கடவுள் என்ற சொல்லின் அர்த்தம் என்ன?
நமக்குள்
இருக்கும் இறைவன் என்ற பொருள் படும். சைவ சமய இறையியல் பாடத்தில்
கூறப்பட்ட விளக்கத்தையே, இங்கே கொடுத்துள்ளேன். இதை விட வேறு சிறந்த
விளக்கம் எனக்கு கிடைக்கவில்லை. தமிழர்களின் "கடவுள் கோட்பாடு" எங்கே
தோன்றியது? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரும், தமிழர்கள் இந்துக்களாக
இருந்தனர் என்ற காரணத்தை வைத்து, வேதங்களில் இதற்கு விடை தேடுவோம். இன்றைய
தமிழ் இனவாதிகள் என்றால், ஹரப்பா, மொஹஞ்சதாரோ, குமரி கண்டத்திற்கு அப்பால்
செல்ல மாட்டார்கள். ஆனால், தமிழர்களின் இறை நம்பிக்கை மட்டுமல்ல, கடவுள்
என்ற தமிழ்ச் சொல் கூட, ஆப்பிரிக்காவில் தோன்றியுள்ளன! தமது முன்னோர்கள்,
ஆப்பிரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்து வந்த உண்மையை அறியாத, இன்றைய
நாகரீகத் தமிழர்கள், தமது "கடவுளையும் மறந்து விட்டார்கள்."
ஆங்கிலத்தில்
கடவுளை God என்று அழைப்பார்கள். ஜெர்மன் மொழியில் Gott. இரண்டுமே
இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தை சேர்ந்தவை. ஆகவே, "கடா" என்ற பண்டைய
ஈரானிய சொல் அதன் மூலமாக இருக்கலாம். நவீன பார்சி மொழியிலும், உருது
மொழியிலும் "ஹுடா" என்று அழைக்கிறார்கள். அதே நேரத்தில், "தெய்வம்" என்ற
சமஸ்கிருதச் சொல்லும், இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் பயன்படுத்தப் படுகிறது.
பிரெஞ்சில் Dieu, லத்தீனில் Deus, பழைய ஜெர்மன் மொழியில் Deiwos. இன்றைய
மொழிகள் எல்லாமே, கலப்பு மொழிகள் தாம். அதனால் தான், ஒரு பொருளுக்கு பல
ஒத்த கருத்துச் சொற்கள் காணப்படுகின்றன. இருந்தாலும், அந்தச் சொற்களின்
மூலம் வெவ்வேறானதாக இருக்கலாம். பழைய ஈரானியச் சொல்லான "கடா", அந்தப்
பிராந்தியத்தில் வாழ்ந்த வேற்றின மக்களினால் பாவிக்கப் பட்ட சொல்லாக
இருக்கலாம். பண்டைய ஈரானில் இருந்த, எலமிய, சுமேரிய ராஜ்யங்களில் பேசப்
பட்ட மொழிகளையும் கவனத்தில் எடுக்க வேண்டும். எலமிய, சுமேரிய மக்கள்,
திராவிட இனத்தவர்கள் என்பது உறுதிப் படுத்தப் பட்டுள்ளது. அவர்கள், தமது
இறைவனை அழைக்க, "கடா" என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளனர். அந்தச் சொல்,
தமிழில் கடவுள் என்ற சொல்லுடன் ஒத்திருப்பதை கவனிக்கவும். அது சரி,
இரண்டினதும் அர்த்தம் ஒன்றுதானா?
இன்று
நாங்கள், ஒரு பொருளுக்கு ஒத்த கருத்துள்ள சொற்களைப் பயன்படுத்துவதைப்
போன்று, பண்டைய நாகரீகத்தை சேர்ந்த மக்களும் நடந்து கொண்டுள்ளனர்.
சுமேரியர்கள், தமது கடவுளை குறிக்க "எங்கை" என்ற சொல்லை
பயன்படுத்தினார்கள். அக்காடியர்கள், அதனை "எயா" என்றும், ஹீபுரூக்கள் "எல்"
அல்லது "எலோஹிம்" என்றும் அழைத்தனர். எந்தப் பெயரில் அழைத்தாலும்,
கடவுளைக் குறிக்கும் அந்தச் சொல்லின் அடிப்படை ஒன்று தான். சுமேரியர்களின்
எங்கை என்ற சொல்லின் மூலமும், ஆப்பிரிக்காவாக இருக்க வேண்டும்.
இன்றைக்கும், கென்யாவில் வாழும் கிகுயூ இன மக்கள், தமது கடவுளை "எங்கை"
என்று அழைப்பதை ஏற்கனவே எழுதி இருக்கிறேன். (பார்க்க : முதலாம் பாகம்: நாம்
கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!) இன்றைக்கு ஆங்கில
எழுத்துக்களை பாவித்து "Ngai" என்று எழுதுகிறார்கள். ஆனால், உச்சரிப்பு
"என் கை" என்று வரும். "ஏ" என்றால், சுமேரிய மொழியில் கடவுளின் வீடு என்று
அர்த்தம். அங்கே வசிப்பதால், "எயா" அல்லது "என்" அல்லது "ஏகை" என்று
கடவுளுக்கு பெயர். தமிழ் மொழியிலும், கடவுளைக் குறிக்க "ஏகன்" என்ற சொல்
உண்டு!
தமிழில்
அரசனையும், கடவுளையும் குறிக்கும் "கோ(ன்)" என்ற சொல், "க" என்ற சொல்லில்
இருந்து தோன்றியது. "க" என்ற சொல், பல பாரம்பரிய ஆப்பிரிக்க மதங்களில்,
கடவுளைக் குறிக்கும் புனிதச் சொல்லாக கருதப் படுகின்றது. "க" என்பதன்
அர்த்தம், பொதுவாக இறைவன் என்பதல்ல. எங்கும் வியாபித்திருக்கும்
பரம்பொருள். மனிதனுக்கு உள்ளே மறைந்திருக்கும் சக்தி. மனிதனுக்கும்,
இறைவனுக்கும் இடையில் தொடர்பூடகமாக உள்ள ஆத்மா.... இவ்வாறு பல அர்த்தங்கள்
வரும். "கடா" என்றால், இறைவனின் ஆட்சி என்று பொருள் படும். (கிறிஸ்தவ
இறையியலில், எம்மை ஆள்பவரின் காலம் எனப் பொருள்படும், Anno Domini என்ற
லத்தீன் சொல்லை பாவிக்கிறார்கள். அதைத் தான் நாங்கள் "கிறிஸ்துவுக்குப்
பின்" என்று தமிழில் தவறாக மொழிபெயர்க்கிறோம்.) இன்றைக்கும்,
எத்தியோப்பியாவில் வாழும், ஒரோமோ இன மக்கள், "இறைவனின் ஆட்சி" எனப் பொருள்
படும், "கடா" என்ற சொல்லை பயன்படுத்துகின்றனர். கடவுள் என்ற தமிழ்ச்
சொல்லும், இதனோடு தொடர்பு பட்டுள்ளதை, நான் இங்கே விளக்கத் தேவை இல்லை.
பண்டைய
எகிப்தியர்கள் உட்பட, அனைத்து ஆப்பிரிக்க மதங்களும், பல தெய்வ வழிபாட்டைக்
கொண்ட "காட்டுமிராண்டி கால மதங்கள்" என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆப்பிரிக்கர்களின் மத நம்பிக்கைகளைப் பற்றிய எமது அறிவு மிகவும் குறுகியது.
அவர்கள் கல்லையும், மரத்தையும் மட்டுமே வணங்கியதாகவும், எந்த வித இறையியல்
தத்துவமும் கொண்டிராதவர்கள், என்று நம்புவது எமது அறியாமையே அன்றி வேறல்ல.
"கண்டிப்பாக ஒரே கடவுட் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும்" என்று
வலியுறுத்தும், யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களின் வருகையின் பிறகு தான்,
பிற மத நம்பிக்கைகளை புறக்கணிக்கும் வழக்கம் ஆரம்பமாகியது. இருபதாம்
நூற்றாண்டில் எழுந்த, பாஸிச அரசியல் கொள்கைக்கும், ஓரிறை மதங்களின்
அடிப்படைவாதம் காரணம் என்று குற்றம் சாட்டப் படுவதுண்டு.
ஆப்பிரிக்க
மதங்கள் எல்லாமே, பல தெய்வங்களை வழிபட்ட காட்டுமிராண்டி கால மத
நம்பிக்கைகள் அல்ல. குறிப்பாக, எத்தியோப்பியாவில் வாழும் ஒரோமோ இனத்தவரின்
பாரம்பரிய மதம், ஓரிறைக் கோட்பாட்டைக் கொண்ட மதமாகும். இன்றைய
எத்தியோப்பியாவின், சுமார் ஐம்பது வீத நிலப்பரப்பைக் கொண்ட ஒரோமியா என்ற
மாநிலத்தில் வாழும் ஒரோமோ மக்கள், அந் நாட்டின் அடக்கப்படும் சிறுபான்மை
இனமாகும். ஒரோமோ மொழி, சோமாலிய மொழி போன்றிருக்கும். ஒரோமியா மாநிலத்திற்கு
கிழக்கே உள்ள ஒகடான் மாநிலத்தில், சோமாலிய மொழி பேசும் மக்கள்
வாழ்கின்றனர். ஒரோமோ மொழியும், சோமாலிய மொழியும், இன்று அழிந்து விட்ட கூஷி
மொழியில் இருந்து பிரிந்த கிளை மொழிகளாகும். கூஷி மக்களின், நுபிய
ராஜ்ஜியம், எகிப்தின் கீழே, சூடானில் இருந்தது. பண்டைய எகிப்தியருக்கும்,
கூஷிகளுக்கும் இடையில் நெருங்கிய கலாச்சார, மொழியியல் ஒற்றுமைகள்
காணப்பட்டன.
ஆகவே,
சோமாலிய, ஒரோமிய மக்களின் மொழி மட்டுமல்ல, அவர்களது கலாச்சாரப்
பாரம்பரியங்கள், மத நம்பிக்கைகள் கூட, எகிப்திய-கூஷி நாகரீகத்தை ஒத்திருக்க
வேண்டும். சோமாலிய, ஒரோமிய இனங்களுக்கு இடையிலான வித்தியாசம், தமிழும்,
மலையாளமும் போன்றது. இஸ்லாமிய மதத்தை பின்பற்றிய பின்னர், சோமாலியர்கள்
தமது பூர்வீகத்தை ஏறக்குறைய மறந்து விட்டனர். ஆனால், ஒரோமிய மக்கள் அப்படி
அல்ல. ஒரோமிய மக்கள் முஸ்லிம்களாகவும், கிறிஸ்தவர்களாகவும், பாரம்பரிய மத
நம்பிக்கை கொண்டவர்களாகவும், மூன்று பிரிவாக பிரிந்துள்ளனர். இன்றைய
தமிழர்களைப் போன்று, வெவ்வேறு மதங்களை பின்பற்றினாலும், ஒரே மொழியும்,
கலாச்சாரமும் அவர்களை ஒன்றிணைக்கிறது. இதனால், இன்று, ஒரோமியா என்ற தனி
நாட்டின் விடுதலைக்காக போராடும் இயக்கமும், தமிழ் தேசியம் போன்று, ஒரோமிய
மொழித் தேசியத்தின் மீது கட்டமைக்கப் பட்டுள்ளது.
ஒரோமிய
மக்களின் பாரம்பரிய மதத்திற்கு பெயர், வாக்கேபண்ணா ("Waaqeffannaa").
வாக்கா என்பது கடவுளின் பெயரைக் குறிக்கும். உண்மையில், பண்டைய கூஷி மக்கள்
வழிபட்ட, "கா" என்ற கடவுளின் பெயரை தான், ஒரோமியர்கள் வாகா
என்கிறார்கள்."கா அடா" என்றால், கடவுள் வகுத்த சட்டங்கள். ஒரோமியர்களின்
முக்கிய பண்டிகையான, "கடா (Gadaa)" வின் அர்த்தமும் அது தான். செப்டம்பர்
அல்லது ஒக்டோபரில் வரும் பண்டிகையானது, தமிழர்களின் பொங்கல் பண்டிகையை
ஒத்திருக்கிறது.
("KA" is the first
name of God. The name of God that our Cush Fathers have inherited to us
before the old period of Christianity and Islam is "KA". Since then,
therefore, especially the Oromo, Gurage and the Southern people of
Ethiopia have been calling God as "Waka or Waaqa". When we sing
EyokaorEyohain New Year, we do praise "KA", the God. "Gadaa" or "KA
Aada" is the law or rule of God. "Gadaa" (KA Aada) is the festival by
which the laws and orders of God are executed.
http://www.gadaa.com/IrreechaaAbout.html)
பண்டைய
எகிப்தியர்கள், "க்னும்" எனும் தெய்வ சக்தி, மனிதர்களின் உயிர்களை,
உடல்களை படைப்பதாக நம்பினார்கள். ஆனால், க்னும் என்பது, ஒரு இறையியல்
தத்துவம் ஆகும். எகிப்தியர்களின் இறையியலில், "வா", "கா", என்று இரண்டு
சொற்கள் முக்கியமானவை. வா (ba) என்பது, மனிதனின் உயிர் அல்லது ஆத்மா (அது
சரியான அர்த்தம் அல்ல. அண்ணளவான மொழிபெயர்ப்பு.) கா என்பது, இறைவனுக்கும்,
மனிதனுக்கும் இடையிலான பிணைப்பு. "கா" வை படைப்பது க்னுன். குயவர்கள் பானை
செய்ய பயன்படுத்தும் சக்கரம் போன்ற ஒன்றில், மனிதர்களின் "கா" படைக்கப்
படுகின்றது. (மேலதிக தகவல்களுக்கு, பார்க்க:
Every Egyptian was thought
to have a ba and a ka. The ba was sort of how they acted or in other
words their personality. The ka was the life force of all living
humans..... A ka is the difference between alive and dead. Unlike the
ba, a ka wasn’t unique. The ka enters the body at birth. Like the ba,
the ka wasn’t a physical part of the body, though the ka surely has a
physical connection..... The "god" that made a person’s ka was called
Khnum. Egyptians believed that Khnum shaped everyone’s ka on his trusty
potter’s wheel. http://library.thinkquest.org/J002037F/ba_and_ka.htm)
எகிப்திய
இறையியலில், "கா" என்ற சொல், தேவலோகத்தில் வாழும் ஆண்டவனைக்
குறிக்கவில்லை. மனிதர்களுக்குள் மறைந்திருக்கும் தெய்வ சக்தியையும்,
அதற்கும் இறைவனுக்குமான தொடர்பையும் விளக்குகின்றது. தமிழ் மொழியில்
பயன்படுத்தும், "கடவுள்" (கா+டா+உள்) என்ற சொல்லுக்கும், ஒரோமிய மொழியில்
பயன்படுத்தம் "கடா" என்ற சொல்லுக்கும் இடையிலான ஒற்றுமை இப்பொழுது
புரிந்திருக்கும். கடவுள் சொல்லின் நேரடி அர்த்தம் பண்டைய எகிப்தியரின்
இறையியலில் மறைந்திருக்கிறது. தமிழரின் கடவுள் நம்பிக்கை, ஒரோமிய மக்களின்
வாகா நம்பிக்கை, இரண்டினதும் தோற்றுவாயும் எகிப்து தான் என்பதில்
சந்தேகமில்லை.
ஒரே
கடவுட் கோட்பாடு கூட, ஆப்பிரிக்கர்களுக்கு புதிதல்ல. வாகாபண்ணா மதத்தை
பின்பற்றும் ஒரோமியர்கள், வாகா என்ற ஒரே இறைவனை வழிபடுகின்றனர். பண்டைய
எகிப்தியர்களும் ஒரே கடவுட் கோட்பாடை கொண்டிருந்தனர். அக்நாதன் என்ற
எகிப்திய பரோ மன்னன் காலத்தில், "ரா" என்ற சூரியக் கடவுளை வழிபடும் மதம்
நடைமுறையில் இருந்துள்ளது. ரா என்ற சொல், சூரியனைக் குறிக்கும் "ரவி" என்ற
சமஸ்கிருதச் சொல்லை ஒத்திருப்பதை கவனிக்கவும். சூரியக் கடவுள் வழிபாடு,
ஆப்பிரிக்கா முதல் இந்தியா வரையில் பரவி இருந்தது. ஆப்பிரிக்கர்களின்,
பண்டைய அரேபியரின், சுமேரியரின் மத நம்பிக்கைகளில் சூரியனையும்,
ஆகாயத்தையும், அல்லது அண்ட வெளியை ஒரே கடவுளாக கருதும் வழக்கம் இருந்தது.
அதனை அடிப்படையாகக் கொண்ட இறையியல் தத்துவம், பிற்காலத்தில், யூத,
கிறிஸ்தவ,இஸ்லாமிய மதங்களின் தத்துவங்களுடன் ஒத்துப் போகின்றது.
விவிலிய
நூலில், உலகின் முதல் கொலை பற்றிய கதை ஒன்றுண்டு. முதல் மனிதர்களான,
ஆதாம், ஏவாளின் பிள்ளைகளான அபெல், கையின் இடையிலான பகைமையின் காரணமாக,
கையின் ஆபேலை கொலை செய்து விடுகிறான். ஒரோமியர்களின் மதத்திலும் அதே போன்ற
கதை ஒன்றுண்டு. வானத்திற்கும், சூரியனுக்கும் அதிபதியான அசுரா கடவுளின்,
பிள்ளைகளான ஓரா, செட்டே, அசிஸ் பற்றிய புராணக் கதை முக்கியமானது. விவிலியக்
கதை போன்று, பொறாமை காரணமாக, தமையனான செட்டே தம்பியான ஓராவை கொலை செய்து
விடுகிறான். தங்கையான அசிஸ், ஓரா இறந்த இடத்தில் ஒரு நினைவுச் சின்னத்தை
எழுப்பினாள். அன்றிலிருந்து "உலகில் சமாதானம் நிலவுவதாக", என்ற இறைவனின்
ஆணைப் பிரகாரம், மழை பெய்து, நினைவுச் சின்னம் இருந்த இடத்தில், ஆல மரம்
ஒன்று முளைத்து வளர்ந்தது.
ஒரோமிய
மக்களின், ஓரா தெய்வம் பற்றிய புராணக் கதையானது, கிறிஸ்தவர்களின்
விவிலியக் கதைகளை நினைவு படுத்துகின்றது. தீய எண்ணம் கொண்ட அண்ணன் செட்டே
யினால் கொலை செய்யப்பட்ட நல்லவனான தம்பி ஓரா பற்றிய கதை முக்கியமானது.
இயேசு கிறிஸ்து மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்ததை ஞாபகப் படுத்தும், ஓரா
உயிர்த்தெழுந்த கதை, ஒரோமிய மக்களின் பூர்வீகக் கதை ஆகும். சூரியக்
கடவுளின் மகனான ஓரா, மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்தான். அதனை "ஓரா-ஒமோ"
என்று கூறுகின்றனர். அதிலிருந்து தான், "ஒரோமியர்கள்" என்ற சொல் தோன்றியது.
பாலஸ்தீனம்
முதல், யேமன் வரையிலான அரேபியா என்ற குடாநாடும், ஆப்பிரிக்கக் கண்டத்துடன்
சேர்ந்த நிலப்பரப்பு தான். அதனால், அங்கு தோன்றிய மூன்று பெரிய மதங்களான,
யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் என்பன, "ஆப்பிரிக்க மதங்கள்" என்ற வகையில்
சேர்க்கப் பட வேண்டும். யூதர்களின் தீர்க்கதரிசியான மோசஸ், கிறிஸ்தவர்களின்
மீட்பரான இயேசு கிறிஸ்து, முஸ்லிம்களின் இறைதூதரான முகமது, இவர்களின்
தோற்றம் எப்படி இருந்திருக்கும்? அவர்கள், உண்மையிலேயே அந்தப் பிரதேசத்தில்
வாழ்ந்தவர்கள் என்றால், தோற்றத்தில் கருப்பர்களாகத் தானே
இருந்திருப்பார்கள்?
தமிழ்
நாட்டில் வாழ்ந்த சித்தர்கள், இஸ்லாத்திற்கு முந்திய அரேபியாவுடனான
தொடர்புகளைப் பற்றிய குறிப்புகளை எழுதி வைத்திருந்தார்கள். சில அரேபிய
சித்தர்களும், தமிழகத்தில் இருந்துள்ளனர். நாங்கள் அவற்றைப் பற்றி ஆராய
விடாது, எமது குறுகிய இனவாத சிந்தனை தடுக்கின்றது. மெக்காவில் உள்ள
புனிதஸ்தலமான காபா பற்றி, அதன் உள்ளே வைக்கப் பட்டுள்ள கல் பற்றி, எந்தளவு
தூரம் அறிந்து வைத்துள்ளோம்? வால் வெள்ளி ஒன்று விழுந்திருக்கலாம் என்றும்,
அல்லது இஸ்லாத்துக்கு முந்திய தெய்வங்களின் உருவச் சிலைகள் என்றும், பல
ஊகங்கள் நிலவுகின்றன. ஆனால், அந்தக் கல் முன்னொரு காலத்தில் வெள்ளையாக
இருந்து, மனிதர்களின் ஸ்பரிசத்தினால் கருப்பாக மாறி விட்டதாக ஒரு ஐதீகம்.
இயற்கையில் கிடைக்கும் கனிமப் பொருட்களை கொண்டு தயாரிக்கப் பட்ட கல்லாக
இருக்கலாம். அதாவது, பண்டைய அரேபியரின் விஞ்ஞான அறிவியல் கண்டுபிடிப்பு.
தமிழ்
நாட்டில் வாழ்ந்த சித்தர்களும், அதே போன்ற விஞ்ஞான ஆராய்ச்சியில்
ஈடுபட்டுள்ளனர். ஏழு பாஷாணங்கள் (நச்சு வேதிப் பொருட்கள்) கொண்டு
உருவாக்கப்பட்ட பழனி முருகன் சிலை, அத்தகைய விஞ்ஞான ஆராய்ச்சியின்
கண்டுபிடிப்பு தான். ஆப்பிரிக்கா, அரேபியாவுடன் பண்டைய தமிழர்களுக்கு
இருந்த தொடர்புகளை விளக்கத் தான், இந்த உதாரணத்தை இங்கே குறிப்பிட்டேன்.
மெக்காவில் உள்ள புனிதஸ்தலமான காபா (Ka'aba) என்ற பெயரில், "கா"
மறைந்திருப்பதைக் கவனிக்கவும். அதனை அரபி மொழியில், "Bayt Allah" (இறைவனின்
இல்லம்) என்ற இன்னொரு பெயர் கொண்டும் அழைக்கின்றனர். ஆகவே, காபா என்பது,
இஸ்லாத்திற்கு முந்திய அரேபியரின் மத வழிபாட்டு ஸ்தலமாக இருந்திருக்க
வேண்டும்.
(தொடரும்)