என் அக்கா
வாழ்ந்து முடித்த மண்
செம்மண் படிந்த என் தலையை
மடியில் சாய்த்து
ஈர்க்கோதியில் கீறிச் கீறிச்
சடகுச் சடக்கென்று
பேன் குத்துவாள்
இந்த பாழுஞ் சனியனுக
தம்பி ரத்தத்தை
எப்பிடிக் குடிச்சிருக்குது பாரு
என்று வசை பாடுவாள்
*
நண்டும் சிண்டுமான
குழந்தை குட்டிகளோடு
அலைகழியும் அக்கா
அடிக்கடி சொல்லுவாள்:
'எவனுக்கும்
பயப்படாதர தம்பி
என்னெப் பாரு
கட்டின மகராசன்
கனவாப் போயிட்டாரு
தன்னந்தனிக் கட்டையா
நிக்கறேன்
கால்வயிறு சாப்பிட்டு
குழந்தைகளைக் கலங்காமப்
பாத்துக்கிறேன்
மீனாட்சின்ணா
ஆனானப்பட்ட
ஆம்புளக நடுங்குவாங்க
எதுக்கும் பாயப்படாதே
நான் இருக்கறேண்டா'
*
பழுப்பேறிய முகத்தோடு
உழைப்பேறிய கையோடு
ஒவ்வொரு விடுமுறையிலும்
சின்னக் கண்கள் சிரிக்கக்
காத்திருப்பாள் எனக்காக...
'அந்த ஊருல ஒம்மேல
எவளாச்சும் கண்ணுவச்சா
அவ முதுகு பழுத்துரும்
சீவக்கட்டை பிஞ்சுபோகும், ஆமா'...
வெகுளி அக்கா
விண்ணாரம் பேசுவாள்...
*
பேர் சொல்லி
அழைத்தே இராத அக்கா
பிள்ளைகள் பெற்ரே
நோய்க்களமானாள்.
படுக்கை வாசியைப்
பாக்கப் போனேன்
பச்சை குத்திய
எலும்புக் கைகலைப்
பற்றியபோது நடுங்கின...
'ஏங்கண்ணு...
ஒன் நினைப்பாவே இருந்திச்சு...
இனி பொறப்பட்டுருவேன்
ஒரே பயம்தான் கண்ணு
வாய்க்கா மேட்டு
மாசனத்திலே
என்னைய தனியா
விட்டுட்டு வந்தா
ராத்திரி எப்படீடா
அங்கிருப்பேன்...'
அப்பாவி அக்கா
அடங்கு முன் சொன்னேன்:
'அப்புடி உட்டுருவோமா
அக்கா
பெரியய்யன், அப்புச்சி
பசீமக்கா
எல்லாம் அங்கே
தொணயா இருப்பாங்க
பயப்படாத, சொல்லி வச்சுருவம்ல
அக்கா... ஒண்ணும் பயப்படாதே'
ஆறுதல் திரண்டு நீரரய் வழிய
அக்கா கண்கள்
அமைதி கண்டன
அக்கா - சிற்பி
அந்த கிராமம்
கல்யாண வீடு மாதிரி
வாழைத் தோப்புகள்
நான்கு புறமும்
தலையசைத்து வரவேற்கும்
//அதுசரி, இத்தனை வேகத்தில் எழுதினால் எப்படிங்க?வாசிக்கக் கொஞ்சம் டைம் கொடுங்க, சுரேஷ்.//
//உங்கள் புண்ணியத்தில் மீண்டும் காணாமல் போயிடுச்சு...//