நாஞ்சில் நாடன் 150 க்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். இப்போதும் எழுதிக் கொண்டிருக்கிறார். பழந்தமிழ் இலக்கியங்கள் மற்றும் சொல்லாய்வுகள் சார்ந்து தொடர்ந்து முக்கியமான பல கட்டுரைகளை அண்மைய ஆண்டுகளில் எழுதி வருகிறார். தோராயமாக நாநூறு கட்டுரைகளுக்கு மேல் இருக்கலாம் என உரையாடலின்போது கூறினார். முறையே ‘கறங்கு’ மற்றும் ‘பாடுக பாட்டே’ அவருடைய இவ்விரு முகங்களின் அண்மைய காலப் பரிணாமத்தைக் காட்டுகின்றன. கும்பமுனிக் கதைகள், கான் சாகிப், தன்ராம் சிங், இடலாக்குடி ராசா, பூனைக்கண்ணன், ஏவல் போன்ற சிறுகதைகளே இன்று அதிகம் பேசப்படுகின்றன. அவருடைய மரபிலக்கியக் கட்டுரைகள் தமிழுக்கு அவர் விட்டுச் செல்லும் கொடை என்றே சொல்லலாம். தொடர்ச்சியாக இயங்கி வரும் மூத்த எழுத்தாளர்களை நாம் சரிவர உள்வாங்குவதில்லையோ என எனக்கு ஓர் எண்ணம். எழுத்தின் ஊடாக அவர்கள் அடைந்திருக்கும் பரிணாமத்தை நாம் கணக்கில் கொள்வதில்லை.