> eraeravik wrote:
புத்தகம் பற்றிய சிந்தனைதான் இது .கவிதை என்று எந்த இடத்திலும் நான் எழுத வில்லை .அதற்குள் இது கவிதை இல்லை என்று எழுத ஆரம்பித்து விட்டார்கள் அறிவு ஜீவிகள் .என்னை கேலி செய்வதாக நினைத்துக் கொண்டு கடவுள் பாடலை கிண்டல் செய்து உள்ளனர் .
இனிய இரா.இரவி,
தமிழ் இணையம் கண்ட ஒரு தேற்றம் இருக்கிறது. எழுதுபவர்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள், அவர்களுடைய தளத்தில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். அவர்களை விமர்சனம் செய்பவர்கள் செய்துகொண்டிருந்தார்கள், ஒருகட்டத்தில் நிறுத்திவிட்டார்கள்.
குறிப்பிட்ட தளத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கவிதைகளையும் குறைகூற ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யும்.
உங்கள் தளத்தை நீங்கள் தேர்வு செய்துகொள்ளுங்கள், எழுதுங்கள், வெற்றிபெறுங்கள். நீங்கள் அறிவுஜீவிகள் என்று சொல்லும் நண்பர்கள் உங்களை விட்டுவிட்டு, அந்நேரத்தில் வேறு சில கவிஞர்களின் க-வி-தை-க-ளை-ப்- படிக்கப்போய்விடுவார்கள்.
எழுதுவதோடு உங்கள் தளம் எது என்னும் தேர்வில் கவனமாக இருங்கள். மேம்போக்கான ஹைக்கூதான் உங்கள் தளமா? சொற்களை அடுக்குவதுதான் உங்கள் தளமா?
உங்கள் அபிமான கவிஞர்களின் கவிதைகளைப் படியுங்கள். உதாரணமாக, யார் என்ன சொன்னாலும் சரி, எனக்கு வைரமுத்து, மு.மேத்தா, அப்துல் ரகுமான், தமிழன்பன், நா.காமராசன் இவர்கள் அனைவரும் நல்ல கவிஞர்களே! இவர்கள் எழுதுவதெல்லாம் கவிதை கிடையாது என்று சிலர் விமர்சனம் செய்வதால், எனக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது (அவர்களுக்கும்). இப்படியான ஒரு கொள்கையை வைத்துக்கொள்ளுங்கள், அதாவது, நீங்கள் ரசிக்கும் கவிதைகளை எழுதிய கவிஞர்களின் நூல்களை அதிகமாகப் படியுங்கள். உங்களுக்கு ஹைக்கூ பிடிக்கிறதா? தமிழில் வந்திருக்கும் ஹைக்கூ கவிதைகளைப் படியுங்கள். ஆங்கிலத்தில் இணையத்தில் ஹைக்கூ குறித்து கொட்டிக்கிடக்கின்றன, உங்கள் எல்லைகள் விரிவாக வேண்டுமென்றால் அவற்றைப் படியுங்கள். ஹைக்கூ குறித்த தெளிவு கிடைக்கும்.
வார்த்தைகளை அடுக்குவது கவிதை கிடையாது என்று யார் சொன்னது? குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் குழந்தைப் பாடல்கள் கவிதை கிடையாதா? பெ.தூரனின் வார்த்தை அடுக்குகளில் கவிதை கிடையாதா?
நீங்கள் புத்தகத்திற்காக எழுதியிருக்கும் வரிகளை மக்கள் துவைக்கத் துவங்கியதும், ஏன் அது கவிதை கிடையாது என ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கின்றீர்கள்?
அகத்தைப் புதிதாய் ஆக்குவது
. அகிலம் அறிந்திட உதவுவது
அறிஞர் களைநான் அறிந்திடவும்
. அறிஞர் ஆக உயர்ந்திடவும்
நீங்கள் எழுதிய வார்த்தைகளை நான் பிரதிதான் எடுத்திருக்கிறேன். எனது சொந்தச் சரக்கு எதையும் சேர்க்கவில்லை. இப்படியான சொல்லடுக்குகளை யாரேனும் எள்ளி நகையாடிச் செல்ல முடியுமா?
நீங்கள் இயங்க வேண்டிய தளம், அதில் இயங்குவதற்கான அடிப்படை, அதில் இயங்குவதற்குத் திறன் இவை கைகூடிவிட்டால், உங்கள் பயணம் சிறக்கும். அதன் பின்னர், மற்றவர் விமர்சனத்தைப் பற்றிக் கவலைகொள்ளத் தேவையில்லை, புறந்தள்ளலாம்.
இம்மூன்றும் கைகூட வாழ்த்துகள்!