ஏசுநாதரின் வாழ்க்கை வரலாறும் புராண கதாப்பாத்திரங்களின் கதைகளும்
சுட்டது :http://ivaryaar.blogspot.in/2013/03/blog-post_23.html?showComment=1422953680524#c7126253597332776052
டாவின்சி கோட் வெளியாகி ஒரு வருடத்திற்குள் கிறிஸ்தவத்திற்கு எதிராக எழுந்த
இன்னொரு திரைப்படம் 'செய்கிஸ்ட்'. ஏசுநாதரின் வாழ்க்கை வரலாறு பண்டைய
புராணக் கதாபாத்திரங்களின் கதைகளை இணைத்து உருவாக்கப்பட்டது என்று
அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகிறது இத்திரைப்படம். டாவின்சி
கோட் போட்ட புதிருக்கு விடை தந்து ஓய்ந்த கிறிஸ்தவர்கள் மீண்டும் பட்டயத்தை
எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவானது.
 |
| யூதாசின் மறுதலிப்பு |
ஹோரஸ், மித்ரா, டைநோசிஸ், கிருஷ்ணா போன்ற பண்டைய புராண
கதாப்பாத்திரங்களின் கதைகளை இணைத்து உருவாக்கப்பட்டதே ஏசுநாதரின் வாழ்க்கை
வரலாறு என்று இத்திரைப்படம் கூறுகிறது. செய்கிஸ்ட் விடுத்த
குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதில்கள் இப்பதிவில் உள்ளன.
ஏசுநாதரின் வாழ்கையை புராண கதைகளுடன் ஒன்றிணைக்க மேலோட்டமான
வாதங்களையும் ஏமாற்று செய்திகளையும் இத்திரைப்படம் முன்வைக்கிறது என்பதே
உண்மை... வாருங்கள் காண்போம்.
1) ஏசுநாதரின் வாழ்க்கையும் ஹோரஸின் புராண கதையும் ஒன்றா?
 |
| ஹோரஸ் |
செய்கிஸ்ட் கூறும் ஒப்பீடு:
பண்டைய எகிப்து தேசத்தில் தெய்வமாக வழிபடப்பட்ட புராண கதாப்பாத்திரம் தான்
ஹோரஸ். ஹோரஸ் டிசம்பர் 25 அன்று கன்னித்தாயிடம் பிறந்தார். அவர் பிறந்த
போது மூன்று ஞானிகள் குழந்தை ஹோரஸை காண வந்தனர். ஹோரஸ்
பன்னிரெண்டாம் வயதிலே தன் ஞானத்தை வெளிப்படுத்தி ஆச்சிரயப்படுத்தினார்.
அவருக்கு 12 சீடர்கள் இருந்தனர். அதன் பின் அவர் சிலுவையில் அறையப்பட்டு
மூன்றாம் நாள் உயிர்தெழுந்தார். ஆக ஏசுநாதரின் வாழ்க்கை ஹோரஸின் புராண
கதையை வைத்து உருவாக்கப்பட்டது என்கிறது செய்கிஸ்ட்.
உண்மை என்ன?
ஏசுநாதரின் வாழ்க்கை ஹோரசின் புராண கதையை வைத்து எழுதப்பட்டது அல்ல.
ஏசுநாதரின் வாழ்கையை வைத்து ஹோரசிற்கு புதிய கதையை செய்கிஸ்ட் கூறுகிறது.
அ) ஹோரஸ் டிசம்பர் 25ஆம் தேதி பிறந்தவரா?
முதலாவதாக இயேசு டிசம்பர் 25 அன்று தான் பிறந்தார் என்று பைபிள் கூறவில்லை.
இயேசு நாதரின் பிறந்தநாள் எது என்பது பற்றி எந்த வித ஆதாரப் பூர்வமான
சான்றுகளும் இல்லை. டிசம்பர் 25 ஏசுநாதரின் பிறப்பை நினைவு
கூறுவதற்காகவே கிறிஸ்துமஸ் பண்டிகையாக அனுசரிக்கப்படுகிறது. மேலும் ஹோரஸ்
டிசம்பர் 25 பிறந்தார் என்று செய்கிஸ்ட் கூறுவதும் உண்மையல்ல. எகிப்திய
புராணங்கள் ஹோரஸ் கொய்யக் என்ற மாதத்தில் பிறந்ததாக கூறுகிறது. எகிப்திய நாள்காட்டியில் 'கொய்யக்' அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நிகழ்கின்றது. எனவே ஹோரஸின் பிறந்தநாள் டிசம்பர் 25 அல்ல. செய்கிஸ்டின் கூற்று உண்மையற்றது.
ஆ) ஹோரஸ் கன்னி தாயிடம் பிறந்தவரா?
ஹோரஸ் பிறப்பதற்கு முன்பே ஹோரசின் தந்தை ஒரிசிஸ் இறந்துவிட்டார். எனவே ஹோரசின் தாயான இசிஸ் இறந்த தன் கணவனின் உடலோடு புணர்ந்து கர்ப்பந்தரித்து ஹோரசை பெற்றெடுத்தார் என்று எகிப்திய புராணங்கள் கூறுகின்றன. இதற்கு பெயர் கன்னி பிறப்பா?
இ) மூன்று ஞானிகள் குழந்தை ஹோரசை காண வந்தனரா?
செய்கிஸ்ட் எவ்வாறு ஹோரசை குறித்து இவ்வாறு கூறியது என்று சரித்திரவான்கள்
குழம்பி வருகின்றனர். ஏனெனில் இச்செய்தியை குறித்து செய்கிஸ்ட் எந்த
ஆதரங்களையும் சமர்ப்பிக்கவில்லை. ஹோரசின் புராண கதைகளிலும் மூன்று ஞானிகள் குழந்தை ஹோரசை காண வந்ததாக செய்திகள் இல்லை. செய்கிஸ்டின்
இந்த கூற்றும் உண்மையல்ல. ஏசுநாதரை காண வந்த ஞானிகள் எத்தனை பேர் என்று
சுவிசேஷங்கள் கூறவில்லை. பொன், தூபவர்க்கம், வெள்ளைப்போளம் ஆகியவற்றை
குழந்தை ஏசுவிற்கு பரிசுகளாக வைத்து சென்றதாகவே கூறுகின்றன. இச்சம்பவம்
நிகழ்ந்த போது இயேசு ஒரு வயதை கடந்திருந்தார்.
ஈ) ஹோரஸ் தன் பன்னிரெண்டாம் வயதில் தன் ஞானத்தை வெளிப்படுத்தினாரா?
இயேசு தன் 12ஆம் வயதில் ஆலய குருக்களை வியக்க வைக்கும் படி போதனை வழங்கினார் என்று வேதம் கூறுகிறது. ஹோரஸ் குறித்த இச்செய்தி அடங்கியுள்ள குறிப்பு காலத்தால் பிந்தியது. சுவிசேஷத்திற்கு முந்திய எந்த குறிப்புகளையும் செய்கிஸ்ட் சமர்ப்பிக்கவில்லை.
உ) ஹோரசிற்கு 12 சீடர்கள் இருந்தனரா?
பெரும்பாலான எகிப்திய புராணங்கள் ஹோரசின் சீடர்களின் எண்ணிக்கை என்ன என்று
கூறவில்லை. சில ஹோரசிற்கு 4 சீடர்கள் இருந்ததாக கூறுகின்றன. எவ்விடத்திலும் ஹோரசிற்கு 12 சீடர்கள் இருந்தனர் என்ற குறிப்பு இல்லை.
ஊ) ஹோரஸ் சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தாரா?
செய்கிஸ்ட் கூறிய இன்னொரு பொய் இது. ஹோரஸ் சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்ததாக எந்த குறிப்புகளும் இல்லை. ஹோரசின் புராண கதைகள் எழுதப்பட்ட காலத்தில் சிலுவை தண்டனைகளே இல்லை.
ஹோரசின் புராண கதைகள் எழுந்து கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்களுக்கு பின்பு
தான் சிலுவை தண்டனைகள் நடைமுறைக்கு வந்தன. மேலும் சிலுவை தண்டனைகளை
நடைமுறைப்படுத்தியவர்கள் ரோமர்கள். எகிப்தியர்கள் அல்ல.
ஹோரசின் புராண கதைகளுக்கும் ஏசுநாதரின் வாழ்க்கை வரலாறுக்கும் செய்கிஸ்ட் போடும் பாலங்கள் உறுதியற்றவை.
2) ஏசுநாதரின் வாழ்க்கை மித்ராஸ் புராண கதையை வைத்து எழுதப்பட்டதா?
செய்கிஸ்ட் கூறும் ஒப்பீடு:
மித்ராஸ் முதல் நூற்றாண்டில் ரோமர்களால் வணங்கப்பட்ட பேகன்
தெய்வம். கன்னித்தாயிடம் டிசம்பர் 25 அன்று பிறந்த மித்ராவை மேய்ப்பர்கள்
கண்டு தொழுதனர். அதன் பின் மித்ராசுக்கு 12 சீடர்கள் உண்டாயினர்.
இறுதியில் மித்ராஸ் சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாளில்
உயிர்த்தெழுந்தார். ஏசுநாதரின் வாழ்க்கை வரலாறு மித்ராசின் புராண
கதையை வைத்து உண்டாக்கப்பட்டதே என்கிறது செய்கிஸ்ட்.
உண்மை என்ன?
அ) மித்ராஸ் கன்னியிடம் பிறந்தவரா?
முதலில் மித்ராவிற்கு தாயே இல்லை. மித்ராஸ் பாறையில் இருந்து தோன்றியவர்.
ஆ) மித்ராஸ் டிசம்பர் 25 அன்று பிறந்தவரா?
புராணங்கள் மித்ராவின் பிறந்த நாள் என்ன என்பது குறித்து எந்த குறிப்பும்
தராத போது மித்ராவின் பிறந்த நாள் எப்படி டிசம்பர் 25 ஆகும்?
இ) மித்ராஸ் பிறந்த போது மேய்ப்பர்கள் தொழுது கொண்டனரா?
செய்கிஸ்ட் மேலே காட்டப்பட்டுள்ள சிற்பத்தை ஆதாரமாக சமர்ப்பித்து மித்ரா பிறந்த போது மேய்ப்பர்கள் அவரை தொழுது கொண்டதாக கூறுகிறது. நான்காம் நூற்றாண்டை சார்ந்த சிற்பம் அது. ஏசுநாதரின் சுவிசேஷங்கள் முதல் நூற்றாண்டில் எழுதப்பட்டன. இடையில் உள்ள 300 ஆண்டுகளை எந்த கணக்கில் சேர்ப்பது?
ஈ) மித்ராவிற்கு 12 சீடர்கள் இருந்தனரா?
இதற்கென இன்னொரு சிற்பத்தை செய்கிஸ்ட் சமர்ப்பிக்கிறது. மித்ராவை சுற்றி
காணப்படும் பன்னிரண்டு உருவங்கள் மித்ராவின் சீடர்கள் என்கிறது செய்கிஸ்ட்.
உண்மை என்ன? அவை மித்ராவின் சீடர்கள் அல்ல. மேஷம் முதல் மீனம் வரையிலான ராசி குறியீடுகள். பேகன் மதங்களில் ராசி சின்னங்கள் தெய்வங்களை சுற்றி செதுக்கப்படுவது வழக்கமே.
உ) மித்ரா சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தாரா?
செய்கிஸ்ட் ஏசுநாதரின் வரலாறை வைத்து மித்ராவிற்கு புது கதை எழுதி உள்ளது.
புராணங்கள் மித்ரா இறக்கவில்லை என்றும் உயிரோடு தேரின் மீது அமர்ந்து
வானத்திற்கு சென்றுவிட்டதாகவும் கூறுகின்றன. பைபிளில் காணப்படும் எலியாவின்
கதை இது. மித்ராவிற்கு 800 ஆண்டுகளுக்கு முன்பே எலியாவின் வாழ்க்கை
வரலாறுகள் எழுதப்பட்டன.
ஏசுநாதரை மித்ராவுடன் இணைக்க செய்கிஸ்ட் போட்ட வீண் முடிச்சுகள் இவைகளே.
3) ஏசுநாதரின் வரலாறு டைநோசிஸ் புராண கதைகளை கடன் வாங்கி உள்ளதா?
குற்றச்சாட்டு:

டைநோசிஸ்
கிரேக்கர்களாலும் ரோமர்களாலும் திராட்சை ரசத்தின் தெய்வம் என்று
போற்றப்பட்டவர். டிசம்பர் 25 அன்று கன்னித்தாயிடம் பிறந்த இவர் சிலுவையில்
அறையப்பட்டு இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்றும் டைநோசிஸ்
கதையை கடன் வாங்கி ஏசுநாதரின் வரலாறு எழுதப்பட்டது என்றும் செய்கிஸ்ட்
கூறுகிறது.
ஏசுநாதரின் திருரத்தத்திற்கு அடையாளமாய் திராட்சை ரசம் கருதப்படுகிறது.
மேலும் கானா ஊர் கலியாணத்தில் இயேசு தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றினார்.
இந்த சங்கதிகள் எல்லாம் டைநோசிஸின் புராண கதைகளில் இருந்து எடுக்கப்பட்டவை
என்று செய்கிஸ்ட் கூறுகிறது. இதனை செய்கிஸ்ட் தானாய் கூறவில்லை. ஏற்கனவே
'தி ஜீசஸ் மிஸ்டரீஸ்' என்ற நூல் இவ்வாறு ஏசுநாதருக்கும் டைநோசிசிற்கும்
ஒப்பீடு செய்தது. கீழுள்ள சிற்பத்தில் சிலுவை வடிவத்திற்கு கீழ் 'பச்சுஸ்'
என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. டைநோசிசின் மற்றொரு பெயர் 'பச்சுஸ்'.
டைநோசிஸ் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றினார் என்று 'லியூசிப் அண்ட்
கிளிடோபான்' என்ற ஒரு நூல் கூறுகிறது. எனவே டைநோசிசின் கதைகளை கிறிஸ்தவம்
தன்னுடன் இணைத்து கொள்கிறது என்று இந்நூல் கூறுகிறது. முதல் நூற்றாண்டில்
வாழ்ந்த ஜஸ்டின் என்ற பேகன் இனத்தவர் கிறிஸ்தவத்தை தழுவினார். கிறிஸ்தவம்,
பேகன் மதம் ஆகிய இரண்டிற்கும் உள்ள சில ஒற்றுமைகளை ஜஸ்டின் தன் நூலில்
தெரிவித்துள்ளார். ஜஸ்டினின் கூற்றுகள் பலவற்றை தன் நூலில் எடுத்துக்காட்டி
ஏசுநாதரின் வரலாறுகள் டைநோசிசின் புராண கதைகளை வைத்து எழுதப்பட்டது என்று
'தி ஜீசஸ் மிஸ்டரீஸ்' வாதாடுகிறது.
பதில்கள்:
அ) "டைநோசிஸ் கிரேக்கர்களாலும் ரோமர்களாலும் திராட்சை ரசத்தின் தெய்வம் என்று போற்றப்பட்டவர்"
பண்டைய கிரேக்கர்கள் இடி, மின்னல், காற்று, அறுவடை, இயற்கை, கடல், காடு,
கல், திராட்சை ரசம், தீ, மண், நீர் என்று ஒரு பொருளை கூட விடவில்லை.
காற்றிற்கு கடவுள் இவர், இடிக்கு கடவுள் அவர், காதலின் தெய்வம் அது,
திராட்சை ரசத்தின் தெய்வம் இது என்று ஒவ்வொன்றிற்கும் ஒரு கடவுளை உருவாக்கி
புராண கதைகளை எழுதி வந்தனர். தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றிய இயேசு நீரின்
மீதும் நடந்துள்ளார், புயலை அடக்கியுள்ளார். கிரேக்கர்கள் நீருக்கும்,
புயலுக்கும் கூட கடவுளை உருவாக்கி வைத்திருந்தனர்.
கிரேக்கர்கள் ஒரு பொருளை கூட விட்டு வைக்காத போது எதில் தான் இயேசு நாதரால் அற்புதங்களை நிகழ்த்த முடியும்?
ஆ) "டிசம்பர் 25 அன்று கன்னித்தாயிடம் பிறந்தவர் டைநோசிஸ்"
டைநோசிசின் தந்தை சியஸ் பாதாளத்தின் ராணி என்று கிரேக்கர்களால் போற்றப்பட்ட
பிரஸ்போனை கருவுறச் செய்தார். இவர்கள் இருவருக்கும் பிறந்தவரே டைநோசிஸ் என
கிரேக்க புராணங்கள் கூறுகின்றன. இதனை எப்படி கன்னி பிறப்பு என்று
செய்கிஸ்ட் கூறியது என்பது விளங்கவில்லை.
டிசம்பர் 25 அன்று டைநோசிஸ் பிறந்தார் என்பதற்கு கிறிஸ்தவ மரபிற்கு முந்திய ஒரு ஆதாரத்தை கூட செய்கிஸ்ட் சமர்பிக்கவில்லை.
இ) "பச்சுஸ் பெயர் பொறிக்கப்பட்ட சிலுவை குறியீடு & டைநோசிஸ் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றிய அற்புத செயல்"
"கிறித்தவத்துக்கு முற்பட்ட காலத்தில்
ஏற்கப்பட்டிருந்த சமயக் கொள்கைகளையும் கிறித்தவத்திலிருந்து கடனாகப் பெற்ற
சில கொள்கைகளையும் இணைத்ததால் உருவானதே ஞானக் கொள்கை. இவ்வாறு உருவான ஞானக்
கொள்கை கிறித்தவ மரபுக் கொள்கைக்குப் பல விதங்களில் எதிர்ப்பாக அமைந்தது.
அந்த மோதலின் விளைவாக, கிறித்தவம் தன் கொள்கைகளைத் துல்லியமாக வரையறுக்கும்
வாய்ப்புப் பிறந்தது" - தமிழ் விக்கி
கிறிஸ்தவம் முதல் நூற்றாண்டில் மிக வேகமாக பரவி வந்தது. கிறிஸ்தவ சுவிசேஷ
போதனைகளால் பல பேகன் மதங்கள் மக்களால் கைவிடப்பட்டு அழியத் தொடங்கின. எனவே
சில பேகன் இனத்தவர்கள் கிறிஸ்தவ போதனைகளால் தங்கள் நம்பிக்கைகள் அழிவுறாமல்
இருக்க 'ஞான உணர்வு' என்ற கொள்கையை போதிக்கலாயினர். அதன் படி பேகன்
நம்பிக்கைகளை கிறிஸ்தவ கொள்கைகளோடு இணைத்து போதித்து தங்கள் நம்பிக்கைகளை
காத்து கொள்ள முயன்றனர். இந்த கொள்கையை முதல் நூற்றாண்டில் இருந்தே
சீடர்களும், திருச்சபை தந்தைகளும் கண்டித்து வந்தனர்.
"ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில்
ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக் கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும்,
ஞானம் என்று பொய்யாய்ப் பேர் பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும்
விலகு" - 1 தீமோத்தேயு 6:20
இதன் படி ஏசுநாதரின் அற்புதங்களை, வரலாறுகளை டைநோசிசுடன் இணைத்தனரே அன்றி டைநோசிசின் புராண கதைகளை கிறிஸ்தவம் கடன் வாங்கவில்லை.
- பச்சுஸ் பெயர் பொறிக்கப்பட்ட சிலுவை குறியீடு கி.பி 300-க்கு பின்
செதுக்கப்பட்டது. இயேசு நாதர் பற்றிய சுவிசேஷ நூல்கள் கி.பி 100-க்குள்
எழுதி முடிக்கப்பட்டன.
- யோவான் சுவிசேசம் 'லியூசிப் & கிளிடோபான்' குறிப்பிற்கு முன்பு எழுதப்பட்டது. கடன் வாங்கியது யார்?
ஈ) "பேகன் மதத்திற்கும் கிறிஸ்தவத்திற்கும் சில ஒற்றுமைகள் உண்டு" - ஜஸ்டின்
ஜஸ்டின் எழுதியுள்ள இன்னொரு முக்கியமான வாக்கியத்தை 'தி ஜீசஸ் மிஸ்டரீஸ்' மறந்துவிட்டது (மறைத்துவிட்டது). அந்த மேற்கோள் கீழே.
"எந்நிலையிலும் தங்கள்
தெய்வங்களை சிலுவையில் அறையப்பட்டவருக்கு இணையாக்க அவர்களால் முடியவில்லை.
ஜுபிட்டருடைய புத்திரன்களை கூட அவருக்கு இணையாக்க முடியவில்லை. ஏனெனில்
உவமைகளாக சொல்லப்பட்ட போதனைகளை அவர்களால் புரிந்து கொள்ள முடியாதிருந்தது" -
ஜஸ்டின் (முதல் மன்னிப்பு - 55)
டைநோசிசின் தந்தையான சியசின் மற்றொரு பெயர் தான் ஜுபிட்டர். ஜஸ்டின் பேகன்
இனத்தவர்களால் ஜுபிட்டருடைய புத்திரன்களை ஏசுநாதருக்கு இணையாக்க
முடியாதிருந்தது என்று தெரிவித்திருந்தார். இந்த முக்கியமான மேற்கோளை 'தி
ஜீசஸ் மிஸ்டரீஸ்' எடுத்து காட்டவில்லை.
உ) டைநோசிஸ் சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்தாரா?
செய்கிஸ்டின் வழக்கமான பொய் இது. டைநோசிஸ் டைடன்கள் என்பவர்களால் கொலை
செயப்பட்டார். அப்பொழுது டைநோசிசின் பாட்டியார் இறந்த தன் பேரனின் மாமிச
துண்டுகளையும் சாம்பலையும் சேகரித்து தன் மந்திர சக்தியால் டைநோசிசை உயிர்
பெற செய்ததாக கிரேக்க புராணங்கள் கூறுகின்றன.
டைநோசிஸ் குறித்த கதைகளை உற்று நோக்காமல் மேலோட்டமான வாதாங்களை செய்கிஸ்ட் முன் வைக்கிறது.
4) கிருஸ்ணாவின் புராண கதைகளும் ஏசுநாதரின் வரலாறுகளும்
கிருஷ்ணா இந்திய தேசத்தில் வழிபடப்பட்ட புராண தெய்வம். கிருஸ்ணனுடன் இயேசு நாதரை இணைக்க செய்கிஸ்ட் கூறிய பொய்கள் கீழே.
அ) கிருஷ்ணா கன்னி தாயிடம் பிறந்தவர்
"தேவகிக்கு பிறக்கும் எட்டாவது மைந்தனே உனக்கு எமனாவன்" என்று கம்சனிடம் அசரரீ கூறியதாக இந்து புராணங்கள் கூறுகின்றன.
ஏற்கனவே ஏழு குழந்தைகளை தேவகி பெற்றிருக்க அவள் எப்படி கன்னியாவாள்? இதனை நோக்காமல் கிருஸ்ணா கன்னி தாயிடம் பிறந்ததாக செய்கிஸ்ட் கூறுகிறது.
ஆ) கிருஸ்ணா பிறக்கும் போது குழந்தைகள் கொலை செய்யப்பட்டன
கிருஸ்ணா பிறக்கும் போது குழந்தைகள் கொலை செய்யப்படவில்லை. கிருஸ்ணனிற்கு
முன்பு தேவகிக்கு பிறந்த ஏழு குழந்தைகள் தான் கம்சனால் கொலை செய்யப்பட்டன.
இ) கிருஸ்ணா சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்
இந்தியர்கள் அனைவருக்கும் இது எந்தளவு பொய் என்பது தெரியும். கிருஸ்ணாவை
பற்றி அறியாத மேல்நாட்டு நாத்திகர்கள் கிறிஸ்தவர்களை இந்த பொய்யை கூறி
இகழ்ந்து வருவது வருத்தமான செய்தி. கிருஸ்ணா எவ்வாறு இறந்தார்?
"ஜரா என்ற வேடன் மான் ஒன்றை வேட்டையாட
அவ்விடம் வந்தான். அங்கு கிருஷ்ணா தவ நிலையில் அமர்ந்திருப்பதை அறியாத அவன்
மான் என்று எண்ணி கிருஷ்ணனின் மீது அம்பை எய்து விட்டான்" - மகாபாரதம்
அச்சிலஸ் இறப்பு குறித்து கிரேக்க புராணங்கள் இதே கதையை கூறுகிறது.
அச்சிலஸ் இறப்பு குறித்த கிரேக்க புராணங்கள் மகாபாரததிற்கு முன்பு
எழுதப்பட்டவை.
கிருஷ்ணனை இயேசு நாதருடன் இணைக்க செய்கிஸ்ட் செய்த ஏமாற்று வேலைகள் இவைகளே.
"பின்பு, அவர் ஒலிவ மலையின் மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள்
அவரிடத்தில் தனித்து வந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய
வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச்
சொல்லவேண்டும் என்றார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக:
ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்,
ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக் கொண்டு: நானே கிறிஸ்து
என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள் என்றார்" - மத்தேயு 24:3-5