எனக்கு வேலை ஏதும்
கிடைக்காமலிருந்த காலத்தில் யாராவது என்னைப் பார்த்து 'இப்ப என்ன
பண்றீங்க?' என்று கேட்டால் சங்கடத்தில் கூசிப் போய் சமாளிப்பாக எதையாவது
சொல்வேன். அந்த வேதனை தனிரகம். காசியிடம் அதே கேள்வியை பூடகமாக விட்டேன் -
''அப்புறம்...? இப்ப...''
''ஒரு நண்பனோடு சேர்ந்து, மருந்து மொத்த
வியாபாரம் சின்னதாப்பண்றோம். அப்பாகிட்டே இனி வீட்டுப் பத்திரம்தான்
பாக்கி. தரேன்னார். அதை வைச்சு பேங்க்லே லோன் முயற்சி. கிடைச்சா இது ஒரு
மாதிரியா தொடரும்...''
கேட் பூட்டியிருந்தது. பார்க்கில்
சுவரெட்டிக் குதித்து உள்ளே போனோம். மறைவான புல்வெளி தேடி உட்காரும்போது
ஞாபகம் தட்டியது. சிகரெட் வாங்கவில்லை. 'இருக்கு' என தன் ஜோல்னாப்
பையிலிருந்து சிகரெட், தீப்பெட்டி எடுத்துப் புல்மீது வைத்தான்.
''வியபார
உலகம் ரொம்ப கஷ்டப்படுத்துது. நிறைய கேவலமான அனுபவங்கள். மறைமுக-வரி
மாதிரி மருந்து வியாபாரத்தில் மறைமுக பங்குதாரங்களா இருக்காங்க டாக்டர்ஸ்.
எப்படீனா, ஒரு டானிக் பாட்டில் பிரிஸ்கிரிப்ஷன் எழுத வைக்க, ஒரு
டாக்டருக்கு மூணுரூபா லஞ்சம் தரணும். நூறு பாட்டில் டானிக் விக்க மாசம்
முன்னூறு ரூபா லஞ்சம்...இதில்லாம பெரிய கம்பெனி மருந்துக்குன்னா, கம்பெனியே
நேரடியாக அன்பளிப்பு டி.வி., கிரைண்டர், ஃபிரிட்ஜ்னு... குமட்டுதுடா
குணா...''
காசியின் முகத்துமேல் செல்லமாகப் புகை வளையங்களை
ஊதிவிட்டேன்.
''இதிலே எவ்வளவு நாள் தாக்குப் பிடிப்பேன்னு தெரியலை.
பழையபடிதாண்டா இருக்கு குணா. அடுத்த வினாடி மேலே எடுத்த காலூன முடியலே.''
காசி ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான். அவனது ஜோல்னாப் பைமீது
'சொத்' தென வெள்ளையும் பழுப்பும் கலந்த எச்சம் தெறித்தது.
''ஆனா
முன்னமாதிரி என்னப் பிச்சு வீசி வாந்தியிலே புரட்டி
ஆபாசப்படுத்திக்றதில்லேடா. கஷ்டப்பட்டு விழுங்கிக்கறேன். அப்பாவுக்காகதான்.
அவர் போயிட்டா என்ன ஆவேன்னு புரியலை. எதை ஆதாரமாக்கி இந்தப் பேய் மனசை
சமாதானமா நடத்தப் போறேன்னே தெரியலடா...''
காசியின் அப்பா, காசிக்கு
ஒரு வயதாகியிருக்கும் போது மனைவியை இழந்தார். காசிக்கு நான்கு வயது மூத்த
ஒரு அக்கா உண்டு. வேறு உடன்பிறப்பு இல்லை. காசியின் அப்பா இரண்டாவதாகத்
திருமணம் செய்து கொள்ளவில்லை. குழந்தைகள் இரண்டோடு, காசியின் பெரியப்பா -
தன் அண்ணன் - குடும்பத்தோடு ஒட்டிக் கொண்டு விட்டார். மில் வேலை. சாந்தமான
குணம்.
''அப்பா எப்படியிருக்கார் காசி?''
''அப்பாவும்
நானும் ஒரு வீட்லே இருக்கோம். அக்காவுக்கு வீட்லே பாதி பாகம் உயில் எழுதி
வைச்சாச்சு. உயிலை கையில் குடுக்கலே. செவரு வெச்சு ரெண்டு பாகமாக்கியாச்சு
வீடு வாசலை... மச்சான் அவ்வளவா பிரச்னை இல்லை... அப்பா அக்கா வீட்லேதான்
சாப்புட்டுக்கறார். எனக்கு பத்து நாளைக்கொடு ஓட்டல். பத்தே நாளுக்குள்ள
எந்த ஓட்டலும் சலிச்சிருது... முன்னூறு, முன்னூத்தம்பது மாசம் கிடைக்கும்.
ஆத்மாவை, மனசை, வயத்தை, உடம்பை எல்லாத்தையும் அதிலேதாங் கழுவணும்...''
பக்கத்தில் சிமெண்ட் பெஞ்சில் படுத்திருந்த நாய் எழுந்து உடலை உதறி
சடசடத்தது.
'' நீ பெண்ணா இருந்திருக்கக் கூடாதான்னு தோணுது.
சரியாச் சொன்னா நீ பெண்ணா மாறிடக் கூடாதான்னு... உன்னோட இருந்தா
பாதுகாப்பா, தைரியமா இருக்குடா குணா. அறிவோட குத்தலைப் பொருட்படுத்தாம
சொன்னாகடவுளோட மடியிலே இருக்கிற மாதிரி... அதுவும் பெண்களவுள். என்னால் ஒரு
ஆணை கடவுளா கற்பனை செய்யவே முடியலே.. விளையாட்டு மைதானமா முள்ளுவேலி
இல்லாத மனசு உனக்க.''
''இல்லடாகாசி, என்னோட மனசு உனக்கு அந்த
மாதிரி இருக்குது. ஆனா அங்கேயும் சில பேர் கண்ணுக்கு வேலி இருக்கும்.
இருக்குது, சரி.. இப்பெல்லாம் ஏதாவது எழுதறயா?''
''இல்லே, டயரி
மட்டும்தான். கவிதை, கதைன்னு எழுதினா சுய புலம்பலா இருக்குது.''
எதிரில்
நாய் ஒற்றைக் காலைத் தூக்கி பெஞ்ச் கால்மேல் மூத்திரம் அடித்தது. காசியின்
வாயில் கால் சிகரெட் சாம்பலாக நின்றிருந்தது. சற்றே மெளனம்.
''
என்னால், இந்த சிகரெட்டை விடவே முடியலே காசி.''
''நானுந்தான்...
கூடவே இந்த மாஸ்ட்ருபேஷனையும்... எவ்வளவு முயற்சி பண்ணியும் இந்த
ரெண்டையும் நிறுத்தவே முடியலேடா குணா. சிகரெட்டால் எனக்கு
ஒண்ணுமேயில்லே...நிகோடின் நெஞ்சுக்குள்ளே பரவி எதுவும் பண்றதா தெரியலே...
பால் வராத மொலக்காம்பை உறிஞ்சற மாதிரிதான் அது எனக்க. மாஸ்ட்ருபேஷன்லேயும்
ஒரு விஷயம். பல பேர் மாதிரி கைகொண்டு இல்லே. தலையணையை அணைச்சுட்டு... தாயான
முப்பது முப்பத்தஞ்சு வயசுப் பொண்ணுகளத்தான் நினைவிலே அடைச்ச.''
காசிக்கு
இருபத்தொன்பது தான் வயதென்று நினைக்கிறேன். திடீரென வேறெதாவது பொதுவாகப்
பேசலாம் என்ற காசி, என்னைப் பற்றிக் கேட்டான். என் அம்மாவை விசாரித்தான்.
எனக்கும் அவனுக்கும் பழக்கமான ஒரு சாமியாரைப் பற்றிக் கேட்டான். சாமியாரோடு
இருந்த அழகான பெண்ணைப் பற்றிக் கேட்டான்.
''சாமியார்,
ஆர்.எஸ்.எஸ்.லே பூந்துட்டார். கார் எல்லாம் குடுத்திருக்காங்க. அந்த சிஷ்யை
'ரம்பை' இப்ப சத்தியிலே ஒரு துணிக்கடையிலே சேர்ஸ் கேர்ள்.''
காசி
சிகரெட்டை வீசி எறிந்தான். புல்லில் லேசாக புகை கசிந்தது. நான் மீண்டும்
ஒரு சிகரெட்டுக்குப் பார்த்தேன், இல்லை. எனக்குப் பரபரத்தது. நானும் கூட
காசியைப் போல சும்மாத்தான் சிகரெட் குடிக்கிறேன் என்று நினைக்கிறேன். சில
சமயங்களில் தோட்டத்துப் பக்கம் கும்மிருட்டில் நின்று குடிப்பேன். குடித்த
திருப்தியே இருக்காது. புகையை ஊதி கண்ணால் பார்ப்பதில்தான் திருப்திபோல
இருக்கிறது. காலிப் பெட்டியை நசுக்கி தூக்கிப் போட்டான் காசி. ஒண்ணு பத்து
என்றேன்.போவோமா என்று அரைமனதாகக் கேட்டான் காசி.
நடந்து சென்றபோது
காசியைக் கேட்டேன்.
''டி.ம். எல்லாம் இப்ப ஒண்ணும் பண்றதில்லையா?''
''எதையும் தொடர்ந்து செய்ய முடியலே...காபிக் கரண்டியாலே
வாழ்க்கையை அளந்து பார்த்ததா எலியட் சொல்லுவான். எதை எடுத்து அளக்கன்னே
எனக்கு முடிவுக்கு வர முடியலே...''
காபியா, டீயா என்று
கேட்கும்போது வெடுக்கென்று ஒரு விருப்பத்தைச் சொல்ல முடியாதவன் காசி. ஆனால்
சாவை எடுத்து அளந்து பார்த்திருக்கிறான்.
சுவரெட்டிக் குதித்தோம்.
''தூங்கின திருப்தியே இருக்கிறதில்லே. ஓயாம கனவுகள். பகல்லே யோசனை
யோசனைகள்... எனக்குள்ளே நான் ஓயாம நடமாடிட்டு இருக்கற மாதிரி... சில சமயம்
எனக்குள்ளே இருக்கற 'நான்' தான் நிஜம் - இந்த வெளியிலே 'நான்' சூட்சுமம்னு
பயமா தோணுதடா...''
''நியூஸ் பேப்பரெல்லாம் ஒண்ணும்
படிக்கறதில்லையா காசி?''
''எப்பவாவது படிப்பேன். செய்தி,
படமாகத்தான் எல்லாம் எனக்குள்ள மிச்சமாகுது. பிடிப்பே இல்லை. வெத்து
ஒலக்கையும், ஒரலுமா மனசும் புத்தியும் அடிச்சிட்டுக் கெடக்கு...''
பொது
நூலகம் தாண்டி தார்ச் சாலையை நெருங்கினோம். ''குணா, நீ இங்க வந்தா வராமப்
போகாதே. வீட்டுக்கு வா. என்னோட கல்யாண மேட்டர்லே இன்னும் நீ கில்டியா ஃபீல்
பண்றதா தன்ராஜ் சொன்னான்'' என்று கைகளைப் பிடித்துக் கொண்டான் காசி.
2
எனக்குத் தெரிந்த காசி எட்டு வருஷங்களாக அப்படியேதான்
இருக்கிறான். கர்ப்பம்விட்டு வெளியேறிய பின் அவனுடைய நினைவுப் பாதையில்
முதலடி பற்றி ஒரு முறை காசி சொன்னான். அவன் அம்மா இறந்து ஆறாவது மாதமோ,
வெய்யிலில் கற்றாழை அடர்ந்து சூழ்ந்த ஒரு வறட்டு இட்டேறி வழியே பாட்டியின்
இடுப்பில் கதறிக் கொண்டு வருகிறான் காசி. அவனது பெரியப்பா வீட்டு வாசலில்
கொண்டு வந்து இறக்கிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் போகிறாள் ஒரு
வெள்ளைச்சீலைக் கிழவி. அது காசியின் அம்மாவைப் பெற்ற அம்மா. மாமன்மாரின்
பகல் தூக்கத்தைக் கலைத்து குழந்தை அழுதால் யாரால் சகிக்க முடியும்.
காலேஜ்
பருவத்தில்தான் காசி எனக்கு நட்பானான். 'ஹிப்பாக்ரசி'யை அம்பலப்படுத்தி
மனிதர்களை, எங்களை, பரிகசித்துக்கொண்டு கில்லாடிகளாக உணர்ந்து
குதூகலித்துத் திரிந்த எங்கள் நட்பு புத்தகங்கள் மூலம் பலப்பட்டது.
வித்தியாசமானவர்களாக மாற்றிமாற்றி மெச்சிக் கொண்டு நடந்தோம். 'ஆதவனை'
ரசித்துப் படித்தோம். 'புவியரசு'வை நேரில் சந்தித்தோம். காசிதான் கூட்டிப்
போனான். மெல்லமெல்ல ஜானகிராமன், லா.ச.ரா., பிச்சமூர்த்தி, அசோகமித்திரன்,
சுந்தரராமசாமி என்று ஈடுபாடு கொண்டோம். 'மெளனி' புரியாதபோதும் 'பயங்கரம்'
என்ற பாவனை பூண்டு பாராட்டினோம். இடையில் நான் படிப்பதில் ஏனோ தேங்கிப்
போனேன். பெண் வேட்கை. பட்ட பின்பு விவேகானந்தர், பித்துக்குளி முருகதாஸ்,
ரஜனீஷ் என்று கலவையாக ஜல்லி கலக்க ஆரம்பித்துவிட்டேன். இப்போது ஜே.கே.வை
அடிக்கடி படிக்கிறேன். அரசாங்க வேலை கிடைத்து கடலூர் போன பின்தான் காசியின்
நெருக்கத்தை இழந்துவிட்டேன். 'ஆவேசமாகப் பாய்ந்து அரைக் கிணறு தாண்டும்'
சுபாவம் சிறுவயதிலிருந்தே காசிக்கு இருந்ததாகத் தெரியவில்லை. அவனுடைய பள்ளி
வாழ்க்கையைப் பற்றி அதிகம் அவன் சொன்னதில்லை. நான்காம் வகுப்பு
படிக்கும்போது காதலில் தோல்வி என்றும், ஹைஸ்கூலில் பிரேயரின்போது காலையில்,
கனிகள் அல்லது ஐசக் நியூட்டன் பற்றி கட்டுரை படித்து ஸ்கூலையே அறுப்பான்
என்றும் ஏதோ சொல்லியிருக்கிறான். எஸ்.எஸ்.எல்.சியில் மிக அதிக மார்க்குகள்
வாங்கினான் என்பது எனக்குத் தெரிந்தது.
76-இல் காலேஜ் விட்டு
வெளியே வந்தான். இரண்டு பேப்பர்கள் ஃபெயில். அப்புறம் அதை எழுதவே இல்லை.
கொஞ்ச நாட்கள் தபால் மூலம் தமிழ் வழி ஹிந்தி படித்தான். விட்டான். கொஞ்ச
நாட்கள் தாய்மொழி அபிமானத்தில் தெலுங்கு. தெலுங்கு வாத்தியார் வீட்டுப்
பெண் தினமும் காபியில் கொஞ்சம் காதல் கலக்கிக் கொடுத்தாள். இந்த
காலத்தில்தான் வீட்டுப் பக்கமாயிருந்த ஒரு இன்ஜீனியரிங் கம்பெனியில் டைம்
கீப்பராக வேலை பார்த்தான். அவன் ஓரிடத்தில் தொடர்ந்து ஒரு வருஷம் பார்த்த
வேலை. பூப்பந்து விளையாட்டில் சுமாரான வீரன் காசி. காலேஜ் நாட்களில் அவன்
ஈடுபட்டிருந்த இரண்டு விஷயங்கள் கவிதையும், விளையாட்டும்தான். என்.டீ.சி.
மில் ஒன்றில் விளையாட்டுத் தகுதியின் பேரில் வேலை கிடைத்தது. இந்த
கேலைதான்... இதிலிருந்துதான் 'காசி' புறப்பட்டான். என்.டீ.சி.மில் வேலை ஆறே
மாதம்தான். மனக் குமட்டல், மன நலத்திற்கு சிகிச்சை, அப்போது நன் கடலூரில்
அரசு ஊழியன்.
திருநள்ளாறு போய் மொட்டை அடிக்கிறேன் பேர்வழி என்று
அப்பாவிடம் பணம் பறித்துக் கொண்டு வந்தான் காசி. இரண்டு நாட்கள் என்னோடு
உற்சாகமாக இருந்தான். நிஜமாகவே 'திருநள்ளாற்றின்'மீது நம்பிக்கை
கொண்டிருப்பானோ என்று நினைத்தேன். ஒரு நாள் போய் மொட்டை போட்டுவிட்டு,
மத்தியானம் காரைக்கால் வந்து ஒரு லாட்ஜில் பீர் அடித்துவிட்டுத்
தூங்கினோம்.
சாயங்காலம் காற்றாட வெளியே நடந்தபோது ஒரு திடுக்கிடும்
உண்மையைக் கக்கினான் காசி. ''உண்மையிலேயே நான் ஒரு பாவி - கயவன்டா குணா.
அன்பான அப்பாவை ஏமாத்திட்டிருக்கேன். எனக்கு ஒரு பிரச்னையும் இல்லை.
டாக்டர்களையே ஏமாத்தி நடிக்கிறேன். எனக்கு வேலைக்குப் போக
பயமாயிருக்குடா... 'ஃபியர் ஆஃப் ரெஸ்பான்ஸிபிலிட்டி அண்ட்ஃப்ரீடம்' டா.''
'8எந்த புஸ்தகத்துல படிச்சே இந்த இங்கிலீஷ் வரியை- பொறுப்பு பத்தின
பேடித்தனம் சரி.. அதென்னடா சுதந்திரம் பத்தின பயம்? சுதந்திரத்தையே தப்பாப்
புரிஞ்சிக்கே நீ... மேதாவிங்கற பிம்பத்தை வளர்த்தி வெச்சுக்கிட்டு,
பிம்பத்தோட கர்வத்துக்கு பங்கமா இருக்ககுதோ வேலை செய்யற இடம்? நீ
முட்டாள்!''
''இல்லடா குணா... எனக்கு வந்து ஜாப் ஒத்து வரலைடா...
எந்த ஜாப்புமே ஒத்து வராது. என்னாலே கடிகார மிரட்டலை சகிக்க முடியலே. தினம்
தினம் தினம் ஒரே நேரத்திலே அத அதச் செயயறது, செயற்கையா 'டாண்'ணு ஒரே
நேரத்துக்கு எந்திரிக்கறது, செயற்கையா தினமும் ஒரே நேரத்தைப் புடிச்சிட்டு
வெளிக்கு உட்கார்றது, 'கன்' டயத்துக்கு குளியல்... கட்டுப்பாடான தினம்
தினம் தினம் தினம்கள் எனக்கு சலிக்குதுடா... வெறுத்து, குமட்டி.... இதுக்கு
மேலே பொறுப்புன்னா பயம் வேறே... அதிகாரி உருட்டல்... ஓவர் டைம்... அப்பா!
''படுபாவி!''
''எனக்கு உள்ளூர சத்தியமான ஆசை என்ன
தெரியுமா?''
''சொல்லு''
''எங்காவது காட்டுக்குள்ளே...
மலைப்பக்கம் ஓடிப் போயிணணும்''.
''போயி''
''ஆதிவாசிகளோட
ஆதிவாசியாகணும்''
''முட்டாள், ஆதிவாசிக் கூட்டத்திலே மட்டும்
பொறுப்பு, சுதந்திரம் பத்தின பயம் இருக்காதுங்கிறியா? அங்கேயும் தாளம்
இருக்குதுடா... கட்டுப்பாடு இருக்குது...''
காசி பதில் பேசவில்லை.
நான் எதிர்பார்க்கவேயில்லை. திடீரென சட்டையைக் கழற்றினான். இடுப்பில்
லுங்கியை இழுத்து நழுவவிட்டான். ஜட்டி போட்டிருக்கவில்லை. படுபாவியின் வலது
தோள்பட்டை விறைத்துப் பலகை மாதிரி இருந்தது. தள்ளவே முடியவில்லை, கனம்.
லுங்கியை பலவந்தமாகச் சுற்றி மெல்ல அணைத்தபடி தள்ளிக்கொண்டு போனேன்.
பெட்டிக் கடையில் சோடா வாங்கி முகத்தில் தெளித்தேன். கொஞ்சம் வாயில்
புகட்டி லாட்ஜுக்குக் கூட்டிப் போனேன்.
இரவு பதினோரு மணிக்கு
விழித்துக்கொண்டான். இரவு உணவு சாப்பிடவில்லை. நான் கலவரப்பட்டு வருத்தமாக
உட்கார்ந்திருந்தவன் அருகே போனேன். மொட்டைத் தலை சொட்டையில்லாமல்
வியர்த்திருந்தது. தோளைத் தொட்டு பரிவாக, கட்டிலோரம் உட்கார்ந்தேன்.
எழுந்து உட்கார்ந்தான். இடுப்பில் லுங்கி இருந்தது, இருக்காமல். முகம்
உப்பியிருந்தது. 'பசிக்கிதா' என அவன் கைகளை மெல்லப் பிடித்துவிட்டதுதான் -
எதிர்பார்க்கவில்லை. மூக்கும் கோண அப்படியொரு அழுகை, பெருங்குரலெடுத்து
முகம் விம்ம. எனக்கு எரிச்சலாகவும் பயமாகவும் துயரமாகவும் ஆகிவிட்டது.
பக்கத்து ரூமில் எல்லோரும் எழுந்து வந்தால்... அவன் முகத்தை அப்பி அடக்கப்
பார்த்தேன். முடியவில்லை. ஊ ஊ ஊ என அரைஅணி நேரம் அடங்கவில்லை. மழைவிட்ட
விசும்பல் மாதிரி வேறு... நான் லைட்டை அணைத்துவிட்டேன்.
''நல்லாத்
தூங்கினியா?''
''தூங்கினேன்'' என்ற காசியின் பதிலில் வாட்டம்.
காலையில் எட்டு மணிக்கே சாப்பிடப் போனோம்.
'' என்ன காசி,
சொல்டா...''
''ராத்திரி ஒரு கனவு... மனசு கஷ்டமாயிருக்குடா.''
''
என்ன, சொல்லு!''
''வனாந்தரத்துக்குள்ளே மத்தியான நேரம். மழை
பேஞ்சு ஓய்ஞ்சிருக்கு. பிரம்மாண்டமான சிலை ஒண்ணு... மார்லே மொகஞ்சு மொகஞ்சு
பாலை குடிச்சிட்டிருக்கேன். திடீர்னு என்னன்னா... புணர்றா மாதிரி... முகம்
சரியா தெரியலே. விழித்தபோது அந்தக் கனவு முகம் மனசைக்
கஷ்டப்படுத்துச்சு.''
''ஏதாவது சினிமா போலாமா?'' என்று பேச்சை
மாற்றினேன்.
3
காசிக்கு கல்யாணம் என்று ஒன்று நடந்ததற்கு
நானும் முக்கிய காரணம். முதற்காரணம். பெண்களுடன் காசியின் அனுபவம்
ஒன்றைக்கூட அவன் என்னிடம் ஒளித்ததில்லை. பி.யூ.சி. படிக்கும்போது
பக்கத்துத் தெருவில் பெட்டிக் கடைக்காரரின் பெண்ணுடன் காதல். பத்னேழு
வயதுப் பெண். காசியின் அன்றைய பாஷையில் தேவதை. உணவாக பெட்டிக் கடை பொரி -
வேர்க்கடலையையே அதிக நாட்கள் தின்று வளர்ந்த அந்த தேவதைக்கு திடீரென மஞ்சல்
காமாலை. ஒரு நாள் சாம்பல். காசி இந்த தேசதையின் பெயர் சேர்த்து புனைபெயர்
வைத்துக் கொண்டு 'கண்ணாமூச்சு' என்றொரு குட்டிக் கவிதை தொகுப்பை
பின்னாளில், ஒன்றுவிட்ட அண்ணன் அச்சகத்தில் வேலை பார்த்தபோது வெளியிட்டான்.
'வேலை' என்றால் தொகுப்பு அச்சடித்து முடியும்வரை வேலை!
காலேஜ்
முதல் வருட நாட்களில் கவிதையுடன் இரண்டு குட்டிக்காதல்கள். ஒரு பெண் மு.வ.
ரசிகை. 'கெமிஸ்ட்ரி' படிப்பு. எதிர்வீடு. துணைப் பாடம் 'கணக்கு' சாக்கில்
காசி அடிக்கடி மு.வ. ரசிகையிடம் போனான். ஒரு முற்பகல் குளிக்கும்போது
சுவரெட்டி விட்டு - விரகதாபத்தில் - பெயர் சொல்லிக் கத்திவிட்டான்.
முகத்திலேயே விழிக்க வேண்டாமென்று கதவை அடைத்துக் கொண்டுவிட்டது 'அல்லி'.
இன்னொரு பெண்வலிய வந்து இவன் நெஞ்சில் சாய்ந்தாள். வேலையில்லாப் பட்டதாரிப்
பெண். வேலை கிடைத்து பொள்ளாச்சி போய்விட்டாள். சந்திப்பே இல்லை.
கடிதங்களுக்கு பதில் இல்லை. காசி என்.டீ.சி.மில் வேலையைத் தொலைத்துவிட்டு
ஊர் சுற்றிக் கொண்டிருந்த காலத்தில், அப்பா ஜேபியில் பத்து ரூபாய் திருடிக்
கொண்டு ஒரு நாள் பொள்ளாச்சிக்கு பஸ் ஏறினான். இரண்டு ரோல்டு கோல்டு காது
ரிங்குகளை வாங்கிக் கொண்டு போய், சாயங்காலம் போஸ்ட் ஆபீஸ் வாசலில் அவளைச்
சந்தித்தான். அவள் முகம் கொடுக்கவில்லை. ரிங்குகளை நீட்டினான். 'என்னைப்
பார்க்க வராதே! எங்கண்ணாவுக்கு லெட்டர் எழுதுவேன். வேறு வேலையில்லை உனக்கு.
மென்டல்!' காது அலங்கரிப்புகளை சாக்கடையில் விசிறிவிட்டு எச்சில்
விழுங்கியபடி கூசி நடந்தான் காசி.
இன்னொரு காதல் இரண்டு வீட்டிலும்
அம்பலமாகிவிட்டது. காசியின் பிடிவாதத்தால் காசியின் அப்பா பெண் கேட்டுப்
போனார். வேலை ஏதும் பார்க்கட்டும். யோசிக்கலாம் என்று சொல்லி
அனுப்பினார்கள். காசி வேண்டா வெறுப்பாக வேலை தேடினான். கல்யாணத்துக்கு
எதுவுமே செலவே வேண்டாம், அந்தப் பணத்தில் ஏதாவது தொழில் செய்கிறேன் என்று
கெஞ்சிப் பார்த்தான். காசியைப் பற்றி எல்லாம் தெரிந்திருந்தும் அந்தப் பெண்
அடம்பிடித்தாள். அவர் வேலைக்குப் போலேன்னா பரவாயில்லே, நாலு எருமை
வாங்கிக் கறந்தூத்தி நாங்க பொழுச்சுக்குவோம் என்று சொன்னாளாம் - பொருளாதார
முகத்தின் சூதுவாது தெரியாத பெண். ஒரு போலீஸ்காரருக்கு மனைவியாகிப் போனாள்.
அப்புறமும் காசி எங்குமே வேலைக்கு போகவில்லை. 'பிஸினஸ்' என்ற
பெயரில் யார் யாருடனோ சேர்ந்து ஊர் சுற்றினான். மெட்ராஸ், பெங்களூரில்
வேலைக்கு 'இண்டர்வ்யூ' என்று அப்பாவித் தந்தையை ஏமாற்றி பணம் பிடுங்கிப்
போய் செலவழித்துவிட்டுத் திரும்பி வந்தான். ரேடியோ நிலையத்தில் தினம்
போய்க் குலாவினான். 'நாளொரு தகவல்', 'உங்கள் கவனத்திற்கு' என்று கண்டதை
எழுதிக் காசு வாங்கினான். மாதம் 75,100 என்று வருவதை டீ, சிகரெட்,
கள்ளென்று செலவழித்துச் சுற்றினான். விஸினஸ் நண்பர்களுக்காக எங்காவது
அனுப்பினால் பஸ் ஏறிப் போய் காரியம் செய்வான்.செலவுக்குக் கொடுத்து
எங்காவது அனுப்பினால் போதும் குஷி. வீடண்டுவதில்லை. மச்சான் இல்லாத சமயம்
சமையல் கட்டில் நுழைந்துவிடுவான்ன. மச்சானுக்கு ஆப்-நைட் (மில்)
ஷிப்டென்றால் மூன்று மணிக்கு வீடு வந்தால், இரண்டு தடவை உணவு. அப்பா
மில்லைவிட்டு நின்றதால் பெற்ற பணம் பாதிக்கு மேல் கரைந்து விட்டது.
மச்சானுக்கு நான்கு குழந்தைகளில் இரண்டு பெண். கூடவே பராமரிப்பாக மூன்று
மாடுகள். அவர் கஷ்டம் அவருக்கு. மனிதாவிமானத்தைக் கொஞ்சமேனும் பராமரிக்க
அவர் உழைப்பின் ஷிப்டில் நேரம் கிடைக்கவே இல்லை. மச்சானின் நாக்குச் சாட்டை
வீச்சு தாங்க முடியாமல் உறைத்தபோது காசி தடுமாறிப் போனான். காசியை அடக்க
முடியாத மச்சானின் கோபம், காசியின் அப்பாமீது, இயலாமையின் வடிகாலாக மெல்ல
மெல்லத் தொட்டது. அப்பாவுக்கும் 'சுரீர்' விழ, சாட்டையை ஒரு நாள் எகிறிப்
பிடித்துப் புரட்டிவிட்டான் காசி, விளைவு- தூரத்தில் இந்த பெரியம்மா
வீட்டில் தஞ்சம். 'ஏ மச்சான்னேன்!
கொம்பன்னேன்! குட்றா வீட்டு
வாடகையை!' என்று மாதம் நானூறு ரூபாய் வாடகை போட்டுவிட்டார்கள் அப்பனும்
மகனும். எல்லாம் காசிக்காகத்தான். உண்மையில் காசியின் அப்பாவுக்கு மனள்மீது
அளவு கடந்த பாசம். காசியின் மீது அவன் அக்காவுக்கும்! காசியின் மச்சானும்
வேறு யாருமில்லை காசிக் சொந்த அத்தை மகன்.
பெரியம்மா வீட்டில்
காசிக்கு நிலைமை முற்றிக்கொண்டு வந்தது. மனநோயாளி போல் நடித்துக் திரித்த
காசிக்கு மெய்யாகவே லேசாக மனநோய் தாக்கியது என்றுதான் நினைக்கிறேன். 'ஒரு
பைத்தியக்காரனுக்கும் எனக்கும் என்ன சின்ன வித்தியாசமென்றால் நான்
பைத்தியமில்லை அவ்வளவுதான்' என்று யாரோ ஒரு மேலைப் பெயர் சொன்னதாக சொல்லித்
திரிந்த காசியின் சுய எள்ளலையும் கடந்து மெல்லவே மன ஆரோக்கியம் குறைந்தது.
ஆனாலும் அங்கே வீட்டிலிருந்த காலத்தில் நிறையப் படித்தான் என்று
தெரிகிறது. (எனக்கு) புரியாத கவிதைகள் நிறைய எழுதினான். நான் பதிலே
போடவில்லை.
ஒரு வினாடிகூட காலூன்ற முடியாமல் கொந்தளித்தான் காசி.
தன்னுடம்புக்குள்ளேயே பொறியில் சிக்கிய ஒரு எலியாகிவிட்டது அவன் மனது. ஒரு
முட்டாள் மனநல வைத்தியன் நானூறு ரூபாய் காசுக்காக நான்கு தரம் 'ஷாக்'
ட்ரீட்மெண்ட் செய்துவிட்டான். கறிவேப்பிலை கருகும் வாசனை தலைக்குள்ளிருந்து
வினாடிதோறும் அடிப்பதாக மனப் பிரமையில்(?) பரிதவித்துப் போனானாம் காசி.
நிறைய மாத்திரைகள்... மனம் அடங்கவில்லை. ஷணப்பித்தன் - ஷணச்சித்தன்
என்றானான் காசி. பத்தடிக்குள் மூன்று திசை. இந்த மலைக்கிராமத்திற்கு
வருகிறேன் பேர்வழி என்று நான்கு முறை பஸ் ஏறியவன் ஒரு தரம் 40 கி.மீட்டர்
வந்துவிட்டுத் திரும்பி, இரண்டு முறை 100 கிலோ மீட்டருக்கு டிக்கெட்
வந்துவிட்டு ஆறாவது கிலோ மீட்டரிலேயே திரும்பிவிட்டானாம். ஒரு ஜின்னிங்
பாக்டரியில் பஞ்சு பிரிக்கப் போகும், உறவுக்காரப் பெண்ணை கல்யாணத்திற்குக்
கேட்டு அப்பாவை வாதித்தான். பெண் யாருமில்லை. பெரியப்பாவின் பேத்தி.
பெரியப்பா இறந்தவுடன் சொத்துப் பிரிப்பில் ஒரே அண்ணனோடு, ஜன்மப் பகை
சேர்ந்துவிட்டதான் உறவற்றுப் போன காசிக்கு ஒன்றுவிட்ட அக்காவின் பெண்.
பெரியம்மாவுக்கு இந்த ஏற்பாட்டில் ரகசிய சம்மதம். காரணங்களில் சொத்தும்
ஒன்றாக இருக்கக்கூடும். தெரியவில்லை. அப்பாவும் யாரையோ பார்த்து
கேட்டுவிட்டார். 'பெண் கேட்க என்ன தைரியம்' என்று அப்பன் குடிகாரன் தூதுவரை
ஏசி அனுப்பினானாம். ''ஏதோ ஒரு பொண்ணுப்பா - கல்யாணம் ஆனா எனக்கு எல்லாஞ்
செரியாயிடும். இங்க சொந்தக்காரங்க வீட்டுல எத்தனை நாளுக்கு? எண்ணிப்பாத்தா
பயமாயிருக்குதுப்பா...'' என்று பச்சையாகக் கதறியிருக்கிறாள் காசி.
தவித்துக் கொண்டே இருந்தவன் ஒரு மாலையில் தேங்காய் பருப்பியைக் கடித்துக்
கொண்டே இரண்டு பாட்டில்கள் டிக்-20ஐக் காலி செய்தான். விஷயம் தெரிய,
பெரியம்மா அவசர அவசரமாக நாய்ப்பீயைக் கரைத்து வாயில் ஊற்றி விட்டாள்.
மீண்டும் வேறொரு மனநல டாக்டர். மாத்திரைகள்.
திடீரென ஒரு
சாயங்காலம் இம்மலைக் கிராமத் தோட்டத்திற்கு வந்தான். உடம்பு ஊதிக் கறுத்து
ஆள் பயங்கரமாக இருந்தான். இரண்டாவது நாள் நச்சரிக்க ஆரம்பித்துவிட்டான்.
யாராவது பொண்ணு வேண்டும் என்று. ஒரு பொண்ணோட ஒரு நாள் முழுக்க தனியா
இருக்கணும். ஏற்பாடு செய் என்று பிடிவாதம். முப்து மைல்கள் பிரயாணம் செய்து
அந்த எல்லைப் புற சின்ன டவுனுக்கு சென்றால் எனக்குத் தெரிந்த ஒரு பெண் -
அவளும் ஊரில் இல்லை. அந்த சமயத்தில் நானும் வேலையில் இல்லை. அப்பா திடீரென
இறந்துவிட்டதால், கடலூர் அரசு வேலையைவிட்டு இங்கே தோட்டம் வந்து இரண்டு
வருடங்களாகிவிட்டது. அம்மா, தங்கைகளக்குத் துணையாக விவசாயத்தில்
இறங்கியிருந்தேன். கூட எல்.ஐ.சி ஏஜண்ட் வேலை. ஒரு சாமியாருடன் தீவிரப்
பழக்கமாயிருந்தது எனக்கு. எங்கள் கிராமப் பக்கம் சின்ன குடிசை ஒன்றில்
இருந்தார். சீக்கிரமே தெரிந்தது, கூட அழகான ஒரு சிஷ்யை என்று. நாங்கள்
சொந்தக் குடிசையாக ஆசிரமம் கட்ட வசூலித்தோம். 'விவேகானந்தரின் மறு பிறப்பு'
என்று சொல்லிக் கொண்ட சாமியாருக்கு நான்தான் பிரதம சிஷ்யன். கீழிறங்கி
சாமியார் நகரங்களுக்குப் போனார். கீர்த்தி பரவியது. இங்கிலீஷ் சாமியார்
அவர். ஃபார்மர் லைப்பில் எம்.பி.ஏ,. ஒரு பழம் பெரும் திரைப்பட அதிபரின்
நெருங்கிய உறவுக்காரர். மனைவி படிதாண்டிவிட்டாள். புருஷன் வீட்டையே தாண்டி
ஆசிரமம் கட்டிக் கொண்டுவிட்டார். பின்னாளில்தான் எனக்கு எல்லாம் தெரிந்தது.
சாமியிடம் காசியை அழைத்துப் போனேன். எல்லாவற்றையும் சொன்னான்.
பத்து வயதுப் பையனிடம்கூட மனதைக் கழற்றிக் கையில் தந்துவிட்டு, 'பாத்துட்டு
மறக்காம தாடா' என்ற போகிற தன்மையில் காசி இருப்பதை சாமியாரின் மூளை
புரிந்து கொண்டுவிட்டது.
'நாலுபேர் மாதிரி லைப்பிலே செட்டில்
ஆகணுங்கற ஆசையே அத்துப் போச்சு சாமி இவனுக்கு'
'கடவுள் நம்பிக்கை
உண்டா?'
காசியே பதில் சொன்னான். '' இல்லே சாமி... ஆனா 'கடவுள்'னு
ஒருத்தர் இருந்துட்டாக்கூட பரவால்லேன்னு படுது சாமி!''
'நல்லாப்
பேசறீங்களே; இதுக்கு முன்னாடி யாராவது சாமியார்கிட்டே போயிருக்கீங்களா?''
''போயிருக்கேன் சாமி. சகஜ சைதன்யா கிட்டே போனேன். தியானம்
கத்துக்கப் போனேன். மந்திரம் தந்தார். மந்திரத்தை வெளியே சொல்லக்
கூடாதுன்னார். 'ஐங்'கற அதை வெளியே எல்லாம் சொன்னேன். மறுபடியும் பாத்து
அப்படி செஞ்சதை சொன்னேன். பரவால்லே தொடர்ந்து பண்ணுங்கன்னார். கனவுகள்
தொந்தரவு பத்தி சொன்னேன். போன பிறவியிலே அடக்கி வெச்ச ஆசைகூட இந்தப்
பிறவியிலே கனவா வரும்னார். பயந்து போயிட்டேன் சாமி... அப்புறம் போகவே
இல்லை...''
கடைசியில் சாமியார் ஒரே வரியில் காசிக்கு அருள்
வாக்காகத் தீர்வு சொன்னார். எனக்கு அதிர்ச்சி. ''காசி... உனக்கு செக்ஸ்தான்
பிரச்னை... யூ ஹாவ் செக்ஸ் வித் ஹர்'' என்று ரம்பையை அழைத்துக்
காட்டினார்.
காசி இரண்டு நாட்களாக குழம்பி முடிவெடுக்க முடியாமல்
இருந்தா.ன முடியாது என்று ஒரு வழியாக முடிவு சொன்னான். தனக்கு தங்கைபோல
இருப்பதாகவும், தான் வேண்டுவது தாயான பெண் என்றும் சாமியாரிடமே உளறினான்.
''நோ அதர் கோ... லீவ் ஹிம்... இப்படியே மெண்டலா இருக்க வேண்டியதுதான்.
ட்ரைஃபார் சப்ளிமேஷன் நாட் ஃபார் செண்டிமெண்ட்ஸ் இன் செக்சுவாலிட்டி வித்
சாய்ஸ்! நேத்து குருநாதர்கிட்டே உன்னப் பத்திக் கேட்டேன். இன்னும் பத்து
வருஷத்துக்கு உனக்கு சோதனைகள் பாக்கின்னார். மொதல்லே உடம்போட நீ இருந்து
பழுகணும்'' என்று முகத்துக்கு நேராக காசியிடம் சொன்ன சாமி, அவனை
ஆசிரமத்திற்குள் அழைத்து வர வேண்டாமென்று என்னிடம் ரகசியமாகச்
சொல்லிவிட்டார்.
4
கீழே போன காசியிடமிருந்து ஒரு மாதமாக
தகவலே இல்லை. கீழே கோயமுத்தூரில் சாமியார் ஒரு பணக்கார வீட்டில் அடிக்கடி
எழுந்தருளுவார். ஒருமுறை நானும் கூடப் போனேன். அந்த வீட்டில் ஒரு இளம்
பெண், கணவனை ஒதுக்கிவிட்டு தாய்வீடு வந்துவிட்ட பெண், மூன்று பெண்களில்
நடுப்பெண். 'ஆணாக'சுதந்திரம் பெற்று வளர்ந்த பெண். மூன்று பெண்களில்
கல்லுமில்லை, புல்லுமில்லை. ஆனால் 'இம்பொட்டண்ட்' என்று தாலியைக் கழற்றி
வீசிவிட்டு வந்துவிட்டவள். மூத்த - இறைய இரண்டு சகோதரிகளும் 'வசதி'யாக
வாழ்க்கைப் பட்டவர்கள். சாமியாரிடம் மிகுந்த விசனத்தோடு குடும்பம்
முறையிட்டது. காசிக்குத் தெரிந்த குடும்பம் என்று தெரிந்தது. நான் காசியின்
நண்பன் என்பதையும், காசியைப் பற்றியும் ஏதோ பேச்சு வாக்கில் சாமி,
யதேச்சையாக தன்னிடம் வந்த 'கேஸ் ஹிஸ்டரி'களில் ஒன்றாகச் சொல்லி வைத்தார்.
காசியைப் பார்த்தபோது நானும் யதேச்சையாக அந்தப் பெண்ணின் துயர ஸ்திதியைப்
பற்றி சொல்லித் தொலைத்தேன். தயாராக காசிக்குள்ளிருந்த விதி, காசியின்
பாஷையில் 'கேரக்டர்' வீறுகொண்டு எழும்பிவிட்டது.
காசி கல்யாணம்
முடித்து ஒரு மாதம்கூட கூடி வாழவில்லை. இரண்டாவது மாதம் ஒரு நாள் மாலையில்
இந்த மலைக்கிராமத்து தோட்டத்து வாசலில் வந்து நின்றான். அன்றிரவு முழுவதும்
ஊருக்குள் நாங்கள் இரண்டு பேர் மட்டுந்தான் தூங்காமல் இருந்திருப்போம்.
மாப்பிள்ளைக் களை அறவே இல்லை. முகம் எழுமைச் சாணியில் பிடித்து வைத்தது
மாதிரி இருந்தது.
''அரைக்கிலோ முந்திரி கேக்குக் உங்க எந்த
கவிதையைத் தூக்கிட்டு கடைக்கு போகன்னு கேட்கறாருடா மாமனார். புஸ்தகங்களைக்
கட்டி எடைக்ப் போட்டுட்டு, மூளையை பணம் பண்ண யூஸ் பண்ணணுங்கறார். வீட்டு
மாப்பிள்ளையா அங்கயே இருக்கணுமாம். நடுத்தரக் குடும்பங்கள் வாழற எங்க
லைனுக்கு அவளால் வந்து குடும்பம் பண்ண முடியாதாம். பணக்காரங்களக் கண்டா
பொறாமைப்படற லொக்காலிடியாம் எங்களது. அப்பாவையும் 'மாமனார்' வீட்டுலையே
வந்து இருக்கறதானா இருக்கலாங்கறார்... மூணு பேருக்கு ரெண்டு வேலைக்காரங்க
இப்ப, இன்னும் ரெண்டு பேர் இருந்தா அவங்களுக்கும் வேலை குடுக்க
சரியாயிருக்குமாம். தினமும் ஸ்கூட்டர் சவாரி, ஐஸ்கிரீம்பார், நிச்சயம்
சினிமா, வராத புதுத்தமிழ்ப்ட பாட்டு, இவ்வளவுதான் அந்தப் பெண்ணுக்கு அன்றாட
உலகம். அல்சேஷன் நாய்க்கும் தெரு நாய்க்கும் ஆன வித்தியாசம். என்னால்
சகிக்க முடியலே. என்னோட 'தாய்' இமேஜ் எழவெல்லாம் சனியன் வேண்டாம், ஒரு
'பெண்'ணாவாவது இருந்திருக்கலாம். எண்ணிப் பாத்தா ஒரு பத்து பன்னெண்டு தரம்
கூடியிருப்போம் - உன்னால நம்ப முடியாதுடா குணா - முத்தம் கொடுக்க
அனுமதிச்சதேயில்லை. பிடிக்காமயிருக்கும் சில பேருக்கு. பரவாயில்லே. ஆனா
இங்கே 'லிப்ஸ்' அழகு நடிகை மஞ்சுளாவைவிட ஒருபடி இறங்கிடக் கூடாதுங்கற
லட்சியம் எச்சரிக்கை. அழகு உதடுகள். ஆனா பொய் உதடுகள்.
ஒத்தயா
பயம். தனிமை. வினாடிக எல்லாம் சொடக்கு போடுது. என்னால முடியலே. மறுபடியும்
பழைய கோளாறு மனசிலே கிளம்பிருச்சுடா குணா. அப்பாகிட்டே வந்துட்டேன். அப்பா
மனம் விட்டுப் போச்சு. 'இந்தப் புத்தகமெல்லாம் படிக்காம, இதப் பிரிஞ்சு
என்னாலே இருக்க முடியாதுப்பா... என்னாலே அந்த வீட்லே சமாளிக்க
முடியாதுப்பா... அவங்க கெளரவத்துக்கு ஈடுகட்டிப் போக முடியாதுப்பா...
எனக்கு பயமா இருக்குது... அங்கிருந்தா நான் தற்கொலை பண்ணக்குவேன்பா' ன்னு
கதறினேன்டா. 'போகப் போக சரியாப் போகும். நீ எதாச்சம் வேலைக்குப் போ
முதல்லே'ன்னு அக்கா அக்றையா சொன்னா...'மூடிட்டுப் போ'ன்னு அக்கா மேலே
எரிஞ்சு விழுந்தேன். 'உன்னப் பாத்துட்டு வந்தா கொஞ்சம் மனசு
நிம்மதிப்படும்'னு அப்பாகிட்டே சொன்னேன். மொய் வந்த பணத்திலே நூறு ரூபா
தந்து அனுப்புனார்டா''.
ஒரு வாரம் இருந்தான். நானும் சாமியாரிடம்
போவதை நிறுத்தி விட்டிருந்தேன். கொஞ்ச நாள் நிதானமாக சும்மா இருக்கச்
சொல்லி அனுப்பிவிட்டேன். செயலுக்கான முடிவாக எதையும் யோசித்துச் சொல்லி
முடியவில்லை எனக்கு. குற்றவுணர்வு வேறு மனதின் ஒரு மூலையில். அவனோடு
சேர்ந்து பாக்கெட் பாக்கெட்டாக சிகரெட் சாம்பலே மிச்சம்.
கீழே போன
காசியைப் பற்றி இரண்டு மாதங்களுக்குத் தகவலே இல்லை. தன்ராஜ் எழுதித்தான்
பின்னாடி விவரம் தெரிந்தது.
காசி பழையபடி
ஆரம்பித்துவிட்டிருக்கிறான். கண்ட கண்ட தூக்க மாத்திரைகள். பாதி நடிப்பு,
மீதி பைத்தியமென குர்தாவைக் கிழித்திருக்கிறான். ஸ்கூட்டரை வேண்டுமென்றே
சுவரில் இடித்தான். மாமனார் பெயரிலுள்ள ஸ்கூட்டர். அவருக்கு கோபம் வராதா?
போதை மாத்திரை அடிமை என்று செருப்பால் அடிக்க வந்தார். திடீரென ஒரு
நாள்'இனி நல்லபடி இருப்பேன்' என்ற திடீர்கங்கணத்தில் அந்த அழகான
உதடுகளுக்கு ஐஸ்கிரீம், புதுப்படம், ஸ்கூட்டர் பவனி, பட்டுச் சேலைக்கு
வாக்களிப்பு என்று பூஜை போட்டான். இரவில் கழுத்துக்கு கீழே ஒரு - ஒரு தடவை
மட்டுமே - புணர்ச்சி முடித்து, மாத்திரை இல்லாமலேயே நல்ல தூக்கம். விடியும்
முன்பு 5 மணிக்கே எழுந்து ஸ்கூட்டரை விரட்டிக் கொண்டு வந்து அப்¡வை
எழுப்பினான். இதற்கு 'மொய்' வந்த பணத்தில் நூறு காலி. இப்படி பூஜை
நான்கைந்து முறை நடந்தது. பெண் வீட்டிலேயே காசி இரண்டு வாரம் தொடர்ந்து
இருந்தான். படிப்பறிவு அதிகமில்லாத அப்பாவுக்கு ஒன்றுமே புரியவில்லை.
சிறுவன்போல கதறி அழுதார். மீண்டும் தூக்க மாத்திரைகள் விழுங்கிவிட்டான்.
ஆத்மார்த்தமான தற்கொலை முயற்சி. கடிதம் வேறு எழுதி வைத்துவிட்டு
கட்டிலேறினான். கதவைத் தாளிட்டிருந்தான். நம்பிக்கையோடு கண் மூடினான்.
அடுத்த நாள் காலையில் கண் விழித்துவிட்டது. பயங்கர ஏமாற்றம்.
ஆத்மார்த்தத்தின் ஏமாற்றம். ஆவேசம் கட்டுப்படாமல் கையில் கவர பிளேடு
எடுத்தான். தடுமாறிக் கொண்டே நடந்து போய்...
ஜி.எச்.சில் இரண்டு
வாரங்கள் இருந்தான் காசி. அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் முதல் வாரம்.
கழுத்தில் ஒரு சின்ன ஆபரே'ன். கால்மாட்டில் கேஸ் நோட்டீஸ். Personality
disorder, Affection seeking phenomenon, Advised psycho therapy.
5
காசியின் இன்-லேண்ட் மேஜை விரிப்பின்கீழ் சொருகிவிட்டு வெளியே
வந்தேன். மேக மூட்டம். கன்னுக்குட்டியை 'பலனு'க்கு பக்கத்துத்
தோட்டத்திற்குப் பிடித்துக்கொண்டு போகவேண்டிய வேலை. அம்மாவும், தங்கைகளும்
அவரைக்காய் பறித்துக் கொண்டிருக்கிறார்கள். கன்றை அவிழ்த்துப் பிடித்தேன்.
காசியின் மீதான நினைவுகள், மூட்டம் கலையாமல் நடந்து கொண்டிருந்தது.
இலக்கியமாக
எவ்வளவோ நல்ல நல்ல புத்தகங்கள் படித்தும் காசி இவ்வளவு துன்பப்பட்டான்
என்பதை நினைத்தபோது காசியின் அந்தப் படிப்புமீதே எனக்கு சந்தேகமும், சற்று
எரிச்சலும் உண்டாயிற்று. எதையும் சந்திப்பதற்கு முன்னாலேயே பயப்பட்டுவிடும்
சுபாவம் அவனுக்குள் அடிப்டை சுபாவமாக ஓடிக் கொண்டிருந்தபோல - ரத்த
ஓட்டத்தினூடே குமிழியிட்டு ஒரு அவநம்பிக்கையாக, தெரியவில்லை.
திடீரென
பத்திருபது நாட்கள் இரவுகளில் கண் விழித்து நிறையப் படிப்பான். காசி.
அப்போதெல்லாம் நான்கு கடிதங்கள் வாரத்துக்கு எழுதிவிடுவான். கோயமுத்தூரில்
ஒரு கட்டத்தில் காசிக்கு வேறொரு நல்ல நண்பனும்கூட இருந்தான். அவன் இளம்
வயசு. புல்லாங்குழல், ஓவியம், இரவில் நெடுஞ்சாலையோரம் ஒரு டீக்கடை முன்பு,
அரைமணிக்கொரு டீ குடித்துக்கொண்டு, விடியற்காலை நான்கு, ஐந்து மணிவரை
பேசிக்கொண்டே இருந்துவிட்டுப் பிரிவார்களாம். தனக்கு கலை - இலக்கிய
விஷயங்களில் நிறைய கற்றுத்தந்து, ரசனையை வளர்த்துவிட்டதில் அவனுக்குப்
பெரும் பங்குண்டு என்று காசியே அவனைப் பற்றிச் சொல்லியிருக்கிறான்.
விளைவுகள் பற்றி அஞ்சாத காசியின் ஓட்டை வாய் பலவீனம் பல மென்மையான இதயங்களை
சில தருணங்களில் பாயப்படுத்திவிடும். அப்டி காயப்படுத்திய ஒரு கெட்ட
தருணத்தில் அந்த இளங்கவியின் நட்பையும் இழந்துவிட்டான். காசி. இவ்வளவு
தூரம் காசி சரிந்ததற்கு, தொடராமல் போன அந்த நட்பும்கூட ஒருவகையில்,
காரணங்களில் ஒன்றாக எனக்கு படுகிறது.
காசி முக்கால் சந்திர
கிரகணத்தின்போது பிறந்தவனென்னு ஒரு தரம் சொல்லியிருக்கிறான். சில காலம்
ஜோஸ்யத்தில் கூட நம்பிக்கை வைத்துப் பார்த்தான். தன் மன வழக்கப்படி அதையும்
விட்டான் இடையில். அவன் வரையில் எதுவும் உறுதியில்லை என்னறே போய்க்
கொண்டிருக்கிறான். தஸ்தாவாஸ்கியின் 'The House of the Head' ஐத் தமிழில்
படித்துவிட்டு எனக்கு ஒரு கடிதத்தில் எழுதினான். 'ஒவ்வொரு கைதியும்
சிறையிலே விருந்தாளியா இந்த இடம் வந்துவிட்டுப் போறோம்'ங்க மனப்பாங்குல
தான் இருக்காங்க. அதனாலே ஐம்பது வயசுலேயும் அவன் முப்பத்தஞ்சு
வயசுக்காரனாட்டமே நினைச்சுட்டு நடந்துக்கறான்-னு கதைசொல்லி பெட்ரோவிச்
எழுதறான்... ஒரு விருந்தாளியா நானும் என்னை நினைச்சட்டு, இங்க காரியம்
செஞ்சுட்டுப் போக முடிஞ்சா எவ்வளவு எவ்வளவு நல்லா இருக்கும்?''
ஆஸ்பத்திரிலிருந்து
வந்தவன், மூன்றாவது வாரம் எனக்கொரு கடிதத்தில் எழுதினான்: வில்லியம்
கால்லோஸ் வில்லியம்ஸ் படிச்சிட்டிருக்கேன். நிறைய கவிதைகள் எனக்கு
பிடிச்சது. இடையிலே ஒரு தமாஷ். ஜி.எச்.சிலே குடுத்த ஒரு குறிப்புச் சீட்டு,
பழைய டயரிலே இருந்தது கண்ணிலே பட்டது. 'மறுமுறை பார்க்க... கிழமை மாலை 2
மணிக்கு வரவும். இந்த சீட்டை பத்திரமாக வைத்துக் கொள்ளவும்' னு குறிப்பு
அச்சடிச்சிருந்த குட்டி Case notes சீட்டு அது. அதிலே Diagnosis ங்கற
இடத்திலே பேனாவிலே பெரிசா எழுதியிருக்கு: CUTTHROAT - Psychiatric-ன்னு
cut-throat ன்னா நம்பிக்கை துரோகம் இல்லையே? எவர் இருவர்க்கிடையே யாருக்கு
யார் பரிசளிச்சிட்ட நம்பிக்கை துரோகம்டா அது? டாக்டருக்குள்ளே பூந்து
மாமனார் எழுதீட்டார் போல...
6
அந்த இன்-லேண்ட்
'ஸ்ரீராமஜெய'த்திற்கு பதிலாக காசிக்கு நான் ஒன்றுமே எழுதவில்லை.
அவனிடமிருந்தும் இந்த ஒன்றரை வருடங்களாகத் தகவலே இல்லை. ஆனால் சென்ற வாரம்
எனக் இனிய அதிர்ச்சி. எதிர்பாராத விதமாக பெங்களூரில் ஒரு மதுபான 'பாரில்'
காசியைச் சந்தித்தேன். சற்றே இளைத்திருந்தான் காசி. நவீன மோஸ்தரில் உடையும்
தலைவாரலும். கண்ணுக்கு கீழ் கருவளையங்கள் மெல்ல வெளுத்து வருகிறதுபோல.
இருமனமொப்பிய திருமண விலக்கு (Mutual Divorce) கிடைத்து விட்டதாகச்
சொன்னான். முதல் முறை விலக்கு பெற்றது போலவேத தனது அதே 'குடும்ப வக்கீல்'
மூலமாகத்தான் தன் பெண்ணுக்கு இம்முறையும் அதைச் செய்ய வேண்டும் என மாஜி
மாமனார் பிடிவாதம் பிடித்து இழுத்ததில் கொஞ்சம் கால தாமதமாகிக் கிடைத்தது
என்றான். அந்தச் செய்தியில் சிறு அதிர்ச்சியோ, முழு சந்தோஷமோ எனக்கில்லை.
ரம்மில் ஒரு குவாட்டர் குடித்துவிட்டு உட்கார்ந்திருந்தான். வாயில்
புகைந்து கொண்டிருந்தது.
ஆச்சரியமான சந்திப்புதானிது என ஆர்வம்
பொங்க அவன் முன்னால் உட்கார்ந்திருந்தேன். 'அப்புறம்... என இங்க' என்றதற்கு
தன் விசிடிங் கார்டாக மேல் பாக்கெட்டிலிருந்து எடுத்து நீட்டினான்.
மார்க்கெட்டிங் டைரக்டர். அடேயப்பா! எனக்கு மிகுந்த சந்தோஷமாகிவிட்டது.
பழையபடி இல்லாமல் எப்படியோ ஒரே தொழிலில் ஒட்டிக் கொண்டு, நட்பறுத்துக்
கொள்ளாமல் கவனமாக முன்னேறி இருக்கிறான் போல. வெயிட்டரிடம் இன்னொரு டம்ளர்
கேட்டான் காசி. ஒரு வேளை அபயக் கட்டையாகப் பற்றினானே 'காசு, காசு' என்று,
அந்த ஸ்ரீராமஜெயம் பண்ணுகிற வேலையோ இவ்வளவும்!
'எப்படி - எல்லாம்'
என்றேன் உற்சாகமாக.
'அது அது எப்படியோ அப்படித்தான் அது அது'
என்றான் வேதாந்தி மாதிரி. மாலையில் தொடங்கியது இரவு பத்தரைவரை பேசிக்
கொண்டிருந்தோம். தனது ஒன்றுவிட்ட அண்ணனிடம் வட்டிக்கு கொஞ்சம் பணம் வாங்கி
முதலீடு செய்திருப்பதாகச் சொன்னான். கூட இருக்கும் நண்பரும் நல்ல மாதிரி,
பொருளாதார விஷயத்தில் நிறைய ஒத்துழைக்கிறார் என்றான். இனி காசி பிழைத்து
விடுவான் என்று வாய்விட்டே சொன்னேன். வாய்விட்டுச் சிரித்தான். 'நானெங்கே
இங்கே' என்று என்னைக் கேட்டான். ஆயுள் பாதுகாப்பு இன்சூரன்ஸ் அலுவலக
வேலையாக என்று நீட்டிச் சொன்னேன். சிரித்தான். 'நோ ப்ராப்ளம்' என்றான்.
'பாரில்' நிறைய கூட்டமிருந்தும்கூட, ஏ.சி.யானதாலோ என்னவோ அமைதி கூடி
இருந்தது. எவர் உரக்கப் பேசினாலும் தாழ்ந்தே கேட்டது. கேட்கவும் சொல்லவும்
நிறைய இருந்தும், இருவருக்ம் இடையில் என்னவோ சிறு தயக்கம் நின்றிருந்தது.
போதையின் ஒரு முன்னேற்ற கட்டத்தில் தயக்கம் விலகிவிட்டது. ஐஸ் கேட்டான்
காசி. என் டம்ளரை சீக்கிரம் காலியாக்கித் தரச் சொன்னான். சிகரெட்டைக்
காட்டி எடுக்கவில்லையா என்றான். நிறுத்தியாச்சு! - எப்பாச்சும் இந்த மாதிரி
சந்தர்ப்பங்களில் மட்டும் என்று, ஒன்றை எடுத்து உதட்டில் பொருத்தினேன்.
பீறிட்டுச் சிரித்ததில் ரம் பொறையேறிவிட்டது.
நானும்
சிரித்துக்கொண்டே கேட்டேன்.
''ஏண்டா காசி இப்படி சிரிக்கிறே?
'நோ
ப்ராப்ளம்! இல்லடா குணா.. சமீபத்தில் 'Confessions of Zeno' னு ஒரு
இத்தாலி நாவல் படிச்சேன். அதில் 20 பக்கத்துக்கு ரெண்டாவது அத்தியாயம். The
Last Cigarette ன்னு. சிகரெட் விடறது பத்தி. விட தீர்மானம் போட்டு முடியாம
எப்படி எல்லாம் அவஸ்தைங்கறதப் பத்தியே இருபது பக்கமும்...''
நான்
பழைய காசியைப் பார்த்துவிட்டேன். மேலும் சுயசரிதை பாணியில் எழுதப்பட்ட அந்த
நாவலைப் பற்றியே நீண்ட நேரம் புல்லரித்துப் பேசிக் கொண்டே போனான். நாவலில்
அதன் ஆசிரியர் Italo Sevevo வும் தன்னைப் போலவே 'ஈக்குஞ்சு' பற்றி கவிதை
எழுதியிருப்பதையும் விவரித்து பிரம்மாண்டமாக சந்தோஷப்பட்டான். ஒரு வாய்
அருந்திவிட்டு, நாடு மொழி இன சூழல் விவரங்கள் தவிர்த்துவிட்டுப்
பார்த்தால், அந்த ஏழு அத்தியாய நாவல் ஏகதேசம் தனது சொன்த வாழ்க்கை வரலாறு
போலவே இருக்கிறது என்றான். அவசியம் அதை நான் படிக்க வேண்டும் - போய்
அனுப்புகிறேன் என்றான். மேலும் விடாமல், நாவலின் அத்தியாய தலைப்புகளைக்
கேள் என்று வியந்து சொன்னான்:
Introduction
The Last
Cigarette
The Death of my Father
The Story of my
Marriage
Wige and Mistress
A Business Partnership
Psychoanalysis
இன்னொரு குட்டி பெக் வாங்கினான் காசி. நான் போதுமென்று விட்டேன்.
திடீரென, தான் ஒன்றும் முற்றிலும் மாறிவிட்டதாக நான் நினைத்துவிட
வேண்டாமென்று சற்றே நெகிழ்ச்சியாக, லேசாக எச்சரிக்கை விடும் தொனியிலும்,
கண்கள் வழியாகவும் பேசினான் காசி. ஒரு சின்ன உதாரணம் பார் என்று விட்டு
சொன்னான். ஆறு மாதங்களுக்கு முன் நடந்ததாம் இது :
ஒய்.டபிள்யூ.சி.ஏ.
விடுதியில் தங்கிக் கொண்டு, கிறிஸ்துவ மத நிறுவனத்தின் கட்டுப்பாட்டில்
இயங்கம் ஒரு பெண்கள் கல்லூரியில் வேலை பார்த்து வந்த ஒரு இளம் பெளதிகத்
துணை பேராசியை, காசிக்கு ஒரு நண்பன் மூலம் இரண்டொரு சந்தர்ப்பங்களில்
அறிமுகமானாள். மிக அழகான யுவதியாம். துரதிர்'டம் - ஒரு குழந்தையோடு அவள்
விதவையாகி இரண்டு வருடங்கள் கூடப் பூர்த்தியாகவில்லை. தன்னை மணக்க
விருப்பம் வேண்டி விடுதி முகவரிக்கு அவளுக்கு கடிதம் எழுதிக்
கேட்டிருக்கிறான். நான்கு கடிதங்கள். கடைசி இரண்டு கடிதங்கள் ரெஜிஸ்டர்டு
தபால். நான்கும் வார்டன் கையால் பிரிக்கப்பட்டது! நண்பன் காசியை தெருவில்
மடக்கி ஆங்கிலக் கெட்ட வார்த்தைகளால் அறைந்தான்; பெண்ணின் அண்ணனிடம்
இழுத்துவிடுவேன் என்று மிரட்டிவிட்டுப் போனேன். அந்தப் பெண் மூன்று
நாட்களாக அழுது கொண்டிருப்பதாக வேறு சொல்லிவிட்டுப் போனான். ஒரு மாதங்
கழித்து கல்லூரி வாசலில் அவள் காலில் விழாத குறையாக வருந்தி மன்னிப்புக்
கேட்டுவிட்டு வந்தானாம் - மன்னிப்புக் கேட்கப் போனதாலும் அந்தப் பெண்ணைப்
பயமுறுத்தி நினைவு தன் உடம்புக்குள் இரத்த ஓட்டத்தில் ஒரு உடையாத குமிழியாக
ஓடிக் கொண்டே இருப்பதானது காவிய சோகம் என்றான்.
நிமிடத்தில் காவிய
சோகம் பட்டுவிடும் காசியின் மனநிலை இன்னும் - குறிப்பாக பெண்கள்
விஷயத்தில் - மாறவே இல்லை என்று நினைத்துக் கொண்டேன். இந்த ரொமாண்டிக்
பார்வை ஒரு நோய்க் கூறாகவே இன்னும் படுகிறது. அவனிடம் எனக்கு. ஆனால் வேறு
நினைய விஷயங்களில் குணமாகியிருப்பது பேச்சினூடே தெரிந்தது. 'ஆசைப் பட்டதை
அடைந்த பின்னாலும் ஒரு பள்ளம் மிச்சமாகி அதில் நலுங்குமே ஒரு சோகம் அதை
அனுபவித்தால் தெரியும் ஆசையின் குணம் என்ன என்று' - பின்னால் பேசும்போது
எதற்கோ இப்படி சொன்னான்.
சமீபத்தில் திருப்பதி போய் வந்தானாம்.
ஜாலித் துணையாக ஒரு நண்பனோடு போனவன் 'கம்பெனி ஸேக்'குக்கு தானும்
மொட்டையடித்துக் கொண்டானாம். கம்பெனி ஸேக் ஆக வேறு கோவில்களுக்கும்
அப்படியே போய்விட்டு, திருவண்ணாமலை வந்த போது ராம்சூரத் குமார் என்றொரு
யோகியைச் சந்தித்ததாகச் சொன்னான். 'நீ கதவைத் தட்டும் விதம் சகிக்கக்
கூடியதாக இல்லை' என்பதையே கோபம் தணிந்த கடைசியிலும் தனக்கான ஒரே ஆசிச்
செய்தியாக அவர் வழங்கி அனுப்பியதையும் அதில் பூரண அர்த்தமிருப்பதாகவும்
சொன்னான்.
நான் இன்னொரு சிகரெட் பற்ற வைத்துக்கொண்டேன். அவன்
அப்பாவைப் பற்றிக் கேட்டேன். 'நோ ப்ராப்ளம்' என்றான். அடிக்டி 'நோ
ப்ராப்ளம்' என்ற வார்த்தையையே, எதற்கும் பதிலாக அவன் சொல்வதைக் கவனித்துக்
கொண்டே வந்தேன். கேட்டேன், சிரித்துக் கொண்டே 'நோ ப்ராப்ளம்' என்றான்.
எனக்கு அந்த பதில் அருவருப்பாகவும், எரிச்சலாகவும் பட்டது. காரியங்களை
காரியங்களுக்காக மட்டுமே செய்வதில் ஒரு விடுதலைஉணர்வும், பரபரப்பற்ற
பேரார்வமும் இருப்பதைக் கண்டுகொண்டு விட்டதால், எந்தக் காரியமுமே தனக்குப்
பேரானந்தமாக இருக்கிறது என்றான். நான் ஒரு நிமிஷம் பேசவில்லை. சொல்லும்போது
அவனுக்கு நாக்கு லாவகம் கொஞ்சம் இழந்து, எழும்புவதில் சிரமப்பட்டதைப்
பார்த்திருக்கிறேன். என் நான்கு தங்கைகளுக்கும் காரியம் செய்து
முடிப்பதற்குள் பட்ட கஷ்ட அனுபவங்கள் எனக்குள் ஒற்றை எண்ணமாக, மின்னலின்
ஒரு கீற்றாக உருக்கொண்டு அறைந்தது - ஈயைத் துரத்தும் பல்லியாக அது வேகமாக
ஓடியதில், பல்லியின் வால் அறுந்து நினைவில் இடறி விழுந்தது. 'என்ன யோசனை'
என்றான். 'நோ ப்ராப்ளம்' என்றேன். சிரித்துக் கொண்டே திடீரென்று உரக்க அவன்
நூறு கொசுவர்த்திச் சுருள்களைக் கொடுத்து, இரண்டிரண்டாக ஒட்டி இருப்பதை,
ஒன்று ஒன்றாக தனித்தனியாகப் பிரித்துவைக்கச் சொன்னால் என்னால் பொறுமையாகச்
செய்ய முடியுமா என்று கேட்டான். மறு நிமிஷமும் நான் பேசாதிருந்தேன். முகம்
தொட்டு 'என்ன'? என்றான். கூலி எவ்வளவு என்றேன். எழுந்து என் முன்
மண்டையிலடித்துச் சிரித்தா. ஓயவில்லை. இருட்டிவிட்டது வெளியே. ஏ.சி.யிலும்
நன்றாக வியர்த்துவிட்டது காசிக்கு.
வயதான கிழப் பிச்சைக்காரர்களைத்
தெருவில் பார்த்தால், மனதின் ஆழத்தில் அவர்களைத் தன் அப்பாவோடு ஒரு
கோணத்தில் ஒப்பிட்டுக் கொண்டு, குற்றவுணர்ச்சி - சுய இரக்கம் - இயலாமை -
பயம் எல்லாம் கலக் அவசரக் கருணையாக செயல்பட்ட நாட்கள் மாதிரி இப்போது
இல்லை. அவர்களை அவர்களாகவே பார்த்து அவர்களுக்காகப் பார்க்க
முடிகிறதென்றும், அவர்களைப் போன்ற இன்னும் பலரின் ஸ்திதியை மாற்றிவிட
சமூகதளத்தில் காரியமாற்ற முனைந்திருக்கும் சில நல்ல மனக்ளுடனும் தான்
பழகிக் கொண்டிருப்பதாகச் சொன்னான். 'மனமாக' இதை சுருக்கி விடுவதை அவர்களே
ஒத்துக கொள்ள மாட்டார்களெனினும் தன் மனதில் பட்டது இவ்வளவுதான் என்று
எனக்கு புரியாமல் ஏதோ சொல்லிக் கொண்டு போனான். மேலும் எனக்கு இமைகளில் கனம்
சுருட்டி உணர்ந்தேன். வெளியில் போனால் நன்றாக இருக்கும் என்று பட்டது.
காசி மேலும் ஒரு சிகரெட்டை, புது பாக்கெட் கிழித்து எடுத்தான்.
ஆனாலும்,
தனக்கு கல்யாண ஆசை இம்சிக்கிறது இன்னும் என்றான் திடீரென்று. தனிமை,
துவைத்தல், ஹோட்டல் இவைகளையும் திருமணத்திற்கான சாக்குகளில் ஒன்றாக வைத்து
யோசிப்பதில் தவறுண்டா என்று என்னிடம் ஒரு சிறுவன்போல கேட்டான்.
பைத்தியக்காரன்! பெய்த பெருமழைவிட்ட சில மாலை நேரங்களாக, சில நாட்கள்
கழிவதிலிருந்து, தன் வாழ்க்கைக்கு ஊட்டம் சேகரித்துக் கொள்வதாகக் கூறினான்.
சில சமயம் தேசிய நெடுஞ்சாலையில் பஸ்ஸில் தொலைதூரம் உட்கார்ந்துகொண்டு
போகும்போது, பஸ்ஸின் ரீதி கூட்டும் ஓட்ட வேகத்தின் சங்கீதச் சரடில்
இணைந்துவிடும் போது வாழ்க்கையை ஒரு அற்புதப் பரிசாக உணர்வதாகவும் சொன்னான்.
எனக்கும் கேட்க உற்சாகமாகிவிட்டது. பேச்சை நிறுத்திவிட்டு ஃபிரைடு ரைஸ்
சாப்பிடுவோமா என்று ஆர்வமாகக் கேட்டான். எனக்கு அவன் கேட்டவிதம் மிகவும்
பிடித்திருந்தது, எனக்கு ஃபிரைடு ரைஸ் பிடிக்காவிட்டாலும். எவ்வளவோ தான்
நிதானப் பட்டிருந்தாலும் சில சமயம் எல்லாம் கொட்டிவிடுகிறது என்றான்.
தனியறையில் பின்னிரவில் மோனத்தில் தனக்கு பிடித்த கவிஞனைப் படித்துக்
கொண்டிருக்கும் போது, வாசலில் கட்டிலிலிருந்து அப்பா அவருக்கான ஏதோ ஒரு
தொனி சேர்த்து உரத்து கொட்டாவி விட்டால் தாங்க முடியவில்லை. எழுந்து போய்
அந்த வாயை அடைத்து அமுக்கிவிடலாம் போலிருக்கிறது. ஒரு கொட்டாவி அந்த மாதிரி
வந்தால் போதும், அந்தப் பின்னிரவே தனக்கு பாழ் என்றும் சொன்னபோது சற்றே
சோர்வாகிவிட்டான். அப்பா இறந்து விட்ட பின்பும் தான் வாழ்க்கையைத் தொடரலாம்
என்பதற்கான நம்பிக்கை மெல்லவே கூடிவருகிறது என்றான். அடிப்படை சுபாவமாகவே
'சுயம் நசித்து' விட்ட நான்கைந்து நண்பர்கள், எழுத்து, படிப்பு இதெல்லாம்
மட்டுந்தான் இதற்கு அடிப்படைக் காரணம் என்றான். என்ன இன்னும் தொடர்ந்து
படித்துக் கொண்டிருக்கிறாய்தானே? என்று கேட்டுவிட்டு கடைசி 'சிப்'பையும்
முடித்தான். சிகரெட் பொருத்திக் கொண்டான்.
திடீரென தான் சமீபத்தில்
கண்ட கனவுகளைப் பற்றி பேச்சை மடை மாற்றிக் கொண்டான். அழகான கண்ணாடிக்
கிண்ணத்தில் மிதந்த மிளகாய் நீரை சில்வர் கரண்டியால் கலக்கிக் கொண்டே
பேசினான். முன்னைப் போல கனவுகள் வந்தாலும், நோ-ப்ராப்ளம் என்றான். ரமணரின்
பரவச முகம் ஒருமுறை வந்ததென்றான். ஒரு தடவை கனவில் கால் பெருவிரலை பாம்பு
கடித்து ரத்தம் வந்ததென்றான். ஒரு தடவை கனவில் கால் பெருவிரலை பாம்பு
கடித்து ரத்தம் வந்துவிட்டதாம். பாடையில் வைத்து ஒரு கனவில் தன்னைக்
கண்டானாம். தீவிரவாதியாக போலீஸாரால் துரத்தப்பட்டு ஒரு கனவில் ஓடினானாம்.
ஓரிரவு நெடுஞ்சுவர் தாண்டி, மலைகள் தாண்டி, விண்ணில் பறந்து போவது மாதிரி,
கைகளால் பேரானந்தமாகக் கடைந்து கடைந்து பறந்துகொண்டே இருந்தானாம். இந்த ஒரு
கனவு மட்டும் மீண்டும் வராதா என்று ஏக்கப்படுவதாகச் சொன்னவன், அடிக்கடி
திரும்பத் திரும்ப வரும் எரிச்சலூட்டும் ஒரு கனவென, பரீட்சைக்குப்
படிக்காமலேயே போய்விட்டு ஹாலில் திணறுவதைச் சொன்னான்.
கனவுகளை
நான்கு நாட்களுக்குக் கவனித்து, விடிந்ததும் ஒரு குயர் ரூல்டு நோட்டில்
எழுதி வைக்க ஆரம்பித்தால், ஐந்தாம் நாள் வராதென்றான். தொடர்ந்து கவனித்துக்
கொண்டே வந்தால் கனவு புறமுதுகு எடுக்கும் என்றான். மீறி, நிச்சயம் வராதா
என்றால் பெருவாழ்வின் பல புதிரிகளுக்கும் போல இதற்கும் நிச்சயமாகச் சொல்ல
முடியாதுதானே என்று கேட்டான்.
கத்தி, கபடாக்ள், முள் கரண்டி
அலங்காரமாக சூடு பறக்க மேஜைக்கு வந்தன ஃபிரைடு ரைஸ் தட்டுகள். அநேகமாக என்
பங்கில் பாதிக்கும் மேல் காசிதான் சாப்பிட வேண்டியிருக்கும்.
புதுமைப்பித்தன் கலைமகள், மார்ச் 1943
செல்லம்மாள் (நன்றி: அழியாச்சுடர்கள்)
1
செல்லம்மாளுக்கு
அப்பொழுதுதான் மூச்சு ஒடுங்கியது; நாடியும் அடங்கியது. செல்லம்மாள்
பெயரற்ற வெற்றுடம்பு ஆனாள். அதாவது பதியின் முன்னிலையிலே, உற்றார்
உறவினருக்கு ஐந்நூறு அறுநூறு மைல் தூரத்திலே, பட்டணத்துத் தனிமையிலே மாண்டு
போனாள்.
நெற்றியில் வியர்வை ஆறாகப் பொழிந்து கொண்டிருந்த
பிரமநாயகம் பிள்ளை, கையிலிருந்த தவிட்டு முடிப்பைச் சற்று எட்ட
வைத்துவிட்டு, செல்லம்மாளாக இருந்த அந்த உடம்பைப் பார்த்துக்
கொண்டிருந்தார்.
சற்று அரைக்கண்
போட்டபடி திறந்திருந்த இமைகளை மூடினார். அங்கொன்றும் இங்கொன்றுமாக
வசமிழந்து கிடந்த கைகளை எடுத்து நெஞ்சின் மேல் மடித்து வைத்தார். இடது கால்
சற்று ஒரு புறமாக மடிந்து கோணியிருந்தது. அதை நிமிர்த்தி, இரண்டு
கால்களையும் சேர்த்துவைத்துக் கிடத்தினார். வாயிதழ் சற்றுத்
திறந்திருந்தது. அதையும் மூடினார். செல்லம்மாள் இறந்துவிட்டாள் என்று உள்மன
உணர்ச்சி இருந்ததே ஒழிய, ஸ்பரிசத்தில் அவருக்குப் புலப்படவில்லை.
அப்பொழுதுதான் மூச்சு அடங்கியது.
ஒரு பெரும்பளுவை இறக்கிக்
கழுத்துக்கு ஆசுவாசம் கொடுப்பது போலவே, அவரது மனசிலிருந்து பெரும்பளு
இறங்கியது. மனசிலே, மரணப் பிரிவினால் துன்பப் பிரவாகம் மதகுடைத்துக் கொண்டு
பெருகி அவரை நிலைகுலையச் செய்யவில்லை. சகதர்மிணியாக இருந்த ஒரு
ஜன்மத்துக்குத் துன்பச் சுமை குறைந்துவிட்டது என்பதிலே அவருடைய மனசுக்கு
ஒரு நிம்மதி.
பிரமநாயகம் பிள்ளைக்கு மனப்பக்குவம் ஏற்பட்டுவிட்டது.
சாவின் சாயையிலே அவரது மனம் நிலை குலையவில்லை. அதனால் பிரமநாயகம்
பிள்ளையைப் பந்தவினையறுத்த யோகி என நினைத்து விடக் கூடாது; அல்லது, அவரது
மனசுக்கு வேலி போட்டுப் பாதுகாத்து வளர்த்து, 'போதி' மரம் வரையில்
கொண்டுவிடும் ஞானமிகுந்த சுத்தோதனப் பெருந்தகையல்ல அவரது பிதா. வறுமை,
நோய், சாக்காடு மூன்றையும் நேரில் அநுபவித்தவரே.
பிரமநாயகம் பிள்ளை
வாழ்வின் மேடுபள்ளங்களைப் பார்த்திருக்கிறார் என்றால், அவர் ஏறிய சிறுசிறு
மேடுகள் யாவும் படிப்படியாக இறங்கிக் கொண்டே போகும் பள்ளத்தின்
கோளாறுகளேயாகும். வாழ்வு என்ற ஓர் அநுபவம் அவருக்கு ஏற்படும்போது அவர்
மேட்டிலிருந்துதான் புறப்பட்டார்.
குடும்பத்தின் சகல
செலவுகளுக்கும் வருஷந்தோறும் வருமானம் அளிக்கும் நிலபுலன்களைப்
பங்கிட்டால், பட்டினி கிடக்காமல் பார்த்துக் கொள்ளக்கூடிய அளவு
துண்டுகளாகப் பாகப் படுத்துவதை அவசியமாக்கும் அளவுக்கு வம்ச விருத்தி
உடையவர் பிரமநாயகம் பிள்ளையின் பிதா.
பிரமநாயகம் பிள்ளை நான்காவது
குழந்தை. சிறு வயசில் படிப்பில் சற்றுச் சூடிகையாக இருந்ததால்,
மற்றவர்களுக்குக் கையெழுத்து வாசிக்கும்வரையில் கைகாட்டிவிட்டு அவரைப்
படிப்பித்தார் அவர் தகப்பனார். அவருக்கு இருந்த பொருள் வசதி, மகன்
ஊரைவிட்டு ஐந்நூறு அறுநூறு மைல் எட்டி வந்தும், பட்டினி கிடக்காமல் மட்டும்
பார்த்துக் கொள்ளக் கூடிய அளவுக்கே கல்வி வசதி அளித்தது. உற்ற பருவத்தில்
பிரமநாயகம் பிள்ளைக்குச் செல்லம்மாள் கையைப் பிடித்து, அம்மி மிதித்து
அருந்ததி பார்க்க வைக்கும் பாக்கியம் கிடைத்தது.
பிரமநாயகம்
பிள்ளையின் தகப்பனார் காலமானார். சொத்து பாகமாயிற்று. குடும்பக் கடன்
விவகாரம் வியாச்சிய எல்லையை எட்டாதபடி மூத்தவர் இருந்த சமாளிக்க,
பிரமநாயகம் பிள்ளை ஜீவனோபாயத்துக்காகச் செல்லம்மாளைக் கைப்பிடித்து
அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்து தஞ்சம் புகுந்தார்.
சென்னை
அவருக்கு நிம்மதியற்ற வாழ்வைக் கொடுத்து அக்கினிப் பரீட்சை செய்தது.
செல்லம்மாள் வீட்டிலே அவருக்கு நிம்மதியற்ற வாழ்வைக் கொடுத்துச்
சோதித்தாள்; குணத்தினால் அல்ல, உடம்பினால். அவளுக்கு உடம்பு நைந்துவிட்டது.
பிள்ளைக்கு வெளியில் சதா தொல்லை. வீட்டிலே உள்ளூர அரிக்கும் ரணம்.
பிரமநாயகம்
பிள்ளை ஒரு ஜவுளிக் கடையில் வேலை பார்க்கிறார். ஜவுளிக்கடை முதலாளி, ஒரு
ஜோடி ஜீவன்கள் உடலைக் கீழே போட்டுவிடாமல் இருக்கவேண்டிய அளவு ஊதியம்
தருகிறார். செல்லம்மாளின் வியாதி அதில் பாதியைத் தின்றுவிடுவதுடன் கடன்
என்ற பெயரில் வெளியிலும் படருகிறது.
பிரமநாயகம் பிள்ளைக்கு மனசில்
எழும் தொல்லைகள், முதலில் ரணம் காட்டி, பிறகு ஆறி மரத்துப் போன
வடுவாகிவிட்டன. சம்பளத்தேதி என்று ஒன்று இல்லை. தேவையான போது வாங்கிக்கொள்ள
வேண்டும் என்பது சம்பிரதாயம். அதாவது தேவையை முன்கூட்டி எதிர்பார்த்து,
அதற்காக முதலாளியின் மனசைப் பக்குவமடையச் செய்து, பிறகு தினசரி இடைவிடாமல்
கேட்டுக் கேட்டு, வழக்கம்போல இன்றும் கிடைக்காது என்ற மன ஓய்ச்சலுடன்
கேட்கும்போது, நிதானத்தைக் குலைக்கும்படியாக அவர் கொடுத்து விடுவதைப்
பெற்றுக்கொண்டு வீடு திரும்புவதே அவர் வேலை பார்க்கும் ஸ்தாபனத்தின்
வளமுறை. இப்படியாக, மாதம் முழுவதும் தவணை வாரியாகத் தேவைகளைப் பிரித்து,
ஒரு காரியத்துக்காக எதிர்பார்த்த தொகையை அத்தியாவசியமாக முளைத்த வேறு
ஒன்றுக்காகச் செலவழித்துவிட்டு, பாம்பு தன் வாலைத் தானே விழுங்க முயலும்
சாதுர்யத்துடன் பிரமநாயகம் பிள்ளை தமது வாழ்வின் ஜீவனோபாய வசதிகளைத் தேவை
என்ற எல்லை காணமுடியாத பாலைவனத்தைப் பாசனம் செய்ய, தவணை என்ற வடிகால்களை
உபயோகிக்கிறார்.
செல்லம்மாளுக்கு உடம்பு இற்றுப் போயிற்று.
இடைவிடாத மன உளைச்சலும் பட்டினியும் சேர்ந்து நோய் அவளைக் கிடத்திவிடும்.
காலையில் கண்ட ஆரோக்கியம் மாலையில் அஸ்தமித்துவிடும். இதை முன்னிட்டும்
சிக்கனத்தை உத்தேசித்தும் பிரமநாயகம் பிள்ளை நகரின் எல்லை கடந்து, சற்றுக்
கலகலப்புக் குறைவாக உள்ள, மின்சார வசதி இல்லாத இடத்தில் வசித்து வந்தார்.
அதிகாலையில் பசியை ஆற்றிக் கொண்டு கைப் பொட்டணத்துடன் கால் நடையாகவே
புறப்பட்டுத் தமது வயிற்றுப் பிழைப்பின் நிலைக்களத்துக்கு வந்துவிடுவார்.
பிறகு அங்கிருந்து நன்றாக இருட்டி, செயலுள்ளவர்கள் சாப்பிட்டுக்
களைப்பாறும் தருணத்தில் வீட்டு நடையை மிதிப்பார். செல்லம்மாள் அன்றைப்
பொழுதைக் கழித்த நிலைதான் அவரது சாப்பாட்டுக்கு மூலாதார வசதி. வரும்போது
வீடு இருட்டி, வெளிவாசல் கதவு தாழிடாமல் சாத்திக் கிடந்தது என்றால் அவர்
உள்ளே சென்று கால் முகம் கழுவி அநுட்டானாதிகளை முடித்துக் கொண்ட பிற்பாடு
அடுப்பு மூட்டினால் தான் இரு ஜீவன்கள் பசியாறுவதற்கு மார்க்கம் உண்டு. அவர்
வீடு அடையும் தருணத்தில் அந்தப் பிராந்தியத்துக் கடைகள் யாவும் மூடிக்
கிடக்குமாகையால் வீட்டில் உள்ளதை வைத்துத்தான் கழிக்க வேண்டும். சில
சமயங்களில் வீட்டில் உள்ளது என்பது காலியான பாத்திரங்கள் என்ற பொருட்
பொலிவுக்குள் பந்தப்பட்டுக் கிடக்கும். அச்சமயங்களிலும் பிள்ளையவர்களின்
நிதானம் குலைந்துவிடாது. வெந்நீர் வைத்தாவது மனைவிக்குக் கொடுப்பார்.
இப்படியாக,
பிரமநாயகம் பிள்ளை சென்னையில் பத்து வருஷங்களையும் கழித்துவிட்டார்.
அவருக்கு ஒவ்வொரு சமயங்களில் ஊருக்குப் போய்விடுமோமா என்ற துணிச்சலான
நினைவு தோன்றுவதும் உண்டு. ஆனால் அடுத்த நிமிஷம், சக்தியின்மை மனசில்
ஆழ்ந்த ஏமாற்றத்தை, கைப்பை, தரையிட்டுவிடும். மேலும் அங்கு எப்படியெல்லாம்
இருக்குமோ என்ற பயம் அவருடைய மனசை வெருட்டியது.
சங்கடங்களை
நிவர்த்தித்துக் கொள்ளும் மார்க்கங்களைப் பற்றி அவர், அதோ கிடத்தி
இருக்கிறதே அந்தச் சடலத்துடன், அதில் மூச்சு ஓடிக்கொண்டு பேசாத சில
சமயங்களில், உல்லாசமாக ஊருக்குப் போய்விடுவதில் உள்ள சுகங்களைப் பற்றிப்
பேசியதும் உண்டு. செல்லம்மாள், வறண்ட உதடுகளில் சில சமயம் உற்சாகமிகுதியால்
களுக்கென்று சிரித்து வெடிப்பு உண்டு பண்ணிக் கொள்வாள். ஊர்ப் பேச்சு,
தற்சமயம் பிரச்சனைகளை மறப்பதற்குச் சௌகரியமாக, போதை தரும் கஞ்சா மருந்தாகவே
அந்தத் தம்பதிகளுக்கு உபயோகப்பட்டு வந்தது.
2
அன்று
பிரமநாயகம் பிள்ளை அதிகாலையில் பழஞ்சோற்று மூட்டையுடன் நடைப்படியைத்
தாண்டும்பொழுது செல்லம்மாளுக்கு எழுந்து நடமாட முடிந்தது. இரவு அவர்
திரும்பும்போது திருப்தியுடன் சாப்பிட, அவருக்குப் பிரியமான காணத்
துவையலும் ஒரு புளியிட்ட கறியும் வைக்கப் போவதாகச் சொல்லிவிட்டு, கையில்
உமிக்கரிச் சாம்பலுடன் புழைக்கடைக்குச் சென்றாள்.
"இண்ணைக்கித்தான்
சித்தெ தலெ தூக்கி நடமாடுதெ. வீணா உடம்பெ அலெட்டிக்கிடாதே" என்று
நடைப்படியைத் தாண்டிய திரு. பிள்ளை திரும்பி நின்று மனைவியை
எச்சரித்துவிட்டு, வெளிப் புறமாகக் கதவை இழுத்துச் சாத்தி, ஒரு கையால்
அதைச் சற்றுப் பிடித்துச் சமன் செய்து, நிலைக்கும் கதவுக்கும் இருந்த
இடைவெளியில் விரலை விட்டு உள்தாழ்ப்பாளைச் சமத்காரமாகப் போட்டார். பிறகு
தாழ்ப்பாள் கொண்டியில் விழுந்துவிட்டதா என்பதைக் கதவைத் தள்ளிப்பார்த்து
விட்டு, தெருவில் இறங்கி நடந்தார்.
அன்று வழி நெடுக அவரது மனசு
கடைக்காரப் பிள்ளையின் மனப் பக்குவத்தையும் செல்லம்மாளின் அபிலாஷைகளையுமே
சுற்றிச் சுற்றி வட்டமிட்டு வந்தது.
செல்லம்மாள், பேச்சின்
போக்கில், அதாவது முந்திய நாள் இரவு, நெஞ்சு வலிக்கு
ஒற்றடமிட்டுக்கொண்டிருக்கும்போது, "வருகிற பொங்கலுக்கு வீட்டு அரிசி
சாப்பிடவேணும். ஊருக்கு ஒருக்க போய்ப்போட்டு வரலாம்; வரும்போது
நெல்லிக்காய் அடையும், ஒரு படி முருக்க வத்தலும் எடுத்துக்கிட்டு வரணும்"
என்று சொல்லி விட்டாள்.
பேச்சிலே வார்த்தைகள் மேன்மையாகத்தான்
இருந்தன. அதைவிட அவள் புலிப் பால் கொண்டுவரும்படி கேட்டிருக்கலாம்; பிரம்ம
வித்தை கற்று வரும்படி சொல்லியிருக்கலாம். அவை அவருக்கு எட்டாக் கனவாகப்
பட்டிரா.
"அதற்கு என்ன, பார்த்துக் கொள்ளுவோமே! இன்னம் புரட்டாசி
களியலியே; அதற்கப்புறமல்லவா பொங்கலைப் பற்றி நினைக்கணும்?" என்றார்.
"அது
சதிதான்; இப்பமே சொன்னாத்தானே, அவுக ஒரு வளி பண்ணுவாக!" என்று அவகாச
அவசியத்தை விளக்கினாள் செல்லம்மாள். 'அவுக' என்றது கடை முதலாளிப்
பிள்ளையைத்தான்.
"தீபாவளிக்கு ஒங்க பாடு கவலையில்லே;
கடையிலேயிருந்து வரும்; இந்த வருஷம் எனக்கு என்னவாம்?" என்று கேட்டாள்.
"எதுவும் உனக்குப் பிடித்தமானதாப் பாத்து எடுத்துப் போட்டாப் போச்சு.
மொதல்லே நீ எளுந்து தலையைத் தூக்கி உக்காரு" என்று சிரித்தார் பிரமநாயகம்.
வழி நெடுக, 'அவளுக்கு என்னத்தைப் பற்றுக் கணக்கில் எழுதிவிட்டு
எடுத்துக் கொண்டு வருவது? பழைய பாக்கியே தீரவில்லையே! நாம் மேலும் மேலும்
கணக்கேற்றிக் கொண்டே போனால் அநுமதிப்பார்களா?' என்றெல்லாம் எண்ணமிட்டுக்
கொண்டே நடந்தார். கடைக்குள் நுழைந்து சோற்றுப் பொட்டணத்தையும்
மேல்வேட்டியையும் அவருடைய மூலையில் வைத்தார்.
"என்னடே பெரமநாயகம்,
ஏன் இத்தினி நாளிய? யாரு வந்து கடையெத் தெறப்பான்னு நெனச்சுக்கிட்டே?
வீட்டிலே எப்படி இருக்கு? சதி, சதி, மேலே போயி அரைப் பீசு 703
எடுத்துக்கிட்டு வா; கையோட வடக்கு மூலையிலே, பனியன் கட்டு இருக்கு பாரு,
அதையும் அப்படியே தூக்கியா" என்ற முதலாளி ஆக்ஞை அவரை ஸ்தாபன இயக்கத்தில்
இணைத்துவிட்டது. ஒரு கஜம், அரைக் கஜன், பட்டு, பழுக்கா, சேலம்,
கொள்ளேகாலம், பாப்லின், டுவில் - என்றெல்லாம் பம்பரமாக வயிற்றுக்
கடவுளுக்கு லக்ஷார்ச்சனை செய்து கொண்டிருந்தார் பிரமநாயகம் பிள்ளை.
மாலை
ஒன்பது மணிக்கு முதலாளிப் பிள்ளையவர்களிடம் தயங்கித் தயங்கித் தமது தேவையை
எடுத்துச் சொல்லி, மாதிரி காட்டுவதற்காக மூன்று சேலைகளைப் பதிவு
செய்துவிட்டு, மேல் வேட்டியில் முடிந்தவராக வீடு நோக்கி நடந்தார்.
3
நடைப்படியருகில், பிரமநாயகம் பிள்ளை வந்து மூட்டையை
இறக்கிவைத்துவிட்டு, கதவுச் சந்துக்கிடையில் வழக்கம்போல் விரல்களை விட்டு
உள்தாழை நெகிழ்த்தினார். தெருவில், இருள் விழுங்கிய நாய் ஒன்று உறக்கக்
கலக்கத்துடன் ஊளையிட்டு அழுதது. அதன் ஏக்கக் குரல் அலைமேல் அலையாக மேலோங்கி
எழுந்து மங்கியது.
பிரமநாயகம் பிள்ளை கதவைத் தள்ளித் திறந்து
கொண்டு உள்ளே நுழைந்தார்.
வீட்டில் விளக்கில்லை. 'உறங்கி
இருப்பாள். நாளியாகலே...' என நினைத்துக் கொண்டே நிலைமாடத்தில் இருந்த
நெருப்புப் பெட்டியை எடுத்து அருகிலிருந்த சிமினி விளக்கை ஏற்றினார். அந்த
மினுக்கட்டான் பூச்சி இருளைத் திரட்டித் திரட்டிக் காட்டியது. அதன் மங்கலான
வெளிச்சம் அவரது ஆகிருதியைப் பூதாகாரமாகச் சுவரில் நடமாட வைத்தது.
முதல்
கட்டைத் தாண்டி உள்ளே நுழைந்தார். செல்லம்மாள் புடைவைத் துணியை விரித்து,
கொடுங்கை வைத்து இடதுபுறமாக ஒருக்களித்துக் கிடந்தாள். வலதுகை பின்புறமாக
விழுந்து தொய்ந்து கிடந்தது. அவள் கிடந்த நிலை, தூக்கமல்ல என்பதை
உணர்த்தியது. பிரமநாயகம் பிள்ளை குனிந்து முகத்துக்கு நேரே விளக்கைப்
பிடித்துப் பார்த்தார். கண் ஏறச் செருகியிருந்தது. நெஞ்சில் மட்டும் சிறிது
துடிப்பு; சுவாசம் மெல்லிய இழைபோல் ஓடிக்கொண்டிருந்தது.
நிமிர்ந்து
பின்புறமாகப் புழைக்கடைக்குச் சென்றார். போகும்போது அவரது பார்வை சமையற்
கட்டில் விழுந்தது. உணவெல்லாம் தயாரித்து வரிசையாக எடுத்து அடுக்கி
இருந்தது. அடுப்பில் வெந்நீர் கொதித்துக் கொண்டிருந்தது.
சாவகாசமாக,
கிணற்றில் ஜலம் மொண்டு கால் கைகளைச் சுத்தம் செய்துகொண்டார். திரும்ப உள்
நுழைந்து அடுப்படியிலிருந்த அகல் விளக்குத் திரியை நிமிண்டித் திருத்தி
ஏற்றினார். பக்கத்திலிருந்த மாடத்திலிருந்து ஒரு சுக்குத் துண்டையும்
நெருப்புப் பெட்டியையும் எடுத்துக் கொண்டு உள்கட்டுக்குத் திரும்பி
வந்தார்.
சுவரின் பக்கத்திலிருந்த குத்துவிளக்கை
ஏற்றிவைத்துவிட்டு, செல்லம்மாளருகில் வந்து உட்கார்ந்தார். கையும் காலும்
ஜில்லிட்டிருந்தன. கற்பூரத் தைலத்தை உள்ளங்கையில் ஊற்றி, சூடு ஏறும்படித்
தேய்த்துவிட்டு, கமறலான அதன் நெடியை மூக்கருகில் பிடித்தார். பிரயோஜனம்
இல்லை. எண்ணெயை ஊற்றிச் சற்றுப் பதற்றத்துடன் மூக்கின் மேலும் கபாலத்திலும்
தடவினார். பிறகு எழுந்து சென்று கொதிக்கும் நீரை ஒரு பாத்திரத்தில்
எடுத்துக் கொண்டு வந்து, கையிலும் காலிலும் நெஞ்சிலுமாக ஒற்றடமிட்டார்.
அதிலும் பிரயோஜனம் இல்லை. சுக்குத் துண்டை விளக்கில் கரித்துப் புகையை
மூக்கருகில் பிடித்தார்.
முகம் ஒரு புறமாகச் சாய்ந்திருந்ததனால்
வாக்காக இல்லை. மெதுவாக அவளைப் புரட்டி மலர்த்திப் படுக்க வைத்தார்.
மறுபடியும் சுக்குப் புகையைப் பிரயோகித்தார்.
இரண்டு முறை ஊதியதும்
செல்லம்மாள், புகையைத் தவிர்க்கச் சிறிது தலையை அசைக்க ஆரம்பித்தாள்.
உடலையே அதிர வைக்கும் ஒரு பெரிய தும்மல். மறுபடியும் மயக்கம். மறுபடியும்
புகையை ஊத, முனகி, சிறு குழந்தை மாதிரி அழுதுகொண்டே, "தண்ணி..." என்று
கேட்டாள் செல்லம்மாள்.
"இந்தா, கொஞ்சம் வாயை இப்படித் திறந்துக்கோ"
என்று சிறு தம்ளரில் வெந்நீரை எடுத்து வாயை நனைக்க முயன்றார். அதற்குள்
மறுபடியும் பல் கிட்டிவிட்டது; மயக்கம்.
பிரமநாயகம் பிள்ளை, தாம்
அநுபவபூர்வமாகக் கண்ட சிகிச்சையை மீண்டும் பிரயோகித்தார்.
செல்லம்மாள்
சிணுங்கிக்கொண்டே ஏறிட்டு விழித்தாள். எங்கிருக்கிறோம் என்பது அவளுக்குப்
புரியாததுபோல அவள் பார்வை கேள்விகளைச் சொரிந்தது.
"நீங்க எப்ப
வந்திய? அம்மெயெ எங்கே? உங்களுக்காகச் சமைச்சு வச்சிக்கிட்டு எத்தனை
நேரமாக் காத்துக்கிட்டு இருப்பா?" என்றாள்.
பிரமநாயகம் பிள்ளை
இம்மாதிரியான கேள்விக்குப் பதில் சொல்லி, இதமாக, புரண்டு கிடந்த
பிரக்ஞையைத் தெளிவிப்பதில் நிபுணர். கேள்விகளுக்குச் சரியான பதில் சொல்ல
வேண்டும் என்பதில்லை; கேட்டதற்கு உரிய பதில் சொன்னால் போதும்.
திடீரென்று
செல்லம்மாள் அவரது கையை எட்டிப் பிடித்துக் கொண்டு, "அம்மா, அம்மா,
ஊருக்குப் போயிடுவோம். அந்தத் துரோகி வந்தா புடிச்சுக் கட்டிப் போட்டு
விடுவான்... துரோகி! துரோகி..." என்று உச்ச ஸ்தாயியில் கத்திக் கொண்டு
போனாள். குரல் கிரீச்சிட்டது. பிரமநாயகம் பிள்ளை இடது கையால் ஒரு துணியைக்
குளிர்ந்த ஜலத்தில் நனைத்து நெற்றியில் இட்டார்.
செல்லம்மாள்
மறுபடியும் பிதற்ற ஆரம்பித்தாள். எதிரிலிருப்பது யார் என்பது அவளுக்குப்
புலப்படவில்லை. "அம்மா, அம்மா... நீ எப்போ வந்தே?... தந்தி
கொடுத்தாங்களா...?" என்றாள்.
"ஆமாம். இப்பந்தான் வந்தேன். தந்தி
வந்தது. உடம்புக்கு எப்படி இருக்கிறது?" என்று பிரமநாயகம் பிள்ளை தாயாக
நடித்தார். செல்லம்மாளின் தாய் இறந்து ஐந்து வருஷங்கள் ஆகின்றன. இவளுக்கு
இம்மாதிரிப் பிதற்றல் வரும்போதெல்லாம் தாய் உயிருடன் இருப்பதாக ஒரு பிரமை
தொடர்ந்து ஏற்படும்.
"அம்மா, எனக்குக் கொஞ்சம் தண்ணி தா ... இவுங்க
இப்படித்தாம்மா... என்னைப் போட்டுட்டுப் போட்டுட்டுக் கடைக்குப்
போயிடுதாக... எப்ப ஊருக்குப் போகலாம்?... யாரு எங்காலையும் கையையும்
கட்டிப் போட்டுப் போட்டா?... இனிமே நான் பொடவெயே கேக்கலே... என்னைக்
கட்டிப் போடாதிய... மெதுவா நகந்து நகந்தே ஊருக்குப் போயிடுதேன். ஐயோ!
என்னெவிட்டிடுங் கன்னா! நான் உங்களை என்ன செஞ்சேன்?... கொஞ்சம் அவுத்துவிட
மாட்டியளா?... நான் எங்கம்மையைப் பாத்துப்போட்டு வந்திடுதேன்... அப்புறம்
என்னைக் கட்டிப் போட்டுக்கிடுங்க."
மறுபடியும் செல்லம்மாளுக்கு
நினைவு தப்பியது.
வைத்தியரைப் போய் அழைத்து வரலாமா என்று
நினைத்தார் பிரமநாயகம் பிள்ளை. 'இவளை இப்படியே தனியாக விட்டுவிட்டு
எப்படிப் போவது? கொஞ்ச தூரமா?'
மறுபடியும் சுக்குப் பிரயோகம்
செய்தார்.
நாடி மெதுவாக ஓடிக்கொண்டிருந்தது.
செல்லம்மாள்
செத்துப் போவாளோ என்ற பயம் பிரமநாயகம் பிள்ளையின் மனசில் லேசாக ஊசலாடியது.
அந்தப் பயத்திலே மன உளைச்சலோ சொல்லை மீறும் துக்கத்தின் வலியோ
இல்லை. வியாதியஸ்தனின் நாக்கு உணரும் ஒரு கைப்பும், அதற்குச் சற்று ஆழமாக
ஒரு நிம்மதியும் இருந்தன. எவ்வளவு கஷ்டப்பட்டும் என்ன பலன் என்ற ஒரு
மலைப்பு.
செல்லம்மாள் சிணுங்கிக் கொண்டே ஒரு புறமாகச் சரிந்து
படுத்தாள்.
என்ன சொல்லுகிறாள் என்பது பிடிபடாமல், காலுக்கு
ஒற்றடமிட்டுச் சூடு உண்டாக்கிக் கொண்டிருந்த பிரமநாயகம் பிள்ளை, "என்ன
வேண்டும்?" என்று கேட்டுக்கொண்டு அவளது தலைப் புறமாகத் திரும்புமுன்,
சுவாசம் சரியாக ஓட ஆரம்பித்தது. செல்லம்மாள் மயக்கத்திலிருந்து விடுபட்டுத்
தூங்க ஆரம்பித்தாள். முகத்தில் வெறிச்சோடிக்கிடந்த நோய்க் களை மங்கி
அகன்றது.
பத்து நிமிஷம் கழியவில்லை; செல்லம்மாள் விழித்துக்
கொண்டாள். மேலெல்லாம் ஏன் நனைந்திருக்கிறது என்று தடவிப் பார்த்துக் கொண்டு
சிதறிக் கிடந்த ஞாபகத்தைக் கோவை செய்ய முயன்றாள்.
"தலையை
வலிக்கிறது" என்றாள் சிணுங்கிக் கொண்டே.
"மேலெல்லாம் பூட்டுப்
பூட்டாக வலிக்குது" என்று சொல்லிவிட்டுக் கண்களை மெதுவாக மூடினாள்.
"மனசை
அலட்டிக் கொள்ளாமல் நிம்மதியாகத் தூங்கு; காலையில் சரியாகப் போய்விடும்"
என்றார்.
"உம்" என்று கொண்டு கண்களை மூடியவள், "நாக்கை வறட்டுது;
தண்ணி" என்றாள், எழுந்து உட்கார்ந்து கொண்டு.
"ஏந்திரியாதே;
விளப்போறே" என்று கொண்டே முதுகைத் தாங்கியபடி வெந்நீரை ஒரு தம்ளரில்
கொடுத்தார். அதைத் தொட்டுப் பார்த்துவிட்டு, "அது வாண்டாம். பச்சைத் தண்ணி
கொடுங்க. நாக்கை வறட்டுது" என்றாள்.
"பச்சைத் தண்ணி
குடிக்கப்படாது; வெந்நிதான் உடம்புக்கு நல்லது" என்று சொல்லிப் பார்த்தார்;
தர்க்கம் பண்ணி அவளை அலட்டுவதைவிடக் குளிர்ந்த ஜலத்தைக் கொடுத்துவிடுவதே
நல்லது என்று ஊற்றிக் கொடுத்துவிட்டு மெதுவாகப் படுக்க வைத்தார்.
கண்ணை
மூடிச் சில விநாடிகள் கழித்ததும், "உங்களைத்தானே; எப்ப வந்திய?
சாப்பிட்டியளா?" என்றாள்.
"நான் சாப்பிட்டாச்சு. நீ படுத்துத்
தூங்கு; சும்மா ஒண்ணை மாத்தி ஒண்ணை நெனச்சுக்காதே" என்றார் பிரமநாயகம்
பிள்ளை. பதில் அவள் செவியில் விழுந்தது; பிரக்ஞையில் பதியவில்லை. செல்லம்
தூங்கிவிட்டாள்.
பிரமநாயகம் பிள்ளை கோரைப் பாயை எடுத்து வாசல்
கதவுப் புறமாக விரித்துக் கொண்டு, "முருகா" என்று கொட்டாவியுடன்
உட்காரும்பொழுது, ஒரு கோழி கூவியது. உலகம் துயிலகன்றது.
பிள்ளையவர்களுக்குச் சற்று உடம்பைச் சரிக்க இடம் கொடுக்கவில்லை.
முழங்காலைக் கட்டிக்கொண்டே உட்கார்ந்து கொண்டிருந்தார். மனம் மட்டும்
தொடர்பற்ற பல பழைய நிகழ்ச்சிகளைத் தொட்டுத் தொட்டுத் தாவிக் கொண்டிருந்தது.
பொழுதும் புலர ஆரம்பித்தது. கறிகாய் விற்பனைக்காகத் தலையில் சுமடு
எடுத்துச் செல்லும் பெண்கள், வர்த்தகத்தில் சற்றுச் செயலிருந்ததால் கை
வண்டியில் காய்கறி ஏற்றி நரவாகன சவாரி செய்யும் பெண்களின் குரல்
பிள்ளையவர்களை நினைவுக் கோயிலிலிருந்து விரட்டியது. உள்ளே சென்று குனிந்து
கவனித்தார். கொடுங்கையாக மடித்து, கன்னத்துக்கு அண்டை கொடுத்து, உதடுகள்
ஒருபுறம் சுழிக்க, அவள் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்.
எழுந்திருந்ததும்
வயிற்றிற்கு ஏதாவது சுடச்சுடக் கொடுத்தால் நலம் என்று நினைத்தவராய்
உள்கட்டுக்குச் சென்று அடுப்பைப் பற்ற வைத்துவிட்டு, புழைக்கடைப்புறம்
சென்றார்.
அவர் திரும்பிவந்து "முருகா" என்று விபூதியை நெற்றியில்
இட்டுக்கொண்டிருக்கையில், செல்லம்மாள் விழித்து எழுந்திருந்து படுக்கையில்
உட்கார்ந்து தலையை உதறிக் கோதிக் கட்டிக் கொண்டு சிணுங்கிய வண்ணம் உள்ளே
ஏறிட்டுப் பார்த்தாள்.
"இப்பொ எப்படி இருக்கு? நல்லாத் தூங்கினெ
போல இருக்கே" என்றார் பிரமநாயகம் பிள்ளை.
"மேலெல்லாம் அடிச்சுப்
போட்டாப்பலே பெலகீனமா இருக்கு. பசிக்கிது... சுடச்சுட ஏதாவது இருந்தாத்
தேவலை" என்று செல்லம்மாள், தலையைச் சற்று இறக்கி, உச்சியைச் சொறிந்தபடி,
புருவத்தை நெறித்துக் கொண்டு சொன்னாள்.
"அடுப்பிலே கருப்பட்டிக்
காப்பிப் போட்டிருக்கேன்; பல்லைத் தேச்சுப்பிட்டுச் சாப்பிட்டாப் போகுது;
பல் தேய்க்க வெந்நி எடுத்துத் தரட்டுமா?" என்றார்.
"வெந்நியெ
எடுத்துப் பொறவாசல்லெ வச்சிருங்க. நான் போய்த் தேச்சுக்கிடுதேன்" என்றாள்
செல்லம்மாள்.
"நல்ல கதையாத்தான் இருக்கு; நேத்துக் கெடந்த கெடப்பெ
மறந்து போனியா? நடமாடப் படாது."
"ஒங்களுக்குத்தான் என்ன, வரவர
அசிங்கம் கிசிங்கம் இல்லாமெப்போகுது" என்று சொல்லிக் கொண்டே சுருட்டி
வாரிக் கட்டிக் கொண்டு எழுந்தாள். கால் தள்ளாடியது.
மூசுமூசென்று
இரைத்துக் கொண்டு சுவரில் கைகளை ஊன்றிக் கொண்டாள். பிரமநாயகம் பிள்ளை
சட்டென்று பாய்ந்து அவளது தோள்பட்டையைப் பிடித்துக் கொண்டார்.
"பைய
என்னைப் பொறவாசலுக்குக் கொண்டு விட்டிருங்க. பல்லைத் தேக்கட்டும். நிக்க
முடியல்லே" என்றாள்.
அவளுடைய விதண்டாவாதத்துக்குப் போக்குக்
கொடுத்து, கைத்தாங்கலாகப் புழைக்கடையில் கொண்டுபோய் அவளை உட்கார வைத்தார்.
பல்லைத் தேய்த்துவிட்டு, "அப்பாடா" "அம்மாடா" என்ற
அங்கலாய்ப்புகளுடன் செல்லம்மாள் மீண்டும் படுக்கையில் வந்து படுப்பதற்குள்
உடல் தளர்ந்துவிட்டது. படுத்தவுடன் தளர்ச்சியாகக் கண்களை மூடினாள்.
பிள்ளையவர்கள்
காப்பி எடுத்துவந்து ஆற்றிக்கொண்டு, "பதமாக இருக்கு, குடி;
ஆறிப்போச்சுன்னு சொல்லாதே" என்றார். அதற்கு அவளால் பதில் சொல்ல
முடியவில்லை. கையமர்த்தினாள். சில நிமிஷங்கள் கழித்து மெதுவாகக் கண்களைத்
திறந்தாள். சிரமத்துடன் கைகளை ஊன்றிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள்.
தம்ளரிலிருந்த காப்பியைத் தொட்டுப் பார்த்துவிட்டு, "சூடே இல்லையே!
அடுப்பிலே கங்கு கெடக்கா? கொஞ்சம் வச்சு எடுத்து வாருங்க" என்றாள்.
"அதெ
அப்பிடியே வச்சிறு; வேறெ சூடா இருக்கு; தாரேன்" என்று வேறு ஒரு
பாத்திரத்தில் இன்னும் கொஞ்சம் எடுத்துவந்து தந்தார்.
காப்பியை
எடுத்து நெஞ்சுக்கு இதமாக ஒற்றடமிட்டுக்கொண்டு, சாவகாசமாக ஒவ்வொரு மிடறாகக்
குடித்துக் கொண்டிருந்த செல்லம்மாள், "நீங்க என்ன சாப்பிட்டிய?" என்றாள்.
"பழையது இருந்தது. ஓர் உருண்டை சாப்பிட்டேன். நீ காப்பியைச்
சீக்கிரம் குடி. நேரமாகுது. வைத்தியனைப் போய்ப் பார்த்துக்கிட்டு வாரேன்"
என்றார்.
"வைத்தியனும் வேண்டாம்; ஒண்ணும் வேண்டாம். எனக்கு என்ன
இப்ப? வீணாக் காசெக் கரியாக்காதிக. புளிப்பா எதுவும் தின்னாத் தேவலை.
புளிச்ச தோசைமாவு இருந்துதே, அதெ என்ன பண்ணிய?" என்றாள்.
"புளிப்பாவது
கத்திரிக்காயாவது? காப்பியைக் குடிச்சுப்பிட்டுப் படுத்திரு. நான்
வைத்தியனைக் கூட்டிக்கிட்டு வாரேன்; நேத்துக் கெடந்த கெடப்பு மறந்து
போச்சுப் போலே!" என்று எழுந்தார்.
"அந்தக் காப்பியை ஏன்
வீணாக்கிறிய? நீங்க சாப்பிடுங்களேன்" என்றாள் செல்லம்மாள்.
வைத்தியனைத்
தேடிச் சென்ற பிரமநாயகம் பிள்ளை, பஞ்சத்தில் அடிபட்டவன் போன்ற சித்த
வைத்திய சிகாமணி ஒருவனைத் தேடிப் பிடித்து அழைத்துக் கொண்டு வந்தார்.
இருவரும் உள்ளே நுழைந்தபோது படுக்கையில் செல்லம்மாளைக் காணவில்லை.
அடுப்பங்கரையில்
'சுர்' 'சுர்' என்று தோசை சுடும் சப்தம் கேட்டது. வைத்தியரைப் பாயை
விரித்து உட்காரவைத்துவிட்டு, "என்னத்தைச் சொன்னாலும் காதுலே
ஏறமாட்டேன்கிறதே; இன்னம் என்ன சிறுபிள்ளையா?" என்று குரல் கொடுத்துக்
கொண்டு உள்ளே நுழைந்தார் பிள்ளை.
வேர்க்க விறுவிறுக்க, செல்லம்மாள்
தன் சக்திக்கு மீறிய காரியத்தில் ஈடுபட்டிருந்தாள். கை நடுக்கத்தால் தோசை
மாவு சிந்திக் கிடந்தது. தட்டத்தில் ஒரு தோசை கரிந்து கிடந்தது. அடுத்தது
வாக்காக வரும் என்று எண்ணெய் மிளகாய்ப் பொடி முதலிய உபகரணங்களுடன் தோசைக்
கல்லைப் பார்த்துக் கொண்டிருந்தாள் செல்லம்மாள். அவரை ஏறிட்டுப் பார்த்துச்
சிரித்தாள்.
"போதும் போதும். சிரிக்காதே; வைத்தியர்
வந்திருக்கிறார். ஏந்திரி" என்று அவளைக் கையைப் பிடித்துத் தூக்கினார்.
"இதெக் கல்லை விட்டு எடுத்துப் போட்டு வருகிறேன்."
"நீ
ஏந்திரி" என்று சொல்லிக்கொண்டே வெந்து கொண்டிருந்த தோசையுடன் கல்லைச்
சட்டுவத்தால் ஏந்தி எடுத்து அகற்றினார்.
"நீங்க போங்க. நானே
வருதேன்" என்று குலைந்த உடையைச் சீர்திருத்திக்கொண்டு, தள்ளாடிப் பின்
தொடர்ந்து வந்து பாயில் உட்கார்ந்தாள்.
வைத்தியன் நாடியைப்
பரீட்சித்தான். நாக்கை நீட்டச் சொல்லிக் கவனித்தான்.
"அம்மா,
இப்படி இருக்கிறபோது நீங்க எழுந்திரிச்சு நடக்கவே கூடாது. உடம்பு இத்துப்
போச்சு. தெகன சக்தியே இல்லியே! இன்னும் மூணு நாளைக்கு வெறும் பால்
கஞ்சிதான் ஆகாரம். உடம்புக்கு வலு கொஞ்சம் வந்ததும் மருந்து கொடுக்கலாம்.
காப்பியைக் கொஞ்ச நாளைக்கி நிறுத்தி வையிங்க. காலையிலும் ராத்திரியிலும்
பால். மத்தியான்னமாக் கஞ்சி. படுக்கையெ விட்டு எந்திரிக்கவே கூடாது. ஐயா,
மயக்கம் வந்தா இந்தச் செந்தூரத்தைத் தேனில் குழப்பி நாக்கிலெ தடவுங்க.
இந்தத் தைலத்தை மூக்குத் தண்டிலும் பொட்டிலும் தடவுங்க; நான் மூணு நாள்
கழிஞ்சு வருகிறேன்" என்று மருந்துக்குக் கையில் ஒரு ரூபாய் வாங்கிக் கொண்டு
வெளியேறினான்.
"பாத்துப் பாத்து, நல்ல வைத்தியனைத் தேடிப்
புடிச்சாந்திய; பால் கஞ்சிச் சாப்பிடணுமாம்; ஆய்! நான் என்ன காச்சக்காரியா?
ஒடம்பிலே பெலகீனம் இருக்கிறதெக் கண்டுபிடிக்க வைத்தியனா வரணும்? மனுசான்னா
மயக்கம் வாறதில்லையா! வந்தா, வந்த வளியாப் போகுது" என்றாள் செல்லம்மாள்.
இந்தச் சமயத்தில் வெளியில், "ஐயா, ஐயா!" என்று ஒரு குரல் கேட்டது.
"என்ன, முனுசாமியா! உள்ளே வா. ஏன் வரலேன்னு கேட்டு விட்டாகளாக்கும்.
வீட்டிலே அம்மாவுக்கு உடம்பு குணமில்லே; நேத்துத் தப்பினது மறு பிழைப்பு;
நாளைக்கு முடிஞ்சா வருகிறேன் என்று சொல்லு. முனிசாமி, நீ எனக்கு ஒரு
காரியம் செய்வாயா? அந்த எதிர்ச் சரகத்திலே ஒரு மாட்டுத் தொழுவம் இருக்குது
பாரு; அங்கே பால்கார நாயுடு இருப்பார். நான் கொஞ்சம் கூப்பிட்டேன் என்று
கூட்டிக்கொண்டு வா" என்று அனுப்பினார்.
"என் பேரிலே பளியெப்
போட்டுக் கடைக்குப் போகாமே இருக்க வேண்டாம். போய்ச் சம்பளப் பணத்தெ
வாங்கிக்கிட்டு வாருங்க" என்றாள் செல்லம்மாள்.
"அடெடே! மறந்தே
போயிட்டேன். நேத்துப் பொடவை எடுத்தாந்து வச்சேன்; உனக்கு எது
புடிச்சிருக்கு பாரு. வேண்டாததெக் குடுத்து அனுப்பிடலாம்" என்று மூட்டையை
எடுத்து வந்து வைத்தார் பிரமநாயகம் பிள்ளை.
"விடியன்னையே
மூட்டையைப் பாத்தேன்; கேக்கணும்னு நெனச்சேன்; மறந்தே போச்சு" என்று
கூறிக்கொண்டே மூட்டையிலிருந்த மூன்று புடைவைகளையும் புரட்டிப் புரட்டிப்
பார்த்தாள்.
"எனக்கு இந்தப் பச்சைதான் புடிச்சிருக்கு; என்ன
வெலையாம்?" என்றாள்.
"அதெப்பத்தி ஒனக்கென்ன? புடிச்சதெ
எடுத்துக்கோ" என்று பச்சைப் புடைவையை எடுத்து அலமாரியில் வைத்துவிட்டு,
மற்ற இரண்டையும் மூட்டையாகக் கட்டிச் சுவரோத்தில் வைத்தார்.
"கண்டமானிக்குக்
காசெச் செலவு பண்ணிப்புட்டு, பின்னாலே கண்ணைத் தள்ளிக்கிட்டு நிக்காதிய.
நான் இப்பவே சொல்லிப் பிட்டேன்" என்று கண்டிப்புப் பண்ணினாள் செல்லம்மாள்.
வந்த பால்கார நாயுடுவிடம் மூன்று தினங்களுக்குச் சுத்தமான
பசும்பாலுக்கு ஏற்பாடு செய்துவிட்டு, கடை முதலாளியிடம் தாம் கேட்டதாக ரூ.15
வாங்கி வரும்படியும், சேலை மூட்டையைச் சேர்ப்பித்து விடும்படியும்
முனிசாமியிடம் சொல்லியனுப்பினார்.
4
அன்று பாயில் தலை
சாய்க்க ஆரம்பித்ததிலிருந்து செல்லம்மாளுக்கு உடம்பு மோசமாகிக் கொண்டே
போயிற்று. க்ஷீணம் அதிகமாயிற்று. மத்தியான்னம் அவளைக் கவனித்துச் சுச்ருஷை
செய்ததன் பயனாக, அடுப்பில் கிடந்த பால் கஞ்சி, பசை மாதிரிக் குளு குளு
என்றாகிவிட, பிரமநாயகம் பிள்ளை அதில் வெந்நீரை விட்டுக் கலக்கி அவளுக்குக்
கொடுக்க முயன்றார். பலவீனத்தினால் அரோசிகம் அதிகமாகிவிடவே உடனே வாந்தி
எடுத்து விட்டது. ஆனால் குமட்டல் நிற்கவில்லை. செல்லம்மாள் நினைத்து
நினைத்து வாயிலெடுக்க ஆரம்பித்தாள். உடல் தளர்ச்சி மிகுந்துவிட, மறுபடியும்
பழைய கோளாறுகள் தலை தூக்க ஆரம்பித்தன.
அருகில் இருந்து கொண்டு
காலையும் கையையும் பிடித்துப் பிடித்துக் கை ஓய்ந்ததுதான் மிச்சம். பகல்
மூன்று மணிக்கெல்லாம் சோர்வு மேலீட்டால் செல்லம்மாள் மயங்கிக் கிடந்தாள்.
செத்துப் போய் விடுவோமோ என்ற பயம் அவளுக்கு ஏற்பட்டது. ஒவ்வொரு சமயங்களில்
மூக்கும் கையும் குரக்கு வலித்து இழுத்து வாங்க ஆரம்பித்தன.
"எனக்கு
என்னவோ ஒரு மாதிரியாக வருது, வேறொரு வைத்தியனைப் பார்த்தால் தேவலை"
என்றாள் செல்லம்மாள்.
"உடம்பு தளர்ந்திருப்பதால் இப்படி
இருக்கிறது. சொல்லுகிறபடி, ஆடாமெ அசங்காமெ படுத்துக் கிடந்தாத்தானே! பயப்பட
வேண்டாம்; எல்லாம் சரியாகப் போயிடும்" என்றார் பிரமநாயகம் பிள்ளை.
அவருக்கும்
உள்ளுக்குள் சற்று விபரீதமாகப் பட்டது. "கொஞ்ச நேரத்தில் பால்காரன்
வருவான். பாலை வாங்கி வைத்துவிட்டு டாக்டரைக் கூப்பிட்டுக்கொண்டு
வருகிறேன். குன்னத்தூர் அத்தையெ வரச்சொல்லிக் காயிதம் எழுதட்டா?" என்றார்.
"எளுதி என்னத்துக்கு? அவளாலே இந்தத் தூரா தொலைக்குத் தன்னந்தனியா
வந்துக்கிட முடியுமா? கொஞ்சம் கருப்பட்டிக் காப்பி சுடச்சுடப் போட்டுத்
தாரியளா? இந்த வாந்தியாவது செத்தெ நிக்கும்" என்று சொல்லிவிட்டுச் சற்று
கண்ணை மூடினாள்.
"இந்த மாங்கொட்டைத் துண்டெக் கொஞ்சம் வாயிலே
ஒதுக்கிக்கோ; நான் காப்பி போட்டுத் தாரேன்" என்று அடுப்பங்கரைக்குச்
சென்றார்.
அவர் அடுப்பைப் பிரித்துவிட்டு அனலில் சற்று வெந்நீர்
இடலாம் என்று தவலைத் தண்ணீரை அடுப்பேற்றும்போது பால்காரனும் வந்தான்.
கருப்பட்டிக்
காப்பியைச் செல்லம்மாள் அருகில் வைத்துவிட்டுப் பாலைக் காய்ச்சி ஒரு
பாத்திரத்தில் ஊற்றி வைத்துவிட்டு, "நான் போய் டாக்டரைக் கூட்டிக்கொண்டு
வருகிறேன்" என்று வெளியே புறப்பட்டார்.
"சுருங்க வந்து சேருங்க;
எனக்கு ஒருபடியா வருது" என்று மூடிய கண்களைத் திறக்காதபடி சொன்னாள்
செல்லம்மாள். அவ்வளவு தளர்ச்சி. வெளிக்கதவு கிறீச்சிட்டு, பிரமநாயகம்
பிள்ளை புறப்பட்டுவிட்டதை அறிவித்தது.
அவர் திரும்பி வரும்போது
பொழுது கருக்கிவிட்டது. எவரோ ஓர் ஒன்றரையணா எல்.எம்.பி.யின் வீட்டு வாசலில்
அவரது வருகைக்காகக் காத்துக் காத்து நின்றார். அவரும் வருவதாகக்
காணவில்லை. கவலை, கற்பனையால் பல மடங்கு பெருகித் தோன்ற, நிலைமையும்
விலாசமும் தெரிவித்து, உடனே வரும்படி கெஞ்சிக் கடுதாசி எழுதிவைத்துவிட்டு
வீட்டுக்குத் திரும்பி வந்தார்.
கதவைத் திறந்துகொண்டு உள்ளே
நுழைந்ததும் அவர் கண்ட காட்சி திடுக்கிட வைத்தது. செல்லம்மாள் முற்றத்தில்
மயங்கிக் கிடந்தாள். சற்று முன் குடித்த காப்பி வாந்தியெடுத்துச் சிதறிக்
கிடந்தது.
அவசர அவசரமாக விளக்கை ஏற்றினார். வெந்நீரை எடுத்து வந்து
அவள் மேல் சிதறிக் கிடந்த குமட்டல்களைக் கழுவி, அவளைத் தூக்கிவந்து
படுக்கையில் கிடத்தினார்.
வைத்தியன் கொடுத்துவிட்டுச் சென்ற
செந்தூரத்தைத் தேனில் குழப்பி நாக்கில் தடவினார். மூக்கிலும், கால்
கைகளிலும் தைலத்தைத் தடவினார். பிரக்ஞை வரவில்லை. மூச்சு
இழையோடிக்கொண்டிருந்தது. மீண்டும் தைலத்தைச் சற்றுத் தாராளமாகவிட்டு உடலில்
தேய்த்து மயக்கம் தெளிவிக்க முயன்றுகொண்டிருந்தார்.
அச்சமயம்
வெளியே ஒரு ரிக்ஷா வந்து நின்றது. "ஸார்! உள்ளே யார் இருக்கிறது?" என்று
குரல் கொடுத்துக் கொண்டே கைப்பெட்டியும் வறுமையுமாக டாக்டர் உள்ளே வந்தார்.
"நல்ல சமயத்தில் வந்தீர்களையா!" என்று சொல்லிக்கொண்டே அவரை
வரவேற்றார் பிரமநாயகம் பிள்ளை.
"இப்போ என்ன?" என்றபடியே அருகில்
வந்து உட்கார்ந்து கையைப் பிடித்துப் பார்த்தார். வாயைத் திறக்க முயன்றார்.
பல் கிட்டிவிட்டிருந்தது.
"ஒரு நெருப்புப் பெட்டி இருந்தாக்
கொண்டு வாருங்க; ஊசி குத்தணும்" என்றார்.
பிரமநாயகம் பிள்ளை
அருகில் மாடத்தில் இருக்கும் நெருப்புப் பெட்டியை மறந்துவிட்டு
அடுப்பங்கரைக்கு ஓடினார். அவரது வருகைக்காகக் காத்திருப்பதற்காக
மோட்டுவளையைப் பார்க்க முயன்ற டாக்டரின் கண்களுக்கு மாடத்து நெருப்புப்
பெட்டி தெரிந்தது. எடுத்து 'ஸ்பிரிட்' விளக்கை ஏற்றி மருந்து குத்தும்
ஊசியை நெருப்பில் சுடவைத்துச் சுத்தப்படுத்தினார். கையில் நெருப்புப்
பெட்டியுடன் அசடு வழிய வேர்வை வழிய நின்று கொண்டிருந்த பிரமநாயகம்
பிள்ளையிடம், இடது கையைச் சற்று விளக்கருகில் தூக்கிப் பிடித்துக்
கொள்ளும்படி சொல்லிவிட்டு, மருந்தைக் குத்தி ஏற்றினார். இரண்டொரு விநாடிகள்
இருவரும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
செல்லம்மாள்
சிணுங்க ஆரம்பித்தாள்.
டாக்டர் மெதுவாகத் தம்முடைய கருவிகளை
எடுத்துப் பெட்டியில் வைத்தார். "கொஞ்சம் சீயக்காய்ப் பொடி இருந்தால்
கொடுங்கோ" என்று கேட்டார். பிரமநாயகம் பிள்ளை வேட்டி துவைக்கும் வெள்ளைச்
சவுக்காரக் கட்டியைக் கொடுக்க, மௌனமாகக் கை கழுவிவிட்டு, "தூங்குகிறாப்
போலிருக்கிறது. எழுப்ப வேண்டாம். எழுந்தால் பால் மட்டும் கொடுங்கள்;
இம்மாதிரிக் கேஸ்கள் வீட்டில் வைத்திருப்பது சவுகரியக் குறைச்சல் ஐயா;
ஆஸ்பத்திரிதான் நல்லது" என்று கூறிக்கொண்டே பெட்டியைத் தூக்கிக் கொண்டு
எழுந்து நடந்தார்.
முன் தொடர்ந்த பிள்ளை, "எப்படி இருக்கிறது?"
என்று விநயமாகக் கேட்க, "இப்பொழுது ஒன்றும் சொல்லுவதற்கில்லை. எதற்கும்
நாளை காலை வந்து என்னிடம் எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்; பிறகு
பார்ப்போம்; இந்த ரிக்ஷாக்காரனுக்கு ஒரு நாலணா கொடுங்கள்" என்று சொல்லிக்
கொண்டே வண்டியில் ஏறிக்கொண்டார். மடியிலிருந்த சில்லறை மனித மாட்டின்
மடிக்கு மாறியது. ரிக்ஷா செல்லுவதைப் பார்த்து நின்றுவிட்டு உள்ளே
திரும்பினார்.
செல்லம்மாள் தூங்கிக்கொண்டிருந்தாள்.
பிரமநாயகம்
பிள்ளை ஓசைப்படாமல் அருகில் வந்து உட்கார்ந்து அவளையே பார்த்துக்
கொண்டிருந்தார். தொட்டால் விழித்து விடுவாளோ என்ற அச்சம்.
அவளுடைய
நெஞ்சின் மேல் ஓர் ஈ வந்து உட்கார்ந்தது. மென்மையான துணியின் மேல் அதற்கு
உட்கார்ந்திருக்கப் பிரியம் இல்லை. மறுபடியும் பறந்து வட்டமிட்டு, அவளது
உள்ளங்கையில் உட்கார்ந்தது. மறுபடியும் பறந்து, எங்கு அமர்வது என்று
பிடிபடாதது போல வட்டமிட்டுப் பறந்தது. கடைசியாக அவளுடைய உதட்டின் மேல்
உட்கார்ந்தது.
"தூ தூ" என்று துப்பிக்கொண்டு உதட்டைப் புறங்கையால்
தேய்த்தபடி செல்லம்மாள் விழித்துக் கொண்டாள்.
சற்று நேரம் அவரையே
உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"உங்களுக்குக் கொஞ்சங்கூட
இரக்கமே இல்லை. என்னை இப்படிப் போட்டுட்டுப் போயிட்டியளே" என்று கடிந்து
கொண்டாள்.
"நான் இல்லாமலிருக்கப்போ நீ ஏந்திரிச்சு நடமாடலாமா?"
என்று சொல்லிக்கொண்டே அவள் கன்னத்தைத் தடவிக்கொடுத்தார்.
"நான்
செத்துத்தான் போவேன் போலிருக்கு; வீணாத் தடபுடல் பண்ணாதிய" என்று
சொல்லிவிட்டுக் கண்ணை மூடினாள்.
"உடம்பில் தளர்ச்சியாக
இருக்கிறதால் தான் அப்படித் தோணுது; காலைப் பிடிக்கட்டா?" என்று மெதுவாகத்
தடவிக்கொடுத்தார்.
"அப்பாடா! மேலெல்லாம் வலிக்குது. உள்ளுக்குள்ளே
ஜில்லுன்னு வருது. என் கையைப் புடிச்சிக்கிட்டுப் பக்கத்திலேயே இருங்க"
என்று அவர் கையைச் செல்லம்மாள் தன் இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டு
கண்களை மூடிக் கொண்டாள்.
சற்று நேரம் பேசாமல் இருந்துவிட்டு,
"அம்மையெப் பாக்கணும் போல இருக்கு" என்று கண்களைத் திறக்காமலே சொன்னாள்.
"நாளைக்கு உடனே வரும்படி தந்தி கொடுத்தாப் போகுது; அதுக்கென்ன
பிரமாதம்?" என்றார் பிள்ளை. அவருக்குப் பயம் தட்டியது. பிரக்ஞை தடம்
புரண்டுவிட்டதா?
"ஊம், துட்டெ வீணாக்க வேண்டாம். கடுதாசி போட்டால்
போதும். அவ எங்கெ வரப்போறா? நாளைக்காவது நீங்க கடைக்குப் போங்க" என்றாள்
செல்லம்மாள்.
"நீ கொஞ்சம் மனசெ அலட்டிக்காமே படுத்துக்கோ" என்று
சொல்லிக்கொண்டே அவள் கைப்பிடிப்பிலிருந்து வலது கையை விடுவித்துக்கொண்டு
நெற்றியைத் தடவிக் கொடுத்தார்.
"வலிக்குது. தாகமாக இருக்கு,
கொஞ்சம் வெந்நி" என்றாள்.
"வெந்நி வயத்தைப் பெரட்டும்; இப்பந்தானே
வாந்தியெடுத்தது?" என்றார். மெதுவாக அவள் கைகள் இரண்டையும் பிடித்துக்
கொண்டு முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். செல்லம்மாளுக்குக்
காலையிலிருந்த முகப்பொலிவு மங்கிவிட்டது. உதடுகள் சற்று நீலம்
பாரித்துவிட்டன. அடிக்கடி வறட்சியைத் தவிர்க்க உதட்டை நக்கிக் கொண்டாள்.
"நெஞ்சில் என்னமாவோ படபடவென்று அடிக்குது" என்றாள் மறுபடியும்.
"எல்லாம்
தளர்ச்சியின் கோளாறுதான்; பயப்படாதே" என்று நெஞ்சைத் தடவிக்கொடுத்தார்.
ஒரு விநாடி கழித்து, "பசிக்குது; பாலைத் தாருங்க. நான் தூங்குதேன்"
என்றாள் செல்லம்மாள்.
"இதோ எடுத்து வாரேன்" என்று உள்ளே ஓடிச்
சென்றார் பிரமநாயகம் பிள்ளை. பால் திறைந்து போயிருந்தது. அவருக்குத்
திக்கென்றது. மாடத்திலே உலர்ந்துபோன எலுமிச்சம்பழம் இருந்தது. அதை எடுத்து
வெந்நீரில் பிழிந்து சர்க்கரையிட்டு அவளருகில் கொண்டுவந்து வைத்துக் கொண்டு
உட்கார்ந்தார். சற்று நேரம் சூடான பானகத்தைக் குடிக்கும் பக்குவத்துக்கு
ஆற்றினார்.
"செல்லம்மா!" என்று மெதுவாகக் கூப்பிட்டார்.
பதில்
இல்லை. மூச்சு நிதானமாக வந்து கொண்டிருந்தது.
"செல்லம்மா, பால்
தெரைஞ்சு போச்சு; பானகம் தாரேன். குடிச்சுப்புட்டுத் தூங்கு" என்றார்.
"ஆகட்டும்"
என்பது போல அவள் மெதுவாக அசைத்தாள்.
சிறு தம்ளரில் ஊற்றி மெதுவாக
வாயில் ஊற்றினார். இரண்டு மடக்குக் குடித்துவிட்டுத் தலையை
அசைத்துவிட்டாள்.
"ஏன், வெளக்கை..." - விக்கலுடன் உடல்
குலுங்கியது. நெஞ்சு விம்மி அமர்ந்தது. காலும் கையும் வெட்டி வாங்கின.
அதிர்ச்சி
ஓய்ந்ததும் பிள்ளை பானகத்தைக் கொடுத்தார். அது இருபுறமும் வழிந்துவிட்டது.
பாத்திரத்தை மெதுவாக வைத்துவிட்டுத் தொட்டுப் பார்த்தார்.
உடல்தான்
இருந்தது.
வைத்த கையை மாற்றாமல் பூதாகாரமாகச் சுவரில் விழுந்த
தமது சாயையைப் பார்த்தார். அதன் கைகள் செல்லம்மாள் நெஞ்சைத் தோண்டி உயிரைப்
பிடுங்குவனபோல் இருந்தன.
சித்த வைத்தியன் கொடுத்த மருந்தில்
மிஞ்சிக் கிடந்தவற்றை உடம்பில் பிரயோகித்துப் பார்த்தார். "இனிமேல் ஆவது
ஒன்றுமில்லை" என்பது தெரிந்தும் தவிட்டு ஒற்றடம் கொடுத்துப் பார்த்தார்.
அவரது நெற்றியின் வியர்வை அந்த உடலின் கண் இமையில் சொட்டியது.
அரைக்கண்
போட்டிருந்த அதை நன்றாக மூடினார். குரக்குவலி இழுத்த காலை நிமிர்த்திக்
கிடத்தினார். கைகளை நெஞ்சில் மடித்து வைத்தார்.
அருகில்
உட்கார்ந்திருந்தவர் பிரக்ஞையில் தளதளவென்று கொதிக்கும் வெந்நீரின்
அழைப்புக் கேட்டது.
உள்ளே சென்று செல்லம்மாள் எப்போதும் குளிக்கும்
பருவத்துக்குப் பக்குவப்படுத்தினார்.
உடலை எடுத்து வந்தார்.
"செல்லம்மாள் இவ்வளவு கனமில்லையே; என்னமாக் கனக்கிறது!" என்று
எண்ணமிட்டார்.
தலை வசப்படாமல் சரிந்து சரிந்து விழுந்தது.
கீழே
உட்காரவைத்து, நின்று தமது முழங்காலில் சாய்த்து வைத்துத் தவலைத் தண்ணீர்
முழுவதையும் விட்டுக் குளிப்பாட்டினார். மஞ்சள் இருக்குமிடம் தெரியாததனால்
அதற்கு வசதி இல்லாமற் போய்விட்டது. மேல்துணியை வைத்து உடலைத் துவட்டினார்.
மீண்டும் எடுத்துக் கொண்டு வந்து படுக்கையில் கிடத்தினார்.
அவளுக்கு என வாங்கிய பச்சைப் புடவையை அந்த உடலில் சுற்றிக் கட்டப்பட்டது.
நெற்றியில் விபூதியும் குங்குமமும் இட்டார். தலைமாட்டினருகில்
குத்துவிளக்கை ஏற்றிவைத்தார். எப்பொழுதோ ஒரு சரஸ்வதி பூஜைக்கு வாங்கின
சாம்பிராணி ஞாபகம் வந்தது. கனல் எடுத்து வந்து வைத்துப் பொடியைத் தூவினார்.
நிறை நாழி வைத்தார்.
செல்லம்மாள் உடம்புக்குச் செய்யவேண்டிய
பவித்திரமான பணிவிடைகளைச் செய்து முடித்துவிட்டு அதையே பார்த்து நின்றார்.
கூடத்தில் மூச்சுத் திணறுவது போல் இருந்தது. வெளிவாசலுக்கு வந்து
தெருவில் இறங்கி நின்றார்.
ஊசிக் காற்று அவர் உடம்பை வருடியது.
வானத்திலே தெறிகெட்டுச் சிதறிக் கிடந்த நட்சத்திரங்களில் திரிசங்குக்
கிரகமண்டலம் அவர் கண்ணில் பட்டது. அவருக்கு வான சாஸ்திரம் தெரியாது. சங்கு
மண்டலத்தின் கால், தூரத்தில் தெரிந்த கறுப்பு ஊசிக் கோபுரத்தில் மாட்டிக்
கொண்டு அஸ்தமிக்கவோ உதயமாகவோ முடியாமல் தவித்தது.
அருகில், "ஐயா!"
என்றான் முனிசாமி.
"முதலாளி குடுத்தாங்க" என்று நோட்டுகளை
நீட்டினான்; "அம்மாவுக்கு எப்படி இருக்கு?" என்றான்.
"அம்மா தவறிப்
போயிட்டாங்க. நீ இந்த நோட்டை வச்சுக்க; ஒரு தந்தி எளுதித் தாரேன். அதெக்
குடுத்துப்புட்டு, முதலாளி ஐயா வீட்டிலே சொல்லு. வரும்போது அம்பட்டனுக்கும்
சொல்லிவிட்டு வா" என்றார்.
நிதானமாகவே பேசினார்; குரலில் உளைச்சல்
தொனிக்கவில்லை.
பிரமித்துப்போன முனிசாமி தந்தி கொடுக்க ஓடினான்.
பிரமநாயகம் பிள்ளை உள்ளே திரும்பி வந்து உட்கார்ந்தார். கனலில்
மீண்டும் கொஞ்சம் சாம்பிராணியைத் தூவினார்.
அந்த ஈ மறுபடியும் அந்த
உடலின் முகத்தில் வட்டமிட்டு உட்கார்ந்தது.
பிரமநாயகம் பிள்ளை அதை
உட்காரவிடாமல் விரட்டுவதற்கு விசிறியால் மெதுவாக வீசிக்கொண்டே இருந்தார்.
அதிகாலையில், மனசில் வருத்தமில்லாமல், பிலாக்கணம் தொடுக்கும் ஒரு
பெண்ணின் அழுகையில் வெளிப்பட்ட வேஷத்தை மறைப்பதற்கு வெளியில் இரட்டைச்
சங்கு பிலாக்கணம் தொடுத்தது.
அன்று இரவு முழுவதும்
எனக்குத் தூக்கம் பிடிக்கவேயில்லை. காரணம் என்னவென்று சொல்ல முடியவில்லை.
மனசுக்குக் கஷ்டமும் இல்லை, அளவுக்கு மிஞ்சிய இன்பமும் இல்லை, இந்த
மாதிரித் தூக்கம் பிடிக்காமல் இருக்க. எல்லோரையும் போலத்தான் நானும். ஆனால்
என்னுடைய தொழில் எல்லோருடையதும்போல் அல்ல. நான் கதை எழுதுகிறேன்; அதாவது,
சரடுவிட்டு, அதைச் சகிக்கும் பத்திரிகை ஸ்தாபனங்களிலிருந்து பிழைக்கிறவன்;
என்னுடையது அங்கீகரிக்கப்படும் பொய்; அதாவது - கடவுள், தர்மம் என்று பல
நாமரூபங்களுடன், உலக 'மெஜாரிட்டி'யின் அங்கீகாரத்தைப் பெறுவது;
இதற்குத்தான் சிருஷ்டி, கற்பனா லோக சஞ்சாரம் என்றெல்லாம் சொல்லுவார்கள்.
இந்த மாதிரியாகப் பொய் சொல்லுகிறவர்களையே இரண்டாவது பிரம்மா என்பார்கள்.
இந்த நகல் பிரம்ம பரம்பரையில் நான் கடைக்குட்டி. இதை எல்லாம் நினைக்கப்
பெருமையாகத்தான் இருக்கிறது. நாங்கள் உண்டாக்குவது போல், அந்தப் பிரமனின்
கைவேலையும் பொய்தானா? நான் பொய்யா? திடீரென்று இந்த வேதாந்த விசாரம் இரவு
சுமார் பன்னிரண்டு மணிப்போதுக்கு ஏற்பட்டால், தன்னுடைய ஜீரண சக்தியைப்
பற்றி யாருக்குத்தான் சந்தேகம் தோன்றாது? "அட சட்!" என்று சொல்லிக்கொண்டு
எழுந்து உட்கார்ந்தேன்.
உட்கார்ந்தபடி எட்டினாற் போல மின்சார
விளக்கைப் போடுவதற்கு வாக்காக வீட்டைக் கட்டி வைத்திருந்தான். போட்டேன்.
வெளிச்சம் கண்களை உறுத்தியது. பக்கத்துக் கட்டிலில் என் மனைவி தூங்கிக்
கொண்டிருந்தாள். தூக்கத்தில் என்ன கனவோ? உதட்டுக் கோணத்தில் புன்சிரிப்பு
கண்ணாம்பூச்சி விளையாடியது. வேதாந்த விசாரத்துக்கு மனிதனை இழுத்துக்கொண்டு
போகும் தன்னுடைய நளபாக சாதுர்யத்தைப் பற்றி இவள் மனசு கும்மாளம் போடுகிறது
போலும்! தூக்கக் கலக்கத்தில் சிணுங்கிக் கொண்டு புரண்டு படுத்தாள். அவள்
மூன்று மாசக் கர்ப்பிணி. நமக்குத்தான் தூக்கம் பிடிக்கவில்லை என்றால்,
அவளையும் ஏன் எழுப்பி உட்கார்த்தி வைத்துக் கொள்ள வேண்டும்?
உடனே
விளக்கை அணைத்தேன். எனக்கு எப்போதும் இருட்டில் உட்கார்ந்துகொண்டிருப்பதில்
ஒரு நிம்மதி. இருட்டோ டு இருட்டாய், நாமும் இருட்டும் ஐக்கியமாய், பிறர்
பார்வையில் விழாமல் இருந்து விடலாம் அல்லவா? நாமும் நம் இருட்டுக்
கோட்டைக்குள் இருந்து கொண்டு நம் இஷ்டம்போல் மனசு என்ற கட்டை வண்டியை
ஓட்டிக் கொண்டு போகலாம் அல்லவா? சாதாரணமாக எல்லோரும் மனசை நினைத்த
இடத்துக்கு நினைத்த மாத்திரத்தில் போகும் ரதம் என்று சொல்லுவார்கள். மனித
வித்து அநாதி காலந்தொட்டு இன்று வரையில் நினைத்து நினைத்துத் தேய்ந்து
தடமாகிவிட்ட பாதையில் தான் இந்தக் கட்டை வண்டி செல்லுகிறது. சக்கரம்
உருண்டு உருண்டு பள்ளமாக்கிய பொடிமண் பாதையும் நடுமத்தியில் கால்கள்
அவ்வளவாகப் பாவாத திரடுந்தான் உண்டு; ஒவ்வொரு சமயங்களில் சக்கரங்கள்
தடம்புரண்டு திரடு ஏறி 'டொடக்' என்று உள்ளே இருக்கிறவர்களுக்கு அதிர்ச்சி
கொடுக்கிறதும் உண்டு; மற்றப்படி சாதுவான, ஆபத்தில்லாத மயிலைக் காளைப் பாதை.
நினைவுச் சுகத்தில் இருட்டில் சிறிது அதிகமாகச் சுண்ணாம்பு தடவிவிட்டேன்
போலும்! நாக்கு, சுருக்கென்று பொத்துக்கொண்டது. நான் அதைப்
பொருட்படுத்துவதில்லை. இருட்டில் வெற்றிலை போடுவது என்றால், அதிலும் மனசை,
கயிற்றை முதுகில் போட்டு விட்டுத்தானே போகும்படி விட்டுவிடுவது என்றால்,
இந்த விபத்துக்களையெல்லாம் பொருட்படுத்தலாமா? உள்ளங்கையில் கொட்டி
வைத்திருந்த புகையிலையைப் பவித்தரமாக வாயில் போட்டுக் கொண்டேன்.
சீ!
என்ன நாற்றம்! ஒரேயடியாகப் பிணவாடை அல்லவா அடிக்கிறது? குமட்டல் எடுக்க,
புகையிலையின் கோளாறோ என்று ஜன்னல் பக்கமாகச் சென்று அப்படியே உமிழ்ந்து,
வாயை உரசிக் கொப்புளித்துவிட்டு வந்து படுக்கையின் மீது உட்கார்ந்தேன்.
துர்நாற்றம்
தாங்க முடியவில்லை, உடல் அழுகி, நாற்றம் எடுத்துப் போன பிணம் போல; என்னால்
சகிக்க முடியவில்லை. எனக்குப் புரியவில்லை. ஜன்னல் வழியாக நாற்றம்
வருகிறதோ? ஊசிக் காற்றுக் கூட இழையவில்லையே! கட்டிலை விட்டு எழுந்திருந்து
ஜன்னலில் பக்கம் நடந்தேன். இரண்டடி எடுத்து வைக்கவில்லை; நாற்றம் அடியோடு
மறைந்துவிட்டன. என்ன அதிசயம்! திரும்பவும் கட்டிலுக்கு வந்தேன். மறுபடியும்
நாற்றம். அதே துர்க்கந்தம். கட்டிலின் அடியில் ஏதேனும் செத்துக்
கிடக்கிறதோ? விளக்கை ஏற்றினேன். கட்டிலடியில் தூசிதான் தும்மலை வருவித்தது.
எழுந்து உடம்பைத் தட்டிக் கொண்டு நின்றேன்.
தும்மல் என் மனைவியை
எழுப்பிவிட்டது. "என்ன, இன்னுமா உங்களுக்கு உறக்கம் வரவில்லை? மணி என்ன?"
என்று கொட்டாவி விட்டாள்.
மணி சரியாகப் பன்னிரண்டு அடித்து ஒரு
நிமிஷம் ஆயிற்று.
என்ன அதிசயம்! நாற்றம் இப்பொழுது ஒருவித வாசனையாக
மாறியது. ஊதுவத்தி வாசனை; அதுவும் மிகவும் மட்டமான ஊதுவத்தி; பிணத்துக்குப்
பக்கத்தில் ஏற்றி வைப்பது.
"உனக்கு இங்கே ஒரு மாதிரி வாசனை
தெரியுதா?" என்று கேட்டேன்.
"ஒண்ணும் இல்லியே" என்றாள்.
சற்று
நேரம் மோந்து பார்த்துவிட்டு, "ஏதோ லேசா ஊதுவத்தி மாதிரி வாசனை வருது;
எங்காவது ஏற்றி வைத்திருப்பார்கள்; எனக்கு உறக்கம் வருது; விளக்கை
அணைத்துவிட்டுப் படுங்கள்" என்றாள்.
விளக்கை அணைத்தேன். லேசாக வாசனை
இருந்துகொண்டுதான் இருந்தது. ஜன்னலருகில் சென்று எட்டிப் பார்த்தேன்.
நட்சத்திர வெளிச்சந்தான்.
லேசாக வீட்டிலிருந்த ஜன்னல், வாசல்,
கதவுகள் எல்லாம் படபடவென்று அடித்துக்கொண்டன. ஒரு வினாடிதான். அப்புறம்
நிச்சப்தம். பூகம்பமோ? நட்சத்திர வெளிச்சத்தில் பழந்தின்னி வௌவால் ஒன்று
தன் அகன்ற தோல் சிறகுகளை விரித்துக் கொண்டு பறந்து சென்று எதிரில் உள்ள
சோலைகளுக்கு அப்பால் மறைந்தது.
துர்நாற்றமும் வாசனையும் அடியோடு
மறைந்தன. நான் திரும்பி வந்து படுத்துக் கொண்டேன்.
2
நான்
மறுநாள் விடியற்காலம் தூக்கம் கலைந்து எழுந்திருக்கும்போது காலை
முற்பகலாகிவிட்டது. ஜன்னல் வழியாக விழுந்து கிடந்த தினசரிப் பத்திரிகையை
எடுத்துக்கொண்டு வீட்டின் வெளிமுற்றத்துக்கு வந்து பிரம்பு நாற்காலியில்
உட்கார்ந்தேன். கிரீச்சிட்டு ஆட்சேபித்துவிட்டு அது என்னைச் சுமந்தது.
"ராத்திரி
பூராவும் தூங்காமே இவ்வளவு நேரம் கழித்து எழுந்ததும் அல்லாமல் இப்படி
வந்து உட்கார்ந்து கொண்டால் காப்பி என்னத்துக்கு ஆகும்?" என்று என்
சகதர்மிணி பின்பக்கமாக வந்து நின்று உருக்கினாள். 'ஐக்கிய நாடுகளின் ஜரூர்
மிகுந்த எதிர் தாக்குதல்கள் தங்குதடையில்லாமல் முன்னேறி வருவதில்'
அகப்பட்டுக் கொண்ட ஜனநாயகத்திலும் உலக சமாதானத்திலும் உறுதி பிறழாத
நம்பிக்கை கொண்ட எனக்குச் சற்றுச் சிரமமாகத்தான் இருந்தது.
"அது உன்
சமையல் விமரிசையால் வந்த வினை" என்று ஒரு பாரிசத் தாக்குதல் நடத்திவிட்டு
எழுந்தேன்.
"உங்களுக்குப் பொழுதுபோகாமே என் மேலே குத்தம் கண்டு
பிடிக்கணும்னு தோணிட்டா, வேறே என்னத்தைப் பேசப் போறிய? எல்லாம் நீங்கள்
எளுதுகிற கதையை விடக் குறைச்சல் இல்லை!" என்று சொல்லிக் கொண்டே
அடுப்பங்கரைக்குள் புகுந்தாள்.
நானும் குடும்ப நியதிகளுக்குக்
கட்டுப்பட்டு, பல்லைத் துலக்கிவிட்டு, கொதிக்கும் காப்பித் தம்ளரைத்
துண்டில் ஏந்தியபடி பத்திரிகைப் பத்திகளை நோக்கினேன்.
அப்போது ஒரு
பிச்சைக்காரி, அதிலும் வாலிபப் பிச்சைக்காரி, ஏதோ பாட்டுப் பாடியபடி,
"அம்மா, தாயே!" என்று சொல்லிக் கொண்டு வாசற்படியண்டை வந்து நின்றாள்.
நான்
ஏறிட்டுப் பார்த்துவிட்டு இந்தப் பிச்சைக்காரர்களுடன் மல்லாட முடியாதென்று
நினைத்துக் கொண்டு பத்திரிகையை உயர்த்தி வேலி கட்டிக் கொண்டேன்.
"உனக்கு
என்ன உடம்பிலே தெம்பா இல்லை? நாலு வீடு வேலை செஞ்சு பொளெச்சா என்ன?" என்று
அதட்டிக் கொண்டே நடைவாசலில் வந்து நின்றாள் என் மனைவி.
"வேலை
கெடச்சாச் செய்யமாட்டேனா? கும்பி கொதிக்குது தாயே! இந்தத் தெருவிலே இது
வரையில் பிடியரிசிக் கூடக் கிடைக்கவில்லை; மானத்தை மறைக்க முழத்துணி
குடம்மா" என்று பிச்சைக்கார அஸ்திரங்களைப் பிரயோகிக்க ஆரம்பித்தாள்.
"நான்
வேலை தாரேன்; வீட்டோ டவே இருக்கியா? வயத்துக்குச் சோறு போடுவேன்;
மானத்துக்குத் துணி தருவேன்; என்ன சொல்லுதே!" என்றாள்.
"அது போதாதா
அம்மா? இந்தக் காலத்திலே அதுதான் யார் கொடுக்கிறா?" என்று சொல்லிக்கொண்டே
என் மனைவியைப் பார்த்துச் சிரித்து நின்றாள்.
"என்ன, நான் இவளை வீட்டோ
டே ரெண்டு நாள் வெச்சு எப்படி இருக்கான்னுதான் பாக்கட்டுமா? எனக்குந்தான்
அடிக்கடி இளைப்பு இளைப்பா வருதே" என்றாள் என் மனைவி.
"சீ! உனக்கு
என்ன பைத்தியமா? எங்கேயோ கெடந்த பிச்சைக்காரக் களுதையை வீட்டுக்குள் ஏத்த
வேண்டும் என்கிறாயே! பூலோகத்திலே உனக்கு வேறே ஆளே ஆம்பிடலியா?" என்றேன்.
வெளியில்
நின்ற பிச்சைக்காரி 'களுக்' என்று சிரித்தாள். சிரிப்பிலே ஒரு பயங்கரமான
கவர்ச்சி இருந்தது. என் மனைவி வைத்த கண் மாறாமல் அவளையே பார்த்துக்
கொண்டிருந்தாள். மனசு முழுவதும் அந்த அநாமத்திடமே ஐக்கியமாகிவிட்டது போல்
இருந்தது.
"முகத்தைப் பார்த்தா ஆள் எப்படி என்று சொல்ல முடியாதா? நீ
இப்படி உள்ளே வாம்மா" என்று மேலுத்தரவு போட்டுக்கொண்டு அவளை உள்ளே
அழைத்துச் சென்றாள்.
உள்ளுக்குள்ளே பூரிப்புடன் அந்த மாய்மாலப்
பிச்சைக்காரி பின் தொடர்ந்தாள். என்ன! நான் கண்களைத் துடைத்துக் கொண்டு
அவள் பாதங்களையே பார்த்தேன். அவை தரைக்குமேல் ஒரு குன்றிமணி உயரத்துக்கு
அந்தரத்தில் நடமாடின. உடம்பெல்லாம் எனக்குப் புல்லரித்தது. மனப் பிரமையா?
மறுபடியும் பார்க்கும் போது, பிச்சைக்காரி என்னைப் புன்சிரிப்புடன்
திரும்பிப் பார்த்தாள். ஐயோ, அது புன்சிரிப்பா! எலும்பின்
செங்குருத்துக்குள் ஐஸ் ஈட்டியைச் செருகியதுமாதிரி என்னைக் கொன்று
புரட்டியது அது!
என் மனைவியைக் கூப்பிட்டேன். அவள் வீட்டுக்குள்
வருவது நல்லதற்கல்ல என்று சொன்னேன். இந்த அபூர்வத்தை வேலைக்காரியாக
வைத்துக்கொள்ளத்தான் வேண்டும் என்று ஒரேயடியாகப் பிடிவாதம் செய்தாள்.
மசக்கை விபரீதங்களுக்கு ஓர் எல்லை இல்லையா? என்னவோ படுஆபத்து என்றுதான் என்
மனசு படக்குப் படக்கு என்று அடித்துக்கொண்டது. மறுபடியும் எட்டி அவள்
பாதங்களைப் பார்த்தேன். எல்லோரையும் போல் அவள் கால்களும் தரையில்தான் பாவி
நடமாடின. இது என்ன மாயப்பிரமை!
தென்னாலிராமன் கறுப்பு நாயை வெள்ளை
நாயாக்க முடியாது என்பதை நிரூபித்தான். ஆனால் என் மனைவி
பிச்சைக்காரிகளையும் நம்மைப் போன்ற மனிதர்களாக்க முடியும் என்பதை
நிரூபித்தாள். குளித்து முழுகி, பழசானாலும் சுத்தமான ஆடையை உடுத்துக்
கொண்டால் யாரானாலும் அருகில் உட்காரவைத்துப் பேசிக் கொண்டிருக்க முடியும்
என்பது தெரிந்தது. வந்திருந்த பிச்சைக்காரி சிரிப்பு மூட்டும்படிப்
பேசுவதில் கெட்டிக்காரி போலும்! அடிக்கடி 'களுக்' 'களுக்' என்ற சப்தம்
கேட்டது. என் மனைவிக்கு அவள் விழுந்து விழுந்து பணிவிடை செய்வதைக் கண்டு
நானே பிரமித்து விட்டேன். என்னையே கேலிசெய்து கொள்ளும்படியாக இருந்தது,
சற்றுமுன் எனக்குத் தோன்றிய பயம்.
சாயந்தரம் இருக்கும்; கருக்கல்
நேரம். என் மனைவியும் அந்த வேலைக்காரியும் உட்கார்ந்து சிரித்துப் பேசியபடி
கதை சொல்லிக் கொண்டிருந்தார்கள். நான் முன்கூடத்தில் விளக்கேற்றிவிட்டு
ஒரு புஸ்தகத்தை வியாஜமாகக் கொண்டு அவளைக் கவனித்தவண்ணம் இருந்தேன். நான்
இருந்த ஹாலுக்கும் அவர்கள் இருந்த இடத்துக்கும் இடையில் நடுக்கட்டு ஒன்று
உண்டு. அதிலே நான் ஒரு நிலைக் கண்ணாடியைத் தொங்கவிட்டு வைத்திருந்தேன்.
அவர்களுடைய பிம்பங்கள் அதிலே நன்றாகத் தெரிந்தன.
"நீ எங்கெல்லாமோ சுத்தி
அலஞ்சு வந்திருக்கியே; ஒரு கதை சொல்லு" என்றாள் என் மனைவி.
"ஆமாம்.
நான் காசி அரித்துவாரம் எல்லா எடத்துக்கும் போயிருக்கிறேன். அங்கே,
காசியில் ஒரு கதையைக் கேட்டேன்; உனக்குச் சொல்லட்டா?" என்றாள்.
"சொல்லேன்;
என்ன கதை?" என்று கேட்டாள் என் மனைவி.
"அஞ்சுநூறு வருச மாச்சாம்.
காசியிலே ஒரு ராசாவுக்கு ஒத்தைக் கொரு மக இருந்தா. பூலோகத்திலே அவளெப்போல
அளகு தேடிப் புடிச்சாலும் கெடெக்காதாம். அவளெ ராசாவும் எல்லாப் படிப்பும்
படிப்பிச்சாரு. அவளுக்குக் குருவா வந்தவன் மகாப் பெரிய சூனியக்காரன்.
எந்திரம், தந்திரம், மந்திரம் எல்லாம் தெரியும். அவனுக்கு இவமேலே ஒரு
கண்ணு. ஆனா இந்தப் பொண்ணுக்கு மந்திரி மவனெக் கட்டிக்கிடணும்னு ஆசை.
"இது
அவனுக்குத் தெரிஞ்சுப்போச்சு; யாருக்குத் தெரிஞ்சுபோச்சு? அந்தக்
குருவுக்கு..."
என்ன அதிசயம்! நான் அவள் சொல்லிக்கொண்டிருக்கும்
கதையைக் கேட்டுக்கொண்டிருக்கிறேனா அல்லது கையில் உள்ள புஸ்தகத்தை
வாசித்துக் கொண்டிருக்கிறேனா? கையிலிருப்பது 'சரித்திர சாசனங்கள்' என்ற
இங்கிலீஷ் புஸ்தகம். அதிலே வாராணசி மகாராஜன் மகளின் கதை என் கண்ணுக்கெதிரே
அச்செழுத்துக்களில் விறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது. கையில்
விரித்துவைத்த பக்கத்தில் கடைசி வாக்கியம், 'அந்த மந்திரவாதிக்கு அது
தெரிந்துவிட்டது' என்ற சொற்றொடரின் இங்கிலீஷ் மொழிபெயர்ப்பு. மூளை
சுழன்றது. நெற்றியில் வியர்வை அரும்பியது. என்ன, எனக்குப் பைத்தியம்
பிடித்துவிட்டதா! பிரித்துப் பிடித்து வைத்திருந்த பக்கத்திலேயே கண்களைச்
செருகியிருந்தேன். எழுத்துக்கள் மங்க ஆரம்பித்தன.
திடீரென்று ஒரு
பேய்ச் சிரிப்பு! வெடிபடும் அதிர்ச்சியோடு என் மனசை அப்படியே கவ்வி
உறிஞ்சியது. அதிர்ச்சியில் தலையை நிமிர்த்தினேன். எனது பார்வை நிலைக்
கண்ணாடியில் விழுந்தது. அதனுள், ஒரு கோர உருவம் பல்லைத் திறந்து உன்மத்த
வெறியில் சிரித்துக் கொண்டிருந்தது. எத்தனையோ மாதிரியான கோர உருவங்களைக்
கனவிலும், சிற்பிகளின் செதுக்கிவைத்த கற்பனைகளிலும் பார்த்திருக்கிறேன்.
ஆனால் இந்த மாதிரி ஒரு கோரத்தைக் கண்டதே இல்லை. குரூபமெல்லாம் பற்களிலும்
கண்களிலுமே தெறித்தது. முகத்தில் மட்டும் மோக லாகிரியை எழுப்பும் அற்புதமான
அமைதி. கண்களிலே ரத்தப் பசி! பற்களிலே சதையைப் பிய்த்துத் தின்னும் ஆவல்.
இந்த மங்கலான பிம்பத்துக்குப் பின்னால் அடுப்பு நெருப்பின் தீ நாக்குகள்.
வசமிழந்து அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். தோற்றம் கணத்தில் மறைந்தது;
அடுத்த நிமிஷம் அந்தப் பிச்சைக்காரியின் முகமே தெரிந்தது.
"உன் பெயர்
என்ன என்று கேட்க மறந்தே போயிட்டுதே" என்று மனைவி கேட்பது எனது
செவிப்புலனுக்கு எட்டியது.
"காஞ்சனைன்னுதான் கூப்பிடுங்களேன். கதேலெ
வர்ற காஞ்சனை மாதிரி. எப்படிக் கூப்பிட்டா என்ன! ஏதோ ஒரு பேரு" என்றாள்
பிச்சைக்காரி.
என் மனைவியைத் தனியாக அங்கு விட்டிருக்க மனம்
ஒப்பவில்லை. என்ன நேரக்கூடுமோ? பயம் மனசைக் கவ்விக்கொண்டால் வெடவெடப்புக்கு
வரம்பு உண்டா?
நான் உள்ளே போனேன். இருவரும் குசாலாகவே பேசிக்
கொண்டிருந்தனர்.
வலுக்கட்டாயத்தின் பேரில் சிரிப்பை வருவித்துக்
கொண்டு நுழைந்த என்னை, "பொம்பளைகள் வேலை செய்கிற எடத்தில் என்ன
உங்களுக்காம்?" என்ற பாணம் எதிரேற்றது.
காஞ்சனை என்று சொல்லிக்
கொண்டவள் குனிந்து எதையோ நறுக்கிக் கொண்டிருந்தாள். விஷமம் தளும்பும்
சிரிப்பு அவளது உதட்டின் கோணத்தில் துள்ளலாடியது. நான் வேறு ஒன்றும் சொல்ல
முடியாமல் புஸ்தக வேலியின் மறைவில் நிற்கும் பாராக்காரன் ஆனேன். மனைவியோ
கர்ப்பிணி. அவள் மனசிலேயா பயத்தைக் குடியேற்றுவது? அவளை எப்படிக்
காப்பாற்றுவது?
சாப்பிட்டோ ம். தூங்கச் சென்றோம். நாங்கள் இருவரும்
மாடியில் படுத்துக் கொண்டோ ம். காஞ்சனை என்பவள் கீழே முன்கூடத்தில்
படுத்துக் கொண்டாள்.
நான் படுக்கையில் படுத்துத்தான் கிடந்தேன். இமை
மூட முடியவில்லை. எப்படி முடியும்? எவ்வளவு நேரம் இப்படிக் கிடந்தேனோ?
இன்று மறுபடியும் அந்த வாசனை வரப்போகிறதா என்று மனம் படக்கு படக்கென்று
எதிர்பார்த்தது.
எங்கோ ஒரு கடிகாரம் பன்னிரண்டு மணி அடிக்கும்
வேலையை ஆரம்பித்தது.
பதினோராவது ரீங்காரம் ஓயவில்லை.
எங்கோ
கதவு கிரீச்சிட்டது.
திடீரென்று எனது கைமேல் கூரிய நகங்கள் விழுந்து
பிறாண்டிக் கொண்டு நழுவின.
நான் உதறியடித்துக்கொண்டு எழுந்தேன்.
நல்ல காலம்; வாய் உளறவில்லை.
என் மனைவியின் கைதான் அசப்பில்
விழுந்து கிடந்தது.
அவளுடையதுதானா?
எழுந்து குனிந்து கவனித்தேன்.
நிதானமாகச் சுவாசம் விட்டுக் கொண்டு தூங்கினாள்.
கீழே சென்று
பார்க்க ஆவல்; ஆனால் பயம்!
போனேன். மெதுவாகக் கால் ஓசைப்படாமல்
இறங்கினேன்.
ஒரு யுகம் கழிந்த மாதிரி இருந்தது.
மெதுவாக முன்
கூடத்தை எட்டிப் பார்த்தேன். வெளிவாசல் சார்த்திக் கிடந்தது. அருகிலிருந்த
ஜன்னல் வழியாக விழுந்த நிலா வெளிச்சம் காலியாகக் கிடக்கும் பாயையும்
தலையணையையும் சுட்டிக் காட்டியது.
கால்கள் எனக்குத் தரிக்கவில்லை.
வெடவெடவென்று நடுங்கின.
திரும்பாமலே பின்னுக்குக் காலடி வைத்து
நடந்து மாடிப்படியருகில் வந்தேன். உயரச் சென்றுவிட்டாளோ?
விடுவிடு
என்று மாடிக்குச் சென்றேன்.
அங்கே அமைதி.
பழைய அமைதி.
மனம்
தெளியவில்லை.
மாடி ஜன்னலருகில் நின்று நிலா வெளிச்சத்தை
நோக்கினேன்.
மனித நடமாட்டம் இல்லை.
எங்கோ ஒரு நாய் மட்டும்
அழுது பிலாக்கணம் தொடுத்து ஓங்கியது.
பிரம்மாண்டமான வௌவால் ஒன்று
வானத்தின் எதிர் கோணத்திலிருந்து எங்கள் வீடு நோக்கிப் பறந்து வந்தது.
வெளியே
பார்க்கப் பார்க்கப் பயம் தெளிய ஆரம்பித்தது. என்னுடைய மனப்பிரமை அது
என்று நிதானத்துக்கு வந்தேன்.
ஆனால் கீழே!
மறுபடியும்
பார்க்க வேண்டும் என்ற ஆவல்.
கீழே இறங்கினேன்.
தைரியமாகச்
செல்ல முடியவில்லை.
அதோ! காஞ்சனை பாயில் உட்கார்ந்துதான்
இருக்கிறாள். என்னைப் பார்த்துச் சிரித்தாள். விஷச் சிரிப்பு. உள்ளமே
உறைந்தது. நிதானமாக இருப்பதைப் போலப் பாசாங்கு செய்து கொண்டு, "என்ன,
தூக்கம் வரவில்லையா?" என்று முணுமுணுத்துக்கொண்டே மாடிப் படிகளில் ஏறினேன்.
அப்பொழுது
சாம்பிராணி வாசனை வந்ததா? வந்தது போலத் தான் ஞாபகம்.
நான்
எழுந்திருக்கும்போது நெடுநேரமாகிவிட்டது.
"என்ன, வரவரத்தான்,
இப்படித் தூங்கித் தொலைக்கிறக; காப்பி ஆறுது!" என்று என் மனைவி
எழுப்பினாள்.
3
இருட்டுக்கும் பயத்துக்கும் ஒளிவிடம் இல்லாத
பகலிலே எல்லாம் வேறு மாதிரியாகத்தான் தோன்றுகிறது. ஆனால், மனசின் ஆழத்திலே
அந்தப் பயம் வேரூன்றிவிட்டது. இந்த ஆபத்தை எப்படிப் போக்குவது?
தன்
மனைவி சோரம் போகிறாள் என்ற மனக்கஷ்டத்தை, தன்னைத் தேற்றிக் கொள்வதற்காக
வேறு யாரிடமும் சொல்லிக் கொள்ள முடியுமா? அதே மாதிரிதான் இதுவும், என்னைப்
போன்ற ஒருவன், ஜன சமுதாயத்துக்காக இலக்கிய சேவை செய்கிறேன் என்று தம்பட்டம்
அடித்துக் கொண்டு மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் ஒருவன், "ஸார்,
எங்கள் வீட்டில் புதுசாக ஒரு பேய் குடிவந்துவிட்டது. அது என் மனைவியை என்ன
செய்யுமோ என்று பயமாக இருக்கிறது; ஆபத்தைப் போக்க உங்களுக்கு ஏதாவது வழி
தெரியுமா?" என்று கேட்டால், நான் நையாண்டி செய்கிறேனா அல்லது எனக்குப்
பைத்தியம் பிடித்துவிட்டதா என்றுதான் சந்தேகிப்பான். யாரிடம் இந்த
விவகாரத்தைச் சொல்லி வழி தேடுவது? எத்தனை நாட்கள் நான் பாராக் கொடுத்துக்
கொண்டிருக்க முடியும்?
இது எந்த விபரீதத்தில் கொண்டு போய் விடுமோ?
சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தேன். என்
மனைவிக்கு அந்தப் புதிய வேலைக்காரி என்ன சொக்குப்பொடி போட்டுவிட்டாளோ?
அவர்கள் இருவரும் மனசில் துளிக்கூடப் பாரமில்லாமல் கழித்துவிட்டார்கள்.
இன்றைப்
பார்த்துப் பகலும் இராத்திரியை விரட்டிக் கொண்டு ஓடி வந்தது. இவ்வளவு
வேகமாகப் பொழுது கழிந்ததை நான் ஒரு நாளும் அநுபவித்ததில்லை.
இரவு
படுக்கப் போகும்போது என் மனைவி, "காஞ்சனை, இன்றைக்கு மாடியிலேயே நமக்கு
அடுத்த அறையில் படுத்துக் கொள்ளப் போகிறாள்" என்று கூறிவிட்டாள். எனக்கு
மடியில் நெருப்பைக் கட்டியது போல ஆயிற்று.
இது என்ன சூழ்ச்சி!
இன்று
தூங்குவதே இல்லை. இரவு முழுவதும் உட்கார்ந்தே கழிப்பது என்று
தீர்மானித்தேன்.
"என்ன படுக்கலியா?" என்றாள் என் மனைவி.
"எனக்கு
உறக்கம் வரவில்லை" என்றேன். மனசுக்குள் வல் ஈட்டிகளாகப் பயம் குத்தித்
தைத்து வாங்கியது.
"உங்கள் இஷ்டம்" என்று திரும்பிப் படுத்தாள்.
அவ்வளவுதான். நல்ல தூக்கம்; அது வெறும் உறக்கமா?
நானும் உட்கார்ந்து
உட்கார்ந்து அலுத்துப் போனேன்.
சற்றுப் படுக்கலாம் என்று உடம்பைச்
சாய்த்தேன்.
பன்னிரண்டு மணி அடிக்க ஆரம்பித்தது.
இதென்ன வாசனை!
பக்கத்தில்
படுத்திருந்தவள் அமானுஷ்யக் குரலில் வீரிட்டுக் கத்தினாள். வார்த்தைகள்
ரூபத்தில் வரும் உருவற்ற குரல்களுக்கு இடையே காஞ்சனை என்ற வார்த்தை
ஒன்றுதான் புரிந்தது.
சட்டென்று விளக்கைப் போட்டுவிட்டு அவளை
எழுப்பி உருட்டினேன்.
பிரக்ஞை வரவே, தள்ளாடிக் கொண்டு எழுந்து
உட்கார்ந்தாள். "ஏதோ ஒன்று என் கழுத்தைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சின மாதிரி
இருந்தது" என்றாள் கண்களைத் துடைத்துக் கொண்டு.
கழுத்தைக்
கவனித்தேன். குரல்வளையில் குண்டூசி நுனி மாதிரி ரத்தத்துளி இருந்தது. அவள்
உடம்பெல்லாம் நடுங்கியது.
"பயப்படாதே; எதையாவது நினைத்துக் கொண்டு
படுத்திருப்பாய்" என்று மனமறிந்து பொய் சொன்னேன்.
அவள் உடம்பு
நடுநடுங்கிக் கொண்டிருந்தது. மயங்கிப் படுக்கையில் சரிந்தாள். அதே
சமயத்தில் வெளியில் சேமக்கலச் சபதம் கேட்டது.
கர்ணகடூரமான குரலில்
ஏதோ ஒரு பாட்டு.
அதிகாரத் தோரணையிலே, "காஞ்சனை! காஞ்சனை!" என்ற
குரல்.
என் வீடே கிடுகிடாய்த்துப் போகும்படியான ஓர் அலறல்! கதவுகள்
படபடவென்று அடித்துக் கொண்டன.
அப்புறம் ஓர் அமைதி. ஒரு சுடுகாட்டு
அமைதி.
நான் எழுந்து வெளிவாசலின் பக்கம் எட்டிப் பார்த்தேன்.
நடுத்தெருவில்
ஒருவன் நின்றிருந்தான். அவனுக்கு என்ன மிடுக்கு!
"இங்கே வா" என்று
சமிக்ஞை செய்தான்.
நான் செயலற்ற பாவை போலக் கீழே இறங்கிச் சென்றேன்.
போகும்போது
காஞ்சனை இருந்த அறையைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. நான்
எதிர்பார்த்தபடியேதான் இருந்தது. அவள் இல்லை.
தெருவிற்குப் போனேன்.
"அம்மா
நெத்தியிலே இதைப் பூசு. காஞ்சனை இனிமேல் வர மாட்டாள். போய் உடனே பூசு.
அம்மாவை எளுப்பாதே" என்றான்.
விபூதி சுட்டது.
நான் அதைக்
கொண்டுவந்து பூசினேன், அவள் நெற்றியில். அது வெறும் விபூதிதானா! எனக்குச்
சந்தேகமாகவே இருக்கிறது. அவன் கையில் சேமக்கலம் இல்லை என்பதும் ஞாபகம்
இருக்கிறதே!
மூன்று நாட்கள் கழிந்துவிட்டன.
காலையில் காப்பி
கொடுக்கும்போது, "இந்த ஆம்பிளைகளே இப்படித்தான்!" என்றாள் என் மனைவி.
இதற்கு என்ன பதில் சொல்ல?
==============
கலைமகள், ஜனவரி 1943
புதுமைப்பித்தன்
மேலகரம் மே.க.ராமசாமிப் பிள்ளை அவர்களின் ஏகபுத்திரனும் செல்லப்பா என்பவருமான மேலகரம் மே.க.ரா.கந்தசாமிப் பிள்ளையவர்கள் 'பிராட்வே 'யும் 'எஸ்பிளனேடு 'ம் கூடுகிற சந்தியில் ஆபத்தில்லாத ஓரத்தில் நின்றுகொண்டு வெகு தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார். டிராமில் ஏறிச் சென்றால் ஒன்றே காலணா. காலணா மிஞ்சும். பக்கத்துக் கடையில் வெற்றிலை பாக்குப் போட்டுக் கொண்டு வீட்டுக்கு நடந்து விடலாம். பஸ்ஸில் ஏறிக் கண்டக்டரை ஏமாற்றிக் கொண்டே ஸென்ட்ரலைக் கடந்து விட்டு அப்புறம் டிக்கட் வாங்கித் திருவல்லிக்கேணிக்குப் போனால் அரை 'கப் ' காபி குடித்து விட்டு வீட்டுக்குப் போகலாம்; ஆனால் வெற்றிலை கிடையாது...
'கண்டக்டர்தான் என்னை ஏமாற்று ஏமாற்று என்று வெற்றிலை வைத்து அழைக்கும்போது அவனை ஏமாற்றுவது, அதாவது அவனை ஏமாறாமல் ஏமாற்றுவது தர்ம விரோதம். நேற்று அவன் அப்படிக் கேட்டபடி ஸென்ட்ரலிலிருந்து மட்டும் கொடுத்திருந்தால் காப்பி சாப்பிட்டிருக்கலாம்.
'இப்பொழுது காப்பி சாப்பிட்டால் கொஞ்சம் விறுவிறுப்பாகத்தான் இருக்கும். '
இப்படியாக மேற்படியூர் மேற்படி விலாசப் பிள்ளையவர்கள் தர்ம விசாரத்தில் ஈடுபட்டிருக்கும்பொழுதுதான் அவருக்குக் கடவுள் பிரசன்னமானார்.
திடாரென்று அவருடைய புத்தி பரவசத்தால் மருளும்படித் தோன்றி, ' 'இந்தா, பிடி வரத்தை ' ' என்று வற்புறுத்தவில்லை.
' 'ஐயா, திருவல்லிக்கேணிக்கு எப்படிப் போகிறது ? ' ' என்றுதான் கேட்டார்.
' 'டிராமிலும் போகலாம், பஸ்சிலும் போகலாம், கேட்டுக்கேட்டு நடந்தும் போகலாம்; மதுரைக்கு வழி வாயிலே ' ' என்றார் ஸ்ரீ கந்தசாமிப் பிள்ளை.
' 'நான் மதுரைக்குப் போகவில்லை; திருவல்லிக்கேணிக்குத்தான் வழி கேட்டேன்; எப்படிப் போனால் சுருக்க வழி ? ' ' என்றார் கடவுள் இரண்டுபேரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
சாடி மோதித் தள்ளிக் கொண்டு நடமாடும் ஜனக் கூட்டத்திலிருந்து விலகி செருப்பு ரிப்பேர் செய்யும் சக்கிலியன் பக்கமாக இருவரும் ஒதுங்கி நின்றார்கள்.
மேலகரம் ராமசாமிப் பிள்ளையின் வாரிசுக்கு நாற்பத்தைந்து வயசு; நாற்பத்தைந்து வருஷங்களாக அன்ன ஆகாரமில்லாமல் வளர்ந்தவர் போன்ற தேகக் கட்டு; சில கறுப்பு மயிர்களும் உள்ள நரைத்த தலை; இரண்டு வாரங்களாக க்ஷவரம் செய்யாத முகவெட்டு; எந்த ஜனக் கும்பலிலும், எவ்வளவு தூரத்திலும் போகும் நண்பர்களையும் கொத்திப் பிடிக்கும் அதி தீட்சண்யமான கண்கள்; காரிக்கம் ஷர்ட், காரிக்கம் வேஷ்டி, காரிக்கம் மேல் அங்க வஸ்திரம்.
வழி கேட்டவரைக் கந்தசாமி பிள்ளை கூர்ந்து கவனித்தார். வயசை நிர்ணயமாகச் சொல்ல முடியவில்லை. அறுபது இருக்கலாம், அறுபதினாயிரமும் இருக்கலாம். ஆனால் அத்தனை வருஷமும் சாப்பாட்டுக் கவலையே இல்லாமல் கொழுகொழு என்று வளர்ந்த மேனி வளப்பம்.
தலையிலே துளிக்கூடக் கறுப்பில்லாமல நரைத்த சிகை, கோதிக் கட்டாமல் சிங்கத்தின் பிடரிமயிர் மாதிரி கழுத்தில் விழுந்து சிலிர்த்துக்கொண்டு நின்றது. கழுத்திலே நட்ட நடுவில் பெரிய கறுப்பு மறு. கண்ணும் கன்னங்கரேலென்று, நாலு திசையிலும் சுழன்று, சுழன்று வெட்டியது. சில சமயம் வெறியனுடையது போலக் கவிழ்ந்தது. சிரிப்பு ?-அந்தச் சிரிப்பு, கந்தசாமிப் பிள்ளையைச் சில சமயம் பயமுறுத்தியது. சில சமயம் குழந்தையுடையதைப் போலக் கொஞ்சியது.
' 'ரொம்பத் தாகமாக இருக்கிறது ' ' என்றார் கடவுள்.
' 'இங்கே ஜலம் கிலம் கிடைக்காது; வேணுமென்றால் காப்பி சாப்பிடலாம்; அதோ இருக்கிறது காப்பி ஹோட்டல் ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.
' 'வாருங்களேன், அதைத்தான் சாப்பிட்டுப் பார்ப்போம் ' ' என்றார் கடவுள்.
கந்தசாமிப் பிள்ளை பெரிய அபேதவாதி. அன்னியர், தெரிந்தவர் என்ற அற்ப பேதங்களைப் பாராட்டுகிறவர் அல்லர்.
' 'சரி, வாருங்கள் போவோம் ' ' என்றார், 'பில்லை நம் தலையில் கட்டிவிடப் பார்த்தால் ? ' என்ற சந்தேகம் தட்டியது. 'துணிச்சல் இல்லாதவரையில் துன்பந்தான் ' என்பது கந்தசாமிப் பிள்ளையின் சங்கற்பம்.
இருவரும் ஒரு பெரிய ஹோட்டலுக்குள் நுழைந்தனர். கடவுள் கந்தசாமிப் பிள்ளையின் பின்புறமாக ஒண்டிக்கொண்டு பின்தொடர்ந்தார்.
இருவரும் ஒரு மேஜையருகில் உட்கார்ந்தார்கள். பையனுக்கு மனப்பாடம் ஒப்பிக்க இடங்கொடுக்காமல்,
' 'சூடா, ஸ்ட்ராங்கா இரண்டு கப் காப்பி! ' ' என்று தலையை உலுக்கினார் கந்தசாமிப் பிள்ளை.
' 'தமிழை மறந்துவிடாதே. இரண்டு கப் காப்பிகள் என்று சொல் ' ' என்றார் கடவுள்.
' 'அப்படி அல்ல; இரண்டு கப்கள் காப்பி என்று சொல்ல வேண்டும் ' ' என்று தமிழ்க்கொடி நாட்டினார் பிள்ளை
முறியடிக்கப்பட்ட கடவுள் அண்ணாந்து பார்த்தார். ' 'நல்ல உயரமான கட்டடமாக இருக்கிறது; வெளுச்சமும் நன்றாக வருகிறது ' ' என்றார்.
' 'பின்னே பெரிய ஹோட்டல் கோழிக் குடில் மாதிரி இருக்குமோ ? கோவில் கட்டுகிறதுபோல என்று நினைத்துக்கொண்டாராக்கும்! சுகாதார உத்தியோகஸ்தர்கள் விடமாட்டார்கள் ' ' என்று தமது வெற்றியைத் தொடர்ந்து முடுக்கினார் பிள்ளை.
கோவில் என்ற பதம் காதில் விழுந்ததும் கடவுளுக்கு உடம்பெல்லாம் நடுநடுங்கியது.
' 'அப்படி என்றால்... ? ' ' என்றார் கடவுள். தோற்றாலும் விடவில்லை. ' 'சுகாதாரம் என்றால் என்ன என்று சொல்லும் ? ' ' என்று கேட்டார் கடவுள்.
' 'ஓ! அதுவா ? மேஜையை லோஷன் போட்டுக் கழுவி, உத்யோகஸ்தர்கள் அபராதம் போடாமல் பார்த்துக் கொள்வது. பள்ளிக்கூடத்திலே, பரீட்சையில் பையன்கள் தோற்றுப் போவதற்கென்று சொல்லிக் கொடுக்கும் ஒரு பாடம்; அதன்படி இந்த ஈ, கொசு எல்லாம் ராக்ஷசர்களுக்குச் சமானம். அதிலும் இந்த மாதிரி ஹோட்டல்களுக்குள்ளே வந்துவிட்டால் ஆபத்துத்தான். உயிர் தப்பாது என்று எழுதியிருக்கிறார்கள் ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை. அவருக்கே அதிசயமாக இருந்தது இந்தப் பேச்சு. நாக்கில் சரஸ்வதி கடாட்சம் ஏற்பட்டு விட்டதோ என்று சந்தேகித்தார்.
கடவுள் அவரைக் கவனிக்கவில்லை. இவர்கள் வருவதற்கு முன் ஒருவர் சிந்திவிட்டுப் போன காப்பியில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஈ ஒன்றைக் கடவுள் பார்த்துக் கொண்டே இருந்தார். அது முக்கி முனகி ஈரத்தை விட்டு வெளுயே வர முயன்று கொண்டிருந்தது.
' 'இதோ இருக்கிறதே! ' ' என்றார் கடவுள். உதவி செய்வதற்காக விரலை நீட்டினார். அது பறந்து விட்டது. ஆனால் எச்சில் காப்பி அவர் விரலில் பட்டது.
' 'என்ன ஐயா, எச்சிலைத் தொட்டு விட்டாரே... இந்த ஜலத்தை எடுத்து மேஜைக்குக் கீழே கழுவும் ' ' என்றார் பிள்ளை.
' 'ஈயை வர விடக்கூடாது, ஆனால் மேஜையின் கீழே கழுவ வேண்டும் என்பது சுகாதாரம் ' ' என்று முனகிக் கொண்டார் கடவுள்.
பையன் இரண்டு 'கப் ' காப்பி கொண்டு வந்து வைத்தான்.
கடவுள் காப்பியை எடுத்துப் பருகினார். சோமபானம் செய்த தேவகளை முகத்தில் தெறித்தது.
' 'நம்முடைய லீலை ' ' என்றார் கடவுள்.
' 'உம்முடைய லீலை இல்லைங்காணும், ஹோட்டல்காரன் லீலை. அவன் சிக்கரிப் பவுடரைப் போட்டு வைத்திருக்கறான்; உம்முடைய லீலை எல்லாம் பில் கொடுக்கிற படலத்திலே ' ' என்று காதோடு காதாய்ச் சொன்னார் கந்தசாமிப் பிள்ளை. சூசகமாகப் பில் பிரச்னையைத் தீர்த்து விட்டதாக அவருக்கு ஓர் எக்களிப்பு.
' 'சிக்கரிப் பவுடர் என்றால்... ? ' ' என்று சற்றுச் சந்தேகத்துடன் தலையை நிமிர்த்தினார் கடவுள்.
' 'சிக்கரிப் பவுடர், காப்பி மாதிரிதான் இருக்கும்; ஆனால் காப்பி அல்ல; சில பேர் தெய்வத்தின் பேரைச் சொல்லிக் கொண்டு ஊரை ஏமாற்றி வருகிற மாதிரி ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.
தெய்வம் என்றதும் திடுக்கிட்டார் கடவுள்.
பெட்டியடியில் பில்லைக் கொடுக்கும்பொழுது, கடவுள் புத்தம் புதிய நூறு ரூபாய் நோட்டு ஒன்றை நீட்டினார்; கந்தசாமிப் பிள்ளை திடுக்கிட்டார்.
' 'சில்லறை கேட்டால் தரமாட்டேனா ? அதற்காக மூன்றணா பில் எதற்கு ? கண்ணைத் துடைக்கவா, மனசைத் துடைக்கவா ? ' ' என்றார் ஹோட்டல் சொந்தக்காரர்.
' 'நாங்கள் காப்பி சாப்பிடத்தான் வந்தோம் ' ' என்றார் கடவுள்.
' 'அப்படியானால் சில்லறையை வைத்துக் கொண்டு வந்திருப்பீர்களே ? ' ' என்றார் ஹோட்டல் முதலாளி. அதற்குள் சாப்பிட்டு விட்டு வெளுயே காத்திருப்போர் கூட்டம் ஜாஸ்தியாக, வீண் கலாட்டா வேண்டாம் என்று சில்லறையை எண்ணிக் கொடுத்தார். ' 'தொண்ணூற்று ஒன்பது ரூபாய் பதிமூன்று சரியா ? பார்த்துக்கொள்ளும் சாமியாரே! ' '
' 'நீங்கள் சொல்லிவிட்டால் நமக்கும் சரிதான்; எனக்குக் கணக்கு வராது ' ' என்றார் கடவுள்.
ஒரு போலிப் பத்து ரூபாய் நோட்டைத் தள்ளிவிட்டதில் கடைக்காரருக்கு ஒரு திருப்தி.
வெளுயே இருவரும் வந்தார்கள். வாசலில் அவ்வளவு கூட்டமில்லை. இருவரும் நின்றார்கள்.
கடவுள், தம் கையில் கற்றையாக அடுக்கியிருந்த நோட்டுகளில் ஐந்தாவது மட்டும் எடுத்தார். சுக்கு நூறாகக் கிழித்துக் கீழே எறிந்தார்.
கந்தசாமிப் பிள்ளைக்கு, பக்கத்தில் நிற்பவர் பைத்தியமோ என்ற சந்தேகம். திடுக்கிட்டு வாயைப் பிளந்து கொண்டு நின்றார்
.
' 'கள்ள நோட்டு; என்னை ஏமாற்றப் பார்த்தான்; நான் அவனை ஏமாற்றிவிட்டேன் ' ' என்றார் கடவுள். அவருடைய சிரிப்பு பயமாக இருந்தது.
என் கையில் கொடுத்தால், பாப்பான் குடுமியைப் பிடித்து மாற்றிக்கொண்டு வந்திருப்பேனே! ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.
' 'சிக்கரிப் பவுடருக்கு நீர் உடன்பட்டாரா இல்லையா ? அந்த மாதிரி இதற்கு நான் உடன்பட்டேன் என்று வைத்துக் கொள்ளும். அவனுக்குப் பத்து ரூபாய்தான் பெரிசு; அனால்தான் அவனை ஏமாற்றும்படி விட்டேன் ' ' என்றார் கடவுள்.
வலிய வந்து காப்பி வாங்கிக் கொடுத்தவரிடம் எப்படி விடை பெற்றுக் கொள்ளுவது என்று பட்டது கந்தசாமிப் பிள்ளைக்கு.
' 'திருவல்லிக்கேணிக்குத்தானே ? வாருங்கள் டிராமில் ஏறுவோம் ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.
' 'அது வேண்டாம்; எனக்குத் தலை சுற்றும்; மெதுவாக நடந்தே போய்விடலாம் ' ' என்றார் கடவுள்.
' 'ஐயா, நான் பகலெல்லாம் காலால் நடந்தாச்சு. என்னால் அடி எடுத்து வைக்க முடியாது; ரிக்ஷாவிலே ஏறிப்போகலாமே ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை, ' 'நாம்தான் வழி காட்டுகிறோமே; பத்து ரூபாய் நோட்டைக் கிழிக்கக் கூடியவர் கொடுத்தால் என்ன ? ' ' என்பதுதான் அவருடைய கட்சி.
' 'நர வாகனமா ? அதுதான் சிலாக்கியமானது ' ' என்றார் கடவுள். இரண்டு பேரும் ரிக்ஷாவில் ஏறிக்கொண்டார்கள். ' 'சாமி, கொஞ்சம் இருங்க; வெளக்கை ஏத்திக்கிறேன் ' ' என்றான் ரிக்ஷாக்காரன்.
பொழுது மங்கி, மின்சார வெளுச்சம் மிஞ்சியது.
' 'இவ்வளவு சீக்கிரத்தில் அன்னியோன்னியமாகிவிட்டோமே! நீங்கள் யார் என்றுகூட எனக்குத் தெரியாது; நான் யார் என்று உங்களுக்குத் தெரியாது. பட்டணத்துச் சந்தை இரைச்சலிலே, இப்படிச் சந்திக்க வேண்டும் என்றால்... ' '
கடவுள் சிரித்தார். பல், இருட்டில் மோகனமாக மின்னியது. ' 'நான் யார் என்பது இருக்கட்டும், நீங்கள் யார் என்பதைச் சொல்லுங்களேன் ' ' என்றார் அவர்.
கந்தசாமிப் பிள்ளைக்குத் தம்மைப் பற்றிச் சொல்லிக் கொள்வதில் எப்பொழுதுமே ஒரு தனி உத்ஸாகம். அதிலும் ஒருவன் ஓடுகிற ரிக்ஷாவில் தம்மிடம் அகப்பட்டுக் கொண்டால் விட்டு வைப்பாரா ? கனைத்துக் கொண்டு ஆரம்பித்தார்.
' 'சித்த வைத்திய தீபிகை என்ற வைத்தியப் பத்திரிகையைப் பார்த்ததுண்டா ? ' ' என்று கேட்டார் கந்தசாமிப் பிள்ளை.
' 'இல்லை ' ' என்றார் கடவுள்.
' 'அப்பொழுது வைத்திய சாஸ்திரத்தில் பரிச்சயமில்லை என்று தான் கொள்ள வேண்டும் ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.
' 'பரிச்சயம் உண்டு ' ' என்றார் கடவுள்.
'இதென்னடா சங்கடமாக இருக்கிறது ? ' என்று யோசித்தார் கந்தசாமிப் பிள்ளை. ' 'உங்களுக்கு வைத்திய சாஸ்திரத்தில் பரிச்சயமுண்டு; ஆனால் சித்த வைத்திய தீபிகையுடன் பரிச்சயமில்லை என்று கொள்வோம்; அப்படியாயின் உங்கள் வைத்திய சாஸ்திர ஞானம் பரிபூர்ணமாகவில்லை. நம்மிடம் பதினேழு வருஷத்து இதழ்களும் பைண்டு வால்யூம்களாக இருக்கின்றன. நீங்கள் அவசியம் வீட்டுக்கு ஒருமுறை வந்து அவற்றைப் படிக்க வேண்டும்; அப்பொழுதுதான்... ' '
' 'பதினேழு வருஷ இதழ்களா! பதினேழு பன்னிரண்டு இரு நூற்று நாலு. ' ' கடவுள் மனசு நடுநடுங்கியது. 'ஒருவேளை கால் வருஷம் ஒருமுறைப் பத்திரிகையாக இருக்கலாம் ' என்ற ஓர் அற்ப நம்பிக்கை தோன்றியது.
' 'தீபிகை மாதம் ஒரு முறைப் பத்திரிகை. வருஷ சந்தா உள்நாட்டுக்கு ரூபாய் ஒன்று; வெளுநாடு என்றால் இரண்டே முக்கால்; ஜீவிய சந்தா ரூபாய் 25. நீங்கள் சந்தாதாராகச் சேர்ந்தால் ரொம்பப் பிரயோஜனம் உண்டு; வேண்டுமானால் ஒரு வருஷம் உங்களுக்கு அனுப்புகிறேன். அப்புறம் ஜீவிய சந்தாவைப் பார்க்கலாம் ' ' என்று கடவுளைச் சந்தாதாரராகச் சேர்க்கவும் முயன்றார்.
'பதினேழு வால்யூம்கள் தவிர, இன்னும் இருபத்தைந்து ரூபாயை வாங்கிக்கொண்டு ஓடஓட விரட்டலாம் என்று நினைக்கிறாரா ? அதற்கு ஒரு நாளும் இடம் கொடுக்கக்கூடாது ' என்று யோசித்துவிட்டு, ' 'யாருடைய ஜீவியம் ? ' ' என்று கேட்டார் கடவுள்.
' 'உங்கள் ஆயுள்தான். என் ஆயுளும் அல்ல. பத்திரிகை ஆயுளும் அல்ல; அது அழியாத வஸ்து. நான் போனாலும் வேறு ஒருவர் சித்த வைத்திய தீபிகையை நடத்திக் கொண்டுதான் இருப்பார்; அதற்கும் ஏற்பாடு பண்ணியாச்சு ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.
இந்தச் சமயம் பார்த்து ரிக்ஷாக்காரன் வண்டி வேகத்தை நிதானமாக்கிவிட்டுப் பின்புறமாகத் திரும்பிப் பார்த்தான்.
வேகம் குறைந்தால் எங்கே வண்டியில் இருக்கிற ஆசாமி குதித்து ஓடிப்போவாரோ என்று கந்தசாமிப் பிள்ளைக்குப் பயம்.
' 'என்னடா திரும்பிப் பாக்கிறே ? மோட்டார் வருது மோதிக்காதே; வேகமாகப் போ ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.
' 'என்ன சாமி, நீங்க என்ன மனுசப்பெறவியா அல்லது பிசாசுங்களா ? வண்டிலே ஆளே இல்லாத மாதிரி காத்தாட்டம் இருக்கு ' ' என்றான் ரிக்ஷாக்காரன்.
' 'வாடகையும் காத்தாட்டமே தோணும்படி குடுக்கிறோம்; நீ வண்டியே இஸ்துக்கினு போ ' ' என்று அதட்டினார் கந்தசாமிப் பிள்ளை.
' 'தவிரவும் நான் வைத்தியத் தொழிலும் நடத்தி வருகிறேன்; சித்த முறைதான் அநுஷ்டானம். வைத்தியத்திலே வருவது பத்திரிகைக்கும், குடும்பத்துக்கும் கொஞ்சம் குறையப் போதும். இந்த இதழிலே ரசக் கட்டைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கேன்; பாருங்கோ, நமக்கு ஒரு பழைய சுவடி ஒன்று கிடைத்தது; அதிலே பல அபூர்வப் பிரயோகம் எல்லாம் சொல்லியிருக்கு ' ' என்று ஆரம்பித்தார் கந்தசாமிப் பிள்ளை.
'ஏதேது, மகன் ஓய்கிற வழியாய் காணோமே ' என்று நினைத்தார் கடவுள். ' 'தினம் சராசரி எத்தனை பேரை வேட்டு வைப்பீர் ? ' ' என்று கேட்டார்.
' 'பெருமையாகச் சொல்லிக் கொள்ளும்படி அவ்வளவு ஒன்றுமில்லை. மேலும் உங்களுக்கு, நான் வைத்தியத்தை ஜீவனோபாயமாக வைத்திருக்கிறேன் என்பது ஞாபகம் இருக்க வேண்டும். வியாதியும் கூடுமானவரையில் அகன்று விடக்கூடாது. ஆசாமியும் தீர்ந்துவிடக்கூடாது; அப்பொழுதுதான், சிகிச்சைக்கு வந்தவனிடம் வியாதியை ஒரு வியாபாரமாக வைத்து நடத்த முடியும். ஆள் அல்லது வியாதி என்று முரட்டுத்தனமாகச் சிகிச்சை பண்ணினால் தொழில் நடக்காது. வியாதியும் வேகம் குறைந்து படிப்படியாய்க் குணமாக வேண்டும்; மருந்தும் வியாதிக்கோ மனுஷனுக்கோ கெடுதல் தந்து விடக்கூடாது. இதுதான் வியாபார முறை. இல்லாவிட்டால் இந்தப் பதினேழு வருஷங்களாகப் பத்திரிகை நடத்திக் கொண்டிருக்க முடியுமா ? ' ' என்று கேட்டார் கந்தசாமிப் பிள்ளை.
கடவுள் விஷயம் புரிந்தவர்போலத் தலையை ஆட்டினார்.
' 'இப்படி உங்கள் கையைக் காட்டுங்கள், நாடி எப்படி அடிக்கிறது என்று பார்ப்போம் ' ' என்று கடவுளின் வலது கையைப் பிடித்தார் கந்தசாமிப் பிள்ளை.
' 'ஓடுகிற வண்டியில் இருந்துகொண்டா ? ' ' என்று சிரித்தார் கடவுள்.
' 'அது வைத்தியனுடைய திறமையைப் பொறுத்தது ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.
நாடியைச் சில விநாடிகள் கவனமாகப் பார்த்தார். ' 'பித்தம் ஏறி அடிக்கிறது; விஷப் பிரயோகமும் பழக்கம் உண்டா ? ' ' என்று கொஞ்சம் விநயத்துடன் கேட்டார் பிள்ளை.
' 'நீ கெட்டிக்காரன்தான்; வேறும் எத்தனையோ உண்டு ' ' என்று சிரித்தார் கடவுள்.
' 'ஆமாம், நாம் என்னத்தை யெல்லாமோ பேசிக்கொண்டிருக்கிறோம்; அதிருக்கட்டும், திருவல்லிக்கேணியில் எங்கே ? ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.
' 'ஏழாம் நம்பர் வீடு, ஆபீஸ் வெங்கடாசல முதலி சந்து ' ' என்றார் கடவுள்.
' 'அடெடெ! அது நம்ம விலாசமாச்சே; அங்கே யாரைப் பார்க்க வேண்டும் ? ' '
' 'கந்தசாமிப் பிள்ளையை! ' '
' 'சரியாப் போச்சு, போங்க; நான்தான் அது. தெய்வந்தான் நம்மை அப்படிச் சேர்த்து வைத்திருக்கிறது. தாங்கள் யாரோ ? இனம் தெரியவில்லையே ? ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.
' 'நானா ? கடவுள்! ' ' என்றார் சாவகாசமாக, மெதுவாக. அவர் வானத்தைப் பார்த்துக் கொண்டு தாடியை நெருடினார்.
கந்தசாமிப் பிள்ளை திடுக்கிட்டார். கடவுளாவது, வருவதாவது!
' 'பூலோகத்தைப் பார்க்க வந்தேன்; நான் இன்னும் சில நாட்களுக்கு உம்முடைய அதிதி. ' '
கந்தசாமிப் பிள்ளை பதற்றத்துடன் பேசினார். ' 'எத்தனை நாள் வேண்டுமானாலும் இரும்; அதற்கு ஆட்சேபம் இல்லை. நீர் மட்டும் உம்மைக் கடவுள் என்று தயவு செய்து வெளுயில் சொல்லிக் கொள்ள வேண்டாம்; உம்மைப் பைத்தியக்காரன் என்று நினைத்தாலும் பரவாயில்லை. என்னை என் வீட்டுக்காரி அப்படி நினைத்துவிடக் கூடாது ' ' என்றார்.
' 'அந்த விளக்குப் பக்கத்தில் நிறுத்துடா ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.
வண்டி நின்றது. இருவரும் இறங்கினார்கள்.
கடவுள் அந்த ரிக்ஷாக்காரனுக்குப் பளபளப்பான ஒற்றை ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துக் கொடுத்தார்.
' 'நல்லா இருக்கணும் சாமி ' ' என்று உள்ளம் குளிரச் சொன்னான் ரிக்ஷாக்காரன்.
கடவுளை ஆசீர்வாதம் பண்ணுவதாவது!
' 'என்னடா, பெரியவரைப் பாத்து நீ என்னடா ஆசீர்வாதம் பண்ணுவது ? ' ' என்று அதட்டினார் கந்தசாமிப் பிள்ளை.
' 'அப்படிச் சொல்லடா அப்பா; இத்தனை நாளா காது குளிர மனசு குளிர இந்த மாதிரி ஒரு வார்த்தை கேட்டதில்லை. அவன் சொன்னால் என்ன ? ' ' என்றார் கடவுள்.
' 'அவன்கிட்ட இரண்டணாக் கொறச்சுக் குடுத்துப் பார்த்தால் அப்போ தெரியும்! ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.
' 'எசமான், நான் நாயத்துக்குக் கட்டுப்பட்டவன். அநியாயத்துக்குக் கட்டுப்பட்டவனில்லெ, சாமி! நான் எப்பவும் அன்னா அந்த லெக்கிலேதான் குந்திக்கிட்டு இருப்பேன்; வந்தா பாக்கணும் ' ' என்று ஏர்க்காலை உயர்த்தினான் ரிக்ஷாக்காரன்.
' 'மகா நியாயத்துக்குக் கட்டுப்பட்டவன்தான்! தெரியும் போடா; கள்ளுத் தண்ணிக்கிக் கட்டுப்பட்டவன் ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.
' 'வாடகை வண்டியெ இஸ்துகிட்டு நாள் முச்சூடும் வெயிலிலே ஓடினாத் தெரியும். உன்னை என்ன சொல்ல ? கடவுளுக்குக் கண்ணில்லெ; உன்னியே சொல்ல வச்சான், என்னியே கேக்க வச்சான் ' ' என்று சொல்லிக் கொண்டே வண்டியை இழுத்துச் சென்றான்.
கடவுள் வாய்விட்டு உரக்கச் சிரித்தார். விழுந்து சிரித்தார். மனசிலே மகிழ்ச்சி, குளிர்ச்சி.
' 'இதுதான் பூலோகம் ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.
' 'இவ்வளவுதானா! ' ' என்றார் கடவுள்.
இருவரும் வீட்டை நோக்கி நடந்தார்கள்.
வீட்டுக்கு எதிரில் உள்ள லாந்தல் கம்பத்தின் பக்கத்தில் வந்ததும் கடவுள் நின்றார்.
கந்தசாமிப் பிள்ளையும் காத்து நின்றார்.
' 'பக்தா! ' ' என்றார் கடவுள்.
எதிரில் கிழவனார் நிற்கவில்லை.
புலித் தோலாடையும், சடா முடியும் மானும் மழுவும், பிறையுமாகக் கடவுள் காட்சியளித்தார். கண்ணிலே மகிழ்ச்சி வெறி துள்ளியது. உதட்டிலே புன்சிரிப்பு.
' 'பக்தா! ' ' என்றார் மறுபடியும்.
கந்தசாமிப் பிள்ளைக்கு விஷயம் புரிந்து விட்டது.
' 'ஓய் கடவுளே, இந்தா பிடி வரத்தை என்கிற வித்தை எல்லாம் எங்கிட்டச் செல்லாது. நீ வரத்தைக் கொடுத்துவிட்டு உம் பாட்டுக்குப் போவீர். இன்னொரு தெய்வம் வரும், தலையைக் கொடு என்று கேட்கும். உம்மிடம் வரத்தை வாங்கிக் கொண்டு பிறகு தலைக்கு ஆபத்தைத் தேடிக் கொள்ளும் ஏமாந்த சோணகிரி நான் அல்ல. ஏதோ பூலோகத்தைப் பார்க்க வந்தீர்; நம்முடைய அதிதியாக இருக்க ஆசைப்பட்டார்; அதற்கு ஆட்சேபம் எதுவும் இல்லை. என்னுடன் பழக வேண்டுமானால் மனுஷனைப் போல, என்னைப் போல நடந்து கொள்ள வேண்டும்; மனுஷ அத்துக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டும்; நான் முந்திச் சொன்னதை மறக்காமல், வீட்டுக்கு ஒழுங்காக வாரும் ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.
கடவுள் மெளனமாகப் பின் தொடர்ந்தார். கந்தசாமிப் பிள்ளையின் வாதம் சரி என்று பட்டது. இதுவரையில் பூலோகத்திலே வரம் வாங்கி உருப்பட்ட மனுஷன் யார் என்ற கேள்விக்குப் பதிலே கிடையாது என்றுதான் அவருக்குப்பட்டது.
கந்தசாமிப் பிள்ளை, வாசலருகில் சற்று நின்றார். ' 'சாமி, உங்களுக்குப் பரமசிவம் என்று பேர் கொடுக்கவா ? அம்மையப்பப் பிள்ளை என்று கூப்பிடவா ? ' ' என்றார்.
' 'பரமசிவந்தான் சரி; பழைய பரமசிவம். ' '
' 'அப்போ, உங்களை அப்பா என்று உறவுமுறை வைத்துக் கூப்பிடுவேன், உடன்பட வேணும் ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.
' 'அப்பா என்று வேண்டாமப்பா; பெரியப்பா என்று கூப்பிடும். அப்போதுதான் என் சொத்துக்கு ஆபத்தில்லை ' ' என்று சிரித்தார் கடவுள். பூலோக வளமுறைப்படி நடப்பது என்று தீர்மானித்தபடி சற்று ஜாக்கிரதையாக இருந்துகொள்ள வேண்டும் என்று பட்டது கடவுளுக்கு.
' 'அப்படி உங்கள் சொத்து என்னவோ ? ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.
' 'இந்தப் பிரபஞ்சம் முழுவதுந்தான் ' ' என்றார் கடவுள்.
' 'பயப்பட வேண்டாம்; அவ்வளவு பேராசை நமக்கு இல்லை ' ' என்று கூறிக்கொண்டே நடைப்படியில் காலை வைத்தார் கந்தசாமிப் பிள்ளை.
வீட்டு முன் கூடத்தில் ஒரு தகர விளக்கு அவ்விடத்தைக் கோவிலின் கர்ப்பக் கிருகமாக்கியது. அதற்கு அந்தப் புறத்தில் நீண்டு இருண்டு கிடக்கும் பட்டகசாலை. அதற்கப்புறம் என்னவோ ? ஒரு குழந்தை, அதற்கு நாலு வயது இருக்கும். மனசிலே இன்பம் பாய்ச்சும் அழகு. கண்ணிலே எப்பொழுது பார்த்தாலும் காரணமற்ற சந்தோஷம். பழைய காலத்து ஆசாரப்படி உச்சியில் குறுக்காக வகிடு எடுத்து முன்னும் பின்னுமாகப் பின்னிய எலிவால் சடை வாலை வளைத்துக் கொண்டு நின்றது. முன்புறம் சடையைக் கட்டிய வாழைநார், கடமையில் வழுவித் தொங்கி, குழந்தை குனியும்போதெல்லாம் அதன் கண்ணில் விழுந்து தொந்தரவு கொடுத்தது. குழந்தையின் கையில் ஒரு கரித்துண்டும், ஓர் ஓட்டுத் துண்டும் இருந்தன. இடையில் முழங்காலைக் கட்டிக்கொண்டிருக்கும் கிழிசல் சிற்றாடை. குனிந்து தரையில் கோடுபோட முயன்று, வாழைநார் கண்ணில் விழுந்ததனால் நிமிர்ந்து நின்று கொண்டு இரண்டு கைகளாலும் வாழை நாரைப் பிடித்துப் பலங்கொண்ட மட்டும் இழுத்தது. அதன் முயற்சி பலிக்கவில்லை. வலித்தது. அழுவோமா, அல்லது இன்னும் ஒரு தடவை இழுத்துப் பார்ப்போமா என்று அது தர்க்கித்துக் கொண்டிருக்கும்போது அப்பா உள்ளே நுழைந்தார்.
' 'அப்பா! ' ' என்ற கூச்சலுடன் கந்தசாமிப் பிள்ளையின் காலைக் கட்டிக் கொண்டது. அண்ணாந்து பார்த்து ' 'எனக்கு என்னா கொண்டாந்தே ? ' ' என்று கேட்டது.
' 'என்னைத்தான் கொண்டாந்தேன் ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.
' 'என்னப்பா, தினந்தினம் உன்னியேத்தானே கொண்டாரே; பொரி கடலையாவது கொண்டாரப்படாது ? ' ' என்று சிணுங்கியது குழந்தை.
' 'பொரி கடலை உடம்புக்காகாது; இதோ பார். உனக்கு ஒரு தாத்தாவைக் கொண்டு வந்திருக்கிறேன் ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.
' 'இதுதான் உம்முடைய குழந்தையோ ? ' ' என்று கேட்டார் கடவுள். குழந்தையின் பேரில் விழுந்த கண்களை மாற்ற முடியவில்லை அவருக்கு.
கந்தசாமிப் பிள்ளை சற்றுத் தயங்கினார்.
' 'சும்மா சொல்லும்; இப்போதெல்லாம் நான் சுத்த சைவன்; மண்பானைச் சமையல்தான் பிடிக்கும். பால், தயிர் கூடச் சேர்த்துக் கொள்ளுவதில்லை ' ' என்று சிரித்தார் கடவுள்.
' 'ஆசைக்கு என்று காலம் தப்பிப் பிறந்த கருவேப்பிலைக் கொழுந்து ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.
' 'இப்படி உட்காருங்கள்; இப்பொ குழாயிலே தண்ணீர் வராது; குடத்திலே எடுத்துக் கொண்டு வருகிறேன் ' ' என்று உள்ளே இருட்டில் மறைந்தார் கந்தசாமிப் பிள்ளை.
கடவுள் துண்டை உதறிப் போட்டுவிட்டுக் கூடத்தில் உட்கார்ந்தார். மனசிலே ஒரு துறுதுறுப்பும் எல்லையற்ற நிம்மதியும் இருந்தன.
' 'வாடியம்மா கருவேப்பிலைக் கொழுந்தே ' ' என்று கைகளை நீட்டினார் கடவுள். ஒரே குதியில் அவருடைய மடியில் வந்து ஏறிக் கொண்டது குழந்தை.
' 'எம்பேரு கருகப்பிலைக் கொளுந்தில்லெ; வள்ளி. அப்பா மாத்திரம் என்னெக் கறுப்பி கறுப்பின்னு கூப்பிடுதா; நான் என்ன அப்பிடியா ? ' ' என்று கேட்டது.
அது பதிலை எதிர்பார்க்கவில்லை. அதன் கண்களுக்குத் தாத்தாவின் கண்டத்தில் இருந்த கறுப்பு மறுத்தென்பட்டது.
' 'அதென்ன தாத்தா, கன்னங் கறேலுன்னு நவ்வாப் பழம் மாதிரி களுத்திலே இருக்கு ? அதைக் கடிச்சுத் திங்கணும் போலே இருக்கு ' ' என்று கண்களைச் சிமிட்டிச் சிமிட்டிப் பேசிக்கொண்டு மடியில் எழுந்து நின்று கழுத்தில் பூப்போன்ற உதடுகளை வைத்து அழுத்தியது. இளம்பல் கழுத்தில் கிளுகிளுத்தது. கடவுள் உடலே குளுகுளுத்தது.
' 'கூச்சமா இருக்கு ' ' என்று உடம்பை நெளுத்தார் கடவுள்.
' 'ஏன் தாத்தா, களுத்திலே நெருப்பு கிருப்புப்பட்டு பொத்துப் போச்சா ? எனக்கும் இந்தா பாரு ' ' என்று தன் விரல் நுனியில் கன்றிக் கறுத்துப்போன கொப்புளத்தைக் காட்டியது.
' 'பாப்பா, அது நாகப்பளந்தாண்டி யம்மா; முந்தி ஒரு தரம் எல்லாரும் கொடுத்தாளேன்னு வாங்கி வாயிலே போட்டுக் கொண்டேன். எனக்குப் பங்கில்லியான்னு களுத்தெப் புடிச்சுப்புட்டாங்க. அதிலே இருந்து அது அங்கியே சிக்கிச்கிச்சு; அது கெடக்கட்டும். உனக்கு விளையாடத் தோழிப் பிள்ளைகள் இல்லையா ? ' ' என்று கேட்டார் கடவுள்.
' 'வட்டும் கரித்துண்டும் இருக்கே; நீ வட்டாட வருதியா ? ' ' என்று கூப்பிட்டது.
குழந்தையும் கடவுளும் வட்டு விளையாட ஆரம்பித்தார்கள்.
ஒற்றைக் காலை மடக்கிக்கொண்டே நொண்டியடித்து ஒரு தாவுத் தாவினார் கடவுள்.
' 'தாத்தா, தோத்துப் போனியே ' ' என்று கை கொட்டிச் சிரித்தது குழந்தை.
' 'ஏன் ? ' ' என்று கேட்டார் கடவுள்.
கால் கரிக்கோட்டில் பட்டுவிட்டதாம்.
' 'முந்தியே சொல்லப்படாதா ? ' ' என்றார் கடவுள்.
' 'ஆட்டம் தெரியாமே ஆட வரலாமா ? ' ' என்று கையை மடக்கிக் கொண்டு கேட்டது குழந்தை.
அந்தச் சமயத்தில் ஸ்ரீ கந்தசாமிப் பிள்ளை முன்னே வர, ஸ்ரீமதி, பின்னே குடமும் இடுப்புமாக இருட்டிலிருந்து வெளுப்பட்டார்கள்.
' 'இவுங்கதான் கைலாசவரத்துப் பெரியப்பா; கரிசங்கொளத்துப் பொண்ணை இவுங்களுக்கு ஒண்ணுவிட்ட அண்ணாச்சி மகனுக்குந்தான் கொடுத்திருக்கு. தெரியாதா ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.
' 'என்னமோ தேசாந்திரியாகப் போயிட்டதாகச் சொல்லுவார்களே, அந்த மாமாவா ? வாருங்க மாமா, சேவிக்கிறேன் ' ' என்று குடத்தை இறக்கி வைத்து விட்டு விழுந்து நமஸ்கரித்தாள். காது நிறைந்த பழங்காலப் பாம்படம் கன்னத்தில் இடிபட்டது.
' 'பத்தும் பெருக்கமுமாகச் சுகமாக வாழவேணும் ' ' என்று ஆசீர்வதித்தார் கடவுள்.
காந்திமதி அம்மையாருக்கு (அதுதான் கந்தசாமிப் பிள்ளை மனைவியின் பெயர்) என்றும் அநுபவித்திராத உள்ள நிறைவு ஏற்பட்டது.
' 'வாசலில் இருக்கிற அரிசி மூட்டை அப்படியே போட்டு வச்சிருந்தா ? ' ' என்று ஞாபகமூட்டினார் கடவுள்.
' 'இவுகளுக்கு மறதிதான் சொல்லி முடியாது. அரிசி வாங்கியாச்சான்னு இப்பத்தான் கேட்டேன். இல்லைன்னு சொன்னாக. ஊருக்கெல்லாம் மருந்து கொடுக்காக; இவுக மறதிக்குத்தான் மருந்தைக் காங்கலெ. படெச்ச கடவுள்தான் பக்கத்திலே நின்னு பாக்கணும் ' ' என்றாள், காந்திமதி அம்மாள்.
' 'பாத்துக் கிட்டுத்தான் நிக்காறே ' ' என்றார் கடவுள் கிராமியமாக.
' 'பாத்துச் சிரிக்கணும், அப்பத்தான் புத்தி வரும் ' ' என்றாள் அம்மையார்.
கடவுள் சிரித்தார்.
கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் வாசலுக்குப் போனார்கள்.
' 'அந்தச் செப்பிடுவித்தை எல்லாம் கூடாது என்று சொன்னேனே ' ' என்றார் பிள்ளை காதோடு காதாக.
' 'இனிமேல் இல்லை ' ' என்றார் கடவுள்.
கந்தசாமிப் பிள்ளை முக்கி முனகிப் பார்த்தார்; மூட்டை அசையவே இல்லை.
' 'நல்ல இளவட்டம்! ' ' என்று சிரித்துக்கொண்டே மூட்டையை இடுப்பில் இடுக்கிக் கொண்டார் கடவுள்:
' 'நீங்க எடுக்கதாவது; உங்களைத்தானே, ஒரு பக்கமாத் தாங்கிப் பிடியுங்க; சும்மா பாத்துக்கிட்டே நிக்கியளே! ' ' என்று பதைத்தாள் காந்திமதியம்மாள்.
' 'நீ சும்மா இரம்மா; எங்கே போடனும்ணு சொல்லுதே ? ' ' என்றார் கடவுள்.
' 'இந்தக் கூடத்திலியே கெடக்கட்டும்; நீங்க இங்கே சும்மா வச்சிருங்க ' ' என்று வழி மறித்தாள் காந்திமதியம்மாள்.
கந்தசாமிப் பிள்ளையும் கடவுளும் சாப்பிட்டு விட்டு வாசல் திண்ணைக்கு வரும்பொழுது இரவு மணி பதினொன்று.
' 'இனிமேல் என்ன யோசனை ? ' ' என்றார் கடவுள்.
' 'தூங்கத்தான் ' ' என்றார் பிள்ளை கொட்டாவி விட்டுக்கொண்டே.
' 'தாத்தா, நானும் ஒங் கூடத்தான் படுத்துக்குவேன் ' ' என்று ஓடிவந்தது குழந்தை.
' 'நீ அம்மையெக் கூப்பிட்டுப் பாயும் தலையணையும் எடுத்துப் போடச் சொல்லு ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.
' 'என்னையுமா தூங்கச் சொல்லுகிறீர் ? ' ' என்று கேட்டார் கடவுள்.
' 'மனுஷாள் கூடப் பழகினால் அவர்களைப் போலத்தான், நடந்தாகணும்; தூங்க இஷ்டமில்லை என்றால், பேசாமல் படுத்துக் கொண்டிருங்கள். ராத்திரியில் அபவாதத்துக்கு இடமாகும் ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.
கந்தசாமிப் பிள்ளை பவழக்காரத் தெரு சித்தாந்த தீபிகை ஆபீசில் தரையில் உட்கார்ந்துக் கொண்டு பதவுரை எழுதிக் கொண்டிருக்கிறார். போகர் நூலுக்கு விளக்கவுரை பிள்ளையவர்கள் பத்திரிகையில் மாதமாதம் தொடர்ச்சியாகப் பிரசுரமாகி வருகிறது.
' 'ஆச்சப்பா இன்னமொன்று சொல்லக் கேளு, அப்பனே வயமான செங்கரும்பு, காச்சிய வெந்நீருடனே கருடப்பிச்சு, கல்லுருவி புல்லுருவி நல்லூமத்தை (கருடப் பச்சை என்றும் பாடம்).... ' ' என்று எழுதி விட்டு, வாசல் வழியாகப் போகும் தபாற்காரன் உள்ளே நுழையாமல் நேராகப் போவதைப் பார்த்துவிட்டு, ' 'இன்றைக்கும் பத்திரிகை போகாது ' ' என்று முனகியபடி, எழுதியதைச் சுருட்டி மூலையில் வைத்துவிட்டு விரல்களைச் சொடுக்கு முறித்துக் கொண்டார்.
வாசலில் ரிக்ஷா வந்து நின்றது. கடவுளும் குழந்தையும் இறங்கினார்கள். வள்ளியின் இடுப்பில் பட்டுச் சிற்றாடை; கைநிறைய மிட்டாய்ப் பொட்டலம்.
' 'தாத்தாவும் நானும் செத்த காலேஜ் உசிர் காலேஜெல்லாம் பார்த்தோம் ' ' என்று துள்ளியது குழந்தை.
' 'எதற்காக ஓய், ஒரு கட்டடத்தைக் கட்டி, எலும்பையும் தோலையும் பொதிந்து பொதிந்து வைத்திருக்கிறது ? என்னைக் கேலி செய்ய வேண்டும் என்ற நினைப்போ ? ' ' என்று கேட்டார் கடவுள். குரலில் கடுகடுப்புத் தொனித்தது.
' 'அவ்வளவு ஞானத்தோடே இங்கே யாரும் செய்து விடுவார்களா ? சிருஷ்டியின் அபூர்வத்தைக் காட்டுவதாக நினைத்துக் கொண்டுதான் அதை எல்லாம் அப்படி வைத்திருக்கிறார்கள். அது கிடக்கட்டும்; நீங்க இப்படி ஓர் இருபத்தைந்து ரூபாய் கொடுங்கள்; உங்களை ஜீவிய சந்தாதாராகச் சேர்த்து விடுகிறேன்; இன்று பத்திரிகை போய் ஆகவேணும் ' ' என்று கையை நீட்டினார் பிள்ளை.
' 'இது யாரை ஏமாற்ற ? யார் நன்மைக்கு ? ' ' என்று சிரித்தார் கடவுள்.
' 'தானம் வாங்கவும் பிரியமில்லை; கடன் வாங்கும் யோசனையும் இல்லை; அதனால்தான் வியாபாரார்த்தமாக இருக்கட்டும் என்கிறேன். நன்மையைப் பற்றிப் பிரமாதமாகப் பேசிவிட்டார்களே! இந்தப் பூலோகத்திலே நெய் முதல் நல்லெண்ணைவரையில் எல்லாம் கலப்படந்தான். இது உங்களுக்குத் தெரியாதா ? ' ' என்று ஒரு போடு போட்டார் கந்தசாமிப் பிள்ளை.
கடவுள் யோசனையில் ஆழ்ந்தார்.
' 'அதிருக்கட்டும், போகரிலே சொல்லியிருக்கிறதே, கருடப்பச்சை; அப்படி ஒரு மூலிகை உண்டா ? அல்லது கருடப்பிச்சுதானா ? ' ' என்று கேட்டார் கந்தசாமிப் பிள்ளை.
' 'பிறப்பித்த பொறுப்புதான் எனக்கு; பெயரிட்ட பழியையும் என்மேல் போடுகிறீரே, இது நியாயமா ? நான் என்னத்தைக் கண்டேன் ? உம்மை உண்டாக்கினேன்; உமக்குக் கந்தசாமிப் பிள்ளையென்று உங்க அப்பா பெயர் இட்டார்; அதற்கும் நான்தான் பழியா ? ' ' என்று வாயை மடக்கினார் கடவுள்.
' 'நீங்கள் இரண்டு பேரும் வெயிலில் அலைந்து விட்டு வந்தது கோபத்தை எழுப்புகிறது போலிருக்கிறது. அதற்காக என்னை மிரட்டி மடக்கி விட்டதாக நினைத்துக் கொள்ள வேண்டாம்; அவசரத்தில் திடுதிப்பென்று சாபம் கொடுத்தீரானால், இருபத்தைந்து ரூபாய் வீணாக நஷ்டமாய்ப் போகுமே என்பதுதான் என் கவலை ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.
பொட்டலத்தை அவிழ்த்துத் தின்றுகொண்டிருந்த குழந்தை, ' 'ஏன் தாத்தா அப்பாகிட்டப் பேசுதே ? அவுங்களுக்கு ஒண்ணுமே தெரியாது; இதைத் தின்னு பாரு, இனீச்சுக் கெடக்கு ' ' என்று கடவுளை அழைத்தது.
குழந்தை கொடுக்கும் லட்டுத் துண்டுகளைச் சாப்பிட்டுக் கொண்டே, ' 'பாப்பா, உதுந்தது எனக்கு, முழுசு உனக்கு! ' ' என்றார் கடவுள்.
குழந்தை ஒரு லட்டை எடுத்துச் சற்று நேரம் கையில் வைத்துக் கொண்டே யோசித்தது.
' 'தாத்தா, முழுசு வாய்க்குள்ளே கொள்ளாதே. உதுத்தா உனக்குன்னு சொல்லுதியே. அப்போ எனக்கு இல்லையா ? ' ' என்று கேட்டது குழந்தை.
கடவுள் விழுந்து விழுந்து சிரித்தார். ' 'அவ்வளவும் உனக்கே உனக்குத்தான் ' ' என்றார்.
' 'அவ்வளவுமா! எனக்கா! ' ' என்று கேட்டது குழந்தை.
' 'ஆமாம். உனக்கே உனக்கு ' ' என்றார் கடவுள்.
' 'அப்புறம் பசிக்காதே! சாப்பிடாட்டா அம்மா அடிப்பாகளே! அப்பா லேவியம் குடப்பாகளே! ' என்று கவலைப்பட்டது குழந்தை.
' 'பசிக்கும். பயப்படாதே! ' ' என்றார் கடவுள்.
' 'தாங்கள் வாங்கிக் கொடுத்திருந்தாலும், அது ஹோட்டல் பட்சணம். ஞாபகம் இருக்கட்டும் ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.
' 'நான்தான் இருக்கிறேனே! ' ' என்றார் கடவுள்.
' 'நீங்கள் இல்லையென்று நான் எப்பொழுது சொன்னேன் ? ' '
என்றார் கந்தசாமிப் பிள்ளை.
சில விநாடிகள் பொறுத்து, ' 'இன்றைச் செலவு போக, அந்த நூறு ரூபாயில் எவ்வளவு மிச்சம் ? ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.
' 'உமக்கு ரூபாய் இருபத்தைந்து போகக் கையில் ஐம்பது இருக்கிறது ' ' என்று சிரித்தார் கடவுள்.
' 'அதற்குப் பிறகு என்ன யோசனை ? ' '
' 'அதுதான் எனக்கும் புரியவில்லை. ' '
' 'என்னைப்போல வைத்தியம் செய்யலாமே! ' '
' 'உம்முடன் போட்டி போட நமக்கு இஷ்டம் இல்லை. ' '
' 'அப்படி நினைத்துக்கொள்ள வேண்டாம். என்னோடே போட்டி போடல்லே; லோகத்து முட்டாள் தனத்தோடே போட்டி போடுகிறீர்கள்; பிரியமில்லை என்றால், சித்தாந்த உபந்நியாசங்கள் செய்யலாமே ? ' '
' 'நீர் எனக்குப் பிழைக்கிறதற்கா வழி சொல்லுகிறீர்;-அதில் துட்டு வருமா ? ' ' என்று சிரித்தார் கடவுள்.
' 'அப்போ ? ' '
' 'எனக்குத்தான் கூத்து ஆட நன்றாக வருமே; என்ன சொல்லுகிறீர் ? தேவியை வேண்டுமானாலும் தருவிக்கிறேன். ' '
கந்தசாமிப் பிள்ளை சிறிது யோசித்தார். ' 'எனக்கு என்னவோ பிரியமில்லை! என்றார்.
' 'பிறகு பிழைக்கிற வழி ? என்னங்காணும். பிரபஞ்சமே எங்கள் ஆட்டத்தை வைத்துத்தானே பிழைக்கிறது ? ' '
' 'உங்கள் இஷ்டம் ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.
கந்தசாமிப் பிள்ளை மறுபடியும் சிறிது நேரம் சிரித்தார்.
' 'வாருங்கள், போவோம் ' ' என்று ஆணியில் கிடந்த மேல் வேட்டியை எடுத்து உதறிப் போட்டுக் கொண்டார்.
' 'குழந்தை ' ' என்றார் கடவுள்.
' 'அதுதான் உறங்குகிறதே; வருகிற வரையிலும் உறங்கட்டும் ' ' என்றார் பிள்ளை.
கால்மணிப் போது கழித்து மூன்று பேர் திவான் பகதூர் பிருகதீசுவர சாஸ்திரிகள் பங்களாவுக்குள் நுழைந்தனர். ஒருவர் கந்தசாமிப் பிள்ளை; மற்றொருவர் கடவுள்! மூன்றாவது பெண்;-தேவி.
' 'நான் இவருக்குத் தங்கபஸ்பம் செய்து கொடுத்து வருகிறேன். நான் சொன்னால் கேட்பார் ' ' என்று விளக்கிக்கொண்டே முன் வராந்தாப் படிக்கட்டுகளில் ஏறினார் பிள்ளை; இருவரும் பின் தொடர்ந்தனர். தேவியின் கையில் ஒரு சிறு மூட்டை இருந்தது.
' 'சாமி இருக்காங்களா; நான் வந்திருக்கேன் என்று சொல்லு ' ' என்று அதிகாரத்தோடு வேலைக்காரனிடம் சொன்னார் கந்தசாமிப் பிள்ளை.
' 'பிள்ளையவர்களா! வரவேணும், வரவேணும்; பஸ்பம் நேத்தோடே தீர்ந்து போச்சே; உங்களைக் காணவில்லையே என்று கவலைப்பட்டேன் ' ' என்ற கலகலத்த பேச்சுடன் வெம்பிய சரீரமும், மல் வேஷ்டியும், தங்க விளிம்புக் கண்ணாடியுமாக ஒரு திவான்பகதூர் ஓடிவந்தது. எல்லோரையும் கும்பிட்டுக் கொண்டே அது சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டது.
' 'உட்காருங்கள், உட்காருங்கள் ' ' என்றார் திவான் பகதூர். கந்தசாமிப் பிள்ளை அவரது நாடியைப் பிடித்துப் பார்த்துக் கொண்டே, ' 'பரவாயில்லை; சாயங்காலம் பஸ்மத்தை அனுப்பி வைக்கிறேன்; நான் வந்தது இவாளை உங்களுக்குப் பரிசயம் பண்ணிவைக்க. இவாள் ரெண்டு பேரும் நாட்டிய சாஸ்திர சாகரம். உங்கள் நிருத்திய கலாமண்டலியில், வசதி பண்ணினா செளகரியமாக இருக்கும் ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.
திவான் பகதூரின் உத்ஸாகம் எல்லாம் ஆமையின் காலும் தலையும் போல் உள் வாங்கின. கைகளைக் குவித்து, ஆள்காட்டி விரல்களையும் கட்டை விரல்களையும் முறையே மூக்கிலும் மோவாய்க் கட்டையிலுமாக வைத்துக் கொண்டு ' 'உம் ' ', ' 'உம் ' ' என்று தலையை அசைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
' 'இவர் பெயர் கூத்தனார்; இந்த அம்மாளின் பெயர் பார்வதி. இருவரும் தம்பதிகள் ' ' என்று உறவைச் சற்று விளக்கி வைத்தார் கந்தசாமிப் பிள்ளை.
' 'நான் கேள்விப்பட்டதே இல்லை; இதற்கு முன் நீங்கள் எங்கேயாவது ஆடியிருக்கிறீர்களா ? ' ' என்று தேவியைப் பார்த்துக் கொண்டு கூத்தனாரிடம் திவான் பகதூர் கேட்டார்.
கடவுளுக்கு வாய் திறக்கச் சந்தர்ப்பம் கொடுக்காமல், ' 'நாங்கள் ஆடாத இடம் இல்லை ' ' என்றாள் தேவி.
`
' 'என்னவோ என் கண்ணில் படவில்லை. இருக்கட்டும்; அம்மா ரொம்பக் கறுப்பா இருக்காங்களே, சதஸிலே சோபிக்காதே என்றுதான் யோசிக்கிறேன் ' ' என்றார் வர்ணபேத திவான் பகதூர்.
' 'பெண் பார்க்க வந்தீரா, அல்லது நாட்டியம் பார்க்கிறதாக யோசனையோ ? ' ' என்று கேட்டாள் தேவி.
' 'அம்மா, கோவிச்சுக்கப்படாது. ஒன்று சொல்லுகிறேன் கேளுங்க; கலைக்கும் கறுப்புக்கும் கானாவுக்கு மேலே சம்பந்தமே கிடையாது. நானும் முப்பது வருஷமா இந்தக் கலாமண்டலியிலே பிரெஸிடெண்டா இருந்து வருகிறேன். சபைக்கு வந்தவர்கள் எல்லாருக்கும் கண்கள்தான் கறுத்திருக்கும். ' '
' 'உம்ம மண்டலியுமாச்ச, சுண்டெலியுமாச்சு! ' ' என்று சொல்லிக் கொண்டே தேவி எழுந்திருந்தாள்.
' 'அப்படிக் கோவிச்சுக்கப்படாது ' ' என்று ஏக காலத்தில் திவான் பகதூரும் கந்தசாமிப் பிள்ளையும் எழுந்திருந்தார்கள்.
' 'இவர்கள் புதுப் புதுப் பாணியிலே நாட்டியமாடுவார்கள். அந்தமாதிரி இந்தப் பக்கத்திலேயே பார்த்திருக்க முடியாது. சாஸ்திரம் இவர்களிடம் பிச்சை வாங்கவேணும். ஒருமுறைதான் சற்றுப் பாருங்களேன் ' ' என்று மீண்டும் சிபார்சு செய்தார் கந்தசாமிப் பிள்ளை.
' 'சரி, பார்க்கிறது; பார்க்கிறதுக்கு என்ன ஆட்சேபம் ?! ' ' என்று சொல்லிக்கொண்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்தார். ' 'சரி, நடக்கட்டும்! ' ' என்று சொல்லிக் கொண்டு இமைகளை மூடினார்.
' 'எங்கே இடம் விசாலமாக இருக்கும் ? ' ' என்று தேவி எழுந்து நின்று சுற்றுமுற்றும் பார்த்தாள்.
' 'அந்த நடு ஹாலுக்குள்ளேயே போவோமே ' ' என்றார் கடவுள். ' 'சரி ' ' என்று உள்ளே போய்க் கதவைச் சாத்திக் கொண்டார்கள். சில விநாடிகளுக்கெல்லாம் உள்ளிருந்து கணீரென்று கம்பீரமான குரலில் இசை எழுந்தது.
' 'மயான ருத்திரனாம்-இவன்
மயான ருத்திரனாம்... ' ' கதவுகள் திறந்தன.
கடவுள் புலித்தோலுடையும், திரிசூலமும், பாம்பும், கங்கையும் சடையும் பின்னிப் புரள, கண்மூடிச் சிலையாக நின்றிருந்தார்.
மறுபடியும் இசை. மின்னலைச் சிக்கலெடுத்து உதறியதுபோல, ஒரு வெட்டு வெட்டித் திரும்புகையில், கடவுள் கையில் சூலம் மின்னிக் குதித்தது; கண்களில் வெறியும், உதட்டில் சிரிப்பும் புரண்டோட, காலைத் தூக்கினார்.
கந்தசாமிப் பிள்ளைக்கு நெஞ்சில் உதைப்பு எடுத்துக் கொண்டது. கடவுள் கொடுத்த வாக்கை மறந்துவிட்டார் என்று நினைத்துப் பதறி எழுந்தார்.
' 'ஓய் கூத்தனாரே, உம் கூத்தைக் கொஞ்சம் நிறுத்தும். ' '
' 'சட்! வெறும் தெருக்கூத்தாக இருக்கு; என்னங்காணும், போர்னியோ காட்டுமிராண்டி மாதிரி வேஷம் போட்டுக் கொண்டு ' ' என்று அதட்டினார் திவான் பகதூர்.
ஆடிய பாதத்தை அப்படியே நிறுத்தி, சூலத்தில் சாய்ந்தபடி பார்த்துக்கொண்டே நின்றார் கடவுள்.
' 'ஓய்! கலைன்னா என்னன்னு தெரியுமாங்காணும் ? புலித்தோலைத்தான் கட்டிக்கொண்டாரே. பாம்புன்னா பாம்பையா புடிச்சுக்கொண்டு வருவா ? பாம்பு மாதிரி ஆபரணம் போட்டுக் கொள்ள வேணும். புலித்தோல் மாதிரி பட்டுக் கட்டிக்கொள்ள வேணும். கலைக்கு முதல் அம்சம் கண்ணுக்கு அழகுங்காணும்! வாஸ்தவமாகப் பார்வதி பரமேசுவராளே இப்படி ஆடினாலும் இது நாட்டிய சாஸ்திரத்துக்கு ஒத்து வராது. அதிலே இப்படிச் சொல்லலே. முதலிலே அந்தப் பாம்புகளையெல்லாம் பத்திரமாகப் புடிச்சுக் கூடையிலே போட்டு வச்சுப்புட்டு வேஷத்தைக் கலையும். இது சிறுசுகள் நடமாடற எடம், ஜாக்கிரதை! ' ' என்றார் திவான் பகதூர்.
ஸ்ரீ கந்தசாமிப் பிள்ளையையும் அவர் லேசில் விட்டு விடவில்லை. ' 'கந்தசாமிப் பிள்ளைவாள்; நீர் ஏதோ மருந்து கொடுத்துக் கொண்டிருக்கிறீர் என்பதற்காக இந்தக் கூத்துப் பார்க்க முடியாது; கச்சேரியும் வைக்க முடியாது; அப்புறம் நாலு பேரோடே தெருவிலே நான் நடமாட வேண்டாம் ? ' '
கால் மணி நேரம் கழித்துச் சித்த வைத்திய தீபிகை ஆபீசில் இரண்டுபேர் உட்கார்ந்துக் கொண்டிருந்தார்கள், தேவியைத் தவிர. குழந்தை பாயில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தது.
இரண்டுபேரும் மெளனமாக இருந்தார்கள். ' 'தெரிந்த தொழிலைக் கொண்டு லோகத்தில் பிழைக்க முடியாதுபோல இருக்கே! ' ' என்றார் கடவுள்.
' 'நான் சொன்னது உங்களுக்குப் பிடிக்கவில்லை; உங்களுக்குப் பிடித்தது லோகத்துக்குப் பிடிக்கவில்லை, வேணும் என்றால் தேவாரப் பாடசாலை நடத்திப் பார்க்கிறதுதானே! ' '
கடவுள், ' 'ச்சு ' ' என்று நாக்கைச் சூள் கொட்டினார்.
' 'அதுக்குள்ளேயே பூலோகம் புளிச்சுப் போச்சோ! ' '
' 'உம்மைப் பார்த்தால் உலகத்தைப் பார்த்தது போல் ' ' என்றார் கடவுள்.
' 'உங்களைப் பார்த்தாலோ ? ' ' என்று சிரித்தார் கந்தசாமிப் பிள்ளை.
' 'உங்களிடமெல்லாம் எட்டி நின்று வரம் கொடுக்கலாம்; உடன் இருந்து வாழ முடியாது ' ' என்றார் கடவுள்.
' 'உங்கள் வர்க்கமே அதற்குத்தான் லாயக்கு ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.
அவருக்குப் பதில் சொல்ல அங்கே யாரும் இல்லை. மேஜையின் மேல் ஜீவிய சந்தா ரூபாய் இருபத்தைந்து நோட்டாகக் கிடந்தது.
' 'கைலாசபுரம் பழைய பரமசிவம் பிள்ளை, ஜீவிய சந்தா வரவு ரூபாய் இருபத்தைந்து ' ' என்று கணக்கில் பதிந்தார் கந்தசாமிப் பிள்ளை.
' 'தாத்தா ஊருக்குப் போயாச்சா, அப்பா ? ' ' என்று கேட்டுக் கொண்டே எழுந்து உட்கார்ந்தது குழந்தை.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
To unsubscribe from this group, send email to panbudan+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.
ஹலோ,
இன் டூ த வைல்ட் - பாத்தவுங்க ஆராச்சும் இருக்கீயளா. இந்தக் கதைல அந்தப்
படத்தோட சாயல் அடிக்ற மாதிரியில்ல.
குழந்தை ஒரு லட்டை எடுத்துச் சற்று நேரம் கையில் வைத்துக் கொண்டே யோசித்தது.
' 'தாத்தா, முழுசு வாய்க்குள்ளே கொள்ளாதே. உதுத்தா உனக்குன்னு சொல்லுதியே. அப்போ எனக்கு இல்லையா ? ' ' என்று கேட்டது குழந்தை.
கடவுள் விழுந்து விழுந்து சிரித்தார். ' 'அவ்வளவும் உனக்கே உனக்குத்தான் ' ' என்றார்.//
மாரியம்மாளின் ஆத்தாளுக்கு முதலில் திகைப்பாயிருந்தது. இந்த வேகாத வெயில்ல இந்தக் கழுத ஏன் இப்படி தவிச்சுப் போயி ஓடியாந்திருக்கு என்று புரியவில்லை.
‘‘ஓம் மாப்பிள்ளை வல்லியாடி’’ என்று கேட்டதுக்கு ‘பொறு பொறு’ங்கிற
மாதிரி கையைக் காமிச்சிட்டு விறுவிறுன்னு உள்ள போயி ரெண்டு செம்பு தண்ணியை
கடக்குக் கடக்குன்னு குடிச்சிட்டு ‘ஸ்… ஆத்தாடி’ன்னு உட்கார்ந்தாள்.
‘‘ஓம் மாப்பள்ளை வல்லியாடி?’’
‘‘அவரு… ராத்திரி பொங்க வைக்கிற நேரத்துக்கு வருவாராம். இந்நியேரமே வந்தா
அவுக யேவாரம் கெட்டுப் போயிருமாம்.’’
‘‘சரி… அப்பன்னா நீ சித்த வெயில் தாழக் கிளம்பி வாறது… தீயாப் பொசுக்குற
இந்த வெயில்ல ஓடியாராட்டா என்ன…’’
‘‘ஆமா. அது சரி… பொங்கலுக்கு மச்சான் அவுக வந்திருக்காகளாமில்ல…’’
ஆத்தாளுக்கு இப்ப விளங்கியது.
அவளுடைய மச்சான் – ஆத்தாளின் ஒரே தம்பியின் மகன் தங்கராசு இன்னிக்கி
நடக்கிற காளியம்மங்கோயில் பொங்கலுக்காக டவுனிலிருந்து வந்திருக்கான். அது
தெரிஞ்சுதான் கழுத இப்படி ஓடியாந்திருக்கு.
‘‘மதியம் கஞ்சி குடிச்சிட்டு கிளம்பினியாட்டி’’ என்று கேட்டதுக்கு கழுத ‘இல்லை’ யென்கவும் ஆத்தா கஞ்சி ஊத்தி முன்னால் வைத்து குடிக்கச் சொன்னாள்.
உடம்பெல்லாம் காய்ஞ்சு போயி காதுல கழுத்தில ஒண்ணுமேயில்லாம கருத்துப் போன அவளைப் பார்க்கப் பார்க்க ஆத்தாளுக்குக் கண்ணீர்தான் மாலை மாலையாக வந்தது. தங்கராசு மச்சானுக்குத்தான் மாரியம்மா என்று சின்னப் பிள்ளையிலேயே எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். கள்ளன் – போலீஸ் விளையாட்டிலிருந்து காட்டிலே கள்ளிப்பழம் பிடுங்கப் போகிற வரைக்கும் ரெண்டு பேரும் எந்நேரமும் ஒண்ணாவேதான் அலைவார்கள். கடைசிக்கி இப்படி ஆகிப்போச்சே என்று ஆத்தாளுக்கு ரொம்ப வருத்தம். எப்படியெல்லாமோ மகளை வச்சிப் பாக்கணுமின்னு ஆசைப்பட்டிருந்தாள்.
பேச்சை மாற்றுவதற்காக ‘‘அண்ணன் எங்கத்தா’’ என்று கேட்டாள். ‘‘நீங்க ரெண்டு பேரும் வருவீக, அரிசிச் சோறு காச்சணும்னிட்டு அரிசி பருப்பு வாங்கியாறம்னு டவுனுக்கு போனான்.’’ கஞ்சியைக் குடித்துவிட்டு சீனியம்மாளைப் பார்க்க விரைந்தாள் மாரி. சீனியம்மள்தான் மச்சான் வந்திருக்கிற சேதியை டவுணுக்கு தீப்பெட்டி ஒட்டப் போன பிள்ளைகள் மூலம் மாரியம்மாளுக்குச் சொல்லிவிட்டது. சேதி கேள்விப்பட்டதிலிருந்தே அவள் ஒரு நிலையில் இல்லை. உடனே ஊருக்குப் போகணுமென்று ஒத்தக்காலில் நின்றாள். ஆனால், அவள் புருஷன் உடனே அனுப்பி விடவில்லை. நாளைக் கழிச்சுப் பொங்கலுக்கு இன்னைக்கே என்ன ஊரு என்று சொல்லிவிட்டான். அவ அடிக்கடி ஊருக்கு ஊருக்குன்னு கிளம்பறது அவனுக்கு வள்ளுசாப் பிடிக்கவில்லை. அவ ஊரு இந்தா மூணு மைலுக்குள்ளே இருக்குங்கிறதுக்காக ஒன்ரவாட்டம் ஊருக்குப் போனா எப்படி? அவ போறதப் பத்திகூட ஒண்ணுமில்ல. போற வட்டமெல்லாம் கடையிலேருந்து பருப்பு, வெல்லம் அது இதுன்னு தூக்கிட்டு வேற போயிர்றா. இந்தச் சின்ன ஊர்லே யேவாரம் ஓடுறதே பெரிய பாடா இருக்கு. இப்ப கோயில் கொடைக்குப் போணுமின்னு நிக்கா என்று வயிறு எரிந்தான். ஆனாலும், ஒரேடியாக அவளிடம் முகத்தை முறிச்சுப் பேச அவனுக்கு முடியாது. அப்பிடி இப்பிடியென்று ரெண்டு புலப்பம் புலம்பி அனுப்பி வைப்பான்.
இதைப் பத்தியெல்லாம் மாரிக்கு கவலை கிடையாது. அவளுக்கு நினைத்தால் ஊருக்குப் போயிறணும். அதுவும் மச்சான் அவுக வந்திருக்கும்போது எப்பிடி இங்க நிற்க முடியும்?
அவ பிறந்து வளர்ந்ததே தங்கராசுக்காத்தான் என்கிற மாதிரி யல்லவா வளர்ந்தாள். அவள் நாலாப்புப் படிக்கிறபோது தங்கராசின் அப்பாவுக்கு புதுக்கோட்டைக்கு மாற்றலாகி குடும்பத்தோடு கிளம்பியபோது அவள் போட்ட கூப்பாட்டை இன்னைக்கும் கூட கிழவிகள் சொல்லிச் சிரிப்பார்கள். நானும் கூட வருவேன் என்று தெருவில் புரண்டு கையைக் காலை உதறி ஒரே கூப்பாடு. அதைச் சொல்லிச் சொல்லி பொம்பிள்ளைகள் அவளிடம், ‘‘என்னட்டி ஒம் புருசங்காரன் என்னைக்கு வாரானாம்’’ என்று கேலி பேசுவார்கள். ஆனால், அவள் அதையெல்லாம் கேலியாக நினைக்கவில்லை. நிசத்துக்குத்தான் கேட்கிறார்கள் என்று நம்புவாள். ஊர்ப் பிள்ளைகளெல்லாம் கம்மாய் தண்ணியில் குதியாளம் போடும்போது இவள் மட்டும் கம்மாய் பக்கமே போக மாட்டாள். சும்மாத் தண்ணியிலே குதிச்சா சொறிபிடித்து மேலெல்லாம் வங்கு வத்தும். டவுன்ல படிக்கிற மச்சானுக்குப் பிடிக்காது. அதேபோல கஞ்சியக் குடிச்சி வகுறு வச்சிப்போயி மச்சான் ‘ஒன்னைக் கட்ட மாட்டேன்’னு சொல்லிட்டா என்னாகுறது? சும்மா மச்சான் மச்சான் என்று சொல்லிக்கொண்டிருந்தவள் பெரிய மனுஷியானதும் மச்சானைப் பத்தி நினைக்கவே வெட்கமும் கூச்சமுமாயிருந்தது. கொஞ்ச நாளைக்கி. வெறும் மச்சானைப் பத்தின நினைப்போடு அப்புறம் கனாக்களும் வந்து மனசைப் படபடக்க வைத்தன. டவுனுக்கு தீப்பெட்டி ஒட்டப் போகையிலும் வரையிலும், ஓட்டும்போதும் மச்சானின் நினைப்பு இருந்துகொண்டே இருக்கும்.
பஞ்சத்திலே பேதி வந்து அவ அய்யா மட்டும் சாகாம இருந்திருந்தா
மச்சானுக்குப் பொருத்தமா அவளும் படிச்சிருப்பா. அது ஒரு குறை மட்டும் அவ
மனசிலே இருந்து கொண்டிருந்தது. அதுவும் போயிருச்சு மச்சான் ஒரு தடவை அவுக
தங்கச்சி கோமதி கலியாணத்துக்கு பத்திரிகை வைக்க வந்தபோது. எந்த
வித்தியாசமும் பாராம ஆத்தாளோடவும் அண்ணனோடவும் ரொம்பப் பிரியமா
பேசிக்கிட்டிருந்த மச்சானை கதவு இடுக்கு வழியாப் பாத்துப் பாத்து
பூரிச்சுப் போனா மாரியம்மா.
மச்சானைப் பத்தின ஒவ்வொரு சேதியையும் சேர்த்துச் சேர்த்து மனசுக்குள்ளே
பூட்டி வச்சிக்கிட்டா. வருஷம் ஓடினாலும் பஞ்சம் வந்தாலும் அய்யா செத்துப்
போயி வயித்துப் பாட்டுக்கே கஷ்டம் வந்தாலும் அவனைப் பத்தின நினைப்பு
மட்டும் மாறவே இல்லை. அதனாலேதான் தங்கராசு அவளுக்கில்லை என்று ஆன
பிறகும்கூட அவளால் அண்ணனையும் ஆத்தாளையும் போலத் துப்புரவாக வெறுத்துவிட
முடியவில்லை.
அவளுக்கு நல்லா ஞாபகம் இருக்கு, மாமனும் அத்தையும் வந்தது. தங்கராசு மச்சான் கலியாணத்துக்கு பரிசம் போடத்தான் மாமனும் அத்தையும் வருவாகன்னு இருந்தபோது, வேற இடத்திலே பொண்ணையும் பாத்து பத்திரிகையும் வச்சிட்டு சும்மாவும் போகாம மாமா அண்ணங்கிட்டே, ‘‘கலியாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னக்கூட்டியே வந்திரணும்பா. கோமதி கலியாணத்தை முடிச்சு வச்ச மாதிரி வேலைகளையும் பொறுப்பா இருந்து நீதான் பாத்துக் கணுமப்பா’’ என்று வேறு சொல்லிவிட்டுப் போனார். அவுக அங்கிட்டுப் போகவும் ஆத்தாளிடம் வந்து அண்ணன் ‘தங்கு தங்’கென்று குதித்தான். ‘‘என்னய என்ன சுத்தக் கேணப்பயனு நெனச்சுட்டாகளா’’ என்று. ‘கோமதி கலியா ணத்துக்கு எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு அண்ணன் செய்தான்னு சொன்னா அது நாளக்கி நம்ம தங்கச்சி வந்து வாழப் போற வீடு, நாம வந்து ஒத்தாசை செய்யாட்டா யாரு செய்வா என்று நினைத்து செய்தது. ஆனா, இப்படி நகைநட்டுக்கு ஆசைப்பட்டு மாமா அந்நியத்தில போவாகன்னு யாரு கண்டது. என்ன மாமானும் மச்சானும்.’ என்று வெறுத்துவிட்டது அவனுக்கு.ஆனால், அண்ணன் ஏறிக்கொண்டு பேசியபோது ஆத்தா பதிலுக்கு கூப்பாடுதான் போட்டாள்.
‘‘என்னடா குதிக்கே? படிச்சு உத்தியோகம் பாக்குற மாப் பிள்ளை
தீப்பெட்டியாபீசுக்கு போயிட்டு வந்து வீச்ச மெடுத்துப் போயிக் கெடக்கிற
கழுதயக் கட்டுவான்னு நீ நெனச்சுக்கிட்டா அவுக என்னடா செய்வாக’’ என்று
ஆத்திரமாகப் பேசினாள். அப்படி அப்போதைக்குப் பேசினாலும் அன்னைக்கு ராத்திரி
செத்துபோன அய்யாவிடம் முறையீடு செய்து சத்தம் போட்டு ஒப்பாரி வைத்தாள்.
‘‘ஏ… என் ராசாவே… என்ன ஆண்டாரே! இப்பிடி விட்டுப் போனீரே… மணவடையிலே வந்து
முறைமாப்பிள்ளை நானிருக்க எவன் இவ கழுத்தில தாலி கட்டுவான்னு சொல்லி என்னச்
சிறையெடுத்து வந்தீரே… இப்பிடி நிர்க்கதியா நிக்க விடவா சிறையெடுத்தீர்
ஐயாவே… தம்பீ தம்பீன்னு பேகொண்டு போயி அலைஞ்சேனே… அவனைத் தூக்கி வளத்தேனே…
என் ராசாவே… எனக்குப் பூமியிலே ஆருமில்லாமப் போயிட்டாகளே…’’
பக்கத்துப் பொம்பிளைகளெல்லாம் வைதார்கள், ‘‘என்ன இவளும் பொம்பளதான…
அப்பயும் இப்படியா ஒப்பாரி வச்சு அழுவாக’’ என்று.
பிறகு அண்ணன் வந்து, ‘‘இப்பம் நீ சும்மாருக்கியா என்ன வேணுங்கு’’ என்று அரட்டவும்தான் ஒப்பாரியை நிப்பாட்டினாள்.
மறுநாள் அண்ணன், ‘‘தங்கராசு கலியாணத்துக்கு ஒருத்தரும்
போகப்புடாது’’ன்னு சொன்னபோது மறுபேச்சுப் பேசாமல் ஆத்தாளும் சரியென்று
சொல்லிவிட்டாள்.
‘அவனுக்கும் நமக்கும் இனிமே என்ன இருக்கு’ என்று சொல்லிவிட்டாள்.
ஆனால், மாரியம்மா அப்படியெல்லாம் ஆகவிடவில்லை. பலவாறு அண்ணனிடமும்
ஆத்தாளிடமும் சொல்லிப் பார்த்தாள். ஒன்றும் மசியாமல் போக, கடைசியில்…
‘நீங்க யாரும் மச்சான் கலியாணத்துக்குப் போகலைன்னா நான் நாண்டுக்கிட்டுச்
செத்துருவேன்’ என்று ஒரு போடு போட்டதும் சரியென்று அண்ணன் மட்டும்
கலியாணத்துக்குப் போய்வந்தான். எம்புட்டோ கேட்டுப்பாத்தும் கலியாணச் சேதி
எதையும் அவன் மாரியம்மாளுக்கோ ஆத்தாளுக்கோ சொல்லவில்லை.
‘எல்லாம் முடிஞ்சது’ என்பதோடு நிறுத்திக்கொண்டான்.
தன் பிரியமான மச்சானின் கல்யாணம் எப்பிடியெல்லாம் நடந்திருக்கும் என்று
மாரியம்மாள் தினமும் பலவாறாக தீப்பெட்டி ஒட்டியபடிக்கே நினைத்து நினைத்துப்
பார்ப்பாள்.
‘எங்கிட்டு இருந்தாலும் நல்லாருக்கட்டும்’ என்று கண் நிறைய, மனசு துடிக்க
வேண்டிக்கொள்வாள்.
தங்கராசு கலியாணத்துக்குப் போய்விட்டு வந்த அண்ணன் சும்மா இருக்கவில்லை. அலைஞ்சு பெறக்கி இவளுக்கு மாவில்பட்டியிலேயே அய்யா வழியில் சொந்தமான பையனை மாப்பிளை பார்த்துவிட்டான். சின்ன வயசிலே நாகலாபுரத்து நாடார் ஒருத்தர் கடையில் சம்பளத்துக்கு இருக்க மெட்ராசுக்குப் போய் வந்த பையன். மாரியம் மாளோட நாலு பவுன் நகையை வித்து மாவில்பட்டியிலேயே ஒரு கடையையும் வைத்துக் கொடுத்துவிட்டான்.
இத்தனைக்குப் பிறகும், கோவில் கொடைக்கு மச்சான் வந்திருக்காகன்னு தெரிஞ்சதும் உடனே பாக்கணுமின்னு ஓடியாந்துட்டா. அவுக எப்படி இருக்காக? அந்த அக்கா எப்படி இருக்காக? மச்சானும் அந்த அக்காளும் நல்லா பிரியமா இருக்காகளான்னு பாக்கணும் அவளுக்கு.
ஆனா, வந்த உடனேயே மச்சானையும் அந்த அக்கா ளையும் பார்க்கக் கிளம்பிவிடவில்லை. மத்தியான நேரம், சாப்புட்டு சித்த கண்ணசந்திருப்பாக என்று இருந்துவிட்டு சாயந்தி ரமாகப் போனாள்.
கட்டிலில் படுத்தவாக்கில் பாட்டையாவுடன் பேசிக் கொண்டிருந்தான் மச்சான்.
‘‘குடும்புடுறேன் மச்சான்’’
என்று மனசு படபடக்கச் சொல்லிவிட்டு உள்ளே போனாள். தங்கராசின் அப்பத்தாளும் அந்த அக்காளும் அடுப்படியில் வேலையாக இருந்தார்கள். பொன்னாத்தா இவளைப் பிரியத்துடன் வரவேற்றாள். அந்த அக்கா ரொம்ப லட்சணமாக இருந்தார்கள். நகைநட்டு ரொம்ப போட்ருப் பாகன்னு பாத்தா அப்படி ஒண்ணும் காணம். கழட்டி வச்சிருப்பாக என்று நினைத்துக்கொண்டாள். ரொம்ப பிரியம் நிறைந்த பார்வையுடன் அந்த அக்காளுடன் வாஞ்சையோடு பேசினாள் மாரியம்மா.
‘பேசிக்கிட்டிருங்க, இந்தா வாரே’ன்னு பொன்னாத்தா கடைக்கு ஏதோ வாங்கப் போகவும் மாரியம்மா அந்த அக்காளிடம் இன்னும் நெருங்கி கிட்ட உட்கார்ந்து கொண்டு கைகளைப் பாசத்துடன் பற்றிக் கொண்டாள். ரகசியமான, அதே சமயம் ரொம்பப் பிரியம் பொங்கிய குரலில், ‘‘யக்கா… மாசமாயிருக்கிகளா’’ என்று ஆர்வத்துடன் கேட்டாள்.
பட்டென்று அந்த அக்கா ஒரு நெடிப்புடன்,
‘‘ஆம, அது ஒண்ணுக்குத்தான் கேடு இப்பம்’’
என்று சொல்லிவிட்டாள். மாரியம்மாளுக்குத் தாங்க முடிய வில்லை. அதைச்
சொல்லும்போது லேசான சிரிப்புடன்தான் அந்த அக்கா சொன்னாலும் அந்த
வார்த்தைகளில் ஏறியிருந்த வெறுப்பும் சூடும் அவளால் தாங்க முடியாததாக,
இதுநாள் வரையிலும் அவள் கண்டிராததாக இருந்தது. ஒரு ஏனத்தைக் கழுவுகிற
சாக்கில் வீட்டின் பின்புறம் போய் உடைந்து வருகிற மனசை அடக்கிக் கொண்டாள்.
உள்ளே மச்சான் அவுக பேச்சுக்குரல் கேட்டது.
‘‘மாரியம்மா போயிட்டாளா’’ என்று உள்ளே வந்த மச்சான் அந்த அக்காளிடம்’’ ‘‘காப்பி குடிச்சிட்டியா ஜானு’’ என்று பிரியமாகக் கேட்டதும் படக்குனு அந்த அக்கா,
‘‘ஆஹாகாகா… ரொம்பவும் அக்கறைப்பட்டுக் குப்புற விழுந்துறாதிக…’’ என்று
சொல்லிவிட்டது.
ரொம்ப மெதுவான தொண்டையிலே பேசினாலும் அந்தக் குரல் இறுகிப்போய் வெறுப்பில்
வெந்து கொதிக்கிறதாய் இருந்தது.
வெளியே நின்றிருந்த மாரியம்மாளுக்கு தலையை வலிக்கிற மாதிரியும் காய்ச்சல் வர்ற மாதிரியும் படபடன்னு வந்து. கழுவின ஏனத்தை அப்படியே வைத்துவிட்டு பின்புறமாகவே விறுவிறுவென்று வீட்டுக்கு வந்து படுத்துக்கொண்டாள்.
ஆத்தாளும் அண்ணனும் கேட்டதுக்கு ‘மண்டையடிக்கி’ என்று சொல்லிவிட்டாள்.
சிறு வயசில் கள்ளிப்பழம் பிடுங்கப் போய் நேரங்கழித்து வரும்போது வழியில் தேடி வந்த மாமாவிடம் மாட்டிக் கொண்டு முழித்த தங்கராசின் பாவமான முகம் நினைப்பில் வந்து உறுத்தியது. தண்ணியைத் தண்ணியைக் குடித்தும் அடங்காமல் நெஞ்சு எரிகிற மாதிரியிருந்தது. அந்த அக்காளின் வீட்டில் நகைநட்டு குறையாகப் போட்டதுக்காக தங்கராசின் அம்மா ரொம்ப கொடுமைப்படுத்துகிறாளாம் என்று சீனியம்மா சொன்னதும், அந்த அக்காள் கொடும் வெறுப்பாகப் பேசினதும் நினைப்பில் வந்து இம்சைப் படுத்தியது.
எல்லாத்துக்கும் மேலே அந்த வார்த்தைகளது வெறுப்பின் ஆழம், தாங்க முடியாத வேதனையைத் தந்தது. ராத்திரி ஊரோடு கோயில் வாசலில் பொங்கல் வைக்கப் போயிருந்தபோது இவ மட்டும் படுத்தே கிடந்தாள். ஒவ்வொன்றாக சிறுவயதில் அவனோடு பழகினது… அய்யாவைப் பத்தி… ஆத்தாளைப் பத்தி… அண்ணனைப் பத்தி… எல்லோரும் படுகிற பாட்டைப் பத்தி… அந்த அக்காளைப் பத்தி நினைக்கக்கூட பெருந்துன்பமாயிருந்தது. குமுறிக்கொண்டு வந்தது மனசு.
ராத்திரி நேரங்கழித்து அவ புருஷன் வந்தான். ரெண்டு நாளாய் நல்ல யேவாரம்
என்றும் தேங்காய் மட்டுமே முப்பத்திரெண்டு காய் வித்திருக்கு என்றும்
பொரிகடலைதான் கடைசியில் கேட்டவுகளுக்கு இல்லையென்று சொல்ல வேண்டியதாப்
போச்சு என்றும் உற்சாகமாக ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தான். திடீரென்று
இவள் ஏதுமே பேசாமல் ஊமையாக இருப்பதைக் கண்டு எரிச்சலடைந்து, ‘‘ஏ நாயி, நாம்
பாட்டுக்கு கத்திக்கிட்டிருக்கேன். நீ என்ன கல்லுக்கணக்கா இருக்கே’’
என்று முடியைப் பிடித்து ஒரு உலுக்கு உலுக்கினான்.
உடனே அணை உடைத்துக் கொண்டதுபோல ஏங்கி அழ ஆரம்பித்தாள். அவன் பதறிப்போய் தெரியாமல் தலையைப் பிடித்துவிட்டேன் என்று சொல்லி, தப்புத்தான் தப்புத்தான் என்று திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்தான். அவள் அழுகை நிற்கவில்லை. மேலும் மேலும் ஏக்கமும் பெருமூச்சம் வெடிப்பும் நடுக்கமுமாய் அழுகை பெருகிக் கொண்டு வந்தது.
ஏதோ தான் பேசிவிட்டதற்காகத்தான் அவள் இப்படி அழுகிறாள் என்று நினைத்துக்கொண்டு ரொம்ப நேரத்துக்கு அவளை வீணே தேற்றிக் கொண்டிருந்தான் அவன்.
(நன்றி: ச.தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்)
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
மெளனி (நன்றி : மணிக்கொடி 1937)
---------------------------
வழக்கமாகக் காலையில் அவனைப் பார்க்கப் போவது போல நான் அன்று செல்லவில்லை. உதயத்திலிருந்தே உக்கிரமாக வெய்யில் அடித்தது. தெளிவுற விளங்காத ஒருவித அலுப்பு மேலிட்டதனால் நான் வீட்டை விட்டே வெளிக்------கிளம்பவில்லை. மாலையில் சென்று அவனைப் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணி, மிக உஷ்ணமான அன்று பகலை, என் வீட்டிலேயே கழித்தேன்.
நேற்று முன்தினம் இது நிகழ்ந்தது. மாலை நாலரை மணி சுமாருக்கு நான் அவன் வீட்டை அடைந்தே.ன். அவன் என் பாலிய சிநேகிதன். நான் சென்றபோது, தன் வீட்டின் முன் அறையில், அவன் வழக்கம்போல் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தான். திறந்த ஜன்னலுக்கு எதிரே உட்கார்ந்து இருந்த அவன் ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருப்பதாக எண்ணித் திடீரென உட்புகச் சிறிது தயங்கினபடியே ரேழியில் நின்றேன். என் பக்கம் பாராமலே, என்னை அவன் உள்ளே அழைத்தது திடுக்கிடத்தான் செய்தது. அவனுடைய அப்போதைத் தோற்றமும் கொஞ்சம் ஆச்சரியமளிப்பதாகவே இருந்தது. உள்ளே ஒரே நாற்காலியும் அதன் அருகில் ஒரு மேஜையும் இருந்தன. மற்றும் எதிரில் வீதிப் பக்கம் ஜன்னல் திறந்திருந்தது.
`காபி சாப்பிட்டாகிவிட்டதா?’ என்று கேட்டுக்-கொண்டே நான் உள்ளே நுழைத்தேன்.
`இல்லை’ என்றான்.
`என்ன?’
`ஆமாம். காலை முதல் இங்கே உட்கார்ந்தபடிதான் இருக்கிறேன் _ யோசனைகள்_’ எனக் கொஞ்சம் சிரித்தபடி கூறினான்.
என் நண்பன் சிரிப்பதை மறந்து விட்டான் என்பதும், எனக்குத் தெரிந்து சமீப காலத்தில் சிரித்ததே இல்லை என்பதும் உண்மை. அப்போது அவன் சிரித்ததும் உணர்ச்சி இழந்த நகைப்பின் ஒலியாகத்தான் கேட்டது. அவன் பேசின தொனியும், என்னைப் பாராது வெளியே வெறித்துப் பார்க்கும் பார்வையும் எனக்கு என்னவோ போல் இருந்தன. மேலே நான் யோசிக்க ஆரம்பிக்குமுன் அவன் பேச ஆரம்பித்தான். அவன் சமீப காலமாக ஒருவித மனிதனாக மாறிவிட்டான்.
`இங்கே வாப்பா; இங்கே இப்படி உட்காரு; எதிரிலே பார்’ என்று சொல்லிக்கொண்டே எழுந்து மேஜையின் மீது அவன் உட்கார்ந்து கொண்டான்; நான் நாற்காலியில் அமர்ந்தேன்.
`நான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து அதோ அங்கே என்ன தெரிகிறது பார்’ என்றான்.
இலையுதிர்ந்து நின்ற ஒரு பெரிய மரம், பட்ட மரம் போன்ற தோற்றத்தை அளித்துக்கொண்டு எனக்கு எதிரே இருந்தது. வேறு ஒன்றும் திடீரென என் பார்வையில் படவில்லை. தனிப்பட்டு, தலைவிரிகோலத்தில் நின்று, மௌனமாகப் புலம்புவது போன்று அம்மரம் எனக்குத் தோன்றியது. ஆகாயத்தில் பறந்து திடீரென அம்மரக் கிளைகளில் உட்காரும் பட்சிகள், உயிர் நீத்தவையேபோல் கிளைகளில் அமைந்து ஒன்றாகும். அவற்றின் குரல்கள் மரண ஒலியாக விட்டுவிட்டுக் கேட்டுக் கொண்டிருந்தன. சிறிது சென்று, ஒன்றிரண்டாகப் புத்துயிர் பெற்றுக் கிளைகளை விட்டு ஜிவ்வெனப் பறந்து சென்றன. அதிக நேரம் அம்மரத்தின் தோற்றத்தைப் பற்றி நான் யோசித்துக் கொண்டிருக்கவில்லை. காலையிலிருந்து உக்கிரமான வெய்யிலில் பாதி மூடிய கண்களுடனும், வெற்று வெளிப்பார்வையுடனும் கண்ட தோற்றங்கள் என் நண்பனுக்கு எவ்வெவ்வகை மனக் கிளர்ச்சிக்குக் காரணமாயினவோ என்பதை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை.
`என்ன?’ என்று அவன் கேட்டது என்னைத் தூக்கிவாரிப் போடும்படி இருந்தது.
`அதோ, அந்த மரந்தான்’ என்றேன்.
`என்ன? மரமா? சரி’ என்று சொல்லிக்கொண்டே உட்கார்ந்தபடியே சிறிது குனிந்து அதைப் பார்த்துவிட்டு அவன் பேசலானான்.
`ஆமாம்; அதுதான்; ஆகாயத்தில் இல்லாத பொருளைக் கண்மூடிக் கை விரித்துத் தேடத் துழாவுவதைப் பார்த்தாயா? ஆடி அசைந்து நிற்கிறது அது; ஆட்டம் ஓய்ந்து நிற்கவில்லை..... மெல்லெனக் காற்று மேற்கிலிருந்து அடிக்கும். காதல் முகந்த மேகங்கள், கனத்து மிதந்து வந்து அதன்மேல் தங்கும்...... தாங்காது தளர்ந்து ஆடும்...... விரிக்கப்பட்ட சாமரம் போன்று ஆகாய வீதியை மேகங்களிலிருந்து சுத்தப்படுத்துவதா அது....? அல்லது தளிர்க்கும் பொருட்டு மழைத்துளிகளுக்கு ஏங்கியா நிற்கிறது...? எதற்காக...?’
`என்ன நீ பெரிய கவியாகிவிட்டாயே! ஏன் உனக்கு இவ்வளவு வேகமும் வெறுப்பும்.....!’ என்றேன். அவன் பேச்சும் வார்த்தைகளும் எனக்குப் பிடிக்கவில்லை.
`சொல்லுகிறேன் கேள்: நேற்று நேற்று என்று காலத்தைப் பின்கடத்தி மனம் ஒன்பது வருஷத்திற்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்திற்குச் சென்று நின்றது. அந்த நிகழ்ச்சியை நினைப்பூட்டிக் கொண்ட பிறகு என் நிலை தடுமாறிப் போய்விட்டது. என்னவெல்லாமோ என் மனம் சொல்ல முடியாத வகையில் அடித்துக்கொள்ளுகிறது. அவ்வளவுதான்...’ எனச் சொல்லி நிறுத்தினான். அவன் கண்கள், காண முடியாத அசரீரியான ஏதோ வஸ்துவைப் பார்க்கத் துடிப்பதுபோல என்றுமில்லாதபடி ஜொலித்தன. என்னிடம் சொல்லுவதற்கு அல்ல என்பதை அவன் பேசும் வகை உணர்த்தியது.
`ஆம், ஒன்பது வருஷத்துக்கு முன்பு நான் கல்லூரி மாணவன். எனக்கு அப்போது வயது பதினெட்டு, அக்கால நிகழ்ச்சி ஒன்றே இன்று காலை முதல் பல்லவியாகப் பலவிதமான கற்பனையில் தோன்றுகிறது. அப்போது நான் பார்ப்பதற்கு எப்படி இருப்பேன் என்பது உனக்கு ஞாபகம் இருக்கலாம்...’
`நன்றாக... நீ...’
`சரி, சரி, என் நீண்ட மூக்கு, முகத்திற்கு வெகு முன்பாக நீண்டு செல்லுபவர்களைத் திருப்பி இழுப்பது போல வளைந்திருக்கும். அதன் கீழ் மெல்லிய உதடுகள் மிருதுவாகப் பளீரென்ற பல் வரிசைகளைப் பிறர் கண்கூசச் சிறிது காண்பிக்கும். அப்போதுதான் நான் கிராப் புதிதாகச் செய்து கொண்டேன். நீண்டு கறுத்துத் தழைத்திருந்த என் கூந்தலைப் பறிகொடுத்ததாகவே பிறர் நினைக்கும்படி, படியாத என் முன் குடுமியை, என் கையால் நான் அடிக்கடி தடவிக்கொள்ளுவேன். குறுகுறுவென்ற கண்களோடு என் அழகிலேயே நான் ஈடுபட்டு மதிப்பும் கொண்டிருந்தேன். அப்போது என்னை அநேகர் பார்த்திருக்கலாம். என்னைப் பற்றிய அவர்களுடைய எண்ணங்களை நான் கண்டுகொள்ளவில்லை. இப்போதோவெனின் நான் பார்ப்பது வறட்டுப் பார்வைதான். என்னுடைய கண்கள் வறண்டவை தாமே! என் அழகு இளமையிலேயே முடிவடைந்து விட்டது போலும். ஆனால், என் வாழ்க்கை இளமையில் முடியவில்லையே. அவளும் என்னைப் பார்த்தது உண்டு.’
`அவள் யார்?’ என்றேன் நான்.
`ஆமாம், அவளும்: சொல்லுவதைக் கேள். நான் கோவிலுக்குப் போய் எத்தனை வருஷமாகிறது? அந்தத் தினத்திற்குப் பின்பு, நேற்று வரையில் நான் கோவிலுக்குப் போனதில்லை. அதற்கு முன் அடிக்கடி போய்க்கொண்டு இருந்தேன். நீயும் என்னோடு வருவதுண்டே. நான் சொல்லும் அன்றிரவிலும் நீ என் பக்கத்தில் இருந்தாய்.
`அது திருவிழா நாள் அல்ல... அவளும் வந்திருந்தாள். அவள் வருவது எனக்குத் தெரியாது. நாம் கோவிலை விட்டு வெளி வந்தபோது உள்ளே போய்க் கொண்டிருந்த அவளை இருவரும் கோவில் வாயிலில் சந்தித்தோம். அவளுக்கு அப்போது வயது பதின்மூன்று இருக்கலாம். அவள் சட்டென்று என்னைத் திரும்பிப் பார்த்தாள். அவள் பார்வையைத் திருப்பியது நானாக இருக்கலாம். ஆனால் திரும்பி, உன்னையும் கூட்டிக்கொண்டு அவள் பின்னோடு உள் செல்ல என்னை இழுத்தது எது? எனக்குத் தெரியவில்லை. அப்போதைய சிறு பிள்ளைத்தனமாக இருக்கலாம். காதல், அது, இது என்று காரணம் காட்டாதே. காரணமற்றது என்றாலும் மனக்குறைவு உண்டாகிறது. கர்வந்தான் காரணம் என்று வைத்துக் கொள்.
`அவள் பின்னோடு நான் சென்றேன். அநேகந்தரம் அவளைத் தொடக்கூடிய அளவு அவ்வளவு சமீபம் நான் நெருங்கியதும் உண்டு. என் வாய் அடிக்கடி ஏதோ முணுமுணுத்ததும் உண்டு. அது எதையும் சொல்வதற்கல்ல என்பது எனக்குத் தெரியும். ஏனெனில் சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை.
`ஈசுவர சந்நிதியில் நின்று தலை குனிந்து அவள் தியானத்தில் இருந்தாள். அவளுக்குப் பின் வெகு சமீபத்தில் நான் நின்றிருந்தேன். அவளுடைய கூப்பிய கரங்களின் இடை வழியாகக் கர்ப்பக்கிருகச் சரவிளக்குகள் மங்கி வெகு தூரத்திற்கு அப்பாலே பிரகாசிப்பதாகக் கண்டேன். அவன் கண்கள், விக்கிரகத்திற்குப்பின் சென்று வாழ்க்கையின் ஆரம்ப இறுதி எல்லைகளைத் தாண்டி இன்ப மயத்தைக் கண்டுகளித்தனபோலும்! எவ்வளவு நேரம் அப்படி இருந்தனவோ தெரியாது. `காலம்’ அவள் உருவில், அந்தச் சந்நிதியில் ஓடாமல் சமைந்து நின்றுவிட்டது.
`தியானத்தினின்றும் விடுபட்டு என் பக்கம் அவள் திரும்பிய போது ஒரு பரவசம் கொண்டவனேபோல என்னையும் அறியாதே `உனக்காக நான் எது செய்யவும் காத்து இருக்கிறேன்; எதையும் செய்ய முடியும்’ என்று சொல்லி விட்டேன்! நீயும், அவளுடன் வந்தவர்களும் சிறிது எட்டி நின்றிருந்தீர்கள். உங்கள் காதுகளில் அவ்வார்த்தைகள் விழவில்லை. ஆனால் அவள் காதில் விழுந்தன என்பது நிச்சயம். அவள் சிரித்தாள்.
`அவளுக்கு மட்டுந்தானா நான் சொன்னது கேட்டது என்பதில் எனக்கு அப்போதே சந்தேகம். உள்ளிருந்த விக்கிரகம் எதிர்த் தூணில் ஒன்றி நின்ற யாளி அவையும் கேட்டு நின்றன என்று எண்ணினேன். எதிரே லிங்கத்தைப் பார்த்தபோது கீற்றுக்குமேலே சந்தனப் பொட்டுடன் விபூதி அணிந்த அந்த விக்கிரகம், உருக்கொண்டு புருவஞ் சுழித்துச் சினங்கொண்டது. தூணில் ஒன்றி நின்ற யாளியும் மிகமருண்டு பயந்து கோபித்து முகம் சுழித்தது; பின்கால்களில் எழுந்து நின்று பயமூட்டியது. அவளைப் பார்த்தேன். அவள் மறுபக்கம் திரும்பி இருந்தாள். பின்னிய ஜடை பின்தொங்க, மெதுவாகத் தன்னோடு வந்தவர்களுடன் சென்றாள். நான் அவளைச் சிறிது தொடர்ந்து நோக்கி நின்றேன். ஆழ்ந்து அமுங்கிய உலக நிசப்தத்தைக் குலைக்க அவளுடைய சதங்கைகள் ஒலிக்கும் ஒலி அவசியம் போலும்! வந்தவர்களுடன் குதூகலமாகப் பேசி, வார்த்தைகளாடிக்-கொண்டே கால் சதங்கைகள் கணீரென்று ஒலிக்கப்போய் விட்டாள். சந்நிதியின் மௌனம் அவளால் உண்டான சப்தத்தின் எதிரொலியில் சிதைவுற்றது. வௌவால்கள் கிரீச்சிட்டுக் கொண்டு குறுக்கும் நெடுக்குமாகப் பறந்தன.’
என் நண்பன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே என் மனம் ஓடியது. அது கட்டுக்கடங்காமல் சித்திரம் வரைய ஆரம்பித்தது _ கோவில், சந்நிதானம், ஆம். பகலிலும் பறக்கும் வௌவால்கள் பகலென்பதையே அறியாதுதான் கோவிலில் உலாவுகின்றன.
பகல் ஒளி பாதிக்குமேல் உட்புகத் தயங்கும். உள்ளே, இரவின் மங்கிய வெளிச்சத்தில் சிலைகள் ஜீவ களைகொண்டு நிற்கின்றன. ஆழ்ந்த அனுபவத்திலும் அந்தரங்கத்திலும் மௌனமாகக் கொள்ளும் கூடமான பேரின்ப உணர்ச்சியை வளர்க்கச் சிறப்பித்ததுதானா கோவில்? கொத்து விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும். அதன் பிரகாசத்தில் நடமாடும் பக்தர்களுக்கும், அவர்கள் நிழலுக்கும் வித்தியாசம் காணக்கூடாத திகைப்பைக் கொடுக்கும். அச்சந்நிதானம் எந்த உண்மையை உணர்த்த ஏற்பட்டது? நாம் சாயைகள்தாமா.....? எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?_என்பன போன்ற பிரச்னைகளை என் மனம் எழுப்பியபோது, ஒரு தரம் என் தேகம் முழுவதும் மயிர்க்கூச்செறிந்தது.
என் நண்பனின் பார்வை மகத்தானதாக இருந்தது. ஏதோ ஒரு வகையில், ஒரு ரகசியத்தை உணர்ந்த அவன் பேச்சுக்கள் உன்னதமாக என் காதில் ஒலித்துக்-கொண்டிருந்தன. பேச்சினால் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியாது என நினைக்கும்போது அவன் சிறிது தயங்கி நிற்பான். அப்போது அவன் கண்கள் பிரகாசத்தோடு ஜொலிக்கும்.
`அவள் சென்றாள், பிராகாரத்தைச் சுற்றிவர. பின்னப்பட்டிருந்த அவள் கூந்தல் மெதுவாக அசைந்து ஆடியது. அவள் நடை அமுத்தலாக அவளை முன் செலுத்தியது. `பின்தொடர் பின்தொடர்’ என என் மனத்தில் மறுக்க முடியாதபடி ஓர் எண்ணம் தோன்றியது. வெளியில் நான் வாய்விட்டுச் சொல்லவில்லை. பிராகார ஆரம்பத்தில் ஒரு வில்வ மரம் இருந்தது. அதன் இலைகளின் ஊடே நிலவு தெளிக்கப்பட்டு வெண்மைத் திட்டுகளாகப் படிந்து தெரிந்தது. `பிரியமானவளே என்னைப் பார்’ என்று மனத்தில் நான் சொல்லிக் கொண்டேன். அவள் என்னைத் திரும்பிப் பார்த்தாள். அவளும் `பின்தொடர்’ என்று சொல்லுவதைத்தான் அவள் பார்வையில் கண்டேன். ஏதோ ஒரு சப்தம் கேட்டது. அது தலைகீழாகத் தொங்கும் ஒரு வௌவாலின் சப்தம்; காதில் சிரித்து மனத்தில் மரண பயத்தைக் கொடுக்கும் சப்தம். வில்வ மரத்தடியிலிருந்து அவளைத் தொடர்ந்து நோக்கி நின்றேன். பிறகு அவள் பின்தொடரச் சென்றுகொண்டு இருந்தேன்.
`பகல் போன்று நிலவு காய்ந்தது. பின் நீண்டு தொடர்ந்த அவள் நிழலேபோன்று நானும் அவளைத் தொடர்ந்தேன். மூலைத் திருப்பத்திற்குச் சிறிது முன்பு அவள் என்னைப் பார்க்கத் திரும்பினாள். நான் சொன்ன வார்த்தைகளைத் திருப்பிக்கொள்ளும்படிக் கேட்டுக் கெஞ்சுவது போல அவள் பார்வை இருந்தது. அவள் வருத்தத்திலும் வசீகரமாகத் தோன்றினாள். அருகில் நெருங்கிய நான் மறுபடியும் ஒரு தரம் `என்ன வேண்டுமானாலும் உனக்காக_’ என்று ஆரம்பித்தவன் முழுவதும் சொல்லி முடிக்கவில்லை. நான் திரும்பி வேகமாக வந்துவிட்டேன். அவளும் கீழ்ப் பிராகாரத்திற்குச் சென்றுவிட்டாள். வில்வ மரத்தடியில் நின்றிருந்த உன்னை அடைந்தேன். இருவரும் பேசாது வீடு சேர்ந்தோம்.’
அவன் பேச்சைக் கொஞ்சம் நிறுத்தியபோது, `யார் அவள்? எனக்கு ஞாபகமில்லையே?’ என்று கேட்டேன். என்னுடைய கேள்வி அவன் மனத்திலேபடவில்லை. அவன் மேலே பேச ஆரம்பித்தான். எனக்கு ஆத்திரம் மூண்டது.
`அன்று முதல் நான் கோவிலுக்குப் போவதை நிறுத்திவிட்டேன்; எதற்காக நின்றேன் என்பது எனக்குத் தெரியாது. சுபாவமாகத்தான் போவது நின்றுவிட்டது என்று நினைத்தேன்.
`நேற்று இரவு என் மனம் நிம்மதி கொண்டு இருக்கவில்லை. எங்கேயோ அலையத் தொடங்கியது. கோவிலுக்குச் சென்று ஈசுவர தரிசனம் செய்து வரலாமெனப் புறப்பட்டேன். இரவின் நாழிகை கழித்தே சென்றேன். அதிகக் கூட்டமில்லாமல் இருக்க வேண்டுமென்பதுதான் என்னுடைய எண்ணம். பெரிய கோபுர வாயிலைக் கடக்கும்போதே, சுவாமியின் கர்ப்பக்கிருகம் தெரியும்.
`வெகு காலமாக, ஜோதி கொண்டு ஜொலிப்பது போன்று நிசப்தத்தில் தனிமையாக ஒரு பெரிய சுடர் விளக்கு லிங்கத்தருகில் எரிந்து கொண்டிருக்கும். அது திடீரெனச் சிறிது மறைந்து பழையபடியே அமைதியில் தெரிந்தது. யாரோ ஒரு பக்தன் கடவுளை வழிபட உள்ளே சென்றான் போலும். நான் மெதுவாகப் போய்க்-கொண்டிருந்தேன். உலகின் கடைசி மனிதன் வழிபாட்டை முடித்துக் கொண்டு அநந்தத்திலும் உலகின் அவியாத ஒளியை உலகில்விட்டுச் சென்றதுபோலத் தோன்றின அந்தத் தீபத்தின் மறைவும் தோற்றமும். தூண்டப்படாது என்னுள் எரிந்த ஒளி நிமிர்ந்து ஜொலிக்கத்தான் நேற்று இது நிகழ்ந்தது. கோவிலில் நான் நினைத்தபடி ஒருவரும் இல்லாமல் இல்லை.
`அவளுக்கு இப்போது இருபத்திரண்டு வயது இருக்கலாம். நாகரிகப் பாங்கில் அவள் இருந்தாள். அவளை இப்போது கோவிலில் கண்டதும், என் மனம் வேதனை கொண்டது. எதிர்பாராது நேர்ந்த இந்தச் சந்திப்பினால் அவளிடம் நான் ஒருவகை வெறுப்புக் கொள்ளலானேன். அவள் என்னைத் தெரிந்து கொள்ளவில்லை என்று நினைத்தேன். இப்போது என்னுடைய நாகரிகப் போக்கு எண்ணங்கள் தடுமாறி, மனமாற்றம் கொள்ளும் நிலைமையில் இருப்பதால், அவளுடைய அமுத்தலும் நாகரிக நாசுக்கும் எனக்குச் சிறிது ஆறுதலைக் கொடுத்தன. நான், முன்பு அவள் காது கேட்கச் சொன்னவற்றை நினைத்துக் கொண்டபோது, என்னையே நான் வெறுத்துக் கொள்ளாதபடி, அவள் புதுத் தோற்றம் ஆறுதல் கொடுத்தது. முழு வேகத்தோடு அவளை வெறுத்தேன். ஆனால் அவள் கடவுளின் முன்பு தியானத்தில் நிற்கும்போது தன்னுடைய மேற்பூச்சை அறவே அழித்து விட்டாள். கடவுளின் முன்பு மனிதர்கள் எவ்வளவு எழில் கொள்ள முடிகிறது, எத்தகைய மனக்கிளர்ச்சிக்கு உடன்படுதல் முடிகிறது என்பதை அப்போது நான் உணர்ந்தேன்.
`அவள் தியானத்தின் மகிமை என்னைப் பைத்தியமாக்கிவிட்டது. வெறித்து வெறுமனே நிற்கச் செய்தது; ஓர் இன்ப மயம், ஒரு பரவசம். திரும்பிய அவள் என்னைக் கண்டுகொண்டுவிட்டாள். எதிரில் நின்ற தூணை அவள் சிறிது நேரம் ஊன்றிப் பார்த்தாள். என் வாக்கின் அழியாத சாட்சியாக அமைந்து நின்ற அந்த யாளியும் எழுந்து நின்று கூத்தாடியதைத்தான் நான் பார்த்தேன். மேலே உற்று நோக்கியபோது ஐயோ! மற்றொரு யாளி வெகுண்டு குனிந்து என்னைப் பார்த்துக்கொண்டிருந்தது. அவள் பார்க்குமிடத்தைப் பார்த்து நின்ற என் மனம் பதைத்துவிட்டது. என்னை நோக்கி ஆணை இடுபவளாகத் தோன்றினாள். அவள் பார்வை என்னை ஊடுருவித் துளைத்துச் சென்றது. ஒருவன், தன் உள்ளூற உறைந்த ரகசியத்தை, ஒரு பைத்தியத்தின் பகற்கனாவில் பாதி சொல்லிவிட்டு மறைவது போல அவள் பார்வை என்னை விட்டு அகன்றது. உணர்ச்சிகள் எண்ணங்களாக மாறுமுன், அவள் சொன்னது என்ன என்பதை மனம் புரிந்து கொள்ளுமுன், அவள் போய்விட்டாள். குனிந்த என் தலை நிமிர்ந்தபோது அவள் மறுபடியும் என் பக்கம் திரும்பியதை நான் பார்த்தேன். ஆழமான இருண்ட சுரங்கத்தினின்றும் இருமணிகள் மின்னுவதுபோல இரு சொட்டுக் கண்ணீர் அவள் கண்களினின்றும் உதிர்ந்தது.
`நான் விதியின் நிழல். என்னிடம் காதலின் முழு வசீகரக் கடுமையை நீ காணப்போகிறாய்.
`அவள் என்ன சொன்னாள்? அவள் என்ன செய்யச் சொன்னாள்? நான் என்ன செய்ய இருக்கிறது? எல்லாம் ஒரு கனவுதானா? அவள் பேசவில்லை. சத்தத்தில் என்ன இருக்கிறது; பேச்சில்? உருவில் _ சீ சீ! எல்லாம் அர்த்தமற்றவை_உண்மையை உணர்த்த முடியாதவை; எல்லாம் இருளடைகின்றன. இறுகிய பிடிப்பிலும் துவண்டு புகை போன்று நழுவுகின்றன. ஆனால் எல்லாம் மாயை என்பதை மட்டும் உணர்த்தாது `மேலே அதோ’ என்று காட்டியும் நாம் பார்த்து அதன் வழியே போகத் தெரிந்துகொள்ளுமுன் மறையவுந்தான் இந்தச் சுட்டு விரல்கள் இருக்கின்றன. இருண்ட வழியில் அடையும் தடுமாற்றத்தில் அகஸ்மாத்தாகத் தாண்டிக் குதித்தாவது சரியான வழியை அடைய மாட்டோமா என்ற நம்பிக்கைதான் நமக்கு இருப்பது.
`அதோ மரத்தைப் பார். அதன் விரிக்கப்பட்ட கோடுகள், அதன் ஒவ்வொரு ஜீவ அணுவும் வான நிறத்தில் கலப்பது தெரியவில்லையா? மெல்லென ஆடும்போது அது வான வெளியில் தேடுகிறது. அது குருட்டுத்தனமாகத்தானே அங்கே தேடுகிறது.....?’
நன்றாக இருட்டிவிட்டது. அவன் வெளியில் வெறித்துப்பார்த்துக் கொண்டு இருக்கும்போது, நான் சொல்லிக் கொள்ளாமலே வெளிக் கிளம்பிவிட்டேன்.
வீதியில் வந்ததும் உயரே உற்று நோக்கினேன். இரவின் வளைந்த வானத்திலே கற்பலகையில் குழந்தைகள் புள்ளியிட்டதுபோல எண்ணிலா நட்சத்திரங்கள் தெரிந்தன. தத்தம் பிரகாசத்தை மினுக்கி மினுக்கி எவ்வளவுதான் கொட்டினும், உருகி மடிந்துபடும் அழிவே கிடையாது போல அவைகள் ஜொலித்தன. மேலே இருப்பதை அறிய முடியாத தளர்ச்சியுடன் ஒரு பெருமூச்செறிந்தேன். நடந்து நடந்து வீட்டை அடைந்தேன்.
இன்று காலையில் அவனை வீட்டில் காணோம். அவன் எங்கே எதற்காகச் சென்றானோ எனக்குத் தெரியாது. அவனுக்குத் தெரியுமோ என்பதும் தெரியாது. எல்லாம் `அவனுக்கு’த் தெரியும் என்ற எண்ணந்தான் _ அவன் என்பது இருந்தால்.
------------
(எழுத்தாளர் : மௌனி)
மெளனி
------------
நன்றி : இச்சிறுகதை 1936ல் மணிக்கொடி
இதழில் வெளியானது. கலைஞன் பதிப்பகம் வெளியிட்ட 'இந்த நூற்றாண்டின்
சிறுகதைகள்' என்ற விட்டல் ராவ் தொகுத்த தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.
-----------------
அவன் அவ்வூர் வந்து, மூன்று வருஷம் ஆகிறது. வந்த சமயம், மேல் காற்று நாளே ஆயினும், அன்றைய தினம் உலகத்தின் வேண்டா விருந்தினன் போன்று காற்று அலுப்புறச் சலித்து ரகசியப் புக்கிடமாக, மரக்கிளைகளில் போய் ஓடுங்கியது போன்று அமர்ந்திருந்தது.
அடிக்கடி அவன், தன்
வாழ்க்கைப் புத்தகத்தைப் பிரித்து வெறித்துத் திகைத்து திண்ணையில்
நிற்பதுண்டு. பின் புரட்டுதலில் கவலைக் கண்ணீர் படிந்து, மாசுபட்ட ஏடுகள்,
அவன் மனக்கண்முன் தோன்றும். முன்னே எழுதப்படாத ஏடுகளில், தன் மனப்போக்குக்
கொண்டு எழுதுவதால், பளீரெனத் தோன்றுபவை சில, மங்கி மறைதல் கொள்ளுபவை சில.
இரண்டுமற்று சில நேரத்தில், எதையோ நினைத்து உருகுவான்.
சிற்சில
சமயம், இயற்கையின் விநோதமான அழகுத் தோற்றங்கள் மனதிற்குச் செல்லும்
நேர்பாட்டையைக் கொள்ளும்போது, தன்னை மறந்து அவன் மனம், ஆனந்தம் அடைவதுண்டு.
மற்றும் சிற்சில சமயம், தன்னால் கவலைகளைத் தாங்க முடியாது என்று
எண்ணும்போது, தன்னைவிடக் காற்று அழுத்தமாகத் தாங்கும் என்று எண்ணித் தன்
கவலைகளை காற்றில் விடுவான். ஆனால் சூல் கொண்ட மேகம் மழையை உதிர்ப்பதே
போன்று, அவை காற்றில் மிதந்து பிரிந்து, உலகையே கவலைமயமாக்கிவிடும். எட்டாத
தூரத்தில் வானில் புதைந்து கேலிக் கண்சிமிட்டும் நட்சத்திரங்களைப்
பார்க்கும்போது, அவனது பாழ்பட்ட, பழைய வாழ்க்கை நினைவு எழும் கோபித்து,
வானில் அந்த நட்சத்திரங்களைத் தானே வாரி இறைத்தவன் போன்ற உரிமை
உணர்ச்சியுடன் அவற்றைப் பிடுங்கி, கடலில் ஆழ்த்த எண்ணுவான். அந்தப் புதிய
ஸ்தானத்தில் அவை எவ்வகையாகுமென்ற சந்தேகம் கொண்டவன் போல அண்ணாந்து
நோக்குவான். அவையும், அதே ஐயம் கொண்டு விழிப்பது போன்று, அவனுக்குத்
தோன்றும்.
அவ்வூரின் குறுகிய வீதிகள், நோக நீண்டு உயர்ந்த
வீடுகளைக் கொண்டிருந்தன. மாலை வேளையில், வீடுகளின் மேற்பாகத்திலே சாய்ந்த
சூரியக் கிரணங்கள் விழும்போது, ரகசியக் குகைகளின் வாய்போன்று, இருண்ட உள்
பாகத்தை வீட்டின் திறந்த வாயில்கள் காட்டி நிற்கும், அது ''வா'' வென்ற
வாய்த் திறப்பல்ல. உள்ளே சென்றதும் மறைந்துவிடும் எண்ணங்களை விழுங்க
நிற்கும் அசட்டு வாய்த் திறப்புப் போன்றுதான் தோற்றமளிக்கும்.
அவன்,
அந்தரங்கக் குகையில் மறைந்த எண்ணங்களோவெனில், பழுக்க காய்ந்த சூட்டுக்
கோலால், எழுதப்பட்டனவே போன்று அடிக்கடி எழுந்தன. மழுங்கி மறைந்திருந்த அந்த
நினைவுகளை மிகுந்த அனல் கொண்டு ஜொலித்து எழுச் செய்ய அவனுக்கு ஒரு சிறிய
குழந்தையின் அழுகை போதும், ஒரு காகத்தின் கரைதல் போதும். மூன்று
வருஷங்களுக்கு முன்னால் அவன் சென்றான்.
காலத்தைக் கையைப்
பிடித்து நிறுத்திக் கனிந்த காதலுடன் தழுவினாலும், அது நகர்ந்து சென்று
கொண்டேதான் இருக்கும். ஆனாலும் அவன் பிரிந்த நேரம் அவனுக்கு அப்படியே
நிலைத்து நின்றுவிட்டது. அந்த நிகழ்ச்சி, காலபோக்கில், சலனமடையாது.
அவனுக்கு நின்றது நின்றதுதான். அதுமுதல், உலகிலே உலக வாழ்விலே, ஒருவகை
வெறுப்பைக் கொண்டான். அப்வெறுப்பே, அவன் உள்ளத்தில் கசிந்த தணலாய் கண்களில்
பிரகாசித்து நின்றது. மனது மாறுதலை மிக வேண்டும் நேரத்தில், உலகின்
சந்தோஷத்தை விட மனத்தைத் தாக்கும் துக்கம் வேறொன்றுமில்லை என்பதை அவன்
உணர்ந்தான்; அவனுக்குச் சந்தோஷமே கிடையாது. வெறுப்புத்தான் அவன் மனதில்
நிறைந்திருந்தது.
எட்டி, மேற்கு வெளியில் தெரிந்த சூரியன்,
சிவந்து இருந்தது. கவியும் மேகம், பற்பல வர்ணச் சித்திரமாக அதைச் சுற்றி
அமைந்து, மெழுகி, மெழுகி மாறி மாறிப் பல உருவங்கள் கொண்டது. வாய்விரிந்து
நின்ற ஒரு மேகக் குகையின் மேலிருந்து இறங்கிய நீண்ட வெண்மையான தொன்று
புகுந்து அதனுடன் கலந்து ஒரு உருக்கொள்ளலாயிற்று. மிக அற்புதமான, உன்னத
ஜீவிகளைக் கொண்டு... அப்போது உலகமும் மஞ்சள் நிறத்தில் இன்ப வருத்தமயமாகத்
தோன்றிது.
அவள் கண்கள், அடிக்கடி குறி தவறாது பார்வையை
அவன்மீது வீசி எறிந்து ஜொலித்தன. மாலை வெளிச்சம் மயங்கியது. அப்போது அவள்
உட்சென்று மறைந்துவிட்டாள். அவன் இருந்த வீட்டிற்கு நேர் எதிரே சிறிது
தள்ளி நின்ற தன் விட்டினுள் அவள் சென்றுவிட்டாள். அடிக்கடி அவள் இவனைப்
பார்ப்பது உண்டு. அதனால், இவன் மனபோக்கு கொஞ்சம் மாறுதல் அடைய
இடமேற்பட்டது. அவளது பார்வையால் வாழ்க்கை, நடுவே சிறிது வசீகரம் கொண்டது.
உலகத்திலும் சிறு ஒளி உலாவுவதைக் கொஞ்சம் இவன் உணர ஆரம்பித்தான்.
ஒருநாள் காலை, அவன் அரசமரத் துறைக்கு ஸ்நானம் செய்யச்சென்றான்.
அங்கே, அவள் குளித்துவிட்டுப் புடவை துவைத்துக் கொண்டு இருந்தாள். அவள்
இடம்விட்டுச் சென்றபின், ஸ்நானம் செய்ய எண்ணி அரசமரத்தடியில்
நின்றிருந்தான். அவளுக்குப்பின் சிறு அலைகள் மிதக்கும் குளத்தின் ஜலப்
பரப்பு - எதிர்க்கரையின் ஓரத்தில் நரைத்த நான்கைந்து நாரைகள், ஜலத்தில் தம்
சாயலைக் கண்டு குனிந்து நின்றிருந்தன. வானவெளிச்சம், ஜலப் பரப்பின் மேல்
படர்ந்து தவித்துக் கொண்டிருந்தது. எதிர்க்கரையில் நின்ற சிறு சிறு
மரங்கள், இக்கரையில் நிற்கும் இவளை எட்டித் தொடும் ஆர்வத்தோடு கட்டை
விரல்களில் நின்று குனிந்தனவே போன்று சாய்ந்து இருந்தன. மெல்லெனக் காற்று
வீசியது. குளத்தில் பூத்திருந்த அல்லிப் பூக்களின் தலைகள் ஆடின - அவன்
மனதின் கனம் கொஞ்சம் குறைந்தது.
அவன் தலைக்கு மேலே, சிறிது
பின்னால் ஒரு மீன் கொத்திக் குருவி சிறகடித்துக் குனிந்து நோக்கி நின்றது.
திடீரென்று ஜலத்தில் விழுந்து, ஒரு மீனைக் கொத்திப் பறந்தது; பக்கத்து
மரக்கிளையில் உட்கார்ந்தது. குளத்து மேட்டில், ஒரு குடியானவப் பெண் சாணம்
தட்டிக் கொண்டிருந்தாள். அதை, துவைத்துக் கொண்டிருந்த இவள் பார்த்தாள்.
''எனக்காகத்தான் அதோ தட்டிக் கொண்டிருப்பது - நன்குலர்ந்த பின்,
அடுக்கடுக்காக -" என்று அவள் பார்த்ததாக எண்ணிய இவன் நெஞ்சு உலர்ந்தது.
அவன் அவ்வூர் வந்தபின், அவள் பாடிக் கேட்டதில்லை. அவள் பாடியே
மூன்று வருஷத்திற்கு மேலிருக்கும். அவள் ஒருதரம் நோய்வாய்ப்பாட்டுக்
கிடந்தபோது, அவள் இருதயம் பலவீனப்பட்டு இருப்பதாகச் சொல்லிப் பரிசோதனை
செய்த டாக்டர் அவள் பாடுவது கூடாதென்றார். அது முதல், அவள் சங்கீதம்
அவளுள்ளே உறைந்து கிடந்தது. அவளுக்கு வீணையிலும் பயிற்சி உண்டு. ஒரு தரம்,
அவள் வீணைவாசிக்க அவன் கேட்டான். அதன் பிறகு அவளுடைய சங்கீதத்தைப்
பற்றியும், பிரபஞ்சத்தைப் பற்றியும்அவன் ''அபிப்பிராயமும்
உறுதியாகிவிட்டது'' அவள்தான் சங்கீதம்; பிரபஞ்ச கானம் அவளுள்
அடைபட்டுவிட்டது'' என்று எண்ணலானான். காகத்தின் கரைதலும், குருவிகளின்
ஆரவாரமும், மரத்திடைக் காற்றின் ஓலமும் காதுக்கு வெறுப்பாகி விட்டன.
அவளுடைய சங்கீதம் வெளிவிளக்கம் கொள்ளாததனால் இயற்கையே ஒருவகையில்
குறைவுபட்டது போலவும், வெளியில் மிதப்பது வெறும் வறட்டுச் சப்தம்தான்
என்றும் எண்ணலானான்.
அவன் அவ்வூர் வந்து வெகுநாட்கள்
சென்றவின் ஒரு ஆடி வெள்ளிக்கிழமையன்று, அவள் வீணை வாசிக்கக் கேட்டான். அவள்
வீட்டின் உள்ளே தீபம் எரிந்து கொண்டிருந்தது. முற்றத்தில் பிரகாசமான ஒரு
விளக்கு ஏற்றி மாட்டப்பட்டிருந்தது. திறந்த வாயிற்படியின் வழியாக, இருண்ட
வீதியின் நடுவே குறுக்காக முற்றத்து வெளிச்சம் படர்ந்து தெரிந்தது. உள்ளே,
அவள் தம்பி படித்துக் கொண்டிருந்தான். கூடத்திலிருந்து வீணை மீட்டும் நாதம்
கேட்டது. அவள் வாசிக்க ஆரம்பித்தாள். இவன், எதிர்வீட்டுத் திண்ணையில்
ஒருபுறமாக இருள் மறைவில் நின்று கேட்டான்.
சுமார் ஒன்றரை
மணி நேரம் வாசித்தாள். அவ்வளவு நேரமும் ஒரே வினாடி போலக் கழிந்துவிட்டது.
உலகமே குமுறி சங்கீத மயமானதாக நினைத்தான். அவள் வாசித்துக் கொண்டிருக்கும்
போதே நடுவில் இவன் மனதில் பளீரென்று ஒரு எண்ணம் தோன்றியது. அதை உதற முடியாத
ஓர் உண்மையென உணர்ந்தான். அவள் பாட்டின் பாணியும் அதைப் பலப்படுத்தியது.
இவன் மனத்தில் ஒருவகைப் பயம் தோன்ற ஆரம்பித்து, உடல் குலுங்கியது. அவள்
முடிக்கும் முன்பே தன் இதயம் பிளந்துவிடுமென நினைத்தான். அவள் வாசிப்பதை
நிறுத்திவிட மாட்டாளா என்று துடித்துக் கொண்டே கேட்டு நின்றான்.
''ஆம், அவள் பாடுவது கூடாது; டாக்டர் சொல்லியது உண்மையானால் முடிவு
நிச்சயம். ஆனால், அவள் முடிவு... பாட்டினாலா அவள் முடிவு? அவர் நினைக்கும்
காரணத்தினாலன்று'' மனோவேகத்தின் பலனாகப் பிறந்த ஒரு உணர்ச்சி அவன்
உள்ளத்தில் ஒரு அற்புதத் தத்துவமாக மாறியது.
அதன் பின்பு,
மனக் களங்கமின்றியும் கூடுமானவரையில் தன் சாயையின் சம்பந்தமற்றதுமான ஒருபுற
உணர்வைக் கொண்டும் மேலே சிந்தனைகளை எழுப்புவான். அப்படியும் தான் முன்
உணர்ந்ததையே மனத்தில் உறுதிப்படுத்திக் கொண்டான் - ''இயற்கை'' ஏதோ ஒரு
வகையில் குறைவுபட்டது என்ற எண்ணம் - பிரபஞ்ச கானமும், வசீகரமும் திரண்டு
அவளாக உருக்கொண்டதனால்தான் அந்தக் குறைவு என்ற நிச்சயம், உறுதிப்பட்டது.
நிலவு பூப்பது விரசமாகத் தோன்றியது அவனுக்கு. அந்தியில் ஆந்தைகள்
பொந்துவாயில் அலறுவது வெலித்தியாகக் கேட்டது. உலக சப்தங்களே பாழ்பட்டு
ஒலித்தன. தன் உன்மத்த மிகுதியில் சுருதி கலைந்த வீணையில் தேர்ச்சி பெற்ற
ஒருவன் வாசிக்கும் கானங்கள்தான் இந்தச் சப்தங்கள். சுருதி ஓடி அவளிடம்
ஒளிந்து கொண்டு ''இயற்கை'' அன்னை அளிக்கக்கூடிய, அளிக்க வேண்டிய இன்பம்
பாதிக்குமேல் (சப்த ரூபத்திலும், காட்சி ரூபத்திலும்) அவளிடம் அடங்கி
மறைந்து போய்விட்டது. மேலே யோசிக்கும் போது, ''இழந்ததைப் பெற இயற்கைச்
சக்தி'' முயலுவதையும், தனியாகப் பிரிந்து அவளாக உருக்கொண்ட பிரபஞ்சகானமும்,
வசீகரமும் வெளியே பரந்துபட முயலுவதையும் யாரால் எவ்வளவு நாள், எப்படித்
தடுக்க முடியும்? அவள் முடிவு பாட்டினால்'' என்ற எண்ணம் வலுவாக எழுந்து
நின்றது. அடிக்கடி அவன் மனது அதனால் மிகுந்த துக்கமடையும்.
சில
மாதங்கள் சென்றன. அவனுக்கோ அவன் யோசனைகள்தான்; கணநேரம் நீண்டு,
நெங்காலமாயிற்றென்ற எண்ணந்தான்...
அன்று அவன்
கலியாணத்தின், மூன்றாம் நாள், அன்று மாலை நலுங்கு நடந்து கொண்டிருந்தது...
சமீப காலத்தில் அவன் வருத்தம் அதிகமாயிற்று. தன்னுள்
வருத்தமே தனிப்பட்டு அழுதுகொண்டு இரவில் இருள் வழியே உருவற்று
ஊளையிட்டோடியது என்று எண்ணினான் ஓரோர் சமயம். அவள் கலியாணத்தின் முதல்நாள்
இரவு அவனால் உறக்கங் கொள்ள முடியவில்லை. உலகில் அவச்சத்தம் இருளோடு கூடி
மிதந்தது. இரவின் ஒளியற்ற ஆபாசத் தோற்றம்... அவன் நெடுநேரம் திண்ணைத்
தூணில் சாய்ந்து நின்றுகொண்டிருந்தான்.
அவள் வீட்டின் முன்
அறை ஜன்னல் மூடி இருந்தது. பொருந்தாத கதவுகளின் இடைவழியே, உள்
வெளிச்சத்தின் சாய்வு ஒளிரேகை தெருவிலும், இவன் திண்ணைச் சுவரிலும்
படிந்திருந்தது. இவன் உள்ளத்தையும் அது சிறிது தடவி மனஆறுதலை அளித்தது.
ஒருவகை இன்பம் கண்டான். யாரோ குறுக்காக எதிர்வீட்டின் உள்ளே நடப்பதால்
அவ்வொளி ரேகை நடுநடுவே மறைந்து தெரிந்து கொண்டிருந்தது. அது இவனுக்கு
வெகுபுதுமையாகத் தோன்றியது. அதையே, குறித்து நோக்குவான். ''ஆம்... அவள்,
நிதானமற்று, உள்ளே உலாவுகிறாள்... அடைபட்டது, வெளியே போக ஆயத்தம்
கொள்ளுகிறது...!" மேலே அவனால் யோசிக்க முடியவில்லை. அவன் மனம் துக்கம்
அடைந்தது. ஆகாயத்தில், இருட்பாய் விரிப்பின் நடுநடுவே
வெளிச்சப்புள்ளி வர்ணந் தீட்டிக் கொண்டது போன்று எண்ணிலா நட்சத்திரங்கள்
பிரகாசித்தன. அவை ஆழ்ந்த துக்கத்தில் உதிராது, மடியாது, ஐயமுற்று வினாவி
நிற்பவை போன்று தோன்றின இவனுக்கு. ''அவளால், பிரபஞ்ச ஜோதியே, அழகே,
குன்றிவிட்டதுதான் உண்மை''. அப்போது துக்க ஓலத்தில் வாடைக் காற்று வீச
ஆரம்பித்தது. எட்டிபோகும் நரியின் ஊளை, ஒரே இடத்தில் பதிந்து பரவும்
பறைச்சேரி நாய்க் குறைப்பு போன்ற மிகக் கோரமான, சப்தங்கள்தான் இருள்
வெளியில் மிதந்தன. அவளிடம் அடைபட்ட உன்னத கானம் வெளியில் படரும் நாளை
வேண்டிக் கூவும் பிரலாபிப்புப் போன்றுதான் அந்தச் சப்தங்கள் அவன் காதில்
விழுந்தன. தூரத்தில் கிழக்கு அடிவானத்திலிருந்து, புகைந்து மேலோங்கும்
முகில் கூட்டம்.
நன்றாக மழை அடித்து நின்றது. தெருவில்,
உறிஞ்சியது போக மீதி மழை ஜலம் வாய்க்காலாக ஓடியது. மிகுந்தது சிறு சறு
ஜலத்திட்டுகளாக நின்றது. ஒருதரம், அவள் ஜன்னலைத் திறந்து மூடினாள்.
ஒளித்திட்டுக்களாய்த் தோய்ந்து ஜொலித்தது தெரு முழுவதும். சிறு தூரம்
விழுவது நின்றபாடில்லை. ஒரு பூனை தெரு நடுவே, குறுக்காக ஓடியபோது,
வெளிச்சத்தில் விழுந்து மிதந்து மறைந்தது...
கல்யாணம்
மூன்றாம்நாள், நலுங்கு நடந்துகொண்டிருந்தது. கூனிக் குறுகி
உட்கார்ந்திருந்த மாப்பிள்ளை எதிரில் வெற்றிலைத் தாம்பாளத்தைக் கையில்
ஏந்தி அவர் அதை ஏற்றுக்கொள்வதை எதிர்பார்த்து அவள் நின்றிருந்தாள். அவள்
பாட வேண்டுமென்பது அவர் எண்ணம்போலும், சுற்றி இருந்த, மாப்பிள்ளை வீட்டுப்
பெண்கள் இவளைப் பார்த்து ''பாடு பாடு'' என்றார்கள். இவளோ முடியாதென்று
சொல்வது போன்று மெளனமாக நின்றிருந்தாள். இவள் பாடக்கூடாதென்று எண்ணியே,
அவனும் எட்டிய தூணடியில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
பெண்கள் எல்லோரும், இவள் மனது நோக ஏதேதோ பேசினர். அவள் மனது
வெறுப்படைந்தது. ஒருவகை அலக்ஷ¢யம் அவள் கண்களில் தெரிந்தது. எட்டித் தூணில்
சாய்ந்திருந்த அவனை ஒருதரம் பார்த்தாள். இவள் பார்வை, தவறாது, குறி கொண்டு
அவனைத் தாக்கியது. அப்போது உச்சிமேட்டிலிருந்து, ஒரு காகம் விகாரமாகக்
கரைந்து கொண்டிருந்தது. அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தான் இவன்.
பின்னும் ஒருதரம் இவனை விழித்துப் பார்த்தாள். மதுக்குடித்த தேனீக்களைப்
போன்று குறுகுறுவென்றிருந்தன அவன் விழிகள். அவள் உடம்பு ஒரு தரம்
மயிர்சிலிர்த்தது. திடீரென்று ''நான் பாடுகிறேன் - கேட்க வேண்டுமா? சரி
என்றாள் அவள். இவன் மனதோவெனில், நிம்மதியற்று வெடிக்கும் துக்கத்தில்
ஆழ்ந்தது. அவள் விளக்கம் கொண்டு விரிவுபட எண்ணிவிட்டாள் போலும்! அவள் பாட
ஆரம்பித்தாள்.
ஆரம்பித்த அவள் கொஞ்சம் கொஞ்சமாக
மெய்மறந்தாள். சாஸ்திர வரையறுப்பை அறிந்தும் கட்டுப்பாட்டின் எல்லையை
உணர்ந்தும், உடைத்துக் கொண்டு பிரவாகம் போன்று அவள் கானம் வெளிப்பட்டது.
அங்கிருந்த யாவரும் மெய்மறந்தனர்.
தலை கிறுகிறுத்து
ஒன்றும் புரியாமல் இவன் தூணோடு தூணாகி விட்டான்.
அவள்
சங்கீதத்தின் ஆழ்ந்த அறிதற்கரிய ஜீவ உணர்ச்சிக் கற்பனைகள், காதலைவிட ஆறுதல்
இறுதி எல்லையைத் தாண்டிப் பரிமாணம் கொண்டன. மேருவைவிட உன்னதமாயும்,
மரணத்தைவிட மனத்தைப் பிளப்பதாயும், மாதரின் முத்தத்தைவிட ஆவலைத் தூண்டி
இழுப்பதாயும் இருந்தன. மேலே, இன்னும் மேலே, போய்க் கொண்டிருந்தன...
அவள் ஒரு மணி நேரம் பாடினாள். அவளுள் அடைபட்ட சங்கீதம் விரிந்து
வியாபகம் கொள்ளலாயிற்று. வெளி உலகம் கொஞ்சம் கொஞ்சமாக மாறுதல் அடைந்து
கொண்டிருந்தது...
இவன் மனப்புத்தகம், பிரிந்து
உணர்ச்சி மிகுதியில் படிக்கப்பட்டது. ''காலம்'' விறைத்து நின்றுவிட்டது...
அந்தியின் மங்கல் வெளிச்சம் மறையுமுன் மஞ்சள் கண்டது. இவன் முகம் ஒளிகொண்டு
சவக்களை பெற்றிருந்தது.
கடைசிக் காகக் கூட்டத்தின்
ஒருமித்த கரைதல் கூச்சல் கேட்டது. முற்றத்துக் கொட்டகையின் மீது குருவிகள்
உட்கார்ந்துகொண்டு ஆரவாரித்தன. இவன் திடீரென்று, வாய்திறந்து ''ஐயோ...
அதோ... சங்கீதம், இனிமை, இன்பம் எல்லாம் திறந்த வெளியில், நிறைகிறதே...''
என்று கத்தினான், அதே சமயம், அவளும் கீழே சாய்ந்தாள். ''இயற்கை அன்னை'' தன்
குறையை, நிவர்த்தித்துக் கொண்டாள். இழந்ததை, அணைத்துச் சேர்த்துக்
கொண்டாள்... ஆகாயவீதி, அழகு பட்டது. மேக மலை மறைப்பினின்றும் விடுபட்ட
பிறைச்சந்திரன் சோபை மிகுந்து பிரகாசித்தது. வெளியே, அவ்வூர் குறுகிய
விதியே ஒரு களை கொண்டது.
குளக்கரை, அரசமரத்திலிருந்து,
நேர்கிழக்கே, பார்த்தால், வளைந்த வானம் பூமியில் புதைபடும் வரையில்,
கண்வெளி வீதியை மறைக்க ஒன்றுமில்லை. மேற்கே, ஒரு அடர்ந்த மாந்தோப்பு.
காலை நேரம் வந்தது. மூலைமுடுக்குகளிலும், தோப்பின்
இடைவெளிகளிலும், தாமதமாக உலாவி நின்ற மங்கலை ஊர்ந்து துரத்த ஒளிவந்து
பரவியது. பல பல மூலைகளிலிருந்து, பக்ஷ¢க் குரல்கள் கேட்டுப் பதிலளித்துக்
கொண்டிருந்தன. இரவின் இருளைத் திரட்டி அடிவானத்தில், நெருப்பிடப்பட்டதே
போன்று கிழக்கு புகைந்து, சிவந்து, தணல்கண்டது... காலைச் சூரியன்
உதித்தான். சிறிது சென்று, வானவெளியை உற்றுநோக்க இயலாதபடி ஒளி மயமாயிற்று.
உலகப் பேரிரைச்சல், ஒரு உன்னத சங்கீதமாக ஒலித்தது. மனத்தில் ஒரு திருப்தி -
சாந்தி, அவன், வீடு அடைந்தான்.
மாலையில், மேற்கே
நோக்கும் போது மரங்களின் இடைவெளி வழியாக பரந்த வயல் வரப்புக்கள் நேர்க்கோடு
போல் மறைந்து கொண்டிருந்தன. அவை விரிந்து விரிந்து சென்று அடிவானில்
கலக்கும். தூரத்து வரப்புக்களில் வளர்ந்து நின்ற நெட்டைப் பனைமரங்களின்
தலைகள் வானை முட்டி மறைவது போன்று தோன்றும். "வாழ்க்கை...? ஒரு உன்னத
மனவெழுச்சி..'' அவன் பார்த்து நின்றான்.
குளத்துமேட்டு
வறட்டிகள் உலர்ந்து அடுக்கப்பட்டு இருந்தன.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
8. காட்டில் ஒரு மான்
அம்பை
==============
அந்த இரவுகளை மறப்பது கடினம். கதை கேட்ட இரவுகள். தங்கம் அத்தைதான் கதை சொல்வாள். காக்கா-நரி, முயல் ஆமை கதைகள் இல்லை. அவளே இட்டுக் கட்டியவை. கவிதைத்துண்டுகள் போல சில. முடிவில்லா பாட்டுக்கள் போல சில. ஆரம்பம், நடு, முடிவு என்றில்லாமல் பலவாறு விரியும் கதைகள். சில சமயம், இரவுகளில் பல தோற்றங்களை மனதில் உண்டாக்கி விடுவாள். அசுரர்கள், கடவுளர்கள் கூட அவள் கதைகளில் மாறி விடுவார்கள். மந்தரையைப்பற்றி உருக்கமாக சொல்வாள். சூர்ப்பனகை, தாடகை எல்லோரும் அரக்கிகளாக இல்லாமல் உணர்ச்சிகளும், உத்வேகங்களும் கொண்டவர்களாக உருமாறுவார்கள். காப்பியங்களின் பக்கங்களில் ஒட்டிக்கொண்டவர்களை வெளியே கொண்டுவருவாள். சிறகொடிந்த பறவைகளை வருடும் இதத்தோடு அவர்களை வரைவாள் வார்த்தைகளில். இரவு நேரமா, அந்த பழைய வீட்டுக்கூடமா, கூடப்படுத்த சித்தி மாமா குழந்தைகளின் நெருக்கமா என்னவென்று தெரியவில்லை. அந்த கதைகள் வண்டின் ரீங்காரமாய் மனதில் ஒரு மூலையில் ஒலியுடன் சுழன்றவாறிருக்கின்றன.
தங்கம் அத்தை அந்த பழைய தூண்களும் நடுக்கூடமும் உள்ள வீட்டில் பல பிம்பங்களில் தெரிகிறாள். பெரிய மரக்கதவின் மேல் சாய்ந்தவாறு. அகல் விளக்கை புடவை தலைப்பால் மறைத்தபடி ஏந்தி வந்து புறையில் வைத்தபடி. தன் கணவன் ஏகாம்பரத்துக்குச் சோறிட்டவாறு. கிணற்றுச் சுவரில் ஒரு காலை வைத்து கயிற்றை இழுத்துக் கொண்டு. செடிகளுக்கு உரமிட்டவாறு.
தங்கம் அத்தை அழகுக் கறுப்பு. நீவி விட்டாற்போல் ஒரு சுருக்கமும் இல்லாத முகம்., முடியில் நிறைய வெள்ளி. அத்தை வீட்டில் காலால் அழுத்தி இயக்கும் அந்தக் கால ஹார்மோனியம் உண்டு. அத்தைதான் வாசிப்பாள். தேவாரப்பாடல்களிலிருந்து வதனமே சந்திரபிம்பமோ, வண்ணான் வந்தானே வரை மெல்லப்பாடியவாறு வாசிப்பாள். கறுப்பு அலகுகள் போல நீள விரல்கள் ஹார்மோனியக்கட்டைகளின் மேல் கறுத்தப்பட்டாம்பூச்சிகள் மாதிரிப் பறக்கும்.
தங்கம் அத்தையைச்சுற்றி ஒரு மர்ம ஓடு இருந்தது. மற்றவர்கள் அவளைப்பார்க்கும் கனிவிலும், அவளைத் தடவித் தருவதிலும், ஈரம் கசியும் கண்களிலும் அனுதாபம் இருந்தது. ஏகாம்பர மாமாவுக்கு இன்னொரு மனைவியும் இருந்தாள். அத்தையை அவர் பூ மாதிரி அணுகுவார். அவர் அத்தையை டா போட்டு விளித்து யாரும் கேட்டதில்லை. தங்கம்மா என்று கூப்பிடுவார். அப்படியும் அத்தை ஒரு புகைத்திரைக்குப்பின் தூர நிற்பவள் போல் தென்பட்டாள். முத்து மாமாவின் பெண் வள்ளிதான் இந்த மர்மத்தை உடைத்தாள். அவள் கண்டுபிடித்தது புரிந்தும் புரியாமலும் இருந்தது. வள்ளியின் அம்மாவின் கூற்றுப்படி அத்தை பூக்கவே இல்லையாம்.
'அப்படான்னா ? ' என்று எங்களில் பலர் கேட்டோம்.
வள்ளி தாவணி போட்டவள். 'அப்படான்னா அவங்க பெரியவளே ஆகலை ' என்றாள்.
'முடியெல்லாம் நெறய வெளுத்திருக்கே ? '
'அது வேற '
அதன்பின் அத்தையின் உடம்பை உற்றுக் கவனித்தோம். 'பூக்காத ' உடம்பு எப்படி இருக்கும் என்று ஆராய்ந்தோம். அவள் உடம்பு எவ்வகையில் பூரணமடையவில்லை என்று தெரியவில்லை. ஈரத்துணியுடன் அத்தை குளித்துவிட்டு வரும்போது அவள் எல்லோரையும் போலத்தான் தெரிந்தாள். முடிச்சிட்ட சிவப்பு ரவிக்கையும், பச்சைப் புடவையும், முடிந்த தலையுமாய் அவள் நிற்கும்போது அவள் தோற்றம் வித்தியாசமாய்த் தெரியவில்லை. பறவையின் உடைந்த சிறகு போல, அது வெளிப்படையாக தெரியாத பொக்கையா என்று புரியவில்லை.
ஒரு மாலை பட்டுபோன பெரிய மரத்தைத் தோட்டத்தில் வெட்டினார்கள். கோடாலியின் கடைசி வெட்டில் அது சரசரவென்று இலைகளின் ஒலியோடு மளுக்கென்று சாய்ந்தது. குறுக்கே வெட்டியபோது உள்ளே வெறும் ஓட்டை. வள்ளி இடுப்பில் இடித்து, 'அதுதான் பொக்கை ' என்றாள். பிளவுபட்டு, தன்னை முழுவதுமாய் வெளிப்படுத்திக்கொண்டு, உள்ளே ஒன்றுமில்லாமல் வான் நோக்கிக் கிடந்த மரத்துடன் அத்தையின் மினுக்கும் கரிய மேனியை ஒப்பிடமுடியவில்லை.
எந்த ரகசியத்தை அந்த மேனி ஒளித்திருந்தது ? அவள் உடம்பு எவ்வகையில் வித்தியாசப்பட்டது ? வெய்யில் காலத்தில் அத்தை, மத்தியான வேளைகளில் ரவிக்கையை கழற்றிவிட்டு, சாமான்கள் வைக்கும் அறையில் படுப்பாள். அவளருகில் போய்ப்படுத்து, ரவிக்கையின் இறுக்கத்தினின்றும் விடுபட்ட மார்பில் தலையை வைத்து ஒண்டிக்கொள்ளும் போது அவள் மென்மையாக அணைத்துக்கொள்வாள். மார்பு, இடை, கரங்களில் பத்திரப்பட்டுப் போகும்போது எது பொக்கை என்று புரியவில்லை. மிதமான சூட்டுடம்பு அவளுடையது. ரசங்கள் ஊறும் உடம்புடையவளாகப்பட்டாள். சாறு கனியும் பழத்தைப்போல் ஒரு ஜீவ ஊற்று ஓடியது அவள் உடம்பில். அதன் உயிர்ப்பிக்கும் துளிகள் எங்கள் மேனியில் பலமுறை சொட்டியது. தொடலில், வருடலில், எண்ணை தேய்க்கும் போது படும் அழுத்தத்தில், அவள் உடம்பிலிருந்து கரை புரண்டு வரும் ஆற்றைப்போல் உயிர் வேகம் தாக்கியது. அவள் கைபட்டால் தான் மாட்டுக்குப் பால் சுரந்தது. அவள் நட்ட விதைகள் முளைவிட்டன. அவளுடைய கை ராசியானது என்பாள் அம்மா. தங்கச்சி பிறந்தபோது அத்தை வந்திருந்தாள். 'அக்கா, என் பக்கத்தில இருக்கா. என்னைத் தொட்டுக்கிட்டே இரு. அப்பத்தான் எனக்கு வலி தெரியாது ' என்று அம்மா முனகினாள், அறையை விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டபோது. கதவருகே வந்து திரும்பிப் பார்த்த்போது தங்கமத்தை அம்மாவின் உப்பிய வயிற்றை மெல்ல வருடியபடி இருந்தாள்.
'ஒன்றும் ஆகாது, பயப்படாதே ' என்று மெல்லக் கூறினாள்.
'அடியக்கா, ஒனக்கொரு... ' என்று முடிக்காமல் விம்மினாள் அம்மா.
'எனக்கென்ன ? ராசாத்தியாட்டம். என் வீடெல்லாம் புள்ளைங்க ' என்றாள் அத்தை. ஏகாம்பர மாமாவின் இளைய மனைவிக்கு ஏழு குழந்தைகள்.
'இப்படி ஒடம்பு திறக்காம... ' என்று மேலும் விசும்பினாள் அம்மா.
'ஏன், என் ஒடம்புக்கு என்ன ? வேளாவேளைக்குப் பசிக்கலையா ? தூக்கமில்லையா ? எல்லா ஒடம்புக்கும் உள்ள சீரு இதுக்கும் இருக்கு. அடிபட்டா வலிக்குது. ரத்தம் கட்டுது. புண்ணு பழுத்தா சீ வடியுது. சோறு திண்ணா செரிக்குது. வேற என்ன வேணும் ? 'என்றாள் அத்தை.
அம்மா அவள் கையைப் பற்றி கன்னத்தில் வைத்துக்கொண்டாள்.
'ஒன் உடம்பைப் போட்டு ரணகளமாக்கி...: என்று அந்த கையை பற்றியவாறு அரற்றினாள்.
அத்தையின் உடம்பில் ஏறாத மருந்தில்லை என்று வள்ளியின் அம்மா வள்ளியிடம் சொல்லியிருந்தாள். ஊரில் எந்தப் புது வைத்தியன் வந்தாலும் அவன் குழைத்த மருந்து அத்தைக்கு உண்டு. இங்கிலீஸ் வைத்தியமும் அத்தைக்குச் செய்தார்களாம். சில சமயம் மருந்துகளைச் சாப்பிட்டுவிட்டு அத்தை அப்படி ஒரு தூக்கம் தூங்குவாளாம். வேப்பிலையும், உடுக்குமாய் சில மாதங்கள் பூசைகள் செய்தார்களாம். திடாரென்று பயந்தால் ஏதாவது நேரலாம் என்று ஒரு முன்னிரவு நேரம் அத்தை பின் பக்கம் போனபோது கரிய போர்வை போர்த்திய உருவம் ஒன்று அவள் மேல் பாய்ந்ததாம். வீரிட்ட அத்தை துணி துவைக்கும் கல்லில் தலை இடிக்க விழுந்து விட்டாளாம். அவள் நெற்றி முனையில் இன்னமும் அதன் வடு இருந்தது. அடுத்த வைத்தியன் வந்தபோது, 'என்னை விட்டுடுங்க. என்னை விட்டுடுங்க ' என்று கதறினாளாம் அத்தை. ஏகாம்பர மாமாவுக்கு வேறு பெண் பார்த்தபோது அத்தை அன்றிரவு அரளி விதைகளை அரைத்துக் குடித்துவிட்டாளாம். முறி மருந்து தந்து எப்படியோ பிழைக்கவைத்தார்களாம். 'உன் மனசு நோக எனக்கு எதுவும் வேண்டாம் ' என்று மாமா கண் கலங்கினாராம். அதன் பின் அத்தையே அவருக்கு ஒரு பெண்ணைப் பார்த்தாள். அப்படித்தான் செங்கமலம் அந்த வீட்டுக்கு வந்தாள். எல்லாம் வள்ளி சேகரித்த தகவல்கள்.
அத்தை தன் கையை அம்மாவின் பிடியிலிருந்து விலக்காமல் இன்னொரு கையால் அம்மாவின் தலையை வருடினாள். 'வுடு, வுடு. எல்லாத்தையும் வுடு. புள்ளைபொறக்கற நேரத்தில ஏன் கதையை எடுக்கிற ? ' என்றாள். அன்றிரவுதான் தங்கச்சி பிறந்தாள். அதன் பின் ஊருக்கு ஒரு முறை போனபோதுதான் அத்தை அந்தக் கதையைச் சொன்னாள்.
மழைக்காலம். இரவு நேரம். கூடத்தின் ஒரு பக்கம் ஜமக்காளத்தை விரித்து, எண்ணைத்தலைப் பட்டு கரைபடிந்த தலையணை உரைகளோடு இருந்த சில தலையணைகளை போட்டாகி விட்டது. சில தலையணைகளுக்கு உரையில்லை. அழுத்தமான வண்ணங்கள் கூடிய கெட்டித்துணியில் பஞ்சு அடைத்திருந்தது. ஆங்காங்கே பஞ்சு முடிச்சிட்டுக் கொண்டிருந்தது. அவை நிதம் உபயோகத்திலிருக்கும் தலையணைகள் அல்ல. விருந்தினர் வந்தால், குழந்தைகளுக்குத் தர அவை. நாள் முழுவதும் விளையாடிவிட்டு, வயிறு முட்டச் சாப்பிட்டுவிட்டு படுத்தவுடன் உறங்கிவிடும் குழந்தைகளுக்கு முடிச்சுகள் உறைக்கவா போகிறது ?
சமையலறை அலம்பி விடும் ஓசை கேட்டது. சொம்பின் ணங்கென்ற சத்தமும், கதவின் கிரீச்சும், தென்னந் துடைப்பம் அதன் பின் வைக்கப்படும் சொத்தென்ற ஒலியும் கேட்டது. தகர டப்பா கிரீச்சிட்டது. கோலப்பொடி டப்பா. அடுப்பில் கோலம் ஏறும். அதன் பின் சமயலறைக் கதவை அடைத்துவிட்டுக் கூடத்தின் வழியாகத்தான் அத்தை வருவாள். யாரும் தூங்கவில்லை. காத்திருந்தனர்.
அத்தை அருகில் வந்ததும், சோமுதான் ஆரம்பித்தான்.
'அத்தே, கதை சொல்லேன்... அத்தே '
'தூங்கல நீங்க எல்லாம் ? '
நின்று பார்த்துவிட்டு, அருகில் வந்து அமர்ந்தாள். காமாட்சியும் சோமுவும் மெல்ல ஊர்ந்து வந்து அவளின் இரு தொடைகளிலும் தலை வைத்துப்படுத்து அண்ணாந்து அவளைப் பார்த்தனர். மற்றவர்கள் தலையணைகளில் கைகளை ஊன்றிக் கொண்டனர்.
அத்தை களைத்திருந்தாள். நெற்றியில் வேர்வை மின்னியது. கண்களை மூடிக்கொண்டு யோசித்தாள்.
'அது ஒரு பெரிய காடு... ' என்று ஆரம்பித்தாள்.
'அந்தக் காட்டில எல்லா மிருகங்களும் சந்தோசமாய் இருந்தது. காட்டில பழ மரமெல்லாம் நெறய இருந்தது. ஒரு சின்ன ஆறு ஓடிச்சு ஒரு பக்கம். தாகம் எடுத்துச்சின்னா அங்க போயி எல்லாம் தண்ணி குடிக்கும். மிருகங்களுக்கு எல்லாம் என்னவெல்லாம் வேணுமோ எல்லாம் அந்த காட்டில சரியா இருந்தது. அந்தக் காட்டில வேடன் பயமில்லை. திடார்னுட்டு அம்பு குத்துமோ, உசிரு போகுமோன்னு பயமேயில்லாம திரிஞ்சிச்சுங்க அந்த மிருகங்க எல்லாம். எல்லா காடு மாதிரியும் அங்கயும் காட்டுத்தீ, வெளி மனுசங்க வந்து மரம் வெட்டறது, பழம் பறிக்கிறது, திடார்னு ஒரு ஆளு வந்து பட்சிங்கள சுடுறது, ஓடுற பன்னியை அடிக்கிறது அதெல்லாம் இல்லாம இல்ல. இருந்தாலும், அங்க இருந்த மிருகங்களுக்கும் பட்சிகளுக்கும் பழகிப்போன காடு அது. ஆந்தை எந்த மரத்தில உக்காரும், ராத்திரி சத்தமே இல்லாம காடு கிடக்கிறபோது எப்படி அது கத்தும், எந்த கல்லுமேல ஒக்காந்துகிட்டு தவளை திடான்னுட்டு களகளன்னு தண்ணி குடிக்கிற மாதிரி சத்தம் போடும், எந்த இடத்தில மயிலாடும் என்று எல்லாம் தெரிஞ்சு போன காடு.
இப்படி இருக்கிறப்போ ஒரு மான் கூட்டம் ஒரு நா தண்ணி குடிக்கப் போச்சுது. அதுல ஒரு மான் தண்ணி வழியா போனப்போ விலகிப் போயிடிச்சு. திடார்னு அது வேற காட்டில இருந்திச்சி. பாதையெல்லாம் இல்லாத காடு. மரங்கள்ல எல்லாம் அம்பு பாஞ்ச குறி இருந்தது. அந்தக் காட்டில ஒரு அருவி ஜோன்னு கொட்டிச்சு. யாருமே இல்லாத காடு மாதிரி விரிச்சோன்னுட்டு இருந்தது. மானுக்கு ஒடம்பு வெடவெடன்னு நடுங்கிச்சி. இங்கயும் அங்கயும் அது ஓடிச்சி. அந்த பழகின காடு மாதிரி இது இல்லயேன்னுட்டு அலறிட்டே துள்ளித் துள்ளிக் காடெல்லாம் திரிஞ்சிச்சு. ராத்திரியாச்சு. மானுக்கு பயம் தாங்கல. அருவிச் சத்தம் அதை பயமுறுத்திச்சு. தூரத்தில ஒரு வேடன் நெருப்பை மூட்டி அவன் அடிச்ச மிருகத்தை சுட்டுத் தின்னுட்டு இருந்தான். அந்த நெருப்புப்பொறி மான் கண்ணுக்குப் பட்டது. அது ஒளிஞ்சிக்கிட்டது. தனியாக் காட்டைச் சுத்திச் சுத்திவந்து களைச்சிப் போய் அது உக்காந்துகிட்டது.
இப்படி நெறய நாளு அது திரிஞ்சுது. ஒரு நா ராத்திரி பெளர்ணமி. நெலா வெளிச்சம் காட்டில அடிச்சது. அருவி நெலா வெளிச்சத்தை பூசிக்கிட்டு வேற மாதிரி ரூபத்தில இருந்திச்சு. பயமுறுத்தாத ரூபம். நெலா வெளிச்சம் மெத்து மெத்துன்னுட்டு எல்லாத்தையும் தொட்டுது. திடார்னு மந்திரக்கோல் பட்டமாதிரி அந்த மானுக்கு பயமெல்லாம் போயிடிச்சு. அந்தக் காடு அதுக்கு பிடிச்சுப் போயிடிச்சு. காட்டோட மூலை முடிக்கெல்லாம் அதுக்கு புரிஞ்சிப் போயிட்டது. வேறு காடாயிருந்தாலும் இந்தக் காட்டிலேயும் எல்லாம் இருந்துச்சு. அருவி இருந்துச்சு, மரம், செடி எல்லாம் இருந்தது. மொள்ள மொள்ள மிருகங்க பட்சிக எல்லாம் அது கண்ணுல பட்டுது. தேன் கூடு மரத்தில தொங்கறது தெரிஞ்சிது. நல்லா பச்சப்பசேலுன்னு புல்லு தெரிஞ்சிது. அந்த புதுக்காட்டோட ரகசியமெல்லாம் அந்த மானுக்கு புரிஞ்சிடிச்சு. அதுக்கப்பறமா, பயமில்லாம, அந்த மானு அந்த காடெல்லாம் சுத்திச்சு. பயமெல்லாம் போயி சாந்தமா போயிடிச்சு '
கதையை முடித்தாள் அத்தை. கூடத்தின் மற்ற பகுதிகள் இருண்டிருந்தன. இந்த பகுதியில் மட்டும்தான் வெளிச்சம். இருண்ட பகுதியை காடாய் கற்பனை செய்து, கதைக்கேட்ட குழந்தைகள் அந்தமானுடன் தோழமை பூண்டு முடிவில் சாந்தப்பட்டு போயினர். தலையணைகளை அணைத்து உறங்கிப் போயினர். நீளமும் மஞ்சளும் கறுப்பும் கலந்த முரட்டுத்துணி தலையணையில் சாய்ந்து, ஒற்றைக்கண்ணைத் திறந்து, உறக்கக் கலக்கத்தில் பார்த்தபோது, எங்கள் நடுவே, இரு கைகளையும் மார்பின் மேல் குறுக்காகப் போட்டு தன் தோள்களை அணைத்தவாறு, முட்டியின்மேல் சாய்ந்து கொண்டு தங்கமத்தை உட்கார்ந்து கொண்டிருந்தாள்.
***
9. சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல் - 1
ஆதவன்
சிவப்பாக உயரமாக மீசை வசுக்காமல் - தனக்கு வரப் போகிறவனைப் பற்றிய இந்த மங்கலான உருவம் இப்போது சில நாட்களாக நீலாவின் மனதில் அடிக்கடி ஊசலாடத் தொடங்கியிருந்தது.
வயது இருபத்தி இரண்டு. பெண்குழந்தை . வீட்டில் வரன் பார்க்கத் தொடங்கி விட்டிருந்தார்கள். ஜாதகம், பூர்வீகம், குலம், கோத்திரம், பதவி, சம்பளம் -- இத்யாதி . இந்த முயற்சிகளும் அதன் பின்னிருந்த பரிவும் கவலையும் அவளுக்கு ஒரு விதத்தில் பிடித்துத் தானிருந்தது. என்றாலும், இது சம்பந்தமாக அவளுடைய இளம் மனதிலும், சில அபிப்பிராயங்களும், கொள்கைகளும் இருக்கக் கூடும் என்றோ அவற்றுக்கு ஒரு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றோ தன் பெற்றோர் சிறிதும் நினைக்காதது அவளுக்குச் சற்று எரிச்சலையும் அளித்தது. அதே சமயத்தில் இது சம்பந்தமாகத் தன்னை அவர்கள் விசாரித்தால் தன்னால் தீர்மானமான துல்லியமானதொரு பதிலைச் சொல்ல முடியுமா என்றும் சந்தேகமாகவும் இருந்தது. பெரியோர்களுடைய கருத்துக்கள் எவ்வளவுக்கெவ்வளவு திடமான கன பரிமாணங்களும் உண்மையின் தீவிரமும் உடையதாக இருந்தனவோ , அவ்வளவுக்கவ்வளவு அவளுடைய கருத்துக்கள் அவளுக்கே புரியாததொரு புதிராகவும், பிறர் கேட்டால், சிரிப்பார்களோ என்ற பயத்தை மூட்டுபவையாகவும் இருந்தன.
அவன் சிவப்பாக இருந்தான். அவளுடைய கனவுகளில் இடம் பெற்றிருந்த இளைஞன் சிவப்பென்றால் ஆங்காரச் சிவப்பு இல்லை. மட்டான, பதவிசான சிவப்பு. அவன் உயரமாக இருந்தான் -- நீலாவை விட ஓரிரு அங்குலங்கள் உயரமாக. அவள் செளகரியமாக தன் முகத்தை அவன் மார்பில் பதித்துக் கொள்ளக் கூடிய உயரம். வெட்கத்தில் தாழ்ந்திருக்கும் அவள் பார்வை சற்றே நிமிரும் சமயங்களில் அவளை உவகையிலும் சிலிர்ப்பிலும் ஆழ்த்தும் உயரம். கடைசியாக ஆனால் முக்கியமாக அவனுக்கு மீசையோ தாடியோ இருக்கவில்லை. மழு மழுவென்று ஒட்ட ஷவரம் செய்யப்பட்ட சுத்தமான மாசு மறுவற்ற முகம் அவனுடையது. அந்த இளைஞனுடன் அவன் தன் கனவுகளில் தனக்கு மிகவும் பரிச்சயமான இடங்களிலும் , தான் பார்த்தேயிராத பல புதிய இடங்களிலும் மீண்டும் மீண்டும் அலைந்து திரிவான். ஜோடியாக அவர்கள் பார்த்து மகிழ்ந்த பேச்சுக்கள் தான் எத்தனை . ஆனால் அந்தக் கனவு இளைஞன் எவ்வளவுக்கு எவ்வளவு அருகில் இருப்பதாகத் தோன்றினானோ அவ்வளவுக்கு அவ்வளவு எட்டாத் தொலைவில் இருப்பதாகவும் தோன்றினான். எவ்வளவுக்கு எவ்வளவு அவனைப் பற்றித் தெரியும் என்று தோன்றியதோ அவ்வளவுக்கு அவ்வளவு அவனைப் பற்றித் தெரியாதென்றும் தோன்றியது. ஓயாமல் அலை பாயும் நீர்ப் பரப்பில் கோணல் மாணலாக நெளியும் ஒரு பிம்பம் அவன்; வேகமாகச் சென்று மறைந்து விட்ட பஸ் ஜன்னலில் பார்த்த முகம் -- அவள் அவனைப் பார்க்கவும் செய்தாள்; பார்க்கவும் இல்லை.
நீலா ஒரு சர்க்கார் ஆபிஸில் வேலை பார்த்து வந்தாள் - குமாஸ்தாவாக. அவளுடைய ஆபிஸில் நிறைய இளைஞர்கள் இருந்தார்கள். ஏன் அவளுடைய செக்ஷனிலேயே ஒருவன் இருந்தான். எல்லாம் -- அவள் பார்வையில் -- படு சாதாரணமாக 'ச்சீப் ஃபெல்லோஸ் '. அவளைப் போன்ற ஓர் அரிய ரத்தினத்தைப் புரிந்து கொள்ளவோ, அதன் அருமையை அறிந்து போற்றிப் பாதுகாக்கவோ லாயக்கில்லாதவர்கள். இந்த மட்ட ரகமான கும்பலிலிருந்து அவளுக்கு விடுதலை அளிப்பதெற்கென்று அவதாரம் எடுத்திருப்பவன் தான் அவளுடைய கனவு இளைஞன்.
'ஓ என் அன்புக்குரியவனே, எங்கிருக்கிறாய் நீ ? நான் கேட்கும் பாடல்களைக் கேட்டுக் கொண்டு , படிக்கும் பத்திரிகைகளைப் படித்துக் கொண்டு , நடக்கும் சாலைகளில் நடந்து கொண்டு , கவனிக்கும் போஸ்டர்களைக் கவனித்துக் கொண்டு பயணம் செய்யும் டாக்ஸிகளிலுல், ஆட்டோ ரிக்ஷாக்களிலும் பயணம் செய்து கொண்டு , ஏறியிறங்கும் படிக்கட்டுகளில் ஏறி இறங்கி, உபயோகிக்கும் ஹேர் ஆயிலையும், டூத் பேஸ்டையும் உபயோகித்துக் கொண்டு , அருந்தும் பானங்களை அருந்திக் கொண்டு , என்னைத் தாக்கும் ஓசை, மணங்களினால் தாக்கப் பட்டு , சிலிர்க்க வைக்கும் காட்சிகளைக் கண்டு சிலிர்ப்பில் ஆழ்ந்து, வியர்க்க வைக்கும் வெயிலில் வியர்த்துக் கொண்டு, விசிறும் தென்றலினால் விசிறப்பட்டு, நனைக்கும் மழையிலும் நிலவொளியிலும் நனைந்து கொண்டு, பீடித்திருக்கும் இதே கனவுகளினால் பீடிக்கப் பட்டவனாய் எங்கிருக்கிறாய் நீ ? வா, வந்து விடு, ப்ளீஸ் என்னை ஆட்கொள். என்னைக் காப்பாற்று, என்ன்னைச் சுற்றியிருக்கும் இந்த மனிதர்களிடமிருந்து, இந்த இடங்களிலுருந்து, இந்தப் பொருள்களிலிருந்து, என்னிடமிருந்தே .. . . '
ஆர்ப்பரிக்கும் எண்ண அலைகள், திமிறித்துள்ளும் உள்ளம்.
தினசரி காலையில் பஸ் ஸ்டாண்டில், ஒரரு நீண்ட க்யூவின் மிகச் சிறிய பகுதியாகத் தன்னை ஆக்கிக் கொள்ளும் கணத்தில் , அவளுடைய இதயத்தை ஒரு விவரிக்க முடியாத சோகமும், தவிப்பும் கவ்விக் கொள்ளும் - - 'இதோ மீண்டும் இன்னொரு நாள், நான் பஸ் ஸ்டாண்டில் வந்து நிற்கிறேன்; பஸ்ஸில் ஏறிப் போகிறேன். -- சலித்துப்போன இதே பழைய முகங்களுடன் ' என்று அவள் நினைத்துக் கொள்வாள். சாலையில் படபடவென விரையும் கார்கள் ஸ்கூட்டர்கள், இவற்றை அவளுடைய பார்வை ஆற்றாமையுடன் துரத்தும். துழாவும். பஸ்ஸில் செல்லும் போது பஸ்ஸை ஓவர்டேக் செய்து கொண்டு செல்லும் வாகனங்களையும், இந்த வாகனங்களுக்குள் அமர்ந்திருக்கும் மனிதர்களையும், அவளுடைய பார்வை நீவும்.; அணைக்கும். இந்தக் கார்கள், ஸ்கூட்டர்கள், அதோ அந்தப் போர்ட்டிகோக்கள், பார்க்கிங் லாட்கள், அடுக்கு மாடிக் கட்டடங்கள், ஜன்னல்கள், - - இவை உள்ள உலகம் தான் கனவு இளைஞன் வசித்த உலகம். பஸ் கியூக்களுக்கும் , டிபன் பாக்ஸ்களுக்கும் அப்பாற்பட்ட உலகம். நீண்ட கியூக்களில் கூட்டமான பஸ்களில் , நிரந்தரமாகச் சிறையாகிப் போன அவளை , அவன் எப்படித்தான் கண்டுகொள்ளப் போகிறானோவென்று அவள் பெருமூச்செறிவாள். அவள் கையிலிருந்த- -, நேற்று ஆபிஸ் கிளப்பிலிருந்து எடுத்து வந்திருந்த - - பத்திரிகையின் பின்னட்டையில் , சிகரெட் விளம்பரத்தில் , தன்னைப் போன்ற பெண்ணொருத்தியை ஒரு கையால் அனைத்தவாறு, இன்னொரு கையில் சிகரெட்டை ஒயிலாகப் பிடித்திருக்கும் இளைஞன் கூட ஓரளவு கனவு இளைஞனின் சாயலுள்ளவன் தான். சிகரெட் ஷேவிங் லோஷன், ஹேர் ஆயில் விளம்பரங்களில் இடம் பெறும் இந்த இளைஞர்கள் கூடவெல்லாம் பேச முடிந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும்.! இவர்கள் கனவு இளைஞனின் நண்பர்களாய்த் தான் இருப்பார்கள். அவனுடைய விலாசம் இவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.
பிறகு ஆபிஸ் . கையிலிருந்த பத்திரிகையைக் குப்பு சாமியின் மேஜை மீது வைத்துவிட்டு , அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்தரில் கையெழுத்திட்டு விட்டு , அவள் தன் இடத்தில் உட்காருவாள். செக்ஷனில் வேலை செய்யும் சிலர் ஏற்கனவே வந்திருப்பார்கள். மற்றவர்களும் ஒவ்வொருவராக வந்து உட்காருவார்கள். வேலை தொடங்கும். இரவெல்லாம் நிசப்தமாக நிச்சலனமாக இருந்த அந்த அறை திரை தூக்கப்பட்ட நாடக மேடை போலக் குபுக்கென்று உயிர் பெற்று விழித்துக் கொள்ளும். -- குரல்கள், ஓசைகள், அசைவுகள் -- நிற்கும் நடக்கும் , உட்காரும் மனிதர்கள், இவர்களை இணைக்கும் சில பொதுவான அசேதனப் பொருட்கள். படபடவெனப் பொரிந்து தள்ளும் டைப்ரைட்டர்கள், சரசரக்கும் , மொடமொடக்கும் காகிதங்கள் , இக்காகிதங்களின் மேல தம் நீல உதிரத்தை எழுத்து வடிவங்களாக உகுத்தவாறு தாவும், ஊறும் தள்ளாடும் பேனாக்கள் , கிரிங்க். . கிரிங்க். . எனத் தன் இருத்தலையும் ஹோதாவையும் அடிக்கடி கர்வத்துடன் பறைசாற்றும் தொலைபேசி பொத் பொத்தென்று வைக்கப் படும் திறக்கப் படும் ரெஜிஸ்தர்கள், டபால் டபால் என்று திறக்கப் படும் மூடப் படும் இழுப்பறைகள் , அலமாரிகள் , தரையுடன் உராயும் நாற்காலிக்கால்கள், காற்றில் சுவரில் உராயும் ஒரு காலண்டர், ஒரு தேசப்படம் ஒன்றோடொன்று உராயும் மோதும், இணையும் , இணையாத ஒலிகள். . .
ஒரே விதமான ஓசைகளின் மத்தியில் , ஒரே விதமான மனிதர்களின் மத்தியில் , ஒரே விதமான வேலையைச் செய்துகொண்டு - - சே! இதில் பிரமாதமான கெடுபிடியும் , அவசரமும் வேறே .. . ' மிஸ் நீலா! டெபுடேஷன் ஃபைல் கடைசியாக யார் பெயருக்கு டிரான்ஸ்ஃபர் செய்யப் பட்டிருக்கிறது ? ' 'மிஸ் நீலா! ஆர். வி. கோபாலன் டிரான்ஸ்ஃபர் ஆர்டர் டிஸ்பாச்சுக்குப் போய் விட்டதா ? ' 'மிஸ் நீலா! பி.என் (பென்ஷன் ) தலைப்பில் புதிய ஃபைல் திறக்க அடுத்த நம்பர் என்ன ? ' கேள்விகள், கேள்விகள், கேள்விகள். அவர்கள் தன்னைக் கேட்காத போது , அவள் தன்னையே கேட்டுக் கொள்வாள். . .மிஸ் நீலா! உனக்கு ஏன் பைத்தியம் பிடிக்க வில்லை ? மிஸ் நீலா! நீ எதற்காக இந்த அறையில் இந்த நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறாய் ? மிஸ் நீலா ! உனக்கும் இந்த மனிதர்களுக்கும் என்ன சம்பந்தம் ?
விதம் விதமான மனிதர்கள். வெவ்வேறு ருசிகளும் போக்குகளும் , சாயல்களும், பாவனைகளும் உள்ள மனிதர்கள். ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் குறிப்பிட்ட வட்டத்தில் சுழலும் மனிதர்கள். சலிப்பூட்டும் மனிதர்கள்.!
இந்த செக்ஷனில் இருந்தவரகளிலேயே வயதானவர் தண்டபாணி. நெற்றியில் விபூதி. வாயில் புகையிலை. முகத்தில் எப்போதும் ஒரு கடுகடுப்பு. பெண்கள் வேலைக்கு வருவதைப் பற்றி அவருக்கு நல்ல அபிப்பிராயம் இல்லாத காரணத்தால் , நீலா என்ற பெண்ணொருத்தி அந்த செக்ஷனில் வேலை செய்த உணர்ந்ததாகவே அவர் காட்டிக் கொள்வதில்லை. செக்ஷனில் உள்ள மற்றவர்கள் ஒரு பெண் இருக்கிறாளே என்று கூறத் தயங்கும் சொற்களை டாபிக்குகளை அவர் வெகு அலட்சியமாகக் கூறுவார் . அலசுவார். வேண்டுமென்று தன்னை அதிர வைக்கும் நோக்கத்துடனேயே அவர் அப்படிப் பேசுவதாக நீலாவிற்குத் தோன்றும்.
குப்புசாமி இன்னொரு ரகம். செக்ஷனில் 'பத்திரிகை கிளப் ' அவர் தான் நடத்தி வந்தார். அவரே கிட்டத்தட்ட ஒரு பத்திரிகை மாதிரி தான்; சதா மேட்டர் தேடி அலையும் பத்திரிகை. பியூன் பராங்குசத்தின் சம்சாரத்துக்குக் கால் நோவென்றால் அதற்குப் பரிகாரமென்னவென்று -- ஹைஸ்கூல் படிப்பை முடித்து விட்ட கணபதி ராமனின் மகன் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டுமென்று- - அமெச்சூர் நடிகரான சீனிவாசன் எந்த எந்த மேநாட்டு நடிகர்களைப் பின்பற்றலாமென்று -- அடிக்கடி லேட்டாக வரும் கேசவன் தன் தினசரி அட்டவணையை எப்படியெல்லாம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாமென்று அவர் ஒவ்வொருவருக்கும் வலிய ஆலோசனை வழங்குவார். நீலாவிடமும் அவர் பேசுவார். 'இன்றைக்கு என்ன சீக்கிரமா வந்துட்டே போல இருக்கே! 'என்கிற ரீதியில் அவர் அவளிடம் வெகு செளஜன்யத்துடன் பேச முற்படும் போது எரிச்சல் தான் வரும் . தண்டபாணி ஓர் அமுக்கு என்றால், குப்புசாமி ஓர் அதிகப் பிரசங்கி.
கணபதி ராமன் , சீனிவாசன், கேசவன், பராங்குசம் -- இவர்களையும் கூட ஒவ்வொருவரையும் ஒவ்வொரு காரணத்துக்காக அவள் வெறுத்தாள். கணபதி ராமன், சதா அவளுடைய வேலையில் ஏதாவது தவறுகளைச் சுட்டிக் காட்டுவதும் ,சின்னப் பாப்பாவின் கையைப் பிடித்து 'அ ' எழுதச் சொல்லித் தருவதைப் போல , ஒவ்வொரு விஷயத்தையும் ஆதியோடந்தம் சொல்லித் தர முற்படுவதும் அவளுக்குப் பிடிக்கவில்லை. சீனிவாசன் 'மிஸ் நீலா! ' என்று உத்தரவிடும் போதெல்லாம், 'இஃப் யூ டோண்ட் மைன்ட் ', , 'கைண்ட்லி ' என்ற சொற்களைப் பயன் படுத்துவது மரியாதையாகத் தோன்றாமல் ஒரு நாசூக்கான ஏளனமாகவே தோன்றியது. கேசவனுடைய பெரிய மனுஷத் தோரணையும், யாரையும் லட்சியம் செய்யாத (அவள் உட்பட) அலட்சியப் போக்கும் அவளுக்கு அவன் பால் வெறுப்பை ஏற்படுத்தின. பியூன் பராங்குசத்தைப் பொறுத்தவரையில் ரிஜிஸ்தர்களையும் ஃபைல்களையும் , பல சமயங்களில் அவன் அனாவசியமான வேகத்துடன் , ஓசையுடன், தன் மேஜை மீது எறிவதாக அவளுக்குப் பட்டது. சில சமயங்களில் அவள் வராந்தாவில் நடந்து செல்லும் போது , வேறு பியூன்களிடம் தன்னைப் பற்றி மட்டமாக ஏதோ சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்ததாகப் பட்டது.
செக்ஷனில் இருந்த யாரையுமே அவளுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் , அவளுக்கு மிக அதிகமாகப் பிடிக்காத ஆசாமி கேசவன் தான். செக்ஷனில் உள்ள மற்றவர்கள் அவனை ஒரு செல்லப் பிள்ளை போல நடத்துவதும், அளவுக்கு மீறி அவனைத் தூக்கி வைத்துப் பேசுவதும் அவளுக்குப் பொறுப்பதில்லை. இவர்கள் கொடுக்கும் இடத்தினால் தான் 'இதற்கு ' திமிர் அதிகமாகிறது என்று அவள் நினைப்பாள்.
- லக்கி ஃபெல்லோ சார் . . நோ கமிட்மெண்ட்ஸ். நோ வொர்ரீஸ்
-- ஒரு மாசத்திற்கு எவ்வளவு படம் பார்ப்பாய் நீ கேசவன் ?
-- தனியாகப் பார்ப்பாயா , அல்லது ஸ்வீட் கம்பெனி ஏதாவது ?
-- இந்தக் காலத்துப் பசங்களெல்லாம் பரவாயில்லை. ஸார். இவங்க வயசிலே நாம் இருந்த போது என்ன எஞ்ஜாய் பண்ணியிருப்போம் சொல்லுங்கோ!
அவனுடைய இளமைக்கும் சுயேட்சைத் தன்மைக்கும் அவர்கள் அளிக்கும் அஞ்சலி . தம் இறந்த கால உருவத்தை அவன் வடிவத்தில் மீண்டும் உருவகப் படுத்திப் பார்த்து மகிழும் முயற்சி. அவளுக்குச் சில சமயங்களில் பொறாமையாகக் கூட இருக்கும். தனக்குக் கிடைக்காத ஒரு விசேஷக் கவனிப்பும் , ஸ்தானமும் அவனுக்குக் கிடைத்திருப்பது அவள் நெஞ்சை உறுத்தும். இது போன்ற சமயங்களில் இந்தப் பொறாமையும் உறுத்தலும் வெளியே தெரிந்து விடாமல் அவள் மிகச் சிரமப்பட்டு தன் முகத்தையும் பாவனைகளையும் அலட்சியமாக வைத்துக்கொள்வாள் -- எனக்கொன்றும் இதொன்றும் லட்சியம் இல்லை என்பது போல.
ஒரு நாள் மாலை குப்பு சாமி கேசவனிடம் பேசிக் கொண்டிருந்த போது அவள் இப்படித்தான் மூஞ்சியை அலட்சியமாக வைத்துக் கொண்டிருந்தாள்.
' உனக்கு எந்த மாதிரி வைஃப் வரணும் என்று ஆசைப் படுகிறாய் ? ' என்று குப்பு சாமி கேட்டார்.
' எந்த மாதிரி என்றால் ? '
'அழகானவளாகவா ? '
' அழகானவளாக வரணும் என்று யாருக்குத் தான் ஆசை இருக்காது ? '
' ரொம்ப அழகாயிருந்தாலும் அப்புறம் மானேஜ் பண்றது கஷ்டம் . '
கேசவன் கட கட வென்று சிரித்தான். 'எனக்கு இதிலே உங்களளவு அனுபவம் இல்லை சார். ' என்றான். இப்படி அவன் சொன்னபோது தன் பக்கம் அவன் பார்வை திரும்பியது போல நீலாவுக்குத் தோன்றியது. இதை ருசுப் படுத்திக் கொள்ள அவன் பக்கம் திரும்பவும் தயக்கமாக இருந்தது.
அன்று வீட்டுக்குச் சென்றதும், அவள் முதல் வேலையாகத் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள் -- கேசவன் பார்வை விழுந்த தன் மாலை நேரத்து முகம் எப்படி இருந்தது என்று தெரிந்து கொள்வதற்காக. அது களைத்திருந்தது. வியர்த்திருந்தது. சற்றே புழுதி படிந்திருந்தது. துடிப்பும் பிரகாசமும் இன்றி மந்தமாக இருந்தது.
இது தான் அவளுடைய முகம், அவளுடைய அழகென்று கேசவன் தீர்மானித்து விட்டானோ ? இந்த எண்ணம் தோன்றிய மறு கணமே , சேச்சே , இவன் பார்க்கும் போது என் முகம் எப்படி இருந்தால் என்ன ? இவன் என்னைப் பற்றி என்ன நினைத்தால் என்ன ? என்றும் நினைத்தாள். அவனைப் பற்றி மறக்க முயன்றாள்.
ஆனால் மறு நாள் காலை ஆபிஸ்க்குக் கிளம்பும் போது வழக்கத்தை விட அதிகச் சிரத்தையுடனும் பிரயாசையுடனும், அவள் தன்னை அலங்கரித்துக் கொண்டாள். ' அவனுக்காக அல்ல. அவன் மூலம் தன்னைத் திருப்திப் படுத்திக் கொள்வதற்காக. ' என்று அவள் சொல்லிக் கொண்டாள். ' அவனுடைய அலட்சியத்தைப் பிளந்து அவனைச் சலனப் படுத்துவதற்காக அவனுடைய கவனத்தைக் கவர்ந்து அதன்மூலம் என் வெற்றியை ஸ்தாபிப்பதற்காக ' --- இந்தப் போக்கிரித்தனமான எண்ணம் அவள் முகத்தில் ஒரு புன்னகையை எழுப்பியது. அன்று பஸ்ஸில் செல்லும் வழியெல்லாம் அவள் முகத்தில் 'பளிச் பளிச் ' என்று புன்னகை ரேகைகள் தோன்றி மறைந்த வண்ணம் இருந்தன.
அவள் செக்ஷனுக்குள் நுழையும்போது கேசவனின் நாற்காலி காலியாக இருந்தது. அட்டெண்டன்ஸ் மார்க் பண்ணிவிட்டு தன்னிடத்தில் வந்து உட்காரும் போது ' இன்று ஒரு வேளை மட்டம் போட்டு விட்டானோ ? ' என்று நினைத்தாள்.
ஆனால், அவன் மட்டம் போடவில்லை. பத்தே முக்கால் மணிக்கு வந்தான். தாமதமாக வந்த குற்ற உணர்வினால் பீடிக்கப் பட்டவனாய் அவசர அவசரமாக ஃபைல் கட்டுகளைப் பிரித்து வேலையைத் துவக்கினான்.
நீலா கைகளை உயர்த்தித் தன் தலையில் வைத்திருந்த பூச்சரத்தைச் சரி பார்த்துக் கொண்டாள். 'கிளிங் கிளிங் ' என்று வளையல்கள் குலுங்கின. அவன் நிமிரவில்லை. கையிலிருந்த பென்ஸிலைத் தரையில் நழுவ விட்டு விட்டு மேஜைக்கு முன்புறம் போய் உருண்டு விழுந்துள்ள அதை எடுக்கும் சாக்கில் அவள் இடத்தை விட்டு எழுந்தாள். -- சரக் சரக் -- குனிந்து பென்ஸிலைப் பொறுக்கினாள். - 'கிளிங் கிளிங் ' -- ஊகும் அவன் நிமிரவே இல்லை, அவளுக்கு எரிச்சலாக வந்தது. இன்று திடாரென அவன் கவனத்தைக் கவருவது அவளுக்கு ஒரு முக்கியமான விஷயமாக -- கெளரவப் பிரசினையாக -- ஆகி விட்டிருந்தது. அடுத்த படியாக ஒரு ரிஜிஸ்தரை வேண்டுமானால் கீழே போடலாமா என்று அவள் யோசித்துக் கொண்டிருந்த போது தான் சீனிவாசன் அவளைக் கூப்பிட்டார்.
' மிஸ் நீலா ! இஃப் யூ டோண்ட் மைண்ட் -- ஒரு லெட்டர் கம்பேர் செய்யணும் '.
அவள் இடத்திலிருந்து எழுந்தாள். கேசவனின் மேஜைக்கு அருகில் உரசினாற்போல புடவை சலசலக்க , வளையல் சப்திக்க , பவுடர் மணக்க , (இன்று கொஞ்சம் பவுடர் அதிகமாகவே பூசிக் கொண்டிருந்தாள். ) நடந்து சென்று அவள் , சீனிவாசனின் மேஜையை அடைந்தாள். கேசவனின் பேனா சற்று நின்றது. அவன் நிமிர்ந்து தன்னைப் பார்ப்பதை அவள் உணர்ந்தாள். 'பாரு, பாரு நன்றாய்ப் பாரு . . ' என்று நினைத்தவாறு அவள் , சீனிவாசனருகில் இருந்த காலி நாற்காலியில் அமர்ந்து அவரிடமிருந்த கடித நகலை வாங்கிப் படிக்கத் தொடங்கினாள். அவர் டைப் செய்யப்பட்ட ஒரிஜினலை வைத்துக் கொண்டு சரி பார்க்கத் தொடங்கினார். தான் படிக்கிறோம் என்பதை நன்கு உணர்ந்தவளாய் அவள் படித்தாள். அவளுடைய அழகிய குரலும் உச்சரிப்பும் இந்த வறட்டு ஆபீஸ் கடிதத்தைப் படிப்பதில் செலவாகிக் கொண்டிருப்பது துரதிர்ஷ்டம் தான். ஆனால், கேசவன் கேட்டுக் கொண்டிருக்கிறான் -- இந்த நினைவு அவளுக்கு ஒரு போதையையும் உந்துதலையும் அளித்தது. கடிதத்தைப் படித்து முடித்துவிட்டு மீண்டும் தன் இடத்தில் வந்து உட்கார்ந்ததும், கேசவன் திசையில் அவள் பார்வையைச் செலுத்தினாள். குபுக்கென்று அவன் பார்வை அவளை விட்டு அகலுவதைக் கண்டு பிடித்தாள். அப்படியானால் இவ்வளவு நேரமாக அவன் அவளைத் தான் கவனித்துக் கொண்டிருந்தானா ? அவளுக்குக் கர்வம் தாங்கவில்லை. அன்று அவ்ள் தேவைக்கதிகமாகவே நடமாடினாள். கேசவனின் பார்வை அடிக்கடி தன் திசையில் இழுபடுவதைத் திருப்தியுடன் கவனித்தாள் - கப்பம் கட்டாமல் ஏய்த்து வந்த அண்டை நாட்டுச் சிற்றரசன் ஒருவனுக்குத் தன் பலத்தை நிரூபித்த திருப்தி. இன்னும் பெரிய அரசர்களின் மேல் போர் தொடுக்க முஸ்தீப்பாக அவள் ஈடுபட்ட ஒரு சிறு பலப் பரீட்சையில் வெற்றி.
(தொடரும்)
சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல் - 2
ஆதவன்
அன்று மாலை கனாட் பிளேஸ் கஃபேயில்
நண்பர்களுடன் அமர்ந்து காபி அருந்தும் போதும் , பிறகு ஒரு எழுபது மி மி .
சினிமாத்தியேட்டரில் பானாவிஷன் பிம்பங்களை 'ஸ்டாரியோஃபோனிக் ' ஒலிப்
பின்னணியில், காணூம் போதும் , கேசவனின் மனத்தில் திடார் என்று நீலாவின்
உருவம் தோன்றிக் கொண்டிருந்தது. 'இன்று இவள் ரொம்பவும் அலட்டிக் கொள்வது
போலிருந்ததே -- என்னிடம் ஏதேதோ தெரிவிக்க முயலுவது போலிருந்ததே -- என்
பிரமை தானோ ? ' என்று அவன் நினைத்தான். ஒரு வேளை இவளுக்கு என்மேல் காதல்
.. . கீதல் . . . ?
இந்த எண்ணம் அவன் முகத்தில் புன்னகையைத்
தோற்றுவித்தது. ஒரு பெருந்தன்மையான கருணை நிரம்பிய புன்னகை -- 'பாவம்,
பேதை! ' என்பதைப் போல ' இவள் குற்றமில்லை நான் ரொம்ப அட்ராக்டிவாக
இருக்கிறேன். தட் ஈஸ் தி டிரபிள்... ' என்று அவன் நினைத்தான்.
திடாரென்று அவளுடைய இங்கிலீஷ் உச்சரிப்பு நினைவு வரவே, அவனுடைய புன்னகை
அதிகமாகியது. 'சில்லி புரனன்ஷியேஷன்! ' என்று நினைத்தான். திரையில் அட்ரி
ஹெப்பர்ன் அழகாக குழந்தைத் தனமாகச் சிரித்தாள். கேசவனுக்கு அப்படியே அவளை
கிஸ் பண்ணவேண்டும்போல் இருந்தது. சினிமாவிலிருந்து வெளியே வந்து சிகரெட்டை
உறிஞ்சி இப்புகையை ஊதித் தள்ளியபோது அவன் கேசவனாக இல்லை. இந்த நாட்டில்
இல்லை. பீட்டர் ஓட்டூலாக மாறி, நியூயார்க் வீதியில் நடந்து கொண்டிருந்தான்.
அட்ரி ஹெப்பர்னின் சாயலை எதிரே வந்த பெண்களின் முகங்களில்
தேடிக்கொண்டிருந்தான். அவனுக்கு மிகவும் பிரியமான நடிகை ஆட்ரி ஹெப்பர்ன்
தான். அதற்கு அடுத்தபடி சோபியா லாரன்; பிறகு, ஷெர்லி மெக்லைன்.
அவனுடைய வாழ்க்கைத் துணைவியின் இலட்சிய உருவகம் இந்த பிரியமான நடிகைகளின்
சாயல்களில் இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம் என்று சிதறிக் கிடந்தது. புடவை,
டூத் பேஸ்ட் விளம்பரங்களில் சிரிக்கும் வனிதைகளில் கொஞ்சம் கொஞ்சம்
இருந்தது. கனாட் ப்ளேஸ் வராந்தாக்களில் காணும் சில முகங்கள், சில நடைகள்,
சில சிரிப்புகள், சில அபிநயங்கள், இவற்றில் கொஞ்சம் கொஞ்சம் இருந்தது. இந்த
வெவ்வேறு துணுக்குகளைச் சேர்த்துப் பார்த்தால், அவன் விரும்பியவள்
எப்படிப் பட்டவளாக இருப்பாள் என்று ஒரு வேளை புலப்படக்கூடும். ஆனால், அவன்
இதுவரை இந்த முயற்சியில் ஈடுபடவில்லை. தன்னுடைய நிச்சயமின்மை அவனுக்குப்
பிடித்திருந்தது. அந்தந்தக் கணத்தில் ஆங்காங்கே எதிர்ப்படும் அழகுகளில்
சுவாதீனமாக லயித்து ஈடுபட அனுமதித்த அவனுடைய சுயேச்சைத் தன்மை அவனுக்குப்
பிடித்திருந்தது. ஒரு குறிப்பிட்ட பிம்பத்துக்கு அடிமையாகி தன்
பார்வைக்கும் இலக்குகளுக்கும் எல்லைகள் வகுத்துவிட அவனுக்கு விருப்பமில்லை.
'காதலென்பது வாழ்நாள் முழுவதும் ஒருவன் ஈடுபடும் இடையறாத தேடல் ' என்னும்
ரொமாண்டிக் ஐடியா அவனுக்குப் பிடித்திருந்தது. அவனுடைய பெற்றோருக்கு
வேண்டுமானால் பாட்டுப்பாடத் தெரிந்த தோசை அரைக்கத் தெரிந்த எவளாவது ஒருத்தி
வந்தால் போதுமானதாக இருக்கலாம். ஆனால் அவனுக்கு வாழ்க்கை வெறும்
மோர்க்குழம்பும் தோசையும் அல்ல. சீமந்தமும் தாலாட்டும் அல்ல....
இதற்கெல்லாம் அப்பாற்பட்டது. மேம்பட்டது. இந்த மேம்பட்ட சிகரங்களை அவன்
எட்டமுடியாமலேயே போகலாம் - அது வேறு விஷயம். ஆனால் இவற்றை எட்டக்கூடிய
சுதந்திரத்தை அவன் காப்பாற்றிக் கொள்ளவேண்டும். இது அவசியம்.
'மிஸ் நீலா ! என்னை நீங்கள் காதலிக்கும் பட்சத்தில், பாவம் , உங்கள்
நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள்! ' என்று அவன் நினைத்தான்.
மறு நாளிலிருந்து மறைத்துக் கொள்ளப் பட்ட ஆர்வத்துடனும்,
பரபரப்புடனும் அவர்கள் ஒருவரையொருவர் கவனிக்கத் தொடங்கினார்கள்.
கண்காணிக்கத் தொடங்கினார்கள். 'கேசவன் தன் அழகை ரசிக்கிறானோ ? ' என்று
நீலா கவனித்தாள். 'இந்தப் பெண் என்னை பக்தியுடன் பார்க்கிறதோ ? ' என்று
கேசவன் கவனித்தான். இருவருமே தான் கவனிப்பது எதிராளிக்குத் தெரியாது
என்றும் , தம்மைப் பாதிக்காமல் தம்மைக் காப்பாற்றிக் கொண்டு தாம் மட்டும்
எதிராளியைப் பாதித்து விட்டதாகவும் நம்பினார்கள். இந்த நம்பிக்கையில்
குதூகலமும் பெருமையும் அடைந்தார்கள். வெற்றியின் பெருமை, வெற்றியின்
கர்வம். நீலாவிடம் எத்தனை விதமான நிறங்களில் , எத்தனை விதமான டிசைன்களில்
புடவைகள் இருந்தன என்பதை கேசவன் முதன் முதலாகக் கண்டு பிடித்தான். அவள்
காதுகளைத் தலை மயிருக்குள் ஒளித்துக் கொள்ளும் விதம் , வயிற்றுப் பாகம்
மறையும் படியாகப் புடவைத்தலைப்பை இடுப்பில் நட்டுக் கொண்டு பிறகு தோலில்
படர விட்டிருந்த நாசூக்கு., அவள் பேச்சிலிருந்த ஒரு லேசான மழலை. அவள்
விழிகளிலும் பாவனைகளிலும் கரைந்து விடாமல் தேங்கிக் கிடந்த ஒரு குழந்தைத்
தனமும் பேதமையும் - இவற்றையெல்லாம் அவன் நுணுக்கமாகக் கவனிக்கத்
தொடங்கினான்.
தன் கவனத்தைக் கவர, நீலா ரொம்பவும் பிரயாசைப்
படுகிறாள் என்று கேசவன் நினைத்தான். ஆனால், 'நானா கவனிப்பவன் ? ' என்று
அவளைக் கவனித்துக் கொண்டே, அவன் நினைத்தான்.
'ஒரு நாளில்
கிட்டத்தட்ட ஐம்பது அல்லது அறுபது தடவையாவது , கேசவன் என்பக்கம்
பார்க்கிறான் ' என்று நீலா நினைத்தாள். தன் அழகுக்கும் கவர்ச்சிக்கும் ஓர்
எளிய பக்தன் அளித்த சிறு காணிக்கையாக இதை அவள் திரஸ்கரிக்காமல் ஏற்றுக்
கொண்டாள். 'தன்னுடைய கனவு இளைஞனை அவள் சந்திக்கும் போது, இந்தக் குட்டி
பக்தனைப் பற்றி அவனிடம் சொல்லிச் சிரிப்பாள் அவள். கேசவன் அவளைப் பார்க்கப்
பார்க்க, கனவு இளைஞனைப் பற்றிய அவளுடைய நம்பிக்கைகளும் ஆசைகளும் மேன்
மேலும் உறுதிப் பட்டன. அவளுடைய அழகின் வல்லமையும் , சாத்தியக் கூறுகளும்
தெளிவாயின. மறு முறை பார்ககத் தூண்டும் பிரமிக்க வைக்கும் உருவம்
அவளுடையது. வடிவம் அவளுடையது. கனவு இளைஞன் அவளை நிச்சயம் தவற விடப்
போவதில்லை -- எத்தகைய அதிர்ஷ்டசாலி அவன்!.
செக்ஷனில் இருந்த
மற்றவர்கள் மீது அவளுக்கு இருந்த கோபம் கூட இப்போது குறையத் தொடங்கியது.
ஏனென்றால் அவர்களுடைய கேள்விகளுக்குப் பதில் சொல்லும் போதெல்லாம் ---
ஏதாவது ஒரு காரியமாக அவர்களை நோக்கி நடக்கும் போதெல்லாம் அவள் உண்மையில்
கேசவனுக்காகத் தான் பேசினாள்; கேசவனுக்காகவே நடந்தாள். அவளைச்
சுற்றியிருந்த உண்மைகள் திடாரென மறைந்து விட்டிருந்தன. கனவு இளைஞனுக்காகப்
போற்றி வந்த அவளுடைய உலகம் ஆகி விட்டிருந்தன.
கேசவனுடைய
கண்களிலும் உலகம் மாறித்தான் போயிருந்தது. திடாரென்று தன்னுடைய
முக்கியத்துவத்தை பிரத்தியேகத் தன்மையை -- அவன் உணர்ந்தான். காலரியில்
உட்கார்ந்து கைதட்டும் பெயரற்ற பலருள் ஒருவனாக -- ஒரு நடிகையின் பல
உபாசகர்களுள் ஒருவனாக -- நடைபாதைகளில் மிகுந்து செல்லும் அழகிகளின்
பார்வைத்தெளிப்புகளையும் வர்ணச் சிதறல்களையும் பொறுக்கிச் சேர்க்கும்
பலவீனர்களுள் ஒருவனாக இருந்தவன், திடாரென்று இந்தக் கும்பல்களிலிருந்து
தான் விலகி விட்டதை உணர்ந்தான். தன் ஒருவனுடைய ரசனைக்காகவும்,
பாராட்டுக்காகவும் மட்டுமே ஒரு அழகு தினந்தோறும் மலருவதை உணர்ந்தான்.
அவனுக்காகவே எழுப்பப் படும் கவிதை; வரையப் படும் ஓவியம்; இசைக்கப் படும்
இசை. -- அவனுக்காக மட்டுமே ஸ்கிரிப்ட் செய்யப்பட்டு, டைரக்ட் செய்யப்பட்டு,
திரையிடப் படும் ஒரு படம் -- எவ்வளவு அபூர்வமான கர்வப் பட வேண்டிய
விஷயம்.!
சில சமயங்களில் அவனுக்கு உற்சாகத்தைக் கட்டுப் படுத்திக் கொள்ளவே முடியாதென்று தோன்றியது. சாலையில் எதிர்ப்படும் முன் பின் அறியாதவர்களையெல்லாம் நிறுத்தி, விஷயத்தைச் சொல்ல வேண்டும் போல இருந்தது. அடுக்கு மாடிக் கட்டடத்தின் உச்சியில் போய் நின்று கொண்டு , மேகங்களிடம் தன் ரகசியத்தைப் பீற்றிக் கொள்ள வேண்டும் போலிருந்தது. அவன் தனியானவன்; வேறு பட்டவன்; வேறு யாருக்குமே கிடைக்காத இரு வாய்ப்பையும், ஒரு கெளரவத்தையும், அதன் மதிப்பு எப்படி இருந்தாலும் பெற்றவன்.
கேசவன் கவலைப் படத் தொடங்கினான்.
கவலைகளற்ற சுதந்திரப்பட்சி
என்று மற்றவர்களால் கருதப்பட்டவன், திடாரென்று தன் விருப்பமின்றியே ஓர்
அதிசயமான சிறையில் அடைபட்டுவிட்டதை உணர்ந்தான்; கரைகளற்ற நீர்ப்பரப்பில்,
அலைகளின் போக்குக்கேற்ப அலைந்து திரிந்த படகாக இருந்தவன் திடாரென்று ஒரு
கரையருகில் ஒரு முனையில் தான் கட்டப்பட்டுவிட்டதை உணர்ந்தான். இந்த மாறுதலை
அவனால் முழுமனதாக ஒப்புக்கொள்ள முடியவில்லை. அதே சமயத்தில் இதிலிருந்து
தன்னை விடுவித்துக்கொள்ளவும் முடியவில்லை! ஒரு கோணத்திலிருந்து
பார்க்கும்போது இது மகத்தான தோல்வியாகவும் வீழ்ச்சியாகவும் தோன்றியது.
ஆனால்-
ஆனால், இந்தத் தோல்வியில் ஒரு கவர்ச்சியும் இருந்தது.
ஒரு மர்மமான ஆழமும் அழகும் இருந்தன. அந்தத் தோல்வியை நேருக்குநேர்
சந்திக்கவும் பயந்து கொண்டு வந்த வழியே திரும்பிச் செல்லவும் மனம் வராமல்,
அவன் குழம்பினான்; தவித்தான்.
ஒரு நாள் சினிமாத் தியேட்டரில்
சினேகிதிகளுடன் வந்திருந்த நீலாவைப் பார்த்து அவன் சிரித்தான்; அவளும்
சிரித்தாள். அவனுக்கு தைரியம் வந்தது. செக்ஷனில் சிரிப்புக்கான
சந்தர்ப்பங்கள் வரும்போதெல்லாம் வேடிக்கைப்பேச்சுகளும் கலகலப்பும்
ஏற்படும்போதெல்லாம் அவர்களுடைய பார்வைகள் ஒன்றையொன்று நாடின. அவர்களுடைய
புன்னகைகள் மோதிக்கொண்டன. மின்சார அலை போல ஒன்று அவர்களிடையே எப்போதும்
ஓடிக்கொண்டே இருந்தது. அவள் பார்வைக்கு ஒரு அர்த்தம்தான் இருக்க முடியும்.
அவள் புன்னகைக்கு ஒரு அர்த்தம்தான் இருக்கமுடியும். ஆனாலும் அவனால் ஒரு
முடிவுக்கு வரமுடியவில்லை. பிறகு, அவன் நினைத்தான்- இவள் ஏற்கெனவே முடிவு
செய்துவிட்ட பிறகு, நான் ஏன் வீணாக யோசிக்கவேண்டும் ? எனக்கும் சேர்த்து
இவள் முடிவு செய்ததாக இருக்கட்டும். இவளுக்கு நான் ஏன் ஏமாற்றத்தை
அளிக்கவேண்டும் ? ஒரு பெண்ணின் மனத்திருப்தியை விட என் அழகின் தேடல் தானா
பெரிது ? ஓர் உடைந்த இதயத்தின் பாவத்தை மனச்சாட்சியில் சுமந்து கொண்டு
குற்றம் சாட்டும் இரு விழிகளை நினைவில் சுமந்து கொண்டு, எந்த அழகை என்னால்
ரசிக்க முடியும் ? எதில்தான் முழு மனதாக லயித்து ஈடுபட முடியும் ? நான்
நன்றாக மாட்டிக்கொண்டு விட்டேன். காலியாக நிர்மலமாக இருந்த என் மனத்தை ஒரு
குறிப்பிட்ட பிம்பம் பூதாகாரமாக அடைத்துக் கொண்டு விட்டது- இனி செய்வதற்கு
ஒன்று தான் இருக்கிறது -
ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது; கேசவன்
முடிவுக்கு வந்துவிட்டான்.
ஒருநாள் மாலை நீலா ஆபீசைவிட்டுக்
கிளம்பும்போது கேசவனும் கூடவே கிளம்பினான். அவள் முகம் சுளிக்காதது
அவனுக்குத் தெம்பை அளித்தது.
'வீட்டுக்கா ? ' என்றான்.
அசட்டுக்கேள்விதான்.
'ஆமாம் '
'எங்கேயாவது போய்
காபி சாப்பிடுவோமே ? '
அவள் இதை எதிர்ப்பார்க்கவில்லை என்று
தெரிந்தது. முகத்தில் குப்பென்று நிறம் ஏறியது. சமாளித்துக்கொண்டு 'இல்லை;
நான் வருவதற்கில்லை ' என்றாள்.
'ஏன் '
'ஒரு
வேலை இருக்கிறது '
'நான் நம்பவில்லை '
அவள்
பதில் பேசாமல் நடந்தாள். கேசவனுக்குத் தாளவில்லை. இவ்வளவு நாள் யோசித்து
யோசித்து - சே! இதற்குத்தானா ?
'ப்ளீஸ்! ' என்று அவன்
உணர்ச்சி வசப்பட்டவனாய் அவள் கையைப் பிடித்தான். அவ்வளவுதான். வெடுக்கென்ற
உதறலுடன் தன் கையை விடுவித்துக் கொண்டு அவனை நோக்கி ஒரு முறை
முறைத்துவிட்டு, அவள் சரசரவென்று வேகமாக நடந்தாள்.
கேசவன்
அவள் நடந்து செல்வதைப் பார்த்தவாறு நின்றான்.
'சீ! என்ன
துணிச்சல்! ' - பஸ் ஸ்டாண்டில் நிற்கும்போது, உடை மாற்றிக்கொண்டு கையில்
பத்திரிக்கையுடன் அமரும்போது, அவளுக்கு கேசவன் மேல் கோபம் கோபமாக வந்தது.
இடியட்! என்ன நினைத்துக்கொண்டிருக்கிறான் இவன்! எப்படிப்பட்டவளென்று
நினைக்கிறான் இவன் அவளை ? காபி சாப்பிட வேண்டுமாம், அதுவும் இவனுடன். என்ன
ஆசை ? என்ன ... கொழுப்பு! கையை வேறு பிடித்து -
சே!
நல்லதுக்குக் காலமில்லை. அவளைச் சுற்றிலும் இறுக்கமும் வறட்சியும் இல்லாமல்
சற்றே சந்தோஷத் தென்றல் வீசட்டும் என்று - அழகின் ஒளிக்கற்றைகள் இருந்த
இடங்களில் எல்லாம் பாயட்டும் என்று அவள் சுயநலமின்றிச் சிரித்துப்
பேசினால், இப்படியா ஒருவன் தப்பர்த்தம் செய்து கொள்வான் ? முட்டாள்தனமாக
நடந்து கொள்வான்!
தன் குட்டி பக்தனை அவள் சிறிதும் மன்னிக்கத்
தயாராக இல்லை;
அவனுக்காகவென்று அவள் வகுத்திருந்த சில
எல்லைகளை அவன் மீறிவிட்டதாக அவள் நினைத்தாள். நடை வாசலில் நின்று
கொண்டிருக்க வேண்டியவன், கர்ப்பக்கிருகத்துக்குள் திபுதிபுவென்று
நுழைந்திருக்கக்கூடாதென்று நினைத்தாள். பரிசுத்தமான மனசுடன் அவள் தன்
ஜன்னல்களைத் திறந்து வைத்தாள் என்பதற்காக, அவன் உரிமையுடன் ஜன்னலைத் தாண்டி
உட்புறம் குதிக்க முயற்சித்திருக்கக்கூடாதென்று நினைத்தாள். எல்லாமே
கேசவனின் குற்றத்தையும் அவளுடைய குற்றமின்மையையும் ருசுப்படுத்தும்,
ஸ்தாபிக்கும், எண்ணங்கள்.
அவன் தான் குற்றவாளி; அவளுடைய நல்ல
எண்ணங்களைத் தவறாக புரிந்து கொண்ட குற்றவாளி. இனி இவனிடம் பேசவே கூடாதென்று
மறுநாள் ஆபீசுக்குக் கிளம்பும்போது அவள் முடிவு செய்தாள்.
அன்று கேசவன் ஆபீசுக்கு வரவில்லை
(தொடரும்)
சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல் - 3
ஆதவன்
'உம்! பச்சாத்தாபப் படுகிறானாக்கும்; அல்லது தன் காலி நாற்காலியின் மூலம் அதிருப்தியைத் தெரிவிக்கிறானாக்கும். என் அனுதாபத்தைப் பெற முயற்சிக்கிறானாக்கும்! ' என்று அவள் அலட்சியமாக நினைத்தாள். அவனைப் பற்றி எதுவும் நினைக்காமல் அவனால் பாதிக்கப் படாமல் இயல்பாக இருக்க முயன்றாள். ஆனால் நினைவுகளை யாரால் கட்டுப் படுத்திக் கொள்ள முடியும் ? வேண்டும் வேண்டாம் என்று பாகு பாடு செய்து பொறுக்க முடியும் ? அவன் திசையில் எண்ணங்கள் பாய்வதை அவன் உருவம் மனதில் தோன்றித் தோன்றி மறைவதை அவளால் தவிர்க்க முடியவில்லை.
மாலையில் வீட்டில் உட்கார்ந்து , கேசவனைத் தள்ளுபடி செய்யக் கூடிய காரணங்களை அவள் தேடிப் பார்த்தாள். செக்ஷனில் வேலை செய்யும் பலருள் ஒருவனாக அவனை அசட்டையாகக் கருதி வந்த தன் பழைய மன நிலையை மீண்டும் உருவாக்கிக் கொள்ள முயன்றாள் ஆனால், அதில் அவளால் வெற்றி பெற முடிய வில்லை. கேசவனை ஒரு தனி மனிதனாக குறிப்பிட்ட சில இயல்புகளும் ருசிகளும் போக்குகளும் உள்ளவனாக எல்லாவற்றுக்கும் மேலாக அவளிடம் சிரத்தை கொண்ட ஒருவனாக, பேச்சுக்கள், பார்வைகள் மூலமாக அவளுடைய மனம் ஒருவிதமாக உருவகப் படுத்தி வைத்திருந்தத்து. இந்த உருவகத்தை அவளால் சிதைக்கவோ அழிக்கவோ முடியவில்லை. முகமற்ற , பெயரற்ற ,உருவற்ற, ஜனத்திரளில் ஒருவனாக -- அவளை எந்த விதத்திலும் பாதிக்காதவனாக -- அவனை மீண்டும் தூக்கி எறிய முடியவில்லை.
'அவனும் இப்போது என்னைப் பற்றி என்னைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருப்பானோ ? ' இருக்கலாம் ; யார் கண்டது ? என்ன விசித்திரமான தப்ப முடியாத விஷயம் இது ? அவள் அனுமதியின்றி , அவளுக்குத் தெரியாமல் , இந்தக் கணத்தில் அவளை அறிந்த பலர் அவளைப் பற்றி பலவிதமாக நினைத்துக் கொண்டிருப்பார்கள். அந்த நினைவுகளைப் பற்றி அவளால் எதுவும் தெரிந்து கொள்ள முடியாது. அவற்றை ஒடுக்கவோ மாற்றவோ முடியாது; அவற்றிலிருந்து தன்னை மீட்டுக் கொள்ள முடியாது.
என்ன நினைத்துக் கொண்டிருப்பான் கேசவன் ? அவள் கர்வம் பிடித்தவள் என்றா ? இரக்கமற்றவள் என்றா ? எப்படியாவது நினைத்துக் கொள்ளட்டும் -- ஆனால் ஆனால் -- ஆனால் ஒரு வேளை அவன் ரொம்ப வருத்தப் படுகிறானோ ? தன் தவறுக்காகத் தன்னையே கடிந்து கொண்டு கழிவிரக்கத்தில் உழலுகிறானோ ? இந்தக் கற்பனை அவளுக்கு ஒரு பயத்தையும் சங்கடத்தையும் அளித்தது. ' யாரோ என்னைப் பற்றி ஏதோ நினைத்துக் கொண்டு அவஸ்தைப் பட்டால் அதற்கு நானா பொறுப்பாளி ? ' என்று சமாதானம் செய்து கொள்ள முயன்றாள். ரேடியோவில் கேட்ட காதல் பாடலிலும், பத்திரிகை விளம்பரத்தில் இருந்த இளைஞன் முகத்திலும் , தன் மனதை ஈடுபடுத்தி கற்பனைகளை திசை திருப்பி விட முயற்சித்தாள். ஆனால், திடாரென்று இவையெல்லாம் உயிரற்றதாக அர்த்தமற்றதாக் வெறும் போலியாக , அவளுக்குத் தோன்றின. உயிரும் இயக்கமும் உள்ள ஓர் உண்மையாக அவள் பார்த்திருந்த -- அவளுடன் பேசியிருந்த -- கேசவனைச் சுற்றியே மீண்டும் மீண்டும் இந்த மனம் --
மறு நாள் கேசவன் ஆபிசுக்கு வந்தான். ஆனால் அவன் கேசவனாக இல்லை. கலப்பாக இல்லை. சுற்றுமுற்றும் பார்க்காமல், சிரிக்காமல் காரியமே கண்ணாக இருந்தான்.
நீலா அவனுடைய மாறுதல்களைக் கவனித்தவளாய், ஆனால், அதைக் கவனித்ததாகக் காட்டிக் கொள்ளாதவளாய் அமர்ந்திருந்தாள். கேசவன் வாய்ப்புக் கிடைக்கும் போது அவளிடம் ' ஐ யாம் சாரி ' என்று மன்னிப்புக் கேட்டுக்கொள்ளப் போகிறான் என்று அவள் எதிர்பார்த்தாள். . .ஆனால், கேசவன் ஒரு நாள் லீவில் தன்னைக் கடுமையாக ஆத்ம சோதனை செய்து கொண்டு , பெண்கள் , அவர்களுடைய பார்வைகள், சிரிப்புகள், இவற்றின் அர்த்தங்கள் ஆகியவற்றிலெல்லாம் முற்றும் நம்பிக்கை இழந்த ஒரு விரக்தி நிலை அடைந்திருந்தான், என்பது அவளுக்குத் தெரியவில்லை.
அன்று லஞ்ச் டயத்திற்குப் பிறகு சில நிமிடங்களுக்குச் செக்ஷனில் அவளும் அவனும் மட்டும் தான் தனியாக இருந்தார்கள். அப்போது கேசவன் , தன்னிடம் பேசப் போகிறான் என்று அவள் எதிர் பார்த்தாள். ஆனால் அவன் பேசவில்லை. அடுத்த நாளும், அதற்கடுத்த நாளும் கூட இப்படிப் பல சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. ஆனால் , கேசவன் எந்த சந்தர்ப்பத்தையுமே உபயோகித்துக் கொள்ள வில்லை.
' ரொம்பக் கோபம் போலிருக்கு ! ' என்று அவள் நினைத்தாள்.
அவனுடைய விலகிய போக்கும் உஷ்ணமும் -- ஆபிஸ் வேலை விஷயமாக அவளிடம் பேச வேண்டி வரும் போது மிக மரியாதையுடன் . முகத்தைப் பார்க்காமல் பேசி விட்டு நகருதலும் அவளுக்கு ரசமாகவும் , வேடிக்கையாகவும் இருந்தன. அதே சமயத்தில் இந்தக் கோபத்தின் பின்னிருந்த ஏமாற்றத்தையும் வேதனையையும் ஊகித்துணரும் போது அவளுக்கு அவன் மேல் இரக்கமாகவும் இருந்தது. 'சுத்தப் பைத்தியம் ' என்று அவள் நினைத்தாள். அவள் நிலை அவனுக்கு ஏன் புரிய மாட்டேன் என்கிறது ? அவள் ஒரு பெண். -- விளைவுகளைப் பற்றி சுற்றியுள்ள சமூகத்தின் பார்வையையும் பேச்சுகளையும் பற்றி யோசிக்க வேண்டியவள். எவனோ கூப்பிட்டான் என்று உடனே காபி சாப்பிடப் போக இது என்ன சினிமாவா ? டிராமாவா ?
இப்படியாக, அவன் காப்பி சாப்பிடக் கூப்பிட்டதே தப்பு என்கிற ரீதியில் யோசித்துக் கொண்டிருந்தவள், அவன் அப்படிச் செய்தது சரியாக இருந்தாலும் கூடத் தான் ஏன் அதை ஏற்றுக் கொண்டிருக்க முடியாது ? என்று தனக்குத் தானே நிரூபித்துக் கொண்டு , தன் செய்கை சரிதானா என்று ஸ்தாபித்துக் கொள்ள முயன்றாள். இருந்தாலும் மனதின் அரிப்பையும் , குடைவையும் அவளால் தடுக்க இயல வில்லை. ஒரு வேளை அந்தச் சந்தர்ப்பத்தில் அவள் வேறு வார்த்தைகளை உபயோகப்படுத்தியிருக்கலாமோ ? இன்னும் சிறிது பிரியமாக நடந்து கொண்டிருக்கலாமோ ? அவனைப் புண்படுத்தாமலும் அதே சமயத்தில் தன்னைப் பந்தப் படுத்திக் கொள்ளாமலும், சாதுரியமாக நிலைமையைச் சமாளித்திருக்கலாமோ ?
அவள் தான் இப்படியெல்லாம் ஏதேதோ யோசித்துக் கொண்டிருந்தாளே தவிர அவன் அவளைப் பற்றி கவலைப் பட்டதாகவே தெரியவில்லை. . . அவள் பக்கம் பார்ப்பதையே அவன் நிறுத்தி விட்டான். ஏன், சீட்டில் உட்காரும் நேரத்தையே அவன் கூடியவரை குறைத்துக் கொள்ளத் தொடங்கியிருந்தான். அவனுடைய அலட்சியம் அவளுடைய ராத்தூக்கத்தைக் கெடுத்து விடவில்லை. ஆனாலும் ஒரு சூனிய உணர்வு அவளை அவ்வப்போது பிடித்து உலுக்கத் தான் செய்தது. அவளுக்குள் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்த ஏதோ ஒரு பல்பு ஃபியூஸ் ஆனதைப் போல இருந்தது. அந்த பல்பு இல்லாமலும் , அவள் இயங்கக் கூடும் . இருந்தாலும் வித்தியாசம் இருக்கத் தான் செய்தது. குறை தெரியத்தான் செய்தது.
அழகு படுத்திக்கொள்வதிலும் , அலங்கரித்துக் கொள்வதிலும் முன் போல ஆர்வமும் உற்சாகமும் காட்ட அவளால் முடிய வில்லை. தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் ஒரு முயற்சியாக அவை தோன்றின. கனவு இளைஞனை மண்டியிடச் செய்யும் தேஜஸ் வாய்ந்ததாகத் தோன்றிய தன் அழகின் மேல் முன் போல் அவளால் நம்பிக்கை வைக்க முடியவில்லை,. அதன் கவர்ச்சியையும் வல்லமையையும் பற்றி தீர்மானமாகவும் இறுமாப்பாகவும் இருக்க முடிய வில்லை. எதை அஸ்திவாரமாகக் கொண்டு அவள் தடபுடலாக மாளிகை கட்டிக்னாளோ அந்த அஸ்திவாரமே இப்போது சந்தேகத்திற்குரியதாக மாறி விட்டிருந்தது. 'இவ்வளவு சீக்கிரம் புறக்கணிக்கக் கூடிய சக்தியா அவள் சக்தி ? பைத்தியம் பிடிக்கச் செய்யும் , நிரந்தரமான , விடுபடமுடியாத , போதையிலாழ்த்தும் அழகு இல்லையா அவளுடைய அழகு ? கேசவன் அவளைப் பார்த்து மயங்கியது கூடத் தற்செயலாக நிகழ்ந்தது தானோ ? அல்லது அவன் மயங்கியதாக நினைத்தது கூட அவள் பிரமை தானா ? தன்னை மறந்து ஒரு நிலையில் -- ஒரு திடார் உந்துதலில் -- அவன் அவளை நெருங்கி வர -, இவள் பைத்தியம் போல அந்த வாய்ப்பை நழுவ விட்டு விட்டாளா ? இனி இது போன்ற வாய்ப்புகள் அவள் வாழ்வில் வர நேருமோ, நேராதோ ? அப்பாவும் அம்மாவும் ஜோசியர்களும், தேர்ந்தெடுக்கும் யாரோ ஒரு -- என்ன பயங்கரம் ?
'நான் முட்டாள் படு முட்டாள் ' என்று அவள் தன்னைத் தானே திட்டிக் கொண்டாள். கேசவன் மீசை வைத்திருந்தான். அதனாலென்ன ? சுமாரான நிறம் தான். அதனாலென்ன ? அவன் கேசவன் -- அவளுக்குப் பரிச்சயமானவன். மோசமான டைப் என்று சொல்ல முடியாதவன்.
'உம்! இந்தப் பெண்கள் ! ' -- காலையில் பஸ்ஸில் ஆபிஸை நெருங்கிக் கொண்டிருந்த கேசவன் அனுபவபூர்வமாகவும், கரை கண்டவனாகவும், புன்னகை செய்து கொண்டான். ' இவர்களுக்கு கவனிக்கப் படவும் வேண்டும் கவனிக்கப் படவும் கூடாது. சலுகைகள் எடுத்துக் கொள்ளப்படவும் வேண்டும்; எடுத்துக் கொள்ளப் படவும் கூடாது. காற்றடிக்கவும் வேண்டும்; புடவை பறக்கவும் கூடாது. '
' இந்தப் பெண்களே ஸ்திர புத்தியற்றவர்கள். மோசக்காரிகள் -- பிச்சஸ் - இவர்களை நம்பவே கூடாது ' என்று நினைத்தவனாய் அவன் செக்ஷனுக்குள் நுழைந்தான். தண்டபாணி உரத்த குரலி சீனிவாசனிடம் ஏதோ உரக்க வாக்கு வாதம் செய்து கொண்டிருந்தார். கணபதி ராமன் தன் குறை எதையோ குப்பு சாமியிடம் சொல்லி அழுது கொண்டிருந்தார். நீலா . . .
கேசவன் அசட்டையாக அவள் பக்கம் பார்த்தான். திடுக்கிட்டான். அதே புடவை அணிந்திருந்தாள் அவள்., அன்று அவன் காப்பி சாப்பிடக் கூப்பிட்ட போது அணிந்திருந்த அதே புடவை. அவன் அவள் முகத்தைப் பார்த்தான். அவள் பார்வையில் கூத்தாடிய விஷமத்தையும் உல்லாசத்தையும் கவனித்தான். பிறகு, உதட்டைக் கடித்துக் கொண்டு பார்வையைத் தாழ்த்திக் கொண்டான். இல்லை, மறுபடியும் ஏமாறத் தயாராய் இல்லை அவன்.
அட்டெண்டன்ஸ் மார்க் பண்னி விட்டு அவன் தன் இடத்தில் போய் உட்கார்ந்தான். ஃபைல் ஒன்றைப் பிரித்தான். ,. ' கிளிங் . .கிளிங்.. ' என்ற வளையல் ஓசை -- அவன் நிமிரவில்லை. ' பெரிய மகாராணி ' என்று நினைத்தான். இவள் இஷ்டப் படி போடும் விதிகளின் படி நான் விளையாட வேண்டும் போலிருக்கிறது. அவள், அவன் கவனத்தைக் கவர முயற்சிப்பதும் , அவன் இதை மெளனமாக எதிர்ப்பதுமாக சில நிமிடங்கள் ஊர்ந்தன. திடார் என்று பியூன் பாராங்குசம் கையில் ஒரு காப்பித் தம்ளருடன் செக்ஷனுக்குள் நுழைந்தான். ஒரு தம்ளரை நீலாவின் மேஜை மேல் வைத்தான். இன்னொன்றை கேசவன் மேஜை மீது வைக்குமாறு அவள் ஜாடை காட்டவும், பாராங்குசம் அப்படியே செய்தான்.
கேசவன் நிமிர்ந்தான் -- 'என்னப்பா இது ? '
' நான் தான் வாங்கி வரச் சொன்னேன் ' என்றாள் நீலா. புன்னகையுடன் , ' யூ லைக் காபி, நோ ? '
கேசவன் திணறிப் போனான் . இப்படி ஒரு சந்தர்ப்பத்தை அவன் எதிர் பார்க்க வில்லை. இப்படி நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்று கணக்குப் போட்டிருக்கவில்லை. உஷ்ணமாக ஏதாவது சொல்ல வேண்டும் போலிருந்தது.
' காப்பி சாப்பிடுங்க சார். ஆறிப் போயிடும் ' என்றான் பராங்குசம்.
அவன் குடிக்கப் போவதை எதிர் பார்த்து நீலா தம்ளரைக் கையில் எடுத்து அவனுடன் சேர்ந்து குடிப்பதற்காகக் காத்திருந்தாள். அவள் விழிகளிலிருந்த நிச்சயமும் நம்பிக்கையும்! கேசவன் தான் தோற்று விட்டதை உணர்ந்தான். காப்பியை அருந்தத் தொடங்கினான். அவளிடம் ஏதேதோ கோபப் பட வேண்டும் விஷயங்களைத் தெளிவு படுத்த வேண்டும் என்று அவன் விஸ்தாரமாக யோசித்து வைத்திருந்தான். ஆனால் இப்போது எல்லாமே அநாவசியமானதாக, அர்த்தமற்றதாகத் தோன்றின. அவள் அருகில் சுமுகமான நிலையில் இருப்பதே போதும் என்று தோன்றியது.
'காப்பிக்காக தாங்ஸ் ' என்றான் அவன்.
'குடித்ததற்காக தாங்க்ஸ் ' என்றாள் அவள்.அதற்கு மேலும் ஏதாவது சொல்ல வேண்டுமென்று துடித்தவளாய் , ஆனால், தவறாக எதையும் சொல்லி விடக் கூடாதே என்று தயங்கியவளாய் அவள் ஒரு புன்னகை மட்டும் செய்தாள். அவனுக்கும் பதிலுக்குப் புன்னகை செய்தான்.
ஒருவரையொருவர் ஜெயிக்க நினைத்தார்கள். ஒருவரிடம் ஒருவர் தோற்றுப் போய் உட்கார்ந்திருந்தார்கள்.
(முற்றும்)
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இதுதான் ‘சசி’ இயக்கி தமிழ் திரையுலகில் குறிப்பிடத்தக்க யதார்த்த படமாகப் பாராட்டப்படுகிற ‘பூ’ திரைப்படத்தின் கதை. 25 ஆண்டுகளுக்கு முன் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய சிறுகதையை அதன் சாரம் கெடாமல் மெருகேற்றி திரைக்கதையாக்கி உயிர் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சசி. வட்டார வழக்கில் எழுதப்பட்டிருக்கிற இக்கதை படிப்பவர் மனதை இன்றும் தைக்கும். ‘இளம் வெயிலும் மிதமான காற்றும் இசைவான கடலலையும் எல்லோருக்கும் வாய்க்க நாம் கதை எழுதுவதுதான் ஒரே வழி’ என்கிற ச.தமிழ்ச்செல்வன், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இப்போது பத்தமடையில் வாழ்கிறார்.மாரியம்மாளின் ஆத்தாளுக்கு முதலில் திகைப்பாயிருந்தது. இந்த வேகாத வெயில்ல இந்தக் கழுத ஏன் இப்படி தவிச்சுப் போயி ஓடியாந்திருக்கு என்று புரியவில்லை.
பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் ’சப் ரங்’ என்னும் உருதுப் பத்திரிகை
இந்தக் கதையை மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறது.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
அன்பின் நண்பர்களுக்கு,
எஸ்.ரா. அவரது தளத்தில் குறிப்பிட்டிருந்த நூறு சிறந்த சிறுகதைகளை இந்தத் தளத்திலும் தொகுக்கலாமென முடிவு செய்திருக்கிறேன். சில கதைகள் இணையத்தில் மிகச்சில கதைகள் என்னிடம் அச்சு வடிவிலும் இருக்கின்றன. பதிவர், நண்பர்கள் வசம் ஏதும் கதைகள் இருப்பின் அந்தப் பக்கங்களை நகலெடுத்து அனுப்பி வைக்க இயலுமெனில் தன்யனாவேன்.
காப்புரிமை பெற்ற கதைகளை இங்கு இடுவதற்கு ஏதேனும் மறுப்பு தெரிவிப்பதாயின் குறிப்பிட்டு விடவும். அந்தக் கதைகளை இங்கு ஏற்றப்பட மாட்டாது.
கதைகள் இருப்பின் அனுப்ப வேண்டிய மின் மடல் முகவரி: senshe...@gmail.com
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
--'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
“பாண்டியர்களின் இரண்டாம் தலைநகரம் மதுரை. பண்டைய தேசப் படங்களில் ‘மட்ரா’ என்று காணப்படுவதும், ஆங்கிலத்தில் ’மதுரா’ என்று சொல்லப்படுவதும், கிரேக்கர்களால் ‘மெதோரா’ என்று குறிக்கப்படுவதும் இத்தமிழ் மதுரையேயாம்.”
-கால்டுவெல் ஒப்பிலக்கணம்
குருபீடம் - ஜெயகாந்தன்
«Åý ¦¾ÕÅ¢ø ¿¼ó¾§À¡Ð Å£¾¢§Â ¿¡üÈÁÊò¾Ð. «Åý À¢î¨ºì¸¡¸§Å¡ «øÄÐ
§ÅÊ쨸 À¡÷ôÀ¾ü¸¡¸§Å¡ ºó¨¾ò¾¢¼Ä¢ø ¾¢Ã¢óÐ ¦¸¡ñÊÕó¾§À¡Ð «Å¨Éô
À¡÷ò¾ Á¡ò¾¢Ãò¾¢ø ±ø§Ä¡Õ§Á «ÕÅÕòРŢÃðÊÉ¡÷¸û. «Å¨É Å¢ÃðΞü¸¡¸§Å
º¢Ä§À÷ ²§¾¡ À¡Å ¸¡Ã¢Âò¨¾î ¦ºö¸¢È Á¡¾¢Ã¢ «ÅÛìÌô À¢î¨ºÂ¢ð¼¡÷¸û.
«Åý ¦.¢ĢÕóÐ Åó¾¢ÕôÀ¾¡¸î º¢Ä §À÷ §Àº¢ì¦¸¡ñ¼¡÷¸û. «Åý ¨Àò¾¢Â측Ã
¬.Àò¾¢Ã¢Â¢Ä¢ÕóÐ ¦ÅÇ¢§ÂüÈôÀð¼Å¦ÉýÚõ º¢Ä÷ ¦º¡ýÉ¡÷¸û.
¬É¡ø, þô§À¡Ð «Åý §¿¡Â¡Ç¢§Â¡ ¨Àò¾¢Â측çɡ «øÄ ±ýÚ «Å¨Éô À¡÷ò¾
±øÄ¡Õõ ÒâóÐ ¦¸¡ñ¼¡÷¸û. ¯ñ¨ÁÔõ «Ð¾¡ý. §º¡õÀÖõ, ÍÂÁ⡨¾
þøÄ¡¨ÁÔõ, þó¾ì §¸¡Äõ «º¢í¸¦ÁýÚ ¯½Ã ÓÊ¡¾ «Ç×ìÌ «ÅÉ¢¼õ °È¢
¯¨ÈóЧÀ¡É ¾¡Áºò¾¢ý Á¾Á¾ôÀ¢É¡Öõ «Åý þùÅ¡Ú ¾¢Ã¢¸¢È¡ý. Àº¢ì¸¢È§¾¡
þø¨Ä§Â¡ ¾ý ¨¸Â¢ø ¸¢¨¼ò¾¨¾Ôõ À¢È÷ ¨¸Â¢ø þÕôÀ¨¾Ôõ ¾¢ýÉ §ÅñΦÁýÈ
§Å𨸠«Åý ¸ñ½¢ø «¨Äó¾Ð. ´Õ ÌÆó¨¾ º¡ôÀ¢ÎŨ¾ìܼ ´Õ ¿¡ö Á¡¾¢Ã¢
«Åý ¿¢ýÚ À¡÷ò¾¡ý. «Å÷¸Ùõ «Å¨É ¿¡¨Â Å¢ÃðÎÅÐ Á¡¾¢Ã¢ Å¢ÃðÊÉ¡÷¸û.
«ùÅ¢¾õ «Å÷¸û Å¢ÃðÊ «Åý Ţĸ¢ÅÕõ§À¡Ð «Åý ¾ÉÐ À¡÷¨Å¡ø À¢È÷ º¡ôÀ¢Îõ
¦À¡Õ¨Ç ±îº¢ø ÀÎò¾¢Å¢ðÎ Åó¾¡ý. «Åý ±ô§À¡Ðõ ±¨¾Â¡ÅÐ ¾¢ýÚ¦¸¡ñ§¼
þÕó¾¡ý. «Åý ¸¨¼Å¡Â¢Öõ ÀøÄ¢Öõ «Åý ¾¢ýȨŠº¢ì¸¢ì ¸¡öó¾¢Õó¾Ð. ¡áÅÐ
À£Ê§Â¡ ÍÕ𧼡 Ò¨¸òÐì ¦¸¡ñÊÕ󾡸 «¾üÌõ «Åý ¨¸§Âó¾¢É¡ý. «Å÷¸û
Ò¨¸òÐ ±È¢¸¢È ŨÃìÌõ ¸¡ò¾¢ÕóÐ, «¾ý À¢ÈÌ «Åü¨Èô ¦À¡Ú츢 «Å÷¸¨Ç
«ÅÁ⡨¾ ¦ºö¸¢È Á¡¾¢Ã¢Â¡É ºó§¾¡.òмý «Åý Ò¨¸ò¾¡ý.
ºó¨¾ìÌ Åó¾¢Õì¸¢È ¿¡ðÎôÒÈô ¦Àñ¸û ÌÆó¨¾¸ÙìÌô À¡ø ¦¸¡ÎìÌõ§À¡Ðõ,
ÌÉ¢óÐ ¿¢Á¢÷¨¸Â¢ø ¬¨¼ Å¢ÄÌõ§À¡Ðõ, þÅý ¸¡Á¡àÃõ ¦¸¡ñÎ ¦Åð¸Á¢øÄ¡Áø
«Å÷¸¨Ç ¦ÅÈ¢òÐô À¡÷òРú¢ò¾¡ý.
«ÅÛìÌ ¯¼õÀ¢ø ¿øÄ ÅÖ×õ ¬§Ã¡ì¸¢ÂÓõ þÕó¾Ð. ±É¢Ûõ ±ô§À¡Ðõ ´Õ
§¿¡Â¡Ç¢¨Âô§À¡ø À¡º¡íÌ ¦ºöÅÐ «ÅÛìÌô ÀÆì¸Á¡¸¢ô §À¡öÅ¢ð¼Ð. «ÅÛìÌ
ÅÂÐ ¿¡üÀÐìÌû¾¡ý þÕìÌõ. ¸Î¨Á¡¸ ¯¨Æì¸¡¾¾¡Öõ, ¸Å¨Ä¸û ²Ðõ
þøÄ¡¾¾¡Öõ «Åý ¯¼õÒÅ¡§¸ ´Õ ¦À¡Ä¢¸¡¨Ç Á¡¾¢Ã¢ þÕó¾Ð. þǨÁÔõ ¯¼ø
ÅÖ×õ ¬§Ã¡ì¸¢ÂÓõ þÂü¨¸Â¡ø «ÅÛìÌ «Û츢ø¢ì¸ôÀðÊÕóÐõ «Åý
¾ý¨Éò¾¡§É ºÀ¢òÐì ¦¸¡ñ¼Ð Á¡¾¢Ã¢ §ºüÈ¢ø §Áö¸¢È ÀýȢ¡öò ¾¢Ã¢ó¾¡ý.
ºó¨¾ò ¾¢¼ÖìÌõ âÄÊìÌõ ¿Î§ÅÔûÇ ÌÇ츨è «Îò¾ ºò¾¢Ãò¾¢ø ¯ð¸¡÷óÐ
¦¸¡ñÎ «í§¸ ÌÇ¢ì¸¢È ¦Àñ¸¨Ç §ÅÊ쨸 À¡÷ôÀÐ «ÅÛìÌ ´Õ ¦À¡ØÐ§À¡ìÌ.
¬É¡ø, ´Õ ¿¡Ç¡ÅÐ ¾¡Ûõ ÌÇ¢ì¸ §ÅñΦÁýÚ «ÅÛìÌò §¾¡ýȢ§¾ þø¨Ä.
ÁüÈ §¿Ãí¸Ç¢ø «Åý «ó¾ò ¾¢ñ¨½Â¢ø «º¢í¸Á¡¸ô ÀÎòÐ ¯Èí¸¢ì
¦¸¡ñÊÕôÀ¡ý. º¢Ä ºÁÂí¸Ç¢ø À¸ø §¿Ãò¾¢ø ܼ ¯ÈíÌÅÐ Á¡¾¢Ã¢ À¡Å¨É¢ø
§ÅñΦÁý§È ¬¨¼¸¨Ç Å¢Ä츢ô §À¡ðÎ즸¡ñÎ ¦¾ÕÅ¢ø §À¡§Å¡÷ ÅÕ§Å¡¨Ã
«¾¢÷ìÌ ¯ûǡ츢 øº¢ÂÁ¡¸ ÁÉò¾¢üÌû Á¸¢ú «¨¼Å¡ý.
þÃñÎ ¾¢Éí¸ÙìÌ ÓýÒ §Äº¡¸ Á¨Æ ¦ÀöÐ ¦¸¡ñÊÕó¾ þÃÅ¢ø ´Õ À¢î¨ºì¸¡Ã¢
þó¾î ºò¾¢ÃòÐò ¾¢ñ¨½Â¢ø ÅóÐ ÀÎì¸, «ÅÙìÌ ²§¾§¾¡ ¬¨º ¸¡ðÊì
¸¨¼º¢Â¢ø «Å¨Ç ÅÄ¢ÂýÚ ºøÄ¡À¢ò¾¡ý. «¾ý À¢ÈÌ þŨÉô ÀÆ¢Å¡í¸¢Å¢ð¼
Á¸¢ú¢ø ¾ÉР̨ÈÀðÎô§À¡É Å¢Ãø¸¨Çì ¸¡ðÊò ¾¡ý ´Õ §¿¡Â¡Ç¢ ±ýÚ «Åû
º¢Ã¢ò¾¡û. «¾ü¸¡¸ «ÕÅÕôÒì ¦¸¡û¸¢È ¯½÷ܼ þøÄ¡Áø «Åý ÁØí¸¢ô
§À¡Â¢Õó¾¡ý. ±É§Å, þÅû þÅÛìÌô ÀÂóЦ¸¡ñÎ þÃñÎ ¿¡ð¸Ç¡¸ þó¾ô
À츧Á ¾¢ÕõÀÅ¢ø¨Ä. þÅý «Å¨Çò §¾Ê즸¡ñÎ §¿üÚ þÃ¦ÅøÄ¡õ º¢É¢Á¡ì
¦¸¡ð¼¨¸ «Õ§¸Ôõ, ºó¨¾ô§Àð¨¼Â¢Öõ, °Ã¢ý ¦¾Õì¸Ç¢Öõ ¸¡÷ò¾¢¨¸ Á¡¾òÐ
¿¡ö Á¡¾¢Ã¢ «¨Äó¾¡ý.
ÁÉ¢¾ ¯Õ즸¡ñÎ «ÅÉ¢¼õ ¯¨ÈóЧÀ¡É ¾¡Áºò ¾ý¨Á¢ɡø, §º¡õÀ¨Äî
͸¦ÁýÚ ÍÁóÐ ¦¸¡û¸¢È Òò¾¢Â¢ý Áó¾ò¾¢É¡ø «ÕÅÕì¸ò¾ì¸ ´Õ Ò¨Ä ¿¡ö Á¡¾¢Ã¢
«Åý «íÌ «¨ÄóÐ ¦¸¡ñÊÕó¾¡ý. Å¢üÚôÀº¢, ¯¼üÀº¢ ±ý¸¢È Å¢¸¡Ãí¸Ç¢Öõ
¯À¡¨¾¸Ç¢Öõ º¢ìÌñÎ «¨Ä¸¢ýÈ §¿Ãõ ¾Å¢Ã, À¢È ¦À¡ØÐ¸Ç¢ø «ó¾î ºò¾¢ÃòÐò
¾¢ñ¨½Â¢ø «Åý àí¸¢ì¦¸¡ñ§¼ þÕôÀ¡ý.
··· ··· ··· ···
¸¡¨Ä §¿Ãõ; Å¢ÊÂü¸¡¨Ä §¿Ãõ «øÄ. ºó¨¾ìÌô §À¡¸¢È .Éí¸Ùõ, â§ÄÈ¢ô
Àì¸òÐ °Ã¢ø ÀÊôÀ¾ü¸¡¸ô §À¡Ìõ ÀûÇ¢ìÜ¼î º¢ÚÅ÷¸Ùõ ¿¢¨ÈóÐ «ó¾ò ¦¾Õ§Å
ÍÚÍÚôÀ¡¸ þÂí̸¢ýÈ - Íã÷ ±ýÚ ¦Å¢ø «Êì¸¢È §¿Ãò¾¢ø, «ØìÌõ ¸ó¾ÖÁ¡É
þÎôÒ §Åðʨ «Å¢úòÐò ¾¨Ä¢ø þÕóÐ ¸¡øÅ¨Ã §À¡÷ò¾¢ì ¦¸¡ñÎ, «ó¾ô
§À¡÷¨ÅìÌû ìÕôÀ¢ñ¼õ Á¡¾¢Ã¢ ÓÆí¸¡ø¸¨Ç Á¼ì¸¢ì ¦¸¡ñÎ, ¨¸¸Ç¢Ãñ¨¼Ôõ
¸¡Ä¢¨¼§Â þÎ츢ÂÅ¡Ú Å¡Â¢Ä¢ÕóÐ ±îº¢ø ´Ø¸, ® ¦Á¡öôÀРܼò ¦¾Ã¢Â¡Áø
«Åý àí¸¢ì ¦¸¡ñÊÕó¾¡ý. ¦¾ÕÅ¢§Ä ²üÀθ¢È ºó¾ÊÔõ þ¨ÃîºÖõ ²§¾¡ ´Õ
ºÁÂò¾¢ø «Åý àì¸ò¨¾ì ¸¨Äò¾Ð. ±É¢Ûõ «Åý ŢƢòÐì ¦¸¡ûÇ
Å¢ÕõÀ¡¾¾É¡ø àí¸¢ì ¦¸¡ñÊÕó¾¡ý.
- þо¡ý §º¡õÀø. ¯Èì¸õ ¯¼ÖìÌò §¾¨Å. «É¡ø, þó¾ò §¾¨ÅÂüÈ ¿¢÷ôÀó¾ò
àì¸õ¾¡ý §º¡õÀÄ¡Ìõ. þó¾ Á¾Á¾ô¨Àî ͸¦ÁýÚ º¸¢ì¸¢È «È¢×¾¡ý ¾¡ÁºÁ¡Ìõ.
Å¢¨ÃÅ¡¸ ²È¢ Åó¾ ¦Å¢ø «ÅýÁ£Ð ¦ÁÐÅ¡¸ °÷ó¾Ð. «Åý ¦¾Õ×ìÌ ÓШ¸ì
¸¡ðÊì ¦¸¡ñÎ ÍÅ÷ µÃÁ¡¸ô ÀÎò¾¢Õó¾¡ý. ºò¾¢ÃòÐî ÍÅâý ¿¢Æø ¦¸¡ïºí
¦¸¡ïºÁ¡¸î ÍÕí¸ ¬ÃõÀ¢ò¾Ð. ӾĢø ¦Å¢Ģý ŢǢõÒ «ÅÉРŢġ×ìÌõ
¾¨ÃìÌõ þ¨¼§Â ¦ÁûÇ ¦ÁûÇô ÒÌŨ¾ «ÅÉÐ Á¾÷ò¾ §¾¸õ ¦Ã¡õÀò ¾¡Á¾Á¡¸
¯½÷ó¾Ð. ¦Å¢Ģý ¯¨Èô¨À ¯½ÃìÜÊ ¯½÷ì ÌÚÌÚôÒ ÁØí¸¢ô §À¡É¾¡ø
´Õ Á¨ÄôÀ¡õÒ Á¡¾¢Ã¢ «Åý «º¢í¸Á¡¸ ¦¿Ç¢ó¾¡ý. «ó¾ ¦ÅôÀò¾¢Ä¢ÕóÐ - «ó¾
¦Å¢Ģý ŢǢõÀ¢Ä¢ÕóÐ ´Õ áø þ¨Æ Å¢ÄÌžüÌ ±ùÅÇ× Ì¨ÈÅ¡É, ¦ÁÐÅ¡É
ÓÂüº¢ ±ÎòÐì ¦¸¡ûÇÄ¡§Á¡, «ùÅǧŠ«Åý ¿¸÷óÐ ÀÎò¾¡ý. ºüÚ §¿Ãò¾¢ø
ÁÚÀÊÔõ ¦Å¢ø «Å¨Éì ¸Êò¾Ð. «ÅÉÐ «ºÁó¾õ ±Ã¢îºÄ¡¸¢ «Åý àì¸õ
¸¨Äó¾¡ý. ¬É¡Öõ «Åý ±Øó¾¢Õì¸Å¢ø¨Ä. þýÛõ ¦¸¡ïºõ ¿¸÷óÐ ÍŧáÎ
´ðÊì ¦¸¡ñ¼¡ý.
±¾¢§Ã þÕó¾ Ë츨¼Â¢Ä¢ÕóÐ Ë «Êì¸¢È ºò¾õ §¸ð¼Ð. «ó¾î ºò¾ò¾¢ø «Åý Ë
ÌÊôÀÐ Á¡¾¢Ã¢ ¸üÀ¨É ¦ºöÐ ¦¸¡ñ¼¡ý.
ÁÚÀÊÔõ ¦Å¢ø «Å¨É Å¢¼¡Áø §À¡öì ¸Êò¾Ð. «¾ü̧Áø ¿¸Ã ÓÊ¡Áø ÍÅ÷
¾Îò¾Ð. ´Õ Àì¸õ ÍÅÕõ ´Õ Àì¸õ ¦Å¢Öõ ¦¿Õì¸ «Åý ±Ã¢îº§Ä¡Î ±ØóÐ
¯ð¸¡÷ó¾¡ý. «ÅÛìÌì ¸ñ¸û ܺ¢É. ´Õ ¸ñ¨½ò ¾¢È츧ŠÓÊÂÅ¢ø¨Ä. À£¨Ç
¸¡öóÐ þ¨Á¸û ´ðÊì ¦¸¡ñÊÕó¾É.
«Åý ´Õ ¨¸Â¡ø ¸ñ¨½ì ¸ºì¸¢ì ¦¸¡ñ§¼ þý¦É¡Õ ¨¸Â¡ø, ¾¨ÄÁ¡ðÊø
§º¸Ã¢òÐ ¨Åò¾¢Õó¾ ÐñÎ À£Ê¸Ç¢ø ´ý¨È ±Îò¾¡ý. À£Ê¨Âô ÀüÈ ¨ÅòÐ «Åý
Ò¨¸¨Â °¾¢Â §À¡Ð «ÅÉÐ «¨Ãì ¸ñ À¡÷¨Å¢ø Á¢¸ «Õ¸¡¨Á¢ø ¡§Ã¡
¿¢ýÈ¢Õì¸¢È Á¡¾¢Ã¢ Ó¸õ ÁðÎõ ¦¾Ã¢ó¾Ð. Ò¨¸¨Â Å¢Äì¸¢ì ¸ñ¸¨Çò ¾¢ÈóÐ
À¡÷ò¾¡ý.
±¾¢§Ã ´ÕÅý ¨¸¸¨Ç ÜôÀ¢, ¯¼ø ÓØÅÐõ ÌÚ¸¢, þÅ¨É Å½í¸¢ ÅÆ¢Àθ¢È Á¡¾¢Ã¢
¿¢ýÈ¢Õó¾¡ý. þÅÛìÌî ºó§¾¸Á¡¸¢ò ¾ÉìÌô À¢ýÉ¡ø ²§¾Ûõ º¡Á¢ º¢¨Ä§Â¡,
º¢ò¾¢Ã§Á¡ þó¾î ÍÅâø þÕ츢Ⱦ¡ ±ýÚ ¾¢ÕõÀ¢ô À¡÷òÐ ¿¸÷óÐ ¯ð¸¡÷ó¾¡ý.
þÅÉÐ þó¾î ¦ºö¨¸Â¢ø ²§¾¡ ´Õ «Ã¢Â ¦À¡Õ¨Çî ºí§¸¾Á¡¸ô ÒâóЦ¸¡ñÎ
Åó¾Åý ¦Áöº¢Ä¢÷òÐ ¦¿ìÌÕ¸¢ ¿¢ýÈ¡ý.
" þÅý ±¾üÌò ¾ý¨É ÅóÐ ÌõÀ¢ðÎì ¦¸¡ñÎ ¿¢ü¸¢È¡ý - ¨Àò¾¢Â§Á¡ ? " ±ýÚ
¿¢¨ÉòÐ ¯ûº¢Ã¢ôÒ¼ý -
" ±ýÉ¡ö¡ þí§¸ ÅóÐ ÌõÀ¢¼§È ? þÐ §¸¡Â¢Ö þø§Ä - ºò¾¢Ãõ. ±ý¨Éî º¡Á¢Â¡÷
¸£Á¢Â¡÷Û ¦¿ÉîÍ츢ðÊ¡ ? ¿¡ý À¢î¨ºì¸¡Ãý ..." ±ýÈ¡ý ¾¢ñ¨½Â¢Ä¢Õó¾Åý.
" µ !.. §¸¡Â¢¦ÄýÚ ±Ð×§Á þø¨Ä.. ±øÄ¡õ ºò¾¢Ãí¸§Ç ! º¡Á¢Â¡÷¸û ±ýÚ
¡ÕÁ¢ø¨Ä. ±øÄ¡Õõ À¢î¨ºì¸¡Ã÷¸§Ç ! " ±ýÚ «Åý ¦º¡ýɨ¾ ¯À§¾º ¦Á¡Æ¢¸û
Á¡¾¢Ã¢ þÄ츽 «Äí¸¡Ãò§¾¡Î ¾¢ÕõÀò ¾¢ÕõÀî ¦º¡øÄ¢ô Ò¾¢Â Ò¾¢Â «÷ò¾í¸û
¸ñ¼¡ý ¦¾ÕÅ¢ø ¿¢ýÈÅý.
" ºÃ¢ ºÃ¢ ! þÅý ºÃ¢Â¡É ¨Àò¾¢Âõ¾¡ý " ±ýÚ ¿¢¨ÉòÐì ¦¸¡ñ¼¡ý
¾¢ñ¨½Â¢Ä¢Õó¾Åý.
¦¾ÕÅ¢ø ¿¢ýÈÅý þÅÉ¢¼õ Å¢ñ½ôÀ¢òÐì ¦¸¡û¸¢È ÀùÂòмý ’ ÍÅ¡Á¢ ’
±ýȨÆò¾¡ý.
þÅÛìÌî º¢Ã¢ôÒò ¾¡í¸Å¢ø¨Ä. Åó¾ º¢Ã¢ôÀ¢ø ¦ÀÕõ À̾¢¨Â «¼ì¸¢ì ¦¸¡ñÎ
ÒýÓÚÅø ¸¡ðÊÉ¡ý.
" ±ý¨Éò ¾í¸Ù¨¼Â º¢.ÂÉ¡¸ ²üÚì ¦¸¡ûÇ §ÅñÎõ; ¾í¸ÙìÌô À½¢Å¢¨¼
ÒâÂ×õ, ¾¡í¸û «¨Æò¾ ÌÃÖìÌ µÊ ÅÃ×õ ±ÉìÌ «Û츢ø¢ì¸ §ÅñÎõ. "
¾¢ñ¨½Â¢Ä¢Õó¾ÅÛìÌ ´ýÚõ ÒâÂÅ¢ø¨Ä. " ºÃ¢, þô§À¡ ±ÉìÌ ´Õ Ë Å¡í¸¢Â¡óÐ
ÌÎ " ±ýÈ¡ý.
«ó¾ì ¸ð¼¨Ç¢ø «Åý ¾ý¨Éî º£¼É¡¸ ²üÚì ¦¸¡ñÎÅ¢ð¼¡ý ±ýÚ ÒâóÐ
¦¸¡ñ¼ Á¸¢úԼý þÎôÒò ÐñÊÄ¢Õó¾ º¢øÄ¨Ã¨Â «Å¢úòÐì ¦¸¡ñÎ µÊÉ¡ý
Åó¾Åý. «Åý ¨¸Â¢Ä¢Õó¾ ¸¡¨ºô À¡÷¨Å¡ø «Çó¾ ’ ÌÕ ’, µÎ¸¢ýÈ «Å¨Éì
¨¸¾ðÊì ÜôÀ¢ðÎ " «ôÀʧ À£ÊÔõ Å¡í¸¢Â¡ " ±ýÚ ÌÃø ¦¸¡Îò¾¡ý.
«Åý Ë츨¼ìÌî ¦ºýÚ À¡÷¨ÅìÌ Á¨Èó¾Ðõ þÅý ÅóÐ º£¼É¡¸ Å¡öò¾
«¾¢÷.¼ò¨¾ ±ñ½¢ô ¦ÀÕíÌÃÄ¢ø º¢Ã¢ò¾¡ý ÌÕ. " ºÃ¢Â¡É ÀÂø ¸¢¨¼ò¾¢Õ츢ȡý.
þÅý ÁÂì¸õ ¦¾Ç¢Â¡¾ÀÊ À¡÷òÐì¸Ïõ. ¾¢ñ¦½¦Â Å¢ðÎ ±Èí¸¡Áø ¦º¡¸Á¡
þí§¸§Â þÕì¸Ä¡õ. À¢î¨ºìÌ þÉ¢§Á ¿¡õÀ «¨Ä §Å½¡õ. «¾¡ý º¢.Âý
þÕ측§É... ¦¸¡ñ¼¡ýÉ¡ ¦¸¡ñÎÅáý. ÓÊﺡ ºõÀ¡Ã¢îÍì ÌÎôÀ¡ý...
þøÄ¡ðÊ À¢î¨º ±ÎòÐì¸¢Û Åáý.. ±ýÉ¡ «¾¢÷.¼õ ÅóÐ ¿ÁìÌ «ÊÕìÌ..."
±ýÚ Á¸¢úó¾¢Õó¾¡ý ÌÕ.
ºüÚ §¿Ãò¾¢ø º£¼ý ËÔõ À£ÊÔõ Å¡í¸¢ ÅóÐ ¿¢§Å¾Éõ Á¡¾¢Ã¢ þÃñÎ ¨¸¸Ç¢Öõ ²ó¾¢ì
¦¸¡ñÎ ÌÕÅ¢ý ±¾¢§Ã ¿¢ýÈ¡ý.
ÌÕ «Å¨Éô À¡÷òÐ ¦À¡ö¡¸î º¢Ã¢ò¾¡ý. «Åý ¨¸Â¢Ä¢Õó¾ ˨ÂÔõ À£Ê¨ÂÔõ
¾ÉìÌî ¦º¡ó¾Á¡É ´ýÚ - þ¾¨É ¡º¢ì¸ò §¾¨Å¢ø¨Ä - ±ýÈ ¯Ã¢¨Á
¯½÷§Â¡Î Ó¾ý Өȡöô À¡÷ò¾¡ý. «¾¨É Å¡í¸¢ì ¦¸¡ûž¢ø «Åý «ÅºÃõ
¸¡ð¼¡Áø þÕó¾¡ý. ¾¡ý º£¼¨É ²Á¡üÚž¡¸ ±ñ½¢ì¦¸¡ñÎ º¡Á÷ò¾¢ÂÁ¡¸ ¿¼óÐ
¦¸¡ûžü¸¡¸ «Åý À£Ê¨¸Â¡¸î ¦º¡ýÉ¡ý:
" ±ý¨É ¿£ ¸ñÎÀ¢ÊîÍð§¼. ¿£ ¯ñ¨ÁÂ¡É º¢.Âý¾¡ý. ±ý¨É ¿£ þýÉ¢ìÌò¾¡ý
¸ñÎÀ¢Ê. ¬É¡ø, ¿¡ý ¯ý¨É ¦Ã¡õÀ ¿¡Ç¡ô À¡÷òÐ츢§É þÕ째ý. ¿¡ý
¯ý¨Éì ¦¸¡ïºõ §¸ûÅ¢í¸ûÇ¡õ §¸ô§Àý. «Ð즸øÄ¡õ ¿£ À¾¢ø ¦º¡øÄÏõ. «Ð
째¡ºÃõ ±ÉìÌ ´ñÏõ ¦¾Ã¢Â¡ÐýÛ ¿¢¨ÉîÍ측§¾. ±ÉìÌ ±øÄ¡õ ¦¾Ã¢Ôõ !
¦¾Ã¢ïº¡Öõ º¢Ä¦¾øÄ¡õ §¸ðÎò¾¡ý ¦¾Ã¢ïÍì¸Ïõ. "
þó¾ Å¡÷ò¨¾¸¨Çì §¸ðÎ þÃñÎ ¨¸Â¢Öõ ˨ÂÔõ À£Ê¨ÂÔõ ²ó¾¢ þÕó¾ º£¼ý
«Å¨Éì ¸ÃíÜôÀ¢ Å½í¸ ÓÊ¡Áø À¡÷¨Å¡Öõ Ó¸À¡Åò¾¡Öõ ¾ý À½¢¨Åì
¸¡ðÊÉ¡ý.
" ¿£ Â¡Õ ? ±ó¾ °Õ ? §ÀÕ ±ýÉ? ¿£ ±í§¸ Åó§¾? ¿¡ý¾¡ý ÌÕýÛ ¯ÉìÌ ±ôÀÊ
¦¾Ã¢ïºÐ ? ... Ë ¬È¢ô §À¡îº¢ø§Ä ? ÌÎ " ±ýÚ Ë¨Â Å¡í¸¢ì ÌÊòÐì ¦¸¡ñ§¼
º£¼ý ¦º¡ø¸¢È À¾¢¨Ä ¦Áò¾ÉÁ¡¸ò ¾¨Ä¨Â ¬ðÊÂÅ¡§È §¸ð¼¡ý.
" ÌÕ§Å... ¿¡ý ´Õ «É¡¨¾. «§¾¡ þÕ츢ȧ¾ ÓÕ¸ý §¸¡Â¢ø, «í§¸ ´Õ Á¼ôÀûÇ¢
þÕìÌÐ. «í§¸ ¾ñ½¢ ±¨ÈîÍì ¦¸¡ñÎ Å÷È §Å¨Ä. Á¼ôÀûǢ¢§Ä þÕ츢È
³Â¢Õ ãÏ §Å¨ÇÔõ º¡ôÀ¡Î §À¡ðÎî ¦ºÄ×ìÌ ¿¡Ä½¡ ¾¢Éõ ÌÎ츢ȡÕ. ±ÉìÌ
Å¡ú쨸 ¦ÅÚòÐô §À¡îÍ. þó¾ Å¡ú쨸ìÌ «÷ò¾Á¢ø§ÄýÛ ¦¾Ã¢ïÍõ ¯¼õ¨Àî
ÍÁóи¢ðÎò ¾¢Ã¢ÂÈ Í¨Á¨Âò ¾¡í¸ ÓʧÄ.. ÐýÀòÐ즸øÄ¡õ ÀüÚ ¾¡ý
¸¡Ã½õÛ ±øÄ¡Õõ ¦º¡øÈ¡í¸. ±ÉìÌ ´Õ Å¢¾ô ÀüÚõ þø§Ä... ¬É¡Öõ ¿¡ý
ÐýÀôÀ¼§Èý... ±ýÉ ÅÆ¢Â¢§Ä Á£ðº¢ýÛ ±ÉìÌò ¦¾Ã¢Â§Ä... §¿òÐ ±ý ¸ÉÅ¢§Ä
¿£í¸ À¢ÃºýÉÁ¡¸¢, ’ þó¾î ºò¾¢Ãó¾¡ý ÌÕÀ£¼õ, «í§¸ Å¡ ’ ýÛ ±ÉìÌì ¸ð¼¨Ç
þðËí¸ ÌÕ§Å ! ¿£í¸ þ¦¾øÄ¡õ §¸ð¸¢È¾É¡§Ä ¦º¡ø§Èý. ¾¡í¸û «È¢Â¡¾¾¡ ?
Å¢ÊÂü¸¡¨Ä¢§ÄÕóÐ ºó¿¢¾¡Éò¾¢§Ä ¸¡òÐ츢ðÊÕó§¾ý. ±ý À¡ì¸¢Âõ ¾í¸û
¸¼¡ðºõ ¸¢ðÊÂÐ.... "
" õ...õ... " ±ýÚ Á£¨º¨Â ¦¿ÕÊ즸¡ñ§¼ «Åý ÜÚŨ¾ì §¸ð¼ ÌÕ, ¸¡Ä¢Â¡É
¾õǨà «ÅÉ¢¼õ ¿£ðÊÉ¡ý.
º£¼ý Ë츨¼Â¢ø ¸¡Ä¢ò ¾õǨÃì ¦¸¡Îì¸ô §À¡É¡ý. ¸¼×û þó¾ô À嬀 ¿ýÈ¡¸î
§º¡¾¢ì¸¢È¡÷ ±ýÚ ¿¢¨ÉòÐ «ÅÛ측¸ «Û¾¡ÀôÀðÎî º¢Ã¢ò¾¡ý ÌÕ. " õ.. «¾É¡ø
¿Á즸ýÉ ? ¿ÁìÌ ´Õ º¢.Âý ¸¢¨¼ò¾¢Õ츢ȡý " ±ýÚ ¾¢Õô¾¢ôÀðÎì ¦¸¡ñ¼¡ý.
º£¼ý Åó¾À¢ÈÌ «Åý ¦À¨Ãì §¸ð¼¡ý ÌÕ. «Åý À¾¢ø ¦º¡øÅ¾üÌû ¾ÉìÌò
¦¾Ã¢ó¾ ÀÄ ¦ÀÂ÷¸¨Çì ¸üÀ¨É ¦ºö¾ ÌÕ ¾¢Ë¦ÃÉî º¢Ã¢ò¾¡ý. þÅý ÜÚÓý
þÅÉÐ ¦À¨Ãò¾¡ý ¦º¡øÄ ÓÊ󾡸 þó¾ ¿¡¼¸ò¾¢ø «Ð ±ùÅÇ× «üÒ¾Á¡É
Ä£¨Ä¡¸ «¨ÁÔõ ±ýÚ ¿¢¨Éò§¾ «Åý º¢Ã¢ò¾¡ý. «ó¾î º¢Ã¢ôÀ¢É¡ø º£¼ý À¾¢ø
¦º¡øÄî ºüÚò ¾Âí¸¢ ¿¢ýÈ¡ý.
«ô§À¡Ð ÌÕ¦º¡ýÉ¡ý: " §ÀÕ ±ýÉ¡ýÛ ´Õ §¸ûÅ¢ §¸ð¼¡ - ´ù¦Å¡Õò¾Ûõ
´ù¦Å¡Õ À¾¢ø ¦º¡øÈ¡ý À¡ò¾¢Â¡ ? ´Õ §¸ûÅ¢ìÌ ±õÁ¡õ À¾¢ø ! " ±ýÚ ²§¾¡ ¾òÐÅ
Å¢º¡Ãõ ¦ºö¸¢È Á¡¾¢Ã¢ô À¢¾üȢɡý. º£¼ý «¨¾ì §¸ðÎ Á¸¡ »¡ÉÅ¡º¸õ Á¡¾¢Ã¢
Å¢Âó¾¡ý.
" ºÃ¢, ¯ý §ÀÕ ±ýÉ¡ýÛ ¿£ ¦º¡øÄ §Åñ¼¡õ. ¿¡ý ÌÕ. ¿£ º¢.Âý ... ±ÉìÌô §ÀÕ
ÌÕ; ¯ÉìÌô §ÀÕ º .Âý. ¿£¾¡ý ±ý¨É ’ ÌÕ§Å ÌÕ§Å ’ ýÛ ÜôÀ¢¼
¬ÃõÀ¢îÍð§¼.... ¿¡Ûõ ¯ý¨É ’ º¢.¡ º¢.¡ ’ ýÛ ÜôÀ¢¼§Èý... ±ýÉ¡ ? ºÃ¢¾¡É¡ ?
..." ±ýÚ §Àº¢ì¦¸¡ñ§¼ þÕó¾¡ý ÌÕ.
"±øÄ¡§Á ´Õ ¦ÀÂ÷¾¡É¡?" ±ýÚ «ó¾ô §ÀÖõ ±¨¾§Â¡ ÒâóЦ¸¡ñ¼ º£¼É¢ý
ŢƢ¸û ÀÇÀÇò¾É.
"¿¡ý ±ýÉ þôÀÊ¦ÂøÄ¡õ §À͸¢§Èý..." ±ýÚ ÌÕ ¾ý¨É§Â ±ñ½¢ò ¾¢Ë¦ÃÉ
Å¢Âó¾¡ý. þôÀʧ «Å÷¸û §Àº¢ì¦¸¡ñÊÕó¾É÷.
Áò¾¢Â¡ÉÓõ þÃ×õ «ó¾î º£¼ý Á¼ôÀûǢ¢ĢÕóÐ ¾ÉìÌì ¸¢¨¼ì¸¢È ÒÇ¢§Â¡¾¢¨Ã,
º÷츨Ãô ¦À¡í¸ø ¬¸¢ÂÅü¨Èô ÀÂÀì¾¢Ô¼Ûõ «ý§À¡Îõ ¦¸¡ñÎÅóÐ þó¾ì
ÌÕ×ìÌô À¨¼ò¾¡ý. «ùÅÇ× Õº¢Ôõ Á½Óõ ÒÉ¢¾Óõ «ýÒõ ¯ÀºÃ¨½Ôõ ¯¨¼Â
«Á¢÷¾ò¨¾ þÅý ¦.ýÁò¾¢ø Õº¢ À¡÷ò¾¾¢ø¨Ä. ¬Åø Á¢Ì¾¢Â¡ø ¾ÉÐ ¿Êô¨Àìܼ
ÁÈóÐ «Åü¨È «ûÇ¢ «ûÇ¢ þÅý ¯ñÀ¨¾ «ýÒ ¸É¢Âô À¡÷òÐì ¦¸¡ñÊÕó¾¡ý
º£¼ý.
ÌÕ×ìÌ ±¾É¡§Ä¡ ¸ñ¸û ¸Äí¸¢É. º£¼ý ¾ñ½£¨Ã ±ÎòÐì ¦¸¡Îò¾¡ý.
ÁÚ¿¡û ¸¡¨Ä «§¾ Á¡¾¢Ã¢ ¾¢ñ¨½ìÌì ¸£§Æ ÅóÐ ¸¡òÐ ¿¢ýÈ¢Õó¾¡ý º£¼ý.
«ÅÛìÌ ËÔõ À£ÊÔõ Å¡í¸¢ Åó¾¡ý. ÌըŠ«¨ÆòÐ즸¡ñÎ ¬üÈí¸¨ÃìÌô §À¡ö
«ÅÉÐ ¬¨¼¸¨Çò ШÅòÐì ¦¸¡Îò¾¡ý. «Å¨Éì ÌÇ¢ì¸ ¨ÅòÐ «¨ÆòÐ
Åó¾¡ý.
¯îº¢Â¢ø ¦Å¢ø ÅÕ¸¢È Ũà - ÌÕ×ìÌô Àº¢ ±ÎìÌõŨà - «Å÷¸û ¬üÈ¢ø ¿£ó¾¢ì
ÌÇ¢ò¾¡÷¸û.
"ÌǢ츢ÈÐ ¦º¡¸Á¡¸ò¾¡ý þÕìÌ. ¬É¡, ÌǢ ±ýÉ¡ À¢Ã§Â¡ºÉõ... ÌÇ¢ì¸
ÌÇ¢ì¸ «ÙìÌ §ºóÐ츢ðÎò¾¡§É þÕìÌ?... «Ð «ôÀÊò¾¡ý. Àº¢ìÌÐ...
¾¢í¸§È¡õ... «ôÒÈÓõ Àº¢ì¸ò¾¡§É ¦ºö¢Ð... ÌÇ¢ì¸ ÌÇ¢ì¸ «Ù측Ìõ. «ÙìÌ
¬¸ ¬¸ì ÌÇ¢ì¸Ïõ. Àº¢ì¸ô Àº¢ì¸ò ¾¢í¸Ïõ... ¾¢í¸ò ¾¢í¸ô Àº¢ìÌõ... ±ýÉ
§ÅÊ쨸!" ±ýÚ ¦º¡øÄ¢Å¢ðÎ ÌÕ º¢Ã¢ò¾¡ý. º¢Ã¢òÐì ¦¸¡ñ§¼ þÕìÌõ §À¡Ð
"±ýÉ þÐ, ¿¡ý þôÀÊ¦ÂøÄ¡õ §À͸§Èý" ±ýÚ ±ñ½¢ô ÀÂóЧÀ¡öî ºð¦¼É
¿¢Úò¾¢ì ¦¸¡ñ¼¡ý.
º£¼ý ¨¸ ¸ðÊ즸¡ñÎ þÅý ¦º¡øÅ¨¾ì §¸ð¼¡ý.
··· ··· ··· ···
«ýÚõ «¾üÌ ÁÚ¾¢ÉÓõ «¾ý À¢ÈÌ ´ù¦Å¡Õ ¿¡Ùõ þ§¾ Á¡¾¢Ã¢ ¸¡¨Ä¢ø ËÔõ
À£ÊÔõ Å¡í¸¢ò ¾óÐ, ÌÇ¢ôÀ¡ðÊ, Áò¾¢Â¡Éõ ¯½× À¨¼òÐ, «Å¨Éò ¾É¢¨Á¢ø
Å¢¼¡ÁÖõ, «Åý ¦¾ÕÅ¢ø «¨Ä¡ÁÖõ þó¾î º£¼ý ±ô§À¡Ðõ «Åý ܼ§Å
þÕó¾¡ý.
«Åý §À͸¢È ±øÄ¡ Å¡÷ò¨¾¸Ç¢Öõ «Å§É Ò¾¢¾¡¸ô ÒâóÐ ¦¸¡ûÙ¸¢È Á¡¾¢Ã¢
ÀÄÅ¢¾Á¡É «÷ò¾í¸û ¸ñÎ þó¾î º£¼ý ÒǸ¡í¸¢¾õ «¨¼Å¨¾î ºó¨¾ìÌ ÅÕ¸¢È
º¢Ä÷ ºò¾¢ÃòÐò ¾¢ñ¨½Â¢ø µö×측¸ò ¾í¸¢ þ¨ÇôÀ¡Úõ§À¡Ð §ÅÊ쨸
À¡÷ò¾¡÷¸û.
º¢Ä÷ ÌըŠ«¨¼Â¡Çõ ¸ñÎ ¦¸¡ñÎ þÅý ¡§Ã¡ ´Õ º¢ò¾ý ±ýÚ «ô§À¡§¾
¿¢¨Éò¾¾¡¸×õ, «ôÀÊôÀð¼Å÷¸û þôÀÊ¦ÂøÄ¡õ ¸ó¾ÖÎò¾¢, «ØìÌ ÍÁóÐ, ±îº¢ø
¦À¡Ú츢ò ¾¢Ã¢Å¡÷¸û ±ýÚõ ¾ý¨Éô ÀüÈ¢ þÅÛìÌò ¦¾Ã¢Â¡¾ ´ý¨Èò
¦¾Ã¢Å¢ò¾¡÷¸û. «¨¾ò ¦¾Ã¢óÐ ¦¸¡ûžü§¸ ´ÕÅÕìÌô ÀìÌÅõ §ÅñΦÁýÚõ,
«ó¾ô ÀìÌÅõ þó¾î º£¼ÛìÌ þÕôÀ¾¡¸×õ ÜÈ¢î º£¼¨Éô Ò¸úó¾¡÷¸û.
«¾¢ø º¢Ä÷, þôÀÊ¦ÂøÄ¡õ ¦¾Ã¢Â¡Áø þó¾î º¢ò¾ ÒÕ.¨É ²º¢ Å¢ÃðÊÂÊò¾¾ü¸¡¸
þô§À¡Ð ÀÂÁ¨¼óÐ þÅÉ¢¼õ Á¡Éº£¸Á¡×õ, ¸£§Æ Å¢ØóÐ À½¢óÐõ ÁýÉ¢ôÒ
§ÅñÊÉ¡÷¸û.
þó¾ ´Õ º£¼¨Éò ¾Å¢Ã ÌÕ×ìÌô Àì¾÷¸û ¿¡û§¾¡Úõ ¦ÀÕ¸ ¬ÃõÀ¢ò¾¡÷¸û.
ºó¨¾ìÌ ÅÕ¸¢È Ţ¡À¡Ã¢¸Ùõ ÁüÈÅ÷¸Ùõ þÅ¨É §ÅÊ쨸 À¡÷òÐ ¿¢ýÚÅ¢ðÎ
þÅÛìÌ ËÔõ, À£ÊÔõ, ÀÆí¸Ùõ Å¡í¸¢ò ¾ó¾¡÷¸û.
þÅý «Åü¨Èî º¡ôÀ¢Î¸¢È «Æ¨¸Ôõ, §¾¡¨Ä Å£º¢ ±È¢¸¢È ġŸò¨¾Ôõ, À£Ê ÌÊ츢È
´ö¡Ãò¨¾Ôõ, ŢƢ ¾¢ÈóÐ À¡÷ì¸¢È ¦¸¡Äò¨¾Ôõ, ŢƢ ãÊô À¡Ã¡ÁÄ¢Õ츢È
À¡Åò¨¾Ôõ, «Å÷¸û Ò¸úóÐõ Å¢ÂóÐõ §Àº¢É¡÷¸û.
ÌÕ×ìÌ Ó¾Ä¢ø þРź¾¢Â¡¸×õ, ºó§¾¡.Á¡¸×õ, À¢ýÉ÷ ´ýÚõ Òâ¡ÁÖõ
Ò¾¢Ã¡¸×õ þÕóÐ, ¦¸¡ïº ¿¡ð¸Ç¢ø ±øÄ¡õ ÒâÂ×õ Ò¾¢÷¸û Å¢ÎÀ¼×õ ¦¾¡¼í¸¢É.
´Õ ¿¡û þÃ× ÌÕ×ìÌò àì¸õ ÅÃÅ¢ø¨Ä. «Åý ±Ð ±Ð ÀüÈ¢§Â¡ §Â¡º¢òÐì
¦¸¡ñÊÕó¾¡ý. «¾¡ÅÐ, «ó¾î º¢.§ɡΠ§À͸¢È Á¡¾¢Ã¢ò ¾ÉìÌû§Ç
§Àº¢ì¦¸¡ñÊÕó¾¡ý.
«Åý ¿ðºò¾¢Ãí¸¨Çô ÀüÈ¢Ôõ, ¾¡ý þó¾ ¯Ä¸ò¾¢ø ÅÕžüÌ ÓýÉ¡ø þÕó¾
¸¡Äò¨¾ô ÀüÈ¢Ôõ, Áýò¨¾ô ÀüÈ¢Ôõ, ¾ÉìÌô À¢ýÉ¡ø ¯ûÇ ¸¡Äí¸¨Çô ÀüÈ¢Ôõ
±ó¾ ÓÊÅ¢Öõ ÁÉõ ¿¢ü¸ ÓÊ¡¾ Å¢.Âí¸¨Çô ÀüÈ¢¦ÂøÄ¡õ §Â¡º¢ò¾¡ý.
«Åý àí¸¡Á§Ä ¸É× Á¡¾¢Ã¢ ²§¾¡ ´ýÚ ¸ñ¼¡ý. «¾¢ø ¾ý Ìçġ, º£¼É¢ý Ìçġ
«øÄÐ ºó¨¾Â¢ø ¾¢Ã¢¸¢È þÅ¨É Å½í¸¢î ¦ºø¸¢È ¡ը¼Â Ìçġ Á¢¸×õ
¦¾Ç¢Å¡¸ô §Àº¢Â¨¾ì §¸ð¼¡ý.
"¯ÉìÌ º¢.ÂÉ¡¸ Åó¾¢Õ츢ȡ§É, «Åý¾¡ý ¯ñ¨Á¢§Ä ÌÕ... º¢.ÂÉ¡¸ ÅóÐ
¯ÉìÌì ¸üÚò ¾ó¾¢Õ츢ȡý... «ô§À¡Ð¾¡ý ¿£ źôÀÎÅ¡ö ±ýÚ ¦¾Ã¢óÐ º¢.ÂÉ¡ö
Åó¾¢Õ츢ȡý. ±ó¾ô À£¼ò¾¢§Ä þÕ󾡸 ±ýÉ? ±Åý ¸üÚò ¾Õ¸¢È¡§É¡ «Åý ÌÕ.
¸üÚì ¦¸¡û¸¢ÈÅý º£¼ý. ÀÃÁº¢ÅÉ¢ý ÁÊ Á£Ð ¯ð¸¡÷óЦ¸¡ñÎ ÓÕ¸ý «ÅÛìÌì
¸üÚò ¾ÃÅ¢ø¨Ä¡? «í§¸ º£¼É¢ý Áʧ ÌÕÀ£¼õ. «Å¨É ŽíÌ..."
ÀȨŸû À¡Êî º¢È¸ÊòÐô ÀÈóÐ ºó¨¾ò ¾¢¼Ä¢ý ÁÃî ¦ºÈ¢Å¢ø Ìà¸Ä¢ì¸¢È
¸¡¨Äô¦À¡ØÐ ÒÄ÷¸¢È §¿Ãò¾¢ø «§¾ Á¡¾¢Ã¢Â¡É Ìà¸Äòмý ¸ñ ŢƢò¦¾Øó¾
ÌÕ, º£¼¨É ŽíÌžü¸¡¸ì ¸¡ò¾¢Õó¾¡ý. Á¡Éº£¸Á¡ö Å½í¸¢É¡ý. «Åý
Åó¾×¼ý º¡.¼¡í¸Á¡ö «Åý À¡¾í¸Ç¢ø ¾¡ý Å¢Æô§À¡Å¨¾ ±ñ½¢ ¦Áöº¢Ä¢÷ò¾¡ý.
¬É¡ø, «ó¾î º¢.Âý ÅçŠþø¨Ä. þó¾ì ÌÕ «ó¾ Á¼ôÀûÇ¢ìÌ - ¾ý¨É úš¾õ
¦ºöÐ Á¡üȢŢ𼠺£¼¨Éò §¾Ê µÊÉ¡ý.
Á¼ôÀûǢ¢ø ¯ûÇÅ÷¸û þÅ¨É Å½í¸¢ ÅçÅüÚ ¯ð¸¡Ã¨ÅòÐ ¯ÀºÃ¢ò¾¡÷¸û.
ÌÕ×ìÌ «ô§À¡Ð º£¼É¢ý ¦ÀÂ÷ ¦¾Ã¢Â¡¾ ÌÆôÀò¾¡ø ±ýɦÅýÚ §¸ðÀÐ ±ýÚ
Òâ¡Áø "±ý º¢.Âý ±í§¸?" ±ýÚ Å¢º¡Ã¢ò¾¡ý.
«Å÷¸û ŢƢò¾¡÷¸û. ÌÕ «¨¼Â¡Çõ ¦º¡ýÉ¡ý. ¸¨¼º¢Â¢ø «Å÷¸û ¦Ã¡õÀ
«Äðº¢ÂÁ¡¸ "«Åý §¿ü§È ±í§¸¡ §À¡öŢ𼡧É" ±ýÈ¡÷¸û.
"«Åý¾¡ý ¿Á즸øÄ¡õ ÌÕ!" ±ýÈ¡ý ÌÕ.
"«ôÀÊ¡!" ±ýÚ «Å÷¸û ¬îºÃ¢Âõ ¦¸¡ñ¼É÷.
«ÐÀüÈ¢ «ÅÉÐ §Å¾¡ó¾Á¡É Å¢Çì¸ò¨¾, «Å÷¸û ±¾¢÷À¡÷òÐ ¿¢ýÈÉ÷. ¬É¡ø,
þÅý ´ýÚõ §ÀºÅ¢ø¨Ä. «¾ý À¢ÈÌ, ´ýÚ§Á §ÀºÅ¢ø¨Ä. ±ØóÐ ¿¼ó¾¡ý.
ºó¨¾ò ¾¢¼Ä¢Öõ °Ã¢ý ¦¾Õì¸Ç¢Öõ º£¼É¡¸¢ Åó¾ «ó¾ ÌÕ¨Åò §¾Êò ¾¢Ã¢ó¾¡ý
þÅý. º£¼¨Éì ¸¡§½¡õ. þÅý º¢Ã¢ò¾¡ý. §¾ÎŨ¾ Å¢ðΠŢð¼¡ý.
þô§À¡¦¾øÄ¡õ ºó¨¾ò ¾¢¼Ä¢ø «ØìÌõ ¸ó¨¾Ôõ ¯Îò¾¢ ´ù¦Å¡ÕÅâÖõ ±¨¾§Â¡
§¾ÎÅÐ Á¡¾¢Ã¢Â¡É Ü÷ò¾ À¡÷¨ÅÔ¼ý þÅý ¾¢Ã¢óÐ ¦¸¡ñÊÕ츢ȡý. þŨÉ
¡Õõ Å¢ÃðΞ¢ø¨Ä. ÌÆó¨¾¸û þŨÉô À¡÷òÐî º¢Ã¢òРŢ¨Ç¡θ¢ýÈÉ.
¦Àñ¸éõ ¬ñ¸Ùõ þÅ¨É Å½í¸¢ þÅÛìÌ ±¨¾Â¡ÅÐ Å¡í¸¢ò ¾óÐ «ýÒ¼ý
¯ÀºÃ¢ì¸¢È¡÷¸û.
«ó¾î º£¼É¢¼õ ±ýÉ ¸üÈ¡§É¡ «¾¨É þÅý ±øÄ¡Ã¢¼òÐõ ±øÄ¡ÅüÈ¢Öõ ¸¡ñ¸¢È
Á¡¾¢Ã¢ ¿¢¨È§Å¡Î º¢Ã¢òÐî º¢Ã¢òÐò ¾¢Ã¢óÐ ¦¸¡ñÊÕ츢ȡý.
(±Ø¾ôÀð¼ ¸¡Äõ: 1970)
¿ýÈ¢: ÌÕÀ£¼õ (º¢Ú¸¨¾ò ¦¾¡ÌôÒ), ஜெயகாந்தன் - ²Æ¡õ À¾¢ôÒ: 1995 - Á£É¡ðº¢ Òò¾¸ ¿¢¨ÄÂõ, ÁШà - 1
குருபீடம் - ஜெயகாந்தன்
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
¸¢Ã¡ÁòÐ째 «Å÷¸Ç¢ý ¦ÀÂ÷ ÁÈóÐÅ¢ð¼Ð. ¦Àâ §¸¡É¡÷ ±ýÀÐõ º¢ýÉì §¸¡É¡÷ ±ýÀЧÁ «Å÷¸Ç¢ý ¦ÀÂḢ ¿¢Ä׸¢ÈÐ.
º¢ýÉì §¸¡É¡Ã¢ý «ñ½ý ±ýÀ¾É¡ø ¦ÀâÂÅÕìÌ Á¾¢ôÒ. ¦Àâ §¸¡É¡÷ Á¾¢ô§À¡Î
Å¡úó¾¢Õó¾ ¸¡Ä¦ÁøÄ¡õ ±ô¦À¡Ø§¾¡ ÓÊóÐÅ¢ð¼Ð. «ó¾ Å¡úÅ¢ý ±ïº¢Â À̾¢¨Â
Å£ðÎìÌô À¢ýÉ¡ÖûÇ Óó¾¢Ã¢ò §¾¡ôÀ¢ý ¿Î§Å «¨Áó¾ ¾É¢ìÌʨºÂ¢ø Å¡úóÐ
¸Æ¢òРŢÎÅÐ ±ýÈ ¾£÷Á¡Éò¾¢ø ²¸¡ó¾ Å¡ºõ Ò⸢ȡ÷ ¦ÀâÂÅ÷. º¡ôÀ¡ðÎ §¿ÃòÐìÌ
ÁðÎõ, ¨¸ò¾Ê¢ý ’¼ì ¼ì’¦¸ýÈ ºô¾õ ´Ä¢ì¸, ¸ø Å£ðÊüÌû, §¾¡ð¼òÐ Å¡ºø
ÅÆ¢§Â À¢Ã§Åº¢ôÀ¡÷ ¦Àâ §¸¡É¡÷. ¾õÀ¢Â¢ý ÌÎõÀò§¾¡Î «ÅÕìÌûÇ ¯È×
«ùÅǧÅ. º¢ýÉì §¸¡É¡¨Ãô§À¡ø ¦º¡òÐì¸û ±ýÈ Å¢Äí̸§Ç¡, ¦º¡ó¾í¸Ç¢É¡ø
Å¢¨Çó¾ ÌÎõÀõ ±ýÈ Í¨Á§Â¡ þøÄ¡¾ ¦ÀâÂŨÃ, «ó¾ì ÌÎõÀ§Á «¾¢¸õ Á¾¢òÐ
Á⡨¾ ¸¡ðΞüÌì ¸¡Ã½õ, ÌÎõÀò ¾¨ÄÅáö Å¢ÇíÌõ º¢ýÉì §¸¡É¡÷ «ñ½ý
±ýÈ ¯È×측¸, «ó¾ì ÌÎõÀò¾¢ý ¾¨Ä¨Áô À¾Å¢¨Â ’¦¸ÇÃÅô À¾Å¢’ ¡öô
¦ÀâÂÅÕìÌò ¾óÐ ±øÄ¡ì ¸¡Ã¢ÂòÐìÌõ «Å÷ «í¸£¸¡Ãõ ¦ÀÈô À½¢óÐ ¿¢üÀо¡ý.
ÓôÀÐ ÅÕ.í¸ÙìÌ Óý Á¨ÉÅ¢ þÈó¾ «ý§È ¦º¡ó¾õ ±ýÈ Í¨Á ¦ÀâÂÅâý
§¾¡Ç¢Ä¢ÕóÐ þÈí¸¢ Å¢ð¼Ð. «Åû Å¢ðÎî ¦ºýÈ ³óÐ ÅÂÐî º¢ÚÅý ºÀ¡À¾¢¨Âò
¾É즸¡Õ ͨÁ ±ýÚ ¸Õ¾¡ÁÖõ ÍÁ측ÁÖõ þÕóРŢð¼¡÷ ¦ÀâÂÅ÷. «¾üÌì
¸¡Ã½õ, ¿¡§Ä¡Î ³ó¾¡¸ þÕì¸ðΧÁ ±ýÈ ¿¢¨ÉôÀ¢ø ¾ÉÐ ’Òò¾¢Ãî ͨÁ’ §Â¡Î
ºÀ¡À¾¢¨ÂÔõ º¢ýÉì §¸¡É¡÷ ²üÚì ¦¸¡ñ¼Ð¾¡ý!
¬É¡ø ºÀ¡À¾¢, ¾ý ¦À¡Úô¨Àò ¾¡ý ÍÁìÌõ ÅÂÐ ¾ÉìÌ ÅóÐŢ𼾡¸ ¿¢¨ÉòÐì
¦¸¡ñ¼ ž¢ø ¦ÀâÂÅâý ±ïº¢ ¿¢ýÈ ¦º¡òÐì¸û ±ýÈ Å¢Äí̸¨ÇÔõ «Åý ¸ÆüÈ¢
Å¢ð¼¡ý. ¡¨ÃÔõ Á¾¢Â¡¾ «Åý §À¡ìÌõ, þÃñ¼¡ÅÐ ¯Ä¸ Ôò¾¸¡Äò¾¢ø «Åý
¦ºö ÓÂýÈ Å¢Â¡À¡Ãí¸Ç¢É¡ø Å¢¨Çó¾ ¿.¼Óõ, ¨¸ ¿¢¨ÈÂô À½Á¢Õ츢ÈÐ ±ýÚ
«¸õÀ¡Åò¾¢ø ¬Ê ¬ð¼í¸Ùõ ¦ÀâÂŨÃô À¡ôÀá츢É.
À¢ÈÌ ´Õ¿¡û - ¾ÉÐ ²¸ Ò¾øÅý Àð¼¡ÇòÐìÌ µÊô§À¡É¡ý ±ýÈ ¦ºö¾¢ §¸ðÎô
¦Àâ §¸¡É¡÷ ¾ÉÐ ÌʨºÂ¢ø µ÷ þÃ× ÓØÅÐõ «ØÐ ¦¸¡ñÊÕó¾¡÷.
¾ý À¢û¨Ç¢ý ¦ºÂÄ¡Öõ, «Åý À¢Ã¢Å¡Öõ ÁÉÓ¨¼ó¾ ¦Àâ §¸¡É¡÷ Àñ¼Ã¢ÒÃõ
§À¡Ìõ §¸¡.ÊÔ¼ý §º÷óЦ¸¡ñÎ °÷ °Ã¡öò ¾¢Ã¢óР¡º¸õ ÒâóÐ, þÚ¾¢Â¢ø
¡ÕÁüÈ «É¡¨¾Â¡ö Àì¾÷¸Ç¢ý ¯È§Å¡Î À¸Å¡¨É «¨¼óРŢÎÅÐ ±ýÈ ÓʧšÎ
§¾º¡ó¾¢Ãõ ÒÈôÀðÎì ¸¢Ã¡Áò¾¢ý ±ø¨Ä¨Âì ¸¼ìÌõ§À¡Ð - Àì¸òÐ °÷ ºó¨¾ìÌô
§À¡öò ¾¢ÕõÀ¢ ÅóÐ ¦¸¡ñÊÕó¾ º¢ýÉì §¸¡É¡÷ - ¾¨Ä¢ø ¨Åò¾¢Õó¾ ¦ÀâÂ
ÀÄ¡ôÀÆò¨¾ «ôÀʧ §À¡ðÎÅ¢ðÎ, «Å¢úó¾ ÌÎÁ¢¨Âìܼ ÓÊ¡Áø µÊÅóÐ
À羺¢ì Üð¼ò¾¢ý ¿Î§Å þÕó¾ «ñ½É¢ý ¸¡ø¸Ç¢ø º¡.¼¡í¸Á¡ö Å£úóÐ
¸¾È¢É¡÷. «ÅÃÐ ¦À¡ý ¸¡ôÀ¢ð¼ ¸Ãí¸û «ñ½É¢ý ÒØ¾¢ ÀÊó¾ À¡¾í¸¨Ç ¿¸Ã
Å¢¼¡Áø þÚ¸ô ÀüÈ¢ þÕó¾É.
"«ñ§½... ¿¡ý ¯ÉìÌ ±ýÉ ¾ôÀ¢¾õ Àñ½¢§Éý? ¿¡ý ¦ºòÐô §À¡Â¢ð§¼ýÛ
¿¢¨ÉîÍðÊ¡..." ±ýÚ «ÄȢɡ÷ º¢ýÉì §¸¡É¡÷. «ó¾ì ¸¡ðº¢, ÁÉ¢¾ÛìÌ ’ÅóÐ
Å¡öò¾Ðõ’ ’Å¢üÈ¢ø À¢Èó¾Ðõ’ ÁðÎõ¾¡ý ¦º¡ó¾õ ±ýÀ¾¢ø¨Ä ±ýÚ °Ã¡Õ째
¯½÷ò¾¢ÂÐ.
"±ýɧš «Æ¢ÂÏõÛ þÕó¾ ¦º¡òÐ «Åý ãÄÁ¡ «Æ¢óÐ §À¡îÍ... «ó¾
ÅÕò¾ò¾¢§Ä «Åý §À¡Â¢ð¼¡ý... «Åý µÊð¼¡ýÛ ¯ÉìÌ ²ý ÅÕò¾õ?... ¿¡ý
¾¡§É ±ý ÁÅÉ¡ ÅÇ÷ò§¾ý, «Å¨É!... ÅÇ÷ò¾Å§É «ó¿¢ÂÁ¡öô §À¡Â¢ð¼¡ý,
«ÅÛìÌ... ¿¡ý ¾¡§É ¯ý À¢û¨Ç... ¿£Ôõ «ñ½¢ÔÁ¡ò¾¡§É «ôÀÛõ ¬ò¾¡ÙÁ¡
þÕóÐ ±ý¨É ÅÇò¾£í¸?... ±ý¨É ÅÇò¾ÅÛÁ¡ ±ÉìÌ «ó¿¢ÂÁ¡¸Ïõ? ±ý ¦º¡òÐ
¯ý ¦º¡òÐ þøÄ¢Â¡?... ±ý ¦º¡ó¾õ ¯ý ¦º¡ó¾õ þøÄ¢Â¡?..." ±ý¦ÈøÄ¡õ °¨Ãì
ÜðÊ ¿¢Â¡Âõ §¸ð¼¡÷ º¢ýÉì §¸¡É¡÷.
«ýÚ §ÅÚ ÅÆ¢Â¢ýÈ¢ Å¢Ãì¾¢Ô¼ý ’ÁÉÍ ÁÃòÐô §À¡ÉôÒÈõ ±í§¸ þÕ󾡸 ±ýÉ’
±ýÚ ¾¢ÕõÀ¢ ÅóРţðÎìÌô À¢ýÉ¡ø Óó¾¢Ã¢ò §¾¡ð¼ò¾¢ý ¿Î§ÅÔûÇ ÌʨºìÌ
.¡¨¸ Á¡üȢ즸¡ñÎ, ’¸¢Õ.½¡ §¸¡Å¢ó¾¡’ ±ýÚ þÕÀÐ ÅÕ.Á¡ö Å¡úóÐ ÅÕõ
¦Àâ §¸¡É¡ÕìÌ, À¾¢¨ÉóÐ ÅÕ.í¸ÙìÌ ÓýÀ¡¸§Å Å¡ú쨸¢ý Á£Ð ÀüÚõ
À¡ºÓõ ²¸Á¡ö Á¢ÌóÐ Åà ¬ÃõÀ¢òРŢð¼Ð.
¬Á¡õ; ºÀ¡À¾¢ ÁÉõ Á¡È¢ «ôÀ¨Éô À¡÷ì¸ Àð¼¡Çò¾¢Ä¢ÕóÐ ´ÕÓ¨È ¾¢ÕõÀ¢
Åó¾¢Õó¾¡ý... À¢ÈÌ «Êì¸Ê ÅóÐ À¡÷òÐì ¦¸¡ñÊÕó¾¡ý. ¸ñ À¡÷¨Å Áí¸¢ô §À¡É
¦Àâ §¸¡É¡÷ Á¸¨Éò ¾¼Å¢ô À¡÷òÐ ¯îº¢ §Á¡óÐ ¸ñ½£÷ ¯Ìò¾¡÷. «ô§À¡Ð
¾¸ôÀÉ¢ý ¨¸¨Â «ýÒ¼ý ÀüÈ¢ì ¦¸¡ñÎ ¬¾ÃÅ¡É ÌÃÄ¢ø ¦º¡ýÉ¡ý ºÀ¡À¾¢: "¿£
´ñÏõ ÀÂôÀ¼¡§¾ ¨¿É¡... þôÀò¾¡ý ºñ¨¼¦ÂøÄ¡õ ¾£óÐ §À¡Â¢ð¼§¾... ±ÉìÌ
¯º¢ÕìÌ ´ñÏõ ¬ÀòÐ ÅáÐ."
"«Ð ºÃ¢¾¡ý¼¡ ¾õÀ¢... ´ÉìÌì ¸ñ½¡Äõ ¸ðÊ ¨ÅîÍô À¡÷ì¸ÏõÛ þÕó§¾ý..."
±ýÚ ¾ý ¬¨º¨Âò ¾Âí¸¢ò ¾Âí¸¢ì ÜȢɡ÷ ¸¢ÆÅ÷. «¾üÌî ºÀ¡À¾¢ º¢Ã¢ò¾Å¡Ú
À¾¢ÄÇ¢ò¾¡ý. "«Ð즸ýÉ¡, ¸ðÊ츢ð¼¡ô §À¡îÍ... «í§¸§Â ’§¸¡ð¼÷.’ ¾Ã¡í¸...
ÌÎõÀò§¾¡¼ §À¡Â¢Õì¸Ä¡õ... ¦À¡ñÏ À¡÷òÐ ¦ÅÕ츢¡?"
"«¼ §À¡¼¡... ¦À¡ñÏìÌò ¾¡É¡ Àïºõ Åó¾¢Î? ¯ý º¢ýÉ ¨¿É¡¸¢ð§¼
¦º¡ýÉ¡ ±ò¾¢É¢ ¦À¡ñÏ §ÅÏõÛ §¸ðÀ¡§É!..." ±ýÚ ¦ÀâÂÅ÷ ¦À¡ì¨¸ Å¡öî
º¢Ã¢ôÒ¼ý ´Õ Ì.¢Â¢ø §Àº¢É¡÷.
"þùÅÇ× ¬¨º¨Â ¨ÅòÐì ¦¸¡ñÎ Àñ¼Ã¢ÒÃõ §À¡Ìõ À羺¢ì Üð¼ò§¾¡Î
§À¡¸ì ¸¢ÇõÀ¢É¡§Ã ÁÛ.ý!" ±ýÚ ¿¢¨Éò¾ º¢ýÉì §¸¡É¡÷ Åó¾ º¢Ã¢ô¨À «¼ì¸¢ì
¦¸¡ñ¼¡÷.
«ó¾ ÅÕ.§Á ¾ïº¡çâø ¦Àñ À¡÷òÐ, ºÀ¡À¾¢ìÌì ¸øÂ¡½õ ¿¼ó¾Ð. «¾ý À¢ÈÌ
ºÀ¡À¾¢ ÅÕ.ò¾¢üÌ ´ÕÓ¨È ¾ý Á¨ÉÅ¢Ô¼ý ÅóÐ ¸¢ÆÅ¨Ãì ¸ñÎ ¦ºøÅÐ
ÅÆì¸Á¡¸¢ Å¢ð¼Ð.
þó¾ô ÀòÐ ÅÕ.Á¡öì ¦¸¡ïºõ ¦¸¡ïºÁ¡ö Áí¸ ¬ÃõÀ¢ò¾ ¸ñ À¡÷¨Å ÓüÈ¢Öõ
þÕñÎŢ𼠧À¡¾¢Öõ ¸¢ÆÅâý Áɺ¢ø ¬¨ºÔõ À¡ºÓõ ÁðÎõ ¦ÀÕ¸¢ì ¦¸¡ñξ¡ý
þÕó¾É; þô§À¡Ð «Å÷ ¾ý ¯¼Ä¢ø ¯Â¢¨Ãî º¢¨È ¨ÅòÐ Å¡úÅÐ Á¸Û측¸ì ܼ
«øÄ; ¿¡ýÌ ÅÕ.í¸Ç¡ö ¬ñÊü¦¸¡Õ Ó¨È ÅóÐ «ÅÕ¼ý ´Õ Á¡¾õ ÓØì¸×õ
¾í¸¢, À¡÷¨Å¢Æó¾ «Å§Ã¡Î ¸ñ¨½ì ¸ðÊ Å¢¨Ç¡Êî ¦ºøÅЧÀ¡ø ¦¸¡ïº¢ô
ÒâÔõ, Ó¸õ ¦¾Ã¢Â¡¾ «Å÷ §ÀÃý... «ó¾ô ÀÂø À¡Ò×측¸ò¾¡ý. «Å§É¡Î ¸Æ¢ì¸ô
§À¡Ìõ «ó¾ ÓôÀÐ ¿¡ð¸Ù측¸ò¾¡ý ÅÕ.õ ÓØ¨ÁìÌõ Å¡ú¸¢È¡÷ ¸¢ÆÅ÷.
’À¡Ò’... ±ýÚ ¿¢¨Éò¾ Á¡ò¾¢Ãò¾¢ø «ÅÃÐ ÌÕðÎì ¸ñ¸û þÎí¸¢ ¸ýÉ ãÄí¸Ç¢ø
Åâ Åâ¡öî ÍÕì¸í¸û Ţâ ¦À¡ì¨¸ Å¡öô Òýɨ¸Ô¼ý ¿£ñ¼ §Á¡Å¡ö ºü§È
Å¡¨É §¿¡ì¸¢ Å¡¸¡¸¢ ¿¢Á¢Õõ; þÕÇÊò¾ À¡÷¨Å¢ø ´Ç¢ Å£Íõ Ò¨¸Áñ¼Ä¦Á¡ýÚ
¯ÕÅ¡¸¢ «¾¢ø À¡ÒÅ¢ý §¾¡üÈõ... ¦¸¡ïÍõ ÁƨÄÔ¼ý, ÌÖíÌõ º¢Ã¢ôÒ¼ý, ÌÇ¢÷ó¾
.Àâºòмý ¦¾Ã¢Ôõ... «ó¾ ¯ÕÅõ ¸ÉÅ¢ø ÅÕÅЧÀ¡ø «Åâ¼õ ¾¡Å¢ÅÕõ...
±ò¾¨É§Â¡ Ó¨È ¾ý¨É ÁÈó¾ ÄÂò¾¢ø ¸¢ÆÅ÷ ¨¸¸¨Ç ¿£ðÊ즸¡ñÎ "À¡â..." ±ýÚ
ÐûÇ¢ ¿¢Á¢÷óРŢÎÅ¡÷... À¢ÈÌ «Ð ¯ñ¨ÁÂøÄ; ¸ñ½¢ø ¦¾Ã¢Ôõ Á¡Âò§¾¡üÈõ ±ýÚ
¯½÷¨¸Â¢ø þ¨Á ŢǢõÀ¢ø ÀÉ¢ò¾ ¿£Õõ, þ¾ú¸Ç¢ø ŨÇóÐ ÐÊìÌõ
ÒýÓÚÅÖÁ¡öò ¾¨Ä ÌÉ¢óРŢÎÅ¡÷. ¾É¢¨Á¢ø ÌʨºÂ¢ø ¾¡÷ò¾ ¯ñ¨Á¡ö
À¡Ò§Å¡Î ¸Æ¢ìÌõ ´Õ Á¡¾õ ¾Å¢Ã... «¾üÌ ÓýÛõ À¢ýÛÁ¡É Á¡¾í¸û «ÅÕìÌ
þôÀÊò¾¡ý... þó¾ ÄÂò¾¢ø¾¡ý ¸Æ¢¸¢ýÈÉ.
«Ð ºÃ¢, «Å÷¾¡ý À¡Ò¨Åô À¡÷ò¾§¾ þø¨Ä§Â? «Å÷ ¸ñ¸Ç¢ø «Åý ¯ÕÅõ
¦¾Ã¢Å¦¾ôÀÊ?
¾ý ÌÆó¨¾ ±ýÚ Àó¾õ À¢Èì¸×õ, ¦º¡ó¾õ ¦¸¡ñ¼¡¼×õ¾¡ý ¾ý ÌÆó¨¾Â¢ý Ó¸õ
¦¾Ã¢Â §ÅñÎõ. ÌÆó¨¾ Á£Ð ¦¸¡ñ¼ À¡ºò¨¾ì ¦¸¡ñ¼¡¼, «ó¾ Àì¾¢¨Â ÅÆ¢À¼ ´Õ
Ó¸õ¾¡ý §ÅñÎÁ¡, ±ýÉ?...
Å¡Éò¾¢ø ¾¢Ã¢óÐ ¦¸¡ñÊÕó¾ ¸¼×¨Ç ÁñÏ츢È츢 ÁÆ¨Ä º¢óÐõ ÌÆó¨¾Â¡ì¸¢
µ¼ Å¢ðÎ, µÊòÐÃò¾¢ì ¨¸¨Âô À¢Êò¾¢ØòÐ, ¨¿Âô Ò¨¼ò¦¾ÎòÐ, ÁÊ¢ø ¸¢¼ò¾¢,
Á¡÷À¢ø «¨½òÐ, Óò¾õ ¦¸¡ÎòÐ, Ó¨ÄôÀ¡ø «Ç¢òÐ... ¬õ, ¸¼×¨Çì
ÌÆó¨¾Â¡¸×õ, ÌÆó¨¾¨Âì ¸¼×Ç¡¸×õ ¦¸¡ñ¼¡Îõ ¸¨Ä¨Â§Â À쾢¡¸ì
¦¸¡ñ¼ ¨Å.½Å ÌÄò¾¢ø À¢Èó¾Åá¢ü§È ¦Àâ §¸¡É¡÷!... «Å÷ ¸ñ¸Ç¢§Ä
¦¾Ã¢Ôõ §¾¡üÈõ ¸ñ½ý §¾¡üȧÁ... ±É¢Ûõ «Å÷ ÅÆ¢ÀÎÅÐ À¡ÒÅ¢ý ¿¢¨É¨Åò¾¡ý!
§À¡É ÅÕ.õ À¡Ò Åó¾¢Õó¾§À¡Ð ¿ýÈ¡¸ ÅÇ÷ó¾¢Õó¾¡ý. ’±ýÉô §ÀîÍô
§À͸¢È¡ý?’... ¬É¡ø ´Õ Å¡÷ò¨¾Â¡ÅÐ ¸¢ÆÅÕìÌô Òâ§ÅñΧÁ! «Åý
.¢ó¾¢Â¢ÄøÄÅ¡ §À͸¢È¡ý. ’´Õ Å¡÷ò¨¾ ܼò ¾Á¢ú ¦¾Ã¢Â¡Áø ±ýÉ À¢û¨Ç ÅÇ÷ôÒ’
±ýÚ ¸¢ÆÅ÷ º¢Ä ºÁÂõ ÁÉõ ºÄ¢ôÀ¡÷. þÕó¾¡Öõ ¾ý §ÀÃý §À͸¢È¡ý ±ýÀÐ
Ó츢§Á ¾Å¢Ã, ±ýÉ À¡¨.¡¸ þÕ󾡸 ±ýÉ? -±ýÈ Ìà¸Äòмý «Å¨Éô §Àº
¨ÅòРú¢òÐì ¦¸¡ñÊÕôÀ¡÷.
À¡Ò¨Åô §À¡ø Íò¾Á¡ö ¯¨¼ ¯Îò¾¢, ¸¡Ä¢ø §.¡Î «½¢óÐ, ´Õ Àì¸õ «¨Á¾¢Â¡ö
¯ð¸¡÷ó¾¢Õì¸ þí§¸ þÕìÌõ þó¾ô À¢û¨Ç¸ÙìÌò ¦¾Ã¢ÔÁ¡? °.£õ, ¦¾Ã¢Â§Å
¦¾Ã¢Â¡¾¡õ. ¸¢ÆÅ÷ «ôÀÊò¾¡ý ¦º¡øÖÅ¡÷. ¾ý ÌʨºìÌ ÁðÎõ «Å¨Éò ¾É¢§Â
«¨ÆòÐ ÅÕÅ¡÷. À¢ýÉ¡ø ÅÕõ ÁüÈ ÌÆó¨¾¸¨Çô ’§À¡ §À¡’ ±ýÚ Å¢ÃðÊÅ¢ðÎ,
À¡Ò¨Å ¿¡ü¸¡Ä¢Â¢ø ¯ð¸¡Ã¨ÅòÐ, «Åý ¸¡ÄÊ¢ø «Á÷óÐ, šШÁ, ¸ø¸ñÎ,
Óó¾¢Ã¢ô ÀÕôÒ §À¡ýÈÅü¨È- ´Õ ¼ôÀ¢Â¢ø «ÅÛ측¸î §º÷òÐ ¨Åò¾¢ÕìÌõ
¾¢ýÀñ¼í¸¨Çò ¾óÐ, À¡¨. ¦¾Ã¢Â¡¾ «ÅÉ¢¼õ §Àº¢, «Åý §ÀÍŨ¾Ôõ ú¢ôÀ¡÷
¸¢ÆÅ÷.
«Åý «Å¨Ãò ’¾¡¾¡’ ±ýÚ¾¡ý «¨ÆôÀ¡ý. «ÅÕõ «ÅÛìÌò ’¾¡ò¾ö¡’ ±ýÚ
«Å÷¸û ÅÆì¸ôÀÊ ¯îºÃ¢ì¸ô ÀÄÓ¨È ¦º¡øÄ¢ò¾ó¾¡÷. «Åý «¨¾ ÁÚòÐ "¨¿...
¨¿... ¾¡¾¡" ±ýÚ «ÅÕìÌì ¸üÚò ¾ó¾¡ý. «ô§À¡Ð «í§¸ Åó¾ «Åý ¾¡ö Á£É¡
¸¢ÆÅâ¼õ Å¢Ç츢ɡû: "«ÅÛìÌò ¾Á¢§Æ §Àº ÅÃÁ¡ð§¼íÌÐ Á¡Á¡... þýÛõ þÃñÎ
ÅÂÍ §À¡É¡ ¸òÐìÌÅ¡ý. «í§¸ ¡Õõ ¾Á¢Æ¢§Ä §ÀºÈÅí¸ þø¨Ä... «í§¸ Àì¸òÐ
Å£ð椀 ´Õ º÷¾¡÷ ¾¡¾¡ þÕ측Õ... ¿¡Ù âá «ÅÕ¸¢ð¼¾¡ý þÕôÀ¡ý. ¯í¸¸¢ð¼
ÅÃÁ¡ð§¼í¸¢È¡§É... «ÅÕ츢𼠧Á§Ä ²È¢ «ÅÕ ¾¡Ê¨Âô ÒÊ þØôÀ¡ý.
«Å¨Ãò¾¡ý ’ ¾¡¾¡ ¾¡¾¡’ýÛ ÜôÀ¢ðÎô ÀƸ¢ô§À¡Â¢ð¼¡ý... «ÅÕìÌõ À¡Ò¨Åô
À¡÷측Á þÕì¸ ÓÊ¡Ð. °ÕìÌô ÒÈôÀÎõ§À¡Ð, ’º£ì¸¢Ãõ ÅóÐÎí¸’ýÛ ´Õ ÀòÐ
¾¼¨ÅìÌ §Á§Ä ¦º¡øÄ¢ð¼¡Õ, «ó¾ º÷¾¡÷ ¾¡ò¾¡" -±ýÚ «Åû ¦º¡øÄ¢ì
¦¸¡ñÊÕìÌõ §À¡Ð, ¸¢ÆÅÕìÌò ¾ÉìÌî ¦º¡ó¾Á¡É §ÀÃì ÌÆó¨¾¨Â ±Å§É¡
¨ÅòÐ즸¡ñÎ, ¿¡¦ÇøÄ¡õ ¦¸¡ïº¢ Å¢¨Ç¡Ê, ¾ý¨ÉÔõ Å¢¼ «¾¢¸ ¦¿Õì¸Á¡¸¢,
«Åý À¡¨.¨Âì ¸üÚì ¦¸¡ÎòÐ, ¾ýÉ¡ø ¾ý §ÀÃÛ¼ý §ÀºÓÊ¡Áø ¬ì¸¢Å¢ð¼
«ó¾ Ó¸ÁȢ¡ º÷¾¡÷ ¸¢ÆÅý Á£Ð ±Ã¢îºø ±Ã¢îºÄ¡ö Åó¾Ð. ´Õ ²ì¸ô ¦ÀÕãîÍ
Å¢ð¼¡÷... «ó¾ô ¦ÀÕãø- ÅÕ.ò¾¢ø À¾¢§É¡Õ Á¡¾õ À¡Ò§Å¡Î ¦¸¡ïÍžüÌ
º÷¾¡÷ ¸¢ÆÅÛìÌ ÅÆ¢ þÕó¾ §À¡¾¢Öõ, ÅÕ.ò¾¢ü¦¸¡ÕÓ¨È ´Õ Á¡¾õ «Å§É¡Î
¸Æ¢ì¸ò ¾ÉìÌ Å¡öôÀ¢Õ츢ȧ¾, þЧŠ§À¡Ðõ ±ýÈ ¾¢Õô¾¢ ¯½÷×õ þÕó¾Ð.
´ù¦Å¡Õ ¾¼¨Å À¡Ò ÅóÐ ¦ºøÖõ§À¡Ðõ, «ÅÛìÌ ´Õ ÅÂÐ Üθ¢ÈÐ ±ýÈ
Á¸¢úÔõ, ¾ÉìÌ ´Õ ÅÂÐ ¸Æ¢óÐ §À¡¸¢ÈÐ ±ýÈ ÅÕò¾Óõ ¸¢ÆÅÕìÌ ¦¿ï¨º
«¨¼ìÌõ.
’«Îò¾ ¾¼¨Å «Åý ÅÕõ§À¡Ð ¿¡ý þÕ츢§È§É¡ ¦ºòÐô §À¡¸¢§È§É¡’ ±ýÈ
¯½÷Å¢ø «Å÷ ¸ñ¸û ¸ÄíÌõ.
þó¾ò ¾¼¨Å Á£É¡×ìÌô §ÀÚ ¸¡Äõ. ºÀ¡À¾¢ Á¨ÉÅ¢¨Âô À¢ÃºÅò¾¢ü¸¡¸ «Åû
¾¡öÅ£¼¡É ¾ïº¡çÕìÌ §¿§Ã «¨ÆòÐô §À¡öÅ¢ð¼¡ý ±ýÚ ¸Ê¾õ Åó¾§À¡Ð ¸¢ÆÅ÷
¾Å¢Â¡öò ¾Å¢ò¾¡÷. .Àøââø þÕóÐ ¾ïº¡çÕìÌ þó¾ ÅÆ¢Â¡¸ò ¾¡§É «Å÷¸û
§À¡Â¢Õì¸ §ÅñÎõ. ÓýÜðʧ ´Õ ¸Ê¾õ §À¡ðÊÕ󾡸, ãýÚ ¨ÁÖìÌ
«ôÀ¡Ä¢ÕìÌõ âÄÊìÌô §À¡ö, ¾ý §ÀÃ¨É Ã¢Ģø À¡÷òÐ Åó¾¢ÕôÀ¡÷ «øÄÅ¡
¸¢ÆÅ÷! «ó¾ ÅÕò¾ò¨¾ò ¦¾Ã¢Å¢òÐî ºÀ¡À¾¢ìÌì ¸Ê¾õ ܼ ±Ø¾î ¦º¡ýÉ¡÷,
º¢ýÉì §¸¡É¡÷ ãÄõ. «ÅÕõ ±Ø¾¢É¡÷.
Á¨ÉÅ¢¨Â «¨ÆòÐì ¦¸¡ñÎ ¾¢ÕõÀ¢ ÅÕ¨¸Â¢ø ÅÆì¸õ§À¡ø ¸¢Ã¡ÁòÐìÌ ÅóÐ ´Õ
Á¡¾õ ¾í¸¢î ¦ºøÅ¾¡¸î ºÁ¡¾¡Éõ ÜÈ¢ô À¾¢ø ±Ø¾¢Â¢Õó¾¡ý ºÀ¡À¾¢.
’À¡Ò ÅÕÅ¡ý, À¡Ò ÅÕÅ¡ý’ ±ýÚ Å£ðÎì ÌÆó¨¾¸Ùõ, ¦Àâ §¸¡É¡Õõ ¿¡ð¸¨Ç
±ñ½¢ì ¦¸¡ñÎ ¸¡ò¾¢Õó¾É÷.
§¸¡É¡÷ Å£ðÎìÌ ±¾¢Ã¢ø ´Õ Ã¡ó¾ø ¸õÀõ ¯ñÎ.
Ã¡ó¾ø ¸õÀõ ±ýÈ¡ø, º£¨Á ±ñ¨½¨Âì ÌÊò¾ §À¡¨¾Â¢ø º¢Åó¾ ¸ñ¸Ù¼ý
þÃ¦ÅøÄ¡õ ¦¾Õ¨Åì ¸¡Åø ÒâÔõ «ºø ÀðÊ측ðÎ Ã¡ó¾ø ¸õÀõ¾¡ý. º¢ì¸Éõ
¸Õ¾¢§Â¡, ¿¢Ä¡¨Å ú¢ì¸ ±ñ½¢§Â¡, «ó¾ Ã¡ó¾ø ¸õÀõ ¿¢Ä¡ì ¸¡Äí¸Ç¢ø
¯À§Â¡¸ôÀÎò¾ô À¼¡Áø ¦Åüڼġö ¿¢üÌõ. þó¾ µö× ¿¡ð¸Ç¢ø¾¡ý ¦¾Õì
ÌÆó¨¾¸û ¿¢Ä¡¨Åì ¸Õ¾¢ «í§¸ Å¢¨Ç¡¼ ÅÕÅ¡÷¸û. «Å÷¸Ç¢ý ¸ñ½¡õâ
Å¢¨Ç¡ðÊø Ã¡ó¾ø ¸õÀÓõ ’¾¡îº¢’ ¡¸ì ¸ÄóÐ ¦¸¡ûÙõ.
«ÚÀÐ ÅÕ.í¸ÙìÌ Óý ¦Àâ §¸¡É¡Õõ, «ÅÕìÌôÀ¢ý º¢ýÉì §¸¡É¡Õõ, þó¾
Ã¡ó¾ø ¸õÀò¨¾î ÍüÈ¢ Å¢¨Ç¡Ê¢Õ츢ȡ÷¸û. «¾ý À¢ÈÌ ÓôÀÐ ÅÕ.í¸Ç¢ø,
«Å÷¸Ç¢ý À¢û¨Ç¸û, þô§À¡Ð ÀýÉ¢ÃñΠž¢Ä¢ÕóÐ ³óÐ ÅÂРŨâÖûÇ
º¢ýÉì §¸¡É¡Ã¢ý §ÀÃì ÌÆó¨¾¸û À¾¢§É¡Õ §À÷ Ã¡ó¾ø ¸õÀò¨¾î ÍüÈ¢ µÊ
ÅÕ¸¢ýÈÉ÷. ´§Ã ¬ÃÅ¡Ãõ; º¢Ã¢ôÒ; Üîºø.
«ô§À¡Ð ¾¡ý ¾¢ñ¨½Â¢ø ÀÎ쨸 Ţâò¾¡÷ º¢ýÉì §¸¡É¡÷.
±¾¢÷ Å£ðÎì ܨøǢý Á£Ð §Äº¡É ÀÉ¢ãð¼Óõ ¿¢Ä¡ ¦ÅÇ¢îºÓõ ÌÆõÀ¢ì
¦¸¡ñÊÕ츢ÈÐ. À¢ý ÀÉ¢ì ¸¡ÄÁ¡É¾¡ø ÀÉ¢ô À¼ÄÁ¢Õó¾§À¡¾¢Öõ, ÌǢâý ¦¸¡Î¨Á
þýÛõ ¬ÃõÀÁ¡¸Å¢ø¨Ä. ¦¾ÕÅ¢ø «í¦¸¡ýÚõ þí¦¸¡ýÚÁ¡¸ ¬û ¿¼Á¡ð¼õ
¸¡ñ¸¢ÈÐ.
¦¾ÕÅ¢ø ÌÆó¨¾¸û ±øÄ¡õ Å¢¨Ç¡Êì ¦¸¡ñÊÕì¸¢È §¿Ãò¾¢ø, º¡ôÀ¢ð¼ ¨¸¨Âò
Ш¼òÐ즸¡ñÎ «ÅÃÕ§¸ ¾¢ñ¨½Â¢ý §Áø ÅóÐ ²È¢É¡ý µ÷ ²Ø ÅÂÐî º¢ÚÅý.
"¬÷á «Åý? «¼§¼ ¾õ¨À¡š?... ²ý¼¡ ¸ñÏ, ¿£ §À¡Â¢ Å¢¨Ç¡¼Ä¢Â¡?"
"õ.£õ... ¿¡ ¦Å¨Ç¡¼§Ä. ¸¨¾ ¦º¡øÖ ¾¡ò¾¡!"
"¸¨¾ þÕì¸ðÎõ... ¦Àâ ¾¡ò¾¡ §¾¡ð¼òÐìÌô §À¡Â¢ð¼¡Ã¡, À¡Õ..." ±ýÚ
¦º¡øÄ¢ì ¦¸¡ñ§¼, ¾¨Ä Á¡ðÊÄ¢ÕóÐ ÍÕð¨¼Ôõ ¦¿ÕôÒô ¦ÀðʨÂÔõ ±Îò¾¡÷
º¢ýÉì §¸¡É¡÷.
"«×Õ ±ôÀ§Å¡ §À¡Â¢ð¼¡§Ã" ±ýÚ ¾¢ñ¨½Â¢Ä¢Õó¾Àʧ ţðÊüÌû ¾ý ÌÎÁ¢ò
¾¨Ä¨Â ¿£ðÊ ÒÆì¸¨¼ Å¡ºø ÅÆ¢§Â ¿¢Ä¡ ¦ÅÇ¢îºò¾¢ø ¦¾Ã¢Ôõ §¾¡ð¼òÐì
Ìʨº¨Âô À¡÷ò¾¡ý ¾õ¨À¡.
¾õ¨À¡- º¢ýÉì §¸¡É¡Ã¢ý ¦ºòÐô §À¡É ´§Ã Á¸û, «Å÷ źõ ´ôÒÅ¢òÐ
Å¢ðÎô§À¡É, §º¡¸Óõ ¬Ú¾Öõ ¸Äó¾ «Åû ¿¢¨É×! ¾¡Â¢øÄ¡ì ÌÆó¨¾ ±ýÀ¾É¡ø,
ÌÎõÀò¾¢ÖûÇ ±ø§Ä¡Ã¢ý «ýÒìÌõ À¡ò¾¢ÃÁ¡Â¢Õó¾¡ý ¾õ¨À¡. «ÅÛõ ÁüÈì
ÌÆó¨¾¸û §À¡ø «øÄ¡Áø «È¢×õ «¼ì¸Óõ ¦¸¡ñΠŢÇí¸¢É¡ý. ¬É¡ø, ¦ÀâÂ
§¸¡É¡Õ째¡, º¢ýÉì §¸¡É¡Ã¢ý §ÀÃô À¢û¨Ç¸Ç¢ø ´ÕÅÉ¡öò¾¡ý «ÅÛõ
§¾¡ýȢɡý. «ÅÕìÌ «ÅÕ¨¼Â À¡Ò¾¡ý ´ºò¾¢!
¦Àâ §¸¡É¡÷ §¾¡ð¼òÐìÌô §À¡öÅ¢ð¼¡÷ ±ýÚ ¾õ¨À¡Ţý ãÄõ «È¢ó¾ º¢ýÉÅ÷
ÍÕð¨¼ì ¦¸¡Ùò¾Ä¡É¡÷.
"¾¡ò¾¡... ¯ÉìÌô ¦Àâ ¾¡ò¾¡¸¢ð¼ ÀÂÁ¡?"
"ÀÂÁ¢ø§Ä¼¡... Á⡨¾!?
"õ... «ÅÕìÌò¾¡ý ¸ñÏ ¦¾Ã¢ÂÄ¢§Â... ¿£ ÍÕðÎì ÌÊ츢§ÈÛ «ÅÕ ±ôÀÊô
À¡ôÀ¡Õ?"
"«ÅÕìÌì ¸ñÏ ¦¾Ã¢Â§ÄýÉ¡ ±ýÉ?... ±ÉìÌì ¸ñÏ ¦¾Ã¢Ô§¾... «×Õ ±¾¢§Ã
ÍÕðÎì ÌÊ ±ÉìÌô ÀÆì¸õ þø¨Ä... ºÃ¢, ¿£ §À¡ö Å¢¨Ç¡Î!"
"õ.£õ... ¿¡Ç츢ò¾¡ý Å¢¨Ç¡ΧÅý. þýÉ¢ì¸¢ì ¸¨¾¾¡ý §ÅÏõ."
"¿¡Ç츢 ±ýÉ, Å¢¨Ç¡¼ ¿¡û À¡ò¾¢Õ째?"
"¿¡¨ÇìÌò¾¡§É ºÀ¡À¾¢ Á¡Á¡ šáí¸. «Åí¸ Åó¾ôÒÈõ À¡Ò§Å¡¼
¦Å¨Ç¡ΧÅý!" ±ýÚ ¯üº¡¸Á¡öî ¦º¡ýÉ¡ý ¾õ¨À¡.
"«¼§¼, ¯ÉìÌ Å¢ºÂ§Á ¦¾Ã¢Â¡¾¡?... «ó¾ þó¾¢ì¸¡Ãô ÀÂÖõ, «Å «ôÀÛõ
¿õÀ¨Ç¦ÂøÄ¡õ ²Á¡ò¾¢ô À¢ð¼¡ÛÅ... «×í¸ ÅÃÄ... «¾¡ý ¦Àâ ¾¡ò¾¡×ìÌ ¦Ã¡õÀ
ÅÕò¾õ.." ±ýÚ º¢ýÉì §¸¡É¡÷ ¦º¡ýɨ¾ ¿õÀ ÁÚòÐ, ¾õ¨À¡ ÌÚ츢ðÎì
¸ò¾¢É¡ý.
"³Â¡... ¦À¡ö¢, ¦À¡ö¢... ¿£ ÍõÁ¡É¡îÍìÌõ ¦º¡øÈ... ¿¡¨ÇìÌ «×í¸ ÅÕÅ¡í¸!"
"¦À¡ö¢ þø§Ä¼¡, ¦¿ºõ¾¡ý. º¡Âí¸¡Äõ ¸Î¾¡º¢ Åó¾¢î§º... ¾¢Ë÷Û ÅÃî ¦º¡øÄ¢ì
¸Î¾¡º¢ Åó¾¢îº¡õ Àð¼¡Çò¾¢Ä¢ÕóÐ... «¾É¡§Ä þýÉ¢ìÌ Ã¡ò¾¢Ã¢§Â ¦À¡ÈôÀðÎ
¾ïº¡ç÷¦ÄÕóÐ §¿Ã¡ô §À¡È¡í¸Ç¡õ... «Îò¾ ¾¼¨Å º£ì¸¢ÃÁ¡ Å÷áí¸Ç¡õ. ¯í¸
ºÀ¡À¾¢ Á¡Á¡ ±Ø¾¢Â¢Õ측ý..."
"¸Î¾¡º¢ ±í§¸? ¸¡ðÎ" ±ýÚ §¸ðÌõ§À¡Ð ¾õ¨À¡Ţý ÌÃÄ¢ø ²Á¡üÈÓõ
«Å¿õÀ¢ì¨¸Ôõ þ¨Æó¾É.
"¸Î¾¡º¢ ¦ÀâÂÅ÷¸¢ð§¼ þÕìÌ!"
"¿¡ý §À¡Â¢ À¡÷ì¸ô §À¡§Èý" ±ýÚ ¦º¡øÄ¢ì ¦¸¡ñ§¼ ¾¢ñ¨½Â¢Ä¢ÕóР̾¢ò¾¡ý
¾õ¨À¡.
"þó¾ §¿Ãò¾¢§Ä¡ §¾¡ð¼òÐìÌô §À¡§È? Å¢Êﺢ À¡òÐì¸Ä¡õ" ±ýÚ ¾Îò¾¡÷
º¢ýÉÅ÷.
"«Ð¾¡ý ¦¿Ä¡ ¦ÅÇ¢îºÁ¢Õì̧¾" ±ýÚ À¾¢ø ¦º¡øÄ¢Å¢ðÎ, §¾¡ð¼òÐì Ìʨº¨Â
§¿¡ì¸¢ µð¼Á¡ö µÊÉ¡ý ¾õ¨À¡.
¾õ¨À¡ ¦Àâ §¸¡É¡¨Ãò §¾Êò §¾¡ð¼òÐì ÌʨºÂÕ§¸ Åó¾ §À¡Ð, ÌʨºÂ¢ý
Óý, ºÕ̸¨Ç ±Ã¢òÐò ¾£Â¢ø ÌÇ¢÷ ¸¡öó¾Å¡Ú ¦¿ÕôÀ¢ø Íð¼ Óó¾¢Ã¢ì
¦¸¡ð¨¼¸¨Çî º¢È¢Â þÕõÒÄ쨸¡ø ¾ðÊì ¦¸¡ñÊÕó¾¡÷ ¸¢ÆÅ÷.
¸¢ÆÅâý ±¾¢Ã¢ø ÅóÐ þÎôÀ¢ø ¨¸äýÈ¢ì ¦¸¡ñÎ ¾ý¨É «Å÷ ¸Åɢ츢ȡá ±ýÚ
À¡÷ôÀÅý §À¡ø ¦ÁÇÉÁ¡ö ¿¢ýÈ¡ý ¾õ¨À¡.
¸¢ÆÅ÷ Ó¸õ ¿¢Á¢÷ò¾¢ò ¾õ¨À¡×ìÌ §¿§Ã ŢƢ ¾¢ÈóÐ À¡÷ò¾¡÷. «Å÷ «½¢ó¾¢Õó¾
«ÖÁ¢É¢Âô À¢§ÃÁ¢ø À¾¢ò¾¢Õó¾ ¾Êò¾ ¸ñ½¡Ê¢맼 «ÅÃÐ ¸ñ¸Ùõ, þ¨Á
§Ã¡Áí¸Ùõ Á¢¸ô ¦À⾡öò ¦¾Ã¢ó¾É ¾õ¨À¡×ìÌ. «ó¾ì ¸ñ½¡Ê¢ý ÀħÉ
«ùÅÇ×¾¡ý ±ýÚ ¦º¡øÄ¢Å¢¼ ÓÊ¡Ð. «ó¾ì ¸ñ½¡ÊÔõ þøÄ¡Å¢ð¼¡ø, þÕÇ¢ø
±Ã¢Ôõ ¦¿Õô¨À§Â¡, ¦ÅÇ¢îºò¾¢ø ¿¢ÆÖÕÅ¡öò ¦¾Ã¢Ôõ ¯ÕÅí¸¨Ç§Â¡ ܼ «Åáø
¸¡½¡ þÂġР§À¡öÅ¢Îõ.
«Å÷ À¡÷¨Å ±¾¢Ã¢ø ¿¢üÌõ ¾õ¨À¡¨Å °ÎÕÅ¢, «ÅÛìÌô À¢ýÉ¡ø ±¨¾§Â¡
¸ÅÉ¢ôÀÐ §À¡ø þÕó¾Ð. «Åý ¾¢ÕõÀ¢ô À¡÷òÐì ¦¸¡ñ¼¡ý. «Åý À¢ýÉ¡ø
Å¡Éò¾¢ø Åð¼Á¢øÄ¡¾, À¢¨ÈÔÁ¢øÄ¡¾ ¿Íí¸¢ô §À¡É Óý ¿¢ÄÅ¢ý ãÇ¢ò§¾¡üÈõ
¦¾Ã¢ó¾Ð. «ó¾ ´Ç¢¨Â À¢ñ½É¢ §À¡Äì ¦¸¡ñÎ, ¿¢ÆÖÕÅ¡öò ¦¾Ã¢Ôõ ¾õ¨À¡Ţý
¯ÕÅ¢ø ±í§¸¡ àÃò¾¢ø þÕìÌõ À¡Ò¨Åò¾¡ý ¸ñ¼¡÷ ¸¢ÆÅ÷. «ÅÃÐ þ¨Á¸û
À¼À¼òÐ ãÊò ¾¢Èó¾É. Á£ñÎõ ¦¾Ã¢ó¾ «ó¾ ¯ÕÅò¨¾ì ¸ñÎ «Å÷ Å¢Âó¾¡÷.
"ÌÕ¼Ã¡É Àì¾ §º¾¡ ¾õâ¨Ã Á£ðÊì ¦¸¡ñÎ À¡Îõ§À¡Ð «ÅÃÐ þ¨ºÂ¢ø ¸ðÎñ¼
ÀÃó¾¡Áý À¡Ä¸¢Õ.½ý ÅÊÅÁ¡ö «Å÷ «È¢Â¡Áø «Å¦Ã¾¢§Ã «Á÷óÐ §¸ðÀ¡É¡§Á,
«ó¾ Á¡Â Ä£¨Äì ¸¨¾ «Å÷ ¿¢¨É×ìÌ ÅÃ, ¸¢ÆÅâý ¯¾Î¸Ç¢ø Áó¾.¡.Á¡É ´Õ
Òýɨ¸ ¾Åúó¾Ð. "À¡â!"
"À¡Ò þø§Ä ¾¡ò¾¡, ¿¡ý ¾¡ý ¾õ¨À¡."
"¾õ¨À¡š?... ¿£ ±í§¸ Åó§¾ þó¾ þÕðʧÄ?"
"À¡Ò ¿¡¨Ç츢 ÅÕšɢø§Ä ¾¡ò¾¡?... ¿£ «ÐìÌò ¾¡§É Óó¾¢Ã¢ì¦¸¡ð¨¼ ͼ§È?...
º¢ýÉò ¾¡ò¾¡ ¦º¡øÈ¡Õ, «Åý ÅÃÁ¡ð¼¡É¡õ..." ±ýÚ Ò¸¡÷ ÜÚÅЧÀ¡ø ¦º¡ýÉ¡ý
¾õ¨À¡.
À¡ÒÅ¢ý ÅÕ¨¸ì¸¡¸ò ¾ý¨Éô§À¡ø «ÅÛõ ¬ÅÖ¼ý ¸¡ò¾¢ÕôÀÅý ±ýÚ §¾¡ýȧÅ
¸¢ÆÅÕìÌ ¾õ¨À¡Ţý Á£Ð ´Õ Å¢§º. š墨 À¢Èó¾Ð. "¬Á¡ñ¼¡ À§Ä, «Åý
«ôÀý «ÅºÃÁ¡¸ò ¾¢ÕõÀ¢ô §À¡È¡É¡õ... «¾É¡§Ä ÅÃø§Ä..." ±ýÚ ÜÈ¢ÂÐõ
¾õ¨À¡Ţý Ó¸õ Å¡Êô §À¡Â¢üÚ. «Åý À¾¢ø §Àº¡Áø ¦ÁÇÉÁ¡ö ¿¢üÀ¾¢ÖûÇ
§º¡¸ò¨¾ì ¸¢ÆÅ÷ ¯½÷ó¾¡÷.
"À¢ý§É ²ý ¾¡ò¾¡ ¿£ þó¾ §¿Ãò¾¢§Ä Óó¾¢Ã¢ì ¦¸¡ð¨¼ ͼ§È?" - ±ýÚ Å¾í¸¢Â
ÌÃÄ¢ø §¸ð¼¡ý ¾õ¨À¡.
Ó¸¦ÁøÄ¡õ ÁÄà ިÇó¾ º¢Ã¢ôÒ¼ý ¾¨Ä¡ðÊ즸¡ñÎ ¦º¡ýÉ¡÷ ¸¢ÆÅ÷: "«Åý
¿õÀ¨Ç ²Á¡ò¾ô À¡÷ò¾¡Öõ ¿¡ý ŢΧÅÉ¡?... §¼ºý§Ä §À¡Â¢ À¡÷òÐðÎ ÅÃô
§À¡§È§É... «Ð측¸ò¾¡ý þÐ. «ó¾ô À¡Òô ÀÂÖìÌ Óó¾¢Ã¢ô ÀÕôÒýÉ¡ ¯º¢Õ...
Ã墅 ¿õÀ °ÕìÌ Å¢Ê ¸¡¨Ä¢§Ä ÅÕÐ... «¾É¡§Ä¾¡ý þôÀ§Å ͼ§Èý... ¯ì¸¡Õ.
¿£Ôõ ¯Ã¢..." ±ýÚ ÍðÎ §Á§Ä¡Î ¾£öó¾ Óó¾¢Ã¢ì ¦¸¡ð¨¼¸¨Çò ¾õ¨À¡Ţý Óý
¾ûǢɡ÷ ¸¢ÆÅ÷. ¾õ¨À¡×õ «Å÷ ±¾¢§Ã ¯ð¸¡÷óÐ Óó¾¢Ã¢ì ¦¸¡ð¨¼¸¨Çò ¾ðÊ
¯Ã¢ì¸ ¬ÃõÀ¢ò¾¡ý. ¾¢Ë¦ÃýÚ ¸¢ÆÅ÷ ±ýÉ ¿¢¨Éò¾¡§Ã¡, ¾õ¨À¡Ţý ¨¸¨Âô
À¢Êò¾¡÷. «Åý ¨¸¸û ¯Ã¢òÐì ¦¸¡ñξ¡ý þÕó¾ý ±ýÚ ¿¢îºÂÁ¡ÉÐõ ¦º¡ýÉ¡÷:
"¿£ ¿øÄ ¨ÀÂɡ... ¦¸¡ð¨¼ ¦¸¡ïºÁ¡ò¾¡ý þÕìÌ. ¿£ ¾¢í¸¡§¾... ¿¡õÀ¾¡ý
þí§¸ ¦¿¨ÈÂò ¾¢í¸§È¡§Á. À¡Ò×ìÌò¾¡ý «ó¾ °Ã¢§Ä þÐ ¦¸¨¼ì¸§Å
¦¸¨¼ì¸¡Ð. ¿£¾¡ý ¿øÄÅɡ. þó¾ì ¸ñϺ¡Á¢¾¡ý ¾¢ÕðÎô ÀÂ...
¯Ã¢ì¸¢§ÈýÛ ÅóÐ ¾¢ÕÊò ¾¢õÀ¡ý..." ±ýÚ ¾õ¨À¡¨Å ¾¡.¡ ¦ºöžü¸¡¸, º¢ýÉì
§¸¡É¡Ã¢ý §ÀÃý¸Ç¢ø ´ÕŨÉò ¾¢ðÊÉ¡÷.
"±ÉìÌ §Åñ¼¡õ, ¾¡ò¾¡. ¸ñϺ¡Á¢ ±ý¨Éô À¡ì¸ ¦Å ¦¿¨ÈÂò ¾¢ýÉ¡ý.
«¾É¡§Ä¾¡ý «ÅÛìÌ Å¢òÐ ÅÄ¢ ÅóРŢ§È ºÃ¢Â¡Â¢ø§Ä... º¡Âí¸¡Äõ ܼ À¡ðÊ
«ÅÛìÌì ¸.¡Âõ ÌÎò¾¢î§º..." ±ýÚ ¦º¡øÄ¢ì ¦¸¡ñ§¼ þÕó¾Åý, ¯Ã¢òÐ ¨Åò¾
ÀÕôÒ¸û ¦Åû¨Ç ¦Å§Ç¦ÃýÚ Å¢ì¸¢Éõ þøÄ¡Áø ÓØº¡¸×õ ¦À⺡¸×õ
þÕôÀ¨¾ì ¸ñÎ ¾¢Ë¦ÃýÚ §¸ð¼¡ý.
"²ó¾¡ò¾¡! þ¨¾¦ÂøÄ¡õ ¿£ À¡Ò×측¸ýÛ À¡òÐô À¡òÐô ¦À¡Ú츢 ¦Å¡?
±øÄ¡õ ¦ÀÃ¢Í ¦À⺡ þÕ째?"
"¬Á¡... ¿¢¨È ¦ÅÕó§¾ý... ¸ñϺ¡Á¢ ÅóÐ ¿¡ý þøÄ¡¾ ºÁÂò¾¢§Ä
¾¢ÕÊ츢ðÎô §À¡Â¢ð¼¡ý..." ±ýÚ ¦º¡øÖõ§À¡§¾, ¾¡ý ¦Ã¡õÀ «øÀò¾ÉÁ¡öò
¾õ¨À¡×õ ¾¢ÕÎÅ¡§É¡ ±ýÚ ºó§¾¸ôÀð¼¾ü¸¡¸ ÅÕò¾ÓüÈ ¸¢ÆÅ÷ ̨Æ×¼ý
¦º¡ýÉ¡÷:
"ÀÚ¢ø§Ä, ¿£ ¦ÃñÎ ±ÎòÐ츼¡... À¡Ò×ìÌò ¾¡ý þùÅÇ× þÕ째. «ôÀ¢Ê§Â
¯û§Ç §À¡Â¢ Á¡¼ò¾¢§Ä ´Õ ¼ôÀ¡ þÕìÌ. «¦¾ì ¦¸¡ñ½¡óÐ þó¾ô
ÀÕô¨À¦ÂøÄ¡õ «ÐìÌû§Ç «ûÇ¢ô§À¡Î" ±ýÈ¡÷.
¾õ¨À¡×ìÌ ´ýÚõ ÒâÂÅ¢ø¨Ä. ӾĢø «Å÷ «¨¾ò ¾¢ýÉìܼ¡Ð ±ýÚ ±îºÃ¢òÐ
Å¢ðÎ, þô¦À¡ØÐ ¾¢ýÉî ¦º¡øÄ¢ ÅüÒÚòÐÅÐ ²ý ±ýÚ ´Õ Å¢É¡Ê §Â¡º¢ò¾¡ý.
§Â¡º¢òÐì ¦¸¡ñ§¼ ¯û§Ç §À¡É¡ý. «ó¾ ¼ôÀ¡¨Åì ¦¸¡ñÎ ÅóÐ ±øÄ¡Åü¨ÈÔõ
«ûÇ¢ ¨Åò¾¡ý. À¢ÈÌ ¨¸Â¢¦Ä¡Õ Óó¾¢Ã¢ô ÀÕô¨À ±ÎòÐ ¨ÅòÐì ¦¸¡ñÎ
§¸ð¼¡ý.
"²ó¾¡ò¾¡ ±ý¨Éò ¾¢í¸î ¦º¡ø§È? þøÄ¡ðÊ À¡Ò×ìÌ... ¿¡¦Ç츢 Å¢ò¦¾
ÅÄ¢ìÌõ þø§Ä?" ±ýÚ À¡Ò×ìÌ Å¢üÚÅÄ¢ ÅáÁø þÕôÀ¾ü¸¡¸ò ¾¢ýÀÅý Á¡¾¢Ã¢
´ý¨È ±ÎòРš¢ø §À¡ðÎì ¦¸¡ñ¼¡ý ¾õ¨À¡. ¸¢ÆÅ÷ ¾õ¨À¡¨Åò ¾¨Ä
¿¢Á¢÷ò¾¢ô À¡÷ò¾¡÷.
þùÅÇ× «È¢×õ ¿øÄ ̽Óõ «¨Áó¾ ¾õ¨À¡ ¾¡Â¢øÄ¡ì ÌÆó¨¾ ±ýÈ ±ñ½Óõ,
¦ºòÐô§À¡É- «Å¨Çô§À¡Ä§Å «È¢×õ ̽Óõ Á¢Ìó¾ «ÅÉÐ ¾¡Â¢ý Ó¸Óõ,
þò¾¨É ¸¡Äõ þŨÉô ÀüȢ º¢ó¾¨É§Â þøÄ¡Áø ÁüÈì ÌÆó¨¾¸Ç¢ø ´ýÈ¡¸§Å
¸Õ¾¢ þŨÉÔõ ¾¡ý Å¢ÃðÊÂÊò¾ À¡Å¨ÉÔõ, ¾¡ÂüÈ ÌÆó¨¾¨Â Å¢ÃðÊÅ¢ðÎò ¾ý
§ÀÃý ±ýÀ¾¡ø À¡Ò¨Å þØòÐ ¨ÅòÐî º£Ã¡ðÊ ÌüÈ ¯½÷×õ «ÅÃÐ ¿¢¨ÉÅ¢ø
¸Å¢óÐ ¸¢ÆÅâý ÌÕðΠŢƢ¸û ¸Äí¸¢É.
±¾¢Ã¢ø ¿¢ýÈ ¾õ¨À¡¨Å þØòÐò §¾¡§Ç¡Î «¨½òÐì ¦¸¡ñ¼¡÷. «Å÷ ¯¾Î¸û
«Ø¨¸Â¡ø ÐÊò¾É. «Åý ÓÐÌìÌô À¢ýÉ¡ø ¸ñ½¡Ê¢ý þ¨¼¦ÅǢ¢맼 Å¢Ãø
ѨÆòÐ þ¨Á ŢǢõÀ¢ø ÐÇ¢ò¾ ¸ñ½£¨Ãò Ш¼òÐì ¦¸¡ñÎ À¡ºõ ¦¿ïº¢ø
«¨¼ì¸, "¯í¸õÁ¡ Á¡¾¢Ã¢ ¿£Ôõ ¦Ã¡õÀ Òò¾¢º¡Ä¢Â¡Â¢Õ째... À¡Åõ, «Å¾¡ý þÕóÐ
«ÛÀÅ¢ì¸ì ÌÎòÐ ¨Åì¸ø§Ä... ¿£ ¿øÄ¡ ÀÊ츢Ȣ¡?... ¿øÄ¡ ÀÊîº¢ì ¦¸ðÊ측ÃÉ¡
¬¸Ïõ" ±ýÚ ¦¾¡¼÷À¢øÄ¡¾ š츢Âí¸¨Çî º¢ó¾¢É¡÷.
«Å÷ ¸Øò¨¾ ¦¿ÕÊÂÅ¡Ú Å¡Â¢Ä¢Õó¾ Óó¾¢Ã¢ô ÀÕô¨Àì ¸ýÉò¾¢ø ´Ð츢즸¡ñÎ
"¾¡ò¾¡, ¾¡ò¾¡..." ±ýÚ ¦¸¡ï͸¢ýÈ ÌÃÄ¢ø «¨Æò¾¡ý ¾õ¨À¡. "±ýɼ¡
§ÅÏõ?"
"¿¡Ûõ ¯ýܼ §¼ºÛìÌ Å÷§Ãý ¾¡ò¾¡... À¡Ò¨Åô À¡ì¸ÈòÐìÌ..." ±ýÚ
¦¸ïº¢É¡ý.
"Å¢ÊÂì ¸¡ÄõÀà ÅñÊìÌ ¿¡ý þÕ𧼡¼ ±ó¾¢Ã¢îÍô §À¡§Å§É... ¿£ ±ó¾¢ÕôÀ¢Â¡?
þÕð椀 ±ÉìÌô ÀÆì¸õ. ¾¼Å¢ì¸¢ð§¼ §À¡Â¢Î§Åý... ¯ý§É ±ôÀÊ ÜðÊ츢ðÎô
§À¡ÈÐ?..." ±ýÚ ¾Âí¸¢É¡÷ ¸¢ÆÅ÷.
"¿£ ܼ ±ÐìÌ ¾¡ò¾¡ þÕð椀 §À¡ÅÏõ? Ã¡ó¾ø ¦ÅÇ째 ¦¸¡Ùò¾¢ ±ý ¨¸Â¢§Ä
ÌÎ. ¿¡ý ¦ÅÇ째 ±ÎòÐ츢ðÎ ÓýÉ¡§Ä ¿¼ì¸¢§Èý... ¿£ ±ý ¨¸¦Âô À¢Ê츢ðÎ
ÅóÐÎ..." ±ýÚ Á¡üÚ §Â¡º¨É ÜȢɡý ¾õ¨À¡.
"¬! ¦¸ðÊ측Ãý ¾¡ý¼¡ ¿£... ºÃ¢, «ôÀ §¿Ãò§¾¡¼ §À¡öô ÀÎ! Ţʠ¸¡¨Ä¢§Ä ÅóÐ
±ØôÀ§Èý."
"¿¡ý þí§¸¾¡ý ÀÎòÐì̧Åý."
"«í§¸ §¾ÎÅ¡í¸§Ç."
"º¢ýÉò ¾¡ò¾¡ ¸¢ð§¼ ¦º¡øÄ¢ðÎò¾¡ý Åó§¾ý..."
"ºÃ¢... ¸Â¢òÐì ¸ðÊÖ §Á§Ä ÀÎ쨸 þÕìÌ. «¾¢§ÄÕóÐ ´Õ ºÓ측Çò¨¾Ôõ
¦Åò¾¢¨Äô ¦ÀðʨÂÔõ ±ÎòÐì ÌÎò¾¢ðÎì ¸ðÊø§Ä ÀÎ쨸¨Â Ţâ ¿£ ÀÎòÐ
ì¸..." ±ýÚ ¸¢ÆÅ÷ ¦º¡ýÉÐõ .Ó측Çò¨¾ ±ÎòÐ «ÅÕìÌô ÀÎ쨸 Ţâò¾À¢ý,
¸Â¢üÚì ¸ðÊÄ¢ø ²È¢ô ÀÎòÐì ¦¸¡ñ¼¡ý ¾õ¨À¡.
¸¢ÆÅ÷ þÕõÒÃÄ¢ø ’¦¼¡ì ¦¼¡ì’¦¸ýÚ ¦ÅüÈ¢¨Ä þÊì¸ ¬ÃõÀ¢ò¾¡÷.
¿Îî º¡Áõ ¸Æ¢óÐ, Ó¾ø §¸¡Æ¢ ÜÅ¢Â×¼§É ¦Àâ §¸¡É¡÷ âÄÊìÌô ÒÈôÀ¼
¬Âò¾Á¡¸¢ò ¾õ¨À¡¨ÅÔõ ±ØôÀ¢É¡÷. ¾õ¨À¡ Ìà¸Äòмý ¸ñ ŢƢòÐì
¸Â¢üÚì ¸ðÊĢĢÕóÐ ÐûÇ¢ ±ØóÐ, "²ó ¾¡ò¾¡, ¿¡Æ¢Â¡Â¢Î?" ±ýÚ ¸ñ¸¨Çì
¸ºì¸¢ì ¦¸¡ñ¼¡ý.
"þôÀ§Å ¦À¡ÈôÀð¼¡ò¾¡ý §¿Ãõ ºÃ¢Â¡ þÕìÌõ. ¦ÅǢ¢§Ä ¦¾¡ð椀 ¾ñ½¢
¦ÅÕ째ý. §À¡Â¢ ¦Á¡¸ò¨¾ì ¸ØÅ¢ì¸..." ±ýÈÐõ ¾õ¨À¡ Ìʨºì ¸¾¨Åò
¾¢ÈóÐ ¦¸¡ñÎ ¦ÅÇ¢§Â Åó¾¡ý. "«ôÀ¡...!" ±ýÚ Àü¸¨Çì ¸ÊòÐ Á¡÷À¢ý Á£Ð
ºð¨¼¨Â þØòÐ ãÊì ¦¸¡ñÎ ¿Îí¸¢É¡ý ¾õ¨À¡.¦ÅÇ¢§Â ±¾¢Ã¢Ä¢ÕìÌõ
ÁÃí¸ûܼò ¦¾Ã¢Â¡Áø ÀÉ¢ôÀ¼Äõ ¸ÉòÐô ÀÃÅ¢ô À¡÷¨Å¨Â Á¨Èò¾Ð...
"¾¡ò¾¡... ´§Ã ÀÉ¢... ÌÇ¢ÕÐ" ±ýÚ ÌÃø ¿Îí¸ì ÜȢɡý ¾õ¨À¡.
¾¡ò¾¡ ÌʨºìÌû Å¢ÇìÌ ¦ÅÇ¢îºò¾¢ø ¸¢Õ.½ý À¼ò¾¢üÌ ±¾¢§Ã «Á÷óÐ
¯ûÇí¨¸Â¢ø ¾¢ÕÁñ¨½ì ̨ÆòÐ ¿¡ÁÁ¢ðÎì ¦¸¡ñ§¼ º¢Ã¢ò¾¡÷. "À夀 ¯ÉìÌ
ÅÂÍ ²Ø. ±ÉìÌ ±ØÅÐ... Àò ¾ñ½¢Â¢§Ä ÌǢðÎ Åó¾¢Õ째ý. ¿£ ¦Á¡¸õ
¸Ø×ÈÐ째 ¿ÎíÌȢ¡? ¦Á¡¾ø§Ä «ôÀ¢Êò¾¡ý ¿ÎíÌõ. «ôÒÈõ ¦º¡¸Á¡ þÕìÌõ.
¦¾¡ðÊ¢§Ä¾¡ý ¾ñ½¢ ¿¢¨È þÕ째. ¦ÃñÎ ¦º¡õÒ §ÁÖìÌõ °ò¾¢ì ÌÇ¢îÍÎ...
¾¨Ä¢§Ä °ò¾¢ì¸¡§¾. ¯ý ÌÎÁ¢ ¸¡Â §¿ÃÁ¡Ìõ... º£ì¸¢Ãõ ¿¡Æ¢Â¡×Ð" ±ýÚ
«ÅºÃôÀÎò¾§Å, ¾õ¨À¡ ºð¨¼¨ÂÔõ ¿¢.¡¨ÃÔõ «Å¢úò¦¾È¢óÐÅ¢ðÎ, ´§Ã
À¡öîºÄ¡öò ¦¾¡ðÊÂÕ§¸ µÊÉ¡ý.
ºüÚ §¿Ãò¾¢ü¦¸øÄ¡õ ¾À¾À¦ÅÉ ¾ñ½£÷ þ¨Ã¸¢ýÈ ºô¾ò§¾¡Î, «ÊÅ¢üÈ¢ø ãñ¼
¸¢Ù¸¢ÙôÒ½÷Å¡Öõ ÌǢáÖõ ¾õ¨À¡ §À¡Îõ ÜìÌèÄì §¸ðÎì ¸¢ÆÅ÷ Å¡öìÌû
º¢Ã¢òÐì ¦¸¡ñ¼¡÷.
Ã¡ó¾ø Å¢Ç쨸Ôõ ¦¸¡Ùò¾¢ ¨ÅòÐì ¦¸¡ñÎ Óó¾¢Ã¢ô ÀÕôÒ ¼ôÀ¡×¼ý ¾õ¨À¡
ÌÇ¢òÐ ÓÊòÐ ÅÕõŨà ¸¡ò¾¢Õó¾¡÷ ¸¢ÆÅ÷.
"¿¡ý ¦ÃÊ ¾¡ò¾¡, §À¡¸Ä¡Á¡?" ±ýÚ Ìà¸Äòмý «Øó¾ šâî ÍüȢ¢Õó¾ ÌÎÁ¢ò
¾¨Ä¨Âì ¸¨Ä측Áø ºÃ¢¦ºöÐ ¦¸¡ñÎ Åó¾¡ý ¾õ¨À¡. áó¾¨Äò ¾õ¨À¡Ţ¼õ
¦¸¡ÎòÐÅ¢ðÎ, ´Õ ¨¸Â¢ø Óó¾¢Ã¢ô ÀÕôÒ ¼ôÀ¡×õ, þý¦É¡Õ ¨¸Â¢ø ¾ÊÔÁ¡¸ô
ÒÈôÀðÎ, Ìʨºì ¸¾¨Åî º¡òÐõ§À¡Ð, ±ýɧš ¿¢¨ÉòÐ, "¾õ¨À¡, þ¦¾ì
¦¸¡ïºõ ÒÊ... Å÷§Èý" ±ýÚ ¦º¡øÄ¢Å¢ðÎô §À¡É¡÷. À¢ÈÌ ¦ÅǢ¢ø Åó¾§À¡Ð
¾õ¨À¡Ţ¼õ ´Õ ¿¡½Âò¨¾ò ¾óÐ, "þÐ ´Õ åÀ¡ ¾¡§É?" ±ýÚ §¸ð¼¡÷. ¾õ¨À¡
«ó¾ ÓØ åÀ¡ö ¿¡½Âò¨¾ô À¡÷òÐ "¬Á¡õ" ±ýÈ¡ý. À¢ÈÌ, "À¡Ò¨Åô À¡÷òÐ
¦ÅÚí¨¸§Â¡¼Å¡ «ÛôÀÈÐ?" ±ýÚ ¦º¡øÄ¢ì ¦¸¡ñ§¼ «ó¾ åÀ¡¨Âô À¡Ò×측¸
þÎôÀ¢ø ¦ºÕ¸¢ì ¦¸¡ñ¼¡÷.
¦Á¢ý §Ã¡ÎìÌõ ¸¢Ã¡ÁòÐìÌõ ¿Î§ÅÔûÇ ´ü¨ÈÂÊô À¡¨¾Â¢ý ÅÆ¢§Â «Å÷¸û
¿¼ó¾É÷.
«Å÷¸û þÕÅÕõ ´ü¨ÈÂÊô À¡¨¾Â¢ø ´Õ ¨Áø ¿¼ó¾À¢ý À¢Ã¾¡É º¡¨Ä¡É
¸ôÀ¢ì¸ø Ã.¾¡Å¢ø ²È¢Â§À¡Ð, ÀÉ¢ ãð¼ò¾¢ý ¸Éò¨¾ «Å÷¸û ¯½Ã ÓÊó¾Ð. ±¾¢§Ã
º¡¨Ä§Â ¦¾Ã¢Â¡Áø ÅÆ¢Â¨¼ò¾Ð§À¡ø þÕó¾Ð. ¾¨Ã¦ÂøÄ¡õ ÀÉ¢ ®Ãõ. ÁÃí¸§Ç¡
¸¡Î¸§Ç¡ þøÄ¡¾¾¡Öõ, º¡¨Ä ¯Â÷óÐ þÕôÀ¾¡Öõ °¾ø ¸¡üÚ Å£Íž¡Öõ ÌÇ¢÷
«¾¢ìÁ¡Â¢üÚ. ¸¢ÆÅ÷ ¾ý §¾¡ûÁ£Ð ¸¢¼ó¾ Ðñ¨¼ ±ÎòÐ ¿¡ý¸¡ö ÁÊòÐò
¾õ¨À¡Ţý ¾¨Ä¢ø §À¡÷ò¾¢, ӸšöìÌì ¸£§Æ ÐñÊý þÃñΠӨɸ¨ÇÔõ
§º÷òÐ ÓÊóÐ ¸ðÊ Å¢ð¼¡÷.
"¾ÉÐ §ÀèÉô À¡÷ì¸ þó¾ì ÌǢâø ¾¡ý §À¡Åо¡ý ºÃ¢. þÅÛõ ²ý þò¾¨É
º¢ÃÁòмý ¾ý§É¡Î ÅÕ¸¢È¡ý" ±ýÚ ¿¢¨Éò¾¡÷ ¸¢ÆÅ÷. «¨¾ «Å÷ «ÅÉ¢¼õ
§¸ð¼§À¡Ð «Åý ¯ñ¨Á¨Â ´Ç¢ì¸¡Áø ÜȢɡý. "±ÉìÌõ À¡Ò¨Åò¾¡ý
À¡÷ì¸Ïõ... ¬É¡, ¿¡ý ¦Ã¢¨Äô À¡÷ò¾§¾ þø§Ä ¾¡ò¾¡... «Ð측¸ò¾¡ý Å÷§Ãý.
«§¾¡¼ ¸ñÏ ¦¾Ã¢Â¡¾ ¿£ þÕð椀 ¸.¼ôÀÎÅ¢§Â, ¯ÉìÌõ ¦¾¡¨½Â¡
þÕì¸Ä¡õÛ¾¡ý Å÷§Ãý..."
-¾õ¨À¡ §ÀÍõ ´ù¦Å¡Õ ºÁÂÓõ ¸¢ÆÅÕìÌ «ÅýÁ£Ð ¯ñ¼¡É «ýÀ¢ý À¢ÊôÒ
ÅÖ×üÈÐ...
«ó¾ ¦¿Ê º¡¨Ä¢ø þÃñÎ ¨Áø àÃõ ¿¼ó¾ À¢ý, âø ÅÕžüÌ ´Õ Á½¢
§¿Ãò¾¢üÌ ÓýÀ¡¸§Å, þÕû Å¢ÄÌžüÌûÇ¡¸, «Å÷¸û þÕÅÕõ «ó¾î º¢È¢Â
âø§Å .§¼.¨É Å󾨼ó¾É÷.
«Å÷¸û Åó¾ §¿Ãò¾¢ø âø§Å .§¼.É¢ø ´Õ .£Åý þø¨Ä. ’§.¡’ ¦ÅýÈ ¾É¢¨ÁÔõ,
ÀÉ¢ ¸Å¢ó¾ Å¢ÊÂü¸¡¨Ä þÕÙõ, þÐŨà À¡÷ò¾¢Ã¡¾ «ó¾ô À¢Ã§¾ºÓõ ¾õ¨À¡×ìÌ
ÁÉòÐû ´Õ ¾¢¸¢¨Äì ¸¢ÇôÀ¢üÚ. «Åý ¾¡ò¾¡Å¢ý ¨¸¸¨Ç þÚ¸ô ÀüÈ¢ì ¦¸¡ñ¼¡ý.
«Å÷¸û þÕÅÕõ .§¼.ÛìÌû ¸¢¼ó¾ ´Õ ¦Àﺢý Á£Ð ÓÆí¸¡ø¸¨Çì
¸ðÊ즸¡ñÎ «Á÷ó¾É÷. ¸¢ÆÅ÷ ÌÇ¢ÕìÌ þ¾Á¡ö þÎôÒ §Åðʨ «Å¢úòÐ ¯¼ø
ÓØÅÐõ §À¡÷ò¾¢ì ¦¸¡ñ¼¡÷. ºð¨¼Â¢øÄ¡¾ ¯¼õÒ ±ùÅÇ× §¿Ãõ ÌÇ¢¨Ãò ¾¡íÌõ?
¦ÅÌ §¿ÃòÐìÌô À¢ý §À¡÷ð¼÷ ÅóÐ Á½¢ÂÊò¾¡ý.
¾¢Ë¦ÃýÚ Á½¢§Â¡¨º §¸ðÎò ¾¢Î츢ð¼¡ý ¾õ¨À¡. ¸¢ÆÅ÷ º¢Ã¢òÐì ¦¸¡ñ§¼,
"«Îò¾ §¼ºý§ÄÕóÐ ÅñÊ ¦À¡ÈôÀðÎÎòÐ. Å¡, «í§¸ §À¡¸Ä¡õ" ±ýÚ
¾õ¨À¡¨Å «¨ÆòÐ즸¡ñÎ À¢Ç¡ðÀ¡ÃòÐìÌ Åó¾¡÷. «Å÷¸ÙìÌ ÓýÀ¡¸, «í§¸
ãýÚ ¿¡ýÌ ¸¢Ã¡ÁòÐô À¢Ã¡½¢¸û ¿¢ýÈ¢Õó¾É÷.
þô§À¡Ð ÀÉ¢¨Âò ¾Å¢Ã, þÕû ÓüÈ¡¸§Å Ţĸ¢Å¢ð¼Ð. ¸¢ÆÅ÷ Àì¸ò¾¢Ä¢ÕìÌõ
ÁÉ¢¾÷¸Ç¢ý Ó¸ò¨¾ ¯üÚì ¸ÅÉ¢òÐ §À¡÷ð¼Ã¢¼õ "ÅñÊ þí§¸ ±õÁ¡ ¿¡Æ¢ ¿¢üÌõ?"
±ýÚ §¸ð¼¡÷.
"þýÉ¡, ´Õ ¿¢Á¢ºõ, þøÄ¡ðÊ ´ýɨà ¿¢Á¢ºõ" ±ýÚ À¾¢ÄÇ¢ò¾¡ý §À¡÷ð¼÷.
".£õ... þó¾ò ¾¼¨Å ¿ÁìÌì ¦¸¨¼îº¢Ð ´ýɨà ¿¢Á¢ºõ¾¡ý" ±ýÚ ±ñ½¢Â ¦ÀâÂ
§¸¡É¡ÕìÌ ÅÕ.õ âá×õ À¡Ò§Å¡Î ¦¸¡ïºô §À¡Ìõ «ó¾ Ó¸õ ¦¾Ã¢Â¡¾ º÷¾¡÷
¸¢ÆÅÉ¢ý »¡À¸õ Åó¾Ð. "º£º£! þÐìÌô §À¡Â¢ ¦À¡È¡¨Áô À¼Ä¡Á¡?... À¡Åõ, «ó¾
º÷¾¡÷ ¸¢ÆÅý. ¿õ¨Á Á¡¾¢Ã¢ ±ó¾ °Ã¢§Ä ¾ý §ÀÃ¨É Å¢ðÎðÎ ÅóÐ ¿õÀ À¡Ò¨Åì
¦¸¡ïº¢ ¾¢Õô¾¢ô À¼È¡§É¡" ±ýÚ Ó¾ø Өȡ¸î º¢ó¾¢òÐô À¡÷ò¾¡÷ ¦ÀâÂ
§¸¡É¡÷. -«ô§À¡Ð ÀÉ¢ô À¼Äò¨¾ °ÎÕÅ¢ì ¦¸¡ñÎ àÃò¾¢Ä¢ÕóÐ ´Ç¢ì ¸¾¢÷¸û
¸¢ÆÅâý ¸ñ¸Ç¢ø Å£º¢É.
"§¼... ¾õ¨À¡! ÅñÊ ÅóÐðÎÐ... ¿£ «ó¾ì ¸¨¼º¢Â¢§Ä §À¡Â¢ ¿¢øÖ. ÅñÊ
Åó¾×¼§É ´ù¦Å¡Õ ¦À¡ðÊ¡ À¡÷òÐ츢𧼠µÊ¡... ¿¡ þí§¸ÕóÐ þﺢý
ŨÃìÌõ µÊô À¡÷츢§Èý. «í§¸§Â «×í¸ þÕó¾¡ ±ý¨Éì ÜôÀ¢Î..." ±ýÚ
¦º¡øÄ¢ì ¦¸¡ñÊÕìÌõ§À¡§¾, §Àâ¨ÃġΠâø ÅóÐ ¿¢ýÈÐ.
¸¢ÆÅ÷ "À¡â...À¡â..." ¦ÅýÚ ´ù¦Å¡Õ ¦ÀðÊÂÕ¸¢Öõ ¿¢ýÚ ÜÅ¢ÂÅ¡Ú þﺢýŨÃ
µÊÉ¡÷. ¾õ¨À¡ þý¦É¡Õ §¸¡Ê¢ø "ºÅ¡¾¢ Á¡Á¡ù...Á£É¡ Á¡Á£...À¡Ò" ±ýÚ ÜÅ¢ì
¦¸¡ñ§¼ µÊÅó¾¡ý. ±øÄ¡ô ¦ÀðʸǢý .ýÉø ¸¾×¸Ùõ ÌÇ¢Õ측¸ «¨¼ì¸ô
ÀðÊÕó¾É...
"À¡â...À¡â" ±ýÈ ¾Å¢ôÒì ÌÃÖ¼ý ¸¢ÆÅ÷ þﺢýŨà µÊ ÅóРŢð¼¡÷. «ÅÕ¨¼Â
À¡Ò¨Å «Å÷ ¸¡½Å¢ø¨Ä. «Åý ±ó¾ô ¦ÀðÊ¢ø ͸Á¡¸ò àí¸¢ì
¦¸¡ñÊÕ츢ȡ§É¡?
-þó¾ô Àɢ¢Öõ ÌǢâÖõ, À¡ºõ ±ýÈ ¦¿ÕôÀ¢ø ÌÇ¢÷ ¸¡öóÐ ¦¸¡ñÎ, ´Õ ÌÕðÎì
¸¢ÆÅý ¾É측¸ ÅóÐ ¿¢üÀ¡ý ±ýÚ «ÅÛìÌò ¦¾Ã¢ÔÁ¡?
ÅñÊ ÒÈôÀΞü¸¡¸ Ó¾øÁ½¢ «ÊòРŢð¼Ð.
´Õ ¿¢Á¢.õ ¾ÉÐ ÌÕðΠŢƢ¸Ç¡ø ¾ý À¡Ò¨Åì ¸¡½×õ, ´Õ ¾¼¨Å «ó¾ô À¢ïÍ
Å¢Ãø¸¨Ç .À⺢òÐ þýÀÁ¨¼Â×õ, þó¾ò ¾¼¨Å ¾ÉìÌì ¦¸¡ÎòÐ ¨Åì¸ Å¢ø¨Ä
±ýÚ ¿¢¨Éò¾ Á¡ò¾¢Ãò¾¢ø, «ó¾ ²Á¡üÈò¨¾ò ¾¡í¸ ÓÊ¡Áø, ¸¢ÆÅâý ¸ñ¸û
¸Äí¸¢É. âø ÓØÅÐõ ¸ò¾¢ô À¡÷òÐÅ¢ðÎ µÊÅó¾ ¾õ¨À¡, â¨Äô À¡÷ò¾
Á¸¢ú¨ÂÔõ ÐÈóÐ, ¸¢ÆÅâý ¨¸¨Âô À¢ÊòÐì ¦¸¡ñÎ À⾡ÀÁ¡ö ¿¢ýÈ¡ý.
¸¢ÆÅ÷ Å¡Éò¨¾ô À¡÷ò¾Å¡Ú "À¡â" ¦ÅýÚ ºüÚ ¯Ãò¾ ÌÃÄ¢ø ¯½÷ źôÀðÎì
ÜŢŢð¼¡÷. «ô§À¡Ð þﺢÛìÌô Àì¸ò¾¢Ä¢ÕóÐ µ÷ þÃñ¼¡õ ÅÌôÒô ¦ÀðÊ¢ý
¾¢Èó¾ .ýÉĢĢÕóÐ µ÷ «Æ¸¢Â ÌÆó¨¾ Ó¸õ ±ðÊô À¡÷òÐô ¦Àâ §¸¡É¡¨Ãò
"¾¡¾¡" ¦ÅýÚ «¨Æò¾Ð.
«ó¾ô ¦ÀðÊ À¢Ç¡ðÀ¡Ãò¨¾ò ¾¡ñÊ þÕ󾾡ø, ¸¢ÆÅ÷ ¬Éó¾õ §ÁÄ¢ð¼Åáöì
¸£§Æ þÈí¸¢ µÊ ÅóÐ, «ó¾ì ÌÆó¨¾Â¢¼õ Óó¾¢Ã¢ô ÀÕôÒ ¼ôÀ¢¨Â ¿£ðÊÉ¡÷.
"¨¿ §.¡É¡, ¨¿" ±ýÚ ÌÆó¨¾ «¨¾ô ¦ÀÈ ÁÚòÐì ¨¸¸¨Ç ¬ðÊÉ¡ý. ¸¢ÆÅ§Ã¡Î
µÊ Åó¾ ¾õ¨À¡, ¦ÀðÊ Á¢¸×õ ¯ÂÃò¾¢ø þÕó¾ÀÊ¡ø, ÌÆó¨¾Â¢ý Ó¸ò¨¾ô
À¡÷ì¸ ÓÊ¡Áø "À¡Ò À¡Ò" ±ýÚ «¨ÆòÐ ±õÀ¢ ±õÀ¢ì ̾¢ò¾¡ý.
¸¢ÆÅ÷ ¼ôÀ¢¨Âò ¾¢ÈóÐ "¯ÉìÌô À¢Êì̧Á Óó¾¢Ã¢ô ÀÕôÒ" ±ýÚ ¾¢ÈóÐ ¸¡ðÊÉ¡÷.
ÌÆó¨¾ Óó¾¢Ã¢ô ÀÕô¨Àì ¸ñ¼Ðõ ¼ôÀ¢Â¢ø ¨¸Å¢ðÎ «ûǢɡý.
"±øÄ¡õ ¯ÉìÌò¾¡ý" ±ýÚ ¼ôÀ¢¨Â «ÅÉ¢¼õ ¦¸¡Îò¾¡÷ ¸¢ÆÅ÷.
«ô¦À¡ØÐ, ÅñÊìÌûÇ¢ÕóÐ Ó측Êð¼ .àÄ ºÃ£ÃÁ¡É ´Õ ż¿¡ðÎô ¦Àñ½¢ý
Ó¸õ "§¸¡ý¨." ±ýÈÅ¡Ú ¦ÅÇ¢ôÀð¼Ð. ¸¢ÆÅ¨ÉÔõ ÌÆó¨¾¨ÂÔõ À¡÷ò¾§À¡Ð
¡§Ã¡ ¸¢ÆÅý ¾ý ÌÆó¨¾ìÌ «ýÒ¼ý ¾ó¾¢Õ츢ȡý ±ýÈ ¿ýÈ¢ ¯½÷Å¢ø «Åû
ÒýÓÚÅø âò¾¡û.
þÃñ¼¡ÅÐ Á½¢Ôõ ´Ä¢ò¾Ð. þﺢý ܦÅýÚ ÜÅ¢ô ÒÈôÀ¼ ¬Âò¾ô ÀΨ¸Â¢ø-
«ó¾ ż¿¡ðÎò ¾¡ö ¾ý ÌÆó¨¾Â¢¼õ ¦º¡ýÉ¡û: "¾¡¾¡§¸¡ ¿Á.§¾¸§Ã¡ §Àð¼¡."
ÌÆó¨¾ ¸¢ÆÅ¨Ãô À¡÷òÐ "¿Á.§¾ ¾¡¾¡.¢" ±ýÚ Å½í¸¢É¡ý. ¸¢ÆÅÕõ À¡ºò¾¡ø,
À¢Ã¢×½÷Å¡ø ¿ÎíÌõ ¨¸¸¨Çì ÌÅ¢òÐ «ÅÛìÌô ÒâÔõÀÊ "¿Á.§¾ À¡Ò" ±ýÚ
Å½í¸¢É¡÷. «ô§À¡Ð ÅñÊ ¿¸÷ó¾Ð. ÅñÊ ¿¸÷ó¾§À¡Ð ¾¡ý, «ÅÕìÌò ¾¢Ë¦ÃýÚ
¿¢¨É× Åà þÎôÀ¢Ä¢Õó¾ ´Õ åÀ¡ö ¿¡½Âò¨¾ «ÅºÃ «ÅºÃÁ¡ö ±ÎòÐì
¦¸¡ñ§¼¡Ê, ÌÆó¨¾Â¢¼õ ¿£ðÊÉ¡÷... «¨¾ì ¸ñ¼ «ó¾ ż¿¡ðÎô ¦ÀñÁ½¢ìÌ
±í§¸¡ àÃò¾¢ø À¢Ã¢ó¾¢ÕìÌõ ¾ý ¸¢Æò¾ó¨¾Â¢ý ¿¢¨É× Åó¾§¾¡?... «Åû ¸ñ¸û
¸Äí¸¢É. ¸Äí¸¢Â ¸ñ¸Ù¼ý ¾ý Á¸É¢¼õ ¸¢ÆÅ÷ ¾Õõ åÀ¡¨Â Å¡í¸¢ì ¦¸¡ûÙõÀÊ
.¢ó¾¢Â¢ø ÜȢɡû. º¢ÚÅÛõ «¨¾ô ¦ÀüÚì ¦¸¡ñÎ, ¸¢ÆÅ¨Ã §¿¡ì¸¢ì ¸Ãõ
«¨ºò¾¡ý. ÅñÊ Å¢¨Ãó¾Ð.
"ºÀ¡À¾¢ àí¸È¡É¡ Á£É¡? ±Øó¾Ðõ ¦º¡øÖ" ±ýÚ ¸¢ÆÅ÷ ÜÈ¢ÂÐ «Å÷¸û ¸¡¾¢ø
Å¢Øó¾¢Õ측Ð.
ÅñÊ Á¨ÈÔõ Ũà ¾õ¨À¡×õ ¸¢ÆÅÕõ À¢Ç¡ðÀ¡Ãò¾¢ø ¿¢ýÈ¢Õó¾É÷. ¸¢ÆÅ÷,
¸ñ¸Ç¢ø ÅÆ¢ó¾ ¸ñ½£¨Ãò Ш¼òРŢðÎì ¦¸¡ñÎ, ´Õ ¿¢õÁ¾¢ ¯½÷Å¢ø º¢Ã¢ò¾¡÷.
"«Îò¾ ¾¼¨Å À¡Ò ÅÕõ §À¡Ð ¿¡ý þÕ째§É¡, ¦ºòÐô §À¡Â¢¼§È§É¡" ±ýÚ
ÅÆì¸õ §À¡ø ¿¢¨ÉòÐì ¦¸¡ñ¼¡÷. ¾õ¨À¡ ÐõÁ¢É¡ý.
"þ¦¾ýÉ, «ÀºÌÉõ Á¡¾¢Ã¢ò ÐõÓ¸¢È¡§É" ±ýÚ ¸¢ÆÅ÷ «Å¨Éô À¡÷ò¾§À¡Ð,
¾õ¨À¡ þÃñ¼¡ÅÐ Ó¨ÈÔõ ÐõÁ¢ ÍÀ ºÌÉÁ¡ì¸¢É¡ý...
¾õ¨À¡¨Åì ¸¢ÆÅ÷ Á¡÷ÒÈò ¾ØÅ¢ì ¦¸¡ñ¼¡÷. þÉ¢§Áø À¾¢§É¡Õ Á¡¾í¸ÙìÌ
«Åý¾¡§É «ÅÕìÌò Ш½!...
------------------------
(±Ø¾ôÀð¼ ¸¡Äõ: ¬¸.ð 1962)
¿ýÈ¢: Ô¸ºó¾¢ (º¢Ú¸¨¾ò ¦¾¡ÌôÒ), ¦.¸¡ó¾ý - ´ýÀ¾¡õ À¾¢ôÒ: 1999 - Á£É¡ðº¢
முன் அனுப்பிய இருகதைகளும் சரிவரத் தெரியாவிட்டால் குறிப்பிடவும். மீண்டும் தட்டச்சி அனுப்பி வைக்கின்றேன்.
சிரமத்திற்கு மன்னிக்க....
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
<p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; line-h
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
சித்தார்த், ஒருங்குறியில எப்படி மாத்தனீங்க. உங்க மடலுக்கு ஜெயகாந்தனின் கதையை அனுப்பி வைச்சிருக்கேன்.2010/4/12 Siddharth Venkatesan <neota...@gmail.com>
சென்ஷி... முன் நிலவும் பின் பனியும் கதையின் பகுதி தான் இங்கு உள்ளது. ”எதிரே” என்பதோடு நிற்கிறது.
11 ஏப்ரல், 2010 6:48 pm அன்று, சென்ஷி <senshe...@gmail.com> எழுதியது:
1
உடனே அடையாளம் கண்டு விட்டான். சந்தேகமில்லாமல்; இவன் கேட்ட அதே குரல்; அதே சிரிப்பு. வியாபாரம் ஆனாலும் ஆகாவிட்டாலும் சலிப்பில்லாத அதே பேச்சு. ஆவுடத்தங்க மதினியா.
சாத்தூர் ரயிலடியில் வெள்ளரிக்காய் விக்கிறவனை சேர்த்துக் கொண்டு ஓடி வந்தவளென்று கேள்விப்பட்டிருந்த நம்மூர் மதினியா இப்படி மாறிப் போனாள். என்ன வந்தது இவளுக்கு. இத்து நரம்பாகிப் போனாளே இப்படி.
இவளைக் காணவும்தான் பழசெல்லாம் அலைபாய்ந்து வருகிறது. பிரிந்து போனவர்களெல்லாம் என்ன ஆனார்கள். அவர்களெல்லாம் எங்கே போய் விட்டார்கள். பிரியத்துக்குரியவர்களையெல்லாம் திரும்பவும் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியதாயிருக்கிறது. எங்கே அவர்களை?
அவன் வந்த ரயில் இன்னும் புகை விட்டபடி புறப்படத் தயாராய் – ஜன்னலோரம் போய் நின்று பூக்கொடுக்கிற, நஞ்சி நறுங்கிப் போன ஆவுடத்தங்க மதினியைப் பார்த்தான். கூடை நிறையப் பூப்பந்தங்களோடு வந்திருந்தாள். பூ வாடாமலிருக்க ஈரத்துணியால் சுற்றியிருந்தாள் அதை.
நம்மூரிலிருந்து கொண்டுவந்த சிரிப்பு இன்னும் மாறாமலிருந்தது அவளிடம். ஒவ்வொரு தாய்மாரிடமும் முழம் போட்டு அளந்து கொடுக்கிறாள். கழுத்தில் தொங்கும் தாலிக்கயறும், நெற்றியில் வேர்வையோடு கரைந்து வடியும் கலங்கிய நிலா வட்டப் பொட்டுமாக அவளைப் பார்த்தான். தானே அசைகிற ஈர உதட்டில் இன்னும் உயிர் வாடாமல் நின்றது.
கண்ணுக்கடியில் விளிம்புகளில் தோல் கறுத்து இத்தனைக் காலம் பிரிவை உணர்த்தியது. வருத்தமுற்று ஏங்கிப் பெருமூச்சு விட்டான். அவளை எப்படியாவது கண்டு பேசி விட நினைத்தான். அதற்குள் இவனைத் தள்ளிக் கொண்டுபோன கூட்டத்தோடு வாசல்வரை வந்து; திரும்பவும் எதிர்நீச்சல் போட்டு முண்டித் தள்ளி உள்ளே வருமுன் விடைபெற்றுச் செல்லும் ரயிலுக்குள் இருந்தாள். பெரிய ஊதலோடு போய்க் கொண்டிருந்தது ரயில்.
மூடிக் கிடந்த ஞாபகத்தின் ஒவ்வொரு கதவையும் தட்டித் திறந்து விட்ட ஆவுடத்தங்க மதினி மீண்டும் கண்ணெதிரில் நின்றாள். அதே உதடசையாச் சிரிப்புடன், பழையதெல்லாம் ஒவ்வொன்றாய்ப் புது ஒளியுடன் கண்ணெதிரே தோன்றியது. ஆச்சரியத்தால் தோள்பட்டைகளை உலுக்கிக் கொண்டு நடந்தான்.
பஸ் ஸ்டாண்டுக்குள் நின்றிருந்த தகர டப்பா பஸ்ஸைப் பார்த்தான். 'நென்மேனி மேட்டுப்பட்டி' க்கு என்று எழுதியிருந்த போர்டைத் திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டு சந்தோஷப்பட்டான். இப்போது சொந்த ஊருக்கே பஸ் போகும்.
பஸ்ஸில் ஏறிக்கொண்டிருக்கும் எல்லாருக்கும் கையெடுத்து வணக்கம் சொல்லணும் போல இருந்தது. யாராவது ஊர்க்காரர்கள் ஏறியிருக்கிறார்களா என்று கழுத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டான். தெரிந்த முகமே இல்லாமல் எல்லாமே வேத்து முகங்கள். எல்லாரும் இடைவெளியில் இறங்கி விடக் கூடியவர்களாக இருக்கும்.
பஸ் புறப்பட்டது. ஒரே சீரானச் சத்தத்துடன் குலுங்கா நடையுடன் நகர்ந்து கொண்டிருந்தது பஸ். மதிப்பு மிகுந்தவற்றை எல்லாம் நினைவுப்படுத்திக் கொள்ளும் இசையென சத்தம் வரும். காற்று கூட சொந்தமானதாய் வீசும், சட்டையின் மேல் பட்டன்களை எல்லாம் கழட்டி விடவும் பனியனில்லாத உடம்புக்குள் புகுந்து அணைத்துக்கொண்ட காற்றோடு கிசுகிசுத்தான். ஜன்னலுக்கு வெளியில் பஜாரில் யாராவது தட்டுப்படுகிறார்களா என்று முழித்து முழித்துப் பார்த்துக் கொண்டே வந்தான். திரும்பவும் ரயில்பாதை வந்தது. வெறுமனே ஆளற்றுக் கிடந்த ஸ்டேஷனில் சிமெண்டு போட்ட ஆசனங்கள் பரிதாபத்துடன் உட்கார்ந்து கொண்டிருந்தன. ரயில்வே கேட்டைக் கடந்து வண்டி மேற்காகத் திரும்பி சாத்தூரின் கடைசி எல்லையில் நின்றது. அங்கொரு வீட்டில் யாரோ செத்துப் போனதற்காகக் கூடி ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார்கள். பஸ்ஸில் வந்த பெண்கள் இங்கிருந்து அழுது கொண்டே படியிறங்கிப் போகவும் பஸ் அரண்டு போய் நின்றது.
செத்த வீட்டு மேளக்காரர்கள் மாறி மாறித் தட்டும் ரண்டாங்கு மேளத்துடன் உள்ளடங்கி வரும் துக்கத்தை உணர்ந்தான். முதிர்ந்த வயதுடைய பெரியாள் உருமியைத் தேய்க்கிற தேய்ப்பில் வருகிற அமுத்தலான ஊமைக் குரல் அடிநெஞ்சுக்குள் இறங்கி விம்மியது. அந்த இசைஞர்கள் ஒட்டுமொத்த துக்கத்தின் சாரத்தைப் பிழிந்து கொண்டிருப்பதாய் உணர்ந்தான். யாராலும் தீர்க்க முடியாத கஷ்டங்களையெல்லாம் அடிவயிற்றிலிருந்து எடுத்து ஊதிக் கொண்டிருந்த நாயனக்காரரின் ஊதல், போகிற பஸ்ஸோடு வெளியில் வந்து கொண்டிருந்தது.
என்றோ செத்துப்போன பாட்டியின் கடைசி யாத்திரை நாள் நினைவுக்கு வந்தது. மயானக்கரையில் தன் மீசை கிருதாவை இழந்த தோற்றத்தில் மொட்டைத் தலையுடன் இவனது அய்யா வந்து நின்றார்.
இவனைப் பெத்த அம்மாவைப் பிரசவத்துடன் வந்த ஜன்னி கொண்டுபோய் விட்டதும் நாலாவதாகப் பிறந்த பிள்ளை நிலைக்க வேண்டும் என்பதற்காக இவன் மூக்கில் மந்திரித்துப் போடப்பட்டிருந்த செம்புக் கம்பிதான் மூக்கோரத்தில் இருந்துகொண்டு 'எம்மா…. எம்மா…….' என்றது. அம்மா இல்லாவிட்டாலும் தெக்குத் தெரு இருந்தது. மேலெழும்பும் புழுதி கிடந்தது அங்கு. புழுதி மடியில் புரண்டு விளையாட, ஓடிப் பிடிக்க, ஏசிப்பேசி மல்லுக்கு நிற்க, தெக்குத் தெரு இருக்கும். எல்லாத்துக்கும் மேலாக இவன் மேல் உசுரையும் பாசத்தையும் சுரந்து கொண்டிருக்க மதினிமார் இருந்தார்களே. வீட்டுக்கு வீடு வாசல்படியில் நின்றுகொண்டு இவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருக்கும் சமைஞ்ச குமரெல்லாம் 'செம்புகோம்…. செம்புகோம்….' என்று மூச்சுவிட்டுக் கொண்டார்களே!
பல ஜாதிக்காரர்களும் நிறைந்த தெக்குத் தெருவில் அன்னியோன்யமாக இருந்தவர்களை எல்லாம் நினைவு கூர்ந்தான்.
தனிக்கட்டையான தன் அய்யா கிட்ணத்தேவர் திரும்பவும் மீசை முளைத்துக் கிருதாவுடன் இவன் முன் தோன்றினார்.
'அடேய் …. செம்புகோம் ….. ஏலேய்…..' என்று ஊர் வாசலில் நின்று கூப்பிடும்போது இவன் 'ஓய் … ஓய் ….' என்ற பதில் குரல் கொடுத்தபடி கம்மாய்க்கு அடியில் விளிம்போரம் உட்கார்ந்து மீன் பிடித்துக் கொண்டிருந்தான். தூண்டிலை எடுத்து அலையின் மேல் போடுவான். மீனிருக்கும் இடமறிந்து மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டே அத்தம்வரை போவான்.
பண்டார வீட்டு மதினிமார்களெல்லாம் மஞ்ச மசால் அரைத்து வைத்து ரெடியாகக் காத்திருப்பார்கள். 'கொழுந்தன் வருகிறாரா ….' என்று அடிக்கொருதரம் குட்டக்கத்திரிக்கா மதினியைத் தூதனுப்பித் தகவல் கேட்டுக் கொள்வார்கள். தண்ணிக்குள் நீந்தித் திரியும் மீனாக இவன் தெருவெல்லாம் சமைஞ்சு நிற்கும் மதினிமார் பிரியத்தில் நீந்திச் சென்றான். ஒரு மீனைக் கண்டதுபோல எல்லாரும் சந்தோஷப்பட்டார்கள்.
கீகாட்டுக்கறுப்பாய் 'கரேர் ….' ரென்ற கறுப்பு ஒட்டிக் கொள்ள 'அய்யோ … மயினீ ….. கிட்ட வராதே…… வராதே …..' என்று சுப்பு மதினியை விட்டுத் தப்பி ஓடினான். பனையேறி நாடார் வீட்டு சுப்பு மதினிக்கும், பொஷ்பத்துக்கும் இவன் மேல் கொள்ளைப் பிரியம். 'நாங்க ரெண்டு பேருமே செம்புகத்தையே கட்டிக் கிடப் போறோம் ……' என்று ஒத்தைக் காலில் நின்று முரண்டு பண்ணுவதைப் பார்த்து இவன், நிசத்துக்கே அழுதபடி, 'மாட்டேம்…. மாட்டேம்….. மாட்டம் போ.' என்று தூக்கி எறிந்து பேசினான். உடனே அவர்கள் ஜோடிக் குரலில் 'கலகலகல ….' வெனச் சிரித்து விடவும் ஓட்டமாய் ஓடி மறைவான் செம்பகம்.
குச்சியாய் வளர்ந்திருக்கும் சுப்பு மதினியும், ரெட்டச் சடைப் பொஷ்பமும் ஒவ்வோர் அந்தியிலும் பனங்கிழங்கு, நொங்கு, தவுண், பனம்பழம் என்று பனையிலிருந்து பிறக்கிற பண்டங்களோடு காத்திருப்பார்கள். இவனுக்காக, இவனைக் காணாவிட்டால் கொட்டானில் எடுத்துக் கொண்டு தேட ஆரம்பித்து விடுவாள் ரெட்டச்சடை புஷ்பம்.
பனையேறிச் சேருமுக நாடார் வீட்டுக்குக் கள்ளுக் குடிக்கப் போகும் அய்யாவுக்கும் ரெட்டச்சடைக்கும் ஏழாம்பொருத்தமாய் என்னேரமும் சண்டதான். அவளை மண்டையில் கொட்டவும், சடையைப் பிடித்து இழுக்கவும் "இந்த வயசிலும் கிட்ணத்தேவருக்க நட்டனை போகலே…." என்று சேருமுக நாடார் சிரித்துக் கொள்வார். 'ஓய்…..மருமோனே' என்ற கீகாட்டுப் பேச்சில் 'தாப்பனும் மோனும் பனையேறிமோளை கொண்டு போயிருவீயளோ. சோத்துக்கு எங்க போட்டும் நா … மடத்துக்கு போயிறவா' என்று கள்ளு நுரை மீசையில் தெறிக்கப் பேசுவார் நாடாரு. இதைக் கேட்ட அய்யாவுக்குக் 'கெக்கெக்கே …' என்று சிரிப்பு வரும் வெகுளியாய்.
ஊர் ஊருக்குக் கிணறு வெட்டப்போகும் இவன் அய்யாவும், தெக்குத் தெரு எளவட்டங்களும் கோழி கூப்பிடவே மம்பட்டி, சம்பட்டி, கடப்பாறை, ஆப்புகளோடு போய்விடுவார்கள். சுத்துப்பட்டி சம்சாரிமார்கள், கிட்ணத்தேவன் தோண்டிக் கொடுத்த கிணத்துத் தண்ணீரில் பயிர் வளர்த்தார்கள்.
அய்யா கிணத்து வேலைக்குப் போகவும் தெருத் தெருவாய் சட்டிப் பானைகளை உருட்டித் தின்பதற்கு ஊரின் செல்லப் பிள்ளையாய் மதினிமார் இவனைத் தத்தெடுத்திருந்தார்கள். இவனுக்கு 'ஓசிக்கஞ்சீ ….' 'சட்டிப் பானை உருட்டீ….' 'புது மாப்ளே …' என்ற பட்டங்களுண்டு. ராத்திரி நேரங்களில் எடுக்கிற நடுச்சாமப் பசிக்கு யார் வீட்டிலும் கூசாமல் நுழையும் அடுப்படிப் பூனையாகி விடுவான். இவன் டவுசர், சட்டை, மொளங்கால் முட்டில் அடுப்புக்கரி ஒட்டியிருக்கும்.
தெருமடத்தில் குடியிருக்கும் மாடசாமித் தேவரோடு சரிசமமாய் இருந்து வெத்தலை போட்டுக் கொண்டு தெருத் தெருவாய் 'புரிச்சு … புரிச் …' என்று துப்பிக் கொண்டே போய்ப் பண்டார வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொள்வான்.
'மாப்ளைச் சோறு போடுங்கத்தா …. தாய்மாருகளா…..' என்றதும் கம்மங் கஞ்சியைக் கரைத்து வைத்து 'சாப்பிட வாங்க மாப்பிளே ….' என்று சுட்ட கருவாட்டுடன் முன் வைப்பார்கள்.
நாளைக்குக் கல்யாணமாகிப் போற காளியம்மா மதினி கூட வளையல் குலுங்க இவன் கன்னத்தைக் கிள்ளி விட்டு ஏச்சங்காட்டுவாள். இந்தக் காளியம்மா மதினிக்குச் சிறுசில் இவனைத் தூக்கி வளர்த்த பெருமைக்காக இவன் குண்டிச் சிரங்கெல்லாம் அவள் இடுப்புக்குப் பரவி அவளும் சிரங்கு பத்தியாய் தண்ணிக்குடம் பிடிக்க முடியாமல் இடுப்பைக் கோணிக்கோணி நடந்து போனாள். இப்போதும் சிரங்குத் தடம் அவள் இடுப்பில் இருக்கும்.
'செம்புகோம்…. செம்புகோம்.. செம்புக மச்சானுக்கு வாக்கப்படப் போறேன் … பாரேன்…..' என்று முகத்துக்கு நேராக 'பளீ' ரென்ற வெத்தலைக் காவிப் பல் சிரிக்கக் காளியம்மா மதினியின் சின்னையா மகள் குட்டக் கத்திரிக்கா திங்கு திங்கென்று குதித்துக்கொண்டே கூத்துக் காட்டுவாள்.
'அட போட்டீ… குட்டச்சீ' என்று முணுமுணுத்தபடி இவன் மூக்குக்கு மேலே கோபம் வரும். அவள் உடனே அழுது விடுவாள். 'மயினி ….. மயினி….. அழுவாத மயினீ ……' 'உம் …' மென்று முகங்கோணி நிற்கும் குட்டக்கத்திரிக்காவைச் சமாதானப்படுத்த கடைசியில் இவன் கிச்சனங்காட்டவும்தான் அவள் உதட்டிலிருந்து முத்து உதிரும், சிரிப்பு வரும்.
வாணியச் செட்டியார் வீட்டு அமராவதி மதினி அரச்ச மஞ்சளாய்க் கண்ணுக்குக் குளிர்ச்சியான தோற்றத்துடன் பண்டார வீட்டுத் திண்ணைக்கு வருவாள். அவளைக் கண்டதுமே கூனிக் குறுகி வெட்கப்பட்டுப்போய் குருவு மதினி முதுகுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு சிரிப்பான் செம்பகம். மேட்டுப்பட்டி நந்தவனத்தில் பூக்கிற ஒவ்வொரு பூவும் அமராவதி மதினி மாதிரி அழகானது.
தாவாரத்தில் இருந்து கொண்டே என்னேரமும் பூக்கட்டும் குருவு மதினி, அமராவதிக்கென்றே தனீப்பின்னல் போட்டு முடிந்து வைத்திருக்கும் பூப்பந்தை விலையில்லாமலே கொடுத்து விடுவாள். குருவு மதினிக்கும், அமராவதி மதினிக்கும் கொழுந்தப் புள்ளை மேல் தீராத அக்கறை.அவன் குளித்தானா சாப்பிட்டானா என்பதிலெல்லாம். ஊத்தைப் பல்லோடு தீவனம் தின்றால் காதைப் பிடித்துத் திருகி விடுவாள் அமராவதி மதினி. கண்டிப்பான இவளது அன்புக்குப் பணிந்த பிள்ளையாய் நடந்துகொண்டான் செம்பகம்.
இவனது எல்லாச் சேட்டைகளையும் மன்னித்து விட குருவு மதினியால்தான் முடியும். எளிய பண்டார மகளின் நேசத்தில் இவன் உயிரையே வைத்திருந்தான். சுத்துப்பட்டிக்கெல்லாம் அவளோடு பூ விக்கப் போனான். காடுகளெங்கும் செல்லங்கொஞ்சிப் பேசிக் கொண்டார்கள் இருவரும். இவன் வெறும் வீட்டு செல்லப் பிள்ளையானான்.
குருவு மதினியின் அய்யாவுக்குக் காசம் வந்து வீட்டுக்குள்ளேயே இருமிக்கொண்டு கிடந்தார். அவரைக் கூட்டிக்கொண்டு போய் ஆசாரிப் பள்ளத்தில் சேர்ப்பதற்காக ராப்பகலாய்ப் பூக்கட்டினாள். அவளுக்கு நார் கிழித்துக் கொடுத்து ஒவ்வொரு பூவாய் எடுத்துக் கொடுக்க; அவள் சேர்ப்பதை, விரல்கள் மந்திரமாய்ப் பின்னுவதைப் பார்த்துக் கொண்டே பசிக்கும்வரை காத்திருப்பான். பசித்ததும் மூஞ்சியைக் குராவிக் கொண்டு கொறச்சாலம் போடுவான்.
'இந்தா வந்துட்டன் இந்தா வந்துட்டன்' என்று எழுந்து வந்து பரிமாறுவாள் குருவு மதினி.
சீக்காளி அய்யாவைக் கூட்டிக் கொண்டு போகவேண்டிய நாள் வந்ததும் இவனையும் ஆசாரிப் பள்ளத்துக்குக் கூட்டிக்கொண்டு போனாள். 'வரும்போது ரெண்டு பேரும் பொண்ணு மாப்ளையா வாங்க….! ' என்று எல்லாரும் கேலி பண்ணிச் சிரித்து அனுப்பினார்கள். மலையாளத்துக்குக் கிட்டெயே இருக்கும் அந்த ஊரில் நாலு மாசம் மதினியோடு இருந்தான். அப்பவெல்லாம் இவள் காட்டிய நம்பவே முடியாத பாசத்தால் இவன் ஒருச்சாண் வளர்ந்து கூட விட்டான். சுகமாகி வரும்போது அய்யாவுக்கு வேட்டியும் இவனுக்குக் கட்டம் போட்ட சட்டையும், ஊதா டவுசரும் எடுத்துக் கொடுத்துக் கூட்டி வந்தாள். குருவு மதினிக்கு எத்தனையோ வயசான பின்னும் கல்யாணம் நடக்கவில்லை. குருவு மதினிக்குக் கல்யாணமானால் ஊரைவிட்டுப் போய்விடுவாளோ என்று பயமாக இருக்கும். 'மயினி …. மயினி …..நீ வாக்கப்பட்டுப் போயிருவியா ….. மயினீ ….' என்பான் .' என் ராசா செம்புகத்தைக் கெட்டிக்கிடத்தான் ஆண்டவன் எழுதியிருக்கான் புள்ளே ….! ' என்றாள்.மெய்யாகவே அவள் சொல்லை மனசில் இருத்தி வைத்துக் கொண்டான் செம்பகம்.
கீ காட்டிலிருந்து பஞ்சம் பிழைக்க வந்த ராசாத்தி அத்தையும் அவளது ஆறு பொட்டப் பிள்ளைகளும் எப்போது பார்த்தாலும் பூந்தோட்டத்தில் அக்கறையாய்ப் பூவெடுத்துக் கொண்டு வந்து கொட்டானுக்கு ஆழாக்கு தானியத்தைக் கூலியாக வாங்கிக் கொண்டு போனார்கள். ராசாத்தி அத்தைக்கும், நாடார் வீட்டு மதினிமார்களுக்கும் குருவு மதினியோடு பேசுவதற்கு எவ்வளவோ இருந்தது. தங்கள் கீகாட்டு ஊரைப் பற்றியும் அங்கு விட்டு வந்த பனைகளைப் பற்றியும் ஆந்திராவுக்குக் கரண்டு வேலைக்குப் போய்விட்ட ராசாத்தி அத்தைவீட்டு மாமாவைப் பற்றியும் சொல்லச் சொல்ல இவனும் சேர்ந்து 'ஊம்….' கொட்டினான்.
இவன் அய்யாவுக்குக் கலயத்தில் கஞ்சி கொண்டு போன மாணிக்க மதினியின் அழுகுரல் கேட்டு எல்லாரும் ஓடினார்கள்.
கிணத்து வெட்டில் கல் விழுந்து அரைகுறை உயிரோடு கொண்டு வரப்பட்ட அய்யா அலறியது நினைவில் எழவும் திடுக்கிட வைத்தது இவனை.
வெளியில் கிடக்கும் ஆளற்ற வெறுங்கிணறுகள் தூர நகர்ந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு கிணத்து மேட்டிலும் இவன் அய்யா நிற்பதைக் கண்டான். திரும்பவும் எழுந்து நடமாட முடியாமல் நாட்டு வைத்தியத்துக்கும் பச்சிலைக்கும் ஆறாத இடி, இவன் நெஞ்சில் விழ, கடைசி நேரத்தில் சாத்தூர் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போன நாளில் அனாதையாகச் செத்துப் போனார் அய்யா. பஸ்ஸில் நீண்டிருந்த ஜன்னல் கம்பியில் கன்னத்தைச் சாய்த்துத் தேய்த்துக் கொண்டு கலங்கினான்.
அன்று சாத்தூரில் ரயிலேறியதுதான். ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ரயில் நின்று புறப்படும்போது மதினிமார்கள் கூப்பிடுகிற சத்தம் போடும் ரயில்.
அய்யாவின் நினைவு பின்தொடர சாத்தூர் எல்லையில் கேட்ட உருமியின் ஊமைக்குரல் திரும்பவும் நெஞ்சிலிறங்கி விம்மியது.
சூழ்ந்திருந்த காடுகளும், பனைமரங்களும் உருண்டு செல்ல பஸ்ஸிற்கு முன்னால் கிடக்கும் தார் ரோடு வேகமாய்ப் பின்வாங்கி ஓடியது. ஜன்னல் வழியாக மேகத்தைப் பார்த்தான். ஒரு சொட்டு மேகங்கூட இல்லாத வானம் நீலமாய்ப் பரந்து கிடந்தது. ரோட்டோர மரங்களில் நம்பர் மாறி மாறிச் சுற்றியது. ஆத்துப் பாலத்தின் தூண்கள் வெள்ளையடிக்கப்பட்டு மாட்டுக்காரர்களால் கரிக்கோடுகளும், சித்திரங்களும் வரையப்பட்டிருந்தன. தண்ணீரில்லாத ஆத்தில் தாகமெடுத்தவர்கள் ஊத்துத் தோண்டிக் கொண்டிருந்தார்கள்.
பாலம் கடந்து மேட்டில் ஏறியதும் ஊர், தெரிந்துவிட்டது. உள்ளே நெஞ்சு 'திக்கு… திக்….' கென்று அடித்துக்கொள்ள ஊரை நெருங்கிக் கொண்டிருந்தான் செம்பகம். தூரத்தில் தெரியும் காளியங்கோயிலும் பள்ளிக்கூடத்துக் கோட்டச்சுவரும் இவனை அழைப்பது போலிருந்தது.
எல்லா மதினிமார்களுக்கும் கண்டதை எல்லாம் வாங்கிக்கொண்டு போகிறான். மதினிமாரெல்லாம் இருக்கும் தெக்குத் தெருவை நெருங்க இருந்தான் செம்பகம். மனசு பறந்து கொண்டிருந்தது. எல்லாரையும் ஒரே சமயத்தில் பார்த்து ஆச்சரியப்பட இருந்தான். சீக்கிரமே ஊர் வந்து விடப்போகிறது. எல்லா மதினிமார்களையும் தானே கட்டிக்கொண்டு வாழவேண்டும். 'காளியாத்தா அப்படி வரங்குடுதாயே….' என்று முன்பு கேட்ட வரத்தை நினைத்துக்கொண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். பஸ்ஸிற்கும் சந்தோஷம் வந்து துள்ளிக் குதித்தது. மனசு விட்டுப் பாடினான். 'ம்… ம்… ம்…. ம் ம் ம்வும்…..' மென்ற ஊமைச்சங்கீதமாய் முனங்கிக் கொண்டு வந்தான் செம்பகம். பருத்திக் காட்டில் சுளை வெடிக்காமல் நிலம் வெடித்துப் பாளம் பாளமாய் விரிசலாகிக் கிடக்கும். வாதலக்கரை சித்தையாத் தேவனுக்கு வாழ்க்கைப் பட்டுப்போன மாணிக்க மதினி இருந்தால் காடே வெடித்திருக்காது. இப்படி ஈயத்தைக் காய்ச்சும் வெயிலும் அடிக்காது. மாணிக்க மதினியோடு எல்லா மதினிமார்களும் பருத்திக் காட்டில் மடிப்பருத்தியுடன் நின்ற கோலமாய் கண்முன் தோன்றும். இருக்கிற ஒரு குறுக்கத்திலும் எத்தனை வகை தானியங்களுக்கு இடம் வைத்திருந்தாள். அவள் மனசே காடாகும் போது தட்டா நெத்துக்கும் பாசிப்பிதம் பயறுக்கும் நாலு கடலைச் செடிக்கும் பத்துச்செடி எள்ளுக்கும் இடமிருந்தது. காடே கிடையாகக் கிடக்க விதித்திருந்தது அவளுக்கு. காட்டு வெள்ளாமையும் அவளோடு போயிற்று.
கண்ணெட்டும் தூரம்வரை நிலம் வறண்டு ஈரமற்றுக் கிடக்கும் தரிசு நிலங்களில் வேலிக்கருவை தோண்டிக் கொண்டிருந்தார்கள். மஞ்சள் மூக்குடன் கூடிய விறகு லாரிகளில் அடையாளம் தெரியாதவர்கள் பாரம் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். மந்தைத் தோட்டத்தில் கிணத்தை எட்டிப் பார்த்துக்கொண்டு படுத்திருக்கும் கமலைக்கல்லும், தோட்ட நிலமும் நீண்டகால உறக்கத்திலிருந்து மீளாமல் இன்னும் இறுகிக்கொண்டிருந்தது. தோட்டத்தை ஒட்டி நின்ற பஸ் இவனை இறக்கிவிட்டுச் சென்றது.
தெக்குத்தெரு வாசலில் படம்போட்ட தோல்பையுடன் நின்றான். குப்புற விழுந்து கிடக்கும் தெக்குமடத்தில் ஒருகல்தூண் மட்டும் தனியாய் நிற்க அதன்மேல் உட்கார்ந்திருந்த காக்கா இவனைப் பார்த்துக் கரைந்துகொண்டு ஊருக்கு மேல் பறந்து சென்றது.
தெருவை வெறிக்கப் பார்த்துக்கொண்டே நடந்தான். தெருப் புழுதியே மாறிப் போய் குண்டும் குழியுமாய் சீரற்று நீண்டு கிடந்தது தெரு. இவன் பண்டார வீடுகளிருந்த இடத்துக்கு வந்து நின்றான். இருண்ட பாகமான வீடுகளாய் இற்று உதிர்ந்து கொண்டு வரும் கூரை முகட்டிலிருந்து மனதை வதைத்தெடுக்கும் ஓலம் கேட்டது. மனதைப் புரட்டிப் புரட்டிக் கொண்டுபோய் படுகுழியைப் பார்த்துத் தள்ளிவிட்டுச் சிரிக்கிற ஓலமாய்க் கூரைகளில் சத்தம் வரும். தெருவே மாறிப்போய் – குறுனையளவுகூட இவன் பார்த்த தெருவாயில்லை. தெருவே காலியாகிவிட்டது. தெருத் தெருவாகத் தேடினான். முன்பு கண்ட அடையாளம் ஏதாவது தட்டுப்படுமா? – என்று பார்த்தான். எவ்வளவோ மூடிவிட்டது. புதிய தராதரங்கள் ஏற்பட்டு, இவனைச் சுற்றி வேடிக்கை பார்க்கவந்த கூட்டத்துக்குள் இவன் இருந்தான். சிறுவர்களும் பெரியவர்களும் இவனைப் பார்த்து சலசலத்துக் கொண்டார்கள். 'என்ன வேணும்' மென்ற சைகையால் இவனை அந்நியமாக்கினார்கள்.
இவன் ஒவ்வொன்றாய்ச் சொல்லச் சொல்ல எல்லாரும் ஆச்சரியப்பட்டுக் கொண்டார்கள். இன்னும் கூட்டம் இவனைச் சுற்றி வட்டமாக நின்றது.
வந்தவர்களுக்கு எவ்வளவோ வேலைகள் இருக்கும். கூட்டங்கூடி நேரத்தை வீணாக்காமல் பெண்களெல்லாம் தீப்பெட்டி ஒட்டப் போய்விட்டார்கள். குழந்தைகள் 'ஹைய்ய்ய்….' என்ற இரைச்சல் போட்டுக்கொண்டு தீப்பெட்டி ஆபிஸ் பஸ் வந்து கொண்டிருப்பதைப் பார்த்து ஓடிவிட்டார்கள். கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்த பெரியவர்களுக்கு வெட்டிப் பேச்சே பிடிக்காது. காட்டில் வெட்டிப் போட்டிருந்த வேலிக்கருவையைக் கட்டித் தூக்கி வர கயறு தேடப்போனார்கள். கொஞ்சநேரத்தில் ஒரு சுடுகுஞ்சி கூட இல்லாமல் இவன் தனித்து விடப்பட்டான்.
எல்லாம் தலைக்குமேல் ஏறி சுமையாய் அழுத்த குறுக்கொடிந்துபோய், ரொம்ப காலமாய் ஆட்டுப்படாமல் கிடந்த மதினி வீட்டு ஆட்டுரலில் உட்கார்ந்தான். தலையில் கைவைத்தபடி மூஞ்சியில் வேர்த்து வடியத் தரையை வெறிக்கப் பார்த்தான். மூஞ்சியில் வழியும் அசடைப் புறங்கையில் துடைத்துக் கொண்டான்.
'கொழுந்தனாரே…. எய்யா…. கப்பலைக் கவித்திட்டீரா…..கன்னத்தில் கை வைக்காதிரும்…. செல்லக் கொழுந்தனாரே….எய்யா….' என்று எல்லா மதினிமார்களும் கூடிவந்து எக்கண்டம் பேச, அவர்கள் மத்தியில் இருக்க வேண்டியவன், இப்படி மூச்சுத் திணறிப் போய் ஆட்டுரலில் உட்கார்ந்திருக்கும்படி ஆனது.
நாளைக்கு மீண்டும் ஓடிப்போன செம்பகமாய் நகரப் பெருஞ்சுவர்களுக்குள் மறைந்து போவான். இருண்ட தார்விரிப்பின் ஓரங்களில் உருவமே மாறிப்போய் – பேரிரைச்சலுக்குள் அடையாளந்தெரியாத நபராகி – அவசர அவசரமாய்ப் போய்க்கொண்டிருப்பான் செம்பகம்.
நல்லதொரு இழைக்கு நன்றி.
கதை ஆசிரியரின் சிறு குறிப்புடன் கதையை வெளியிட்டால் இன்னும் சிறப்பாக
இருக்கும்.
நண்பர் உதயகண்ணன் , 37 சிறுகதைகளைத் தொகுத்து வானவில் கூட்டம் என்ற
புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்.
இதே போல் பாவண்ணணும் சிறந்த சிறுகதைகளைத் தொகுத்து ,அத்துடன் ஒவ்வொரு
கதைக்கு முன்னும் அவர் வாழ்வில் நடந்த சுவராஸ்யமான நிகழ்வுகளுடன்
சேர்த்து வெளியிட்டிருக்கிறார்.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
To unsubscribe, reply using "remove me" as the subject.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
புலிக்கலைஞன் கதையை இட்டதற்கு நன்றி சென்ஷி. நல்ல கதை....புலிக்கலைஞன் கதையில் வரும் டைகர் ஃபைட் காதரின் நீட்சியான ஒரு கதாபாத்திரம் ஜெயமோகனின் லங்காதகனத்தில் வரும். மோகன்லால் நடித்த வனப்பரஸ்தம் படத்தின் ஆதார புள்ளியும் இது தான். ஒரு கலைஞன் கலையின் கனத்தில் வாழும் உலகிற்கும் அதிலிருந்து வெளியேறியதும் அவன் முகத்தில் அறையும் யதார்த்தத்திற்குமான முரண்.அருந்ததி ராயின் “God of small things" நாவலில் கதகளி கலைஞனின் வாழ்வில் சந்திக்கும் இந்த முரண் குறித்த விவரணை வரும். மிக நல்ல இடம் அது. அதை நாவலை படித்தபோது மொழிபெயர்த்து என் தளத்தில் இட்டிருந்தேன். http://angumingum.wordpress.com/2006/01/01/god-of-small-things-அருந்ததி-ராய்/
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
19. ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - ஆதவன்
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
21. காலமும் ஐந்து குழந்தைகளும் - அசோகமித்திரன் (1973)
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
22. டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர் - ஜி. நாகராஜன்
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
23. மருமகள் வாக்கு - கிருஷ்ணன் நம்பி
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
ரெண்டும் படிச்சிருக்கேன். குறத்தி முடுக்கு - யப்பா ஆள அடிக்ற
கதன்னாலும் நமக்கு அதுல மாற்றுக் கருத்து இருக்கு. ஆனா, இவர்து அந்த
பாகைமானி இல்லாம பதினாலு பக்க சமபக்க பலகோணம் போட்ட பிரின்சிபாலம்மா கத
இருக்குங்களே....awesome!
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
Subscription settings: http://groups.google.com/group/panbudan/subscribe?hl=ta
அச்சச்சோ!
பதினாலா, பதினேழா, பத்தொம்பதா? மறந்துபோச்!
பதினேழுதான் கஷ்டம்!
எனி ஸ்பெஷலிஸ்ட்ஸ்?
வேர் ஈஸ் உதயன்? விக்கில இருக்ற அனிமேஷன்ஸ் பாத்தீங்களா?
நன்றி ஆசாத்ஜி... நீங்கள் குறிப்பிட்ட கதை எனக்குப் பிடித்த கதை என்னும் இழையில் ஏற்றப்பட்டுள்ளது. கதையின் பெயர் - கல்லூரி முதல்வர் மிஸ். நிர்மலா.
ஜியோமிதியில் பிஸ்தாவாக இருந்தால் மட்டுமே பதினேழு பக்க சமகோணம் போட
இயலும். இப்போது இருக்கும் விக்கி அனிமேஷனில் இருப்பதுபோன்ற முறை முன்னம்
கிடைத்திருக்கவில்லை. ஆரத்தில் பல பிரிவுகள் வைத்து செங்குத்துக்கோடுகள்
வரைந்து, அவை வட்டத்தைத் தொடும் தூரத்தை கவராயத்தில் ஆரமாக்கி, வட்டத்தை
வெட்டி வரைய வேண்டும். கராயம், மட்டப்பலகை, பென்சில் இவற்றால்
வரைவதென்றால் கிட்டத்தட்ட ஆறேழு மணி நேரமாகலாம்...அதற்கும் மேலும்
ஆகலாம்...நோ ஜோக்ஸ் (இப்போதைக்கு விக்கியில் இல்லாத முறையில்).
சாகித்ய அகாதமி பதிப்பகம் தமிழ் இலக்கியத் துறைக்கு பங்களித்த ஒவ்வொருவரைப் பற்றியும் ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறது.வாங்கிப் படித்துப் பாருங்கள்.
தட்டச்சி அனுப்பி வைத்த பதிவர். திருமதி. முத்துலட்சுமிக்கு நன்றிகள் பலப் பல..
---------------------------------
25. ஞானப்பால் - ந. பிச்சமூர்த்தி
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
மணிக்கொடி இதழில் (1934) காதல் என்ற முதல் புதுக்கவிதையை எழுதிய ந.பிச்சமூர்த்தி அவர்கள் புதுக்கவிதை பிதாமகன் என்றழைக்கப்படுகிறார்.
"என் முயற்சிக்கு விட்மனின் புல்லிதழ் வித்திட்டது , அதைப் படித்த போது கவிதையின் ஊற்றுக் கண் தெரிந்தது . தொடர்ந்து பாரதியின் வசனகவிதை என்கருத்தை வலுவடையச் செய்தது , இவற்றின் நிறைவாக கவிதைகளை எழுதத்தொடங்கினேன் - என்று காட்டு வாத்து முன்னுரையில் ந.பிச்சமூர்த்தி எழுதியிருக்கிறார்.
நடேச தீட்சிதர் - காமாட்சியம்மாள் தம்பதியருக்கு நான்காவது மகனாக 15/08/1900 அன்று கும்பகோணத்தில் பிச்சமூர்த்தி பிறந்தார்.அவருடைய இயற்பெயர் வேங்கட மகாலிங்கம் . இவருக்கு முன்னாள் பிறந்த மூன்று குழந்தைகளில் இருவர் இறந்து விட்டதால் வேங்கட மகாலிங்கம் என்ற இயற்பெயரை , பிச்சை என்று இவருடைய பெற்றோர்கள் மாற்றி வைத்தார்கள் .பிச்சை , சுப்பு , குப்பு குப்பை என்று பெயர் வைத்தால் எமதர்மராஜன் இந்தஅற்பமான பெயர்கள் கொண்ட குழந்தைகளை அழைத்துச் செல்லமாட்டான் என்று ஒரு நம்பிக்கை . பிச்சமூர்த்தி அவர்கள் தனது எழுபத்தி ஆறாவது வயதில் 04-12-1976 அன்று காலமானார்.
பிச்சமூர்த்தியின் படைப்புகள்