் குஸ்று குறிப்பிடுகிறார்.
கி.பி.1311ல் இது நடந்தது. இதற்கும் ஆறு நூற்றாண்டுகளுக்கு முன் இங்குள்ள முஸ்லிம்களின் தோற்றம் எவ்வாறு இருந்திருக்கக் கூடுமென்று ஊகிக்கலாமே?
கஜனி முஹம்மதுடைய ஆட்சியின் போது இந்தியாவிற்கு வந்து 40ஆண்டுகள் இங்கு தங்கி, இந்தியாவைப் பற்றி தெரிந்தவர் அல்பிருணி (கி.பி.973-1048) என்ற மேதை. அவருடைய ‘அல்பிருணி பார்த்த இந்தியா’ என்ற நூலில் கேரளாவைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
“மலபார்: கோவா முதல் கொல்லம் வரையிலுமாகும். அதன் நீளம் 300 பர்சக் (1பர்சக் 3 அரை மைல்) மலபாரிலுள்ள முக்கிய நகரங்களான கோவா, பாக்கனூர், மங்கலாபுரம், ஏழிமலை, பந்தலாயினி, கொடுங்கல்லூர் முதலிய இடங்களிலுள்ள மக்களெல்லாம் புத்த மதத்தினராவார்கள்…” (பயணிகளும் வரலாற்று ஆசிரியர்களும் – வேலாயுதன் பணிக்கச்சேரி பாகம் 1 பக்கம் 103-104)
கி.பி.943ல் வந்த “மசூதி” கொங்கணியில் உள்ள சவுன் நகரத்தில் 10,000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வாழ்ந்திருந்ததாகக் கூறுகிறார். ஆனால் அவருக்குப் பின் வந்த அல்பிருணி, அப்பகுதிகளில் முஸ்லிம்களே இல்லை என்று கூறுகிறார். இவற்றில் எதை ஏற்றுக் கொள்ள முடியும்?
ஹிந்து மதம் கேரளாவில் அதன் முழு வளர்ச்சியடைந்த காலமாகும். பத்து மற்றும் பதினொன்றாம் நூற்றாண்டுகள். புத்த மதம் நலிந்து போன காலமது. இருந்தும் அல்பிருணி மலபாரில் உள்ளவர்களெல்லாம் புத்த மதத்தினர் என்று குறிப்பிட்டதை ஏற்று ஏதேனும் வரலாற்று ஆசிரியர் இவருடைய கூற்றின்படி கொல்லம் முதல் கோவா வரையிலும் பரந்து கிடக்கும் பகுதிகளில் ஹிந்துக்களோ, கிறிஸ்தவர்களோ, யூதர்களோ, முஸ்லிம்களோ இல்லை என்று குறிப்பிடவில்லையே. பிற்கால வரலாற்று ஆசிரியர்களும் பிருணியுடைய இக்கூற்றுக்கு எந்த விலையும் கற்பிக்கவில்லையே.
சில வேளை அல்பிருணி குறிப்பிட்டுள்ள மலபார் பகுதிகளுக்கு அவர் விஜயம் செய்திருக்க மாட்டார். யாரிடமிருந்தேனும் கேட்டுத்தெரிந்து கொண்ட அறிவை வைத்து எழுதியிருக்கக் கூடும். இல்லை, வடபகுதியில் தாம் பார்த்த முஸ்லிம்களைப் போலல்லாமல், தலைமுண்டனம் செய்து மேல் துண்டால் உடம்பைப் போர்த்தி திரிந்த முஸ்லிம்களைப் பார்த்து புத்த மதத்தினர் என்று தவறாக எண்ணி அப்படி எழுதியிருக்கலாம். அல்பிருணி எழுதியதுதான் உண்மை என்ற முடிவுக்கு வருவோமேயானால் 11-ம் நூற்றாண்டு வரையிலும் மலபார் பகுதிகளில் புத்த மதத்தினனர்களைத் தவிர முஸ்லிம்களோ பிற மதத்தினரோ இல்லை என்றுதானே அர்த்தம்(?)
இஸ்லாம் மேற்கு கிழக்கு கடற்கரைகளில் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நிசப்தமாகவும், பல ஆண்டுகளுக்குப் பின் (கி.பி.712) சிந்து மார்க்கமாக ஓசை எழுப்பிக் கொண்டும் இந்தியாவுக்குள் நுழைந்தது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். காலோசையின்றி இஸ்லாம் இங்கு பிரவேசித்தது யார் கவனத்தையும் ஈர்க்கவில்லை. அதுவன்றி, திட்டமிட்டே இந்த ‘பிரவேசிப்பை’ மூடிமறைத்தனரோ?
கி.பி.712ல் முகம்மது இபுனு காசிமும் அவருக்கு முன் உமர் இபுனு கத்தாப்(ரலி) அவர்கள் காலத்தில் (634-643) தானா பகுதியில் கப்பலில் இறங்கியவர்களையும் வரலாற்று ஆசிரியர்கள் எடுத்துக் கூறுகின்றனர். இஸ்லாம் இந்தியாவின் தென்பகுதியில் கடற்கரை நகரங்களில் நெடுகிலும் சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் வடபகுதிகளிலும் வேகமாக பரவிய உண்மையை மறைக்கவும், 9-ம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் இஸ்லாம் மேற்கு கிழக்கு கடற்கரைப்(West Coast) பகுதியில் ஆங்காங்கே தோன்றியது என்ற தவறான கருத்தை ஆணி அடித்து உண்மைப் படுத்தும் நோக்கோடு இஸ்லாத்தின் ஆரம்ப வருகையே நாட்டை ஆக்கிரமித்து ரண ஆறுகள் ஓடச் செய்வதற்காகத்தான் என்று களங்கமற்ற இந்திய மனதில் நஞ்சை கலப்பதற்காகவே இபுனு காசிமின் வருகையை மிகைப்படுத்திக் காட்டுகின்றனர்.
இந்தியாவின் வடபகுதிகளைப் பற்றிய வரலாறு 6, 7, 8 நூற்றாண்டுகளில் ஒளி மிக்கதாக இருக்கும்போது தென்னிந்தியாவிலுள்ள மேற்கு கிழக்கு கடற்கரைப் பகுதி உள்ளிட்ட இடங்களில் பெருமாள் ஆட்சிகள் நடத்தும் வரலாற்றில் இம்மூன்று நூற்றாண்டுகள் இருண்டுபோனது எப்படி? ஏன்?
இருண்ட காலமெனக் கூறி ஆராய்ச்சிக்கு உட்படுத்தாமல் ஆவணங்கள் எதுவும் இல்லை என்ற காரணம் சொல்லி உதாசீனமாக ஒதுக்கி வைக்கப்பட்ட இக்காலக் கட்டத்தில் எழுதப்பட்டது எனக் கருதப்படும் சில கல்வெட்டுகளைப் பற்றியும் செப்பேடுகள் பற்றியும் சில மன்னர்களைப் பற்றியும் சுந்தரமூர்த்தி நாயனார், ஆதி சங்கராச்சாரியார் போன்ற மதத் தலைவர்களைப் பற்றியும் அவர்களுடைய வாழ்க்கை போதனைகள் முதலியவைப் பற்றிய தெளிவான தகவல்கள் எவ்வாறு கிடைக்கப் பெற்றன?
இப்படிப்பட்ட தகவல்கள், திரட்டிய வழியில், அதேகாலக்கட்டத்தில் தோன்றிய வளர்ந்த இஸ்லாத்தைப் பற்றியும் இங்குள்ள முஸ்லிம்களைப் பற்றியும் தகவல்கள் ஏன் திரட்ட தவறிவிட்டன? முஸ்லிம்களை சம்பந்தப்பட்ட இடங்கள் வரும்போது இருண்ட காலமெனக் கூறி ஒரு திரையைப் போடுவது எதனால்?
தொடரும்….

ஸ் பெ

unread,
May 3, 2013, 6:21:50 AM5/3/13
to panbudan

இந்தியாவில் இஸ்லாம்11,தோப்பில் முஹம்மது மீரான்


வரலாற்று உண்மையை மறைத்த வரலாற்று ஆசிரியர்கள்
“இஸ்லாத்தைப் பற்றி நபி(ஸல்) போதனை செய்ய துவங்கி அதிக நாட்கள் ஆவதற்கு முன் இந்தியாவின் பல பகுதிகளில் அரபியர்கள் தங்கி, ஏராளம் மதமாற்றங்கள் செய்தனர்”. (A Journey from Madras through countries of Mysore, Cannanur and Malabar – Francies Buchana) என்று பிரான்ஸிஸ் புக்கானன் குறிப்பிடுகிறார்.
நான்காவது கர்நாடகப் போரில் திப்பு சுல்தான் இரத்த சாட்சியான பிறகு, திப்புவின் ஆட்சிக்குட்பட்டிருந்த மைசூர், கர்நாடகா, மலபார் போன்ற இடங்களைப் பற்றி சரிவர படித்து ஒரு அறிக்கை சமர்ப்பிக்க கி.பி.1799-ல் பிரிட்டிஷ் அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரி பிரான்ஸில் புக்கானன் ஆவார். இவர் மேலே குறிப்பிட்டுள்ள இடங்களிலுள்ள ஒவ்வொரு கிராமம் கிராமமாகச் சென்று அங்குள்ள மக்களின் நிலை, கலாச்சாரம், தொழில், விவசாயம், மதம் ஆகியவற்றை மிக நுட்பமாக ஆராய்ந்து அவருடைய அறிக்கையை சமர்ப்பித்தார். அதை நூல் வடிவில் வெல்லஸ்லி பிரபுவுக்கு சமர்ப்பணம் செய்தார்.
இப்படி ஊர் ஊராகச் சென்றிருந்த போது ‘பொன்னானி’க்கும் சென்றிருந்தார். பொன்னானியில் ஒரு ‘தங்களிடம்’ இருந்து கேட்டறிந்த செய்திதான் மேலே தரப்பட்டுள்ளது. இதே ‘தங்களின்’ முன்னோர்கள் கொடுத்த சில அரபி மொழி ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டுதான் முஹம்மது காசிம் பெரிஸ்தா என்ற வரலாற்று ஆசிரியர் மலபார் வரலாற்றை எழுதியுள்ளதாக புக்கானன் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
முஹம்மது காசிம் பெரிஸ்தா போன்ற பெரிய பாரசீக வரலாற்று ஆசிரியர்களுக்கு வரலாற்று ஆவணங்கள் வழங்கிய ‘தங்களின்’ குடும்பத்தாரிடமிருந்து நேரில் கேட்டறிந்து தம் அறிக்கையில் நபி(ஸல்) காலத்திலேயே இஸ்லாம் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் பரவிவிட்டதாக எந்த சந்தேகத்திற்கும் இடமில்லாதபடி ஒப்புக் கொள்கிறார் புக்கானன்.
நம்பிக்கையற்றவர் (Infidels)களுக்கு எதிராக போர்மூலம் இஸ்லாம் மதத்தை பிரச்சாரம் செய்ய வேண்டுமென்று முஹம்மது கஜினி உறுதிமொழி எடுத்துக் கொண்டதாக (இந்திய வரலாறு – ஏ. ஸ்டிதரமேனோன்) சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுவதை மெய்ப்பிப்பதற்காக வேண்டுமென, அமைதியாகவும், ஆரவாரம் இல்லாமலும் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் இஸ்லாம் தோன்றிய வரலாற்று உண்மையை மறைக்கின்றனர் சில வரலாற்று ஆசிரியர்கள்.
மேற்கு கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் இஸ்லாம் புலர்ந்து ஏறத்தாழ 9நூற்றாண்டு காலம் வரையிலும், குறிப்பாக சொல்லப்போனால் 1491-ல் வாஸ்கோடகாமா கொடுங்கல்லூர் துறைமுகத்தில் கப்பல் இறங்கும் வரை இப்பகுதிகளில் உள்ள முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் தமிழகத்திலோ, கேரளாவிலோ எந்தவித கிளர்ச்சியோ, போராட்டங்களோ ஜாதிக் கலவரங்களோ, அரசுக்கெதிரான போரிலோ ஈடுபடவில்லை என்பது வரலாற்று உண்மை. தாய் நாட்டிற்காக இராணுவ சேவை செய்து வந்தனர். இங்குள்ள மக்களோடு ஒன்றியும், இங்குள்ள கலாச்சாரத்தோடு இணைந்தும் ஆட்சியாளர்களுக்கும் உறுதுணையாக வாழ்ந்து வந்ததால் இங்குள்ள ஆட்சியாளர்களின் பேருதவியோடு இஸ்லாம் இப்பகுதிகளில் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வந்தது.
இஸ்லாம் மார்க்கத்திற்கு சில நூற்றாண்டுகளில் கேரளக் கரையில் அதிக பிரச்சாரம் கிடைத்தது. இங்கு ஹிந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கு பிறகு சிறப்பாக விளங்குவது முஸ்லிம் சமுதாயமாகும். இஸ்லாம் மார்க்கத்திற்கு கிடைத்த வளர்ச்சி பல கோணங்களிலும் கேரள அரசர்கள் கடைப்பிடித்து வந்த மத சகிப்புத்தன்மை காரணமாகும். கோழிகோட்டு சாமூதிரிகள் எல்லா வகையிலும் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பும் உற்சாகமும் ஊட்டினர்.
சாமூதிரிகளின் கீழில் அரசாங்கம் இருந்த போது கோழிக்கோட்டில் சொல்லத் தகுந்த ஒரு சக்தியாக விளங்கினர் முஸ்லிம்கள். அவர்கள் மன்னர்களுடைய நம்பிக்கையைப் பெறவும், நாட்டு விவகாரங்களில் பெரும் செல்வாக்கு உடையவர்களாகவும் விளங்கினர். சாமூதிரிகள் தங்கள் எதிர்காலத்தை எண்ணி முஸ்லிம்களுக்கு தனி சலுகைகளும் உதவிகளும் செய்து வந்தனர்.
சாமூதிரிகளுடைய கப்பல் படைத்தலைவர்களான புகழ்பெற்ற குஞ்சாலி மரைக்காயர்கள், போர்ச்சுகீசியரின் நாட்டைப் பிடிக்கும் திட்டங்களுக்கு எதிராக அயராது தொடர்ந்த வீரமிக்க போர்கள் கேரள வரலாற்றில் முக்கியமான ஒரு பகுதியாகும். மாப்பிள்ளைகள் என அழைக்கப்படும் மலபார் முஸ்லிம்கள், சாமூதிரிக்காக எதுவும் செய்யத் துணிந்தவர்கள். கடற்படையில் போதிய அளவு முஸ்லிம்கள் இல்லாவிட்டால் ஹிந்து சமுதாயத்தில்பட்ட மீனவ குடும்பங்களிலிருந்து ஒன்றிரண்டு நபர் வீதம் முஸ்லிம்களாக வளர்க்க சாமூதிரிகள் உத்தரவிட்டனர். கோழிக்கோட்டில் உள்ள மக்கள் தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கைப் பெருக ஒருவேளை இந்தக் கட்டளை ஒரு காரணமாக இருக்கலாம் என்று ஏ. ஸ்டிதரமேனோன் (கேரள வரலாறு – பக்கம் 99) குறிப்பிடுகிறார்.
சாமூதிரி போன்ற மன்னர்களின் உதவியாலும், ஊக்குவிப்பாலும் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் இஸ்லாம் தழைத்தோங்கி வளர்ந்த உண்மையை, மக்கள் கவனங்களிலிருந்து திசை திருப்புவதற்காகவே முஹம்மது இபுனு காசிமையும் அவருக்குப் பிறகு வந்தவர்களையும் வாளேந்தி வந்து இஸ்லாத்தைப் பரப்பியவர்கள் என்ற இழிவான பழியை இவர்கள் மீது சுமத்தி, இந்திய வரலாற்றின் முன் வரிசையில் குற்றவாளிகளாக நிறுத்தி வைத்துள்ளனர்.

ஸ் பெ

unread,
May 3, 2013, 6:23:02 AM5/3/13
to panbudan

இந்தியாவில் இஸ்லாம்12,தோப்பில் முஹம்மது மீரான்


9-ம் நூற்றாண்டில் அல்லது அதற்குப் பிறகுதான் இங்கு இஸ்லாத்தின் வருகை என காட்டுவதற்கு சில வரலாற்று ஆசிரியர்கள் “துஹ்பத்துல் முஜாஹிதீன்” என்ற அரபி நூலின் கீழே கொடுக்கப்பட்ட பகுதியை மேற்கோள் காட்டுகின்றனர்.
“……மலபாரில் முதல்முதலாக இஸ்லாம் மார்க்கம் பிரச்சாரத்தில் வந்தவரலாறு இதுவாகும். எந்த ஆண்டில் நடந்தது என்று திட்டவட்டமாகக் கூறுவதற்கு தகுந்த ஆதாரம் எதுவும் இல்லை. ஹிஜிரி 200க்குப் பிறகுதான் (நடந்து) இருக்க வேண்டும் என்பது பெரும்பான்மையோரின் கருத்து. (துஹ்பத்துல் முஜாஹிதீன் – ஷைகு சைனுத்தீன் மகுதூம், மலையாளம் மொழிப்பெயர்ப்பு – கேரளம் பதினைந்து பதினாறாம் நூற்றாண்டுகளில் – வேலாயுதன் பணிக்கச்சேரி – பக்கம் 70)
“துஹ்பத்துல் முஜாஹிதீன்” என்ற நூலில் வரும் மேல் குறிப்பிட்டுள்ள வாசகங்களையே எல்லோரும் மேற்கோள் காட்டி வருகின்றனர். “மலபாரில் முதன்முதலாக இஸ்லாம் மார்க்கம் பிரச்சாரத்தில் வந்த வரலாறு இதுவாகும்” என்ற முதல் வாசகத்திற்கும், பிறகு வரும் வாசகத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஒரு பாராவின் துவக்கத்தில் மேல்குறிப்பிட்ட முதல் வாசகத்தை முடித்துவிட்டு அதே பாராவிலேயே பிற வாசகங்களையும் கொடுத்துள்ளார்.
அவருடைய மலையாள மொழிபெயர்ப்பு நூல்களில் (வேலாயுதன் பணிக்கச்சேரி பக்.57-70, கே.மூஸ்ஸான் குட்டி மெளலவி பக்.8-14) சேரமான் பெருமாள் (கி.பி.825) மக்கா சென்றதையும், மாலிக் இபுனுதினார் கேரளாவில் வந்து பள்ளிவாசல்கள் கட்டியதைப் பற்றியும் விளக்கமாக கூறிவிட்டு, ‘மலபாரில் முதல்முதலாக இஸ்லாம் மார்க்கப் பிரச்சாரத்தில் வந்த வரலாறு இதுவாகும்’ என்ற அந்த வரலாறை முடிக்கிறார். ஆனால் அன்றைய (கி.பி.1583-ல் இறப்பு) வழக்கமாக இருக்கக்கூடும், அல்லது தவறுதலாகவும் இருக்கலாம், வேறு ஒரு கருத்தை சொல்லும் பாராவின் முதல் வாசகமாக இது வந்துவிட்டது. ஒரு பாராவிலுள்ள கடைசி வாசகம் தவறுதலாக அடுத்த பாராவின் முதல் வாசகமாக அச்சாகிவிட்டது. (அடுத்த இதழில் மொழிபெயர்ப்பு தருகிறேன்)
சேக் சைனுத்தீன் மகுதூம் அவர்களுடைய கருத்துப்படி கி.பி.825-க்குப் பிறகுதான் இஸ்லாம் இங்கு தோன்றி இருக்கவேண்டும் என்று வைத்துக் கொள்வோம். இந்த அறிஞர் வாழ்ந்த காலம் 16வது நூற்றாண்டு. எந்தவித வரலாற்றுத் தடயங்களும் கிடைக்க வாய்ப்பில்லாத காலம். அதனால் தகுந்த ஆதாரம் எதுவும் இல்லை என்பதை ஒப்புக் கொண்ட பின் இஸ்லாம் இங்கு தோன்றிய ஆண்டைப் பற்றி தமக்கு திட்டவட்டமாக சொல்ல இயலாது என்று குறிப்பிடுகிறார். ஹிஜிரி 200க்குப் பிறகுதான் தோன்றியிருக்க வேண்டுமென்பது அவருடைய சொந்தக் கருத்தல்ல. பெரும்பான்மையோரின் கருத்து என்று கூறுகிறார்.
சேக் சைனுத்தீன் வரலாற்று ஆசிரியர் அல்ல, ஒரு மார்க்க அறிஞர். கி.பி.1498 முதல் 1582 வரை போர்ச்சுகீசியர் கேரளாவில் அவிழ்த்து விட்ட நீசச் செயல்களைக் கண்டு குமுறி அவர்களுக்கு எதிராகப் போர் செய்ய ஆயுதம் ஏந்திவர முஸ்லிம்களை ஊக்குவிக்கவும், பிஜப்பூர் சுல்தானான அலி ஆதில்ஷா உடைய உதவி பறங்கிகளுக்கெதிராக சாமூதிரிக்கு கிடைக்க செய்வதற்காகவும் இயற்றியதாகும் இந்நூல். (மகுதூம் நூல்கள் – பேராசிரியர் எ.பி.பி.நம்பூதிரி, ‘மாத்தியமம்’ மலையாளம் ஆண்டு மலர் – 1988 பக்.62)
இது வரலாற்று நூலாக எழுதியது அல்ல. ஆனால் அன்றைய வரலாற்று உண்மைகளை இதிலிருந்து தெரிந்து கொள்ள முடியும். அவருக்குத் தெரிந்தவற்றை எழுதியுள்ளாரே தவிர, இதை ஒரு வரலாற்று நூலாக் எழுதவில்லை என்பதுதான் உண்மை.
இன்ஷா அல்லாஹ் தொடரும்…
நன்றி: மக்கள் உரிமை வாரஇதழ் – நவம்பர், 18 – 24, 2005

ஸ் பெ

unread,
May 3, 2013, 6:23:22 AM5/3/13
to panbudan

இந்தியாவில் இஸ்லாம்13,தோப்பில் முஹம்மது மீரான்


ஷெய்க்கு ஷெய்னுத்தீன் மஃதூம்(ரஹ்) அவர்களுடைய ‘துஹ்பத்துல் முஜாஹிதீன் பி அப்ஸிஅக்பரில் புர்த்துக் காலிய்யின்’ (இதுதான் நூலின் முழுப்பெயர்) என்ற நூலை ஆதாரம் காட்டி கி.பி.825 க்குப் பின் சேரமான் பெருமாள் மக்கா சென்ற பிறகுதான் இஸ்லாத்தின் வருகை என்று கூறுகின்றனர்.
நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில் “பள்ளி பாண பெருமாள்” என்ற சேரநாட்டு பெருமாள் ஒருவர் மக்காவிற்கு பயணம் மேற்கொண்டார். இந்த பெருமாளுடைய காலம் “இருண்ட காலத்தின் நெரிசலில் சிக்கிக் கொண்டதால் இவரைப் பற்றி அதிகம் தெரிய வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இவருக்கும் ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்குப் பின் சுந்தரமூர்த்தி நாயனாருடைய நண்பரான சேரமான் “சேரமான் பெருமாள்” என்ற பெயரில் புகழ்பெற்ற சேரநாட்டு கடைசி பெருமாள் அரேபிய பயணம் மேற்கொண்டார். இவருடைய காலம் வரலாற்றில் ஒளி படர்ந்த காலமாகும். அதனால் இவருடைய அரேபியப் பயணமும், இவர் அரேபியப் பயணம் மேற்கொண்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பின் மாலிக் இப்னு தீனார் என்பவருடைய தலைமையில் இஸ்லாமிய பிரச்சாரக் குழு இங்கு வருகை தந்ததும் மக்கள் மத்தியில் விழிப்பை ஏற்படுத்தியது.
இதுதான் இஸ்லாமிய மார்க்க பிரச்சாரத்திற்காக முதன்முதலில் மேற்கு கடற்கரைக்கு வந்த முதல் குழு. இவ்விரு நிகழ்ச்சிகளும் அக்காலத்தில் பிரபலமானதால் தலைமுறையினரிடையே காதுவழி செய்தியாகப் பரவியது. இப்படி கேட்டறிந்த செய்தியைத்தான் ஷெய்க்கு ஷெய்னுத்தீன் மஃதூம்(ரஹ்) அவர்கள் தம்முடைய நூலில் குறிப்பிட்டிருப்பது; பள்ளி பாண பெருமாள் நபிகள் நாயகத்தின் காலத்தின் மக்கா சென்றதற்கும், அரேபியா சென்று இஸ்லாம் மார்க்கம் ஏற்றுக் கொண்டதற்கும் ஆதாரங்கள் 19ம் நூற்றாண்டின் கடைசிப் பகுதிக்குப் பிறகுதான் கண்டுபிடிக்கப்பட்டன. இதுபற்றி பிறகு ஆராய்வோம்.
“ஏக இறை நம்பிக்கை, உணர்ச்சிமீதெழுந்த இறை பக்தி, ஆத்ம தியாகம் ஆத்மீக குருக்களிடம் பக்தி காட்டுவதின் தேவை ஆகியவற்றில் உறுதியாக நிற்பதும், ஜாதி வேற்றுமையில் ஏற்பட்டுள்ள சிறு தளர்வுதான் இப்படிப்பட்ட ஹிந்துமத எழுச்சியின் சில அறிகுறிகள் ஒருவகையில் அல்லது வேறு வகையில் இஸ்லாத்தின் செல்வாக்கு எனக் கருதப்படுகிறது.” (தென் இந்தியவரலாறு (மலையாள மொழிபெயர்ப்பு) கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி பக்.484) என்று திரு கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி குறிப்பிடுகிறார். மேலும் அவர் சொல்வதை கவனிக்கவும்.
“இஸ்லாத்தோடு தென் இந்தியாவுக்குள்ள ஈடுபாடு வடஇந்தியாவை விட பழமையானது”
திரு. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி ஹிந்துமத எழுச்சி என்று குறிப்பிடுவது:
கேரளாவிலுள்ள காலடியில் பிறந்த ஆதிசங்கராச்சாரியாருடைய காலத்தையாகும். அவரது காலம் கி.பி.788-820. கி.பி.825 க்குப் பிறகுதான் இஸ்லாத்தின் வருகை என்றால் கி.பி.820 ல் மறைந்த சங்கராச்சாரியாரை இஸ்லாத்தின் கொள்கைகள் எவ்வாறு கவர்ந்திருக்க முடியும். இதிலிருந்து கி.பி.820 க்கு முன்னரே இஸ்லாம், கேரளப் பகுதிகளில் வளர்ந்து கொண்டிருந்த ஒரு சக்தி என்பது தெளிவாகிறது மட்டுமல்ல, மிக மந்த நிலையில் துவக்க காலத்தில் இங்கு பரவியது என்று குறிப்பிட்டோம்.
எழுத்தறிவோ, செய்தி பரப்பும் சாதனங்களோ எதுவும் இல்லாத காலத்தில், தோன்றிய உடனே எங்கும் பரவியிருக்க முடியாது. மெதுவாக பரவி, அதன் கொள்கைகளால் மக்கள் கவரப்பட்டு வளர்ந்து வரும் வேறு மதங்களின் வளர்ச்சிக்கு இது ஒது ‘தடை’ எனப்படுவதற்கு குறைந்தது ஓர் நூற்றாண்டு காலமாவது தேவை. பிற மத தலைவர்கள் வளர்ந்து வரும் ஒரு மதத்தின் கொள்கைகளை சரிவர ஆராய்ந்து, அக்கொள்கைகள் நல்லதெனப்பட்டு அதை தம் மத கோட்பாடுகளாக மாற்றி தம் மக்களிடம் எட்ட செய்ய ஒரு நெடிய காலமே தேவைப்படும். இதன் அடிப்படையில் பார்ப்போமேயானால் நபி(ஸல்) காலத்திலேயே இஸ்லாம் இங்கு தோன்றிவிட்டது என்று உறுதியாகக் கூற முடியும்.
பொன்னானி ஷெய்க்கு ஷெய்னுத்தீன் மஃதூம்(ரஹ்) அவர்கள் எழுதிய அரபி நூலான “துஹ்ஃபத்துல் முஜாஹிதீன்” என்ற முதல் கேரள வரலாற்று நூலின் இரண்டாம் அத்தியாயத்தின் தமிழாக்கம் இது. இரண்டாம் அத்தியாயம் முழுவதையும் மொழி பெயர்க்கவில்லை. இக்கட்டுரைத் தொடருக்குத் தேவையான பகுதி மட்டுமே இன்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மூல ஆசிரியருடைய அசல் கையெழுத்துச் சுவடியையும், பல பிற மொழிபெயர்ப்புகளையும் வைத்து திரு. வேலாயுதன் பணிக்கச்சேரி என்ற வரலாற்று ஆசிரியர் “கேரளா 15-ம் 16-ம் நூற்றாண்டுகளில்” என்ற தலைப்பில் மலையாளத்தில் மொழிபெயர்த்த நூலின் 57-71வரையான பக்கங்களின் தமிழாக்கம்.
தொடரும்..
நவம்பர் 25 – டிசம்பர் 1, 2005

ஸ் பெ

unread,
May 3, 2013, 6:23:42 AM5/3/13
to panbudan

இந்தியாவில் இஸ்லாம்14,தோப்பில் முஹம்மது மீரான்


பொன்னானி ஷெய்க்கு ஷெய்னுத்தீன் மஃதூம்(ரஹ்) அவர்கள் எழுதிய அரபி நூலான “துஹ்ஃபத்துல் முஜாஹிதீன்” என்ற முதல் கேரள வரலாற்று நூலின் இரண்டாம் அத்தியாயத்தின் தமிழாக்கம் இது. இரண்டாம் அத்தியாயம் முழுவதையும் மொழி பெயர்க்கவில்லை. இக்கட்டுரைத் தொடருக்குத் தேவையான பகுதி மட்டுமே இன்று மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. மூல ஆசிரியருடைய அசல் கையெழுத்துச் சுவடியையும், பல பிற மொழிபெயர்ப்புகளையும் வைத்து திரு.வேலாயுதன் பணிக்கச்சேரி என்ற வரலாற்று ஆசிரியர் “கேரளா 15-ம் 16-ம் நூற்றாண்டுகளில்” என்ற தலைப்பில் மலையாளத்தில் மொழிபெயர்த்த நூலின் 57-71 வரையான பக்கங்களின் தமிழாக்கம் (இரண்டாவது அத்தியாயம்).
குடும்பங்களுடன் பயணம் செய்யும் ஒவ்வொரு யூத, கிறிஸ்தவ குழுக்கள் மலபாரிலுள்ள துறைமுகமான கொடுங்கல்லூரில் கப்பலில் இறங்கினர். அன்றைய அரசர் சேரமான் பெருமாள் அவர்களுக்கு தங்குவதற்காக வீடும் தோட்டங்களும் தேவைக்கேற்ப வழங்கினர். அவர்கள் அங்கு நிரந்தரமாக தங்கலாயினர்.
சில வருடங்களுக்குப் பின் அரேபியாவிலிருந்து முஸ்லிம்களான சில புகராக்கள், கண்ணியமிக்கவரும் அறிஞருமான ஒரு ஷெய்க்கின் தலைமையில் இலங்கைக்கு செல்லும் வழியில் கொடுங்கல்லூரில் இறங்கினார். புகராக்களின் வருகையை கேள்விப்பட்ட அரசர், அவர்கள் வருந்தினராக அரண்மனைக்கு வரவழைத்து வரவேற்று கொடுத்தார். அவர்களைப் பற்றிய தகவல்கள் அறிய அரசர் ஆர்வம் காட்டினார்.
பெருமானார்(ஸல்) அவர்களைப் பற்றியும், அவர்கள் போதனை செய்த தூய இஸ்லாத்தைப் பற்றியும் மானிட திறனுக்கப்பாற்பட்ட ‘சந்திரப் பிளப்பை’ பற்றியும் விளக்கமாக அரசருக்கு எடுத்துரைத்தார் ஷெய்க் அவர்கள். பெருமானார்(ஸல்) அவர்களுடைய வரலாற்றையும் அற்புத நிகழ்ச்சிகளையும் ஷெய்க்கிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொண்ட அரசருடைய இதயத்தில் பெருமானார்(ஸல்) அவர்களின் வாய்மை இடம்பெறவும் பெருமானார்(ஸல்) அவர்கள் மீது தனி அன்பும் மதிப்பும் ஏற்பட்டன. தூய இஸ்லாத்தின் பால் கவரப்பட்ட அரசர், அவர்களுடன் அரேபியாவுக்குச் செல்லும் நோக்கத்தோடு இலங்கையிலிருந்து திரும்பி வரும் வழியில் இங்கு இறங்க வேண்டுமென்று ஷெய்க்கிடத்திலும் குழுவினரிடத்திலும் வேண்டினார்.
ஷெய்க் அதை ஏற்றுக் கொண்டார். இந்த விஷயம் மக்கள் தெரிய வேண்டாதென அரசர் அவர்களிடத்தில் கேட்டுக் கொண்டார், ஷெய்க்கும் குழுவினரும் இலங்கை சென்று ஆதம் மலை தரிசனம் செய்துவிட்டு, வாக்களித்தபடி கொடுங்கல்லூரில் வந்து அரசரை சந்தித்தார்கள். மிக இரகசியமான முறையில் பயணத்திற்காக கப்பலும் ஏனைய தயாரிப்புகளும் ஏற்பாடு செய்ய அரசர் ஷெய்க்கிடம் பொறுப்பை ஒப்படைத்தார். அந்த சந்தர்ப்பத்தில் துறைமுகத்தில் வெளிநாட்டு வர்த்தகர்களின் ஏராளமான கப்பல்கள் வந்திருந்தன. அவற்றின் உரிமையாளர்களில் ஒருவரை அணுகி தானும் தம்முடைய புகராக்குழுவும் அரேபியாவிற்கு பயணம் மேற்கொள்ள எண்ணுவதாகவும் அதற்கான வசதிகளை ஏற்படுத்தித்தர இயலுமா என்று ஷெய்க் கேட்டார். கப்பல் உரிமையாளர் அந்த வேண்டுதலை முகமலர்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.
பயண நாள் நெருங்கிய போது குடும்பத்தினரோ, ஊழியர்களோ, அமைச்சர்களோ யாருமே ஏழு தினங்களுக்கு தம் அரண்மனைக்குள் நுழைவதையும் தம்மை சந்திப்பதையும் தடைசெய்து கட்டளைப் பிறப்பித்தார். தமது நாட்டை பல பகுதிகளாக பிரிவினை செய்து எல்லையை வரையறுத்து ஆட்சி முறைகளையும் சட்டங்களையும் வகுத்து ஒவ்வொரு பகுதி மீதான ஆட்சி உரிமையை அரச குடும்பத்திலுள்ள ஒவ்வொரு நபருக்கும் எழுதிவைத்தார். மலபாரிலுள்ள ஹிந்துக்கள் மத்தியில் இந்நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றது. இவர் மலபாரின் ஒட்டுமொத்த ஆட்சியாளராகத் திகழ்ந்தார். மலபாரின் எல்லைகள் தெற்கு கும்ஹுரியும் (கன்னியாகுமரி) வடக்கு காஞ்சன் கூத்தும் (காசர்கோடு) ஆகும்.
அரசு தொடர்பான பொறுப்புக்களை ஒப்படைத்த பின் அவர் ஷெய்க்குடனும் புகராக்குழுவுனனும் சேர்ந்து இரகசியமாக இரவே கப்பல் ஏறி பயணமானார். வழியில் ஃபந்தரீனாவில் (பந்தலாயனி) இறங்கி ஒருநாள் தங்கியபின் தஹ்ஃபத்தனுக்குப் (தர்ம்மடம்) போனார். அங்கு இறங்கி மூன்று தினங்கள் ஓய்வெடுத்த பின் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தார். தஹ் ஃபத்தனிலிருந்து நேரடியாக ஹைருக்கே சென்றுவிட்டார். அரசரும் குழுவினரும் அங்கு இறங்கினர்.
அங்கு தங்கியிந்த சந்தர்ப்பத்தில், மலபாருக்கு வந்து இஸ்லாம் மார்க்க பிரச்சாரம் செய்யவும் பள்ளிவாசல்கள் கட்டவும் திட்டமிட்டிருந்த ஒரு குழு அவருடன் இணைந்தது. அவர்களுக்கு எல்லாவித உதவி ஒத்துழைப்புக்கள் நல்குவதாக அரசர் மகிழ்ச்சியுடன் வாக்களித்தார். அரசருடன் சேர்ந்து மலபாருக்கு வருவதுதான் அவர்களது நோக்கம். ஆனால் அந்த சந்தர்ப்பத்தில் அரசர் நோய்வாய்ப்பட்டதால் பயணம் செய்ய முடியாமல் போய்விட்டது. நோய் உச்சக்கட்டத்தை எட்டியபோது, மலபார் பயணத்திற்கு திட்டமிட்டிருந்தவர்களில் முக்கிய நபர்களை ஷரபு இப்னு மாலிக், அவருடைய தாயாரின் சகோதரன் மாலிக் இப்னு தீனார், அவருடைய சகோதர புதல்வரான மாலிக் இப்னு ஹபீப் இப்னு மாலிக் ஆகியோரையும் பிரச்சாரக் குழுவிலுள்ள பிற உறுப்பினர்களையும் அழைத்து அரசர் பின்வருமாறு உபதேசம் செய்தார்: “இந்த நோய் மூலம் நான் இறந்துவிட்டாலும் உங்களுடைய மலபார் பயணத்தை தாமதப்படுத்தவோ, அதிலிருந்து பின்வாங்கவோ செய்யக் கூடாது.”
“தங்கள் நாடு எங்கு இருக்கிறதென்றும், தங்கள் அதிகார எல்லை எவ்வளவு உண்டு என்றும் எங்களுக்குத் தெரியாது. அதனாலேயே நாங்கள் உங்களுடன் பயணம் செய்ய முடிவு எடுத்தோம்.” அவர்களுடைய இந்த பதில் கேட்டபோது அரசர் சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்தபின் மலையாளத்தில் ஒரு கடிதம் எழுதி அவர்களிடம் ஒப்படைத்தார். அக்கடிதத்தில் அவருடைய இராஜியத்தின் பெயரும், குடும்ப உறுப்பினர்கள், அங்குள்ள அரசர்கள் ஆகியோரின் விவரங்கள் விளக்கப்பட்டிருந்தன.
கொடுங்கல்லூரிலோ, தஹ்ஃபத் தனிலோ (தர்ம்மடம்) ஃபந்தரீனா (பந்தலாயனி)விலோ, கவுல் (கொல்லம்)த்திலோ இறங்க வேண்டுமென்றும், தம்முடைய நோய் நிலைமைப் பற்றியோ, தாம் இறந்துவிட்டால் அந்த தகவலையோ மலபாரில் யாரிடத்தில் சொல்லவேண்டாமென்றும் அவர்களிடம் தனியாக நினைவுபடுத்தினார்.
அதிக நாட்கள் செல்லும் முன் அரசர் இம்மையை விட்டு பிரிந்தார். அல்லாஹ் அவர் மீது பெருவாரியாக அருளாசிகள் பொழியட்டும்!
சில வருடங்களக்குப் பின், கண்ணியம் மிகுந்த ஷரபு இப்னு மாலிக்’ மாலிக் இப்னு தீனார், மாலிக் இப்னு ஹபீப், இப்னு மாலிக், அவருடைய துணைவியார் கமரியா, அவருடைய பிள்ளைகள், தோழர்கள் ஆகியோருடன் மலபாருக்கு கப்பல் ஏறி நீண்டநாள் பயணத்திற்குப் பின் அவர்கள் கொடுங்கல்லூரில் கரை இறங்கினார்கள். மன்னர் கொடுத்தனுப்பியிருந்த கடிதத்தை அங்குள்ள அரசரிடத்தில் ஒப்படைக்கவும், மன்னரின் மரணச் செய்தியை இரகசியமாக பாதுகாத்துக் கொள்ளவும் செய்தனர். கடிதத்தின் மூலம் செய்திகள் தெரிந்துகொண்ட அரசர். அவர்களுக்கு தங்குமிடங்களும், தோட்டங்களும் மற்றும் நிலங்களும் கொடுத்தார். அவர்கள் அங்கேயே தங்கினார்கள். காலம் தாழ்த்தாமல் ஒரு பள்ளிவாசலையும் அங்கு (கொடுங்கல்லூரில்) கட்டினார்கள். (இதுதான் இந்தியாவிலுள்ள முதல் பள்ளிவாசல்.)
மாலிக் இப்னு தீனார் அங்கேயே தங்கியிருந்து கொண்டு தம்முடைய சகோதர புதல்வரான மாலிக் இப்னு ஹபீப், இப்னு மாலிக்கை மலபாரின் பிற பகுதிகளில் பள்ளிவாசல் நிறுவவும், இஸ்லாம் மார்க்கப் பிரச்சாரம் செய்யவும் பணித்தார்.
தொடரும்..
மக்கள் உரிமை வாரஇதழ்: டிசம்பர், 09 – 15, 2005

ஸ் பெ

unread,
May 3, 2013, 6:24:01 AM5/3/13
to panbudan

இந்தியாவில் இஸ்லாம்15,தோப்பில் முஹம்மது மீரான்


மாலிக் இப்னு ஹபீப் கட்டிய பள்ளிவாசல்கள்
மாலிக் இபுனு ஹபீப் இபுனு மாலிக் தம்முடைய மனைவி மக்களோடு கொல்லத்திற்குச் சென்றார். அங்கு ஒரு பள்ளிவாசல் கட்டினார். மனைவியையும் பிள்ளைகளையும் கொல்லத்தில் தங்கவைத்து விட்டு அவர் ஹேலி மாறாலி (ஏழு மலை)க்குப் போனார். அங்கேயும் ஒரு பள்ளிவாசலைக் கட்டினார். பிறகு, ஃபாக்கனூர் (பார்க்கூர்) மஞ்சூர் (மங்கலாபுரம்) காஞ்சர் கூந்து (காசர்கோடு) முதலிய இடங்களுக்குச் செல்லவும் அவ்விடங்களில் ஒவ்வொரு பள்ளிவாசல் கட்டினார். அதன் பின் ஹேலி மாறாலி (ஏழு மலை)க்கு புறப்படவும், ஏறத்தாழ மூன்று மாதங்கள் அங்கு ஓய்வெடுத்துக் கொண்டார். பிறகு அவர் ஜீர்பத்தன் (ஸ்டிகண்டபுரம்) தஹ்ஃபந்தன் (தர்மமடம்) ஃபந்தரீனா (பந்தலாயணி) சாலியாத்து (சாலியம்) ஆகிய இடங்களில் பயணம் மேற் கொண்டு அங்கெல்லாம் ஒவ்வொரு பள்ளிவாசல் நிறுவியபின் சாலியத்தில் ஐந்து மாதங்கள் தங்கினார்.
பிறகு, தமது சிறிய தகப்பனாரான மாலிக் இபுனு தீனாரை சந்திப்பதற்காக கொடுங்கல்லூருக்குச் சென்றார். சில நாட்கள் அவருடன் தங்கியிருந்தபின் தாம் கட்டிய அனைத்து பள்ளிவாசல்களுக்கும் சென்று தொழுகை நடத்தவும், முஸ்லிம் அல்லாதவரைக் கொண்டு நிரம்பிய ஒரு நாட்டில் இஸ்லாத்தின் கொள்கையைப் பரப்பியதில் பூரிப்படைந்து அல்லாஹ்வை புகழ்ந்துவிட்டு மீண்டும் கொடுங்கல்லூருக்கு திரும்பி வந்தார்.
மாலிக் இபுனு தீனார், மாலிக் இபுனு ஹபீப், தோழர்கள், சேவகர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து கொல்லத்திற்குச் சென்றனர். மாலிக் இபுனு தீனாரும் சில நண்பர்களும் நீங்கலாக, ஏனையோர்களை கொல்லத்தில் தங்கவைத்துவிட்டு இவர்கள் ஸஹருக்கு திரும்பிப் போனார்கள், ஸஹரில் வைத்து மறுமை எய்த மன்னரின் கபரிடத்தில் மாலிக் இபுனு தீனாரும் தோழர்களும் விஜயம் செய்தனர்.
அதற்குப் பின் குராசானுக்கு அவர்கள் சென்றனர். அங்குதான் மாலிக் இபுனு தீனார் மரணமடைந்தார். மாலிக் இபுனு ஹபீப் இபுனு மாலிக் சில பிள்ளைகளை கொல்லத்தில் தங்க வைத்துவிட்டு மனைவியுடன் கொடுங்கல்லூருக்கு திரும்பிச் சென்றார். அங்கு அவரும் மனைவியும் இறைவனடி சேர்ந்தனர். மலபாரில் முதல்முதலாக நடந்த இஸ்லாம் மார்க்கப் பிரச்சாரத்தின் வரலாறு இதுவாகும்.
இது எந்த ஆண்டில் நிகழ்ந்தது என்று குறிப்பாக சொல்வதற்கு தகுந்த தடயங்கள் ஏதுமில்லை. ஹிஜ்ரி 200ஆம் ஆண்டிற்குப் பின் நிகழ்ந்திருக்கலாமென்பது பெரும்பான்மையோரின் கருத்தாகும்.
மேற்குறிப்பிட்ட மன்னரின் இஸ்லாம் மத மாற்றம் நபிகள் நாயகத்தின்(ஸல்) காலத்தின் என்றும், ‘சந்திரப்பிளப்பை’ மன்னர் நேரடியாகப் பார்த்ததாகவும், அவர் திருத்தூதரிடத்தில் சென்றதாகவும், திருத்தூதரை சந்தித்த பின் ஒரு முஸ்லிம் குழுவுடன் மலபாருக்கு திரும்பிவரும் வழியில் ஸஹரில் வைத்து இறந்ததாகவும் நிலவிவரும் ஊகம் முற்றிலும் ஆதாரமற்றவையாகும்.
இன்று மக்களிடையே பரவி இருப்பது போல் மன்னரின் கபர் ஸஹரில் அல்ல, ஏமன் நாட்டிலுள்ள ‘ஸஃபரி’யிலாகும். ‘சாமூரிக் கபர்’ என்ற பேரில் அறியப்படும் அந்த இடத்தை பாதுகாக்கப்பட்ட இடமாக அந்த நாட்டு மக்கள் கருதி வருகின்றனர்.
அரசர் காணாமல் போன நிகழ்ச்சி மலபாரிலுள்ள ஹிந்துக்கள் மத்தியிலும் முஸ்லிம்கள் மத்தியிலும் அதிகம் பிரச்சார மிகுந்த கதையாகும். மன்னர் மேல் உலகிற்கு (வான உலகிற்கு) ஏறிச் சென்றதாகவும், ஒரு நாள் இறங்கிவருவார் என்றும் ஹிந்துக்கள் நம்பிவருகின்றனர். இதன் அடிப்படையில் தான் கொடுங்கல்லூர் நகரில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சில விசேஷ தினங்களில் மிதியடியும் தண்ணீரும் தயார் செய்து வைப்பதும் விளக்கு ஏற்றுவதும் ஆகும்.
(திரு.வேலாயுதன் பணிக்கச்சேரி என்ற வரலாற்று ஆசிரியர் “கேரளா 15-ம் 16-ம் நூற்றாண்டுகளில்” என்ற தலைப்பில் மலையாளத்தில் மொழிபெயர்த்த நூலின் 57-71 வரையான பக்கங்களின் தமிழாக்கம்)
சேரமான் பெருமாள் இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டது முதல் இஸ்லாம் இங்கு தோன்றியதாக சிலர் கூறிவருகின்றனர். இங்கு இஸ்லாம் தோன்றியதோடு சேரமான் பெருமாள் கதையை இணைத்து வருவதால் சிலர் பெருமாள் காலத்தையே குழப்பி விடுகின்றனர். ஏதோ ஒரு பெருமாள் என்பதை அனைத்து ஆசிரியர்களும் ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் அந்த பெருமாளுடைய காலம் 10-வது நூற்றாண்டிற்கு பிற்பட்ட காலமாக இருக்கலாம் என்று குழப்புகின்றனர்.
இங்கு சேரமான் பெருமாள் நாயனாரோ, பள்ளி – பாண பெருமாள் என்ற பெளத்த அரசரோ இஸ்லாத்தைத் தழுவியதன் அடிப்படையில் இஸ்லாத்தின் தோற்றத்தையும் அதன் வளர்ச்சியையும் பார்க்க வேண்டியதில்லை, இவர்களுடைய மத மாற்றம் இதற்கு ஒரு காரணமல்ல. இவர்களுடைய மத மாற்றம் இஸ்லாத்தின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் ஒரு முக்கிய திரும்புமுனை என்ற அடிப்படையில் இதை ஆராய்வோமானால் ஆண்டு தேதிகளிலும் பெயர்களிலும் காணப்படும் குளறுபடிகளால் உண்மையை சரிவர ஆராய முடியாது. இவ்விரு பெருமாள்களைப் பற்றித் தனியாக ஆராய்வோம். தற்போது கையிலிருக்கும் மறுக்க முடியாத வரலாற்றுச் சான்றின் அடிப்படையில் உண்மையின் வேர்களைத் தேட வேண்டும்.
தொடரும்..
நன்றி: மக்கள் உரிமை – டிசம்பர், 23 – 29, 2005

Jaisankar Jaganathan

unread,
May 3, 2013, 6:24:24 AM5/3/13
to panb...@googlegroups.com
ஸ் பெ
ஒரு கட்டுரை படிச்சு முடிச்சு கமெண்ட் போடுறதுக்குள்ள் ஏன் இப்படி கொலைவெறியோட போஸ்ட் பண்ணுறீங்க

ஸ் பெ

unread,
May 3, 2013, 6:24:29 AM5/3/13
to panbudan

இந்தியாவில் இஸ்லாம்16,தோப்பில் முஹம்மது மீரான்


செம்பேடு தரும் சான்றுகள்..
சேரமான் பெருமாள் என்று வரலாற்றில் புகழ் பெற்ற முதல் சேரவம்சத்தின் கடைசி பெருமாளுடைய பெயர் ‘இராஜசேகர வர்மா’ என்பதாகும். இவரது ஆட்சிக் காலம் கி.பி.750க்கும் 850க்கும் இடைப்பட்ட காலம் என திருவிதாங்கூர் ஆர்க்கியாளஜிக்கல் சீரிஸின் (T.A.S) ஆசிரியர் திரு. டி.ஏ. கோபிநாதராவ் (T.A.S Vol.11 Page 9) குறிப்பிடுகிறார். கேரளாவில் சங்கனாச்சேரியின் அருகாமையில் உள்ள ‘வாழப்பள்ளி’ என்ற ஊருக்கு இவர் செப்பேடு ஒன்று எழுதிக் கொடுத்துள்ளார். அந்த செம்பேட்டில் அரபி நாணயமான ‘தினாரை’ சில இடங்களில் குறிப்பிட்டிருப்பதைக் காண முடியும். “திருவாற்றுவாய் முட்டாப்பலி விலக்குவார் பெருமானடி கட்டு நூறுதிநாரத்தண்டப்படுவது….” (T.A.S. Vol.11 Page 13 செப்பேட்டின் 3வது வரி) “…மேனூற்றைம் பதி தூணி நெல்லு மூன்று தினாரமும் – ஐயன் காட்டு
மற்றத்திலிரண்டு வேலி உந்தாமோ” (T.A.S. Vol. 11 Page 14 செம்பேட்டின் 10வது வரி)
சேரமான் பெருமாள் என அறியப்படும் ராஜசேகர வர்மா, முதல் சேர வம்சத்தில் கடைசிப் பெருமாள். இவர் எழுதிக் கொடுத்த முதல் செப்பேட்டில் மேற்குறிப்பிடப்பட்ட வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த செம்பேடு “வாழப்பள்ளி சாசனம்” என்ற பெயரில் அறியப்படுகிறது. அரபி நாணயமான ‘தினார்’ இந்த செப்பேட்டைத் தவிர வேறு எதிலும் குறிப்பிட்டிருப்பதாகத் தெரியவில்லை. எட்டாவது நூற்றாண்டில் எழுதப்பட்டதாக (என்று கூறப்படுகிறது) கூறப்படும் இந்த செப்பேட்டில் அரபி நாட்டு நாணயமான ‘தினாரை’ குறிப்பிட்டிருப்பது கவனத்திற்குரியது.
Those who stop the perpetually endowed bali ceremony (muttappali in the “Thiruvarruvay (temple) should pay to the King (or the god) a time of one hundred dinara…(T.A.S.Page 14 (English Translatio)
கோயிலில் வழக்கமாக நடைபெறும் ‘பலி’ எனும் வழிபாட்டை நிறுத்துவதாக இருந்தால் அரசருக்கு (அல்லது இறைவனுக்கு) ‘நூறு தினாரம்’ பிழை செலுத்தவேண்டும் என்று பொருள்படும்படி முதல் சாசனத்தில் காணப்படுகிறது.
“…..both situated in Uragan and yielding one hundred and fifty tumi of paddy and three dinaras, two “velis’ in the land in Ayyankadu Damodaran’s”
கோயிலுக்கு இனாமாக வழங்கப்பட்ட சில நிலங்களைப் பற்றியும், அந்நிலங்களில் கிடைக்கும் வருவாயைப்பற்றியும் குறிப்பிடுகையில், ஊரகத்திலுள்ள இரு நிலங்களிலிருந்து 1,500 (துணி) நெல்லும் மூன்று தினாரமும் வருவாய் உள்ளன என்று இரண்டாவது சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசர் ஒருவர் கோயிலுக்கு எழுதிக் கொடுத்த மானியமொன்றில் தண்டனையைக் குறிக்குமிடத்திலும், வருவாயை குறிக்குமிடத்திலும் தினாரம் என்ற அரபி நாட்டு நாணயத்தை தனியாக எடுத்துக் கூறுகிறார். அப்படியானால் ‘தினாரம்’ இங்கு நடைமுறையில் இருந்திருக்க வேண்டும்.
8வது நூற்றாண்டில் அரேபியா முழுவதும் முஸ்லிம் ஆட்சியின் கீழ் வந்துவிட்டது கடல் தாண்டியுள்ள சேரநாட்டில் தினாரம் செல்வாக்குப் பெறவேண்டுமேயானால், அரேபியர்களான முஸ்லிம்களின் செல்வாக்கு இங்கு அதிக அளவில் இருந்திருப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் சேரநாட்டு மக்கள் தொகையில் கணிசமான அளவில் எண்ணிக்கை உள்ளவர்களாகவும் இருந்திருக்க வேண்டும். அப்படி கணிசமான எண்ணிக்கை உள்ள குடிமக்களாக முஸ்லிம்கள் இங்கு வாழ்ந்திருப்பார்களேயானால், அந்த அளவிற்கு வளர்ச்சிப் பெற நபிகள் நாயகம்(ஸல்) காலத்திலேயே முஸ்லிம்கள் இங்கு வந்து தங்கியிருக்க வேண்டும் என்பது உறுதியாகிவிட்டது.
இந்த ஆவணத்தின் அடிப்படையில் ஆராய்வோமேயானால், சுலைமான் என்ற பாரசீக வணிகரின் கூற்று உண்மைக்கு மாறானது என்று புலனாகிறது.
சிலர் ‘தினாரம்’ என்ற தங்க நாணயத்தை ‘தங்க நாணயம்’ என்ற பொருளிலும், வேறு சிலர் அது ரோமானியருடைய நாணயம் என்றும் திசை திருப்பி விடுகின்றனர். தினார் அரேபியர்களிடையே பழக்கத்திலிருந்த தங்க நாணயமாகும்.
உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் தினார் என்ற சொல்லுக்கு ஒரு பழைய அரபி தங்க நாணயம் என்று பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. அதுபோன்று சென்னை பல்கலைக்கழக வெளியீடான ஆங்கில தமிழ் அகராதியிலும் ‘தினாரம்’ என்பதற்கு பழைய அரேபிய தங்க நாணயம் என்றே பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.
தினாறும் திர்ஹமும் எப்படி முத்திரை அடித்து வெளியிடப்படுகின்றன என்பதைப் பற்றி இபுனு கல்தூன் தம்முடைய ‘முகத்திமா’ என்ற பேர் பெற்ற நூலில் விரிவாக விளக்கியுள்ளார். இது அரபி நாட்டு நாணயம் என்றுதான் 14-வது நூற்றாண்டில் வாழ்ந்திருந்த கல்தூனும் குறிப்பிடுகிறார். மேற்கு கடற்கரை துறைமுகமான கொடுங்கல்லூரில், கப்பலில் இறங்கிய முதல் இஸ்லாமிய பிரச்சாரக் குழுவின் தலைவருடைய பெயரும் ‘மாலிக் இபுனு தீனார்’ என்றாகும்.
அரேபியர்களிடையே ‘தினார்’ என்ற பெயர் பழக்கத்தில் இருக்கையில் ‘தினார்’ என்பதை ரோமானிய நாணயம் என்ற முடிவுக்கு எப்படி வரமுடியும். வணிகத்தில் முன்னணியில் நின்றிருந்த அரேபியர்களுடைய நாணயம் ரோம் நாட்டிலும் செல்வாக்கைப் பெற்றிருக்கலாம்.
‘தினார்’ என்ற சொல் அரபி சொல்லாகும். இன்று உலக பொருளாதாரத்தில் அமெரிக்க நாட்டு நாணயமான ‘டாலர்’ எவ்வளவு செல்வாக்கைப் பெற்று பேசப்படுகிறதோ அதுபோன்று அன்றைய பொருளாதாரத்தில் தினாரும் செல்வாக்கு பெற்றிருந்தது.
தொடரும்..
நன்றி: மக்கள் உரிமை வாரஇதழ்
டிசம்பர் 30, 2005 – ஜனவரி 5, 2006

ஸ் பெ

unread,
May 3, 2013, 6:24:48 AM5/3/13
to panbudan

இந்தியாவில் இஸ்லாம்17,தோப்பில் முஹம்மது மீரான்


செப்பேடு தரும் செய்தி
முதல் சேர வம்சத்தின் கடைசி பெருமாளாகிய சேரமான் பெருமாள் நாயனாருக்குப் பின், இரண்டாவது சேர வம்சத்தை சார்ந்த ஸ்தாணுரவி வர்மா என்ற சேர அரசர் கொல்லம் நகரில் உள்ள ‘தரீசாப் பள்ளி’ என்ற சிரியன் (Syrian) கிறிஸ்தவ தேவாலயத்திற்கு எழுதிக் கொடுத்த மானியமாகும்.
இரண்டாவது ஆவணம் அந்த தேவாலயத்தைக் கட்டிய ‘ஈசோ சபீர்’ என்பவர் பெயருக்கு எழுதிக் கொடுத்த இச்செப்பேடு (Copper Plate) தரீசாப் பள்ளி சாசனம் என்று அறியப்படுகிறது. தென்னக வரலாற்றை எழுதிய ஆசிரியர்கள் அனைவரும் புகழ்பெற்ற இந்த செப்பேட்டை குறிப்பிடாமலிருந்ததில்லை.
தென்னக வரலாற்றில், குறிப்பாக அன்றைய சேர நாட்டு வரலாற்றைப் பொருத்தமட்டில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செப்பேடாகுமிது. அன்று எந்தெந்த சாதி மதத்தினர் இங்கு வாழ்ந்திருந்தனர் என்பதை இச்செப்பேடு மூலம் அறிய முடிகிறது.
தரீசாப் பள்ளி செப்பேட்டின் காலம் கி.பி.824 என்றும், கி.பி.849 என்றும் இரு கருத்துக்கள் நிலவுகின்றன. கி.பி.849க்குப் பின் எழுதப்பட்டதாக யாரும் குறிப்பிடவில்லை. அதனால் கி.பி.849, அல்லது அதற்கு முன் எழுதப்பட்ட மானியம் (grant) என்ற கருத்தின் அடிப்படையில் ஆய்வை மேற்கொள்வோம்.
இந்த செப்பேடு மூலம் மானியம் வழங்கிய மன்னருடைய பெயரிலும் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. மன்னருடைய பெயர் நமக்கு இங்கு முக்கியமல்ல, அவர் எழுதிக் கொடுத்த ஆவணம் தான் முக்கியம். மன்னர் பெயரில் குளறுபடிகள் இருப்பதால், பெரும்பான்மையினரான ஆசிரியர்கள் ஏற்றுக் கொண்ட ‘ஸ்தாணு ரவி வர்ம்மா’ என்ற பெயரையே நாமும் ஒப்புக் கொள்வோம்.
ஸ்தாணு ரவி வர்ம்மாவின் ஆளுகைக்கு உட்பட்ட வேணாட்டின் ஆளுனரான (Governor) அய்யனடிகள் திருவடிகள், ஸ்தாணு ரவி வர்ம்மா அரியாசனம் ஏறிய ஐந்தாவது ஆண்டில் எழுதிக் கொடுத்த இந்த செப்பேட்டில் மன்னருக்காக ஆளுனரே கையொப்பம் போட்டுள்ளார். எந்த ஆண்டில் மானியம் கொடுக்கப்பட்டது என்ற குறிப்பு இதில் இல்லை. மன்னர் ஆட்சி பொறுப்பேற்ற ஐந்தாவது ஆண்டில் எழுதிக் கொடுத்தது என்று காணப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட மானியம் மூன்று செம்பு தகடுகள் (Three Plates) எழுதப்பட்டிருக்கின்றன. முதல் இரண்டு தகடுகளில் தமிழ்மொழியில் வட்டெழுத்திலும், மூன்றாவது தகடில் (Plate) மானியம் வழங்கப்பட்டதற்கான சாட்சிகளின் கையொப்பமும், முதல் இரண்டு தகட்டில் ஈசோ சபீருக்கு என்னென்ன உரிமம் வழங்கப்பட்டன. மூன்றாவது தகடில் பஹ்லவி, கூஃபி, ஈப்ரு (Pahlavi, Kuffic and Hebrew) மொழிகளில் சாட்சிகளின் கையொப்பம் காணப்படுகின்றன.
கொல்லம் நகரை நிர்மானித்து அங்கு ஒரு சிரியா கோயிலை (Syrian Church) எழுப்பிய ஈசோ சபீர் முறையாக செய்து வருகிறாரா, என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பை அஞ்சு வண்ணாத்தாரிடத்திலும் மணிக் கிராமத்தாரிடத்திலும் வழங்கியுள்ளதாக செப்பேட்டில் காணப்படுகிறது. கூடாமல் மக்களிடமிருந்து அரசுக்கு சேரவேண்டிய வரி வசூல் செய்யும் உரிமையையும் இச்செப்பேடு வழங்குகின்றது. இவ்வகையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தரிசாப்பள்ளி செப்பேட்டில் காணப்படும் மூன்று மொழிகளில் போடப்பட்ட சாட்சி கையொப்பங்களைப் பற்றி டி.ஏ. கோபிநாத ராவ் குறிப்பிடுகிறார்.
தொடரும்..
நன்றி: மக்கள் உரிமை வாரஇதழ் – ஜனவரி, 06 – 12, 2006

ஸ் பெ

unread,
May 3, 2013, 6:25:10 AM5/3/13
to panbudan

செப்பேடு தரும் செய்தி
தரிசாப்பள்ளி செப்பேட்டில் காணப்படும் மூன்று மொழிகளில் போடப்பட்டுள்ள சாட்சி கையொப்பங்களைப் பற்றி டி.ஏ. கோபிநாதராவ் பின்வருமாறு குறிப்பிடுகிறார்…
Unfortunately the missing plates are the first and last plates of second grant. They are very important because the first plate contains the name the of sovereign who granted it and the time of the granting, and the last plate bears the signatures of witnesses in Pahlavi, Kuffic and Hebrew characters which talked the emergence of great scholars like Burneld, Harg, West and Gundert to decipher.
சாட்சி கையெழுத்துப் போட்டவர்களின் பெயர்களை வாசித்துத் தெரிந்து கொள்ள பர்னல், ஹாக், வெஸ்ட், குண்டர்ட் போன்ற பெரும் அறிஞர்கள் கடும் முயற்சிகள் செய்தனர் என்று கோபிநாத ராவ் கூறுகிறார். ஆனால் அவர்களால் இப்பெயர்களை வாசித்து தெரிந்து கொள்ள முடியவில்லை. மேலும் சற்று முயன்றிருந்தால் இந்தப் பெயர்களை தெரிந்து கொள்ள முடிந்திருக்கும். சாட்சிப் பெயர்கள் முக்கியமல்ல என்ற குறுகிய நினைப்பில் முயற்சிகளைக் கைவிட்டிருக்கலாம். ஆனால் நம்மைப் பொருத்தவரையில் இவ்வாய்ப்புக்கு அப்பெயர்கள் தான் மிகமுக்கியம்.
இந்த கடைசிச் செப்பேட்டில் சாட்சிகள் கையொப்பம் போட்ட மொழிகள் பஹ்லவி, கூஃபி, ஈப்ரு ஆகியவை. கூஃபி என்பது அரேபியாவிலுள்ள கூஃபா எறும் பகுதியில் அன்று நடைமுறையில் இருந்து வந்த அரபி மொழியின் வேறு ஒரு எழுத்து வடிவமாகும். ஈப்ரு யூதர்களுடைய மொழி யூத (இஸ்ரேல்) நாட்டு மொழி.
“அண்ணல் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் காத்தே ‘கூஃபி’ எனப்படும் கூஃபா எழுத்துக்கள் (லிபி) தான் புழக்கத்தில் இருந்தன. (M.R.M.அப்துல் ரஹீம் – இஸ்லாமிய கலைக் களஞ்சியம், தொகுதி 3) முதல்முதலாக கூஃபா லிபியில் திருக்குர்ஆன் எழுதப்பட்டதாக வரலாற்று தந்தையென அறியப்படுகின்ற இப்னு கல்தூன் தம்முடைய உலகப் புகழ்பெற்ற ‘முகத்திமா’ எனும் நூலில் குறிப்பிடுகிறார். கூஃபி லிபியில் சாட்சிகள் கையொப்பம் போட்டிருப்பதாக டி.ஏ. கோபிநாத ராவ் குறிப்பிடுவதிலிருந்து கையொப்பம் போட்டவர்கள் முஸ்லிம்கள் என்று உறுதியாகின்றது. தரீசா பள்ளி செப்பேட்டில் கூஃபி லிபியில் (அரபி மொழியில்) கை ஒப்பம் போட்டவர்களுடைய பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன.
1. மைமூன் இப்னு இப்ராஹீம்
2. முஹம்மது இப்னு மானி
3. ஸால்க் இப்னு அலி
4. உதுமான் இப்னு அல்மர்சிபான்
5. முஹம்மது இப்னு யஹியா
6. அம்ரு இப்னு இப்ராஹீம்
7. இப்ராஹீம் இப்னு அல்தே
8. பஹர் இப்னு மன்சூர்
9. அல்காசிம் இப்னு ஹாமித்
10. அல்மன்சூர் இப்னு ஈசா
11. இஸ்மாயில் இப்னு யாகூப்
டாக்டர் வி.ஏ.கபீரின் ‘Muslim Momument in Kerala’ எனும் நூலில் 64வது பக்கத்தில் 1 வது இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன. தவிர, Roland E.Miller-ருடைய Mappila Muslims of Kerala எனும் ஆய்வு நூலிலும் இதே பெயர்கள் காணப்படுகின்றன. (Revised Edition 1992, Published by Orient Longman Ltd. page 43)
கிறிஸ்தவர்களுக்கு மானியம் வழங்கப்பட்ட செப்பேட்டில் முஸ்லிம்களையும் யூதர்களையும் சாட்சிகளாக்கியுள்ளனர். ஆனால் சமீப காலம் வரை இந்த செப்பேட்டைப் பற்றி ஆய்வு செய்தவர்கள் யாருமே முஸ்லிம்கள் கையொப்பம் போட்டிருப்பதாக எங்கும் குறிப்பிடவே இல்லை. காரணம், கூஃபி லிபி பிற்காலத்தில் நடைமுறையில் இல்லாததால் அவர்களால் வாசிக்க முடியாமல் இப்பெயர்களைத் தவிர்த்திருக்கலாம்.
கி.பி.1750களில் இவ்விடம் விஜயம் செய்த பிரெஞ்சு நாட்டு பயணியான ஆன்கொட்டில் டூ பேரான் (Anquetil du Perron) இந்த செப்பேட்டை ஆய்வு செய்யும் வகைக்காக, பொன்னானி மகுதூம், கொயிலாண்டி ஆகியோரிடம் இதன் நகல் இருக்குமென்ற நம்பிக்கையில் அவர்களை அணுகியதாக Walter J. Fischel கூறுகிறார். ஆனால் அந்த செப்பேட்டை (மூல செப்பேடு) பற்றி எந்தத் தகவலும் அவர்களிடமிருந்து கிடைக்கவில்லை.
இந்த செம்பேடுகளை ஆய்வு செய்த எவரும் முஸ்லிம்களின் வருகையைப் பற்றியோ, அரேபியர்களைப் பற்றியோ குறிப்பிடாமலிருந்ததற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
தொடரும்..
மக்கள் உரிமை வாரஇதழ் – ஜனவரி, 13 – 19, 2006

ஸ் பெ

unread,
May 3, 2013, 6:25:39 AM5/3/13
to panbudan

இந்தியாவில் இஸ்லாம்19,தோப்பில் முஹம்மது மீரான்

யார் அஞ்சுவண்ணத்தார்?
அஞ்சுவண்ணத்தாரைப் பற்றியும், மணிக்கிராமத்தாரைப் பற்றியும் இரண்டாவது செப்பேட்டின் முதல் பக்கத்தில் 34, 35 வரிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. அஞ்சுவண்ணமும் மணிக்கிராமமும் இரு வியாயார அமைப்புக்கள் என்பதில் வரலாற்று ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடில்லை. ஆனால் எது யாருடைய அமைப்பு என்பதில்தான் குளறுபடிகள்.
இந்த இடத்தில் சற்று நிதானமாகவும், அறிவுப்பூர்வமாகவும் இதை அணுகவேண்டும்.
அஞ்சுவண்ணம் யூதர்களுடைய வியாபார அமைப்பு (Trade Association) என்றும், மணிக்கிராமம் கிருத்தவர்களுடைய வியாபார அமைப்பு என்றும் சொல்லி முற்றுப்புள்ளி போட்டு விட்டனர். பஹ்லவி, கூபிக் ஹீப்ரு மொழிகளில் எழுதப்பட்ட செப்பேட்டில் காணப்படும் ‘கூபி’ லிபியில் எழுதப்பட்ட பெயர்களை வாசித்துப் புரிந்துகொள்ள முடியவில்லை என்று நொண்டி சாக்குக் கூறி அப்படியே விட்டுவிட்டார்கள்.
இங்கு சொல்லப்படும் வியாபார அமைப்புகளில் முஸ்லிம்களைப் பற்றியோ முஸ்லிம்களுடைய அமைப்புகளைப் பற்றியோ குறிப்பிடவில்லை. சுருங்கக்கூறின் துவக்க காலத்திலேயே வரலாற்றிலிருந்து முஸ்லிம்களைத் துடைத்து அப்புறப்படுத்துவதற்காக நடந்த பல சதித்திட்டங்களில் இதுவும் ஒன்று.
வியாபார அமைப்புக்கள் என குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சுவண்ணத்தாரையும், மணிக்கிராமத்தாரையும் அறுநூற்று பேரையும் (நாயர் அமைப்பு) ஈசோ சபீருக்கு வழங்கும் உரிமைகள் (அதிகாரங்கள்) முறையாக செய்யப்படுகின்றனவா என்று மேற்பார்வை செய்ய அதிகாரப்படுத்தியதாக செப்பேட்டில் காணப்படுகிறது. (செப்பேட்டில் 32-36 வரிகள்)
“32 க்கடவராகவும் உல்கு (கூ)ட்டுஞ்சரக்கு இவைகளை வச்சு உல்குவிடுப்பதாகவு —
33 ம் சரக்குமி (வி) லையிடுமிடத்தும் மற்றுமே ஸாமிகரியம் எக்காரியமும் 
34 வைகளைக் கூட்டியே செய்வதாகவும் அன்றன்று படுமுல்கு — அஞ்சுவண்ணமும்
35 மணிக்கிராமமும் இலக்கிச் சுவைப்பதாகவும் நாலு வாதிலகத்து —
36 ம் விலக்கும் பூமியாக காராண்மைக் கொடுக்குமெடத்து கோப்பதவாரங் —
37 கோயில ……….”
மேலேயுள்ள செப்பேட்டு வரிகளை டி.ஏ. கோபிநாத் ராவ் மொழிபெயர்த்துத் தருகிறார்.
“the levying of customs on dutiable articles should be done only in their presence. (Similarly) the apprising of articles and all other business of the Lord (The Kind) shall be done in company with their people. The Anjuvannam and the Manigramam shall take care of the customs collected every day.’ (T.A.S. Page 84)
சுங்கவரி வசூலிப்பதை அஞ்சுவண்ணத்தார்களும் மணிக்கிராமத்தார்களும் கண்காணிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதை செப்பேட்டின் 34, 35 வரிகளில் பார்த்தோம். அஞ்சுவண்ணம் யூதர்களுடைய வியாபார அமைப்பாகவும், மணிக்கிராமம் கிருத்தவர்களுடைய அமைப்பாகவும் இருப்பின், கிருத்தவரான ஈகோ சபீருக்கு வழங்கப்பட்ட மானியத்தில் கிருத்தவர்களை சாட்சிகளாகவும் கண்காணிப்பாளராகவும் நியமனம் செய்ய வாய்ப்பு இருக்காது. கிருத்தவர்களுக்கு வழங்கிய மானியத்தில் கிருத்தவர் அல்லாத வேறு மூன்று மதப்பிரிவினரைக் கொண்டு சாட்சி கையெழுத்துப் போட வைத்திருக்கின்றனர். ஈப்ரு மொழியில் கையொப்பம் போட்டவர்கள் யூதர்களும், பஹ்லவி மொழியில் கையொப்பம் போட்டவர்கள் பாரசீகத்தைச் சார்ந்த வணிகர்களும், கூஃபி லிபியில் கையொப்பம் போட்டவர்கள் அரேபியர்களான முஸ்லிம்களும் ஆவார்கள்.
இனி அஞ்சுவண்ணம் முஸ்லிம்களுடைய வியாபார அமைப்பாக இல்லாவிட்டால் கூஃபி லிபியில் கையொப்பம் போட்ட அரபி தெரிந்த வியாபாரிகள் யார்? அதில் காணப்படும் 11 முஸ்லிம் பெயர்கள் அதில் எப்படி இடம்பெற்றன? இந்த முஸ்லிம்கள் யார்? எங்கிருந்து வந்தவர்கள்? இந்தக் கேள்விகளுக்கு முன் இப்போது வரலாற்று ஆசிரியர்கள் மவுனம் சாதிக்கின்றனர். அஞ்சுவண்ணம் என்பது முஸ்லிம்களுடைய வியாபார அமைப்பை அல்லது முஸ்லிம்களைக் குறிக்கும் சொல்லாகும்.
அஞ்சுவண்ணம் என்ற பெயரில் ஒரு ஊர் இருந்ததாகவும், அவ்வூரைச் சார்ந்த மக்கள் அஞ்சுவண்ணத்தார்கள் என்று அழைக்கப்பட்டதாகவும் டாக்டர் Dr. HULTZSCH என்பவர் குறிப்பிடுகிறார். சிலர் அஞ்சுவண்ணம் என்பது யூதர்களுடைய காலனி என்ற கருத்தையும் முன்வைக்கின்றனர். கிருத்தவ மதத்திற்கு மதம் மாறி வந்த ஐந்து சாதியைத்தான் அஞ்சுவண்ணம் என்ற சொல் குறிப்பிடுவதாக திரு.வெங்கய்யா என்ற வரலாற்று ஆய்வாளர் குறிப்பிடுகிறார். திரு.வெங்கய்யா குறிப்பிடும் ஐந்து சாதியினர் 1) ஈழவர் 2) தச்சர் 3) வெள்ளாளர் 4) வண்ணார். ஐந்தாவது சாதி பெயர் கோட்டயம் செப்பேட்டில் (தரிசாபள்ளி செப்பேட்டில்) தெளிவாகத் தெரியவில்லை என்று கூறி முடித்துக் கொண்டார்.
இங்கு குறிப்பிடப்பட்ட நான்கு சாதியினரும் பெயர் தெரியாத ஐந்தாவது சாதியும் தான் அஞ்சுவண்ணத்தார் என்றால் கிருத்தவர்களாக மதம் மாறிய இவர்கள் எப்படி யூத அமைப்பாக குறிப்பிடப்பட்ட அஞ்சுவண்ணத்தார்கள் ஆனார்கள்?
மதம் மாறிய மேற்குறிப்பிட்ட ஐந்து சாதியாளர்களை ‘அஞ்சுவண்ணத்தார்’ என்று ஏற்றுக்கொள்வோமேயானால் யூதர்களுடைய அமைப்பாக சொல்லப்படும் அஞ்சுவண்ணம் எது?
தொடரும்…
மக்கள் உரிமை வாரஇதழ் – ஜனவரி, 20 – 26 , 2006

ஜெஹபர் அலி

unread,
May 4, 2013, 2:29:02 AM5/4/13
to பண்புடன்
பகிர்வுக்கு நன்றி ஸ்.பெ.


2013/5/3 ஸ் பெ <stalinf...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 



--

என்றும் அன்புடன்

அபு ஹஸ்மியா (ஜெகபர் அலி)

ஆசாத்

unread,
May 4, 2013, 3:06:21 AM5/4/13
to panb...@googlegroups.com
இனிய ஸ்பெஜி, 

பகிர்ந்தமைக்கு நன்றி.

இப்போதைக்கு படிக்க இயலாதென்றே நினைக்கிறேன். ஜூலைக்குப் பின் நிச்சயம் படிப்பேன். 

அன்புடன்
ஆசாத்

Ramesh Murugan

unread,
Jun 16, 2013, 2:07:51 AM6/16/13
to பண்புடன்
புதுகை அப்துல்லா கூகிள்+ ல் பகிர்ந்த ஒரு செய்தியை படிச்சிட்டு ஃபீலிங்ல இருக்கேன் :(


--
என்றும் அன்புடன்,
ரமேஷ்

---

Sent via Epic Browser

மோரு

unread,
Jun 16, 2013, 3:14:55 AM6/16/13
to பண்புடன்
எதுவா இருந்தாலும் இங்க எடுத்து போடுடே

2013/6/16 Ramesh Murugan <rames...@gmail.com>

புதுகை அப்துல்லா கூகிள்+ ல் பகிர்ந்த ஒரு செய்தியை படிச்சிட்டு ஃபீலிங்ல இருக்கேன் :(




--


அன்போடு

மோரு

”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும் படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”

Ramesh Murugan

unread,
Jun 16, 2013, 3:23:56 AM6/16/13
to பண்புடன்
Shared publicly4:36 AM
நேற்று இரவு நண்பர் ஒருவரின் அழைப்பின் பேரில் விருந்திற்காகச் சென்றிருந்தேன். அங்கு எனது நீண்டநாள் நண்பர் ஒருவர் தனது 4 ஆம் வகுப்பு படிக்கும் பேத்தியுடன் நின்று பஃபேயில் உணவருந்திக்கொண்டு இருந்தார். பல நாட்களுக்குப் பிறகு அவரைச் சந்தித்த மகிழ்ச்சியில் அவர் அருகில் சென்று நலம் விசாரிக்கத் துவங்கினேன். அருகில் இருந்த பேத்தியிடம் "இவரு அப்துல்லா அங்கிள். தாத்தாவோட ஃபிரண்டு." என்று அவளிடம் அறிமுகம் செய்து வைத்தார். அவள் படிப்பு உள்ளிட்ட விசயங்களை அவளிடம் விசாரித்துவிட்டு அவரிடம் , "நீங்க மட்டும் வந்து இருக்கீங்க? அண்ணி வரலையாண்ணா?" என்று கேட்டேன். அருகில் இருந்த பேத்தி அவரிடம் இவர் அண்ணின்னு யாரைச் சொல்றார்? என்று கேட்டாள். அவர் 'உங்க பாட்டியைச் சொல்றார்டா குட்டி! இவர் எப்பவும் என்னைய அண்ணான்னும்,பாட்டியை அண்ணின்னும்தான் கூப்பிடுவார்!' என்று மகிழ்வோடும்,பெருமையோடும் சொன்னார். பட்டென்று அந்த சிறுபெண் "பரவாயில்லையே!! முஸ்லீம்ஸ்கெல்லாம் கூட பண்பு இருக்கே!!" என்றாள். அவர் உடனடியாக தனது பேத்தியைத் திட்டத் துவங்கிவிட்டார். நான் அவரைப் பொறுமைப்படுத்தி அவளிடம் "முஸ்லீம்களுக்கு பண்பு இருக்காதுன்னு யாருடா உங்கிட்ட சொன்னது?" என்று சிரித்தபடி கேட்டேன். அவளுக்கு அதற்கு பதில் சொல்லத் தெரியவில்லை. நண்பரின் அப்செட் மூடை மாற்றும் விதமாக நானும் அதோடு அந்தப் பேச்சை நிறுத்திவிட்டு வேறு பேச்சுகளுக்கு மாறிவிட்டேன். 4 வது படிக்கும் சிறுமி எனும்போது 9 அல்லது 10 வயதுதான் இருக்கும். இந்த வயதில் பண்பு என்ற வார்த்தையையும், அதன் அர்தத்தையும் பள்ளியோ,வீடோ போதித்து இருக்கும். ஆனால் இஸ்லாமியர்களுக்கு பண்பு இருக்காது என்ற நஞ்சை இந்த வயதில் அவளுக்கு போதித்தது யார்?? பொதுவாக நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் எனக்கு துணிச்சல்காரன் என்ற பெயர் உண்டு. மிகவும் பயப்படுகிறேன் இந்த தேசம் போகும் திசை கண்டு.


- இதுல யார்மேலையும் பழி போடுறதுல எனக்கு உடன்பாடு இல்ல. ஆனா, இந்த வேறுபாடு கிட்டதட்ட எல்லா படிச்சவங்க வீட்டுக்குள்ளேயும் இருக்குன்னு தெரிஞ்சப்ப கவலையாயிடிச்சி :((

என் வீட்டுல மீன் தொட்டி இருக்கு. அதைப் பார்க்க அடிக்கடி எதிர்வீட்டு பொண்ணும் (பாகிஸ்தான் பெண் குழந்தை), பக்கத்து வீட்டு பொண்ணும்/பையனும் (கேரள பசங்க) வருவாங்க. குழந்தைகள் பேசிக்குவாங்க. கிட்டதட்ட இதே மாதிரியான் சம்பவம் நடந்தது. ஆனா கேட்டது பாகிஸ்தான் குழந்தை இந்திய குழந்தையைப் பார்த்து.

எல்லாரும் கலந்து வாழுற, நன்கு படித்த பெற்றோர் & நண்பர்களுடன் வாழுற குழந்தைகளுக்கு இந்த மாதிரி கருத்து எங்கிருந்து வருதுன்னு நினைச்சப்ப திகிலா இருந்தது.

புதுகை அப்துல்லா இதை பகிர்ந்தப்ப, நம்ம ஊருலையும் இந்த நிலமைதானான்னு நொந்துக்கிட்டேன் :(

2013/6/16 மோரு <mors...@gmail.com>

எதுவா இருந்தாலும் இங்க எடுத்து போடுடே

//

தமிழ்ப் பயணி

unread,
Jun 16, 2013, 5:08:41 AM6/16/13
to பண்புடன்
ஆனால் இஸ்லாமியர்களுக்கு பண்பு இருக்காது என்ற நஞ்சை இந்த வயதில் அவளுக்கு போதித்தது யார்?? பொதுவாக நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் எனக்கு துணிச்சல்காரன் என்ற பெயர் உண்டு. மிகவும் பயப்படுகிறேன் இந்த தேசம் போகும் திசை கண்டு.

மிகவும் வருந்த தக்க விசயம். வருங்காலத்தில் இதன் வி​ளைவுகள் அவ்வளவு நல்லதாக இருக்க ​போவதில்​லை.

- இதுல யார்மேலையும் பழி போடுறதுல எனக்கு உடன்பாடு இல்ல. ஆனா, இந்த வேறுபாடு கிட்டதட்ட எல்லா படிச்சவங்க வீட்டுக்குள்ளேயும் இருக்குன்னு தெரிஞ்சப்ப கவலையாயிடிச்சி :((

ஊடக வழியான ​மெய்நிகர் (virtual) வாழ்​வே நிசம் என்ற ​போலி வாழ்வில் அதில் வரும் ​செய்திக​ளே இறுதியான உண்​மைகளாக வருங்கால
த​லைமு​றையினரால் தவறாக எடுத்து ​கொள்ள படுகிறது. சமூகத்தினுள் பிறருடன் பழகுதல் என்ற பழக்க வழக்க​மே இல்லாது ​போய் வருகிறது.
குழந்​தைகளுக்கு ​அவரவருக்கு என்ற ​சொந்த கருத்​தோ அல்லது அனுபவங்க​ளோ கி​டைக்க இயலாத வறண்ட சூழலில் வளர்ப்பு நிகழ்வ​தே இதற்க்கு ​பெரும்பான்​மையான காரணம்.


2013/6/16 Ramesh Murugan <rames...@gmail.com>

நேற்று இரவு நண்பர் ஒருவரின் அழைப்பின் பேரில் விருந்திற்காகச் சென்றிருந்தேன். அங்கு எனது நீண்டநாள் நண்பர் ஒருவர் தனது 4 ஆம் வகுப்பு படிக்கும் பேத்தியுடன் நின்று பஃபேயில் உணவருந்திக்கொண்டு இருந்தார். பல நாட்களுக்குப் பிறகு அவரைச் சந்தித்த மகிழ்ச்சியில் அவர் அருகில் சென்று நலம் விசாரிக்கத் துவங்கினேன். அருகில் இருந்த பேத்தியிடம் "இவரு அப்துல்லா அங்கிள். தாத்தாவோட ஃபிரண்டு." என்று அவளிடம் அறிமுகம் செய்து வைத்தார். அவள் படிப்பு உள்ளிட்ட விசயங்களை அவளிடம் விசாரித்துவிட்டு அவரிடம் , "நீங்க மட்டும் வந்து இருக்கீங்க? அண்ணி வரலையாண்ணா?" என்று கேட்டேன். அருகில் இருந்த பேத்தி அவரிடம் இவர் அண்ணின்னு யாரைச் சொல்றார்? என்று கேட்டாள். அவர் 'உங்க பாட்டியைச் சொல்றார்டா குட்டி! இவர் எப்பவும் என்னைய அண்ணான்னும்,பாட்டியை அண்ணின்னும்தான் கூப்பிடுவார்!' என்று மகிழ்வோடும்,பெருமையோடும் சொன்னார். பட்டென்று அந்த சிறுபெண் "பரவாயில்லையே!! முஸ்லீம்ஸ்கெல்லாம் கூட பண்பு இருக்கே!!" என்றாள். அவர் உடனடியாக தனது பேத்தியைத் திட்டத் துவங்கிவிட்டார்.

--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"மனிதர்களின் குறைபட்ட புரிதல்களை உள்ளபடியே எடுத்துக் கொண்டு அவற்றை மகத்தான மதங்களின் உண்மையான போதனைகளாக நினைக்க வேண்டாம். abcxyz உலகம் இப்போது சகோதரத்துவத்துடன் வாழ்கிறது என்று நீங்கள் என்னிடம் சொல்வீர்களா என்ன? அதன் போர்களையும் வெறுப்புகளையும் ஏழ்மையையும் அதன் குற்றங்களையும் நினைத்துப் பாருங்கள்."
- மகாத்மா காந்தி - காந்தி எனும் மனிதர்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Asif Meeran AJ

unread,
Jun 16, 2013, 10:29:35 AM6/16/13
to பண்புடன்
இதில் பெரும்பங்கு பெரியவர்களிடம், பெற்றவர்களிடம் இருக்கிறது
தங்களது நம்பிக்கையின்மையைக் குழந்தைகளிடம் நகர்த்துவதில் நமம்வர்கள்
காட்டும் முனைப்பு அபரிமிதமானது

குழந்தைகளுக்கு மனிதத்தைச் சொல்லி வளர்ப்பது முக்கியமானது
என் மகன் பள்ளியிலிருந்து வந்து பேசிக் கொண்டிருக்கும்போது. ‘முஸ்லிம்கள்
பொய் சொல்லக் கூடாது’ என்று சொன்னான். அது அவனது இசுலாமிய வகுப்பில்
அவனது ஆசிரியை சொல்லிக் கொடுத்த பாடம். அதில் பெரிய விசயமேதுமில்லை

ஆனால் நான் அவனிடம் முஸ்லிம்கள் மட்டுமல்ல. மனிதர்களாகப் பிறந்த எவருமே
பொய் சொல்லக் கூடாது. யாராக இருந்தாலும் பொய் சொல்வது நல்ல பழக்கமில்லை என்றேன்
இதனை உணர்த்த வேண்டிய கடமை பெற்றோர்களுக்கு நிச்சயம் இருக்கிறது

(எல்லாம் சரி. இதைச் சொல்லி முடித்ததும் எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது
‘நான் அலுவலகத்தில் இருப்பதாக வீட்டில் இருந்து கொண்டே சொன்னேன் அழைத்தவரிடம்
என் பையன் என்னைப் பார்த்தான். யாராக இருந்தாலும் பொய் சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டு
நீங்க மட்டும்.. என்பது போலிருந்தது அந்தப் பார்வை

மோரு

unread,
Jun 16, 2013, 10:40:54 AM6/16/13
to பண்புடன்
​தனி மனிதனை விட்டு ஏதோ ஒரு பொதுமைப்படுத்தும் உறை போட்டு இவன் இப்படித்தான்னு முடிவு பண்ணுறது ஒரு நவீன தீண்டாமை எனலாமா?​

2013/6/16 Ramesh Murugan <rames...@gmail.com>

பொதுவாக நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் எனக்கு துணிச்சல்காரன் என்ற பெயர் உண்டு. மிகவும் பயப்படுகிறேன் இந்த தேசம் போகும் திசை கண்டு.

மோரு

unread,
Jun 16, 2013, 10:42:39 AM6/16/13
to பண்புடன்
சென்றவார சித்து அண்ணன் சந்திப்பில்தான் சொல்லிக்கொண்டிருந்தேன் பெயரை வைத்து இஸ்லாமியன் என்று கருதப்பட்டதாலே எனக்கு வந்த இடர்பாடுகளை பற்றி.

ஒருவேளை இஸ்லாமியராக இருந்திருந்தால் இன்னும் நிறைய இருந்திருக்கும் போல :-(

Ramesh Murugan

unread,
Jun 16, 2013, 10:43:29 AM6/16/13
to பண்புடன்
மோரு,
இந்த விசயத்தில் இந்து முஸ்லீம் என யாரும் விதிவிலக்கல்ல. குழந்தைகளிடம் பல பெற்றோர் பிற மதத்தைப்பற்றி தவறாக சொல்லியே வளர்க்கிறாங்க. நம்ம ஊருல அப்படி இல்லைனு நினைச்சுக்கிட்டு இருந்தேன். அப்துல்லாவோட பதிவை படிச்சதும் கொஞ்சம் கவலையாயிடிச்சி அம்புட்டுதான்.

2013/6/16 மோரு <mors...@gmail.com>

​தனி மனிதனை விட்டு ஏதோ ஒரு பொதுமைப்படுத்தும் உறை போட்டு இவன் இப்படித்தான்னு முடிவு பண்ணுறது ஒரு நவீன தீண்டாமை எனலாமா?​

மோரு

unread,
Jun 16, 2013, 10:50:55 AM6/16/13
to பண்புடன்
ராசா இந்த விஷயத்துல மதத்த பத்தி தப்பு தப்பா சொல்லி வளக்குறாங்களோ இல்லையோ சாதியை பத்தி இன்ன சாதி இப்படின்னு சொல்லி வளக்குறாங்க.


2013/6/16 Ramesh Murugan <rames...@gmail.com>

மோரு,
இந்த விசயத்தில் இந்து முஸ்லீம் என யாரும் விதிவிலக்கல்ல.

Jaisankar Jaganathan

unread,
Jun 16, 2013, 10:53:55 AM6/16/13
to panb...@googlegroups.com
இந்தியாவுல இஸ்லாமை பத்தி தவறா நினைத்தால் முஸ்லீம் நாடுகளில் நம்மைப்பற்றி தவறாக நினைப்பார்களா? அண்ணாச்சி விளக்கம் தரவும். 

Ramesh Murugan

unread,
Jun 16, 2013, 10:54:37 AM6/16/13
to பண்புடன்
மோர்,
ஜாதி குழந்தைகளை பெருசா பாதிக்கிறதில்ல. அல்லது அதைப் பற்றி அவங்க கேர் பண்ணினதா எனக்கு தெரியல.

ஆனா மதத்தைப் பற்றிய வேறுபாடுகள் / சந்தேகங்கள் பள்ளி நாட்களிலே எல்லாருக்கும் தெரிய ஆரமிச்சிடுது. அதைப் பற்றி பெரியவங்க நல்ல விதமா சொல்லி வளர்த்தா நல்லா இருக்கும்.

2013/6/16 மோரு <mors...@gmail.com>
ராசா இந்த விஷயத்துல மதத்த பத்தி தப்பு தப்பா சொல்லி வளக்குறாங்களோ இல்லையோ சாதியை பத்தி இன்ன சாதி இப்படின்னு சொல்லி வளக்குறாங்க.

Sahul Hameed Usman

unread,
Jun 17, 2013, 1:39:21 AM6/17/13
to panb...@googlegroups.com
 
 
4 - 5 குழுமம் வச்சிருக்கவன்லாம் சந்தோஷமா சிரிச்சிட்டு இருக்காங்க
 
இந்த ஒரு   குழுமத்தை வைச்சுட்டு பக்கிகளுக்கு ஆன்சர் பண்ணுறது இருக்குதே
 
அய்யய்யய்யோ
 
 
--- இப்படிக்கு அண்ணாச்சி -----   (ஜெ ஜெ உங்களுக்குத்தான்)
 
 
 
 
 
 
2013/6/16 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>




--
இப்படிக்கு 
ஷாகுல் ஹமீது 

Reply all
Reply to author
Forward
0 new messages