பெண்மை என்றொரு கற்பிதம்.

526 views
Skip to first unread message

செல்வன்

unread,
May 28, 2009, 8:16:24 PM5/28/09
to tamizh...@googlegroups.com, பண்புடன்

பெண்மை என்றொரு கற்பிதம்... (முதல் பகுதி)

என் மகன் த.வெ.சித்தார்த்-பிரதீபா திருமணத்தில் தாம்பூலத்துக்கு பதிலாக வழங்கப்பட்ட புத்தகத்தை தமிழ் வீதியில் தாம்பூலமாக சமர்ப்பிக்கிறேன்.

இது இன்னும் விரிவாக திருத்தி எழுதப்பட வேண்டும்.நண்பர்களின் விமர்சனங்கள்,ஆலோசனைகள்,கேள்விகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.   
-----------------------                                                                        


இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே பெண் பேசத் துவங்கினாள் - தனக்கான பேச்சை - அதற்குமுன் அவள் அவ்விதம் பேசுவது பெண்மைக்கழகல்ல என்கிற கருத்தே மனித சமூகத்தைப் பற்றிநின்றது. இரண்டு உலகப் போர்களுக்குப்பின் லட்சக்கணக்கான பெண்கள் உலகெங்கும் ஆண்கள் பார்த்த அதே தொழிற்சாலை களில் உடலுழைப்பைச் செலுத்த வந்தனர். பெண்களுக்கானது என்று வரையறுக்கப்பட்டிருந்த வெளிகளிலிருந்தும் வேலைகளிலிருந்தும் பெண்கள் எல்லை தாண்டி வந்தனர்.சொல்லப்போனால் படிதாண்டி வந்தனர் எனலாம். பெண்மையின் இலக்கணம் மறுதிருத்தம் செய்யப்பட்டது. இன்றைய கணினி யுகத்தில் பெண் இயங்கும்வெளியாக இப்புவிப்பந்து முழுவதுமே கைவந்து சேர்ந்துள்ளது. இணையத்தில் தமக்கான இணைகளைப் பெண்கள் தாமே தேடிக்கொள்கிறார்கள். அச்சம், மடம், நாணம் எல்லாம் ஒதுங்கி வாசலுக்கு வெளியே நிற்கின்றன. இன்றைய பெண்மை பழைய பெண்மையின் பல அம்சங்களைப் போகிறபோக்கில் கழட்டி விட்டுள்ளது. பலபுதிய அம்சங்களை சுவீகரித்துக்கொண்டுள்ளது. என்றாலும் என்றும் தொடரும் அடிமைத் தளைகளான அம்சங்கள் தொடரவே செய்கின்றன. அமெரிக்கா போய் ஏமாந்த பெண்களின் கதை இன்றும் தொடர்கிறது. இது ஏன்?பெண்மை என்கிற ஒன்று காலந்தோறும் அர்த்தம் மாறி வந்தாலும் அதைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் ஆண் - பெண் சமத்துவமோ பெண் விடுதலையோ சாத்தியமில்லை.

ஆளுமைத்தன்மை உடையவன், ஆள்கிறவன் என்கிற பொருளில்தான் ஆண்மை அவனுக்குரியதாயிற்று. (பெடை, பெட்டை, பேணுகை, பாதுகாப்பு - அன்பு போன்ற பொருள் தரும்) பெட்பு என்ற சொல்லினடியாகத் தோன்றிய பெண்மை அவளுக் குரியதாயிற்று. சொற்களே இவ்விதம் பாலியல் பாகுபாட்டுடன் இலங்குகின்ற சூழலில் நாம் வாழ்கிறோம்.


ஆடவர் ஆளவும் பெண்கள் பேணவுமான இந்த ஆண்மை - பெண்மை பிறப்பிலேயே வருவதா? பெண் பெண்மையோடே பிறக்கிறாளா? பெண்மை என்பதுதான் என்ன? எது பெண்ணைப் பெண்ணென்று ஆக்குகிறதோ அதுதானே பெண்மையாக இருக்க முடியும்? அப்படியானால் பெண் என்றால் என்ன?
பெண் என்றால் கருப்பை என்று சொன்னவர் உண்டு. கருப்பையும் பாலூட்டும் மார்பகங்களும்தான் பெண் என்றவர் உண்டு. இயற்கையிலேயே குறைபாடுள்ள மனிதப் பிறப்பே மனுஷி என்று அரிஸ்டாட்டில் போன்ற அக்கால அறிஞர்கள் கூறிய துண்டு. உலகம் ஆண்களுடையது. அதில் பெண்களும் இருக்கிறார்கள். ஆணின் விலா எலும்பிலிருந்து வந்தவள்தான் பெண். ஈசன் தன் உடம்பில் பாதியைக் கொடுத்தார் என்பதாக ஏராளமான நம்பிக்கைகளும் கதைகளும் ஆண் - பெண் பற்றி நம்மிடம் புழங்குகின்றன. அவற்றில் பெரும்பாலானவை மதம் சார்ந்து - நம்பிக்கை சார்ந்து நிற்பவை. சில அறிவியலின் பெயரால் நிற்பவை.
இயற்கையின் படைப்பில் எல்லா உயிர்களிலும் ஆண் - பெண் உண்டு. மறு உற்பத்தி என்பது ஆண் - பெண் என்கிற நேர் எதிரெதிரான இரு பால் அம்சங்களின் இணைப்பில்தான் உள்ளது என வாதிடுவோர் உண்டு. ஆனால், உண்மையில் அறிவியலின் படி பார்த்தால் ஒன்றுவிடாமல் சகல உயிர்களிலும் மறு உற்பத்திக்கு ஆண் - பெண் என்கிற எதிர்வு கள் இருப்பதாகக் கூறிவிட முடியாது. அமீபா போன்ற ஒரு செல் உயிரிகள் பிளவு மற்றும் சேர்க்கையினால் இனப் பெருக்க மாயின. அங்கே பெண் இருக்க வில்லை. அல்லது ஆண் இருக்க வில்லை.

நாம் மிக முக்கியமாக இவை எல்லா வற்றையும் சமூகவியல் நோக்கில் வர லாற்று நோக்கில் பார்க்க வேண்டி யுள்ளது. ஆண்/ பெண் என்கிற பேதம் இயற்கையின் படைப்பு. நாம் சமப்படுத்த முடியாது என்கிற கருத்து ஆழமாக நம்மிடம் உள்ளது. ஆண்கள் வெளி உலகுக்கு; பெண்கள் வீட்டுக்கு என்கிற கருத்து அடுப்படிப் புகையாய் நம் மனங்களில் படிந்து கிடக்கிறது. நம் மனக் குகைகளின் இருண்ட அடுக்குகளில் இயற்கையானது போல ஒளிந்து கிடக்கும் ஆணாதிக்கக் கருத்துக்களை வெளியே இழுத்துப்போட ஒரு விவாதத்தை நமக் குள்ளே துவக்கியாக வேண்டும். சில எளிய வாழ்வியல் நடப்புகள் வழியே நம் விவாதங்களைத் துவக்கலாம்.

ஒரு ராஜலட்சுமியின் கதை


இரவு பத்து மணி யிருக்கும். ராஜலட்சுமி வீட்டிலிருந்து பதட்ட மான போன்.
அவரு சாயந்திரம் ஆறு மணிக்கு பைக்கை எடுத்திட்டுப் போனாரு. இப்பவரைக்கும் திரும்பி வரலை. ஒரு போன் கூடப் பண்ணலை. இப்படியெல்லாம் இருக்கவே மாட்டாரு.

அடுத்த பத்து நிமிடத்தில் தோழர்கள் ஆளுக்கொரு வண்டியை எடுத்துக் கொண்டு பறந்தோம். திருநெல்வேலி நகரத்தைச் சலித்து எடுத்து விட்டோம். ஒரு தோழர் போலீஸ் அலுவலகம் சென்று நகரத்தில் ஏதாவது பைக் ஆக்சி டெண்ட் ஆகியிருக்கா என்று பொறுப்பாக விசாரித்து வந்தார். ஒரு துப்பும் துலங்கவில்லை. பன்னிரண்டு மணி வரை தேடிவிட்டு ராஜலட்சுமி வீட்டில் எல்லோரும் கூடினோம். ஒரு தகவலும் இல்லாமல் கணவருக்காகக் காத்திருக்கும் பெண்களின் துயரமும் குழப்பமும் ராஜலட்சுமியின் முகத்தில் எழுதியிருந்தது. குழந்தைகள் இருவரும் தூங்கியிருந்தார்கள்.
அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கத் துவங்கும் போது வெளியே பைக் சத்தம் கேட்டது. ராஜலட்சுமியின் கணவர்தான். அவரைக் கண்டதும் ராஜ லட்சுமி ஏங்கி ஏங்கி அழுவார் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால், அவர் கோபத்தோடு எங்கே போனீங்க இந்நேரம் வரைக்கும் என்று சத்தம் போட்டார். பதிலுக்கு அவர் குற்றஉணர்வான மொழியில் அதாவது... என்னாச்சுன்னா.. என்று ஆரம்பித்து ஏதாவது சமாளிப்பு வார்த்தைகள் சொல்வார் என்று நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் அவர் பதிலுக்கு அதே வீறாப்புடன் எங்களை ஓரக் கண்ணால் பார்த்தபடி சொல்லிட்டுத்தானே போனேன். அதுக்குள்ளா தோழர்களை எல்லாம் கூட்டி ஏன் இப்படி ரகளை பண்ணி வச்சிருக்கே? என்று ஓங்கியடித்தார். எப்ப சொன்னீங்க? என்று ராஜ லட்சுமி கோபப்பட அவர் பதில் சொல்லாமல் எங்களிடம் திரும்பி சாரி சார் சொன்னதை மறந்துட்டு அவுங்க உங்களை எல்லாம் கஷ்டப்படுத்திட்டாங்க. சாரி. என்று கும்பிட்டு உடனடியாக எங்களுக்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டார். ராஜலட்சுமி ஒரு வார்த்தை பேசாமல் கணவரை முறைத்துப் பார்த்தபடி இருந்தார். எங்களை வழியனுப்பக்கூட ஒரு வார்த்தையும் பேச வில்லை. கணவர்மீதே பார்வையைப் பதித்திருந்தார். வருத்தம் தொனிக்கும் வார்த்தை களை மீறி அவரது கணவரின் முகத்தில் ஒரு வெற்றிச் சிரிப்பு ஒளிந்திருப்பதை ராஜலட்சுமியைப் போலவே நானும் கண்டு கொண்டேன்.
ராஜலட்சுமி எங்களோடு அலுவலகத்தில் ஒன்றாகப் பணியாற்றுபவர். தொழிற்சங்க இயக்கத்தில் ஆர்வமுள்ளவர். கூட்டங்களில் தவறாமல் பங்கேற்கும் ஒரே பெண் தோழர் அவர்தான். இன்று மார்ச் 8 என்பதால் மாலையில் சங்கத்தின் சார்பாக மகளிர் தினச் சிறப்புக் கூட்டம் ஏற்பாடு செய்திருந்தோம். இதற்கு முன்பெல்லாம் சங்கம் தனியாக இப்படி நடத்தியதில்லை. பெண் ஊழியர்கள் எல்லோரும் அவர்களுக்குள் பேசி அன்றைக்கு ஒரே கலரில் புடவை கட்டி வருவார்கள். எல்லோரும் சேர்ந்து மாலையில் ஒரு ஓட்டலில் போய் சாப்பிடுவார்கள். குரூப் போட்டோகூட எடுப்பார்கள். சில சமயம் அலுவலகத்திலேயே மனமகிழ் மன்றத்தில் மகளிர் மட்டும் ஒரு சின்ன டீ பார்ட்டி நடத்திக் கொள்வார்கள். ஆண்கள் ம்... ம்... மகளிர்தின பார்ட்டியா நடக்கட்டும் நடக்கட்டும் என்று சொல்லிக் கடந்து போய்விடுவோம்.

இம்முறை அறிவு வந்து யூனியன் சார்பாகவே சிறப்புக் கூட்டம் போட்டு விட்டோம். சிறப்புரைக்கு வெளியிலிருந்து பேச்சாளரெல்லாம் அழைத்திருந்தோம். நாங்கள் பூங்கொடிகள் அல்ல. போர்க்கொடிகள் போன்ற பல நல்ல வாசகங்கள் எழுதிய அட்டைகளை ஆங்காங்கே கட்டித் தொங்க விட்டிருந்தோம். எல்லாப் பெண் தோழர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று சொல்லி விட்டோம். ஆண் தோழர்களும் நாங்க எதுக்கு என்று மறுத்தபடியே போனால் போகட்டும் என்று ஓரளவு எண்ணிக்கையில் பங்கேற்றனர். ஆண்- பெண் சமத்துவம் பற்றியும் மகளிர் தினத்தின் வரலாறு பற்றியும் சிறப்புரையாற்றிய நண்பர்கள் பேசினார்கள். ராஜலட்சுமி இறுதியில் நன்றியுரையாற்றி விட்டு இப்போது ஓட்டலில் ஆண்கள் சமைத்த இனிப்பும் காரமும் வழங்கப்படும் என்று எல்லோருடைய சிரிப்புக்கிடையே அறிவித்தார்.

அன்று கூட்டம் முடிந்து வீடு திரும்ப எல்லோருக்குமே ஏழு மணிக்குமேல் ஆகிவிட்டது. ராஜலட்சுமி வீட்டில் நுழைந்து அப்பாடா என்று ஈசிசேரில் சாயவும் கணவர் உள்ளறையிலிருந்து குமுதத்தோடு வெளியேறி இவ்வளவு நேரமா.. யப்பா.. முதல்ல சூடா ஒரு காப்பியைப் போடு மனுசனுக்குத்தலைய வலிக்கி என்று சலித்திருக்கிறார். கூட்ட உரைகளின் தாக்கத்திலிருந்து முற்றிலுமாக விடுபடாத ராஜ லட்சுமி தன்னையறிமல் காலம் பூராவும் உங்களுக்கு நாங்கதான் வந்து காப்பி போடணுமா இன்னைக்கு ஒரு நாளைக்கி நீங்க போட்டுக்கிட்டாத்தான் என்னா? என்று கேட்டுவிட்டார். கேட்டு விட்டு ஒரு சிரிப்பும் சிரித்து சொன்னதில் முதலில் சொன்ன வார்த்தைகளில் கொஞ்சம் ஒட்டியிருந்த காரத்தையும் கூட அழித்தும் விட்டார். உடனே எழுந்து போய் காப்பி கலக்க ஆரம்பித்தும் விட்டார். ஆனால், மனுஷன் சத்தமில்லாமல் சட்டையைப் போட்டுக் கொண்டு பைக்கைக் கிளப்பிக் கொண்டு போய்விட்டார்.

மறுநாள் ஆபிசில் பெண்கள் மத்தியில் இதே விவாதப் பொருளாகி விட்டது. நீங்க பேசினதில் தப்பொண்ணு மில்லே. மனுசருக்கு காப்பியை முதல்ல போட்டுக் கொடுத்துட்டு அப்புறமா அதே வார்த்தைகளைப் பேசியிருக்கணும். அப்படி யிருந்தா காப்பியின் சூட்டில் உங்க வார்த்தை களின் சூடு அவருக்கு உறைத்திருக்காது. அவர் கோச்சுட்டுப் போயிருக்க மாட்டார் என்று ஒரு சாரார். நம்மளாலதான் நம்ம வீட்டிலே இப்படி பேச முடியல, அவுங்களாச்சும் தைரியமா கேட்டாங்களே என்று சிலர். மீட்டிங்கிலே பேசறதுக்கு வேணா இதெல்லாம் நல்லா இருக்கும், நடைமுறை வாழ்க்கைக்குச் சரி வராதுங்க என்று ஒரு சாரார். நல்லா ஒத்துமையா இருந்த ஒரு குடும்பத்தை இப்படிக் கூட்டம் போட்டுக் கெடுத்துப் புட்டிங்க சார் என்று சிலர். இது உண்மையில்நடந்த ஒரு சம்பவம்தான். பெயர் களையும் இடத்தையும் மட்டும் மாற்றிச் சொல்லியிருக்கிறேன். அதன்பிறகு இரண்டொரு நாளில் இந்தச் சம்பவத்தை எல்லோருமே மறந்துவிட்டார்கள். நான் ராஜ லட்சுமியைச் சற்றே உற்றுக் கவனித்ததில் அவருக்குள் ஒரு மாற்றம் நிகழ்ந்திருப்பதை உணர முடிந்தது. அவர் பெண்ணாக இருந்ததால் எல்லாவற்றையும் அவரிடம் கேட்டுவிட முடியவில்லை. ஆண்களும் பெண்களும் மனம் விட்டு நட்பு ரீதியாகப் பேசிக் கொள்ள நம் சமூகத் தில் அதிக வாய்ப்பு இல்லாத நிலையில் எட்ட இருந்து அவரது பேச்சு மற்றும் நடவடிக்கைகளில் வெளித் தெரியும் சிறு மாற்றங்களை வைத்தே நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அச்சம்பவத்துக்குப் பிறகு அவருக்குள் ஒரு இறுக்கம் கூடியிருப்பதைக் காண முடிந்தது. முகத்திலும் அந்த இறுக்கம். உற்றுப் பார்த்தால் ஒரு கீற்றுப்போலத் தெரியும்படி இருந்தது. பிறர் முகத்தை (அதிலும் ஒரு ஆண் ஒரு பெண்ணை) உற்றுப் பார்க்கிற பழக்கம் நம்மிடம் இல்லாததால் மற்றவர்களுக்கு இது பிடிபடவில்லைபோலும். எழுத்தாளனைப் பொறுத்த வரை எமக்குத் தொழில் உற்றுப்பார்த்தல் என்பதால் மற்றவர்களுக்கு இருக்கும் விவஸ்தை நமக்குத் தேவையில்லை. அதற்குப் பிறகும் அவர் கூட்டங்களில் தவறாமல் பங்கேற்றார் என்றாலும் வீடு திரும்புவதில் ஒரு அவசரம் அவருள் தொற்றியிருந்ததைப் பார்த்தேன். நாங்கள் யாரும் நுழைய முடியாத ஒரு பிரதேசமாக அந்த இறுக்கமும் அவசரமும் இருந்தது. ஏதும் செய்ய இயலாதவர்களாக நாங்கள் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தோம் --என்னவென்று புரிந்தாலும் கூட.

இப்படி எத்தனை ராஜலட்சுமிகள்! எத்தனை இறுக் கங்கள்! எத்தனை அவசரங்கள்!
இந்தச் சம்பவத்தை நாம் எப்படிப் புரிந்து கொள்வது?

ஒன்று அந்த வீட்டில் நிலவிவந்த ஒரு ஒழுங்கை அந்த ஆண் தன்வெளி நடப்பால் மீண்டும் கட்டிக் காத்து நிலைநாட்டி விட்டான். இத்தனைக்கும் அந்த ஒழுங்கு வெறும் வாய் வார்த்தையால் மட்டுமே லேசாகக் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. ஒரு வார்த்தைகூட அது பற்றிப் பேசாமல் அவனால் கொடியை நாட்ட முடிந்திருக்கிறது.
இன்னொன்று - மிகமுக்கியமாக நாம் பார்க்க வேண்டியது. அவளுக்கென்று நிர்ணயிக்கப்பட்ட வசனங்கள் நம் சமூகத்தில் உண்டு. எந்த இடத்தில் நின்று என்ன மாதிரி தொனியில் முகத்தை எப்படி வைத்துக் கொண்டு அந்த வசனங்களைப் பேச வேண்டும் என்பது உள்பட எல்லாமே ஏற்கெனவே தீர்மானிக்கப்பட் டுள்ளது. கணவர் அப்படிக் காப்பி கேட்டதும் அவர் சொல்லியிருக்க வேண்டிய வசனம் இதோ இதோ ஒரு நிமிசம் அல்லது அச்சச்சோ நீங்க இன்னும் காப்பி குடிக்கலியா. தோ வந்துட்டேன் இதில் ஏதேனும் ஒரு வசனத்தைத் தேர்வு செய்து கொள்ளும் உரிமை அவளுக் குண்டு. முக்கியமானது, அவ்வார்த்தைகளின் மீது பூசப்படவேண்டிய குற்ற உணர்வுத் தொனி.

இதற்கு மாறாக, அவள் நடந்து கொள்வது பெண்மைக்கு அழகல்ல. அதே போல அவ்விதமாக கடிந்து கொள்ளாமல், தானே காப்பி போட்டுக் குடித்துவிட்டு களைத்துவரும் துணைவிக்கும் காப்பி போட்டுக் கொடுப்பது ஆண்மைக்கு அழகல்ல. அப்படியெல்லாம் செய்தால் அவன் பொண்டுசெட்டிப்பயலாகி விடுவான்.
இது பெண்மையின் - ஆண்மையின் ஒரு பகுதியாக இருக்கிறது.

பெண்மை என்பதில் இன்னும் என்னென்னவோ அடங்கியிருக்கிறது - ஆண்மையிலும்தான். இதெல்லாம் மூத்தோர் வகுத்த வழியா? இயற்கையே படைத்தளித்த ஒன்றா? உயிரியல் ரீதியாகவே ஆணுக் கும் பெண்ணுக்கும் அமைந்ததா? சரித்திரம் என்ன சொல்கிறது? அறிவியல் என்ன சொல்கிறது?
 
                                                              2  

சென்ற அத்தியாயத்தை ஒரு சில தோழர்கள் தங்களுக்கிடையே வாசித்து விவாதித்திருக்கிறார்கள். அலுவலகத்தில் சாப்பாட்டு இடைவேளைகளில் கேண்டீனில் டீ சாப்பிடும் நேரத்தில் மற்றும் திட்டமிட்டு ஒரு பத்துப் பேரை உட்கார வைத்து என அப்படி இரண்டு விவாதங்களில் நானும் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஒன்று ஆண்களும் பெண்களுமாகப் பங்கேற்ற ஒரு மத்திய தர வர்க்கத் தொழிற்சங்கக் கூட்டம். இன்னொன்று ஒரு ஆசிரியத்தோழர் பள்ளி மாணவர்கள் மத்தியில் வாசித்துக்காட்டி விவாதித்த கூட்டம்.

மாணவர்கள் தயக்கமின்றியும் வெளிப்படையாகவும் பேசினார்கள். பெண்கள் உண்மையிலேயே பாவம் சார். ரொம்பக் கஷ்டப் படறாங்க. நாம எல்லோரும் சேர்ந்து அவுங்களுக்கு உதவி செய்யணும் சார். ஆனால் ஆணும் பெண்ணும் சமமாக ஆகவே முடியாது சார். ஏன்னா இயற்கையே அவங்களை அப்படிப் படைச்சிருக்கு சார். குழந்தைகள் பெற்று மனித குலத்தைத் தொடர்ந்து வாழ வைக்கத் தானே பெண்கள் ஆண்டவனால் படைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆணுக்குப் பெண் எதிர்ப்பதம் தானே? இதிலே நாம என்ன பண்ண முடியும்?

தொழிற்சங்கக் கூட்டத்தில் விவாதம் சரியான தண்டவாளத்தில் ஏறுவதற்கே நீண்ட நேரமானது. பல தோழர்களுக்கு ஆண் - பெண் சமத்துவம் குறித்துச் சொந்தமாகச் சொல்வதற்குக் கருத்தே இல்லை. பத்திரிகைகளில் படித்த அல்லது புத்தகங்களில் படித்த கருத்துக்களே வசனங்களாக வந்து கொண்டிருந்தன. (தொழிலாளிகள் கருத்தே இல்லாமல் இருப்பதை நேரில் காண்பது எனக்கு மிகுந்த அச்ச மூட்டுவதாக இருந்தது). அக்கூட்டத்திலிருந்த திருமணமான ஒரு இளம் பெண்மணிதான் சரியான திசையில் விவாதத்தை இழுத்துக் கொண்டு வந்துவிட்டார். எல்லோருடைய பேச்சுக்களையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த அவர் சந்தேகமற்ற ஓங்கிய குரலில் சொன்னார்; நீங்க சொல்றதெல்லாம் இப்படிக் கூட்டங் களில் பேசும்போதுநல்லா இருக்கும் சார். ஆனா பெண் என்பவள் அழகு. அவள் எதைச் செய்தாலும் அதில் அழகு இருக்கும். வாசலில் கோலம் போடுவதிலிருந்து வீட்டை அலங்கரிப்பது, குழந்தைகளை முறையாக வளர்ப்பது, முதியவர்களைப் பேணுவது என்று பெண்கள் செய்யும் பணிகள் எல்லாமே அழகும் அக்கறையும் மிக்கவை. அப்படி இருப்பது தான் பெண்மை. இந்த பூமியே அவுங்களாலேதான் அழகா இயங்குது. அதை ஏன் மாத்தணும்? இப்படியே இருப்பதுதான் இயற்கை. மாத்த நினைக்கிறது செயற்கை.

இந்தக் கேள்விகளை இன்னும் சரியாக நாம் செதுக்கிப்பார்த்தால் இவர் கள் இப்படியாக இருப்பதென்பது இயற்கையின் படைப்பு. நாம் அதைத் தொந்தரவு செய்யக்கூடாது... மாணவர் கள் இரக்கப்பட்டு பேசினார்கள் என்றால் அப்பெண்மணி அதைப் பெருமிதத் தோடு குறிப்பிடுகிறார். தொனிதான் வேறு வேறு. சாராம்சம் ஒன்றுதான். இனப்பெருக்கத்தோடு பெண்ணை இறுக்கமாக இணைக்கும் பார்வை இரு கேள்விகளிலும் இருக்கிறது.

பொதுவாகவே இந்தப் பார்வை சமூகத்தில் அழுத்தமாகப் பதிந்து கிடக் கிறது. இயற்கை சும்மாவா இப்படி ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட இரு பால் உயிரினங்களைப் படைத்துள்ளது? தலைமுறை தலைமுறையாக உயிரினங்கள் தழைத்து வளர வேண்டும் என்பதற் காகத்தான் எல்லா ஜீவாராசிகளிலும் ஆண் - பெண் என்று இரு பாலினங்கள் படைக்கப்பட்டுள்ளன. இந்தச் சமன் சீர்குலையும் விதமாக நாம் ஏதும் செய்துவிடக்கூடாது என்று பரவலாகக் கருத்து உள்ளது.
மேற்சொன்ன இரு விவாதக் கூட்டங்களிலும் பாலியல், பாலினம், பால் உறவு, இனப்பெருக்கம் பற்றிய புரிதலின் போதாமை வெளிப்பட்டது.

அறிவியல் என்ன கூறுகிறது?

ஆரம்பகட்ட உயிரினங்களில் ஆண் - பெண் பாகு பாடு இல்லாமலேயே இனப்பெருக்கம் நடந்தது. அமீபா போன்ற ஒரு செல் உயிரிகளில் மிக எளிய செயல் பாடான செல் பிளவின் மூலமாக இனப்பெருக்கம் நடக்கிறது. இந்த நிகழ்வில் நூக்ளியஸ் எனப்படும் செல்லின் உட்கருவும் உட்கருவை உருவாக்கும் எல்லா குரோ மோசோம்களும் இரு பாதி களாகப் பிரிகின்றன. ஒரு செல் ஒரே மாதிரியான இரண்டாகப் பிரிகிறது. ஆணும் இல்லை. பெண் ணும் இல்லை. ஈஸ்ட்டுகள் போன்ற பல செல் உயிரினங் கள் மொட்டு விடுதல் முறை யில் அதாவது பல செல் உயிரினத்திலிருந்து செல் களின் ஒரு கூட்டமே விடுவித்துக் கொண்டு. ஒவ் வொன்றிலிருந்தும் ஒரு புதிய உயிரினம் தோன்றுகிறது. மலேரியா உண்டாகக் காரண மான பிளாஸ்மோடியா மனிதனின் ரத்தச் சிவப்பணுக்களில் ஒட்டுண்ணி போல வாழ்கிறது. சிவப்பணுவில் வாழும்போது அது ஒவ்வொன்றும் 12-24 என்று பிரிந்து பெருகுகிறது. 10 நாட் கள் இப்படிப் பாலுறவு ஏதுமின்றியே பெருகும் பிளாஸ்மோடியா 11ஆவது நாளில் ஆண் - பெண் பால் பேதம் கொண்ட இரு பரம்பரையைத் தோற்றுவித்து அதற்குப்பிறகு பாலுறவின் மூலம் இனப்பெருக்கம் அடைகிறது.

தவளைகளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் முட்டையிடும் காலம் துவங்கி யவுடன் ஆண் தவளை ஒரு பெண் தவளையைக் கண்டுபிடித்து அதன் இடுப்பைத் தனது முன் கால்களால் இறுக்கிப் பிணைத்துக் கொண்டு அது முட்டையிடும் வரை அதை விடுவ தில்லை. சில வேளைகளில் வறண்ட நிலத்தில் ஆண் தவளையும் பெண் தவளையும் சந்தித்தால் பெண் தவளை ஆண் தவளையைத் தன் முதுகில் சுமந்து கொண்டு தண்ணீரை நோக்கிச் செல் கிறது. ஆண்  பெண்ணின் முதுகின் மீது அது முட்டை யிடும் வரை இருக்கிறது. பெண்ணின் கருச்செல்கள் தண்ணீரில் வெளிவந்ததும் அவற்றின் மீது ஆண் தவளை தன் கருச்செல்களை வெளிவிடுகிறது. தவளைகள் தண்ணீரில் பெருகுகின்றன. மனிதர்கள் போன்ற உயர்மட்ட விலங்கு களில் ஆணின் கருச்செல் கள் தாயின் உடலுக்குள் ளேயே பெண்ணின் கருச் செல்களை சந்திக்கின்றன. கருச்செல்கள் சந்திப்பதை உறுதி செய்ய ஆண் உயிரும் பெண் உயிரும் நெருக்கமாக இருப்பதையே புணர்ச்சி என்கிறோம். மான் போன்ற சில உயிரிகளில் வருடம் முழுவதும் ஆண் மானிடம் கருச்செல்கள் உற்பத்தியா வதில்லை. ஆகவே ஒரு குறிப்பிட்ட காலத்தில்தான் புணர்ச்சி நடைபெறும். இன்னும் சில உயிரினங்களில் சில குறிப்பிட்ட பருவகாலத்தில்தான் பெண்ணிடம் முதிர்ந்த கருச்செல்கள் காணப்படும். ஆகவே ஆண் பெண் புணரும் காலம் என்பது அந்தந்த விலங்கினத்துக்கே உரிய சிறப்புக் காலத்தில் மட்டுமே நடைபெறும். குஞ்சு களின் வளர்ச்சிக்குப் பாதகமான தட்பவெப்பநிலை இருக்கும்போது குட்டிகள் பிறந்தால் அவை இறந்து விடும் அல்லவா? மனைவிமார்களை ஆடி மாதம் தாய் வீட்டுக்கு அனுப்பும் நமது பழக்கத்தை இத்தோடு  சேர்த்து யோசிக்கலாம்.

நத்தையின் ஜனனத் துவாரம் அதன் தலையில் இருக்கிறது. எட்டுக்கால் நத்தையில் கருச்செல் அதன் கொடுக்குகளில் ஒன்றில் காணப்படுகிறது. புணர்வின் போது பெண்ணின் ஜனனத் துவாரத்தினுள் அந்தக் கொடுக்கைச் செலுத்துகிறது. அந்தக் கருச்செல் கொண்ட கொடுக்கு மட்டுமேகூட நத்தையின் உடலிலிருந்து பிரிந்து சுயேச்சையாக வாழ முடியும். அந்தக் காலத்தில் இந்தக் கொடுக்கை ஒரு தனி உயிர்ப்பிராணியாகவே கருதினர். எட்டுக்கால் நத்தையின் உடம்பின் ஒரு பகுதி என்ற சந்தேகம் கூட அன்றைய உயிரியலாளர்களுக்கு வரவில்லை. நத்தை இனத்தின் பெண்பால் உயிரினம் எதிர்ப்பட்டால் இந்தக் கொடுக்கு பெண்ணின் ஜனனப் பாதைக்குள் ஊர்ந்து சென்று கருச்செல்லைப் பிழிந்து வெளித்தள்ளுகிறது.
அட்டை போன்ற ஜீவராசி களின் பெண் உயிரிகளுக்கு ஜனனத்துவாரம் என்று தனி யாக இல்லை. ஆண் அட்டை தனது கூர்மையான புணர்ச்சி உறுப்பை பெண் உடலின் எந்த பாகத்தினுள்ளும் நுழைத்து கருச்செல்லை உந்தித் தள்ளும். கருச்செல் உட்குழிவுகள் வழியாகப் பயணம் செய்து எங்காவது ஒரு பெண் கருமுட்டையைக் கண்டுபிடித்துச் சேர்கிறது.

சில புழுக்களின் இனத் தில் ஆண்புழு தன் கருச் செல்லை பெண்ணின் வாய்க்குள் செலுத்துகிறது. பின் பெண் புழுவை துண்டு துண்டாகக் கிழித்துப் போடுகிறது. அதன் ஒரு உடல் துண்டிலிருந்து கிடைக்கும் கரு முட்டை யுடன் ஆண் கருச்செல் இணைகிறது. எட்டுக்கால் பூச்சி போன்ற இனங்களில் புணர்ச்சியின்போது பெண் பூச்சி ஆண் பூச்சியை தின்று விடுகிறது. புணர்ச்சி முடிவதற்குள் ஆண்பூச்சியின் வாழ்க்கையே முடிவுக்கு வந்து விடும்.

ஆகவே இனப்பெருக்கம் என்பது ஆண் - பெண் பால் உறவு கொண்டும் நடக்கிறது. அது இல்லாமலும் நடக்கிறது என்பதுதான் இயற்கை. பால் உறவு இல்லாமல் செல் பிளவின் மூலம் பெருக்கமடையும் போது ஒரே மாதிரியான வித்தியாசமே இல்லாத உயிரிகளின் பெருக்கமே ஏற்படுகிறது. ஆண் - பெண் எனப் பால் பிரிவுப் பாரம்பரியம் இயற்கையாகத் தற்செயலாகத் தோன்றிய பிறகு பாலுறவு சார்ந்த பெருக்கத்தில் தாய் - தந்தை இருவரிடமிருந்தும் குணங்களைப் பெறுகிற குழந்தைகள், அட்டைகள், பூச்சிகள், தவளைகள், பன்முகப்பட்ட குணாம்சங்களுடன் மேலும் மேலும் பொலிவுடன் வளர்கின்றன. இது இயற்கையில் தற்செயலாக ஏற்பட்ட நிகழ்வுதான். ஆனால் அது குலப் பெருக்கத்தைத் திருத்தமாக்கிட உதவுகிறது. குளோனிங் முறையில் ஆண் - பெண் இணைவு இல்லாமல் படைப்புச் செயல் சாத்தியம் என்று கூறப்பட்டாலும் அது இயற்கை வழியில் வரும் குழந்தைகள் போல விதவித மான குணாம்சங்களுடனான உயிரிகளைத் தர முடியாது.
சரி. ஆகவே குழந்தை பெறத்தான் பெண் படைக்கப் பட்டார் என்று கூறிவிட முடியுமா? அது அவள் தலை எழுத்து என்று தள்ளிவிட முடியுமா? இந்த விவாதத்தை நாம் தொடரலாம். அதற்குமுன் ஒரு கதையைப் பார்க்க லாம்.

கிருத்திகாவின் கதை

கிருத்திகா ஒரு கணினி எஞ்சினீயர். சென்னையில் ஒரு கம்பெனியில் பணிபுரிகிறார். எங்க ஊர்ப் பொண்ணுதான். நல்லா அமெரிக்கன் இங்கிலீஷ் பேசக் கூடிய பெண் என்பதால் படித்த உடனே நல்ல வேலை கிடைத்துவிட்டது. வேலைக்குச் சேர்ந்த உடனே நம்ம ஊர் வழக்கப்படி கல்யாண ஏற்பாடுகளைப் பெற்றவர்கள் செய்தார்கள். அவள் பொறுங்க... பொறுங்க... நானே பாத்துச் சொல்றேன் என்று ஒரு கட்டையைப் போட்டாள். அவளா பாக்கிறது எப்படிங்க சரியா இருக் கும்? எவ்வளவோ செய்தி பாக்கிறோம். ஏமாந்திடக் கூடாதில்லே என்று கிருத்திகாவின் அம்மா பதட்ட மாகவே இருந்தார். கிருத்திகாவின் அப்பாவுக்கு இங்கிட்டும் இல்லாமல் அங்கிட்டும் இல்லாமல் குழப்பமாக இருந்தது. ஆனால் ரெண்டு வருடம் கடத்திவிட்டு கிருத்திகா ஐடி கலாச்சாரப்படி  ஒரு பையனுடைய புகைப்படத்தையும் விலாசத் தையும் இ-மெயிலில் வீட்டுக்கு அனுப்பினாள். போனார்கள். பேசினார்கள். கல்யாணம் முடிந்தது. பையனும் கம்ப்யூட்டர்தான். டாக்டருக்கு டாக்டர் மாதிரி இப் போது கம்ப்யூட்டருக்கு கம்ப்யூட்டர்தான் பொருத்த மாக இருக்கிறது போலும்.
கல்யாணமாகி ரெண்டு மூணு வருடம் ஆகிவிட்டது. ஒரு நாள் தீபாவளியை ஒட்டி தம்பதிகள் லீவில் ஊருக்கு வந்தார்கள். கிருத்திகாவின் வாழ்க்கைத் துணைவரான அந்தப் பையன் என்னைப் பார்த்துப் பேசணும் என்று சொன்னார். சரி வாங்க என்று ஒரு வாக் போய்க்கொண்டே பேசலாம் என்று போக்குவரத்து இல்லாத ஒரு கிராமத்துச் சாலையில் நடந்தோம்.


ஒரு பிரச்சனை சார். இதை வெளிப்படையா யார் கிட்டேயாவது பேசணும்னு நினைச்சேன். நீங்க எழுத் தாளர். அதோடு கிருத்திகாவின் அம்மா, அப்பாவையும் அறிந்தவர். அதனால உங்க கிட்ட பேசலாம்னு நினைச் சேன் என்று ஒரு முன்னுரையை முதலில் கொடுத்தார்.

பிரச்சனை இதுதான். கிருத்திகா குழந்தை பெற்றுக் கொள்ள மறுக்கிறாள். வேலையிலும் மேற்படிப்பிலும் அவளுக்கு இருக்கும் ஆர்வமும் வேகமும்தான் காரணம். முதல்ல பத்து மாசம். அப்புறம் அது உருண்டு புரண்டு தவழ்ந்து, எழுந்து, நடந்து என்று ஒரு அஞ்சு வருஷம் நான் குழந்தைக்காகச் செலவழிக்கணுமே. அஞ்சு வருஷத்திலே நான் ஃபீல்டு அவுட் ஆயிடுவேனே
இப்படி சொல்றா சார். கல்யாணத்துக்கு முன்னாடியே இதுபற்றி சொன்னாள். ஆனால் கல்யாணத்துக்கப்புறம் பேசி சரி பண்ணிக்கலாம் என்று நான் நம்பினேன். ஆனால் அவள் மாறவில்லை. உனக்குக் குழந்தை வேணும்னா தத்து எடுத்துக்கலாம்னு சாதாரணமா சொல்றா சார். தத்து எடுக்கறது தப்புன்னு நான் சொல் லலை. என்ன இருந்தாலும் நம்ம குழந்தையாகுமா சார்?
நம்ம எதிர்காலத்துக்காக - நம்ம வாழ்க்கை அர்த்த முள்ளதா உயிரோட்டமா இருக்கறதுக்காக - ஒரு அஞ்சு வருசம் பொறுத்துக்கக்கூடாதா என்று கேட்டால் ஏன் அந்த அஞ்சு வருடத்தை நீ தியாகம் பண்ணலாமே? என்று பதில் சொல்கிறாள். ஒரு குழந்தையை தத்து எடுத்து நான் அஞ்சுவருடம் வீட்டில் இருந்து அதைப் பாத்துக் கணுமாம். அவள் சம்பாதித்துக் கொடுப்பாளாம். இதெல்லாம் சரியா இருக்குமா சார்? ஒரு தாய் - ஒரு   பெண் பாத்துக்கற மாதிரி குழந்தையை நாம பார்க்க முடியுமா சார்? தவிர நமக்கு என்ன குழந்தை பிறக்காத உடல் குறையா இருக்கு? ஏன் தத்து எடுக்கணும்?

தாம்பத்ய வாழ்க்கையை கிருத்திகா மறுக்கவில்லை. குழந்தை சுமந்து தாயாக மாட்டேன். தத்து எடுத்து வளர்க்கலாம் என்று சொல்கிறாள்.அந்த இளைஞனின் கண்கள் கலங்கியிருந்தன. நான் அவர் சொன்னதைப்பூராவும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். ஒரு ஐந்து நிமிடம் மென இடை வெளி தேவை என உணர்ந்து அமைதியாக இருந்தேன்.

(இரண்டாம் பகுதி நாளைய பதிவில்....)


--
செல்வன்

www.holyox.tk

“We've begun to raise daughters more like sons... but few have the courage to raise our sons more like our daughters.” - Gloria Steinem

செல்வன்

unread,
May 29, 2009, 12:46:39 AM5/29/09
to tamizh...@googlegroups.com, பண்புடன்
இயற்கையின் படைப்புகளுக்கு நோக்கமோ, அர்த்தமோ இருக்க முடியுமா? ஒரு நோக்கத்தோடு ஒரு ஜீவராசியை-  ஒரு பொருளை இயற்கை படைத்தது என்று நாம் சொன்னால் அதன் பொருள் என்ன? இயற்கை நன்றாக யோசித்துத் திட்டமிட்டு அந்த உயிரைப் படைக்கிறது என்றல்லவா அர்த்தம். அது கருத்து முதல்வாதமல்லவா? இப்பிரபஞ்சத்தில் யோசனை என்கிற ஆறாவது அறிவு மனிதனுக்கு மட்டுமே உரியது. இயற்கைக்கு மூளை கிடையாது. இயற்கையின் ஒரு பகுதியான மனிதன் மட்டு மே சிந்தனை செய்கிறவன். இயற்கை மனிதன் மூல மாகவே தன்னை அறிகிறது. ஆகவே படைப்பு என்கிற சொல்கூட இந்த இடத்தில் சரியல்ல. இயற்கையில் எல் லாமே தற்செயலாகத்தான் நடக்கிறது. தாமே தோன்றி தாமே அழிபவை தான் எல்லாம். "இடையறாத தற்செயல் நிகழ்வுகளுக்கு ஊடாக இயக்கவிதிகள் செயல் படுகின்றன" என்று ஏங்கல்ஸ் குறிப்பிடுவதை இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
சில குறிப்பிட்ட விதிகளின் படியே எல்லாம் இயங்கு கின்றன. ஆனால், அவை தற்செயலாக - முன் திட்ட மின்றி - இயங்குகின்றன.
தற்செயலாக நாம் ஆண்களாகவும், பெண்களாகவும் ஆகிவிட்டோம். மிருகங்களில் தற்செயலாகத்தான் ஆணும் பெண்ணும் இணைக்கின்றன. கருச்செல்களின் இணைவு ஏற்பட்டுவிட்டால் குட்டிகள் பிறக்கின்றன. சூழ லிலும் தட்ப வெப்ப நிலையிலும் ஏற்படும் மாற்றங்களை எல்லாம் தாக்குப்பிடிக்கும் சக்தி அந்த உயிரினங்களுக்கு இருந்தால் அவை தொடர்ந்து வாழும். இல்லையேல் அவை அழியும். மிகப் பெரிய டினோசர்கள் என்கிற வகையே ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையைத் தாங்க முடி யாமலும் விண்கற்களின் வீழ்ச்சியாலும் ஒரே சமயத்தில் அழிந்துவிட்டதல்லவா?

ஆகவே, இயற்கையின் நிகழ்வுப் போக்கில் தற்செயலாக பெண்களுக்குக் கருப்பை என்கிற உறுப்பு வந்து சேர்ந்துவிட்டது. டெஸ்ட் ட்யூப்பில் குழந்தை பிறப்பதை விட - குளோனிங் முறையில் பிராய்லர் கோழிகளைப் போல - முட்டைகளைப் போல - மனிதர்களை உற்பத்தி செய்வதைவிட - ஒரு தாயின் வயிற்றில் கருப்பையில் உருவாகி குழந்தை வளருவதுதான் இயற்கையானது. ஆரோக்கியமானது. ஆனால், அதன் அர்த்தம் எந்தப் பெண்ணானாலும் அவள் பிறப்பே பிள்ளை கொடுக்கத் தான் என்பது அல்ல. அப்படி நாம் ஆணி அடிக்க முடி யாது. அதற்கு நமக்கு எந்த உரிமையும் அதிகாரமும் இல்லை. அது அந்தப் பெண் தீர்மானிக்க வேண்டிய விஷயம். அது அவளது மனித உரிமை. அது கணவனது உரிமை அல்ல. மாமனார் மாமியாரின் விருப்பமோ, உரிமையோ அல்ல. சர்வதேச சட்டங்களும் அவ்வாறு தான் உள்ளன. ஆனால், எந்த மனித உரிமைச் சட்டங் களும் சர்வதேசப் பிரகடனங்களும் ஐ.நா. சபையும் கூட நுழைய முடியாத பண்பாட்டுக் கோட்டைகளான குடும்பச் சிறைகளுக்குள் கிடக்கும் பெண்கள் "ஈன்று புறந்தரு தல் என்தலைக் கடனே...." என்று அந்தக் கவிச்சியுடனே தான் கிடக்க வேண்டியிருக்கிறது. ஒன்பது பிள்ளைகள் பெற்றுப் பிரசவித்தே செத்த மும்தாஜூக்கு ஆண்கள் சமாதிகட்டி தாஜ்மகாலாக - காதலின் (!) சின்னமாக - வழிபடத்தான் முடிகிறது.

இன்னும் பெண்ணின் கருப்பையும் பாலூட்டும் மார்ப கங்களும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் ஆண்களுக்கு என்னவாக அர்த்தமாகி வருகிறது? மனித குலத்தை தழைக்கச் செய்யும் பெண் உடல் அவளது அங்கங்கள் என்னவிதமாகப் புரிந்து கொள்ளப் பட்டுள்ளது. பெண்ணின் ஒவ்வொரு உறுப்பும் தன் வரலாற்று ரீதியில் பேசத் துவங்கினால் எப்படி இருக்கும்?

அமீபாவாக இருந்து தலைப்பிரட்டைகளாக இருந்து மீன்களாகிப் பறவைகளாகி விலங்குகளாகிக் குரங்குகளாகி வளர்ந்த கோடானு கோடி ஆண்டுகளில் பெண் உறுப்புகள் சந்தித்திராத கொடுமைகளை விலங்குப் பெண்ணினம் சந்தித்திராத அவலங்களை ஆக்கிரமிப்புகளை வன்முறைகளை கேவலங்களை மனிதப் பெண் உறுப்புகள் சந்தித்த கதையை அவை பேசும். ஒரு ஆண் தவளை பெண் தவளையை சைட் அடித்ததுண்டா? ஒரு காளை மாடு ஒரு பசுமாட்டை ஈவ் டீசிங் செய்தததுண்டா? ஒரு ஆண் சிலந்தி ஒரு பெண் சிலந்தியிடம் வரதட்சணை கேட்டதாக சரித்திரம் உண்டா? அது அதுபாட்டுக்கு சேருது குட்டி போடுது போய்க்கிட்டே இருக்கு. மனிதரில்தான் இந்தக் கொடுமை.

அறிவியல் பூர்வமாகவும் உயிரியல் பூர்வமாகவும் பெண் குழந்தை பெறுவது நல்லது என்று இருக்கலாம். ஆனால், பண்பாட்டு ரீதியான வரலாற்று ரீதியான வன்முறைகளின் பின் னணியில் அவள் கருச்சுமந்து உயிரைப் பணயம் வைத்துப் பிள்ளையைப் பிரசவித்துத் தானே பாலூட்டி, தானே சோறூட்டி, தானே ஆய் கழுவி, தானே துணி துவைத்து, தானே வளர்ப்பதை மாட்டேன் என்று மறுப்பதற்கு அவ ளுக்குச் சகலவிதமான உரிமையும் உண்டு என்று ஆயிரம் மலைகளில் ஏறி நின்று உரக்கக் கூவலாம்.

ஆகவே, இது வரையிலான வாதங்களின் தொகுப்பாக, "பெண் பிறந்ததே குழந்தை பெற்றுத் தரத்தான். குழந்தை பெற்றால்தான் பெண் முழுமை யான பெண் ஆகிறாள் என்கிற நம் மூளைகளில் அழுத்தமாகப் படிந்து கிடக்கும் நாறக்கருத்தை மண்வெட்டி கொண்டு வழித் துப் போட வேண்டும்" என்று சொல்லி முடிக்கலாம். தந்தை பெரியார் "பெண்கள் தங்கள் கருப்பைகளை வெட்டி எறிய வேண்டும்" என்று ஆவேசத்துடன் கூறியதை இத்தகைய பண்பாட்டுத் தளத்தில் வைத்தே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே, தாய்மைதான் பெண்மை என்று சுருக்குகிற பார்வை சரியல்ல என்று இப்போதைக்கு முடித்து அடுத்த ஒரு "பெண்மையின் லட்சணம்" பற்றி விவாதத்தை தொடர்வோம். அதற்கு முன் கிருத்திகாவின் கதை என்னாச்சு என்று பார்ப்போம்.
செம்மலரில் இக்கட்டுரை தொடராக வந்துகொண்டிருந்தபோது  இதுபற்றி பத்துக்கு மேற்பட்ட கடிதங்கள் பத்துக்கு மேற்பட்ட தொலைபேசி விமர்சனங்கள் வந்துள்ளன. அந்த வாசகர் களுக்கு உண்மையிலேயே நன்றி சொல்ல வேண்டும். படித்துவிட்டுக் கடிதம் எழுதுகிற அளவுக்குக்கூட முடி யாத ஒரு செயலின்மை வாசகப் பரப்பில் பீடித்துள்ள இந்தக் காலத்தில் இவ்வளவு பேர் எதிர்வினையாற்றியது மகிழ்ச்சி தருகிறது.

பெரும்பாலான கடிதங்கள் கிருத்திகா குழந்தை பெற மறுப்பது தப்பு என்கிற தொனியில் வந்துள்ளன. தத்துக் குழந்தை என்பது பெத்த பிள்ளை போல ஆகுமா என்பதுதான் பரவலான கருத்தாகவும் உள்ளது. இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் சந்திரா அவர்கள் எனக்கு எழுதிய கடிதத்தை இக்கட்டுரையின் பிற்சேர்க்கையாக இணைத்துள்ளேன். அது ஒரு தெளிவைக் கொடுக்கிறது என வாசகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறேன்.

கிருத்திகாவின் கணவரிடம் நான் என்ன சொன்னேன் என்பதை அறிந்து கொள்வதில் சில வாசகர்கள் ஆர்வம் காட்டியுள் ளார்கள். நான் அவரிடம் வேறு ஒன்றும் சொல்லவில்லை. "இரண்டு நாள் எனக்கு அவகாசம் கொடுங்கள்" என்று மட்டும் சொன்னேன். அந்த அவ காசம் நான் கிருத்திகாவின் மனதை அறிந்து கொள்வதற்கா கக் கேட்டேன். அவள் கருத்தை அறியாமல் நான் என்ன பேச முடியும். ஆனால், இதுபோன்ற விஷயங்களை கணவர் தவிர்த்த வேறு ஆண்களுடன் பேச நம் பண்பாட்டில் பெண்களுக்கு உரிமையும் பழக்கமும் இல் லையே என்கிற தயக்கம் என்னை அன்று இரவு முழுவ தும் அலைக்கழித்தது.

ஆனால், கிருத்திகாவுடன் நான் இதுபற்றி லேசாகப் பேச்சை ஆரம்பித்த போது அவள் எந்தத் தயக்கவும் இன்றிப் படபட வென்று மடைதிறந்தது போலப் பேசி முடித்து விட்டாள். பண்பாட்டு ரீதியாக நான் எவ்வளவு பின் தங்கியிருக்கிறேன் என்பது புரிந்து வெட்கமாக இருந்தது. "அவரு உங்க கிட்ட பேசினாரா மாமா" என்று ஆரம்பித்து கிருத்திகா பேச ஆரம்பித்தாள்.

நான் கல்லூரியில் படித்த நாட்களில் அனாதைக் குழந்தைகளுடன் காப்பகத்துக்கு என்எஸ்எஸ் முகாமுடன் சென்றபோது மிகுந்த மனப்பாதிப்புக்கு உள் ளானேன். தாயின் அரவணைப்பையும் தந்தையின் கதகதப்பையும் அனுபவிக்காத அக்குழந்தைகளின் முகங்களில் அந்த ஏக்கம் ஒரு இருட்டுப்போல அப்பிக் கிடந்ததைப் பார்த்தேன். அப்போதே என் மார்பில் பால் சுரந்தது போல உணர்ந்தேன். இதைச்சொன்னபோது அவள் குரல் நடுங்கியது.எனக்குக் கண்களில் ஈரம் கசிந்தது.

அப்புறம் சுனாமியில் அனாதைகளான குழந்தைகளை பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்தேன். நான் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டியதில்லை. அனாதைக் குழந்தைகளைத்தான் தத்தெடுத்து நான் பெற்ற பிள்ளைகளாக வளர்க்க வேண்டும் என்று தீர்மானமாக முடிவு செய்தேன்.
இவரும் திருமணத்துக்கு முன்பே பேசி சம்மதித்த பிறகே திருமணம் நடந்தது. ஆனால், பின்னர் அவர் சொந்தக்குழந்தைதான் வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தத் தொடங்கிவிட்டார்.

கம்ப்யூட்டர் உலகில் என் இடம் நிலைக்க நானும் உழைக்க வேண்டியிருக்கிறது. ஒரு பெண்ணாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக பிள்ளை பெற்று ஐந்தாறு ஆண்டுகளை இழந்து நான் பின் தங்க வேண்டுமா என்கிற கேள்வியும் எனக்குள் இருக்கிறது. தத்துக் குழந்தைகளுக்கும் பெற்ற குழந்தைக்கும் எந்த வேறுபாடும் இருப்பதாக நான் உணரவில்லை. சின்னக் குழந்தையாகத் தத்து எடுத்தால் அது நாம் பெற்ற குழந்தையாகவே மாறிவிடும் என்று உறுதியாக நம்புகிறேன். இதில் எனக்கு எந்தக் குழப்பமும் இல்லை. மறுபரிசீலனை என்கிற பேச்சுக்கே இடமில்லை. எத்தனை லட்சம் அனாதைக்குழந்தைகள் நாட்டில் இருக்கிறார்கள்? கொஞ்சமாவது நமக்கு சூடு சுரணை வேண்டாமா?

கிருத்திகா பேசி முடித்த பிறகு அவளோடு பேச எந்த வார்த்தையும் அற்ற நிராயுதபாணியாக நான் உணர்ந் தேன். மீண்டும் அவளுடைய கணவரைச் சந்திப்பதைத் தவிர்த்து விட்டேன். அவர்களே ஒரு முடிவுக்கு வரட் டும் என்று மனசுக்குள் நான் ஒரு முடிவுக்கு வந்தேன்.                                                                                                                                                           4     

உடலுக்குள் பூட்டி வைக்கப்பட்ட மனுஷி...



"ஒருநிறை வேறாத காதலில்
துடைத்தகற்ற முடியாத
இருகண்ணீர்த் துளிகளாய்த்
தேங்கித் தளும்புகின்றன"                             ('முலைகள்' கவிதை - குட்டி ரேவதி)



என்று ஒரு பெண் தன் மார்பகங்களைப் பற்றிக் கருதுவதாகவும் இன்னும் இதுபோலத் தம் உடம்பின் உறுப்புகள் பற்றித் தமிழ் எழுத்துலகம் இதுவரை வாசித் தறியாத படிமங்களுடன் வலியுடன் கவிதைகளும் கதைகளும் இன்று வந்து கொண்டிருக்கின்றன. இவற்றை எழுதும் படைப்பாளிகளாகப் பெண்களே இருக்கி றார்கள். பெண்ணின் உடல் உறுப்புகளை இஷ்டம் போல வர்ணித்து எழுதும் உரிமை இதுகாறும் ஆண்களுக்கே இருந்து வந்தது. வண்டி வண்டியாக எழுதியும் விட்டார் கள். அதையெல்லாம் வாசித்து வாசித்து ரகசியமாய் தனக்குள் ரசித்து வெளிப்பேச்சில் "ச்சீச்சீ இதென்ன இப்படி யெல்லாம் எழுதறார்..." என்று சொல்லி வந்த ஆண் வாசக மனம் இப்போது "துடைத்தகற்ற முடியாத கண் ணீர்த்துளிகள் தாம் என் இரு முலைகள்" என்று ஒரு பெண் கவி பேசும்போது உள்ளுக்குள் காயப்பட்டு வெளிப்பேச்சில் அதே வசனத்தை இன்னும் ஆவேசத் துடன்பேசத் துவங்குகிறது. அப்படி எழுதியது சரியா? அதுக்காக... இப்படி எழுதலாமா? என்றெல்லாம் இலக்கிய உலகில் விவாதங்கள் நடக்கின்றன.

நாம் இங்கு பேசப்போவது பெண்ணின் உடம்பு பற்றி நம் சமூகம் காலம் காலமாக உருவாக்கி வைத்திருக்கும் பிம்பங்கள், கருத்துக்கள் மற்றும் அதன் காரணமாகப் பாதிக்கப்படும் பெண்ணின் வாழ்வுரிமை பற்றியே. "உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு" என்று முதலில் நாம் அவர்களின் சோத்திலே மண்ணள்ளிப் போடுகிறோம். "முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்" என்று தயிரைப் பிசைந்தாலே சிவந்து போகும் விரல்கள் அவளுடையவை என்று 'ஏத்தி' விடுகிறோம். மண் மகள் அறியா வண்ணச் சீறடிகள் அவளுடையவை என்று வீட் டிலேயே அடைந்து கிடந்ததைப் போற்றுகிறோம். சாமுத்திரிகா லட்சணங்கள் என்று பெண் உடல் பற்றி விரித்து விரித்து எழுதி வைத்துள்ளோம்.

ஊரெல்லாம் கோவில்களில் சிற்பங்களாகப் பெண்களைச் சிறுத்த இடைகளோடும் பருத்த மார்புகளோடும் செதுக்கி வைத்திருக்கிறோம். அது போலவே சிற்றிடை உள்ள பெண்ணே சினிமாக்களில் கதாநாயகியாக வர முடியும். இடை பருத்த அச்சம் தவிர்த்த நாணம் தொலைத்த பெண்கள் படத்தில் காமெடி வேடம்தான் ஏற்று நடிக்க முடிகிறது.இரண்டாம் தரமான பெண்களாக அவர்கள் நம் மனங்களில் பதிவு பெறுகிறார்கள்.

இந்தப் பரந்த பின்புலமானது நம் வீடுகளில் பிறந்து வளரும் பெண்/ ஆண் குழந்தைகளின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தன் உடல், தன் உடலின் தன்மை,  தன் அழகு பற்றி ஒரு விதமான தகவமைப்பைச் செய்கிறது. இதில் நிறைவடையாதபோது மன உளைச் சலையும், மன அழுத்தத்தையும் கூட ஏற்படுத்துகிறது. நான் யோசித்துப் பார்க்கிறேன். நான் பெண்ணாகப் பிறந்திருந்தால்...? என் ஒவ்வொரு உறுப்பும் எப்படி இருக்க வேண்டும் - எப்படி இருந்தால் அழகு - எப்படி இருந்தால்தான் அழகு என்று எழுதப்பட்டும் எழுதப் படாமலுமான விதிகள் என்னை வழிநடத்துகின்றன. இடுப்பு வரை நீண்டு தொங்கும் (கார்குழல்) தலைமுடி வேண்டும். மீன்களைப் போன்ற கண்கள் (கயல்விழி) வேண்டும். சங்கு போன்ற கழுத்து வேண்டும் என்று தொடங்கி பாதங்களின் நகங்கள் வரை எப்படி வைத்துக் கொள்ளவேண்டும் என்று 'ரூல்ஸ்' உள்ளன. மார்பகங்கள் பற்றித்தான் எக்கச் சக்கமாக எழுதி வைத்திருக்கிறார்கள். அதே மார்பகம் ஆணுக்கு இருந்து விட்டால்? என்னோடு பள்ளியில் படித்த பால்சாமி என்கிற பையனுக்கு மார்பகம் மட்டும் பெண்களைப் போல வளர்ந்திருக்கும். அவன் எப்போதும் கைவைத்த பனியன் போட்டு முழுக் கைச் சட்டையுடன்தான் வருவான். விளையாட்டு மைதா னங்களில் அவன் பட்ட அவமானங்களை இப்போது நினைத்தாலும் என் மனம் மிகுந்த வேதனை கொள்ளும். அவன் பள்ளி இறுதி வகுப்பு படிக்கும்போது தற்கொலை செய்து கொண்டான். அது ஒரு பக்கம். (அதுபோன்ற ஆண்களின் மன உலகம் பற்றித் தனியாகப் பேச வேண் டும். ) இன்று ஃபேஷன் ஷோக்கள், பொருட்களின் விளம்பரங்கள் என எல்லாவற்றிலும் இதுதான் சரியான பெண் உடல் என ஒன்று தொடர்ந்து முன்வைக்கப் படுகிறது. அதைப் பார்க்கிற ஆண் குழந்தைகளின் மன தில் சரியான பெண் பற்றிய சித்திரம் ஒன்று உருவாகிறது. அதைப்பார்க்கிற பெண் குழந்தையின் மனதில் இன் னொரு விதமான தாக்கம் ஏற்படுகிறது. இன்னும் அதையெல்லாம் தாண்டி இப்போது அழகிப்போட்டிகள் என்று வந்துவிட்டன. வேறு ஒரு பொருளுக்கு விளம்பரம் செய்யப் பயன்படும் கருவி யாகப் பெண் உடல் இருந்த நிலைமை போய் இங்கு பெண் உடலே அப்படியே ஒரு காட்சிப் பொருளாக உலகின் முன் வைக்கப்படுகிறது. மார்க் போடப்படுகிறது. அழகிகளாக அறிவிக்கப்படும் பெண்களின் மார்பளவு - இடுப்பளவு - தொடையளவு - எல்லாம் செ.மீ. கணக்கில் விளம்பரப் படுத்தப்படுகிறது. முன்பொரு காலத்தில் அடிமைச் சந்தையில் மேடையேற்றி விற்கப்பட்ட பெண்களின் சிறப்புகளை கூவிக்கூவி அறிவிப்பாளன் பேசியது போன்ற ஒன்றாகத்தான் அழ கிப் போட்டிகள் தோன்றுகின்றன. ஆனால் இவை நாகரிக உலகில் பார்க்கும் எல்லோரும் சமாதானம் ஆகும் வண்ணம் மிக நளினமாக நாசூக்காகச் செய்யப் படுகின்றன.( பள்ளிக்கூட ஆண்டுவிழாக்களில் கூட பெண் குழந்தைகள் கேட் வாக்  நடை நடக்கிறார்கள்.


அன்று முதல் இன்று வரை பெண் உடல் எப்படி இருந்தால் அழகு  என்று காலம்காலமாக இந்த ஆண் ஆதிக்க உலகம் ஒன்றை முன்வைத்து வருகிறது. அது ஆண்கள் மனதிலும் பெண் கள் மனதிலும் ஏற்றப்பட்டுள்ளது. நாம் இதுகாறும் 'மழை' பற்றி எத்தனையோ கவிதைகள் வாசித்திருக்கிறோம். மழை தரும் குளிர்ச்சி பற்றி மழை வெள்ளிக்கம்பியாய்ப் பூமியில் இறங்கும் அழகு பற்றி வானமும், பூமியும் புணரும் காலமான மழை பற்றி என ஏராளமாக எழுதி விட்டோம். ஆனால் இப்போது ஒரு தலித் கவிஞன் கேட்கிறான்.


"மிஞ்சிப் போனால் என்ன சொல்லிற முடியும்
உன்னாலே இந்த மழையைப் பற்றி
ஓதமேறுன கொட்டாயிலே
கோணியிலே முடங்கியும்
குளிரிலே ஒடுங்கியும் இருக்கியா..."
என்று தொடங்கும் மழை பற்றிய அவரது கவிதை இப்படி முடிகிறது. "ஒண்ணு தெரிஞ்சுக்கோ மழை ஜன்னலுக்கு வெளியேதான்
பெய்யுது உனக்கு எங்களுக்கு எங்கள் பொழப்பு மேலேயே..."

(மழை - ஆதவன் தீட்சண்யா)


கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிட்ட முலைகள் கவிதைக்கும் இந்த மழை கவிதைக்கும் ஒற்றுமைகள் உண்டு. அறியப்பட்ட வரலாற்றின் மீது இவ்விரு கவிதைகளும் தாக்குதல் தொடுக்கின்றன. பெண் உடல் ஆணுக்கு என்னவாக இருக்கிறது? என்னவாக இருந்தது? என்றுதான் இதுவரை நாம் அறிந்திருக்கிறோம். ஒண்ணு தெரிஞ்சுக்கோ... என் உடல் ஒரு ரசிப்புக்குரிய காமப் பொருள் என்பதுதான் நீ அறிந்தது. எனக்கு என் உடல் கண்ணீரில் கரையும் ஒரு காயம் பட்ட உயிர்ப்பொருள் எனப் பெண்கள் இன்று நமக்குச் சொல்லத்துவங்கியிருக்கிறார்கள்.
ஒரு பத்துக் கவிஞர்கள் இன்று தங்கள் பெண்ணுடலை முன்வைத்து நம் மனசாட்சி களை உலுக்குகிறார்கள். அந்த அளவுக்குத்தான் ஒரு மாற்றம்  நடந் திருக்கிறது. ஆனால் கோடான கோடிப் பெண்கள் இது பற்றி தன்னுணர்வு இன்றிக் காலந் தோறும் அவர்கள் மீது திணிக்கப்படும் படிமங்களையே தமதாகக் கருதித் தம் உடலைச் சகல சித்ரவதைகளுக்கும் இயல்பாக(!) இணக்கமாக்கி  வாழ்ந்து வருகிறார்கள். இன்று மின்னணு ஊடகங்கள் நடத்தும் பாலியல் வியாபாரம் (-போர்னோகிராபி சேனல்கள்) பெண் உடலை அங்கம் அங்கமாகச் சிதைத்து விற்று வருகிறது. நடிகை த்ரிஷா குளிக்கும் காட்சி, பள்ளியில் பயிலும் சக மாணவியின் உடல் காட்சி எனப் பரபரப்பாகப் பத்திரிகைகளில் பேசப்பட்ட விஷயங்கள் மட்டுமே அல்ல. அந்தக் காலத்து சரோஜா தேவி புத்தகங்களைப்போல இன்று பாலியல் இணைய தளங்கள் லட்சக்கணக்கில் இயங்கி வருகின்றன.

1840-இல்தான் முதன்முதலாக நிர்வாணமாகப் பெண்ணின் புகைப்படம் வெளியிடப்பட்டதாகக் கூறு வார்கள். இந்த 160 ஆண்டுகளில் விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சியின் விகிதத்துக்கேற்ப பெண் உடல் பாலியல் வியாபாரப் பொருளாக மாறி வரும் வேகமும் அதிகரித்துள்ளது. பெண் உடல் இப்படிப் பயன்படுத்தப் படுவது என்பது பெண்ணை வெறும் உடம்பாக்கி நம் சக மனுஷியை ஒரு உடம்புக்குள் பூட்டி வைத்துச் சித்ரவதை செய்வதன்றி வேறென்ன?
தன் உடலையே தாண்டி வெளிவர முடியாத நிலையில் பெண்ணை இருத்தி வைத்து அவளுடைய சிந்தனை, அறிவாற்றல், படைப்பாற்றல், அரசியல் மதிநுட்பம், ஆளுமை என எல்லாவற்றையும் அழித்து ஒழித்து விடுகிறோம். பெண் தன் உடலைத் தாண்டுவது எப்படி? ஆண்களாகிய நாம்  பெண்ணை உடலுக்கு அப்பால் சென்று மனுஷியாகப் பார்ப்பது எப்படி? வரலாற்று ரீதியான வாய்ப்புகள் என்ன?இவையெல்லாம் ஆண்களும் பெண்களும் சேர்ந்த இச்சமூகம் ஆழமாக விவாதித்துச் செயலுக்கு முன்னகர்த்த வேண்டிய கேள்விகள்.

5

மனுஷிகளை 'அழகி'களாக இந்த ஆணாதிக்க சமூகம் வடிவமைக்கத் துவங்கிப் பல காலம் ஆகி விட்டது. கிளியோபாட்ரா, பாக்தாத் பேரழகி என்றெல்லாம் "நாட்டிலேயே பெரிய அழகி" என்று கதையை ஆரம்பித்து அந்த அழகிகளுக்காகப் போரிட்ட கதை களைக் காவியங்களாக்கிக் காலப்போக்கில் அந்த அழகியைப்போல ஒரு பெண்ணைத் தேடுகிற ஆண் மனம் உருவாகி அதன் மறுபக்கம் அந்த ஆண்மனம் விரும்பும்படியான உடலழகு தனக்கு அமைய வேண்டுமே எனத் தன் உடலை ஆணின் ரசனைக் கேற்ப தயாரிக்கிற நிலைக்குப் பெண் தள்ளப்பட்டாள் - சாதாரண குடும்பத்துப் பெண்களும்தான். காலச்சுழற்சியில் பெண் தன் உடலை மட்டுமின்றி, தன் ருசிகள், விருப்பு -வெறுப்புகள், கருத்துக்கள் என எல்லாவற்றையுமே ஆணின் - ஆணாதிக்கச் சமூகத்தின் விருப்பப்படி தகவமைக்கத் துவங்கினாள்.

உழைப்பாளி வர்க்கத்தில், விவசாயக் குடும்பங்களில் நல்ல உழைப்பாளிப் பெண்கள், திடகாத்திரமான பெண்கள், வீட்டில் எல்லோரையும் பேதமின்றிப் பராமரிக்கின்ற பெண்கள் மதிக்கப்படுவது இன்றும் தொடர்கிறது. ஆனால், மத்திய தர வர்க்கம் துவங்கி அதற்கு மேற்பட்ட வர்க்கங்களில் பெண்கள் பணிவிடை செய்தால் மட்டும் போதாது; தன்னை 'அழகி'யாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். தம்மை அழகுபடுத்திக் கொள்வது ஒன்றும் தவறான காரியமல்ல. அது ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான அளவில் ஆரோக்கியமான அளவில் இருக்கலாம்தான். ஆனால், நடப்பில் இந்த அழகு என்னவாகி நிற்கிறது? பெண் என்றால் அழகு. அழகு என்றால் பெண் என்று ஆகி, அப்புறம் அந்த அழகு என்பதன் விளக்கத்தையும் ஆணுலகம் சொல்லும். கவிதைகளிலும் பாடல்களிலும் ஓவியம் சிற்பங்களிலும் பெண் உடல் செதுக்கப் பட்டுள்ளது. அது ஆண்-பெண் இருவர் மனங்களிலும் பெண்ணின் உருவாகச் செதுக்கப்பட்டுவிடுகிறது. இன்றைக்கு அழகான பெண் - அழகில்லாத பெண் என்பதற்கான எழுதப்படாத, ஆனால் எல்லோரும்ஏற்றுக்கொண்டுவிட்ட, இலக்கணம் இருக்கிற தல்லவா? இந்த ஏற்பு ஒரு நாளில் ஏற்பட்டதல்ல. கால ஓட்டத்தில் வந்து சேர்ந்தது. தானாக உருவான ஒன்றும் அல்ல. கட்டமைக்கப்பட்டு நம் தலைகளில் ஏற்றப்பட்டது. அந்தக் காலத்துக் கிளியோபாட்ரா தன் சரும அழகைப் பேணுவதற்காகத் தினசரி கழுதைப் பாலில் குளிப்பாளாம். அப்படி ஒரு கதை உண்டு. அதே கழுதைப் பால்தான் இன்று ஆயிரம் பவுடர்களாக, சோப்புகளாக, கிரீம்களாக மாறி உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.  அழகுத் தொழிற்சாலை இன்று உலகின் மிகப்பெரிய தொழிலாக மாறியுள்ளது. அதன் மிகப் பெரிய இரையாகப் பெண்கள் பலியாகி வருவதைப் பார்க்கிறோம். 

"உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு" என்று எவனோ ஒரு மடையன் அன்று தொடங்கி வைத்தான். அது வளர்ந்து பெருகி அழகான பெண்ணின் உருவம் சைஸ் வரை 28-22-34 என்று மார்க் போடு கிற எல்லை வரை போய் நிற்கிறது. பெண்கள் எப்படி உடம்பை வைத்துக் கொள்ள வேண்டும் என்று அன்றாடம் தொலைக்காட்சிகளில் வகுப்பு நடக் கிறது. அதன்படி நடந்து அரைப்பட்டினி கிடந்து அழகிகளாகிவிட்ட பெண்கள் அடுத்த கட்டமாக மாடலிங் - விளம்பரப் பெண்களாக தங்கள் உடம்பை முதலீடு செய்யச் சொல்கிறார்கள். கார் விளம்பரத்திலிருந்து கழுதைத் தீவனம் வரை இந்த 'அழகிகள்'தான் வந்து நம்மோடு பேசுகிறார்கள். அட விடுங்க சார்... ஏதோ தொழில் - வியாபாரம் விளம் பரம் என்று இதை விட்டுவிட முடியுமா? தொடர்ந்து நம் ஆண் - பெண் குழந்தைகளின் தலையில் அவர் களின் உடல்பற்றி, அழகுபற்றி ஒரு கருத்து வலுவாகக் கட்டமைக்கப்பட்டு வருகிறது. கல்லூரியில் படிக்கும் 20 வயதுப் பெண்கள்கூட ஒரு சோப்பு டப்பா சைஸில் டிபன் பாக்ஸ் கொண்டு சென்று ‘சாப்பிடுகிறார்கள்'. இது ஆரோக்கியத் துக்குக் கேடல்லவா? இதற்குக் காரணம் என்ன? 'அழகு' பற்றிய பிரச்சாரம் ஆழமாகப் பாய்ந்து விட்டதுதானே? இன்னும் அடுத்த கட்டமாக பாலியல் சார்ந்த திரைப்படங்கள் மற்றும் இணையதளங்களின் பெருக்கம். போர்னோகிராபி என்று நாகரிகமாக அதை ஒரு 'கலை'போலச் சொல்லிக் கொண்டு வக்கிர அலைகளை ரகசியமாய் நம் பண்பாட்டு வேர் களில் பாய்ச்சுகிற வேலை நடக்கிறது. அழகாகக் 'காட்டிக்கொள்ள' வேண்டும் என்கிற ஆசையின் உச்சமாக - எதிர்மறைப் பக்கமாக இது வந்து சேர்ந்துள்ளது. எல்லாவற்றிலும் இரையாகப் பலியாவது பெண்கள். 

ஆகவே, எது அழகு என்று இன்று நம் மூளை களில் பதிவாகியிருக்கிறதோ அதைக் கேள்விக்குள்ளாக்குவது அவசியம்.. பெண்மை யின் பிரிக்க முடியாத அம்சமாக அழகை 'அட்டாச்' பண்ணி வைத்துள்ளார்கள். அதைப் பிச்சு எடுப்போம். அழகு எது என்பதற்கு, புதிய அர்த்தத்தை நாம் வடிவமைத்து நம் பண்பாட்டுத் தளத்தில் பரவ விட வேண்டும். "பொண்ணு சுமாராத்தான் இருக்கு. கூட ஒரு பத்துப் பவுன் நகை போட்டா பேசலாம்" என்பது போன்ற பேச்சுக்கள் நம் சமூகத்தில் சகஜமாக நடக்கிறது. "ரெண்டாவது பொண்ணு கிளி மாதிரி இருப்பா. எவனும் கொத்திக்கிட்டுப் போயிடுவான். மூத்தவளைத் தள்ளித்தான் விடணும்' என்று வீடுகளில் சாதாரணமாகப் பேசுவதைக் கேட்கலாம். அழகு 'குறைந்த' பெண்களின் மன உணர்வுகள் பற்றிப் போதிய அளவுக்கு நம் சமூகமனம் கவலை கொள்வதில்லை. தான் அவ்வளவு அழகாக இல்லை என்று ஒரு பெண் உணர வைக்கப்படுவது எத்தனை கொடுமை. குறிப்பாக இளம் வயதில் அப்படி உணரும் பெண்கள் மனதில் உருவாகும் தாழ்வுணர்ச்சி அவர்களின் குணாதிசயத்திலும் எதிர்பாராத தாக்கங்களை ஏற்படுத்துகிறது. 

தான் ஒரு அழகி என்று பிறரால் வார்த்தைகளாலும் பார்வைகளாலும் போற்றப்படும் பெண்மனம் கொள்ளும் சிறு கர்வமும் பெருமிதமும்கூட ஒரு விதத்தில் வெட்டிப் பெருமைதானே. தன் அறிவின் மீது, தன் நடத்தை மீது, தன் திறன்கள் மீது, தன் உழைப்பின் மீது நம்பிக்கையும் கர்வமும் கொள்கிற திசையில் அப்பெண்மனம் செல்ல விடாமல் இது தடுக்குமல்லவா? ஆண்களின் பார்வையில் 'சொல்லப்பட்ட' இந்த அழகுகள் - பேரழகுகளைப் பொசுக்கிப் போடுவோம். இந்த ரசனையின் குரூர வடிவங்கள் ஈவ்டீசிங்கில் துவங்கி போர்னோகிராபி வரை பரவி நிற்பதை அன்றாடம் காண்கிறோம். தன்னைச் சுத்தமாக வைத்துக் கொள்வதும், மலர்ச்சியாக இருப்பதும், பிரியமுடன் பழகுவதும், புத்திக் கூர்மையுடன் சிந்திப்பதும் பேசுவதும், சமூக அக்கறையுடன் செயல்படுவதும் போன்றவற்றை அழகின் புதிய அர்த்தங்களாக நாம் முன்வைக்கலாம். தாழ்வுணர்ச்சியின்றி பரஸ்பரம் அன்பைப் பரிமாறிக் கொள்ள போதுமான அளவுக்கான பூச்சுகளும் வாசனையும்கூட இருக்கலாம். ஆயுதக் குவியல்களை விட அதிகமாக உலகெங்கும் தயாரித்துக் குவிக்கப் படும் கப்பல் கப்பலான பூச்சுப் பொடிகளையும் பசை களையும் நம் பிள்ளைகளின் மூளைகளிலிருந்து (நம் மூளையிலிருந்தும்தான்) வழித்தெடுக்க ஒரு பண் பாட்டுப் போரைத் துவக்கிடுவோம். அழகு பற்றி நமது கருத்துக்களின்மீது கட்டி எழுப்பப்பட்டுள்ள அழகுத் தொழிற்சாலைச் சாம்ராஜ்யங்கள் இடிந்து வீழும்படி யான புதிய அழகின் முழக்கங்களை நாம் விவாதித்து வடிவமைப்போம்.


பேரா. ஆர்.சந்திரா கடிதம்:

 தாய்மை - தத்தெடுத்தல் சில மாயைகளும் உண்மைகளும் 


குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளலாமா என்ற கேள்விக்கு பதில் தருவது எளிதல்ல. தீவிரப் பெண்ணிய வாதிகள் 'தாய்மை' பெண்ணை அடிமையாக வைத்திருக்க உதவுகிறது என்ற கருத்தை தெரிவிக்கின்றனர். இந்தியாவில் ஒரு பெண் பிறவி எடுத்ததன் பயனே அவள் தாய்மை அடைவதில்தான் உள்ளது என அழுத்தமாக, தலைமுறை, தலைமுறையாக சொல்லப்பட்டு வந்துள்ளது. பெண்ணாக பிறந்ததற்கு 25 மதிப்பெண்கள் + பூப்படைதல் 25 + திருமணம் 25 + தாய்மை 25 என தாயானால் 100 மதிப்பெண்கள் வழங்கும் சமுதாயம் இது. அதனால்தான் திருமணம் ஆகாத, அல்லது திருமணம் ஆனால் குழந்தை பெறாத பெண்களை இந்தச் சமூகம் வினோதமாகப் பார்க்கிறது. மீடியாவும் இதையே வலியுறுத்துகிறது. ஒரு உதாரணம் : தொலைக்காட்சியில் 14.2.2008 அன்று அஜய் தேவ்கன் - கஜோலுடன் பேட்டி. அதில் ஒரு கேள்வி  -

அஜய் கொடுத்த பரிசுகளிலேயே சிறந்ததென எதை குறிப்பிடுவீர்கள்? 

சந்தேகத்திற்கிடமின்றி என் மகள் தான் அஜய் அளித்த சிறந்த பரிசு என கஜோல் பதிலளித்தார். எத்தனை கோடி சம்பாதித்தாலும் எவ்வளவு பிரபலமாக இருந்தாலும், எவ்வளவு படித்திருந்தாலும், கொள்ளுப்பாட்டி சொல்லும் பதில்தான் இன்றும் வெளிப்படுகிறது. பல சினிமா பாடல்கள் கூட இதே கருத்தையே வெளிப்படுத்துகிறது. குழந்தையே இல்லையென்றாலும் தத்து எடுக்கக் கூடாது. யார் பெற்றதோ? எப்படிப் பெற்றதோ என்றெல்லாம் கேள்விகள் கேட்போர் தத்தெடுப்பதை விரும்பு வதில்லை. இந்திய சமுதாயத்தில் கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து முடிவெடுத்து குழந்தைப் பெற்றுக் கொள்வ தில்லை,´Õ சில தம்பதிகளைத் தவிர. கணவன் காரணமாக இருந்தால் கூட, குழந்தை இல்லாவிட்டால், பெண்ணை மலடி என சாடும் சமூகம் இது. 

இன்று ஆண் - பெண் இருவரும் வேலைக்கு போகும் போது, குழந்தை வேண்டாம் என பெண்கள் கூறுவதை கேட்கிறோம். அமெரிக்காவில்  அறுபதுகளிலேயே குழந்தை வேண்டாம் என்றே பெண்கள் பதிலளித்தனர் என படித்ததுண்டு. வேலையில் பணி உயர்வு, பணி நிரந்தரம், ஓரளவு பொருளாதார வசதி முதன்மை படுத்தப்படுகிறது - கூட்டுக் குடும்பம் மறைந்து போன சூழலில், குழந்தையை யார் பொறுப்பாகப் பார்த்துக் கொள்வார்கள்? - கர்ப்ப காலத்திலேயே எவ்வளவு மன, உடல் உபாதைகள்? - நமது சமுதாயத்தில் தாய்மை - குழந்தை பராமரிப்பு ஒரு தனி நபரின் -தாயின் -பொறுப்பு -  அது குழந்தை வேண்டாம் அல்லது மகப்பேறை தள்ளிபோட பிரதான காரணமாக உள்ளது. ஆணைப் போலவே அலுவலக வேலை. வீட்டிற்கு வந்தபின்னர் குழந்தை பராமரிப்பு என்ற சுமையை இன்றைய படித்த நல்ல வருமானம் கிட்டும் வேலையில் உள்ள பெண்கள் மகிழ்ச்சியுடன் சுமக்கத் தயாராக இல்லை. - இன்றைய பெண்கள் தங்கள் விருப்பங்களை செக்ஸ், குழந்தை உட்பட - வெளிப்படையாக பேசுகின்றனர். அமைதியாக எல்லாவற்றையும் சகித்துக் கொள்ள தயாராக இல்லை. வேலைக்குô போகும் பெண் வேண்டும். ஆனால், தன் விருப்பங்களை வெளிப்படுத்தும் பெண்கள் ஆண்களுக்கு அச்சமூட்டுகின்றனர் என்பதே உண்மை. 

தத்தெடுத்துக் கொள்ளும் குழந்தை நம்மை வயதான காலத்தில் பராமரிக்குமா? நம் வயிற்றில் பிறந்த குழந்தையே பாசமில்லாமல் உள்ளதே? - குழந்தைகள் பெரியவர்களைப் பார்த்துதான் வளர்கின்றனர். நாம் நமது பெற்றோரை, நமது துணையின் பெற் றோரை எப்படி கவனித்துக் கொள்கிறோம் என்பதை குழந்தைகள் பார்த்து பதியவைத்துக் கொள்கின்றனர். நல்ல மதிப்பீடுகளைக் கொடுத்து வளர்த்தால், பெற்ற குழந்தையோ, தத்தெடுத்த குழந்தையோ, நாம் முதியோர் இல்லம் செல்ல வேண்டியிராது. – 

இன்னொரு கருத்து -ஒரு பெண் குழந்தை பெற்று, பாலூட்டாவிடில் மார்பகப் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது என்ற கருத்து பரவலாக உள்ளது. - குழந்தை பெற்று பாலூட்டின போதிலும் புற்று நோய் வர நிறைய வாய்ப்பு உள்ளது. 100ல் 8 பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருகிறது என்பது சமீபத்திய கூற்று. சுற்றுச்சூழல் உணவிலுள்ள நச்சு என பல காரணங்கள் மார்பகப் புற்று நோய் வர ஏதுவாக உள்ளது. - தத்தெடுக்க விரும்புவோருக்கு: (கணவன் - மனைவி / சேர்ந்து வாழும் ஆண் - பெண்) - முதல் குழந்தையை தத்தெடுத்துக் கொள்வது நல்லது. ஒரு வேளை பின்னர் குழந்தை பெற்றுக் கொள்ள நினைத்தாலும், இரு குழந்தைகளும் இணைந்து ஒன்றாக வளரும் சூழல் ஏற்படுவது நல்லது. - சாதி மதம் பார்த்துத் தத்தெடுக்கத் தேவையில்லை. ஒரு குழந்தை திறமையாக, நல்ல பண்புகளுடன் வளர வளர குடும்பச் சூழல் முக்கிய பங்கு வகிக்கிறது. அளிக் கப்படும் வாய்ப்புகள் முக்கியம். பெண் குழந்தையைத் தத்தெடுத்துக் கொண்டால் அப்பா எப்படி நடந்து கொள்வார்? தவறாக நடந்து கொள்கின்ற சம்பவங்களை வைத்து மட்டும் பார்க்கக் கூடாது. தனது பெண்ணிடமே தவறாக நடப்பவர்கள் உள்ளனர். எல்லா ஆண்களும் அப்படிப்பட்டவர்கள் இல்லை. பெண்களை சக மனுஷியாக பார்க்கும், பெண்க ளை மதிக்கும் ஆண்கள் அப்படி செய்ய மாட்டார்கள். விதி விலக்கை பொதுமைப் படுத்தக் கூடாது. இந்தியா போன்ற மக்கட்தொகை அதிகமாக உள்ள நாட்டில், நிராதரவாக உள்ள குழந்தைகளுக்கு ஒரு நல்ல குடும்பச் சூழல் தேவை. அதை கொடுக்கலாமே. எந்தக் குழந்தையாக இருப்பினும்  அதற்கு அன்பும், அரவணைப்பும், கவனிப்பும் தேவை என்பதை மனதில் கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வதா? தத்தெடுப்பதா என முடிவு செய்ய வேண்டும். 



6 


ஆள்பாதி ஆடைபாதி" என்றொரு பழமொழி நம்மிடம் உண்டு. அதாவது ஆள் எப்படி இருந்தாலும் நல்ல ஆடை அணிந்து டிப்-டாப் பாக மாற்றிவிடலாம். பெண்களின் ஆடை எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி சமூகம் தொடர்ந்து கவலைப்பட்டு வருகிறது. உலக வரலாற்றில் மனிதர்கள் ஆடை அணிந்தது பற்றி ஏராளமான கதைகள் உண்டு. எல்லோரும் அறிந்த கதை ஆதாம்-ஏவாள் கதைதான். ஆடையில்லாமல் - அது பற்றி ஒன்றும் அறியாதவர்களாக ஆதாமும் ஏவாளும் இருக்கையில் சாத்தானின் பேச்சைக்கேட்டு ஏவாள், விலக்கப்பட்ட கனியைக் கேட்டு ஆதாமை நச்சரித்து ஆப்பிளைக் கடிக்க - அதன் காரணமாக ஆடை பற்றிய வெட்க உணர்வு பிறந்து அதன்பிறகுதான் மனிதர்கள் ஆடை அணியத் துவங்கினார்கள் என்கிறது கதை.
பரிணாம வளர்ச்சியின் போக்கில் மனிதர்கள் தோன்றியதை விஞ்ஞானம் நிரூபித்த பிறகு ஆதாம் - ஏவாள் பெத்துப்போட்ட குட்டிகள்தான் உலகம் பூராவும் உள்ள மனிதர்கள் என்பது அன்றைய மனிதர்களின் வளமான கற்பனை என்றாகிவிட்டது. அந்தக் கட்டுக் கதையிலும்கூட மனிதனைக் கெடுத்தது பொம்பளை யான ஏவாள்தான் என்று ஆணாதிக்க சிந்தனை ஏற்றி வைக்கப்பட்டுள்ளது.

மனிதகுல வரலாற்றில் மனிதனுக்குப் பயனுள்ள பல பொருட்களைக் கண்டுபிடித்தது பெண்கள்தான் - விவசாயம், கூடை முடைதல், பானை செய்தல் என. அந்த வரிசையில் ஆடைகள் மற்றும் நெசவுக்கும் முன்னோடிகள் பெண்கள்தான். மாதவிலக்கு ஏற்பட்டு ரத்தப்போக்கு வரும்போது அன்றைய ஆதிப் பெண்கள் காடுகளில் கிடைத்த பஞ்சு, தோல் பொருட்களை பயன்படுத்தத் துவங்கிக் காலப் போக்கில் துணியைக் கண்டுபிடித்தனர் என்கிறது வரலாறு. விலக்கப்பட்ட கனி-வெட்கம் என்கிற வெங்காயம் ஒன்றும் காரணமல்ல. ரத்தப்போக்கு என்கிற உயிரியல் நிகழ்வை ஒட்டிய தேவையே ஆடைகளின் - துணிகளின் - கண்டுபிடிப்புக்கு இட்டுச் சென்றது. இன்றைக்கும் மலைவாழ் மக்களில் பல பிரிவினர் - பல நாட்டு மலைகளி லும் - ஆடையின்றியும் அரை உடம்புக்கு மட்டும் மறைப்போடும் வாழ்வதை நாம் பார்க்கிறோம். ஆகவே பெண்மையின் இலக்கணமாகக் கூறப்படும் வெட்கமோ கூச்சமோ துணிகளின் வருகைக்குக் காரணமல்ல. இயற்கைத் தேவையும் தட்பவெப்ப நிலைமையுமே காரணம். பனிப் பிரதேசங்களில் வாழும் எஸ்கிமோக்கள் என்றைக்குமே டவுசர், பனியனோடு லாந்த முடியாதல்லவா?

பெண்ணின் பாலுறவு சுதந்திரத்தைக் கட்டுப் படுத்தும் ஒரே நோக்குடன் அவள் மீது கற்பு என் கிற கோட்பாடு திணிக்கப்பட்ட சமயத்திலிருந்து தான் அவள் என்ன உடுத்த வேண்டும்? எப்படி உடுத்த வேண்டும்? என்கிற எழுதாச் சட்டங்களை யும் ஆணாதிக்கப் பண்பாடு உருவாக்கியிருக்க வேண்டும். ஆண் தன் மனதில் பெண் குறித்து சிறுகச் சிறுகக் கட்டி எழுப்பியுள்ள அழகியல் சூத்திரங்களும் கோட்பாடுகளும் அதீதமானவை. இயல்பானவையாக இல்லை. பெண் குழந்தைகளுக்கு விதம்விதமாய் ஆடை கட்டி அழகு பார்க்கும் - ஆழ்ந்து ரசிக்கும் ஆண் மனம் முதுமை தவிர்த்த பிற எல்லாப் பருவங்களிலும் பெண்ணைத் திரை  விலக்கிப் பார்க்கவே பழகி யுள்ளது.
வீரச்செயல் புரிந்திட முடிவெடுத்த பெண்கள் பெண் உடை தவிர்த்து ஆண் உடை தரித்தே களம் இறங்கியுள்ளனர். மேற்குலகின் ஜோன் ஆப் ஆர்க், நமது கட்டபொம்மனின் தளபதி வெள்ளையத் தேவனின் மனைவி வெள்ளை யம்மாள், விவசாயத் தோழர்களை அணிதிரட்டிய தோழர் மணலூர் மணியம்மை என்று சொல்லிக் கொண்டே போகலாம். பெண் உடை என்பது வீரம், அறிவு போன்ற அம்சங்களோடு பொருந் தாது என்கிற கருத்து காலம் காலமாக இருந்து வருகிறது. அதனால்தான் தோழர் மாசேதுங் சீன நாடு முழுவதும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே பச்சை நிறப் பேன்ட்டும் முழுக்கைச் சட்டையும் தொப்பியும் கொடுத்து அணியச் செய்தார். சீனத்தில் நடந்த கலாச்சாரப் புரட்சியில் பல அதீத முடிவுகள் எடுக்கப்பட்டன என்கிற விமர்சனங்கள் ஒருபுறம் இருக்கலாம். ஆனால் ஆடைகளால் உண்டாகும் ஆண்-பெண் பேதம் மற்றும் ஆடையின் மீது தடவப்பட்ட இனக் கவர்ச்சி போன்றவற்றின் மீது அந்தக் கலாச்சாரப் புரட்சி வலுவான அடி கொடுத்தது என்பதை நாம் மறுக்க முடியாது.

ஆடை அணிகிற சமூகமாக மனிதகுலம் மாறிவிட்ட பிறகு அணிந்திருக்கும் ஆடையை அவிழ்ப்பது என்பது அவமதிப்பாக மாறுகிறது. அதிலும் சபை நடுவே வைத்துப் பிறர் பார்க்க ஆடை பறிப்பது என்பது பெரிய மானப் பிரச் சனை ஆகிறது. இந்த விஷயத்திலும்கூட பெரிதும் இலக்காவது பெண்களாகவே இருக்கிறார்கள்.
பாஞ்சாலியை சபை நடுவே துகிலுரிந்த கதை நமக்குத் தெரியும். ஒரு இனத்தை ஒரு சாதியை ஒரு மதத்தை இழிவுபடுத்த வேண்டும் என்று பிற இன, சாதி, மதத்தைச் சார்ந்தவர் நினைத்தால் அந்த இனத்துப் பெண்களை ஆடை பறித்து நிர்வாண மாக்குவதன் மூலமே அதைச் சாதிக்கின்றனர். அதன் மூலம் மாற்று இனத்தவரின் மானங் கெடுத்து மனம் குலையச் செய்து விட முடிகிறது. பெண்களின் ஆடை இவ்விதமாக ஒரு இனத்தின் மானம் காக்கும் ஆடையாக அடையாளமாக மாறிப்போகிறது. - அவளுக்கு அதில் சம்மதம் உண்டா இல்லையா என்பது பற்றி எந்தக் கவலை யும் இல்லை. இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்த போது இந்துக்களும் முஸ்லிம்களும் எதிர் தரப்புப் பெண்களை நிர்வாணப்படுத்தி சபையில் அணி வகுத்து நடக்கச் செய்த கொடுமைகள் ஏராளமாக நடந்தன.

குமரி மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட பெண்கள் மேல்சாதியினர் வரும்போது மேலாடை விலக்கி நிற்க வேண்டும் என்று சட்டம் இருந்ததையும் அதை எதிர்த்துத் தோள் சீலைப் போராட்டம் நடந் ததையும் தமிழக வரலாறு நமக்குக் கூறுகிறது. அப் பகுதியில் இக்கொடுமை காரணமாக கிறிஸ்துவத் துக்கு மதம் மாறிய மக்கள் மேலாடை அதாவது 'குப்பாயம்' எனப்படும் சட்டை அணிந்திட அனுமதிக்கப்பட்டார்கள்.  "குப்பாயம் தந்த கர்த்தரே வாழி" என்று நாட்டுப்புறப் பாட்டு கர்த்தரை சட்டை கொடுத்த சாமியாகவே அடையாளப்படுத்துகிறது.

இவை ஒருபுறம் இருக்க, இன்று தமிழகத்தில் பல கல்லூரிகளில் பெண்களுக்கு மட்டும் னசநளள உடினந எனப்படும் ஆடை ஒழுங்குமுறைச் சட்டங்கள் உள்ளன. சென்னையில் உள்ள பிரபல மான கல்லூரி ஒன்றில் சிறப்புரை ஆற்ற அழைக்கப்பட்ட கவிஞரும் திரைப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை சுடிதார் அணிந்து - ஆனால் மேலே துப்பட்டா இல்லாமல் வந்த காரணத்தால் உள்ளே அனுமதிக்கப் படவில்லை. இதுகுறித்துப் பரவலாக சர்ச்சைகள் நடைபெற்றன. அப்படின்னா பொம்பளைங்க எப்படி வேணுமானா டிரஸ் பண்ணிட்டு வரலாமா என்றும், ஆண்களின் மனதைக் கெடுத்துச் சீரழிப்பதே இன்று கல்லூரி மாணவிகள் அணிந்து வரும் உடைதான் என்றும் ஒரு  கருத்து வலுவாக இருக்கிறது.

பள்ளி, கல்லூரிகளில் சீருடை இருப்பது பற்றிப் பெரிய ஆட்சேபம் நமக்கில்லை. ஏற்றத்தாழ்வின்றி சமமான உடை அணிதல் வரவேற்கத்தக்கதே. ஆனால் துப்பட்டா அணியாவிட்டால் ஆண்களின் மனம் கெட்டுக் குட்டிச் சுவராகிவிடும் என்று கூறுவது ஆணாதிக்க சிந்தனையின் உச்ச கட்டமாகும். பெண்களை முகம்பார்த்துப் பேசு வதற்கு முடியாமல் அவளைக் கழுத்துக்குக் கீழே பார்க்கும் பார்வைக்குப் பழகிவிட்ட ஆண் மனதை விமர்சிக்காமல் இங்கே மீண்டும் மீண்டும் பெண்ணே குற்றவாளி ஆக்கப்படுகிறாள்.

நன்கு போர்த்திக் கொண்டு - முக்காடு போட்டு - அல்லது முஸ்லிம் பெண்கள் போல் முழு உடலை யும் கறுப்பு அங்கியால் மறைத்துக் கொண்டு போனால்தான் பாதுகாப்பு என்கிற மனநிலை எப்படி வந்தது?ஈவ் டீசிங் கொடுமையால் கொல்லப்பட்ட அல்லது தற்கொலை செய்து கொண்ட மாணவிகள் - இளம்பெண்கள் - சரிகாஷா போல -யாருமே அரை குறை ஆடையோடு போகவில்லை. முழுக்கவும் போர்த்துக்கொண்டு போனவர்கள்தான். அப் போதும் அவர்கள் வக்கிரமாகப் பார்க்கப்பட்டார்கள். ஆகவே பிரச்சனை உடையில் இல்லை. ஆணின் "பார்வை"யில் அடங்கியிருக்கிறது.

பெண்களின் கண்ணைப் பார்த்துப் பேசப்பழகாத ஆண் மனம்தான் திருத்தப்பட வேண்டுமே ஒழிய அதற்கும் பெண்ணையே பொறுப்பாக்கி டிரெஸ் கோட் கொண்டுவருவது ஆணாதிக்க சிந்தனைகளுக்கு சட்ட வடிவம் கொடுப்பதேயாகும்.                                

 7                                 

அழைப்பு விடுக்க வேண்டிய பார்வை
அடங்கி அடங்கியே சமிக்ஞை மறந்து போச்சு
அழைக்கும்போது
இணங்கி இணங்கியே
காமமும் காதலும் மரத்துப்போச்சு

-உஷா சுப்பிரமணியன்

20ம் நூற்றாண்டை பெண்கள் பேசத் துவங்கிய நூற்றாண்டாகக் குறிப்பிடுவர் வரலாற்று ஆய்வாளர்கள் எனத் துவக்கத்தில் குறிப்பிட்டோம்.. அவர்கள் பேச்சு ஆண் மனதை குற்ற உணர்வு கொள்ளச் செய்கிறது. தூக்கி எறியப்பட முடியாத கேள்வியாய் உங்கள் முன் பிரசன்னமாகி யுள்ளேன் என்று போர்ப்பிரகடனம் செய்து அவர்கள் வருகிறார்கள்.


பார்த்தல், கேட்டல்
ருசித்தல், மணத்தல்
உணர்தல் இவற்றுடன்
பகுத்தறிதல் என்பனவும் எமக்குண்டு

-என்று சுல்பிகா பாடும்போது எனக்கு இன்குலாபின் மனுசங்கடா நாங்க மனுசங்கடா உன்னைப்போல அவனைப் போல எட்டுச்சாணு உசரமுள்ள மனுசங் கடா -என்கிற தலித் பாடல்தான் நினைவுக்கு வருகிறது. ஆணுக்காகவே- ஆணின் துணைக்கிரகமாகவே வாழ நிர்பந்திக்கப் பட்டவள் பெண். அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல் நிச்சமும் பெண்பாற்குரிய என்ப -என்றும் இப்பண்புகள் தலைவிக்கு மட்டுமல்ல தோழி, செவிலித்தாய், நற்றாய் ஆகியோருக்கும் பொருந்தும் என்பதாக உயிரும் நாணும் மடனும் என்றிவை செயிர்தீர் சிறப்பின் நால்வர்க்கும் உரிய -என்றும் தொல்காப்பியம் வற்புறுத்துகிறது. விவசாயி படத்தில் எம்.ஜி.ஆர் பாடுவது போல ஒரு காட்சி.

இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பள
இங்கிலீசு படிச்சாலும் இன்பத் தமிழ் நாட்டிலே
- என்ற வரிகளோடு வரும்.
பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று காலம் காலமாகத் தொடர்ந்து ஆண்சமூகம் சொல்லிக் கொண்டே வந்திருக்கிறது. இயல்பாக அவர்களை நாம் வாழவிடவில்லை. இன்று எவையெல்லாம் பெண் களுக்குப் பிடித்தவை என்று சொல்லப்படுகின்றனவோ அவையெல்லாம் உண்மையிலேயே அவர்களுக்குப் பிடித்தவையா-அவர்களுக்குப் பிடித்தவை இவைதான் என்று காலம் காலமாக ஆண்களால் சொல்லப்பட்டு வந்ததால்  பெண்களின் மூளையில் அதுவே சரியென்பதாகப் படிந்துபோய் பிடிக்கிறதா என்று இப்போது நாம் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

தோட்டமும் உன்னதல்ல
நிலமும் உன்னதல்ல
பண்படுத்திப் பசளை
இட்டவள் - நீ

காயும் உன்னதல்ல
கனியும் உன்னதல்ல
காவல் நின்று
கண்விழித்தவள் - நீ

கூலியும் உன்னதல்ல
கொடுப்பனவும் உன்னதல்ல
கொளுத்தும் வெயிலில்
களைத்து நின்றவள் - நீ

மலரும் உன்னதல்ல
மணமும் உன்னதல்ல
மடிதாங்கிக் கொடி
வளர்த்தவள் - நீ

-மாற வேண்டும் நீ கவிதையில் விஜயலெட்சுமி.

பொருள் ஈட்டும் பொருட்டுத் தலைவன் தலைவியைப் பிரிந்தபிறகு பசலை படர்ந்து கை வளையெல்லாம் கழன்று விழ, தலைவி படும் துயரம் பற்றி ஏராளமான பாட்டுக்கள் நம் கைவசம் உண்டு. இன்றும் ஆண்கள் வெளியே பிழைக்கப் போகிறார்கள். துபாய்க்கும் சவுதிக்கும் போய்விடுகிற ஏரளாமான இஸ்லாமிய இளைஞர்களின் மனைவி மார்கள் இங்கே அப்படித் தனித்துக்கிடக்கும் துயரத் தை மீரான் மைதீனின் படைப்புகளிலும் ஜாஹீர் ராஜாவின் நாவல்களிலும்  நாம் காண் கிறோம். பெரும்பாலான பெண்கள் ரத்தத்தில் ஹ்யூமோகுளோபின் குறைவால் அவதிப்படுகிறார் கள் என்பது சர்வே எதுவும் எடுக்காமலேயே நம்மால் சொல்ல முடியும் உண்மை யாகும். அதற்கு முக்கியமான காரணம்என்ன என்று பார்த்தால் தனிமைதான். அவர் இல்லாத போது நமக்குன்னு என்னத்தைப் பொங்கி என்னத்தைத் திங்க என்கிற சலிப்பில் ஏதோ இருக்கிற பழையதைக் கொஞ்சம் சாப்பிட்டுச் சாப்பிட்டு இப்படி ஆகி விடுகிறார்கள். சங்க காலத்தில் பசலை படர்ந்த பெண்க ளெல்லாம் இப்படி ஹ்யூமோகுளோபின் குறைவினால் அவதிப்பட்டிருக்கக்கூடும். தூக்கம் கெட்டுப்போன அப்பெண்களை செவ்வரி ஓடிய கண்கள் என்றும் அனீமிக்காக இருந்ததை பச்சை நரம்போடிய கைகள் என்றும் ஆண்கள் பாட்டெழுதிப் பரவசப்படுத்தி அப்படியே இருத்திவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மெடிக்கல் செக்அப் செய்ய வேண்டிய பிரச்சனையை குஷியாகப் பாட்டெழுதிக் கொண்டு போன கொடுமையை நாம் என்னவென்பது?
அதேபோல அவர் இல்லாதபோது தன்னைப் பரா மரித்துக் கொள்ளவும் அழகுபடுத்திக் கொள்ளவும்கூட அவளுக்கு உரிமை இருந்ததில்லை. அதாவது தன் உடலைக் கொண்டாடும் உரிமையோ பாதுகாக்கும் உரிமையோ அவளுக்கிருந்த தில்லை. தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் உரிமையும் அவளுக்குக் கிடையாது. புதிய மண்பானையில் ஊற்றி வைக்கப்பட்ட தண்ணீர் வெளிப்புறத்தில் திவலை களாகத் தெரிவதுபோல அவளது உடல்மொழியால் தான் அவள் தன் காதலையோ காமத்தையோ வெளிப் படுத்த முடியும்.

தன்னுறு வேட்கை கிழவன் முற்கிளத்தல்
எண்ணுங்காலைக் கிழத்திக்கில்லைப்
பிறநீர் மாக்களின் அறிய ஆயிடைப்
பெய்நீர் போலும் உணர்விற்றென்ப -(தொல்காப்பியம்)

ஆண்டாள்தான் தமிழில் முதன்முதலாகத் தன் காமத்தை வெளிப்படையாகப் பேசியவள் என்பார்கள்.

அவரைப் பிராயம் தொடங்கி என்றும்
ஆதரித்தெழுந்த என் தடமுலைகள்
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுது வைத்தேன்
திருமாலுக்கே தன் உடல் சொந்தம் என்று அவள் பாடியதால்தான் அவளை விட்டு வைத்தார்கள் போலும்.
இவையெல்லாம் தன் பண்பாட்டின் பெருமைக்குரிய விடயங்களாகக் காலம் காலமாக நம் சமூகம் பேசி வந்திருக்கிறது. உண்மையில் இவை கடுமையான மனித உரிமை மறுப்புப் பிரச்சனைகளாகும். மனித உரிமைகள் பற்றிய தன்னுணர்வு இல்லாத பழங்காலத்தில் இவை பாடு பொருட்களாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று அவை கடுமையாக விமர்சிக்கப்பட வேண்டியவை.

மனிதரின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை இருப்பிடம் ஆகிய மூன்றும் பெண்களைப் பொறுத்த வரை ஆணாதிக்க சமூகத்தால் கட்டுப்படுத்தப்பட்டவை யாகவே காலம்காலமாக இருந்து வருகின்றன.
நாம் ஏற்கெனவே பெண் உடை தொடர்பாகச் சில கருத்துக்களைப் பார்த்தோம். அவள் எப்படி உடுத்த வேண்டும் என்று சொல்வதே அராஜகம். ஆனால் அதையும் தாண்டி அவளே வெறும் அலங்காரம்தான் என்கிற எல்லை வரை நாம்  சென்றிருக்கிறோம். கொலுசு, மிஞ்சி, துகில், மெட்டி, ஒட்டியாணம், சங்கிலி சரப்புளி என ஆண்கள் தயாரிக்கும் ஆபரணங்களோடு தொடர்புடைய ஒன்றாக- ஒரு சடப்பொருளாகப் பெண்ணை, பெண் உடலை நாம் ஆக்கி வைத்திருக்கிறோம்.
பெண் உடம்பின் ஒவ்வொரு அங்கம் குறித்தும் எவ்விதமாக வர்ணிக்கவேண்டும் எவற்றை உவமையாகச் சொல்ல வேண்டும் என்பதற்கு இலக்கணம் எழுதுகிற அளவுக்கு கேடுகெட்ட பண்பாட்டை நாம் கொண்டிருக்கி றோம். இதுபற்றி பேராசிரியர் அ.செல்வராசு உற்று நோக்கலும் இலக்கண உருவாக்கமும் என்கிற கட்டுரையில் விரிவாக ஆய்வு செய்து எழுதியுள்ளார்.
பெண்ணின் மார்பகம் பற்றி (கொங்கைகள்) உவமைப்படுத்தத் தக்கன என இலக்கணம் கூறும் வெண்பா இது.

பாங்கரும்பு சூது கிண்ணம் பைங்குரும்பு செப்புமுடி
கோங்கரும்பு தாளங்குமிழி சிமிழ்-பூங்கமலம்
பம்பரம் வெற்பிளநீர் பந்து சகோரங் கலசம்
கும்பருப்பி யானை குடம்

உண்மையில் இது பெருமைக்குரியதா? இது நம் இலக்கிய மரபு - பாரம்பரியம் - புடலங் காய் என்று கொண்டாடுவதா? ஈவ் டீசிங்கில் இச்செய்யுளைத் தூக்கி உள்ளே போடுவதா?

jmms

unread,
May 29, 2009, 3:39:21 AM5/29/09
to tamizh...@googlegroups.com, பண்புடன்
நல்லதொரு பதிவு...

நம் குழந்தைகளை ஒரு மாற்றத்தோடு வளர்க்க உதவும், நாம் மாறாவிட்டாலும்...

jmms

unread,
May 29, 2009, 3:59:10 AM5/29/09
to tamizh...@googlegroups.com, பண்புடன்



அறிவியல் பூர்வமாகவும் உயிரியல் பூர்வமாகவும் பெண் குழந்தை பெறுவது நல்லது என்று இருக்கலாம். ஆனால், பண்பாட்டு ரீதியான வரலாற்று ரீதியான வன்முறைகளின் பின் னணியில் அவள் கருச்சுமந்து உயிரைப் பணயம் வைத்துப் பிள்ளையைப் பிரசவித்துத் தானே பாலூட்டி, தானே சோறூட்டி, தானே ஆய் கழுவி, தானே துணி துவைத்து, தானே வளர்ப்பதை மாட்டேன் என்று மறுப்பதற்கு அவ ளுக்குச் சகலவிதமான உரிமையும் உண்டு என்று ஆயிரம் மலைகளில் ஏறி நின்று உரக்கக் கூவலாம்.

:))) கேட்க நல்லாருக்கு..

ஆகவே, இது வரையிலான வாதங்களின் தொகுப்பாக, "பெண் பிறந்ததே குழந்தை பெற்றுத் தரத்தான். குழந்தை பெற்றால்தான் பெண் முழுமை யான பெண் ஆகிறாள் என்கிற நம் மூளைகளில் அழுத்தமாகப் படிந்து கிடக்கும் நாறக்கருத்தை மண்வெட்டி கொண்டு வழித் துப் போட வேண்டும்" என்று சொல்லி முடிக்கலாம். தந்தை பெரியார் "பெண்கள் தங்கள் கருப்பைகளை வெட்டி எறிய வேண்டும்" என்று ஆவேசத்துடன் கூறியதை இத்தகைய பண்பாட்டுத் தளத்தில் வைத்தே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நான் கல்லூரியில் படித்த நாட்களில் அனாதைக் குழந்தைகளுடன் காப்பகத்துக்கு என்எஸ்எஸ் முகாமுடன் சென்றபோது மிகுந்த மனப்பாதிப்புக்கு உள் ளானேன். தாயின் அரவணைப்பையும் தந்தையின் கதகதப்பையும் அனுபவிக்காத அக்குழந்தைகளின் முகங்களில் அந்த ஏக்கம் ஒரு இருட்டுப்போல அப்பிக் கிடந்ததைப் பார்த்தேன். அப்போதே என் மார்பில் பால் சுரந்தது போல உணர்ந்தேன். இதைச்சொன்னபோது அவள் குரல் நடுங்கியது.எனக்குக் கண்களில் ஈரம் கசிந்தது.

அருமை.

அப்புறம் சுனாமியில் அனாதைகளான குழந்தைகளை பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்தேன். நான் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டியதில்லை. அனாதைக் குழந்தைகளைத்தான் தத்தெடுத்து நான் பெற்ற பிள்ளைகளாக வளர்க்க வேண்டும் என்று தீர்மானமாக முடிவு செய்தேன்.
இவரும் திருமணத்துக்கு முன்பே பேசி சம்மதித்த பிறகே திருமணம் நடந்தது. ஆனால், பின்னர் அவர் சொந்தக்குழந்தைதான் வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தத் தொடங்கிவிட்டார்.

ஆஹா

கம்ப்யூட்டர் உலகில் என் இடம் நிலைக்க நானும் உழைக்க வேண்டியிருக்கிறது. ஒரு பெண்ணாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக பிள்ளை பெற்று ஐந்தாறு ஆண்டுகளை இழந்து நான் பின் தங்க வேண்டுமா என்கிற கேள்வியும் எனக்குள் இருக்கிறது. தத்துக் குழந்தைகளுக்கும் பெற்ற குழந்தைக்கும் எந்த வேறுபாடும் இருப்பதாக நான் உணரவில்லை. சின்னக் குழந்தையாகத் தத்து எடுத்தால் அது நாம் பெற்ற குழந்தையாகவே மாறிவிடும் என்று உறுதியாக நம்புகிறேன். இதில் எனக்கு எந்தக் குழப்பமும் இல்லை. மறுபரிசீலனை என்கிற பேச்சுக்கே இடமில்லை. எத்தனை லட்சம் அனாதைக்குழந்தைகள் நாட்டில் இருக்கிறார்கள்? கொஞ்சமாவது நமக்கு சூடு சுரணை வேண்டாமா?

சரியான கேள்வி.. 

அன்று முதல் இன்று வரை பெண் உடல் எப்படி இருந்தால் அழகு  என்று காலம்காலமாக இந்த ஆண் ஆதிக்க உலகம் ஒன்றை முன்வைத்து வருகிறது. அது ஆண்கள் மனதிலும் பெண் கள் மனதிலும் ஏற்றப்பட்டுள்ளது.

மிகச்சரி..



--
சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..
http://punnagaithesam.blogspot.com/ =============================

jmms

unread,
May 29, 2009, 4:16:48 AM5/29/09
to tamizh...@googlegroups.com, பண்புடன்


29 மே, 2009 3:13 pm அன்று, Geetha Sambasivam <geetha...@gmail.com> எழுதியது:
மறுபடியும் ஒரு முறை படிச்சுட்டுப் போறேன். நோ கமெண்ட்ஸ்!!!!


அப்படியெல்லாம் போக விடமாட்டோம்ல.. ஏதாச்சும் சொல்லுங்க சரி தப்புன்னு...:))

எனக்கும் சிலது  தவறாகத்தான் தோணுது.. என்னோட வளர்ப்புமுறை அப்படி..

ஆனா என் பிள்ளைகளை அப்படி தப்பா வளர்க்க கூடாதுன்னும் புரியுது...

lucky shajahan

unread,
May 29, 2009, 7:57:41 AM5/29/09
to panb...@googlegroups.com
Selvan..Please continue..


--
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*
லக்கி ஷாஜஹான்.

செல்வன்

unread,
May 29, 2009, 2:15:03 PM5/29/09
to panb...@googlegroups.com
கருத்தளித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.கட்டுரை ஆசிரியர் தமிழ்செல்வனுக்கே அனைத்து பாராட்டுக்களும்,விமர்சனங்களும் உரியன

2009/5/29 lucky shajahan <luckys...@gmail.com>

செல்வன்

unread,
May 31, 2009, 8:40:52 PM5/31/09
to பண்புடன்

எழுதியது ச.தமிழ்ச்செல்வன் 8


முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ,
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்
தான்துழந்து அட்ட தீம்புளிப்பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே - ( குறுந்தொகை : பாடல் 167 )

எவ்வளவு அழுக்கான ஆடையணிந்து புகை படிந்த கண்களோடும் தலைவி சமைத்துப்போட்டா லும் கணவன் அவள் சமையல் இனிது என்று பாராட்டுவதைக்கேட்டுத் தலைவி பிறர் அறியாவண்ணம் நுண்ணிதாக மகிழ்ந்தாள் என்று இப்பாடல் ஒரு காட்சியை விளக்குகிறது. ரொம்பப்புகழ் பெற்ற சங்கப் பாடல் இது. உண்மையில் இது மிகவும் ரசிக்கத்தக்க பாடல்தான். என்ன ஒரு ரசமான குடும்பக் காட்சி. ஆனால், மனைவி சமைத்துப்போட கணவன் பாராட்ட அதைக்கண்டு பெண் நாணிச் சிவக்க என்று குறுந்தொகைக் காலத்திலேயே இந்த ஆண் - பெண் வேலைப் பேதமும் உன் கை ருசியே தனிதான் என்று ஏமாற்றி அடுக்களையை அவளது சாம்ராஜ்ஜியமாகத் தலையில் கட்டியதும் வந்துவிட்டதே என்று நினைக்கை யில் பாடல் வருத்தமளிக்கிறது. தொல்காப்பியத்திலேயே,


ஏனது சுவைப்பினும், நீ கைதொட்டது
வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கு


- என்று பெண்கள் தலையில் மொளகா அரைக்கப்பட்டு விட்டதுதான்.
ஆனால், இங்கு நாம் அதுபற்றி விளக்கிப் பேசப்போவதில்லை. அதுபற்றிப் பின்னர் பார்க்கலாம். முதல் வரியில் வரும் காந்தள் மெல்விரலை மட்டும் எடுத்துக் கொள்கிறோம். கெட்டித்தயிரைப் பிசைந்த தால் சிவந்து போன ஒரு பெண்ணின் கை விரல்களைப் பற்றி இந்த வரி பேசுகிறது. அவ்வளவு மென்மை யான விரல்கள் என்று! இப்படியே ஆரம்பித்து பெண்மையை விட மென்மையான தலையணைகள் என்று இன்று கம்பெனிகள் விளம்பரம் செய்கிறவரை வந்து நிற்கிறோம்.

மென்மை என்பது பெண்மையின் ஓர் அம்சம் என்கிற கருத்து காலம் காலமாக நம் மனங்களில் கட்டமைக்கப்பட்டுள்ளது. வெள்ளைக்காரனும் வெண்டைக்காய்க்கு லேடீஸ் ஃபிங்கர் (பெண் விரல்) என்று பேர் வைத்து அங்கேயும் இதே கொடியை நாட்டி வைத்து நாங்களும் உங்களுக்குக் குறைஞ்சவங்க இல்லே என்று சொல்லிவிட்டான். மென்மையானவள் என்பதால் முரட்டு வேலைக்கு லாயக்கில் லாதவள் என்று சமூக உற்பத்தியின் பல தொழில்களிலிருந்தும் பெண் விலக்கி வைக்கப்படுகிறாள்.

சோசலிச சோவியத் யூனியனுக்குப் போய் வந்து தன் அனுபவங்களை எழுதிய ஏ.வி.மெய்யப்ப செட்டியார் அங்குள்ள அங்குள்ள பெண்கள் எல்லா வேலைகளும் செய்கிறார்கள். ஆகவே அவர்களுடைய கைகளெல் லாம் முரடாக இருக்கின்றன. பெண்களுக்குரிய மென் மையை அவர்கள் இழந்துவிட்டார்கள் என்று வருந்தி எழுதினர். எல்லா ஆண்களுக்குமே அப்படி ஒரு வருத்தம் இருக்கிறதுதான். கையைப் பிடித்தால் பஞ்சு மாதிரி மென்மையாக இருக்கணும் என்கிற எதிர்பார்ப்பு.
ஆனால், நாட்டின் பெருவாரியான உழைக்கிற பெண்களின் கைகள் முரடாகவும் உறுதிப்பட்டும்தான் இருக்கிறது. சங்க இலக்கியங் களும் உப்பு மூட்டைகள் சுமந்த உமணப் பெண்கள் பற்றிப் பேசுகிறது. தூத்துக் குடிக்குப் போனால் இன்றும் அதே உமணப் பெண்கள் உப்பளங்களில் பெட்டிகளை வைத்துத் தூக்கிச் சுமப்பதைக் காண முடியும். சாலைப் பணி களில், கரும்பு வெட்டும் தோட்டங்களில், உயர்ந்து எழு கின்ற கட்டிடங்களுக்கு ஊடே என்று பெண்கள் அரி வாளும் மண்வெட்டியும் பிடித்துக் கடினமான வேலை கள் எல்லாம் செய்கிறார்கள். மென்மை - மெல்லியலாள் என்கிற புருடாக்கள் எல்லாம் மத்திய தர வர்க்கம் மற்றும் அதற்கு மேல் உள்ள பெண்களின் தலையில்தான் பெரிதும் சுமத்தப்பட்டுள்ளது.

சிலப்பதிகாரத்தில் கண்ணகியை மண் மகள் அறியா வண்ணச் சீறடியாள் என்று இளங்கோவடிகள் குறிப்பிடு வார். கண்ணகியும் மிக வசதியான வீட்டுப்பிள்ளைதான். கண்ணகியின் பாதங்கள் மண்ணிலேயே பட்டதில்லை என்று பெருமையாகப் பேசினாலும் இன்னொரு பக்கம் அவளை வீட்டை விட்டு வெளியே விடாமல் அப்படி அடைத்து வைத்திருந்தார்கள் என்றும் பார்க்க வேண்டி யுள்ளது. உள்ளேயே பூட்டி வச்சிருந்தா காயும்கூட அவிந்து மென்மை யான கனியாகி விடுவதில்லையா? அதுபோலத் தான் பெண்ணும், மென்மையாக்கப் பட்டிருக்கிறாள். இது இயற்கை யான மென்மை இல்லை. பல்லாயிரம் ஆண்டுகளாகப் பூட்டி வச்சுப் பழுக்க வைத்த மென்மை.

மென்மையின் இன்னொரு முக மாக அவள் பலவீனமானவளாகச் சித்தரிக்கப்படுகிறாள். றுநயமநச ளுநஒ என்று ஆங்கிலமும் சொல்கிறது. ஆனால், அது அப்பட்டமான பொய். உடல்ரீதியாகவே பெண்தான் பலசாலி. ஆணின் உடலில் பருவத் தில் மீசை முளைப்பது போன்ற சிற்சில மாற்றங்களைத் தவிர வேறு எந்த சிக்கலும் சாகும் வரை ஏற்படுவதில்லை. ஆனால், பெண் மாதவிலக்கில் துவங்கி கருத் தரித்தல், குழந்தை பெறுதல், மெனோபாஸ் என உயிரைக் காவு கேட்கும் உதிரப்போக்கு நிறைந்த பல உயிரியல் ரீதியான மாற்றங்களைத் தன் உடம்பில் தாங்கியபடியே தன் வாழ்நாள் முழுவதையும் கடந்து கொண்டிருக்கிறாள். ஆண் சந்திக்கும் மற்ற எல்லாப் பிரச்சனைகளையும் இந்த உடல் பிரச்னைகளோடு சேர்த்துக் கூடுதலாகச் சந்திக்கிறாள்.

உடல்ரீதியாகவும் சரி மனரீதியாகவும் சரி பெண்தான் ஆணைவிடப் பலசாலி. ஆனால், நமது பொதுப்புத்தி யில் நேர்மாறான புரிதல் தான் அழுத்தமாகப் பதிவாகியிருக்கிறது.

பெண்மையின் மென்மை என்றால் என்ன என்பதற்கு நாம் கொண் டுள்ள புரிதல் ஆணின் தன்மைக்கு எதிரானது என்பதுதான். கடுமை, கடினம், முரடு, வலிமை, உறுதி போன்றவை எல்லாம் ஆண் குணம். இவற்றுக்கு எதிராக மென்மை என்பதை நாம் பெண்ணுக்குரியதாக முன்வைக்கிறோம். நாம் இத்தொடரின் ஆரம்ப அத்தி யாயங்களில் குறிப்பிட்டதுபோல ஆணையும் பெண்ணையும் பரஸ்பர எதிர்வுகளாக நிறுத்திப் பார்க்கும் கண் ணோட்டத்திலிருந்தே ஆணிடம் இல்லாது பெண்ணிடம், பெண்ணிடம் இல்லாதது ஆணிடம் என்று இதெல்லாம் இயற்கையின் படைப்பு போன்ற ஒரு தோற்றத்தை இயல்பானது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக வரலாற்றுப் போக்கில் உருவாக்கப் பட்டதுதான். பெண் ஆணுக்கு இணையாக முடியாது. மாறாக அவனிடம் இல்லாத சில பள்ளங்களை இட்டு நிரப்புபவளாக இருப்பதே இயற்கை அவளுக்கு இட்ட கட்டளை என்கிற கண்ணோட்டத்திலிருந்தே இக் கருத்துக்கள் பிறக்கின்றன. சமூகம் இப்படியாக ஏற்றத் தாழ்வுமிக்கதாக, வர்க்க சமூகமாக, உயர்ந்தோர் தாழ்ந் தோர் என்பதாக இருப்பது இயற்கையிலேயே நியாயம் என்பதை வலியுறுத்துகிற முக்கிய ஆதாரமாக இந்த ஆண் பெண் பேதம் பயன்படுகிறது. காலம் காலமாகப் பயன்படுத்தப்படுகிறது.

இந்தக் குணங்கள் என்பவை சும்மா வெறும் விவ ரணைகளாகவோ அலங்காரத்துக்கு ஏற்பட்டவையோ அல்ல. சமூகத்தில் ஆண் செய்பவற்றையெல்லாம் பெண் செய்யக் கூடாது. பெண் செய்வதற்கென்று சில இருக்கின்றன. அவை சமூகத்தின் சட்டங்கள் மட்டு மல்ல, இயற்கையின் விதியே அப்படித்தான் என்று அழுத்தமாகச் சொல்வதற்காகச் செயற்கையாகக் கட்டமைக்கப்பட்டவையாகும். ராஜஸ்தான் மாநிலத்தில் பன்வாரி தேவி என்கிற பெண்மணி இந்தக் கட்டுக்களை யெல்லாம் தாண்டினார். ஒரு சமூக சேவகர் என்கிற முறையில் அங்கு அமலில் இருக்கும் குழந்தைத் திருமணம் உள்ளிட்ட பல பிற்போக்கான பழக்க வழக் கங்களுக்கு எதிராக இயக்கம் நடத்தினார். உயர்சாதி ஆண்கள் சிலர் கூட்டாக அவரைப் பாலியல் பலாத் காரம் செய்தனர். அவரது சமத்துவ நடவடிக்கைகளை முடக்குவதற்காகவே அவர் மீது அவ்வன்முறை தொடுக்கப்பட்டது. பொம்பளைக்கு இதெல்லாம் தேவை யா? அவள் தன் எல்லையை மீறலாமா? மீறினால் இப்படித்தானே நடக்கும்? என்கிற கேள்விகளை மீண்டும் பொதுப்புத்தியில் எறிகிற சம்பவமாக அந்த வன்முறை நிகழ்த்தப்பட்டது.

ஆகவே, பெண்மை என்கிற பெயரில் அது பெண்மை, நளினம், தாய்மை, கருணை, தியாகம் என எதுவாக வும் இருக்கலாம். அக் குணங்கள் வெறும் அலங் காரத்துக்கும் ஆண் - பெண் வேறுபாட்டைச் சும்மா காட்டுவதற்காக வும் ஏற்பட்டவை அல்ல, அவற்றுக்கு ஒரு சமூகக் கடமை இருக்கிறது. செயல்பாட்டுத் தன்மை யோடு இணைப்பு இருக்கிறது.

ஒரு பெண் மீது சுமத்தப்படும் குணங்கள் (கவனிக்க: பெண்ணின் குணங்கள் அல்ல. பெண் மீது சுமத்தப்படும் குணங்கள்) பற்றி நாம் பேசுகையில் நாம் இரண்டு வித மாகப் பார்க்க வேண்டும். ஒன்று உயிரியல் ரீதியானது எவை என்கிற கேள்வி. இன்னொன்று பண்பாட்டு ரீதியாக அவள் மீது சுமத்தப்பட்டுள்ள குணங்கள் எவை என்கிற கேள்வி.

பிள்ளை பெற்றுக் கொள்வதும் பாலூட்டுவதும் உயிரியல் சார்ந்தவை. அது இயற்கையானது. இயல் பானது. அதைக் கேள்விக்குள்ளாக்க வாய்ப்பில்லை. அது நிச்சயமாக ஆணுக்குக் கிட்டாத வாய்ப்பு.


அதைத் தவிர தாய்மை, பெண்மை, மென்மை போன்ற மைகள் எல்லாம் யாரு வச்ச மை? என்று கேட்க வேண்டிய மைகள்தான். இவையெல்லாம் பண் பாட்டு ரீதியாக - வரலாற்று ரீதியாக - சமூக ரீதியாகப் பெண் மேல் சுமத்தப்பட்ட மைகள்தான். இவை அத்தனையும் நம் கேள்விக்கு உள்ளாகியே தீர வேண்டும். இவை யும் உயிரியல் ரீதியானவைபோல, இயற்கையின் படைப்புபோல ஒரு புரிதல் நம் (ஆண்-பெண்) எல்லோருடைய  மண்டைகளிலும் ஏற்றப்பட்டுள்ளன. அது பண்பாட்டின் வேலை. உண்மையில் பண்பாடுதான் ஒரு பெண்ணைக் கட்டமைக்கிறது. பெண் பிறப்பதில்லை. பெண் கட்டமைப்படுகிறாள் என்று சொல்வது இந்தப் பண்பாட்டுக் கட்டமைப்பைத்தான்.இந்தப்பண்பாடு என்பதுதான் என்ன? இது ஏன் இந்த மாதிரி வேலைகளையெல்லாம் செய்கிறது? அதைக் கேள்விக்குள்ளாக்கி மாற்ற முடியாதா? அதை யார் செய்வது? ஆண்களா? பெண்களா? இருவரும் சேர்ந்தா? 

                             9

ஆண்மை - பெண்மை என்பவை வெறும் உயிரியல் ரீதியானவையோ உடலியல் ரீதியானவையோ மட்டும் அல்ல. கடவுளால் அல்லது இயற்கையால் இப்படி இருக்கக் கடவது எனப் படைக்கப்பட்டவையும் அல்ல. நூற்றாண்டுகளாக மனித குலம் கடந்து வந்த பாதையில் - வரலாற்றின் போக்கில் - அவர்கள் கட்டமைத்துக் கொண்ட சமூக ஏற்பாடுகளின் - சிந்தனை மற்றும் செயல்பாட்டு முறைமைகளின் பகுதியாகவே ஆண்மையும் பெண்மையும் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆகவே, ஆண்மை அல்லது பெண்மை என்பவற்றின் பொருளும் பரிமாணமும் முக்கியத்துவமும் காலத்துக்குக் காலம் இடத்துக்கு இடம் மாறக் கூடியவையே. மாறிக் கொண்டேதான் வந்திருக்கின்றன.

இது தொடர்பாகப் பல்வேறு சிந்தனைப் பள்ளிகள் வேறு வேறு வியாக்கியானங்களையும் விளக்கங்களையும் தருகின்றன. மார்க்சிய சிந்தனைப் பள்ளிகள் ஆண் - பெண் உறவு, ஆண்மை - பெண்மை மற்றும் குடும்பம் இவை பற்றியெல்லாம் விரிவான ஆழமான முழுமையான பார்வையை முன்வைக்கின்றன. பாலினம் அல்லது பால்பாகுபாடு என்பது சமூகத்தில் தனித்து இயங்கும் ஒரு யதார்த்தமல்ல. சமூக முழுமையின் ஒரு பகுதியாகத்தான் அவற்றைப் பார்க்க வேண்டும் என்கிறது மார்க்சியம். ஆண்கள், பெண்களின் பங்கு மற்றும் இடம் என்பவை வெறும் செயல்பாட்டு ரீதியான வை மாத்திரமல்ல, சமூகப் பொருளாதார அமைப்பின் அங்கங்களாக அம்சங்களாக - பொருளாதார அதிகாரம், சமூக மேலாதிக்கம், பண்பாட்டுக் கடமைகள், உரிமைகள் ஆகிய இவற்றைப் பிரதிபலிப்பவையாகவும் இவற்றின் மீது தாக்கம் செலுத்துபவையாகவும் ஆண்மை - பெண்மை மற்றும் பாலின பேதம் என்பவை அமைந்துள்ளன.

புரிதல் என்பது எப்போதும் இயங்கியல் ரீதியானது. இந்த உலகத்தை மனிதன் புரிந்து கொள்வது அதைப் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ளவோ அதை வெறுமனே வியாக்கி யானம் செய்யவோ அல்ல. மாறாக அதை இன்னும் சிறந்த உலகமாக மாற்றுவதற்காக.

மனித குலம் இரண்டு விதமான பொருளியல் நடவடிக்கைகள் மூலம் தன்னைத்தானே வாழவைத்துக் கொள்கிறது. ஒன்று உற்பத்தி. இன்னொன்று மறு உற்பத்தி. ஒரு சமூகம் தனக்கான உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படைத் தேவைகளைப் பெறுவதற்காகச் செய்யும் சகல நடவடிக்கைகளையும் உற்பத்தி என்று மார்க்சியம் குறிப்பிடுகிறது. மறு உற்பத்தி என்பது குழந்தைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கி இச்சமூகத்துக்குத் தருவது - இதில் வெறும் உடம்பாகப் பிள்ளைகளைப் பெற்றுத் தருவதை மட்டும் மறு உற்பத்தி என்று சொல்வதில்லை. இந்த உலகத்தின் போக்கை - நிலவும் வாழ்முறையை ஏற்று அதற்குத் தக்கவாறு குழந்தைகள் தம்மை மாற்றி யமைத்துக் கொள்வது உள்ளிட்டதுதான் மறுஉற்பத்தி. அவ்விதம் தகவமைக்கப்படும் குழந்தைகள் ஏற்கெனவே அச்சமூகத்தில் நிலவும் உற்பத்தி உறவுகளின் படிநிலையில் தனக்கென ஒதுக்கப்பட்ட இடத்தை - பாத்திரத்தை - எதிர்ப்பின்றி ஏற்று வாழப் பயிற்றுவிக்கப்பட வேண்டும். நிலப்பிரபுவின் மகன் நிலப்பிரபுவாக கூலியின் மகன் கூலியாக, பிரச்சனை இல்லாமல் உற்பத்தி நடைபெற்றுக் கொண்டிருக்க வேண்டும்.

ஒவ்வொரு காலத்திலும் ஒரு உற்பத்தி முறை அமலில் இருந்து வந்துள்ளது - வருகிறது. அடிமைச் சமூகம், நிலப்பிரபுத்துவ சமூகம், முதலாளியச் சமூகம், சோசலிச சமூகம் என.... அவ்வச்சமூக ஏற்பாட்டுக்கேற்ற மக்களைத் தயாரிக்கும் பாசறைகளாகக் குடும்பங்கள் கடமையாற்றுகின்றன. பிள்ளைகளை மறு உற்பத்தி செய்யும் உடலியல் வாய்ப்புப் பெற்ற பெண்களுக்கு உற்பத்தி முறையில் வேறொரு முக்கியப்பணியை வர்க்க சமூகம் வழங்கியுள்ளது. வர்க்க சமூகத்தில் தமக்குரிய - தமக்கு வரையறுக்கப்பட்ட இடங்களில் மனப்பூர்வமாக உட்கார்ந்து கொள்ளும் பிள்ளைகளாக மனிதர்களைப் பயிற்றுவிக்கிற கடமை. இதையே சமூகவயமாக்கல் என்கிறோம். குடும்பமும் மதமும் தான் இதில் பிரதானப் பங்கு வகிக்கின்றன. பெண்கள் குடும்ப விளக்குகளாகவும் பக்தியின் உருவங்களாகவும் கட்டமைக்கப்பட்டிருப்பதன் நோக்கம் இதுதான். பண்பாட்டுக் கூறுகளையும் நம்பிக்கைகளையும் சுமந்து தலைமுறை தலைமுறைக்கும் கடத்திச் செல்பவர்களாகவும் மத ஆச்சாரங்கள் கடமைகள் குடும்பச் சடங்குகளை வழுவாது கடைப்பிடிப்பவர்களாகவும் பெண்கள் வர்க்க சமூகத்தால் கட்டமைக்கப்பட்டிருப்பது இந்த வர்க்கக் கடமையை நிறைவேற்றத்தான்.
இந்த சமூகவயமாக்கும்  ஆளும் வர்க்கத்தேவை வெளியிலிருந்து அல்லா- மாறாக வீட்டுக்குள்ளிருந்தே பெண்கள் மூலமாக நிறைவேற்றப்படுகிறது.
இந்தப் புரிதலோடு பண்பாடு என்றால் என்ன என்கிற கேள்விக்குள் நாம் புக வேண்டும். பண்படுத்துவது எதுவோ அதுவே பண்பாடு. பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் என்றே கலித் தொகையும் கூறுகிறது. சமூகத்தின் பாடறிந்து - செல்நெறி அறிந்து - ஒழுகுதலே பண்பாடாகிறது. நிலத்தைப் பண்படுத்துவதை ஆங்கிலத்தில் அக்ரி கல்ச்சர் என்கிறோம். மனதைப் பண்படுத்துவதை கல்ச்சர் என்கிறோம். யார் நிலத்தை யார் பண்படுத்துவது நல்லது என்று நாம் கேட்பதில்லை. யார் மனதை யார் பண்படுத்துவது யாருக்கு நல்லது என்றும் நாம் கேட்பதில்லை.

ஆதிகாலம் தொட்டு - இனக் குழு சமூகத்திலிருந்து - மனித குலம் தன் வாழ்வனுபவத்தினூடே உட்செறித்த மதிப்பீடுகள் வாழ்வின் அர்த்தம் பற்றிய புரிதல்கள், நடை, உடை, பாவனை எனப்பெறும் வாழ்முறைகள் எல்லாம் பண்பாட்டில் அடங்கும் என்பர். ஆனால், வர்க்க சமூகமாக மனித குலம் பிளவுண்ட பிறகு பண்பாட்டுக்கு வேறு பணிகள் வந்து சேர்கின்றன. ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னாலும் ஒரு வர்க்கம் ஒளிந்திருக்கிறது என்னும்போது ஆண்மை, பெண்மை, குடும்பம், பண்பாடு என்கிற ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் ஒரு வர்க்கம் - வர்க்க நலன் என்பதை நாம் தான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.

இந்தப் பண்படுத்தும் பணி பிரதானமாக மனித மனதின் பொதுப்புத்தி எனப்படும் காமன் சென்ஸ் என்கிற தளத்தில்தான் வலுவாக நடக்கிறது. பட்டறிவும், வாழ்பனுபவமும் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஆளும் வர்க்கத்தின் (அது பெற்றுள்ள இடத்தின் காரணமாக இயல்பாகவே) சிந்தனைகளும் கலந்த கலவைதான் பொதுப்புத்தியாக வடிவெடுக்கிறது. பொதுப்புத்தியில் எல்லாம் கலந்துதான் கிடக்கும். நம்பிக்கைகள், சமூக விழுமியங்கள், பல்வேறு பண்பாட்டுக் கூறுகள் என எல்லாமும் குழம்பிக் கிடக்கும். அதில் சக்திமிக்க தலையீடு செய்து ஆளும் வர்க்கம் தனக்குச் சாதகமான திசை வழியில் மனித மனங்களை வழி நடத்திடப் பண்படுத்துகிறது.

பண்படுத்தும் இவ்வர்க்கக் கடமையை நிறைவேற்றும் தொழில் நுட்ப அறிவுடன் இயங்கும் தொழிற்சாலைகளாக இருப்பவை பண்பாட்டு நிறுவனங்கள். குடும்பம், கல்விச் சாலைகள், மதம், மீடியா, கலை - இலக்கியங்கள் என விதவிதமான பண்பாட்டு நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்தியாவில் சாதி எனும் நிறுவனம் நம் சமூகத்தின் வர்க்க ஏற்பாடாகவும், பண்பாட்டு நிறுவனமாகவும், இருவிதப் பணிகளைச் செய்கிறது. இந்நிறுவனங்களின் எல்லாப் பணிகளையும் விரித்துப் பார்க்க இங்கு இடமில்லை. ஆண்மை - பெண்மை உருவாக்கத்தில் இவை எவ்விதமான பண்படுத்தலைச் செய்கின்றன என்று பார்ப்பதே   இப்போதைய தேவை.                            


10


சென்ற கட்டுரைக்கு வாசகர் கடிதம் பகுதியில் கம்பிக் குடியிலிருந்து தோழர் வேம்பு மணி சாமி எழுதிய விமர்சனம் பார்த்தேன். பண்டைக்காலத்தில் உற்பத்திக்கு மனித சக்தி தேவைப்பட்டதால் அதிகக் குழந்தை பெறுவதும் தேவைப்பட்டது.ஆகவே பெண் உடலுக்கு ஒரு கவர்ச்சித்தன்மை ஊட்ட வேண்டியிருந்தது என்பதுபோல பல கருத்துக்கலை அவர் குரிப்பிட்டிருந்தார்.

அவ்வாசக எதிர்வினைக்குப் பின்பும் சில கேள்விகள் நிற்கத்தான் செய்கின்றன. இயல்பு மீறிய கவர்ச்சிப் பொருளாகப் பெண்ணுடல் மட்டும் ஏன் வைக்கப்பட வேண்டும்? இலக் கியங்களும், இலக்கணங்களும் மனிதன் காட்டில் வாழ்ந்த இனக்குழு சமூகத்தால் எழுதப்பட்டவையா? சங்க இலக்கியம் என்பது இனக்குழு சமூகத்திலிருந்து நிலவுடைமைச் சமூகத்தை நோக்கிப் பயணிக்கிற  மாறிக் கொண்டிருந்த ஒரு காலத்தின் வாழ்வைப் பதிவு செய்துள்ளது என்றே அறிஞர்கள் கணிக்கிறார்கள். சிலைகள் ஆலயங்களில் வைக்கப்பட்டதும் பெரும் பெரும் ஆலயங் கள் எழுப்பப்பட்டதும் வர்க்க சமூகமாக மாறிவிட்ட நிலவுடைமைச் சமூகத்தில் அல்லவா?

தவிர, வாசகர் குறிப்பிடுவது போல அன் றைய பெண்ணடிமைச் சிந்தனைகள் அன் றைய காலத்தின் தேவையால் எழுந்து அன்றோடு மடிந்து போய்விடவில்லையே அவை மியூசியத்தில் வைக்கப்படவில்லை. இன்றும் நம் மூளைகளை ஆக்கிரமித்து வழி நடத்தும் வாழும் சிந்தனைகளாகவே இருக்கின்றன. ஆகவே, பழையதை அய்யோ பாவம் பழைய சிந்தனை என்று ஒதுக்கிச் சும்மா பாராட்ட முடியாது. மறுவாசிப்புச் செய்து விமர்சித்துக் காலி செய்ய வேண்டியது நமது முக்கியமான பணி அல்லவா?

மேலும், காம உணர்ச்சி என்பது இயற்கை யானது- வயிற்றுப் பசியைப் போல. அதற்கு மாடுகளைப் புணர்ச்சிக்குக் கிளப்பிவிடுவது போல பாட்டுப் பாடிக் கிளப்பிவிட வேண்டிய அவசியம் இல்லை. அது தன்னாலே நடக்கும். வர்க்க சமூகத்தின் தேவையிலிருந்தே ஆணா திக்கச் சிந்தனை பிறக்கிறது. பெண்ணை வெறும் உடம்பாக -ரசிக்கத்தக்கதாக- குறுக்குகின்ற பார்வை எந்தக் காலத்தில் தோன்றி யிருந்தாலும் மறுவாசிப்புக்கு உட்படுத்தி இன்றின் பட்டறையில் தட்டி நிமித்தியாக வேண்டும்.  நாங்கள் ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் ஒண்ணாவது இரண்டாவது வகுப்புகளில் இருந்தபோது ஒரு பழக்கம் இருந்தது.ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்குச் சரியான விடை சொல்லாவிட்டாலோ அல்லது பாடம்   தப்பில்லாமல் ஒப்பிக்கத் தெரியாவிட்டாலோ அடிப்பது முட்டங்கால் போட வைப்பது தலையில் குட்டுவது போன்ற தண்டனைகளை சில ஆசிரியர்கள்  வழங்குவார்கள்.வேறு சிலர் தப்பாகப் பதில் சொன்ன பையன்களை  பொம்பளைப் பிள்ளைகள் உட்கார்ந்திருக்கும் பலகையில் அவர்களுக்கு நடுவில் உட்கார வைத்து விடுவார்கள்.

பல பெண் உடல்களுக்கு நடுவில் ஒரே ஒரு ஆண் உடல்.

பிற பையன்களின் கேலிச்சிரிப்பு உடனே பின் தொடரும்.அவமானத்தால் நாங்கள்  கூசிப்போவோம்.ஆண் உடல் வேறு பெண் உடல் வேறு என்கிற தன்னுணர்வு பால்பேதம் பற்றிய எவ்வித உணர்வும் தோன்ற வாய்ப்பில்லாத அந்தப் பால்ய நாட்களிலேயே பள்ளிக்கூடத்தில் எமக்குத் தோன்றிவிட்டது.  சமூகத்தால் கட்டமைக்கப்படும் உடல்கள் மற்றும் உடல் அசைவுகள் குறித்து இன்று உலக அளவில் ஏராளமான ஆய்வுகள் வந்து கொண்டிருக்கின்றன.  அவற்றை நாம் படிக்கும் போது எமது பள்ளியில் நடந்த அத்தண்டனைச்சம்பவங்கள்  தவிர்க்கவியலாத படி நினைவுக்கு வருகின்றன.  இடை வனப்பும் தோள் வனப்பும் ஈடின் வனப்பும் நடை வனப்பும் நாணின் வனப்பும்-புடைசால்  கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோடு எழுத்தின் வனப்பே வனப்பு -                                                   (ஏலாதி)

என்று நம்பிப் பள்ளிக்கூடம் போனால் அங்கே பாடத்திட்டத்துக்கு அப்பால் பல கல்வி நடக்கிறது. ஆண்-பெண் உடல் பேதம் ஒரு முக்கியமான கல்வி அல்லது பண்படுத்தல். பால பாடங்களில் குடும்பம் பற்றிய படத்தில் அப்பா ஈசி சேரில் உட்கார்ந்து பேப்பர் படிப்பதும் அம்மா சமையல் செய்வதும் போன்ற காட்சிப்படுத்தலில் துவங்கி , சமூகத்தில் ஆண்- பெண் இருவரின் இடம் எது- அந்தஸ்து என்ன என்பது பற்றிச் சமூக மனதில்-பொதுப்புத்தியில் என்ன இருக்கிறதோ அதைப் பள்ளிக்கூடம் கேள்விக்குள்ளாக்கவில்லை.மாறாக . வினையே ஆடவர்க்கு உயிரே வாள் நுதல் மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்  என்பதாக அடிக்கோடு இட்டுப் பிள்ளைகள் மனதில் அழுந்தப் பதிக்கிறது.அதாவது மேலும் நுட்பமாகப் பண்படுத்துகிறது .அவள் ஏன் மனையுறை மகளிர் ஆக்கப்பட்டாள் என்று கேள்வியைப் பள்ளிக்கூடம் நம் மனதில் எழுப்புவதில்லை.எழுப்பினால்தானே அது சரியான கல்வியாகும்?

ஆண்கள் பெண்கள் சேர்ந்து படிக்கிற பள்ளிகளை விட பெண்கள் பள்ளி ஆண்கள் பள்ளி என்று தனித்தனியாக இருப்பதே நலம் என்கிற கருத்து வலுவாக நம்மிடம் உள்ளது. ஈன்றவள்,மகள், தம் உடன் பிறந்தாள் ஆயினும் சான்றார் தமித்தா  உறையற்க ஐம்புலனும் தாங்கற் கரிதாகலன் (ஆசாரக்கோவை)

(தாய்,மகள், சகோதரியே ஆனாலும் அவர்கள் தனித்திருக்கையில் அவர்களோடு உடன் உறையக்கூடாது -ஏனெனில் ஐம்புலன்களையும் அடக்குவது என்பது அவ்வளவு லேசான காரியமில்லையே) என்று பாடிவைத்தவர்கள் ஆயிற்றே நாம்.(என்ன கேவலமான பாட்டய்யா இது! )  இவ்விதமாக ஆண்களும் பெண்களும் சாதாரணமாகக் கலந்து பழகுதல் தவறென்று நம் பண்பாட்டில் நிறுவப்பட்டுள்ள ஒன்றையே கல்விச்சாலைகளும் கறாராகக் கற்றுத் தருகின்றன. நடைமுறைப் படுத்துகின்றன. அதாவது மனங்களைப் பண்படுத்துகின்றன.

விளையாட்டிலும்கூட பெண்களுக்கான விளையாட்டுகளாகப் பரவலாக நம் பள்ளிகள் வைத்திருப்பது த்ரோ பால் (வாலிபால் கிடையாது),கோக்கோ, வளைபந்து எனப்படும் டென்னிகாயிட் இவைபோலச் சிலவே.அதிலும் பேதம்தான்.

மாணவர்களைத் திட்டுவதற்கு (மாடு மேய்க்கத்தான் லாயக்கு போன்றவை) வேறு வசவுகள் மாணவிகளைத் திட்டுவதற்கு ( ஆக்கிப் போடத்தான் லாயக்கு) வேறு வசவுகள் . பெண்களுக்குப் போதிய கழிப்பறை வசதிகள் இல்லாத காரணத்தால் பெண்களின் வருகையே பாதிக்கப்படுவது தனியாகப் பேச வேண்டிய ஒன்று.

கல்விச்சாலைகள் என்பவை பண்பாட்டு நிறுவனங்களில் முக்கியமானவை.அவற்றை ஆளும் வர்க்கங்களே நடத்துகின்றன.சட்டப்படி நடக்கிற -- சட்டத்தை மதிக்கிற-- ஒருமனிதரின் உத்தரவுக்குக் கீழ்ப்படிகிற -  மார்க் அடிப்படையில் தன் தகுதியை சமூகத்தில் தன் இடத்தை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிற விதமாக மனங்களைப் பண்படுத்தும் தொழிற்சாலையே கல்விக்கூடம். இவ்விதமான வர்க்கக் கடமையை நிறைவேற்றும் கல்விச்சாலை  வர்க்க வேறுபாடுகளைத் தன் பாடத்திட்டத்தின் மூலம் கற்றுத்தருவதில்லை.மாணவ மாணவிகளில் பெருவாரியானவர்களான உழைப்பாளி மக்களின் பிள்ளைகளுக்கு வர்க்க உணர்வை ஊட்டும் விதமான கல்வியைத் தருவதில்லை.ஏனெனில் அது அதற்கு எதிராக இயங்குவதற்காகவே படைக்கப்பட்டது.

அதே காரணங்களாலேயே அது பெண்களுக்கு பெண் உணர்வையும் ஊட்டுவதில்லை.பெண் உணர்வு என்று நாம் குறிப்பிடுவது பெண்ணிய உணர்வைத்தான்.அதாவது பெண் சமத்துவ உணர்வைத்தான்.மக்கள்  தொகையில் சரிபாதியான பெண்கள் ஆண்களுக்கு இணையானவர்கள் அல்ல என்று பல்வேறு வடிவங்களில் கல்விச்சாலை கற்பிக்கிறது.அதில் ஒன்றுதான் உடல் ரீதியாகப் பெண்ணை வேறுபடுத்தி நிறுத்துவது.

அடுத்து பெண்களுக்குப் பொறுத்தமான கல்வி - பாடப்பிரிவுகள் என்று சிலவற்றை உருவாக்கி வைப்பது.ஹோம் சயின்ஸ் ,அறிவியல் பாடங்கள், கல்வியியல்,செகண்டரி கிரேடு ஆசிரியர் பயிற்சி ,நர்ஸ், சித்த மருத்துவம் என்று துவங்கி இன்று கம்ப்யூட்டர் வரைக்கும் - அதாவது உட்கார்ந்த இடத்தில் படிக்கிற மாதிரி- அலையாத வேலைக்குத் தோதான கல்வி.ஆய்வு மாணவிகளுக்குக் கூட  கிராமம் கிராமமாகச் சென்று ஆய்வு செய்து ஆய்வேட்டைச் சமர்ப்பிக்கும் தலைப்புகளைத் தவிர்த்து ஜெயகாந்தன் படைப்புகளில் சமூகப்பார்வை என்பது போல மேசை ஆய்வுகளையே தேர்வு செய்வது. இதுதான் பொதுவான போக்காக இருக்கிறது.

சமீபத்தில் விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியில் கணிணித் துறையில் வேலை பார்க்கும் பெண் வேண்டாம் என்று மறுக்கிற இளைஞர்கள் எண்ணிக்கை பெருகிவருவது விவாதத்தின்போது வெளிப்பட்டது.இது இப்படியே போனால் இன்னும் சில காலத்தில் கணிணித்துறைக்கு இப்போது வேக வேகமாகத் தம் பெண்பிள்ளைகளை அனுப்பிக்கொண்டிருக்கும் பெற்றோர் அதை நிறுத்திவிடும் அபாயம் இருக்கிறது.

என் பொண்ணு கணிணியில் பெரிய ஆளாக வருவதை விட அவளுக்கு வரன் கிடைத்துக் கல்யாணம் ஆவதுதானே முக்கியம்! கக்கூசிலிருந்து கணிணி வரை எல்லாமே பெண்கல்விக்குத் தடையாக இருப்பது யதார்த்தம்.இது ஒருபக்கம் இருக்க, பாலியல் கல்வி என்பதே நம் பாடத்திட்டத்தில் இன்றுவரை கிடையாது.ஆண்-பெண் இருபால் குழந்தைகளுக்கும் பாலியல் கல்வி அளிப்பது நிச்சயமாக இன்று நிலவும் பால் பேதக் கொடுமைகளைக் குறைக்க சிறிதளவேனும் உதவ முடியும்.சின்ன வயதிலேயே பாலியல் கல்வி அளிக்கப்பட வேண்டும்.பாலுறவுச் சுரப்பிகள் தம் பணியைத் துவக்குவதற்கு முந்திய பால பருவத்தில் இக்கல்வி அளிக்கப்பட்டால் ஆணோ பெண்ணோ தம் உடல் பற்றிய விஞ்ஞானப்பூர்வமான புரிதலோடு பரஸ்பரம் தங்களை மனுஷர்களாகவும் மனுஷிகளாகவும் பார்க்கத் துவங்கி விட வாய்ப்பு உருவாகும். உடல்களைக் கடந்து மானுடப் பிறவிகளாக ஆணும் பெண்ணும் வாழ என்ன மனநிலையைத் தகவமைக்க வேண்டுமோ அது பள்ளிக்கூடத்தில்தான் செய்யப்பட வேண்டும்.இன்று அதற்கு நேர் மாறானது நடந்து கொண்டிருக்கிறது. வரலாற்றைப் போதிக்கும்போது அதில் நிகழ்ந்துள்ள பெண் புறக்கணிப்பு பற்றிச் சொல்லியாக வேண்டும்.இலக்கியம் போதிக்கும்போது  அது பெண்ணியப் பார்வையோடு மறுவாசிப்புச் செய்யப்பட வேண்டும்.அறிவியலில் மறைந்துள்ள ஆணாதிக்கப்பார்வையை அடையாளம் காட்ட வேண்டும். இதுபோன்ற வேலைகளைக் கையில் எடுக்கும் கல்விதான் நமக்குத் தேவை.                                                                             

11                             

கல்விச்சாலைகளை அடுத்து நாம் குடும்பம் என்னும் மிக முக்கியமான பண்பாட்டுத் தொழிற் சாலையைப் பார்க்கலாம். கல்விச்சாலைகள், மதங்கள்,மீடியா போன்றவை யெல்லாம் அளவில் பெரிய பண்பாட்டு நிறுவனங்கள் போலத் தோற்றம் தருபவை.குடும்பம் அவ்விதமாகப் பார்த்தால் அளவில் சிறியதுதான்.ஆனால் பண் படுத்தும் பணியை மிக நுட்பமாக-  குடிசைத் தொழிலாகச் செய்கிற இடம் குடும்பம்.குடும்பம் என்பதை ( ) குழந்தைகளை சமூகவயப்படுத்தும் மையம் என்பார்கள்.நாம் வாழும் சமூகத்துக்கேற்ற மனிதர்களாக மனுஷி களாக குழந்தைகளை வளர்த்தெடுக்கும் இட மாகவே குடும்பங்கள் இருப்பதால்தான் என்ன விதமான ஆட்சி மாற்றங்கள் ஆட்சிமுறை மாற்றங்கள் நிகழ்ந்தபோதும் குடும்பங்கள் தொடர்ந்து அப்படியே நீடிக்க ஆளும் வர்க்கத் தாரால் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

குடும்பத்தின் மைய அச்சாக இருப்பது பெண் என்கிற உணர்வு அழுத்தமாக நம்மிடம் உள்ளது. ஒரு வீடு என்கிற கட்டிடம் குடும்பமாக மாறுவது அந்த வீட்டில் பெண்/பெண்கள் இருக்கும்போது தான் என்பார்கள். ஆகவே வர்க்க பேதமுள்ள- சாதி பேதமுள்ள - இச்சமூகத்திற்கு ஏற்ற சாதி மற்றும் வர்க்க மனிதர்களாக குழந்தைகளை வளர்த்தெடுக்கும் மிகப்பெரிய பொறுப்பை பெண்களின் தலையில் ஏற்றி வைத்திருக்கிறது சமூகம்.ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இப் பொறுப்பைப் பெண் பிசகாமல் நிறைவேற்றி வருகிறாள்.அதனால்தான் ஆம்பளை கொஞ்சம் அப்பிடி இப்பிடி இருந்திட்டாலும் கண்டு கொள்ளாமல் விடுகிற சமூகம் பெண் விஷயத்தில் எந்த சலுகையும் கொடுப்பதில்லை. தர்மங்கள், நியாயங்கள், சரி-தப்புகள்,நீதி-நேர்மைகள் என எல்லாவற்றையும் அவள்தான் கட்டிக் காத்து  வரும் தலைமுறைக்கும் எடுத்துச்சொல்ல வேண்டிய வளாக, எடுத்துச்செல்ல வேண்டியவளாக இருக் கிறாள்.எதையும் மீற முடியாதவளாக மீறக் கூடாதவளாக பெண் கட்டமைக்கப்படு கிறாள். அதற்காகத்தான் இந்தப்பெண்மை, தாய்மை என்கிற எல்லா இழவுகளும் அவள் தலையில் ஏற்றப்பட்டுள்ளன -ஆண்களின் தலை யிலும்தான்.

இந்த இடத்தில் மறைந்த எழுத்தாளர் கிருஷ்ணன் நம்பியின் மருமகள் வாக்கு  என்கிற சிறுகதையை நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும்.

மருமகள் வாக்கு

திருமணமாகிப் புகுந்த வீட்டுக்கு வரும் ஒரு மருமகளைப்பற்றிய கதை இது.அந்த வீட்டில் எல்லாம் மாமியார் வச்ச சட்டம்தான்.இன்னைக்கு அரைப்படி அரிசி பொங்கணுமா கால்படி வடிச்சா போதுமா என்பது உட்பட மாமியாரிடம் கேட்டுத் தான் செய்ய வேண்டும். புருசனோடு பேசுவது கூட மாமியார் அனுமதி யோடுதான். மருமகளின் ஒவ்வொரு அசைவும் மாமியார் விருப்பப் படிதான். ஆரம்பத்தில் மருமகள் மனசில் என்ன இது கொடுமையா இருக்கே என்று தோன்றினா லும் நாள் ஆக ஆக இதுதானே நம்ம வீட்டு வழக்கம் என்று ஆகி விட்டது.
அந்த சமயம் உள்ளூர் பஞ்சாயத்துத் தேர்தல் வந்தது.பல சின்னங்களில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.பூனைச்சின்னத்துக்கும் கிளிச்சின்னத்துக்கும்தான் சரியான போட்டி. மருமகள் தன்னுடைய ஓட்டு யாருக்கு என்று மனசுக்குள் யோசித்துக் கொண்டிருந்த போது மாமியார் வந்து  என்ன யோசனை பலமா இருக்கு உன்னுடைய ஓட்டு கிளிச்சின்னத்துக்குத் தான் ஒண்ணும் யோசிக்க வேண்டாம் என்று சொல்லி விட்டாள். மாமியார் அப்படிச்சொன்னா மறுகணமே மருமகள் தன்னுடைய ஓட்டு பூனைக்குத்தான்  என்று அழுத்தமாக முடிவு செய்து விட்டாள்.ரகசிய வாக்குத்தானே. யாருக்குப் போட்டோம் என்று மாமியாருக்குத் தெரியவா போகிறது என்று தைரியமாக முடிவு எடுத்தாள்.

இடையிடையே மாமியார் உன் ஓட்டு யாருக்குடீ என்று கேட்கும்போதெல்லாம் நீங்க சொன்னபடி கிளிக்குத்தான் அத்தே என்று சிரிப்போடு பதிலும் சொல்லி விட்டாள். கடைசியில் தேர்தல் நாளும் வந்தது. காலை யிலேயே மருமகள் ஓட்டுப் போடக் கிளம்பி விட்டாள்.மாமியார் கிளிச்சின்னம் என்று ஒரு உறுமலோடு மருமகளை அனுப்பி வைத் தாள்.ஒருநாளும் இல்லாத உற்சாகமும் மகிழ்ச்சி யும் மருமகளின் நடையில் துள்ளியது. வாழ்க்கை யில் முதல் முறையாக மாமியாருக்கு எதிராக வாக்களிக்கப்போகிறோம் என்கிற சந்தோசம் அது.சுட்டு விரலில் மையிட்டு வாக்குச் சீட்டை வாங்கிக்கொண்டு மறைவிடத்துக்குப் போனாள். வாக்குச் சீட்டில் ஒவ்வொரு சின்னமாகப் பார்த்துக்கொண்டே வந்தாள்.கிளிச்சின்னத்தின் மீது பார்வை பதிந்ததும் கிளி சிறகடித்தது. கிளிச்சின்னம் என்கிற மாமியாரின் உறுமல் பின்புறமிருந்து கேட்டது.கிளியைத்தாண்டி அவள் கை கீழே நகரவில்லை.அப்படியே தலை சுற்றுவது போலிருந்தது.கீழே பூனைச்சின்னம் இருப்பதை மயக்க நிலையில்தான் கவனித்தாள். அவளை அறியாமலேயே கை அதுபாட்டுக்கு கிளிச்சின்னத்தில் முத்திரையைப்பதித்து விட்டது. வாக்குச்சீட்டை உள்ளே போட்டு விட்டு வெளியே அவசரமாக ஓடிவந்துவிட்டாள்.

இதுதான் அக்கதையின் சுருக்கம்.பெண்களின் மனநிலையை மட்டுமல்ல ஆளும் வர்க்கத்தின் சிந்தனை மற்றும் பண்பாட்டு மேலாதிக்கத்துக்குத்  தன்னையறியாமலேயே கட்டுண்டு கிடக்கும் பாட்டாளி வர்க்கத்தின் மனநிலைக்கும் இக்கதை பொருந்தும். அவள் நினைத்தாலும் அவளால் மீற முடியாத தளைகளுக்குள் பெண் காலம் காலமாகக் கட்டப்பட்டிருக்கிறாள்.பக்தி,குடும்பநலன்,
வீட்டுக்கு ஆகாது,பிள்ளைகளுக்கு நல்லது, அவருக்கு நல்லது என்கிற வளையத்துக்குள் வசமாக சிக்க வைக்கப்பட்டிருக்கிறது பெண் மனம். மாட்டையடித்து வசக்கித் தொழுவினில் மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே வீட்டினில் எம்மிடங்காட்ட வந்தார் என்று பாரதி சொன்னது போல பெண் வசக்கப்படுகிறாள் குடும்பத்தில்.அவள் வசங்கும் காலம் என்று ஒரு குறிப்பிட்ட பருவத்தை மட்டும் சொல்லி விட முடியவில்லை. பிறந்ததிலிருந்து சாகும் வரை அவள் பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் பெற்ற மக்கள் வீட்டிலும் என வசக்கத்தான் படுகிறாள். சகல தர்மங்களையும் நம்பிக்கைகளையும் சுமக்க வசக்கப்படுகிறாள்.
ஆனால் அதே சமயம் குடும்பம் எந்த மாற்றத்துக்கும் ஆளாகாமல் அப்படியே தொடர் வதாகச் சொல்ல முடியாது.சமூகத்தில் நிகழும் மாற்றங்கள் குடும்பத்துக்குள் தொடர்கிற பண் பாட்டு அசைவுகள் மீதும் தாக்கம் செலுத்தி வந்துள்ளன. கணவன் இறந்தால் அவனோடு மனைவியும் எரிந்து சாம்பலாகிற பண்பாடு இந்தியக்குடும்பங்களில் -குறிப்பாக வட மாநிலங்களில் இருந்ததை நாமும் அறிவோம். இதுபோல சமூகம் குடும்பத்துக்குள் கொண்டுவந்த இன்னும் பல மாற்றங்களைப் பார்க்கலாம்.  
                                                                                                                                                                                       12


மனித மனங்களைப் பண்படுத்தும் தொழிலை சக்தி மிக்க முறையிலும் பரந்துபட்ட அளவிலும் நுட்பமான வடிவங்களிலும் செய்யும் பண்பாட்டு நிறுவனமாக ஊடகங்கள் செயல்படுகின்றன. ஊடகங்களில் அச்சு ஊடகங்கள்,மின்னணு ஊடகங்கள்,திரைப்படங்கள் எனப்பலவகை உண்டு. இன்று உலகமயப் பொருளாதாரத்தின் முகமூடி யாகவும் கேடயமாகவும் உறைவாளாகவும் இந்த ஊடகங்கள் திகழ்கின்றன.

ஜனநாயகத்தின் மூன்றாவது தூண் என்று வர்ணிக்கப்படும் ஊடகங்களின் மிகப்பெரிய அரசியல் யாதெனில் சில துறைசார்ந்த செய்திகளை தவறாமல் மீண்டும் மீண்டும் வெளியிடுவதும் சில துறைசார்ந்த செய்திகளை மறந்தும் வெளியிட்டு விடாமல் இருப்பதுமாகும்.சமீபத்திய ஆய்வு ஒன்றின் படி விவசாயிகள் பற்றிய செய்திகளை-தொழிலாளர் போராட்டங்கள் பற்றிய செய்திகளை - தேசிய அளவில் வெளியாகும் எந்தப் பத்திரிகையும் எந்த மின் ஊடகமும் வெளியிடுவதில்லை என்பது தெரிய வந்துள்ளது. மராட்டியத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டபோது கூட அங்கே பிரதமர் சென்ற செய்தியை ஒட்டித்தான் அவை தற்கொலைச் செய்திகளையே வெளியிட்டன. அவை வெளியிடும் செய்திகளில் விவசாயி-தொழி லாளர் பற்றிய செய்திகள் 0.70 சதவீதம்தான்.

பெண்கள் பற்றிய செய்திகளை - நிகழ்ச்சிகளை- எந்த ஊடகமும் புறக்கணிப்பதில்லை.ஆனால் அவை என்னமாதிரியான பெண் செய்திகளை வெளியிடு கின்றன என்பதுதான் நாம் கேட்க வேண்டிய கேள்வி. ஏற்கனவே இந்த ஆணாதிக்க சமூகம் கட்டமைத்து வைத்துள்ள பெண்மை என்கிற பொய்யை-பெண்மை என்கிற கருத்தாக்கத்தை-மேலும் மேலும் அடிக் கோடிட்டுத் திணிக்கும் வேலைதான் ஊடகங்களில் நடக்கிறது.

விவசாயிகள் தற்கொலையை நாட்டின் முக்கிய மான செய்தியாகக் கருதாத தினசரிகள் சாமியார்களின் காமலீலை,அழகிகள் கைது,காதலனுக்காகக் கணவனைக் கொன்ற சங்கீதா என்பன போன்ற செய்தி களையும் சினிமா மற்றும் பொழுதுபோக்குச் செய்திகள் என்ற பேரில் பெண்களின் உடல்காட்டும் புகைப்படங்களையும் வாரக்கணக்கில் போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.வார இதழ்களிலோ அட்டை டு அட்டை ஆண் மனதில் காட்சி இன்பம் தூண்டும் லட்சிய வெறியுடன் அச்சிடப்பட்ட பெண் உடல்தான். இவற்றிலெல்லாம் ஊடாடுவது பெண் என்பவள் வெறும் உடல்தான் -வெறும் காட்சிப் பொருள்தான் -ஆண்கள் நுகர்வதற்கான ஒரு போகப் பொருள்தான் -என்கிற ஒரு கருத்தோட்டம்தான். பெண்களுக்கான பத்திரிகைகள் சில சாதனைப்பெண்கள் பற்றி அறிமுகம் செய்வது போன்ற மிகச்சில சேதிகளைத் தவிர மற்றதெல்லாம் பெண்மையின் இலக்கணங்களாக நம் சமூகம் சொல்லிவரும் சமையல்,கோலம்,டிசைனிங் என்றே வட்டமடிக்கின்றன. பிற பத்திரிகைகளுக்கும் பெண் களுக்கான பத்திரிகைகளுக்கும் உள்ள ஒரு முக்கிய மான வித்தியாசம் இதில் பெண் உடம்பாகக் குறுக்கப் படுவதில்லை. ஆனால் பெண்மையின் பெருமை என்கிற கொடுமை தவறாமல் உண்டு.

தொலைக்காட்சி அலைவரிசைகளில் பரவலாகப் பேசப்படுபவை தொடர்கள். தவிர்க்கவியலாத ரெண்டு பெண்டாட்டிக் கதைகளாகவே அமைந்து விடுகிற இத்தொடர்களில் கண்ணீரும் கம்பலையுமாக பெண்கள் புலம்புகிறார்கள் என்று பொத்தாம் பொதுவாக விமர்சித்து அவற்றைப் புறந்தள்ளுவது நியாயமான பார்வையாக இருக்காது.

கோலங்கள், அரசி, சித்தி, கஸ்தூரி போன்ற தொடர்கள் எல்லா விமர்சனங்களுக்கும் அப்பால் ஒரு பெண்ணின் போராட்டத்தை- பல சோதனை களைத் தாண்டி அவள் வெற்றி பெறுவதைச் சொல் லும் கதைகளாகவும் இருக்கின்றன என்பதை நாம் பார்க்க வேண்டும். இவற்றை விரும்பிப் பார்க்கும் பெண்கள் மனங்களில் உளவியல்ரீதியாக ஒரு பெருமித உணர்வு சத்தமில்லாமல் பொங்கிப் பெருகு வதை நாம் காணத் தவறக்கூடாது.

ஏழை எம்.ஜி.ஆர். பணக்கார வில்லனைத் தோற் கடிக்கிற பழைய சினிமா பாணிதான் இது என்ற போதிலும் இதில் வெல்வது பெண் என்பது முக்கியம். ஆனால் இத்தொடர்கள் எல்லாவற்றிலுமே வில்லியாக ஒரு பெண்ணே காட்டப்படுவது ஏற் கனவே நம் மனங்களில் அழுந்தப்பதிக்கப்பட்டுள்ள மாமியார் - வில்லி என்கிற படிமத்தை இன்னும் வலுவாக அடிக்கோடிடும் கேட்டைச் செய்கின்றன.

இன்னும் குடும்பப் பொண்ணா லட்சணமாக வாழும் ரோல் மாடல் பெண்கள் ஏராளமாக இத் தொடர்களில் மூக்கைச் சிந்துவார்கள்.எத்தனை காலத்துக்குத்தான் பெண்களை குடும்பப்பாங்கு என்கிற முக்காட்டுக்குள் மூச்சுத் திணற வைப் பது?பெண்ணுக்குப் பெண்ணே எதிரி என்கிற புளித்துப்போன பழைய வாதமும் இத் தொடர்களில் அடிக்கோடிடப்படுகின்றது.

கலைஞர் தொலைக்காட்சி வந்தபிறகு தொடர் களை விட, மானாட மயிலாட போன்ற ஆட்ட பாட்டத்தொடர்கள் மற்றும் நேரலை ( ) ஒளி பரப்புக் காட்சிகள் மையமான இடத்தைப் பிடித் துள்ளன. இவற்றில் ஆடும் பெண்களின் உடையலங் காரம் மற்றும் ஜட்ஜ்களாக வந்து அமரும் சில மேடம்களின் உடை பற்றிக் குடும்பங்களில் கடும் விமர்சனங்கள் எழுவதைப் பார்க்கிறோம். -டிவியின் ஆட்டங்கள் நம் சேனல்களில் வந்தபோதும் இத்தகைய விமர்சனங்கள் எழுந்தன.விமர்சிக்கும் அதே வேளையில் உடையில் ஒருவித கட்டுடைக்கும் சுதந்திர மனோபாவத்தை இந்த ஆட்டங்கள் பெண்களுக்கு வழங்குகின்றன என்பதையும் நாம் குறிப்பிட வேண்டும்.சேலையை விட சுடிதாரும் நைட்டியும் நிச்சயமாக வசதியும் சுதந்திரமும் தந்தனதானே. இப்படியே போனால் என்னாவது என்று சுதந்திரத்தின் எல்லையை அவசர அவசரமாக ஆண்மனம் நிர்ணயிக்கத் தவிக்கிறது.குடும்ப மனம் என்பதே சமூக மனமாகத் திகழும் ஆண்மனம்தானே.

இவை போக தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்கள் பொறுப்பான பெண்கள் கக்கூஸ் சுத்தம் செய்ய சரியான க்ளீனிங் திரவத்தைத் தேர்வு செய்வதையும் துவைப்பதற்கு ஏமாறாமல் ஒரு சோப்பையோ வாஷிங் பவுடரையோ தேர்வு செய் வதையும் குழந்தைகளுக்கும் கணவருக்கும் ஆகா என்று சொல்லும் வண்ணம் மசாலாப் பொடிப் போட்டுச் சமைப்பவராகவும் மீண்டும் மீண்டும் மீண்டும் காட்டிக்கொண்டே இருக்கின்றன.

திரைப்படங்களும் இதே வேலையைப் பெரிய திரையில் டிஜிட்டல் சவுண்டுகளுடன் செய் கின்றன.காதலிக்கும் போதெல்லாம் டவுசர், பேண்ட்டுகளில் வரும் பெண்கள் கல்யாணம் என்றதும் பட்டுப்புடவை கட்டித் தழையத் தழைய வருவதை எல்லாத்திரைப்படங்களிலும் பார்க் கிறோம். இவர்கள் எல்லோருமே ஒரே ஆண்மனதின் வேறு வேறு ரூபங்கள்தான்.ஒரே குரலில் பெண் களுக்கான உடைக்கலாச்சாரத்தை நம் மண்டையில் திணிக்கிறார்கள்.
இன்னும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு அதே கயவனைத் தாலி கட்டச் சொல்லும் நாட்டாமைகள்,கதாநாயகன் தன் சமூக சேவை நடவடிக்கைகள் இல்லாத நேரத்தில் கூடச் சேர்ந்து ஆடிப்பாடுவதற்கு என்றே வந்துபோகிற கதாநாயகிகள் என்று திரைப்படங்களும் தொலைக் காட்சிகளும் கட்டமைக்கிற பெண்மையின் லட்சணங்கள் ஏராளம்.இது ஆண் பெண் இருபால்  ரசிகர்களின் மனங்களிலும் ஆழ்ந்த பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.பெண்மை இன்னும் பல விதங் களில் மீடியாவால் தகவமைக்கப்படுகிறது. 

                                13

நாம் வாழும் சமூகங்கள் நம்மை அதாவது ஆண்களையும் பெண்களையும் சில குறிப்பிட்ட விதங்களில் சிந்திக்கவும் செயல்படவும் வேண்டு மென எதிர்பார்க்கின்றன.அந்த எதிர்பார்ப்பே பண்பாட்டுத்தளத்தில் ஆண்களுக்கும் பெண்களுக் குமான விதிகளாக இறுகி நிற்கின்றன.ஆனால் மனிதர்களாகிய நாம் எப்போதும் விதிகளைக் கட்டிக்கொண்டே சாவதில்லை.அழுத்தம் அதிக மாகும்போது விதிகளை உடைத்துக்கொண்டு வெளியே வரத்தான் செய்வோம். அரசியல்-பொரு ளாதாரத் தளங்களில் நடப்பதுபோல இந்த உடைப்பு அவ்வளவு எளிதில் பண்பாட்டுத்தளத்தில் நடந்து விடுவதில்லை.

ஒரு சின்ன விசயம்.

முற்போக்கு மேடைகளில் பிரபலமாகப் பாடப்படும் ஒருசில பாடல்கள் பற்றி ஒரு முகாமில் காரசாரமான விவாதம் வந்தது.ஒரு பாட்டு ஆசைப்பட்ட எல்லாத்தியும் காசிருந்தால் வாங்க லாம் அம்மாவை வாங்க முடியுமா ? என்கிற பாட்டு. இன்னொன்று ஆத்தா உன் சேலை என்கிற பாடல்.இவை அற்புதமாகப் பாட்டெழுதும் தோழர் ஏகாதசியின் பாடல்கள். இத்தகைய பாடல்களை மக்கள் விரும்பிக் கேட்கிறார்கள்.மேடையில் நம் கலைஞர்கள் பாடும்போது கூட்டத்தில் பலர் கண் கலங்கி அழுது விடுவதும் உண்டு. அவரவர் அம்மா ஞாபகம் வந்து ஏக்கப்பெருமூச்சு விடாதவர் யாரும் இருக்க மாட்டார்கள்.மக்கள் அடிக்கடி விரும்பிக்கேட்கும் பாடலாக சீட்டுக்கொடுத்துப் பாடச்சொல்வதும் உண்டு - இப்பாடல்களை.

ஏற்கனவே அம்மா என்றால் அன்பு-பாசம்-தியாகம் - கண்ணீர் என்று சமூக மனதில் பதிவாகி யிருக்கிற - அம்மாக்கள் என்ன செய்ய வேண்டும் எப்படி வாழ வேண்டும் என்று இச்சமூகம் எதிர்பார்க்கிறதோ - என்ன விதிக்கப்பட்டிருக் கிறதோ அதையே கண்ணீரும் கம்பலையுமாக சோகத்தில் தோய்த்தெடுத்து இப்பாடல்கள் காற்றில் பரவ விடுகின்றன. முற்போக்காளர்கள் அதே தியாக அம்மாவையா மக்களின் முன்னால் கொண்டுபோய் நிறுத்த வேண்டும்? நமக்கு இந்த அன்பு பாசம் தியாகம் போன்ற மூடாக்குகளிலிருந்து விடுபட்ட -கார்க்கியின் தாய் நாவலில் வரும் அம்மா போல -கேப்டன் லட்சுமி போல -அன்னை லட்சுமி போல -ஜானகி அம்மா போல - பாப்பா அம்மா போல-ஒரு அம்மாவை அல்லவா நாம் முன்னுதாரணமாக மக்கள் முன் கொண்டு செல்ல வேண்டும் என்று விவாதம் செய்தோம்.

பாட்டை எழுதிய கவிஞர் இந்த விமர்சனப் பார்வையை ஏற்றுக்கொண்டு அப்படி ஒரு புதிய பாடலை தானே எழுதித்தருவதாக ஒப்புக் கொண்டார். ஆனால் கூட்டம் முடிந்ததும் ஒரு தோழர் தனியாக வந்து சன்னமான குரலில் சொன்னார்  இப்படி எல்லாத்தியும் ராவடியாக பெண்விடுதலைப் பார்வையிலேயே பார்த்துக் கொண்டு போனால் உலகத்தில் அன்பு பாசம் தாயின் அரவணைப்பு என்று  மனித வாழ்க்கைக்கு அழகும் அர்த்தமும் தந்து கொண்டிருக்கிற எல்லாமே காலியாகி விடாதா?வாழ்க்கை என்பது எல்லாம் சேர்ந்ததல்லவா? வெறும் பிரச்னைகளின் தொகுப்பல்லவே வாழ்க்கை. ஆயிரம் கஷ்டம் இருந்தாலும் ஆத்தாவின் மடியில் நமக்கு ஒரு ஆறுதல் இருக்கிறதல்லவா?அதையும் பறித்துக்கொள்வது நியாயமா?என்று தயக்கத்துடன் ஆனால் ஒரு உள்ளார்ந்த கோபத்துடன் அவர் கேட்டார்.

பெண்களுக்காக யார் எப்போது எங்கே லேசாகக் குரல் எழுப்பினாலும் இப்படி லட்சம் சந்தேகங்களும் கேள்விகளும் வந்துவிடும் என்பதை நாம் அறிவோம்.
தாயின் அரவணைப்பை நாம் மறுக்க வில்லை.அதில் உயிரியல்ரீதியான அம்சம் ஒரு குறிப்பிட்ட சதவீதம் இருக்கிறது.தாய் மட்டுமே தியாகியாவது அயோக்கியத்தனமான ஏற்பாடு அல்லவா என்பதுதான் நாம் எழுப்பும் ஒரே கேள்வி. தாய்க்குத் தியாகம் செய்கிற ஒரு டூட்டி மட்டுமே கொடுப்பது எந்த உலகத்து நியாயம் என்பதுதான் நம் கேள்வி.இருக்கும் கதகதப்பை - அனுபவித்துக் கொண்டிருக்கும் அரவணைப்பை இழந்துவிடச் சொல்கிறார்களே என்கிற ஆண் மனப்பதட்டமே இத்தகைய கேள்விகளுக்குப் பின்னால் துடித்துக் கொண்டிருக்கிறது.ஏன் பதட்டப்பட வேண்டும்?. இப்போதிருக்கும் இந்த ஒருதலைப்பட்சமான ஏற்பாட்டுக்கு மாற்றாக அரவணைப்பு-அன்பு-பாசம்-என்பதற்கான புதிய வரையறுப்புகளை உருவாக்குவோம்.அப்புதிய சூழல் இன்னும் ஜனநாயகமான ஒரு காதலை- இன்னும் பரஸ்பரமான கதகதப்பை வழங்கும்.நாம் இன்னும் நல்ல ஒரு வாழ்வை நோக்கிச் செல்லலாம் அல்லவா?.

எத்தனையோ விசயங்களில் முற்போக்கானவர் களாக இருக்கும் நண்பர்கள் தாய்மை-பெண்மை என்கிற இடம் வரும்போது மட்டும் வெறும் உணர்ச்சி மனிதர்களாக வரலாற்றுணர்வற்றுப் பின் தங்கி விடுகிறார்கள்.மிகப்பெரிய உடைப்பு உணர்வு மட்டத்திலும் அறிவுத்தளத்திலும் நடக்க வேண்டி யிருக்கிறது. அதுவரைக்கும் செத்தாலும் என்னைப் பொத்த ஆத்தாவின் சேலை வேண்டும் என்று அழுது மூக்கைச் சிந்திக்கொண்டிருப்போம் என்று சொல்வது நியாயமா? இதில் இன்னொரு கொடுமையும் சத்த மில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது. பாட்டைக் கேட்டு அம்மாக்களுக்காக நாலு சொட்டுக் கண்ணீர் விட்டு ரெண்டு சிலிண்டர் பெருமூச்சும் விட்டுக் கொள்வதில் நம் குற்ற உணர்வுகள் கரைந்து போய் மீண்டும் வழக்கமான ஆண்களாக நிம்மதியாக வலம் வந்து விடுகிறோம். நாம் சுத்திகரிக்கப்பட்டு விடுகிறோம்.சடங்குகள் எப்படி உளவியல்ரீதியாக இயங்கி குற்ற உணர்வுகளில் இருந்து நம்மை விடுவிக்கப் பயன்படுகின்றனவோ அதுபோலக் கலை இங்கே அப்பணியைச் செய்து விடுகிறது. அன்பின் பேராலும் பாசத்தின் பேராலும்தான் ஆணாதிக்கம் நம் சமூகத்தில் அமலாகிக் கொண் டிருக்கிறது   என்பதை நாம் கருத்தில் கொண்டால் எந்த அளவுக்கு சமரசமற்ற இடைவிடாத போரை நாம் நமக்கு உள்ளேயும் சமூகத்திலும் நடத்த வேண்டியிருக்கிறது என்பதை உணரலாம்.

பெண்மை என்கிற இட்டுக்கட்டப்பட்ட கற்பனையின் மீது நாம் பல கனவுகளையும் கடமைகளையும் ஏற்றி வைத்துக்கொண்டே போகிறோம்.உயிரியல் ரீதியான ஆண் பெண் வேறுபாடுகளைத் தவிர மற்ற எல்லாம் பண்பாடு என்ற பெயரில் இச்சமூகம் நம் தலையில் திணித்தவை என்னும்போது மாற்றுப்பாதையை நாம் சமைக்க வேண்டும்.

சென்ற மார்ச் 8 ஆம் நாள் சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி தொலைக்காட்சி அலைவரிசை களில் பலருடைய கருத்து உதிர்ப்புகள் ஒளி பரப்பப் பட்டன.ஒரு திரைப்பட இயக்குநர் கூறினார் . பெண்களுக்கு சமத்துவம் சென்னை போன்ற மாநகரங்களில் கிடைத்துவிட்டது. டவுன் சவுத்தில் கிராமப்புறங்களில் இன்னும் கிடைக்கவில்லை(ஈவ் டீசிங்கில் இளம் பெண்கள் செத்தது எல்லாமே பெருநகரங்களில்தான் என்பது காலப் போக்கில் எளிதாக ம
Reply all
Reply to author
Forward
0 new messages