-குப்புசாமி செல்லமுத்துமாலதியை
அண்ணன் திருமணம் செய்து கொண்டபோது கல்லூரி இறுதியாண்டில் இருந்தேன்.
கிட்டத்தட்ட என் வயது தான் அண்ணிக்கு. அவளைக் கொண்டதற்கு அவன் கொண்டதை விட
அதிகமாகச் சந்தோசம் கொண்டது நானாகத்தான் இருக்கும்.
வீதியில்
நடக்கும்போது அண்ணியைத் திரும்பிப் பார்க்காத கண்களே இருக்காது. அத்தனை
அழகி அவள். நளினம், அப்பழுக்கற்ற சிரிப்பு, மூடியும் மூடாததுமான வாளிப்பு,
குறும்புப் பார்வை....அடுக்கிக் கொண்டே போகலாம். எங்கள் குடியிருப்புப்
பகுதியில் நிகரற்ற பேரழகியாக விளங்கினாள். எனக்கு மட்டும்
வீட்டுக்குள்ளேயே ரசிக்கின்ற வாய்ப்பு!
ஒரு 'ஹலோ'விற்காக பல
ஆடவர்கள் துல்லியமாகத் திட்டமிட்டு அவள் நடக்கும் பாதைக்கு எதிர்த்
திசையில் வருவர். "நம்ம கிட்ட இல்லாதது அவ கிட்ட என்ன இருக்கு?"
பெண்டிரையும் வியக்க வைத்தவள். எனக்கு மட்டும் வீட்டுக்குள்ளேயே
ரசிக்கின்ற வாய்ப்பு!
எங்கள் வீட்டுக்கு மாலதி வந்த ஒரே மாதத்தில்
நட்பானேன். அப்பா, அம்மா, அண்ணன் எல்லோரும் இருக்கும் போது நெருக்கமாகக்
காட்டிக் கொள்ள மாட்டாள். அவர்கள் இல்லையென்றால் ஒரே குஷி தான்.
அண்ணனுக்கு அடிக்கடி வெளியூர்ப் பயணம் வேலை நிமித்தமாக. கொஞ்ச நாளில்
அப்பா, அம்மாவும் ஊருக்குப் போனார்கள். பிறகென்ன?
அண்ணியுடன்
ஜாலியாக இருக்க வேண்டிக் கல்லூரியைக் கட் அடித்தேன். அவள் சமைக்கும் போது
உதவி என்ற பெயரில் குறும்பு செய்தேன். டி.வி. பார்க்கும் போது பக்கத்தில்
உட்கார வைத்துக் கொள்வாள். கையை விடவே மாட்டாள். உலகையே நான் மறந்த
வேளைகள் அவை.
"லவ்வர்ஸ் மாதிரி பீச்சுக்குப் போலாமா?" ஒரு நாள்
கேட்டாள். மறுக்க நானென்ன பைத்தியமா? அவளோடு சேர்ந்து ஊர் சுற்ற எனக்கும்
ஆசை என்பது அண்ணிக்கு நன்றாகவே தெரியும். என்னை வண்டி ஓட்ட விடாமல், அவளே
ஸ்கூட்டியை எடுத்துக் கொள்வாள். இடுப்பைக் கையால் வளைத்துக் கட்டிக்
கொண்டால், "யூ நாட்டி... கையை எடு" அவ்வளவு தான். அதற்கு மேல் எதிர்ப்பு
இருக்காது. கிள்ளுவதும் கிச்சுக்கிச்சு மூட்டுவதும் அவளுக்குப் பிடித்தே
இருந்தன. குறுகுறுப்பில் திளைப்பேன்.
டூர் முடிந்து அண்ணன் வந்தால்
'எப்படா போவான்' என இருக்கும். அப்படி அவன் வரும் போதெல்லாம் அண்ணி என்னை
மறந்து விடுவாள். அல்லது மறந்தது போல நடிப்பாள். சல்லாபக்காரி. அவன்
போனதும் சகஜ நிலைக்கு உடனே வந்து விடுவாள்.
இப்போதெல்லாம்
குளிக்கும் போது என் அனுமதி இல்லாமலே உள்ளே நுழைந்து முதுகு தேய்க்க
வருகிறாள். அவள் முன்னால் உடை மாற்றும் போது சிரித்துக் கொண்டே
அங்கீகரிக்கிறாள். என் தேக இளமையை மாலதி ஓரக்கண்ணால் இரசிப்பது தெரிந்தே
தான் அப்படிச் செய்கிறேன்.
அண்ணி குளித்து வந்ததும் பிரா, ஜாக்கெட்
கொக்கி மாட்டி விட என்னை அழைப்பது இயல்பான ஒர் சங்கதியாகி விட்டது.
குளித்த ஈரம் காயாத முதுகுப் பரப்பு....அடடா.. ஸ்லீவ்லெஸ் நைட்டி
எப்போவதாவது தான் அணிவாள். மொழு மொழு தோள்களைத் தடவிப் பார்க்க ஆசை
அப்போதெல்லாம் தலையெடுக்கும்.
கிளாஸ்மேட் சுந்தர் அவள்
கேர்ள்-பிரண்ட் கூட மகாபலிபுரம் போய் எல்லாத்தையும் முடிச்சுட்டு வந்த
கதையைச் சொன்னபோது, சிரித்துக் கொண்டே கேட்ட அவள் இமைகள் ஆடவில்லை. "நீ
அந்த மாதிரிப் போய் என்ஜாய் பண்ற ஐடியா இல்லியா?". ராட்சசி.. மனதில் என்ன
வைத்துக் கொண்டிருக்கிறாளோ தெரியவில்லை.
"தனியாப் படுக்கப் பயமா
இருக்கு. என் ரூம்ல வந்து கூடப் படுத்துக்கிறியா?" மறுக்க முடியுமா? அன்று
தொட்டு ஒவ்வொரு இரவும் ஒரே கட்டிலைப் பகிர்ந்து வருகிறோம். மாலதியில் உடல்
கதகதப்பில் அது தரும் ஸ்பரிசங்களில் கட்டுண்டு கிடந்தேன். அண்ணன் வீட்டில்
தங்கும் நாட்கள் மட்டும் விதி விலக்கு.
நடந்த கூத்தையெல்லாம்
அவனிடம் சொல்வாளோ? "இருக்காது" நினைத்துக் கொண்டேன். இருந்தால் மட்டும்
என்ன? அவனுக்கும் தெரியட்டும். கட்டின மனைவியை விட அவனுக்கு வேலை தான்
பெரியதா!
இப்படியாக எனக்கும் மாலதி அண்ணிக்குமான உறவு நாளுக்கு
நாள் வளர்ந்து கொண்டே வந்தது. அவளின்றி நானில்லை என்ற நிலைக்கு வந்தேன்.
இந்தச் சமயத்தில் கல்லூரிப் படிப்பு முடித்து ஒரு தனியார் கம்பெனியில்
வேலையும் கிடைத்திருந்தது.
எனக்கு வயதாவதாகச் சொல்லி, வீட்டில்
துணை தேட ஆரம்பித்து விட்டனர். என் எதிர்ப்புகள் எடுபடவில்லை. என்
ஒப்புதல் இன்றி என் வாழ்வு தீர்மானிக்கப்படுகிறது. அண்ணி எதுவுமே
பேசவில்லை.
மணமேடை. பக்கத்து வீட்டுத் தொலைக்காட்சியில் ஓடும் மெகா
சீரியல் ஓசை போல புரோகிதர் சொல்லும் மந்திரம் தேய்ந்து போய் என் காதில்
விழுகிறது. இயலாமை, வெறுப்பு, குழப்பம், ஆற்றாமை, பாதுகாப்பின்மை ஒட்டு
மொத்தமாக ஆட்கொண்டன. பொறுத்தது போதும்.....இவ்வளவு தான். இதற்கு மேல்
தாங்காது. பிரேக்-ஈவன் பாய்ண்ட் என ஆங்கிலத்தில் சொல்வார்களே, அந்தப்
புள்ளியை எட்டி விட்டேன். கூட்டத்தை மறந்தேன், சமூகத்தை மறந்தேன்.
மனதெல்லாம் நினைவால் அண்ணியே நிறைந்திருந்தாள்.
என்னையுமறியாமல் எழுந்தோடி மேடைக்குப் பக்கத்தில் நிற்கும் மாலதியைக் கட்டிக் கொள்கிறேன். ஒரே அழுகாச்சி.. நான் அழ, அண்ணி அழ....
"என்னடா...
ஒன்னும் இல்ல. நாங்க எல்லாம் இதே ஊர்ல தான இருக்கோம்! நெனச்சா எப்ப
வேணாலும் ஒரு மணி நேரத்துல வந்து பாத்துக்கலாம்." இன்னும் ஏதேதோ சொல்லி
என்னைச் சமாதானப் படுத்தி மணவறையில் மறுபடியும் அமரச் செய்கிறாள் அண்ணி.
அப்பா, அம்மா, அண்ணன், (சற்று நேரத்தில்) மாமனார், மாமியார் அனைவர் கண்களிலும் ஈரம் துளிர்த்திருந்தது.
"மாங்கல்யம் தந்து நானே" ஐயர் சொல்லக் கழுத்தை நீட்டினேன்.
--
செல்வன்
www.holyox.tk“To get rich is glorious"