அப்பப்ப போரடிச்சா ஏதாவது படிச்சிட்டு இருப்பேன். இந்தக் குழுமத்தில் சேர்ந்ததிலேர்ந்து ஒரு மண்ணும் செய்யுறதில்ல.. ஏதாவது படிக்கலாம்னா அதும் நடக்க மாட்டேங்குது...அதனால இப்படி ஒரு கட்டுரை எழுதலாம்னு நினைச்சிட்டேன். ஆல் தி பெஸ்ட். (உங்களுக்குத் தான்)
##############################
இணையக் குழுமங்கள் என்பது எனக்கு அறிமுகமானது 2005ன் ஆரம்பம். சவூதி அரேபியாவின் புரைதா (அல்-கசீம்) என்ற சிறு நகரத்தில் கொத்துவேலை செய்துவிட்டு அறைக்கு வந்தால் மறு நாள் காலை வரை அடித்துப் போட்டது போன்ற உறக்கம் வரும். பேச்சுத் துணைக்கோ, விளையாடுவதற்கோ ஆட்கள் இல்லாத இயந்திர வாழ்வு. அந்தக் காலங்கள் தான் இப்போது தொழில் ரீதியாக எனக்கு அன்னமிடுகிறது என்றாலும், அந்தக் காலத்தில் நான் எனக்காக, என் விருப்பத்திற்காக எதையும் செய்ய இயலாத நிலை. காலை 5 மணிக்கு ஆரம்பித்தால் இரவு 9 மணிக்குத் தான் திரும்பலாம். பிறகு அங்கிருந்து சவூதி தலைநகர் ரியாத் மாநகருக்கு மாற்றல். அது அலுவலகம் சார்ந்த பணி என்பதால் நமக்கான வேலையை திட்டமிட்டு செயல்பட முடிந்தது.
இந்தக் கால கட்டத்தில் தான் இணையம் மூலம் அறிமுகமானது ரியாத் தமிழ்ச் சங்கம் - யாஹூ குழுமம். சில ஆயிரம் மக்கள் தங்களுக்குத் தெரிந்த வகையில் அளவளாவுதலும், ஆங்காங்கே ஒன்று கூடலும் நடந்தாலும், எனக்கு உள்ளிருக்கும் தாழ்வு மனப்பான்மையால் எதிலும் கலந்துகொள்ளாமல் ஒரு பார்வையாளனாகவே பயணம் செய்த நாட்கள். 2006ம் ஆண்டு ரியாத் தமிழ்ச் சங்கத்தில், சில குழுக்கள் பிரித்து ஒவ்வொரு கூடமாக உருவாக்கினர். (மே பி அதர் வே ரவுண்ட் :-)) அப்போது எழுத்தின் மேல் விருப்பம் கொண்ட ஒத்த கருத்துடைய நண்பர்கள் இருந்த குழுமம் ”எழுத்துக் கூடம்”. இது கூகுள் குழுமத்தில் உருவாக்கப்பட்டது.
என்னுடைய எழுத்தின் மேல் எனக்கே நம்பிக்கை உருவாக்கிய குழுமம் இது தான். இங்கே நான் பழகியவர்களில் மிக முக்கியமானவர்கள் முனைவர் மாசிலாமணி, அண்ணன் அபுல்கலாம் ஆசாத் மற்றும் மறைந்த நண்பர் சாகரன். அவர்கள் மட்டுமல்லாது இன்னும் நண்பர் நாக.இளங்கோவன், ஐயா வெற்றிவேல், சாதிக் ஜாஃபர் அண்ணன், இம்தியாஸ் அண்ணன், மருத்துவர் சோமு ஐயா, ஜெயசீலன் ஐயா, மலர் அக்கா, பாலமுகுந்தன் ஐயா, நண்பன் கேவிஆர், லக்கி ஷாஜஹான் அண்ணா, இப்னு ஹம்துன் அண்ணா போன்றவர்கள்.
இவர்களைப் பொறுத்தவரை நான் துடிப்புள்ள கிறுக்கன்/தம்பி. ஏதாவது ஒன்றை உளறிக் கொட்டி, அவ்வப் போது கேவிஆர் மூலம் திட்டு வாங்கி, மிக வேகமாக குறிப்பிடத்தகுந்த ஆட்களில் ஒருவனாக ஆனேன்.
இந்தக் குழுமத்தில் தான் “கதாவிலாசம் - எஸ்.ரா.” புத்தகத்தின் அறிமுகம் கிடைத்தது. அதாவது அந்த புத்தகத்தில் ஒரு பகுதியைப் பிரித்து ஒருவர் வாசிக்க, அது சார்ந்த விவாதங்கள் கிளை பிரியும். பிறகு அடுத்த பாராவில் ஒன்று சேரும். பிறகு கிளை பிரியும். இது ஒரு தேர்ந்த ஓவியன் வரைந்த தூரிகை வண்ணத்தை ஒத்திருக்கும். விவாதப் பரப்புகளில் எப்போதும் ஆக்ரோஷம் வந்ததாக அறிந்திலேன். சில சமயங்களில் விவாதம் என்பதே இல்லாமல் பிரசங்கமாக இருக்கும். பல சமயங்களில் நான் முதற்கொண்டு பேசிக்கொண்டிருப்போம். நான் ஆரம்பம் முதலே அதிரடியாக ஏதாவது உளறுபவன்.
இந்த சமயத்தில் தான் சாகரன் தேன்கூடு பற்றிய அறிமுகத்தையும், அதில் நடைபெறும் மாதாந்திர போட்டிகள் பற்றியும் கூறினார். என்னுடைய முதல் படைப்பே “மரணம்” என்ற தலைப்புக்கானது. அந்தக் கட்டுரை தான் எனக்கு வலைப்பூவில் ஒரு அறிமுகம் தந்தது.
பிறகு வெண்பா எழுதுவது பற்றி நண்பன் கேவிஆர் எடுத்த பாடங்கள் அதிக ஆர்வமூட்டுபவையாக அமைந்ததும், அவ்வப்போது நடக்கும் கவியரங்கங்களில் கலந்துகொண்டு நமது கவிதை எனும் போலி எழுத்துகளில் வாழ்வின் இழப்புகளை வார்த்தைகளாக்கி அரிப்பினைத் தீர்த்துக்கொண்டும் கழித்திருந்தேன்.
மாற்றங்கள் மாற்றங்கள் மாற்றங்கள். இந்தச் சமயங்களில் தான் எனது அலுவலகத்தில் விரும்பிய வேலைவாய்ப்புகள் இல்லாத காரணத்தால் சவூதியினை விட்டு செல்லவேண்டிய நிலை வந்தது. அங்கிருந்து வெளிப்பட்ட பொழுது தான் அடுத்தது என்னவென்ற பயம் உண்டானது. இணையம் என்பதற்கு வலை என்ற வார்த்தையைச் சமைத்த அறிஞனை மிகவும் மதிக்கிறேன். ஆம் இது வலை தான். நம்மைப் பீடித்திருக்கும் வலை. அறுத்து எறிவது அத்தனை சுலபமில்லை. சவூதி மண்ணை விட்டு நட்புகளை விட்டு பிரிந்த பொழுதுகளில் அத்தகைய காலங்கள் மீண்டும் வருமாவென உள்ளூர பயத்துடன் பிரிந்தேன்.
இதே சமயத்தில் தான் ஆசிப் மீரானும் அவரின் ஒத்த கருத்துடைய நண்பர்களும் இணையத்தில் பண்புடன் என்ற குழுமத்தை உருவாக்கி ஒரு கலந்துரையாடலுக்கு அழைத்தனர். அவர்களின் அழைப்பின் பேரில் பண்புடன் ஆரம்பித்த ஒரே வாரத்தில் சேர்ந்தேன் நான்.
இப்போது போல அக்காலங்களில் தமிழை இத்தனை வேகமாக நான் தட்டச்ச இயலாது. சில பல நல்ல இழைகளைப் படித்துக்கொண்டு மட்டும் இருந்தேன்.