ஜெயலலிதா ஊழல் வழக்கு - விகடன் கட்டுரை

1,350 views
Skip to first unread message

ஸ் பெ

unread,
May 16, 2015, 3:51:09 PM5/16/15
to panbudan

சுப்பிரமணியன் சுவாமி முதல் நீதிபதி குமாரசாமி வரை பல திடுக்கிடும் திருப்பங்களைக்கொண்ட வழக்கு ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு. ஆங்கில இலக்கிய வரலாற்றில் வெளி வந்த அரசியல் நாவல்களைப் போல விறுவிறுப்பானது.

இந்த விறுவிறுப்பின் முதல் அத்தியாயத்தை தொடங்கி வைத்தவர் சுப்பிரமணியன் சுவாமி. ஜெயலலிதா மீது வழக்குத் தொடுக்கப் போவதாக அவர் அறிவித்த நாள், குளவிக் கூட்டில் கைவைத்த கதையாக முடிந்தது. அவர் துரத்தித் துரத்தி அடிக்கப்பட்டார். எந்த நிமிடமும் எதுவும் நடக்கலாம் என்ற அந்த மரண வினாடிகள் இதோ...

ஸ்கூப்...

1995, ஏப்ரல் 1-ம் தேதி... முட்டாள்கள் தினம்... ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, சில பத்திரிகையாளர்களை சென்னை சாந்தோமில் உள்ள தனது அலுவலகத்துக்கு வரவழைத்து இருந்தார். சுவாமியின் வழக்கமான அரசியல் செய்தி ஏதாவது இருக்கும் என்று நினைத்துத்தான், பத்திரிகையாளர்களும் அங்கு போய் இருந்தனர். சரியாக 11.30 மணிக்கு பத்திரிகையாளர்களிடம் பேசத் தொடங்கிய சுவாமி ‘‘முதலமைச்சர் ஜெயலலிதா மீது வழக்குத் தொடர, ஆளுநர் சென்னா ரெட்டி எனக்கு அனுமதி அளித்துவிட்டார்’’ என்று சொன்னார். ‘‘சுவாமி சொல்வது சாதாரண தகவல் அல்ல. அகில இந்திய அளவில் ஸ்கூப் நியூஸ். இந்திய அரசியலில் புயலைக் கிளப்பப் போகும் செய்தி’’ என்பது விவரம் தெரிந்த பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே புரிந்தது. ஆனால், சுவாமி சொல்வதை நம்பவும் முடிய வில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

‘‘முட்டாள்கள் தினத்தன்று சுவாமி நம்மை அழைத்து ஏதோ வேடிக்கை காட்டுகிறார்’’ என்றே அவர்களில் சிலர் நினைத்தனர். ஆனால், ஆளுநர் கையெழுத்திட்ட அனுமதிக் கடிதத்தின் நகலை கொடுத்து, தான் சொன்னது வேடிக்கைக்காக அல்ல. உண்மையிலேயே ஜெயலலிதா மீது வழக்குத் தொடர ஆளுநர் தனக்கு அனுமதி அளித்துவிட்டார் என்பதை சுவாமி உறுதி செய்தார். அதன் பிறகு பற்றிக் கொண்டது தமிழகம். பதைபதைத்துப் போனது போயஸ் கார்டன். நிதானம் இழந்தனர் அ.தி.மு.க. தொண்டர்கள். 18 ஆண்டு காலம் பல நீதிமன்றங்களை இழுத்தடித்த சொத்துக் குவிப்பு வழக்கின் தொடக்கம் இப்படித்தான் தொடங்கியது. இந்த நேரத்தில், 1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதா நடத்திய ஆட்சி பற்றிய ஒரு சின்ன பிளாஷ்பேக்...

1991-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலை அ.தி.மு.க.வும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து சந்தித்தன. தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு ராஜீவ் காந்தி, பெரும்புதூரில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் பலியாகி இருந்தார். அந்தக் கோர மரணம், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான அனுதாப அலையை இந்தியா முழுவதிலும் உருவாக்கி வைத்திருந்தது. அந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கரம் கோர்த்து தமிழக சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்த ஜெயலலிதா, ராஜீவ் அனுதாப அலையின் வேகத்தில் அமோகமாக வெற்றி பெற்றுக் கரையேறினார். தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா முதல் முறையாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். ஒரு மாநிலத்தின் உச்சக்கட்ட அதிகாரம்... செல்வாக்கை அடைந்துவிட்ட ஜெயலலிதாவிற்கு தான் என்ன செய்கிறோம்? ஏன் செய்கிறோம்? எதற்கு செய்கிறோம்? என்ற எந்தப்புரிதலும் இல்லாமல் போனது. ஏனோதானோவென்று நிர்வாகத்தை நடத்தினார். அதிகாரமிக்க முதல்வராக ஜெயலலிதாவும், அவருக்குப் பின்னால் இருந்து அதிகாரம் செலுத்தும் நிழல் முதலமைச்சராக சசிகலாவும் செயல்பட்டனர். சசிகலா தவிர்த்து, அவருடைய ரத்த உறவுகள், தூரத்து உறவுகள், உறவுகளின் உறவுகள் என ஆளுக்கொரு அதிகார மையங்களாகச் செயல்பட்டனர். இவர்கள் செய்யும் தவறுகளுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள், பகுதி, வட்டம், ஒன்றியம் என்று அவரவர் சக்திக்கு ஏற்ற வகையில் தமிழகத்தைக் கூறுபோட்டுக் கொண்டிருந்தனர். ஜெயலலிதாவும் சசிகலாவும் கண்ணில் பட்ட கட்டடங்களை எல்லாம் தங்களின் சொத்துக்களாக மாற்றிக்கொண்டிருந்தனர். இவர்களுக்கு சொத்துக்களை விற்க மறுத்தவர்கள், ஆட்டோவில் ஆள் அனுப்பி மிரட்டப்பட்டனர். குண்டர்களால் தாக்கப்பட்டனர். போலீஸ்காரர்களை வைத்து பொய் வழக்குப் போட்டு அலைக்கழிக்கப்பட்டனர். சொத்துக்கள் வைத்திருக்கும் அனைவரும், எப்போது நம்முடைய வீட்டிற்கு ஆட்டோ வருமோ என்று அஞ்சி அஞ்சி நாட்களைக் கழித்துக்கொண்டிருந்தனர். உணவுப் பொருள் விநியோகம், குடிநீர், மருத்துவம், சுகாதாரம், போலீஸ், பொதுப்பணித்துறை என அரசாங்கத்தின் எல்லாத் துறைகளிலும் லஞ்சமும் ஊழலும் குடியேறின.

தமிழகத்தின் இருண்ட காலம், தமிழகத்தின் கற்காலம் என்று ஜெயலலிதாவின் அன்றைய ஆட்சியை எதிர்க் கட்சிகள் மேடைகளில் வர்ணித்தன. அந்த நேரத்தில்தான், ஜெயலலிதா மீது வழக்குத் தொடர தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று அன்றைய தமிழக ஆளுநர் சென்னா ரெட்டியிடம் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கேட்டிருந்தார். ஒரு அரசு ஊழியர் மீது வழக்குத் தொடர வேண்டுமானால் அரசாங்கத்திடம் அனுமதி பெற வேண்டும் என்பது நடைமுறை. அதனால், சுவாமி ஆளுநரிடம் அனுமதி கேட்டிருந்தார். ஆனால், அதில் நீண்ட நாள்களாக கவர்னர் எந்த முடிவும் எடுக்காமல் மௌனம் காத்து வந்தார். இதையடுத்து, சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சுவாமியின் கோரிக்கையில் கவர்னர் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று நாள் குறித்தது. இந்த சூழ்நிலையில்தான் ஆளுநர் சென்னா ரெட்டி, ஜெயலலிதா மீது வழக்குத் தொடர சுப்பிரமணியன் சுவாமிக்கு அனுமதி அளித்தார். அந்த அனுமதிக் கடிதத்தைத்தான் சுவாமி, ஏப்ரல் 1-ம் தேதி வெளியிட்டு பரபரப்பைப் பற்ற வைத்தார். இப்படித்தான் தொடங்கியது சொத்துக் குவிப்பு வழக்கின் முதல் அத்தியாயம்.

சுவாமி அனுமதி கொடுக்கும் கடிதத்தை எழுதுவதற்கு சில நாள்களுக்கு முன்பிருந்தே, ஆளுநர் சென்னா ரெட்டியின் மனக்கணக்குகள், மத்திய நரசிம்மராவ் அரசுடன் அவர் நடத்திய ஆலோசனைகள், அதன்பிறகும் அவர் மனதில் அலையடித்தக் குழப்பங்கள் என்று ராஜ்பவன் ஒருவிதமான அசாதாரண சூழ்நிலையில் இயங்கிக் கொண்டிருந்தது. அதேசமயம் ஆத்திரம், கொந்தளிப்பு, பயம் என்று போயஸ் கார்டன் மிகுந்த படபடப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. அந்த திக்... திக்... நிமிடங்கள்.

ராஜ்பவன் டைரி குறிப்பு!

 மார்ச் 25 முதல் ஏப்ரல் 2... மார்ச் 25, சனிக்கிழமை மாலை 4 மணி...

கிண்டியில் உள்ள ராஜ்பவனில் புள்ளிமான்கள் துள்ளி ஓடும் சத்தம் தெளிவாகக் கேட்கக்கூடிய நிசப்தம். ஆளுநர் சென்னா ரெட்டி தன் ‘ஸ்டடி’ அறையில் டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி கொடுத்த ஊழல் புகார் அடங்கிய ‘பைண்ட்’ வால்யூம்களை மறுபடியும் ஒருமுறை சரிபார்த்துவிட்டு, சுவாமிக்கு அனுமதியளிக்கும் ‘டிராஃப்ட்’ உத்தரவில் கையெழுத்திடுகிறார். மார்ச் 30, வியாழக்கிழமை: பிற்பகல் 2 மணி...

 மார்ச் 30, வியாழக்கிழமை: பிற்பகல் 2 மணி...

சட்டசபையில் எதிர்க் கட்சித் தலைவர் எஸ்.ஆர்.பி தாக்கப்பட்ட தகவல் அடங்கிய முழு அறிக்கை ஆளுநருக்குச் சமர்ப்பிக்கப்படுகிறது. ‘‘எதிர்க் கட்சித் தலைவருக்கே இந்தக் கதியா?’’ என்று நொந்துகொள்கிறார் சென்னா ரெட்டி. சுவாமி கொடுத்த மனு மீது முடிவெடுக்க சுப்ரீம் கோர்ட் மே மாதம் 31-ம் தேதி வரை அவகாசம் கொடுத்திருந்தும், சில காரணங்களுக்காக விரைவாக முடிவு எடுத்துவிட்டார். அனுமதி உத்தரவின் ‘Fair Copy’யை வரவழைத்து சரிபார்க்கிறார் சென்னாரெட்டி.

 மார்ச் 31, வெள்ளிக்கிழமை: காலை 10 மணி...

சென்னா ரெட்டி தன் செயலாளர் ஷீலா ப்ரியாவிடம் ‘‘சுவாமியைச் சென்னையிலேயே இருக்கச் சொல்லுங்கள். எங்கேயும் போகவேண்டாம். ராஜ்பவனிலிருந்து சிறப்புக் கடிதம் ஒன்று பர்சனலாக டெலிவரி செய்யப்படும்’’ என்று கூறச் சொல்கிறார். ஷீலாவும் சுவாமியிடம் விவரத்தைக் கூறுகிறார். இதற்கிடையில், டெல்லியிலிருந்து பிரதமர் அலுவலகத்திலிருந்தும் உள்துறை அமைச்சகத்திலிருந்தும் ஆளுநருக்கு டெலிபோன்கால்கள். பிரதமர் ஆந்திராவுக்குச் சுற்றுப்பயணம் சென்று விட்டாரா என்று சென்னா ரெட்டி விசாரிக்கிறார். இரவு ஏழு மணி சுமாருக்கு அம்பாஸடர் காரில் சுவாமியின் சாந்தோம் வீட்டுக்கு ஒப்புதல் கடிதம் ஓர் அலுவலர் மூலம் கொடுத்தனுப்பப்பட்டது.

 ஏப்ரல் 1, சனிக்கிழமை: காலை 10.30 மணி...

சுப்பிரமணியம் சுவாமியின் சாந்தோம் பங்களா ‘களை’ கட்டியிருக்கிறது. முதலில் முன்னாள் அமைச்சர் ராசாராம் வந்தார். அவரைத் தொடர்ந்து தரன் எம்.பி., ஜனதா கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவராக வருகிறார்கள். சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட நிருபர்கள், இருபது போட்டோகிராபர்கள், தூர்தர்ஷன் உட்பட ஐந்து டெலிவிஷன் காமிரா யூனிட்டுகள் ‘கான்ஃப்ரன்ஸ் ஹாலை‘ அடைத்துக் கொண்டிருந்தன. எதைப் பற்றி ‘பிரஸ் மீட்’ என்று நிருபர்கள் மத்தியில் ஏகப்பட்ட விவாதங்கள்.

 காலை 11 மணி:

சந்திரலேகா பின்தொடர சுவாமி வருகிறார், கையில் பெரிய ப்ரீப்கேஸ். ‘‘பெட்டிக்குள் என்ன ஜெயலலிதாவா, சசிகலாவா?’’ என்று நிருபர்கள் கேட்கிறார்கள். சுவாமியும் சிரித்துக்கொண்டே, ‘‘இன்னும் அந்த சைஸில் பெட்டி தயாரிக்கப்படவில்லை’’ என்று ஜோக் அடிக்கிறார். அனைவரது முகத்திலும் டென்ஷன். சுவாமி தன் உரையைத் துவக்குகிறார். பின்டிராப் சைலன்ஸ் வெளியே ஏகப்பட்ட போலீஸ்.

 பகல் 11.30 மணி:

ராஜ்பவனில் செக்யூரிட்டி பலப்படுத்தப்படுகிறது. மெயின் கேட் இழுத்துப் பூட்டப்படுகிறது. சுவாமியின் பிரஸ் மீட் தொடங்கிவிட்டது என்ற விவரம் சென்னா ரெட்டியிடம் தெரிவிக்கப்பட்டது. யுகாதி பண்டிகையை கவர்னர் தன் குடும்பத்துடன் கொண்டாடுகிறார். பஞ்சாங்கம் படித்துக் கொண்டிருக்கும் பண்டிதர் ‘‘புது வருடம் எல்லா நலன்களையும் மக்களுக்குப் பயக்கும். நாடு சுபிட்சம் அடையும். எதிரிகள் காணாமல் போவார்கள்’’ என்று தெலுங்கில் உரக்கப் படிக்கிறார். இதை ஆளுநர் உள்ளூர ரசித்து மெல்லியதாகச் சிரிக்கிறார்.

 12.30 மணி:

போயஸ் தோட்டத்தில் ‘டல் அடிக்கிறது. கவர்னர் சுவாமிக்குக் கொடுத்த அனுமதி கடிதத்தின் ‘காப்பி’ முதல்வர் பார்வைக்கு வைக்கப்படுகிறது. முதல்வர் அவசரமாகத் தலைமைச் செயலர், டி.ஜி.பி., சசிகலா ஆகியோருடன் தனித்தனியாக விவாதிக்கிறார். முதல்வரின் இணைச் செயலர் ஜவஹர்பாபு விமான கம்பெனிக்கு போன் செய்து மூன்று டிக்கெட்டுகளை அன்று மாலை டெல்லி செல்லும் விமானத்தில் ரிசர்வ் செய்கிறார்.

 1 மணி:

பிரஸ்மீட் முடிந்த கையோடு சுவாமியும் சந்திரலேகாவும் ராஜ்பவன் சென்று சென்னா ரெட்டியைச் சந்தித்து ‘யுகாதி வாழ்த்துக்களை’த் தெரிவித்து, அனுமதி அளித்ததற்கு நன்றி கூறுகிறார்கள். கவர்னர் புன்னகையோடு ‘‘இனி எல்லாம் உங்கள் கையில்’’ என்கிறார். சுவாமிக்கும் சந்திரலேகாவுக்கும் யுகாதி இனிப்புகளை கவர்னர் வழங்குகிறார்.

 4 மணி:

பத்திரிகையாளர் சோ, இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சுப்பிரமணியம் சுவாமியை அவரது சாந்தோம் இல்லத்தில் சந்திக்கிறார்கள்.

 5 மணி:

டெல்லி செல்லும் விமானத்தில் தலைமைச் செயலாளர் ஹரிபாஸ்கர், பொதுத்துறைச் செயலர் பாலகிருஷ்ணன், சசிகலாவின் தம்பி சுதாகர் ஆகியோர் பயணமானார்கள்.

 இரவு 7 மணி:

பிரதமரின் மகன் பிரபாகர் ராவ் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்குகிறார். காத்திருந்த தமிழக உளவுத் துறை போலீஸ் உயர் அதிகாரிகள் அவரை வேகமாக விமான நிலையத்தைவிட்டு வெளியே அழைத்துச் செல்கிறார்கள். நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இளைப்பாறி பிறகு போயஸ் தோட்டம் செல்கிறார் பிரபாகர் ராவ்.

 ஏப்ரல் 2, ஞாயிற்றுக்கிழமை: காலை 10 மணி:

இந்தியாவின் சிறந்த வழக்கறிஞர்களான கே.கே.வேணுகோபால், கே.பராசரன், ராம்ஜெத்மலானி ஆகியோரை டெல்லியில் சந்தித்து சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா சார்பில் வழக்கை எடுத்து நடத்தும்படி கேட்கிறார் தமிழகத் தலைமைச் செயலாளர். அவர்கள் ‘சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தள்ளுபடியாகிவிட்டால் முதல்வருக்கு அவமானம். ஆகவே, சென்னை உயர் நீதிமன்றத்தில் கேஸை நடத்தி ‘ஏதாவது செய்ய முடியுமா?’ என்று வேண்டுமானால் பார்க்கலாம்’ என ஆலோசனை கூறுகிறார்கள்.

 மாலை 5 மணி:

ஆளுநரின் கொடும்பாவி தென்மாவட்டங்களில் எரிக்கப்படுவதாக ராஜ்பவனுக்கு தகவல்கள் வருகின்றன. ஆளுநரிடம் ஏ.டி.சி சென்று ‘‘எல்லா இடங்களிலும் கொடும்பாவி கொளுத்துகிறார்கள்... இந்த நிலையில்...’’ என்று இழுத்தபோது. சிலிர்த்தெழுந்த ரெட்டி ‘‘என் டூர் புரோக்ராமில் எந்தவித மாற்றமும் இல்லை. எனக்கு எந்தப் பாதுகாப்பும் தேவையில்லை’’ என்று கூறி ஏ.டி.சியை முறைத்தார்.

“ஜெயலலிதா பதவி விலக மறுத்தால்” சுப்பிரமணியம் சுவாமி பேட்டி

ஆளுநர் கையெழுத்திட்ட கடிதத்தை வெளியிட்ட சுப்பிரமணியன் சுவாமி, ஜூனியர் விகடன் இதழுக்கு பிரத்யேகப் பேட்டியளித்தார்.. அதில், ‘‘இந்திய அரசியல் சட்ட வரலாற்றில் முதலமைச்சர் மீது ஊழல் குற்றங்களை விசாரிக்க மாநில ஆளுநர் அனுமதி கொடுத்தது இதுதான் முதல் முறை. ஜெயலலிதா மட்டும் சரியாக ஒத்துழைத்தால் மூன்றே மாதத்தில் வழக்கை முடித்துவிடலாம் என்றார். அந்தப் பேட்டி,

 ‘‘ஏப்ரல் முதல் தேதி வரையில் மக்கள் உங்களை ‘சீரியஸ்’ ஆக எடுத்துக் கொள்ளவில்லை. பத்திரிகையாளர்களும் உங்கள் ‘பிரஸ் மீட்’டை பொழுதுபோக்காகவே மதித்தார்கள். இப்போது இந்தத் திடீர் திருப்பத்துக்குக் காரணம் என்ன?’’

‘‘தமிழகத்தில் எனக்கு எதிராக அ.தி.மு.க மட்டும் இல்லை. இடதுசாரிகள், பாரதிய ஜனதா, தி.முக., ம.தி.முக., ஏன் சில காங்கிரஸ்காரர்கள், தமிழக உளவுத்துறை ஐ.ஜி., எல்.டி.டி.ஈ யின் பாதாளம் வரை பாயும் பணம் என்று பலர் பல்வேறு வழிகளில் என்னை இதுநாள் வரை ஒடுக்கப் பார்த்தார்கள். என்னை மிரட்டியும் பணிய வைக்க முடியாது; பணம் கொடுத்தும் விலைக்கு வாங்க முடியாது! அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பதவியை உதறித் தள்ளிவிட்டு வந்தவன் நான். இப்போதுதான் மக்கள் என்னை உணரத் தொடங்கி உள்ளனர். ‘மக்கள் முதலில் நல்ல அரசியல்வாதியை அசட்டை செய்வார்கள். பிறகு கிண்டல் செய்வார்கள்; பிறகு அவர்களைக் கண்டு பயப்படுவார்கள். பிறகுதான் நன்கு தெரிந்து பின்தொடருவார்கள்’ என்று காந்தி 40 ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளார்.’’

 ‘‘ஒரு வேளை ஒவ்வொரு தடவையும் ‘கெடு’ கொடுத்துக் கொண்டே வந்து ஜெயலலிதா அரசை ஒன்றும் செய்ய முடியாமல் போனதால், மக்கள் மத்தியில் உங்கள் மீதுள்ள நம்பிக்கைக்கு பாதிப்பு ஏற்படாதா?’’

‘‘தி.மு.க அரசை உடனடியாக நான் கலைத்ததற்குக் காரணம் அப்போது நான் மத்திய அமைச்சராக இருந்தேன். ராமகிருஷ்ண ஹெக்டேயை கர்நாடக முதல் அமைச்சர் பதவியிலிருந்து நீக்க நான் காரணமாக இருந்தேன். இப்போது அதைப் பற்றி யார் பேசுகிறார்கள். சிறிது காலம் கஷ்டங்களை அனுபவித்தால்தான் மக்களுக்கு என் நடவடிக்கையின் முக்கியத்துவம் புரியும். மேலும், நான் சட்டபூர்வமாக இந்திய அரசியல் அமைப்புக்கு உட்பட்டு ஜெயலலிதாவை அகற்றப் பார்க்கிறேன். இதற்குக் காலதாமதம் ஆகும்.’’

 ‘‘ஆளுநர் உத்தரவு தர ஏன் சுமார் 15 மாதங்கள் எடுத்துக்கொண்டார். அவருக்கு ஏதாவது கட்டாயங்கள் இருந்தனவா?’’

‘‘காலதாமதம் ஆனது உண்மைதான். என் ‘கேஸ்’ மீது எனக்கு நம்பிக்கை உண்டு. நான் சென்னா ரெட்டியைச் சந்தேகப்படவில்லை- அவரை யாரும் மிரட்டிப் பணியவைக்க முடியாது. ஆனாலும், நான் டெல்லியில் உச்ச நீதிமன்றம் சென்று அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வகை செய்தேன். அதற்கு கவர்னர் விளக்கம் அளிக்கையில் இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் மீது வழக்குத் தொடரலாமா என்பதை முடிவு செய்ய மே மாதம் 31-ம் தேதி வரை அவகாசம் கேட்டிருந்தார். ஆனால், மார்ச் 25-ம் தேதியே அனுமதி கடிதத்தில் கையெழுத்து போட்டுவிட்டார்.’’

 ‘‘ஊழல் புகார்களை அள்ளி வீசுவது தமிழக அரசியல் வாதிகளுக்கு புதியதல்ல; தி.மு.க மீது சர்க்காரியா கமிஷன் போடப்பட்டது. எம்.ஜி.ஆர். மீது ஏகப்பட்ட புகார்கள். ஆனால், மக்கள் இவற்றை ‘சீரியஸ்’ ஆக எடுத்துக்கொள்ளவில்லையே!’’

‘‘யார் குற்றம் சுமத்துகிறார்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. ஒரு ஊழல் அரசியல்வாதி மற்றொரு ஊழல் அரசியல்வாதியைக் குற்றம் சாட்டுவதைத்தான் தமிழக மக்கள் இதுநாள்வரை பார்த்து வந்தார்கள். ஆனால், என்மீது இதுவரை எந்தக் குற்றச்சாட்டுகளும் இல்லை. ஜெயலலிதா மீதான புகார்களை ஆதாரத்துடன் அல்லவா கொடுத்திருக்கிறேன்.’’

 ‘‘சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் கோர்ட்டில் நிரூபணம் ஆகாத வரையில் ஜெயலலிதா சட்டத்தின் முன்பு நிரபராதிதானே. ஏன் அவரைப் பதவி விலகும்படி கூறுகிறீர்கள்!’’

‘‘இந்திய அரசியல் சட்டத்தில் ஒரு முதல்வர் மீது ஆளுநர் லஞ்ச ஊழல் குற்றங்களைப் பற்றி விசாரிக்க அனுமதி கொடுத்தது இதுவே முதல் முறையாகும். இப்போது சட்டத்தின் முன்பு ஜெயலலிதா குற்றவாளி. நான் பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் அங்கீகாரம் பெறுகிறேன். எல்லாமே தன் சுண்டுவிரலின்கீழ் வைத்திருக்கும்போது ஜெயலலிதாவை எப்படி விசாரிக்க முடியும்! சாட்சியங்கள் என்னவாகும்? அவருக்கு எதிராக சாட்சி சொல்ல யார் முன்வருவார்கள்? போலீஸையும் உள்துறையையும் கையில் வைத்திருக்கும் முதல்வரை யார் எதிர்ப்பார்கள்?’’

 ‘‘உங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?’’

‘‘இதற்காகவே உருவாக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதியின் முன்பு முதலில் நான் ஒரு புகார் மனு தர வேண்டும். சிறப்பு நீதிமன்றத்தை மத்திய அரசோ அல்லது மாநில அரசோ யார் வேண்டுமானாலும் அமைக்கலாம். தமிழக அரசு இதைச் செய்யும் என்று நினைக்க முடியுமா? ஆகவே, மத்திய அரசுதான் நியமிக்க வேண்டும். ஜெயலலிதா பதவி விலக மறுத்தால், சிறப்பு நீதிமன்றம் புது டெல்லியில் அமைக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்துவேன். இது ஜெயலலிதாவை அடிக்கடி டெல்லிக்கு இழுத்தடிக்க வசதியாக இருக்கும். விசாரணையின் முழுப்பொறுப்பும் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்படும். எனக்கு அவர்கள் உதவியாக இருப்பார்கள். ஜெயலலிதா முதலில் ‘பெயில்’ வாங்கிவிடுவது நல்லது என்று நினைக்கிறேன். அவர் மீது வாரண்ட் தரப்படும். ஆனால், முதல் நாள் அவர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும். பிறகு வேண்டுமானால் அவர் வழக்கறிஞர் வைத்து வாதாடலாம். அவர் பாஸ்போர்ட்டை சரண்டர் செய்ய வேண்டியது அவசியம். நான் கொடுத்த ஆவணங்களும் சி.பி.ஐ கண்டுபிடித்த ரெக்கார்டுகளும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை ‘டே டு டே’ முறையில் தினமும் தொடரும்.’’

சுவாமி உற்சாகமாக இப்படிப் பத்திரிகைகளுக்குப் பேட்டிகளைத் தட்டிக் கொண்டிருந்த நேரத்தில் போயஸ் கார்டனில் நிம்மதி தொலைத்து தூக்கமின்றித் தவிக்கத் தொடங்கினார் ஜெயலலிதா. அன்றைய போயஸ் கார்டன் காட்சிகள்...

போயஸ் கார்டன் காட்சிகள்

ஆளுநர் மாளிகையில் இருந்து, ஜெயலலிதாவிற்கு அந்தக் கடிதத்தின் நகல் 1995, ஏப்ரல் 1-ம் தேதி, சரியாக பகல் 12.30 மணிக்கு பேக்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அதை படித்து ஆத்திரம்... இயலாமை... வெறுப்பு... என்று நிதானம் இழந்த நிலையில் பதற்றத்தின் உச்சத்திற்குப் போன ஜெயலலிதா, அப்போது தனக்கு எதிரே நின்று கொண்டிருந்த அமைச்சர் கே.ஏ.கே.வை விளாசித் தள்ளினார். ‘‘நீங்கள் இத்தனை பேர் இருந்தும் என்ன பிரயோஜனம். வெளியே போங்கள். நான் எல்லாவற்றையும் உதறிவிட்டு எங்காவது போகிறேன்’’ என்று கத்தினார். அப்போது ஏற்பட்ட டென்ஷன் ஜெயலலிதாவிற்கு தீர்ப்பு வெளியாகும் கடைசி நாள் வரை தீரவில்லை. அதுதான் தீர்ப்புத் தேதி அறிவிக்கப்பட்ட பின்பும், அழிந்துபோன எல்.டி.டி.ஈ. இயக்கத்தால் என் உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே தேதியை மாற்றி அறிவிக்க வேண்டும் என்று மனுசெய்து கொண்டிருந்தார். டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் பராசரன், ராம் ஜெத்மலானி, கபில்சிபல் ஆகியோருடன் ஆளுநரின் உத்தரவுக்கு தடை வாங்க முடியுமா? என்று ஆலோசனை நடத்தினார்.

அத்துடன் பல இடங்களில் ஆலோசனை கேட்கத் தொடங்கினார். உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் பராசரன், ராம் ஜெத்மலானி, கபில் சிபல் என எல்லோரிடமும் பேசினார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாமா என்று கேட்டார். எடுத்த எடுப்பில், உச்ச நீதிமன்றம் வர வேண்டாம். முதலில் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடுங்கள். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றனர். இதையடுத்து முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமனைத் தொடர்புகொண்ட ஜெயலலிதா, கவர்னரின் அனுமதியை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப் போகிறேன். இதில் இதில் உங்கள் கருத்து என்ன? என்று கேட்டார்.

பொறுமையாகக் கேட்ட ஆர்.வி. ‘‘இது மிகப்பெரிய விபரீதமாகப் போகும். வழக்குத் தொடுத்தால் அது பற்றிய செய்திகள் தினந்தோறும் பத்திரிகைகளில் வெளியாகும். அதனால் உங்களுக்கு ஊழல்வாதி என்ற இமேஜ் ஏற்படும். சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற நேரத்தில் அது மிகப் பெரிய விளைவை ஏற்படுத்தும். அதற்குப் பதிலாக, இப்போதே உங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, வேறொருவரை முதல்வராக அமரச் செய்துவிட்டு, நீங்கள் வழக்கை எதிர் கொள்ளுங்கள். அதனால், உங்கள் இமேஜ் பெரியளவில் உயரும். நீங்கள் ராஜினாமா செய்தால், உங்களை உரிய மரியாதையுடன் வரவேற்று, உங்கள் ராஜினாமா கடிதத்தை கவர்னர் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளுக்கு நான் பொறுப்பு. அங்கு உங்களுக்கு கசப்பான அனுபவங்கள் ஏற்படாது என்றும் என்னால் உறுதியளிக்க முடியும்’’ என்றார். ஆனால், ஜெயலலிதா அதைச் செய்யவில்லை. மாறாக நீதிமன்றம் போகவே முடிவெடுத்தார்.

கலைஞர் கொடுத்த கனமான மனு!

ஏப்ரல் 15, 1995-ல் தி.மு.க. சார்பில், தமிழகத்தில் ஊழல்கள் பெருகிவிட்டன என்று சொல்லி 539 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தி.மு.க. சார்பில், கருணாநிதி, அன்பழகன், முரசொலி மாறன் ஆகியோர் கவர்னரிடம் கொண்டுபோய் கொடுத்தனர். ஏற்கெனவே பீஷ்ம நாராயண் சிங் ஆளுநராக இருந்தபோது, 18 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய பட்டியலை அவரிடம் தி.மு.க தந்தது. பீஷ்ம நாராயண் சிங் அதை வாங்கிக் கொண்டாரே தவிர, அதில் எந்த நடவடிகையும் எடுக்கவில்லை. ஆனால், சென்னா ரெட்டி நிச்சயம் அனுமதி தருவார் என்ற நம்பிக்கையில் அப்போது தந்த பதினெட்டுக் குற்றச்சாட்டுகளுடன் புதியதாகப் பத்து ஊழல்களைச் சேர்த்து 28 குற்றச்சாட்டுகளாக ஆளுநரிடம் அளித்தார் கலைஞர்.

‘முந்தைய கவர்னர் பீஷ்ம நாராயண் சிங் அனுமதி மறுத்த அதே குற்றச்சாட்டுகளுக்கு அடுத்த வந்த கவர்னர் எப்படி அனுமதி தர முடியும்..?’’ என்ற கேள்வி முன்கூட்டியே எழுந்தது. அதற்குப் பதிலாக 1986-ல் நடைபெற்ற ஒரு வழக்கை குறிப்பிட்டு அந்த வழக்கில் ‘பின்னால் பதவிக்கு வந்த ஒருவர் முன்னால் பதவியில் இருந்தவர் எடுத்த முடிவுகளுக்கு மாறான முடிவு எடுக்கச் சட்டத் தடை எதுவுமில்லை’ என்று சென்னை உயர்நீதிமன்றம் சொல்லியிருப்பதை தங்கள் மகஜரிலேயே குறிப்பிட்டு இருந்தது தி.மு.க.!

குற்றப்பட்டியலில் உள்ள மிக விஷயம் முதலமைச்சரின் சொத்து சம்பந்தப்பட்டது. ‘1990-91-ம் ஆண்டு கணக்குப்படி ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு 1.89 கோடி. ஆனால், 91-92 ஆண்டு் கணக்குப்படி 2.60 கோடி என்றும் முதல்வரின் சொத்து மதிப்பு வருமான வரித்துறைக்குத் தரப்பட்டிருக்கிறது. ஒரு ரூபாய் சம்பளம் வாங்கும் முதல்வரின் சொத்துக்களும் வருமானமும் இத்தனை விரைவாக உயர்ந்திருப்பது எப்படி?’’ என்பதுதான் குற்றச்சாட்டுப் பட்டியல் மனுவில் இருந்த முக்கிய விஷயம். இந்த மனுவை ஆளுநரிடம் அளிக்கக் கலைஞர் வந்தபோது முரசொலி மாறன், பேராசிரியர் அன்பழகன், ஆற்காடு வீராசுவாமி ஆகியோரும் உடன் வந்தனர். அதன்பின் அறிவாலயத்தில் பிரஸ்மீட் நடந்தது.

‘‘டெல்லியில் அரசியல் நிலைமை சரியில்லை போல் தெரிகிறதே... அப்படியிருக்கும்போது முதல்வர் மீது வழக்குத் தொடர உங்களுக்கு எப்படி அனுமதி கிடைக்கும்?’’ என்று ஒரு நிருபர் கேட்க, ‘‘அனுமதி தருவதில் என்ன பிரச்னை இருக்கிறது? ஏதாவது ஒரு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர அனுமதி தந்தால் போதும் என்றுதான் ஆளுநரிடம் கேட்டிருக்கிறோம். நிறைய ஆதாரங்களைத் தந்திருக்கிறோம். இன்னும் ஆதாரங்கள் தேவை என்றால்கூடத் தருகிறோம் என்று சொல்லியிருக்கிறோம்!’’ என்றார் கருணாநிதி.

இவர்களைத் தொடர்ந்து வாழப்பாடி ராமமூர்த்தி, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஆகியோரும் ஆளுக்கொரு அறிக்கையை கவர்னரைச் சந்தித்துக் கொடுத்தனர்.

நீதிமன்றத்தின் முதல் படிக்கட்டு...

கவர்னர் உத்தரவுக்கு தடைகோரி முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த வழக்கு, 1995, ஏப்ரல் 6-ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சிவராஜ் பாட்டீல் முன்பு விசாரணைக்கு வந்தது. சிம்பிளான கதர் வேட்டி, சட்டைக்கு மேலே மெல்லிய பட்டு ஜரிகை போட்ட அங்கவஸ்திரம் மினுமினுக்க சந்திரலேகா சகிதம் சரியாக 10 மணிக்கு நீதிமன்றத்துக்கு வந்தார் சுப்பிரமணியன் சுவாமி. எந்தவித டென்ஷனும் இன்றி ரொம்ப கூலாக இருந்தார். அவருடைய பாதுகாப்புப் படை வீரர்கள் அவரைச் சுற்றி ஏ.கே.47 துப்பாக்கிகளுடன் வளையம் அமைத்து நின்றுகொண்டனர். முதல்வர் சார்பில் வழக்கறிஞர்கள் ஜீனசேனன், அய்யாத்துரை உடன்வர மூத்த வழக்கறிஞர் பராசரன் வந்தார். கூடவே கட்டுக்கட்டாக புத்தகங்களை சுமந்தபடி ஆட்கள் வந்தனர்! நீதிமன்றத்துக்கு உள்ளே சந்திரலேகாவுடன் சுவாமி நுழைந்தபோதும், பிறகு வெளியேறியபோதும் உள்நாட்டு வெளிநாட்டு டி.வி காமிராக்கள் அவரைச் சூழ்ந்துகொண்டன. உயர் நீதிமன்றத்தில் இருந்த பெரும்பாலான வக்கீல்கள் அங்குகூடி நின்றுவிட்டனர். வழக்கு எப்படி நடக்கிறது என்று பார்க்கிற ஆவல் அத்தனை பேர் முகத்திலும் பொங்கியது. இதுதவிர, சுவாமியுடன் வந்திருந்த பல பிரமுகர்களும் நீதிமன்ற அறையை அடைத்தபடி நின்றனர். ஒரு வழக்கறிஞர் முரசொலி பத்திரிகையைக் கையில் வைத்துக்கொண்டு ‘‘கலைஞர் இதில் சில பாயின்டுகளை எழுதியிருக்கிறார். சுவாமிக்கு இந்த பாயிண்டுகள் வாதாட உதவும்!’’ என்று நெரிசலில் முன்னேறிப் போய் சுவாமியிடம் கொடுத்தார். அவரும் புன்னகையுடன் அந்த முரசொலியை வாங்கித் தனது ஃபைலில் வைத்துக் கொண்டார்.

வாதாடும் வக்கீல்களுக்கு ஒதுக்கப்படும் நீண்ட மேசை முன்னால் வந்து அமர்ந்த சுவாமி, வழக்கு சம்பந்தமான தஸ்தாவேஜுகளில் உள்ள முக்கியமான வார்த்தைகளை ரோஸ் நிற பேனாவால் நிதானமாக கோடிட்டுக் கொண்டார். 25-வது வழக்காக ஜெயலலிதாவின் வழக்கு வந்தது. துவக்கத்திலேயே சுவாமி ‘‘கவர்னர் தந்த அனுமதிக்கு தடைகேட்டு வழக்குத் தொடர்ந்திருப்பதாக பத்திரிகைகள் வாயிலாகத்தான் தெரிந்துகொண்டு இங்கு வந்திருக்கிறோம். எங்களுக்குக் கொடுக்க வேண்டிய நகல்களை இங்கேயே வழங்கலாம்’ நான் வாதாடத் தயார்...’’ என்றார்.

ஜெயலலிதா தரப்பில் ஆஜரானார் வழக்கறிஞர் பராசரன். அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சட்ட பாயின்டுகளை மேற்கோள்காட்டிப் பேசிக் கொண்டேயிருந்தார் பராசரன். சுவாமி சிரித்தமுகத்துடன் வாதத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

‘‘முதல்வர் மீது கிரிமினல் வழக்குத் தொடர சுவாமிக்கு கவர்னர் அனுமதி அளித்த செய்தி கூட முதல்வருக்கு முறையாகத் தெரிவிக்கப்படவில்லை...!’’ என்று பராசரன் சொன்னபோது குறுக்கிட்டார் சுவாமி, ‘‘சரி... கவர்னர் உங்களுக்குத் தெரிவிக்காதபோது நீங்கள் எப்படித் தடை கேட்டு கோர்ட்டுக்கு வந்திருக்கிறீர்கள்...?’’ என்று கேட்டார். கண்கள் சிவக்க கோபமாகிப் போன பராசரன், சுவாமியை நோக்கி, ‘‘நீங்கள்தான் துண்டுப் பிரசுரம் போல கவர்னரின் அனுமதிக் கடிதத்தை விநியோகித்திருக்கிறீர்களே...!’’ என்று சொன்னவர்.... ‘‘வழக்கு சம்பந்தமாக பத்திரிகையாளர்களைக் கூட்டிவைத்துக் கருத்துச் சொல்வது சுப்பிரமணியம் சுவாமிக்கு வழக்கமாகிப் போய்விட்டது! அது வழக்கு நடைமுறையைப் பாதிக்கும்.! எனவே, சுவாமி இனி அதைத் தவிர்க்க வேண்டும்...!’’ என்று சொன்னார்.

பராசரன் இப்படிச் சொன்னவுடன் எழுந்து அதை மறுத்தார் சுவாமி. ‘‘என்னிடம் அதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன!’’ என்று பராசரன் பதில் தந்ததும் உட்கார்ந்துவிட்டார்.

‘‘முதல்வர் மீது சுப்பிரமணியம் சுவாமி கிரிமினல் வழக்குப் போட அனுமதியளித்தது அரசியல் உள்நோக்கம் கொண்டது. காழ்ப்பு உணர்ச்சிதான் இதற்குக் காரணம்..!’’ என்று பராசரன் சொல்ல உடனடியாக பதில் தந்தார் சுவாமி.

‘‘கடந்த 1994-ம் வருடம் டிசம்பர் மாதம் கவர்னரின் அனுமதியில்லாது அமைச்சரவையை ஜெயலலிதா மாற்றியமைத்தது தவறு! இதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது!’ என்று கூறி தி.மு.க. வழக்கறிஞர் ஒருவர் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அந்த வழக்குக்காக ஜெயலலிதா தாக்கல் செய்த பதில் மனுவில் ‘எனக்கும் கவர்னருக்கும் எந்தவித பனிப்போரும் அரசியல் பிரச்னைகளும் இதுநாள் வரை இல்லை!’ என்று சொல்லியிருக்கிறார். அப்படி இருக்கும்போது இப்போது திடீரென கவர்னருக்கு உள்நோக்கம் உள்ளது என்று சொல்வது எப்படி...?’’ என்று வினா எழுப்பினார் சுவாமி. இப்படி சுவாமி ஒவ்வொரு முறையும் மடக்கிக் கேட்கும்போது கூடியிருந்த வழக்கறிஞர்களெல்லாம் பலத்த சிரிப்பொலி எழுப்பினார்கள். பராசரன் இந்தச் சிரிப்புக்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, நீதிமன்றத்தை அமைதிப்படுத்தினார் நீதிபதி!

‘‘ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் முதல்வர் மீது கிரிமினல் வழக்குத் தொடர தி.மு.க தரப்பில் கவர்னரிடம் அனுமதி கேட்டபோது, அப்போதைய கவர்னர் பீஷ்ம நாராயண் சிங் அனுமதியளிக்கவில்லை! அதன்பிறகு ஏற்கெனவே தி.மு.க சார்பில் முதல்வர் ஜெயலலிதா மீது தொடர்ந்த கிரிமினல் வழக்கும், ஆளுநர் அனுமதியளிக்காததால் தள்ளுபடி செய்யப் பட்டது! ஒரு காரணத்துக்காக ஏற்கெனவே இருந்த ஆளுநர் அனுமதி வழங்காதபோது, அதே காரணத்துக்கு மற்றொரு ஆளுநர் அனுமதி வழங்கியது தவறு!’’ என்று பராசரன் சொல்ல, ரொம்ப காஷுவலாகக் குறிக்கிட்ட சுவாமி, ‘‘பழைய ஆளுநர் அனுமதி மறுத்தது சரி! புதிய கவர்னர் அனுமதி அளித்தது தவறு என்றால் என்ன அர்த்தம்! இவர்களுக்கு வேண்டியவர் செய்தால் சரி... வேண்டாதவர் செய்தால் தவறு என்பதுதானே! அனுமதி அளிக்கவோ, மறுக்கவோ ஆளுநருக்கு உரிமையிருக்கிறது என்பதைத்தான் பார்க்க வேண்டும். வழக்குப் போட்டவர் அதிகாரம் படைத்தவராக இருக்கலாம். பணம் படைத்தவராக இருக்கலாம். அதற்காக நீதிமன்றம் அவருக்கு ரப்பர் ஸ்டாம்ப்பாக இருக்கக்கூடாது!’’ என்றார் சுவாமி. அடுத்து சுவாமி பேச வந்தபோது வழக்கறிஞர் பராசரன் பற்றி வேடிக்கையாக இப்படி ஆரம்பித்தார். ‘‘வழக்காடுவதற்காக இந்தியாவிலேயே அதிக பணம் வாங்கும் ஒரே வழக்கறிஞர் பராசரன்தான். அதனால்தான் நான் அவரை வழக்கறிஞராக வைத்துக்கொள்ள முடியவில்லை. எனக்கு நானே வாதாடுகிறேன். மூத்த பெரும் வழக்கறிஞர், ஒரு நாளைக்கு நாட்டின் ஒரு மூலையில் இருப்பவர், அடுத்த நாள் காலை மற்றொரு மூலைக்கு வந்து வாதாடிக் கொண்டிருப்பார்...’’ என்று சொல்லி நிறுத்த...

உடனே பராசரன் ‘‘நான் அதிகமாக ஆசைப்படுவதில்லை. சில வழக்குகளில் நான் பணம் வாங்காமலும் ஆஜராகி இருக்கிறேன்...! சில வழக்குகளில் நாங்கள் வாங்கும் பணத்தில் பாதித் தொகையைப் புத்தகத்துக்கே செலவழிக்கிறோம். ஒரு வழக்கில் நான் ஆஜரானபோது, அதற்குத் தேவையான விவரங்களைக்கொண்ட ஒரு புத்தகத்தின் விலை 14,000 ரூபாய்!’’ என்றார் சாதாரணமாக!

உடனே சுவாமி ‘‘ஏன் நீங்கள் ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்தில் அந்தப் புத்தகத்தை அச்சிட்டிருந்தால் சீப்பாகக் கிடைத்திருக்குமே’’ என்று படுகாஷுவலாக சொல்லிவிட்டு நீதிபதியைப் பார்க்க... நீதிமன்றமே சிரித்து விட்டது. (நீதிபதி உட்பட)

பராசரன் சீரியஸாகிவிட்டார் ‘‘இதைப்போல ஜோக் அடிப்பது கூடாது. இது நீதிமன்றம்!’’ என சத்தம் போட்டார். ஒரு சில நிமிடம் நிசப்தம். தொடர்ந்து சுவாமி விஷயத்துக்கு வந்தார். ‘‘மாதத்துக்கு ஒரு ரூபாய் மட்டும் சம்பளம் வாங்குபவர் நமது முதல்வர். இன்றைக்கு ஒரு ரூபாயின் மதிப்பு என்பதே இருபத்தைந்து பைசாவுக்கும் குறைவு. அப்படியிருக்க... ஒரு வழக்குக்குப் பல லட்ச ரூபாய் வாங்கும் பராசரனை தனக்காக வாதாட நியமித்திருக்கிறார். இதிலிருந்து அவர் தவறு செய்திருப்பாரா... இல்லையா? என்பதை யூகித்துக் கொள்ளலாம்!’’ என்று சொல்லிப் புன்னகைத்தார் சுவாமி.

பராசரன் இடையில் எழுந்து ஏதோ சத்தம் போட சுவாமி புன்னகையைத் தொடர்ந்தபடியே பேச்சையும் தொடர்ந்தார்.

‘‘இதற்கு முன்பு தொடரப்பட்ட வழக்குகளில் முதல்வர் ஜெயலலிதா தரப்பினர் ‘ஹிஸ் எக்ஸலன்ஸி’ என்ற மரியாதைக்குரிய வார்த்தையைப் பயன்படுத்தி ஆளுநரைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்த முறை பெட்டிஷனில் இந்த வார்த்தை குறிப்பிடாமல் விடப்பட்டு இருக்கிறது. இதிலிருந்தே ஆளுநர் மீது இவர்கள் வைத்திருக்கும் மரியாதை தெரியவருகிறது. நான், 1993-ம் வருடமே முதல்வர் மீது கிரிமினல் வழக்குத் தொடுக்க அனுமதி கேட்டு ஆளுநரிடம் மனுச் செய்து இருந்தேன். அதன் பிறகு இரண்டு வருடங்கள் கழித்துத்தான் எனக்கு அவர் அனுமதி அளித்துள்ளார். இதில் இருந்தே தெரிகிறது, அவர் நன்கு ஆராய்ந்த பிறகுதான் எனக்கு அனுமதி அளித்துள்ளார் என்பது. இதில் எந்தவித தவறான எண்ணமும் இல்லை. அரசியல் சட்டத்தில் ஆளுநருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் அனுமதியளிக்கப்பட்டுள்ள இந்தப் பிரச்னையில், நீதிமன்றம் தலையிட அதிகாரம் கிடையாது...’’ என்று சொல்லி தன் வாதத்தை முடித்துக் கொண்டார் சுவாமி. ஆளுநரின் சார்பாக வந்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் வழக்குத் தொடர ஆளுநர் அனுமதித்தது சட்ட ரீதியானதுதான் என்று சில விதிகளை மேற்கோள் காட்டினார். கூர்மையாக எல்லா வாதங்களையும் கவனித்த நீதிபதி சிவராஜ் பாட்டீல், ‘‘இந்த வழக்கில் அரசியல் சட்டப்பிரச்னை இருக்கிறது. ஆகவே, டிவிஷன் பென்ச்சுக்கு இந்த வழக்கை அனுப்புகிறேன்...’’ எனச் சொல்லி அப்போதைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்!

நீதிமன்றத்தில் தங்களுக்குச் சாதகமாக எதுவும் நடக்கவில்லை என்பதை அறிந்த அ.தி.மு.க.வினர் கொந்தளித்தனர். அதையடுத்து திரும்பிய பக்கம் எல்லாம் சுப்பிரமணியம் சுவாமி மீதும் ஆளுநர் சென்னா ரெட்டி மீதும் தாக்குதல் நடந்தது.

அராஜக கும்பலும் அசராத சுவாமியும்...!

1995, ஏப்ரல் 8, சென்னை ‘‘ஜெ.ஜெயலலிதான்னா ஜெயில் ஜெயலலிதான்னு அர்த்தம். ஆட்சி மாறின அடுத்த நிமிஷம் அவாளை உள்ளே தள்ளுவேன்...’’ தன்னைச் சூழ்ந்து அடைகாத்த மாதிரி பாதுகாப்புத் தந்து கொண்டிருந்த போலீஸாருக்கு மத்தியில் நின்றுகொண்டு ஆவேசமாய் அந்தக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார் சுப்பிரமணியம் சுவாமி. கற்களும் சோடா பாட்டில்களும் பறக்க மேடையெதிரே கலவரக் கோலமாய் கிடந்தது. மொத்த அலங்கோலத்தையும் சுவாமியின் ஆட்கள் படம் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

சுவாமிக்கு எதிராக ஆளும் கட்சி வன்முறையைப் பிரயோகிப்பது இது முதன்முறையல்ல. இருந்தாலும் இந்த முறை நடந்தது உச்சகட்ட வெறியாட்டம். ஜெயலலிதாவின் மீது ஊழல் வழக்குத் தொடர சுப்பிரமணியம் சுவாமிக்கு ஆளுநர் அனுமதி அளித்த பிறகு நடக்கிற முதல் கூட்டம் என்பதால்தான் இத்தனை பதற்றம். அந்தச் சனிக்கிழமை கூட்டம் நடந்த தி.நகர் காலை முதலே ‘பிஸி’யாகத்தான் இருந்தது. ஒரு பக்கம் கூட்ட மேடைக்கான ஏற்பாடுகள் சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருந்தன!

‘‘காலை முதல் அடிக்கடி ஆட்டோக்கள் சீறிக் கொண்டு வந்து நிற்க திமுதிமுவென ஆட்கள் இறங்கினார்கள். கிரேடு கிரேடாய் சோடா பாட்டில்கள், இரும்புக் கம்பிகள், கருங்கற்கள் என்று விதவிதமான ஆயுதங்கள் இறக்கப்பட்டன. பக்கத்துக் குடிசைகளில் அவற்றைப் பத்திரப்படுத்திவிட்டு வெளியே வந்தனர்!’’. இவற்றையெல்லாம் எதிர்பார்த்துத் தயாராக வந்திருந்த ஜனதா கட்சியினர் கையில் ஸ்டில் போட்டோ காமிரா, வீடியோ காமிரா எடுத்துக்கொண்டு பார்க்கிற காட்சிகளை முன்னெச்சரிக்கையாகப் பதிவு செய்து கொண்டிருந்தனர்! கூட்டம் துவங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே நாம் சென்றுவிட்டோம். ‘‘சுவாமி புதுசாக என்ன சொல்லப் போகிறார்..’’ என்ற ஆர்வத்தில் திரண்ட கூட்டத்துக்குள் திமுதிமுவென ஒரு பெரிய பெண்கள் படையே வந்து மேடைக்கு முன்னராக இடம்பிடித்துக் கொண்டு உட்கார்ந்தது. ‘‘இன்னைக்குக் கலாட்டா நிச்சயம்...’’ என்று பக்கத்திலிருந்த ஒரு நிருபர் கிசுகிசுத்தார். ‘‘இதே பெண்கள் பட்டாளம்தான் முன்பொருமுறை கோர்ட்டில் சுவாமி வந்தபோது துணிச்சலாக சேலையை வரிந்து கட்டிக்கொண்டு அசிங்கமாக ஆடிக்காட்டியது’’ என்று நம்மிடம் கவலையுடன் சொன்னார் ஜனதா கட்சிப் பிரமுகர் ஒருவர்.

எழுந்து மேடைக்குப் பின்பக்கமாய் நடந்து கவனிக்க ஆரம்பித்தோம். ஏழெட்டுப் பேர் கொண்ட கும்பல் ஒன்றிடம் காலில் விழாத குறையாக கெஞ்சிக் கொண்டிருந்தனர் போலீஸ்காரர்கள். ‘‘ஆள் தெரியாம எங்களோடு மோதாத. அண்ணன்தான் அனுப்பிச்சிருக்காரு. புரியுதா...’’ என்று ஒரு கும்பல் மிரட்டிக் கொண்டிருக்க, படாதபாடுபட்டுத் தடுத்தது போலீஸ். ‘இதெல்லாம் சரியில்லே...’’ அதட்ட முயன்ற ஒரு இன்ஸ்பெக்டரை ‘‘டாய்... நீ தி.மு.க காரன்தானே..’’ என்று பதிலுக்கு மிரட்ட, அவர் நகர்ந்துவிட்டார்.

அதே நேரத்தில் அந்தப் பக்கமிருந்த பெட்டிக்கடை, டீக்கடை என்று ஒவ்வொன்றிலும் தழும்பு முகங்களோடு கும்பல் கும்பலாய் நின்றுகொண்டு ‘‘ழ்ழ்... ழ்ழேய்...’ என்ற போதையில் புலம்ப ஆரம்பித்தனர்.

கூட்டம் துவங்குவதற்கு முன் பொதுமக்களை உற்சாகப்படுத்த நடந்த நடன நிகழ்ச்சியில் ‘ச்சோளிகே பீச்சே க்யா ஹே...’ என்று பாடல்கள் கலக்க, விசில் பறந்தது.

இரவு ஒன்பது மணி இருக்கும். தென்சென்னைத் தொகுதி எம்.பியான தரன், சந்திரலேகா ஆகியோருடன் சுப்பிரமணியம் சுவாமி மேடைக்கு வந்தார். கூட்டம் துவங்கியது. சென்னைச் சேர்ந்த ஜனதா கட்சிப் பிரமுகர் ஒருவர் பேச ஆரம்பித்தார். அதுவரை அமைதியாயிருந்த முன்வரிசைப் பெண்கள் மெல்லக் கூட்டத்திலிருந்து வெளியேறினர். மேடைக்கு இடப்புறம் செல்லும் சாலையில் நின்றிருந்த போலீஸ் வாகனங்களுக்குப் பின்புறமாகப் போனார்கள். பார்த்துக் கொண்டிருந்தோம். 10 நிமிடம்கூட கடந்திருக்காது. அந்தப் பெண்கள் தங்களது மடியில் கருங்கற்களைக் கட்டிக்கொண்டு திரும்பக் கூட்டத்துக்குள் வந்து உட்கார்ந்துகொண்டார்கள். இதைக் கவனித்த ஜனதா பிரமுகர்கள் சிலர் சுவாமி காதில் ஏதோ சொல்ல... அவர் சிரித்தபடியே பதிலுக்கு ஏதோ சொன்னார். சந்திரலேகா பேச வந்தார். ‘‘ஜெயலலிதா’’ என்று பெயரை உச்சரித்ததும் ஆங்காரமாய் எழுந்தது முன்வரிசைப் பெண்கள் கும்பல். இந்தச் சலசலப்பைப் பொருட்படுத்தாது ‘‘ஜெயலலிதாவின் கண்ணில் விரலை விட்டு ஆட்டக்கூடிய சக்தி எங்கள் தலைவருக்கு உண்டு’’ என்று சந்திரலேகா சொன்னதுதான் தாமதம்.... ‘டமடம‘வென மேடை மீது கற்கள் வீசப்பட்டன. அதிர்ந்து போய்க் கூட்டம் சிதறத் துவங்க... எல்லாப் பக்கமும் பதட்டம்! அமளிக்கிடையில் காஷுவலாகச் சேலையைத் தூக்கி மிகமிக அருவருப்பான நெளிவு சுளிவுகளுடன் ஆட ஆரம்பித்தனர் அந்த முன்வரிசைப் பெண்கள்! அவர்கள் வாயிலிருந்து தெறித்த கமென்ட்களால் காது கூசியது. அவர்களுக்குப் பின்னால் அமர்ந்திருந்த கூலிப் பட்டாளம் கற்களையும் சோடா பாட்டில்களையும் திராவக பல்புகளையும் சுழற்றியடிக்க மேடையில் சிலீர் சிலீர் என்று கண்ணாடித் துகள்கள் சிதறி விழுந்தன!

செய்வதறியாது சிறிது நேரம் திகைத்து நின்ற மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை போலீஸார் சுதாரித்துக் கொண்டு மேடைக்குத் தாவினர். யார்? எங்கே இருக்கிறார்கள்? என்ன நடக்கிறது? என்று புரியாமல் களேபரம். கல்வீச்சால் அடிபட்டு ரத்தம் சொட்டத் துவங்கிய சிலரை அள்ளிக்கொண்டு சிலர் ஓட... சிலர் துரத்த.... அந்த ஏரியாவே போர்க்களம் போல் ஆகிவிட்டது. மேடையில் இருந்த சந்திரலேகா, சுப்பிரமணியம் சுவாமி, தரன் எம்.பி ஆகியோரைச் சூழ்ந்துகொண்டு அப்படியே மேடையில் உட்கார வைத்து சேர்கள்... துண்டுகள்... என்று கையில் கிடைத்ததை எல்லாம் வைத்துத் தடுத்து சோடா பாட்டில்களும் கற்களும் சுவாமி, சந்திரலேகா ஆகியோர் மீது படாதபடி தாங்கிக்கொண்டனர் ஜனதா கட்சித் தொண்டர்கள்.

இவ்வளவு கலாட்டாக்களை அரங்கேற்றிக் கொண்டிருந்த வன்முறைக் கும்பலைச் சுற்றி நின்றிருந்த தமிழகப் போலீஸார் நடப்பவற்றையெல்லாம் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். பலர் ஒதுங்கி ஓரம்போய் நின்றுவிட்டார்கள்.

மேடையில் இருந்த தொண்டர்கள் உயிருக்குப் பயந்து மைக் மூலம் ‘‘போலீஸாரைக் கேட்டுக் கொள்கிறோம்... கலகம் செய்கிறவர்களை விரட்டுங்கள்’’ என்று வேண்டுகோள் விடுத்தவண்ணம் இருக்க, தமிழக போலீஸார் அதைச் சட்டை செய்வதாய் இல்லை.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த சிலர் மேடையைவிட்டு இறங்கிவந்து சென்னை நகரக் காவல் துறை இணை ஆணையர் ராதாகிருஷ்ண ராஜாவிடம் கூட்டத்தை கலைக்கும்படி கெஞ்சினர். ‘அட்லீஸ்ட் தடியடிக்காவது உத்தரவிடுங்கள்’ என்று கேட்டனர். அவர் தன் உதடுகளைப் பிரிக்கவேயில்லை. வெறுத்துப்போன மத்திய போலீஸார் மேடைக்குத் திரும்பிவிட்டனர். ‘ஜாயின்ட் கமிஷனர் ராதாகிருஷ்ண ராஜா மேடைக்கு வரவும்’ என மைக் மூலம் மேடையிலிருந்து அழைப்பு வந்தபோதும்கூட, அவர் தன்னுடைய ஜீப்புக்குப் பின்னால் போய் நின்று கொண்டார். மேடைப் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.

கூட்டத்திலிருந்து செருப்புகளும், சோடா பாட்டில்களும் தொடர்ந்து மேடைக்கு வந்துகொண்டே இருக்கவே, பொறுமை இழந்த ஜனதா தொண்டர்கள், ‘‘பேசுங்க அம்மா பேசுங்க அம்மா.. நாங்க இருக்கோம்’’ என்று ஆத்திரத்துடன் கூச்சலிட்டனர். நடப்பவற்றையெல்லாம் ரிசர்வ் போலீஸ் தடுப்புக்கு மத்தியில் இருந்தபடி தனது உலகப் பிரசித்த புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த சுவாமி, சந்திரலேகாவைப் பேசும்படி சைகை காட்டினார். சந்திரலேகா மீண்டும் பேசத் துவங்கினார். அவரது குரல் மட்டுமே வெளியில் கேட்க, உருவத்தை முழுவதுமாக மத்திய போலீஸாரும் தொண்டர்களும் மறைத்து நின்றனர்.

‘‘சசிகலாவைப் பற்றிச் சொன்னால் ஜெயலலிதாவுக்கு ஏன் கோபம் வருகிறது? இந்த ஜெயலலிதா யார்? டிஸ்கோ சாந்தி, சில்க் ஸ்மிதாவுக்கு முன்னோடிதானே! ‘வைரம்’ படத்தில் நடித்த ஜெயலலிதா தமிழகத்தை ஆட்சி செய்யும்போது தமிழ்ப் பண்பாடு எப்படி இருக்கும்? இங்கே போலீஸார் வன்முறைக் கும்பலுக்குப் பாதுகாப்பாக இருக்கிறார்கள். இந்த ஆட்சி போனபிறகு, கமிஷனர் ராஜகோபாலன் கூடத் தப்பிவிடுவார். ஆனால், ஜாயின்ட் கமிஷனர் ராதாகிருஷ்ண ராஜா... நீதான் மாட்டிக்குவே. மத்திய அரசின் சி.பி.ஐ, மற்றும் ஐ.பி போன்ற துறைகளின் அதிகாரிகள் இங்கே உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று இரவே கூட அ.தி.மு.க ஆட்சி கலைக்கப்படலாம்!’’ என்று ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு ஆக்ரோஷமாகப் பேசினார் சந்திரலேகா. இதைக்கேட்ட பிறகு அந்த வன்முறைக் கும்பலின் ஆக்ரோஷம் இன்னும் அதிகரித்தது. ஏக டென்ஷனாகச் சந்திரலேகாவை கேவலமான வார்த்தைகளால் வர்ணனை செய்தனர்.

பேச நினைத்ததை முழுக்கப் பேசி முடித்த பிறகுதான் சந்திரலேகா அமர்ந்தார். வியர்வையும் புழுக்கமும் தாளாமல் முகத்தை அங்கவஸ்திரத்தால் துடைத்தபடியே... ‘மைக்’கை வாங்கினார் சுவாமி.

மத்திய போலீஸாரின் அரணுக்குள் இருந்தபடியே பேசத் துவங்கினார்...

‘‘சென்னை நகர போலீஸ் கமிஷனருக்கு வெட்கமேயில்லை. ஜெயலலிதா காலில் விழுந்து கிடக்கிறார். மந்திரிகளும் விழுந்து கிடக்கிறார்கள். ஆனால், அந்த ஜெயலலிதாவே என் கால்ல விழுந்தவதான். யார்... யார்... இங்கே வந்து கலாட்டா பண்றீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். உங்களையெல்லாம் வீடியோவும் போட்டோவும் கூட எடுத்து வெச்சிருக்கேன். ஆட்சி மாறின அடுத்த நிமிஷமே அவளையும் உள்ளே தள்ளுவேன். உங்களையும் தேடிப் பிடிச்சு உள்ளே தள்ளுவேன்’’ என்று பேச... ஏற்கெனவே வெறியில் இருந்த வன்முறையாளர்கள் தொண்டை கிழியக் கத்தியபடி பாட்டில் மற்றும் கல்வீச்சை இரண்டு மடங்காக்கினார்கள்.

‘‘அடிங்கடா அவனை! நம்ம அம்மாவையே உள்ளே தள்ளுவானாமே!’’ என்று அலறிக்கொண்டே பக்கத்திலிருந்த பெட்ரோல் பங்குக்குள் பாய்ந்த ஒரு கும்பல் ‘பெட்ரோல் கொடுடா! மேடையோட அவனையும் அவளையும் எரிச்சிடறோம்’ என்று பங்கில் இருந்தவரை மிரட்டி கேன்களில் பெட்ரோலை நிரப்பிக் கொண்டு வந்தது.

அமைதியாக இதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போலீஸார், கலவரக்கும்பல் பெட்ரோல் கேனைக் கொண்டு வருவதைப் பார்த்து பயந்து நடுங்கிவிட்டனர். அதற்கு மேலும் பார்த்துக் கொண்டிருக்க முடியாமல், தலைதெறிக்க ஓடிப்போய் அந்தக் கும்பலைத் தடுத்து, மாறி மாறிக் கையெடுத்துக் கும்பிட்ட படியே அந்த பெட்ரோல் பங்க்கின் வெளியே அழைத்து வந்தனர்.

இன்னும் சில போலீஸார் மேடையேறி, ‘சீக்கிரம் மீட்டிங்கை முடிச்சுடுங்க எங்க நிலைமையைப் புரிஞ்சுக்கோங்க’’ என்று கெஞ்சியது. அவர்களை எரித்துவிடுவது போல் பார்த்துவிட்டு மேலும் சிறிது பேசி முடித்துவிட்டுத்தான் தன்னுடைய பாதுகாப்பு வேனில் ஏறினார் சுவாமி. அந்தச் சிறிய வேனுக்குள் மேடையில் இருந்த அவ்வளவு பேரும் ஏறிவிட, இடம் இல்லாததால் தொண்டர்கள் வேனின் மேலும் ஏறிக்கொள்ள மத்திய பாதுகாப்பு படை படைசூழ சுவாமியும் சந்திரலேகாவும் அந்த இடத்தை விட்டு வெளியேறினார்கள்.

‘‘இந்தப் பொதுக்கூட்டத்தைச் சிதறடிக்க அனுப்பப்பட்ட பெரும்பாலான பெண்கள் வடசென்னைப் பகுதியைச் சேர்ந்தவர்கள்’ சுவாமி மீது கத்தி வீசுவது அல்லது மேடையோடு கொளுத்துவது இதுதான் அந்தப் பெண்களுக்குச் சொல்லப்பட்ட திட்டம்! அளவுக்கதிகமான மத்திய ரிசர்வ் போலீஸார் ஆயுதங்களோடு வந்திருந்ததால் அந்தத் திட்டம் நிறைவேறாமல் போய்விட்டது!’’ என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டனர் ஜனதா கட்சியினர். ‘‘என்னிக்கு இருந்தாலும் சரி... நாங்க அவன் உயிரை எடுக்காம விடமாட்டோம்’’ என்று உரக்கச் சவால் விட்டபடியே அந்தக் கும்பல் ஆற அமரக் கலைந்து சென்றது!

 ஆளும் கட்சியினர் மத்தியில் சிக்கிய ஆளுநர்!

ஜெயலலிதா மீது வழக்குத் தொடர சுப்பிரமணியம் சுவாமிக்கு ஆளுநர் அனுமதி தந்துவிட்ட பிறகு நடப்பவற்றை நாடறியும்! அதில் முக்கிய பகுதிதான் ஆளுநரே வன்முறைக் கும்பலிடம் சிக்கிக்கொண்ட சம்பவம்!

ஏப்ரல் ஒன்பதாம் தேதி... விழுப்புரம் வாசவி கல்யாண மண்டபத்தில் அ.திமு.க செயல்வீரர்கள் கூட்டம் ஒன்று திடீரென ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டத்தில் பேசப்பட்ட முக்கியமான ஒரே விஷயம் ஆளுநரின் புதுவை விசிட் பற்றியது. புதுவை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக ஆளுநர் சென்னா ரெட்டி சென்னையிலிருந்து திண்டிவனம் வழியாக காரில் செல்ல விருக்கிறார் என்ற விவரம் தெரிந்த பிறகு கூட்டப்பட்ட நிகழ்ச்சி அது. கூட்டத்தில் அமைச்சர்கள் ஜனார்தனன், ஆனந்தன் ஆகியோர் கலந்துகொண்டு பரபரப்பாகப் பேசியிருக்கிறார்கள். விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க செயலாளரான எஸ்.எஸ்.பன்னீர்செல்வம் இந்தக் கூட்டத்தை விறுவிறுப்பாக நடத்தினார். ஆளுநருக்கு கறுப்புக்கொடி காட்டுவது என்று முடிவானது. ‘‘ஒரு விஷயம் மட்டும் நினைவிருக்கட்டும். இது வழக்கமான கறுப்புக்கொடி போராட்டம் இல்லை. இது ‘‘வேறமாதிரி’’ செய்ய வேண்டிய விஷயம்!’’ என்றே வெளிப்படையாகப் பேசப்பட்டிருக்கிறது. ‘அமைச்சர்களோ எம்.எல்.ஏக்களோ இதில் கலந்துகொள்ளாமலிருப்பது நல்லது. அவர்கள் சட்டசபை நிகழ்ச்சிகளுக்குப் போய்விடட்டும். அதே சமயம் இங்கே போராட்டம் நடக்கட்டும்.’ என்றும் முடிவு செய்யப்பட்டது. ரத்தத்தின் ரத்தங்கள் ஜோராய்க் கைதட்ட கூட்டம் முடிவடைந்திருக்கிறது. அன்று மாலை செயல்வீரர் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள் என்று பத்திரிகைகளுக்குத் தரப்பட்ட லிஸ்ட்டில் வழக்கு அனுமதி நகல் எரிப்பு, கண்டன ஊர்வலம், முதல்வர் மீது முழு நம்பிக்கை தெரிவிப்பது என்று மட்டும் இருந்தது. முக்கியமான கறுப்புக்கொடி ‘புரோக்கிராம்’ இல்லை. ஆனால், கறுப்புக்கொடி போராட்ட திட்டம் பற்றித் தெரிய வந்ததும் தர்மசங்கடம் அடைந்தது போலீஸ்!

10-ம் தேதி அதிகாலையில் மாவட்ட கலெக்டர் அசோக்குமார் குப்தா அவசரக் கூட்டம் போட்டு மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகளை அழைத்துப் பேசினார். ‘ஆளுநர் வருகையின்போது அசம்பாவிதம் ஏதும் நேரக் கூடாது’ என்று ஒரே வரியில் உத்தரவு போட்டுவிட்டு நகர்ந்து கொண்டார் கலெக்டர். உடனடியாக விழுப்புரம் எஸ்.பி.யும் பிற டி.எஸ்.பி.க்களும் திண்டிவனம் வந்துவிட்டனர். ரிசர்வ் போலீஸ் படையும் வரவழைக்கப்பட்டது. இன்னொருபுறம் அ.தி.மு.கவினர் பக்காவாய்த் தங்கள் வேலைகளை நடத்திக் கொண்டிருந்தனர். திண்டிவனம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகிலேயே ரயில்வே கோடௌன் ஒன்று இருக்கிறது. சவுக்குக் கட்டைகள், காலி பாட்டில்கள், பழைய செருப்புகள், கற்கள் என்று கொண்டுவந்து குவித்து... ஒரு மினி ஆயுதக் கிடங்கே அங்கு தயாராயிருந்தது. கறுப்புக்கொடி போராட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த பலரது கைகளில் உருட்டுத் தடிகள்! நுனியில் ஒப்புக்கு ஒரு கறுப்புக்கொடி அல்லது கட்சிக் கொடி. கரை வேட்டிகளுக்கு மத்தியில் ஜீன்ஸ் பேன்ட் அணிந்த, முகத்தில் முரட்டுத் தனம் நிறைந்த ஒரு அதிரடிக் கும்பலும் இருந்தது. அவர்கள் சென்னையிலிருந்து வந்திருக்கிறார்கள் என்று போலீஸ் மத்தியிலே பேசிக்கொண்டார்கள்.

திண்டிவனம் வழியாகப் போகும் போதெல்லாம் வீராணம் கெஸ்ட் ஹவுஸில் தங்கி ஓய்வெடுத்துச் செல்வது ஆளுநரின் வழக்கம். இந்த முறை மொத்த கெஸ்ட் ஹவுஸும் அ.தி.மு.க.வினரின் ஆக்கிரமிப்பில் இருந்தது. நான்கு மணியிருக்கும்.... கவர்னரின் கார் திண்டிவனம் எல்லையைத் தொட்டபோது போலீஸ் தடையை மீறி சாலையின் குறுக்கே அதிரடியாக உட்கார்ந்து விட்டனர். நெடுஞ்சாலைப் போக்குவரத்து ஸ்தம்பித்துப் போனது. போதாததற்கு செக்போஸ்டை இழுத்து ரோட்டை மூடிவிட்டு, ‘‘இனி நம்மளை மீறி கவர்னர் ஐயா எப்படிப் போறாருன்னு பார்க்கலாம்!’’ என்று கிண்டலுடன் எக்காளமிட்டது ஒரு கும்பல். போலீஸ் பதற்றத்துடன் ஓடி செக்போஸ்ட் தடையை நீக்கியது. போலீஸ் திணறிக் கொண்டிருக்கும் சூழலிலேயே அந்தக் கும்பல் இருந்த இடத்துக்கு அருகே ஆளுநரின் கார் வந்துவிட்டது. அடுத்த 20 நிமிடம் சரமாரியான ரகளை! என்ன நடக்கிறது என்பது எவருக்குமே புரியாத ரீதியில் வன்முறைக் காட்சிகள் அரங்கேறின. முட்டை, தக்காளி, செருப்பு, கற்கள் என்று விதவிதமான பொருட்கள் ஆளுநரின் காரைத் தாக்க... கார் நின்றது! நடப்பவற்றை மொத்த போலீஸாரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க கொந்தளித்து விட்டார் ஆளுநர். அவருடைய செக்யூரிட்டி அதிகாரிகள் இரண்டு பேர் இறங்கி ஓடிவர... அதில் ஒருவரது மார் மீது ஒரு கல் முழுவேகத்தில் மோதியது. அலறியபடி அப்படியே ரோட்டில் உட்கார்ந்து விட்டார் அதிகாரி. மற்ற செக்யூரிட்டி அதிகாரிகள் நாலாபுறமும் காரைச் சூழ்ந்துகொண்டு அடைகாக்க... அவர்களுக்கும் அடி உதை விழுந்தது. கோபத்தின் உச்சியிலிருந்த ஆளுநர் காருக்குள் இருந்தபடியே, ‘எஸ்.பி.யை அழைத்தார். ஆனால், எஸ்.பி. முயன்றும் கும்பலை விலக்கிக்கொண்டு வரமுடியவில்லை.

திண்டிவனம் சப் கலெக்டர் ராஜேஷ் லக்கானி பதறியபடி ஓடிவந்து ஆளுநரிடம் ஏதோ பேசிவிட்டுத் திரும்பினார். சில நிமிடங்கள் கழித்து வந்த எஸ்.பி. ஆளுநரிடம் ஏதோ சொல்லப்போக... அவருக்கு செமடோஸ் விழுந்தது. முகம் வெளிறிப்போய் திரும்பிய எஸ்.பி., உரத்த குரலில் உத்தரவிட்ட பிறகுதான், போலீஸ் அரை மனதுடன் லேசான தடியடி பிரயோகித்தது. மொத்தத்தில், இருபத்தெட்டு நிமிடம் ஆளுநரின் கார் நடுரோட்டில் அ.தி.மு.க.வினரின் பிடியில் சிக்கிக் கிடந்தது. முட்டையும் தக்காளிச் சிதறல்களும் காரிலும் ரோட்டிலும் வடிந்து ஒழுகியபடி இருக்க, கிடைத்த இடைவெளியில் ஆளுநரின் கார் புறப்பட்டுப் புதுவை ராஜ்நிவாஸ் நோக்கிப் பறந்தது.

நடந்த சம்பவங்களைப் படமெடுத்துக் கொண்டிருந்த தினப் பத்திரிகை புகைப்படக்காரர்களில் ஒருவரது காமிராவை ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி பறித்துக் கொண்டு போய்விட்டார். அந்தப் பத்திரிகை அலுவலகத்திலிருந்து ஆளுநர் தங்கியிருந்த புதுவை ராஜ்நிவாஸுக்குத் தொலைபேசி பறந்தது. அந்த ஃபிலிம் சுருள் ஆளுநருக்கு அவசியம் தேவை என்ற ரீதியில் சமாதானம் சொல்லப்பட்டதாகத் தெரிகிறது. அந்த காமிராவை உடனடியாகத் திருப்பியனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டது. படச்சுருள் உடனடியாக பிரிண்ட் போடப்பட்டு கவர்னருக்குத் தரப்பட... அதை ஒரு முறை பார்த்த கவர்னர், திருப்தியுடன் ‘‘இது போதும் எனக்கு’’ என்றார்.

கிண்டி நொண்டி ஒழிக... அனல் கக்கிய பொதுக்கூட்டம்!

‘ஆளுநரின் அநீதியை எதிர்த்தும், தமிழக அரசின் பட்ஜெட்டை விளக்கியும் சென்னையில் பேரணிப் பொதுக்கூட்டம்’. 10-ம் தேதி தி.நகர் உஸ்மான் ரோட்டில் கிளம்பிய இந்த ஊர்வலத்தில் பெரும்பாலும் அமைச்சர் இந்திரகுமாரியின் தொகுதியிலிருந்துதான் பெண்கள் வந்திருந்தார்கள். ‘கிண்டி நொண்டி சென்னா ரெட்டி ஒழிக’ என்று இந்திரகுமாரியே தொடங்கி வைத்த முதல் கோஷமே நிருபர்களையும் பொதுமக்களையும் அதிரச் செய்தது. அதைத் தொடர்ந்து சுவாமியையும் சந்திரலேகாவையும் இணைத்து இந்திரகுமாரியும் அவருடன் வந்த மகளிர் அணியினரும் எழுப்பிய கோஷங்கள் எழுத முடியாதவை.

எதிர்பார்த்த அளவுக்குக் கூட்டம் வராததால் கோபத்தில் இருந்த இந்திரகுமாரி, ஊர்வலத்தை நிறுத்தி நிறுத்தி... நத்தை வேகத்தில் நகர்த்தச் சொல்லிக் கட்டளை போட்டுக் கொண்டிருந்தார். இந்த அவசரகோல ஊர்வலம் முடிந்த பின்.... வடபழனியில் பொதுக்கூட்டம்!

அமைச்சர் ரகுபதி இப்படிப் பேசினார்: ‘‘ராமாயணக் கூனி... மகாபாரத சகுனி, மனோன்மணீயக் குடிலன் ஆகிய அத்தனை வில்லன்களையும் ஒன்று சேர்த்த ஜீவன்தான் சென்னா ரெட்டி. டெல்லி பாதுஷா கிண்டிக்கு அனுப்பிய நொண்டிக் குதிரைதான் சென்னா ரெட்டி.’’

அடுத்து கண்ணப்பன். அவருடைய பேச்சுதான் கூட்டத்தின் ஹைலைட். ‘‘ஆறு ஆண்டு காலம் தேர்தலில் நிற்கக்கூடாதென தடை செய்யப்பட்ட சென்னாரெட்டி... அரிஜனங்களுக்கு ஒதுக்கிய நிலங்களை ஆக்கிரமித்து அபகரித்த சென்னா ரெட்டி... எங்கள் முதல்வரைப் பற்றிப் பழி பேசக்கூடாது. புரட்சித்தலைவி தேர்தலில் நிற்கத் தடை வந்தால் நாட்டில் எங்குமே தேர்தல் நடக்க முடியாமல் செய்து விடுவோம்!’’ என்று கண்ணப்பன் சொன்னபோது, மகளிர் அணி பெண்கள் எழுந்து நின்று கைதட்டினார்கள்.

முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் மறைந்த செய்தி கிடைத்த பிறகும்கூட அமைச்சர் இந்திரகுமாரி தலைமையில் பட்டாசுகளை வெடித்துக்கொண்டு ஆர்ப்பாட்டமாக அ.தி.மு.க.வினர் ஊர்வலம் போனது, பொதுமக்களை வெறுப்படையச் செய்தது. மொரார்ஜியின் மரணம் பற்றி பேரணி ஆரம்பித்தபோது தங்களுக்குத் தெரியாது என்றும், பொதுக்கூட்டம் துவங்கிய சமயத்தில் விஷயம் தெரியவந்ததால், மொரார்ஜி மரணத்துக்கு மேடையிலேயே இரங்கல் தெரிவித்ததாகவும் பத்திரிகைகளில் விளக்கம் அளித்தார் இந்திரகுமாரி!

துடைப்பம், முட்டை சகிதம் தாண்டவமாடிய அ.தி.மு.க... திகைத்துப்போன நீதிமன்றம்

ஏப்ரல்-20, 1995! சுவாமியின் வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளலாமா என்பது பற்றி டிவிஷன் பெஞ்ச் விசாரணை நடந்த இறுதி தினம்! நீதிமன்றத்துக்கு வருகிற சுப்பிரமணியன் சுவாமியை எதிர்த்துப் பெரும் கலாட்டா செய்ய வேண்டும் என்ற வெறியோடு ஆளும் கட்சிப் பட்டாளம் நீதிமன்ற வளாகத்தை முற்றுகையிட்டது. அழுகிய முட்டைகள், கற்கள், அறுந்த செருப்புகள், உருட்டுக்கட்டைகள், திராவக பல்புகள், சைக்கிள் செயின்கள் என்று சகலவிதமான ஆயுதங்களோடும் ஆண்கள் திரண்டனர். மகளிர் அணி என்ற பெயரில், கூட்டப்பட்டு இருந்த பெண்களின் கூடைகளில் துடப்பக்கட்டைகள் இருந்தன! புடவை முந்தானையில் கற்களையும் கட்டிக்கொண்டு வந்து இருந்தனர். ஆண்களின் வேட்டி ஓரத்திலும், பெண்களின் புடவை பார்டர்களிலும் அ.தி.மு.க வண்ணம் கண்ணைப் பறித்தது! காலை எட்டு மணிவாக்கிலேயே இந்தப் பரபரப்பு. மணி ஒன்பது! மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் ஏ.கே.47 உட்பட விதவிதமான துப்பாக்கிச் சகிதம் ‘நீதிமன்றத்துக்கு வந்து இறங்கியபோதுதான் அ.தி.மு.க.வினர் மத்தியில் சலசலப்பு! அதைத்தொடர்ந்து சுப்பிரமணியம் சுவாமிக்குப் பாதுகாப்பு வளையமாக நிற்கும் நோக்கத்துடன் தி.மு.க தரப்பிலிருந்தும் சிலர் வந்து இறங்குவதைக்கண்டு கோபத்தில் கொந்தளித்துக் கூச்சலிட்டனர் அ.தி.மு.க.வினர். நீதிமன்ற வளாகத்தில் உள்ள போஸ்ட் ஆபீஸுக்குப் பக்கத்தில் காரில் வந்திறங்கி உள்ளே செல்வதுதான் சுவாமிக்கு வாடிக்கை! இது தெரிந்து முன்னெச்சரிக்கையாக போஸ்ட் ஆபீஸுக்கு அருகில் உள்ள மரங்களுக்குப் பக்கத்திலேயே காத்திருந்தார்கள் அ.தி.மு.க வினர்.

சரியாக 9.47 மணி. திடீரென இன்னொரு பக்கமாய் காரில் வந்திறங்கி நீதிமன்ற வராண்டாவில் சுவாமி நடந்து போய்க் கொண்டிருந்தார். அதைப் பார்த்ததும் அதிர்ந்து அடிவயிற்றிலிருந்து குரலெடுத்துக் கத்தியது கூட்டம். அவர்களை வழிமறித்து நின்ற தி.மு.க.வினர் மீது கல்மழை பொழிய....எதிர்த்தரப்பிலிருந்தும் கற்கள் விறுவிறுவெனத் திரும்பி வந்தன. உள்ளே விசாரணை தொடங்கி விவாதங்கள் பரபரப்பாக நடைபெற ஆரம்பித்தன.! மணி பதினொன்று பத்து இருக்கும். கேஸ் டிஸ்மிஸ் ஆகிடுச்சு... என்று யாரோ புரளியைக் கிளப்பிவிட்டுப் போய்விட அ.தி.மு.க.காரர்களிடம் ஆங்காரக் கொந்தளிப்பு உருவானது! மீண்டும் கல்வீச்சு ஆரம்பமானது! கூடவே, முட்டைகளும் துடப்பக்கட்டைகளும் நீதிமன்றக் கட்டடத்தின் மேல் மோதி மோதி விழுந்தன. நீதிமன்ற வளாகத்துக்குள் கற்கள் நிறையப் பறந்தன. ஊழியர்கள் சிலரின் மண்டைகளைப் பதம் பார்த்தன. அலுவலகங்களைச் சாத்திக்கொண்டு ஊழியர்கள் பாதுகாப்புத் தேடி ஓட்டமெடுத்தார்கள். கண்மண் தெரியாத அந்தக் கும்பலின் ஆர்ப்பரிப்புக்கு நடுவே சிக்கிய சில பெண் ஊழியர்கள் அலறிக்கொண்டு இங்குமங்கும் அல்லாடியது வேதனை.

இந்த அராஜகப் போரின் உச்சகட்டமாக ஒரு சிலர் தாறுமாறாக எறிந்த கற்கள்... நீதிபதி அப்துல் ஹாதியின் (கோர்ட்) ஹாலுக்குள்ளேயே வந்து அவர் டேபிள் மீது விழ, அவர் நடத்திக் கொண்டிருந்த விசாரணையை பாதியிலேயே நிறுத்திவிட்டு எழுந்து போய்விட்டார். கல்லெறி கலாட்டாக்கள் போலீஸாருக்கு ரொம்பவும் பழகிவிட்டதால் அவர்கள் சமீபகாலமாகத் தாங்கள் கடைப்பிடிக்கும் அதேபாணியில் யப்பா....! சும்மா போங்கப்பா என்று கெஞ்சலாய்க் கேட்டுக்கொண்டு நின்றிருந்தனர். நீதிமன்றத்தின் மாடியில் நின்றிருந்த மகளிர் அணியினர்... டேய்...! சுப்ரமணியம் சுவாமி உனக்கு இதுதாண்டா பதிலடி என்று புடவையை உயர்த்திக்காட்டி, அரை நிர்வாண டான்ஸைத் துவங்க சுற்றியிருந்த வக்கீல்களும் போலீஸாருமே பயந்து அங்கிருந்து ஓடவேண்டிய நிலைமை. மதியம் ஒரு மணி... சுவாமி சாப்பிடுவதற்காக வெளியே வருவார். அப்போது ஒரு கை பார்த்துவிடலாம் என்று அவரது கார் நிறுத்தப்பட்டிருந்த வாயிலுக்கு அருகில் அ.தி.மு.க.வினர் கூடினார்கள். மதிய உணவை நீதிமன்றத்துக்கே கொண்டு வரச் சொல்லி ஹாலிலேயே அமர்ந்து சந்திரலேகாவோடு சேர்ந்து சாப்பிட்டார் சுவாமி. பாரிமுனைப் பகுதியில் ஆங்காங்கே அ.தி.மு.க வினரும், தி.மு.க.வினரும் கடுமையாக மோதிக்கொண்டார்கள்.! மோதலின்போது ஒரு சிலர் கற்களை எறிய பல கடைகளின் கதவுகள் சாத்திக் கொண்டன.

மதியம் இரண்டேகால் மணி! மீண்டும் நீதிமன்றத்தில் விவாதம் தொடங்கியது! இதற்கிடையே பிரியாணிப் பொட்டலங்கள் அந்தக் கும்பலுக்கு சப்ளை செய்யப்பட... சாப்பிட்டத் தெம்புடன் மீண்டும் உள்ளே புகுந்தார்கள. நாலரை மணி வரை அவ்வப்போது கற்களை மட்டும் அங்குமிங்கும் வீசிப் பொழுது போக்கிக் கொண்டிருந்தார்கள்.

கல்வீச்சையும் கலாட்டாவையும் படமெடுத்த பல போட்டோகிராபர்களில் தினமணி புகைப்படக்காரர் கண்ணனும் ஒருவர். பதுங்கிப் பதுங்கி படமெடுத்தாலும் இவர் மட்டும் எப்படியோ அந்தக் கும்பலின் கண்களை உறுத்திவிட்டார். அவ்வளவுதான் அவரை விரட்டியது கும்பல். அவர்களிடம் கண்ணன் சிக்கிய சில நிமிடங்களில் மணிக்கட்டு எலும்பு முறிந்ததோடு, கேமரா லென்ஸும் தூள்தூளானது! அதோடு அந்தக் கலவரங்களைப் படம் பிடித்துக் கொண்டிருந்த ஐ விட்னஸ், ஜெயின் டி.வி. பிரதிநிதிகளையும் அவ்வப்போது விரட்டித் தூர நிற்க வைத்தனர் அ.தி.முகவினர்.

இந்தப் பரபரப்பினூடே சென்னை மாநகர கமிஷனர் ராஜகோபாலன் காரில் கோர்ட் உள்ளே வந்து லேசாக இறக்கப்பட்ட கார் கண்ணாடி இடுக்கு வழியே போலீஸ் அதிகாரிகளுக்கு ஏதோ உத்தரவிட்டுவிட்டு உடனே கிளம்பினார்.

மதுரையில் நடந்த ஒரு பிரஸ் மீட்டில் விடுதலைப்புலி இயக்கத் தலைவர் பிரபாகரனை இன்டர்நேஷனல் பறையா என ஆங்கிலத்தில் சுவாமி குறிப்பிட்டு, தாழ்த்தப்பட்ட இன மக்களை அவர் கேவலப்படுத்திவிட்டார் என்று சொல்லிப் பதிவான ஒரு வழக்கில் சுவாமியைக் கைது செய்ய மதுரை போலீசார் வந்து நிற்பது அப்போதுதான் அ.தி.மு.க.வினருக்கே தெரிந்தது.

ஹோ வென உற்சாகக் கூச்சல் எழுப்பினார்கள்.!

சுப்பிரமணியம் சுவாமியைக் கைது செய்ய எல்லா ஏற்பாடுகளையும் செய்ய ஆரம்பித்தனர் போலீஸார். சுப்பிரமணியம் சுவாமியை சமூக பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸார் தயாராக இருக்கும் விஷயம் நீதிமன்றத்திற்குள் வாதாடிக் கொண்டிருந்த சுவாமிக்கு தெரிவிக்கப்பட்டது.

முகம் கறுத்துப்போன சுவாமி உடனே சந்திரலேகாவிடமும் கவர்னரின் வழக்கறிஞர் ஜி.ராமசுவாமியிடமும் கலந்து பேசினார். வழக்கறிஞர் ஜி.ராமசுவாமியின் யோசனைப்படி நீதிபதி சீனிவாசனிடமே, வெளியில் தன்னைக் கைது செய்ய போலீசார் காத்திருக்கும் விவரத்தைச் சொன்னார். என்னைக் கொல்லவும் சதி நடக்கிறது! எனக்கு இந்த நீதிமன்றம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நீதிபதியிடமே கேட்டார் சுவாமி.

அதற்கெல்லாம் இந்த நீதிமன்றச் சட்டத்தில் எந்த அளவுக்கு இடமுள்ளது என்று தெரியவில்லை! உயிருக்கு ஆபத்து என்றால் முறைப்படி கோர்ட்டில் விண்ணப்பித்து பாதுகாப்புக் கேளுங்கள் என்றார் நீதிபதி சீனீவாசன். மேலும் கைது சம்பந்தமாக என்ன செய்யலாம் என்று அரசு வழக்கறிஞர்தான் சொல்ல வேண்டும் என்றார்.

என்ன பிரச்னையில் கைது செய்கிறார்களென்றே எனக்குத் தெரியாது என்று கையை விரித்தார் அரசு வழக்கறிஞர் முத்துக்குமார சுவாமி. நீதிபதி சீனீவாசன் குறுக்கிட்டு, நாளை காலை 11 மணி வரை சுப்பிரமணியம் சுவாமிக்கு நேரம் தரலாம். அதற்குள் சம்பந்தப்பட்ட கோர்ட்டில் அவர் முன்ஜாமீன் பெற்றுக்கொள்ள வேண்டும். அதோடு இந்த கோர்ட்டுக்கு முறையாக அப்ளிகேஷன் ஒன்றையும் சுப்பிரமணியம் சுவாமி கொடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு நீதிபதி சுப்பிரமணியத்துடன் சேர்ந்து நீதிபதி சீனீவாசனும் கிளம்பிவிட்டார்.

கோர்ட் கலைந்தது! அரசு வழக்கறிஞர், பரசுராமன் கவர்னரின் வழக்கறிஞர்கள் ஜி.ராஜகோபாலன் ஜி.ராமசுவாமி எல்லோரும் போய்விட்டார்கள். அதன் பிறகு கோர்ட் அப்ளிகேஷன் ஒன்றை சுவாமி தனது வழக்கறிஞர் வெங்கட்ராமனை வைத்து நிரப்பிக் கொடுத்துவிட்டுக் கிளம்பினார். வெளியில் வந்த சுவாமியுடன் பாதுகாப்பாக கூடவே, நடந்து வந்த தமிழக போலீசார் வழக்கமான பாதையை மாற்றி வேறு வழியாக மாடியில் இருந்து கீழேயிறங்கி நீதிபதிகள் செல்லும் சிறப்பு வழியில் சுப்பிரமணியன் சுவாமியை அழைத்துச் சென்றனர். அ.தி.மு.க.வினரிடமிருந்து தன்னைக் காப்பாற்றத்தான் வேறு வழியாக அழைத்துச் செல்கிறார்கள் என நினைத்திருந்த சுவாமிக்கு வெளியில் காத்திருந்தது அதிர்ச்சி. தனது வேனில் ஏறிக் கிளம்பிய சுவாமி, மெயின் கேட் அருகே நிறுத்தப்பட்டார். அங்கே தயாராக நின்று கொண்டிருந்த கூடுதல் டி.ஜி.பி தேவாரம், சென்னை நகர இணை கமிஷனர் வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் சுப்பிரமணியம் சுவாமியை வழிமறித்து நிறுத்தினர்.

வேனிலிருந்த சுப்பிரமணியம் சுவாமியிடம் சென்ற போலீஸ் அதிகாரி சவானி, உங்களைக் கைது செய்ய வந்திருக்கிறோம். ஒத்துழைப்புக் கொடுத்து எங்களுடன் வாருங்கள் என்று பணிவாகக் கேட்டார். நாளை காலை பதினோரு மணி வரை நீதிபதியிடம் அவகாசம் வாங்கியிருக்கிறேன். அதற்குள் முன்ஜாமீன் பெற்றுவிடுவேன்! அதற்குள் பெறவில்லையென்றால் காலை 11 மணிக்கு என் வீட்டில் வந்து கைது செய்து கொள்ளுங்கள்! நான் எங்கும் ஓடிப்போய் விடமாட்டேன் என்று சுவாமி சொல்ல, சவானி குழப்பத்துடன் தேவாரத்திடம் ஏதோ சொன்னார். அடுத்து தேவாரமும் சவானியும் வலுக்கட்டாயமாக கைதுசெய்ய முயற்சித்தார்கள்.

அதுவரை பொறுமை காத்த வழக்கறிஞர் வெங்கட்ராமன், 'நீதிபதியிடமே அனுமதி வாங்கியாச்சுன்னு சொல்றோம். கேட்காம தகறாறு பண்றியே... உன் சட்டையில் சவானிங்கிற நேம் போர்டு இல்லாமப் பண்ணிடுவோம் தெரியுமில்லே. காக்கிச் சட்டையைக் கழட்ட வெச்சுக் கூண்டுல ஏத்திக் கம்பி எண்ண வெச்சுடுவேன். கோர்ட்டையே அவமதிச்சீங்கன்னு கேஸ் போடுவேன். மீறி தைரியம் இருந்தா சுவாமியை அரஸ்ட் பண்ணு பார்ப்போம்' என்று கூச்சலிட்டார். சவானியும் தேவாரமும் அவசர அவசரமாக வயர்லெஸ் மைக் மூலம் டி.ஜிபி. அலுவலகத்தைத் தொடர்புகொண்டு கேட்டார்கள். டி.ஜி.பி அலுவலகத்திலிருந்து வந்த செய்தியை அடுத்து சுவாமி தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவங்கள் அனைத்தையும் அங்குமிங்கும் காரில் அலைந்தபடியே பார்த்துக்கொண்டிருந்த கமிஷனர் ராஜகோபாலன் கடைசி வரை காரிலிருந்து இறங்காமலே அதிகாரிகளுக்கு உத்தரவு கொடுத்துக் கொண்டேயிருந்தார். இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க சுவாமி வேறு வழியாகப் போய்விட்டதால் ஏமாந்து போன அ.தி.மு.க.வினர் விரக்தியில் மீண்டும் கொஞ்ச நேரம் அங்குமிங்கும் கல்லெறி நடத்திவிட்டு வெறுப்புடன் கலைந்து சென்றார்கள்.

தடைகளை மீறி உள்ளே நுழைந்த சீட்டு சுப்பிரமணியம் சுவாமியை கைது செய்ய போலீஸ் படை கிளம்பி விட்டது என்ற தகவல் காலையிலேயே காங்கிரஸ் வட்டாரத்தில் பலருக்குத் தெரிந்தது. வாழப்பாடி அணியில் உள்ள பத்திரிகை செய்தி தொடர்பாளர் கிள்ளிவளவனுக்கு இதுபற்றிய முழு விவரங்களும் வந்தது. கோர்ட்டில் வாதாடிக்கொண்டிருந்த சுவாமிக்கு இந்த விவரம் தெரியுமா? என விசாரித்துப் பார்த்தார் கிள்ளிவளவன்.

கைது செய்ய போலீஸ் வரும் செய்தி சுவாமிக்கு தெரியக்கூடாது என்பதற்காக போலீஸ் திட்டமிட்டு சில காரியங்கள் செய்திருப்பது அப்போதுதான் புரிந்தது. கோர்ட்டுக்கு வெளியே அ.தி.மு.க.வினர் செய்த கலாட்டாவையே ஒரு காரணமாகக் காட்டி சுவாமி வாதாடிக்கொண்டிருந்த கோர்ட் ஹாலுக்கு உள்ளே இருந்து வெளியிலோ, வெளியிலிருந்து உள்ளேயோ ஆட்கள் செல்ல முடியாதபடி தடுத்தது போலீஸ். சுவாமிக்கு வேண்டிய சிலர் இந்த கைது விஷயத்தைச் சொல்ல கோர்ட் ஹாலுக்கு செல்ல முயன்றபோது, போலீஸ் மடக்கப் பார்த்தது. இந்த விவரம் அறிந்ததும், சாமர்த்தியம் உள்ள இருவரை கோர்ட்டுக்கு உடனடியாக அனுப்பினார் கிள்ளிவளவன். உங்களை கைது செய்ய வெளியே போலீஸ் காத்திருக்கிறது. உஷார் என்ற வார்த்தைகள் அடங்கிய சீட்டு அந்த இருவரிடம் இருந்தது. மோப்பம் பிடித்த சி.ஐ.டி. போலீஸார் தங்களை நெருங்கி வருவதற்குள் வாழப்பாடி அணியைச் சேர்ந்த செல்லமுத்து என்ற வழக்கறிஞரிடம் சீட்டை ஒப்படைத்துவிட்டு திரும்பிவிட்டனர் இருவரும். போலீஸ் கட்டுக்காவலை மீறி செல்லமுத்து அந்தச் சீட்டை எப்படியோ கோர்ட்டுக்குள் கொண்டு சென்று சுவாமியிடம் ஒப்படைத்தார். உடனே சுவாமி உஷாராகி ‘வாரண்ட்’டிலிருந்து தப்ப நீதிபதியின் ஸ்பெஷல் அனுமதி பெற்றார்.

சூறாவளி உருவாக்கிய அந்தச் சொல் சுப்பிரமணியம் சுவாமி ஆதிதிராவிடர்களைப் பற்றி இழிவாகப் பேசினார் என்று அவர் மீது வழக்குத் தொடர்ந்து அவரைக் கைது செய்ய முனைந்தது அ.தி.மு.க. அரசாங்கம். அதற்கு காரணம், எல்.டி.டி.ஈ. தலைவர் பிரபாகரனைக் கண்டனம் செய்து சில மாதங்களுக்கு முன்பு சுவாமி, விடுத்த அறிக்கையில், பிரபாகரனை ‘இன்டர்நேஷனல் பறையா’ என்று சாடியிருந்தார். இதற்கு சுவாமி சொல்லும் விளக்கம், அந்த வார்த்தைக்கு ஆங்கிலத்தில் ‘பகிஷ்கரிக்கப்பட்டவன்’ என்று தான் அர்த்தமே தவிர, ஆதிதிராவிடர்களைக் குறிக்கும் வார்த்தை அல்ல. டைம் நியூஸ்வீக், இந்தியா டுடே போன்ற பல்வேறு ஆங்கிலப் பத்திரிகைகளிலும் புத்தகங்களிலும் இந்த ஆங்கில வார்த்தை வெகுகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிவில் லிபர்டிஸ் சட்டத்தில் ஆதிதிராவிடர்களையோ அல்லது தாழ்த்தப்பட்டவர்களையோ பார்த்து அந்த ஆட்சேபமான வார்த்தைச் சொன்னால்தான் தண்டனை என்று இருக்கிறதேன்றி, வேறு அர்த்தம் தொனிக்கும் இந்த ஆங்கில வார்த்தையை ஆதி திராவிடர்களுக்குச் சம்பந்தமேயில்லாத இடத்தில் பயன்படுத்தினால் தண்டனை என்று கூறவில்லை என்பது.

‘லீகல் தெசாரஸ்’ உள்பட உலகப் புகழ்ப் பெற்ற ஆங்கில அகராதிகளில், இந்தச் சொல்லுக்கு ஓடிப்போனவன், நாடுகடத்தப்பட்டவன், வன்முறையாளன் என்றுதான் அர்த்தங்கள் இருக்கின்றன. இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் என்னை இவ்விஷயத்தில் முதலில் எதிர்த்துக் குரல் கொடுத்தவர் நகைமுகன். இந்த நகைமுகன் என்.எஸ்.ஏவில் தேசத் துரோகக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டவர். எல்.டி.டி.ஈ யின் ஆதரவாளர் என்கிறார் சுவாமி. ஜெயலலிதா சொல்லித்தான் எதிர்த்தார் நகைமுகன். இதற்கு காரணம் ஜெயலலிதாவின் எல்.டி.டி.ஈ ஆதரவுதான். ஜெயலலிதா ஆட்சியில் ஆதிதிராவிடர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடுமைகள் ஏராளம். வாச்சாத்தி கற்பழிப்பு சம்பவம், அண்ணாமலை நகரில் பத்மினி கற்பழிப்பு, ஆதி திரராவிடர்களுக்கு ஒதுக்க வேண்டிய பஞ்சமி நிலங்களை ஆளும் கட்சியினருக்கு ஒதுக்கியது. இதைத் தட்டிக்கேட்ட ஆதிதிராவிடர்கள் மீது வன்முறையை ஏவிவிட்டது போன்ற செய்கைகள் செய்தது யார் என்று கேள்வி எழுப்பினார் சுவாமி.

இதைவிடப் பெரிய கொடுமை ஆதிதிராவிடரான மத்திய அமைச்சர் அருணாசலம் ஜெயலலிதா செல்லும் விமானத்தில் ஏறிவிட்டார் என்பதற்காக அவரை இழிவுபடுத்திப் பேசி விமானத்திலிருந்து கழுத்தைப் பிடித்துத் தள்ளியவர்தானே இந்த ஜெயலலிதா என்பது சுவாமியின் வாதம். சுவாமிக்குத் தான் கைது செய்யப்படலாம் என்று புதன்கிழமை இரவே தெரிந்துவிட்டது. ஒரு விருந்தில் கலந்துகொண்ட அவர் என்னை கைது செய்தால், தன்னுடன் இருக்கும் இருபது சி.ஆர்.பி.எஃப் படையினரையும் கைது செய்ய வேண்டும் என்று கூறி வந்தார். நான் மத்திய அமைச்சருக்குச் சமமான பதவியில் இருப்பதால் எப்படி மத்திய அரசைக் கேட்காமல் கைது செய்கிறார்கள் பார்ப்போம் என்று கண் சிமிட்டியபடியே கூறினார்.

சுவாமியின் எஸ்கேப்! பரபரப்புக் காட்சிகள்...

உயர் நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்சின் தீர்ப்பு எப்படி இருக்குமோ என்ற கவலையில் இருந்த ஜெயலலிதாவுக்கு பாசிட்டிவ்வாக எந்தத் தகவலும் வரவில்லை. ரொம்பவே டல்லாகிப்போய் இருந்தார். நான் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போகிறேன் என்று சொல்லிருக்கிறார். அப்போது அருகில் இருந்தவர் அமைச்சர் எஸ்.டி.எஸ். திடுக்கிட்டுப்போய் ஏதும் சொல்ல வாய் வராமல் குழப்பத்துடன் வெளியே வந்திருக்கிறார். வந்தவருக்கு மிகச் சரியான தருணத்தில் நகைமுகன் வெளியிட்டிருந்த ஓர் அறிக்கை கண்ணில் பட்டது. பொறி தட்டியவராக அதை எடுத்துக்கொண்டு முதல்வரிடமே ஓடினாராம் எஸ்.டி.எஸ். 'இதோ பாருங்கள்... விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி இன்டர் நேஷனல் பறையா என்று ஒருமுறை சொல்லியிருக்கிறாராம் சுவாமி. அதைக் கண்டித்து வெளியான அறிக்கை இது. சுவமியை நிலை தடுமாற வைக்க இது உதவும் என்று சொல்லி முதல்வரை உற்சாகப்படுத்த முயன்றார் எஸ்.டி.எஸ்

காரியங்கள் மின்னல் வேகத்தில் நடந்தன. ஜாதிப் பெயரைச் சொல்லி இழிவுப்படுத்தியதாக சுவாமி மீது சென்னையில் ஒரு போலீஸ் கம்ப்ளெயின்ட் பதிவானது. சற்றே நிதானம் அடைந்து யோசித்தபோது சுவாமி குறிப்பிட்ட அந்த வார்த்தையைச் சொன்ன பிரஸ்மீட் நடந்தது மதுரை என்பதால் புகாரை அங்கே மாற்றிவிடுவதுதான் சரி எனச் சொல்லப்பட்டது. உடனடியாக புகார் மதுரைக்கு மாற்றப்பட்டு அங்கே பதிவானது. குறிப்பிட்ட இந்தப் புகாருக்கு ஆளான ஒருவரைக் கைது செய்ய கோர்ட் வாரன்ட் தேவையில்லை என்பதுதான் முக்கியமான பாயின்ட். புகாரை மதுரையில் பதிவு செய்வதன் மூலம் உடனடியாக சுவாமியைக் கைது செய்து மதுரைக்குக் கொண்டுசென்றுவிடலாம் எனத் திட்டம் தீட்டப்பட்டது. இந்த விவரங்கள் காதுக்கு வந்ததுமே போலீஸ் அதிகாரிகள் மூவர் கலவரம் அடைந்து விட்டனர். சுவாமியை ஓர் அளவுக்கு மேல் சீண்டிப் பார்ப்பது ஆபத்தானது என்று இம்மூவரும் அபிப்ராயப்பட்டார்கள். அதிலும் சுவாமியைக் கைது செய்வதன் மூலம் பெரும் அரசியல் பூகம்பமே வெடிக்கும் என்று அவர்களுக்குத் தெரியும். தனித்தனியே அந்த மூன்று அதிகாரிகளின் சிந்தனையும் வேகமாக ஓடியது. இதையடுத்து, சுவாமியின் கைது நடவடிக்கைகள் பிசுபிசித்துப் போனதற்கு இந்த அதிகாரிகள்தான் முக்கிய காரணம்.

வாழப்பாடியாரின் பிரிவைச் சேர்ந்த கிள்ளிவளவன் மூலம் சுவாமிக்குத் தகவல் வந்து சேருவதற்கு சற்று முன்பே இந்த மூன்று அதிகாரிகளிடமிருந்தும் தனித்தனியே தகவல்கள் கோர்ட்டுக்கு வந்துவிட்டன. மூவரில் ஒரு அதிகாரி நம்பிக்கைக்கு உரிய ஆள் மூலம் ஒரு தகவலை கோர்ட்டுக்குச் சொல்லி அனுப்பினார். மதுரை கமிஷனர் வெங்கட கிருஷ்ணன் விமானம் மூலம் சென்னைக்கு வந்துவிட்டார்.

சற்று நேரத்துக்கெல்லம் இன்னொரு அதிகாரியிடமிருந்து சீட்டு வந்துவிட்டது. சுவாமி கைதாகப் போகிறார் அவரை மதுரைக்கு கூட்டிச் செல்வதே திட்டம். மதுரையில் உள்ள சிறைச் சாலையில் அடைக்க கூடும், அங்குள்ள கைதேர்ந்த சில எல்.டி.டி.ஈ ஆதரவுக் கைதிகள் மூலம் சிறைக்குள் சுவாமியின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று சொன்னது அந்தத் தகவல்.

இரண்டாம் தகவல் வந்த அடுத்த சில நிமிடங்களிலேயே மூன்றாவது உயர் போலீஸ் அதிகாரியின் ஆள் கோர்ட் ஹாலுக்குள் நுழைந்து சந்திரலேகாவிடம் ஒரு தகவலைச் சமர்ப்பித்தார். அதில் சுவாமி கைதுக்காக மதுரை போலீஸ் தயாராக நிற்கிறது. எக்காரணம் கொண்டும் போலீஸ் ஜீப்பில் ஏறவேண்டாம், எழும்பூர் கமிஷனர் ஆபீஸுக்குக் கொண்டுச் செல்வதாகச் சொல்லி விட்டு மதுரைக்குச் சென்றுவிடத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்று இருந்தது. இந்த விஷயங்கள் வந்து சேரும் போதெல்லாம் நீதிபதிகளை நோக்கி விறுவிறுப்பாக தன் வாதங்களை வைத்துக் கொண்டிருந்தார் சுவாமி. திடுக்கிடும் இந்தத் தகவல்களை உடனே தெரிவிக்கலாம் என்றால், இடையில் குறுக்கிடவும் முடியவில்லை. விஷயத்தைக் கேட்டு வைத்துக் கொண்டார் சந்திரலேகா. இறுதியில் சுவாமி தன் வாதத்தை முடிக்க, தகவல்கள் அவருக்குத் தெரிவிக்கப்பட்டன.

சரிதான்... ஒருசில விநாடிகள் ஸ்தம்பித்து நின்றார் சுவாமி. தான் ஏதாவது ஒரு காரணம் காட்டி கைது செய்யப்படலாம் என்பது கடந்த சில நாட்களாகவே அவர் எதிர்பார்த்ததுதான். கைதுக்குக் காரணம் இந்த ரூபத்தில் வரும் என்பதுகூட முன்னிரண்டு நாட்களாகவே முக்கிய வட்டாரங்களில் பேசப்பட்டுக் கொண்டிருந்த விஷயம்தான். ஆனால், இத்தனை விரைவாக இதெல்லாம் நடக்கும் என்பது சுவாமி எதிர்பாராதது. தன்னைக் கைது செய்து எங்காவது போலீஸ் வாகனத்தில் கொண்டு சென்று பெரும் விபத்தில் சிக்கவைக்கத் திட்டங்கள் இருப்பதாக சுவாமி சொல்லிக் கொண்டுதான் இருந்தாராம். தப்பி ஓடினார் சுட்டோம் என்றுகூடச் சொல்லிவிடுவார்கள் என்று தனக்கு மிக நெருங்கிய சிலரிடம் சுவாமி சொன்னாராம். அதனால்தான் கைது செய்ய ஆள் வந்துவிட்டது என்று தெரிந்ததும் சட்டெனச் சுதாரித்துக் கொண்டார். சுவாமி உடனடியாக நீதிபதியிடம் சொல்லி மறுநாள் காலை பதினோரு மணி வரை டயம் வாங்கிக்கொண்டார்.

ஒருபுறம் நீதிபதி கேட்ட சில ஆவணங்களைத் தயார் செய்து கொண்டிருந்தபோதே சுவாமியின் மனதில் மளமளவெனத் திட்டங்கள் உருவாகத் தொடங்கிவிட்டன. சந்திரலேகாவிடம் சில உத்தரவுகள் பிறப்பித்தார். கோர்ட்டுக்கு வெளியெ ஒருபுறம் அ.தி.மு.க.வினரும் மறுபுறம் போலீஸாரும் சுவாமியை எதிர்த்துப் பரபரப்புடன் காத்திருக்க... சந்திரலேகா அனுப்பிய ஒரு ஆள் கிளம்பி கோர்ட்டுக்கு வெளியில் வந்தார்..!

அடுத்ததாக சென்னையிலிருந்து பம்பாய்க்குச் செல்லும் முதல் விமானம் எது என்று பார்த்து சுப்பிரமணி என்ற பெயரில் ஒரே ஒரு டிக்கெட் வாங்கிவிட வேண்டும் என்பது அவருக்கு உத்தரவு. இண்டியன் ஏர் லைன்ஸ் விமானத்தில் காதும்காதும் வைத்ததுபோல டிக்கெட் வாங்கி முடித்தார் அந்த நபர். கையோடு பம்பாயில் உள்ள சுவாமியின் நெருங்கிய நண்பருக்கு போன் செய்து அங்கிருந்து டெல்லி செல்வதற்கும் டிக்கெட் புக் செய்யச் சொல்லிவிட்டார்.

கோர்ட்டை விட்டு வெளியில் வந்த சுவாமியை காத்திருந்த தேவாரமும் சவானியும் மடக்க மீசையை முறுக்கியபடி நின்றிருந்த தேவாரத்தைத் தூரத்திலிருந்தே பார்த்துவிட்ட சுவாமி, அட சந்தனக் கடத்தல் வீரப்பன் இங்கு வந்திருக்கிறாரா என்று ஜோக் அடித்தாராம். பிறகு தான் நீதிபதியிடம் விசேஷ அனுமதி வாங்கியிருப்பதைச் சொல்லி போலீஸ் வளையத்திலிருந்து தப்பிய சுவாமி நேரே ராஜ் பவன் போய்விட்டார்.

சுவாமியை வரவேற்ற கவர்னர் அவரை நிறைய பாராட்டினார். எமர்ஜென்ஸி நேரத்தில் நீங்கள் பார்த்ததைவிட மோசமான அனுபவங்கள். இப்போது தமிழ்நாட்டில் எதிர்க் கட்சியே இல்லையோ என்கிற அளவுக்கு நிலைமைகள் கட்டுமீறிப் போய்க்கொண்டிருக்கின்றன. ஆள்பலத்தையோ பணபலத்தையோ வைத்து இந்த அரசாங்கத்தைச் சமாளிக்க முடியாது என்று எனக்குத் தெரியும். கூர்மையான சட்ட அறிவும் தந்திரமும்தான் ஜெயிக்க முடியும் என நான் நம்புகிறேன் என்று அந்த டென்ஷனான சூழ்நிலையிலும் சொன்னார் கவர்னர்.

பிரதமரிடமிருந்து கடந்த வாரத்தில் கவர்னருக்கு வந்த இரண்டு கடிதங்கள்தான் அதற்குக் முக்கிய காரணம். அதில் ஒரு கடிதத்தில், இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி நீங்கள் செய்கிற எதிலும் மத்திய அரசு குறுக்கிடாது என்றும், இன்னொரு கடிதத்தில், திண்டிவனத்தில் கவர்னர் மீது நடந்த தாக்குதல் பற்றிக் குறிப்பிட்டு, இனி உங்களுக்கு எந்தப் பங்கமும் வராதபடி பார்த்துக்கொள்வது எங்கள் பொறுப்பு என்றும் அக்கறையோடு கூறியிருந்தாராம் பிரதமர். கிட்டத்தட்ட இது பச்சைக்கொடிதானே. அந்த தெம்புடன் இருந்த கவர்னருக்கு சுவாமியைக் கைது செய்ய தமிழக அரசு செய்யும் முயற்சிகளை முறியடிக்க வேண்டும் என்று உறுதியே பிறந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

சுவாமியுடன் முக்கியமான சில விஷயங்களைப் பேசி சில யோசனைகளையும் சொன்னார் கவர்னர். அங்கிருந்து நேரே பாபநாசம் சிவன் சாலையில் உள்ள தனது கட்சி ஆபீஸுக்கு வந்த சுவாமி, சில நிருபர்களைச் சந்தித்தார். சுவாமியைப் பின்தொடர்ந்து கொண்டிருந்த ரகசிய போலீஸார் மீண்டும் அவர் ராஜ்பவனுக்குக் கிளம்பிச்செல்வது கண்டு குழம்பினார்கள். சுவாமி எப்போது ராஜ் பவனிலிருந்து வெளியில் வந்தார். எப்படி விமான நிலைத்துக்குள் நுழைந்தார் என்றே யாருக்கும் தெரியாது. சுவாமி விமான நிலையத்துக்குப் போய்ச் சேர்ந்த பிறகுதான் ஜெயலலிதாவுக்குத் தகவல் வந்தது. சுவாமி சென்னையைவிட்டே எஸ்கேப் ஆகிறார் என்று தகவல் போனதும் கொதித்துவிட்டார் முதல்வர். சென்னை நகர போலீஸ் கமிஷனர் ராஜகோபாலனை லைனில் அழைத்தார். கமிஷனர் பதவியிலிருந்து ராஜகோபாலன் திடீரென தூக்கப்பட்டு வைகுந்த் அந்தப் பதவியில் அமர்த்தப்பட்ட மர்மம் இங்கேதான் தொடங்கியது.

முதல்வர் அழைத்ததுமே அவருடன் போனில் பேசினார் கமிஷனர். உடனடியாக சுவாமியைத் தடுக்க வேண்டும் என்ன செய்வீர்களோ தெரியாது என்றார். சரி என்று சொல்லி போனை வைத்துவிட்டார் கமிஷனர். சென்னை நகர போலீஸாரும் மதுரை நகர போலீஸ் கமிஷனர் வெங்கடகிருஷ்ணனும் விமான நிலையம் சென்றபோது மும்பை செல்லும் இண்டியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 5ஜி ஸீட்டில் ஏறி அமர்ந்துவிட்டிருந்தார் சுவாமி. விமானநிலைய அதிகாரிகள் இந்த போலீஸ் அதிகாரிகளைத் தடுத்துவிட்டனர். விமானத்தில் ஏறி உட்கார்ந்துவிட்ட ஒருவரை கைதுசெய்ய வேண்டுமானால் அதற்கு பன்னாட்டு விமானநிலைய குழுமத்தின் அனுமதி பெற வேண்டும். அதற்கு ஒரு கடிதம் எழுதித்தாருங்கள் என்று கேட்டனர். இவர்கள் மறுக்க இருதரப்புக்கும் அதுவே பெரிய சண்டையாக மாறியது. இதனால் அரை மணி நேரம் தாமதப்பட்ட விமானம், கடைசியில் சுவாமியைச் சுமந்து கொண்டு வானில் ஏறிப் பறப்பதை ஏமாற்றத்துடன் பார்த்தனர் நம் போலீஸ் அதிகாரிகள்.

அவர்கள் ஆத்திரம் எல்லாம் விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த டெபுடி கமிஷனர் மணி மீது திரும்பியது. என்ன செய்து கொண்டிருந்தீர்கள் இத்தனை நேரம் விமான நிலையத்துக்கு உள்ளே நுழையும் போதே சுவாமியைத் தடுத்துப் பிடிக்க வேண்டியதுதானே என்று இவர்கள் சீற, பதிலுக்கு மணியும் சீண்டிக் காட்டினார். இவ்வளவு நேரம் சென்னை நகர எல்லைக்குள் சுற்றிக்கொண்டிருந்த சுவாமியைப் பிடிக்காமல் கோட்டைவிட்ட நீங்கள் என்னை வந்து அதட்டுவது என்ன நியாயம் என்றார் மணி. அங்கே இன்னொரு சண்டை.

சுவாமி வெற்றிகரமாக மும்பை சென்றுவிட்டார் என்று போயஸ் தோட்டத்துக்குச் செய்தி போனதும் முதல்வர் திகைத்துப் போய்விட்டாராம். மீண்டும் சென்னை நகர கமிஷனரை அழைத்தார். செமடோஸ். கவலைப்பட வேண்டியதில்லை. சுவாமி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை வைத்து இந்தியாவில் அவர் எங்கே போனாலும் கைது செய்துவிட முடியும் என்று கமிஷனர் சொல்ல, கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்ட ஜெயலலிதா, மெட்ராஸுக்குள்ளே இருந்தபோதே அவரைப் பிடிக்க முடியாத நீங்கள் இதைச் சொல்கிறீர்கள் என்றார். இரவு இது நடந்த அரை அணி நேரத்துக்கெல்லாம் நாளிதழ்களுக்கு ஃபேக்ஸ் செய்தி வந்தது. ராஜகோபாலன் சென்னை நகர கமிஷனர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதில் வைகுந்த் நியமிக்கப்பட்டதாக.

அதே தினம் காலைதான் ஆர்.வி.யுடன் பேசியிருக்கிறார் ஜெயலலிதா. சுவாமி கோர்ட்டுக்கு வந்திருப்பதையும் அ.தி.மு.க.வினர் கோர்ட்டைச் சுற்றி நின்று கலாட்டாவில் ஈடுபட்டிருப்பதையும் பற்றி ஆர்.வி.யிடம் சொன்னவர், இதெல்லாம் எங்கு கொண்டு போய்விடும் சொல்லுங்கள் என்று கேட்டிருக்கிறார். இதற்கெனவே காத்திருந்தது போல் ஆர்.வி நீண்டதொரு லெக்சர் கொடுத்து விட்டாராம்.

ஏற்கனவே உங்களிடம் நான் சொன்னபடி உடனே ராஜினாமா செய்துவிடுங்கள். சுவாமிக்கு எதிராக அ.தி.மு.க வினர் நடத்துகிற கலாட்டாக்கள் எல்லாம் உங்களுக்கு தெரிந்துதான் நடக்கிறது என்றால், அதை மக்கள் ரசிக்கமாட்டார்கள். இந்தக் கலவரங்கள் எல்லாமே உங்களை மீறி தொண்டர்கள்தானாகச் செய்கிற விஷயங்கள் என்றும் சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் கட்சி உங்கள் கட்டுப்பாட்டிலேயே இல்லை என்பதாகிவிடும். அதுவும் உங்கள் எதிர்காலத்துக்கு நல்லதல்ல. விவகாரங்கள் மேலும் வளராமல் இருக்க நீங்கள் உடனே ராஜினாமா செய்யுங்கள். தேர்தலை எதிர்கொள்ளுங்கள். அதுதான் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்பதுதான் ஆர்.வி.யின் அட்வைஸ்.
http://www.vikatan.com/news/special/jaya-case/article1.html


--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

ஸ் பெ

unread,
May 16, 2015, 3:51:53 PM5/16/15
to panbudan

தமிழகத்தையே பிரமிக்க வைத்த ஜெயலலிதா வளர்ப்பு மகன் சுதாகரனின் ஆடம்பர திருமணமும், பின்னர் போயஸ்கார்டனில் கைப்பற்றப்பட்ட மலைக்க வைக்கும் நகைகள் மற்றும் புடவைகளும்தான் இந்த சொத்துக்குவிப்பு வழக்கில் முக்கிய சாட்சியங்களாக அமைந்தன. சிவாஜியின் பேத்தியுடன் சுதாகரனுக்கு நடந்த திருமணம், போயஸ் கார்டனில் கைப்பற்றப்பட்ட பொருட்கள், ஸ்பெஷல் கோர்ட் அமைந்த கதை ஆகியவை இந்தப் பகுதியில்...

டிவிஷன் பென்ச் தள்ளுபடியும் நீதிபதிக்கு மிரட்டலும்...

முதலமைச்சர் மேல் வழக்கு தொடர கவர்னர் அளித்த அனுமதியை எதிர்த்து கோர்ட்டுக்கு போனபோதே, முதல்வர் சற்று அமைதி இல்லாமல்தான் இருந்தார். தடை கேட்கும் இந்த வழக்கை எதிர்பார்த்தபடியே டிவிசன் பெஞ்ச் நீதிபதிகள் டிஸ்மிஸ் செய்துவிட்டனர். மதியம் இரண்டேகால் மணிக்குத் தங்கள் இருக்கைக்கு வந்த நீதிபதிகள், கவர்னர் கொடுத்துள்ள அனுமதி, மனுதாரர் கொடுத்துள்ள ஆவணங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. எனவே, அவருக்கு கவர்னர் அனுமதி கொடுத்தது செல்லும். அதை ரத்து செய்ய முடியாது என்று தீர்ப்பைச் சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டனர். கோர்ட் வளாகத்துக்குள்ளேயே காத்திருந்த உளவுத்துறை ஐ.ஜி.யான அலெக்சாண்டர் மூலம் செய்தி முதல்வரை எட்டியது!

போயஸ் தோட்டம் பெரும் அமைதியில் மூழ்கியது. சில நிமிடங்களுக்குள் தன்னைத் தேற்றிக்கொண்ட பிறகு, தோழி சசிகலா மற்றும் அலெக்சாண்டருடன் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தீவிரமாகப் பேசினார் முதல்வர் ஜெயலலிதா. அதன் பிறகுதான் ‘உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு மேல் அப்பீல் செய்து, சுப்ரீம் கோர்டுக்கு முதல்வர் போகப் போகிறார்’ என்ற பேச்சு அ.தி.மு.க வட்டாரத்தில் மிக வேகமாகப் பரவியது.

போயஸ் தோட்டத்தில் இதெல்லாம் நடந்துகொண்டிருந்த அதேசமயம், இந்தத் தீர்ப்பை அளித்த இரு நீதிபதிகளில் ஒருவரான எம்.சீனிவாசன் குடியிருக்கும் தி.நகரில் பரபரப்பு... அவர் வசிக்கும் ராமசாமி தெருவில் போலீஸ் படை வந்திறங்கியது. நீதிபதி வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது!

சொல்லப்போனால், தீர்ப்பு வருவதற்கு முன்தினமே நீதிபதி சீனிவாசன் வீட்டில் பதற்றம் தொற்றிக்கொண்டது. அந்தத் தெரு வழியாக மின்னல் வேகத்தில் பறந்தது ஒரு ஆட்டோ! சீனிவாசன் வீட்டைக் கடக்கும்போது, அவரை எதிர்த்துப் பலமான கோஷம் ஆட்டோவுக்குள்ளிருந்து கிளம்பி வெளிவந்தது! கடந்த ஒரு வாரமாகவே நீதிபதி வீட்டுக்கு மிரட்டல் போன்கால்கள் வந்துகொண்டிருந்தன. அதுபோல், தீர்ப்பு வழங்கிய அன்று, நீதிபதியின் வீட்டில் குடிநீர், மின்சாரம் ரத்து செய்யப்பட்டன. அதுபற்றி விஷயம் பத்திரிகைகளுக்கு தெரியவந்து, அவர்கள் நீதிபதி வீட்டில் போய் கேட்டனர். இதை பெரிதுபடுத்தாதீர்கள் என்று பத்திரிகையாளர்களிடம் நீதிபதியின் வீட்டில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், விஷயம் வேகமாகப் பரவி பத்திரிகைகளின் காதுகளுக்கும் போய்விட்டது என்பதை அறிந்த ஆளும் தரப்பு உடனடியாக நீதிபதியின் வீட்டிற்கு குடிநீர், மின்சாரத்தை மீண்டும் கொடுத்தது. எதற்கும் அஞ்சாமல் நின்ற நீதிபதியை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்.

தகாத முறையில் நடந்தார் கவர்னர்...

தமிழக சட்டசபை நடந்துகொண்டிருந்தபோது, மாநிலத்தின் வளர்ச்சிக்காக முதலமைச்சர் கவர்னரை போய் சந்திப்பதில்லை என்ற கேள்வி சட்டமன்றத்தில் எழுந்தது. அதற்கு பதில் சொன்ன ஜெயலலிதா, நான் கடந்த 1993-ம் வருடம், ஆகஸ்ட் மாதத்தில் கவர்னரை சந்திக்கச் சென்றபோது, அவர் கவர்னர் மாளிகையில் உள்ள தனது அறையில் வைத்து என்னிடம் தவறான முறையில் நடந்து, தகாத வார்த்தைகளைக் கூறி அவமானப்படுத்தினார். அதனால், அதன்பிறகு அவரை நான் சந்திப்பதை தவிர்த்துவிட்டேன் என்று சட்டசபையிலேயே சொன்னார்.

சட்டசபையில் இப்படி முதல்வர் சொல்லிவிட்டார் என்ற தகவல் ராஜ்பவனுக்கு வந்து சேந்ததும், கவர்னரின் செயலாளர் ஷீலாப்ரியா துணுக்குற்றார். இதை எப்படி கவர்னரிடம் தெரிவிப்பது என்று கவலைப்பட்டார். வேறு சில ராஜ்பவன் அதிகாரிகளுடன் 10 நிமிடங்கள் பேசினார். கவர்னரிடம் சொன்னால், அவர் ராஜ்பவனையே ‘கிடுகிடு’க்கச் செய்யுமளவுக்குக் கோபம் அடைவாரோ என அதிகாரிகள் பயந்தனர். ஒருவழியாகத் துணிச்சலைத் திரட்டிக்கொண்டு போய்த் தகவலைத் தெரிவித்தனர். கவனமாக கடைசிவரை விவரங்களைக் கேட்டுக் கொண்டபின் ‘பளிச்’சென கவர்னர் புன்னகைத்ததைக் கண்டு அதிகாரிகள் அசந்துவிட்டனர்.

இப்படி ஒரு ‘ரியாக்க்ஷன்’ கவர்னரிடமிருந்து வந்தது கண்டு அதிகாரிகள் ஏமாற்றமடைந்தனர் என்றே சொல்லலாம். உண்மையில் முதல்வர் தரப்பிலிருந்து இன்னும் மோசமான தாக்குதலை கவர்னர் எதிர்பார்த்துத் தயாராகவே இருந்தார் என்று ராஜ்பவன் அதிகாரிகளுக்குப் பிறகு தெரியவந்ததாம்.

பத்திரிகை அலுவலகங்களிலிருந்து ராஜ்பவனுக்கு டெலிபோன் மேல் டெலிபோனாக வரத் துவங்கிவிட்டது. முதல்வரின் குற்றச்சாட்டுக்கு கவர்னரின் பதில் என்ன என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டு நெருக்கத் துவங்கினார்கள். கவர்னரின் செயலாளர் போய் கவர்னரிடம் இதை தெரிவித்தபோது, ‘இப்படி ஒரு குற்றச்சாட்டுக்கு பதிலாக நான் என்ன சொல்வது..!’ என்று கேட்டுவிட்டு உரக்கச் சிரித்திருக்கிறார் கவர்னர்! ‘இல்லை.. பத்திரிகைகளிலிருந்து திரும்பத் திரும்பக் கேட்கிறார்கள்’ என்று சொன்னதால், ‘முதல்வர் சொன்னது அபத்தமான பொய்’ என்று மட்டும் மிக சிம்பிளாக ‘கமென்ட்’ கொடுத்து முடித்துக் கொண்டுவிட்டார் சென்னா ரெட்டி.

“கவர்னர் பற்றி சட்டசபையில் முதல்வர் பேசிய அன்றைய தினம், மாலை டெல்லி உள்துறை அமைச்சகத்திலிருந்தும் பிரதமர் அலுவலகத்திலிருந்தும் சென்னை ராஜ்பவனுக்கு போன் அழைப்பு வந்தது. ‘நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம். எந்தவிதமான வதந்திகளையும் நம்ப வேண்டாம். உங்களைத் தமிழ்நாட்டை விட்டு மாற்றுகிற எண்ணமெல்லாம் இல்லை’ என்றார்கள்.

இதையடுத்து இந்தப் பிரச்னை சற்று ஓய்ந்தது. சுவாமியும் விட்டுப்பிடித்தார். எதிர்க் கட்சிகளும் சற்றுப் பம்மின. பிரச்னைகள் கொஞ்சம் ஓய்ந்ததும், ஜெயலலிதா வேறு சொத்துக்களை வாங்கிப் போடுவதிலும், தமிழகமே வாய் பிளக்கும் வகையில் தன்னுடைய வளர்ப்பு மகனுக்கு ஒரு திருமணத்தை நடத்தும் வேலையிலும் கொஞ்சம் பிஸியானார். அந்தக் காலகட்டத்தில் ஜெயலலிதா சொத்துக்கள் வாங்க என்ன வழிகளைப் பின்பற்றினார் என்பதை சில உதாரணங்களில் பார்க்கலாம்.

எந்தச் சொத்து... எத்தனை கோடி...

சென்னையில் உள்ள பாரம்பரிய மாளிகைகள், நிலங்கள், பண்ணை வீடுகள் என்று வளைத்துப்போட்டுக் கொண்டிருந்த ஜெயலலிதா சசிகலா அன்கோ, தமிழகம் முழுவதும் இதே வேலையில் தீவிரமாக இறங்கின. அந்தக் காலகட்டத்தில் டீக்கடை, சலூன் கடை, பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களில் கூடுபவர்கள், இன்றைக்கு அவர்கள் வாங்கி உள்ளது எந்தச் சொத்து? அதன் மதிப்பு எத்தனை கோடி? என்பது பற்றித்தான் முதல் வேலையாகப் பேசுவார்கள். அந்த அளவிற்கு ஜெயலலிதாவும் சசிகலாவும் சொத்துக்களை வாங்கிப்போடுவதில் தீவிரம் காட்டிக் கொண்டிருந்தனர்.

‘’சென்னையிலோ அல்லது சுற்றுப்புறத்திலோ 30 லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட மதிப்புள்ள கட்டடங்கள் விற்பனைக்காகப் பதிவாளர் அலுவலகத்துக்கு வந்தால் போதும்... உடனே அவற்றின் பதிவு வேலைகள் நடக்காது. வாங்குபவரையும் விற்பவரையும் ஏதாவது சாக்குப்போக்கு சொல்லி, நாலைந்து நாட்கள் கழித்து வரச்சொல்வார்கள். இடைப்பட்ட நாட்களில் அந்தச் சொத்து பற்றிய சகல விவரங்களும் ‘ஜெயலலிதா- சசிகலாவுக்குச் சென்றுவிடும். அவர்களாகப் பார்த்து, ‘இந்தக் கட்டடம் நமக்கு வேண்டாம்’ என்று முடிவு செய்துவிட்டால் பிரச்னை இருக்காது! இப்படி வரும் பதிலை ‘க்ரீன் சிக்னல்’ என்பார்கள் பத்திரப் பதிவு அலுவலகத்தில்! ‘கிரீன் சிக்னல்’ கிடைக்காமல், ‘நாமே இந்த இடத்தை வாங்கி விடலாமே...’ என்பதுபோல் அபிப்பிராயம் வந்தால், நிலம் அல்லது கட்டட விற்பனை தடைபடும். அடிமாட்டு விலைக்குப் பேரம் பேச ஆட்கள் உரிமையாளரைத் தேடி வருவார்கள். அவர்கள் சொல்கிற விலைக்கு விற்க மறுத்தால் சிக்கல்தான்... சங்கடம்தான்!’’ அப்படி அவர்கள் வாங்கிப்போட்ட சில சொத்துக்கள் பற்றிய கதைகள் டீக்கடை பெஞ்சுகளில் பேசப்பட்டன.

அமிர்தாஞ்சன் மாளிகைக்கு தலைவலி ஆரம்பம்!

நெம்பர் ஒன்று, லஸ் அவென்யூ, மயிலாப்பூர், சென்னை.இதை வீடு என்று சொல்வதைவிட மாளிகை என்றே கூறலாம். ஒரிஜினல் பர்மா தேக்கில் செய்யப்பட்ட வேலைப்பாடுகள் நிறைந்த கதவுகள், ஜன்னல்கள், ஆர்ச்சுகள், இறக்குமதி செய்யப்பட்ட சலவைக்கல் தரை - எல்லாமே புரதான பொக்கிஷங்கள்.

அமிர்தாஞ்சன் தலைவலி மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் டைரக்டர் நாகேஸ்வரராவின் வீடுதான் அது. ஐந்தரை கிரவுண்டு பங்களாவில் பணியாளர்களைத் தவிர அந்த வீட்டில் இருப்பது அவர், அவரது மனைவி சேஷம்மா, ஒரே மகன். அதிர்ந்து பேசாத நாகேஸ்வரராவ் ஒரு கார் பிரியர், இசைக்கருவிகள் பல வாசிக்கக்கூடியவர். மகிழ்ச்சியான இந்தக் குடும்பத்துக்கு வந்தது பெரும் சோதனை. தன் வியாபாரத்துக்காக இந்த வீட்டை இந்தியன் வங்கியின் அபிராமபுரம் கிளையில் சில வருடங்களுக்கு முன்னர் ஒரு கோடி ரூபாய்க்கு அடமானம் வைத்திருந்தார் ராவ். சில பிசினஸ் பிரச்னைகளினால் சரிவர வட்டி கட்ட முடியாமல் போய்விட்டது. சொத்தின் மதிப்பு உயர்ந்துகொண்டே வந்ததைப்போல் வட்டியும் ஏறிக்கொண்டே போனது. மார்ச் மாத இறுதியில் ராவ் குடும்பத்தினரை அணுகி அந்த வங்கியின் மேலாளர் சுசரிதா சுந்தர்ராஜன், “கடன் ஏறிக்கொண்டே போகிறது. என்னை மேலதிகாரிகள் கோபித்துக் கொள்கிறார்கள். உங்கள் சொத்தை ஏலத்தில் விட வேண்டும் என்கிறார்கள். எனவே, அதற்குள் நீங்களே நல்ல விலைக்கு வீட்டை விற்றுவிடுங்களேன்” என்று அட்வைஸ் செய்துள்ளார்.

ராவ் குடும்பமும் இந்த விஷயத்தை ஏற்றுக்கொண்டு நண்பர்கள், தெரிந்தவர்களிடம் மெல்ல விஷயத்தைச் சொல்லி உள்ளனர். வீட்டை வந்துபார்த்த அனைவரும் ஏகமனதாக இந்த வீடு குறைந்தது மூன்று கோடி ரூபாய் தேறும் என்று மதிப்பிட்டு இருந்தனர். யாருக்கு விற்பது என்று ராவ் யோசனை செய்த வேளையில் திரும்பவும் வந்தார் சுசரிதா. ஒரு நல்ல ‘பார்ட்டி’ இருப்பதாகவும், சீக்கிரமாக விற்றுத் தருவதாகவும் கூறிய சுசரிதாவிடம் “யார் வாங்கப்போகிறார்கள்?” என்று ராவ் குடும்பம் கேட்ட கேள்விக்குப் பதிலே இல்லை. ஒரு வாரம் கழித்து பிற்பகல் ஒரு ‘மாருதி 1000’ கார் வந்து நின்றது. அதிலிருந்து ஒரு சுரிதார் போட்ட பெண்மணியும், பர்முடாஸ் போட்டிருந்த ஒருவரும் இறங்கி வீட்டைப் பார்க்க வேண்டும் என்கிறார்கள்.

சுசரிதா அனுப்பியதாகக் கூறிக்கொண்டு வந்ததனால் ராவ் குடும்பத்தினர் வீட்டைச் சுற்றிக் காண்பித்தனர் மிகவும் அன்பாகப் பேசிய அந்தப் பெண்மணி தனக்கு வீடு பிடித்திருப்பதாகவும், பாக்கி விஷயங்களை சுசரிதா பேசிக் கொள்வார் என்று கூறி புறப்பட்டுச் சென்றார். வந்தது யாராக இருக்கும் என்று குடும்பத்தினர் யோசித்துக் கொண்டிருக்கையில் வேலையாட்கள் ஓடிவந்து, “அம்மா, வந்தது யார் தெரியுமா?” என்று கிசுசிசுக்கத் தொடங்கினர். அதன்பிறகுதான் தெரிந்தது, வந்தவர் சசிகலா என்பது.

மீண்டும் வந்தார் சுசரிதா, “எல்லாம் முடிந்துவிட்டது. அடுத்த வாரம் பத்திரப்பதிவு செய்ய வேண்டும்” என்று அடுக்கிக்கொண்டே போனார். பலமுறை விலை எவ்வளவு என்று கேட்டும் பதிலே கூறாத சுசரிதா, கடைசியில் கூறியதைக்கேட்ட ராவ் குடும்பத்தினர் மயக்கம் போட்டு விழாத குறைதான். ஒரு கோடியே முப்பது லட்சம்.

“என்ன அநியாயம் இது? நீங்களே அசலும், வட்டியுமாக சேர்த்து பாங்க் கடன் இரண்டு கோடி ரூபாய் ஆகிவிட்டது என்று கூறினீர்களே. இப்போது அதைவிட கம்மியாக விற்கச் சொல்கிறீர்கள். இந்த விலைக்கு விற்றால் பாங்க் கடனைக்கூட கழிக்க முடியாதே” என்ற ராவ் குடும்பத்தினரின் கேள்விகளுக்கு விடையே இல்லை.

வீடு ராவ் பெயரிலும், நிலம் அவரது சகோதரியின் பெயரிலும் இருப்பதால், தான் மட்டும் முடிவெடுத்து எதுவும் கூறமுடியாது என்று கூறிய ராவ், “உங்களுக்கு வேண்டியது வங்கியில் வாங்கிய கடனை திருப்பித் தரவேண்டும் அவ்வுளவுதானே. இரண்டே நாள் டயம் கொடுங்கள், அட்லீஸ்ட் இரண்டரை கோடிக்கு வீட்டை யாருக்காவது விற்று கடனை திருப்பித் தருகிறேன்” என்று ராவ் கூறியபோதுதான் ஆரம்பித்தது மிரட்டல்.

“அம்மா வாங்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் பேரமாவது, மண்ணாவது... நேரத்தை வீணாக்காதீர்கள். இல்லா விட்டால் உங்களின் மற்ற கரன்ட் அக்கௌன்ட், ஃபிக்ஸ்ட் டெபாஸிட்டுகளை முடக்கிவிடுவேன். நான் இந்த வீட்டை வாங்கித் தருவதாக வாக்கு கொடுத்துவிட்டேன். என்னைப் பொல்லாதவள் ஆக்கிவிடாதீர்கள்” என மிரட்டினாராம் மானேஜர்.

அடுத்தகட்டமாக அந்த மானேஜர், ராவின் சகோதரியைப் பார்த்து அவரையும் மிரட்டியிருக்கிறார். மிகவும் மிரண்டு போன சகோதரி நாகேஸ்வரராவை அழைத்து, “போனால் போகிறது விற்றுவிடு” என்று கூறியிருக்கிறார்.

ராவ் குடும்பம், ஒரு கோடியே முப்பது லட்சம் மிகவும் குறைவான தொகை என்று கூறியும் சுசரிதா விடவில்லை. ஒருநாள் திடீரென்று வந்து “தோட்டத்திற்குப் போகலாம் வா” என்று அவர்களின் குடும்பத்தை அழைத்துச் சென்றார்.

“சென்னையில் இப்படி ஒரு மாளிகையைப் பார்த்ததேயில்லை. மைசூர் அரண்மனையைத் தோற்கடிக்கும். எங்கு பார்த்தாலும் பிங்க் கிரானைட், பளிங்கு, வீட்டுக்கூரை எல்லாம் கிரானைட். உள்ளே 40 புது கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தேவலோகத்துக்கு வந்ததைப் போல உணர்ந்தேன். இப்படிப்பட்ட செல்வச்செழிப்பு எங்கள் வாழ்நாளில் கண்டதில்லை. அங்கு சசிகலா சுடிதாரில் வந்தார். அன்பாக விசாரித்தார். முழுத் தொகையும் உடனடியாகத் தருவதாகக் கூறினார். சிக்கல் இல்லாமல் வீட்டை ரெஜிஸ்தர் செய்து தரும்படியாகக் கூறினார். கடைசியில், உங்கள் ஒரே மகன் எந்தப் பள்ளியில் படிக்கிறான் நன்றாக இருக்கிறானா?” என்று கேட்கப்பட்டது. அவ்வளவுதான் அந்தக் கேள்வியில் தடவப்பட்டு இருந்த நஞ்சு புரிந்ததும், மிகவும் பயந்துபோனார்கள் அந்தக் குடும்பத்தினர். வழிக்கு வருவதைத் தவிர வேறு வழியே இல்லை அவர்களுக்கு. மளமளவென்று காரியங்கள் நடந்தேறின. நடையாக நடந்தாலும் ஒரு மாதத்துக்குக் குறையாமல் கைக்கு வராத வருமானவரி ‘நோ-அப்ஜெக்க்ஷன்’ சர்டிஃபிகேட் ஒரே நாளில் ராவ் குடும்பத்துக்குத் தரப்பட்டது. செய்வதறியாது திகைத்து நிற்கையில் ராவ் வீட்டுக்கே வந்து சப்-ரெஜிஸ்தாரால் பத்திரப் பதிவு செய்யப்பட்டது.

‘நாகேஷ்வரராவ் பந்தலு’ பிளவுபடாத சென்னை மாகாணத்தின் முக்கியமான காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர். மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பர். சென்னைக்கு காந்தி வரும்போது எல்லாம் தங்குவது இந்த பங்களா உள்ளடங்கிய ‘பார்க்’ கட்டடத்தில்தான். காந்தியின் நினைவாக கல்வெட்டு ஒன்றும் இருக்கிறது. விற்கப்பட்ட இந்த தேசிய சின்னமான பங்களாவில் உப்பு சத்தியாகிரகத்தின்போது காந்தி உப்பு காய்ச்சிய பாத்திரம், உபயோகப்படுத்திய சாப்பாட்டுத் தட்டு, கைராட்டை, மகிழ்ந்து இசை கேட்ட கிராமஃபோன் போன்றவை இருக்கின்றன. இந்த வீட்டுக்கு எதிரேயே நாகேஸ்வரராவ் பந்துலு தானம் கொடுத்த இடத்தில்தான் நாகேஸ்வரராவ் பந்துலு பூங்கா இருக்கிறது. காசு பிரம்மானந்த ரெட்டி,. சஞ்சீவ ரெட்டி, வி.வி.கிரி போன்ற தலைவர்கள் நாகேஸ்வரராவ் பந்துலுவை சந்தித்த இடம் இது. சென்னை மாகாணம் பிரிந்தபோது ஏற்பட்ட உடன்படிக்கை தயாரானது இங்குதான்.

கல்பாக்கத்தில் ஒரு ஷாக்... சிறுதாவூர் பங்களா

முதல்வர் ஜெயலலிதா, தன் தோழி சசிகலாவுடனும் தனக்கு நெருக்கமான இன்னொரு குடும்பத்துடனும் ரகசியமாக மகாபலிபுரத்தில் தங்கி ஓய்வெடுத்துக் கொண்டு இருந்தார். கடற்கரையோரம் அமைந்துள்ள ஒரு பெரிய மாளிகையில் சத்தமின்றி முதல்வர் இரண்டு நாட்கள் தங்கியது மூத்த அமைச்சர்களுக்கு மட்டுமல்ல, மகாபலிபுரம் போலீஸூக்குக்கூடத் தெரியாது. சுப்பிரமணியன் சுவாமி விவகாரத்தில் கலங்கிப் போயிருக்கும் முதல்வருக்கு ஓய்வு தேவை என்று டாக்டர்களின் அறிவுரைப்படி ஏற்பாடு செய்யப்பட்டதுதான் இந்த விசிட்! ‘முதல்வர் எங்கே?’ என்ற கேள்விக்கு இரண்டு நாட்களும் மௌனம்தான் பதிலாக வந்தது!

ஆனால், விஷயம் வெளியே ’லீக்’ ஆனாது பெரிய கதை. கல்பாக்கத்தில் உள்ள அணுசக்தி ஆராய்ச்சி நிலையத்துக்கு ராட்சத கண்டெய்னர் ஒன்று சென்னை-மகாபலிபுரம் சாலையில் எடுத்துச் செல்லப்பட்டது. சாலையில் மின்சார கம்பத்திலிருந்து போகும் மின்சார வயர்களை அந்த கண்டெய்னர்கள் ‘கிராஸ்’ செய்யும்போது ‘ஷாக்’ அடிக்காமல் இருக்க மின்சார சப்ளை நிறுத்தப்படுவது வழக்கம். அப்படி அந்த மாளிகை அருகே கண்டெய்னர் வந்தபோது ‘எந்தக் காரணம் கொண்டும் மின்சார சப்ளையை நிறுத்தக்கூடாது’ என்று சிலர் வாதாட, ’அப்படியென்ன அந்த மாளிகைக்கு முக்கியத்துவம் என்ற பேச்சும் கூடவே வந்தது. அப்போதுதான் தெரிந்தது அங்கு முதலமைச்சரும் அவருடைய தோழியும் தங்கி இருப்பது. ஆனால், அவர்கள் தங்கி இருந்த மாளிகை இசையமைப்பாளர் கங்கை அமரனுக்குச் சொந்தமானது ஆயிற்றே என்று எல்லோருக்கும் ஆச்சரியம். ஆனால், அதன்பிறகுதான் தெரிந்தது, அதற்கு பல மாதங்களுக்கு முன்பே, கங்கை அமரனை போயஸ் தோட்டத்துக்கு வரவழைத்து, அந்தப் பண்ணை வீட்டை தங்கள் பெயருக்கு மாற்றிவிட்ட செய்தி. பண்ணையை வாங்கியவர்கள் அத்தோடு நிற்கவில்லை. அதையொட்டி இருந்த பல ஏக்கர் நிலத்தையும் வளைத்து, அதில் நீச்சல் குளத்துடன் நவீன பங்களா ஒன்றையும் கட்டினார்கள்.

ஜெ. வளர்ப்பு மகன் - சிவாஜி பேத்தி திருமணம்!

ஜூன் 12-ம் தேதியன்று சென்னை தி நகரிலுள்ள செவாலியே சிவாஜி ரோட்டில் போலீஸ் வந்து குவிந்தது! வேகவேகமாக கார்களும் ஜீப்களும் விரைந்து சென்று சிவாஜி கணேசன் வீட்டு வாசலில் நின்றன. விஷயம் பத்திரிகைகளுக்குத் தெரிந்ததும் விசாரிக்கத் துவங்கினர் நிருபர்கள். “சிவாஜியைப் பார்க்க முதல்வர் ஜெயலலிதா வருகிறார்!” என்று மட்டுமே அந்த வீட்டிலிருந்து தகவல் சொல்லப்பட்டது.

ஓரளவு கலகலப்பாக நிருபர்களிடம் பேசக்கூடிய அமைச்சர் ஒருவர், ‘‘மேடம் சீக்கிரம் சிவாஜி குடும்பத்துக்கு சம்பந்தி ஆகப்போறாங்க!” என்று மட்டும் சொன்னார். அப்போதும் புரியவில்லை. அன்று மாலையே முதல்வர் இல்லத்திலிருந்து வெளியான செய்திக்குறிப்பு அ.தி.மு.க. வட்டாரத்தை திகைப்பிலும் வியப்பிலும் ஆழ்த்தியது. ‘சிவாஜியின் மகள் வயிற்றுப் பேத்தி சத்தியலட்சுமியை சசிகலாவின் அக்காள் மகன் சுதாகருக்கு நிச்சயித்திருக்கிறார்கள்!’ என்பது அந்த செய்திக்குறிப்பில் இருந்த விவரம். கூடவே நுழைக்கப்பட்டிருந்த வார்த்தைதான் பலருக்கு வியப்பூட்டியது.!

 ‘முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகர்’ என்பவைதான் அந்த வாசகங்கள்!

சசிகலாவின் அக்காள் மற்றும் திருச்சியில் அரசு அதிகாரியாக இருக்கும் விவேகானந்தன் தம்பதியின் இளைய மகன்தான் சுதாகரன். அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த நாளிலிருந்தே தனது சித்தி சசிகலாவுடன் போயஸ் தோட்டத்திலேயே தங்கியிருந்தார் அந்த இளைஞர். முதல்வருக்கும் அவர் மேல் அன்பு உண்டு என்பதும் அ.தி.மு.க மேல்மட்டப் பிரமுகர்களுக்குத் தெரிந்த கதைதான். ஆனால் இந்த சுதாகரனை முதல்வர் எப்போது வளர்ப்பு மகனாகத் தத்தெடுத்தார் என்பதுதான் பலருக்குப் புரியாத மர்மமாக இருந்தது. ஆனால், சில மாதங்களுக்கு முன் சுதாகரனின் அண்ணன் பாஸ்கருக்குத் தஞ்சையில் திருமணம் நடந்தது. அந்தத் திருமணத்துக்கு முதல்வரும் போயிருந்தார். அந்தத் திருமண வீட்டில் தனது முக்கிய உறவினர்கள் முன்னிலையிலேயே “சுதாகரை உங்கள் வளர்ப்பு மகனாக ஏற்றுக்கொள்ளுங்கள்’’ என்ற வேண்டுகோளை முதல்வரிடம் வைத்தாராம் சசிகலா. அப்போது சிரித்தபடியே மௌனமாக இருந்துவிட்டார் முதல்வர்.

பிறகு ‘என் உடன்பிறவா சகோதரி’ என்று சசிகலாவை குறிப்பிட்ட ஓர் அறிக்கை வெளியானது. அந்த அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு வற்புறுத்தல் தொடர்ந்தது என்கிறார்கள். ‘என்னை உங்கள் சகோதரி என்று நாடறிய ஒப்புக்கொண்ட பிறகு, என் மகன் அந்தஸ்த்தில் உள்ள சுதாகரை உங்கள் மகனாக ஏற்றுக்கொள்வதில் என்ன தயக்கம்? போயஸ் தோட்டத்தில் சகலவிதமான நிர்வாகங்களையும் தன் பொறுப்பில் வைத்திருந்து, கடமை தவறாமல் பணியாற்றும் அவனை உங்கள் தத்துமகனாக அறிவிப்பதில் என்ன தவறு?’ என்று உருக்கமாகக் கேட்டிருக்கிறார் சசிகலா! இந்தச் சூழ்நிலையில்தான் சிவாஜியின் பேத்தியை உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் தற்செயலாகப் பார்த்திருக்கிறார் சுதாகரன். அவரை இவருக்குப் பிடித்துவிட, அதைத் தன் சித்தி சசிகலாவிடம் சொன்னார். விஷயம் ஜெயலலிதா காதுக்கும் போனது!. இந்த நிலையில்தான் “சுதாகரன் எனது வளர்ப்பு மகன்’’ என்று முதலமைச்சர் பகிரங்கமாக அறிவித்தார். இதையடுத்துத்தான் அன்னை இல்லம் - போயஸ் கார்டன் சம்பந்தம் உருவானது. இதற்கு முக்கிய காரணம், ‘சாந்தி’ தியேட்டர் நிர்வாகியும், சிவாஜியின் தங்கையை மணந்துகொண்டவருமான வேணுகோபால். இவர், சசிகலாவின் ஊர்க்காரர். ஊர்க்காரர்-உறவுக்காரர் ஆகும் ஆசையில் இந்தத் திருமணப் பேச்சுகளை வேணுகோபால் ஊக்குவித்தார்.

நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒருவர், ‘முதல்வரும் சரி... சிவாஜியும் சரி... அந்த நிகழ்ச்சியில் ரிலாக்ஸ்டாக இல்லை. ஏதோ நிர்ப்பந்தத்தில் நடந்துகொள்வது போல் இருந்தனர்!’’ என்றார். நிச்சயதார்த்தத்தின்போது, தாம்பூலத் தட்டுகளைப் பரிமாறிக்கொண்டபோது மட்டும் சிவாஜி அந்த இடத்தில் தலையைக் காட்டி உள்ளார். மற்ற சமயங்களிலெல்லாம் வீட்டுக்கு முன்புறமுள்ள பந்தலுக்கு வந்துவிட்டார். மணமகள் சத்யலட்சுமியின் தாயார் சாந்தி, சசிகலா குடும்பத்தாரிடம், ‘நீங்கள் என் அப்பாவின் (சிவாஜி) பிரம்மாண்டமான இந்த வீட்டைப் பார்த்து இந்தச் சம்பந்தம் பற்றி பெரிதாக எண்ண வேண்டாம். எங்களுக்கென்று ஒரு சிறிய வீடு (ராயப்பேட்டையில் சிவாஜி ஃபிலிம்ஸ் அலுவலகத்துக்கு எதிரிலுள்ள காம்பௌண்டில் இருக்கும் மூன்று வீடுகளில் ஒன்று) மட்டும் இருக்கிறது. அவ்வளவுதான்!’’ என்று குறிப்பாகச் சொல்லி வைக்கவும் தவறவில்லை. மணமகள் சத்யலட்சுமிக்கு நிச்சயதார்த்தத்தின்போதே சசிகலா 150 சவரன் மதிப்புள்ள நகைகளைப் போட்டு அழகு பார்த்தார்.

ராணி வீட்டுக் கல்யாணம்!

சாலையெல்லாம் ஒளிவெள்ளம் பொழிய அந்த வெளிச்சத்தில் உடலெங்கும் வைரமும் தங்கமும் மின்ன தன் தோழி சசிகலா மற்றும் பரிவாரங்களுடன் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலத்தில் வந்துகொண்டிருந்தார் முதல்வர்!

‘‘இந்த ஒரு திருமணத்துக்கு இத்தனை கோடிச் செலவா...? திருமணமாகாத ஒரு ஏழைப் பெண்ணுக்கு ஒரு லட்சம் என்று கொஞ்சம் தாராளமாகச் செலவு செய்தாலும் நிச்சயம் ஒரு லட்சம் பெண்களுக்குத் திருமணம் செய்திருக்கலாமே!’ ஓர் ஓரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்த மத்தியதரக் குடும்பத்து வாக்காளர் அடித்த வயிற்றெரிச்சல் கமென்ட் இது!’’ தமிழகத்துக்கே உரிய ‘விசேஷ நிகழ்ச்சிகளுடன்’ களைகட்டியது செப்டம்பர் ஆறு. அன்று மாலை மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. அந்தி சாயும் நேரம்... அடையாறு சிக்னல் அருகிலுள்ள சுந்தரவிநாயகர் கோயிலிலிருந்து மாப்பிள்ளை ஊர்வலம்!

மாப்பிள்ளைக்காக அலங்கார சாரட் வண்டி காத்திருக்க, மக்கள் கூட்டமோ ‘மணமகனை’ எதிர்பார்த்து நிற்க... சரியாக 6.10க்கு வந்தார் சுதாகர்! அந்தக்கால இளவரசர் கெட்-அப்பில் சிரிப்பு கொப்பளிக்க சுதாகர் நிற்க... சுற்றிலும் குவிந்திருந்த அமைச்சர்களோ ‘ஏவலர்கள்’ போல அவரையே மொய்த்துக் கிடந்தனர்!

சில நிமிடங்களுக்குள் வெள்ளை காரில் வந்திறங்கிய ஜெயலலிதா, குத்துமதிப்பாக ஒரு கும்பிடு போட்டுவிட்டு வளர்ப்பு மகனைப் பார்த்து வாஞ்சையோடு சிரித்தார்.

6.20-க்குத் தொடங்கியது மாப்பிள்ளை ஊர்வலம். சந்தன மரத்தால் இழைத்துத் தயாரிக்கப்பட்ட ‘சாரட்’ வண்டி என்று முதல்வர் தரப்பிலிருந்தே பெருமையுடன் செய்திகள் அளிக்கப்பட்டிருந்தன! ஆனால், அந்தச் சந்தன அழகை ரசிக்க முடியாதபடி சிவப்பு நிற ‘வெல்வெட்’ துணியால் மறைக்கப்பட்டிருந்தது சாரட்!

சட்டம்-ஒழுங்கைக் காப்பது தவிர, கரகாட்டம், ஒயிலாட்டத் துக்குக்கூட ஸ்பெஷல் பயிற்சி பெற்ற போலீஸ் டீம் பயன்படுத்தப்பட்டது! கலைக்குழுக்கள் ஆட்டத்தோடு முன்னே செல்ல... அடுத்ததாக பாண்டு வாத்தியக்குழு பாடிக் கலக்க... தொடர்ந்து சிறப்புப் பாதுகாப்புப் படை அணிவகுத்தது! அதன் பின்னே பார்த்தால் அதிசயம்... ஆச்சரியம்!

இதுவரை இல்லாத வகையில் கிட்டத்தட்ட கும்பலோடு கும்பலாக ‘அம்மா’ நடந்து வந்துகொண்டிருந்தார்! அவரை ஒட்டியபடியே ‘நடமாடும் ஜூவல்லரி’ என்று வர்ணிக்கத் தகுந்த வகையில் உடல் முழுவதும் நகை மறைக்க தோழி சசிகலா கம்பீரமாக நடந்துவர... அவரது உறவுக்காரப் பெண்கள் அதைவிட சற்றே குறைந்த நகைகளுடன் சிரிப்பும் சந்தோஷமுமாக நடைபோட்டனர்.

25 நிமிடம் நடந்து சாதனை படைத்த நிலையில் ஜெயலலிதா முகத்தில் களைப்பு பெருகியது. தடித்த வைர வளையல் மாட்டிய தனது வலதுகையால் முகத்தை லேசாகத் துடைத்தபடி அவர் திரும்பிப் பார்க்க... கூடவே ஊர்ந்து வந்த அவரது கார் கதவு திறந்தது. ஏறிக்கொண்டார்! அடையாறு பாலத்தைக் கடந்து அமைச்சர்கள் இல்லத்துக்கு அருகே போடப்பட்டிருந்த ‘கோட்டை செட்டிங்கை’ ஊர்வலம் நெருங்கியபோது முதல்வரின் கார் நின்றது. மீண்டும் ‘வாக்’ செய்ய ஆரம்பித்துவிட்டார்.

இசைக்கல்லூரி அருகே மதில்மேல் உட்கார்ந்திருந்த அழுக்கு உடை அணிந்த இளைஞர் ஒருவர், அம்மாவைக் கிட்டத்தில் பார்த்தவுடன் அவரை நோக்கி அப்படியே ஓடிவர... சுதாரித்த போலீஸ் பாய்ந்து போய் அவரை ஒரே அமுக்காய் அமுக்கியது! மீண்டும் காரில் முதல்வர்!

நல்லவேளையாக, மாப்பிள்ளை ஊர்வலம் மண்டபம் போய்ச் சேர்ந்த பிறகு சொல்லிவைத்தது போல இருபது நிமிடத்துக்கு ‘சோ’வெனப் பெய்தது மழை! திடுக்கிட்ட தொண்டர்கள் ஓடி ஒளிய இடம் பார்ப்பதற்குள், அவர்களை முற்றிலுமாக நனைத்து முடித்தது மழை!

உள்ளே மணவீட்டார் நலுங்கு சம்பிரதாயங்களை நடத்திவிட்டு சாப்பிடத் துவங்கியபோது, வெளியே கட்சிக்காரர்கள் பலர் குளிரில் வெடவெடத்துக்கொண்டிருந்தனர்!

 மறுநாள்... திருமணம்!

போயஸ் தோட்டத்திலிருந்து மெரீனா வரை கட்டப்பட்ட வாழை மரங்கள் அனைத்தும் அவசர கதியில் கட்டப்பட்டதால், முன்னிரவு பெய்த மழைக்கு அனைத்துமே உடைந்து தெருவில் சரிந்துகிடந்தன. குலை இல்லாமல் வாடி வதங்கி அமங்கலமாகக் காட்சியளித்த வாழை மரங்களை மாநகராட்சி வண்டியின் குப்பை லாரிகளில் அவசர அவசரமாக அள்ளி ஏறக்கட்டிக் கொண்டிருந்தனர் மாநகராட்சி ஊழியர்கள்.

மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் அடுத்தடுத்து வந்திறங்க.. எம்.ஆர்.சி. நகரிலிருந்த அந்த மாபெரும் திருமண வளாகம் (ப்ளேகிரவுண்ட்) கலகலப்பு பெற்றது. பந்தலின் கடைசி வரிசையிலிருந்து பார்த்தால் ‘தகதக’க்கும் தங்க நிறத்துடன் மணமேடை தக்கணூண்டு தெரிந்தது. மேடையில் இருந்தவர்கள் சிறு புள்ளிகளாகத் தெரிந்தனர். பந்தல் அத்தனை நீளம். முக்கால் வாசிப் பேர் க்ளோஸ் சர்க்யூட் டி.வி.யில் தான் கல்யாணம் பார்த்தார்கள்.

ஜெயலலிதா, மணமகன் சுதாகர் சசிகலா மற்றும் அவரது குடும்பத்துப் பெண்கள் அனைவரும் தங்க நிற உடையை யூனிஃபார்ம் போல் அணிந்திருந்த காட்சியை மேடைக்கு அருகில் இடம் கிடைத்தவர்கள் கண்டு ரசித்தனர்.

பிரதமர், ஜனாதிபதி ஆகியோர் வராததால் முதல்வர் அப்செட் ஆனதாகத் தெரிகிறது. ‘‘அவ்வளவு தூரம் நேரில் போய் அழைத்தும் காங்கிரஸ்காரர்கள் தங்களின் புத்தியைக் காட்டிவிட்டார்களே... நல்லவேளை, தேசிய முன்னணித் தலைவர்களாவது வந்திருந்து எனக்கு அகில இந்திய ஸ்டேட்டஸைக் கொடுத்தார்களே...’’ என்று ஒரு அமைச்சரிடம் அந்தத் திருமண கலாட்டவுக்கு நடுவிலேயே சொன்னார் முதல்வர். வந்தவர்களை விழுந்து விழுந்து உபசரித்தவர்களில் தலையானவர் தலைமைச் செயலர் ஹரிபாஸ்கர். நாட்டியமாடுவது போல் அங்குமிங்கும் ஓடிச் செயல்பட்டவர் பத்மா சுப்பிரமணியம். இடுப்பிலிருந்த ரிவால்வரைத் தொட்டபடியே நடை பழகினார் வால்ட்டர் தேவாரம். பட்டு வேட்டி, பட்டுச் சட்டை சகிதம் மனைவியுடன் வந்தார் முன்னாள் டி.ஜி.பி. பால்.

சசிகலாவின் கண்ணசைப்பில் செயல்பட்டவர் இந்திரகுமாரி. தொழிலதிபர்களையும் வி.ஐ.பி-க்களையும் மட்டுமே கவனிக்கும் பொறுப்பு இந்திரகுமாரியுடையது. சசிகலா எங்கே திரும்பினாலும் அங்கே இருந்தார் அவர்.

நடிகர் கமலஹாசன் மனைவியுடன் வந்து சிவாஜி கணேசனையும் மணமக்களையும் மட்டும் பார்த்துப் பேசிவிட்டு ஜெயலலிதாவைக் கண்டுகொள்ளாமல் போனார்.

திருமண மந்திரம் சொல்லும் புரோகிதர்கள் மணமகனின் பெயரை ஒவ்வொரு தடவையும் உச்சரிக்கும்போதும் ‘தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி மாண்புமிகு ஜெ.ஜெயலலிதாவின் மகன் சுதாகரன்’ என்று கூறினார்கள். ஆனால், செவாலியர்-நடிகர் திலகம் என்றெல்லாம் அடைமொழி தராமல் ‘சிவாஜி கணேசன் அவர்களின் பேத்தி’ என்று சிம்பிளாகச் சொன்னார்கள்.

திருமண விழாவில் ஒரு ஸ்பெஷாலிட்டி! திருமண மந்திரங்களில் நிறைய திவ்யப்பிரபந்தங்களும் திருக்குறளும் சொல்லப்பட்டதுதான். முகூர்த்தம் பத்தரையிலிருந்து பன்னிரண்டு மணிக்குள். தாலி கட்டியபோது கரெக்டாக மணி பதினொன்று இருபது!

‘‘இந்தக் கல்யாண விஷயத்திலேயே மிகக் கவனமாக முதல்வர் ஏற்பாடு செய்தது தொண்டர்களுக்கான சாப்பாடுதான். ஒரே மூச்சில் ஒரே சமயத்தில் பன்னிரண்டாயிரம் பேர் உட்கார்ந்து சாப்பிடலாம். நிச்சயம் ஒரு லட்சம் பேருக்கு மேல் இந்தத் திருமணத்தில் சாப்பிட்டார்கள். இதை கின்னஸ் புத்தக நிறுவனத்துக்கு எழுதி அனுப்பப்போகிறோம்!’’ என்று அமைச்சர்கள் பரமசிவம் மற்றும் சத்தியமூர்த்தி இருவரும் சொல்கிறார்கள். இவர்கள்தான் சாப்பாட்டுப் பந்தி இன்சார்ஜ்கள்!

இதுபோன்ற களேபரங்களுக்கு இடையே, 1996-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வந்தது. அதில், அ.தி.மு.க. துடைத்து எறியப்பட்டது. தி.மு.க. த.மா.கா. கூட்டணி அமோக வெற்றிபெற்றது. இந்த நேரத்தில்தான் ஜெயலலிதா மீது வழக்குத் தொடர அனுமதி கேட்ட சுப்பிரமணியன் சுவாமி, அதை சொத்துக் குவிப்பு வழக்காக நீதிமன்றத்தில் மனுச்செய்தார்.

சொத்துக் குவிப்பு வழக்கு...

ஜெயலலிதா ஆட்சியைவிட்டு இறங்கிய பிறகும் சுப்பிரமணியன் சுவாமி விடுவதாக இல்லை. கொட்டும் மழையையும் மீறி, சென்னை உயர் நீதிமன்றத்தைக் 1996 ஜுன் 15-ம் தேதி காலை, பரபரப்பாக்கினார் சுவாமி. அன்றுதான் ஜெயலலிதா மீது வழக்குத் தொடுக்க வந்திருந்தார். இந்த வழக்கு, ஊழல் தடுப்புக் காவல் சட்டத்தின்படி தாக்கல் செய்யப்பட்டது. இதற்காகச் சரியாகப் பத்து மணிக்கெல்லாம் சந்திரலேகா, வழக்கறிஞர் வெங்கட்ராமன் மற்றும் மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் சகிதம் மாருதி ஜிப்சி வேனில் வந்திறங்கிய சுப்பிரமணியன் சுவாமி, நிருபர்களைப் பார்த்து ‘‘என்ன எனக்கு முன்னாலயே வந்துட்டீங்களா?’’ என்று சிரித்துக்கொண்டே கேட்டுவிட்டு, ‘‘கவலைப்படாதீங்க, ஜெயலலிதாவை விடமாட்டேன்!’’ என்று சொல்லி, வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு கோர்ட் அறைக்குள் நுழைந்தார். வழக்கம் போலவே நீதிபதி வருவதற்கு முன்னால் வழக்கறிஞர் வெங்கட்ராமனிடம் வழக்கு சம்பந்தமான தஸ்தாவேஜூகளைக் கேட்டுப் பெற்றுக்கொண்டு, நீதிபதி வந்ததும் வாதாடுவதற்காகத் தன்னைத் தயார் செய்துகொண்டிருந்தார். கிட்டதட்ட மணி ஒன்றை நெருங்கியபோது, நீதிபதி ராமமூர்த்தி வந்தார்.

மனுவைப் பொறுமையாகப் படித்துப் பார்த்த நீதிபதி, ‘‘ஜெயலலிதா மீது நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு என்ன ஆதாரம் வைத்து இருக்கிறீர்கள்?’’ என்றதும் ‘‘கடந்த 1993-ம் வருடத்தில் நான் நாடாளுமன்றத்தில் ஜெயலலிதாவின் சொத்து விவரம் குறித்துக் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலே போதுமானது!’’ என்றார் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ள விஷயம் இதுதான்; ‘‘கடந்த 1991-ம் வருடத்தில் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதா, உண்மையாக மக்கள் தொண்டாற்றுவார் என்றுதான் மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், மாதம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்குவதாகச் சொன்ன ஜெயலலிதா, முறைகேடாகச் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளார். அதோடு, ஜெயலலிதாவின் உயிர்த்தோழி சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் பெயரில் தமிழகம் முழுவதும் வாங்கிக்குவித்த சொத்துக்கள் அனைத்தும் சட்டவிரோதமானவை!

1989-90-ம் வருட வருமான வரிக் கணக்கின்படி, எனக்கு சொத்துக்கள் எதுவுமே இல்லையென்று சொன்ன ஜெயலலிதா, 94, 95-ல் 38.21 கோடி ரூபாய்க்குச் சொத்துக்களை சேர்த்துள்ளதாகச் சொன்னால் அவருக்குச் சொத்துக்கள் வந்ததெப்படி?! முறைகேடாகத்தான் அவர் சம்பாதித்திருக்க வேண்டும்! இதேபோல பல ஆதாரங்கள் உள்ளன! எனவே ஊழல் தடுப்புக் காவல் சட்டத்தின்படி, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்! என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

‘‘அமைச்சராகவோ, அரசு ஊழியராகவோ இருந்தவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர உரிய அதிகாரியிடம் இருந்து அனுமதி வாங்கப்பட்டுள்ளதா?’’ என்று சுப்பிரமணியன் சுவாமியிடம் நீதிபதி கேட்க, ‘‘அவர் முதல்வராக இருந்தால்தான் அனுமதி வாங்கப்பட வேண்டும்! அவர் முதல்வர் பதவியிலிருந்து போய்விட்டதால் அனுமதி தேவையில்லை!’’ என்று கூறியவர், ஏற்கெனவே சுப்ரீம் கோர்ட்டில் வழங்கப்பட்ட பல தீர்ப்புகளை அதற்காக மேற்கோள் காட்டினார். ஏ.ஆர்.அந்துலே வழக்கில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பையும் எடுத்து வைத்து வாதாடினார்.

உடனே நீதிபதி, ‘‘இதையெல்லாம் நீங்கள் இந்த கோர்ட் முன்னால் வாக்கு மூலமாகத் தரமுடியுமா?’’ என்று கேட்க, ‘‘தருகிறேன்’’ என்று கூண்டில் ஏறிய சுப்பிரமணியன் சுவாமி, ‘‘முறைகேடாகச் சொத்துக்கள் சேர்த்த முன்னாள் முதல்வரை ஜாமீனில் வெளிவராதபடிக்குக் கைதுசெய்து சிறையில் அடையுங்கள் அல்லது வருமானவரித் துறை விசாரணைக்கு உத்தரவிடுங்கள்!’’ என்றார். அதன் பின் 26-ம் தேதியன்று மறு விசாரணைக்கு வந்தது. அப்போது, சுவாமியின் புகார் மீது உரிய விசாரணை நடத்தும்படி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் லத்திகா சரண், வி.சி.பெருமாள் ஆகியோருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையே உயர் நீதிமன்றத்தில் போய் ஜெயலலிதா, இதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று முறையிட்டார். அதனால் வழக்கு சிறிது நாள் தாமதமானது. ஆனால், அதன் பின் புகாரில் ஆதாரங்கள் இருப்பதால், வழக்கை தொடர்ந்து நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வந்தார் நல்லம்ம நாயுடு...

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி வி.சி.பெருமாள் முதல் கட்ட விசாரணையை முடித்து வைத்திருந்தார். அதில் குற்றச்சாட்டுகள் பற்றி நிறைய ஆதாரங்கள் அவருக்கு கிடைத்திருந்தன. அதன்பின் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று சொல்லி அதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. அதன் விசாரணை அதிகாரியாக நல்லம்ம நாயுடு நியமிக்கப்பட்டார். செப்டம்பர் 18, 1996-ம் ஆண்டு இதில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. நல்லம்ம நாயுடுவுக்கு ஆதாரவாக 16 இன்ஸ்பெக்டர்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஜெயலலிதாவின் வீடு மற்றும் தோட்டங்களில் சோதனை நடத்த நீதிமன்றத்தில் உத்தரவு வாங்கப்பட்டது. இதையடுத்து, டிசம்பர் 6, 1996-ம் ஆண்டு ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் நுழைந்தது தனிப்படை. ஆனால், அப்போது கலர் டி.வி. ஊழல் வழக்கில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். நல்லம்ம நாயுடு நேரடியாக சிறப்பு அனுமதி பெற்று, மத்திய சிறைக்கே போய் விஷயத்தை ஜெயலலிதாவிடம் சொன்னார். அவர் தன் சார்பில் பாஸ்கரன், விஜயன் ஆகியோரை நியமித்தார். இதையடுத்து 7-ம் தேதி ரெய்டுக்காக போயஸ் கார்டன் வீட்டிற்குச் சென்றனர்.

ஆர்ப்பாட்டமான போயஸ் அரண்மனை!

கிட்டதட்ட 144 மணி நேரம் போயஸ் தோட்டத்தில் தொடர் ரெய்டு நடத்தி லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறை ‘கின்னஸ்’ சாதனை நிகழ்த்தியது! காலை பத்து மணியளவில் ஜெயலலிதா கைது செய்யப்பட்ட போதே, அவரிடம் சோதனை நடத்துவதற்கான அனுமதியும் பெறப்பட்டது. பாஸ்கரன், விஜயன் என்ற இரு நபர்களையும் சில வழக்கறிஞர்களையும் இந்தச் சோதனை செய்யும்போது கண்காணிக்கத் தன்னுடைய பிரதிநிதிகளாக ஜெயலலிதா நியமித்தார்! இதன்படி, அன்றைய தினம் பகல் 12 மணியளவில் லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் வி.சி.பெருமாள், கூடுதல் சூப்பிரன்டென்டெண்ட் நல்லம்ம நாயுடு தலைமையில் ஒரு டி.எஸ்.பியும் 20 இன்ஸ்பெக்டர்களும் போயஸ் கார்டனுக்குள் புகுந்தனர். அதிகாரிகள் உள்ளே வந்ததுமே வரவேற்காத குறைதான்... பொதுவாக ‘ரெய்டு’ என்று போனால், அந்த வீடுகளில் உள்ளவர்களுக்கு டென்ஷன் ஏற்படும். ஆனால் இவர்களைக் கண்டவுடன் போயஸ் தோட்டத்தில் இருந்த ஒருவர் ‘‘நீங்க வருவீங்கன்னு நாலு மாசமா எதிர்பார்க்கிறோம்... இவ்வளவு லேட்டாக வர்றீங்களே...? என்று சொல்ல... அதிகாரிகள்தான் ‘ஷாக்’காகிப் போனார்கள்! பிறகு சுதாரித்துக்கொண்டு தாங்கள் வந்த பணியைத் தொடங்கினார்கள். முதல் நாளன்று ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடுகளைப் பொதுவாக ‘அப்ஸர்வ்’ செய்தனர். அதாவது அந்த வீடுகளின் வாயில்கள் எத்தனை? யார்... யார்... உள்ளே இருக்கின்றனர். எந்தெந்தப் பொருட்கள் எங்கெங்கே உள்ளன? என்ற விவரங்களைச் சேகரித்தனர். இந்த விவரங்களை அறியவே அன்றைய தினம் முழுக்க நேரம் செலவனதாகத் தெரிகிறது! அந்த அளவுக்கு ஏராளமான பொருட்கள் அறைக்கு அறை கொட்டிக் கிடக்க பிரமித்துப் போனார்கள்!

போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுக்கு ஒட்டினாற் போல் இரண்டு வீடுகள். 36, போயஸ் கார்டன் என்றும் 31 ஏ, போயஸ் கார்டன் என்றும் வீட்டு எண்கள்! நம்பர் 36, போயஸ் கார்டன்தான் ஜெயலலிதா நீண்ட நாட்களாக குடியிருந்து வரும் வீடு. 1968-ல் ஜெயலலிதாவின் தாயாரும் நடிகையுமான சந்தியா இருந்தபோதுதான் இங்கு பத்து கிரவுண்ட் நிலத்தை வாங்கி வீடு கட்டியுள்ளார். அப்போது கட்டத் தொடங்கப்பட்ட வீடு, 1972-ல் முடிவடைந்தது!

இந்த வீட்டில் இரண்டு மாடிகள்தான் உள்ளன. கீழ்தளத்தில் நான்கு அறைகள். ஒரு பெரிய வராண்டா, டைனிங் ரூம், கெஸ்ட் ரூம், இரண்டு ஆபீஸ் ரூம்கள், சமையலறையை ஒட்டி இரு ஸ்டோர் ரூம்கள்.. இரண்டாவது மாடியில் இரண்டு அறைகள் மட்டுமே! இந்த பழைய வீட்டுக்குப் பின்புறம், வேலைபார்ப்பவர்களுக்குத் தனியறைகளும் சமையலறையும் உண்டு. இதுதவிர, வீட்டின் மேற்குத் திசையில் கார்ஷெட்டுகள். இந்த கார்ஷெட்டுகளுக்கு மேலே பெரிய ரூம்கள். இந்த ரூம்களையும் மெயின் வீட்டின் முதல் மாடியையும் இணைக்கும் பாலம் ஒன்றும் உண்டு! மெயின் வீட்டின் முதல் மாடியில்தான் ஜெயலலிதாவின் படுக்கையறை. மற்ற அறைகளில் ஏராளமான பொருட்கள், பரிசுப் பொருட்கள், துணிமணிகள், ஷோ கேஸ்கள் என்று குவிந்து இருந்துள்ளன! ஆனால் சமையலறை மட்டும் படுசிம்பிள்! இந்த வீட்டின் பின்பகுதியில் ஒரு ராட்சத டிஷ் ஆன்ட்டெனா காட்சியளிக்கிறது. இந்த பழைய வீட்டின் கிழக்குத் திசையில் தான் 31ஏ, போயஸ் கார்டன் இருக்கும் இடம். ஜெயலலிதா முதல்வராவதற்கு முன்பு இந்த இடத்தில் சில குடிசைகள் இருந்தன. திருச்சியைச் சேர்ந்த பி.வி.ராஜாராம் என்பவருக்குச் சொந்தமாக இருந்த ஒரு கிரவுண்ட் இடத்தை எட்டு லட்ச ரூபாய்க்கு ஜெயலலிதா வாங்கியுள்ளார். 1993-ல் இந்த இடத்தில் கட்டடம் கட்டத் தொடங்கி 1995-ல் முடித்துள்ளார். கீழ்தளம் மற்றும் ஐந்து மாடிகள் கொண்டது, இந்த புதிய கட்டடம். ஒவ்வொரு மாடியும் 1,500 சதுர அடி பரப்பளவு! கீழ்த்தளத்தில் கார் நிறுத்த இடம், ஜெனரேட்டர் ரூம் மற்றும் இரு அறைகள் உள்ளன. இந்தப் புதிய கட்டடத்தின் முதல் மாடியை கான்ஃபரன்ஸ் ஹாலாக மாற்றியுள்ளனர். அங்கே ஆடம்பரமான ஃபர்னிச்சர்கள் போடப்பட்டுள்ளன. இரண்டாவது மாடியில் ஒரு மினி சினிமா தியேட்டர் உருவாக்கப்பட்டுள்ளது- மிகவும் சொகுசான சோபாக்களோடு! மூன்றாம் மாடி, நான்காவது மாடிகளில் விருந்தினர் தங்குவதற்கு ஏற்றாற்போல் படுக்கையறைகளுடன் இருந்தது. இதற்கும் மேலே இருந்த மாடியில் செயற்கைத் தோட்டம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்தத் தோட்டத்தில் சிறிய மலை, கொரியன் புல்வெளி என்று ஓர் அழகான இயற்கைச் சூழலை வடிவமைத்திருக்கிறார்கள்.

மறுநாள் சோதனை தொடங்கியவுடன் போயஸ் கார்டனில் இருந்தவர்களைத் தவிர யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்விலை. உள்ளே இருந்தவர்களும் அதிகாரிகளின் அனுமதியுடன்தான் வெளியே போக முடியும். சோதனை நடந்த ஏழு தினங்களும் இப்படித்தான். முதலில் வீட்டில் இருந்த டம்ளர், பிளாஸ்க் முதல் ஃபர்னிச்சர்கள், டி.வி, மிக்ஸி, ஏர்கண்டிஷன் வரை ஒவ்வொன்றாக கணக்கிட்டுக் குறித்துக்கொண்டனர். இதில் ஏராளமான அலங்கார விளக்குகளும் அடங்கும். இந்தப் பழைய வீட்டில் மட்டும் 35 ஏர்கண்டிஷன் மெஷின்கள் இருந்தன. புதிய வீட்டில் ஒன்பது ஏ.சி-க்கள். இதுதவிர, ‘வராண்டா’, ‘லாபி’ பகுதிகளில் ஸ்பிளிட் ஏர்கண்டிஷனும் வைக்கப்பட்டிருந்தது.

இப்படி உபயோகிக்கப்படும் பொருட்கள் தவிர, ஷோ கேஸில் வைக்கப்பட்டிருந்த அலங்காரப் பொருட்களின் விவரங்களை எடுத்தனர். இதில் வெள்ளியிலான பொருட்களும் அடக்கம். சில பொருட்கள் பரிசாகக் கொடுக்கப்பட்டவை. இவையெல்லாம் ஜெயலலிதா சினிமாவில் நடித்தபோது ஜெயலலிதாவுக்குக் கிடைத்ததாகச் சொல்லப்பட்டதாம்! ஏராளமான மது அருந்தும் கோப்பைகளும் அழகுப்பொருட்களாகக் காட்சியளித்தன. இப்படிப்பட்ட அழகுப் பொருட்களின் எண்ணிக்கையைக் குறிப்பெடுத்தவர்கள் வெள்ளிச் சாமான்களை மட்டும் எடை போட்டுப் பார்த்தனர். 800 கிலோ வரை இருந்தது.

அடுத்து பல பீரோக்களில் பாலியெஸ்டர் புடவைகள், பட்டுப்புடவைகள் இருந்ததை எடுத்துக் கணக்கிட்டனர். விலை உயர்ந்த பட்டுப்புடவைகள் சுமார் 750 உட்பட 10,500 புடவைகள் இருந்தன. இப்படிப் புடவைகள் ஆயிரக்கணக்காக இருந்தால் அதற்கு மேட்சான வேறு சில விவகாரங்களும் வேண்டாமா? அதாவது சேலைக்கு மாட்சாக எழுநூற்று ஐம்பது ஜோடி செருப்புகள் இருக்க அவற்றையும் கணக்கிட்டுக்கொண்டனர். இவையெல்லாவற்றையும் விட தங்க, வைரம், கரன்ஸி எங்கே இருக்கிறது என்று தேடியபோது அந்த விவரங்கள் ஜெயலலிதாவின் சித்தி (அம்மாவின் தங்கை) ஜெயலட்சுமிக்கு மட்டுமே தெரிந்துள்ளது. அவர்தான் இவை இருந்த இடத்தைக் காட்டியுள்ளார். அந்த ‘நகைக் கடையை’ச் சித்தி எடுத்துக் கொட்டியுள்ளார். 700 வளையல்கள், 26 ஒட்டியாணங்கள் (பல வைரம் பதிக்கப்பட்டவை), பம்பாய், மாடல் பிரேஸ்லெட், நெக்லஸ்கள், வைரத்தோடுகள், தங்கத் தட்டுகள் என்று 23 கிலோ எடையில் இந்தத் தங்க, வைர நகைகள் இருந்தனவாம். ரொக்கப் பணமாக இருந்தது ஒரு லட்சத்து அறுபதாயிரம் ரூபாய் மட்டுமே! இதுதவிர, ஜெயலலிதா வாங்கிய சொத்துக்களின் பத்திரங்களும் கிடைத்தன. அதாவது ஹைதராபாத் வீடுகள், மந்தைவெளியில் இருந்த பூர்வீக வீடுகள், போயஸ் கார்டனின் பழைய-புதிய வீட்டின் பத்திரங்கள், ஜெயா பப்ளிக்கேஷன், சசி என்டர்பிரைஸஸ், கிண்டி இதயம் பேசுகிறது பில்டிங் மற்றும் நமது எம்.ஜி.ஆர் பில்டிங் பத்திரங்கள் கிடைத்தன.

இப்படிப் பழைய வீட்டில் அலசிவிட்டுப் புதிய அடுக்குமாடிக் கட்டடத்திலும் சோதனை நடந்தது. அங்கும் ஐந்து கிலோ தங்க நகைகள் கிடைத்தன. சித்தியிடம் இந்த நகைகள் பற்றி ஏன் சொல்லவில்லை என்று அதிகாரிகள் கேட்டபோது ‘‘அது சசிகலா வைத்துவிட்டுப் போன நகைகள்’’ என்று சொல்லியுள்ளார்.

இந்த புதிய கட்டடத்தில் விதவிதமான அலங்கார விளக்குகளும் ஏற்கனவே பகிரங்கமாக இருக்கும் தியேட்டர், ஃபர்னிச்சர்களைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆனால், கிலோ கணக்கிலும் குவிண்டால் கணக்கிலும் கிடைத்த தங்க, வைர வெள்ளிப் பொருட்களைக் கணக்கிடத்தான் பெரும்பாடு பட்டனர்.

முதலில் லோக்கல் அப்ரைஸர் ஒருவரைக் கொண்டு இந்த நகைகளின் தரம், எடை மதிப்பைக் கணக்கிட்டனர். ஆனால் அரசு அப்ரைஸர்கள்தான் இதைக் கணக்கிட்டுச் சான்றிதழ் தரவேண்டும் என்று சொல்லப்பட சுங்க இலாகாவைச் சேர்ந்த அப்ரைஸர்கள் வந்து கணக்கிட்டனர். இவை எல்லாவற்றையும் விட போயஸ் கார்டனில் இருந்த பழைய வீட்டைப் புதுப்பித்துக் கட்டியதையும் புதிய வீட்டைக் கட்டியதைப் பற்றிய விவரங்கள்தான் அதிகாரிகளுக்குத் தேவைப்பட்டன. ஜெயலலிதா முதல்வரான பின்னர் பழைய வீட்டின் வெளிப்பகுதியை முழுக்க விலை உயர்ந்த கிரானைட் கற்களாலும் உட்பகுதியின் சீலிங்கை (மேற்கூரை) தவிர, சுவரும் தரையும் மார்பிள் கற்களால் பதிக்கப்பட்டிருந்தன. இப்படிப் பதிக்கப்பட்ட கற்களின் மதிப்பையும் அதிகாரிகள் கணக்கிட்டனர். இதே மாதிரி புதிதாகக் கட்டப்பட்ட அடுக்கு மாடிக் கட்டடத்தின் மதிப்பையும் இந்த வீட்டிலும் முழுக்கப் பதிக்கப்பட்டிருந்த கிரானைட், மார்பிள் கற்களைப் பற்றிய விவரங்களையும் கணக்கெடுத்தனர். இந்தப் புள்ளிவிவரங்களைக் கணக்கிட பொதுப்பணித்துறையைச் சேர்ந்த பொறியாளர்கள் வந்தனர். கட்டடம் மற்றும் எலெக்டரிக்கல் பொறியாளர்கள் ஒவ்வொன்றையும் அளந்து பார்த்து மதிப்பீடு செய்தனர், கூடவே, புதிய கட்டடங்கள் எப்போது கட்டப்பட்டிருக்கும் போன்ற விவரங்களையும் ஆராய்ந்தார்கள்.

இதுதவிர, இரு வீடுகளிலும் விலைமதிப்பிலான தேக்குமரம் மற்றும் சந்தன பவுடர் கோட்டிங் முறையில் இருந்த கதவுகள், நிலைகளையும் கணக்கிட்டனர். புதிய கட்டடங்களின் பிளான்கள் அதன்படி முறையாகக் கட்டப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும் அப்படிப்பட்ட டாக்குமென்ட்களையும் கைப்பற்றினார்கள். ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பத்தொன்பது கார்களும் லிஸ்ட் எடுக்கப்பட்டன.

இப்படி முழுக்கக் முழுக்கக் கிடைத்த பொருட்கள், டாக்கு மெண்ட்கள் விவரங்களுக்குப் பின்னர் சின்னச் சின்ன சந்து பொந்துகளையும் அலசினார்கள். ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் வேறு சில தகவல்கள் பிரமிப்பூட்டுபவை. மாதம் ஒன்றுக்கு மின்சாரக் கட்டணத்துக்கு மட்டும் முப்பத்தையாயிரம் ரூபாய்க்கு மேலாகச் செலவாகிறதாம். இதோடு ஜெயலலிதா வீட்டு டிரைவர்கள், வேலைக்காரர்கள், இவர்களின் சம்பளம், நாய்களின் பராமரிப்பு செலவுகள் மட்டும் மாதம் ஒன்றுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு மேலே செலவான விவரங்கள் கிடைத்தன.

பழைய வீட்டின் இரண்டாவது மாடியில்தான் முன்பு சசிகலா இருந்தார். பின்னர் அங்கு வளர்ப்பு மகன் சுதாகரன் வந்து தங்க, சசிகலா புதிய அடுக்குமாடி வீட்டில் குடிபுகுந்தார். வெளியூரில் இருந்து வரும் விருந்தினர்கள் சந்தோஷமாகத் தங்கிப் போவதற்காகவே ஜெயலலிதா இந்தக் கட்டிடத்தைக் கட்டினாராம். இதற்காகவே தியேட்டர், நடன அரங்கம், மீட்டிங் ஹால், விருந்தினர்கள் தங்க பெட்ரூம் போன்ற வசதிகளோடு கட்டப்பட்டதாம். ஆனால், மனைஅடி சாஸ்திரப்படி வாசல்படி சரியில்லாமல் போகவே தனக்குப் பல தொல்லைகள் என்று நம்பிய ஜெயலலிதா, வேறொரு வாசல் கட்டும் முயற்சியில் இருந்தார். இந்த வீட்டுக்கு எப்போதாவது ஒரு முறைதான் ஜெயலலிதா மினி தியேட்டரில் படம்பார்க்க வந்துள்ளார். இப்படிப் பல்வேறு முறையில் தொடர்ந்து ஏழு தினங்களாகச் சோதனையும் விசாரணையும் நடத்தினார்கள் டி.வி.ஏ.ஸி. அதிகாரிகள். இரவு பகலாகத் தொடர்ந்துப் பணியாற்றினார்கள். பாத்ரூம் போகவும் குளிக்கவும் ஒரு குட்டித் தூக்கம் போடவும் மட்டும் தங்கள் வீடுகளுக்குப் போய் வந்தனர். தங்க, வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள், பட்டுச் சேலைகள் மற்ற சேலைகள், செருப்புகள், வாட்சுகள், ஏ.ஸி மெஷின்கள், கார்கள், ஃபர்னிச்சர்கள், புதிய சொத்துக்கள், போயஸ் தோட்டத்தின் புதிய கட்டடம் மற்றும் மார்பிள் கிரானைட்கள், ஹைதராபாத் தோட்டத்தில் புதுப்பிக்கப்பட்டது மற்றும் புதிய பங்களா உட்பட எல்லாம் சேர்ந்து 50 கோடி வரை மதிப்பிட்டனர்.

 போயஸ் தோட்டத்தில் யார்... யார்?

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் கிட்டத்தட்ட 30 பேர் அப்போது இருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஜெயலலிதாவைவிட சசிகலாவின் விசுவாசிகள்தான். கார்டனில் உள்ள எல்லோருக்கும் வழிகாட்டியாக இருந்தவர் ஆடிட்டர் சண்முகம். இவரிடம் கட்டளை பெற்றுதான் மற்றவர்கள் செயல்பட்டுள்ளனர். ‘இவர் ஒரு அபார மூளைக்காரர்’ என்று புகழ்கின்றனர் அதிகாரிகள். இவருக்கு அடுத்து இருந்தவர் விஜயன், சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர். பட்டதாரியான இவர் இதற்கு முன்பு சுப்ரமணியன் சுவாமியிடமும் இருந்துள்ளார். இவருடைய திருமணத்தை ஜெயலலிதாதான் நடத்தி வைத்துள்ளார்.

இவர் பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியர் ஒருவரிடம் வேலை கேட்டுப் போக.. அவர் மூலம் ஆடிட்டர் சண்முகத்தின் அறிமுகம் கிடைத்து போயஸ் கார்டனில் நுழைந்துள்ளார். ‘நமது எம்.ஜி.ஆர்’ பத்திரிக்கையில் வேலைக்கும் சேர்ந்தார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரிடம் அண்டர் செக்ரெட்டரியாகப் பணிபுரிந்தவர் ஜெயராம் என்பவர். இவர் அரசு ஃபைல்களைப் பார்த்தாரோ இல்லையோ... போயஸ்கார்டனின் முழு நிர்வாகத்தையும் கவனித்து வந்தார். அவர் ஓய்வுபெற்ற பின்னர் இந்தப் பொறுப்பை ஏற்றவர்தான் விஜயன். கார்டனுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் வாங்கிப்போட வேண்டியது இவருடைய பொறுப்பு. இவருக்கு போயஸ் கார்டனைப் பற்றிய அனைத்து ரகசியங்களும் தெரியும்.

அடுத்து பாஸ்கரன் மற்றும் தாமஸ் என்ற இரட்டையர்கள்! இதில் பாஸ்கரன்தான் நீண்ட நாட்களாக போயஸ் கார்டனில் இருப்பவர். இவர்கள் இருவரும் சிறப்புப் பாதுகாப்புப்படை ஐ.ஜி.யாக இருந்த விஜயகுமார் சிபாரிசால் ஜெயலலிதாவுக்கு அறிமுகமானவர்கள். இவர்கள் போயஸ் கார்டன் தயவில் மிகப்பெரிய பத்திரிக்கை ஒன்றை ஆரம்பிக்கும் கனவோடு வந்தவர்கள். அது நிறைவேறவில்லை. பாஸ்கரனின் பூர்வீகம் இலங்கை.

ராஜம்மா - ஜெயலலிதாவின் பிரத்யேகச் சமையல்காரம்மா, ‘சுமார் 20 வருடங்களாக போயஸ் கார்டனில் இருக்கிறேன்’ என்று சொன்ன அவருக்கு அங்கே ஏராளமான சலுகைகள். தனி பெட்ரூம் வசதி இவருக்கு உண்டு! இவரது அறையில் மட்டுமே 25 பட்டுப் புடவைகள் இருந்ததாம். ஆல் இன் ஆலாக இருக்கும் இவரைக் கண்டால் மற்ற பணியாளர்களுக்கும் பயம்! ஜெயலலிதாவின் பெட்ரூமுக்குள் போகக்கூடிய அனுமதி இவருக்கு மட்டுமே உண்டு. ஜெயலலிதாவுக்குத் தேவையான காய்கறிப் பழங்களை நேரடியாக வாங்கி வருவது இவர்தானாம்! ஆனால் ஜெயலலிதா பெரும்பாலும் சாக்லெட், ஐஸ்கிரீம், கூல்ட்ரிங்ஸ் என்று சாப்பிட்டே காலம் தள்ள... ராஜம்மாவுக்கு சமையல் வேலையும் அவ்வளவாக இருக்காது. இப்போது ஜெயிலில் ஜெயலலிதாவை அடிக்கடி போய்ப் பார்த்து வரும் இவர், அப்படியே சசிகலாவையும் பார்த்துவிட்டு வருகிறார். இதன்படி இரு அம்மாக்களுக்கிடையே போஸ்ட்மேனாகவும் இப்போது வேலைபார்க்கிறார்.

ஜெயலலிதாவின் கார் டிரைவர் ஐயப்பன் கேரளாவைச் சேர்ந்தவர். ஜெயலலிதாவின் முழு நம்பிக்கையைப் பெற்றவர். எம்.எஸ்ஸி, பி.எட், படித்த சுவாமிநாதன் என்பவருக்கு போயஸ் கார்டனில் என்ன வேலை என்றால் டெலிபோன் வந்தால் அதை அட்டெண்ட் பண்ணி, சம்பந்தப்பட்டவர்களைப் பேசச் சொல்லுவதுதான்.

அதிகாரிகள் வரம்பு மீறினார்களா?

இரண்டாவது கட்டச் சோதனை நடத்தச் சென்றபோது போயஸ் கார்டனில் ஒரு அறையில் குவிந்து கிடந்த இருநூற்றுப் பதினான்கு சூட்கேஸ்களைப் பார்த்து மலைத்துப் போய் நின்றனர் அதிகாரிகள். இந்த சூட்கேஸ்களில் சிறியவற்றில் ஒரு லட்சமும் பெரிய சூட்கேஸ்களில் அதற்கு மேலேயும் ஐநூறு ரூபாய் கட்டுகளாகப் பணம் வைக்க முடியும், ஆனால் இந்த சூட்கேஸ்களில் வந்த பணம் எங்கு போனது என்பதை டி.வி.ஏ.ஸி அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. எல்லா சூட்கேஸ்களும் காலியாக இருந்தன. இந்த வெற்று சூட்கேஸ்களின் மதிப்பு மட்டுமே சுமார் மூன்று லட்சத்து எழுபத்தோராயிரம் ரூபாய்! சோதனையில் கிடைத்த செருப்புக்களை மீண்டும் கணக்கிட்டவர்கள் காதி கிராஃப்ட் மற்றும் ‘சாட்லர்ஸ் நிறுவனத்தினர். முந்நூற்று ஐம்பது ஜோடி செருப்புகளின் மதிப்பு ஏற்கனவே லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறையினர் கணக்கிட்ட மதிப்பைவிட, அறுபத்தாறாயிரம் ரூபாய் அதிகமாகவே இருந்தது.

ஜெயலலிதாவின் அறையில் இருந்த 700 பட்டுப் புடவைகளை அப்படியே வைத்துவிட்டு வீட்டில் மீதமிருந்த 914 பட்டுப்புடவைகள் உட்பட 7,100 சேலைகளின் மதிப்பு மட்டுமே கணக்கிடப் பட்டது. இந்தப் பணியைச் செய்தது கோ-ஆப்டெக்ஸ் நிறுவன தொழில்நுட்பக் குழு! இதேமாதிரி பதினைந்து லட்சம் மதிப்புள்ள நூற்று நாற்பத்தாறு நாற்காலிகளையும் 20 லட்சம் மதிப்புள்ள 20 சோபா செட்டுகளையும் மதிப்பிட, சம்பந்தப்பட்டத் தொழில்நுட்பக் குழுக்களையே அழைத்து வந்தனர் டி.வி.ஏஸி அதிகாரிகள்

30 டேப்ரிக்கார்டர்கள், 12 டி.வி., எட்டு வி.ஸி.ஆர், முப்பத்து மூன்று (இண்டர்காம்) தொலைபேசிகள், பத்து ஃபிரிஜ்களும் (மூன்று கதவுகளுடையது) கணக்கெடுக்கப்பட்டன. 91 வாட்சுக்களை மதிப்பிட கனி கோ-வினர் வந்திருந்தினர். பிளாட்டினம் வாட்ச், கோல்டு-ஒமேகா வாட்ச் என்று விதவிதமாக இருந்த சில வாட்சுகளை இவர்களாலும் மதிப்பிட முடியவில்லை. போலீஸ் போட்டோகிராபர்களும் அரசு திரைப்படக் குழுவினரும் சிரமப்பட்டு விதவிதமாக இவற்றைப் படமெடுத்தனர்.

இந்த பொருட்களில் ஒரு சிலவற்றை மட்டும் கோர்ட்டில் காட்ட சாம்பிளுக்கு எடுத்துக்கொண்டனர். மற்றவற்றைத் திருப்பிக்கொடுத்துவிட்டனர். செருப்புகளையும், சூட்கேஸ்களையும் மட்டும் ஜெயலலிதா வீட்டிலே ஒரு ரூமில் வைத்து சீல் வைத்தனர். விலை மதிப்புமிக்க நகைளை மட்டும் கோர்ட்டில் ஒப்படைப்பதற்காக அவற்றைப் பதிவுசெய்து எடுத்து வர அதிகாரிகள் நினைத்தபோது, போயஸ் கார்டனில் இருந்த ஜெயலலிதாவின் உதவியாளர்கள் அதற்கு உடன்பட மறுத்துவிட்டனர்.

‘‘முதல் கட்ட சோதனையின்போதுதான் என்னை ஏஜெண்டாக அம்மா நியமிச்சிருந்தாங்க... இரண்டாவது கட்ட சோதனை செய்யும்போது என்னை நியமிக்கவில்லை. நான் பொறுப்பேற்க முடியாது. வேண்டுமானால் நீங்கள் பூட்டை உடைத்து எடுத்துக்கொண்டு போங்கள். நாங்கள் வெளியே போகிறோம்’’ என்று ஆவேசமாக கூறிவிட்டார் உதவியாளர் பாஸ்கரன்.

இதுமட்டுமல்ல, டி.வி.ஏ.ஸி. அதிகாரிகளைப் பற்றிப் புகார் கூறி பத்திரிகைகளில் அறிக்கை கொடுத்தார் அந்த உதவியாளர். இதனால் வி.சி.பெருமாள் (ஐ.ஜி) தலைமையில் சென்ற டி.வி.ஏ.ஸி. அதிகாரிகள், சோதனையின் இடையிலேயே திரும்பி வந்தனர். ஆனால் போயஸ் தோட்டத்தினர் கூறிய புகார் விளம்பரத் துக்காகவே இருந்தது. ‘எனது பெட்டில் அதிகாரிகள் உட்கார்ந்திருந்தனர்’ என்று கூறி ஜெயலலிதா கூட அறிக்கை விட்டிருந்தார்.

ஆனால் உண்மையில் நடந்தது அப்படியல்ல... பெட்டின் பஞ்சு மெத்தையில் ஏதாவது மறைத்து வைக்கப்பட்டிருக்குமோ என்று சோதிக்க மெட்டல் டிடெக்டரை வைத்து பார்த்திருக்கிறார்கள் அதிகாரிகள். அப்போது டிடெக்டரில் ஏதோ சத்தம் வர, பெட்டை அப்படியே தூக்கி வைத்துப் பார்த்தனர். பெட்டுக்கு குறுக்கே சென்ற இரண்டு இரும்பு கம்பிகள்தான் மெட்டல் டிடெக்டரை அப்படிச் சத்தம் போட வைத்தது என்பது தெரிந்தவுடன் பெட்டை மீண்டும் பழைய நிலையில் வைத்துவிட்டனர்.

இதேமாதிரி போயஸ் கார்டனில் ஒரு பூஜை ரூம் இருந்தது. பக்தி யோடு சென்ற அதிகாரிகள் சில வெள்ளி சிலைகளை மட்டும் பார்த்துக் கணக்கெடுத்துக் கொண்டனர். பூஜை அறை என்பதால் எந்த அவமரியாதையும் செய்யக்கூடாது என்பதற்காகவே அந்த ரூமை ஜாக்கிரதையாக சோதனை செய்து வந்துள்ளனர்.

இதோடு சோதனை நடந்துகொண்டிருக்கும்போது ஐ.ஜி. உட்பட அதிகாரிகள் வெளியே வரும்போதும் சரி... உள்ளே வரும்போதும் சரி... போயஸ் கார்டனில் இருந்தவர்களைக் கொண்டு தங்களை முழு சோதனை செய்யச் சொல்லியுள்ளனர். ‘அதாவது உள்ளே இருந்த பொருட்களை வெளியே கொண்டு போய்விட்டார்கள் என்று சொல்லிவிடக் கூடாது என்பதற்கும் வெளியே இருந்து பொருட்களைக் கொண்டு வந்து உள்ளே வைத்து கணக்குக் காட்டிவிட்டனர் என்று சொல்லிவிடக்கூடாது என்பதற்கும்தான் இப்படி செய்துள்ளனர்.

இரண்டாவது சோதனையின்போது போயஸ்தோட்டத்தில் இருந்து தங்கம், வைர நகைகளைப் பறிமுதல் செய்துகொண்டுவர டி.வி.ஏ.ஸி. அதிகாரிகள் முயற்சி செய்ததற்குக் காரணம் உண்டு. ஜெயலலிதாவின் அபரிதமான சொத்துக்களுக்கு முக்கிய ஆதாரமாக இருக்கும் நகைகள் மாறிவிடக் கூடாது, அல்லது காணாமல் போய்விடக் கூடாது என்று நினைத்தனர் அதிகாரிகள். போயஸ்கார்டனில் ஜெயலலிதாவின் பெட்ரூம் உட்பட பல இடங்களில், ஜெயலலிதாவும், சசிகலாவும் ஜோடியாக இருக்கும் போட்டோக்கள் இருந்தன. ஜெயலலிதாவிடம் அதிகப்படியான நகைகள் இருந்தாலும், அதை வெளிப்படையாக அணிவதில்லை. ஆனால், உடன்பிறவா சகோதரிகள் இருவருமே உடம்பு முழுக்க நகையை அணிந்து கொண்டு சில புகைப்படங்களில் காட்சியளிக்கின்றனர். ஆனால், படங்களில் ஜெயலலிதா அணிந்துள்ள பல நகைகள் இப்போது வீட்டில் இல்லை. அந்த நகைகள் எங்கே என்று தேடினர் அதிகாரிகள். இதனால்தான், இருக்கும் நகைகளும் இப்படி மறைக்கப்பட்டுவிடுமோ என்றுதான் அவற்றை மீட்க நினைத்தனர் அதிகாரிகள். இதற்கு போயஸ் கார்டனில் இருந்தவர்கள் ஒத்துழைக்க மறுக்க, இதுகுறித்து செசன்ஸ் கோர்ட்டில் டி.வி.ஏ.ஸி. அதிகாரிகள் புகார் கொடுத்திருக் கிறார்கள்.

அதன்படி கூடுதல் எஸ்.பி. நல்லம்ம நாயுடு ஜெயலலிதாவிடம் அனுமதி கேட்டார். ஜெயலலிதாவும் தனது இரு ஏஜெண்டுகளை குறிப்பிட்டார். அதோடு நகைகளையும் முழுமையாக ஒப்படைப்பதாகவும் கூறிவிட்டார். அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை போயஸ் கார்டன் சென்று நகைகளைக் கணக்கிட்டு எட்டுப் பெட்டிகளில் கொண்டு வந்தனர். மறுநாள் கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

போயஸ் கார்டனில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் வெள்ளித் தட்டுகளும் ஏராளமான வாட்சுகளும் கிடைத்ததில் ஒரு பின்னணி உண்டு. இவை வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்துக்கு வாங்கப்பட்டவையாம். மிக முக்கிய புள்ளிகளுக்கு வெள்ளித் தட்டோடு பட்டுச்சேலை, வேட்டியும், சாதாரண நபர்களுக்கு 1,000 ரூபாய் மதிப்புள்ள வாட்சும் கொடுக்கப்பட்டன. வெள்ளித்தட்டை எடை பார்த்தபோது, ஒரு கிலோ! ஆக பட்டு விவகாரங்களையும் சேர்த்து ஒரு அழைப்பிதழுக்கு 10,000 ரூபாய் செலவு செய்துள்ளனர் என்றால், அழைப்பிதழ் பெற்ற நபர்கள் மணமக்களுக்கு எவ்வளவு மதிப்பில் பரிசளித்திருப்பார்கள் என்பதுதான் கேள்வி!

சிறப்பு நீதிமன்றம்... குற்றப்பத்திரிகை... முதல் சம்மன்!

ஜெயலலிதா, அவரது உடன்பிறவா சகோதரி சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துக் குவிப்பு பற்றி சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் கட்டம் தொடங்கியது.

1997, ஜூன் 4-ம் தேதி லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறையினர் (டி.வி.ஏ.சி) ஜெயலலிதா சொத்து சேர்த்த வழக்கின் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். முதல்வராக இருந்தபோது ஜெயலலிதா அரசு ஊழியர் என்பதால் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கவர்னர் அனுமதி தேவை. கடந்த வாரம்தான் கவர்னர் அனுமதி கொடுத்தார். இதை தமிழக அரசு ஜூன் 2-ம் தேதி டி.வி.ஏ.சி-யினருக்கு அனுப்ப, அவர்கள் உடனடியாகச் செயல்பட்டு குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தனர்.

ராஜீவ் கொலை வழக்கை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால், கிரிமினல் வழக்குகளில் ஜெயலலிதா சொத்துச் சேர்ப்பு வழக்கு ஒரு கின்னஸ் சாதனைக்கு ஈடானது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் வி.சி.பெருமாள் மேற்பார்வையில் செயல்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுதான் இந்த வழக்கை விசாரித்தது. புலனாய்வுக்குத் தலைமை வகித்தவர் எஸ்.பி.யான நல்லம்மநாயுடு. இந்த வழக்கை நேரடியாக விசாரிக்க இவரைத்தான் கோர்ட் நியமித்திருந்தது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல... பல்வேறு மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் விசாரணை நடத்தியது இந்தக் குழு.

ஜெயலலிதா-சசிகலா நகைகள் பற்றி இன்ஸ்பெக்டர் கல்யாண சுந்தரம் விசாரிக்க... இன்ஸ்பெக்டர்கள் பாலுச்சாமி, முரளி, இக்பால், வெங்கடேஸ்வரன் ஆகியோர் ஜெ - சசியின் வங்கி விவகாரங்களை விசாரித்தனர். பல்வேறு ஊர்களில் வாங்கப்பட்ட நிலங்களைக் கண்டுபிடித்து அவை சம்பந்தப்பட்ட ரெக்கார்டுகளைத் தேடிப்பிடித்த இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன் மற்றும் வள்ளிநாயகம்...

பங்களாக்கள் மற்றும் இந்த வழக்கின் சாட்சியங்களை விசாரித்தவர்கள் டி.எஸ்.பி.-யான ஜெகநாதன், இன்ஸ்பெக்டர்கள் சங்கர், கிருஷ்ணாராவ் ஆகியோர். சாட்சிகளாக இருக்கும் பல்வேறு அரசுத்துறை ஊழியர்களை விசாரித்தவர் டி.எஸ்.பி.-யான அன்புச்செழியன். கோர்ட் சம்பந்தமான விவகாரங்களுக்கு டி.எஸ்.பி.கதிரேசனும் அவருக்கு உதவியாக இன்ஸ்பெக்டர் சந்திரமோகன்... இப்படி போலீஸ் அதிகாரிகளைத் தவிர, பதிவுத்துறை பதிவாளர்கள், அரசின் தணிக்கைப் பிரிவு ஆடிட்டர்கள், பொதுப்பணித் துறை பொறியாளர்கள், சொகுசு பஸ் உட்பட பல்வேறு வாகனங்களை மதிப்பிட அரசு வொர்க்ஷாப் மேலாளர்கள் என்று இந்த விசாரணையில் பலதரப் பட்டவர்கள் பங்கெடுத்தனர்.

ஆயிரக்கணக்கானவர்கள் விசாரிக்கப்பட்டு 963 பேர் சாட்சி களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் எல்லோரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அடுத்து ஜெயலலிதா - சசிகலா சொத்துக்கள் சம்பந்தப்பட்ட 750 டாக்குமென்ட்டுகள், சாட்சியங்களின் வாக்குமூலங்கள் எல்லாம் சேர்ந்து சுமார் 30,000 பக்கங்கள் கொண்டுள்ளன. கிரிமினல் வழக்குகளில் இது ‘வேர்ல்ட் ரெக்கார்டு’ இவர்கள் வாங்கிய கடன் சம்பந்தப்பட்ட டாக்குமென்ட்டுகள் மட்டும் 100 பக்கங்கள் இருந்துள்ளன. இந்த 30,000 பக்கங்களில் உள்ள விவரங்கள் 300 பக்கங்களில் சுருக்கப்பட்டன. அதுதான் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட வழக்கின் புலனாய்வை ஒன்பது மாதங்களுக்குள் முடித்தது மிகப்பெரிய சாதனை! ஆனால், முதல் கோணல் ஒன்று நடந்துவிட்டது. இந்த வழக்கு, நீதிபதி சம்பந்தம் பொறுப்பேற்றிருக்கும் 11-வது கூடுதல் செஷன்ஸ் (ஸ்பெஷல்) கோர்ட்டில் இருக்கிறது. இந்தக் கோர்ட்டில் அன்றைய தினம் டி.வி.ஏ.சி. அதிகாரிகளால் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யமுடியவில்லை.

இவருக்கு ஒதுக்கப்பட்ட அரசு கார் ரிப்பேரானதால், நீதிபதி சம்பந்தம் அன்று கோர்ட்டுக்கு வரமுடியவில்லை. குற்றப் பத்திரிகையை பண்டல் பண்டலாகக் கட்டி நாலைந்து பெட்டிகளில் வைத்து டி.வி.ஏ.சி-யினர் கொண்டு போனார்கள். மற்றொரு ஸ்பெஷல் கோர்ட் நீதிபதி பெற்றுக்கொண்டார்.

மொத்த சொத்துக்களில், ஜெயலலிதா பெயரில் தனியாக இருப்பவையும் ஜெயலலிதா - சசிகலா ஆகிய இருவரின் பெயரில் கூட்டாக இருப்பவையும் ஜெயலலிதா தயவால் சுதாகரன் (வளர்ப்பு மகன்) மற்றும் இளவரசி போன்றோர் தங்கள் பெயரில் வாங்கிய சொத்துக்களும் இந்த வழக்கில் சேர்த்துக் கொள்ளப்பட்டன.

இரண்டாயிரம் ஏக்கர் நிலம், முப்பதுக்கு மேற்பட்ட பங்களாக்கள், கிலோ கணக்கில் நகைகள், வாகனங்கள், வங்கிக் கணக்கில் இருந்த டெபாஸிட்டுக்கள் போன்றவை குற்றப் பத்திரிக்கையில் லிஸ்ட் போடப்பட்டன. இவற்றின் மதிப்பு 66 கோடியே 60 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்! ஆனால், உண்மையான மதிப்பு 1,200 கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. இதில் உள்ள உண்மையைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு வேறு சில பின்னணிகளைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஜெயலலிதா மற்றும் சசிகலா குடும்பத்தினரின் வழக்கமான வருமானங்கள் மற்றும் பூர்வீகச் சொத்துக்கள் முதலில் கணக்கிடப்பட்டது. ஜெயலலிதா தமிழக அரசிடம் ஊழியமாகப் பெற்றது மாதம் ஒரு ரூபாய்தான்! இது தவிர அவருக்கு வாடகையாக வந்த வருமானம், வங்கியில் டெபாஸிட் செய்து அதன் மூலம் கிடைத்த வட்டி மற்றும் சசிகலாவின் பூர்வீகச் சொத்துக்கள் போன்றவையெல்லாம் சேர்த்தால் மொத்தம் 9 கோடிதான் தேறியது. இது தவிர ஒரு கோடியே 87 லட்சம் ரூபாய் வரை வங்கிக் கடனாகப் பெற்றிருந்தார்கள். ஆக மொத்தம் இந்த ஐந்து வருட காலகட்டத்தில் பதினோரு கோடிதான் இவர்களுக்குக் கிடைத்துள்ளது. ஆனால் இவர்கள் பெயரில் இப்போது இருப்பது 66 கோடி ரூபாய் சொத்துக்கள்!

இவையெல்லாமே மார்க்கெட் மதிப்பைவிடக் குறைத்துக் காட்டி பதிவு செய்யப்பட்டவை என்பதால், இவர்களது சொத்துக்களின் உண்மை மதிப்பு 1,200 கோடியைத் தாண்டும். அதை ஊர்ஜிதம் செய்ய ஏராளமான சாட்சியங்கள், ஆதாரங்கள் இந்தக் குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டுள்ளன.

சசிகலா, சுதாகரன், இளவரசி போன்றோர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்கள்தான். இவர்கள் பெயரில் வாங்கப்பட்டுள்ள சொத்துக்கள் ஜெயலலிதா தயவில் வாங்கப்பட்டவை என்பதற் கான ஆதாரங்கள்... வளர்ப்பு மகன் திருமணம், கட்சி மற்றும் அரசு விழாக்கள் பற்றிய விடியோ மற்றும் போட்டோக்கள்... இவற்றைப் பற்றியெல்லாம் ஏற்கனவே பல்வேறு செய்திகள் வந்துவிட்டன என்றாலும், தற்போது கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு போட்டோ ஆல்பம் குறிப்பிடத்தக்கது. சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகன் பிறந்த நாள் ஆல்பம்... ஜெயலலிதா தன் உடன்பிறந்த அண்ணன் மகனுக்குக்கூட இவ்வளவு அமர்க்களமான ‘பர்த்டே’யைக் கொண்டாடவில்லை. ஆனால் உடன்பிறவா சகோதரியின் அண்ணன் மகனுக்குப் படு அமர்க்களமாகப் பிறந்த நாள் கொண்டாடியதற்கு இந்த ஆல்பம் ஆதாரம். இளவரசியின் பெயரில் உள்ள சொத்துக்களுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று ஜெயலலிதாவால் கூறமுடியாது. இந்த வழக்கின் குற்றவாளிகளுக்கு 1997, ஜுன் 11-ம் தேதி ஆஜராக கோர்ட் சம்மன் அனுப்பியது.

சென்னை டூ பெங்களூரு... சுப்ரீம் கோர்ட் தந்த ‘கிடுகிடு‘ தீர்ப்பு!

66 கோடி ரூபாய் பெறுமானமுள்ள இந்த வழக்கை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தி.மு.க. அரசு தொடர்ந்தது. டான்சி நிலம் தொடர்பான வழக்கை விடவும் இந்த சொத்துக் குவிப்பு வழக்குத்தான் தி.மு.க.வின் ‘நம்பிக்கை நட்சத்திரம்’. வேகமாக அரசு தரப்பில் சாட்சிகள் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டனர். ஆனாலும் வழக்கு கொஞ்சம் இழுத்தடிக்கப்பட, தீர்ப்பு கொடுக்கப்படாமலே ஆட்சி மாறியது! அதன் பின்னரும் இந்த வழக்கு வழக்கு வேகமாகப் போனது. ஆனால் வேறொரு கோணத்தில்! தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர் தார்மீக ரீதியாக ராஜினாமா செய்ய அ.தி.மு.க. அரசு சார்பில் வேறு வழக்கறிஞர் நியமனம் நடந்தது. இந்த வழக்கில் கிட்டத்தட்ட 250 சாட்சிகள் மொத்தம் விசாரிக்கப்பட்டனர். இதில் பல சாட்சிகள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சாட்சியம் அளித்திருந்தனர். மீண்டும் அரசு தரப்பு வழக்கறிஞரால் விசாரிக்கப்பட்டபோது நேர்மாறாக சாட்சியம் அளித்தனர். அதாவது மெகா பல்டி அடித்தனர்!

வழக்கு விசாரணை இந்த ரீதியில் கிட்டத்தட்ட முடியும் தருவாய்க்கு வந்துவிட்டது. சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர் ராஜமாணிக்கம். இதற்கு முந்தைய அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வழக்கறிஞர் விஜயன் தாக்கப்பட்ட வழக்கில் ஆதிராஜாராம் போன்றவர்கள் மீதான் குற்றச்சாட்டுகளுக்கு சாட்சியம் இல்லை என்று தீர்ப்பு கூறியவர் இந்த ராஜமாணிக்கம். இவரே சொத்துக் குவிப்பு வழக்கிலும் தீர்ப்பு கூற இருக்க.. தி.மு.க. வேகமாகச் செயல்பட்டது.

இதையடுத்து, தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் சுப்ரீம் கோர்ட்டில் 2003, பிப்ரவரி ஐந்தாம் தேதி மனுச் செய்தார். ‘முதல்வர் ஜெயலலிதா மீதான வழக்கு ஸ்பெஷல் கோர்ட்டில் விசாரணை நேர்மையாக நடைபெறவில்லை. அரசு தரப்பில் சாட்சியம் கூறியவர்களே பல்டியடித்துள்ளனர். இதனால் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார் அன்பழகன்.

இந்த மனு மீதுதான் விசாரணை நடைபெற்று, 2003, நவம்பர்- 18ம் தேதி திருப்புமுனை தீர்ப்பு வந்தது. நீதிபதி எஸ்.என்.வரியவா மற்றும் ஹெச்.கே.சேமா அடங்கிய பெஞ்ச் தந்திருக்கும் தீர்ப்பு, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை அசைத்துப் பார்த்திருக்கிறது. வழக்கை கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருக்கு மாற்ற உத்தரவு போட்டதோடு, அங்கே எந்த தந்திரங்களும் செல்லுபடி யாகாதபடி விசாரணை நடக்கும் வகையில் அடுக்கடுக்கான உத்தரவுகளை வழங்கினார்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.

பெங்களூரில் இதெற்கென்றே ஒரு ஸ்பெஷல் கோர்ட் உருவாக்கப்படுவதோடு, ஸ்பெஷல் நீதிபதி மற்றும் ஸ்பெஷல் அரசு வழக்கறிஞரையும் நியமிக்க கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவு போட்டனர். நீதிமன்ற சரித்திரத்தில் இதுபோன்ற உதாரணம் ஏற்கெனவே இருக்கிறது. 1966-ல் குருசரண்தாஸ் என்பவர் சம்பந்தமான வழக்கும் ராஜஸ்தானிலிருந்து வேறு மாநிலத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் அது தீவிரவாதி சம்பந்தப்பட்ட வழக்கு. ஒரு அரசியல் வி.வி.ஐ.பி. சம்பந்தப்பட்ட வழக்கு மாற்றப்பட்டது இதுவே முதல் முறை!

தி.மு.க. தரப்பில் இந்த மனு பிப்ரவரி 5-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட உடனேயே எதிர் தரப்பு சுதாரித்திருக்கலாம். ஆனால் உச்ச நீதிமன்றம் இந்த மனுவை எடுத்து விசாரித்து ஒரு முடிவைச் சொல்வதற்கு உள்ளேயே ஸ்பெஷல் கோர்ட்டில் தீர்ப்பு வந்துவிடும் என்று நினைத்து விட்டனர். ஆனால், பிப்ரவரி 28-ம் தேதியே சுப்ரீம் கோர்ட் மனுவை எடுத்ததோடு ஸ்பெஷல் கோர்ட் விசாரணைக்கு தடையும் விதித்து ஷாக் கொடுத்தது. இதன்பின்னர் விசாரணையின்போது அன்பழகன் தரப்பில் வாதாடிய டெல்லி வக்கீல் அல்லி அர்ஜுனா வைத்த வாதங்கள் இந்த அளவுக்குக் கூர்மையாக இருக்கும் என்றும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

இந்த வழக்கில் பேராசிரியர் அன்பழகன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தவர் தி.மு.க. வழக்கறிஞரான பிரகாசம் என்றாலும், இதில் வாதாடியவர் மூத்த வழக்கறிஞர் அல்லி அர்ஜுனா. பார்ஸியான இவர் மும்பையைச் சேர்ந்தவர். ஜெயலலிதா தரப்புக்கு வழக்கம் போல் கே.கே.வேணுகோபால், சசிகலா குடும்பத்தினருக்கு வழக்கறிஞர் பாப்டே ஆஜரானார்கள்.

தி.மு.க. தரப்பில் இந்த வழக்கில் அடிப்படையாக வைக்கப்பட்ட வாதம் ‘‘அரசுத் தரப்பில் வழக்கை நடத்தவேண்டிய போலீஸ் துறை முதல்வரின் கையில்தான் இருக்கிறது. அதாவது, குற்றம்சாட்டப்பட்டவரே பிராஸிக்யூட்டராக இருப்பதால் இந்த வழக்கு தமிழகத்தில் நடக்கும் பட்சத்தில் நீதி கிடைக்காது!’’ எனபது.

இரண்டாவதாக, இந்த வழக்கில் அரசு சாட்சிகள் பல்டி அடித்த விவகாரம். கிட்டத்தட்ட 76 அரசு தரப்பு சாட்சிகளில் 64 பேர் பல்டி அடித்தனர். இதுதான் இந்த விவகாரத்தின் முக்கிய பிரச்சனையாகி, சுப்ரீம் கோர்ட் கடுமையாக விமரிசித்துவிட்டது. இப்படி அரசு தரப்பு சாட்சி ஏற்கனவே தான் சொன்னதில் இருந்து மாறும்பட்சத்தில் அவரை பல்டி அடித்த சாட்சியாக அரசு வழக்கறிஞரே அறிவிக்கவேண்டும். விசாரணை செய்த ஸ்பெஷல் கோர்ட் நீதிபதியிடம் சொல்லி இதை ரிக்கார்டு செய்திருக்க வேண்டும். ஆனால் புதிதாக வந்த அரசு வழக்கறிஞர் அப்படிச் செய்யவில்லை.

மூன்றாவது விவகாரம்.. முதல்வர் ஜெயலலிதா சம்பந்தப்பட்ட நேரடியான விஷயம். இந்த சொத்து சேகரிப்பு வழக்கில் சாட்சியங்கள் எல்லாம் விசாரிக்கப்பட்டு, இறுதியில் கேள்வி கேட்கும் படலம் வந்தபோது குற்றம்சாட்டப்பட்ட எல்லாரும் கோர்ட்டில் ஆஜராகி தாங்கள் குற்றம் புரிந்தவர்களா என்பது பற்றி நீதிபதியிடம் கூறவேண்டும். இந்த கேள்வி படலத்தில் போது குற்றச்சாட்டுக்குள்ளான முதல்வர் ஸ்பெஷல் கோர்ட்டில் ஆஜராகவில்லை. அவருடைய வழக்கறிஞரான ஜோதி கோர்ட்டின் ஸ்பெஷல் அனுமதியைப் பெற்று, நீதிமன்றம் கொடுத்த கேள்விகளை போயஸ் கார்டனுக்கு கொண்டு போய், வினாக்களுக்கான விடையை எழுதிக்கொண்டு வந்து கோர்ட்டில் சமர்ப்பித்திருக்கிறார்.

இதுவும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை செமக் கடுப்பாக்கி விட்டது. ‘‘குஜராத்தில் பெஸ்ட் பேக்கரி வழக்கில் இப்படி அரசு தரப்பு சாட்சிகள் பல்டி அடித்ததால்தான் கொலையாளிகள் விடுதலை செய்யப்பட்டனர். அங்கும் கோர்ட் சாட்சிகளை பல்டியாக பதிவு செய்யவில்லை.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் (ஜெயலலிதா) நடந்துகொண்ட விதத்தை நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. அவர் கோர்ட்டுக்கு வராமல் தவிர்த்தது விசாரணையையே கேலிக்கூத்தாக மாற்றிவிட்டது’’ என்பது நீதிபதிகளின் முக்கிய கண்டனம்.

ஜெயலலிதாவின் வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், ‘‘முதல்வர் ஜெயலலிதா ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பில் உள்ளவர். பாதுகாப்பு காரணங்களால் வரமுடியாமல் போனது’’ என்று வாதாடியதை கோர்ட் ஏற்கவில்லை.

சாட்சி பல்டியைப் பதிவு செய்யாதது ஏன் என்ற கேள்விக்கு வேணுகோபாலிடம் நேரடியான பதில் இல்லை. ‘‘சாட்சிகள் திரும்பக் கொடுத்த சாட்சியங்களில் எவ்வளவு உண்மை இருப்பதாக கோர்ட் கருதுகிறதோ, அதற்கான பலனையாவது என் கட்சிக்காரருக்கு தரவேண்டும்’ என்றார் வேணுகோபால். ‘‘இப்படி கண் முன்பு நீதியை குழிதோண்டிப் புதைப்பதை சுப்ரீம் கோர்ட் அனுமதிக்காது’’ என்ற நீதிபதி சேமா, ‘‘முதல்வர் ஜெயலலிதா உள்ளூரில் இருந்துகொண்டே கோர்ட்டுக்கு வராமல் இருந்திருக்கிறார். சட்டத்துக்கு முன் அனைவரும் சமம்’’ என்றார் கோபமாக.

அத்துடன் இந்த மனுவில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், 2003, நவம்பர் 18-ம் தேதியன்று இந்த வழக்கை பெங்களூருவுக்கு மாற்றி உத்தரவிட்டது. அரசுத்தரப்பு வழக்கறிஞராக ஆச்சார்யா நியமிக்கப்பட்டார். சிறப்பு நீதிபதியாக பச்சாப்புரே நியமிக்கப்பட்டார்.

பெங்களுருவுக்கு வழக்கு மாற்றப்பட்டபோதே இந்த வழக்கு ஏறத்தாழ முடியும் கட்டத்தில்தான் இருந்தது. ஆனால், அதன் பிறகுதான் குற்றம்சாட்டப்பட்டவர்கள் முழு வீச்சில் வாய்தா வாங்கும் வேலையில் இறங்கினார்கள். அதனால், அதன்பிறகு 10 ஆண்டுகள் இந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில், குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரும் ஆஜராகவில்லை. ஜெயலலிதா தரப்பில் ஒரு மாதம் அவகாசம் கேட்டனர். இப்படி அவகாசம் கேட்டுக்கொண்டே இருந்தனர். ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன நீதிபதி, இப்படி குற்றவாளிகள் ஆஜராகாமல் இருப்பதைக் காரணம் காட்டியே நான் தீர்ப்புச் சொல்லிவிடுவேன் என்று எச்சரித்தார். அதன்பிறகும் குற்றவாளிகள் அவகாசம் கேட்டனர். இதையடுத்து, 2005, மே 16ம் தேதி கண்டிப்பாகக் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆஜராக வேண்டும். அதற்கு மேல் அவகாசம் தரமாட்டேன் என்றார்.

ஆனால், நீதிபதி சொன்ன நாளில் அவர்கள் ஆஜராகவில்லை. அப்போது வெறுத்துப்போன நீதிபதி, ‘‘கடந்த ஆறுமாதங்களாக இந்த வழக்கில் ஒன்றுமே நடக்கவில்லை. நான் தனியாக நீதிமன்றத்தில் உட்கார்ந்து இருக்கிறேன். தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டதுபோல் உணர்கிறேன்’’ என்று வெறுத்துப்போய் சொன்னார். இதையடுத்து, லண்டன் ஹோட்டல் வழக்கையும் இந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று சொல்லி ஒரு மனுவை ஜெயலலிதா தாக்கல் செய்தார். அதை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. ஆனால், அப்படி விசாரித்தால் இந்த வழக்கு அடிபட்டுப்போகும் என்று நினைத்து, தி.மு.க. தரப்பில் உச்ச நீதிமன்றம் சென்றனர். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இப்போது சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை மட்டும் நடத்துங்கள் என்று உத்தரவிட்டது. இப்படியாக ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு 2004-ம் ஆண்டு முதல் பெங்களூருவில் நடைபெற ஆரம்பித்தது.

ஸ் பெ

unread,
May 16, 2015, 3:52:36 PM5/16/15
to panbudan

சென்னையில் இருந்து பெங்களூருக்கு மாற்றப்பட்டு 18 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு 14 நீதிபதிகளைக் கண்ட இந்த மெகா வழக்கில் காந்தி நகர் சிட்டி சிவில் கோர்ட் வளாகத்தில் அமைக்கப்பட்ட ஸ்பெஷல் கோர்ட் முக்கிய கதாபாத்திரம். நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள் மாறும்போதெல்லாம் காட்சிகள் மாறிய விசித்திரங்கள், வாய்தாக்கள், இழுத்தடிப்புகள் என ஜவ்வாக நீண்ண்ட ஸ்பெஷல் கோர்ட் காட்சிகளில் சில சுவாரஸ்ய பக்கங்கள் இங்கே...

பசவராஜ் பாட்டீலை விட ஜெயலலிதா பெரிய ஆளா?

பிடிவாத ஆச்சார்யா, பெங்களூரு சீரியஸ் 2004-ல் பெங்களூரில் விசாரிக்கப்பட்ட ஜெ. வழக்கு சிந்துபாத் கதை போல தொடர்ந்து கொண்டிருந்தது. குற்றம்சாட்டப்பட்ட யாரும் ஆஜராகவில்லை. இந்த வழக்கில், “இத்தனை ஆண்டுகளாக விசாரணை நடந்து வருகிறது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் இதுவரை ஆஜராகவே இல்லை. இங்கு நடப்ப‌து எல்லாம் அவர்களுக்குத் தெரியுமா... இல்லையா?” என்று நீதிபதி மல்லிகார்ஜூனையா கேள்வி எழுப்பினார். அதைத் தொடர்ந்து இந்திய குற்றவியல் தண்டனை சட்டத்தின்படி குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஜூலை 27-ம் தேதி நேரில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்!’’ என்று உத்தரவும் பிறப்பித்தார்.

இதனைத் தொடர்ந்து, 27-ம் தேதி, சசிகலா, இளவரசி மட்டும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்கள். சுதாகரனுக்கு கையில் அடிபட்டு இருப்பதாக அவரின் வழக்கறிஞர் சரவண குமார் மருத்துவச் சான்றிதழை சமர்ப்பித்தார். அதனைத் தொடர்ந்து ஜெயல‌லிதாவின் வழக்கறிஞர் பி.குமார், ‘‘குற்றம்சாட்டப்பட்டவர் இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவு 313-ன் படி, நீதிமன்றத்தில் ஆஜராகத் தேவை இல்லை!’’ என 2008-ல் திருத்தப்பட்ட சட்டத்தினை மேற்கோள் காட்டினார். அத்துடன் பல்வேறு வழக்குகளில் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளையும் எடுத்து கூறி நீண்ட நேரம் வாதிட்டார். இறுதியாக, ‘‘என்னுடைய வாதம் இன்னும் முடியவில்லை. அடுத்து நீதிமன்றம் கூடும்போது வாதம் தொடர அனுமதிக்க வேண்டும்!’’ என கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து, நீதிபதி மல்லிகார்ஜுனையா ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

இந்த நிலையில் 1-ம் தேதி கூடிய நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார், பாதியில் விட்ட வாதத்தை மீண்டும் தொடர்ந்தார். ‘‘2003-ம் ஆண்டு முதல்வ‌ராக குற்றம்சாட்டப்பட்டவர் (ஜெயலலிதா) இருந்தபோது, சென்னை தனி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவு இட்டார். அப்போது பாதுகாப்பு மற்றும் அலுவல் போன்றவற்றைக் காரணம் காட்டியதும், நேரில் ஆஜராக விலக்கு அளிக்கப்பட்டது. அதே போல் எழுத்துப்பூர்வமாக (313(1) பிரிவின்படி) வாக்குமூலம் அளிக்க அனுமதிக்க வேண்டும். ஒருவேளை நீதிமன்றம் மறுக்கும் பட்சத்தில், வீடியோ கான்ஃபெரன்ஸிங் (313(5)பிரிவின்படி) மூலமாவது அனுமதிக்க வேண்டும்!” என்று கேட்டார். அதோடு ஆந்திரா, மும்பை, டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்புகளை மேற்கோள் காட்டினார். இதனை உன்னிப்பாகக் கவனித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா பலமாக சிரித்தபடி, “நண்பர் ரொம்ப நேரமாக வாதிட்டுக்கொண்டு இருக்கிறார்... எவ்ளோ பெரிய வாதம்!’’ என்று சலித்துக்கொள்ள, நீதிபதியும் மீடியாக்காரர்களும் சிரித்தேவிட்டனர். அதற்குப் பிறகும், “ப்ளீஸ், இதுதான் கடைசி பாயின்ட்... இதுதான் கடைசிக் கருத்து!” என்று கூறி ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் வாதிட்டார் ஜெ.வக்கீல்.

அவரைத் தொடர்ந்து அரசு தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா, ‘‘2003-ல் சென்னையில் இருந்து இந்த வழக்கை பெங்களூரு தனி நீதிமன்றத்துக்கு மாற்றியபோதே, உச்ச நீதிமன்றம் வழக்கை இப்படித்தான் நடத்த வேண்டும் என சில நடைமுறைச் சட்டங்களைச் சுட்டிக்காட்டியது. எனவே உச்ச நீதிமன்ற ஆணையின்படி 313 பிரிவை அமல்படுத்தினால் யாராக இருந்தாலும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும். சட்டத்தின் முன்பாக அனைவரும் சமம். என்னுடைய அனுபவத்தில், கர்நாடக அரசில் பெரிய பதவியில் இருந்த பசவராஜ் பாட்டீல் கூட நேரில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்து இருக்கிறார். எனவே, மீண்டும் மீண்டும் புதிய மனுக்கள் மீது விசாரணை நடத்தத் தேவை இல்லை. எனவே, எதிர்த் தரப்பில் தாக்கல் செய்த வீடியோ கான்ஃபெரன்ஸிங் மூலம் விசாரிக்க வேண்டும் என்ற மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்!” என்றார் அதிரடியாக‌.

உடனே ஜெ.வக்கீல் குமார் மீண்டும் எழுந்து, ‘குற்றம்சாட்டப்பட்டவர் வீடியோ கான்ஃபெரன்ஸிங் மூலம் விளக்கம் அளிக்கலாம். எனவே, அது தொடர்பாக வாதாடப் போதிய நேரம் வழங்க வேண்டும்!’’ என்றார். உடனே நீதிபதி மல்லிகார்ஜுனையா, ‘‘நாளையோ, நாளை மறுநாளோ நீங்கள் தாராளமாக வாதாடலாம்!’’ என்று கூறியதும், “எனக்கு மும்பை கோர்ட்டில் வழக்கு இருக்கிறது. அதனால் கூடுதல் அவகாசம் வேண்டும்!’’ என்று கேட்டுக்கொண்டார். அதன் பிறகு ஆகஸ்ட் 8-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி. இப்படியே இழுத்துக்கொண்டு போய் 2011-ம் ஆண்டு வரை ஜெயலலிதா நேரில் ஆஜராகவில்லை.

நீதிமன்ற உத்தரவுப்படி சசிகலா, இளவரசி இருவரும் ஜுலை மாதம் 27-ம் தேதி கோர்ட்டில் ஆஜரானார்கள். உடல் நிலையைக் காரணம் காட்டி, சுதாகரன் ஆஜராகவில்லை. ஜெயலலிதாவின் வழக்கறிஞரான பி.குமார், ஜெயலலிதா ஆஜராகாமல் இருப்பதற்கான வாதங்களை எடுத்து வைக்க.. அதற்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா கடும் ஆட்சேபம் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 12-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். ஏக எதிர்பார்ப்புகளுக்கிடையில், 12-ம் தேதி தனி நீதிமன்றம் கூடியது. நீதிபதி மல்லிகார்ஜூனையா, ‘‘ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருப்பதற்கான காரணங்களை எழுதி, வக்கீல்பி.குமார் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுக்​களைத் தள்ளுபடி செய்கிறேன்’’ என்று கையோடு கொண்டு​வந்திருந்த குறிப்பை வாசிக்க... உடனே எழுந்த ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமார், ‘‘செப்டம்பர் 14-ம் தேதி வரை தமிழகத்தில் சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறுகிறது. அதற்குள் ஜெயலலிதாவை கோர்ட்டில் ஆஜராகும்படி உத்தரவிடக் கூடாது’’ என அடுத்த மனுவை தாக்கல் செய்ததும் கடுப்பாகிவிட்டார் நீதிபதி. ‘‘ஜெயலலிதாவை எப்போது எப்படி இங்கே வரவழைக்க வேண்டும் என கோர்ட்டுக்குத் தெரியும்’’ என்று சொல்லி அந்த மனுவையும் தள்ளுபடி செய்தார் நீதிபதி.

இந்த விவகாரங்களைத் தொடர்ந்து சசிகலா, இளவரசி ஆகியோரின் வக்கீல்கள், இன்னொரு மனுவைத் தாக்கல் செய்தனர். அதில், ‘‘சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி நல்லம்ம நாயுடுவிடம் மீண்டும் மறு விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும்’’ என கோரினர். இந்த மனு மீதான விசாரணையை, ஆகஸ்ட் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி. நீதிபதி மல்லிகார்ஜுனய்யா கோபம் அடைந்ததைத் தொடர்ந்து, ஜூலை 27-ம் தேதி சசிகலாவும், இளவரசியும் ஆஜரானர்கள். அப்போதும் சுதாகரனுக்குக் கையில் காயம் காரணமாக ஆஜராகவில்லை. இந்த நிலையில்தான், இசட் பிளஸ் பாதுகாப்பில் ஜெ. இருப்பதால் கோர்ட்டில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என போடப்பட்ட இரண்டு மனுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்தார். இதனால் ஜெ. தரப்பு சுப்ரீம் கோர்ட்டுக்குப் போனது. ‘விலக்கு அளிக்க முடியாது. செப்டம்பர் 12-க்குள் ஆஜராகும் தேதியை நீங்களே சொல்லுங்கள்’ என சுப்ரீம் கோர்ட் டென்ஷன் காட்டியது.

இதையடுத்து, வேறு வழி இல்லாமல், ஜெயலலிதாவின் பெங்களூரு நீதிமன்ற விஜயம் சாத்தியமானது. ‘எழுத்து மூலமாக விசாரிக்க வேண்டும். இல்லை என்றால், வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாவது விசாரிக்க வேண்டும்’ என ஜெ. தரப்பு வழக்கறிஞர் எவ்வளவோ நீண்ட வாதங்களைப் புரிந்தும்... ‘‘அக்டோபர் 20-ம் தேதி ஜெயலலிதா பெங்களூரு தனி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்!’’ என உச்ச நீதிமன்றம் கறார் உத்தரவைப் பிறப்பித்துவிட்டது. இதைத் தொடர்ந்து தனி நீதிமன்ற நீதிபதி மல்லிகார்ஜுனையா, ‘இங்கு வரும் ஜெயலலிதாவுக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என கர்நாடக அரசைக் கேட்டுக்கொண்டார். எனவே, ஜெ-வின் பாதுகாப்புக்காக கர்நாடக அரசு, பெங்களூரு இணை கமிஷனர் மோகன் ஜி-யை நியமித்தது. இதையடுத்து, நீதிபதி மல்லிகார்ஜுனையா, ‘‘பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் இருக்கும் மத்திய சிறைச்சாலை வளாக நீதிமன்றத்தில் காலை 11 மணிக்கு ஜெயலலிதா ஆஜராக வேண்டும்!’’ என்று உத்தரவு போட்டார்.

தங்கமும் வைரமும் நல்லம்ம நாயுடு வைத்தது

அதையடுத்து, 2011, அக்டோபர் 20, 21 ஆகிய தேதிகளில் பெங்களூரு தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜரானார். வெளியில் பார்க்கிற ஜெயலலிதாவுக்கும் நீதிமன்றத்தில் பார்த்த ஜெயலலிதாவுக்கும் அவ்வளவு வித்தியாசம். மிக அமைதியாகப், பொறுமையாகப் பேசினார். ஒவ்வொரு கேள்விக்கும் நிறுத்தி... நிதானமாக... ஆங்கிலத்தில் தெளிவாகப் பதில் சொன்னார். சில கேள்விகளுக்கு மட்டும் சிரித்தபடி பதில் சொன்னார். சில சமயங்களில் குரலை உயர்த்திப் பேசினார். ஆனால், விநாடி-வினா மாதிரி உடனுக்குடன் பதில் சொன்னார். நீதிபதி மல்லிகார்ஜுனையாவின் குரல் மென்மையானது. அதனால் அவர் கேட்கும் கேள்வி, குற்றவாளிக் கூண்டுக்குள் உட்கார்ந்து இருக்கும் ஜெயலலிதாவுக்கு கேட்காது என்பதால், நீதிபதிக்கு முன்னால் வந்து அமர்ந்து கேட்க வசதியாக கோர்ட் எழுத்தரின் பக்கத்தில் வந்து ஜெயலலிதா உட்கார்ந்தார். அப்போது அவருக்காக சென்னையில் இருந்து கொண்டுவரப்பட்ட எஸ் டைப் ஒயர் இருக்கை தரப்பட்டது. ஒவ்வொரு கேள்வி முடியும் அதே நிமிடத்தில், ஜெயலலிதாவிடம் இருந்து கணீர்... கணீர்... எனப் பதில்கள் வந்து விழுந்தன. ஆனால், நிறையக் கேள்விகளுக்கு அவரின் பின்னால் இருந்து வழக்கறிஞர் பி.குமார் உள்ளிட்ட வழக்கறிஞர்கள், வேகமாகப் பதில்களைத் தேடி... மெதுவாகச் சொல்வதும், ‘யெஸ்... நோ...’ என சொல்வதும், சைகைகளைக் காட்டுவதுமாக உதவினர். ஜெயலலிதாவும், பல கேள்விகளுக்கு வழக்கறிஞர்களின் முகங்களைப் பார்த்து, அவர்கள் சொல்வதைக் கேட்டு பதில் அளித்தார்.

போயஸ் கார்டன் வீட்டை புதுப்பித்தது, ஹைதராபாத் திராட்சைத் தோட்டம், கொடநாடு எஸ்டேட், திருநெல்வேலியில் வாங்கப்பட்ட நிலங்கள், பங்குச் சந்தையில் முதலீடு செய்தது... எனப் பல கேள்விகள் கேட்கப்பட்டன. முதல் நாள் கேட்கப்பட்ட 379 கேள்விகளுக்குப் பெரும்பாலும் ‘ஐயம் நாட் அவேர் ஆஃப் தட்’ எனப் பதில் அளித்தார். ‘ஐ டோன்ட் நோ’ என்று சில கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவருக்கு வழங்கப்பட்ட காசோலை, பரிசுப் பொருட்கள் உள்ளிட்ட சில கேள்விகளுக்கு மட்டும் விரிவாகப் பதில் சொன்னார். உண்மையில் அவரது ஆங்கிலப் புலமையை எண்ணி அனைவரும் வியந்திருக்க வேண்டும். முதல் நாள் மதிய இடைவேளை வரை 112 கேள்விகள் மட்டுமே கேட்க முடிந்தது. எனவே, நேரத்தைச் சேமிக்க இரண்டு மூன்று கேள்விகளை ஒன்றாகச் சேர்த்து நீதிபதி கேட்க ஆரம்பித்தார். அப்போதுதான் ஜெயலலிதா ரொம்பவும் சிரமப்பட்டார். இதைப் பார்த்த ஜெ-யின் வழக்கறிஞர், தனித் தனிக் கேள்வியாகவே கேளுங்கள் என நீதிபதியிடம் விண்ணப்பித்தார். அதற்கு நீதிபதி மறுத்துவிட்டார். போயஸ் கார்டன் வீட்டைப் புதுப்பிக்கப் பயன்படுத்திய விலை உயர்ந்த தேக்கு, டைல்ஸ் பற்றிய கேள்விகளுக்கு, ‘கருணாநிதி ஆட்சிக் காலத்தில் எனக்கு எதிராக நல்லம்ம நாயுடு என்ற அதிகாரி, தவறான மதிப்பீடுகளைச் செய்து என் மீது தேவை இல்லாத அவப்பெயரை ஏற்படுத்தி இருக்கிறார். அவர்கள், அத்தனையையும் மிகைப்படுத்தியே சொல்லி இருக்கிறார்கள்’ என விரிவாகப் பதில் அளித்தார். பின்னர் அவர் சொன்ன பதில்களைத் தன் கைப்படவே நீதிபதி மல்லிகார்ஜுனையா தனித் தனி பேப்பர்களில் எழுதினார். 379 கேள்விகளுக்கும் 379 கையெழுத்துகளைப் போட்டார். இதற்கே அரை மணி நேரத்துக்கு மேலானது. லஞ்ச் நேரம் தவிர்த்து விசாரணை நடந்த ஐந்தரை மணி நேரமும் தண்ணீர்கூட குடிக்காமல் முழு ஒத்துழைப்பு அளித்தார் ஜெயலலிதா.

இரண்டாம் நாள்... அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா, ‘உங்களுக்கு கர்நாடக போஸீஸ் இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுத்திருக்கிறது. ஆனாலும், பரப்பன அக்ரஹாராவைச் சுற்றி உள்ள பகுதிகளில் ஊரடங்கு போடப்பட்டு இருக்கிறது. இதனால் பொதுமக்கள் ரொம்ப அவதிப்படுகிறார்கள்...’ எனச் சொல்ல, வழக்கறிஞர் பி.குமார் பேச எழுந்தார். அவரை அமரச் சொல்லிவிட்டு ஜெயலலிதாவே, ‘‘எனக்கு விளையாட்டாக ஒன்றும் பாதுகாப்புக் கொடுக்கவில்லை. எனது உயிருக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து உண்டு. அது மட்டும் இல்லாமல், தமிழ்நாட்டில் இயங்கி வந்த தமிழ்த் தீவிரவாத அமைப்புகளை அடியோடு ஒழித்திருக்கிறேன். தேசிய அளவில் நக்ஸலைட், மாவோயிஸ்ட்களுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதால், அவர்களாலும் எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது’ எனப் பொரிந்து தள்ளிவிட்டார்.

முதல் நாளைவிட இரண்டாம் நாள் சற்றுப் பதற்றமாகவே காணப்பட்டார் ஜெயலலிதா. காரணம், சொத்துக் குவிப்பு வழக்கைப் பொறுத்தவரை அபாய கண்டமாகப் பார்க்கப்படுவது அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம், விலையுயர்ந்த கடிகாரங்கள், செருப்புகள், புடவைகள், உடைகள் ஆகியவை பற்றிய கேள்விகளும், அவை பற்றிய மதிப்பீடுகளும்தான். எனவே, ‘இவை எல்லாம் எங்கிருந்து வாங்கப்பட்டன? எதற்காக வாங்கப்பட்டன? எப்படி வாங்கப்பட்டன?’ ஆகிய கேள்விகளை நீதிபதி கேட்டார். ‘உங்களிடம் இருந்து 24 கிலோ தங்க நகைகள் கைப்பற்றப்பட்டு இருக்கிறதே?’ எனக் கேட்டு முடிக்கும் முன்னே, ‘என்னிடம் 21,000 கிராம் தங்க நகை மட்டுமே இருந்தது. நான் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள். பிரபல நடிகையாக இருந்து சம்பாதித்த பணத்தின் மூலம் வாங்கியவை. அவை அத்தனையும் புதிதாக வாங்கப்பட்டதாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. அது சுத்தப் பொய். என்னிடம் இருந்த பழைய நகைகளை உருக்கிச் செய்தது. எனது நகைகளை மதிப்பிட்ட தமிழ்நாடு ஊழல் தடுப்புத் துறை அதிகாரி நல்லம்ம நாயுடு வேண்டும் என்றே என் மீது பழி போட்டுள்ளார். அதேபோல, எங்கிருந்தோ கொண்டுவந்த நகைகளை என் வீட்டில் வைத்துப் படம் எடுத்து எனது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டதாகக் கூறி, பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டு என் பேருக்குக் களங்கம் ஏற்படுத்தி இருக்கிறார்’ என காரசாரமாகப் பேசினார். அதேபோல, 918 வாட்ச்சுகள் பற்றிய கேள்விக்கு, ‘என்னிடம் இருந்த பழைய வாட்ச்சுகளையும் புதிய வாட்ச்சுகளாக மதிப்பிட்டு இருக்கின்றனர். ஒருவர் எப்படி அவ்வளவு வாட்ச்சுகளையும் பயன்படுத்த முடியும்?’ என எதிர்க் கேள்வி கேட்டு மடக்கினார். 914 புடவைகள், 6,195 சுடிதார் மற்றும் இரவு உடைகள் பற்றிய கேள்வியை நீதிபதி கேட்க, ‘என் வீட்டில் இருந்ததாக அவர்கள் சொல்லும் நூற்றுக்கணக்கான புடவைகள் என்னுடையவை அல்ல. அவை அனைத்தும் அவர்களே கொண்டுவந்து என் வீட்டில் வைத்தவை’ என அழுத்தமாகச் சொன்னார். மேலும், ‘நான் அரசியலுக்கு வந்து எதையும் புதிதாக சம்பாதிக்கவில்லை. அவை ஏற்கெனவே சம்பாதித்தவைதான்!’ என ஜெயலலிதா சொன்னதையும் நீதிபதி குறித்துக்கொண்டார்.

சிக்னோ என்டர்பிரைசஸ், ஜெ.ஜெ. டி.வி, ஜெ.ஜெ. குரூப் ஆஃப் கம்பெனிஸ் உள்ளிட்ட கம்பெனிகளில் உள்ள ஷேர் பற்றிய கேள்விக்கு, ‘நான் முழு நேர அரசியலில் இருக்கிறேன். அந்தந்த கம்பெனிகளின் அன்றாடச் செயல்கள் பற்றி எனக்கு முழுமையாகத் தெரியாது. நான் வெறும் சைலன்ட் பார்ட்னர் மட்டுமே’ எனப் பதில் அளித்தார். மூன்றரை மணி ஆனபோது, ‘மேடம் களைப்பாக இருக்காங்க. நேரமும் ஆகிவிட்டது. இப்போது பதில்களைப் படித்துப் பார்த்துக் கையெழுத்துப் போட ஆரம்பித்தால்தான் சரியாக இருக்கும்’ என வழக்கறிஞர் பி.குமார் கூற, ‘இல்லை... நேற்று போல் ஒவ்வொரு கேள்வி-பதிலுக்கும் ஒரு பக்கம் என்று ஒதுக்காமல், இன்று தொடர்ச்சியாகக் கேள்வி-பதில்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஆகவே கேள்விகளின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒரு கையெழுத்து வீதம் போட்டால் போதும்!’ என நீதிபதி சொன்னார். முதல் நாளில் 379 கேள்விகளும் இரண்டாம் நாளில் 188 கேள்விகளுமாக மொத்தம் 567 கேள்விகள் கேட்கப்பட்டன.

சுதாகரன் திருமணத்துக்கு செலவழிக்கவில்லை! - ஜெயலலிதா பதில்

சுதாகரன் திருமணத்திற்காக ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை. 2011, நவம்பர் 22-ம் தேதி காலை தனி விமானம் மூலம் 9.50 மணிக்கு பெங்களூரு விமான நிலையத்தில் தோழி சசிகலாவுடன் வந்து இறங்கிய ஜெயலலிதா, தயாராக இருந்த கேரவனில் சில நிமிடங்கள் ஓய்வு எடுத்தார். அதன் பிறகு 37 கார்கள் அணிவகுக்க தேசியக் கொடி பொருத்தப்பட்ட காரில் உற்சாகமாகக் கிளம்பினார். சரியாக 10.40 மணிக்கு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்துக்குள் நுழைந்தார். அடுத்து, சுதாகரன் தனது வழக்கறிஞர்களுடன் தோரணையாக கோர்ட்டுக்குள் நுழைந்தார். உடல் நிலை சரியில்லை என்று காரணம் காட்டி இளவரசி இரண்டு நாட்களும் ஆப்சென்ட். கடந்த முறை ஜெயலலிதா கோர்ட்டுக்கு வந்தபோது 3,500 போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டார்கள். இதற்காக `45 லட்சம் செலவானது. பாதுகாப்புக் கெடுபிடிகளும் அதிகம் என்று முணுமுணுக்கப்பட்டது. அதனால், இந்த முறை அதிக எண்ணிக்கையில் போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் என்று ஜெயலலிதாவே சொல்லிவிட்டாராம். அதனால், சுமார் 1,500 போலீஸார் மட்டுமே பாதுகாப்பு பணியில் இருந்தார்கள். இந்த முறை ஜெயலலிதாவின் பாதுகாப்புக்காக, `30 லட்சம் மட்டுமே(!) செலவு செய்யப்பட்டதாக கர்நாடகக் காவல்துறை அறிக்கை வெளியிட்டது.

‘‘252 சாட்சிகளின் அடிப்படையில் தயார் செய்யப்பட்ட மொத்த கேள்விகளின் எண்ணிக்கை 1,384. இதில் ஜெயலலிதாவிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் 1,339. ஏற்கெனவே 567 கேள்விகள் கேட்கப்பட்டுவிட்டதால், மீதம் உள்ள கேள்விகளை காலை 11 மணிக்கு நீதிபதி மல்லிகார்ஜுனையா கேட்க ஆரம்பித்தார். ஜெயலலிதா தரப்பில் பி.குமாரும், அரசுத் தரப்பில் ஆச்சார்யாவும் ஆஜர் ஆனார்கள். அதற்கு முன்னதாக, ஜெயலலிதா விசிட்டர்ஸ் ஹாலில் நுழையும்போது, சுதாகரன் எழுந்து நின்று வணக்கம் சொன்னார். அப்போது ஜெயலலிதாவும் வணங்கியதால், சுதாகரன் முகத்தில் மகிழ்ச்சி ரேகை படர்ந்தது. ஐந்து நிமிடங்கள் முன்கூட்டியே கோர்ட் ஹாலுக்குள் நுழைந்தார் ஜெயலலிதா. இரண்டே நாட்களில் எல்லா கேள்விகளையும் கேட்டுவிட வேண்டும் என்ற அவசரத்தில் நீதிபதி அடுக்கடுக்காகக் கேள்விகளை வீசினார். வங்கிக் கணக்குகளின் பணப் பரிவர்த்தனைகள், ஷேர் மார்க்கெட், சுதாகரன் திருமணச் செலவுகள் பற்றிய கேள்விகளுக்கு ஜெயலலிதா தயங்காமல் பதில் அளித்தார். பெரும்பாலான கேள்விகளுக்கு ‘யெஸ், நோ, ஐ டோன்ட் நோ’ என்பதுதான் அவரது பதில். முதல் நாள் மாலை 5.20 மணி வரை 580 கேள்விகளுக்கு ஜெயலலிதாவின் பதில்கள் பதிவு செய்யப்பட்டன. பேப்பர்களில் வேகமாகக் கையெழுத்துப் போட்டுவிட்டு சென்னைக்குப் பறந்தார். பாக்கி இருந்த 192 கேள்விகளுக்கு மறுநாள் பதில் அளித்தார். மதியம் 2 மணி வரை 160 கேள்விகள் கேட்கப்பட்டு இருந்ததால், ‘உணவு இடைவேளை விடலாமா?’ என நீதிபதி கேட்டார். ‘இன்னும் 30 கேள்விகள்தானே இருக்கின்றன. ஒரேயடியாக முடித்துவிடலாம். வேறு யாருக்காவது இதில் பிரச்னை இருக்கிறதா?’ என அரசுத் தரப்பு வக்கீல் ஆச்சார்யாவைப் பார்த்து ஜெயலலிதா கேட்க, அவரும் ‘நோ பிராப்ளம்’ என்று சொல்லவே... தொடர்ந்து விசாரணை நடந்து முடிந்தது.

சொத்துக் குவிப்பு வழக்கைப் பொறுத்தவரை ஆபத்தானதாகக் கருதப்படுவது, சுதாகரனின் கல்யாண சம்பவமும் வீட்டில் இருந்த வெள்ளி, தங்க நகை, புடவைகள், வாட்சுகள் மற்றும் காலணிகள்தான். எனவே அவை குறித்த கேள்விகளுக்கு ஜெயலலிதா பதற்றமாவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஷார்ப்பாகவே பதில் சொன்னார். அதுவும் ‘சுதாகரனின் திருமணத்திற்காக ஆறு கோடி ரூபாய் செலவு செய்தீர்களா?’ என நீதிபதி கேட்டபோது, ‘‘சுதாகரனின் திருமணத்துக்காக நான் ஒரு பைசாகூட செலவு செய்யவில்லை. மணப்பெண் வீட்டாரே எல்லாச் செலவுகளையும் செய்தார்கள்’’ என்று அழுத்தம் திருத்தமாகப் பதில் சொன்னார்.

‘சுதாகரன் திருமணப் பத்திரிகையை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் மாண்டலின் னிவாஸுக்கும் வெள்ளித் தட்டில் வைத்து, அந்தத் தட்டையும் பரிசாகக் கொடுத்தீர்களா?’ எனக் கேட்கப்பட்டது. ‘அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது’ என்றார். ‘சுதாகரன் திருமணத்தில் ஒரு மணி நேரம் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக் கச்சேரி நடத்தி இருக்கிறார். அதற்கு எவ்வளவு கொடுத்தீர்கள்?’ என்ற கேள்விக்கு, ‘அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. மணப்பெண் வீட்டைச் சேர்ந்தவர்களும் கலைத் துறையில் இருப்பதால் அவர்கள் ஏற்பாடு செய்தார்கள்’ என்று விளக்கம் அளித்தார். ஸ்டேட் பேங்க் அக்கவுன்ட், கனரா பேங்க் அக்கவுன்ட், இந்தியன் பேங்க் அக்கவுன்ட்களில் நடைபெற்ற பணப் பரிவர்த்தனைகள் பற்றிய கேள்விகளுக்கு, ‘என் அக்கவுன்ட்டில் நடந்த பரிவர்த்தனைகள் பற்றி மட்டும் எனக்குத் தெரியும். சசிகலா, இளவரசி, சுதாகரனின் கணக்குகளில் நடந்தது எதுவும் எனக்குத் தெரியாது என்றார். அதேபோன்று சிக்னோ என்டர்பிரைசஸ், சசி என்டர்பிரைசஸ், ஜெ.ஜெ. என்டர்பிரைசஸ் ஆகிய கம்பெனிகளில் ஷேர் வாங்கியது, முதலீடு செய்தது போன்ற கேள்விகளுக்கும், ‘நான் அதில் வெறும் சைலன்ட் பார்ட்னர். அதனால் அந்த நிறுவனங்களின் அன்றாட நடவடிக்கைகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது’ என்றார். கேள்விகள் எல்லாவற்றுக்கும் பதில் அளித்து முடித்த நிலையில் நீதிபதி, ‘உங்கள் மீது சாட்டப்பட்டு இருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?’ எனக் கேட்டார். உடனே தன் கைப்பட அங்கேயே அமர்ந்து இரண்டு பக்க ஸ்டேட்மென்ட் எழுதி ஸ்பெஷல் மனுவாக தாக்கல் செய்தார்.

அதில், ‘1991-96 காலத்தில் எனது தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி சிறப்பாக நடந்தது. அதன் பிறகு 1997-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், எனது பேருக்கும் ஆட்சிக்கும் களங்கம் விளைவிக்க பல்வேறு வழிகளில் முயற்சித்தது. அந்த சமயத்தில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக என் மீது தமிழ்நாடு ஊழல் தடுப்புத் துறையில் ஒரு புகார் அளித்திருந்தார். அப்போதைய தி.மு.க. சட்ட அமைச்சர் மாதவன், ஆற்காடு வீராசாமி இருவரும் திட்டமிட்டு ஊழல் தடுப்புத் துறை அதிகாரி நல்லம்ம நாயுடுவை தங்கள் கைக்குள் போட்டுக்கொண்டு என் மீது சொத்துக் குவிப்பு வழக்கைப் புனைந்தனர். நல்லம்ம நாயுடு எங்கிருந்தோ கொண்டுவந்த பொருட்களை, நகைகளை எல்லாம் என் வீட்டில் எடுத்ததாகப் பொய் கூறியுள்ளார். அது மட்டும் இல்லாமல், தமிழ் உட்பட பல மொழிகளில் நான் பிரபல நடிகையாக 120-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறேன். திரைப்படக் காட்சிகளுக்கு ஏற்ப புடவைகள், துணிகள், வாட்சுகள், காலணிகள் வாங்குவது வழக்கம். அப்படி நான் படங்களில் பயன்படுத்திய பொருட்களை ஷூட்டிங் முடிந்த பிறகு, என் மீதுள்ள அன்பால், எனக்கே திருப்பிக் கொடுத்துவிடுவார்கள். அவ்வாறு நான் நினைவுப் பொருட்களாக வைத்திருந்தவற்றையும் எனது சொத்துக் கணக்கில் சேர்த்துள்ளனர். எனது அறையில் இருந்த பெர்சனல் ஆல்பத்தை தி.மு.க-வின் குடும்பத் தொலைக்காட்சியில் காட்டி, என் பேருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவித்தனர். நான் முதல்வராக பதவியேற்ற பிறகு எனது சம்பளத்தில் எதனையும் வாங்கவில்லை. வருமான வரித் துறையில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின்படி, போயஸ் கார்டனில் உள்ள ‘31ஏ’ எண் வீட்டை மட்டுமே வாங்கினேன். சசிகலா, இளவரசி, சுதாகரன் வாங்கிய சொத்துகளுக்கும் எனக்கும் ஒரு துளியும் சம்பந்தம் இல்லை. எனவே அரசியல் காழ்ப்பு உணர்ச்சியுடன் என்னைப் பழிவாங்கவே தி.மு.க. பொய்யாக வழக்கு தொடர்ந்து உள்ளது’’ என ஆணித்தரமாகக் குறிப்பிட்டார்.

அதிரவைத்த ஆச்சார்யா ஷாக் ராஜினாமாவின் முழு பின்னணி ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு இறுதிக் கட்டத்தை நெருங்கும் நிலையில், ‘ஜெயலலிதாவைக் காப்பாற்ற பி.ஜே.பி. முயற்சிக்கிறது’ என்று ஒரு அதிர்ச்சிக் குற்றச்சாட்டைக் கிளப்பினார் கர்நாடக அரசுத் தரப்பு வக்கீல் ஆச்சார்யா! கர்நாடக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ஆச்சார்யாவை, மாநிலத்தின் அட்வகேட் ஜெனரலாக நியமித்தது. இதைத் தொடர்ந்து வீரபத்ரையா என்ற வக்கீல், ‘ஒரே நபரே அட்வகேட் ஜெனரலாகவும், அரசுத் தரப்பு வக்கீலாகவும் இரட்டைப் பதவிகளை வகிக்க சட்டத்தில் இடம் இல்லை’ என்று, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார். இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி உயர் நீதிமன்றம் கடந்த செவ்வாய்கிழமை அன்று கர்நாடக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அட்வகேட் ஜெனரல் பதவி மிக கௌரவமான பதவி என்பதால், ஆச்சார்யா தன்னிடம் உள்ள அரசுத் தரப்பு வக்கீல் பதவியை விட்டுத்தான் விலகிக் கொள்வார் என்று பலரும் எதிர்பார்த்திருக்க... ஆச்சார்யாவோ, அட்வகேட் ஜெனரல் பதவியை உதறினார்.

இந்தச் சூழலில் அவரை நாம் சந்தித்துப் பேசினோம். ‘‘இரட்டைப் பதவி வகிக்கக் கூடாது என்று புகார் எழுந்தது முதலே இந்த வழக்கில் ஆஜராக வேண்டாம் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் எனக்கு நெருக்கடிகள் வந்தன. இப்போது பி.ஜே.பி. மேலிடம், கர்நாடக அரசு மூலமாக இந்த வழக்கில் இருந்து விலகிக் கொள்ளும்படி என்னை நிர்பந்திக்கிறது. கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த வழக்கில் ஆஜராகி வரும் என்னை, கடந்த ஆண்டு அட்வகேட் ஜெனரலாக நியமித்ததே இந்த சதியில் ஒரு பகுதிதானோ என்று சந்தேகிக்கிறேன். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, உயர் நீதிமன்றம்​தான் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு தரப்பில் வாதாட என்னை நியமித்தது. எனவே, எக்காரணம் கொண்டும் இந்த வழக்கில் இருந்து விலகப் போவதில்லை. இதைக் கர்நாடக அரசிடம் பலமுறை தெளிவாகக் கூறிவிட்டேன். அதன் பின்பும் இரட்டைப் பதவி விவகாரத்தைக் கிளப்பவே, அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். என்னைப் பொறுத்தவரை இந்த வழக்கு மட்டும் அல்ல... எந்த ஒரு வழக்குமே சட்டப்படியும் நேர்மையாகவும் நடக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம், வேண்டுதல் எல்லாமே...” என்றார் உறுதியாகவும் உருக்கமாகவும்!

எனக்கு ஆங்கிலம் தெரியாது - சசிகலா

குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவு 313-ன்படி அக்டோபர் மாதம் ஜெயலலிதா, சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு நான்கு நாட்கள் விளக்கம் அளித்தார். அடுத்து, சசிகலா விளக்கம் அளிக்க வேண்டும். ‘சசிகலாவுக்கு ஆங்கிலம் தெரியாது. எனவே, தமிழில்தான் அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய வேண்டும்’ என்று அவரது தரப்பில் மனு போடப்பட்டது. ஆனால், நீதிமன்றம் அதை ஏற்கவில்லை. காலை 10.30 மணிக்கு சுதாகரன், இளவரசி சகிதமாக கோர்ட் படி ஏறியவர் சோகமயமாகவே காணப்பட்டார். குற்றவாளிக் கூண்டில் அமர்ந்த சசிகலா முகத்தில் கூடுதல் பதற்றம் தெரிந்தது. சரியாக 11 மணிக்கு நீதிபதி மல்லிகார்ஜுனையா வந்தவுடன், ‘தமிழில் பதிவு செய்யக்கோரும் எங்கள் அப்பீல் மனு சுப்ரீம் கோர்ட்டில் இருக்கிறது. எனவே, தீர்ப்பு வரும் வரை வாக்குமூலம் பெறக் கூடாது’ என்று சசிகலா வக்கீல் மனு போட்டார். இதனைக் கடுமையாக ஆட்சேபித்த அரசுத் தரப்பு வக்கீல் ஆச்சார்யா, ‘தனிக் கோர்ட்டில் நடைபெறும் விசாரணையை சுப்ரீம் கோர்ட் நிறுத்தச் சொல்லவில்லை. எனவே, இன்றே வாக்குமூலத்தைப் பதிவுசெய்ய வேண்டும்’ என்று அழுத்தம் கொடுத்தார். அதனால், சசிகலா தரப்பின் கோரிக்கையைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி மல்லிகார்ஜுனையா. அடுத்து, வாக்குமூலக் காட்சி அரங்கேறியது. நீதிபதிக்கு முன் ஒரு டேபிளும் சேரும் போடப்பட்டு சசிகலா உட்கார வைக்கப்பட்டார். மொழிபெயர்ப்பாளரும் வழக்கறிஞருமான ஹரீஸ், சசிகலாவுக்கு முன்பு அமர்ந்து, நீதிபதி ஆங்கிலத்தில் கேட்கும் கேள்விகளைத் தமிழில் மொழிபெயர்த்து சசிகலாவிடம் சொன்னார். சசிகலா தமிழில் கூறும் பதிலை ஆங்கிலத்தில் நீதிபதியிடம் கூற, அப்போதே நீதிபதி பதிவு செய்துகொண்டார். உணவு இடைவேளை முடிந்து சரியாக 3 மணிக்கு கோர்ட் கூடியது. மீண்டும் கேள்விகளை கோர்ட் முடுக்கிவிட, ‘ஆம்’ ‘இல்லை’, ‘எனக்குத் தெரியாது’ போன்ற ஒரு வரி பதில் செஷனாக இருந்தது. சரியாக 4 மணி ஆகும்போது குறுக்கிட்ட சசிகலாவின் வக்கீல் மணிசங்கர், ‘நாங்கள் சென்னையில் இருந்து வரும்போதே, இன்று மாலை 6 மணிக்கு ஃபிளைட் டிக்கெட் புக் பண்ணிவிட்டோம். எனவே, இப்போது கிளம்பினால்தான் சரியாக இருக்கும். மீதம் இருக்கும் கேள்விகளை அடுத்த வாரம் கேட்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார். ‘வரும் திங்கள்கிழமை ஓகேவா?’ என்று நீதிபதி கேட்க, ‘திங்கள்கிழமை சிவராத்திரி. அரசு விடுமுறை’ என்று சசிகலா தரப்பில் கூறப்பட்டது. ‘செவ்வாய்?’ என நீதிபதி கொக்கி போட, ‘நைட் எல்லாம் சிவராத்திரியில் விழித்திருக்க வேண்டும். கோர்ட்டுக்கு வர முடியாது’ என்று பதில் வந்தது. அப்போது கோர்ட் சிரிப்பில் மிதந்தது. உடனே எழுந்த ஜெயலலிதாவின் வக்கீல் பி.குமார், ‘‘நாங்கள் வேறு மாநிலத்தில் இருந்து வருகிறோம். எங்களுக்கு இந்த ஊர் ஹோட்டல் உணவு செட் ஆகாது. அப்படியே தொடர்ந்து சாப்பிட்டால் சிக் ஆகிவிடுவோம். அப்புறம் வழக்கை நடத்த முடியாது. அதுமட்டுமின்றி, சென்னையில் நிறைய கோர்ட் வேலைகள் இருக்கின்றன. எனவே, விசாரணையை இடைவெளிவிட்டு நடத்த வேண்டும்’’ என்று சீரியஸாகச் சொல்ல, இதற்கும் கோர்ட் முழுவதும் சிரிப்பலை. நீதிபதி மல்லிகார்ஜுனையாவின் முகத்திலும் சிரிப்பு ரேகைகள். இதையடுத்து 23-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

‘1994-ல் ஜெகதீஸ்ராஜு, சந்திரவதனா, காயத்ரி ஆகியோரிடம் 600 சதுர அடி நிலம் வாங்கியது தொடர்பான விசாரணையில் ஜெகதீஸ் ராஜுவை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மிரட்டியதாகக் கூறியுள்ளாரே?’ என்று கேட்டார் நீதிபதி. காத்திருந்த மாதிரி தலையசைத்து, ‘ஆரம்பம் முதலே இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டது என்று கூறி வருகிறோம். நிலத்தின் உரிமையாளரான ஜெகதீஸ்ராஜுவுக்கு 10 லட்சம் காசோலை கொடுத்துத்தான் வாங்கினோம். ஆனால் அவரைக் குறுக்கு விசாரணை செய்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி நல்லம நாயுடுவும், அவரோடு பணிபுரிந்த காவல் துறை அதிகாரிகளும் 20 லட்சம் அல்லது 30 லட்ச ரூபாய்க்கு விற்றதாக எழுதிக் கொடுக்குமாறு மிரட்டியதாக ஜெகதீஸ் ராஜுவே சாட்சியம் அளித்துள்ளார். ‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பது போல் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அத்தனை சாட்சிகளையும் நல்லம நாயுடு எங்களுக்கு எதிராகப் பொய்ச்சாட்சி சொல்ல வைத்திருக்கிறார். எல்லாமே காவல் துறையின் ஜோடனை’ என்று கோபமாகவே சசி ப‌தில் அளித்தார்.

இந்தப் பழமொழியை எப்படி மொழியாக்கம் செய்வது என்று தெரியாமல் மொழிபெயர்ப்பாளர் ஹரீஸ் திணற, ‘பழமொழி, கற்பனைக் கதைகள் எல்லாம் கோர்ட்டுக்குத் தேவை இல்லை’ என்று கூறியதும்... ஆச்சார்யாவும் அதை வழிமொழிந்தார். பழமொழி பதிவாகாமல் போனதில் சசிகலா அப்செட்தான்.

 கருணாநிதியை கை காட்டிய சசிகலா!

இசையமைப்பாளர் கங்கை அமரன் அளித்த சாட்சியத்தில், ‘பையனூரில் எனக்கு 22 ஏக்கர் நிலமும் பண்ணை வீடும் இருந்தது. பாஸ்கரன் என்னை சந்தித்து, நிலம் தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்திக்க விரும்புவதாகச் சொல்லி அழைத்துச் சென்றார்’ என்று முன்பு குறிப்பிட்டு இருந்தார். இந்த விவகாரம் குறித்து பதில் அளித்த சசிகலா, ‘‘கங்கை அமரன் என்னை மட்டும்தான் சந்தித்தார். ஜெயலலிதாவை சந்திக்கவில்லை. அவரது சாட்சியம் பொய்யானது’’ என்றார்.

அதற்கு நீதிபதி, ‘‘ஜெயலலிதா பையனூர் நிலத்தைப் பார்த்துவிட்டு, ஓய்வு எடுப்பதற்கு சரியான இடம் என்று கூறியதாகவும்... எனவே அவருக்கு நிலம் ரொம்பவே பிடித்துவிட்டதாகவும் நீங்கள் கங்கை அமரனிடம் கூறினீர்களா?’’ என்று கேட்டார்.

‘‘ஜெயலலிதா பேரை வேண்டும் என்றே சேர்ப்பதற்காக கங்கை அமரனை அன்றைய காவல்துறை அதிகாரிகள் பொய்சாட்சி சொல்ல வைத்தார்கள்” என்று அழுத்தமாக மறுத்தார். அதற்குப் பின்னும் நீதிபதி விடாமல், ‘தனக்கு இருப்பது ஒரே நிலம். அதுவும் கதை எழுதுவதற்கும், இசையமைப்பதற்கும் ஏற்ற இடமாக இருப்பதால் விற்பனை செய்ய விருப்பமில்லை என்று கங்கை அமரன் உங்களிடம் கூறியபோது, ‘நீங்கள் குடும்பத்தாரிடம் பேசிவிட்டுச் சொல்லுங்கள் என்று அவரிடம் சொன்னீர்களா?’ என்று கொக்கி போட்டார். இதில் சற்றே முகம் சிவந்த சசிகலா, “அவராகத்தான் நிலத்தை விற்க முன்வந்தார். போலீஸ், கங்கை அமரனை மிரட்டி ஜெயலலிதாவை சம்பந்தப்படுத்தி சாட்சியம் சொல்ல வைத்துள்ளனர். யார் பெயரில் சொத்து வாங்கினாலும் ஜெயலலிதா பெயரைச் சம்பந்தப்படுத்தி, வழக்கை ஜோடித்து உள்ளனர். அன்றைய கருணாநிதி அரசுக்கு ஆதரவாக செயல்பட்டால் உயர்பதவி கிடைக்கும் என்று போலீஸார் நினைத்தனர்” என்று கூறினார். உடனே நீதிபதி, ‘‘இப்போது ஏன் சம்பந்தமே இல்லாமல் கருணாநிதியை இழுக்கிறீர்கள்” என்று கேட்டதும் சசிகலாவின் வக்கீல் மணிசங்கர், ‘பொய் சாட்சி சொல்ல வைத்ததன் உள்நோக்கம் அதுவாக இருக்கலாம்’ என்று கூறி, அதனையும் சேர்த்து பதிவு செய்யுமாறு நீதிபதியிடம் வேண்டினார். அதற்கு ஆச்சார்யாவும், ‘கருணாநிதி அரசு’ என்று ஒரு வரிதானே...’ என்று ஆமோதிப்பாக சிரித்தார்.

 ஜெயலலிதா பெயரில் கவனம்!

ஒவ்வொரு முறை சசிகலா பதிலளிக்கும்போதும், ஜெயலலிதா தொடர்பாகச் சொல்லும்போது டபுள் உஷாராகவே முகபாவம் காட்டிப் பேசினார். ஜெயா ஃபார்ம் நிறுவனத்துக்கு நிலம் விற்றது தொடர்பான கேள்விக்கு சசிகலா பதில் அளித்தபோது, ‘‘அம்பத்தூர் ரமேஷ் என்பவர், ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர் என்று சாட்சியம் அளித்திருக்கிறார். அது உண்மையல்ல. ‘‘ஜெயலலிதாவுக்குத் தெரிந்தவர் என்று சொல்லிக்கொண்டார் என்று பதிந்து கொள்ளுங்கள்’’ என நீதிபதியிடம் ரொம்பவே தெளிவாகச் சொன்னார் சசிகலா. அரசு தரப்பு வக்கீல் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காததால் சசிகலா சொன்னவாறே திருத்தம் செய்யப்பட்டது.

அதுமட்டுமில்லாமல் முத்தையா, ஜவஹர் ஆகியோர், ‘ஊத்துக் கோட்டை அருகே ரத்னவேலு என்பவருக்குச் சொந்தமான 4.15 ஏக்கர் நிலத்தை ஜெயலலிதா வாங்கித் தருமாறு கேட்டார். இதனால் போயஸ் கார்டனில் இருந்து இரண்டு சூட்கேஸில் பணம் எடுத்துச் சென்று, கொடுத்து பதிவு செய்தோம்’ என்று கூறியதாக பதிவாகி இருப்பது பற்றி நீதிபதி கேட்டார். சசிகலா கொஞ்சமும் யோசிக்காமல், ‘‘இடம் வாங்கியது உண்மை. ஆனால் சாட்சிகள் தேவையில்லாமல் ஜெயலலிதாவைச் சம்பந்தப்படுத்த வேண்டும் என்பதற்காக போயஸ் கார்டனைக் குறிப்பிட்டு உள்ளனர்” என்றார். மிடாஸ் நிறுவனம் தொடர்பான 17 கேள்விகளுக்கும் ‘தெரியாது’ என்றே பதில் அளித்தார். அதற்கு நீதிபதி, ‘மிடாஸ் நிறுவனத்தின் பங்குதாரரான நீங்கள் எதுவுமே தெரியாது என்கிறீர்களே?’ என்று கேட்டதற்கும், ‘தெரியாது’ என்றே பதில் அளித்தார்.

 ஜனாதிபதியின் கார்!

ஜெயா பப்ளிகேஷன்ஸ், ஆஞ்சநேயா பிரின்டர்ஸ், மிடாஸ், அக்ரோ ஃபார்ம் ஆகிய நிறுவனங்களுக்கு 25-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வாங்கியது தொடர்பாகக் கேள்வி கேட்கப்பட்டது. ‘‘வாங்கியது உண்மைதான். ஆனால், ஜெயலலிதா எம்.பியாக இருந்தபோது வாங்கப்பட்டவை. அதேபோல 1991-ல் இந்திய ஜனாதிபதி பயன்படுத்திய மெர்சிடிஸ் பென்ஸ் கார் ஏலத்துக்கு வந்தபோது, கிருஷ்ணமூர்த்தி என்பவரால் வாங்கப்பட்டு, பிறகு, ஜெயலலிதா பெயருக்கு அதை மாற்றினோம். அதற்கான பணத்தை, நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை வருமானத்தில் இருந்து செலுத்தினோம்’’ என்றார்.

‘36-ம் எண் போயஸ் கார்டன் வீட்டில் 643 ஜோடி தங்க, வைர ஆபரணங்கள் கைப்பற்றியது’ குறித்துக் கேட்டபோது, ‘போலீசார் 36-ம் எண் போயஸ் கார்டன் வீட்டில் மட்டுமே சோதனை செய்ய நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி இருந்தார்கள். ஆனால் 31-ஏ எண் போயஸ் கார்டன் வீட்டிலும் உரிமையாளர் இல்லாதபோது அத்துமீறி நுழைந்து, ஊழியர்களை கார் ஷெட்டில் அடைத்து வைத்துவிட்டு சோதனை நடத்தினார்கள். அப்போது 448 ஜோடி ஆபரணங்களை மட்டுமே எடுத்துச் சென்றனர். ஆனால் சொத்தின் மதிப்பை அதிகமாகக் காட்ட வேண்டும் என்பதற்காக போலீஸார் திட்டமிட்டே பொய்யாக 643 ஜோடி என்று கூறியுள்ளனர். இதில் இருந்தே இந்த வழக்கு எப்படிப் பொய்யாக ஜோடிக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது’’ என்று ஒரு தெளிந்த வழக்கறிஞர் போன்று பதில் சொன்னார்.

உடனே நீதிபதி, ‘கேள்விக்குத் தேவையான பதிலை மட்டும் சொல்லுங்கள்’ என்று கூறினார். ஆனால் சசிகலா கொஞ்சமும் தயக்கம் இன்றி, ‘இதெல்லாம் இந்தக் கேள்விக்கு கட்டாயம் தேவை’ என்று மீண்டும் அழுத்திச் சொன்னார். ‘நீங்களே வக்கீல் மாதிரி பேசுகிறீர்கள். நீங்கள் இப்போது பேசுவதை எல்லாம் உங்கள் வக்கீல் இறுதி விவாதத்தின்போது பேசுவார்’ என்று நீதிபதி சொன்னதும் எழுந்த சசிகலாவின் வக்கீல் மணி சங்கர், ‘அம்மா என் வேலையை குறைக்கிறாங்க’ என்று சிரித்தார். அப்போது சசிகலாவிடம் முகம் கொள்ளாத சிரிப்பு!

கருணாநிதி ராமாயணம்

போயஸ் கார்டனில் ஊழல் தடுப்புத் துறையினர் சோதனையிட்டபோது நகைகள், விலை மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதுபற்றிய கேள்விக்கு, ‘‘வீட்டு உரிமையாளர் இல்லாதபோது வீட்டில் சோதனை நடத்தியதே சட்டப்படி குற்றம். அதுவும் 7.12.1996 முதல் 12.12.1996 வரை ஐந்து நாட்கள் ஊழல் தடுப்புத் துறை போலீஸார் ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்தியபோது எடுத்த வீடியோவை, கருணாநிதியின் குடும்பத் தொலைக்காட்சியான சன் டி.வி.யில் தொடர்ந்து ஒளிபரப்பினர். இது ஜெயலலிதாவின் புகழைத் திட்டமிட்டுக் கெடுக்க கருணாநிதி, சன் டி.வி. மற்றும் போலீஸார் செய்த சதி. இந்த நாட்களில் எடுக்கப்பட்ட பொருட்களை 21.12.1996 அன்று எடுத்ததாக போலீஸ் பொய் சாட்சியம் சொல்லி இருக்கிறார்கள்’’ என்று சசிகலா சூடாக பதில் அளித்தார்.

ஜெயலலிதாவின் வீட்டில் கைப்பற்றப்பட்ட புடவைகள் குறித்த கேள்விக்கு, ‘‘ஜெயலலிதாவின் சொத்து மதிப்பை அதிகமாகக் காட்ட வேண்டும் என்பதற்காக காவல் துறையே வெளியே இருந்து புதிதாக வாங்கிவந்த புடவைகளை வீட்டில் வைத்துள்ளனர். இதை கார் ஷெட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வீட்டு சமையல்கார பெண்மணி ராஜம்மாள் மற்றும் டிரைவர் கண்ணனும் பார்த்துள்ளனர். போலீஸ் கொண்டு வந்த புடவைகளையும், வீட்டில் இருந்த புடவைகளையும் சேர்த்து மதிப்பிட்டு உள்ளனர்’’ என்று அழுத்தமாகவே பதிலளித்தார். 9 லட்சத்து 300 ரூபாய் மதிப்புள்ள பல ஜோடி வாட்சுகளைக் கைப்பற்றியது தொடர்பான கேள்விக்கு, ‘‘20.12.96 அன்று வீட்டில் 2-வது முறையாக சோதனை இட்டதாகச் சொல்லப்படுகிறது. நீதிமன்றத்தில் வைத்து மதிப்பிடாமல் போலீஸாரே தங்களுக்கு வேண்டியவர்களை வைத்து அதிகமாக மதிப்பிட்டு உள்ளனர். அதேபோன்று வீட்டில் இருந்த பழைய காலணிகளையும் புதியது போல கணக்கிட்டு உள்ளனர்’’ என்று சசிகலா கடுமையாக ஆட்சேபித்தார்.

சசிகலா பார்ட்னராக இருந்த ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ், ரிவர்வே பிரைவேட் லிமிடெட், மெடோ ஆன்ட்ரோ பிரைவேட் லிமிடெட், நெக்ஸ் ஆகிய நிறுவனங்கள் தொடர்பான 53 கேள்விகளுக்கும், ‘தெரியாது’ என்று ஒற்றை வார்த்தையில் சசிகலா பதில் அளித்தார். அதேபோல நவஷக்தி பில்டர்ஸ், நமச்சிவாய பில்டர்ஸ், ஜெ.எஸ்.பில்டர்ஸ், ஜெ. கன்ஸ்ட்ரக் ஷன்ஸ் சார்பில் வாங்கப்பட்ட நிலங்கள் தொடர்பான 21 கேள்விகளுக்கும், ‘ஆம். உண்மை’ என்று பதில் கொடுத்தார். 22ம்தேதி மாலை 5 மணி வரை மொத்தம் 504 கேள்விகளுக்குப் பதில் அளித்த சசிகலாவை, வெள்ளிக்கிழமை யுகாதி என்பதால் சனிக்கிழமை ஆஜராகுமாறு நீதிபதி கேட்டுக்கொண்டார். உடனே, ‘‘நாங்கள் சென்னைக்குப் போய்விட்டு வருவது கஷ்டம். செவ்வாய் மற்றும் புதன் அன்று சசிகலாவுக்கு கண் டாக்டரிடம் பரிசோதனை செய்ய வேண்டியிருப்பதால் வர இயலாது’’ என்று அவரின் வக்கீல் மணிசங்கர் வாதிட்டார். அரசுத் தரப்பில் எந்த ஆட்சேபணையும் இல்லாததால், 29-ம் தேதியைக் கேட்டு வாங்கிய மகிழ்ச்சியில் அன்று இரவே சென்னைக்குப் பறந்துவிட்டார்.

‘திரு.வி.க தொழிற்பேட்டையில் ஜெயா பப்ளிகேஷன் சார்பில் நான்கு கட்டடங்கள், 50 லட்ச ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டது பற்றி தெரியுமா?’ என்ற நீதிபதியின் கேள்வியை பொறுமையாக எழுதிக்கொண்ட சசிகலா, ஆழ்ந்து யோசித்துவிட்டு, மொழிபெயர்ப்பாளர் ஹரீஸிடம், ‘எழுதிக்கோங்க... புனரமைக்கப்பட்டது உண்மைதான். ஆனால், அதற்காக 50 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டதாக சாட்சிகளை மிரட்டி போலீஸார் பொய்யான மதிப்பீடு செய்துள்ளனர்’ என்று அழுத்தமாகவும் சத்தமாகவும் பதில் சொன்னார். அப்போது பென்சிலை ஸ்டைலாக ஆட்டிக்கொண்டே டிக்டேட் செய்ததை, அவரது வழக்கறிஞர்களே ஆச்சர்யத்தோடு கவனித்தனர்.

‘சூப்பர் டூப்பர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக சுதாகரனும், நீங்கள் இயக்குனராகவும் இருப்பதாக வருமானவரிச் சான்றிதழ் சொல்கிறதே?’ என்ற கேள்விக்கு, ‘உண்மைதான். சூப்பர் டூப்பர் நிறுவனம் கம்பெனி பதிவுச் சட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நான் இயக்குனராக இருந்தாலும், அந்த நிறுவனத்தின் மற்ற விவரங்கள் எனக்குத் தெரியாது’ என்று, கறுப்புக் கண்ணாடி அணிந்தவாறே, குற்றவாளிக் கூண்டில் இருந்த சுதாகரனைப் பார்த்து தலைஅசைத்தார். இதைப் புன்முறுவல் பூத்து சுதாகரனும் ஆமோதித்தார். இருவரின் நடவடிக்கைகளையும் நீதிபதி கவனித்துக் கொண்டார்.

அடுத்து, ‘ஆஞ்சநேயா பிரின்டர்ஸ் நிறுவனத்தில் நீங்கள் நிர்வாக இயக்குனராகவும் சுதாகரன் இயக்குனராகவும் இருப்பது உண்மையா?’ என்று கேட்டார்.

அதற்கு சற்றும் யோசிக்காமலே, ‘உண்மைதான்’ என்று வேகமாகவே தலையை ஆட்டிப் பதில் அளித்தார் சசிகலா.

 97 நகைப் பெட்டிகள்!

சொத்துக் குவிப்பு வழக்கில் திருப்புமுனை சாட்சியாகக் கருதப்படும், கைப்பற்றப்பட்ட நகைகள் குறித்த கேள்வி வேள்வி ஆரம்பமானது. சசிகலாவின் முகம் குழப்பத்தில் தத்தளித்தது. ‘நல்லம்ம நாயுடு தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் 36, போயஸ் கார்டன், சென்னை என்ற முகவரியில் 1996-ம் ஆண்டு சோதனை நடத்தியபோது, 97 நகைப் பெட்டிகளில் இருந்த 23 கிலோ 113 கிராம் தங்க, வைர நகைகள் கைப்பற்றப்பட்டன. இதில், தங்க நகையின் மதிப்பு 91 லட்சத்து 71 ஆயிரத்து 571 ரூபாய், வைர நகைகளின் மதிப்பு 2 கோடியே 43 லட்சத்து 92 ஆயிரத்து 700 ரூபாய். இதன் மொத்த மதிப்பு 3 கோடியே 35 லட்சத்து 15 ஆயிரத்து 43 ருபாய் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது பற்றி சாட்சியம் கூறி இருக்கிறார்களே என்ற கேள்வியை, இரண்டு மூன்று முறை சரியாகக் கேட்டு எழுதிக்கொண்டார். பிறகு தனது வக்கீலின் முகத்தைப் பார்த்த சசிகலா ஆழமாக யோசித்து, ‘36, போயஸ் கார்டன், சென்னை முகவரியில் போலீஸார் சோதனையிட்டபோது, நானும் செல்வி ஜெயலலிதாவும் சிறையில் இருந்தோம். இந்தச் சோதனை வீட்டு உரிமையாளர் செல்வி ஜெயலலிதா முன்னிலையில் நடக்கவில்லை. சட்டப்படி வீட்டு உரிமையாளர் முன்னிலையில்தான் நடந்திருக்க வேண்டும் அல்லது அவரது அனுமதி பெற்றாவது நடந்திருக்க வேண்டும். அதைவிட்டு, வீட்டு ஊழியர்களை கார் ஷெட்டில் வலுக்கட்டாயமாக அடைத்துவிட்டு சோதனை நடத்தியது சரிதானா?’ என்று கோபமாக எதிர்க் கேள்வி கேட்டு மடக்கினார்.

சசிகலாவின் பதிலைக் கேட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தங்களுக்குள் ஏதோ பேசிக்​கொண்டனர்.

‘வாசுதேவன் அளித்துள்ள சாட்சியத்தில் 31 ஏ, போயஸ் கார்டன் வீட்டில் 42 நகைப் பெட்டிகளை எடுத்ததாகவும், அதில் 4 கிலோ 475 கிராம் தங்க, வைர நகைகள் இருந்ததாகவும், தங்க நகையின் மதிப்பு 17 லட்சத்து 37 ஆயிரத்து 266 ரூபாய் என்றும், வைர நகைகளின் மதிப்பு 30 லட்சத்து 24 ஆயிரத்து 550 ரூபாய் என்றும் கூறி இருக்கிறார். கூடவே சில விலை உயர்ந்த கைக்கடிகாரங்களைக் கைப்பற்றியதாகவும் கூறி இருக்கிறாரே?’ என்ற நீதிபதியின் நீளமான கேள்விக்கு எதையும் யோசிக்காமல் சட்டென, ‘எழுதிக்கோங்க’ என்று கூறிவிட்டுப் பேசினார் சசி.

‘முதலில் 31 ஏ, போயஸ் கார்டன் வீட்டில் சோதனை நடத்த முறையான அனுமதி பெறவில்லை. சோதனையின்போது 42 பெட்டிகள் கைப்பற்றியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், வீட்டு உரிமையாளர் இல்லாமல் சோதனை நடத்தியதே தவறு’ என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு மீடியாக்களைப் பார்த்தார்.

மேலும் நீதிபதி, ‘36, போயஸ் கார்டன் வீட்டில் சோதனை நடத்தியபோது 1,160 கிலோ வெள்ளிப் பொருட்களை கைப்பற்றிய தாகவும், அதன் மதிப்பு 55 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் என்றும் கூறியுள்ளார்களே?’ என்று கேட்டார். இந்தக் கேள்விக்கு ஆழ்ந்து யோசித்த சசிகலா, அவரது வக்கீல் மணிசங்கரைப் பார்த்துத் தலையசைத்துவிட்டு, ‘இதுபற்றி எழுத்து மூலமாகப் பதில் அளிக்கிறேன்’ என கூறிவிட்டு கண்ணோரம் கசிந்த நீரைத் தன் கறுப்பு கண்ணாடியை உயர்த்தி டிஷ்யூ பேப்பரால் துடைத்துக்கொண்டார். அதன்பின் வழக்கு மற்றொரு நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், அப்போது உடல்நிலை சரி யில்லை என்று சொல்லி குற்றவாளிகள் ஆஜராகவில்லை.

கொடநாட்டுக்கு கோர்ட்டை மாற்றிவிடலாமா?

பல்லிக்கு வால் துண்டானாலும் மீண்டும் மீண்டும் வளர்ந்து கொண்டே இருக்கும். அப்படித்தான் நடைபெற்றது பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு. ‘இந்த வழக்கை நொண்டி அடிக்க வைப்பதற்காக எத்தனையோ மனுக்கள் போடப்பட்டன என்றாலும், ஜூன் 25-ம் தேதி போட்டதுதான் மெகா ‘மனு’ குண்டு. யாருமே எதிர்பாராத வகையில், நீதிபதி மல்லிகார்ஜுனையா நியமனத்தையே கேள்விக்குறி ஆக்கியது அந்த மனு. இந்த மனுவுக்கு அரசுத் தரப்பு மூத்த வக்கீல் ஆச்சார்யா என்ன பதில் சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்போடு கடந்த 3-ம் தேதி கோர்ட் கூடியது. பதில் மனுவைத் தாக்கல் செய்த ஆச்சார்யா, ‘‘சுப்ரீம் கோர்ட் ஒரு முறை மட்டும்தான், நீதிபதியின் பெயரைச் சொல்லி ஸ்பெஷல் கோர்ட்டுக்கு டைரக்ஷன் கொடுக்கும். அதன்பிறகு, கர்நாடக உயர் நீதிமன்றமும் மாநில அரசும் சேர்ந்து நியமிக்கும் நபரே, ஸ்பெஷல் கோர்ட் நீதிபதியாகக் கருதப்படுவார். நீங்கள் கூறுவதுபோல் ஒவ்வொரு முறையும் நீதிபதியின் பெயரைச் சொல்லியோ அல்லது மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டோதான் நியமிக்க வேண்டும் என்று சட்டத்தில் எங்கேயும் குறிப்பிடப்படவில்லை. இதெல்லாம் அவர்களுடைய வழக்கமான இழுத்தடிப்பு டெக்னிக்தான்’’ என்று அனல் கக்கினார்.

நீதிபதி மல்லிகார்ஜுனையாவும் ஆச்சார்யாவின் கருத்தை ஏற்றுக்கொண்டு, ‘‘சுப்ரீம் கோர்ட்டின் ஆணைப்படி, ஸ்பெஷல் கோர்ட் நீதிபதியாக வருபவரின் பெயரை ஒவ்வொரு முறையும் சொல்ல வேண்டியது இல்லை’’ என்றவர் சுற்று முற்றும் பார்த்தபடி, ‘‘குற்றவாளிகள் நான்கு பேரும் (ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி) கோர்ட்டுக்கு ஏன் வரவில்லை?’’ என்று கேள்வி எழுப்பினார். ‘‘ஜெயலலிதா தமிழக முதல்வராக இருப்பதால் இசட் ப்ளஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். சசிகலாவுக்குக் கண்ணில் கோளாறு, சுதாகரனுக்கு முதுகு வலி, இளவரசிக்கு சர்க்கரை நோய்’’ என்று வழக்கறிஞர்கள் வழக்கமான ரெடிமேட் பதிலை மீண்டும் சொன்னார்கள். அப்போது ‘‘அப்படின்னா கோர்ட்டை கொடநாடுக்கு மாத்திடலாமா?’’ என்று வேடிக்கை பார்க்க வந்த வக்கீல் ஒருவர் கமென்ட் அடிக்க... சிரிப்பலை எழுந்தது.

ஜெயலலிதா தரப்பு வக்கீல் பி.குமாரும், சசிகலா தரப்பு வக்கீல் மணிசங்கரும் எழுந்து, ‘‘அரசுத் தரப்பின் மனுவைப் படித்துப் பார்க்க ஒரு வாரம் கால அவகாசம் வேண்டும்’’ என்றார்கள். ‘‘அதுக்கு ஒரு வாரமா?’’ என ஷாக்கான நீதிபதி, வழக்கை ஒத்திவைத்தார்.

சொத்துக் குவிப்பு வழக்கை எப்படியாவது முடக்கியாக வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பு பகீரதப் பிரயத்தனங்களில் இறங்க... அதன் அரசுத் தரப்பு வழக்கறிஞரான ஆச்சார்யா வழக்கை முடிக்கத் துடித்தார். நீதிபதி மல்லிகார்ஜுனையா முன்னிலையில் மீண்டும் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கம் போலவே ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் வரவில்லை. முதல்வராக இருப்பதால் வேலைப்பளு, கண் கோளாறு, முதுகுவலி மற்றும் சர்க்கரை நோய் என்று முறையே நால்வருக்கும் காரணங்கள் சொல்லப்பட்டன. ‘மூணு மாசமா இதேதானா.. காரணத்தையாவது மாத்தச் சொல்லுப்பா’ என்று தன் ஜூனியர் சந்தேஷ் சவுட்டாவிடம் வெறுத்துப்போய்ச் சொன்னார் ஆச்சார்யா.

‘சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதியை மாற்ற வேண்டும்’ என்று ஜெ. தரப்பில் எழுப்பிய கோரிக்கை மனுவுக்குத் தனது தரப்பு வாதங்களை முன்வைத்தார் ஆச்சார்யா. எந்த மனுவாக இருந்தாலும் அரை மணி நேரத்துக்குள் வாதத்தை முடித்துக்​கொள்ளும் ஆச்சார்யா, இந்த முறை இரண்டு மணி நேரம் அனல் பறக்க வாதிட்டார். ‘‘ஜெயலலிதா, சசிகலா உள்​ளிட்ட நால்வர் மீதான சொத்​துக் குவிப்பு வழக்கு, 1997-ல் இருந்து விசார​ணையில் இருக்கிறது. மிகவும் சென்சிடிவான வழக்கு என்பதால் சுப்ரீம் கோர்ட், 2004-ம் ஆண்டு இந்த வழக்கை பெங்களூரு ஸ்பெஷல் கோர்ட்டுக்கு மாற்றி​யது. அப்போது, ‘வழக்கை எப்படி நடத்த வேண்டும்’ என்று ஸ்பெஷல் கோர்ட்டுக்கு சில வழிமுறைகளைத் தந்தது. அதில், ‘நீதிபதியின் நியமனம், அரசுத் தரப்பு வக்கீலின் நியமனம் ஆகியவற்றை கர்நாடக அரசும், கர்நாடக உயர்நீதிமன்றமும் இணைந்து ஆலோசித்து நியமிக்க வேண்டும்’ என வலியுறுத்தி இருக்கிறது. அதன்படிதான் 36-வது சிட்டி சிவில் மற்றும் செஷன்ஸ் ஸ்பெஷல் கோர்ட்டின் நீதிபதியாக‌ ஏ.எஸ்.பச்சாபுர்ரே நியமிக்கப்பட்டார். அவரது பெயரைக் குறிப்பிட்டு அரசு ஆணை வெளியிட்டு, அதை அரசிதழிலும் பிரசுரித்தார்கள். நீதிபதி பச்சாபுர்ரேவின் பதவிக்காலம் முடிந்த பிறகு, நியமிக்கப்பட்ட நீதிபதிகளான ஆன்ட்டின், மனோலி, மல்லிகார்ஜுனையா உள்ளிட்ட மூவரின் பெயரையும் குறிப்பிட்டு அரசு ஆணையோ, அரசிதழில் அறிவிப்போ வெளியிடவில்லை. ஏனென்றால், ஊழல் தடுப்பு சட்டப் பிரிவு 3-ன் கீழ், சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்கும் முதல் நீதிபதியின் பெயரை மட்டும் வெளியிட்டால் போதும், அடுத்தடுத்து வரும் நீதிபதிகளின் பெயர்களை வெளியிடத் தேவை இல்லை என்பதற்கு இந்தியாவில் நடந்த பல்வேறு வழக்குகளைக் காரணமாகக் குறிப்பிடலாம்’’ என்றார்.

 டெல்லி மிரட்டல்!

‘உச்ச நீதிமன்ற ஆணைப்படி, பெங்களூரு ஸ்பெஷல் கோர்ட்டில் நடந்து வரும் வழக்கில் முதல் குற்றவாளியான ஜெய லலிதா ஆஜராகி விளக்கம் அளித்தார். ஆனால் இரண்டாம் குற்றவாளியான சசிகலா மனு மேல் மனு போட்டு வழக்கை இழுத்தடிக்கிறார். இன்னும் 1,000 கேள்விகளுக்கு மேல் பதில் சொல்ல வேண்டிய சசிகலா, புதுப்புது காரணங்களைச் சொல்லி வழக்கைத் தாமதப்படுத்த முனைகிறார். எனவே ஸ்பெஷல் கோர்ட்டின் அன்றாட நடவடிக்கைகளை சுப்ரீம் கோர்ட் காண்காணிக்க வேண்டும்’ என்று மனு போட்டு இருந்தார் பேராசிரியர் அன்பழகன். இந்த நீதிபதிகள் பி.சதாசிவம், ரஞ்சன் கோகாய் அடங்கிய பெஞ்சின் முன் விசாரணைக்கு வந்தது. அன்பழகன் மனுவை ஏற்றுக்கொண்டு, ‘இழுத்தடிக்க என்ன காரணம்?’ என்பது பற்றி பதில் அளிக்குமாறு சசிகலாவுக்கும் தமிழ்நாடு ஊழல் தடுப்புத் துறை கண்காணிப்பாளருக்கும் உத்தரவு போடப்பட்டு உள்ளது.

‘‘தமிழகத்தில் நடந்த வழக்கை பெங்களூருவுக்கு மாற்றியதே சுப்ரீம் கோர்ட்தான். எனவே, அவர்கள் கண்காணிக்க ஆரம்பித்தால் மூன்று மாதங்களில் வழக்கு முடிந்து தீர்ப்பு வந்துவிடும்’’ என்கிறார்கள் நீதித் துறையைச் சார்ந்தவர்கள்.

இதற்கிடையே, ‘நீதிபதியை மாற்ற வேண்டும்’ என்ற மனுவை டிஸ்மிஸ் செய்து தீர்ப்பு சொன்னார் நீதிபதி மல்லிகார்ஜுனையா! ‘‘சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு வழக்கு மாற்றப்பட்டது. ஊழல் தடுப்புத் துறை சட்டப்பிரிவு 3-ன்படி, சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலில் கர்நாடக அரசும், கர்நாடக உயர்நீதிமன்றமும் கலந்து ஆலோசித்து புதிய நீதிபதியையும், அரசுத் தரப்பு வக்கீலையும் பெயரைக் குறிப் பிட்டு அரசாணை வெளியிட்டனர். அதன் பிறகு ஸ்பெஷல் கோர்ட்டுக்குப் புதிய நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் ஹைகோர்ட்டுக்கும், மாநில அரசுக்கும் இருக்கிறது. அதன்படியே எனக்கு முன்னர் இருந்தவர்களும், நானும் இந்த நீதிமன்றத்துக்கு நீதிபதிகளாக நியமிக்கப்பட்டோம். நீதிபதி நியமனத்தில் என்னென்ன வரைமுறைகளையும், சட்டப் பிரிவுகளையும் பின்பற்ற வேண்டுமோ, அவை எல்லாமே பின்பற்றப்பட்டு உள்ளது. இதில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை. எனவே, குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்கிறேன்’’ என்று கடகடவென தீர்ப்பு கொடுத்தார்.

இதுவரை நீதிபதி மல்லிகார்ஜு​னையாவிடம் ஜெ. தரப்பில் தாக்கல் செய்யப்பட்டு ‘டிஸ்மிஸ்’ ஆன மனுக்களின் வரிசையில் இந்த பிரம்மாஸ்திர மனுவும் சேர்ந்துகொண்டது.

அதைத் தொடர்ந்து பேசிய நீதிபதி மல்லிகார்ஜுனையா, ‘‘விசாரணையை ஒரு வாரம் தள்ளி வைக்கிறேன். அன்றைய தினம் குற்றம்சாட்டப்பட்ட நால்வரும் கட்டாயம் ஆஜராக வேண்டும். சசிகலாவிடம் விசாரணை தொடரும். அதற்காக மொழிபெயர்ப்பாளரும் தயாராக இருக்கிறார்’’ என்றார். இதைக் கேட்டதும், உடனடியாக ஹைகோர்ட்டில் அப்பீல் மனு போட ஜெ. தரப்பில் பரபரப்பாக இறங்கிவிட்டனர்.

விடைபெற்ற மல்லிகார்ஜுனையா.... விலகிக்கொண்ட ஆச்சார்யா...

15 ஆண்டுகளாக நீண்ட நெடிய இழுத்தடிப்புப் பயணம் மேற்கொண்டுள்ள சொத்துக்குவிப்பு வழக்கை, விடாமல் விரட்டி இறுதிக் கட்டத்தை எட்ட வைத்தவர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி மல்லிகார்ஜுனையா. ஜெயலலிதா வழக்கின் ஜாதகத்தையே மாற்றிய இவர், 2012, ஆகஸ்ட் 4-ம் தேதி ஓய்வு பெற்றார். சொத்துக் குவிப்பு வழக்கை இழுத்துப் பிடித்து, சிதறிக்கிடந்த வழக்கை ஒருங்கிணைத்து ஒழுங்கான வடிவத்துக்குக் கொண்டு ​வந்தவர் நீதிபதி மல்லிகார்ஜுனையா. சாட்சிகளை ஆழமாக விசாரித்து, ஒரு மாநிலத்தின் முதல்வர் என்பதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஜெயலலிதாவை வரவழைத்தார். ஐந்து நாட்கள் உட்காரவைத்து 1,384 கேள்வி களைக் கேட்டுப் பதிவு செய்தார். சசிகலாவிடமும் 75 சதவிகிதக் கேள்விகள் முடிந்துவிட்டன. ஆனால், ஆகஸ்ட் 4-ம் தேதி அவருக்குப் பணி ஓய்வு நாள்.

நித்தம் நித்த‌ம் நிம்மதி இழந்து தவித்த ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் தரப்பினருக்கு நீதிபதி மல்லிகார்ஜுனையாவின் ஓய்வு கொஞ்சம் நிம்மதியைக் கொடுத்தது.

கேட்டது மூன்று தேதிகள்... கிடைத்தது சூடு!

நீதிபதி மல்லிகார்ஜுனையாவின் ஓய்வு, அரசு வக்கீல் ஆச்சார்யாவின் ராஜினாமா போன்ற காரணங்களால் சோர்வடைந்து கிடந்த ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கிற்கு சுளீரென சாட்டையடி கொடுத்து எழுப்பினார் புதிய‌ நீதிபதி (பொறுப்பு) சோமராஜு! ‘அடுத்த தேதியை வாங்கிக்கொண்டு, விநாயகர் சதுர்த்தி கொண்டாட சீக்கிரம் வீட்டுக்குப் போகணும்’ என்றபடியே, 2012, செப்டம்பர் 18-ம் தேதி பெங்களூரு கோர்ட்​டுக்கு வந்தனர் ஜெயலலிதா தரப்பு வக்கீல்கள். சரியாக காலை 11 மணிக்கு இடைக்காலப் பொறுப்பு நீதிபதி சோமராஜு முன்னிலையில் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘ஜெயலலிதா முதல்வராக இருப்பதால் வேலைப்பளு, சசிகலாவுக்குக் கண்ணில் பிரச்னை, சுதாகரனுக்கு முதுகு வலி, இளவரசிக்கு சர்க்கரை நோய்’ என்று வழக்கம் போலவே காரணங்களைச் சொல்லி, கோர்ட்டில் ஆஜர் ஆகாத காரணத்துக்கான மனுவைக் கொடுத்தனர் நால்வரின் வக்கீல்களும்.

‘‘என்ன இது? போனமுறை சொன்ன அதே காரணம்? அடுத்த முறை இதே மாதிரி காரணத்தைச் சொல்லக் கூடாது’’ என்று கண்டிப்பு காட்டினார் நீதிபதி. உடனே எழுந்த சசிகலாவின் வக்கீல் மணிசங்கர், ‘‘முன்பு இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மல்லிகார்​ஜுனையாவின் நியமனம் குறித்த எங்களின் மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அதனால், குற்றம்சாட்டப்பட்டவர்கள் வரவில்லை. ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 3-ன்படி, ஸ்பெஷல் கோர்ட்டின் நீதிபதியை ஹைகோர்ட் தலைமை நீதிபதியும், மாநில அரசும் கலந்து ஆலோசித்து நியமிக்க வேண்டும். அவ்வாறு நியமிக்கப்பட்ட நீதிபதி குறித்த அறிவிப்பை அரசிதழில் வெளியிட வேண்டும். ஆனால், நீதிபதி பச்சாபுர்ரேவுக்குப் பிறகு இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனோலி, ஆன்ட்டன், மல்லிகார்ஜுனையா ஆகியோருக்கு இந்த விதிமுறை பின்பற்றப்படவில்லை. அதனாலேயே 2009-ம் ஆண்டு உங்களைப் (நீதிபதி சோமராஜு) போன்று இடைக்காலப் பொறுப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஆன்ட்​டன் இந்த வழக்கை விசாரிக்கவே இல்லை. ஏனென்றால், ‘இடைக்காலப் பொறுப்பு நீதிபதிக்கு ஸ்பெஷல் கோர்ட்டின் வழக்கை விசாரிக்கும் அதிகாரம் இல்லை’ என்ற எங்களின் வாதத்தை அப்போதே ஏற்றுக்கொண்டார். அதேபோன்று நீங்களும், ஹைகோர்ட்டில் தீர்ப்பு வரும் வரை சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்கக் கூடாது’’ என்று சூடாக வாதிட்டார். அரசு வக்கீல் ஆச்சார்யாவின் ராஜினாமா இன்னும் ஏற்கப்படாத காரணத்தால், அவரின் ஜூனியர் சந்தேஷ் சவுட்டா உடனே எழுந்து, ‘‘ஸ்பெஷல் கோர்ட் நீதிபதிகளை நியமித்ததில் அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளன என்று சொல்லி, எதிர்த் தரப்பின் மனுவை ஸ்பெஷல் கோர்ட்டிலேயே டிஸ்மிஸ் செய்தார் நீதிபதி மல்லிகார்ஜுனையா. ஆனாலும், வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ஹைகோர்ட்டுக்குப் போனார்கள். எதிர்த் தரப்பினருடைய மனுவை ஏற்றுக்கொண்ட ஹைகோர்ட், ‘இந்த மனு மீது தீர்ப்பு வெளியாகும் வரை, ஸ்பெஷல் கோர்ட்டில் வழக்கு நடத்தக் கூடாது’ என எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. ‘வழக்கை தினமும் நடத்தி... விரைவில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்’ என்று, சுப்ரீம் கோர்ட் பல முறை கண்டித்து இருக்கிறது. அதனால், இரண்டாவது குற்றவாளியான சசிகலாவிடம் மீதி இருக்கும் கேள்விகளைக் கேட்க வேண்டும். இனியும் இழுத்தடிப்பதை அனுமதிக்கக் கூடாது’’ என்று ஆவேசமாக பதில் கொடுத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சோமராஜு, மதியம் மூன்று மணிக்குத் தீர்ப்பு வழங்கினார். ‘‘நீதிபதி நியமனத்தில் எவ்வித விதிமுறை மீறலும் நடக்கவில்லை. அதேபோல, ‘ஸ்பெஷல் கோர்ட்டில் வழக்கை நடத்தக்கூடாது’ என உயர் நீதிமன்றமோ, உச்ச நீதிமன்றமோ எங்கும் குறிப்பிடவில்லை. அதனால், குற்ற வியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 313-ன்படி, வழக்கில் இரண்டாவது குற்றவாளியான சசிகலாவிடம் மீதி இருக்கும் கேள்விகள் கேட்கப்படும். அதனால் வரும் 29-ம் தேதி சசிகலா கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். அதற்கு ஏதுவாக மொழிபெயர்ப்பாளர் ஹரிஸும் கோர்ட்டுக்கு வர வேண்டும்’’ என்று சூடாக அறிவித்தார். இதை சசிகலா தரப்பு வக்கீல்கள் எதிர்பார்க்கவில்லை.

உடனே எழுந்த சசிகலாவின் வக்கீல் மணிசங்கர், ‘‘நீதிபதி மல்லிகார்ஜுனையா போன்று மூன்று தேதிகளைச் சொல்லுங்கள். எங்களுக்கு ஏதுவான தேதியைத் தேர்ந்தெடுக்கிறோம்’’ என்றார். அதற்கு நீதிபதி சோமராஜு, ‘‘அது மாதிரி எல்லாம் ஆப்ஷன் தர முடியாது. 29-ம் தேதி வந்துவிடுங்கள்’’ என்றார் கறாராக.

நீதிபதி பாலகிருஷ்ணா வந்தார்

ஜெயலலிதாவின் தலைவிதியைத் தீர்மானிக்கும் மனிதராக வந்தார் நீதிபதி பாலகிருஷ்ணா!

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விறுவிறுவென வழக்கை நடத்திவந்த நீதிபதி மல்லிகார்ஜுனையா, ஓய்வு பெற்றதும், அதன் பிறகு, இடைக்கால சிறப்பு நீதிபதியாக சி.பி.ஐ. கோர்ட் நீதிபதி சோமராஜு நியமனம் செய்யப்பட்டார். ‘நீதிபதி சோமராஜு மிகவும் கண்டிப்பானவர்; மல்லிகார்ஜுனையா போல விட்டுப்பிடிக்க மாட்டார். மொத்தத்தில் அதிரடி ஆட்டக்காரர்’ என்று கோர்ட் வட்டாரத்தில் பேச்சு கிளம்பியது. அந்த சமயத்தில், ‘வழக்கின் அன்மார்க்டு ஆவணங்களைப் பார்க்க வேண்டும்’ என்று, உச்ச நீதிமன்றத்தில் மனுப்போட்டு அனுமதி வாங்கினார் சசிகலா. அதனால், ஜெட் வேகத்தில் க்ளைமாக்ஸ் நோக்கிப் பற‌ந்த வழக்கு, கடந்த இரண்டு மாதங்களாகவே மீண்டும் நொண்டி அடித்தது. இந்த நிலையில், ‘சொத்துக் குவிப்பு வழக்கை ஆறே மாதங்களில் முடிக்க வேண்டும்’ என்ற கண்டிஷனோடு நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணா பெயரை டிக் செய்தது கர்நாடக உயர் நீதிமன்றம்.

'இனி பெங்களூரு வழக்கு அவ்வளவு​தான்’ என, நீதிபதி மல்லிகார்​ஜுனையா ஓய்வுபெற்றதும் சொல்லி வந்த எதிர்த்தரப்பு, புதிய நீதிபதி பாலகிருஷ்ணாவின் அதிரடியால் அதிர்ந்து போனார்கள். நீதிபதி பாலகிருஷ்ணா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நால்வரும் வழக்கம்போல கோர்ட்டுக்கு வரவில்லை. விசாரணை ஆரம்பம் ஆனதும் சசிகலா மற்றும் சுதாகரன் தரப்பில் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ‘‘சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி கடந்த 21 நாட்கள் வழக்கின் அன்மார்க்டு ஆவணங்களைப் பார்த்தோம். எங்கள் தரப்பிடம் இருந்து தமிழக ஊழல் தடுப்புத் துறை போலீஸார் கைப்பற்றிய ஆவணங்களில் 60-க்கும் மேற்பட்ட ஆவணங்களை (60 ஆயிரம் பக்கங்கள்), வழக்கில் பயன்படுத்தவில்லை. அவை வெறுமனே இந்த கோர்ட்டில் பீரோவில் பூட்டி வைக்கப்பட்டிருக்கிறது. எனவே, வழக்கில் பயன்படுத்தாமல் 20 ஆண்டுகளுக்கு மேலாக வைத்திருக்கும் ஆவணங்களையோ அதன் பிரதிகளையோ எங்களுக்குத் திருப்பித்தர வேண்டும். எங்கள் கட்சிக்காரர் பதில் சொல்ல அந்த ஆவணங்கள் தேவைப்படுகிறது’’ என்றார் சசிகலாவின் வழக்கறிஞர் மணிசங்கர்.

‘‘இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?’’ என அரசுத் தரப்பு வழக்கறிஞர் சந்தேஷ் சவுட்டாவிடம் நீதிபதி பாலகிருஷ்ணா கேட்டார். ‘‘1997-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வழக்கை, எப்படியாவது இழுத்தடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக, இதுவரை 800-க்கும் மேற்பட்ட மனுக் களை எதிர்த் தரப்பில் தாக்கல் செய்து இருக்கிறார்கள். அந்த மனுக்களின் நியாயத்தன்மையை ஆராய்ந்து ஸ்பெஷல் கோர்ட்டும், கர்நாடக ஹை கோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் பெரும்பாலான சமயங்களில் தள்ளுபடி செய்து இருக்கிறது. இருப்பினும், மீண்டும் மீண்டும் மனு போட்டு ‘அன்மார்க்டு ஆவணங்களைப் பார்க்க வேண்டும்’ எனக் கேட்டதால், சுப்ரீம் கோர்ட் 21 நாட்கள் அனுமதி அளித்தது. இப்போது அந்த மனுவைக் காரணம் காட்டி புதிய மனுவைப் போடுகிறார்கள். இது வழக்கை இழுத்தடிக்கும் செயலே. வழக்கில் முதல் குற்றவாளியான ஜெயலலிதா கடந்த ஆண்டு நான்கு நாட்கள் கோர்ட்டில் ஆஜராகி நீதிபதியின் 1,384 கேள்விகளுக்குப் பதில் அளித்தார். ஆனால், இரண்டாம் குற்றவாளியான சசிகலா, கடந்த 13 மாதங்களாக மீதி இருக்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் மனு மேல் மனு போட்டு வழக்கை நகரவிடாமல் காலம் தாழ்த்தி வருகிறார்’’ என்று கடுமையாக ஆட்சேபித்தார்.

இருவரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘‘இந்த மனு மீதான தீர்ப்பை நாளை சொல்கிறேன். ஒருவேளை மனு தள்ளுபடி செய்யப்பட்டால், இரண்டாவது குற்றவாளியிடம் மீதி இருக்கும் கேள்விகள் நிச்சயம் கேட்கப்படும்’’ என்றார்.

கருணாநிதி என்னை மிரட்டினார்

825 கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருந்த சசிகலா, தன்னுடைய புதிய உதவியாளர் சுரேஷ் சகிதம் கோர்ட்டுக்கு சீக்கிரமே வந்து காத்திருந்தார். நீதிபதி பாலகிருஷ்ணா 11.20 மணிக்குத்தான் கோர்ட் ஹாலுக்கு வந்தார். ஜெ.ஜெ. பிரின்டர்ஸ், ஜெயா பப்ளிகேஷன்ஸ், ஜெயா ஃபார்ம் ஹவுஸ், நமது எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் நடந்த பங்குப் பரிவர்த்தனை, கணக்கு வழக்குகள், வங்கிக் கணக்குகள், வரி தொடர்பாகவே கேள்விகள் மீண்டும் கேட்கப்பட்டன. அத்தனை கேள்விகளுக்கும் மிகவும் தெளிவாக அழுத்தம்திருத்தமாக, ‘தெரியாது’ என்றார். ஆஞ்சநேயா என்டர்பிரைசஸ் நிறுவனக் கட்டடம் கட்டியது, பராமரித்தது, நாதெள்ளா நகைக் கடையில் வைர நகைகள் வாங்கியது தொடர்பான நீண்ட நெடிய கேள்விகளை நீதிபதி மூச்சுவாங்க வாசித்து, அதனை ஹாரீஸ் கஷ்டப்பட்டு நான்கு பக்க அளவுக்கு மொழிபெயர்த்து விளக்கியதும், ‘எழுத்துப்பூர்வமாகப் பதில் தருகிறேன்’ என்று ஒற்றை வரியில் சொன்னார் சசிகலா.

அதனால், வெள்ளிக்கிழமை வழக்கத்தைவிட கேள்விகள் ஜெட் வேகத்தில் பறந்தன.

வெள்ளிக்கிழமை மாலை வரை வங்கிக் கணக்குப் புள்ளி விவரங்களாகப் பயணித்த கேள்விகளின் திசையை நீதிபதி பாலகிருஷ்ணா திடீரென மாற்ற ஆரம்பித்தார். சிறுதாவூர் பங்களா, பையனூர் பங்களா, கொடநாடு எஸ்டேட், அரசுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தது, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் அதிகாரி தொடர்பான கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்வதற்கு முன், சசிகலாவின் வக்கீல்கள் மணி​சங்கரும் செந்திலும் கைகளை அசைப்பதும், துண்டுச் சீட்டைக் காட்டுவதுமாக உதவி செய்தனர். அதேபோல ஏற்கெனவே கொண்டு வந்திருந்த ஃபைலைப் பார்த்தும் பதில் சொன்னார். பங்களாக்களைக் கட்டியது, பராமரித்தது, வரி செலுத்தியது போன்ற அத்தனை கேள்விகளுக்கும் தெரியாது என்றே பதில் சொன்னார். ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லிவிட்டு சரியாகச் சொன்னேனா என்று வக்கீல்களைப் பார்த்து தலையசைத்து உறுதி செய்துகொண்டார்.

‘வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக 62.27 கோடி ரூபாய் சொத்துச் சேர்த்ததாகக் கூறப்படுவது குறித்து என்ன சொல்கிறீர்கள்?’ என்று நீதிபதி கேட்டார்.

‘ஜெயலலிதாவின் சொத்து வேறு. எங்களுடைய சொத்து வேறு. அவர் மீது பொய் வழக்குத் தொடர வேண்டும் என்பதற்காகவே ‘எங்களுடைய சொத்துக்களை எல்லாம் அவருடைய சொத்தாகக் கணக்கில் சேர்த்துள்ளனர். எங்களு​டைய சொத்துகள் அனைத்துக்கும் முறைப்படி வரி செலுத்தி இருக்கிறோம். அதேபோல வங்கியில் கடன் வாங்கியே எங்களுடைய நிறுவனங்களை ஆரம்பித்துப் பராமரித்தோம். அதற்கான ஆதாரங்களை எல்லாம் கோர்ட்டில் சமர்ப்பிக்கத் தயாராக இருக்கிறோம். ஜெயலலிதாவை அரசியல் ரீதியாகப் பழிவாங்க வேண்டும் என்பதற்காகப் போடப்பட்ட பொய் வழக்கு’ என்ற சசிகலாவின் முகத்தில் புன்னகை வழிந்தது.

கடைசியாக, ‘இந்த வழக்கு குறித்து ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?’ என்று கேட்கத் தொடங்கிய‌ நீதிபதி, ‘போன கேள்விக்கு நீங்கள் சொன்ன பதிலையே உங்கள் கருத்தாக எடுத்துக்​கொள்கிறேன்’ என முடிக்க முயற்சிக்க, ‘இல்லை... இல்லை... ஒரு சில வார்த்தைகள் மட்டும்’ என்று இழுத்தார் சசிகலா.

இதுவரை 1,031 கேள்விகளுக்கும் சசிகலா சொன்ன பதில், அவர் பக்கத்தில் இருக்கும் மொழிபெயர்ப்பாளருக்குக்கூட தெளிவாகக் கேட்காத வகையில் மெள்ளப் பேசினார். ஆனால், கடைசிக் கேள்விக்கு மட்டும் அனல் தெறிக்கும் வகையில் அரசியல் வசனம் பேசி அனைவரையும் மிரள வைத்தார்.

‘தமிழ்நாட்டில் ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் அரசியல் பகை இருக்கிறது. அதனால், அரசியலில் இருந்து ஜெயலலிதாவை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்பதற்காக, வருமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்துச் சேர்த்ததாகப் பொய்யாக இந்த வழக்கைத் தொடர்ந்தார். இந்த வழக்கு ஆரம்பிக்கப்பட்டபோது அவரால் 66 கோடி ரூபாய்க்கான கணக்கைக் காட்ட முடியாததால், வழக்கு ஆரம்பித்து இரண்டு மாதங்கள் கழித்து என்னையும், சுதாகரன், இளவரசியையும் இதில் சேர்த்தார். எங்களுடைய சொத்துக்களை எல்லாம் ஜெயலலிதாவின் சொத்தாகக் கணக்குக் காட்டியுள்ளார். இந்த வழக்குத் தொடர்ந்த இரண்டு மாதங்களில், ஜெயலலிதாவுக்கு எதிராகச் சாட்சியம் சொல்லும்படி கருணாநிதி என்னை மிரட்டினார். மறுத்துவிட்டேன். அதனாலே, என்னை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்த்தனர். அதுமட்டுமில்லாமல் ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள் விசாரணையை நேர்மையாக நடத்தவில்லை. எங்களை அவமானப்படுத்தும் நோக்கிலும், ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் எங்கள் வீட்டில் சோதனை நடத்திய வீடியோ காட்சிகளை கருணாநிதியின் குடும்பத் தொலைக்காட்சியான சன் டி.வியில் அடிக்கடி போட்டுக்காட்டினர். ஜெயலலிதாவை அரசியலில் இருந்தே அப்புறப்படுத்த வேண்டும் என்ற கருணாநிதியின் பேச்சை விசாரணை செய்த அதிகாரிகளும் கடைப்பிடித்தனர். என்னுடைய விரிவான விளக்கத்தை எழுத்து மூலமாகவும் சொல்கிறேன்’ என்றபோது சசிகலாவின் முகத்தில் கோபம் கொப்பளித்தது.

ஜெயலலிதா 1,384 கேள்விகளுக்கும், சசிகலா 1,032 கேள்வி களுக்கும் பதில் சொல்லி இருப்பதால், அடுத்து சுதாகரன் பதில் சொல்ல இருக்கிறார். சுதாகரன் வக்கீல் அன்புக்கரசு, ‘நாடு முழுவதும் ஒரு வாரம் கோர்ட் விடுமுறை என்பதால், ஜனவரி 3-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைக்க வேண்டும்’ என்று கேட்டார். உடனே குறுக்கிட்ட நீதிபதி, ‘இது ஸ்பெஷல் கோர்ட். ஸ்பெஷல் கேஸ். அதனால் அந்த விடுமுறை நமக்குப் பொருந்​தாது. அதனால் அடுத்த அமர்வில் நிச்சயமாக சுதாகரனிடம் கேள்விகள் கேட்கப்படும்’ என்று கறாராகச் சொல்லி, வழக்கை ஒத்திவைத்தார்.

என் கல்யாணத்தைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது! - சுதாகரன் பல்டி

நீதிபதி பாலகிருஷ்ணாவின் கிடுகிடு நடவடிக்கைகளால், சொத்துக் குவிப்பு வழக்கின் போக்கில் திடீர் உக்கிரம். கோர்ட் பக்கமே தலை​காட்டாமல் இருந்த சுதாகரனை நான்கு நாட்களாக பெங்களூருவிலேயே டேரா போட​வைத்தது. நீதிபதியின் கேள்விகளுக்குப் பதில் சொன்ன சுதாகரன், அபிராமி பில்டர்ஸ், ரிவர்வே என்டர்பிரைசஸ், அக்ரோ பிரைவேட் லிமிடெட், மெடோ ஃபார்ம் உள்ளிட்ட நிறுவனங்களுக்காகப் பல்வேறு இடங்களில் நிலங்கள், கட்டடங்கள் வாங்கியது, அவற்றைப் பதிவு செய்தது, பராமரித்தது தொடர்பாக நீண்ட கேள்விகளை நீதிபதி சரமாரியாகக் கேட்க, சுதாகரனும் சளைக்காமல் ‘தெரியாது’ என்ற பதிலையே மீண்டும் மீண்டும் சொன்னார். ஆனாலும் நீதிபதி விடாமல், ‘‘சென்னை தி.நகரில் உள்ள 20.41 லட்ச ரூபாய் மதிப்புள்ள கட்டடம், சென்னை ராம் நகரில் உள்ள 20.57 லட்ச ரூபாய் மதிப்புள்ள கட்டடம், மாமல்லபுரத்தில் உள்ள 53.11 லட்ச ரூபாய் மதிப்புள்ள கட்டடம், சோழிங்கநல்லூரில் உள்ள 80.37 லட்ச ரூபாய் மதிப்புள்ள கட்டடங்கள் வாங்கியது, பராமரித்தது தொடர்பாக என்ன சொல்கிறீர்கள்?’’ என்று கேட்டார் நீதிபதி. தான் ஏற்கெனவே ரெடி மேடாகக் கொண்டுவந்த ஃபைலைப் பார்த்து, ‘‘விசாரணை அதிகாரிகள் கட்டடத்தின் மதிப்பை உண்மையைவிட அதிகமாகக் காட்டி உள்ளனர். அது மட்டும் இல்லாமல் எங்களுக்கு எந்தத் தகவலையும் தெரிவிக்காமல் அதிரடியாகப் புகுந்து சோதனையிலும் ஈடுபட்டனர்’’ என்றார்.

சுதாகரன், சசிகலா மற்றும் இளவரசி மூவரும் இணைந்து நடத்திய நிறுவனங்கள், அப்போது வாங்கிய நிலங்கள், அவற்றைப் பதிவு செய்யச் செலவழித்த பணம் மற்றும் பங்குப் பரிவர்த்தனைகள் தொடர்பான கேள்விகள் அனைத்துக்கும் ‘தெரியாது’ என்ற பதிலையே வேடிக்கை பார்த்தபடியே ஹாயாக சொல்லிக் கொண்டு இருந்தார். அடுத்து, ஜெயலலிதா மற்றும் போயஸ் கார்டன் தொடர்பான‌ கேள்விகளைக் கேட்கத் தொடங்கியதும் நிமிர்ந்து உட்கார்ந்தார் சுதாகரன்.

 பிரமாண்ட கல்யாணம்

சொத்துக் குவிப்பு வழக்கைப் பொறுத்த வரை, ‘அபாய வளைவாக’க் கருதப்படுவது, சுதாகரனின் திருமணம் குறித்த கேள்விகள்தான். அதனால், நள்ளிரவு வரை தன்னுடைய வக்கீல்களிடம் ஸ்பெஷல் கோச்சிங் எடுத்த சுதாகரன் மறுநாள் காலை 10.50 மணிக்கு, சாய்​பாபாவை வணங்கிவிட்டு கோர்ட்டுக்குள் நுழைந்தார். நீதிபதியும் தயாராக இருந்ததால் சரியாகக் காலை 11 மணிக்கு கேள்வி கேட்கும் படலம் ஆரம்பமானது. ‘‘டெல்லியைச் சேர்ந்த மல்லம் லா என்ற தணிக்கை யாளரின் மதிப்பீட்டின்படி, உங்களின் திருமணச் செலவுக்காக ஜெயலலிதா கையெழுத்திட்ட 5.91 கோடி ரூபாய் காசோலை பற்றி தெரியுமா?’’ என்று நீதிபதி கேட்டதும் தன்னுடைய கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டார். ‘‘எனது திருமணத்துக்குச் செய்யப்பட்ட செலவுகள் எல்லாம் எனது மனைவி வீட்டார் செய்ததே...’’ என்று சுதாகரன் சொன்னார். கூடுதல் பதிலை எதிர்பார்த்திருந்த நீதிபதி, ‘அவ்வளவுதானா?’ என்பது​போல் பார்த்துப் பதிலை பதிவுசெய்தார். ‘‘உங்களின் திருமணத்துக்காக 65 ஆயிரம் அழைப்பிதழ்கள் அச்சிடுவதற்கு ஜெயலலிதா 1.15 லட்சத்துக்கு கா​சோலையில் கையெழுத்திட்டது குறித்துத் தெரியுமா?’’ என்று கேட்டதும் அதே ஸ்பீடில், ‘‘தெரியாது’’ என்றார் சுதாகரன்.

அதைத்தொடர்ந்து, ‘‘உங்கள் திருமணத்துக்காக யூனிட் டூல்ஸ் நிறுவனத்தின் ஆறு ஆடம்பர கார்களைப் பயன்படுத்துவதற்கு ஜெயலலிதா செக் கொடுத்தது, அ.தி.மு.க. அலுவலகத்தில் பணியாற்றும் பாபு என்பவரிடம் 50 ஆயிரம் அழைப்பிதழ்களை அச்சிடுவதற்கு 64 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை கொடுத்தது, திருமணத்தின்போது வாங்கப்பட்ட 450 சட்டைகள், 450 பேன்ட்கள், 45 சைநோரா ஆடைகள் ஆகியவற்றுக்கான தையல் கட்டணமாக ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 800 ரூபாய் காசோலையில் ஜெயலலிதா கையெழுத்திட்டுக் கொடுத்தது பற்றி வரிசையாக கேள்விகள் கேட்டு நீதிபதி கலங்கடித்தார். ஆனாலும் சுதாகரன் அனைத்துக்கும் கொஞ்சமும் அசராமல், ‘தெரியாது’ என்பதையே பதிலாகச் சொன்னார்.கல்யாண கேள்விகளைத் தொடர்ந்து, மீண்டும் வங்கிப் பணப்​பரிவர்த்தனைகள் தொடர்பான கேள்விகள் தொடர்ந்தன. ‘‘சென்னையில் உள்ள எஸ்.பி.எம். தலைமை அலுவலகத்தில் நீங்கள் கணக்குத் தொடங்கி இரண்டு கோடி ரூபாய் கடன் வாங்கியது மற்றும் கனரா வங்கியின் மைலாப்பூர் கிளையில் கணக்குத் தொடங்கியது உண்மையா?” என்று கேட்டார் நீதிபதி.

‘‘உண்மையாக இருக்கலாம்’’ என்றார் சுதாகரன்.

அதுபோல் வங்கிக் கணக்கு எண் 1068-ல் இருந்து உங்களுடைய 1110 மற்றும் 1113 ஆகிய வங்கிக் கணக்குகளுக்கு பல லட்ச ரூபாய் பரிமாற்றம் நடை​பெற்றது தெரியுமா?’’ என்றார். இந்தக் கேள்விக்கும், ‘‘உண்மையாக இருக்கலாம்’’ என்றே பதில் சொன்னார்.

‘‘சசிகலாவின் வங்கிக் கணக்கில் இருந்து உங்களின் வங்கிக் கணக்குக்கு 1992- முதல் 1996- வரை பலமுறை பணப் பரிவர்த்தனைகள் ந‌டந்திருக்கின்றனவே?’’ என்ற கேள்விக்கும் ‘‘உண்மையாக இருக்கலாம். நிறுவனங்களின் நிர்வாகக் காரணங்களுக்காகப் பெறப்பட்டு இருக்கலாம். இதுதொடர்பான விரிவான விளக்கத்தை எழுத்து மூலமாகத் தருகிறேன்’’ என்றார் சுதாகரன். ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் வங்கிக் கணக்குகளுக்கும் சுதாகரனின் வங்கிக் கணக்குக்கும் இடையே நிகழ்ந்த பணப் பரிவர்த்தனைகள் பற்றி நீதிபதி கேட்ட அனைத்து கேள்விக்கும் ‘தெரியாது’ என பதில் அளித்தார். ‘‘ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் வங்கிக் கணக்குகளில் இருந்து உங்களுடைய வங்கிக் கணக்குக்குத் திரு​மணச் செல​வுக்குக்‌ கோடிக்கணக்கில் பணப்பரி​மாற்றம் நடந்துள்ளதே?’’ என்ற நீதிபதியின் கேள்விக்கு, ‘‘எனது திருமணத்துக்குச் செலவு செய்யப்பட்ட தொகை குறித்து எதுவும் தெரியாது. திருமணச் செலவுகள் அனைத்தும் எனது மனைவியின் வீட்டார் சார்பிலே செய்யப்பட்டது’’ என்றார்.

‘‘உங்கள் திருமணத்துக்கு வந்த வி.ஐ.பிக்களுக்கும் உறவினர்களுக்கும் விலை உயர்ந்த அன்பளிப்புகள் கொடுக்கப்பட்டனவே?’’ என நீதிபதி கிடுக்கிப்பிடி போட்டபோது, ‘‘அதுபற்றி எனக்குத் தெரியாது. அவை அனைத்தும் என்னுடைய அண்ணன் பாஸ்கரன் தனிப்பட்ட முறையில் கொடுத்தார்’’ என்றார். இப்படி 914 கேள்விகளுக்கு வெற்றிகரமாகப் பதில் அளித்து முடித்தார் சுதாகரன். இறுதியாக நீதிபதி, ‘‘இந்த வழக்கு குறித்து ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?’’ என்றார். அதுவரை ஒற்றை வார்த்தைகளில் பதில் அளித்த சுதாகரன், ‘‘இந்த வழக்கு முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்பு உணர்ச்சி காரணமாக, உண்மைக்குப் புறம்பாக‌ ஜோடிக்கப்பட்டது. எங்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்துக்கும் கூடுதலாக மதிப்பிட்டுப் பதிவு செய்து உள்ளனர். இதுகுறித்து எழுத்துப்பூர்வமாக எனது விளக்கத்தை சமர்ப்பிக்கிறேன்’’ எனப் பதில் சொல்லிவிட்டு சென்னைக்குக் காரில் திரும்பினார்.

 இளவரசியின் வாக்குமூலம்

சுதாகரனின் வாக்குமூலங்கள் முடிந்துவிட, மறுநாள் வழக்கின் நான்காவது குற்றவாளியான இளவரசியை கோர்ட்டுக்கு வருமாறு பணித்தார் நீதிபதி பாலகிருஷ்ணா. ‘‘ஒரு நாள் மட்டும் இடைவெளி கொடுங்கள்’’ என அவரது வக்கீல் அசோகன் கேட்க, வழக்கை ஒருநாள் ஒத்திவைத்தார். அன்றைய தினம் காலை தன்னுடைய மருமகன் ராஜராஜனுடன் பெங்களூருவில் தரை இறங்கினார். அவருக்கு பெங்களூரு காந்தி நகர் பகுதியில் உள்ள ஃபார்ச்சூன் ஹோட்டலில் அறை. நீதிபதியின் கேள்விகளுக்குச் சரியாக பதில் சொல்ல வேண்டும் என்பதற்காக நள்ளிரவு வரை ‘ஸ்பெஷல் கோச்சிங்’ எடுத்ததால், திடீர்க் காய்ச்சலும் உடலில் சர்க்கரை அளவும் குறைந்துவிட்டதாம். இதனால் கோர்ட்டுக்குப் போக முடியாத அளவுக்குக் களைப்பு. அதனால் பெங்களூரு வந்தும் கோர்ட்டுக்கு வர முடியாத சூழல். நீதிபதியிடம், 3-நாள்கள் வரை நேரம் கேட்டுப் புதிய மனு போட்டுவிட்டு, அன்று மாலையே சென்னைக்குத் திரும்பினார்.

உடல்நிலை தன்னுடைய சரியானதும், தன் மருமகன் ராஜராஜனுடன் சோகமான முகத்துடனே கோர்ட்டுக்கு வந்தார் இளவரசி. நீதிபதி சரியாக 11 மணிக்கு வழக்கை ஆரம்பித்தார். மொழிபெயர்ப்பாளர் வருவதற்குப் 10 நிமிடங்கள் தாமதம் ஆனதால் நீதிபதியே இளவரசியிடம், ‘‘உங்கள் பெயர் என்ன? அப்பா பெயர் என்ன? வயது என்ன?’’ எனக் கேட்க, ‘‘என் பெயர் இளவரசி, அப்பா பெயர் கிருஷ்ண சுவாமி, வயது 48’’ எனப் பதில் அளித்தார். சற்றுநேரத்தில் மொழிபெயர்ப்பாளர் ஹாரீஸ் வந்ததும் கேள்விக்கணைகள் பாயத் தொடங்கின. சசிகலா, சுதாகரன் ஸ்டைலில் இளவரசியும் ஒரு பெரிய ஃபைலில் பென்சிலால் எழுதிக்கொண்டு வந்து, அதை கைக்குட்டை மற்றும் சின்ன ஹேண்ட்பேக்கால் மறைத்து.... பார்த்துப் பதில் சொன்னார். அவ்வப்போது அவரது வக்கீல் அசோகன் பக்கத்தில் இருந்து சொல்லிக்கொடுத்தார். ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லி முடித்தவுடன், அதற்கான பதிலை டிக் செய்தார்.

ஜெயலலிதா, சசிகலா மற்றும் சுதாகரன் ஆகியோரின் பெயரில் இருக்கும் பல்வேறு வங்கிகளின் கணக்குகள், பணப் பரிவர்த்தனைகள், கடன்கள் தொடர்பாக நீதிபதி கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் ‘தெரியாது’ என்றே இளவரசி பதில் அளித்தார். ஜெயா பப்ளிகேஷன்ஸ், ஜெயா ஃபார்ம் ஹவுஸ், ஜெயா அக்ரோ ஃபார்ம், ஜெயா பில்டிங் அண்ட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், சசி என்டர்பிரைசஸ், சசி பில்டிங் அண்ட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், நமது எம்.ஜி.ஆர்., ஆஞ்சநேயா பிரின்டர்ஸ், ராம்ராஜ் அக்ரோ பிரைவேட் லிமிட்டெட், வினோத் வீடியோ விஷன், ஜெயா ஹவுஸிங் டெவலெப்மென்ட் என இளவரசி பங்குதாரராக இருக்கும் நிறுவனங்களின் கணக்கு வழக்குகள், பணப்பரிவர்த்தனைகள், கட்டடங்கள், பதிவு செய்யப்பட்டவை குறித்த விவரங்கள், பராமரித்த செலவுகள் தொடர்பாக நீதிபதி கேட்ட 363 கேள்விகளையும் ‘தெரியாது’ என்ற ஒற்றை வார்த்தையிலேயே சமாளித்தார். ‘‘1988-ம் ஆண்டு ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்த உங்கள் பெயரை ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் விலாசத்துக்கு மாற்றினீர்களா?’’ என்ற நீதிபதியின் கேள்விக்கு சற்று நேரம் யோசித்த இளவரசி, ‘‘1988 வாக்காளர் பட்டியலில் என் பெயரே இல்லை. இதில் நான் போயஸ் கார்டனுக்கு மாற்றினேன் என்பது முற்றிலும் தவறானது’’ என்றார்.

அடுத்து, ‘‘1994-ம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி நல்லம்ம நாயுடு தலைமையில் போயஸ் கார்டன் முகவரியில் இருக்கும் ஜெயலலிதாவின் வீட்டில் கைப்பற்றிய 106 புடவைகள், நூற்றுக்கணக்கான காலணிகள், நூற்றுக்கணக்கான வாட்ச்கள் குறித்து தெரியுமா?” என நீதிபதி கேட்டதற்கு, ‘‘விசாரணை அதிகாரிகள் கைப்பற்றியதில் என்னுடைய புடவைகளும் பொருட்களும் இருக்கின்றன. அவை எல்லாம் ஜெயலலிதாவின் பொருட்கள் எனச் சொல்வது உண்மை அல்ல. பொருட்களின் மதிப்பையும் பல மடங்கு அதிகமாகக் காட்டி உள்ளனர். என்னுடைய அப்போதைய மாத வருமானம் 48 ஆயிரம் ரூபாய் என வருமான வரித் துறையில் தெரிவித்து வரி கட்டி ரசீது பெற்றுள்ளேன்’’ என்று விளக்கம் அளித்தார்.

‘‘ஜெயலலிதா 62 கோடி ரூபாய் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்தது பற்றி?’’ என நீதிபதி கேட்டதற்கு, ‘‘இதனை நான் முழுமையாக மறுக்கிறேன். என்னுடைய சொத்துகளையும் ஜெயலலிதாவின் சொத்து எனக் கணக்குக் காட்டி உள்ளனர்’’ என மறுத்தார். ஆனாலும் நீதிபதி விடாமல், ‘‘விசாரணை அதிகாரிகள் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் கைப்பற்றிய 23 கிலோ தங்கம், 125 கிராம் வைரம், 1,116 கிலோ வெள்ளியை மதிப்பிட்ட வாசுதேவன் என்ற அதிகாரி, அதன் மதிப்பு 55 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் என சொல்லி இருப்பது பற்றி தெரியுமா?’’ என கிடுக்கிப்பிடி போட்டபோது, சற்று நேரம் யோசித்து, ‘‘தெரியாது’’ என்றார் இளவரசி.

‘‘கடைசிக் கேள்வி... இந்த வழக்கைப்பற்றி இறுதியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’’ என நீதிபதி கேட்க, ‘‘இது முற்றிலும் அரசியல் காழ்ப்பு உணர்ச்சியால் பொய்யாக ‌ஜோடிக்கப்பட்ட வழக்கு. இதைப்பற்றி என்னுடைய விரிவான விளக்கத்தை எழுத்து மூலமாகப் பதிவுசெய்கிறேன்’’ எனச் சொல்லி பெருமூச்சு விட்டார் இளவரசி. நீதிபதியின் நீண்ட நெடிய கேள்விகளுக்கு ‘தெரியாது’ என்ற பதிலையே 95 சதவிகிதம் உபயோகித்ததால், மூன்றே நாட்களில் 651 கேள்விகளுக்கும் பதில் சொல்லி முடித்து விட்டார் இளவரசி.

திக்குத் தெரியாத காட்டில் சொத்துக் குவிப்பு வழக்கு!

16 ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்துவரும் சொத்துக் குவிப்பு வழக்கு, புதிய நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணாவின் வருகையால் ஜெட் வேகத்தில் பறந்தது. பெங்களூரு கோர்ட்டில் நேரில் ஆஜராகிப் பதில் சொல்லாமல் ஆண்டுக் கணக்கில் இழுத்தடித்த சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரையும் உடும்புப்பிடி பிடித்து பதில்களை வாங்கினார். அடுத்து சாட்சிகளின் விசாரணை, அதற்கடுத்து தீர்ப்பு என முடிவை நோக்கிப் பயணித்த வ‌ழக்கில் திடீர் ஷாக்.

சென்னை, டெல்லி, பெங்களூரு என்று மாறி மாறி அதே இடத்தில் வட்டமடித்த‌ சொத்துக் குவிப்பு வழக்கை இறுதிக் கட்டத்துக்கு நகர்த்தியதில் சிறப்பு அரசு தரப்பு மூத்த வக்கீல் ஆச்சார்யாவின் பங்கு முக்கியமானது. 14 ஆண்டுகளாக கோர்ட்டுக்கு வராமல் இழுத்தடித்த ஜெயலலிதாவை, ‘மைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு வர முடியும். கோர்ட்டுக்கு வர முடியாதா?’ எனச் சீறி, பெங்களூரு கோர்ட்டுக்கு வரவழைத்தவர். 75 வயதான ஆச்சார்யா மீது தனிப்பட்ட முறையில் கர்நாடக ஹைகோர்ட்டில் வழக்குப் போடுவது, துண்டறிக்கை வெளியிடுவது, ஆளுநருக்கு மொட்டைக் கடுதாசி போடுவது, கோர்ட் வட்டாரத்தில் போஸ்டர் ஒட்டுவது என எதிர்ப்புகள் எகிறின.

‘கர்நாடக அரசின் அட்வகேட் ஜெனரலாக இருக்கும் ஆச்சார்யா, இந்த வழக்கின் அரசு வக்கீலாக ஆஜராகக் கூடாது. ஒரே நேரத்தில் இரண்டு பதவிகளை வகிக்கக் கூடாது’ என்று நெருக்கடி கிளம்பியது. உடனே, கர்நாடக அரசின் அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சிறப்பு நீதிமன்ற வக்கீல் பதவியைத் தக்கவைத்துக் கொண்டார் ஆச்சார்யா. சொத்துக் குவிப்பு வழக்கில் அசைக்க முடியாத தூணாக இருந்த ஆச்சார்யாவுக்குத் தனிப்பட்ட முறையிலும், தொழில் ரீதியாகவும் சிலர் பல்வேறு பிரச்னைகளைக் கொடுத்தனர். வழக்கையும் அடுத்த கட்டத்துக்கு நகரவிடாமல் மனு மேல் மனு போட்டு இழுத்தடித்தனர். மனம் நொந்துபோன ஆச்சார்யா, ‘எனக்கு வயதாகி விட்டது. இனி, இவர்களின் இழுத்தடிப்பை என்னால் ஏற்க முடியாது’ என்று கடந்த ஆகஸ்ட் மாதம் திடீரென ராஜினாமா செய்தார். சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி மல்லிகார்ஜுனைய்யாவும் அதே மாதத்தில் ஓய்வு பெற்றார். பிறகு, இடைக்கால நீதிபதி சோம ராஜு, அவருக்குப் பிறகு வந்த புதிய நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணாவின் அதிரடியால் வழக்கு இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்தது.

குற்றம்சாட்டப்பட்ட நால்வரிடம் போராடி, பதில்களைப் பெற்று விட்டதால் அடுத்து சாட்சிகளின் விசாரணையை எதிர்பார்த்து நீதிமன்றம் கூடிய வேளையில், அரசுத் தரப்பு ஜூனியர் வழக்கறிஞர் சந்தேஷ் சவுட்டா, ‘‘எங்களுடைய சீனியர் வக்கீல் ஆச்சார்யா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கில் இருந்து ராஜினாமா செய்தார். அவருடைய ராஜினாமாவை அரசு ஏற்று, அதற்கான அரசாணையை வெளியிட்டு இருக்கிறது. அதனால், இந்த வழக்கில் தொடர்ந்து எங்களால் ஆஜராகி வாதாட முடியாது’ என்று சொன்னார்கள். நீதிமன்றத்தில் இருந்த அத்தனை பேருக்குமே பயங்கர ஷாக்.

நீதிபதி பாலகிருஷ்ணா, ‘புதிய அரசுத் தரப்பு வக்கீலாக யாரை நியமிப்பார்கள்?’ எனக் கேட்டார். அதற்கு சந்தேஷ் சவுட்டா, ‘எனக்கு அதுபற்றி தெரியாது’ என்றார். சற்றுநேரம் யோசித்த நீதிபதி, ‘இதையே காரணம் காட்டி வழக்கைத் தள்ளிப்போட வேண்டாம். உங்கள் தரப்பில் இன்றைக்கு சாட்சியங்களின் பட்டியலைச் சமர்ப்பிக்கச் சொன்னேன் அல்லவா? லிஸ்ட்டைக் கொடுங்கள். யாரை விசாரிக்கலாம் என நான் முடிவு எடுக்கிறேன்’ என்று ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்களிடம் கேட்டார். அவர்களோ, ‘இன்னும் முழுமையான லிஸ்ட்டைத் தயாரிக்கவில்லை. அதற்கு எங்களுக்குக் கால அவகாசம் தேவைப்படுகிறது. சாட்சியங்களின் விசாரணையின்போது அரசுத் தரப்பு வக்கீல் இருப்பது அவசியம்’ எனச் சொல்லி, ஐந்து பேர் பட்டியலைக் கொடுத்தனர். வழக்கை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.

சந்தேஷ் சவுட்டாவிடம் பேசியபோது, ‘‘எல்லாம் முடிந்து விட்டது. இனி பேச என்ன இருக்கிறது?’’ என்று சொல்லி இணைப்பைத் துண்டித்தார். ஆச்சார்யாவின் செல்போனும் சுவிட்ச்டு ஆஃப். இப்படிப்பட்ட இக்கட்டான நிலையில் கர்நாடகா உயர் நீதிமன்றம் புதிய அரசு வழக்கறிஞராக பவானிசிங்கை நியமித்தது.

யானை ஊர்வலம்... அலங்கார வளைவு... தோட்டாதரணி டிசைன்!

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது.

குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய நால்வரின் வாக்குமூலங்களையும் பதிவுசெய்து முடித்திருக்கிறது நீதிமன்றம். கடந்த மாதம் 28-ம் தேதி, கோர்ட் ஆரம்பித்ததும் ஜெ.தரப்பு வழக்கறிஞர் பி.குமார், முதல் கட்டமாக‌ 54 பேர் அடங்கிய சாட்சிகளின் பெயர்ப் பட்டியலை நீதிபதியிடம் சமர்ப்பித்தார். அதைத் தொடர்ந்து நீதிபதி சாட்சியங்களின் விசாரணையை ஆரம்பிக்கச் சொல்ல... நமது எம்.ஜி.ஆர். பத்திரிகைக்கு ஆயுள் சந்தா செலுத்திய 12 பேர் தனித்தனியாகக் குற்றவாளிக் கூண்டுக்கு அழைக்கப்பட்டனர். ‘உங்களுடைய பெயர் என்ன? முகவரி என்ன? ஆண்டு வருமானம் எவ்வளவு? கட்சியில் என்ன பொறுப்பில் இருக்கிறீர்கள்?’ என கேள்விகளைக் கேட்டு பதில் வாங்குகின்றனர். சாட்சிகள் தமிழில் சொல்லும் பதில்களை மொழிபெயர்ப்பாளர் ஹாரீஸ் கன்னடத்திலும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்க, அரசு வக்கீல் பவானி சிங் மற்றும் நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணா அவற்றைப் பதிவுசெய்தனர். முதல் நாள் வாக்குமூலம் அளித்த 12 சாட்சிகளில் 6 பேரை மறுநாள் மார்ச் 1-ம் தேதி அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் குறுக்கு விசாரணையை கன்னடத்தில் நடத்தினார். சசிகலாவின் வழக்கறிஞர் மணிசங்கர், ‘‘அவர்களுக்கு கன்​னடம் தெரியாது’’ என்று சொல்ல, ‘‘அதற்குத்தான் மொழி​பெயர்ப்பாளர் இருக்​கிறாரே...’’ என்று, கன்னடத்திலேயே தொடர்ந்தார். ‘‘சாட்சிகளின் வருமானத்தையும், வருமான வரி செலுத்தியதையும், அவர்கள் அளித்த வாக்குமூலங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது எல்லாம் பொய் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இவ்வளவு குறைவான வருமானம் உள்ளவர்கள் லட்சக்கணக்கில் ஆயுள் சந்தா செலுத்துவதும், ஜெயலலிதாவுக்கு விலை உயர்ந்த பிறந்த நாள் பரிசுகள் அளிப்பதும் நம்பும் வகையில் இல்லை. கட்சியினரிடம் நன்கொடை வசூலித்ததாகச் சொல்வதற்கு ஆதாரமாக எந்த ரசீதுகளும் இல்லை. வழக்கில் சம்பந்தப்பட்டவர்களைக் காப்பாற்றப் பொய் சாட்சியம் அளிக்கிறார்கள்’’ என, தன்னுடைய வாதத்தைப் பதிவுசெய்தார். அதற்கு ஆட்சேபம் தெரிவித்த ஜெ. தரப்பு வழக்கறிஞர், ‘‘நாங்கள் உண்மையை மட்டுமே சொல்கிறோம்’’ என அழுத்திச் சொன்னார்.

சென்னை பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர் சாட்சியம் அளித்தார். ‘‘1995-ம் ஆண்டு மயிலாப்பூர் தொகுதி அம்மா பேரவையின் செயலாளராக இருந்தேன். சுதாகரன் திருமண‌த்துக்கு வருகை தரும் அம்மாவை வரவேற்க, தொண்டர்களிடம் ரூ 50 ஆயிரம் வசூலித்தேன். சென்னை லைட் ஹவுஸ் முதல் எம்.ஆர்.சி. நகர் வரை அலங்கார வரவேற்பு வளைவு வைத்தேன்’’ என்றார்.

பெரம்பூரைச் சேர்ந்த ராமலிங்கம் தனது சாட்சியத்தில், ‘‘அ.தி.மு.கவின் பெரம்பூர் பகுதிச் செயலாளராக நான் இருந்தபோது, எம்.ஆர்.சி. நகர் முதல் அண்ணா சாலை வரை வாழை மரம், கொடிமரம், பேனர் வைக்க ஒன்றரை லட்சம் கொடுத்தேன். இது தொடர்பான ஆவணங்கள் எனது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்துவிட்டது’’ என்றார்.

அடுத்ததாக, தென் சென்னையைச் சேர்ந்த சி.எம்.சாமி அழைக்கப்பட்டார். ‘‘நான் தென் சென்னை மாவட்ட இணைச் செயலாளராக இருந்தபோது, சுதாகரனின் திருமணம் நடந்தது. இதற்காக கேரளாவில் இருந்து பாரம்பரிய இசைக் குழுவை அழைத்து வந்தேன். யானை ஊர்வலம் நடத்தினேன். இதற்காக 70 ஆயிரம் செலவு செய்தேன். திருமண ஏற்பாடுகள் சிறப்பாக இருந்ததாகச் சொல்லி, சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் எனது பணத்தைத் திருப்பிக் கொடுத்தார். நானும் பணத்தை வசூலித்த தொண்டர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டேன்’’ என்றார். மார்ச் 6-ம் தேதி வரை வழக்கில் 21 சாட்சிகளிடம் வாக்குமூலம் வாங்கினர்.

ஒத்திவைக்கப்பட்ட விசாரணை, மார்ச் 8-ம் தேதி தொடங்கியது. அன்று சாட்சி சொல்வதற்காக, சினிமா கலை இயக்குநர் தோட்டாதரணி வந்திருந்தார். ‘‘சுதாகரன் திருமணத்துக்காக, அ.தி.மு.க-வைச் சேர்ந்த காஞ்சி பன்னீர்செல்வம் என்பவர் என்னைச் சந்தித்து, மேடை அலங்காரம் செய்து தருமாறு கேட்டார். சின்ன வயது முதலே சிவாஜி குடும்பத்துடன் எனக்கு நெருக்கமான உறவு இருந்ததால், ஒப்புக்கொண்டேன். எனக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் செட் அமைக்க முடியவில்லை. தெரிந்தவர்கள், பழகியவர்கள் வீட்டுக்கு இலவசமாக டிசைன் வரைந்து தருவது என்னுடைய வழக்கம். சுதாகரன் திருமணத்துக்கும் அப்படித்தான் டிசைன் மட்டும் வரைந்து கொடுத்தேன். அதற்காக எந்தக் கட்டணமும் வாங்கவில்லை. மற்றபடி எனக்கு எதுவும் தெரியாது’’ என்று சாட்சியம் சொன்னார்.

70 யானைகள்... 60 லட்சம் ரூபாய் அலங்காரம்!

பெங்களூரு நீதிமன்றத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெ. தரப்பு சாட்சிகள் அளிக்கும் ஒவ்வொரு வாக்குமூலமும் வழக்கின் போக்கையே மாற்றும் வல்லமை பொருந்தியவை என்பதால், மேலிடத்து உத்தரவுப்படி படுபவ்யமாக கோர்ட்டுக்கு வந்தனர். வளைந்து, நெளிந்து, குனிந்து வாக்குமூலம் அளிப்பதைப் பார்த்து கோர்ட்டே ஆச்சர்யப்பட்டது. அவர்கள் அளித்த ‘சத்திய’ வாக்குமூலங்களைப் பார்ப்போம்.

 என் தோட்டத்துக் காய்கறிகள்

காலை 11 மணிக்கு விசாரணை தொடங்கியது. ‘ஜெயலலிதா தரப்பு சாட்சியங்களைத் தொடரலாம்’ என, நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணா பணித்தார். ஜெ. தரப்பு வக்கீல் பி.குமாரும் சசிகலாவின் வக்கீல் மணிசங்கரும் இணைந்து சாட்சிகளிடம் விசாரணையை ஆரம்பித்தனர். தஞ்சாவூரைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. தங்கமுத்து. ‘‘சுதாகரன் திருமணத்துக்குத் தேவையான வாழை இலைகளையும் மதிய உணவையும் ஏற்பாடு செய்தேன். உணவு தயாரிப்பதற்காக‌ப் பயன்படுத்தப்பட்ட காய்கறிகள் அனைத்தும் என்னுடைய தோட்டத்தில் விளைந்தவை. அது மட்டுமல்லாமல் தஞ்சாவூரில் இருந்து இரண்டு சமையல்காரர்களையும் அழைத்து வந்தேன். அவர்களுக்கு சம்பளமாக தலா 17 ஆயிரம் ரூபாய் கொடுத்தேன். காலை உணவை பெண் வீட்டாரே ஏற்பாடு செய்திருந்ததால், அதில் என்னுடைய பங்களிப்பு எதுவும் இல்லை’’ என, சரியாக வாக்குமூலம் அளித்த பூரிப்பில் ஜெ. தரப்பு வக்கீல்களைப் பார்த்துச் சிரித்துவிட்டு வெளியேறினார்.

 வளர்ப்பு மகன் திருமணம்... 60 லட்ச ரூபாய் அலங்காரம்

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பியான பன்னீர் செல்வம், ‘‘1995-ம் ஆண்டு நடந்த சுதாகரனின் திருமணத்துக்குப் பந்தல் போடலாம் எனத் திட்டமிட்டு, சிவாஜியின் மகன் ராம்குமாரை அணுகினேன். அவர், ‘கல்யாணப் பந்தல் போடுவது பெண் வீட்டாரின் வேலை’ எனச் சொல்லிவிட்டதால், நான், பாண்டுரங்கன், கே.பி.ராஜு, கே.பி.முனுசாமி, எடப்பாடி பழனிசாமி, தணிகை பாபு, தங்கவேலு, பன்னீர்செல்வம், காந்தராஜன், ரத்னவேலு, முத்துமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகிய 12 பேரும் கலந்து பேசி கல்யாண மண்டபத்தின் முகப்பு அலங்காரத்தை ஏற்பாடு செய்வது என முடிவெடுத்தோம். அதற்காக, பிரபல சினிமா கலை இயக்குநர் தோட்டா தரணியிடம் முகப்பு அலங்காரம் அமைத்துத் தருமாறு கேட்டோம். நிறைய வேலைகள் இருப்பதால் அவருடைய உதவியாளர் ரமேஷ்குமாரைச் சந்தித்து முடித்துக் கொள்ளுமாறு சொன்னார். அவர், ‘முகப்பு அலங்காரத்துக்கு 60 லட்சம் செலவாகும்’ என்றார். அதற்கு என்னுடைய பங்காக ஐந்து லட்ச ரூபாயை செங்கல்பட்டு கட்சி நிர்வாகிகளிடம் வசூலித்துக் கொடுத்தேன்’’ என வியர்க்க விறுவிறுக்க சொல்லி முடித்தார்.

 தமிழ்நாட்டுக்கு விரோதமான கட்சி தி.மு.க.

முன்னாள் எம்.பியான முத்துமணி கொஞ்சம் விரிவாகவே விளக்கம் அளித்தார். ‘‘வி.என்.சுதாகரனின் திருமண விழாவுக்கு முகப்பு அலங்காரம் அமைக்க என்னுடைய பங்காக‌ ஐந்து லட்ச ரூபாயைக் கொடுத்தேன். இந்தப் பணம் நன்கொடையாக வசூலிக்கப்பட்டது. திருமணம் முடிந்த பிறகு, ‘முகப்பு அலங்காரம் செய்வதற்கு 57.50 லட்சம் மட்டுமே செலவானது’ என்றனர். ‘மீதி இருக்கும் 2.50 லட்சத்தைக் கட்சிப் பணிக்குப் பயன்படுத்திக் கொள்ளுமாறு சொல்லிவிட்டேன். 2011-ம் ஆண்டு தணிகை பாபு இற‌ந்துவிட்டார். காந்திராஜன் தி.மு.கவில் இணைந்துவிட்டார்’’ என இதர தகவல்களைச் சொல்ல முற்பட்டபோது, நீதிபதி தடுத்தார். ‘‘இல்லை.. இல்லை... யுவர் ஹானர்... நானும் அட்வகேட்தான். இது வழக்குக்கு மிக முக்கியமானது. அம்மாவுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கும் விரோதமான கட்சி தி.மு.க.’’ என சம்பந்தம் இல்லாமல் எதையோ சொல்ல, நீதிபதி உட்பட கோர்ட்டில் இருந்த அனைவரும் உரக்கச் சிரித்தனர்.

 நம‌து எம்.ஜி.ஆரின் தீவிர வாசகர்கள்

அடுத்த விசாரணையில் ‘நமது எம்.ஜி.ஆர்.’ நாளிதழுக்கு சந்தாவாக டெபாசிட் செலுத்தியது குறித்தவையே. ‘நமது எம்.ஜி.ஆர்.’ நாளிதழ் வழக்கின் 2-வது குற்றவாளியான சசிகலா சம்பந்தப்பட்டது என்பதால், சசிகலாவின் வக்கீல் மணிசங்கரும் இளவரசியின் வக்கீல் அசோகனும் சாட்சிகளிடம் விசாரணை செய்தனர்.

ஆலந்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அண்ணாமலை அளித்த வாக்குமூலத்தில், ‘‘சுதாகரன் திருமணத்துக்காக கேரளாவில் இருந்து 70 யானைகளை வரவழைத்து ஊர்வலமும் செண்டை மேளமும் ஏற்பாடு செய்தேன். இதற்கு இரண்டு லட்சம் செலவானது. இது தொண்டர்களிடம் வசூலித்த நன்கொடை’’ என்றார்.

தி.மு.க. திடீர் என்ட்ரி... திகிலில் ஜெ. தரப்பு!

அதிரடி திருப்பங்களுடனும் அந்தர் பல்டிகளுடனும் நீண்ட நெடிய பயணத்தை மேற்கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு, இறுதிக் கட்டத்தை எட்டி இருப்பதால் இந்திய அரசியல் வட்டாரமே பரபரக்கிறது. இந்த வழக்கில் திடீரென பெரிய திட்டத்துடன் தி.மு.க. குதித்திருப்பதால், பெங்களூரு ஸ்பெஷல் கோர்ட்டில் தீப்பொறி! கடந்த 5-ம் தேதி நீதிபதி எம்.எஸ்.பால​கிருஷ்ணா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான‌ ஜெயலலிதாவின் வக்கீல் பி.குமார், ‘‘இந்த வழக்கில் முதல் குற்றவாளியாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஜெயலலிதாவின் வீட்டில் வருமானவரித் துறையினரும் பொதுப்பணித் துறை அதிகாரிகளும் சோதனையிட்டு, பல்வேறு அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர். அவர்கள் தன்னிச்​சையாக செயல்படாமல் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரின் தலையீட்​டுடனே கட்டடங்களின் மதிப்புகளை வரையறுத்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் உரிய ஆதாரங்களுடன் மதிப்பீடு செய்யவில்லை என குறுக்கு விசாரணையில் தெரியவருகிறது. ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் என சொல்லப்படும் சுதாகரனின் திருமணம் குறித்து தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த தகவல்கள் அனைத்துமே உண்மைக்குப் புறம்பானவை. தமிழ்க் கலாசாரப்படி திருமணச் செலவை மணப்பெண்ணின் குடும்பத்தாரே ஏற்றுக்கொள்வது வழக்கம். அதே நடைமுறைதான் சுதாகரனின் திருமணத்தில் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த திருமணத்தில் ஜெயலலிதா பணம் செலவழிக்கவே இல்லை. ஒரு சில கட்சிக்காரர்கள் மட்டும் தங்களின் விருப்பப்படி அன்பளிப்பாக செலவு செய்​தார்கள். இதெப்படி ஜெயலலிதாவின் சொத்தாக இருக்கும்?’’ என கேள்விகளுடனே தனது வாதத்தை நிறைவு செய்தார்.

மறுநாள் காலை 11 மணிக்கு கோர்ட் ஆரம்பமாகும்போதே அமர்க்களம். வழக்கம்போல ஜெயலலலிதா தரப்பும் வழக்கை நடத்தும் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரும் கைகுலுக்கி பாசமழை பொழியும்போதே திடீர் என்ட்ரி கொடுத்தனர் தி.மு.க. தலைகள். கடலூர் எம்.பி. ஆதிசங்கர் மூன்று தி.மு.க. வக்கீல்களுடன் வந்ததை சற்றும் எதிர்பாராத ஜெயலலலிதா தரப்பு வக்கீல்களுக்கு செம ஷாக். அக்கம் பக்கத்தில் ஏதோ கிசுகிசுத்து விட்டு, வெளியே எழுந்துபோய் மேலி​டத்துக்குத் தகவலை சொன்​னார்கள். வழக்கு நேர முடிவில் திடீரென பேச எழுந்த அரசு வக்கீல் பவானி சிங், ‘‘ஜெயலலிதாவின் வக்கீல் மிகவும் மெதுவாக வாதிடுகிறார். வழக்கை தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலே நாள் முழுவதும் வாதிடாமல், அரை நாள் மட்டுமே வாதிடுகிறார். எதிர் தரப்பினர் ஆகஸ்ட் 14-ம் தேதிக்குள் முடித்தால், ஆகஸ்ட் 16-ம் தேதியில் இருந்து எனது வாதத்தைத் தொடங்குவேன்’’ என சற்று கோபத்துடனே சொன்னார்.

இதைத் தொடர்ந்து வழக்கை நீதிபதி புதன் கிழமைக்கு ஒத்திவைத்தார். அன்றைக்கு தி.மு.க. தரப்பில் இருந்து தர்மபுரி எம்.பியான தாமரைச்செல்வன், அதே மூன்று தி.மு.க. வக்கீல்களுடன் கோர்ட்டுக்கு வந்திருந்தார். தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் சார்பாக மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘‘கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து ஆகஸ்ட் 5-ம் தேதி வரை ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் என்னென்ன நடந்தது, எத்தனை புதிய மனுக்கள் போட்டார்கள், மனுக்கள் மீதான தீர்ப்புகள், பல்வேறு நீதிபதிகளின் உத்தரவுகள், எதிர்த்தரப்பு வாங்கிய வாய்தாக்கள், சாட்சிகளின் விளக்கங்கள், குற்றம்சாட்டப்பட்டவர்களின் விளக்கங்கள் என அனைத்து தகவல்களையும் வழங்க வேண்டும்’’ என கோரப்பட்டிருந்தது. அந்த மனுவை உடனடியாக ஏற்றுக்கொண்ட நீதிபதி பாலகிருஷ்ணா, வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வழங்குமாறு உத்தரவிட்டார். அதற்காக தர்மபுரி எம்.பி. தாமரைச்செல்வன் 11 ஆயிரம் ரூபாயைக் கட்டணமாகச் செலுத்தினார். தி.மு.கவின் திடீர் விசிட் குறித்து விசாரித்தோம். ‘‘ஜெயலலிதா இந்த வழக்கை இவ்வளவு காலம் இழுத்ததற்கு காரணமே, தண்டனை உறுதி என்பதால்தான். இப்போது வழக்கில் என்னென்னமோ புதிய புதிய தகிடுதத்தங்களைச் செய்வதாக எங்களுக்குத் தகவல் வந்தது. அதனால்தான் நாங்கள் களத்தில் குதித்திருக்கிறோம். பல மாஸ்டர் பிளான்கள் இருக்கின்றன. போகப் போகப் பார்ப்பீர்கள்’’ என்றனர் உற்சாகமாக.

பவானி சிங் சொல்லும் 306 பூகம்பம்!

2014, மே மாதம் 9-ம் தேதி அரசு வழக்கறிஞர் பவானி சிங்கும், அவரது ஜூனியர் மராடியும் நீதிபதி முன்பு ஜெயலலிதாவின் 306 சொத்துகளின் பட்டியலை மாறி மாறி வாசித்து முடித்தபோது, அத்தனை பரபரப்பு. அரசு வழக்கறிஞர் பவானி சிங், ‘‘1991 முதல் 1996 வரை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, முறைகேடாக யார் யாரிடம் எப்படியெல்லாம் சொத்துகளை வாங்கிக் குவித்திருக்கிறார் என்பதை இங்கு 2,500 பக்க சாட்சியங்கள் அடங்கிய ஆவணத்தோடு தெரிவிக்கிறேன். இந்த வழக்கு தொடங்குவதற்கு முன்பு குற்றவாளிகள் தரப்பில் 17 சொத்துகள் மட்டுமே இருந்தன. இந்த வழக்கு நடைபெற்ற காலகட்டத்தில் 306 சொத்துகள் அதிகரித்துள்ளன. அதில் 286 சொத்துகள் பல வழிகளில் வருமானத்துக்கு அதிகமாகச் சேர்க்கப்பட்டவை. இந்த வழக்கு காலத்துக்கு முன்பு இவர் களின் பொருளாதார நிலையும், வழக்கு நடைபெற்ற காலத்தில் இவர்களின் பொருளாதார நிலையும் சம்பந்தம் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது’’ என்று கூறி ஜெயலலிதா தரப்பின் சொத்துப் பட்டியலை காலை 10.30-க்கு வாசிக்கத் தொடங்கினார். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு வாசிக்கத் தொடங்கியவர்கள், மாலை 4.15 மணிக்கு முடித்தனர். மேலும் சில ஆவணங்களை 15-ம் தேதி அறிவிப்பதாகச் சொல்லி முடித்தார் பவானி சிங். அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வாசித்த ஜெயலலிதாவின் 306 சொத்துப் பட்டியல் இதுதான்....

‘‘இந்த வழக்கின் குற்றவாளிகளாகக் கருதப்படும் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் பெயர்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இவர்கள் பங்குதாரர்களாக இருந்து தொடங்கிய ஜெயா பப்ளிகேஷன், சசி என்டர்பிரைசஸ், மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ஜே.எஸ். ப்ராப்பர்ட்டீஸ், லெக்ஸ் ப்ராப்பர்ட்டீஸ், ஜெ ஃபார்ம் ஹவுஸ், ஜெயா கன்ஸ்ட்ரக்க்ஷன், ரிவர்வே அக்ரோ பிரைவேட் லிமிடெட், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ், கிரீன் கார்டன், ஆஞ்சநேயா பிரின்டர்ஸ், சூப்பர் டூப்பர் பிரைவேட் லிமிடெட் என 32 கம்பெனிகள் பெயரிலும் சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன. போயஸ் கார்டன் நிலம் மற்றும் கட்டடம் 10 கிரவுண்ட் 330 சதுர அடி விலை ரூ.1,32,009, ஹைதராபாத் சிட்டியில் பிளாட் நம்பர் 36-ல் விரிவாக்கப்பட்ட 651.18 சதுர அடிக் கட்டடம் ரூ.50,000, ஹைதராபாத் பஷீராபாத் என்ற கிராமத்தில் திராட்சைத் தோட்டம் மற்றும் இரண்டு பண்ணை வீடுகள், வேலையாட்களுக்கான குவாட்டர்ஸ் உள்ளிட்ட 11.35 ஏக்கர் நிலம் ரூ.1,65,058, மேலும் அதே பகுதியில் 93/3 சர்வே எண்ணில் 3.15 ஏக்கர் ரூ.13,254 ஆகியவை சந்தியா மற்றும் ஜெயலலிதா பெயரில் வாங்கப்பட்டுள்ளன. ஜெயலலிதா பெயரில் வட சென்னையில் சேயார் கிராமத்தில் விவசாய நிலம் வேதாசல முதலியார் மகன் நடேச முதலியாரிடம் 3.43 ஏக்கர் நிலம் ரூ.17,060, ஜெயலலிதா சசிகலா பெயரில் சென்னை-28, சீனிவாச அவின்யூ நிலம் மற்றும் வீடு 1,897 சதுர அடி வெங்கடசுப்பனிடம் இருந்து ரூ.5,70,039 வாங்கியது. சசிகலா பெயரில் சாந்தோம் ஆர்.ஆர். ஃப்ளாட் ரூ.3,13,530, சசி என்டர்பிரைசஸ் பெயரில் சென்னை- 4, அப்பாஸ் அலிகான் ரோட்டில் ரூ.98.904-க்கு ஷாப்பிங் மால், நுங்கம்பாக்கம் காதர் நவாஸ் கான் ரோட்டில் 11 கிரவுண்ட் 736 சதுர அடி நிலம் ரூ.22,10,919, மவுண்ட் ரோடு, மயிலாப்பூரில் ஜெயலலிதா பெயரில் வாங்கிய நிலம் மற்றும் கடை ரூ.1,05409. தஞ்சாவூர் மானம்புசாவடியில் 2,400 சதுர அடியில் நிலம் மற்றும் வீடு ரூ.1,57,125, அதே பகுதியில் 51,000 சதுர அடி காலி நிலம் ரூ.1,15,315, மீண்டும் அதே பகுதியில் காலி நிலம் ரூ.2,02,778 ஆகியவை சசி என்டர்பிரைசஸ் வாங்கியது. சசிகலா பெயரில் திருச்சி அபிராமிபுரத்தில் நிலம் மற்றும் வீடு 3,525 சதுர அடி ரூ.5,85,420, ஜெயா பப்ளிகேஷன் பெயரில் கிண்டி தொழிற்பேட்டை நிலம் மற்றும் ஷெட் ரூ.5,28,039, புதுக்கோட்டை 1 கிரவுண்ட் 1,407 சதுர அடி நிலம் மற்றும் கட்டடம் ரூ.10,20,371, டான்சி நிலம் 55 கிரவுண்ட் ரூ.2,13,68,152, சசிகலா, இளவரசி, சுதாகரன் பெயரில் 900 ஏக்கரில் கொடநாடு டீ எஸ்டேட் மற்றும் ஃபேக்டரி ரூ.7,60,00,000, வெலகாபுரம் கிராமத்தில் மெடோ ஆக்ரோ ஃபார்ம்ஸுக்கு 210.33 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 1,200 ஏக்கர், சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், முட்டுக்காடு, வெட்டுவாங்கேணி, பையனூர், சிறுதாவூர், சோழிங்கநல்லூர் செய்யூர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, மன்னார்குடி என தமிழகத்தின் பல மாவட்டங்களில் காலி நிலம், கட்டடம், கடைகள் மற்றும் விளைநிலங்களும் வாங்கப்பட்டுள்ளன. சென்னையில் கிண்டி, டி.டி.கே ரோடு, மவுண்ட் ரோடு, லஸ் பகுதிகளில் இடங்கள், கட்டடங்கள் வாங்கப்பட்டுள்ளன. பையனூர் பங்களா ரூ.1,25,90,261, ஹைதராபாத் திராட்சைத் தோட்டப் பண்ணை வீடு ரூ.6,40,33,901, போயஸ் கார்டன் வீடு விரிவாக்கம் ரூ.7,24,98,000, சிறுதாவூர் பங்களா ரூ.5,40,52,298 உட்பட பல இடங்களில் உள்ள பண்ணை வீடுகள், புதிய கட்டடங்களின் மராமத்துப் பணிகளின் செலவுகள் பட்டியலிடப்பட்டன. இளவரசி அக்கவுன்டில் அபிராமிபுரம் இந்தியன் வங்கியில் ரூ.2,42,211, ஜெயலலிதா அக்கவுன்டில் மயிலாப்பூர் கனரா வங்கியில் ரூ.19,29,561, மயிலாப்பூர் ஸ்டேட் பேங்க்கில் ரூ.1,70,570 சசிகலா பெயரில் கிண்டி கனரா வங்கியில் ரூ.3,17,242, சுதாகரன் அக்கவுன்டில் அபிராமிபுரம் இந்தியன் வங்கியில் ரூ.5,46,577 என, பல பெயர்களில் பல வங்கிகளில் இருப்பு வைத்திருக்கிறார்கள்.

ஜெயலலிதா பெயரில் வாங்கப்பட்ட கார்கள் டாடா சியரா ரூ.4,01,131, மாருதி 800 ரூ.60,435, மாருதி ஜிப்ஸி, ட்ராக்ஸ் ஜீப், ஜெயா பப்ளிகேஷன் டாடா எஸ்டேட் கார், டாடா மொபைல் வேன் என பல மாடல்களில் 30-க்கும் மேற்பட்ட கார்கள் வாங்கியிருக்கிறார்கள்.

போயஸ் கார்டனில் கைப்பற்றப்பட்ட 389 ஜோடி செருப்புகள் ரூ.2,00,902, 914 பட்டுப் புடவைகள் ரூ.61,13,700, மற்ற புடவைகள் ரூ.27,08,720 மற்றும் பழைய புடவைகள் ரூ.4,21,870, 28 கிலோ தங்க நகைகள், மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட வைரக்கற்கள் என 306 சொத்துகளின் அப்போதைய மதிப்பு ரூ.66,44,73,573 ஆகும்’’ என்று விடாமல் வாசித்து முடித்தார்.

நீதிமன்றம் முடிந்து வெளியே வந்த பெங்களூரு தி.மு.க வழக்கறிஞர் நடேசன், ‘‘ஜெயலலிதா வாங்கியிருக்கும் இந்த 306 சொத்துகளின் இப்போதைய மதிப்பு பல நூறு கோடியைத் தாண்டும். அரசுத் தரப்பு இறுதி வாதம் 15-ம் தேதியோடு நிறைவு பெறும். அதன் பிறகு ஜெயலலிதா தரப்பு இறுதி வாதம் தொடங்கும். அது முடிந்ததும் இன்னும் ஓரிரு மாதங்களில் தீர்ப்பு கிடைக்கும். தீர்ப்புக்குப் பிறகு ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகும்’’ என்றார்.

அ.தி.மு.க வழக்கறிஞரும் சேலம் மாவட்ட கவுன்சிலருமான வக்கீல் மணிகண்டன், ‘‘இந்தச் சொத்துகள் அனைத்தும் 20 வருடங்களுக்கு முன் வாங்கப்பட்டவை. அதில் பலர் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். அன்றைய காலகட்டத்தில் நிலத்தின் மதிப்பு குறைவு. ஆனால், இன்று நிலத்தின் வேல்யூ அதிகரித்துள்ளது. நான் 20 வருடங்களுக்கு முன்பு ஒரு வீட்டை மூன்று லட்சத்துக்குக் கட்டினேன் என்றால், அதன் மதிப்பு இப்போது 30 லட்சமாக அதிகரித்து இருக்கும். நான் 30 லட்சத்துக்கு வீடு கட்டினேன் என்று சொல்லுவது எவ்வளவு அபத்தமோ, அதைப் போன்றதுதான் இந்த வழக்கும். இதைச் சொத்துக் குவிப்பு என்று சொல்வதே அடிப்படையற்ற வாதம். கருணாநிதியைப் போல வெறும் கையை வீசிக்கொண்டு அம்மா அரசியலுக்கு வரவில்லை. அவர் மிகவும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்த வழக்கில் இருந்து அம்மா கூடிய சீக்கிரத்தில் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டு வெளியே வருவார்’’ என்றார்.

306-ஐ அடுத்து 248....

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இறுதி கட்டத்தை நெருங்கி மே 15-ம் தேதியோடு அரசு தரப்பு இறுதி வாதம் முடிந்துவிடும் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் லெக்ஸ் ப்ராப்பர்ட்டீஸ், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ், சிக்னோரா உட்பட 7 நிறுவனங்கள்... ‘‘எங்களுடைய ஆவணங்களைத் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும். எங்களையும் இந்த வழக்கில் இணைத்துக்கொண்டு மீண்டும் மூல வழக்கை விசாரிக்க வேண்டும். அதுவரை மூல வழக்கின் விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும்’’ என கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணைக்காக அரசு வழக்கறிஞர் பவானி சிங் கர்நாடக உயர் நீதிமன்றம் சென்றுவிட்டதால் ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு நடக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா மாலை 4 மணி வரை காத்திருந்தார். அடுத்த நாள் 16-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாள் என்பதைக்கூட பொருட்படுத்தாமல், அரசு தரப்பு இறுதி வாதத்தைத் தொடர ஆணையிட்டார். இதற்கிடையே கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் தீர்ப்பில், ‘‘இந்த வழக்கில் பல சந்தர்ப்பங்களில் உண்மையை மறைத்து விசாரணையைத் திசைதிருப்பும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. வழக்கைத் தாமதப்படுத்தும் நோக்கத்தில் பிரதிவாதிகள் செயல்படும்போது அதற்கு சரியான பதில் கொடுக்காமல், குற்றவாளிகளுக்கு ஆதரவாக தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் செயல்படுவதாகத் தெரிகிறது. இது சரியானதல்ல. இது கண்டனத்துக்கு உரியது. உண்மையை மறைக்கும் முயற்சியும் குற்றமே. நீதிமன்றத்தை ஏமாற்றுபவர்கள் மீது என்ன நடவடிக்கை என்பது தீர்ப்பின்போது பிரதிபலிக்கும்’’ என்று கூறியதோடு, மூல வழக்கு விசாரணைக்குத் தடைகோரிய மனுவை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நாராயணசாமி தள்ளுபடி செய்து 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

‘அதையடுத்து மே 16-ம் தேதி காலை 10.30 மணிக்கு மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ரிவர்வே அக்ரோ பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களுக்கு நிலம் கொடுத்தவர்களான, திருநெல்வேலி கருங்குளம், வெள்ளக்குளம் பகுதிகளைச் சேர்ந்த பாஸ்கரன், ஜெயராமன், வீராசாமி, ஸ்ரீதர், சமுத்திரபாண்டி, பிச்சைக்கனி நாடார், அருணாசலம் ஆகியோர் சாட்சியளித்தனர். அவர் களிடம் அரசு வழக்கறிஞர் பவானி சிங்கின் ஜூனியர் மராடி குறுக்கு விசாரணை நடத்தினார். இடையிடையே நீதிபதி குன்ஹா சாட்சிகளிடம் தமிழில் சந்தேகங்களைக் கேட்டு அசத்தினார். இந்த விசாரணை ஆரம்பிப்பதற்கு முன்பே தமிழகத்தில் 37 நாடாளுமன்றத் தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றி பெறப்போகிறது என்பது தெரிந்ததும் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் அசோகன், மணிசங்கர், மூர்த்தி ராவ், அன்புக்கரசு, பன்னீர்செல்வம் அனைவரும் குஷியானார்கள். ஸ்வீட் வாங்கி வந்து அனைவருக்கும் கொடுத்து மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.

வீராசாமி, பாண்டி ஆகியோரிடம் விசாரணை நடந்தது. அனைத்து கேள்விக்கும் தெரியாது என்று சொல்லிக்கொண்டு இருந்தார் வீராசாமி. ‘‘இந்த கோர்ட்டில் என்ன கேஸ் நடந்துட்டு இருக்குன்னாவது தெரியுமா?’’ என்று வக்கீல் கேட்டார். ‘‘அம்மா கேஸ்’’ என்று சொன்னார் வீராசாமி. இதேபோன்று மற்றவர்களிடமும் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. ‘ஒரு ஏக்கர் என்ன விலைக்குக் கொடுத்தீர்கள்?’ என்ற கேள்விக்கு, ‘2,000 ரூபாய்க்கு’ என்றும், ‘உங்க சொத்தை யார் வாங்கியது தெரியுமா?’ என்றதற்கு ‘தெரியாது’ என்றும், ‘எதற்காக நிலத்தைக் கொடுத்தீர்கள்?’ என்றதற்கு சிலர் ‘கஷ்டத்துக்காக’ என்றும், சிலர் ‘கிராமத்தில் உள்ள எல்லோரும் கொடுத்தாங்க. நாங்களும் கொடுத்துட்டோம்’ என்றும் பதிலளித்தனர். இந்த சாட்சிகளின் விசாரணை முடித்து, மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு 3 மணி முதல் 4.30 மணி வரை இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி மற்றும் அவர்கள் நேர்முக, மறைமுக பங்குதாரர்களாக இருக்கும் 32 நிறுவனங்களின் பெயர்களில் 1991 முதல் 1996 வரை சேர்த்த 306 சொத்துகள் பட்டியலை கடந்த 9-ம் தேதி வாசித்ததைப்போல 1991 முதல் 1996 வரை செய்த 248 செலவுப் பட்டியல்களை அரசு வழக்கறிஞர் பவானி சிங்கின் ஜூனியர் மராடி வாசித்தார்.

மராடி வாசித்த செலவுப் பட்டியலில் இருந்து...

சென்னை அபிராமபுரம் இந்தியன் வங்கியில் ஜெயா பப்ளிகேஷன் வாங்கிய 1.5 கோடிக்கு கடனுக்குச் செலுத்திய வட்டி 50,93,921. இதே வங்கியில் சசி என்டர்பிரைசஸ் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்திய தொகை 18,32,683. இதே கிளையில் லெக்ஸ் ப்ராபர்ட்டீஸ் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டியது 17,52,069. ஆர்.பி.எஃப் நிதி நிறுவனத்தில் இளவரசி வாங்கிய கடனுக்கு வட்டி கட்டியது 4,41,569. மயிலாப்பூர் கனரா வங்கியில் இருந்து சேலம் ஸ்டோர்ஸுக்கு ஜெயலலிதா வங்கிக் கணக்கில் இருந்து செலுத்திய தொகை 12,73,642. இதே வங்கியில் இருந்து பி.பி.எல். கேலரிக்கு ஜெயலலிதா வங்கிக் கணக்கில் இருந்து செலுத்திய தொகை 1,28,530. இதே வங்கியில் இருந்து கே.கே.வேணுகோபால் அவர்களுக்கு ஜெயலலிதா கணக்கில் இருந்து செலுத்திய தொகை 5,95,000. இதே வங்கியில் இருந்து மதுரை காமராஜர் யுனிவர்சிட்டிக்கு 5,00,000. மௌலி அட்வர்டைஸுக்கு 11,00,000-ம் ஜெயலலிதா கணக்கில் இருந்து கொடுக்கப்பட்டுள்ளது.

1987-88 ஆண்டுக்கான வருமான வரி 2,50,445, 1988-89 ஆண்டுக்கு 5,63,482, 1989-90 ஆண்டுக்கு 8,18,161, 1990-91 ஆண்டுக்கு 30,61,549... இப்படி ஜெயலலிதா 1997 வரை வருமான வரி கட்டியுள்ளார். 88-89 ஆண்டுக்கு 89,619, 1989-90 ஆண்டுக்கு 2,68,475, 92-93 ஆண்டிற்கு 13,51,590 என சொத்து வரி கட்டியுள்ளார்.

இதேபோல் சசிகலா 91-ல் இருந்துதான் வருமான வரி கட்டுகிறார். 91-92 ஆண்டுக்கு 2,23,750, 92-93 ஆண்டுக்கு 3,00,550, 93-94 ஆண்டுக்கு 7,62,151 என வருமான வரி கட்டியுள்ளார். 91-92 ஆண்டுக்கு 14,240, 92-93 ஆண்டுக்கு 1,17,955 என சொத்து வரி கட்டியுள்ளார்.

ஐந்தாண்டில் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் வேலைபார்த்த ஆட்களின் சம்பளம் மற்றும் பராமரிப்பு செலவு 16,15,500. ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் -சத்தியலட்சுமி திருமணச் செலவு 6,45,04,222. கொடநாடு பங்களா கட்டிய செலவு 12,20,310. மன்னார்குடியில் செங்கமலம் தாயார் நினைவு மகளிர் கல்லூரிக்கு டைல்ஸ் மற்றும் மார்பிள்ஸ் வாங்க சசிகலா கொடுத்த தொகை 10,82,420.

ஜெயா பப்ளிகேஷன் கட்டிய மின்சாரக் கட்டணம் 2,69,102. 1993 முதல் 96 வரை ஆஞ்சநேயா பிரின்டர்ஸ் கட்டிய மின்சாரக் கட்டணம் 7,38,433. குமரன் சில்க்ஸுக்கு 4,84,712, ஜேம்ஸ் ஃபிரெட்ரிக் 30,00,000. இப்படி 1991 முதல் 1996 வரை செலவுசெய்த மொத்த செலவு தொகை 12,00,59,338.

5 ஆண்டுகள்... 60 ரூபாய் சம்பளம்... 66 கோடி சொத்து!

ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங், ஒருவழியாக அரசு தரப்பு இறுதி வாதத்தை நிறைவு செய்தார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் மூன்றாம் தரப்பு வாதிகளான தி.மு.க பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பினர் தங்களது இறுதி வாதத்தை எழுத்துபூர்வமாக நீதிபதியிடம் சமர்ப்பித்துவிட்டனர்.

இனி, வழக்கில் அடுத்த கட்டமாக, குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி நான்குபேருடைய இறுதி வாதம் நிறைவடைந்ததும் நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா தனது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை எழுதுவார் என தமிழகமே எதிர்நோக்கி கவனித்துக் கொண்டிருந்தது.

இதையடுத்து, மெடோ அக்ரோ ஃபார்ம் இயக்குநர் குமாரிடம் அரசு வழக்கறிஞர் பவானி சிங்கின் ஜூனியர் மராடி குறுக்கு விசாரணை நடத்தி முடித்துவிட்டு, சரியாக 11.30 மணிக்கு ஜெ. சொத்துக் குவிப்பின் இறுதி வாதத்தை எடுத்து வைக்கத் தொடங்கினார். அதில் ஏ1, ஏ2, ஏ3, ஏ4- நான்கு பேர் மற்றும் அவர்கள் நேர்முக, மறைமுக பங்குதாரர்களாக இருந்த கம்பெனிகளுக்குமான வருமான பட்டியலை வாசித்த முடித்து, க்ளைமாக்ஸாக மராடி, ‘‘இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள், நலிந்த கம்பெனிகளை வாங்கி, முறைகேடாகப் பணம் செலுத்தி சொத்துகளைக் குவித்திருக்கிறார்கள். இந்த வழக்கில் எந்த ஓர் ஆதாரமும் இல்லாமல் நமது எம்.ஜி.ஆர் நிறுவனத்துக்கு வந்த 20 கோடியும், சூப்பர் டூப்பர் டிவி நிறுவனத்துக்கு வந்த ஆறு கோடியும் முறைகேடாக சேர்க்கப்பட்டுள்ளது. இது இரண்டுமே மிக முக்கியமான ஆதாரங்கள். ஆணித்தரமாக நிரூபிக்​கப்பட்ட ஆதாரங்கள். எனவே, இந்தச் செயலில் ஈடுபட்​டவர்களை ஊழல் தடுப்புப் பிரிவு சட்டங்களில் தண்டிக்க வேண்டும்’’ என்றதும் கோர்ட்டே அமைதியானது.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய நீதிபதி குன்ஹா, ‘‘இதில் ஏ1 க்கு என்ன தொடர்பு இருக்கிறது?’’ என்றதும் எழுந்த பவானி சிங், ‘‘ஏ2, ஏ3, ஏ4 ஆகியோர் அனைவரும் ஏ1 வீட்டில்தான் இருக்கின்றனர். அதற்கான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. ஏ1 வீட்டின் முகவரிகளில்தான் வங்கிக் கணக்குகள் தொடங்கப்​பட்டிருக்கின்றன. ஏ2, ஏ3, ஏ4 மூவருக்கும் குறைந்த வருமானம்தான் இருந்துள்ளது. ஏ1 வங்கி இருப்பின் மூலம்தான் பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. அதனால் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் இதில் சம்பந்தப்பட்டவர்களே’’ என்று தன்னுடைய இறுதி வாதத்தை நிறைவுசெய்தார்.

இந்த வழக்கில் தி.மு.க பொதுச்செயலாளர் க. அன்பழகன் தரப்பு மூன்றாம் தரப்பு வாதி என்பதால், இறுதி வாதத்தை நேரடியாக வாதிட முடியாது. அதனால், அவரது தரப்பு வழக்கறிஞர்கள் குமரேசன், சரவணன், நடேசன் ஆகியோர் நீதிபதி முன்பு 428 பக்க எழுத்துபூர்வமான ஆவணத்தைச் சமர்ப்பித்தனர்.

அன்பழகன் தரப்பு சமர்ப்பித்த ஆவணத்தின் சாராம்சம்...

‘‘இந்த வழக்கின் ஏ1 ஆக இருக்கும் ஜெயலலிதா 1984-89 வரை எம்.பியாகவும் 1989-91 வரை எம்.எல்.ஏவாகவும் 1991-96 வரை தமிழக முதல்​வராகவும் இருந்துள்ளார்.

இந்த வழக்கின் ஏ2 ஆக இருக்கும் சசிகலா கேசட் கடை நடத்தி வந்தார். அவரது கணவர் நடராஜன் தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையில் அதிகாரியாக இருந்து 1991-ல் அந்தப் பணியை ராஜினாமா செய்தார்.

இந்த வழக்கின் 3-வது குற்றவாளியாக சேர்க்கப்​பட்டுள்ள சுதாதரன், சசிகலாவின் சகோதரி மகன். இவரை ஜெயலலிதா தன் வளர்ப்பு மகனாக ஆக்கிக் கொண்டார்.

இந்த வழக்கின் 4-வது குற்றவாளியாகச் சேர்க்கப்​பட்டுள்ள இளவரசி 2-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள சசிகலாவின் சகோதரர் ஜெயராமனின் மனைவி. 1996-ல் ஜெயராமன், ஜெயலலிதாவுக்குச் சொந்தமான, ஆந்திராவில் உள்ள திராட்சை தோட்டத்தில் மின்சாரம் தாக்கி இறந்து விட்டார். கணவர் இறந்த பிறகு ஜெயலலிதாவின் சொந்த வீடான போயஸ் கார்டனுக்கு இளவரசி வந்துவிட்டார்.

ஜெயலலிதா 1964-77 வரை திரைத் துறையில் நடிகையாக இருந்தார். அவரது அம்மா சந்தியா 1971-ல் காலமானார். அப்போது அவருக்கு நாட்டிய கலாநிகேதன் என்ற இசைப் பள்ளியும் போயஸ் கார்டனில் வீடும் ஆந்திரா மாநிலத்தில் நகரில் ஒரு வீடும் ரங்காரெட்டி தாலுக்காவில் 10.20 ஏக்கரில் திராட்சைத் தோட்ட பண்ணை வீடும், பஷீராபாத்தில் 3.25 ஏக்கர் நிலமும் மட்டுமே இருந்தது. அவை ஜெயலலிதாவின் பெயருக்கு மாற்றப்பட்டது.

1987-ல் ஜெயலலிதாவின் மொத்த அசையா சொத்துகள் 7.5 லட்சமும் வங்கி இருப்பு ஒரு லட்சமும் மட்டுமே இருந்தது. 1989-ல் எம்.பியாக இருந்தபோது நான்கு கார்கள் (மதிப்பு ரூ9,12,129) ஒரு ஜீப் (மதிப்பு ரூ.1,04,000) வாங்கி இருக்கிறார். இதுவே வருமானத்துக்கு அதிகமாக வாங்கப்பட்டுள்ளது. 1988 முதல் 1990 வரை ஜெயா பப்ளிகேஷன், சசி என்டர்பிரைசஸ், நமது எம்.ஜி.ஆர் என்ற கம்பெனிகளைத் தொடங்கி நடத்தி வந்தாலும்... வரவு, செலவுகள் செய்யாமல் வருமானம் இல்லாமல் இருந்தது. 1991 வரை ஜெயலலிதாவின் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு 2,01,83,957 ஆக இருந்தது.

1991 முதல் 1996 வரை முதல்வராக இருந்த காலகட்டத்தில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் நலிந்த நிறுவனங்களான மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ஜே.எஸ் ப்ராப்பர்ட்டீஸ், ஜெ. ஃபார்ம் ஹவுஸ், ஜெயா கன்ஸ்ட்ரக்ஷன், நமச்சிவாயா கன்ஸ்ட்ரக்ஷன், சக்தி கன்ஸ்ட்ரக்ஷன், மார்பிள் அண்ட் மார்பிள்ஸ், லெக்ஸ் ப்ராப்பர்ட்டீஸ், ரிவர்வே அக்ரோ பிரைவேட் லிமிடெட், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ், கிரீன் கார்டன், ஆஞ்சநேயா பிரின்டர்ஸ், சூப்பர் டூப்பர் பிரைவேட் லிமிடெட் என 32 கம்பெனிகளை வாங்கி, அதில் நேரடி மற்றும் மறைமுக பங்குதாரர்களாக நுழைந்து, புதியதாக வங்கிக் கணக்குகளைத் தொடங்கி, 1991-96 வரை ஐந்து வருடங்கள் இந்த 32 நிறுவனங்களில் 898 முறை பணம் டெபாசிட் மட்டுமே செய்திருக்கிறார்கள். இந்த நிறுவனங்களுக்கு இன்கம்டாக்ஸ், சேல்ஸ் டாக்ஸ் எதுவும் கிடையாது. இந்த நிறுவனங்களின் பெயரில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் நிலம், கட்டடம், விளைநிலங்களை வாங்கி வருமானத்துக்கு அதிகமான சொத்துகளைக் குவித்திருக்கிறார்கள்.

1991-ல் ரூ.2,01,83,957-ஆக இருந்த ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு, 1996-ல் 66,44,73,573 ஆக உயர்ந்துள்ளது. இந்த இடைப் பட்ட காலத்தில் இவருக்கு எந்த வருமானமும் இல்லை. முதல்வராக இருந்ததற்குக்கூட சம்பளம் வாங்காமல் மாதம் ஒரு ரூபாய் வீதம் ஐந்து வருடங்களுக்கு 60 ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கியிருக்கிறார். பொதுச் சேவையில் இருந்துகொண்டு வருமானத்துக்கு அதிகமான சொத்துகளை ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வாங்கியுள்ளனர். இவை அரசு துறை சாட்சியங்கள், ஆவணங்கள், நேரடியாக கைப்பற்றப்பட்ட பொருட்களை வைத்து நிரூபிக்கப்பட்டதால் இவர்களுக்கு ஊழல் தடுப்பு சட்டம் 2(D) பிரிவில் இந்தியத் தண்டனை சட்டம் 109-குற்றவாளிக்கு உடந்தையாக செயல்படுதல் மற்றும் 120B-கூட்டு சதி ஆகிய பிரிவுகளில் தண்டனை வழங்க வேண்டும்’’ - இவ்வாறு தி.மு.க தனது இறுதி வாதத்தை சமர்ப்பித்துள்ளது.

ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில், ‘‘ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமாரின் தாயார் இறந்துவிட்டதால், எங்களுடைய இறுதி வாதத்துக்குக் கால அவகாசம் கொடுக்க வேண்டும்’’ என்று கேட்டிருந்தனர்.

அதையடுத்து நீதிபதி, ‘‘ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமாரின் இறுதி வாதத்தை 2.6.2014 தொடங்கலாம் என்றும், மற்ற ஏ2 - சசிகலா, ஏ3 - சுதாகரன், ஏ4 - இளவரசி மூவரும் நாளையில் இருந்து தங்களது இறுதி வாதத்தைத் தொடங்க வேண்டும்’’ என்றார்.

அதையடுத்து ஏ2, ஏ3, ஏ4 மூவரும் 21-ம் தேதி மீண்டும் நீதிபதியிடம் மனு கொடுத்தார்கள். அதில் ‘‘ஏ1 பொதுத் துறையில் இருப்பதால் அவருடைய இறுதி வாதம் நிறைவடைந்த பிறகுதான் நாங்கள் இறுதி வாதத்தைத் தொடங்க முடியும். அன்பழகன் தரப்பு சமர்ப்பித்த ஸ்டேட்மென்ட்டைப் படித்துப் பார்க்க வேண்டும். அதற்காக எங்களுக்குக் கால அவகாசம் கொடுக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டிருக்கிறது.

நீதிபதி அந்த மனுவைத் தள்ளுபடி செய்து, ‘நாளை முதல் இறுதி வாதத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்’ என்று கண்டிப்புடன் உத்தரவிட்டார். இனி ஜெட் வேகம்தான்.

இனியும் இந்த வழக்கை தாமதப்படுத்த முடியாது!

இது என்னுடைய நீதிமன்றம். இந்த வழக்கை விசாரிக்க முழு அதிகாரத்தையும் கர்நாடக உயர் நீதிமன்றம் எனக்குக் கொடுத்திருக்கிறது. இதுநாள் வரை இந்த வழக்கு எப்படி நடந்திருந்தாலும் எனக்கு ஆட்பேசனை இல்லை. இனி என்னுடைய ஒவ்வொரு வாய்தாவுக்கும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேரும் ஆஜராக வேண்டும். இல்லையென்றால் பிடிவாரன்ட் பிறப்பிப்பேன்!’ - ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு நீதிபதியாக கடந்த 2013-ம் ஆண்டு பொறுப்பேற்ற முடிகவுடர் இப்படி அதிரவைத்தார்.

இப்போது நீதிபதியாக இருக்கும் ஜான் மைக்கேல் டி.குன்ஹா பொறுப்பேற்றதில் இருந்து ஜெயலலிதா தரப்புக்கு எந்தக் கடிவாளமும் போடவில்லை. ஆனால், 18 வருடங்களாக இழுத்துக் கொண்டிருந்த இந்த வழக்கில் அரசு தரப்பின் இறுதி வாதத்தை முடிக்கச் செய்த பெருமைக்குச் சொந்தக்காரர் ஆகிவிட்டார் நீதிபதி. அத்துடன் தி.மு.க தரப்பு இறுதி வாதத்தையும் எழுத்துபூர்வமாக பதிவு செய்துவிட்டார்.

23-ம் தேதி... அன்றே, ஜெயலலிதா தரப்பு இறுதி வாதத்தைத் தொடங்கவும் உத்தரவிட்டார். ஆனால், ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமாரின் தாயார் இறந்து விட்டதால், எங்கள் தரப்பு இறுதி வாதத்தைத் தொடங்க முடியாது என்று நீதிபதியிடம் மனு கொடுத்தார்கள். ‘சரி... ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞரின் வாதம் ஜூன் 2-ம் தேதி தொடங்கட்டும். அதற்கு முன்பு சசிகலா, சுதாகரன், இளவரசி தரப்பு இறுதி வாதத்தைத் தொடங்குங்கள்’ என்று நீதிபதி சொன்னார்.

அதைத் தொடர்ந்து சசிகலா, சுதாகரன், இளவரசி தரப்பு வழக்கறிஞர்கள் மூன்றாவது முறையாக நீதிபதியிடம் மனு கொடுத்தார்கள். ‘‘தி.மு.க கொடுத்த 428 பக்க இறுதிவாத ஸ்டேட்மென்ட்டைப் படிக்க கால அவகாசம் தேவை. இந்த வழக்கில் ஏ1 குற்றம்சாட்டப்பட்டுள்ளவர் பொதுசேவையில் இருப்பதால், அவருடைய இறுதி வாதம் முடிந்த பிறகுதான் நாங்கள் வாதத்தைத் தொடங்க முடியும். இந்த வழக்கில் கம்பெனிகள் தரப்பு விசாரணை எங்களுக்குச் சாதகமாக நடைப்பெற்று வருவதால், அந்த வழக்குகள் நிறைவடைந்த பிறகுதான் எங்களுடைய இறுதி வாதத்தைத் தொடங்க முடியும். எனவே, 309-வது விதிப்படி எங்களுக்குக் கட்டாயம் கால அவகாசம் கொடுக்க வேண்டும்’’ என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்கள்.

மனுவைப் பார்த்த நீதிபதி, ‘‘இனியும் இந்த வழக்கைத் தாமதப்படுத்த முடியாது. நன்றாக யோசித்து ஒரு மணிக்கு உங்கள் வாதத்தைத் தொடங்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார். சசிகலா, சுதாகரன், இளவரசி தரப்பு வழக்கறிஞர்களும், வாதாட முடியாது என்று சொல்லி அமர்ந்திருந்தனர்.

சரியாக ஒரு மணிக்கு நீதிபதி, ‘‘வாதாடுகிறீர்களா?’’ என்று கேட்டார். ‘‘முடியாது...’’ என்று வழக்கறிஞர்கள் சொல்ல... ‘‘மதிய உணவை முடித்துவிட்டு 3 மணிக்கு வாருங்கள்!’’ என்று சொன்னார் நீதிபதி.

பிற்பகல் 3 மணிக்கு நீதிபதி வந்ததும், ‘‘வாதாடுகிறீர்களா..?’’ என்றார். ‘‘முடியாது’’ என்று சொல்லி, காலையில் கொடுத்த மனுவை திரும்பவும் நீதிபதியிடம் கொடுத்தார்கள். ‘‘மனு மீதான விசாரணை 4.30 மணிக்கு நடக்கும்’’ என்று சொன்னார் நீதிபதி.

4.30 மணிக்கு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி, ‘‘சசிகலா, சுதாகரன், இளவரசி மூன்று பேருக்கும் தலா 3,000 வீதம் மொத்தம் 9,000 அபராதம் விதிக்கிறேன். அத்துடன் இனி வரும் ஒவ்வொரு இறுதி வாதத்தின்போதும் கட்டாயம் சசிகலா, சுதாகரன், இளவரசி மூவரும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.

26-ம் தேதி காலை சசிகலாவும், இளவரசியும் ஒரே காரில் பெங்களூரு கோர்ட்டுக்கு வந்தனர். இருக்கைக்கு நீதிபதி வந்து அமர்ந்ததும் சுதாகரன் வழக்கறிஞர் அன்புக்கரசு, ‘‘இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சுதாகரன் கோர்ட்டுக்கு வருவதற்காக விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். இரவு அவருக்கு கடுமையான ஜுரம் என்பதால், வர முடியவில்லை. விமான டிக்கெட்டை விடியற்காலை 3.15 மணிக்கு கேன்சல் செய்து விட்டோம். அதற்கான ஆதாரம் இது!’’ என்று சொன்னார். அதை எழுத்துப்பூர்வமாக எழுதித்தருமாறு நீதிபதி கேட்டார்.

அடுத்து சசிகலா பெயரை அழைத்ததும், அவர் நீதிபதி முன் வந்து நின்றார். ‘‘உங்கள் வழக்கறிஞர் எங்கே?’’ என்று கேட்டார். நீதிபதி சொன்னதை சசிகலாவிடம் மொழிபெயர்ப்பாளர் தமிழில் சொன்னார். அதற்கு பதிலளித்த சசிகலா, ‘‘சொத்துக்குவிப்பு வழக்கில் கம்பெனிகளின் சொத்துகள் எங்கள் மீது சேர்க்கப்பட்டுள்ளதால் எங்களுக்கு அதிக சொத்துக்கள் இருப்பதாகத் தெரிகிறது. அந்த வழக்கில் இருந்து கம்பெனிகளை நீக்க வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்திருந்தோம். அது தொடர்பான விசாரணைக்காக என்னுடைய வழக்கறிஞர் மணிசங்கர் சுப்ரீம் கோர்ட் போய்விட்டார்’’ என்றார். அதைத் தொடர்ந்து நீதிபதிக்கும், சசிகலாவுக்கும் இடையே நடந்த உரையாடல் அப்படியே...

நீதிபதி: கோர்ட் நடவடிக்கையைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?

சசிகலா: கோர்ட்டை அவமதிக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை. வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட் போனதால்தான் வாதாட முடியவில்லை.

நீதிபதி குறுக்கிட்டு... ‘‘சத்தமாகப் பேசுங்கள். எல்லோருக்கும் கேட்கட்டும்.’’

சசிகலா (சத்தமாக): ‘‘சரி.’’

நீதிபதி: ‘‘அப்போ நீங்கள் வாதாடுகிறீர்களா?’’

சசிகலா: ‘‘இல்லை.’’

நீதிபதி: ‘‘பிறகு எப்போது வாதாடப் போகிறீர்கள்?’’

சசிகலா: ‘‘ஜூன் 2-ம் தேதி.’’

நீதிபதி: ‘‘அப்போது நீங்கள் வாதாடுவீர்களா? இல்லை, உங்க வழக்கறிஞர் வாதாடுவாரா?’’

சசிகலா: ‘‘என் வழக்கறிஞர்தான் வாதாடுவார்.’’

நீதிபதி: ‘‘ஏன் நாளை உங்கள் வழக்கறிஞர் இங்கே வந்து வாதாட மாட்டாரா?’’

சசிகலா: ‘‘இன்னும் அவர் தயாராகவில்லை.’’ அடுத்து இளவரசி அழைக்கப்பட்டார்.

நீதிபதி: ‘‘நீங்கள் எப்போது வாதாடப் போகிறீர்கள்?’’

இளவரசி: ‘‘ஜூன் 2-ம் தேதி.’’

நீதிபதி: ‘‘உங்கள் வழக்கறிஞர் அசோகன் இருக்கிறாரே... அவர் வாதாட மாட்டாரா?’’ என்றவர், ‘‘கண்டிப்பாக இன்று ஏ4 (இளவரசி) இறுதி வாதத்தைத் தொடங்க வேண்டும். ஏ2 நாளை இறுதி வாதத்தை தொடங்க வேண்டும். கோர்ட்டுக்குள் அமர்ந்து நீங்களே யோசியுங்கள். மாலை தீர்ப்பு சொல்கிறேன்’’ என்று முடித்தார்.

இந்த நேரத்தில்தான் சசிகலா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சொத்துக்குவிப்பு வழக்கை ஜூன் 6-ம் தேதி வரை விசாரிக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் பெங்களூரு நீதிமன்றத்துக்கு அந்த உத்தரவு நகல் வந்து சேராததால், ‘நாளைக்கு ஒத்திவைக்கிறேன்!’ என்று எழுந்து கொண்டார்.

எப்படியோ, நீதிபதி குன்ஹா பதவியேற்ற பிறகு முதன் முறையாக சசிகலா, இளவரசி ஆகியோரை கோர்ட் படியேற வைத்திருக்கிறார்.

தமிழக ஊழல் தடுப்புத்துறை எங்களுக்கு ஊதியமே கொடுக்கவில்லை!

பெங்களூரு தனி நீதிமன்றத்தில் தனது இறுதி வாதங்களை முடித்துவிட்டார் அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங். இனி குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் தங்களது இறுதி வாதங்களை வைக்க வேண்டும். அதற்குள் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. பவானி சிங் தன்னுடைய இறுதி வாதங்களை வைத்து வரும்போது அவரைச் சந்தித்து நாம் பேட்டி கேட்டோம்.

‘‘தற்போது நீதிமன்றத்தில் என்னுடைய இறுதி வாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் பேட்டி கொடுப்பது நன்றாக இருக்காது. என்னுடைய இறுதி வாதம் முடித்த பிறகு வாருங்கள் நிச்சயம் பேசலாம்’’ என்று சொல்லியிருந்தார் பவானி சிங். அவரது இறுதி வாதம் முடிந்ததும், சிட்டி சிவில் கோர்ட் வளாகத்தில் உள்ள பவானி சிங்கின் அறைக்குச் சென்றோம். தன்னுடைய ஜூனியர் வழக்கறிஞர் மராடியை அழைத்து அருகில் வைத்துக் கொண்டு நமக்கு பேட்டி கொடுத்தார் பவானி சிங். அதில் இருந்து...

‘‘18 வருடங்களாக நடக்கும் வழக்கு இது. இந்த வழக்கில் அரசு தரப்பின் இறுதி வாதங்களை நீங்கள்தான் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளீர்கள். இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’

‘‘நான் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த 15 வருடங்களாக இதுபோன்று பல வழக்குகளை நடத்தியிருக்கிறேன். எனக்கு எல்லா வழக்குகளும் ஒன்றுதான். வழக்குகளைப் பிரித்துப் பார்க்கும் பழக்கம் கிடையாது. எனவே, இந்த வழக்கில் இறுதி வாதத்தை முடித்துவிட்டோம் என்பதெல்லாம் எனக்குப் பெரிதாகவும் தெரியவில்லை. அதை நினைத்துப் பெருமைப்படவும் அவசியம் இல்லை!’’

‘‘இந்த வழக்கைப் பதிவுசெய்த, தமிழ்நாடு அரசு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையின் ஒத்துழைப்பு உங்களுக்கு எப்படி இருந்தது?’’

‘‘அவர்கள் எங்களுக்கு எங்கே ஒத்துழைப்பு கொடுத்தார்கள்? ஒரு ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை. ஒன்றரை ஆண்டு காலமாக கர்நாடக உயர் நீதிமன்றம், சிட்டி சிவில் கோர்ட் என மாறி மாறி வாதாடி இவ்வழக்கை முடிக்கும் நிலைமைக்கு கொண்டு வந்திருக்கிறோம். ஆனால், எங்களுக்கு கடந்த ஒன்பது மாதங்களாக சம்பளம்கூட கொடுக்கவில்லை, என்றால் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களது ஒத்துழைப்பு இப்படித்தான் இருந்தது... இருக்கிறது.’’

‘‘இந்த வழக்குக்கு வலிமையான ஆதாரங்கள் இருக்கிறது என்று உறுதியாகச் சொல்ல முடியுமா?’’

‘‘குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்களில் இருக்கும் வங்கி கணக்குகள், பத்திரப் பதிவு ஆவணங்கள், 16 கம்பெனிகள் ரெஜிஸ்டர் செய்தது, 1991-க்கு முன்பு இருந்த சொத்து விவரம், 1996-க்குப் பிறகு காட்டப்பட்ட சொத்து விவரம்... இவை அனைத்து ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் நாங்கள் தாக்கல் செய்துள்ளோம். இவை வலிமையான ஆதாரங்கள்தான்!’’

‘‘முதல்வர் ஜெயலலிதாவுக்கு எந்த அளவு இதில் தொடர்பு இருக்கிறது?’’

‘‘அது சம்பந்தமான ஆவணங்கள் அனைத்தும் கோர்ட்டில் சமர்ப்பித்து இருக்கிறேன். இப்போது அதுபற்றி கருத்துச் சொல்ல முடியாது.’’

‘‘ஜெயலலிதா தரப்பு இவ்வழக்கைத் தாமதப்படுத்தும் நோக்கத்துடன் தடை வாங்கியிருக்கிறதே?’’

‘‘இதுபற்றி கருத்துச் சொல்ல விரும்பவில்லை.’’

‘‘நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹாவின் செயல்பாடுகள் எப்படியிருக்கிறது?’’

‘‘அவரை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது. ஆனால், அவர் இந்த வழக்கை விரைவாக முடிக்கும் நோக்கத்தில் அதிக வேகமாகக் கொண்டு செல்லுகிறார். அந்த விஷயத்தில் சூப்பர்!’’

‘‘தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, ‘நீங்கள் ஜெயலலிதாவுக்கு சாதகமாகச் செயல்படுகிறீர்கள்’ என்ற அர்த்தத்தில் சொல்லியிருக்கிறாரே?

‘‘நான் வழக்கறிஞர். கருணாநிதி அரசியல்வாதி. இந்த வழக்கை அவர் அரசியலாக்கி, அரசியல் காழ்ப்பு உணர்ச்சியோடு பேசுகிறார். நான் பணம் வாங்கினேன் என்பது உண்மைக்குப் புறம்பான தகவல். அப்படி பணம் வாங்கியிருந்தால் இந்த வழக்கை இவ்வளவு வலுவாக இறுதி வாதம் வரை கொண்டு வந்திருக்க முடியுமா? அதனால் யூகத்தின் அடிப்படையில் பேசுபவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நான் இந்த வழக்கை நேர்மையாக கையாண்டு இருக்கிறேன்.’’

‘‘இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு எப்படி வரும் என எதிர்பார்க்கிறீர்கள்?’’

‘‘வழக்கு நிலுவையில் இருப்பதால் தீர்ப்பைப் பற்றி எதுவும் பேசக் கூடாது. நீதி வெல்லும்!’’

குன்ஹாவின் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறது.

ஸ் பெ

unread,
May 16, 2015, 3:53:06 PM5/16/15
to panbudan

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சொத்துக்குவிப்பு வழக்கின் உச்சக்கட்ட காட்சிகள் நடந்த இடம் பரப்பன அக்ரஹாரா. நீதிபதி மைக்கேல் டி.குன்ஹாவின் தீர்ப்பு, ஜெயலலிதா சிறை செல்லல், தொண்டர்களின் கண்ணீர் காட்சிகள், ஜாமீன் கிடைத்து ஜெ. போயஸ் திரும்புதல் என அரங்கேறிய க்ளைமாக்ஸ் நவரச காட்சிகள்...

தீர்ப்பு நாள் பரபரப்புகள்!

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு இறுதிக்கட்டத்தை நெருங்கியதும் செப்டம்பர் 26, 27 தினங்களில் பெங்களூரில் நிலவிய அசாதாரண சூழல் லைவ் ரிலேவாக இங்கே...

 இந்திய மீடியாக்கள் குவிந்தன...

தீர்ப்பு நாளான 27-ம் தேதிக்கு ஒரு நாள் முன்பே, இந்தியா முழுவதிலும் இருந்து அனைத்து ஆங்கில, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்... என பல மொழி மீடியாக்களும் பெங்களூரில் குவிந்துவிட்டன. இதுவரையில் ஸ்பெஷல் கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. தீர்ப்பு வழங்குவது மட்டும் பாதுகாப்பு காரணங்களுக்காக பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தை ஒட்டியுள்ள நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. நீதிமன்றம் நடைபெறும் பரப்பன அக்ரஹாரா வளாகத்துக்குச் செல்வதற்கு 26-ம் தேதி மாலை 5 மணிக்கு பெங்களூரு சிட்டி கமிஷனர் அலுவலகத்தில் பாஸ் கொடுக்கப்படுவதாக அறிவிப்பு வரவே, பத்திரிகையாளர்கள் குவிந்தனர். நீதிமன்றத்துக்குச் செல்வதற்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு வி.ஐ.பி பாஸும் அதே இடத்தில் வழங்கப்பட்டதால் பத்திரிகையாளர்களும் அ.தி.மு.க. முக்கியப் பிரமுகர்களும் பெங்களூரு சிட்டி கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

 காவல் துறை கட்டுப்பாட்டுக்குள் பெங்களூரு

26-ம் தேதி இரவே பெங்களூரு சிட்டியில் உள்ள அனைத்து லாட்ஜுகளிலும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் என ஆக்கிரமித்துவிட்டதால் மக்கள் ரூம் கிடைக்காமல் அவதிப்பட்டனர். 26-ம் தேதியே பெங்களூரு தமிழகமாக மாறியது. எந்த ஒரு அசம்பாவிதங்களும் நடந்து விடக் கூடாது என்று போலீஸார் பெங்களூரு முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர காக்கி உடையிலும் மஃப்டியிலும் வேவு பார்த்துக் கொண்டிருந்தார்கள். எங்கு பார்த்தாலும் கும்பல் கும்பலாகத் தமிழர்கள். சிறை வளாகத்தைச் சுற்றி இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு 144 தடை உத்தரவு போட்டிருந்தனர்.

 அல்லல்பட்ட அமைச்சர்கள்

27-ம் தேதி காலை 6 மணியில் இருந்தே பரப்பன அக்ரஹாராவை நோக்கி அனைவரும் படையெடுத்தனர். ஜெயிலில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பரப்பன அக்ரஹாரா ஜங்ஷனில் பாஸ் இல்லாதவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பாஸ் இருந்த அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரின் வாகனங்களும் அங்கேயே தடுத்து நிறுத்தப்பட்டு, மெட்டல் டிடெக்டர் சோதனைக்குப் பிறகு உள்ளே அனுமதித்தார்கள். அவர்களின் உதவியாளர்களை அனுமதிக்கவில்லை. அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டு ஐந்து கிலோ மீட்டர் நடந்தே நீதிமன்ற வளாகத்துக்கு வந்து சேர்ந்தனர். பத்திரிகையாளர்கள் நீதிமன்றத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு, அங்கு அமைக்கப்பட்ட மேடையில் அமர்த்தப்பட்டனர்.

 ‘நான் யாரு தெரியுமா?’

காலை 8.30 மணியில் இருந்து அமைச்சர்கள் ஒவ்வொரு​வராக வர ஆரம்பித்தார்கள். அதன் பிறகு எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மேயர்கள், மாவட்டச் செயலாளர்கள் என வந்து சேர்ந்தனர். இதில் எவரும் கர்நாடக காவல் துறையினருக்கு அறிமுகம் இல்லாததால், பெரும் போராட்டத்துக்குப் பின்னரே உள்ளே செல்ல முடிந்தது. தி.மு.க வழக்கறிஞர்கள் தாமரைச்செல்வன், சரவணன், நடேசன், பாலாஜி சிங் ஆகியோர் காலை 7.30 மணிக்கே நீதிமன்றத்துக்குள் சென்றுவிட்டனர். ஜெயலலிதாவுக்கான நுழைவாயிலில் வந்த நால்வர் அணியைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் பரப்பன அக்ரஹாரா ஜங்ஷனில் தடுத்து நிறுத்தப்பட்டனர். ஓ.பன்னீர்செல்வத்திடம் அங்கிருந்த கர்நாடக போலீஸார், ‘‘நீவு யாரு? யாரு ஒலகே ஓக பாருது...’’ (நீங்கள் யார்... நீங்கள் யாராக இருந்தாலும் உள்ளே போகக்கூடாது) என்று சொல்லி தடுத்து நிறுத்தினர். ‘‘என் பேரு பன்னீர்செல்வம். நான் தமிழ்நாடு மினிஸ்டர்’’ என்று சொன்னார். அதன் பிறகே அவர்கள் அனுமதிக்கப்பட, அங்கிருந்து நடந்தே நீதிமன்றத்துக்குச் சென்றனர்.

 மகிழ்ச்சியாகப் புறப்பட்ட ஜெ.

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மூவரும் சென்னை விமான நிலையத்தில் 8.57-க்கு தனி விமானத்தில் கிளம்பி, பெங்களூரு ஹெச்.ஏ.எல் விமான நிலையத்தில் 9.40-க்கு தரையிறங்கினர். கர்நாடக அ.தி.மு.க மாநில செயலாளர் புகழேந்தி மலர் கொத்து கொடுத்து வரவேற்றார். பிறகு அங்கிருந்து கான்வாய் மூலம் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலை வளாகத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு வந்தார். விமான நிலையத்தில் இருந்து பரப்பன அக்ரஹாரா ஜங்ஷன் வரை அவரை வரவேற்று 500 ஃபிளெக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன.

 பாதுகாப்பு வளையத்தில் குன்ஹா... சிரித்த முகத்துடன் ஜெ.!

8 மணிக்கு தமிழக ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் குணசீலன், சம்பந்தம், 8.10-க்கு அரசு சிறப்பு வழக்கறிஞர்கள் பவானி சிங், மராடி வந்தனர். 9.50-க்கு நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா வந்தார். அவருடைய காருக்கு முன்னும் பின்னும் மூன்று காவல் துறை வாகனங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு இருந்தது. 10.10-க்கு ஜெயலலிதா வழக்கறிஞர்கள் நவநீதகிருஷ்ணன், செந்தில், குமார், மணிசங்கர், அசோகன், பன்னீர்செல்வம் ஆகியோர் சென்றனர். 10.45-க்கு 23 வாகனங்கள் புடைசூழ தேசியக் கொடி கட்டிய வாகனத்தில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மூன்று பேரும் சிரித்த முகத்தோடு வந்து இறங்கினர். இதற்கிடையே பரப்பன அக்ரஹாரா ஜங்ஷனில் தொண்டர்களும், நிர்வாகிகளும் ஆயிரக்கணக்கில் கூடி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதால் காலை 11.20-க்கு லத்தி சார்ஜ் செய்து கூட்டத்தைக் கட்டுப்படுத்தினார்கள். இதில் நத்தம் விஸ்வநாதன் உட்பட பல அமைச்சர்களுக்கும் தடியடி விழுந்தது. இதேபோல் மாலை 4.30 மணிக்கும் லத்தி சார்ஜ் செய்து கும்பலைக் கலைக்க வேண்டியிருந்தது.

 தாமதமாகவே வந்த தகவல்கள்!

பத்திரிகையாளர்கள் 500 மீட்டருக்கு முன்பாகவே தடுத்து நிறுத்தப்பட்டதாலும், சிறை வளாகம் முழுவதும் ஜாமர் அமைக்கப்பட்டு செல்போன்களை இயங்காமல் செய்ததாலும் நீதிமன்றத் தகவல்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. அங்கிருந்து வெளியே வந்த பிறகுதான் தகவல்கள் பரிமாறப்பட்டன. 11 மணிக்கு வந்து அமர்ந்ததுமே நீதிபதி குன்ஹா, நான்கு பேரும் குற்றவாளி என்பதை அறிவித்துவிட்டார். இந்த விஷயம் வெளியே தெரிந்ததும் கலவரம் வெடிக்கும் என்பதால், பத்திரிகையாளர்களுக்கு தகவல் போகும் முன்பு காவல் துறையை உஷார்படுத்த வேண்டும் என்பதால், 11.45 மணிக்கு நீதிமன்றத்தில் இருந்து அவசரமாகக் கிளம்பிப்போனார் பெங்களூரு சிட்டி கூடுதல் போலீஸ் கமிஷனர். கர்நாடக காவல் துறை தலைவருடன் அவர் அவசர ஆலோசனை நடத்தி, உடனடியாக பெங்களூரு முழுக்கக் கூடுதல் போலீஸாரை பாதுகாப்புக்காகக் குவிக்க ஏற்பாடுகளை செய்தார். தீர்ப்பு விவரம் வெளிவரத் தொடங்கிய நேரத்தில் பெங்களூரு முழுமையாக போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

குன்ஹா தீர்ப்பு முழு விவரம்

இந்தியாவையே தனது தீர்ப்பை நோக்கி திருப்பியவர் நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா. 1,136 பக்கங்களுக்கு எழுதப்பட்ட தீர்ப்பு அது. முதல் 894 பக்கங்களுக்கு வழக்கின் பின்னணி, குற்றச்சாட்டுகள், அதற்கான ஆவணங்கள், கைப்பற்றப்பட்ட சொத்து விவரங்கள், வழக்கில் சேர்க்கப்பட்ட சாட்சிகள் ஆகியவை தனித்தனித் தலைப்புகளில் விவரிக்கப்பட்டுள்ளன.

குற்றம்சாட்டப்​பட்டவர்​களுக்கு எதிராக உள்ள சாட்சிகள், ஆவணங்கள் ஆகியவை உறுதியாக உள்ளன என்பதும் அவற்றை எதிர்த்துக் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அளித்த சாட்சியங்களும் 100 பாயின்ட்களில் விவரிக்கப்படுகின்றன. அதன் பிறகு, 895-வது பக்கத்தில் ஆரம்பித்து 907-வது பக்கம் வரை நீதிபதியின் தீர்ப்பும் 908 முதல் 910-ம் பக்கம் வரை தண்டனையும் விவரிக்கப்பட்டுள்ளன.

அந்தப் பக்கங்களில் உள்ள விவரங்​கள்தான் இவை...

‘‘ஜெயலலிதா, தமிழக முதலமைச்சராக இருந்த 1991-1996 காலகட்டத்தில் அவருடைய வருமானம் 9 கோடியே 91 லட்சத்து 5 ஆயிரத்து 94 ரூபாயாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் அவர் செய்த செலவுகள் 8 கோடியே 49 லட்சத்து 6 ஆயிரத்து 833 ரூபாய். இதுபற்றி மிக நியாயமான சந்தேகங்களை வழக்கின் புகார்தாரரான அரசுத் தரப்பினர் எழுப்பி உள்ளனர். ஆனால், இந்தக் காலகட்டத்தில் அசையாச் சொத்துகளின் மதிப்பு 53 கோடியே 60 லட்சத்து 49 ஆயிரத்து 954 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இந்த அசையாச் சொத்துகள் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகிய மூவரின் கணக்குகளில் வருகின்றன. ஆனால், அவை எந்த வழியில் வந்தன என்பதற்குக் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை. அதுபற்றி அவர்களால் நியாயமான கணக்கு வழக்குகளைச் சமர்ப்பிக்க முடியவில்லை. தீர்ப்பு அளிக்கப்படும் இந்த நேரத்தில், தங்களுக்குத் தண்டனை வழங்குவதற்கு முன்பாக நீதிமன்றம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயங்களாகக் குற்றவாளிகள் தரப்பினர் சில தகவல்களை நீதிமன்றத்துக்குத் தந்துள்ளனர்.

முதல் குற்றவாளியான ஜெயலலிதா, ‘இந்த வழக்கு தன்னுடைய அரசியல் எதிரிகளால், அரசியல் காரணங்களுக்காகவும் தன்னை பழிவாங்குவதற்காகவும் போடப்பட்டது. வழக்கை எனக்கு எதிராகப் போடும்போது என்னுடைய வயது 48. அதன்பின் 18 வருடங்களுக்கு வழக்கு இழுத்தடிக்கப்பட்டு உள்ளது. இப்போது என்னுடைய வயது 66. இந்த இடைப்பட்ட நாட்களில் வழக்கின் காரணமாக நான் தீராத மன உளைச்சலுக்கு ஆளானேன். அதன் காரணமாக என்னுடைய உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், மூச்சுத் திணறல் போன்ற நோய்களால் அவதிப்படுகிறேன். அதனால் நீதிமன்றம் தீர்ப்புச் சொல்லும்போது, தனக்கு இருக்கும் இந்தப் பிரச்னைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்’ என்று சொல்லியுள்ளார்.

இரண்டாவது குற்றவாளி (சசிகலா), ‘இந்த வழக்கு அரசியல் காரணத்துக்காகப் போடப்பட்டது. இத்தனை ஆண்டுகளில் எனக்குத் தீராத மன உளைச்சல், நீரிழிவு மற்றும் கண் பார்வைக் குறைபாடு ஏற்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவது குற்றவாளி (சுதாகரன்), ‘இந்த வழக்கு அரசியல் காரணத்துக்காகப் போடப்பட்டது. வழக்குப் போடப்பட்டபோது, பிறந்த என் குழந்தைக்கு, இப்போது அவருக்கு 18 வயதாகிறது. இந்த வழக்குக்காக நான் இழுத்தடிக்கப்பட்ட காலத்தில் என்னுடைய தாயாரை இழந்துவிட்டேன்’’ என்று கூறியுள்ளார்.

நான்காவது குற்றவாளி (இளவரசி), ‘இந்த வழக்கின் காரணமாக நான் உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தப்பட்டேன். அதனால் எனக்குப் பல நோய்கள் ஏற்பட்டுள்ளன. நான் கணவரை இழந்தவர். என்னுடைய குழந்தைகளைப் பாதுகாக்கும் மொத்தப் பொறுப்பும் என் ஒருவருக்கே உள்ளது. தண்டனை வழங்கும்போது இவற்றை நீதிமன்றம் கருத்தில்கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார். இவர்களின் வழக்கறிஞர்களான பி.குமார், மணிசங்கர் ஆகியோரும் இதையே தங்கள் கருத்துகளாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த நீதிமன்றம், ‘நிரஞ்சன் ஹேமச்சல் vs மகாராஷ்டிரா அரசு’ என்ற வழக்கின் தீர்ப்பின் சாரத்தை நினைவுபடுத்துகிறது. அந்தத் தீர்ப்பில், ‘ஊழலையும் அதன் தாக்கத்தையும் எடைபோடும்போது, குற்றம் செய்தவரின் தகுதியை வைத்து அதை எடை போடக் கூடாது. அப்படிச் செய்யவும் முடியாது. ஏனென்றால், ஊழல் என்பது ஒரு தேசத்தின் வளர்ச்சி. தொலைநோக்குத் திட்டம் என தேசத்தின் முன்னேற்றத்துக்கான அனைத்து அம்சங்களையும் சிதைத்து தேசத்தைப் பாழாக்கும். பொருளாதார வளர்ச்சியைச் சீர்குலைத்துக் குழி தோண்டிப் புதைத்துவிடும்’ என்று உச்ச நீதிமன்றம் நிரஞ்சன் ஹேமச்சல் வழக்கில் குறிப்பிட்டு உள்ளது. அதைக் கருத்தில்கொண்டே இந்த வழக்கின் தீர்ப்பை நோக்கி நாம் போக வேண்டும். ஏனென்றால், அதிகாரத்தில் உள்ளவர்களின் அதிகார மீறல், பொறுப்பில் உள்ளவர்கள் பேராசை காரணமாக தவறான வழிமுறைகளில் பொருளீட்டும் வேட்கை போன்றவற்றுக்கு இந்த வழக்கு மிகச் சிறந்த உதாரணம். அதிகாரத்தில் உள்ளவர்களின் இதுபோன்ற செயல்பாடுகள் ஜனநாயக நாட்டின் கட்டமைப்பைத் தகர்த்துவிடும்.

பொது ஊழியர் ஆவதற்கு முன்பாக குற்றவாளிகள் தரப்பில் காட்டிய வருமானம் 2 கோடி ரூபாய். ஜெ-சசி என்டர்பிரைசஸ் நிறுவனம், ஜெயா பப்ளிகேஷன் ஆகியவற்றின் வருமானங்களும் இந்த இரண்டு கோடி ரூபாய்க்குள் அடங்கிவிடுகிறது. ஆனால், பொறுப்பில் இருந்த ஐந்து ஆண்டுகளில் அவர்களின் வருமானம் உயர்ந்துள்ள வேகத்தை நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. இவர்கள் தரப்புக்குச் சொந்தமான பண்ணை 900 ஏக்கர் பரப்பை உடையது. அதை வெறும் ஏழு கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாகக் கணக்கு சமர்ப்பித்துள்ளனர். அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச விலையில்கூட இப்படி வாங்க முடியாது. அதாவது வெறும் 10,000 ரூபாய்க்கு ஒரு ஏக்கர் நிலம் என்ற வகையில் வாங்கி உள்ளனர். இப்படிப் பார்த்தால் ஒரு முழு கிராமத்தையே வாங்கிவிடலாம். இவர்களின் நிறுவனங்கள் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்களைத் தங்களுக்குச் சொந்தமாக வைத்துள்ளனர். ஆனால், அந்த 3 ஆயிரம் ஏக்கர் நிலம் எந்த வருமானத்தில் வாங்கப்பட்டது என்பதை அவர்களால் சொல்ல முடியவில்லை. அவற்றின் மதிப்பு எல்லாம் அரசு மதிப்பீட்டில் கணக்கிடப்பட்டு, இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. சந்தை மதிப்பீட்டின்படி கணக்கிட்டால், இவற்றின் மதிப்பை நாம் கற்பனையில்கூட கணக்குப் போட முடியாத அளவில் உயர்ந்து நிற்கும்.

ஜெயலலிதா இப்படிச் சொத்துகளை வாங்குவதற்கு மற்றவர்கள் உதவி உள்ளனர். புதிது புதிதாக நிறுவனங்களைத் தொடங்கியும் செயல்படாத நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தியும் ஜெயலலிதா சொத்துகளைச் சேர்க்க மற்றவர்கள் உதவியுள்ளனர். அந்த நிறுவனங்களில் யாரும் எந்த முதலீடும் செய்யவில்லை. அவற்றின் பங்குகளை வாங்கவில்லை. அதில் எந்த வர்த்தகமும் நடக்கவில்லை. ஆனால், நிறுவனம் இவர்களுக்குச் சொந்தமாக உள்ளது. அவற்றின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி, சம்பாதித்த சொத்துகளை அந்தக் கணக்கில் சேமித்து வைக்கவும் அவற்றைத் தங்களுக்கு உரியதாக்கிக் கொள்ளவும் மட்டுமே செய்துள்ளனர். வாதப் பிரதிவாதங்களில் இவை எல்லாம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகி உள்ளது. அதாவது சொத்துகளை வாங்கிக் குவிப்பதற்கான பணப்பரிமாற்றம் மட்டுமே இந்த வங்கிக் கணக்குகளில் நடந்துள்ளது.

தமிழ்நாடு அரசாங்கத்தின் மிகப் பெரிய பொறுப்பில் இருந்துகொண்டு, ஜெயலலிதா இந்தக் குற்றங்களில் ஈடுபட்டது குற்றத்தின் கனத்தை அதிகரிக்கிறது. ஏன் அதிகரிக்கிறது என்றால், ‘மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி’ என்று நீதிமொழி அறிவுறுத்துவதை இங்கு உணர வேண்டும். அந்த வகையில் பார்த்தால், ஜெயலலிதா தனக்குக் கீழ் இருந்த அரசு இயந்திரங்கள், கட்டமைப்புகள், அவற்றைச் சார்ந்த பொதுமக்கள் என ஒட்டுமொத்த சமூகத்துக்கும் தவறான வழியைக் காண்பித்துள்ளார். இப்போது இவர்களுக்குத் தண்டனை வழங்கும்போது, இங்கு ‘பி.சுப்பையா vs கர்நாடக அரசு’க்கும் வழக்கில் இடையில் நடந்த கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின் சாரத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன். அந்தத் தீர்ப்பில், ‘உயர்ந்த பொறுப்பில் இருப்பவர் தவறு செய்யும்போது, அதில் காட்டப்படும் சலுகை, ஒரு சமூகத்துக்குச் செய்யும் கேடாக முடியும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தன் மீது கருணைகாட்ட வேண்டும் என்பதற்காகக் குற்றவாளிகள் சொன்ன காரணங்கள் எதுவும் நியாயமான காரணங்கள் அல்ல. வழக்கு 18 ஆண்டுகள் நடந்தது என்பதில் சந்தேகம் இல்லை. அதற்குக் காரணம் யார் என்பதையும் இப்போது ஆராய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், நீதிக்குச் சமாதிகட்ட முயற்சிகள் நடந்ததால்தான் இந்த வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் இந்த வழக்குக்கு 5 ஆண்டுகளுக்கு தடை இருந்ததை யாரும் மறுக்க முடியாது. ஆனால், அதன் பிறகு நிறைய நேரத்தை வீணடித்தது குற்றவாளிகளே. அதையும் யாரும் மறுக்க முடியாது. இந்த வழக்குக்கு எந்த வகையிலும் பயன்தராத விஷயங்களைக் கேட்டு தாமதம் செய்தனர். இந்த வழக்குக்கு எந்தத் தொடர்பும் இல்லாத சட்ட நடைமுறைகளைச் சொல்லி தாமதம் செய்தனர். தேவையற்ற காரணங்களைச் சொல்லி சலுகைகளைப் பெற்று வழக்கை தாமதம் செய்தனர். இப்படியே அவர்கள் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்தனர். எனவே, இவர்கள் சொன்ன காரணங்கள் தண்டனையைக் குறைப்பதற்கு ஏற்ற காரணங்கள் அல்ல.

மேலும், குற்றத்தின் தீவிரம், சொத்துகளின் அளவு, அவற்றைச் சம்பாதிக்கக் குற்றவாளிகள் பயன்படுத்திய வழிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் தண்டனையை தீர்மானிக்க முடியும். இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்க சட்டத்தில் இடம் உள்ளது. சட்டம் சொல்லும் உச்சபட்ச தண்டனையில் பாதிக்கும் மேலாக இவர்களுக்கு வழங்கினால்தான் இந்த வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டதாகும். ஏனென்றால் இந்த வழக்கின் தீவிரம் அப்படி. அந்தவகையில் ஒவ்வொரு குற்றவாளிக்கும் 4 ஆண்டுகளை சிறைத் தண்டனையாக விதிக்கிறேன்.’’

பரப்பன அக்ரஹாரா காட்சிகள்!

ஜெயலலிதா அடைக்கப்பட்டிருக்கும் பரப்பன அக்ரஹாரா சிறைசாலையை ஒட்டிய பகுதிகள், அவர் பெயிலில் வெளியில் வரும் காலகட்டம் வரை பரபரப்பின் உச்சத்தில் இருந்தது. அந்தக் காட்சிகளில் இருந்து...

 திரும்பிப்போன தமிழக முதல்வர்!

பன்னீர்செல்வம் முதல்வர் என்று தீர்மானிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமை இரவே ஜெயலலிதாவைச் சந்தித்து ஆசி பெற்று, பதவி ஏற்பதாகச் சொன்னதால் அனைத்து மீடியாக்களின் பார்வையும் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையை நோக்கியே இருந்தது. ஆனால் அன்று இரவு அவர் வரவில்லை. அடுத்த நாள் திங்கள்கிழமை காலை ஜெயலலிதாவைச் சந்தித்து ஆசி பெற இருப்பதாகச் சொல்லப்பட்டதால் காலை 6 மணிக்கே பத்திரிகையாளர்கள் குவிந்தனர். ஆனால், வரவில்லை. பதவி ஏற்ற திங்கள்கிழமை இரவு சிறைக்கு வருவதாக இருந்தது. ஆனால் சிறைக்கு வராமல் மௌடன் ரோட்டில் உள்ள லீலா பேலஸ் அருகே உள்ள மைத்ரி ஹோட்டலுக்குச் சென்றுவிட்டார். அடுத்த நாள் வருவார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், கடைசிவரையில் சிறைக்கு வராமலேயே சென்னைக்குத் திரும்பிவிட்டார் பன்னீர்செல்வம்.

''இந்திய அரசியல் அமைப்பில் பற்றுகொண்டு அதன் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுதான் முதல்வர் பதவியை ஏற்றுக் கொள்கிறார். அவர் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தைக் காக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர். அரசியல் அமைப்புச் சட்டத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தண்டனைக் கைதியாக சிறையில் இருக்கும் ஒருவரை முதல்வர் பார்ப்பது பெரும் சட்ட பிரச்னை ஆகிவிடும்'' என்று தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு மூத்த சட்ட ஆலோசகர்கள் அறிவுறுத்தியதால் சிறைக்குச் செல்லாமல் திரும்பி சென்னைக்கு சென்றுவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது.

 வீரபாண்டியார் வழியில் அ.தி.மு.க அமைச்சர்கள்!

கடந்த தி.மு.க ஆட்சியில் வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ் ஆறு பேர் கொலை வழக்கில் குற்ற விசாரணைக் கைதியாக சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது வீரபாண்டி ஆறுமுகம் சைரன் வைத்த அரசு வாகனத்தில் தேசியக் கொடியோடு சிறைக்குச் சென்று பாரப்பட்டி சுரேஷைப் பார்த்துவிட்டு வந்தது பெரும் சட்ட விதி மீறல் என்று ஜெயலலிதாவே அறிக்கைவிட்டார். ஆனால் ஜெயலலிதா குற்றவாளி என நீதிமன்றம் அறிவிக்கப்பட்டு தண்டனைக் கைதியாக உள்ளே இருக்கும்போது வனத் துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், சுற்றுச்சூழல் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் ஆகியோர் சைரன் வைத்த அரசு வாகனத்தில் தேசிய கொடியோடு சிறைச் சாலை வளாகத்துக்குள் சென்றார்கள். எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியைக் கழற்றி வைத்துவிட்டு உள்ளே சென்றார்.

 காரப் பொரியும் கடலை உருண்டையும்!

முதல் மூன்று நாட்கள் அமைச்சர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள், மேயர்கள் மற்றும் நகர, ஒன்றியச் செயலாளர்கள் உட்பட அ.தி.மு.க-வைச் சேர்ந்த அனைவரும் வந்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தனர். இதனால் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலை வளாகம் முழுவதும் பெரும் பரபரப்பாகவே இருந்தது. இதனால் அந்த வழியாகச் சென்ற வாகனங்கள் நெரிசலில் சிக்கின. இப்போது காலை 10 மணிக்கு மேல் ஒரு சில அமைச்சர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் மட்டும் வருகிறார்கள். சிறைச்சாலை வளாகத்துக்குள் காரப் பொரியையும் கடலை உருண்டையும் சாப்பிட்டுவிட்டு, பொழுது சாய்ந்ததும் புறப்பட்டுவிடுகின்றனர். அதனால், பரப்பன அக்ரஹாரா ரோடு வெறிச்சோடி காட்சியளிக்கிறது.

 சைரன் வைத்த காரில் தம்பிதுரை!

அமைச்சர்கள் பெரும்பாலும் பெங்களூருவில் உள்ள ஸ்டார் ஹோட்டல்களில் தங்கியுள்ளனர். அவர்களில் ஒரு சிலர் தினமும் காலை 10 மணிக்கு பரப்பன அக்ரஹாராவுக்கு வருகின்றனர். அமைச்சர்களுக்காக அவர்களது உதவியாளர்கள் பிளாஸ்டிக் சேர்களை எடுத்து வருகிறார்கள். அந்த சேர்களை மரத்தடியில் போட்டு உட்கார்ந்து கொள்பவர்கள், மதியம் வரை பேசியபடியே இருக்கிறார்கள். அங்கேயே மதிய உணவு வருகிறது. மரத்தடியில் அமர்ந்தபடியே மதிய உணவு சாப்பிடுகிறார்கள். சிலர் அங்கிருந்து சாப்பிடுவதற்காக ஹோட்டலுக்கு கிளம்பிவிடுகிறார்கள். மாலை 6 மணி ஆனதும், கொசு அதிகம் இருப்பதாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிடுகிறார்கள்.

 மண்டை உடைக்கும் போராட்டம்!

திருவண்ணாமலையில் இருந்து வந்திருந்த அ.தி.மு.க-வினர் சிலர், 'நாங்க அம்மாவை பார்த்தே ஆகணும்!’ என்று செக்போஸ்டில் இருந்த போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 'இப்போ நீங்க போகலைன்னா நாங்க அடிச்சு விரட்ட வேண்டியிருக்கும்’ என்று போலீஸார் எச்சரித்தனர். கடுப்பாகிப்போன அ.தி.மு.க-காரர் ஒருவர், ''வீரப்பன் இல்லாமல் உங்களுக்குக் குளிர்விட்டுப் போச்சு. வீரப்பன் இருந்திருந்தா இந்த நேரம் நீங்க அம்மாவை உள்ளே வெச்சுருக்க முடியுமா... அம்மா மட்டும் வெளியில வரட்டும் அப்புறம் நாங்க யாருன்னு காட்டுறோம்!'' என்று கோபப்பட்டார். அதற்கு அங்கிருந்த போலீஸ்காரர், ''வீரப்பனை சுட்டுக் கொன்றதே உங்க அம்மாதானே!'' என்றதும், அ.தி.மு.க பார்ட்டி கப்சிப் ஆனார். செங்கம் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல், இளங்கோ, பிரகாஷ், இம்தியாஸ் ஆகியோர் சிறைக்கு எதிரே உட்கார்ந்து தலையை மொட்டை அடித்துக் கொண்டனர். குளித்துவிட்டு வந்து, சிறையை நோக்கி சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டு கன்னத்தில் போட்டுக்கொண்டனர்.

மொட்டை போட்ட அதே குழுவினர் மறுநாள் ஒரு தேங்காய் மூட்டையுடன் சிறை செக்போஸ்ட் அருகே வந்தனர். ''அம்மாவை வணங்கி இங்கே தேங்காய் உடைக்கப் போகிறோம்!'' என்று சொல்லிவிட்டு, ஜெயிலை நோக்கி கும்பிட்டுவிட்டு தேங்காய்களை ரோட்டில் உடைக்க ஆரம்பித்தனர். போலீஸார் பதறியபடி ஓடி வந்து தேங்காய்களைப் பறிமுதல் செய்ய முயற்சித்தனர். ''தேங்காய் உடைக்கிறதை தடுத்தீங்கன்னா உங்க மண்டையை உடைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம்!'' என்று அவர்கள் ஆக்ரோஷமாகக் கத்தினார்கள். அதனால் போலீஸார் அமைதியாக... 101 தேங்காய்களையும் ரோட்டில் உடைத்துவிட்டு மீண்டும் அங்கேயே விழுந்து பயபக்தியுடன் வணங்கினார்கள்.

 கொடுத்தாலும் விடமாட்டோம்!

சிறைக்குச் செல்லும் செக்போஸ்ட்டில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்குக் குவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மூன்று வேளையும், வாட்டர் பாட்டில், டீ, காபி, மற்றும் மதிய உணவு வாங்கிக் கொடுப்பது அங்கே வரும் அ.தி.மு.க-வினர்தான். போலீஸ்காரர்களை எப்படியாவது நட்பாக்கி ஜெயில் வளாகத்துக்குள் நுழைந்துவிட வேண்டும் என்று படாதபாடு படுகிறார்கள். அவர்கள் கொடுக்கும் அனைத்தையும் மறுக்காமல் வாங்கிக்கொள்கிறார்கள் போலீஸார். ஆனால், யாரையும் உள்ளே மட்டும் அனுமதிப்பது இல்லை. பரப்பன அக்ரஹாராவுக்கு வரும் தொண்டர்கள் கறுப்பு சட்டை அணிந்து வருகிறார்கள். பலர் பெங்களூருக்கு வந்துதான் கருப்புச் சட்டை வாங்குகிறார்கள். இதனால், அங்கே கறுப்புச் சட்டைக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற ஜாமீன் காட்சிகள்!

சிறையில் உள்ள ஜெயலலிதா, ஜாமீன் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி சந்திரசேகரய்யா தள்ளுபடி செய்தார். அதனை அடுத்து ஜெயலலிதாவின் ஜாமீன் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு விசாரணைக்குப் போனது. எப்படியாவது ஜெயலலிதாவை ஜாமீனில் எடுத்துவிட வேண்டும் என நவநீதகிருஷ்ணன் எம்.பி உள்ளிட்ட அ.தி.மு.க வழக்கறிஞர்கள் டெல்லி தமிழ்நாடு ஹவுஸில் கேம்ப் அடித்தனர். ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஆஜராவதற்கு ஃபாலி எஸ்.நாரிமன், கே.டி.எஸ்.துள்சி, சுஷில்குமார் போன்ற மூத்த வழக்கறிஞர்களின் பெயர்களைப் பரிசீலித்தனர். நாரிமன் சம்மதித்துவிட்டால், பெயில் கிடைத்துவிடும் என்று நம்பினர். அவர்கள் நம்பிக்கை வீண் போகவில்லை.

 அச்சமடைந்த அ.தி.மு.க-வினர்

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் கடந்த 13-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. சசிகலாவுக்கு ஆதரவாக கிரிமினல் வழக்குகளில் புகழ் பெற்ற கே.டி.எஸ்.துள்சி ஆஜரானார். இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு ஆதரவாக வழக்கறிஞர் சுஷில்குமார் ஆஜரானார். மனுக்கள் எடுத்துக்கொள்ளப்பட்ட 13-ம் தேதியே வாதத்தை அனுமதிக்காமல், தலைமை நீதிபதி சம்பந்தப்பட்ட நீதிபதி அமர்வு விசாரணைக்கு 17-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகக் குறிப்பிட்டார். அதனால், அ.தி.மு.க தரப்பு அச்சம் அடைந்தது. அ.தி.மு.க-வின் முக்கியப் பிரமுகர்கள் சிலர் டெல்லியில் முகாமிட்டனர்.

 நாரிமனுக்கு எதிர்ப்பு

ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நாரிமன் ஆஜரானது, டெல்லி வழக்கறிஞர்கள் வட்டாரத்தை ஆச்சர்யப்படுத்தியது. நாரிமன் இந்த வழக்கில் ஆஜராவதற்கு எதிராக உச்ச நீதிமன்ற பதிவாளரிடம் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி புகார் கொடுத்தார். நாரிமனின் மகனான ரோஹின்டன் நாரிமன், உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருப்பதால், இவர்கள் அந்த வழக்கில் தங்கள் செல்வாக்கை செலுத்துவார்கள் என்று அதில் தெரிவித்திருந்தார். அது உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பைக் கிளப்பியது.

 வழக்கத்துக்கு மாறான ஜாமீன்

தலைமை நீதிபதி அமர்வின் முன்பாக ஜாமீன் மனு மீதான விசாரணை பகல் 12 மணிக்கு முன்பாகவே தொடங்கியது. சுமார் 45 மணி நிமிடங்கள் விசாரணை நடைபெற்றது. வழக்கறிஞர் நாரிமனுக்கும் தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்துவுக்கும்தான் வாதம். இடையே 10 நிமிடங்கள் சுப்பிரமணியன் சுவாமிக்குக் கிடைத்தன. அந்த அமர்வில் இருந்த மற்ற நீதிபதிகள் மதன் பி.லோகுர் மற்றும் ஏ.கே.சிக்ரி அமைதியாகக் கேட்டுக்கொண்டு இருந்தனர். இறுதியில், ஜாமீன் வழங்குவதாக தலைமை நீதிபதி கூறினார். வழக்கமான முறைகளுக்கு மாறாக, ஜெ. தரப்பினருக்கு எப்படி ஜாமீன் வழக்கப்பட்டது என்பது குறித்து பல்வேறு விவாதங்கள் நடக்கின்றன.

 நேரில் வர வேண்டாம்!

உச்ச நீதிமன்றத் நீதிபதிகளின் உத்தரவை, மேலோட்டமாகப் பார்த்தால், ''டிசம்பர் 18-ம் தேதி வரை தண்டனையை நிறுத்தி வைக்கிறோம். வீட்டுக் காவல் எல்லாம் எதுவும் கிடையாது. ஜெயலலிதாவை ஜாமீனிலேயே விடுதலை செய்கிறோம். ஜெயலலிதா தரப்பு கேட்டது 6 வாரகால அவகாசம்தான். ஆனால், நாங்கள் 8 வாரம் அவகாசம் கொடுக்கிறோம். மேல் முறையீட்டில் ஜெயலலிதா நேரில் ஆஜராகத் தேவை இல்லை. அவருடைய வழக்கறிஞர்கள் வந்தாலேபோதும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 ஜெயலலிதாவுக்கு செக்!

உச்ச நீதிமன்ற உத்தரவில், ''ஜாமீன், விடுதலை மற்றும் தண்டனைக் குறைப்பு ஆகியவற்றைக் கேட்பதற்கு ஜெயலலிதாவுக்கு உரிமை உண்டு. ஆனால், பிரபல வழக்கறிஞர்களை எல்லாம் வைத்து வாதாடி, இந்த வழக்கை ஜெயலலிதா 18 ஆண்டுகள் இழுத்தடித்தார். இப்போது இதில், நாங்கள் ஜாமீன் வழங்கினால், இந்தச் சலுகையைப் பயன்படுத்தி மேல்முறையீட்டு வழக்கை 20 ஆண்டுகளுக்கு அவர் இழுத்தடிப்பார் என்று ஏன் நினைக்கக் கூடாது? என்ற கேள்வியை எழுப்பினர்.

''தற்போது ஜாமீன் வழங்குகிறோம். சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தண்டனையை டிசம்பர் 18-ம் தேதி வரை நிறுத்தி வைக்கிறோம். ஆனால், இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கான வேண்டுகோள் மனுவை நீங்கள் உடனடியாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். 35 ஆயிரம் பக்கங்கள் உள்ள வழக்கின் ஆவணங்களை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் டிசம்பர் 17-ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். அதில் ஒரு நாள் தாமதம் ஏற்பட்டாலும், நாங்கள் ஜாமீனை உடனடியாக ரத்து செய்வோம். மேல் முறையீட்டு வழக்கை மூன்றே மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். ஓர் ஒத்திவைப்புக்குக்கூட ஜெயலலிதா தரப்பு முயற்சிக்கக் கூடாது. தங்களது உத்தரவில், மற்ற மனுதாரர்களுக்கு (தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் மற்றும் சுப்பிரமணியன் சுவாமி) ஜெயலலிதா தரப்பில் இருந்து எந்தவித அச்சுறுத்தலும் இருக்கக் கூடாது. அப்படி ஏதாவது ஏற்பட்டு, அந்த மனுதாரர்கள் நீதிமன்றத்தை அணுகினால், உடனடியாக ஜாமீனை ரத்து செய்துவிடுவோம்'' என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

சென்னைக்குப் புறப்பட்டார் ஜெயலலிதா!

உச்ச நீதிமன்றம் 17-ம் தேதி மதியம் 12.30 மணிக்கு ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியது என்ற செய்தி வெளியே கசிந்ததும் உற்சாகக் கொண்டாட்டம் ஆரம்பித்தது. தண்டனை கொடுத்தவர்களே பெயில் கொடுக்க வேண்டும் என்பதால், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு நடைபெற்ற பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ரிலீஸ் ஆர்டர் வாங்குவதற்காக அ.தி.மு.க நிர்வாகிகள் காத்திருந்தனர். ஆனால், அன்று மாலை வரை பெயில் உத்தரவு வரவில்லை. 18-ம் தேதி காலை நீதிபதி குன்ஹாவின் வருகையை எதிர்பார்த்து ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் குமார், மணிசங்கர், நவநீதகிருஷ்ணன், செந்தில், அன்புக்கரசு, செல்வக்குமார், கருப்பையா ஆகியோர் காத்திருந்தார்கள். நீதிபதி குன்ஹாவைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே அ.தி.மு.க நிர்வாகிகள் பலரும் சிறப்பு நீதிமன்றத்தில் கூடியிருந்தனர். அந்த நேரத்தில் பவானி சிங் தன் சேம்பரில் அமர்ந்திருந்தார். சரியாக 11.05-க்கு சிரித்த முகத்தோடு அனைவருக்கும் வணக்கம் சொல்லி அமர்ந்தார் நீதிபதி குன்ஹா. ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார், உச்ச நீதிமன்ற பெயில் ஆர்டரை கொடுத்தார். அதைப் படித்துப் பார்த்த குன்ஹா, ''அனுமதிக்கிறேன்'' என்றார். அதன் பிறகு ஷ்யூரிட்டி ஆவணங்களை சரிபார்த்தார். ஜெயலலிதாவுக்கு கர்நாடக மாநில அ.தி.மு.க செயலாளர் புகழேந்தியின் மனைவி குணஜோதியும், டாக்டர் வெங்கடேஷின் சகலை பரத்தும் ஷ்யூரிட்டி கொடுத்திருந்தார்கள்.

விசாரணைக்குப் பிறகு ரிலீஸ் ஆர்டர் டைப் செய்யப்பட்டது. இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு நீதிபதி குன்ஹா அதில் கையெழுத்திட்டார். கோர்ட் தபால் அலுவலகத்தில் அந்த பெயில் ஆர்டர் கொடுக்கப்பட்டது. தபால் ஊழியர் வெங்கடேஷை, அ.தி.மு.க வழக்கறிஞர்கள் தங்கள் காரில் வரச் சொன்னார்கள். ஆனால் அவரோ, ''அரசு விதிப்படி நான் என்னோட வாகனத்தில்தான் போக வேண்டும். இல்லைன்னா அரசு வாகனத்தில் போகலாம்! உங்களோடு வர முடியாது'' என்று மறுத்துவிட்டார். பிறகு, போலீஸ் வாகனத்தில் பெயில் ஆர்டர் பரப்பன அக்ரஹாராவுக்குப் போக... அந்த வாகனத்தைப் பின்தொடர்ந்தனர் அ.தி.மு.க வழக்கறிஞர்கள். சரியாக 3 மணிக்கு பெயில் ஆர்டர் ஜெயிலில் கொடுக்கப்பட்டது.

 'திருப்பிக் கொடுக்கப்பட்ட வாட்ச்!’

பெயில் ஆர்டர் சிறைக்கு வருவதற்கு முன்னதாகவே ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகிய மூவரும் புறப்படத் தயாராக இருந்தனர். 'ஆர்டர் சீக்கிரமே வந்தாலும் நாம் மூன்று மணிக்குப் பிறகு கிளம்பலாம்!’ என்று சசிகலாவிடம் சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா. மதியம் ஒரு மணி அளவில் ஜெயலலிதா உட்பட மூன்று பேருக்கும் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. சிறைக்குள் அடைக்கப்பட்டபோது, ஜெயலலிதா கையில் கட்டியிருந்த வாட்ச் மற்றும் வைர கம்மல்களை சிறை நிர்வாகம் வாங்கிக் கொண்டது. அந்த வாட்ச், வைர கம்மல்களை ஜெயலலிதாவிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டு, அதற்காக கையெழுத்தும் பெறப்பட்டது. அதேபோல சசிகலா, இளவரசி ஆகியோரின் நகைகளை அவர்களிடம் திருப்பிக் கொடுத்தனர் சிறை அதிகாரிகள். சரியாக 3.11-க்கு சிறையில் இருந்து வெளியே வந்தார் ஜெயலலிதா. வந்ததும் ஒருமுறை திரும்பி ஜெயிலைப் பார்த்தார். அதன் பிறகே காரை நோக்கி நடந்தார்.

 காலில் விழுந்த முதல்வர்!

சிறைக் கதவுகளுக்கு வெளியே தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அமைச்சர்களும் காத்திருந்தனர். ஜெயலலிதாவுக்கு இஸட் பிளஸ் பாதுகாப்பு இருப்பதால் அமைச்சர்களைக்கூட அருகே அனுமதிக்காமல் கயிறு கட்டப்பட்டு, அதற்குப் பின்பாகவே நிறுத்தப்பட்டனர். முதல்வர் பன்னீர்செல்வம் மட்டும் கயிறுக்கு மறுபுறம் இருந்தார். ஜெயலலிதா வெளியே வந்ததும் காரில் ஏறுவதற்கு முன்பாக, அவரது காலில் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டார். அவரைப் பார்த்து எந்த ரியாக்‌ஷனும் காட்டாமல் இறுகிய முகத்துடன் காரில் ஏறிக்கொண்டார் ஜெயலலிதா. அதே காரின் பின் சீட்டில் சசிகலாவும், இளவரசியும் ஏறினர். காரின் நான்கு டயர்களுக்கும் எலுமிச்சைப் பழங்கள் வைக்கப்பட்டன. பூசணிக்காயில் சூடம் ஏற்றி ஆரத்தி எடுக்கப்பட்டு காருக்கு முன்பாக உடைக்கப்பட்டது. அதன் பிறகே ஜெயலலிதா கார் அங்கிருந்து கிளம்பியது. ஜெயில் வாசலில் இருந்து செக்போஸ்ட் வரை, அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், மேயர்கள், எம்.பி-க்கள், முக்கியப் பிரமுகர்கள் என வரிசைகட்டி நின்றிருந்தனர். அவர்களைப் பார்த்தபோதும் ஜெயலலிதா அமைதியாகவே இருந்தார்.

 தலைக்குப்புற விழுந்த மேயர்!

ஜெயலலிதாவைப் பார்த்ததும் அனைவரும், 'அம்மா வாழ்க! தங்கத் தாரகையே, புரட்சித்தலைவி வாழ்க!’ என கோஷங்கள் எழுப்பி உணர்ச்சிவசப்பட்டதும், கர்நாடக போலீஸார் மொழி புரியாமல் என்னவோ, ஏதோவென பதறிவிட்டனர். பாதுகாப்புக்காக கட்டப்பட்டிருந்த கயிற்றை வேகமாக போலீஸார் பிடித்து இழுக்க... அந்தக் கயிறு மதுரை மேயர் ராஜன் செல்லப்பா காலில் மாட்டி, அவர் தலைக்குப்புற விழுந்தார். தலையில் அடிபட்டு எழு முடியாமல் கதறி அழுதார். அவரை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. ஜெயலலிதாவின் கார் செக்போஸ்ட்டை தாண்டிய பிறகுதான் மேயரை, மதுரை மாநகரச் செயலாளர் முத்துராமலிங்கம் தூக்கிவிட்டார்.

பரப்பன அக்ரஹாராவில் இருந்து கிளம்பிய ஜெயலலிதாவின் கார், சரியாக 3.50 மணிக்கு ஹெச்.ஏ.எல் ஏர்போர்ட்டை வந்தடைந்தது. வழி நெடுகக் கூட்டத்தைப் பார்த்த பிறகே ஜெயலலிதா முகத்தில் சின்ன உற்சாகம் தெரிந்தது. ஏர்போர்ட்டில் காத்திருந்து கையசைத்தவர்களைப் பார்த்துச் சிரித்தார். வணக்கமும் வைத்தார். ஏர்போர்ட்டில் ஜெயலலிதாவுக்காக காபி தயாராக வைத்திருந்தார் இளவரசியின் மகன் விவேக். அங்கே சற்று இளைப்பாறி காபி சாப்பிட்டுவிட்டு சென்னைக்குப் புறப்பட்டார்.

ஸ் பெ

unread,
May 16, 2015, 3:53:40 PM5/16/15
to panbudan

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்கள். அதை எதிர்த்து ஜெயலலிதா தரப்பு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ததோடு, நான்கு பேருக்கும் ஜாமீன் கேட்டார்கள். ஆனால் கர்நாடக உயர்நீதிமன்றம் ஜாமீன் கொடுக்க மறுத்துவிட்டது.

அதையடுத்து ஜெ தரப்பு உச்சநீதிமன்றத்துக்குச் சென்றார்கள். உச்சநீதிமன்றம் நான்கு பேருக்கும் ஜாமீன் வழங்கியதோடு, ‘டிசம்பர் 18-ம் தேதிக்குள் மேல்முறையீட்டு ஆவணங்கள் அனைத்தையும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துவிட வேண்டும்’ உள்ளிட்ட நிபந்தனைகளோடு ஜாமீன் வழங்கியது.

அதனால் ஜெ தரப்பு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் 2014 டிசம்பர் 17-ம் தேதியே அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்தது. அதையடுத்து உச்சநீதிமன்றம் நான்கு பேருக்கும் நான்கு மாதத்துக்கு ஜாமீன் அதிகப்படுத்தியது. உயர்நீதிமன்றத்தில் தனி பெஞ்ச் அமைத்து, மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றது. இதையடுத்து யார் இந்த வழக்கில் நீதிபதியாக வருவார்கள் என்று தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில்...

புத்தாண்டு தினத்தில் கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வஹேலா, கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தனி பெஞ்ச் அடங்கிய சிறப்பு அமர்வு நீதிபதியாக சி.ஆர்.குமாரசாமியை அறிவித்தார். அந்த மேல்முறையீட்டு மனு விசாரணை காட்சிகளில் சில சுவாரஸ்யமான பக்கங்கள் இங்கே...

இங்கேயும் வாய்தாவில்தான் ஆரம்பித்தார்கள்!

சிறப்பு நீதிமன்றம் ஜெ தரப்பு மீது முக்கியமாக வைத்த குற்றச்சாட்டு... ‘நீதிமன்றத்தை நடத்தவிடாமல் வாய்தா மேல் வாய்தா வாங்கி வழக்கை இழுத்தடித்தார்கள்’ என்பதுதான். மேல்முறையீட்டு விசாரணையிலும் ஜெ. தரப்பு வழக்கறிஞர் குமார், மணிசங்கரின் முதல் வார்த்தையே வாய்தா வேண்டும் என்பதுதான்.

ஜெயலலிதா தரப்பு மூத்த வழக்கறிஞர் குமார்: 12-ம் தேதி வரை எங்களுக்கு வாய்தா வேண்டும்.

நீதிபதி குமாரசாமி: எதற்கு வாய்தா?

குமார்: டெல்லியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர்கள் வாதிட வர இருப்பதால் 12-ம் தேதி வரை ஒத்தி வைக்க வேண்டும்.

நீதிபதி: இந்த மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் மூன்று மாதங்களில் முடிக்கச் சொல்லி இருக்கிறது. அதனால் 1 மணி நேரம்கூட தர முடியாது. நீங்களே மூத்த வழக்கறிஞர்தானே? நீங்களே வாதிடலாம்.

குமார்: மூன்று மாதங்களுக்குள் முடித்துவிடலாம்.

நீதிபதி: வாயால் சொல்வதற்கு நன்றாக இருக்கும், மூன்று மாதங்களில் முடிப்பது கஷ்டம். அதனால் உங்கள் வாதத்தை ஆரம்பியுங்கள்.

இதை கேட்டு குமார் தயங்க... நீதிபதி குமாரசாமி, ‘‘சரி... அவர்கள் வருவதற்குள் வழக்கு பற்றிய வரலாற்றையும், எஃப்.ஐ.ஆர்., குற்றப்பத்திரிகை, சொத்து விவர அட்டவணைகளை வாசியுங்கள்’’ என்றார். அதையடுத்து குமார் ஆரம்பத்தில் இருந்து அனைத்தையும் வாசித்தார். இடையிடையே சந்தேகத்தைக் கேட்டு அறிந்துகொண்டார் நீதிபதி. மாலை நிறைவு செய்யும்போது குமார், ‘‘2 நாட்களாவது வாய்தா கொடுங்கள்’’ என்றார்.

நீதிபதி: இவ்வழக்கு நாள்தோறும் நடைபெறும். நீங்களே நாளைக்கு வரவில்லை என்றால், மற்றவர்கள் வாதிடுவார்கள். எக்காரணம் கொண்டும் வழக்கை தாமதிக்க முடியாது’’ என்றார்.

 அறுபதுகளில் கதாநாயகிகளின் சம்பளம் எவ்வளவு?

குமார்: என் மனுதாரர் (ஜெயலலிதா) 16 வயதில் இருந்தே 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். அறுபது, அறுபத்தைந்துகளில் முன்னணி நடிகையாக இருந்து அதிகமான வருமானங்கள் சம்பாதித்தார். அதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

நீதிபதி: (பவானிசிங்கிடம்) 91-க்கு முன்பு குற்றவாளிகளின் வருமானம் எவ்வளவு?

பவானிசிங்: தெரியவில்லை.

நீதிபதி: (சிரித்துக்கொண்டே) சீனியரான பவானிசிங்குக்கு நிச்சயம் இது தெரியும் அறுபதுகளில் நடிகைகளின் சம்பளம் எவ்வளவு? பவானிசிங்: (சிரித்துக்கொண்டே) தெரியவில்லை.

தொடர்ந்து பவானிசிங்கிடம் நீதிபதி குமாரசாமி சராமரியாக கேள்விகளைக் கேட்டார். அதற்கு பவானிசிங் பதில் சொல்லாமல் விழித்துக்கொண்டிருந்ததைப் பார்த்து நீதிபதி அதிருப்தி அடைந்தார்.

நீதிபதி: வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிப்பு சதவிகிதம் எவ்வளவு?

பவானிசிங்: தெரியவில்லை. (மராடியிடம் கேட்டு 714% என்றார்)

நீதிபதி: 714% எப்படி வந்தது?

பவானிசிங்: தெரியவில்லை. (அன்பழகன் வழக்கறிஞர் சரவணன் பதிலளித்தார். வருமானத்திற்கு அதிகமான சொத்து வகுத்தல் வருமானம் பெருக்கல் 100 = 714% வரும். சிறப்பு நீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பில் 540% கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.)

நீதிபதி: எத்தனை எதிர் தரப்பு சாட்சிகளை விசாரித்தீர்கள்?

பவானிசிங்: (தயங்குகிறார். மராடியைக் கேட்டு...) 99 பேர்

நீதிபதி: அவர்களின் சாட்சியங்களை ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை?

பவானிசிங்: (மௌனம்)

குமார்: சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிறு வரியில் சொல்லி இருக்கிறார். அந்த சாட்சியங்கள் குற்றவாளிகளுக்கு வேண்டப்பட்டவர்களாம். ஆனால், எப்படி வேண்டப்பட்டவர்கள் என்று சொல்லவில்லை. இந்த சாட்சியங்கள் அனைத்தையும் வருமானவரித் துறை ஏற்றுக்கொண்டிருக்கிறது.

நீதிபதி: (பவானிசிங்கைப் பார்த்து) சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பை படித்துவிட்டீர்களா?

பவானிசிங்: படித்துவிட்டேன்.

நிதிபதி: பிறகு ஏன் பதில் சொல்ல மறுக்கிறீர்கள்.

பவானிசிங்: (மௌனம்)

 ஜெயலலிதாவிடம் பணம் இல்லையா?

ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார் இவ்வழக்கின் ஆரம்ப காலகட்ட விவரங்களை நீதிபதி குமாரசாமிக்கு விளக்கி வாதிட்டார்.

குமார்: 1996-ம் ஆண்டு சுப்பிரமணியன் சுவாமி சென்னை மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் புகார் மனு அளித்தார். இந்தப் புகார் மனுவை விசாரித்த நீதிபதி ராமமூர்த்தி, இந்திய தண்டனை சட்டம் 202-ன் படி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் ஏ.டி.ஜி.பி&யாக இருந்த லத்திகாசரணை விசாரிக்க ஆணையிட்டார். அதன்படி லத்திகாசரண் 300 பேரிடம் விசாரணை நடத்தினார். இந்த விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே அன்றைய ஆளுங்கட்சிக்கு வேண்டப்பட்ட ஐ.ஜி-யான வீ.சி.பெருமாளை நியமித்து என் மனுதாரரை குற்றவாளியாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சாட்சியங்களிடம் விசாரணை செய்யாமலேயே பெருமாளே புகாதாரராக இருந்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தார். சென்னை செஷன்ஸ் கோர்ட் இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிட்டதே தவறு.

நீதிபதி: இதை எதிர்த்து ஏன் மேல் முறையீடு செய்யவில்லை. உங்கள் மனுதாரரிடம் பணம் இல்லையா? (இதனை சிரித்துக்கொண்டே கேட்டார்)

குமார்: (மௌனம்)

நீதிபதி: தமிழக ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் புலன்விசாரணை செய்ய அனுமதி அளித்தை எதிர்த்து உங்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை விசாரணை நடத்தலாம் என்று கூறி, உங்கள் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. அந்தத் தீர்ப்பின் நகலை நான் காட்டவா? ஏன் இப்படி உண்மையை மறைத்து சொல்கிறீர்கள். காலையில் இருந்து மாலை வரை நீதிமன்றத்தின் நேரத்தையே வீணாக்கிவிட்டீர்கள்.

 ஜெயலலிதா வீட்டில் சசிகலா இருக்க என்ன காரணம்?

6-வது நாளான ஜனவரி 12-ம் தேதி... நீதிபதி தன் இருக்கையில் அமர்ந்ததும் குமார் எழுந்து, ‘இவர்தான் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வரராவ். இவர் கேரள உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பசந்த். ஏ1 ஜெயலலிதாவுக்காக நாகேஸ்வரராவும், ஏ2 சசிகலாவுக்காக பசந்த்தும் வாதிடுவார்கள்’ என்று அறிமுகம் செய்துவைத்தார்.

டெல்லியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் வாதத்தில் இருந்து... ‘‘வழக்கு காலகட்டத்தில் ஜெயலலிதா எந்தவிதமான சொத்துகளையும் வாங்கவில்லை. வழக்கு காலகட்டத்துக்கு முன்பே பல சொத்துகள் வாங்கப்பட்டது. அதற்கு ஒவ்வொரு ஆண்டும் வருமான வரித்துறையில் கணக்குகள் காண்பித்து வரி செலுத்தியும் இருக்கிறார். வருமான வரித்துறையும் அந்த சொத்துகளை மதிப்பீடு செய்து ஏற்றுக்கொண்டுள்ளது.

அதேபோல சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு சொந்தமான நிறுவனங்களின் சொத்துகளுக்கு வருமான வரித்துறையில் வரிகளைச் செலுத்தி இருக்கிறார்கள். இந்தச் சொத்துகள் அனைத்தும் தங்களுடையது என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். அதை வருமான வரித்துறையினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இப்படியிருக்கும்போது இந்தச் சொத்துகள் அனைத்தும் ஜெயலலிதாவுக்குச் சொந்தமானது என்று தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் குற்றம்சாட்டுவது தவறு. என் மனுதாரரைக் குற்றவாளியாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அன்றைய ஆளுங்கட்சியினரை திருப்திபடுத்தும் விதமாக தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் செயல்பட்டிருக்கிறார்கள்.

ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீட்டில் சசிகலா வசித்து வருகிறார் என்ற ஒரே காரணத்துக்காக சசிகலா பெயரிலுள்ள சொத்துகள் அனைத்தும் ஜெயலலிதாவுக்குச் சொந்தம் என்று சொல்வது அநியாயம்.

ஜெயலலிதா வீட்டில் சசிகலா இருப்பதற்கு என்ன காரணம் என்று ஜெயலலிதா நீதிமன்றத்தில் விளக்க வேண்டும் என்று தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் கூறியிருக்கிறார்கள். என் மனுதாரருக்கு சொந்தமான வீட்டில் யார் இருக்கலாம் என்று முடிவு செய்யும் உரிமை அவருக்குதான் உண்டு. இதில் யாரும் தலையிட முடியாது’’ என்று வாதிட்டார்.

 போயஸ்கார்டன், ஹைதராபாத் திராட்சைத் தோட்டம்...

நாகேஸ்வரராவ்: ‘‘என் மனுதாரருக்கு சொந்தமான மூன்று சொத்துகள் ஹைதராபாத் திராட்சைத் தோட்டம், போயஸ்கார்டன் மற்றும் போயஸ்கார்டன் கூடுதல் கட்டடங்களை தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் உத்தரவின் பேரில் மதிப்பீடு செய்த பொதுபணித் துறை பொறியாளர்கள் கட்டடம் புதுப்பிக்கப்பட்டதற்கான மொத்த செலவாக 13.64 கோடி செலவு செய்துள்ளதாக குற்றம்சாட்டியிருக்கிறார்கள். அதில் சிறிதும் உண்மை கிடையாது. கட்டுமான தொழிலில் அனுபவம் உள்ள பொறியாளர்கள் இந்த கட்டடத்தின் மதிப்பை அளவீடு செய்யவில்லை. அதேபோல கட்டுமான பொருட்களுக்கு வாங்கப்பட்ட எந்த ஒரு ரசீதும் இணைக்கப்படவில்லை.

இந்த மூன்று கட்டடங்களைப் புதுப்பிப்பதற்காக உண்மையில் ஜெயலலிதா செலவு செய்த தொகை 3.52 கோடிதான். அதை வருமானவரித் துறையில் தாக்கல் செய்து அதற்கான ரசீதுகளையும் கொடுத்திருக்கிறோம். வருமானவரித் துறை அதிகாரிகள் அதை ஆய்வுசெய்து ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

அதேபோல கட்டடங்களுக்குப் பயன்படுத்திய டைல்ஸ் ஒரு சதுர அடி 100 ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது. அதை பொதுப்பணித் துறை பொறியாளர்கள் டைல்ஸ் ஒரு சதுர அடி 20,000 ரூபாய் எனப் பதிவு செய்திருக்கிறார்கள். அதற்கு ரசீது கிடையாது. கேட்டால், மும்பையில் பல டைல்ஸ் கடைகளை விசாரித்து போட்டதாக சொல்கிறார்கள். இது ஏற்புடையதல்ல. ஆனால், நாங்கள் டைல்ஸ் எவ்வளவு பணம் கொடுத்து வாங்கினோம் என்பதை மும்பையைச் சேர்ந்த மாடசாமி என்பவர் சாட்சியம் அளித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், வருமானவரித் துறையும் தணிக்கை செய்து ஏற்றுக்கொண்டுள்ளது.

ஆக, வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள கட்டடங்களின் மதிப்பு 28 கோடி என்று குற்றப்பத்திரிகையில் காட்டப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் கட்டடத்தின் மதிப்பு 6 கோடி. ஆனால் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சாட்சியங்களை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. அதற்கான காரணத்தையும் சொல்லவில்ல. அதனால், கட்டடத்தின் மதிப்பை முழுவதுமாக நீக்கவேண்டும்.’’

 கருணாநிதிக்கு 92 வயதாகிறதா?

நாகேஸ்வரராவ் (ஜெயலலிதா வழக்கறிஞர்): 1991-ல் முதல் முறையாக ஜெயலலிதா முதல்வரானார். 1992-ல் அவருடைய 44-வது பிறந்த நாள் தொண்டர்களால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. அப்போது அவருக்கு டிடி&யாக 2.15 கோடி பரிசாகக் கொடுத்தார்கள். அதை 1992 - 93 வருமானவரித் துறையில் காட்டி, ‘பரிசு பொருளாக வந்ததால், வரி கட்ட வேண்டியதில்லை’ என்றதற்கு, வருமானவரித் துறை அதை வருமானமாகக் காட்டி வரி போட்டார்கள். அதை எதிர்த்து நாங்கள் வருமானவரித் துறையில் மேல்முறையீடு சென்றோம். அப்போது எங்கள் தரப்பு வழக்கறிஞராக பல்கிவாலா வாதிட்டார். ஆனால், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மேற்கோள் காட்டி, அரசியலும் தொழில்தான் என்று கூறி, வருமானவரிச் சட்டம் 28-ன் படி தொழில் நிறுவனத்தைப்போல வரி கட்டியாக வேண்டும் என்றது. அதையடுத்து மீண்டும் வருமானவரித் துறை தீர்ப்பாயத்துக்கு மேல்முறையீடு சென்றபோது என் மனுதாரருக்கு டிடி&யாக அனுப்பியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி கீழ் நீதிமன்றத்திலேயே விசாரிக்க சொன்னதையடுத்து, கீழ் நீதிமன்றம் விசாரித்து, சட்டப்படி பரிசு பொருட்கள் வருமானம்தான் என்று தீர்ப்பளித்தது. அதையடுத்து, நாங்கள் வருமானத் வரித்துறையில் வரிகள் கட்டினோம்.

நீதிபதி: (குறுக்கீடு) வருமானவரித் துறையின் நோக்கம் ஒருவரின் வருமானத்துக்கு ஏற்ப வரி வசூலிப்பது மட்டும்தான். ஆனால், கிரிமினல் கோர்ட் அந்த வரி செலுத்துவோருக்கு எங்கிருந்து வருமானம் வந்தது, எப்படி வந்தது என்பதையெல்லாம் விசாரிக்கும். அதனால், வருமானவரித் துறையில் வரி கட்டியதாக அடிக்கடி சொல்ல வேண்டாம்.

நீதிபதி: (அன்பழகன் தரப்பு வழக்கறிஞர் குமரேசனைப் பார்த்து) உங்கள் தலைவருக்கும் கிஃப்ட் தருவார்களா?

குமரேசன்: எங்கள் தலைவர் கலைஞரின் பிறந்தநாள் தினத்தில் நாங்கள் புத்தகம் கொடுப்போம். பணமெல்லாம் கொடுக்க மாட்டோம். (ஜெ தரப்பு வழக்கறிஞர்கள் கோரஸாக கருணாநிதி தன் தொண்டர்களிடம் உண்டி வைத்து வசூலிக்கிறார் என்றார்கள்.)

நீதிபதி: முதல் முறையாக முதலவர் ஆனதும், அனுபவம் இல்லாமல் கொண்டாடி இருக்கிறார்.

நாகேஸ்வரராவ்: இவர்களும் கிஃப்ட் வாங்குவார்கள்.

குமரேசன்: எங்க தலைவர் கருணாநிதி தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராக இருந்திருக்கிறார். அவருக்கு 92 வயதாகிறது. நாங்கள் கிஃப்ட் வாங்க மாட்டோம்.

நீதிபதி: கருணாநிதிக்கு 92 வயதாகிறதா? (கன்னத்தில் கை வைத்து ஆச்சர்யமானார்.)

நீதிபதி: முதலில் திமுக-தான் தொடங்கப்பட்டதா?

குமரேசன்: இல்லை. டி.கே-தான்.

நீதிபதி: டி.கே விளக்கம்...

குமரேசன்: திராவிடர் கழகம். பிறகு தி.மு.க உருவாகியது. அதில் இருந்து எம்.ஜி.ஆர் 1972-ல் விலகி அ.தி.மு.க என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.

 திருமண செலவுகளை பெண் வீட்டார்தான் செய்தார்கள்!

நாகேஸ்வரராவ் (ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்): என்னுடைய மனுதாரர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன். அவருக்கும் நடிகர் சிவாஜி கணேசனின் மகள் வழி பேத்தி சத்யலட்சுமிக்கும் சென்னை எம்.ஆர்.சி கிரவுண்டில் 7.9.1995 அன்று திருமணம் நடைபெற்றது. 2 ஆண்டுகள் கழித்து 17.4.97-ம் தேதி தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை கீழ் செயல்பட்ட பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வுசெய்து திருமணத்துக்கு 6,45,04,222 ரூபாய் செலவு செய்துள்ளதாக செலவுப் பட்டியலில் சேர்ந்துள்ளனர். இது எப்படி சாத்தியமாகும்? இந்தத் திருமணத்துக்கு ஜெயலலிதா 29 லட்சமும், சிவாஜியின் மூத்த மகனும், சத்யலட்சுமியின் தாய்மாமனுமான ராம்குமார் 1 கோடி ரூபாயும் செலவு செய்திருக்கிறார்கள். அனைத்து பரிமாற்றமும் காசோலை மூலமே நடைபெற்றது.

கீழ்நீதிமன்றத்தில் குன்ஹா ‘திருமணப் பெண்ணின் அப்பா இருக்கும்போது தாய்மாமன் செலவு செய்துள்ளதாகச் சொல்வது நம்பும்படியாக இல்லை’ என்று சொல்லி திருமண செலவுகளை 3 கோடி என்று குறிப்பிட்டுள்ளார். சிவாஜி வீட்டில் அனைவரும் கூட்டுக் குடும்பமாக இருந்ததால் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், தன் தம்பி பிரபு மூவீஸ் படங்களை வெளிநாடுகளின் விற்று தன் அக்கா மகள் திருமணத்தை நடத்தினார். ராம்குமார் செலவு செய்த விவரங்களை வருமானவரித் துறையில் சமர்பித்துள்ளார்.

நீதிபதி குமாரசாமி: திருமணத்தின்போது சிவாஜி இருந்தாரா?

குமார்(ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்) : இருந்தார். அதன் பிறகு 2000-ல் இறந்துவிட்டார்.

நாகேஸ்வரராவ்: திருமண மேடைக்கு வெளியே நடைபெற்ற அலங்கார வளைவுகள், கட் அவுட், தோரணங்கள், மின்விளக்கு, பேனர்கள் அனைத்தும் அ.தி.மு.க-வைச் சேர்ந்த காஞ்சி பன்னீர்செல்வம் செய்தார். திருமணத்துக்கு வந்த வி.ஐ.பி-களுக்கு அறைகள் போட்டுக் கொடுத்தது, சாப்பாட்டுச் செலவு அனைத்தும் ஓ.எஸ்.மணியனோடு மூன்று பேர் தாங்களாகவே விரும்பி செய்தார்கள். திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு கொடுத்த வெள்ளித் தட்டுகள் சுதாகரனின் சகோதரர் பாஸ்கரன் வழங்கினார்.

அதற்கான பில்களை வருமான வரித்துறையில் செலுத்தியிருக்கிறார். சுதாகரனுக்கு ஷூ மற்றும் உடைகள் 1.41 லட்சத்துக்கு சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் கொடுத்தார். இப்படி ஒவ்வொருவரும் செலவு செய்திருக்கிறார்கள். தமிழகத்தில் திருமண செலவுகளை பெண் வீட்டாரே செய்வதுதான் வழக்கம். அதனால், இந்தத் திருமணத்திலும் பெண் வீட்டார்தான் செலவு செய்தார்கள். ஜெயலலிதா வெறும் 29 லட்சம் மட்டுமே செலவு செய்தார். திருமண செலவுகள் அனைத்தையும் ஜெயலலிதாதான் செய்தார் என்பது போகிற போக்கில் புழுதியை வாரி தூற்றுவதற்கு சமம். இது அரசியல் காழ்ப்பு உணர்ச்சியால் போடப்பட்ட பொய்யான வழக்கு.

ஜெயலலிதா வீட்டில் சசிகலா தங்கியிருப்பது தவறா?

ஜனவரி 28-ம் தேதி காலை நீதிபதி குமாரசாமி வந்ததும் கீழ் நீதிமன்றத்தில் ஏ2 சசிகலாவுக்காக வாதாடிய மணிசங்கர், ‘இந்த வழக்கில் ஏ2 சசிகலாவுக்காக கேரள உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பசந்த் வாதாடுவார்’ என்று அறிமுகம் செய்துவைத்து அமர்ந்தார். பசந்த்: ஏ1 ஜெயலலிதாவின் அம்மா சந்தியா சினிமா துறையில் சிறந்த நடிகையாக இருந்து நிறைய பணம் சம்பாதித்தார். அவருடைய மகள் ஜெயலலிதா 1964 முதல் தமிழ் சினிமா துறையில் கொடிகட்டி பறந்ததோடு தமிழ் சினிமா துறையின் இளவரசியாகவும் திகழ்ந்தார். அதன் மூலம் நிறைய செல்வங்களை ஈட்டினார். எம்.ஜி.ஆர் மிகச் சிறந்த நடிகர். அவரோடு பல படங்களில் இணைந்து நடித்ததன் மூலம் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்ததால் எம்.ஜி.ஆரின் சிறந்த நட்புக்குரியவராகத் திகழ்ந்தார்.

நீதிபதி: எம்.ஜி.ஆரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்தானே?

பசந்த்: ஆமாம்.

அதன் மூலம் எம்.ஜி.ஆர் 1982-ம் ஆண்டு தன் தலைமையில் செயல்படும் அ.தி.மு.க கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராக ஜெயலலிதாவைச் சேர்த்தார். அன்றில் இருந்து ஜெயலலிதா முழு நேர அரசியல்வாதியாக மாறினார். பிறகு 1984 முதல் 1989 வரை ராஜ்ய சபா எம்.பி&யாக இருந்தார். துரதிஷ்டவசமாக 24.12.1987-ல் மரணமடைந்தார். அதன் பிறகு அ.தி.மு.க கட்சி இரண்டாகப் பிரிந்தாலும் அ.தி.மு.க-வின் பெரும்பாலான தொண்டர்கள் ஜெயலலிதாவையே எம்.ஜி.ஆருக்கு நிகரான தலைவராக ஆதரித்தார்கள். அதன் மூலம் 1989-ல் எம்.எல்.ஏ-வாகவும் இருந்து கட்சியை தன் தலைமையின் கீழ் சிறப்பாக நடத்தியதால் 1991- தமிழகத்தின் முதல்வரானார்.

 ஜெயலலிதா சசிகலா நட்பின் தொடக்கம்!

ஏ1 ஜெயலலிதா திருமணம் ஆகாதவர். ஏ2 சசிகலா பிசினஸ் செய்துகொண்டிருந்தார். அவர் வினோத் வீடியோ விஷன் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இல்லை. ஜெயலலிதா அரசியலிலும், சினிமா துறையிலும் இருந்ததால் அவருடைய வீடியோ பதிவுகள் சம்பந்தமாக சசிகலாவின் நிறுவனத்துக்குப் போக வர இருந்ததால், ஜெயலலிதாவும் சசிகலாவும் நெருங்கிப் பழகினார்கள். ஒரு கட்டத்தில் இந்தப் பழக்கம் சிறந்த நண்பர்களாக மாற்றியது. இவர்களுக்குள் மிக நெருக்கமான ஈர்ப்பு இருந்ததால் ஏ1 ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீட்டில் சசிகலா நிரந்தரமாகத் தங்கினார். இவர்களுக்குள் மனரீதியான விஷயங்களைக்கூட பரிமாறிக்கொள்ளும் அளவுக்கு நெருக்கமானதோடு, இருவரும் பிசினஸ் பார்ட்னர்களாகவும் இருந்தார்கள்.

இவர்களுடைய நட்பை யாரும் பிரிக்க முடியாது. இவர்களுடைய நட்பு பொன் எழுத்துகளால் பொறிக்கப்படக் கூடியது. இந்த நட்பை தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் தவறாக சித்தரித்தார்கள். இரண்டு பெண்கள் ஒரே வீட்டில் தங்கி இருப்பது தவறா?

ஏ2 சசிகலாவின் சகோதரி மகன் சுதாகரன் தன் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சென்னைக்கு வந்தார். சென்னையில் தங்குவதற்காக சின்னம்மாவான சசிகலா இருந்த போயஸ்கார்டன் வீட்டில் இவரும் தங்க ஆரம்பித்தார். அதற்கு ஏ1 ஜெயலலிதா ஆட்சேபணைத் தெரிவிக்கவில்லை. பின்பு அம்மா என்ற முறையில் சுதாகரனுக்கு நடிகர் சிவாஜியின் மகள் வழி பேத்தியை திருமணம் செய்ய ஏற்பாடு செய்து, 7.9.1995-ல் மிகவும் ஆடம்பரமாக திருமணம் நடைபெற்றது. அதற்குக் காரணம், பெண் வீட்டாரான சிவாஜியின் குடும்பம் சமூதாயரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் மிக வசதியாக குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான். இந்தத் திருமணத்தில் பல முன்னணி நடிகர்கள்கூட கலந்துகொண்டார்கள்.

ஏ2 சசிகலாவின் மூத்த அண்ணன் ஜெயராமன். இவர் ஏ1 ஜெயலலிதாவுக்குச் சொந்தமான திராட்சைத் தோட்டத்தில் வேலை பார்த்தார். மின்சாரம் தாக்கி இறந்ததால் அவருடைய மனைவி இளவரசி கைக்குழந்தையோடு தன் கணவனின் தங்கை இருக்கும் போயஸ்கார்டனுக்கு வந்து தங்கினார். அதற்கும் ஜெயலலிதா ஆட்சேபணைத் தெரிவிக்கவில்லை. ஆக மொத்தத்தில் போயஸ்கார்டனில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி மற்றும் அவருடைய கைக்குழந்தை ஆகியோர் தங்கி இருந்தார்கள்.

 முதல்வரும் அரசு ஊழியர்தான்!

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தன் வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த பணத்தை அவரது வீட்டில் இருந்த சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரை பினாமிகளாக்கி அதன் மூலம் பல கம்பெனிகள் தொடங்கியதாக ஊழல் தடுப்பு போலீஸார் குற்றம்சாட்டியுள்ளனர்.

1998 செப்டம்பர் 5-ம் தேதி மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட பினாமி சட்டத்தில், ரத்த சம்பந்தமான உறவினர்கள் பெயரில் சொத்துக்கள் எழுதி வைத்திருந்தால் மட்டுமே அவர்களை பினாமிகளாகக் கருதப்படுவார்கள் என்று கூறப்பட்டு இருக்கிறது. அப்படி பார்க்கும்போது ஜெயலலிதாவும் அவர் வீட்டில் தங்கி இருந்த சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் ரத்த சம்பந்தமான உறவினர்கள் கிடையாது. அதனால், பினாமி சட்டம் இவர்களுக்குப் பொருந்தாது. அப்படி இருந்தபோதும் கீழ் நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. ஒரே வீட்டில் இருந்தார்கள் என்பதற்காக பினாமிகள் என்றும் சொல்ல முடியாது.

அரசு ஊழியர்கள்தான் பரிசுப் பொருட்கள் வாங்கக் கூடாது. ஆனால், முதல்வர்கள் அரசு ஊழியர்கள் கிடையாது. அவர்கள் தற்காலிக ஊழியர்கள். இந்தியாவில் காலகாலமாக குடியரசு தலைவர், பிரதமர், அமைச்சர்கள் என பலரும் பரிசுப் பொருள்கள் வாங்கிதான் வருகிறார்கள். அப்படித்தான் தன் கட்சி தொண்டர்கள் கொடுத்த பரிசுப் பொருட்களை ஜெயலலிதா வாங்கி இருக்கிறார். அந்த பரிசுப் பொருட்களை அவருடைய வருமானமாகச் சேர்த்துள்ளனர்.

நீதிபதி: அரசு பதவியில் இருந்து சம்பளம் வாங்கும் அனைவரும் அரசு ஊழியர்களாகத்தான் கருதப்படுவார்கள். இந்த விஷயத்தில் சட்டம் அனைவருக்கும் சமமானது.

'சுற்றி வளைத்து ஜெயலலிதாவுக்காகவே வாதாடுகிறீர்கள்!'

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் ஏ2 சசிகலாவின் வழக்கறிஞர் பசந்த் 9 நாட்கள் வாதிட்டு தன் வாதத்தை நிறைவு செய்த பிறகு, ஏ3 சுதாகரன், ஏ4 இளவரசி சார்பாக அவரின் வழக்கறிஞர் சுதந்திரம் தன் வாதத்தைத் தொடங்கினார்.

நீதிபதி குமாரசாமி: இவ்வழக்கில் முக்கியமானது, 120பி கூட்டுச்சதி, 109 குற்றத்திற்கு உடந்தையாக இருந்தல். ஜெயலலிதா அரசு பதவியில் இருந்து அவர் சம்பாதித்த பணத்தை சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோடு கூட்டுச்சதி செய்து சொத்துகள் வாங்கியதாகவும், ஜெயலலிதா குற்றங்கள் செய்ய சசிகலா, சுதாகரன், இளவரசி உடந்தையாக இருந்ததாகவும் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை பதிவு செய்திருக்கிறது. இதைப்பற்றி சரியாக யாரும் வாதிடவில்லை. நீங்கள் 120பி, 109 பற்றி வாதிடுங்கள்.

சுதந்திரம்: ஊழல் தடுப்பு சட்டம் 13(1) இ-யில் 120பி, 109 வராது. இந்த இரண்டு சட்டங்களும் ஐ.பி.சி (இந்திய தண்டனை சட்டத்தில்) தான் வரும். ஆனால் 13(1)இ-யில் இதைச் சேர்த்துள்ளது தவறு. சுதாகரன், இளவரசியும் அரசு ஊழியர்கள் கிடையாது. அதனால், அவர்களுக்கு 13(1)இ பொருந்தாது. ஏ1 ஜெயலலிதா கூட்டுச்சதியில் ஈடுப்பட்டதற்கான எந்த ஆதாரங்களும் தமிழக ஊழல் தடுப்பு போலீஸாரால் நிரூபிக்கப்படவில்லை.

நீதிபதி: ஜெயலலிதாவை ஏன் காப்பாற்ற நினைக்கிறீர்கள் உங்கள் தரப்பு குற்றச்சாட்டுகளை மட்டும் வாதிடுங்கள். ஏ2-க்காக வாதிட்டவர், சாட்சியங்களின் ஆதாரங்களைக் சுட்டி காட்டி வாதிடவில்லை. நீங்களாவது குற்றப் பின்னணி கொண்ட கூட்டுச்சதி, குற்றத்திற்கு உடந்தையாக இருந்தால் சாட்சிகளின் ஆதாரங்களை சுட்டிக் காட்டி வாதிட வேண்டும்.

சுதந்திரம்: உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற நல்லம்மாள் வழக்கில் அவரின் கணவர் பரமசிவம் அரசு ஊழியராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமான சொத்துகள் சேர்த்த வழக்கு நடைபெற்றது. அந்த வழக்கில் பரமசிவமும், நல்லம்மாளும் கூட்டுச்சதி குற்றம் செய்ய உடந்தையாக இருந்ததாக 120பி, 109 பதிவு செய்யப்பட்டது. அதை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. அதை எதிர்த்து 1999&ல் உச்சநீதிமன்றத்திற்குச் சென்றார்கள் உச்சநீதிமன்றமும் அந்தக் குற்றச்சாட்டை உறுதிசெய்திருக்கிறது. ஆனால், அதில் உச்சநீதிமன்றம் சொன்ன கருத்து என்னவென்றால், அரசு ஊழியராக இல்லாதவர்களின் விளக்கத்தைக் கேட்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறது. ஆனால், என் மனுதாரர்களிடம் கேட்காமல் 120பி, 109 பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கொடுத்த எழுத்துபூர்வமான ஆவணங்களைப் பார்க்க வேண்டாம். அவர்கள் எந்த ஒரு ஆதாரங்களும் இல்லாமல் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் பதிவு செய்துள்ள கணக்குகள் அனைத்தும் தவறானவை.

 விளம்பரத்துக்காக வாங்கினாரா 1 ரூபாய் சம்பளம்?

313 விதியின்படி குற்றவாளிகள் தரப்பு வாக்குமூலத்தை ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமார் வாசித்தார்.

குமார்: நாங்கள் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் குற்றச்சாட்டுகளை முறியடிக்கும் வகையில் ஆதாரங்களை சமர்பித்து இருக்கிறோம்.

நீதிபதி: தமிழ்நாட்டில் முதல்வருக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது?

குமார்: (சற்று நேர மௌனத்துக்குப் பிறகு) அதுபற்றி எனக்குத் தெரியாது.

நீதிபதி: (மேலவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணனைப் பார்த்து) உங்களுக்கெல்லாம் எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது?

நவநீதகிருஷ்ணன்: ஒரு லட்சத்து எட்டாயிரம். அதுதவிர பாராளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும்போது ஒரு நாளுக்கு 2 ஆயிரம் கொடுக்கிறார்கள்.

நீதிபதி: அதுதான் பாராளுமன்றத்தில் வாதிடாமல் நீங்கள் கையெழுத்தைப் போட்டுவிட்டு வந்துவிடுகிறீர்களே?

நவநீதகிருஷ்ணன்: இல்லை யுவர் ஆனர். எங்கள் அம்மா கடுமையான உத்தரவு போட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு கூட்டத்தொடரின்போதும் ஆரம்பம் முதல் இறுதி வரை இருந்து கவனிப்பதோடு, நிறை, குறைகளை சுட்டி காட்டி பேச வேண்டும்.

நீதிபதி: (அதிமுக வழக்கறிஞர் குமாரைப் பார்த்து) உங்கள் மனுதாரர் முதல்வராக இருந்தபோது எவ்வளவு சம்பளம் வாங்கினார்?

குமார்: ஒரு ரூபாய் சம்பளம் வாங்கினார்.

நீதிபதி: அதுதான் சம்பளம் கொடுக்கிறார்களே... வாங்கிக்கொள்ள வேண்டியதுதானே! விளம்பரத்துக்காக வாங்கினாரா, 1 ரூபாய் சம்பளம். சம்பளம் வாங்காமல் வேலைப் பார்த்தால், பொது ஊழியராக கருதப்பட மாட்டார்கள். ஆனால், மாதம் ஒரு ரூபாய் வீதம் சம்பளம் வாங்கி இருப்பதால் பொது ஊழியராகவே கருதப்படுவதால், இந்த நீதிமன்றம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். 1 ரூபாய் சம்பளம் வாங்கிய ஜெயலலிதாவுக்கு எப்படி 66 கோடி சொத்துகள் வந்தது? அதை தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், அதை மறுப்பதற்கு உங்கள் தரப்பில் எந்த ஆதாரமும் கொடுக்கப்படவில்லை.

 சுற்றி வளைத்து ஜெயலலிதாவிற்காகவே வாதிடுகிறீர்கள்...

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு ஏ3 சுதாகரன், ஏ4 இளவரசி சார்பாக அவர்களது வழக்கறிஞர் சுதந்திரம் வாதிட்டார்.

சுதந்திரம்: அட்டவணை 2-ல் உள்ள 306 சொத்துப் பட்டியலில் ஏ3 சுதாகரனுக்கும், ஏ4 இளவரசிக்கும் தனிப்பட்ட சொத்துகள் 63 ஐட்டங்கள் இருக்கிறது. சுதாகரனின் தனிப்பட்ட சொத்து மதிப்பு 1,38,31,961 ரூபாய், இளவரசியின் தனிப்பட்ட சொத்து மதிப்பு 6,91,81,200 ரூபாய், சுதாகரனும் இளவரசியும் பங்குதாரராக இருந்த மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ், லெக்ஸ் பிராபர்டீஸ், ரிவர்வே அக்ரோ உட்பட்ட 6 கம்பெனிகளின் சொத்து மதிப்பு 4,60,24,439 ரூபாய் எனவும் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை மொத்தம் 12,90,00,000 ரூபாய் எனக் குறிப்பிட்டுள்ளது. இந்தப் பணம் ஜெயலலிதாவுக்குச் சொந்தமானது என்றும் ஜெயலலிதாவின் பினாமிகளான சுதாகரன், இளவரசி ஆகியோரின் பெயரில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் சொல்கிறார்கள். ஆனால், உண்மையில் ஜெயலலிதாவுக்கும் என் மனுதாரர்களாகிய சுதாகரன், இளவரசிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

நீதிபதி: சுற்றி வளைத்து மறைமுகமாக ஏ1 ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவே வாதிட்டுக்கொண்டிருக்கிறீர்கள்? உங்கள் மனுதாரருக்காக வாதிடுங்கள்.

சுதந்திரம்: ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி, கம்பெனிகள் என அனைவரின் சொத்துகளையும் பொதுவாகக் காட்டி இருப்பதால் ஏ1 ஜெயலலிதாவை மையமாக வைத்துதான் இந்த வழக்கை வாதிட முடியும்.

 அம்மா முதல்வர்... மகனுக்கு அரசு டெண்டர்!

சுதந்திரம்: 1994-ல் தஞ்சையில் 8&வது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றபோது அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்ய தமிழ்நாடு சுற்றுலா துறை வளர்ச்சி கழகத்தின் மூலம் முறையாக டெண்டர் விடப்பட்டது. அந்த டெண்டரை சூப்பர் டூப்பர் டிவி நிறுவனம் 42 லட்சத்துக்கு எடுத்தது. அதற்கு தமிழ்நாடு சுற்றுலா துறை வளர்ச்சிக் கழகம் அட்வான்ஸாக 39,60,000 ரூபாய் சூப்பர் டூப்பர் டிவி நிறுவனத்துக்குக் கொடுத்தது.

நீதிபதி: அதற்கான ரசீதைக் கொடுங்கள்?

சுதந்திரம்: அதை தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் சீஸ் செய்து எடுத்துப் போய்விட்டார்கள்.

நீதிபதி: சீஸ் செய்ததற்கான கடிதத்தைக்காட்டுங்கள்.

சுதந்திரம்: (துலாவிக்கொண்டிருந்தார்கள்)

நீதிபதி: சுதாகரனின் அம்மா முதல்வர். தமிழ்நாடு சுற்றுலா துறை வளர்ச்சி கழகம் முதல்வரின் கீழ்தான் வருகிறது. மகனுக்கு அரசு டெண்டர் விட்டிருக்கிறார்கள் என்றால், அட்வான்ஸ் கொடுத்ததற்கான ரசீது கொடுக்காமலா இருந்திருப்பார்கள்? அந்த ஆதாரங்களைக் காட்டினால் மட்டுமே இந்தத் தொகையை நான் கணக்கில் எடுத்துக்கொள்வேன்.

ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் செந்தில் தமிழ்நாடு சுற்றுலா துறை வளர்ச்சிக் கழகம் வழங்கிய 39,60,000 ரூபாய்க்கான ரசீதை எடுத்து நீதிபதியிடம் கொடுத்தார்.

நீதிபதி: இவ்வளவு பெரிய தொகைக்கு நீங்கள் ரசீது வைத்திருக்க வேண்டாமா?

சுதந்திரம்: தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் இந்த ரசீதை முத்திரையிடாத ஆவணங்களாக வைத்திருந்ததால் அதை எடுக்க முடியவில்லை.

நீதிபதி: இந்தத் தொகையை நான் ஏற்றுக்கொள்கிறேன். இப்படித்தான் ஆதாரங்களைக் கொடுத்து வாதிட வேண்டும்.

சுதந்திரம்: 100% சரியாக யாராலும் வாதிட முடியாது. நீங்கள் அனுமதித்தால் இதற்கு ஒரு ஜோக் சொல்கிறேன்?

நீதிபதி: நீதிமன்றத்துக்குத் தேவையில்லாதவற்றை பேசக் கூடாது.

பவானி சிங்கின் மெத்தனம்!

இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆஜரான பவானி சிங் தொடர்ந்து குற்றவாளிகள் தரப்புக்கு ஆதரவாகவே செயல்பட்டார் என்று பல தரப்புகளில் இருந்தும் புகார்கள் கிளம்பியது. சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றபோது, பவானி சிங்கின் மெத்தனமான செயல்பாடுகள் காரணமாக நீதிபதி குன்ஹா கடுமையாகவே அவரைக் கண்டித்தார். மேல்முறையீட்டு மனு விசாரணையிலும் அவரது மெத்தனமான போக்கு தொடர்ந்தது. அதன் காரணமாகவே அவரை வழக்கில் இருந்து நீக்க வேண்டும் என்று திமுக அன்பழகன் தரப்பு தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தியது. இனி, பவானி சிங்கின் வாதத்தில் இருந்து...

 அனைத்து கேள்விகளும் டிஎஸ்பி சம்பந்தத்தை நோக்கி!

ஜெயலலிதா தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றதும்...

நீதிபதி குமாரசாமி: (அரசு வழக்கறிஞர் பவானிசிங்கைப் பார்த்து) அடுத்து நீங்கள் உங்கள் வாதத்தை ஆரம்பியுங்கள்.

பவானிசிங்: நான் படிப்பதற்காக 5 நாட்கள் அவகாசம் வேண்டும்.

நீதிபதி: உச்சநீதிமன்றம் தினந்தோறும் நடத்தச் சொல்லி இருப்பதால், அவகாசம் கொடுக்க முடியாது. மதியம் வாதாட வேண்டும்.

நீதிபதி: புலன்விசாரணை அதிகாரி நல்லமநாயுடு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையும், அவருடைய வாக்குமூலத்தை படியுங்கள். பிறகு வாதம் செய்யலாம்.

பவானிசிங்: மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு படிக்கிறேன்.

நீதிபதி: என்ன வாதங்களை வைத்து வாதிட போகிறீர்கள்?

பவானிசிங்: சாட்சியங்களின் வாக்குமூலம், குற்றப்பத்திரிகை மற்றும் பட்டியல்கள்

நீதிபதி: ஜெயலலிதா உட்பட 4 பேர் மீது எதன் அடிப்படையில் 65 கோடி சட்ட விரோதமாக வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக வழக்கு போட்டீர்கள்? ஜெயலலிதா 1 ரூபாய் சம்பளம் வாங்கி இருக்கிறார். அவருக்கு எப்படி 65 கோடி வந்தது? அதற்கான ஆதாரங்கள் எங்கே? ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு 9 1/2 கோடி என்கிறார்கள். நீங்கள் 65 கோடி என்கிறீர்கள். அதற்கு தகுந்த ஆதாரங்களோடு விளக்கம் கொடுக்க வேண்டும்.

பவானிசிங்: (தமிழ்நாடு ஊழல் தடுப்பு டி.எஸ்.பி., சம்பந்தத்தைப் பார்த்து) எப்படி வந்தது?

சம்பந்தம்: ஆவணங்கள் இருக்கிறது.

நீதிபதி: (பவானிசிங்கைப் பார்த்து) குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது யார்? அவர் நேரில் ஆஜராக வேண்டும்.

பவானிசிங்: (சம்பந்தத்தைப் பார்த்து) யார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது?

சம்பந்தம்: இவ்வழக்கின் புலன்விசாரணை அதிகாரி நல்லமநாயுடு. அவருக்கு உடல்நிலை சரியில்லை 93 வயதாகிறது. (உண்மையில் நல்லமநாயுடுக்கு 73 வயதுதான் ஆகிறது.)

நீதிபதி: அடுத்த அதிகாரி யார்?

சம்பந்தம்: எஸ்.பி சௌந்திரராஜன் இருந்தார். அவர் இறந்துவிட்டார்.

நீதிபதி: தற்போது யார் தமிழக ஊழல் தடுப்புப் பிரிவின் இன்சார்ஜ்?

சம்பந்தம்: தற்போது சண்முகபிரியா என்ற லேடி எஸ்.பி&தான் இன்சார்ஜ்.

நீதிபதி: எத்தனை வருடம் இந்த வழக்கில் நீங்கள் இருக்கிறீர்கள்?

சம்பந்தம்: 98ல் இருந்து இருக்கிறேன். கீழமை நீதிமன்றத்திலும் இருந்தேன்.

நீதிபதி: அப்படியென்றால் எல்லா ஆவணங்களையும் நீதிமன்றத்துக்கு எடுத்துவரத் தெரியாதா? 20 வருடமாக இவ்வழக்கு நடைபெற்று வருகிறது. நீங்கள் எல்லா ஆவணங்களையும் சரியாக பின்பற்றாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. மேலும், இவ்வழக்கின் ஆதாரமாக இருக்கும் ஆவணங்கள் இல்லையென்று சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. 20 வருடமாக நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்து இருக்கிறீர்கள். சரியான ஆவணங்களைக் கொடுக்கவில்லை என்றால், உங்கள் மீது நடவடிக்கை எடுப்பேன். எதன் அடிப்படையில் இவ்வளவு நாட்கள் வாதம் செய்கிறீர்கள்? ஜெயலலிதா மீது போடப்பட்ட ஒவ்வொரு ரூபாய்க்கும் நீங்கள் கணக்கு காட்ட வேண்டும். எப்படி ஆடிட் செய்தீர்கள்? எந்த ஆடிட்டரை வைத்து ஆடிட் செய்தீர்கள்? நீங்களாகவே கணக்கு போட்டீர்களா? இவற்றையெல்லாம் தகுந்த ஆதாரத்தோடு விளக்க வேண்டும்.

சம்பந்தம்: குற்றப்பத்திரிகையில் இருக்கிறது.

நீதிபதி: (பவானிசிங்கைப் பார்த்து) குற்றப்பத்திரிகை என்றால் என்ன?

பவானிசிங்: (சம்பந்தத்தைப் பார்த்து) குற்றப்பத்திரிகை என்றால் என்ன?

சம்மந்தம்: புலன் விசாரணை, சாட்சியங்கள், வழக்கு பற்றிய முழு விவரங்கள்.

நீதிபதி: அப்படியென்றால் ஆதாரங்களை சமர்பிக்க வேண்டும் என்பது தெரியாதா? அவர்கள் தரப்பு வாதத்திற்கு நீங்கள் ஆதாரங்களோடு கூடிய ஆவணங்களைக் காட்டி பதில் சொல்லியாக வேண்டும்.

 நல்லமநாயுடுவின் வாக்குமூலத்தைத் திருந்த வேண்டும்!

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு... பவானிசிங் அரசு தரப்பு சாட்சி நல்லமநாயுடுவின் வாக்குமூலத்தை படிக்க மட்டுமே செய்தார். இடையில் குறுக்கீடு செய்த ஜெ. தரப்பு வழக்கறிஞர் செந்தில் வாக்குமூலத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்றபோதுகூட பவானிசிங் வாய் திறக்கவில்லை. தனக்கு ரூம் வேண்டும் என்ற கோரிக்கையைதான் வைத்தார்.

பவானிசிங்: ஜெயலலிதா 91&96 வரை முதல்வராக இருந்தபொது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணியன் சுவாமி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதையடுத்து சென்னை அமர்வு நீதிமன்றம் ஊழல் தடுப்பு அதிகாரி லத்திகா சரணை நியமித்து விசாரணை செய்ய ஆணையிட்டது. அதன் பிறகு பெருமாள் இவ்வழக்கை விசாரித்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தார். அதன் பிறகு எஸ்.பி நல்லமநாயுடு தலைமையில் 9 குழுவினராகப் பிரிந்து ஜெயலலிதாவின் போயஸ் கார்டன், ஹைதராபாத் திராட்சைத் தோட்டம், கட்டடங்கள் என பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

செந்தில்: இந்த வாக்குமூலத்தில் நிறைய தவறுகள் இருக்கிறது. அதை நாங்கள் திருத்தம் செய்து கொடுக்க அனுமதிக்க வேண்டும்.

நீதிபதி: எல்லா வாக்குமூலத்திலும் தவறு இருக்கிறதா?

செந்தில்: 42 வாக்குமூலங்களில் நிறைய தவறுகள் இருக்கின்றன.

நீதிபதி: எப்போது திருத்தம் செய்து தரப்போகிறீர்கள்?

செந்தில்: திங்கள்கிழமை தருகிறோம்

பவானிசிங்: வழக்கு ஆவணங்கள் அனைத்து நீதிமன்றத்தில்தான் இருக்கிறது. அதைப் படிக்க வேண்டும். அதனால் எனக்கு இந்த நீதிமன்றத்தில் ரூம் ஒதுக்கித் தர வேண்டும்.

நீதிபதி: ஏன் உங்களுக்கு ரூம் இல்லையா?

பவானிசிங்: இல்லை.

நீதிபதி: சரி நான் சொல்லி ரூம் தரச் சொல்கிறேன். ஆனால், அதற்கான சார்ஜ் தமிழ்நாடு அரசு கொடுக்க வேண்டும்.

 அரசாங்கத்தின் ஊதுகுழலாக இருக்கக் கூடாது!

பவானிசிங்: இந்த வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதாவின் வீட்டை சோதனை செய்து அங்கிருந்த தங்க, வைர நகைகளைக் கைப்பற்றினோம். அதிகாரி வாசுதேவன் நகைகளை வேல்யூ செய்தார். செங்கல்வராயன் என்ற அதிகாரி சேலைகளை மதிப்பீடு செய்தார்.

நீதிபதி: (குறுக்கீடு செய்து) அரசாங்கத்தின் ஊதுகுழலாக இருக்கக் கூடாது. சி.ஆர்.பி.சி-யின் எந்தப் பிரிவின் அடிப்படையில் வீட்டை சோதனை செய்தீர்கள்?

பவானிசிங்: (சம்பந்தத்தைப் பார்த்து) ஏன் ஆய்வு செய்தீர்கள்?

சம்பந்தம்: முறைப்படி அனுமதிபெற்று சோதனை செய்தோம்.

நீதிபதி: (பவானிசிங்கைப் பார்த்து) தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் ஜெயலலிதாவின் வீட்டை ரெய்டு செய்து நகைகள் கைப்பற்றியபோது வீடியோ எடுக்கப்பட்டதா?

பவானிசிங்: (சம்பந்தத்தைப் பார்த்து) வீடியோ எடுக்கப்பட்டதா?

சம்பந்தம்: இல்லை.

நீதிபதி: சி.டி எடுத்தீர்களா?

சம்பந்தம்: இல்லை.

நீதிபதி: ஜெயலலிதா வீட்டில் கைப்பற்றப்பட்ட தங்க, வைர நகைகளை யார் மதிப்பீடு செய்தது?

பவானிசிங்: (ஜெ. தரப்பு வழக்கறிஞர் மணிசங்கரைப் பார்த்து) யார்?

மணிசங்கர்: அதிகாரிகள் வாசுதேன் மற்றும் ஜெகநாதன்

நீதிபதி: அப்போது ஜெயலலிதாவின் சார்பாக வீட்டில் யார் இருந்தது?

பவானிசிங்: (மணிசங்கரைப் பார்த்து) யார் இருந்தது?

மணிசங்கர்: (அடக்க முடியாமல் சிரிக்கிறார்...)

சம்பந்தம்: (மிகுந்த தயக்கத்தோடு...) பாஸ்கரன் என்பவர் இருந்தார்.

நீதிபதி: ஜெயலலிதா சார்பாக பாஸ்கரன் இருப்பதற்காக ஜெயலலிதா கொடுத்த ஒப்புதல் கடிதத்தைக் காட்டுங்கள்.

பவானிசிங்: (சம்பந்தத்தைப் பார்த்து) அந்தக் கடிதம் எங்கே? (சம்பந்தம் துலாவினார்.)

மணிசங்கர்: (மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு, எடுத்துக் கொடுத்தார்.)

நீதிபதி: (சம்பந்தத்தைப் பார்த்து) என்ன படித்திருக்கிறீர்கள்?

சம்பந்தம்: பி.எஸ்ஸி

நீதிபதி: செகண்ட் லாங்குவேஜ் என்ன?

சம்பந்தம்: ஆங்கிலம்.

நீதிபதி: பிறகு ஏன் பதிலளிக்க மறுக்கிறீர்கள்?

சம்பந்தம்: (மௌனம்)

 இந்த வழக்கே ஒரு கதைதான் யுவர் ஆனர்!

பவானிசிங்: ஜெயலலிதா போயஸ்கார்டன் வீட்டை சோதனை செய்தபோது, ஜெயலலிதா இன்னொரு வழக்கில் அரெஸ்ட் செய்யப்பட்டு இருந்தார்.

நீதிபதி: ஜெயலலிதா போலீஸ் கஸ்டடியில் இருந்தாரா? சிறையில் அடைக்கப்பட்டாரா?

சம்மந்தம்: சிறையில் அடைக்கப்பட்டார்.

நீதிபதி: என்ன வழக்கில் அரெஸ்ட் செய்யப்பட்டார்.

பவானிசிங்: (சம்பந்தத்தைப் பார்த்து) எந்த கேஸ்?

சம்மந்தம்: தெரியவில்லை.

பவானிசிங்: அது ஊழல் வழக்கு கிடையாது. அது சி.ஆர்.பி.சி வழக்கு

குமார்: கலர் டிவி ஊழல் நடந்ததாக கைது செய்யப்பட்டார். 1996 டிசம்பர் 6-ம் தேதி கைது செய்யப்பட்டார். 7-ம் தேதி வீடு ரெய்டு செய்யப்பட்டது. சோதனை என்ற பெயரில் பெட்ரூம், பாத்ரூம் முதற்கொண்டு ஐந்து நாட்கள் ரெய்டு செய்து, அதை டிவியில் தொடர்ந்து ஒளிபரப்பச் செய்தார்கள். நீதிபதி: இன்றுபோல நாளைக்கும் கதை சொல்வதை விட்டுவிட்டு ஆதாரங்களோடு வாதிட வேண்டும்.

பவானிசிங்: (சிரித்துக்கொண்டே) இந்த வழக்கே ராமாயணம், மகாபாரதம் போன்ற கதைதான் யுவர் ஆனர்.

 நீதிபதியின் சரமாரி கேள்விகளும் பவானிசிங்கின் பதறலும்...

நீதிபதி: வழக்கு காலகட்டத்திற்கு முன்பே போயஸ்கார்டன் வாங்கப்பட்டுள்ளது. ஏன் இந்த வழக்கில் போயஸ்கார்டனைச் சேர்த்துள்ளீர்கள்?

பவானிசிங்: (சம்பந்தத்தைப் பார்த்து...) ஏன் சேர்த்தீர்கள்?

சம்மந்தம்: போயஸ்கார்டனில் கூடுதல் கட்டடமும், மராமத்து வேலைகளும்தான் சேர்க்கப்பட்டுள்ளது.

நீதிபதி: ஜெயா பப்ளிகேஷன், சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்தில் ஜெயலலிதா, சசிகலா 2 பேரும் பார்ட்டனர்களாக இருக்கும்போது, ஜெயலலிதாவுடைய பணம் என்று குறிப்பிடுகிறீர்களே... ஏன்?

பவானிசிங்: (மௌனம்)

நீதிபதி: ஜெயலலிதாவின் பினாமிகளாக சசிகலா, சுதாகரன், இளவரசி செயல்பட்டதாகச் சொல்கிறீர்கள். அதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? பினாமி சட்டப்படி ரத்த உறவினர்களாக இருக்கும்பட்சத்தில்தான் பொருத்தும். இவர்களுக்கு எப்படி பொருந்தும்?

பவானிசிங்: (மௌனம்)

நீதிபதி: ஊழல் தடுப்புச் சட்டம் 13(1)இ... அரசு ஊழியர்கள் இல்லாதவர்களை எப்படி இந்தச் சட்டத்தில் கொண்டுவருகிறீர்கள்? 120(பி) கூட்டுச்சதி... ஒரே வீட்டில் தங்கி இருக்கிறார்கள் என்பதால் மட்டுமே கூட்டுச்சதி என்று கூறிவிட முடியாது. இதற்கு வேறு என்ன ஆதாரங்கள் வைத்திருக்கிறீர்கள்?

பவானிசிங்: (மௌனம்)

நீதிபதி: ஜெயலலிதாவிடம் இருந்து எப்படி சசிகலா, சுதாகரன், இளவரசி மற்றும் கம்பெனிகளுக்கு பணப்பரிமாற்றம் நடைபெற்றது?

பவானிசிங்: (மௌனம்)

நீதிபதி: ஜெயா பப்ளிகேஷனில் ஜெயலலிதா யாருக்கு பவர் ஆஃப் அட்டர்னி கொடுத்தார்?

பவானிசிங்: ஜெயலலிதா, சசிகலாவிற்கு கொடுத்தார்.

நீதிபதி: கம்பெனி ஆடிட்டர் சொக்கலிங்கத்தின் வாக்குமூலத்தை ஏன் இதில் கொண்டுவரவில்லை?

பவானிசிங்: தெரியவில்லை யுவர் ஆனர். எனக்கு ஒரு வாரம் படிப்பதற்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும்.

நீதிபதி: அப்படி கொடுக்க முடியாது. நாளைக்கு வந்து புலன்விசாரணை அதிகாரிகளின் வாக்குமூலங்களைப் படியுங்கள். நாளைக்கு யாருடைய வாக்குமூலத்தைப் படிக்கிறீர்கள்? கால அவகாசத்தைப் பற்றி நாளைக்குப் பாக்கலாம்.

பவானிசிங்: புலன்விசாரணை அதிகாரி லத்திகாசரண், வி.சி.பெருமாள், கதிரேசன் என 3 பேரின் வாக்குமூலங்களைப் படிக்கிறேன். புலன்விசாரணை அதிகாரிகளின் வாக்குமூலங்களைப் படித்தபோதும் நீதிபதி குமாரசாமி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை டி.எஸ்.பி சம்பந்தத்திடமும், ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் குமார், மணிசங்கரைப் பார்த்தும், நீதிபதி கேட்கும் கேள்விகளுக்கு பதில் கேட்டு வருவதோடு, சுயமாக ஒரு கேள்விக்குக்கூட பதில் சொல்ல முடியாமல் மௌனம் சாதித்தார்.

நீதிபதி கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பவானிசிங் பதில் சொல்லாமல், தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை டி.எஸ்.பி சம்பந்தத்தை மாட்டிவிடுகிறார். சம்பந்தமும் பதில் சொல்லத் தயங்கவே, நீதிபதி அவருக்கு ஆங்கிலம் தெரியவில்லை என நினைக்கிறார். உண்மையில் சம்பந்தத்திற்கு ஆங்கிலம் நன்றாக தெரியும். அவர் ஒரு அரசு ஊழியர் என்பதால், தான் ஏதாவது சொல்ல அது ஆளுங்கட்சிக்கு கோபத்தை ஏற்படுத்திவிடும் என்பதால் பதில் சொல்ல முடியாமல் மௌனம் சாதித்தார்.

நீதிபதி கேட்கும் ஒவ்வொரு கேள்விகளுக்கும் பவானிசிங் தொடர்ந்து பதில் சொல்லாமல் சம்பந்தத்தையும், மணிசங்கரையும் பார்த்துவரும் நிலையில், ‘‘திடீரென நீதிபதி ‘உங்கள் பெயர் என்ன?’ என்று கேட்கப் போகிறார். அதற்கும் மணிசங்கரையோ, சம்பந்ததையோ பார்த்து ‘என் பெயர் என்ன?’ என்று பவானிசிங் கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை’’ என்று கிண்டல் அடித்தனர் நீதிமன்ற காட்சிகளைப் பார்க்கும் பத்திரிகையாளர்கள்.

பவானி சிங்கை நீக்க நடந்த சட்டப் போராட்டங்கள்!

அரசு வழக்கறிஞரான பவானி சிங் தொடர்ந்து குற்றவாளிகள் தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். அவர் இந்த வழக்கில் ஆஜராகக் கூடாது என்று திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தினார். அதில் இருந்து...

 பேராசிரியர் அன்பழகன் மீது கடும் கண்டனம்!

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தரப்பு வழக்கறிஞர் சரவணனின் வாதத்தில் இருந்து...

சரவணன்: உச்சநீதிமன்ற ஆணையில், அரசு வழக்கறிஞரை கர்நாடக அரசும், கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் கலந்து ஆலோசித்து நியமிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறது. ஆனால், கர்நாடக அரசு இவ்வழக்கின் அரசு வழக்கறிஞரை நியமிக்கவில்லை. அதனால், பவானிசிங் இந்த வழக்கில் ஆஜராவது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது.

நீதிபதி: அந்த உச்சநீதிமன்ற உத்தரவைக் காண்பியுங்கள்?

சரவணன்: (உச்சநீதிமன்ற உத்தரவைக் காண்பிக்கிறார்.)

நீதிபதி: நீங்கள் கர்நாடக அரசுக்கு கோரிக்கை வையுங்கள். அல்லது, வழக்கு போடுங்கள். என்னிடம் ஏன் வந்திருக்கிறீர்கள். என்னை உச்சநீதிமன்றம் 3 மாதத்தில் விசாரித்து வழக்கை முடிக்கச் சொல்லி இருக்கிறது. நீதிமன்ற நேரத்தை வீணாக்காதீர்கள். (பவானிசிங்கைப் பார்த்து) உங்களை நியமித்தது யார்?

பவானிசிங்: தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை நியமித்திருக்கிறது.

நீதிபதி: (சரவணனிடம்) நீங்கள் அரசு வழக்கறிஞரை நியமிக்கப்போகிறீர்களா? ஏன் அரசியலைப் புகுத்துகிறீர்கள்? உங்கள் மனுதாரர் யார்?

சரவணன்: அன்பழகன்

நீதிபதி: அவர் எங்கே? அவரை ஆஜராகச் சொல்லுங்கள்.

சரவணன்: அவர் 92 வயதுடைய முதியவர். அவர் கோர்ட்டுக்கு வர முடியாது. கோர்ட்டும் விதிவிலக்கு அளித்திருக்கிறது. அவரின் சார்பாக நான் ஆஜராகி இருக்கிறேன். பவானிசிங்கை நீக்க வேண்டும். அதற்கான மனுவை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நீதிபதி: (கோபத்துடன்) தேவையில்லாமல் மனு அளிக்க இது அரசியல் மேடை கிடையாது. என்னுடைய பணிக்கு இடையூறு செய்ததாக சி.ஆர்.பி.சி.345-ஐ பயன்படுத்த நேரிடும். நீங்கள் ரிட் மனு தாக்கல் செய்யுங்கள்.

சரவணன்: ஏற்கெனவே ரீட் மனு தாக்கல் செய்திருக்கிறோம். நாளை விசாரணைக்கு வர இருக்கிறது. (இதையடுத்து காரசாரமான இந்த விவாதம் நிறைவு பெற்றது.)

நீதிபதி: அந்த மனுவின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன்.

 அரசு வழக்கறிஞராக பவானிசிங்கே தொடரலாம்!

ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு விசாரணையில் அரசு வழக்கறிஞர் பவானிசிங் ஆஜராவதை எதிர்த்து அன்பழகன் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். அதை 14-ம் தேதி விசாரித்த நீதிபதி அப்துல் நசீர், ‘‘இந்த வழக்கை உச்சநீதிமன்றம் மூன்று மாதங்களில் முடிக்கச் சொல்லி இருக்கிறது. நீதிபதி குமாரசாமி இந்த வழக்கை நடத்தி வருகிறார். இதற்கிடையில் அரசு வழக்கறிஞரை மாற்றுவதால் கால தாமதம் ஏற்படும் என்பதால் இந்த மனுவை குமாரசாமியே விசாரிப்பதுதான் நன்றாக இருக்கும் என நான் கருதுகிறேன். அதனால், இந்த மனுவை நீதிபதி குமாரசாமியே விசாரிக்க பரிந்துரை செய்து இந்த மனு முதன்மை நீதிபதிக்கு அனுப்பி வைக்கிறேன்’’ என்று தீர்ப்பளித்தார்.

இந்த மனு கர்நாடக உயர்நீதிமன்ற முதன்மை நீதிபதி வஹேலாவின் கவனத்துக்கு வந்ததை அடுத்து, ‘இந்த மனுவை குமாரசாமி விசாரித்தால் ஏற்கெனவே நடந்துவரும் மேல்முறையீட்டு விசாரணை காலதாமதம் ஏற்படும் என்பதால், இந்த மனுவை ஆனந்த் பைரரெட்டி விசாரிப்பார்’ என்று அறிவிப்பு வந்தது. அதையடுத்து 19-ம் தேதி ஆனந்த் பைரரெட்டி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அன்பழகன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் நாகேஷும், பவானிசிங் தரப்பில் செபஸ்டினும், தமிழக ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறை தரப்பில் ராவும், கர்நாடக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமாரும் ஆஜரானார்கள்.

நாகேஷ் (அன்பழகன் தரப்பு வழக்கறிஞர்): ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு மனு விசாரணையில் அரசு தரப்பு வழக்கறிஞர் பவானிசிங் ஆஜராகி வருகிறார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞரை கர்நாடக அரசும் கர்நாடக உயர்நீதிமன்ற முதன்மை நீதிபதியும் கலந்து ஆலோசித்து நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் கர்நாடக அரசு பவானிசிங்கை நியமிக்காதபோது அவர் இதில் ஆஜராகி வருவது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு புறம்பானது. இந்த வழக்கில் குற்றவாளியான ஜெயலலிதா சார்ந்துள்ள அ.தி.மு.க ஆட்சிதான் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. அந்த தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உத்தரவின் பெயரில் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநர், பவானிசிங்கை நியமித்தி இருக்கிறார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞரை தமிழக அரசு நியமிக்க உரிமை கிடையாது. பவானிசிங்கை கீழமை நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததோடு அபராதமும் விதித்திருக்கிறது. இதில் தொடர்ந்து பவானிசிங் ஆஜரானால் நீதி கிடைக்காது.

ரவிவர்மகுமார் (அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர்): இந்த வழக்கில் கீழமை நீதிமன்ற விசாரணையின்போது உச்சநீதிமன்றம் சரியான விளக்கத்தை எங்களுக்குக் கொடுத்தது. ஆனால், மேல்முறையீட்டு மனுவில் மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என்று மட்டுமே சொல்லி இருக்கிறது. அரசு வழக்கறிஞர் நியமனம் பற்றி எதுவும் சொல்லவில்லை. பவானிசிங்கை வேண்டாம் என்று சொல்லவோ, அவரே தொடர்ந்து வாதிட வேண்டும் என்று கூறவோ அரசு முடிவு செய்யவில்லை. நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்.

செபஸ்டின் (பவானிசிங்கின் வழக்கறிஞர்): பவானிசிங் மிகவும் நேர்மையாக கீழமை நீதிமன்றத்தில் வாதாடியதால்தான் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்திருக்கிறார். தற்போது அவரை குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்படுவதாக சொல்வதால் உளவியல் ரீதியாக அவர் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

ராவ் (தமிழக ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறை வழக்கறிஞர்): சி.ஆர்.பி.சி 24(8)-ன்படி தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு இந்த வழகின் அரசு வழக்கறிஞரை நியமிக்கும் அதிகாரம் உண்டு.

நீதிபதி: இந்த வழக்கில் அன்பழகனோ கர்நாடக அரசோ விரும்பினால், உச்சநீதிமன்றத்தை அணுகி அவர்கள் வழிகாட்டுதல்படி செயல்படலாம். அதுவரை இந்த வழக்கில் பவானிசிங்கே தொடர்ந்து அரசு வழக்கறிஞராகத் தொடரலாம்.

 மாறுபட்ட தீர்ப்புகள்!

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடந்து முடிந்த ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கு மேல் முறையீட்டு வழக்கில், அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜரானதை எதிர்த்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனு மீதா விசாரணை, கடந்த 21, 22 தேதிகளில் உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதிகள் மதன் லோகூர், பானுமதி ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர்.

பவானி சிங்கின் நியமனம் செல்லாது என்று நீதிபதி மதன் பீமாராவ் லோக்கூர் அளித்த தீர்ப்பில், ''இந்த வழக்கை ஏற்கெனவே நடத்தியவர் என்ற முறையில் பவானி சிங் எப்படி மேல்முறையீட்டு விசாரணையிலும் அரசு வழக்கறிஞராகத் தொடர முடியும்? ஏனென்றால், கர்நாடக அரசு அவரை அரசு வழக்கறிஞராக நியமித்தது சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு மட்டும்தான். அந்த விசாரணை நடந்து முடிந்து, குற்றவாளிகளுக்குத் தண்டனை அளிக்கப்பட்டதோடு பவானி சிங்கின் நியமனமும் முடிந்துவிட்டது. அதன்பிறகு மேல்முறையீட்டிலும் அவரையே அரசு வழக்கறிஞராக நியமிக்க கர்நாடக அரசு எந்த புதிய உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. மாறாக, தமிழக அரசு அதைச் செய்துள்ளது. கர்நாடக அரசு இந்த வழக்கை நடத்துவதற்கு தமிழக அரசு தன்னால் இயன்ற ஒத்துழைப்பைக் கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொன்னதை தமிழக அரசு தவறாகப் புரிந்துகொண்டு இந்த வழக்கில் அதிகப்படியான உரிமைகளை எடுத்துக்கொண்டது துரதிருஷ்டவசமானது. எனவே, இந்த வழக்கில் பவானி சிங்கை அரசு வழக்கறிஞராகத் தமிழக அரசு நியமித்தது செல்லாது’’ என்று கூறியிருந்தார்.

பவானி சிங்கை நியமித்தது செல்லும் என்ற நீதிபதி ஆர்.ஆர்.பானுமதி அளித்த தீர்ப்பில், ''301(1)சி.ஆர்.பி.சி சட்டம் ஒரு வழக்கின் ‘இன்சார்ஜ்’ என்ற முறையில், யாருடைய எழுத்துப்பூர்வமான உத்தரவும் இல்லாமல், அந்த வழக்கின் மேல்முறையீட்டிலும் அவரே அரசு வழக்கறிஞராகத் தொடரலாம் என்ற உரிமையை வழங்குகிறது. ஹரியானா மாநிலம் Vs சுர்ஜித் சிங் வழக்கு இதற்கு முன் உதாரணமாக உள்ளது. எனவே, பவானி சிங் அரசு வழக்கறிஞராக நீடித்தது செல்லும்” என்று தீர்ப்பளித்தார்.

 மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்!

இந்த வழக்கில் முடிவு எட்டப்படாததால் வழக்கை 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்படுவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால், பிரபுல்லா.சி.பந்த் ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்தது. அன்பழகன் சார்பில் மூத்த வழக்கறிஞர் அந்தி அர்ஜுனா ஆஜராகி வாதிட்டார். ஜெயலலிதா சார்பில் வழக்கறிஞர் பாலி நாரிமன் வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் ஏப்ரல் 27ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால், பிரபுல்ல பந்த் ஆகியோர் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பில், "பவானி சிங்கை, தமிழக லஞ்ச ஒழிப்பு துறை நியமித்திருக்கிறது. வழக்கு கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் நடைபெறுவதால் அங்குள்ள நீதிமன்றமே அரசு வழக்கறிஞரை நியமித்திருக்க வேண்டும். அரசு வழக்கறிஞரை நியமிக்க தமிழக அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. ஆனால், இவ்வழக்கில் மறு விசாரணைக்கு அவசியமில்லை.

மனுதாரர் அன்பழகன், 90 பக்கங்களுக்குள் எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்ய வேண்டும், கர்நாடக அரசு 50 பக்கங்களுக்குள் எழுத்துப்பூர்வ வாதத்தை நாளைக்குள் தாக்கல் செய்ய வேண்டும். மேல்முறையீட்டு வழக்கில் அன்பழகன் மற்றும் கர்நாடக அரசும் எழுத்துமூலம் அளிக்கும் வாதத்தை பெற்றுக் கொண்டு தீர்ப்பளிக்கவும் கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு அறிவுறுத்தியுள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஊழல் வழக்குகள் சமுதாயத்தை எப்படி பாதிக்கும் என உணர்ந்து தீர்ப்பு அளிக்க வேண்டும்'' என்று கூறினர்.

 அன்பழகனின் எழுத்துபூர்வ வாதம்!

தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன் 81 பக்க எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்தார். ‘‘ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நான்கு பேரும் கூட்டுச் சதியில் ஈடுபட்டு பல அசையும், அசையா சொத்துகள் வாங்கி இருக்கிறார்கள். இவர்கள் கூட்டுச் சதியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை நாங்கள் ஆதாரத்தோடு நிரூபித்து இருக்கிறோம். அதை கீழ் நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. ஜெயலலிதாவும், சசிகலாவும் பார்ட்னராக இருந்து தொடங்கப்பட்ட ஜெயா பப்ளிகேஷன், சசி எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனங்களை நடத்தினார்கள். அப்போது ஜெயலலிதா பவர் ஆஃப் அட்டர்னி சசிகலாவுக்கு கொடுக்கிறார். சசிகலாவிடம் இருந்து சுதாகரன், இளவரசி மற்றும் கம்பெனிகளுக்கு பல கோடிகள் பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளன. இதற்கு சாட்சியாக ஜெயலலிதா வீட்டில் வேலை பார்த்த ஓய்வுபெற்ற தமிழக தலைமைச் செயலக ஊழியர் ஜெயராமன், ராமவிஜயன் அளித்துள்ள வாக்குமூலம் உறுதி செய்துள்ளது. இவ்வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதா 1991 முதல் 1999 வரை 5 ஆண்டுகள் தமிழக முதல்வராக இருந்த போது வெறும் 27 ரூபாய்தான் சம்பளம் வாங்கி இருக்கிறார்” என்று சொன்னார்.

 மீண்டும் வந்தார் ஆச்சார்யா!

பவானி சிங் நீக்கப்பட்டதை அடுத்து அரசு வழக்கறிஞராக (இந்த வழக்கில் ஸ்பெஷல் கோர்ட்டில் ஏற்கெனவே ஆஜராகியிருந்த) பி.வி.ஆச்சார்யா நியமிக்கப்பட்டார். அவர் 18 பக்க எழுத்துபூர்வ வாதத்தை தாக்கல் செய்தார். ‘‘ஜெயலலிதா முதல்வர் பதவியைத் தவறாக பயன்படுத்தி சொத்துகளை குவித்துள்ளதற்கான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. ஒரு அரசு ஊழியர் சொத்துக் குவிப்பதும், லஞ்சம் பெறுவதும் தவறு. ஆனால் ஜெயலலிதா சொத்துகளை குவித்ததோடு லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்களும் நிரூபிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் கூட்டு சதியில் ஈடுபட்டார்கள் என்பதும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. முதல்வர் பதவியேற்றபின் ஜெயலலிதாவின் அசையும், அசையா சொத்துகளின் மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. தன் பதவி காலத்தின்போது புதிய கட்டடங்கள் கட்டியது, பழைய கட்டடங்கள் புதுப்பித்தது, வளர்ப்பு மகன் திருமணச் செலவு என ஏராளமான செலவுகள் செய்துள்ளார்கள். இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆதாரத்தோடு நிரூபிக்கப்பட்டுள்ளது. அதை நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதா உட்பட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டில் கர்நாடக அரசை ஒரு வாதியாக சேர்க்கவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகாவில் வழக்கு விசாரணை நடைபெறும்போது இந்த மாநில அரசை வழக்கில் சேர்க்காதது சட்டவிரோதமானது. அதனால் இந்த 4 பேரின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்யவேண்டும்” என்று சொன்னார் ஆச்சார்யா!

மூன்றாம் தரப்பு வாதி யார்?

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் முக்கியமானவர்கள் இருவர். ஒருவர்... திமுக பொதுச்செயலாளர் பேராசியர் அன்பழகன். இன்னொருவர் சுப்பிரமணியன் சுவாமி. கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற மேல்முறையீட்டு வழக்கில் இருவரும் 3-ம் தரப்பு வாதியாக தங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில் இறுதியில் சுப்பிரமணியன் சுவாமிக்கு மட்டுமே வெற்றி கிடைத்தது. அது தொடர்பாக நடைபெற்ற சட்டப் போராட்டத்தில் இருந்து...

 வழக்கின் காட் ஃபாதர்!

ஜனவரி ஐந்து... இந்த வழக்கில் ஜெ தரப்புக்கு எதிராக வாதிட கறுப்புப் பூனைப் படையோடு சுப்பிரமணியன் சுவாமி கோர்ட்டுக்கு வந்ததால் கோர்ட் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சு.சாமி: இந்த வழக்கில் என்னையும் வாதிட அனுமதிக்க வேண்டும்.

நீதிபதி: நீங்கள் யார்? உங்களுக்கும் இந்த வழக்குக்கும் என்ன தொடர்பு?

சு.சாமி: இந்த வழக்கின் முதல் புகார்தாரர். இந்த வழக்கின் காட் ஃபாதர். என்னுடைய புகார் மனுவை ஏற்றுதான் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையை விசாரிக்க செய்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது. இந்த வழக்கில் நான் வாதிட்ட உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது.

நீதிபதி: உச்சநீதிமன்ற ஆணையின் நகலை கொடுங்கள்.

சு.சாமி: அதை நான் கொண்டுவரவில்லை.

நீதிபதி: சரி! எதன் அடிப்படையில் வாதிட அனுமதி கேட்கிறீர்கள்?

சு.சாமி: ஜே.கே., பிராப்பர்டீஸ் வழக்கின் மூலமாக.

நீதிபதி: அந்த நகலைக் கொடுங்கள்.

சு.சாமி: அதை கொண்டுவரவில்லை.

நீதிபதி: இந்த இரண்டு ஆவணங்களையும் கோர்ட்டில் சமர்பியுங்கள். பிறகு பரிசீலித்து உங்களை வாதிட அனுமதிக்கலாம். அதனை அடுத்து சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்தை விட்டு கிளம்பினார்.

 யார் இந்த அன்பழகன்?

சுப்பிரமணியன் சுவாமியை அடுத்து திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தரப்பு வழக்கறிஞர் குமரேசன் எழுந்தார்...

குமரேசன்: இந்த வழக்கில் அரசு வழக்கறிஞருக்கு உதவியாகவும், சிறப்பு நீதிமன்றம் அனுமதித்தைப்போல இந்த வழக்கில் எங்களை 3-ம் தரப்[பு வாதியாக சேர்த்துக்கொண்டு எங்களுடைய எழுத்துபூர்வமான வாதத்தை பதிவுசெய்ய வேண்டும்.

நீதிபதி: இந்த வழக்குக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு?

குமரேசன்: 2004-ல் சென்னையில் இருந்து இந்த வழக்கு பெங்களுக்கு மாற்ற என் மனுதாரர் அன்பழகன்தான் காரணம்.

நீதிபதி: யார் அந்த அன்பழகன்?

குமரேசன்: திமுக பொதுச்செயலாளர். உச்சநீதிமன்றம் எங்களையும் 3-ம் தரப்பு வாதியாக சேர்த்துக்கொள்ள அனுமதித்திருக்கிறது.

நீதிபதி: நீதிமன்றத்துக்குள் அரசியலைக் கொண்டுவராதீர்கள். அரசியல் பேச பாராளுமன்றம் இருக்கு. சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதித்து இருக்கலாம். மேல்முறையீட்டு மனுவில் ஏற்கெனவே வாதி பிரதிவாதி இருக்கிறார். உங்களைப்போல பலரும் வருவார்கள். மேல்முறையீடு என்பது கீழ்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் குற்றச்சாட்டுகள் தவறானது என்பதை வாதிடுவதும், அதை மறுப்பதும்தான் வேலை. 3-ம் தரப்புக்கு இங்கு வேலை இல்லை.

 உண்மையான புகார்தாரர் நான்தான்!

மேல்முறையீட்டு மனு விசாரணை நடைபெற்று வரும் கோர்ட் ஹால்... நீதிபதி குமாரசாமி வருவதற்கு முன்பே சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்துக்கு வந்து அமர்ந்திருந்தார். நீதிபதி 10.30 மணிக்கு தன் இருக்கையில் அமர்ந்ததும், தன்னை 3-ம் தரப்பு வாதிகாக இணைத்துக்கொள்ள வேண்டும் என வாதிட்டார்.

சு.சாமி: இந்த வழக்கின் முதல் புகார்தாரர் நான்தான்.

நீதிபதி குமாரசாமி: உங்கள் வாதத்தைத் தொடங்கலாம்.

சு.சாமி: ஜெயலலிதா 91 - 96 வரை தமிழக முதல்வராக இருந்தார். அப்போது தன் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளைக் குவித்தார். அது எனக்குத் தெரியவந்தது. அதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அதன் அடிப்படையில்தான் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் இறுதி வாதத்தின்போது ஆஜராகி, சுதந்திரமாக வாதிடவும், எழுத்துபூர்வமான வாதத்தை முன்வைக்கவும் அனுமதிக்க வேண்டும்.

நீதிபதி: வழக்கு தொடங்கி 20 வருடமாகிறது. இவ்வளவு நாள் எங்கே போயிருந்தீர்கள்?

சு.சாமி: இவ்வழக்கை தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினர் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். நான் கவனித்துக்கொண்டிருக்கிறேன். நான் மத்திய அமைச்சராகவும், எம்.பி-யாகவும், கட்சியின் தலைவராகவும் இருந்ததால், நீதிமன்றத்துக்கு வரவில்லை. என்றாலும் வழக்கின் போக்கை கவனித்துக்கொண்டிருந்தேன். நீதியின் நலனை கருதியும், குற்றவாளிகளுக்குத் தண்டனையை உறுதிசெய்யவும் இந்த வழக்கில் என்னை 3-ம் தரப்பு வாதியாக வாதிட அனுமதிக்க வேண்டும்.

பவானிசிங்: எழுத்துபூர்வமான வாதத்தை அனுமதிக்கலாம். சுதந்திரமாக வாதிட அனுமதிக்கக் கூடாது.

குமார் (அதிமுக வழக்கறிஞர்): உண்மையான புகார்தாரர் சுப்பிரமணியன் சுவாமி கிடையாது. இவர் கோர்ட்டில் புகார் செய்ததோடு சரி. இந்த வழக்கின் புகார்தாரர் வி.சி.பெருமாள்தான். அவரே புகார்தாரராக இருந்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தார். அதனால், சுப்பிரமணியன் சுவாமிக்கும் இந்த வழக்குக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இந்த வழக்குக்கு சம்பந்தமில்லாத ஒருவரை சுதந்திரமாக வாதிடவோ, எழுத்து மூலம் வாதிடவோ அனுமதிக்கக் கூடாது.

சு.சாமி: மஹாராஸ்டிரா முதல்வர் அந்துலே வழக்கில் தனி நபர் புகார் கொடுத்தார். அந்த தனிநபர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட அனுமதிக்கப்பட்டார். அதேபோன்று இந்த வழக்கில் புகார்தாரர் என்ற முறையில் என்னை அனுமதிக்க வேண்டும்.

 அன்பழகன் அரசியல்வாதிதானே?

‘அன்பழகன் தரப்பை இவ்வழக்கில் 3-ம் தரப்பு வாதியாக சேர்க்க வேண்டுமா... வேண்டாமா?’ என்று நடைபெற்ற வாதம்.

நீதிபதி: (அன்பழகன் தரப்பு வழக்கறிஞர் சரவணனைப் பார்த்து) உங்கள் வாதத்தைத் தொடங்கலாம்.

சரவணன்: இந்த வழக்கு இங்கு நடைபெற காரணமாக இருந்தவர் என் மனுதாரர் அன்பழகன்தான். இவ்வழக்கில் அரசு வழக்கறிஞருக்கு உதவியாகவும், எங்கள் தரப்பு வாதத்தை எழுத்துபூர்வமாக கொடுக்கவும் அனுமதிக்க வேண்டும்.

நீதிபதி: அன்பழகன் அரசியல்வாதிதானே?

சரவணன்: ஆமாம்.

நீதிபதி: அரசியல் பேச பாராளுமன்றம் இருக்கிறது. அங்கு போய் பேசிக்கொள்ளுங்கள்.

சரவணன்: அரசியல் என்று பார்க்காமல் எங்கள் தரப்பு விவரங்களை சொல்ல அனுமதிக்க வேண்டும். இவ்வழக்கில் நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இதில் அரசியலை நுழைப்பதாக சொல்வது தவறு.

நீதிபதி: இப்படி தமிழ்நாடு முழுவதும் இவ்வழக்கில் ஆஜராக வந்தால் ஏற்றுக்கொள்ள முடியுமா?

சரவணன்: 2004-ல் இவ்வழக்கு சென்னையில் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அ.தி.மு.க ஆட்சி நடைபெற்றதால் சரியான தீர்ப்பு கிடைக்காது என்று கருதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அதை ஏற்ற உச்சநீதிமன்றம் இவ்வழக்கை கர்நாடகாவுக்கு மாற்றியது. அதன் பிறகும் இந்த வழக்கில் எங்களை இணைத்துக்கொள்ளாமல் வெளியில் இருந்து கவனித்து வந்தோம். இவ்வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, அரசு வழக்கறிஞர் தடம் மாறுகிறார் என்றபோதுதான் எங்களை 3-ம் தரப்பு வாதியாக சேர்த்து எங்கள் எழுத்துபூர்வ வாதத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டோம். சிறப்பு நீதிமன்ற நீதிபதியும் எங்களை 3-ம் தரப்பு வாதியாக சேர்த்துக்கொள்ள அனுமதித்தார். இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் நாங்கள் பங்கேற்று நீதி கிடைக்க போராடி வருகிறோம்.

நீதிபதி: ஏன் இதில் தனி ஆர்வம் காட்டுகிறீர்கள்?

சரவணன்: தனி ஆர்வமெல்லாம் கிடையாது. குற்றவாளிகள் தப்பித்துவிடக் கூடாது.

குமார்: அரசு வழக்கறிஞராக பவானிசிங் இருக்கும்போது 3-ம் தரப்பினரை அனுமதிக்கக் கூடாது. ஜெயலலிதாவின் அரசியல் எதிரிகள் லாபம் பெற முயற்சிக்கிறார்கள்.

நீதிபதி: (பவானிசிங்கைப் பார்த்து) என்ன சொல்கிறீர்கள்?

பவானிசிங்: நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதை ஏற்றுக்கொள்ளுகிறேன்.

 அன்பழகன் வெளியே... சுவாமி உள்ளே!

கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு விசாரணையில் தங்களை 3-ம் தரப்பு வாதியாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற சுப்பிரமணியன் சுவாமி வாதமும், அன்பழகன் தரப்பு வாதமும் நிறைவு பெற்றதும்... நீதிபதி குமாரசாமி தீர்ப்பு வழங்கினார்.

நீதிபதி: அரசு வழக்கறிஞருக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று அன்பழகன் வழக்கறிஞர் வாதிட்டார். ஆனால், ஒரு பக்கம் அரசு வழக்கறிஞருக்கு உதவியாக இருப்பதாகவும், இன்னொரு பக்கம் அரசு வழக்கறிஞரை நீக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுவும் போடுகிறார்கள். இப்படி இரு வேறுபட்ட கருத்துகளைக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது எப்படி இவர்களால் அரசு வழக்கறிஞருக்கு உதவ முடியும்?

மேலும் அன்பழகன் திமுக பொதுச்செயலாளராக இருப்பதால் ஏ1-க்கு அரசியல் எதிரி என்பதும் தெரிய வருகிறது. அவர்களும் (அன்பழகன் தரப்பினரும்) அதிகாரத்தில் இருந்திருக்கிறார்கள். அப்போது ஊழலை ஒழிக்க எந்த முயற்சியும் எடுத்ததைப்போல தெரியவில்லை. இதையெல்லாம் பார்க்கும்போது அன்பழகன் பொது நோக்கத்தோடு இதில் ஆஜராவதாகத் தெரியவில்லை. கொல்கத்தா உயர்நீதிமன்றம் ஒரு வழக்கில் தனிநபர் வாதிட அனுமதி மறுத்திருக்கிறது. அதனால், இந்த வழக்கிலும் அன்பழகன் என்ற தனிநபர் தன்னை இவ்வழக்கில் 3-ம் தரப்பு வாதியாக இணைத்துக்கொள்ள கொடுத்த மனுவைத் தள்ளுபடி செய்கிறேன்.

அதேபோல இந்த வழக்கில் சுப்பிரமணியன் சுவாமி தன்னை சுதந்திரமாக வாதிடவும், எழுத்துபூர்வமாக தன் வாதத்தைப் பதிவுசெய்யவும் அனுமதி கேட்டிருக்கிறார். இவர் இந்த வழக்கில் முதல் புகார்தாரராகவும், இவ்வழக்கில் சாட்சியாகவும் இருந்து தன் கருத்தை பதிவு செய்திருக்கிறார். மேலும் அரசு வழக்கறிஞர் தனக்கு உதவியாக இருக்க சுப்பிரமணியன் சுவாமி சிறந்தவராக இருப்பார் என்று கூறியதாலும், சுப்பிரமணியன் சுவாமியை இவ்வழக்கின் அரசு வழக்கறிஞருக்கு உதவியாக இருக்க அனுமதிக்கிறேன்.

மேலும், இறுதி வாதம் நிறைவில் சுப்பிரமணியன் சுவாமி தன் கருத்தை எழுத்துபூர்வமாக பதிவு செய்யவும் அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால், இவ்வழக்கில் சுப்பிரமணியன் சுவாமியை இணைத்துக்கொண்டு சுதந்திரமாக வாதிட அனுமதிக்க முடியாது.

 கோடிக்கணக்கில் பணம் வந்தது எப்படி?

சுப்பிரமணியின் சுவாமி தாக்கல் செய்த எழுத்துபூர்வ வாதம் இதுதான்... ஜெயலலிதா முதல்வர் பதவியை துஷ்பிரயோகம் செய்து சொத்து சேர்த்ததால் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதா 1979 ஆண்டு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். கடந்த 1985 - 86-ம் ஆண்டு வருமானவரித் துறையில் தாக்கல் செய்த அறிக்கையில், தனக்கு எந்த வருமானமும் இல்லை என்று கூறி இருக்கிறார். 1984 - 89 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். அந்த காலகட்டத்தில் 1988-ம் ஆண்டு 9.2 லட்சம் செலவில் 4 கார்களும், 1.40 லட்சத்தில் ஒரு ஜீப்பும் வாங்கியுள்ளார். எந்த வருமானமும் இல்லை என்று 1985-ல் தெரிவித்தவருக்கு, எப்படி எம்.பி-யாக இருந்த காலத்தில் மட்டும் வாகனம் வாங்க வருமானம் வந்தது?

1990-ம் ஆண்டு ஜெயலலிதாவும், சசிகலாவும் சேர்ந்து ஜெயா பப்ளிகேஷன், சசி என்டர்பிரைசஸ் மற்றும் நமது எம்.ஜி.ஆர் ஆகிய 3 நிறுவனங்களைத் தொடங்கினார்கள். அந்த நிறுவனங்கள் தொடங்கப்பட்ட காலகட்டத்தில் எந்த பணப்பரிவர்த்தனையும் நடைபெறவில்லை. ஆனால், ஜெயலலிதா முதல்வரானதும் இந்த நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. கூடுதலாக 29 நிறுவங்னகள் தொடங்கப்பட்டு அதில் சுதாகரன், இளவரசி பங்குதாரர்களாகச் சேர்க்கப்பட்டனர்.

அந்த 29 நிறுவனங்களில் எந்தச் செயல்பாடும் இல்லாத நிலையில், அந்த நிறுவன வங்கிக் கணக்கில் மட்டும் கோடிக்கணக்கான அளவில் பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்றது. ஜெயலலிதா 1991-ல் முதல்வராவதற்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள திராட்சைத் தோட்ட பங்களா புதுப்பிக்க தனி நபரிடம் 4 லட்சம் கடன் வாங்கிய ஜெயலலிதாவுக்கு, 1991 - 96 வரை அவர் முதல்வராக இருக்கும்போது கோடிக்கணக்கான பணம் எப்படி வந்தது?

1987 - 93-ம் ஆண்டு வரை வருமானவரித் துறையில் குற்றவாளிகள் வரிகள் கட்டவில்லை. முதல் குற்றவாளியான ஜெயலலிதாவைப் பயன்படுத்தி மற்ற குற்றவாளிகள் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளனர். குற்றவாளிகள் கூட்டுச்சதி செய்து வருமானத்துக்கு அதிகமான சொத்துகளைச் சேர்த்துள்ளதை கீழ் நீதிமன்றம் விசாரணை நடத்தி உறுதி செய்துள்ளது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் சார்பில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை இந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும்.

 தீர்ப்பு தேதி அறிவிக்காமல் ஒத்தி வைக்கிறேன்!

இதையடுத்து சுப்பிரமணியன் சுவாமியின் எழுத்துபூர்வ வாதத்துக்கு பதில் எழுத்துபூர்வ வாதத்தை சமர்பிக்க வேண்டும் என ஜெ தரப்பு வழக்கறிஞர் குமாரும், அரசு வழக்கறிஞர் பவானிசிங்கும் நீதிபதி குமாரசாமியிடம் கேட்டார்கள். மதியம் 2.30 மணிக்கு சமர்ப்பியுங்கள் என்று கூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.

மதியம் 2:30 மணிக்கு தீர்ப்பு தேதி அறிவிக்கபடும் என்ற எதிர்பார்ப்பால் அ.தி.மு.க&வைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பெருமளவு வந்திருந்தார்கள். இதனால், நீதிமன்றம் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. சரியாக 2.30 மணிக்கு நீதிபதி தன் இருக்கையில் அமர்ந்தார்.

ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமார், சுப்பிரமணியன் சுவாமியின் எழுத்துபூர்வ வாதத்துக்கு பதில் எழுத்துபூர்வ வாத்தை 6 பக்கங்கள் தயாரித்து கொடுத்தார். அதில், சுப்பிரமணியன் சுவாமியின் எழுத்துபூர்வ வாதம் ஆதாரமற்ற வாதம் என்பதால் இந்த நீதிமன்றம் அதை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று சொல்லியிருந்தார். பவானிசிங் தன் பங்குக்கு 4 பக்கங்களில் உச்சநீதிமன்றம், பல மாநில உயர்நீதிமன்றத் தீர்ப்புகளை சுட்டிக்காட்டி எழுத்துபூர்வ வாதத்தைக் கொடுத்தார். அதையடுத்து நீதிபதி குமாரசாமி, ‘‘இந்த வழக்கின் அனைத்து தரப்பு விசாரணையும் முடிந்துவிட்டதால் தீர்ப்பு தேதி அறிவிக்காமல் ஒத்தி வைக்கிறேன்’’ என்றார்.

ஸ் பெ

unread,
May 16, 2015, 3:54:03 PM5/16/15
to panbudan

ஜனதா கட்சித் தலைவர் ஆரம்பித்து வைத்த 18 ஆண்டு கால வழக்கு, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமியால் மூன்று நிமிடங்களில் முடித்து வைக்கப்பட்டது. மேல்முறையீட்டு வழக்கில் குமாரசாமி வழங்கிய தீர்ப்பும், அதனைத் தொடர்ந்து நடந்த கொண்டாட்ட காட்சிகளும் இந்தப் பகுதியில்...

பூசாரிகளாக மாறிய அமைச்சர்கள்!

தீர்ப்பு நாள் மே11 என்று அறிவிக்கப்பட.. தீர்ப்புக்கு முந்தைய மூன்று நாட்களும் தமிழகத்தில் உள்ள கோயில்களில் அமைச்சர்களே கிட்டதட்ட பூசாரிகளாக மாறிவிட்டார்கள்! அதில் ஹைலைட், வழக்கம்போல செந்தில்பாலாஜிதான்! கடந்த 5-ம் தேதி மாலை கரூரில் உள்ள பசுபதீஸ்வரர் கோயிலில் ‘அம்மா’ என்ற எழுத்துகள் இருப்பதுபோல ஒரு லட்சத்து எட்டு விளக்குகள் வைத்து பூஜை நடத்தினார். இதற்காக 7,200 லிட்டர் நெய் வாங்கப்பட்டிருக்கிறது. கோயில் வளாகத்தில் நடக்கவே இடம் இல்லாத அளவுக்கு விளக்குகளால் நிரம்பியிருந்தது. விடியவிடிய அந்த விளக்குகள் அணையாமல் எரிய... மறுநாள் 6-ம் தேதி காலை நவக்கிரஹ சாந்தி ஹோமம், அஸ்திர ஹோமம் என்ற பிரமாண்ட ஹோமங்களையும் நடத்தினார் செந்தில்பாலாஜி. தீர்ப்புக்கு முதல் நாள் தமிழகத்தில் உள்ள முக்கியமான கோயில்கள் அனைத்திலும் அணையா விளக்கு ஏற்றிவைக்கச் சொல்லியும் உத்தரவு பறக்க... அதன்படி அணையா விளக்கும் ஏற்றப்பட்டிருக்கிறது.

தஞ்சாவூரில் உள்ள பிரதாப வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் தொடர்ந்து ஹோமம் நடத்தி வந்தவர் அமைச்சர் வைத்திலிங்கம். முதல்நாள் இந்தக் கோயிலில் சிறப்பு யாகத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் வைத்திலிங்கம். ‘யாராலும் சாதிக்க முடியாத காரியங்களையும் சாதிக்கக்கூடிய ஆற்றல்படைத்தவனே... என்னுடைய காரியங்களையும் சாதித்துத்தருவாயாக!’ என்று ஆஞ்சநேயரிடம் மனமுருக வேண்டி இருக்கிறார் வைத்திலிங்கம். அந்த ஆஞ்சநேயர்தான் நேரில் வந்து அருள் பாலித்துவிட்டதாக நினைக்கிறார் வைத்திலிங்கம். கோவை மாவட்டம் ஆனைமலையில் இருக்கும் மாசாணியம்மன் கோயிலில் விளக்குபூஜை, தென்கயிலை என்று சொல்லப்படும் பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயிலில் 108 திரவியங்களுடன் சத்ரு சம்ஹார ஹோமத்தை நடத்தியிருக்கிறார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. இப்படி ஒவ்வொரு அமைச்சர்கள் தொடங்கி கட்சியில் அடிமட்டத்தில் இருக்கும் நிர்வாகிகள் வரை யாரும் ஒரு கோயிலையும் விடவில்லை.!

அமைச்சர் செல்லூர் ராஜு வீட்டில் எந்த நேரமும் ‘ஓம்.. க்ரீம்... க்ரீம்!’ என்று மந்திரவாதி வீடுபோல சத்தம் கேட்டபடியே இருந்தது. பால்குடம், காவடி என்று செல்லூர் ராஜு வேண்டாத தெய்வம் இல்லை! போகாத கோயில் இல்லை. திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்கு அமைச்சர் காமராஜ் தலைமையில் 6,667 பெண்கள் பால்குடம் தூக்கி வந்தனர். வருடத்துக்கு ஒருமுறை திருவிழா நடந்த கோயில்கள் எல்லாம் தினம் தினம் திருவிழா ஆனது. ஒவ்வொரு அமைச்சரும் தங்களது பவரைக் காட்டுவதற்காகப் போட்டி போட்டுக்கொண்டு விதவிதமான பிரார்த்தனைகளைச் செய்தனர்.

மூன்று நிமிடத்தில் முடிந்த தீர்ப்பு!

தீர்ப்பு நாள் மே 11 என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து பெங்களூரில் பரபரப்பு பற்றிக்கொண்டது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பெங்களூரில் உள்ள ஹோட்டல்களில் அறைகளை முன்பதிவு செய்தனர். மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகளும் கர்நாடக உயர் நீதிமன்ற வளாகத்தில் குவிந்தனர். கர்நாடக உயர் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டது.

கர்நாடக உயர் நீதிமன்ற அறை எண்14 இன்று காலை 10.30 மணிக்கு கூடியது. தனது இருக்கையில் அமர்ந்த நீதிபதி குமாரசாமி சரியாக 10.47-க்கு தீர்ப்பை வாசிக்கத் துவங்கினார். "சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுவிக்கப்படுகின்றனர். ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 4 பேரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்கான குற்றச்சாட்டை அரசு தரப்பு வழக்கறிஞர் நிரூபிக்கவில்லை. குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வழங்கப்பட்ட சாட்சியங்கள் ஏற்புடையதாக உள்ளது. எனவே, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுவிக்கப்படுகின்றனர்" என்றார்.

மேலும், ''வருமானத்தைவிட 10 விழுக்காட்டுக்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்டிருந்தால் தண்டனை வழங்கலாம். ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு வருமானத்தை விட 8.12 விழுக்காடு இருக்கிறது. இது அனுமதிக்கப்பட்ட அளவுதான். குற்றச்சாட்டுகளுக்கும், அரசுத் தரப்பு ஆதாரங்களுக்கும் முரண்பாடு உள்ளது. வருமான வரி தொடர்பான வாதத்தை கீழ் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. வங்கிக் கடன்களை கீழ் நீதிமன்றம் கணக்கில் கொள்ளவில்லை'' என்று தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

 தீர்ப்பு முழு விவரம்!

ஜெயலலிதாவை விடுதலை செய்வதற்கான காரணங்களை அவர் தனது 919 பக்க தீர்ப்பில் விளக்கமாக குறிப்பிட்டுள்ளார். அந்த தீர்ப்பில் நீதிபதி கூறியிருப்பதாவது:

* மேல்முறையீட்டு வழக்குகளில், அரசு தரப்பின் வாதம் உண்மையானது என்றும், மேல்முறையீட்டு மனுதாரர்களின் குற்ற நிரூபணம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகவும் விசாரணை நீதிமன்றங்களை போலவே, மேல்முறையீட்டு நீதிமன்றத்தையும் திருப்திப்படுத்த வேண்டும்.

* விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது என்று மேல்முறையீட்டு மனுதாரர்கள் இந்த நீதிமன்றத்தை திருப்திப்படுத்த வேண்டியது இல்லை. ஒட்டுமொத்த ஆதாரங்களையும் ஆய்வு செய்ய வேண்டியது மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் வேலை. அந்த வகையில், விசாரணை நீதிமன்றத்துக்கு உள்ள அதே அதிகாரங்கள், மேல்முறையீட்டு நீதிமன்றத்துக்கும் உள்ளன.

* அதன்படி, ஆதாரங்களை ஆராய்ந்தால், விசாரணை நீதிமன்றத்தின் முடிவுகள் தவறானவை, ஆதாரங்களுக்கு முரணானவை என்றே சொல்லத் தோன்றுகிறது.

* இந்த வழக்கில், வருமான வரித்துறையின் மதிப்பீட்டை விசாரணை நீதிமன்றம் பெரிய ஆதாரமாகவே எடுத்துக் கொள்ளவில்லை. ஆதாரங்களை உரிய கண்ணோட்டத்தில் பரிசீலிக்கவில்லை.

* குற்றம் சாட்டப்பட்டவர்கள், இந்தியன் வங்கியில் கடன் பெற்றதை விசாரணை நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. ஆனால், அந்த கடனை ஒரு வருமானமாக கருதவில்லை. இதன்மூலம், கடனை வருமானமாக கருதாத தவறை விசாரணை நீதிமன்றம் செய்துள்ளது.

மேலும், கட்டுமான செலவு தொடர்பான ஆதாரங்களை முறையாக ஆராய தவறி விட்டது. கட்டுமான செலவாக, 20 சதவீத செலவை கழித்துக் கொள்ளலாம் என்று சர்வசாதாரணமாக முடிவு செய்து விட்டது. இந்த 20 சதவீத கழிவு என்பது சந்தேகத்துக்கு உரிய வகையிலும், யூகத்தின் பேரிலும் கணக்கிடப்பட்டுள்ளது.

* மேலும், (சுதாகரன்) திருமண செலவை ரூ.3 கோடி என்று விசாரணை நீதிமன்றம் மதிப்பிட்டுள்ளது. அந்த ரூ.3 கோடியை முக்கிய குற்றவாளிதான் (ஜெயலலிதா) செலவழித்தார் என்பதற்கு ஏற்கத்தக்க ஆதாரம் ஏதும் இல்லை. அதையும் மீறி, திருமண செலவு ரூ.3 கோடி என்ற முடிவுக்கு வந்துள்ளது.

* திருமண செலவு ரூ.3 கோடி என்றும், அந்த தொகையை முக்கிய குற்றவாளியின் செலவு கணக்கில் சேர்த்ததும் முறையல்ல.

* குற்றம் சாட்டப்பட்டவர்கள் முன்வைத்த பெரும்பாலான வாதங்களை விசாரணை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சாட்சிகளை பிறழ் சாட்சிகளாக கருதாமல், அவர்கள் மீண்டும் அழைக்கப்பட்டு, குறுக்கு விசாரணை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள். அந்த சாட்சிகளிடம் தங்களுக்கு சாதகமான முறையில் அரசுத்தரப்பு கேள்விகள் கேட்டுள்ளது.

* குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமான அம்சங்களில் ஒன்றாக இதை கருத வேண்டும். சாட்சிகள், வெவ்வேறு காலகட்டத்தில், வெவ்வேறு விதமாக சாட்சி அளித்தால், அவர்கள் மீது நம்பிக்கை வைப்பது நல்லதல்ல.

* மேலும், முறைகேடாக சம்பாதித்த பணத்தில்தான் சொத்துகள் வாங்கப்பட்டதாக யூகிப்பது கடினம். எனவே, அந்த சொத்துகளை பறிமுதல் செய்யுமாறு விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, சட்டப்படி ஏற்கத்தக்கது அல்ல.

* ஆதாரங்களை உரிய கண்ணோட்டத்தில் விசாரணை நீதிமன்றம் ஆராயவில்லை. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெருமளவு கடன் வாங்கித்தான், அசையா சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன.

* 4 குற்றவாளிகளும் குற்றச்சதியில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை பொறுத்தவரை, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் முக்கிய குற்றவாளியுடன் ஒரே வீட்டில் வசித்தார்கள் என்பதை மட்டும் வைத்து அவர்கள் குற்றச்சதியில் ஈடுபட்டதாக கூறிவிட முடியாது.

* ஒரு சட்டவிரோதமான காரியத்தை செய்ய இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோர் இடையே ஒப்பந்தம் உருவானால்தான், அதை சதியாக கருத வேண்டும். சதி நடந்தது என்பதையும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்த சதியில் பங்கேற்றனர் என்பதையும் நம்புவதற்கு காரணம் இருக்க வேண்டும்.

* ஆனால், இந்த வழக்கில் முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள், ஜெயலலிதாவை தவிர மற்ற 3 பேரும், பெருமளவு கடன் வாங்கி, விவசாய நிலங்கள், நிறுவனங்கள் போன்ற அசையா சொத்துகளை வாங்கியதாக தெரிவிக்கின்றன.

* எனவே, வருமானம் வந்த வழி, சட்டப்பூர்வமானது. நோக்கம், சட்டப்பூர்வமானது. 4 பேரும் ஒரே வீட்டில் இருந்தனர் என்ற ஒரே காரணத்துக்காக, 4 பேரும் சதி செய்தனர், முறைகேடான வழிகளில் சொத்துகள் வாங்கினர் என்ற முடிவுக்கு வர முடியாது.

* ஒட்டுமொத்த சூழ்நிலைகள் மற்றும் ஆதாரங்களை பரிசீலித்து பார்க்கும்போது, விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பும், முடிவும் பலவீனமாக உள்ளது. சட்டப்படி ஏற்க முடியாததாக இருக்கிறது.

* குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்துகளையும், நிறுவனங்கள் மற்றும் கம்பெனிகளின் சொத்துகளையும் அரசு தரப்பு ஒன்றாக சேர்த்துள்ளது. கட்டுமான செலவாக ரூ.27 கோடியே 79 லட்சத்து 88 ஆயிரத்து 945-ஐயும், திருமண செலவாக ரூ.6 கோடியே 45 லட்சத்து 4 ஆயிரத்து 222-ஐயும் சேர்த்துக் கொண்டு, மொத்த சொத்து மதிப்பு ரூ.66 கோடியே 44 லட்சத்து 73 ஆயிரத்து 573 என்று மதிப்பிட்டுள்ளது.

* மிகைப்படுத்தப்பட்ட கட்டுமான செலவையும், திருமண செலவையும் கழித்து விட்டோம் என்றால், மொத்த சொத்து மதிப்பு ரூ.37 கோடியே 59 லட்சத்து 2 ஆயிரத்து 466 ஆகும். ஆடைகள் மற்றும் செருப்புகளின் மதிப்பு குறைவாகவே இருப்பதால், அந்த செலவை நான் கழிக்கவில்லை.

* குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் நிறுவனங்களின் மொத்த வருமானம் ரூ.34 கோடியே 76 லட்சத்து 65 ஆயிரத்து 654 ஆகும்.

* சொத்து மதிப்பில் இருந்து மொத்த வருமானத்தை கழித்து விட்டால் வரும் தொகை ரூ.2 கோடியே 82 லட்சத்து 36 ஆயிரத்து 812 ஆகும். இதுவே, வருமானத்துக்கு மீறிய சொத்து ஆகும். இந்த தொகை மொத்த வருமானத்தில் 8.12 சதவீதமே ஆகும்.

* கிருஷ்ணானந்த் அக்னிஹோத்ரி என்பவரின் வழக்கில், சொத்துக்குவிப்பு வருமானத்தை விட 10 சதவீதம்வரை இருந்தால், குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

* சொத்து குவிப்பு வருமானத்தை விட 20 சதவீதம்வரை இருந்தால், அதை அனுமதிக்கத்தக்க அளவாக கருதலாம் என்று ஆந்திர அரசு ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. தற்போதைய பணவீக்கத்தை கருத்தில் கொண்டு, 10 முதல் 20 சதவீதம் வரையிலான சொத்து குவிப்பை அனுமதிக்கத்தக்க அளவாக எடுத்துக் கொள்ளலாம்.

* இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்து குவிப்பு வருமானத்தை விட 8.12 சதவீதமே இருப்பதால், அது அனுமதிக்கத்தக்க அளவுக்குள்தான் இருக்கிறது. ஆகவே, குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை பெற தகுதியானவர்கள்.

* முக்கிய குற்றவாளியே விடுதலை செய்யப்படும்போது, சிறிய பங்கு வகித்த மற்ற 3 பேரும் விடுதலை பெற தகுதியானவர்கள்தான்.

* ஆகவே, அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் 4 பேரும் விடுவிக்கப்படுகிறார்கள். அவர்கள் மீதான குற்ற நிரூபணமும், சிறைத் தண்டனையும் ரத்து செய்யப்படுகிறது.

* அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய பிறப்பித்த உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

ஆச்சர்ய ஆச்சார்யா... அதிர்ச்சி சுவாமி!

''இந்தத் தீர்ப்பை எதிர்பார்க்கவில்லை. சில தீர்ப்புகள் ஆச்சரியமளிக்கத்தான் செய்யும்!' - தீர்ப்புக்குப் பின்னர் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா சொன்ன கருத்து இது. அத்துடன், ''வாதத்தை வாய்மொழியாக எடுத்து வைக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. எழுத்துபூர்வ வாதம் தாக்கல் செய்ய ஒருநாள் மட்டுமே அவகாசம் கிடைத்தது'' என்றார்.

இந்த வழக்கின் சூத்ரதாரியான சுப்பிரமணியன் சுவாமி, ''கர்நாடக உயர்நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரை விடுதலை செய்துள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இவ்வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். ஆனால் கர்நாடகா அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பது தெரியவில்லை. கர்நாடக அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஒருவேளை கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யாவிட்டால், மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு எனக்கு கிடைக்கும். குஜராத் கலவர வழக்கில் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பாதிக்கப்பட்டவர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டதை போன்று, அந்த அடிப்படையில் நான் மேல் முறையீடு செய்வேன்'' என்றார்.

கொண்டாடி தீர்த்த அதிமுகவினர்!

தீர்ப்பு வந்த தினத்தன்று தமிழகத்தின் பல இடங்களில் லேசான மழை பெய்ய... 'எங்கள் தலைவியின் விடுதலையை வருண பகவானே கொண்டாடுகிறார்' என்று அதிமுக தொண்டர்கள் இனிப்பு கொடுத்தும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி தீர்த்தனர்.

தீர்ப்பு வெளிவந்த அடுத்த விநாடி கர்நாடக உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்த அதிமுக வழக்கறிஞர்கள், தொண்டர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆர்ப்பரித்தனர். தீர்ப்பு செய்தி டி.வி-க்களில் ஃப்ளாஷ் செய்தியாகவும், வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் மூலமாகவும் வைரலாக பரவ... தமிழகத்திலும் உற்சாக கொண்டாட்டம்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். போயஸ் கார்டனில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சென்னை யானை கவுனியில் சக்தி சிவன் என்ற அதிமுக தொண்டர் கொடி கட்டும்போது மின்சாரம் பாய்ந்து பலியானது சோகம்.

கருணாநிதியின் கேள்விகள்!

ஜெ. வழக்கு தீர்ப்பு குறித்து அரசியல் தலைவர்கள் பல்வேறு கருத்துகளை உதிர்த்துகொண்டிருக்க... திமுக தலைவர் கருணாநிதி சில கேள்விகளை முன்வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

"நீதிமன்றங்களுக்கெல்லாம் உயர்ந்த நீதிமன்றம் ஒன்று இருக்கிறது. அதுதான் மனச்சாட்சி என்ற நீதிமன்றம். அது அனைத்து நீதிமன்றங்களுக்கும் மேலானது.

கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா குறித்த சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவையும் மற்றவர்களையும் விடுதலை செய்து தீர்ப்பு கூறியிருக்கிறார். இந்த நேரத்தில் ஒரு சில நாட்களுக்கு முன்பு இதே நீதிபதி குமாரசாமி என்னென்ன சொன்னார் என்பது தான் நினைவுக்கு வருகிறது.

29-1-2015 அன்று விசாரணையின்போது, நீதிபதி குமாரசாமி சசிகலாவின் வழக்கறிஞரைப் பார்த்து, “சொத்துக்குவிப்பு வழக்கை முழுமையாக விசாரணை நடத்திய தனி நீதிமன்ற நீதிபதி; குற்றவாளிகள் தவறு செய்துள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் தனது தீர்ப்பில் 150 முடிச்சுகள் போட்டுள்ளார். மேல்முறையீட்டு மனு விசாரணையில் அந்த முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து உரிய ஆதாரங்களுடன் பதில் சொல்ல வேண்டும். ஆனால் இதுவரை இந்த முடிச்சுகளை அவிழ்க்கும் முயற்சியை நீங்கள் யாரும் மேற்கொள்ளவில்லை. அதற்கான ஆதாரங்களையும் காட்டவில்லை” என்று கூறினார்.

நீதிபதி குமாரசாமி தெரிவித்த அந்த முடிச்சுகள் இப்போது அவிழ்க்கப்பட்டு விட்டனவா? 16-2-2015 அன்று ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பி.குமார் “இது அரசியல்ரீதியாக பழி வாங்கும் நோக்கத்தில் தொடரப்பட்டுள்ள பொய்வழக்கு” என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி சி.ஆர். குமாரசாமி, “இது பொய் வழக்கு, பொய் வழக்கு என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்கிறீர்கள். ஆனால், குற்றவாளிகள் மீது கூறியுள்ள புகார் உண்மையில்லை என்பதை உறுதி செய்வதற்கான எந்த ஆதாரத்தையும் முழுமையாகக் காட்டாமல், வாய் வழியாக பொய் வழக்கு என்று சொன்னால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அரசுத் தரப்பில் 259 சாட்சிகள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். புகார் உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் 2 ஆயிரத்து 341 ஆவணங்கள் தாக்கல் செய்து உறுதிப்படுத்தியுள்ளனர். குற்றவாளிகள் தரப்பில் 99 சாட்சிகளும் 385 ஆவணங்கள் மட்டுமே தாக்கல் செய்துள்ளீர்கள். அதிலும் அரசுத் தரப்புக் குற்றத்தை முறியடிப்பதற்கான ஆதாரங்கள் சொல்லிக் கொள்ளும் வகையில் இல்லை” என்றார். அரசுத் தரப்புக் குற்றச்சாட்டினை முறியடிப்பதற்கான ஆதாரங்கள் நீதிபதி குமாரசாமியிடம் தாக்கல் செய்யப்பட்டு விட்டதாக எந்தத் தகவலும் இல்லை!

மீண்டும் ஒரு முறை நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்களிடம், “தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை உங்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த சாட்சியங்களோடும் ஆதாரங்களோடும் 82 - 92 சதவிகிதம் நிரூபித்திருக்கிறார்கள். ஆனால் நீங்கள் இதுவரை சாட்சிய ஆதாரங்களை காட்டவும் இல்லை. 30 - 35 சதவிகிதம் வரைதான் வாதிட்டிருக்கிறீர்கள் என்றார்.

அப்போது ஜெயலலிதா வழக்கறிஞர், “35 மார்க் எடுத்தாலே பாஸ்தான்” என்றார். அதற்கு நீதிபதி குமாரசாமி “பள்ளிக்கூடத்தில் 35 மார்க் எடுத்தால் பாஸாக இருக்கலாம். ஆனால் நீதிமன்றத்தில் எதிர் தரப்பைவிட அதிக மார்க் வாங்கினால்தான் பாஸ் பண்ண முடியும். அப்படிப் பார்த்தால் உங்களைவிட அவர்கள் 65 மார்க் அதிகமாக வாங்கியிருக்கிறார்கள். அதனால் அவர்கள்தான் பாஸ்” என்று பதிலளித்தார். தற்போது ஜெயலலிதா தரப்பினர் 100 மார்க் வாங்கிவிட்டதாக நீதிபதி குமாரசாமி முடிவுக்கு வர என்ன நடைபெற்றது? எங்கே நடைபெற்றது?

இதற்கெல்லாம் விடை காணத்தான் கர்நாடக அரசின் சார்பில் அண்மையில் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட ஆச்சார்யா இன்று தீர்ப்பு வெளியானதும் “இதுவே இறுதி தீர்ப்பல்ல; இந்தத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யும்“ என்று கூறியிருக்கிறார்.

எனவே இன்று சொல்லப்பட்டிருப்பது இறுதி தீர்ப்பல்ல. “நீதிமன்றங்களுக்கெல்லாம் உயர்ந்த நீதி மன்றம் ஒன்று இருக்கிறது. அது தான் மனச்சாட்சி என்ற நீதிமன்றம். அது அனைத்து நீதிமன்றங்களுக்கும் மேலானது” என்று அண்ணல் காந்தியடிகள் கூறியதைத் தான் இப்போது எல்லோருக்கும் நினைவுபடுத்த விரும்புகிறேன்" என்று கூறினார்.

புடம் போட்ட தங்கமாக மீண்டுள்ளேன்! - ஜெயலலிதா

தீர்ப்பு வெளிவந்ததை அடுத்து ஜெயலலிதா போயஸ்கார்டனில் இருந்து வெளியில் வந்து தொண்டர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர் கோயிலுக்குச் செல்வதற்காக வெளியில் வருவார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால். போயஸ்கார்டன் கதவுகள் திறக்கப்படவில்லை. அவர் தரப்பில் இருந்து உற்சாக அறிக்கை மட்டுமே வெளியானது. அந்த அறிக்கையில், "இன்று (11.5.2015) கர்நாடகா உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு எனக்கு மிகுந்த மன நிறைவை அளிக்கிறது. என் மீது சுமத்தப்பட்ட அவதூறை நீக்கிய தீர்ப்பு இது. என் மீது எனது அரசியல் எதிரிகளால் சுமத்தப்பட்ட பழியினைத் துடைத்திட்ட தீர்ப்பு இது.

நான் எந்த தவறும் செய்யாதவர் என்பதை உறுதி செய்த தீர்ப்பு இது. புடம் போட்ட தங்கமாக நான் மீள இந்தத் தீர்ப்பு வழிவகை செய்துள்ளது. கீழமை நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பிற்குப் பிறகு என் மீது மாறாப் பற்றும், அன்பும் கொண்ட தமிழக மக்கள் இறைவனிடம் வேண்டியதற்கு, இறைவன் அளித்த வரம் இது.

இந்த தீர்ப்பு எனக்கு தனிப்பட்ட முறையில் கிடைத்த வெற்றி என்று நான் கருதவில்லை. நீதி நிலை நாட்டப்பட்டு, தர்மம் வென்றது என்பது தான் இந்த தீர்ப்பு. சூழ்ச்சிகள் என்றைக்குமே தற்காலிகமாக வெற்றி பெறலாம். ஆனால், இறுதி வெற்றி என்பது தர்மத்திற்கும், நேர்மைக்கும்தான் கிடைக்கும்.

திமுகவினாரால் சூழ்ச்சி வலைப் பின்னப்பட்டு, அதன் காரணமாக என் மீது போடப்பட்ட வழக்கில், சதியும் விதியும் சதிராடியதால் இடையிலே நீதி உறங்கி விட்டது. இன்றைய தீர்ப்பு நீதியே என்றும் வெல்லும் என்பதை பறைசாற்றுகிறது.

என்னையும், அஇஅதிமுகவையும் நேரடியாக வெல்ல முடியாது என்ற காரணத்தால் அரசியல் எதிரிகள் இறுதி வரை தங்கள் சூழ்ச்சிகளால் என்னையும், புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல், இதயதெய்வம் எம்.ஜி.ஆர். அவர்களால் துவக்கப்பட்ட மாபெரும் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தையும் அழித்து விடலாம் என்ற காழ்ப்புணர்வை இன்றுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

நான் குற்றமற்றவர் என்பதில் எள் முனையளவும் நம்பிக்கை குலையாமல் எனக்காக பிரார்த்தனைகள் மேற்கொண்ட என்னை வாழ வைக்கும் தெய்வங்களாகிய தாய்மார்களுக்கும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான கழக உடன்பிறப்புகளுக்கும், அனைத்து தமிழக மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கீழமை நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பின் காரணமாக மன வேதனை அடைந்த 233 கழக உடன்பிறப்புகள் எனக்காக தங்களது இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்கள் என்பது என்றென்றும் எனக்கு வேதனை அளிக்கக்கூடியதாகும்.

நேற்று (10.5.2015) கூட நான்கு கழக உடன்பிறப்புகள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்கள். இன்னும் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்திருந்தால் அவர்களும் தமிழக மக்களின் இந்த மகிழ்ச்சியை இன்று கொண்டாடி இருக்கலாம்.

தமிழக மக்கள் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்பதே எப்போதும் எனது அவா ஆகும். தமிழக மக்களின் நலனே என் நலன் என்று நான் என்றென்றும் தமிழக மக்களுக்காகவே உழைத்திடுவேன்" என்றார்.

ஜெயலலிதா முதலமைச்சர் பதவி ஏற்பது, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு என அடுத்த கட்டத்தை நோக்கி வழக்கு நகரத் தொடங்கியது.

ஸ் பெ

unread,
Jun 11, 2015, 12:53:57 AM6/11/15
to panbudan

https://www.savukkuonline.com/11670/

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்.

BY SAVUKKU · JUNE 11, 2015

J2

“என் வாழ்க்கையில் இது போல வேதனை ஏற்படுத்திய ஒரு பொது நிகழ்வை நான் பார்த்தே கிடையாது. மிகவும் மோசமான ஒரு கையறு நிலையில் இருந்ததாக உணர்ந்தேன்” என்று கூறினார் ஒரு மூத்த பத்திரிக்கையாளர்.
அந்த மூத்த பத்திரிக்கையாளர் குறிப்பிட்ட நிகழ்வு, ஜெயலலிதாவின் பதவியேற்கும் நிகழ்வு. “அப்பட்டமாக லஞ்சம் வாங்கிக் கொண்டு ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி கூட்டலைக் கூட சரி பார்க்காமல் தீர்ப்பளிக்கிறார், அதைக் கண்டு ஊரே நகைக்கிறது. ஆனால், கொஞ்சமும் கூச்சமில்லாமல் அந்த தீர்ப்பின் அடிப்படையில், முதல்வராக பதவியேற்றுக் கொள்கிறார் ஜெயலலிதா. அதை இந்த தேசத்தின் உச்சநீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. நீதிப் பிறழ்வு என்று உரக்க குரல் கொடுக்க வேண்டிய ஊடகங்கள், அவரின் இடைத்தேர்தல் வாக்கு வித்தியாசம் எவ்வளவு என்று கணக்கிட்டுக் கொண்டிருக்கின்றன” என்றார்.

அவர் வேதனையில் நியாயம் இல்லாமல் இல்லை.

1975ல், தேர்தல் ரத்து செய்யப்பட்ட பயத்தில், நெருக்கடி நிலையை பிறப்பித்து, இந்தியாவை இந்திரா காந்தி இருளில் தள்ளினார் இந்திரா காந்தி. அடிப்படை உரிமைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன என்று அறிவித்தார். இந்தியாவின் பல மாநில உயர்நீதிமன்றங்கள், அடிப்படை உரிமைகளை ரத்து செய்ய முடியாது என்று தீர்ப்பளித்தன. சில நீதிமன்றங்கள், கைது செய்யப்பட்டவர்களை விடுதலையும் செய்தன. இத்தீர்ப்புகளை தெளிவுபடுத்தக் கோரி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. “ஏடிஎம் ஜபல்பூர்” என்று பிரபலமாக அன்று அழைக்கப்பட்ட வழக்கில், ஐந்து நபர் கொண்ட நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது.

“27 ஜுன் 1975 நாளிட்ட குடியரசுத் தலைவரின் உத்தரவுப்படி, எந்த நபருக்கும், அரசியல் அமைப்புச் சட்ட ஷரத்து 226ன் கீழ் ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தால், அந்த கைது தவறாக இருந்தாலோ, விதிகளை மீறி இருந்தாலோ, சட்டவிரோதமாக இருந்தாலோ, அல்லது உள்நோக்கத்தோடு பிறப்பிக்கப் பட்டிருந்தாலோ, உரிய வழிமுறைகளை பின்பற்றாமல் இருந்தாலோ, அதை எதிர்த்து ஆட்கொணர்வு மனுவோ, அல்லது ரிட் மனுவோ தாக்கல் செய்ய இயலாது” என்று தீர்ப்பளித்தனர்.

ஆனால், அந்த ஐந்து நபர் நீதிபதிகளில் ஒருவரான எச்.ஆர்.கண்ணா, இதை எதிர்த்து தீர்ப்பு எழுதினார். அவரின் தீர்ப்பு குறித்து, தலையங்கம் எழுதிய நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை, இந்தியா, மீண்டும் ஜனநாயகப் பாதைக்கு திரும்பி, ஒருவருக்கு நினைவுச் சின்னம் எழுப்புமேயானால், அது எச்.ஆர் கண்ணாவுக்காகத்தான் இருக்க வேண்டும் என்று தலையங்கம் எழுதியது. அன்று இந்திராவுக்கு எதிராக முதுகெலும்போடு இருந்த ஒரே நீதிபதியாக இருந்தார் நீதியரசர் எச்.ஆர்.கண்ணா.

நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டு 30 ஆண்டுகள் கழித்து, அடிப்படை உரிமைகள் கிடையாது என்று தீர்ப்பெழுதியவர்களில் ஒருவரான நீதிபதி பகவதி, ஜேடிஎம் ஜபல்பூர் வழக்கில் நான் தவறு செய்து விட்டேன் என்று பேட்டியளித்தார்.

செப்டம்பர் 2011ல் இது குறித்து பேட்டியளித்த நீதிபதி பி.என்.பகவதி, “நான் செய்தது தவறு. பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்பு சரியான தீர்ப்பு அல்ல. இப்போது தீர்ப்பெழுதும் வாய்ப்பு கிடைத்தால், நீதிபதி எச்.ஆர்.கண்ணாவோடு உடன்பட்டிருப்பேன். அந்த தீர்ப்புக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். சக நீதிபதிகளோடு ஏன் உடன்பட்டேன் என்று எனக்கு தெரியவில்லை. தொடக்கத்தில் பெரும்பான்மை முடிவுக்கு நான் உடன்படாவிட்டாலும், இறுதியாக ஒப்புக் கொள்ளும்படி வற்புறுத்தப்பட்டேன். என் தரப்பில் அது ஒரு பலவீனமான நடவடிக்கை” என்று கூறினார்.

செப்டம்பர் 2011ல் இவ்வாறு கூறி பி.என்.பகவதி ஒன்றும் அரிச்சந்திரன் அல்ல. இப்படி தீர்ப்பெழுதி விட்டு, ஜனதா அரசாங்கம் வந்ததும், இந்திரா காந்தியை சாடினார். ஆனால் மீண்டும் இந்திரா வென்று ஆட்சியைக் கைப்பற்றியதும், “உங்கள் இரும்புக்கரங்கள் மற்றும் உறுதியான நடவடிக்கையாலும், தீர்க்கதரிசனத்தாலும், நிர்வாகத் திறமையாலும், நீண்ட அனுபவத்தாலும், மக்களின் மீது உள்ள அக்கறையினாலும், இந்த தேசத்தை சரியாக வழிநடத்தி, சரியான இலக்கை அடைவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்று ஒரு கடிதத்தை அனுப்பினார். இதுதான் பி.என்.பகவதியின் லட்சணம்.  இணைப்பு

குமாரசாமிகள் இந்திய நீதித்துறைக்கு புதியவர்கள் அல்ல. இந்திய நீதித்துறை பல குமாரசாமிகளையும், பி.என்.பகவதிகளையும் பார்த்திருக்கிறது. இன்றைய தலைமுறையினருக்கு ஜெயலலிதாவின் டான்சி வழக்கு குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

டான்சி நிறுவனத்துக்கு சொந்தமான 3.07 ஏக்கர் நிலம் மற்றும் 2698 சதுர மீட்டர் கட்டிடம் ஆகியவற்றை, சந்தை விலையை விட குறைவான விலையில் ஜெயலலிதாவும், சசிகலா மற்றும் சிலர் கூட்டுச் சதியில் ஈடுபட்டு, வாங்கினார்கள் என்பதும், முதலமைச்சராக இருந்து கொண்டு, ஜெயலலிதா அரசு நிலத்தை வாங்கினார் என்பதும் குற்றச்சாட்டு. பத்திரப் பதிவு அலுவலகத்தின்படி ஒரு மனையின் விலை 7.32 லட்சம் என்றால், ஜெயலலிதா மற்றும் சசிகலா பங்கதாரர்களாக இருக்கும் ஜெயா பப்ளிகேசன்ஸ் நிறுவனத்துக்கு ஒரு மனை 3.01 லட்சத்துக்கு விற்கப்பட்டுள்ளது என்பதே குற்றச்சாட்டு. 29 மே 1992 அன்று பத்திரப்பதிவு நடந்து, அதே நாளில் நிலம் ஜெயலலிதா வசம் ஒப்படைக்கப்பட்டது. மற்றொரு அரசு நிறுவனமான தமிழ்நாடு சர்க்கரைக் கழகத்துக்கு, டான்சி நிலத்தை ஒரு ஏக்கர் 3 லட்சம் என்ற அடிப்படையில் வழங்கலாம் என்று 14 அக்டோபர் 1991 அன்று நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை ஜெயலலிதாவே அங்கீகரித்து கையெழுத்திட்டிருக்கிறார். ஆனால் நிலத்தை வெளியாட்களுக்கு விற்கலாம் என்று விளம்பரம் வெளியிடப்படுகிறது. இந்த வழக்கு விசாரணையின்போது, கையெழுத்து நிபுணர்கள் ஆராய்ந்து சரிபார்த்த ஜெயலலிதாவின் கையெழுத்தை ஜெயலலிதாவே தன்னுடையது இல்லை என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

The-complete-st127621

 

இதே போல டான்சி எனாமல்ட் வயர்ஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தை சசி ஜெயா வாங்கினார்கள் என்பது மற்றொரு வழக்கு. 10 அக்டோபர் 1991 அன்று இந்த நிலத்தை விற்க, விளம்பரம் செய்யப்படுகிறது. மூன்று நிறுவனங்கள் இந்நிலத்தை வாங்க முன்வருகின்றன. ஆனால் அந்த மூன்று நிறுவனங்களின் விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டு, 12 டிசம்பர் 1991 அன்று புதிய விளம்பரம் வெளியிடப்படுகிறது. இந்த முறை, நான்கு நிறுவனங்கள் விண்ணப்பிக்கின்றன. அதில் ஒன்று சசி என்டர்பிரைசஸ். 90.53 லட்சத்திற்கு விற்கப்பட்டிருக்க வேண்டிய மனையும், 53.04 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டிருக்க வேண்டிய கட்டிடமும், முறையே, 53.04 லட்சம் மற்றும், 16.25 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டு, இதனால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது இரண்டாவது வழக்கு.

வழக்கை விசாரித்த அன்பழகன் என்ற நீதிபதி 9 அக்டோபர் 2000 அன்று ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்கு சிறைத்தண்டனை விதிக்கிறார்.

ஜெயலலிதா உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.தினகர் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது இவ்வழக்கு. நீதிபதி என்.தினகரன் வழக்கறிஞராக இருக்கையில் அவரோடு பணியாற்றிய ஒரு மூத்த வழக்கறிஞர் கூறுகையில், என்.தினகர் அரசு வழக்கறிஞராக இருக்கையில், அரசுத் தரப்பு தவறு செய்திருந்தால் அதை அப்படியே நீதிமன்றத்தில் ஒப்புக் கொள்வார். அரசுத் தரப்பாயிற்றே என்று சமாளிக்க மாட்டார். அந்த அளவுக்கு நேர்மையானவர் என்று பெயரெடுத்தவர் நீதிபதி தினகர். அவரிடம் இந்த வழக்கு மேல் முறையீட்டுக்கு சென்றதும், நடுநிலையாளர்கள் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர் என்று கூறினார்.

4 டிசம்பர் 2001 அன்று அனைவரையும் விடுதலை செய்த நீதிபதி என்.தினகர் தனது தீர்ப்பில் டான்சி நிலம் அரசு சொத்தே கிடையாது அதனால் ஜெயலலிதா அரசு சொத்தை வாங்கினார் என்று கூற முடியாது. மேலும், பொது ஊழியர் அரசு சொத்தை வாங்கக் கூடாது என்பது விதிதான். அது சட்டமல்ல. ஆகையால் அது ஜெயலலிதாவை கட்டுப்படுத்தாது என்று தீர்ப்பளித்தார். அந்த என்.தினகருக்கு கைமாறாக, தற்போது, பிப்ரவரி 2014ல் அவரை தமிழக சட்ட ஆணையத்தின் தலைவராக நியமித்துள்ளார். டான்சி வழக்கிலிருந்து விடுவித்தவருக்கு கைமாறு செய்ய வேண்டாமா ? அதற்காகத்தான்.

law_e_27_2014_Page_1

வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு திமுகவால் எடுத்துச் செல்லப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ராஜேந்திர பாபு மற்றும் வெங்கட்ராம ரெட்டி என்ற நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா செய்தது தவறுதான். ஆனால் அவரை தண்டிக்க சட்டத்தில் இடமில்லை என்று கூறியதோடு மட்டுமல்ல……. ஜெயலலிதா தன் கையெழுத்தை தன்னுடையதே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, இந்த வழக்கில் பதற்றமாக இருந்தார் என்றும் கூறினர்.

ஒரு முதலமைச்சர், கையெழுத்து நிபுணர்களால் சரிபார்க்கப்பட்ட கையெழுத்தை தன்னுடையது அல்ல என்று கூறிய ஒரே காரணத்துக்காகவே ஜெயலலிதா தண்டிக்கப்பட்டிருக்க வேண்டாம் ? ஆனால் ஜெயலலிதா, நிலத்தை திருப்பிக் கொடுத்து விட்டதால், அவரின் மனசாட்சிக்கே விட்டு விடுகிறோம் என்று இரண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பெழுதினார்கள்.

இது போன்ற நீதியரசர்கள் இருக்கிறார்கள் என்பது ஜெயலலிதாவுக்கு நன்கு தெரியும். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு விலை உண்டு. விலைபோகாத மனிதனே இல்லை என்றே ஜெயலலிதா நினைத்து வருகிறார். அவர் நினைத்தது அத்தனையும் சரியே என்பது போலத்தான் 1996 முதல், நீதிமன்றங்கள் தீர்ப்பெழுதி வருகின்றன.
ஆட்சிக்கு பொறுப்பேற்கும் முன்பு, தேர்தலில் வெற்றி பெற்றவுடன், வாரம் ஒரு முறை பத்திரிக்கையாளர்களை சந்திப்பேன் என்றார். ஆனால், ஜெயலலிதா டெல்லி கிளம்பும்போதெல்லாம், அவர் வாகனத்தோடு சேர்ந்து ஓடினாலும், எந்த பத்திரிக்கையாளர்களையும் சந்திப்பதில்லை. இது கடந்த ஆண்டு 27 செப்டம்பர் வரை நீடித்தது.

????????????????????????????????????

ஆனால் தற்போது சிறை சென்ற பிறகு முதலமைச்சராக பதவியேற்ற பிறகு, இது இன்னமும் மோசமாகி விட்டது.
மே 11 அன்று விடுதலை என்று தீர்ப்பு வந்தது. வெளியே தொண்டர்கள் உற்சாகமாக பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி, ஜெயலலிதாவின் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்க, ஜெயலலிதாவோ, யாரையும் சந்திக்காமல், தனிமைச் சிறையில் இருந்து வெளியே வர மறுத்தார். பூங்கொத்தோடு ஓடி வந்த அல்லக்கை அதிகாரிகள் மற்றும் அடிமை அமைச்சர்களைக் கூட பார்க்கவில்லை. அனைவரின் பூங்கொத்துக்களையும், சசிகலாதான் வாங்கி வைத்தார். ஒரு வாரத்துக்கும் மேல் எவ்விதமான செய்தியும் வெளிவராமல் ஒரு மயான அமைதி நீடித்தது.

அதற்குப் பிறகு, ஒரு வாரம் கழித்து, காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், ஜெயலலிதாவின் கனத்த மவுனம் குறித்தும், அவர் வெளிவராதது குறித்தும் கேள்வி எழுப்பினார். இதையடுத்து, நாளை எம்எல்ஏக்கள் கூட்டம் என்று 22 மே அன்று எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். ஜெயலலிதா படோடாபமாக பதவியேற்றார். ஜெயலலிதாவின் வசதி கருதி, தேசிய கீதம் “சுருக்கமாக” ஜெயஹே‘ ஜெயஹே‘ என்று பாடப்பட்டது. 28 அமைச்சர்களும், பதினான்கு பதினான்கு பேராக பதவியேற்றுக் கொண்டார்கள்.

Jayalalitha  (27)

பதவியேற்ற பிறகு தலைமைச் செயலகம் செல்வாரென்று பார்த்தால், நேராக போயஸ் தோட்டம் சென்று விட்டார். பிறகு, இரண்டு நாள் கழித்து, தலைமைச் செயலகம் சென்று, புதன் ஓரை நேரமான மதியம் 2 மணி முதல் 3 மணிக்குள் காணொளி காட்சி மூலம் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி விட்டு சென்று விடுகிறார். எதிர்க்கட்சி எம்எல்ஏ ஒருவரைக் கேட்டால், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கீடு என்பதும் முடிந்து விட்டது. அப்படி இருக்கையில் இப்போது புதிதாக தொடங்கப்படும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு எப்படி செய்ய முடியும் என்று கேள்வி எழுப்புகிறார்.

13026PJun---10---A-BIG
சாவி கொடுத்த பொம்மை போல தலைமைச் செயலகம் செல்வது, ரிமோட் கண்ட்ரோலை எடுத்து, சினிமா திரையரங்கில் திரை விரிப்பது போல வேடிக்கை பார்ப்பது, பிறகு வீட்டுக்கு செல்வது. இதுவா ஒரு முதலமைச்சரின் வேலை ? இந்த காணொளி காட்சித் திறப்புக்குக்கூட எந்த ஊடகங்களும் அனுமதிக்கப்படுவதில்லை. ஜெயா டிவி மற்றும் அரசு செய்திப் பிரிவின் புகைப்படக் கலைஞர்களைத் தவிர மற்ற யாருக்கும் அனுமதி இல்லை. அரசுப் புகைப்படக் கலைஞர் எடுக்கும் புகைப்படங்களில், ஜெயலலிதாவின் கழுத்தில் முதுமை காரணமாக ஏற்பட்ட சுருக்கத்தையெல்லாம், ஃபோட்டோ ஷாப் மூலமாக நீக்கி விட்டு, ஊடகங்களுக்கு அனுப்பபப் படும் புகைப்படத்தை மட்டும் செய்தித்தாள்கள் வெளியிட வேண்டும்.

c26

ஃபோட்டோஷாப் செய்யப்படாத ஜெயலலிதா புகைப்படம்

சமீபத்தில் ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையின் செய்தியாளரோடு பேசிக் கொண்டிருக்கையில், அவர் சொன்ன தகவல் அதிர்ச்சியை அளித்தது. தலைமைச் செயலகம் வந்த ஜெயலலிதா, ஒரு மணி நேரம் இருந்து விட்டு கிளம்பினார் என்று செய்தி வெளியிட்டது அந்த நாளிதழ். மறுநாள் காலையில், அந்த செய்தித்தாளின் ஆசிரியரை அழைத்த, ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், ஒரு மணி நேரத்தில் சென்று விட்டார் என்று எப்படி செய்தி வெளியிடுவீர்கள் ? அரசு விளம்பரஙகள் வேண்டுமா, வேண்டாமா என்று கூறியதும், அந்த செய்தியாளர் அழைக்கப்பட்டு, முதல்வர் அலுவலகம் வந்து, அலுவல்களை கவனித்தார் என்று மட்டும் செய்தி வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டார்.

ஜெயலலிதா தலைமைச் செயலகம் வந்தால் அது ஒரு செய்தி. ஜெயலலிதா அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டினால் அது ஒரு செய்தி. ஜெயலலிதா வீட்டை விட்டு வெளியே வந்தாலே அது ஒரு செய்தி. கட்சி அலுவலகம் வந்தால் அது ஒரு செய்தி. மக்கள் ஏழ்மையில் தவிக்கிறார்கள். அவர்களிடம் உண்ண ரொட்டி இல்லை என்று கூறியபோது, “ரொட்டி இல்லையென்றால் என்ன ? கேக் உண்ணலாமே !!!” என்று கூறிய ஃப்ரென்ச்சு ராணி மேரி அன்டோனியட்டுக்கும், ஜெயலலிதாவுக்கும் என்ன வேறுபாடு ?
இது என்ன 18ம் நூற்றாண்டு அரசா ?

ஆனால், இதையெல்லலாம் கேள்வி கேட்க வேண்டிய ஊடகங்கள் கனத்த மவுனம் சாதிக்கின்றன. ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வை பட வேண்டும் என்பதற்காகவே தவம் கிடக்கின்றன. ஜுனியர் விகடனை தவிர்த்து, எந்த ஊடகமும் இந்த அரசைக் குறை சொல்வதற்கு முதுகெலும்பற்று இருக்கின்றன.
குமாராசமியின் தீர்ப்பில் கூட்டல் தவறு மட்டுமல்லாமல் மேலும் பல்வேறு தவறுகள் இருக்கின்றன. மூன்று நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு மிகவும் தெளிவாக, “சாட்சிகளையும் ஆவணங்களையும், தெள்ளத் தெளிவாக முழுமையாக ஆராய்ந்து தீர்ப்பளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால், குமாரசாமி அதை செய்யவேயில்லை. ஃப்ரன்ட்லைன் நாளிதழுக்கு பேட்டியளித்த, பி.வி.ஆச்சார்யா, “என்னுடைய 58 வருட வழக்கறிஞர் வாழ்க்கையில், இது போன்ற பிழையான கணக்குள்ள ஒரு தீர்பப்பை நான் பார்த்ததே கிடையாது. அதுவும் இப்படி ஒரு முக்கியமான வழக்கில் இவ்வளவு அசட்டையான ஒரு தீர்ப்பை நான் பார்த்ததே கிடையாது” என்று கூறுகிறார். அவ்வளவு பிழைகள்.

லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் அடிப்படையையே ஆட்டம் காண வைக்கும் அளவுக்கு ஏராளமா பிழைகள் இத்தீர்ப்பில் உள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை, பொதுப்பணித்துறை பொறியாளர்களின் ஆய்வறிக்கையின்படி, கொடுத்த தொகை 27 கோடி. அவற்றில் சிலவற்றை குறைத்து, நீதிபதி குன்ஹா வரையறுத்த தொகை 22 கோடி. ஆனால், குமாரசாமி குத்து மதிப்பாக 5 கோடி என்று எடுத்துக் கொண்டுள்ளார். இந்தியாவெங்கும் சொத்துக் குவிப்பு வழக்கை சந்தித்துக் கொண்டிருக்கும், அரசு ஊழியர்களும், பொது ஊழியர்களும், இத்தீர்ப்பை மேற்கோள் காட்டி விடுதலை கோரினால் என்ன ஆகும் ?

சரி. ஒரு சாதாரண மேஜிஸ்திரேட் கூட செய்யாத இப்படிப்பட்ட தவறை எப்படி ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி செய்தார் என்ற கேள்வி எழும். ஏன் இத்தனை பிழைகள் ஏற்பட்டது என்றால் இந்த தீர்ப்பை குமாரசாமி எழுதவேயில்லை என்பதுதான் காரணம்.

மிக மிக முக்கியமான பொறுப்பில் உள்ள ஒரு அதிகாரி தெரிவித்த தகவல் என்னவென்றால், இத்தீர்ப்பு மூன்று பேரால் எழுதப்பட்டு, இறுதி நேரத்தில், அதுவும் குறிப்பாக அரை மணி நேரத்துக்கு முன்னதாக குமாரசாமியிடம் கொடுக்கப்பட்டது என்பதே. அரை மணி நேரத்தில் தீர்ப்பை அவர் எப்படி படித்துப் பார்ப்பார் ?

 

இதற்காக குமாரசாமிக்கு கொடுக்கப்பட்ட தொகை 300 கோடி. இந்த ஏற்பாடுகள் அனைத்தையும் செய்தவர், சவுக்கு வாசகர்களுக்கு ஏற்கனவே பரிச்சயமான டாக்டர் கே.எஸ்.சிவக்குமார். இவர், சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகள் பிரபாவதியின் கணவர். இவர்தான் இந்த டீலிங்கை பேசி முடித்துக் கொடுத்தது.

சசிகலாவோடு நிற்கும் டாக்டர் கே.எஸ்.சிவக்குமார், பிரபாவதி தம்பதியினர்

சசிகலாவோடு நிற்கும் டாக்டர் கே.எஸ்.சிவக்குமார், பிரபாவதி தம்பதியினர்

இந்த பணத்தை பெங்களுருக்கு சென்று குமாரசாமியிடம் சேர்த்தது, சென்னையைச் சேர்ந்த வைர வியாபாரி கீர்த்திலால் மற்றும் டாக்டர் சிவக்குமார். இந்த ஆபரேஷனுக்கு ஒத்துழைப்பு கொடுத்து, தேவையான வசதிகளை செய்து கொடுத்தது, மக்கள் டிஜிபி ராமானுஜம்.

K Ramanujam IPS DG rtd with CM

இந்த 300 கோடியைத் தவிர்த்து, பெங்களுருவில் உள்ள பண்ணாரகட்டா சாலையில், ஒன்பது மனைகள், குமாரசாமி கூறிய ஒரு ட்ரஸ்டின் பெயரில் பதிவு செய்து தரப்பட்டுள்ளது. மத்திய உளவுத்துறை, பண்ணாரகட்டா சாலையில் உள்ள நிலங்களுக்கான பதிவாளர் அலுவலகத்தில் கடந்த மூன்று மாதத்தில் 9 மனைகளை யார் வாங்கியுள்ளார்கள் என்ற விபரத்தை ஆராய்ந்தால், குமாரசாமியின் குட்டு வெளிப்படும்.

ஜெயகாந்தனின் “ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்” புதினத்தின் கதாநாயகியான நடிகை கல்யாணி, நாவலின் இறுதியில், நடக்க முடியாமல் முடமாகிப் போவாள்.

இந்தக் கட்டுரையின் கதாநாயகி ஜெயலலிதா, ஒரு மாநிலத்தையே முடமாக்கியுள்ளார்.

J1

SHARE ON
Reply all
Reply to author
Forward
0 new messages